வடஅமெரிக்காவிலிருந்து வெளி வரும் “தென்றல்” என்ற மே 2016 மாத இதழில் என்னைப்பற்றிய அறிமுகக் கட்டுரையோடு, “பந்து பொறுக்கி” என்ற எனக்குப் பிடித்தமான சிறுகதை ஒன்றும் வெளிவந்துள்ளது, அன்பர்களின் நேசமா
ன பார்வைக்காக....![]()
![]()
10 ஜூலை 2016
நன்றி…!
நா.பா.வைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் இந்திய இலக்கியச் சிற்பிகள்-சாகித்ய அகாதெமி நூலில்….
Ushadeepan Sruthi Ramani added 6 new photos.
நா.பா.வின் தீபம் மாத இதழ் 1965 ஏப்ரலில் தோன்றியது. 1988 ஏப்ரலில் மறைந்தது. தீபம் இரண்டாம் இதழில் அவர் எழுதிய வரிகள் குறிப்பிடத்தக்கவை -
“என்னிடம் சிந்தனையையும் எழுத்தையும் தவிர அதிகமாக வசதிகள் ஒன்றுமில்லை என்பதை நானே உணர்கிறேன். நான் ஒரு சாதாரண இலக்கியத் தொழிலாளி என்பதும் எனக்குப் புரிகிறது. நான் பணத்தினால் ஏழையாகவும் மனத்தினால் குபேரனாகவும் இருப்பதாக எனக்கே தோன்றுகிறது. உடல் நலமில்லாத கணவன் கட்டிலருகே - அவன் நிச்சயம் பிழைத்து விடுவான் - பிழைக்க வேண்டும் - என்ற ஒரே நம்பிக்கையை மனத்தின் தவமாகக் கொண்டு வேறுவிதமாக நினைப்பதைக் கூடத் தன் கற்பிற்குப் பங்கமாய் எண்ணும் ஒரு இந்துக் குடும்பத்து சகதர்மிணியைப் போல் என் முயற்சியின் வெற்றியை அன்றி வேறு அமங்கல நினைவை நினைக்கவும் செய்யாது வெற்றியே இலக்காகும் தியானமாக நான் இந்த இலக்கியத் தவத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்”
இந்திய இலக்கியச் சிற்பிகள் - சாகித்ய அகாதெமி தொகுப்பில் நா.பா.வைப்பற்றி தொகுத்தளித்துள்ள திரு திருப்பூர் கிருஷ்ணன் ஓரிடத்தில் தெரிவிக்கும் அழகான இக்கருத்துக்களைக் காணுங்கள்.
தமிழ் மொழியின் எல்லா நயங்களையும் தம் படைப்புக்களில் துலங்கச் செய்த ஓர் அபூர்வமான நடையமைப்பை உடையவர் என்ற வகையிலேயே நா.பா. வித்தியாசப்பட்டு நிற்கிறார்.
ஜானகிராமனின் பலம் அவரது பாத்திர வார்ப்பு
ஜெயகாந்தனின் பலம் அவரது விவாதக் கோணம்
புதுமைப் பித்தனின் பலம் அவரது கிண்டல் தொனி
அழகிரிசாமியின் பலம் அவரது அதிரச் சொல்லாத எளிமை.
அகிலனின் பலம் அவரது தேசியச் சிந்தனை
இந்திரா பார்த்தசாரதியின் பலம் அவரது கூர்மையான உரையாடல்
ராஜம் கிருஷ்ணனின் பலம் கள ஆய்வு
ஆர்.சூடாமணியின் பலம் உளவியல் கோணம்
கி.ராஜநாராயணனின் பலம் வட்டார வழக்கு
என்றால்
நா.பா.வின் பலம் அவரது நடைதான். நினைத்து நினைத்து மகிழ வைக்கிற நடை. தெளிந்த சிற்றோடை போன்ற பட்டறிவால் விளைந்த பிசிரற்ற, சீரான தங்கு தடையற்ற நடை. அவர் தடம் பதித்ததது அந்த வகையில்தான்.
26 ஜூன் 2016
ஜெயமோகனின் வலைத் தளத்தைத் தொடர்ந்து படித்து வருபவன் நான். அவருக்கு எழுதிய கீதை பற்றியதான ஒரு கடிதமும், அவரது பதிலும்
கீதை
அன்புள்ளஜெயமோகன்,
வணக்கம். தங்களின் வலைப்பக்கங்களைத் தொடர்ந்து படித்து வருபவன் நான். பொது, மற்றும் இலக்கியம் சார்ந்த விஷயங்களைவிடத் தத்துவம் சார்ந்த விஷயங்கள்தான்
தங்களிடம் அதிகம் பரிமளிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை இந்தத் தேடலில் கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த அளவுக்கான ஒப்புநோக்குப் பார்வை தங்களிடம் சாத்தியமாகிறது என்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால்.
கீதையைப்பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே வருகிறீர்கள். குறிப்பாக அது ஒரு தத்துவநூல் என்பதை நிறுவுவதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதுதான் உண்மையும்கூட. ஆனால் அதை ஒரு மத நூலாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள்தான் இங்கே
அதிகம். அதை அப்படிப் புரிய வைத்திருப்பதில் ன்மீகவாதிகளுக்கு நிறையப் பங்கு உண்டு.ஆன்மீகவாதிகள் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ ஒருவகையான அரசியலுக்கு ட்பட்டுப்போகிறார்கள். ஆன்மீகம் மக்களின் ஒற்றுமைக்காகவும், ஒருமித்த சிந்தனையை வளப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்பட வேண்டும். அதுதான் சரியான ஆன்மீகம் என்று கருதுகிறேன் நான். எது மக்களின் ஒருமித்த சிந்தனையை, ஒற்றுமையை, மனித நேய சிந்தனையை, மேம்படுத்துகிறதோ அதுவே சிறந்த ஆன்மீகம் என்று எனக்குத் தோன்றுகிறது.
எவன் ஒருவன் தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறானோ அவனே சிறந்த கம்யூனிஸ்ட் என்பதைப்போல. மனித வாழ்க்கை பல்வேறுபட்ட சிக்கல்கள் உடையதாய் இருக்கிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து மீளுவதற்கு ஒருமித்த, சீரிய சிந்தனை இந்த மனிதசமுதாயத்திற்குத் தேவைப்படுகிறது. மனித மனம் இந்த ஆட்படுதல்களினின்று விடுபடுதல் அவசியமாகிறது. ஆங்கே ஆன்மீகம் ஒரு சார்பு நிலையோடு முன் வைக்கப்படும்போது, மக்கள் மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். இங்கே ஆன்மீகம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லைஎன்பதே என் நோக்கு…! போதும்!
உங்களின் அவ்வப்போதைய கீதைக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வாருங்களேன். மிகவும் பயனுள்ளதாக அமையும் எல்லோருக்கும்!!
நன்றி!
அன்புடன்,
உஷாதீபன்.
அன்புள்ள உஷா தீபன்
தங்கள் கடிதம் கண்டேன். கீதை பற்றிய என் நோக்கு அதை ஒரு முழுமையான தத்துவ நூலாக வாசிக்க வேண்டும் என்பதே. இன்னும் சொல்லப்போனால் அதை யோகமீமாம்சை என்ற– டைலடிகல் – முறைப்படி வாசிக்க வேண்டும். அதன் ஒவ்வொரு அத்தியாயத்துக்குள்ளும் உள்ள முரணியக்கத்தை கருத்தில் கொள்ளவேண்டும். அதன் பின் கீதைக்கும் பிறநூல்களுக்கும் நடுவே உள்ள முரணியக்கத்தை கருத்தில் கொண்டு வாசிக்க வேண்டும். அவ்வாசிப்பே இந்து மெய்ஞான மரபைப்பற்றிய புரிதலை அளிக்கும் என்பது ஒருபக்கம். ஒரு முக்கியமான தத்துவ நூல் நமக்களிக்கும் பயனையும் அளிக்கும். அதை நான் கற்றவகையில் இங்கே அளிக்கவில்லை, மாறாக நான் என் வாழ்க்கை சார்ந்து அதை பய்ன்படுத்திய முறையிலேயே அளிக்கிறேன். ஒரு நூலாக இதை ஆக்கும் எண்ணம் உண்டு. தொடர்ந்து நிறையவே எழுதவேண்டியிருக்கிறது.
அன்புடன்
ஜெயமோகன்
***
ஜெயமோகனின் “இரவு” நாவலுக்கான எனது சிறு விமர்சனமும், அவர் அளி்த்த பதிலும்….
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாட...சிறு பொன்மணி அசையும்
வணக்கம். நலமாயிருக்கிறீர்கள் என்றே உணர்கிறேன். மலேசியப் பயணம் அதை உணர்த்தியது.
இரவு நாவல் இப்பொழுதுதான் முடித்தேன். யட்சினி என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.இரவில் விழித்திருப்பவர்கள் என்ற காரெக்டர்களே புதிதாய்த் தோன்றி விடாமல் படிக்க வைத்து விட்டது.
இருட்டில் நடக்கும் எல்லாமும் தவறுகளாய்த்தான் இருக்கும் என்று மகாத்மா சொல்லிப் படித்ததாக நினைவு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் மனசு அதிர்ந்து போனது. மேனன் கமலாவோடு வாழ்ந்த நாட்களை சிலிர்ப்போடு நினைவு கூறுவதும், அது நானில்லை வேறு என்று கனவில் இருவருக்கும் வந்து சொல்வதும், அங்கே இன்னொரு கதாபாத்திரமாய் நானும் நின்று கொண்டிருந்தேன்.
நீலிமாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் திரும்பியதில் மனது திருப்தி கொண்டது. ஆனாலும் அவர்களின் காதல் வகைமாதிரியை அந்த ரீதியில் கொள்ள வேண்டியதில்லை என்று உணரவைத்திருப்பது ஆறுதல்.
யட்சினி என்ற வகைப் பெண்ணை நானும் சந்தித்திருக்கிறேன். செய்வினை, செயப்பாட்டுவினை என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். எனது ஆப்த நண்பர் ஒருவரையும் இழந்திருக்கிறேன். அந்தக் கதை அவரின் சாவோடு ஆரம்பிக்கும். எனக்கு அது நினைவுக்கு வந்து விட்டது.
உங்களின் இரவு படித்து முடித்ததில் மனசு நிறைந்தது. நன்றி.
அன்பன்
உஷாதீபன்
அன்புள்ள உஷாதீபன் அவர்களுக்கு
யட்சி, யட்சிணி என்பவை இரவின் மீதான அச்சத்தின் பருவடிவங்கள் அல்லவா? யட்சி என்றால் கண்ணுடையவள் என்று பொருள் என்பார்கள். இரவில் நம் கண்கள் அழியும்போது தான் கண்பெறும் தெய்வ வடிவங்கள். இரவில் நம் கண்கள் அழிகின்றன என்பதனாலேயே கண்கள் உருவாக்கும் உலகமும் மறைந்துவிடுகிறது. நாம் வாழும் புழக்க உலகம் என்பது கண்களால் உருவாக்கப்படுவது அல்லவா? ஆகவேதான் துயத்தில் கண்களை மூடிக்கொள்கிறோம். பிரார்த்திக்கையிலும் தியானிக்கையிலும் கண்களை மூடிக்கொள்கிறோம். அப்படி மூடிக்கொண்டபின் உருவாகும் உலகமே அகம். அதுவே நம் ஆழம். அந்த ஆழமே இரவாகவும் உள்ளது. இரவில் வாழ்வதென்பது அந்த ஆழத்தில் வாழ்வது மட்டுமே. அது அபாயகரமான ஓர் விளையாட்டு. அதைவிளையாடி நிறைவுடன் மீள்வது எளியதல்ல.
யோகி இரவில் விழித்திருக்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. யோகியின் இரவு என்று சொல்லப்படுவது நாம் நம் உலகியல் தேவைகளுக்காக உருவாக்கியிருக்கும் அனைத்தும் மறைன்ந்து போய் எஞ்சும் இருள்வெளியைத்தான் என்பார்கள். அந்த இரவை நோக்கித்தான் இரவில் விழித்திருக்கும் ஒவ்வொருவரும் சென்றுசேர்கிறார்கள். கமலா பலியாகிறார். மேனன் தப்பி ஓடுகிறார். கதாநாயகனைப்போல சிலர் அதை உதறமுடியாது மேலும் நீந்துகிறார்கள்
ஜெ
24 ஜூன் 2016
10 ஜூன் 2016
சென்னை புத்தகக் கண்காட்சி 9.6.2016 எஸ்.ஷ மொழி பெயர்த்த யோசே சரமாகோவின் நாவல் “பார்வை தொலைத்தவர்கள்“–பாரதி புத்தகாலயம் வெளியீடு
ஒரு தேர்ந்த வாசகனுக்கே மொழிபெயர்ப்பு படிப்பது என்பது சற்றுக் கடினமான விஷயம். காரணம் கதை நடக்கும் களம், பழக்கப்படாத இடங்கள், அவற்றின் பெயர்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள், ஆணா, பெண்ணா என்பதில் அவ்வப்போது ஏற்படும் குழப்பங்கள், கதையின் தொடர்ச்சியை மனதில் வைத்துக் கொள்ள படித்து முடித்த பக்கங்களை அடிக்கடி புரட்டி நினைவு கூற வேண்டியிருப்பது, அதனால் பக்கங்கள் வேகமாய் கடக்க முடியாமை, என்று பலவுண்டு. இன்னொரு கஷ்டம் அப்படியே மொழியைப் பெயர்த்து எழுதி, அதாவது வார்த்தைக்கு வார்த்தை....வரிக்கு வரி...என்று பெயர்த்து எடுத்து தமிழில் நிறுவி விடும் அவலம். நம்ம ஆளுங்க எழுதினதையே இன்னும் படிச்சு முடிக்க முடில...இதுல மொழிபெயர்ப்புக்கு எங்க போறது? என்கிற சலிப்பு....இப்படிப் பல...
இதெல்லாம் எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க ஒரு நாவலை உணர்வுபூர்வமாய் உள்வாங்கி, காட்சிக்குக் காட்சி மனதில் நிறுத்தி, மொத்தக் கதையின் அனைத்து சம்பவங்களையும் ஒரு சினிமாவின் காட்சிகளைப் போல் உள்ளே விஷூவலாகப் படிய வைத்துக் கொண்டு, தனக்குக் கை வந்த தேர்ந்த மொழி நடையில் விறுவிறுப்பாக, ஒரு மொழி பெயர்ப்பைப் படிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல், இவரே எழுதினதுதானோ என்று நினைக்க வைக்கும் அளவு கதையில் ஆத்மார்த்தமாய் சஞ்சரித்து, தங்கள் திறமையைப் பளீரென்று வெளிப்படுத்துபவர்கள் ஒரு சிலர்.
அப்படி ஒரு அருமையான, மொழிபெயர்ப்பு நாவல் வந்திருக்கிறதென்றால் அது திரு எஸ்.ஷங்கரநாராயணன் அவர்கள் இப்போது புதிதாய் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ள “யோசே சரமாகோ” வின் “பார்வை தொலைத்தவர்கள்” என்ற நோபல் பரிசு பெற்ற நாவல்தான். கதையின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் கதாபாத்திரத்திற்கு திடீரென்று பார்வை தொலைந்து போகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவனும் நாமும் மீள வேண்டும் என்கிற பதைபதைப்பிலேயே உடனடியாக அவனோடு கைகோர்த்து பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம்....திரு எஸ்.ஷ விற்கென்று ஒரு தனி நடையழகு உண்டு. அந்த வசீகரம் நம்மை அயர வைக்கிறது....பேசப்பட வேண்டிய பல படைப்பாளிகளில் அவர் முக்கியமானவர்...காலம் அவரைக் கண்டிப்பாக உச்சியில் கொண்டு நிறுத்தும்....நாவல் தொடர்கிறது என் விடாத வாசிப்பில்...அவசியம் வாங்கிப் படியுங்கள். ஒரு முழுமையான தேர்ந்த மொழிபெயர்ப்பு அனுபவத்தை உணருங்கள்...
09 ஜூன் 2016
05 ஜூன் 2016
அஞ்சலி
பெரியவர் (திரு Hemalatha Balasubramaniam) இயற்கை எய்திய அன்று நான் புதுடெல்லியில் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். 2ம் தேதியிலிருந்து மேற்கொண்ட பயணம். 25 தான் முடிந்தது. அதன் பின் இரண்டு தினங்கள் கழித்துத்தான் சென்னை வந்தேன். சென்னையில் இருந்திருந்தாலும் வைகையில் புறப்பட்டு மதுரை வந்திருக்கலாம். மதுரையிலும் அந்த நேரத்தில் இருக்க வாய்ப்பில்லாமல் போயிற்று. பெரிய வருத்தமே...! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
என்னிடம் எப்போதும் ஒரு குணம். நெருங்கிப் பழகியவர்களைச் சடலமாய்ப் பார்க்க விரும்பாதது.அது இந்தப் பெரியவருக்கும் தற்செயலாய் அமைந்து போயிற்று. விபரம் அறிந்தாலும், அவர் இருக்கிறார் என்கிற உணர்வோடு, அவரோடு அளவளாவிய நாட்களை சுவையாக அசைபோடுவது எனக்குப் பிடிக்கும். நான் வாசலில் வந்து நிற்கிறேன் என்பது கண்டு படுக்கையில் இருந்து எழுந்து அமர முயலுவார். உள்ளே நுழைந்து, அப்டியே இருங்க...எதுக்கு எழுந்திருக்கிறீங்க...என்று அமர்த்துவேன். சிறு குழந்தையாய்ப் பேசுவார். அவரோடு நடந்து டவுன் உறாலில் வடை, காபி சாப்பிட்ட நிகழ்வு, என்.சி.பி.எச்.சில் புத்தகம் வாங்கியது...கூட்டத்திற்குச் சென்றது..என்று சில நிகழ்வுகள்... மனதுக்கு நெருக்கமாய் .அந்தப் பெரியவரின் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.
அவர் மலர்ப் பாதங்களில் என் இதயபூர்வமான அஞ்சலி.
எழுது எழுது என்ற உத்வேகம் இவரால்தான் -
எத்தனை புத்தகக் கண்காட்சிகள் நடந்தால் என்ன, எத்தனை புத்தகங்கள் புதிதாய் வந்தால்தான் என்ன? ஆயுசுக்கும் அலுக்காத திரும்பத் திரும்பப் படிக்க, ரசிக்க, உருக, உள்வாங்க, என்று ஒரு எழுத்து உண்டென்றால் அது
திரு.அசோகமித்திரன் அவர்களின் எழுத்துதான்.
அவரால்தான் நான் எழுதுகிறேன். உடம்பு பூராவும் எழுது எழுது என்று உத்வேகம் பெற வேண்டுமென்றால் உடனடியாக இவர் புத்தகத்தைத்தான் கையில் எடுப்பேன். மனசைக் கோயில் போலாக்கும் வல்லமை இவர் எழுத்துக்கு உண்டு. இந்த வாழ்க்கையின் எல்லாவிதமான முதிர்ச்சிக்கும் நம்மைக் கொண்டு நிறுத்தும் ஆன்மீக பலம் வாய்ந்தது இவரது எழுத்து.. இலக்கியம் மனிதனைச் செழுமைப்படுத்துகிறது என்ற கருத்து இவர் எழுத்தில் சத்தியமாகிறது.
அவரது “மணல்” குறுநாவல் தொகுதி இப்போது என் வாசிப்பில் மீண்டும். கீழே நாலு வரிகள் -
“தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூடக் கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக் கொள்வதற்கும்தானா?
“தலைமுறைகள்” கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில் ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகி விடும்”
“காந்தி” என்று ஒரு அற்புதமான தொகுப்பு. அதில் “அம்மாவுக்கு ஒரு நாள்” என்று ஒரு சிறுகதை. படிக்கவில்லையென்றால் தேடிப் படியுங்கள். பிறகு சொல்லுங்கள்...
LikeShow more reactions