29 ஏப்ரல் 2024

“ மழித்தலும் நீட்டலும் ”சிறுகதைத் தொகுதி -  புஸ்தகா.கோ.இன் வெளியீடு





 பின் அட்டைக் குறிப்பு – உஷாதீபன்

            வாழ்க்கையில் எத்தனையோ விதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவகையிலான நற்குணங்களை  அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

            அன்றாட வாழ்க்கையில் அமிழ்ந்து போகையில் அந்த இடர்பாடுகளுக்கிடையில் வெளிப்படும் நற்குணங்கள், அதன் பொருட்டு மனிதர்கள் மேற்கொள்ளும் நற்செயல்கள் , அதன் மூலமாக அவர்கள் நம் நினைவில் என்றும் அழியாது நிற்றல் இப்படிப் பல்வேறு விதமான கூறுகளை உள்ளடக்கியது இத் தொகுப்பு.மாறுபட்ட களங்களைக் கொண்ட இது வாசக அன்பர்களை இழுத்து நிறுத்திக் கொள்ளும் திறனுடையது.

 

                                                

 








 

சிறுகதை பிரசுரம் - சொல்வனம் இணைய இதழ் 28.04.2024. www.soolvanam.com

“எதிர் (பாரா) வினை“   உஷாதீபன்



ப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்நோக்கித்தான் காத்திருந்தார் ஞானமூர்த்தி. அதற்கான பதிலையும் மனதில் தயார் படுத்தி வைத்திருந்தார். எப்படிச் சொன்னால் இவர்களுக்கு சரி வரும் என்பது அவர் மனதில் தீர்மானப் பட்டிருந்தது. எந்த லெவலுக்கு அவர்களின் கேள்வி இருக்கும் என்பதும் அறிவார்தான்.  மொத்தத் துறையின் ஞானமே அந்த அளவுதான், ஓரு சிலரைத் தவிர என்பதில் அவருக்கு அதீத நம்பிக்கையிருந்தது. யாரும் ஸ்ட்ரெயின் பண்ணி ஆழ உள் நுழைந்து வேலை பார்க்கும் திறனில்லாதவர்கள். மூளைச் சோம்பல் நிறைந்தவர்கள். சுருக்கமாய்க் சொன்னால் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள்.

            நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க…நான் பார்த்துக்கிறேன்…என்று அலுவலருக்குச் சொல்லியிருந்தார். அப்படிச் சொன்னது நடந்ததை  மறைப்பதற்காக அல்ல. அதை அதன் நியாயப்படி எதிர்நோக்குவதற்காக. செய்து முடிப்பதற்காக. அவரை அந்த வார்த்தை எவ்வளவு நிம்மதிப்படுத்தியிருக்கும் என்று இவருக்குத் தெரியும். தன் மீதான நம்பிக்கை. அதற்கு பங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் தன்னுடைய தன்மை.

  பாவம்…அப்பாவி….பயந்து பயந்து அதிகாரியாயிருப்பவர். தப்பு செய்யத் தெரியாது. எதெல்லாம் சரி என்பதிலும் தெளிவில்லை. தன் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்கிற அதீத நல்லெண்ணம்.  நல்ல ஸ்டாஃப்…நிம்மதியான ஆபீஸ்…!

            அறையில் தன் இருக்கைக்கு எதிரே மாலை மரியாதையோடு தொங்கும் சாமி படங்கள். குங்குமம், சந்தனம் பதித்து, பத்தி ஏற்றி வைத்து  நெற்றியிலும் துலங்க பய பக்தியோடு அமர்ந்திருக்கும் காட்சி.  பெருமாள்சாமி, பி.இ.,(மெக்) ஏஎம்ஐஇ., எம்.ஐ.எஸ்.ஏ.இ., !  நேம் போர்டு பளபளத்தது.

            நீங்க கொஞ்சம் இங்கயே இருங்க…!. ஏதேனும் ஒரு சந்தேகமோ, பயமோ அதில். முகத்தில் தீராத சோகம். இது சரியா? என்று தொக்கி நிற்கும் கேள்வி. படிப்பிற்கும் பயத்திற்கும் ஏது சம்பந்தம்? எது பிழைப்போ…எது சோறு போடுகிறதோ…அதை நன்றாகக் கற்க வேண்டாமா? மேலோட்டமாகவே ஓட்டிக் கழித்துவிடலாம் என்று காலத்துக்கும் பெஞ்சைத் தேய்க்க முடியுமா?

            ன்ன இப்டித் தொடர்ந்து அப்ளிகேஷன் கொடுத்திட்டே இருக்காங்க…? அசோசியேஷன் லெட்டர் பேடுல வேறே எழுதிக் கோரிக்கையா வைக்கிறாங்க…? இன்டிவீஜூவல் அப்ளிகேஷனுக்கு ஆபீஸ்ல நடவடிக்கை எடுப்பாங்கன்னு தெரியாதா? இந்த ஒர்க் ஷாப் ஸ்டாஃப்தானே அவுங்க…அவுங்களுக்குக் குறை உண்டுன்னா தன் பேரைப் போட்டு எழுதிக் கொடுத்தா ஆச்சு….எதுக்கு இந்த சங்கத்துப் பெயர்லெல்லாம் விண்ணப்பம்?  பயமுறுத்துறாங்களா? நெருக்கடி கொடுக்கிறாங்களா? இங்க எப்பயுமே இப்டித்தானா? – வந்து ஒரு ஆண்டு கூட இன்னும் முடியவில்லை. அந்தச் சூழல் இன்னும் அவருக்குப் பொருந்தி வரவில்லை. முழு ஈடுபாட்டோடு இயங்க விடவில்லை. எந்த நேரம் எவன் என்ன பிரச்னை பண்ணுவானோ என்கிற நடுக்கத்துடன் கூடிய பயம்.

            பயப்படுகிறாரோ இல்லையோ…பயமுறுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டிருந்தார். அவரவர் கோரிக்கை விண்ணப்பமும், சங்க ரீதியிலான கேட்பும் சேர்ந்து நெருக்கிப் பிடிக்கிறது. இவர்ட்டயாவது வாங்கிப்புடணும் எப்படியாவது! எவ்வளவு செய்தாலும் தீராத குறைகள். வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைக்காத மனநிலை.

            ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் இப்டி எதையாச்சும் கொடுத்திட்டேதான் சார் இருப்பாங்க…விதி முறைப்படி நாம அவுங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தானே செய்ய முடியும்…? அவுங்க அப்ளிகேஷனை நிறுத்தி வச்சாத்தானே தப்பு? அதைத்தான் ஃபார்வேர்டு பண்ணிடுறமே…சென்னைல இருக்கிற துறைத் தலைமைதானே இதையெல்லாம் பரிசீலிக்கணும்? லோக்கல்லயே இன்னும் ரெண்டு ஆபீஸ் தாண்டணுமே…! பதில் வரட்டும்னு சொல்லுவோம்….இங்கேயிருந்து நகண்டிருச்சுன்னு அவுங்களுக்கு சொல்லிட்டாப் போச்சு…! நாம இருத்தி வச்சாத்தானே சங்கடம்?

            அது சொல்லலாம் ஞானம்…ஆனாலும் அவுங்க அதை நம்பத் தயாரில்லை. நாமளே செய்ய வேண்டியதை, அநாவசியமா அங்க தள்ளி விடுறோம்னு நினைக்கிறாங்க…! அது மட்டுமில்லே…நீங்க செய்றேன்னு வேறே சொன்னீங்களாம்…! அதையும் ஞாபகப்படுத்துறாங்க….! – இப்படிச் சொல்லிவிட்டு அவரையே கூர்ந்து பார்த்தார் பெருமாள்சாமி.

என்னைக் கேட்காமல் ஏன் இப்படியெல்லாம் வாக்குறுதி கொடுக்கிறீர்கள்? அவர்கள் கேட்பதெல்லாம் இந்த அலுவலக அளவில் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? -இந்தக் கேள்விகளெல்லாம் அவரது பார்வையில் தொக்கி நிற்பதாக ஞானமூர்த்தி உணர்ந்தார். அதிகார இருக்கையை எதிர்நோக்கி நிற்கும் நானும் ஒரு பணியாளன். அப்படியிருக்கையில் நான் எப்படி வாக்குறுதி கொடுக்க முடியும்? மொட்டையாக, மேம்போக்காக அவர்கள் சொல்வதை இவரும் அப்படியே நம்பினால்?

அப்போ நீங்க என்னை நம்பலயா சார்…? – எதிர்க்கேள்வி போட்டார் ஞானமூர்த்தி. அப்போதுதான் அவரை சலனப்படுத்த முடியும்.

அப்டிச் சொல்லலை…எதுக்கு அநாவசியமா அவுங்ககிட்டே பேச்சுக் கொடுத்திட்டுன்னு சொல்றேன்….வாயக் கிளறி எதையாச்சும் வாங்கிடுவாங்கல்ல….? – தள்ளியே நில்லுங்க என்று சொல்லாமல் சொல்கிறார்.

விண்ணப்பங்களை ரிட்டர்ன் பண்ண முடியாது சார்….கூட்டமா வந்து முற்றுகையிடுவாங்க …வேலை செய்ய விடாமத் தடுப்பாங்க….பிரச்னையாகும்…அதனாலதான் இங்கயிருந்து தள்ளிவிட்றது. இதுக்கு முன்னாடியும் இதான் நடைமுறை. லோக்கல்லயே மத்த ரெண்டு பெரிய ஆபீசுக்கும் இது தெரியும். இவங்களுக்கு வேறே வேலையில்ல…ன்னு அவுங்களும் கொஞ்ச நாள் வச்சிருந்து திருப்பிடுவாங்க….இதான் நடந்திட்டிருக்கு….இவங்க பெரிய ஆபீஸ் வளாகத்துலயும் போய் நின்னு கோஷம் போடுவாங்க…முன்னறிவிப்பே இருக்காது….கோஷம் போட்டுட்டு அவுங்களே கலைஞ்சு போயிடுவாங்கன்னு அங்கயும் கண்டுக்காம இருந்திடுவாங்க….!

ஒரு புன்னகை அவரிடம் மலர்ந்தாற்போல் இருந்தது. ம்ம்ம்…தலவலிதான்….முடியாதுன்னு தெரிஞ்சும் இப்படி டார்ச்சர் கொடுக்கிறாங்களே?  – முனகிக் கொண்டார்.

உங்களுக்கு நியாயமாக் கிடைக்க வேண்டியது உரிய காலத்துல கண்டிப்பாக் கிடைக்கும் அதுக்கு நான் பொறுப்பு…அதை ஆபீசரிடம் விளக்கி அல்லது வாதாடி வாங்கிக் கொடுக்கிறேன். அதுல தாமதம் இருந்தாச் சொல்லுங்க….மற்றப்படி இந்த அலுவலக அளவுல செய்ய முடியாததை ரெக்கமன்ட் பண்ணி வேணும்னா தலைமையகத்துக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பாம நிறுத்தி வச்சாச் சொல்லுங்க…ஏன் நிறுத்தினீங்கன்னு? – இதான் சார் நான் அவுங்ககிட்டச் சொன்னது. உங்க சார்பா நான் இதச் சொன்னதுல என்ன சார் தப்பு? அதுக்கு எனக்கு உரிமையில்லையா சார்?

எதிர்த்தரப்பில் அமைதி. உரிமை எடுத்துக் கொள்வது பிடிக்கவில்லையோ? தன்னிடம் பேசியதையே பிடிப்பாக வைத்துக் கொண்டு அவர்களிடம் போய் என்ன வாக்குறுதி கொடுப்பது? அப்படியென்ன தன்னதிகாரம்? – என்று நினைக்கிறாரோ?

கண்ண மூடிட்டு அனுப்பிடுவீங்களா? நேர்ல அழைச்சு விளக்கிச் சொல்ல வேண்டிதானே? ம்பாங்க…அதுதான் பெரிய ஆபீஸ் வழக்கம். சொல்லிட்டு கொஞ்ச நாள்ல அவுங்களும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க….உங்க ஆபீச உங்க கன்ட்ரோல்ல வச்சிக்க முடியாதான்னும் கேட்பாங்க…வெறும் ஆபீஸ் ஸ்டாஃப்வோட மட்டும் ஒரு அலுவலகம் இயங்குறதுக்கும் ஐம்பது அறுபது தொழிலாளிங்களோட ஃபங்ஷன் பண்றதுக்கும் உள்ள வித்தியாசத்த உணர மாட்டாங்க…பிராக்டிகல் டிஃபிகல்டீஸ் தெரிஞ்சிருந்தாலும் காட்டிக்க மாட்டாங்க…இது பெரியண்ணன் நடைமுறை….நமக்கும் இதெல்லாம் தெரியும்தானே?

இவ்வளவையுமே ஏன் இப்பவே வலியச் சொல்லணும்…? அதது வர்ற போது பார்த்துக்கலாமே…? –மேலிடத்துல கேட்டா வேறே வழியில்ல…அனுப்பித்தான் ஆகணும்னுவோம்….நாம என்ன பண்றது?

ஏன்யா தலவலிய உண்டாக்குற? – என்று கேட்கிறாறோ…? இவரே இப்படிச் சொன்னால்? அங்கு போனால் திருகுவலி ஆரம்பிக்கலாம் என்கிற கவலையோ என்னவோ?

சார்…அப்ப ஒண்ணு செய்ங்க…ஒரு டாய்லெட்டும், பாத்ரூமும் முன் பக்கத்துல வலது பக்கம் ஓரமாக் கட்டுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…ஆபீஸ் ஸ்டாஃபும், நீங்களும் உபயோகப்படுத்திக்கிறதுக்கு….அதுக்குன்னு பின்னாடி தொலைவாப் போக வேண்டியிருக்காது…அவுங்களையும் பார்க்க வேண்டி வராது. கேள்வி கேட்க வேண்டி வராது….இப்டியே வந்து ஆபீஸ்ல உட்கார்ந்து வேலைகளைப் பார்த்திட்டு, இப்டியே வெளியே போயிடலாம். அவுங்க மூஞ்சியப் பார்த்தாத்தானே பிரச்னை?

என்ன சொல்றீங்க ஞானமூர்த்தி? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இல்லன்னா இதுக்குன்னு வந்து இங்கே கூட்டம் போடுறதுக்கு அவுங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

சம்பந்தம் இல்லாமயா...சார்? நீங்க அதிகாரி….பின்னாடி பாத்ரூம் பக்கம் போகைல ஒதுங்கி மறைஞ்சு நின்னுக்குவாங்க…கண்ணுல பட மாட்டாங்க…அது ஒரு மரியாதை….ஆனா மானேஜரான நான் அப்டியா? ஆபீஸ் ஸ்டாஃப்பும் போகைல, வர்றைல…பிடிச்சிக்கிறாங்களே…அதுலயும் கிளார்க்குகள ஒண்ணும் கண்டுக்கிறதில்ல…என்னத்தான் சுத்தி வளைச்சிடுறாங்க…! கேள்வி மேல கேள்வியாக் கேட்குறாங்க…அந்த நேரம் எவ்வளவு பொறுமை தேவைப்படும்னு நீங்களே யோசியுங்க! எத்தனை நிதானத்தை நான் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் தெரியுமா? இல்லைன்னா அடி விழும் சார்…அடி விழும்….நிலைமை பெரிய சிக்கலாயிடும்….

அதிகாரியின் பார்வை கூர்மையாய்த் தன் மீது படிந்திருப்பதை உணர்ந்தார் ஞானமூர்த்தி. தொடர்ந்தார்…அடி விழுமா? என்ன சொல்கிறார் இவர்? அவ்வளவு மோசமானவர்களா தொழிலாளிகள்? அவர்களின் தேவைகளைக் கேட்பதில் என்ன தவறிருக்க முடியும்? நாம அந்த இடத்துல இருந்தாலும் அவுங்கள மாதிரித்தானே இருப்போம்?

சார்..டீ சாப்பிடுறீங்களா?ன்னுதான் ஆரம்பிப்பாங்க…நீங்க பதில் சொல்றதுக்குள்ளயும் , ஏய்…சாருக்கு ஒரு டீ சொல்லுப்பா…ன்னுடுவாங்க…வேண்டாம்னு நீங்க மறுக்கவும் முடியாது.  இப்டி உட்காருங்க சார்…எங்க நழுவப் பார்க்குறீங்கன்னு இழுத்து உட்கார்த்திடுவாங்க… ரொம்பப் பட்டவர்த்தனமாத்தான் பேச்சு இருக்கும். நகர்ந்தேன்னா அடி விழும்ங்கிறத மறைபொருளாப் புரிய வைப்பாங்க…!

அவுங்க கொடுக்கிற டீயையும் குடிச்சிக்கணும்…கேட்கிற கேள்விகளுக்கும் பொறுமையா பதில் சொல்லியாகணும். அந்த பதில் அவுங்களுக்கு சாதகமா இல்லாட்டாலும் பாதகமா இருக்கிறதாத் தெரியக் கூடாது. அந்த மாதிரி ஒரு பதிலை, அந்த நேரம் சட்டுன்னு சொல்லத் தெரியணும்….அதுக்கு நிரம்ப நிதானமும், பொறுமையும் புத்திசாலித்தனமும் வேணும்….மலர்ந்த முகம்ங்கிறது படு முக்கியம்…! நட்பு ரீதியாத்தான் பேச முடியும். முறைச்சிக்கிற ஜோலியே ஆகாது….இதுக்கெல்லாம் ஒரு பெரிய தந்திரம் தேவை. அத நாம நம்ம புத்தில ஏத்திக்கணும்…

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவர் சிவனே என்று பார்த்துக் கொண்டிருப்பதாய் இவருக்குத் தோன்றியது. ஆனாலும் இருக்கும் நடைமுறைச் சிரமங்களைச் சொன்னால்தான் புரியும் என்று தொடர்ந்தார் ஞானமூர்த்தி. அதிகாரி பெருமாள்சாமி  கோப்பில் மூழ்கியிருப்பதைக் கண்ணுற்றார்.

ஆமா…உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். எல்லாரும் சொல்றாங்களே…நீங்க டிசிப்பிளினரி கேஸ்கள்ல பிரில்லியன்டாமே…! கரைச்சுக் குடிச்சவராமே…! அப்டியா? -சற்றே தன்னைக் குஷிப்படுத்திக் கொண்டதுபோல் அவர் கேட்டது வித்தியாசமாய் இருந்தது ஞானமூர்த்திக்கு.

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். இருந்தாலும் தன்னடக்கத்தோடு பதில் சொன்னார் ஜாக்கிரதையோடு.

அப்டித்தான் சார் சொல்லிப்பாங்க…அதெல்லாம் ஒண்ணுமில்லே….நானும் எல்லாரும் மாதிரிதான்….

அதான் உங்களை இங்க போட்டாங்களாமே…! நல்லா டீல் பண்ணுவீங்கன்னு….அது சம்பந்தமா இந்த ஆபீசுக்கு மாறுதலில் வந்ததும் நான் என் பொறுப்பிலே வாங்கி வச்ச ஃபைல்ஸெல்லாம் இதோ இந்த டிராயர்லதான் இருக்கு….எப்ப வேணாலும் நீங்க எடுத்துப் பார்க்கலாம். இந்த ஃபைல்ஸ் சம்பந்தமான விஷயங்கள் நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமே ரகசியம்…புரிஞ்சிதா? யார் யார் பேர்ல என்னென்ன கேசிருக்குன்னு ஒரு ரவுன்ட் பார்த்திட்டேன்…உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்….இது நம்ம கைவசம் இருந்தாத்தான் நமக்குப் பாதுகாப்பு. இது எதையும் சீக்கிரம் முடிக்கக் கூடாது. நீட்டிக்கணும்…அதான் சாமர்த்தியம்….ஓகே.யா? அவங்க நம்மைத் தொல்லைப் படுத்துறது இதன் மூலம் கொஞ்சமாவது குறையும்ங்கிறது என் அபிப்பிராயம்.

 அப்படிப் பேசுவார் என்று ஞானமூர்த்தி கொஞ்சங் கூட எதிர்பார்க்கவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று நினைத்துக் கொண்டார். பயந்தவராத் தெரிஞ்சாலும் ஆளு வினயம்தான்…! இதுக்குச் செலவழிக்கிற நேரத்தை அவுங்களுக்கு நல்லது செய்றது எப்படின்னு யோசிக்கலாமே…! நாலுல ரெண்டு செஞ்சாலும் கொண்டாடுவாங்களே…! அந்த எண்ணம் ஏன் மேலிடங்களுக்கு வரமாட்டேங்கது? எய்தவங்க மேலே…நாமதான் அம்பு…! தைக்காத அம்பு…!

 ரெண்டு நாளைக்கொருமுறை அந்தப் பணியாளர்களை எதிர்நோக்கும் கஷ்டங்களை அலுவலருக்கு சுருக்கமாக விவரித்தாலும் அதன் முழுக் காட்சி அவர் கண் முன்னே அப்பொழுதே  விரிந்து அவரைக் கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்தது.

ங்களுக்காகத்தான் பழைய ஸ்டாக் ஃபைலையெல்லாம் எடுத்து நான் விடாது படிச்சிட்டேயிருக்கேன்…உங்க போஸ்டெல்லாம் ஒரே சமயத்துல சாங்ஷன் பண்ணினதுல்லே…அது தெரியுமா உங்களுக்கு…? படிப்படியா தேவை ஏற்பட ஏற்பட உண்டானது. மொத்த மாநிலத்துக்குமில்லே. எங்கெங்கே தேவையிருக்கோ, அதுக்கேத்தாப்ல…உருவாகியிருக்கு.  அது போல ஒவ்வொரு போஸ்டின் எண்ணிக்கையும் அப்பப்போ கூடியிருக்கு…குறைஞ்சிருக்கு….கூடின போது கொண்டாடின நீங்க…குறைஞ்ச போது ஏன் குரல் கொடுக்கலை? ஏன் அதை நிதானமா முன் எடுத்து வைக்கல…எடுத்த எடுப்புல ஸ்டிரைக்…போராட்டம்னு உட்கார்ந்திருக்கீங்க…இந்த ஒரு ஒர்க் ஷாப்புல மட்டும் ஸ்டிரைக் பண்ணினாப் போதுமா? தமிழ்நாடு பூராவும் எத்தனை ஒர்க் ஷாப் இருக்கு நம்ம துறைல… மொத்தமும் போராட வேண்டாமா? எலலாரும் சேர்ந்து கோரிக்கை வைக்க வேண்டாமா? அப்பத்தானே நீங்க கேட்குற பணியாளர் குறைப்புங்கிறதை நிப்பாட்ட முடியும்? இங்க வெவ்வேறே டெக்னிகல் போஸ்ட்ல இருக்கிற முப்பது நாற்பது பேர் மட்டும் சேர்ந்து  வாசல்ல மறிச்சு உட்கார்ந்திருக்கிறீங்க…ஊருக்கு வெளில முப்பது கி.மீ. தள்ளி அத்துவானமா இருக்கிற இந்தக் காட்டுல  நீங்க பண்ற ஸ்டிரைக்  எவனுக்குத் தெரியும்? யார் காதுக்குப் போகும்? இந்த ஆபீஸ் மூலமா செய்தி போனாத்தான் ஆச்சு. இல்லன்னா காத்தோட காத்தாப் பறந்து மறைஞ்சிடும்…

போதாக்குறைக்கு சி.எம். இந்தப் பக்கமா கார்ல போன போது மறிச்சு…உங்க கோரிக்கையை வேறு எழுதிக்  கொடுத்திருக்கீங்க…சி.எம்.கிட்டயே நேரடியாக் கொடுத்திட்டோம்னு ஆபீசை பயமுறுத்துறீங்க…இத மாதிரி எத்தனாயிரம் விண்ணப்பங்களை அவுங்க வாங்கியிருப்பாங்க…? உங்க சிறு கும்பலக் கண்டு நிறுத்தி உங்க கோரிக்கைகளை வாங்கிட்டுப் போனது அவுங்க  பெருந்தன்மை…அரசியல். வழி மறிச்சுக் கொடுத்ததே வெற்றின்னா என்ன அர்த்தம்?

கிரேடு-2வுல இருக்கிறவங்கள கிரேடு-1ஆ மாத்தணும்ங்கிறீங்க…டேரக்ட் அப்பாய்ன்மென்ட்டைத்தான் கிரேட் 1 க்குக் கொண்டு போக முடியும். ப்ரமோஷன் கொடுக்க முடியும். அப்படித்தான் ஆர்டர் இருக்கு. கீழ்நிலைலருந்து படிப்படியா வந்தவுங்க…கிரேட்-2 வரைக்கும்தான் வர முடியும். வேறே சில போஸ்ட்களுக்கு இந்த மாதிரி விதி இல்லைன்னு சுட்டிக் காண்பிக்கிறீங்க…அது போல உங்களுக்கும் வேணும்னா அதுக்கு ஆணை வேணும். மேலிடத்துக்குத்தான் விண்ணப்பிக்கணும்…இங்க செய்ய முடியாது. உங்க விண்ணப்பங்களை ஒருங்கிணைச்சு…பரிந்துரை வேணும்னா செய்யலாம். அதுக்கு நான் கியாரன்ட்டி. அதை அனுப்ப முடியாதுன்னு ஆபீசர் சொன்னா, எடுத்துச் சொல்லி நான் ஒப்புதல் வாங்கித் தர்றேன்….அதுதான் என்னால செய்ய முடியும்….

என்னா சார்…இப்டி பல்டி அடிக்கிறீங்க…? உங்களுக்கு வேணும்ங்கிறதையெல்லாம் செய்து கொடுக்கத்தான் நான் இங்கே வந்திருக்கேன்னு சொன்னீங்களே சார்…இப்போ இப்டிப் பேசுறீங்களே…?

இல்லைன்னு சொல்லலையே…இந்த ஆபீஸோட விதிகளுக்குட்பட்டு உள்ளதைக் கண்டிப்பா, தாமதமில்லாமச் செய்து கொடுப்பேன். அது உறுதி. அதுக்கே இதுக்கு முன்னாடி நீங்க திண்டாடினதெல்லாம் எனக்கும் தெரியும். எல்லாத்தையும் விசாரிச்சு, மண்டைக்குள்ள போட்டுக்கிட்டுத்தான் நான் இந்த ஆபீசுக்குள்ளயே நுழைஞ்சேன். அதை முதல்ல தெரிஞ்சிக்குங்க…என் கைக்கு மீறினதை நான் எப்டிச் செய்றது? அதுக்கு நீங்க என்னை பிரஷர் பண்ணலாமா? அது சரியா? அப்டியே குருட்டாம் போக்குல, பாஸைக் கன்வின்ஸ் பண்ணிச்  செய்தாலும் அந்தப் ப்ரபோசல் துறைத் தலைமைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தும் ரெக்கமன்ட் ஆகி மேல போயி ஆர்டராகணுமே…! அப்பத்தானே செல்லுபடியாகும்? நாமபாட்டுக்கு எடுத்தேன் கவிழ்த்தேன்னு  தொட்டதெல்லாம் ராசின்னு செய்துட முடியுமா?

இந்த ஆபீசுக்கு வந்து போறவுங்களெல்லாம் ஆரம்பத்துல மலையையே புரட்டிப்புடுவேன்னு சொல்லிட்டுத்தான் வருவாங்க…போகப் போக தேஞ்சு மாஞ்சு தேவட்டையாப் போயிடுவாங்க…நீங்களும் அந்த ரகம்தான்ங்கிறது எங்களுக்கு இப்பத்தான் புரியுது…..ஒரே குட்டை…ஒரே மட்டை…!

மன்னிக்கணும்…நான் சொல்றதை நீங்க இன்னும் சரியாப் புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். புரிஞ்சிருந்தா என் மேலே உங்களுக்குக் கோபமே வராது….சார் என்னங்க செய்வாரும்பீங்க….இல்ல..புரிஞ்சிருந்தும் பிடிவாதம் பண்ணனும்னு நிக்கிறீங்களோ என்னவோ…?

பிடிவாதம் என்ன சார் பிடிவாதம்…? பாம்பும் தேளும் நட்டுவாக்காளியும் ஓடுற இந்தக் காட்டுப் பகுதில ஒர்க் ஷாப்புங்கிற பேர்ல இங்க வந்து கெதியாக் கெடக்கமே…எங்களச் சொல்லணும்…ஒரு நல்ல தண்ணி உண்டா இங்க தாகம் தீர்க்க…?அத்துவானக் காடு.  எங்க கோரிக்கைக்கு செவி சாய்க்கிறதுக்கு ஒரு ஜீவன் இல்லே….! எத்தனையோ ராத்திரி நாங்க வீட்டுக்குக் கூடப் போனதில்லே. அவ்வளவு மெஷினரீஸ் வரிசையா வந்து கெடக்கு. போன மழையின் போது பார்த்திங்கல்ல கண்ணால…எத்தனை மெஷின்களை ரிப்பேர் பண்ணி அனுப்பிச்சோம்னு…மத்த மாவட்ட வண்டிக பூராவும் இங்கதான சார் வந்திச்சு. கலெக்டர் ஆபீசு ஜீப்பும், கார்களும் இங்கதான வரிச போட்டாங்க…அப்போ நாங்க மனசு வச்சிருந்தா…எங்க காரியத்தை நிறைவேற்றியிருக்க முடியாதா? அது முறையில்லைன்னு விட்டுட்டோம்…அவ்வளவு வண்டிகளும் இங்கயே ஏன் வந்திச்சு?  நாங்க நல்லா வேல பார்ப்போம்ங்கிற நம்பிக்கை…அதுக்கெல்லாம் எங்களுக்கு அவார்டா கொடுத்தாங்க…அட…ஏதாச்சும் ஊக்கத்தொகை?  எதுவுமில்லையே…தமிழ்நாட்டுலயே நம்ப ஒர்க் ஷாப்தான் சார் நம்பர் ஒன்! அவ்வளவு  ஒர்க் ஆர்டராகியிருக்கு…ஆனா எங்க நிலைமை? விதிகளைத் தளர்த்தி கிரேடு-1 தான் கொடுத்தா என்னா சார் குடிமுழுகிடும்? சம்பளம் என்ன அப்டியா உயர்ந்திடப் போவுது? ஒரு ஆயிரத்துக்குள்ள…கூடுமா? நாங்க ஸ்டேட் பூராவும்  என்ன ஒரு நூறு  பேரு தேருவோமா? அடஇருநூறுன்னே வச்சிக்குங்க…. கொடுத்தா என்ன சார்…டிபார்ட்மென்டே கவுந்திடுமா…? அநியாயம் பண்றீங்களே சார்….நாங்களும் வருஷக் கணக்கா தொண்டத் தண்ணி வத்தக் கத்திக் கத்திப் பார்த்துட்டோம். எல்லாவிதமான ஸ்டிரைக்கும் பண்ணியாச்சு….மலையசைஞ்சாலும் அசயும்…உங்க மனசு அசையாது போல்ருக்கே சார்…வயித்தெறிச்சல்….

ஞானமூர்த்திக்குச் மயக்கமாய்த்தான் இருந்தது. இரக்கம் பிறந்தது. மனது கசிந்தது. அவர்களின் பிரஷர் தாங்காமல் ஒரு பிரேரணையைத் தயார் செய்து, எப்படியோ அலுவலரைத் திருப்தி செய்து அனுப்பத்தான் செய்தார். உள்ளூரிலேயே ரெண்டு படியைத் தாண்டியாக வேண்டுமே…!

நான் அனுப்பிச்சாச்சு…போய், பார்க்க வேண்டியவங்களப் பாருங்க…இனிமே என் பொறுப்பில்லே….- விலகிக் கொண்டார்.

என்ன சார் இப்டிக் கைவிரிச்சா எப்டி சார்…? நீங்கதான் அடுத்தடுத்த கட்டத்தத் தாண்டுறதுக்கு ஒதவணும்…!எங்களுக்கு நீங்க செய்யாம வேறே யார் சார் செய்வாங்க….நாங்களும் போய்ப் பார்க்கிறோம்…இல்லைங்கலே…!

சர்வ சாதாரணமாய்ச் சொல்லி விடுகிறார்கள். கண்ணையும் கருத்தையும்  மூடிக்கொண்டுதான் பேசுகிறார்கள். ஆனால் இவர் வாங்கிய திட்டுக்களை அவர்கள் அறிவார்களா?

ன்யா….நாளைக்கு அட்மோ ஆகப் போகுற நீங்க…செய்ற காரியமா இது? அவுங்க எதக் கொடுத்தாலும் கண்ணை மூடிட்டு அனுப்பிடுவீரா? என்ன ஏதுன்னு பார்க்க மாட்டீரா? உம்மாலயே சொல்லி அங்கயே நிறுத்த முடிலன்னா அப்புறம் எதுக்குய்யா உமக்கு மானேஜர் போஸ்ட்? அதுக்கொரு சம்பளம், அலவன்சு, வருஷா வருஷம் இன்கிரிமென்ட்….கண்டதையெல்லாம் கண்ணை மூடிட்டு இங்க அனுப்பிட்டு, பெரிய லொள்ளு பண்றீரே….? இந்தத் தபாலுக்கு இந்த ஆபீஸ்ல சீலே விழுகாது….இப்டியே உம்ம கைல எடுத்துட்டுப் போயிரும்…அவுங்களுக்கு நீரு என்ன பதில் சொல்லுவீரோ எனக்குத் தெரியாது…எதையாச்சும் சொல்லிச் சமாளிச்சிக்கும்….கண்ட ப்ரபோசலையெல்லாம் குருட்டாம் போக்குல ரெக்கமன்ட் பண்ண முடியாது. அப்புறம் மேலிடத்துல எவன்யா பேச்சு வாங்குறது? ஃபோனப்போட்டு சீஃப் என்ன வாங்கு வாங்குவாருங்கிறது உமக்குத் தெரியமா தெரியாதா? செக்ரட்டரி காதுவரைக்கும் போச்சோ…அப்புறம் என் சீட்டு கிழிஞ்சிது…என் ப்ரமோஷன் நின்னு போகும்யா….அப்புறம் நான் உம்மட்டயா வந்து நிற்க முடியும்? திரும்பிப் பார்க்கமாப் போயிரும்….அவ்வளவுதான்….

சொல்லியவாறே அவர் கையால் தள்ளிவிட்ட அந்தப் பிரேரணை ஞானமூர்த்தியின் காலடியில் வந்து விழுந்தது. அதை எடுக்கக் குனிந்தபோது பதட்டத்தில் மேஜை நுனியில் தலையில் ஒரு இடியையும் வாங்கிக் கொண்டார் அவர்.  தான் செய்யாததை அது செய்து விட்டதாக நினைத்துக் கொண்டாரோ என்னவோ…எந்த ரியாக் ஷனும் இல்லை எதிர்த் தரப்பில்.

ன்று தலை குனிந்து வெளியேறியவர்தான். இன்று இதோ தனது பாஸின் எதிரே அவருக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு, அவரைத் தைரியப்படுத்தி எதிரே குத்துக் கல்லாய் அமர்ந்திருக்கிறார் ஞானமூர்த்தி. புதிய தலைவலி ஆரம்பித்திருந்தது.

மேஜைத் தொலைபேசி அலற பதற்றத்துடன் அதை எடுக்கிறார். என்னவோ ஏதோ என்ற பதற்றத்தில் எதிரே தனது பாஸ் பார்த்துக் கொண்டிருப்பதை நோக்கியவாறே உறலோ என்கிறார் ஞானமூர்த்தி.

நான்தான்யா எஸ்.இ. பேசறேன்….எப்டிய்யா நடந்தது இது? எல்லாரும் என்ன செஞ்சிக்கிட்டிருந்தீங்க…? – எடுத்த எடுப்பில் அந்த அர்த்தமில்லாத உளறலை எதிர்கொண்டார் ஞானமூர்த்தி.

எப்போது ஃபோன் எடுத்தாலும் வாய்யா…போய்யா…தான். மரியாதையாக விளித்தல் என்பதே கிடையாது. இதற்கே இவரை என்ன வேணாலும் செய்யலாம்…!

சார்…வணக்கம். நான் மானேஜர் பேசறேன்…அது பொங்கல் அஞ்சு நாள் லீவுல நடந்திருக்கு சார்…தகவல் தெரிஞ்சு உடனே எல்லாரும் வந்திட்டோம்…உடனே வேணுங்கிற நடவடிக்கை எடுத்தாச்சு…..

என்னய்யா  நடவடிக்கை எடுத்தீங்க பெரிஸ்ஸா? லட்ச ரூபா ஸ்பேர் பார்ட்ஸ்  திருடு போயிருக்கு…புல்டோசர் பிளேடுகளக் காணலங்கிறாங்க…ஸ்டோர் ரூமைத் திறந்து எடுத்திருக்கானுங்க…இருந்த பேரிங் பூராவும் காணோம்ங்கிறாங்களேய்யா…இப்பத்தான ரெண்டு நாளைக்கு முன்னாடி புது ஸ்டாக் வந்திச்சு….குறிப்பா திருடுனவங்களுக்கு அது மட்டும் எப்டித் தெரிஞ்சிச்சு? கூட்டுக் களவாணிங்களா எல்லாரும்….ஸ்டோர் சூப்பிரன்ட் என்ன தூங்குறாரா? மொத்தச் சாவியும் அவர்ட்டத்தான இருக்கும்? எப்டி உடைச்சாங்க…எதப் போட்டுத் திறந்தாங்க…? இல்ல தண்ணியப் போட்டுட்டு மூடாமயே போயிட்டாரா? யார் யார் சம்பந்தப் பட்டிருக்காங்களோ அத்தனை பேருக்கும் ரெக்கவரி ஆர்டர் போடுங்க…இரக்கம் பார்க்காதீங்க…!  நாளைக்கு ஆடிட் வந்தா, ஏ.ஜி.வரைக்கும் போயிடும் விஷயம்…ஜாக்கிரதை….

சார்….நான் சொல்றதை தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக் கேட்கணும்…உங்ககிட்டச் சொல்லாம வேறே யார்ட்டப் போய் நாங்க அழ முடியும்? நடந்தது இதான் சார்…

எங்களக் கட்டிப் போட்டுட்டு வேன்ல எடுத்திட்டுப் பறந்திட்டாங்கன்னு சொல்றாங்க சார்….வாட்ச்மேன் பூதலிங்கம் உள்ளே மாடில ஆபீசர் ரூம் வாசல்ல படுத்திருந்திருக்கான்….அவனக் கேட்டா எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கிறான். காலைல எழுந்திரிச்சி வந்துதான் ரெண்டு பேரையும் கட்டவிழ்த்து விட்டதாச் சொல்றான்…சார்…..சீனியர் மெக்கானிக்குகள் சார்…

காலைலவரைக்கும் மரத்துல கட்டினமேனிக்கு இருந்திருக்கானுங்களா? எவனுமே வர்லயா அந்தப் பக்கம்? எவன்யா நம்புவான் இதை? ராத்திரி ஷிப்ட் வாட்ச்மேன் என்னானான்?

….பூதலிங்கம்தான் முதல் ஆளாப் பார்த்திருக்கான்…சார்….

அவுங்க மூணு பேத்தையும் சஸ்பென்ட் பண்ணிட்டீங்களா?

எதுக்கு சார்….திருட வந்தவங்ககிட்ட அடியையும் வாங்கிட்டு,  கட்டிப்போட்டுக் கிடந்தவங்களை எப்டி சார் சஸ்பென்ட் பண்றது? ரெண்டு நாளா நைட் ட்யூட்டி பார்த்து நாளைக்கு வண்டிகளை டெலிவரி கொடுத்தாகணும்னு இருந்தது  தப்பா சார்? அவுங்க போலீசுக்குப் போயிட்டாங்க சார்….புகார் கொடுக்க…எங்க ஐயாவுக்கு எந்த பாதகமும் வரக்கூடாதுன்னு சொல்லி அழுவுறாங்க சார்…

அப்போ அந்த பூதலிங்கம்? அவன் ஏன்யா அங்க தூங்கினான்? பதினோரு மணிக்கு அவன் ஷிப்ட் முடிஞ்ருச்சில்ல…ஊரப் பார்த்துப் போக வேண்டிதான….? ஸ்பாட்டுல இருந்தா அவனும்தானே பொறுப்பு…?

கடைசி வண்டிய நிறுத்தாமப் போயிட்டான்னு வந்து படுத்திட்டதாச் சொல்றான் சார்…பாவம் சார்…அவன்….அப்பாவி …ஏதுமறியாதவன் சார்…அவன் கெட்ட நேரத்தப் பாருங்க….!

அதுக்காக? பூதலிங்கத்த சஸ்பென்ட் பண்றதுக்கு பதிலா இப்டி சார்ஜ் மெமோ கொடுப்பீங்களா? இந்த ரூல்ஸெல்லாம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா?   என்னமோ பிரமாதமாச் சொன்னாங்க உங்களப்பத்தி?  

அதிகாரி புரிந்து கேட்கிறாரா அல்லது மேலிடத்தின் நொச்சுத் தாங்கமாட்டாமல் அந்த வற்புறுத்தலில் கேட்கிறாரா? சற்றே தடுமாறினார் ஞானமூர்த்தி. பிறகு நிதானித்துக் கொண்டார்.

சஸ்பென்ட் பண்ணனும்னு எங்கிருக்கு சார்? எதுலயும் அப்டி இல்லை…..அதனாலதான் சார்ஜஸ் போட்டு மெமோ கொடுத்திருக்கேன்…..பஸ் கிடைக்காமப் போயி அங்கயே அவன் தங்கிட்டதுதான் இப்பத் தவறாப் போச்சு….அதுக்கு அவனுக்கு சஸ்பென்ஷனா? என்ன சார் அநியாயமா இருக்கு? அவன் வாங்குற கொஞ்ச சம்பளத்துக்கு, அதுலயும் பாதிய சப்சிஸ்டன்ஸ் அலவன்ஸ்ங்கிற பேர்ல நிறுத்திட்டா அப்புறம் அவன் குடும்பம் என்னதான் சார் செய்யும்? வேறே வழியில்லாம அங்கயே படுத்திட்டது ஒரு பழியா? எனக்குச் சந்தேகம் கட்டிப் போட்டுக் கிடந்தவங்க மேலதான்….புது ஸ்டாக் பேரிங் எல்லாத்தையும் கடத்தி வித்துட்டா செமையான காசு…புல்டோசர் ஸ்பேர்சும் நல்ல விலை போகும். கனம்மா  பணம் பார்க்கலாம்னு திட்டம். …லெவன் டூ செவன்… ராத்திரி ஷிப்ட் லட்சுமணன் வந்து அவிங்களோட சேர்ந்து இந்தக் காரியத்தச் செய்திட்டு, அவுங்களையும் கட்டிப் போட்டுட்டு  எதுவும் தெரியாத மாதிரி கமுக்கமா வெளியேறியிருக்கணும்… பயங்கரமான டிராமா சார் இது…! மேலேர்ந்து சொல்லச் சொல்லி நாலு மொத்து மொத்தி, நோண்டி  நொங்கெடுத்தா  எல்லா உண்மையும் வெளிய வந்திரும்..அப்டி அப்டியே கக்கிடுவானுங்க..….அதத்தான் சார் செய்யணும் உடனடியா…..! இல்லன்னா போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்திட வேண்டிதான். அவுங்க கவனிச்சிப்பாங்க…!பளிச்சென்று தீர்வை எட்டியிருந்தார் ஞானமூர்த்தி.

நம்பிக்கையான வேலையாட்கள்தான். ஆனால் இது நம்பும்படியாகவா இருக்கிறது? ஏன் புத்தி இப்படி வக்கரித்தது?  இதுநாள் வரை இப்படி எதுவும் நடந்ததில்லையே? ஒர்க் ஷாப் சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவை…!   பூதலிங்கம் அவன் பொஞ்சாதியோடு  வீட்டுக்கு வந்து கதறியது அவர் கண் முன்னே நிழலாடியது. நாலு குழந்தைகள்….குய்யோ முறையோ என்று வந்து கதறி நின்ற காட்சி இவரை உலுக்கியது.

நா அவுங்களக் காலைலதான்யா பார்த்தேன்.கடைசி பஸ் நிக்காமப் போயிட்டான். ஏற முடில. அப்டியே வந்து படுத்தவன்தான். அடிச்சிப்போட்ட மாதிரித் தூங்கியிருக்கேன்.  சத்தியமா, குலசாமி ஒண்டிக்கருப்பு  மேல சத்தியம்…எங்க ஆத்தா தலமேல சத்தியம்…அவிங்களக் கட்டிப் போட்டுட்டு நழுவினது லட்சுமணன்தான்…தவறாம டூட்டிக்கு வந்திடுற அவன் அன்னைக்கு மட்டும் எங்க போனான். ஏன் வெளில ஓடிட்டான்?  இருந்தா மாட்டிக்குவோம்னுதானே? மூணு பேரும்தான்யா கூட்டுக் களவாணிங்க….என்ன நம்புங்கய்யா…..! எந்தக் கோயில்ல வேணாலும் வந்து சத்தியம் பண்றேன். சூடத்த அணைக்கிறேன்…! இனிமே எனக்குப் பகல் ட்யூட்டியே கொடுங்கய்யா…ராத்திரி வேணாம்…முடியாதுன்னா என்னை எங்கயாச்சும் மாத்தி விட்ருங்க…சம்மதம்…இந்த மாதிரி ஆளுகளோட இருக்கிறது என்னைக்குமே ஆபத்து…எனக்கு வேணாம்யா…வேணவே வேணாம்…என் வேல போயிராமக் காப்பாத்துங்கய்யா…நீங்கதான் தெய்வம்…!

திருட்டு நடந்த அந்த இரவு ஸ்பாட்டில் இருந்த வாட்ச்மேன் பூதலிங்கத்தை ஏன் சஸ்பென்ட் பண்ணவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றும் ஞானமூர்த்தியின் மேல் உண்டுதான். அப்படி எங்கயிருக்கு? ரூல்ஸ் இருந்தா காண்பிங்க என்ற அவரின் திடமான எதிர்க் கேள்விக்கும் இன்றுவரை எந்த திசையிலிருந்தும் பதிலில்லைதான். விதி முறைகள் புத்தகத்தில்தானே பத்திரமாக உறங்குகின்றன…அவற்றை மண்டையில் ஏற்றினால்தானே? எதிரிகளின் பலவீனமே ஒருவனுக்கு பலம். ஆனாலும் அந்தக் கேள்வி அவர் மேல் விழுந்த கறை. அதுபற்றிஅவர் கவலைப்படவில்லை. தன் அடுத்த பதவி உயர்வு  பாதிக்குமோ என்பது பற்றியும்  பொருட்படுத்தவில்லை. அதற்குள், தான் ஓய்வு பெற்றாலும் போச்சு…!

இதனிலும் அதிசயம்  அதற்குப்பின் அந்தத் தரம் -1 உயர்த்தி வழங்கல் சர்ச்சை எழவேயில்லை என்பதுதான். ஏனிப்படி மௌனித்துப் போனார்கள்? காரணம் புரியவில்லைதான். அலை ஓயட்டும் என்று காத்திருக்கிறார்களோ?                                                                         

-------------------------------------

 

 

 

 

18 ஏப்ரல் 2024

 

'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in)

-----------------------------------------------------------------------------------------------------------



குற்றம் புரிந்தவன்” சிறுகதைத் தொகுப்பு -  

 

தாயைப் பிரிந்து இருக்க இயலாமை, தந்தையின் தியாகங்கள், இளமை தந்த திமிரில் இனம் புரியாமல் எழுந்த தீஞ்செயல்கள், அதனால் மனமுடைந்த பெற்றோர், நட்பில் விழுந்த கீறல், எதில் நிறைவு கொள்ளுதல் என்பதில் மனம் சார்ந்து எழும் கேள்விகள், ஒன்றை, ஒருவரை நேசித்தல் என்பது மனதளவில அழிவில்லாதது எனும் தன்மை, நெருக்கமானவை, உயிரானவை அந்நியப்பட்டுப் போகுதல், எளிய மனிதனின் அன்றாடப் பாடுகள், வயது முதிர்ந்தும், மனம் முதிராமையின் விளைவுகள், மனசு எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நினைத்துத் தவிக்கும், அலைபாயும் இயல்புடைமை என்று வெவ்வேறு திசைகளில் இதமாயும், பதமாயும்  பயணிக்கிறது இத் தொகுப்பு.

                                                                                                            உஷாதீபன்

 

 

சமர்ப்பணம்

-----------------

பெற்றோர்களுக்கு


16 ஏப்ரல் 2024

 

“தபால் ரயில்“  – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை  - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.


          
ஞ்சலட்டை நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அதைப் பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உறவுகளுக்குக் கடிதம், நண்பர்களுக்கு, பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம், ஏன்…காதலிக்கு ரகசியமாய்க் கடிதம் என்று கூட  அது வலம் வந்த கதைகள் நிறைய உண்டு. இந்த அஞ்சலட்டை புழக்கத்திற்கு வந்த காலம் 19-ம் நூற்றாணடின் பிற்பகுதி என்று சொல்லப்படுகிறது.

            இக்கடிதம் படித்தவுடன் இருபது பேருக்கு இதனைப் பகிர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையில் துன்பம் நேரிடும்…என்றும்….இறையருளைப் பெற…இக்கடிதத்திலான ஸ்தோத்திரங்களை அவரவர் பத்துப் பத்துப் பேருக்கு எழுதி அனுப்புமாறும் அதன் மூலம் அந்த பாக்கியவான் அளவிலடங்கா செல்வம் பெறுவார் என்றும் அஞ்சலட்டைகள் பலருக்கும் வந்ததுண்டு. அதைக் கண்டு பயந்து செயல்பட்டவர்களும், பதுங்கி மறைந்தவர்களும் நிறைய உண்டு.

            பெரியவர், காலம் சென்ற திகசி அவர்கள் எனது முதல் சிறுகதைத் தொகுதியான “உள்ளே வெளியே“ தொகுதியை சிலாகித்து நெருக்கி நெருக்கி ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அது அவரது  பெருந்தன்மை. அந்தக் கடிதம் அளித்த ஊக்கம் அளவிடற்கரியது என்று சொல்லலாம். அதுபோல் சுந்தர ராமசாமி அவர்கள் தனது உடல் நலம் பற்றித் தெரிவித்து மனதுக்கு மிக நெருக்கமாக எழுதிய ஒரு அஞ்சலட்டையும் என்னிடம் உண்டு. அந்த ஒன்றுதான் அவரோடு எனக்குக் கிடைத்த தொடர்பு.  வண்ணதாசனின் கடிதங்களைப் படித்திருக்கிறீர்களா? சு.ரா. அழகிரிசாமிக்கு எழுதிய கடிதங்கள், கி.ரா,வுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் புதுமைப் பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் என்று நிறையப் பொக்கிஷங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அஞ்சலட்டையே. அவையே பெரும் இலக்கியங்கள் எனலாம். பெருமை தரும் இலக்கியங்கள் என்றும் மகிழ்ந்து போற்றலாம்.

            இப்படி மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்து நிற்கும் அஞ்சலட்டையின் வரலாறு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிச்சயம் இருக்கும்.

            உறவுகளை மதித்து அஞ்சலட்டைக் கடிதங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. உடனே கிழிக்க மாட்டார்கள். அது மரியாதைக் குறைவான செயல் என்கிற ஒழுக்கமான எண்ணமிருந்த காலம் அது. துக்கச் செய்தியைத் தாங்கி வரும் கார்டுகளை மட்டும் படித்தவுடன், தகவல் அறிந்தவுடன் கிழித்து விடும் பழக்கம் உண்டு.

            அப்பாவோட அந்தக் கால மரப்பெட்டியைப் பார்த்தீங்கன்னா அதுல கட்டுக் கட்டா அஞ்சலட்டைக் கடிதங்கள் இருக்கும். அதப் பொக்கிஷமா பாதுகாப்பாங்க…அந்த அஞ்சலட்டையை வைத்து ரயில் செய்து குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் பெரியவர்கள் நம் வீட்டில் உண்டு. குறிப்பா அப்பா தன் குழந்தைகளுக்கு அந்தக் கார்டை மடக்கி மடக்கித் தரையில் தொடர்ச்சியாக நீள  அடுக்கி முதல் கார்டைத் தள்ளிவிட, அது வரிசையாகச் சாயும் அழகு ரயில் போவதை நினைவு படுத்தும்.

            இதை “தபால் ரயில்“ என்று தலைப்பிட்டு தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் அற்புதமான ஒரு சிறுகதையை வடித்திருக்கிறார். அவர் முகம் நமக்கு நினைவுக்கு வரும்போது, ஜெயகாந்தன் அவர்களும் மனதில் தோன்றுவார். உருவ ஒற்றுமை…கொஞ்சம் ஊன்றிப் பார்த்தால்தான் அது கவிராயர் என்பது புலப்படும். இந்த அஞ்சலட்டை எத்தனை விதங்களில் பயன்பட்டிருக்கிறது என்பது இக்கதையில் விவரிக்கப்படுகிறது. மகிழ்ச்சி, சோகம், துக்கம்…நட்பு…உறவு…ஆகியவைகளை இது ஒன்று சேர்க்கிறது. ஒரு கதையை விமர்சனம் செய்வது என்பது அக்கதையை அப்படியே படித்த வழி சொல்வது என்பதை விட அதிலுள்ள சிறப்பம்சங்களை விவரித்து, அதை உடன் தேடிப் படிக்கத் தூண்டுவதே நன்று என்று நான் நினைக்கிறேன்.

            சோக பாவத்திற்குதான் இலக்கியத்தில் அதிக மதிப்பு உண்டென்பேன் நான். சென்டிமென்டான விஷயங்கள் நன்றாய் எடுபடும். கதைகளிலும். நாவல்களிலும், திரைப்படங்களிலும் இதற்கான பெருமையே தனி. இதனால் வெற்றியடைந்த திரைப்படங்கள் அநேகம். காரணம் சோக பாவம்ங்கிறது நன்னெறிகளை அடிப்படையாகக் கொண்டது. அன்பு, பாசம், நட்பு, உறவு, சிநேகம், நன்மை, கருணை இப்படிப் பலவற்றையும் தாங்கி வருவது.

            இந்தக் கதைல அஞ்சலட்டைக்கான மதிப்பும் மரியாதையும் சின்னச் சின்னச் சம்பவங்களால் சரம் சரமாகக் கோர்க்கப்பட்டுள்ளது. ஒரு அஞ்சலட்டையை போஸ்ட்மேன் கொடுத்துட்டுப் போனாலே அந்த வீடே ஏதோ செல்வம் கிடைச்ச மாதிரி அன்றைக்கு சந்தோஷத்துல மூழ்கிக் கிடக்கும். சோகச் செய்தியைத் தாங்கி வந்தாலும் வீடே இருண்டு போன நிகழ்வுகளும் உண்டுதான். ஆனால் வயதில் பெரியவர்கள் இளையோர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் ஆலோசனைகளை மன நெருக்கமாக பாசத்தோடும் நேசத்தோடும் சொல்லி, தைரியப்படுத்தி எழுதும் பதில் கடிதங்கள் மிகவும் முக்கியம். அந்தப் பதில் கடிதங்கள் மூலம் ஊக்கம்பெற்று, மனம் தளராது செயல்பட்டு தங்கள் காரியங்களில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம்.

            மனதை நெருடும் விஷயங்கள் இக்கதையில் பல இடங்களில் உண்டு

ரேவதி அக்காவுக்கு ரொம்ப வருஷங்களாகவே கல்யாணம் ஆகவேயில்லை. எப்போதும் பாசி படிந்த தண்ணீர்த்தொடடியைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கும்…இந்த வரிகளைப் படிக்கும்போது அந்தப் பெண்ணின் உருவமும், ஏக்கமும், சோகமும் நம் மனதில் நிழலாடும்.

ரேவதி அக்கா கையெழுத்தும் தபால் ரெயிலில் ஓடும். ஓடும் நிஜ  ரயிலில் ஜன்னலில் தெரிந்தவர் முகத்தைப் பார்ப்பதுபோல் ரேவதி அக்கா முகம் தெரியும். இதமான கற்பனை இது என்பதை மறுக்க முடியாது.

சில கார்டுகள் தபால் ரெயிலில் சேராது விழுந்து விடும். இதற்கும் எழுதியிருக்கும் விஷயத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ…? பின் அவை மட்டும் நிற்காமல் விழுவானேன்….

கார்டுகளுக்கும் மனம் உண்டு, உணர்ச்சி உண்டு, உயிருண்டு என்று காட்டும் இடம் இது. எழுத்தாளரின்  மன உணர்வுகள் பேசும் இடம் இது.

எந்தப் பிரச்னையானாலும் தீர்த்து வைக்க அப்பாவுக்கு ஒரு கார்டு போதும். இது சத்தியமான  உண்மை. அஞ்சலட்டைகள் அதுவும் அப்பாவிடமிருந்து, அம்மாவிடமிருந்து வந்த மனதுக்கு நெருக்கமான வரிகளைத் தாங்கிய கடிதங்கள் சட்டைப் பையில் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்து ஊக்கத்தோடு செயலாற்ற உதவியிருக்கின்றன.  நேரடியான வாய் வார்த்தைகளை விட இந்தக் கடிதங்களின் வரிகளுக்கு சக்தி அதிகம்.

            பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் அவைகள் என்றே கூறலாம். ஆனால் எத்தனை பேர் அவைகளைப் பொக்கிஷங்களாக வைத்திருக்கிறோம்? காலம் நம்மை எங்கெங்கோ கடத்திக் கொண்டு போய் எறிந்து விடுகிறது. விழுமியங்களாக விஷயங்களை நாம் நிறையத் தவற விட்டிருக்கிறோம். இப்போதும்  தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.

            அதில் பழம் பெரும் தபால் அட்டைகளை, ஐயோ…அநியாயமாக் கிழிச்சி எறிஞ்சிட்டமே…காணாமப் போக்கிட்டமே…! என்று வருத்தமேற்படுத்தும் பல முக்கியக் கடிதங்கள்  நம் மனதை நெருடிக் கொண்டுதான் இருக்கின்றன.

            கடிதங்கள் மிகப் புனிதமான விஷயங்களைத் தாங்கி நின்று ஜெயித்ததுண்டு.  நேற்று தஞ்சாவூர் திலகர் திடலில்  மகாத்மா காந்திக்கு வரவேற்புக் கொடுத்தோம். நான் கொடுத்த கதர்ச் சட்டையை வாங்கிக் கொண்டார். அன்று மௌன விரதம்…என்னும் நண்பர் சிவப்பிரகாசத்தின்  அஞ்சலட்டை வரிகள் காலத்தின் அழியா அடையாளங்களில் ஒன்று என்று நான் உணர்கிறேன். தேசீயமும் தெய்வீகமும் கருத்தூன்றி நின்ற காலம் அது.

            குழந்தை பாக்கியம் இல்லாத ரங்கராஜனின் புதல்வரின் பார்வையில் இக்கதை விரிந்து பரந்து நிற்கிறது. வாழை என்கிற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு அன்பளித்த தொகைக்கு நன்றி தெரிவித்து அவர்களிடமிருந்து வந்த கடிதம் இவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறது. அவர்களுடன் சிற்றுண்டி அருந்தச் செல்லும் செய்தியில் திருப்தி கொள்கிறார்கள் இருவரும்.

            சேகரித்து வைத்திருந்த கார்டுகளை வைத்து ரயில் செய்து விளையாடி ஆறுதல் கொள்கிறார்கள்.  கடைசிக் கார்டைத் தள்ளிவிட்டு அது வரிசையாய்ச் சாய்ந்து விழும் காட்சி ரயில் ஓடும் குதூகலத்தை மனதில் ஏற்படுத்த, அவர் மனைவி குழந்தைபோல் துள்ளிச் சிரித்து மகிழ அந்த சந்தோஷத்தில் தன்னை மறக்கிறார் இவர்.

            எனக்கு நீ குழந்தை…உனக்கு நான்….. என்கிற முதிர்ச்சி அலைகளோடு கதை முடிவடைகிறது.

            தஞ்சாவூர் கவிராயரின் நேசமான  கருணை மனம், அன்பின் செழுமை, அனுபவ முதிர்ச்சி இந்தச் சிறுகதையின் மூலம் அவரை நமக்குத் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது.

            நன்றி…!

                                                ------------------------------------

 

06 ஏப்ரல் 2024

 

வழி விட்டவள் - சிறுகதை - பிரசுரம் தினமணி கதிர் 07-04-2024

வழி விட்டவள்






ன்னோட கொஞ்ச நேரம் அங்க உன்னால உட்கார்ந்திருக்க முடியுமாம்மா?- -என்று  கேட்டான் சந்துரு.

வெயில்ல நடந்துட்டே இருந்தாத்தான் தலை சுத்தும். விழுந்துடுவோமோன்னு பயம்மா இருக்கும். உட்கார்ந்திருக்கிறதுக்கு என்ன? – பிச்சு என்கிற பிச்சம்மாள் பையனைப் பார்த்துச் சொன்னாள். தன் நிலை உணர்ந்து அவன் கேட்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அதுக்கில்லம்மா….அங்க திண்ணைல உன்னை உட்கார்த்திட்டு, மாடிக்குப் போய்  நான் ஜாதகப் புத்தகங்களைக் கேட்டு வாங்கி…எழுத ஆரம்பிக்கணும்…குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும்…எதிர்த்தாப்புல ஐயப்பன் கோயில் இருக்கில்லையா…அங்க ராஜேந்திரா காபிக் கடை…இருக்கு….  வாங்கிட்டு வர்றேன். சூடாக் குடி…தாங்கும்….அப்புறம் நான் மேலே போய் எழுத  உ ட்கார்றேன்….சரியா…..? உன்னால மாடிப்படி ஏற முடியாது. ஒடுக்கமா பலகைல படி அமைச்சிருப்பாங்க அங்கே…! அதனால சொன்னேன்…

 காப்பி எதுக்குடா கண்ணா?   இந்த ஃபிளாஸ்க்ல வெந்நீர் வச்சிருக்கனே…அது போறாதா? கொண்டு வந்த பிளாஸ்கைக் காட்டினாள் பிச்சு.

இப்டித் தொட்டதுக்கெல்லாம் காசு செலவழியுமேன்னு பார்க்கப்பிடாது.  வெளில வந்தா…தேவையானதை சிலது செய்யத்தான் வேண்டியிருக்கும்.  வெட்டிச் செலவுன்னு நினைக்கப்படாது. உட்காரு இங்கே…இதோ வர்றேன்…..என்று சொல்லிவிட்டு, அந்தக் கடையை நோக்கி நடந்தான் சந்துரு.

உள்ளே நேர் உறாலில் மேஜை போட்டு உட்கார்ந்திருப்பவர் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே   பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஜாதகம் பதிவு பண்ணியிருக்கேளா? கேட்டார்.

ஜாதகமும் பதிவு பண்ணியிருக்கோம்…மாசப் பத்திரிகைக்கும் பணம் கட்டியிருக்கோம்…..-பிச்சு அவரைப் பார்த்துச் சொன்னாள்.

அப்போ எதுக்கு  இங்கே வந்து எடுத்துண்டு. அதான் தபால்லயே வருமே?

அது போறலை…ஒண்ணும் அமையலை….இங்க நிறைய இருக்குமாமே…என் பையன்தான் சொல்லி கூட்டிண்டு வந்தான்.

அது சரி….நீங்க எதுக்கு அலையறேள் இந்தப் பதைபதைக்கிற வெய்யில்ல…? …அவன் குறிப்புகளை எடுத்துண்டு வரமாட்டானா?

வருவான் மாமா….இங்கே கோயிலுக்கு வந்தோம்…அப்டியே இதையும் முடிச்சிண்டு போவமேன்னு…நல்ல ஜாதகமா இருந்தாச் சொல்லுங்களேன்…எம் பொண்ணுக்கு….பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா…வைதேகின்னு பேரு…

அப்டியா….இந்தக் காலத்துல எல்லாம் ஐ.டி. சாப்ட்வேர் இன்ஜினியர்ங்கிறா…அவாளுக்கே பையன் ஜாதகம் கிடைக்க மாட்டேங்குறது. பசங்களுக்கு ஏத்த பெண் ஜாதகமும் வறட்சிதான். வெறும் டீச்சருக்கு என்ன கிடைக்கும்?-அவர் பரிதாபப்படுகிறாரா அல்லது பரிகாசம் செய்கிறாரா? – பிச்சு அவரைக் கருணையோடு பார்த்தாள். வெறும் டீச்சர் என்றால்? என்ன அர்த்தம்? யோசித்தாள்.

என்னவோ மாமா…ஒரு கவர்ன்மென்ட் ஆபீஸ்ல வேலை பார்க்குற கிளார்க் கிடைக்க மாட்டானா? அதுக்குக் கூடவா என் பொண் தகுதியில்லாமப் போயிட்டா?

அவனும், வர்றவ தனக்கு சமமா சம்பாதிக்கணும்…அப்பத்தான் வண்டியோட்ட முடியும்ங்கிற நிலைமை வந்தாச்சு….ஏன்னா முன்னமாதிரி பென்ஷன் கிடையாதோல்லியோ? இப்பத்தான் பங்கு பென்ஷன்ங்கிறாளே? அதுவும் கைக்குக் கிடைக்காமே நிறையப் பேர் திண்டாடிண்டிருக்கா? இப்டியிருக்கச்சே…பிரைவேட் ஸ்கூல் டீச்சரை யார் கட்டுவா சொல்லுங்கோ….?

பிச்சு அமைதியானாள். இவரென்ன இப்படிப் பேசறார்? என்றிருந்தது. அவாவாளுக்குன்னு கடவுள் ஒண்ணைப் போட்டு வச்சிருக்க மாட்டாரா? அந்த அவனைக் கண்ணுல காமிக்காமயா போயிடப் போறார்? பார்த்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அம்மா…இந்தா..சூடு ஆர்றதுக்கு முன்னாடி குடி….-சொல்லியவாறே காபிக் கப்பை நீட்டினான் சந்துரு. இருக்கும் சூட்டில் பிளாஸ்டிக் கப்பு நெளிந்தது. சற்று அழுத்திப் பிடித்தால் எகிறிச் சிதறி விடும். பார்த்துப் பதவாகமாய் வாங்கி உதட்டில் வைத்து உறிஞ்சினாள் . போன உசிர் திரும்பி வந்தது போலிருந்தது.

முன்னால நிக்கிறது நகர்ந்தாத்தானே அடுத்தடுத்து வெளியேறும்…அதுக்கு நல்ல நேரம் வரணும்…

பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள். இந்தப் பாழாப் போனவ லேசுல வெளியேற மாட்டா போல்ருக்கே…! இப்படி எத்தனையோ முறை நினைத்துக் கொண்டாயிற்று.  அதுவே பாவம். அவளென்ன செய்வாள் இதற்கு? அமைந்தால்தானே?

து வேண்டாம்…அது வேண்டாம்னு ஒவ்வொண்ணையும் ஒதுக்கித் தள்ளினா…அப்புறம் உன்னை ஒதுக்க ஆள் வராதுன்னு நினைச்சியா?

அதுக்காக? எனக்குப் பிடிக்கலைன்னாலும் சரின்னு சொல்ல முடியுமா? என் மனசுக்குப் பிடிக்கணும்…அப்பத்தான் ஒத்துக்குவேன்…ஆள் அழகு பார்க்கலை நான்…அவன் பேச்சு குணம் எப்டியிருக்குன்னு பார்க்கிறேன்…அஞ்சு நிமிஷம் பேசினேன்னா,  லட்சணம் தெரிஞ்சு போகும் எனக்கு…ஒத்துப்போமா வேண்டாமான்னு….! குறைஞ்ச சம்பளக்காரனா இருந்தாலும் பரவால்ல…சிக்கனமா இருந்து சமாளிச்சிப்பேன். பொறுப்பான ஆளாங்கிறதுதான் முக்கியம்….உனக்கெப்படி அப்பா அமைஞ்சார்…ஆயிரம் கஷ்டம் வந்தாலும் கலங்காத மனுஷனா நீ பிடிச்சிட்டே….நானும் அப்டி ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கணும்னு நினைக்கிற போது அதிலென்ன தப்பு?  ஏன் அலுத்துக்கிறே? உனக்கென்ன அப்டி அவசரம்? என்னை வீட்டை விட்டு சீக்கிரம் கழுத்தைப் பிடிச்சு தள்றதுதான் உனக்குக் குறிக்கோளா? நான் வெளியேறிட்டேன்னா மத்ததெல்லாம் சரியாயிடுமா? உன் கஷ்டமெல்லாம் தீர்ந்திடுமா? உன் தரித்திரம் போயிடுமா? கொஞ்சம் பொறு…எனக்கேத்த ஆளாப் பார்த்துத் தேர்ந்தெடுத்துண்டு நானே போயிடுறேன்…அதுவரை கொஞ்சம் பொறுமையாயிரு…..! குணநலன்தான் எனக்கு முக்கியம். பணநலனில்லே…! அது அளவா இருந்தாப் போதும்…சமாளிச்சிப்பேன். அந்த தைரியம் எனக்கு உண்டு. எனக்கப்புறம் மீதம் ரெண்டு பேர் இருக்காங்கிற நினைப்பும் உண்டு…பொறுப்பும் உண்டு…புரிஞ்சிதா?

யப்பா…யப்பா…யப்பா…என்னா வாய்டீ உனக்கு? ஆனாலும் சாமர்த்தியம்தாண்டீ நீ! ஒண்ணு சொன்னா ஒம்பது பேசறியே? எங்க காலமெல்லாம் இப்டியில்லடியம்மா? யாரக் கை காட்டுறாளோ அவாதான்…மறு பேச்சுப் பேசாம தலையை நீட்டணும். மறுத்துப் பேசினா கலகம்தான்….இந்தக் காலத்துல நீங்கல்லாம் இப்டி நீட்டி முழக்கி பேசுவேள்னா நாங்க மூணோடயே நிறுத்தியிருப்போம்…பொண்ணு வேணும்…பொண்ணு வேணும்னு அதுவும் ஒண்ணுக்கு மூணாப் பெத்துத் தள்ளியாச்சு…ஊரெல்லாம் ஏழெட்டுப் பத்து அலையறதேன்னு பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டோம். .இப்போ முழிச்சிண்டிருக்கோம்? ஏதோ உபாயமாக் கொடுத்து வெளியேத்துவோம்னா  நீங்க இப்டித் தீட்டிண்டு நிக்கிறதப் பார்த்தா எங்களுக்குப் பெரிய மலைப்பாத்தாண்டியம்மா இருக்கு….ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு நினைக்கணும்…

நீங்க வாழ்ந்து முடிச்சவா…நான் இனிமேதான் ஆரம்பிக்கணும். கைல பிச்சைச் சட்டியத் ஏந்திண்டு அலைய முடியுமா? ஓரளவுக்கு நார்மலா குடும்பம் நடத்தறமாதிரி ஒருத்தன் கிடைக்க வேண்டாமா? அதுக்கு ஒருத்தன் அகப்படாமலா போறான்? மனசுக்கு உகந்தவனா வருவான்….மாட்டுவான்…..

மாட்டுவானா? நல்ல பேச்சுடி….தைரியம்தான் உனக்கு…ரொம்ப நம்பிக்கைதான்…அவன் உன்னை அடக்கி ஆளப் போறானோ அல்லது நீ அவனுக்கு மூக்கணாங்கயிறு போடப் போறியோ? யார் கண்டது….என்னவோ பண்ணிக்கோங்கோ…சலுப்பக் குடியாட்டமா சண்டைக்கு நிக்காம…சமாதானமாக் குடும்பம் நடத்தினாச் சரி….உன் மனசுக்கு எவன் சரியோ அதுதான் எனக்கும் சரி…!

வைதேகியுடனான முந்தைய  சம்பாஷனை பிச்சுவை அதிர வைத்தது. இங்கேயிருந்து எத்தனை ஜாதகக் குறிப்புகள் எடுத்துண்டு போனா என்ன…அவளுக்குப் பிடிக்கணுமே…பொண்ணைப் பையனுக்குப் பிடிக்கிறதாங்கிறதைவிட, பையனை என் பொண்ணுக்குப் பிடிக்கிறதாங்கிறதுதான் இப்போ அதி முக்கியமாப் போச்சு….எப்டி நடக்கப் போறதோ…யாரைத் தேரந்தெடுக்கப் போறாளோ? ஈஸ்வரா….!  - என்று எதிரே  சற்றுத் தள்ளி, உயர் கட்டிடங்களையும் மீறி வானளாவ நின்ற கோயில் கோபுரக் கலசங்களைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் பிச்சு.

பொண்ணு ஃபோட்டோ வச்சிருக்கேளா….? – உள்ளிருந்து குரல் வந்தது மீண்டும்.   பேச்சு நின்று ஒரு மணி நேரம் ஆகப் போகிறது. இதென்ன திடீரென்று? திரும்பிப் பார்த்தாள் பிச்சு.

ஃபோட்டோ இருக்கான்னு கேட்டேன்….அதைத்தானே கொண்டாங்கிறா இப்போ…!  – மறுபடியும் கேள்வி வேகமாய் வந்தது.

இருக்கே மாமா….இதோ….ஒரே ஒரு காப்பிதான் இருக்கு….அதுவும் எப்பயோ எடுத்தது….என்று தான் வைத்திருந்த ஒரு பழைய பர்ஸின் உள் பகுதியில் பார்வையாய் வைத்திருந்ததை உருவி நீட்டினாள் பிச்சு.

ரொம்பப் பழசு போல்ருக்கே…லேட்டஸ்டா எடுத்து ஒரு பத்துக் காப்பி கைவசம் வச்சிக்க மாட்டேளா? இதெல்லாம் சொல்லித் தரணுமா?  .இப்போ உங்க பொண்ணுக்கு என்ன வயசிருக்கும்? – சளைக்காமல் கேட்டார்.

முப்பது ஆயிடுத்து மாமா….அதான் சொல்றனே…நாலஞ்சு வருஷமாப் பார்த்திண்டிருக்கேன்…அமையலை…என்னைப் பிடிச்சு ஆட்டி வைக்கிறது…என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ…எதிலயும் மாட்டிக்காமே அவர் போய்ச் சேர்ந்துட்டார்..புண்ணியவாளன்…நா மாட்டிண்டு முழிக்கிறேன். இன்னிக்குத் தேதிக்கு இதைவிட அழகாயிருப்பா நேர்ல….நிறம்தான் கொஞ்சம் மட்டு…ஆனா முகம் திருத்தமாயிருக்கும் மாமா….உங்களப் பார்த்த விசேஷம்…எம்பொண்ணுக்கு ஏதாச்சும் ஒண்ணு அமையட்டுமே…உங்களுக்குக் கோடிப் புண்ணியம்…முடிச்சு வையுங்கோ…-கையெடுத்துக் கும்பிட்டாள்.

வருத்தப்படாதீங்கோ….சொல்றேன்…..அதான் இத்தனை நாள் கழிச்சி இங்க தேடி வந்திருக்கேள்…இந்த ஜாதகப் பரிவர்த்தனை சங்கம்பத்தி யாருமே உங்களுக்குச் சொல்லலை போல்ருக்கு? நம்மடவாளுக்குன்னு வருஷக் கணக்கா இயங்கிண்டிருக்கு…தெரியுமோல்லியோ?  இப்பவாச்சும் வழி தெரிஞ்சிதே…எவ்வளவோ பேருக்குக் காரியம் கைகூடின அதிர்ஷ்டமான இடமாக்கும் இது…! புண்ணியச் சேத்திரம்னு சொல்லணும்…

ஆகட்டும் மாமா…உங்க வாய் முகூர்த்தம்….அவளுக்கு மாங்கல்யதாரணம் ஆகணும்…அந்த அம்பாள் மீனாட்சிதான் கருணை செய்யணும்…

ஆகும்…ஆகும்…எல்லாத்துக்கும் வேளை கூடி வரணுமோல்லியோ…..மனுஷப் பிரயத்தனங்கள் மட்டும் போறாதே…!

தேஜஸோடு கூடிய அவர் முகத்தை ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள் பிச்சு. நல்லதாவே பேசுறார் மனுஷன்.  பகவானே முன்னே வந்து கேட்குற மாதிரியிருக்கு….நல்ல நேரம்  கூடி வரட்டும்….-நினைத்துக் கொண்டாள். கண்களில் நீர் கசிந்தது.

ஆஞ்சநேயர் கோயில், பஜனை மடம், விஸ்வவிநாயகர் கோயில் ன்னு சனி, ஞாயிறுகள்ல ஜாதகம் சார்ட்டக் கொண்டு வந்து படலம் படலமாக் காட்டத்தான் செய்யுறா….எதுவுமே நமக்குப் பொருந்தி வரலை…முடிஞ்சதெல்லாம் நீக்குவாளோ மாட்டாளோ? பட்டியல் நீண்டுண்டேதான் போறது.  .ஏழெட்டு ஜாதகம்னு கஷ்டப்பட்டு குறிச்சிண்டு போனாலும் லெட்டர் போட்டா பையன்  ஜாதகக் காப்பி அனுப்ப மாட்டேங்கிறா…பதிலே போட மாட்டேங்கிறா…நாமளே பொண்ணு ஜாதகத்தைக் காப்பியா எடுத்து எடுத்து அனுப்பினாலும் பதில் எதுவும் வர்றதில்லை. ஒரு போட்டோ அனுப்புங்கோன்னாவது யாராவது கேட்கமாட்டாளோ? மூச்….நாயா அலைஞ்சதுதான் மிச்சம்…மலப்பா போச்சு மாமா….எங்காத்து மொதப் பொண்ணை என்னைக்கு வெளில தள்றேனோ அன்னைக்குத்தான் விடியல். அப்புறம்தான் மத்ததை நகர்த்த முடியும் என்னால…இன்னும் ரெண்டு வச்சிண்டிருக்கேனே…புத்தி கெட்டவ….! என்ன பண்ணச் சொல்றேள்…பெத்தாச்சு…கழுத்த நெரிச்சா கொல்ல முடியும்? இல்ல விஷம் வச்சுக் கொல்ல முடியுமா? இந்தக் காலத்துல எல்லாரும் ரொம்ப உஷாரா இருக்கா….ஒண்ணே ஒண்ணு…கண்ணே கண்ணுன்னு இருந்துடறா…ரொம்பத் தப்பினா ரெண்டு…கண்ணுல படறது….பெரும்பாலும் ஒண்ணுதான்….ஒண்ணுக்கு ஒண்ணு துணை வேண்டாமோ? வேண்டாம்ங்கிறா…அதுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தா துணை தானா வந்துட்டுப் போறதுன்னு விட்டுட்டா…இந்தப் புத்தி மூத்த தலைமுறைக்கு இல்லாமப் போச்சு பாருங்கோ….

தன்னை மறந்து…அவர் கேட்கிறாரா என்பதைக் கூடக் கவனிக்காமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள் பிச்சு. புலம்பல்தான் என்று மனசு உறுத்திற்று. எந்தவழியிலாவது காரியம் ஆகாதா என்ற ஆதங்கம் தெறித்தது.

அம்மா…வா…போகலாம்….எடுத்தாச்சு……-சொல்லியவாறே கீழே இறங்கி வந்தான் சந்துரு. மரப்படிகளில் இறங்கி வருவது சத்தத்தைக் கிளப்பியது.  அவன்தான் பொறுமையோடு அலைகிறான். விடாமல் ஜாதகங்களை எடுத்து வருகிறான்.  வண்டிக்கு அச்சாணிபோலக் கடமையைச் செய்கிறான்.

ஆச்சா…போகலாமா…? நாங்க வரோம் மாமா….நீங்கதான் சொல்லணும்…தெரிஞ்சவா சொன்னாத்தான் புண்ணியம்….காரியம் ஆகும்…

இருங்கோ…இருங்கோ…நீ எடுத்த குறிப்புகளைக் கொண்டா பார்ப்போம்…என்றார் அவர்.

உள்ளே நுழைந்தான் சந்துரு. அவர் மேஜைக்குப் பின்னே கைலாசநாதன், காரியதரிசி…என்ற போர்டு இருப்பதைப் பார்த்தான்.

ஒவ்வொன்றாகக் குறிப்பாய் கவனித்தார். பிறகு சரி…..கொண்டு போய் உங்க பொண்ணோட ஜாதகத்தோட பொருந்தறதா பாருங்கோ….எட்டுப் பொருத்தம், ஒன்பதுன்னு அலையாதீங்கோ…ஆறு, ஏழு பொருந்தினாப் போதும். குறிப்பா வம்ச விருத்தி வேணும்..அதான் முக்கியம்…கவனத்துல வச்சிக்குங்கோ…என்றவர் ஒரு குறிப்பிட்ட குறிப்பினைச் சுட்டி, இது பொருத்தமா இருக்கான்னு பார்த்திட்டு வந்து எனக்குச் சொல்லுங்கோ….என்றார்.

ஆகட்டும் மாமா…..…-பிச்சு நம்பிக்கையோடு  கிளம்பினாள். வரேன் அங்கிள்…என்று சொல்லிவிட்டு படியிறங்கினான் சந்துரு.

ஒரு நிமிஷம்…உங்க பொண்ணு ஜாதகம் பதிஞ்சிருக்கேளே…அது சீரியல் நம்பர் என்னன்னு சொல்லுங்கோ…கேட்க விட்டுட்டேன்…..

நானூற்றி முப்பத்தியேழு மாமா….வைதேகின்னு பேரு….வோல்டாஸ் காலனில இருக்கோம்…அதான் அட்ரஸ்…..

வந்த கையோடு குறித்து வந்த இடங்களுக்கு எழுதிப் போட்டாயிற்று. இனி பதில் வருமா, போன் வருமா என்று காத்திருக்க வேண்டும். கடிதம் எழுதுவதே குறைந்து போன காலம். இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களுக்கு இன்னும் எழுத்து மூலமான அக்கறை இருக்கத்தான் செய்கிறது. அப்போதுதான் நம்பிக்கையும் வருகிறது. நமக்குத்தான் வேளை வர வேண்டும்.   தினமும் தபால்காரரை எதிர்பார்த்து திண்ணையிலேயே பழி கிடக்க வேண்டும். வெறுமே அவர் கடந்து போகையில்தான் எத்தனை ஏமாற்றம்? இந்த உலகமே இரக்கமற்றதாய்த் தோன்றும் அந்தக் கணம்.

ரு வாரம் கழித்து  மதியம் கடந்த  பொழுதில்….அந்த    ஃபோன் வந்தது.

அதிசயமா இருக்கே…அடடா…சந்துரு கூட இல்லையே…வெளில போயிட்டானே…இந்த நேரம் பார்த்து வருதே…ஈஸ்வரா…என்னவோ ஏதோ….

-மிகுந்த பதற்றத்தோடு அந்தச் சின்னக் கையடக்க சாதா ஃபோனை எடுத்து சந்துரு சொல்லிக் கொடுத்திருந்ததுபோல் பச்சை பட்டனை விரல் நடுங்க அழுத்தினாள் பிச்சு.

உறலோ…உறலோ…என்றாள் ஈனஸ்வரத்தில். லைன் கிடைத்ததா என்ற பதற்றம் வேறு. வேறு என்னென்னவோ சத்தமெல்லாம் குறுக்கிட்டது.  பிறகு நின்றது….லைனில்தான் இருக்கேனா….? யாராயிருக்கும்?

யாரு…பிச்சு மாமி பேசறேளா….நாந்தான் சங்கத்திலேர்நது செக்ரட்டரி பேசறேன். என்னைத் தெரியறதா…? எதிர்க் குரல் சத்தமாக வந்தது.

நமஸ்காரம் மாமா….தெரியாமையா சொல்லுங்கோ…பையன் வெளிய போயிருக்கான்…அதான் கொஞ்சம் பதட்டமா இருந்தது….எடுக்க லேட்டாயிடுத்து…

அதானே பார்த்தேன். மணியடிச்சிண்டே இருக்கேன்னு…பரவால்லே….ஒரு விபரம் சொல்லணும்…அதுக்காகத்தான்…

எப்டி மாமா ஃபோன் நம்பர் கிடைச்சது…? பதற்றம் குறையாமல் கேட்டாள் பிச்சு. 

என்ன இப்டிக் கேட்கிறேள். உங்க பொண்ணு ஜாதகத்துல பின்னாடி எழுதியிருக்கேளோன்னோ….? குறிப்பை வச்சு ஜாதகத்தை எடுத்துட்டேனே? வேறே என்ன வேலை எனக்கு?  மறந்துட்டேளா…! என்னைக்கோ பதிஞ்சது. ஞாபகமில்லை போல்ருக்கு…!

அப்டியா…நினைவில்லே மாமா…பையன்தானே ஃபாரம் வாங்கிப் பதிவு செஞ்சான்…நான் என்னத்தக் கண்டேன்…சொல்லுங்கோ …..- தன்னைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு பேசியவாறே  நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாடா….என்று ஆசுவாசமாய் இருந்தது.

ஒண்ணுமில்லே….உங்க பொண்ணுக்கு ஒரு ஜாதகம் அமைஞ்சிருக்கு…அதான் சொல்லலாமேன்னு…

அப்டியா மாமா…ரொம்ப சந்தோஷம்…நான்தான் அன்னைக்கே சொன்னேனே…உங்களாலதான் விடியணும்னு….விடிஞ்சிடுத்து மாமா….-சற்றே குதூகலமாய்க் கேட்டாள் பிச்சு. அவர் குரல் நம்பிக்கையளித்தது.

அவா வேத்துப் பிரிவுதான். முதல்லயே சொல்லிப்புடறேன்…ஆனா நம்மடவா….பிரிவெல்லாம் பார்க்கப்படாதுன்னு பெரியவாளே சொல்லியிருக்காளோன்னோ? …தெரியுமோல்லியோ…நல்ல மனுஷாளாங்கிறதுதான் முக்கியம்…தெரிஞ்சிதா…..?

சொல்லுங்கோ மாமா…கேட்டுக்கிறேன்….நீங்க சொன்னா சரிதான்…மேலென்ன கீழென்ன…? பரஸ்பர அன்புதான் முக்கியம்….

இந்தக் காலத்துல என்னென்னவோ நடந்துடறது. ஜாதி விட்டுச் ஜாதி கல்யாணமெல்லாம் சர்வ சகஜமா நடந்துண்டிருக்கு….அதப்பத்தி நாம எதுவும் சொல்ல வேண்டாம்…நம்மடவாள்லயே மேல் கீழ்ங்கிறது பார்க்கப் புகுந்துடறா…? அது பிடாதுங்கிறேன்….நல்ல குடும்பமா, மரியாதையான, பொறுப்பான மனுஷாளா…பையன் பொறுப்பா, சமத்தா  பொண்ணை வச்சுக் காப்பாத்துவானா…குடித்தனம் பண்ணுவானா? …ரெண்டு பேரும் சந்தோஷமாயிருப்பாளாங்கிறதுதான் முக்கியம்….புரிஞ்சிண்டேளா….? இன்னொண்ணு…..

என்னது? அதான் எல்லாம் சொல்லிட்டேளே…மாமா? -படபடத்தாள் பிச்சு.

பார்த்தேளா…அதுக்குள்ளேயும் பதட்டப்படுறேளே…பையனுக்கு சித்தே வயசுஜாஸ்தி…முப்பத்தியெட்டு…அதையும்பார்க்கப்பிடாது…தெரிஞ்சிண்டேளா…! உங்க பொண்ணுக்கு அமையாம இழுத்த மாதிரி அவனுக்கும்…!

என்ன மாமா..இப்டிச் சொல்றேள்…? முப்பதெங்கே..முப்பத்தி எட்டெங்கே…? ஒரு முப்பத்தியஞ்சுக்குள்ளன்னாக் கூடப் பரவால்லே…முத்திக் குரங்கான்னா தெரியறது? தாம்பத்யமெல்லாம் குறையில்லாமக் கழியணுமே மாமா…! நாளைக்குக் குழந்தை பிறக்கிறதுல ஏதாச்சும் பிரச்னைன்னா….?

எதிர்த்தரப்பில் அமைதி…என்னவோ முனகுவது போலிருந்தது. கடவுளே என்று வாய் முணுமுணுத்தது. ஏதும் தப்பாய்ச் சொல்லி விட்டோமோ?  பிச்சுவுக்கு. நாக்கை அடக்கு என்றது மனசு.

எடுத்த எடுப்புல நீங்களே இப்படிப் பேசுறது நல்லாயிருக்கா? நாற்பதுலயும் அம்பது ஆரம்பத்துலயும் கூட இந்தக் காலத்துல குழந்தை பெத்துக்கிறா? அது அவா அவா இஷ்டம். வசதி வாய்ப்புகளைப் பொறுத்தது. மெடிக்கலா எவ்வளவோ முன்னேறியிருக்கிற காலமாக்கும் இது! எதுக்கும் அச்சப்படத் தேவையில்லே.  ……முப்பதுகள் வயசு ஜோடிக்குப் போய் இப்டி பயப்படுறேளே? அதெல்லாம் சேமமா நடக்குமாக்கும். நல்லதையே நினையுங்கோ…

பதற்றமாகிப் போனாள் பிச்சு. தப்பாகச் சொல்லிவிட்டோமோ? அஞ்சானா என்ன, எட்டானா என்ன? அமையறதே குதிரக் கொம்பாயிருக்கச்சே…? இதுநா வரைக்கும் ஒண்ணுகூடத் திகையலையே?

உறலோ….உறலோ…மாமா….இருக்கேளா லயன்ல…? சொல்லுங்கோ…நீங்க நல்லதத்தான் சொல்றேள்…கேட்டுக்கிறேன்…சம்மதம்தான்…

வாரிசு இல்லாமப் போயிடுமோன்னு பயப்பட வேண்டாம். அதெல்லாம் அவா பார்த்துப்பா…நன்னாவே நடக்கும்..நீங்க ஒண்ணும் கவலப்பட வேண்டாம்…தெரிஞ்சிதா…! டக்குன்னு முடிச்சு பொண்ணை வெளியேத்தப் பாருங்கோ….இதவிட சல்லிசா ஒரு வரன் அமையாது….நானாக் கண்டு பிடிச்சுக் கேட்டப்போ அவா மறுக்கவேயில்லை….உடனே சம்மதிச்சிட்டா….பையனும் பார்க்க லட்சணமாயிருக்கான்…ரெண்டு பேருக்கும் நன்னாப் பொருந்திப் போறது ஜாதகம்….நீங்க சொல்ற எட்டென்ன…பத்துமே பொருந்தறதாக்கும்…ரஜ்ஜூப் பொருத்தம் அமர்க்களம்…!

அதெப்படி மாமா…எங்கயுமே எல்லாமும் பொருந்தாதே….ஆறேழு பொருந்தறதே துர்லபமாச்சே…? -விடாமல் கொக்கி போட்டாள் பிச்சு. வாய் நின்றால்தானே?

அந்த ஆறேழுலதான் இந்த ரஜ்ஜூ வந்து உட்கார்றது…மனசு பொருந்திப் போனா எல்லாமே பொருந்திட்டமாதிரிதான் அர்த்தம். அதுக்கு முன்னாலே எந்த எந்தக் கிரக விசாரம் நிற்கும்? அதைச் சொல்ல வந்தேன்…

உங்களை மலைபோல நம்பறேன் மாமா….எனக்குப் பரிபூரண சம்மதம்….

மத்த விபரங்களை அப்புறம் அவாளோட பேசிட்டுச் சொல்றேன்.. வச்சிடட்டுமா…? தைரியமா இருங்கோ…எல்லாம் நல்லபடியா முடியும்…..உங்க பொண்ணும் நிச்சயம் சம்மதிப்பா…வேளை வந்தாச்சு….

டொக்கென்று சத்தம் கேட்டது எதிர் வரிசையில். பேச்சு முடிந்தது.

ஒரு நிமிடம் கண்ணை மூடிக் குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டாள் பிச்சு. உடம்போடு உண்டான சிலிர்ப்பு. தன்னை மீறிக் கலங்கிய கண்கள்.

 ங்கே….

உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அங்கிள்….இத முடிச்சுக் கொடுத்ததுக்கு…நீங்களே பார்த்து,   பொறுப்பு எடுத்துண்டு சொன்னதுக்கு என்னோட பணிவான நமஸ்காரங்கள். அவருக்குக் கொஞ்சம் கால் ஊனம்ங்கிறதை மட்டும்  அம்மாட்ட சொல்ல வேண்டாம்…. …அது  அவ்வளவாத் தெரியாது. உன்னிப்பாக் கவனிச்சிப் பார்த்தாத்தான் புரியும்… பின்னாடி நான் சொல்லிச் சமாளிச்சிக்கிறேன்...கல்யாணம் ஆனப்புறம் என்ன…சரின்னு போய்த்தானே ஆகணும்…என் மனசுக்குப் பிடிச்சிப் போச்சு அவரை. மன ஊனம் இல்லாத நல்ல மனுஷன் . ரொம்ப வருஷப் பழக்கம் அவர். துளிக்கூடத்   தெரியாது எங்க அம்மாவுக்கு. எப்டிச் சொல்றதுன்னே சில வருஷத்தைக் கழிச்சிட்டேன்…அவரும் என்னை நம்பியே இருந்திட்டார். அந்தளவுக்கு ரெண்டு பேரும் மனசு ஒன்றிப் பழகிட்டோம்…என் கூட வேலை பார்த்தவர்தான். அப்புறம் ஃபேமிலிக்காக மாறுதல்ல போயிட்டார். ஆனா மனசு மாறவே இல்லை.இனி மீதிக் காலமும் அவரோடவே போயிடட்டும்ங்கிற  முடிவுக்கு நானும் வந்திட்டேன். நான்தானே வழிவிடணும் எங்காத்துக்கு?குத்துக்கல்லா இருக்கிறவ நான்தானே?  அதத்தானே அம்மா சொல்லிச் சொல்லிக் குத்திக் காட்டறா…!  மனசுதான் வாழ்க்கை….மனக்கோணல் இல்லாதவாளோட நிச்சயம் சந்தோஷமா வாழ்ந்திடலாம்ங்கிற நம்பிக்கை எனக்குப் பரிபூர்ணமாயிருக்கு….அது போதும்…-கண்களில் நீர் பனிக்க வைதேகி அவரை விழுந்து நமஸ்கரித்தாள்.

உனக்குப் பெரிய்ய்ய மனசும்மா….என்று நெஞ்சுருகக் கூறி  இருகரங்களாலும் மனசார ஆசீர்வதித்தார் அவர். நீ கொடுத்த அந்தப் பையனோட ஜாதகத்தை உன் தம்பி குறிச்சிருந்தானாக்கும்…அதக் குறிப்பாப் பாருங்கோன்னு நானும் சொல்லியிருந்தேன்….என்ன பண்ணினாளோ? . இப்போ உங்கம்மாட்டயே விலாவாரியாப் பேசியாச்சு….காரியமும் முடிஞ்சமாதிரிதான்…சந்தோஷம்தானே…?

சந்தோஷம்ங்கிறதைவிட திருப்திங்கிறதுதான் சரி. மனசுக்குப் பிடிச்சதுலதானே திருப்தி வரும்… நான் கிளம்பறேன் அங்கிள்…ஏண்டீ  லேட்டுன்னு அம்மா துளைச்செடுப்பா….யாரோட ஊர் சுத்திட்டு வர்றேன்னு கூட ஒரு நாள் கேட்டிருக்கா…!  அப்பா இல்லாத குறைக்கு இப்படிப் பல வசவுகள்…எல்லாம் மரத்துப் போச்சு அங்கிள்….

அடுத்தாப்ல தம்பதி சமேதரா  நீங்க ரெண்டு பேரும்தான் ஒத்துமையா இருந்து உன்னோட தங்கைமார்கள் ரெண்டு பேத்தையும் படிப்படியாக் கரையேத்தணுமாக்கும்….அந்தப் பொறுப்புமே இனிமே உனக்கும் அவருக்கும்தான். அப்புறம்தான் உனக்கு  மொத்தமா விடியும்… ஞாபகம் வச்சிக்கோ…

கண்டிப்பா அங்கிள்…என் கடமையை நான் மறக்கவே மாட்டேன். பொறுப்பா எனக்கு உதவுறதுக்கு ஒரு தம்பியையும் வச்சிருக்கேனே…!  மலைபோல அவன் எனக்கு இருக்கான்! தங்கக் கம்பி…!!-என் மேலே ரொம்ப அக்கறை உண்மையிலேயே அவனுக்குத்தான்னு சொல்லணும்…!! பொருள் பொதிந்த ஒரு புன்னகையை அவரைப் பார்த்து உதிர்த்துவிட்டு விடைபெற்றுக் கொண்டாள் வைதேகி.

ரயில் நிலையம் அருகே அமைந்த அந்தத் திறந்த வெளிக் காலனி வழியே நுழைந்து அவள் நடந்து வந்து கொண்டிருந்த போது விரிந்து கிடந்த  தண்டவாளங்கள் தொலைதூரத்தில் ஒன்றுகூடி நீண்டிருப்பதைக் கண்ணுற்றாள்.    

 ------------------------------

 

 

 

 

 

“ மழித்தலும் நீட்டலும் ” சிறுகதைத் தொகுதி -  புஸ்தகா.கோ.இன் வெளியீடு  பின் அட்டைக் குறிப்பு – உஷாதீபன்             வாழ்க்கையில் எத்தனையோ வித...