26 நவம்பர் 2023

 

சிறுகதை                     தினமணிகதிர்-26.11.2023 பிரசுரம்

வாயும் வயிறும் வேறு!“     





  

ன்னை மன்னிச்சிடுங்கப்பா…. – சுதர்ஸனின் இந்த இரண்டு வார்த்தைகளை  எதிர்பார்த்துத்தான் தணிகாசலம்   காத்திருந்தார். எப்போது சொல்லப்போகிறான் என்பதே அவரது கவனமாய் இருந்தது. சொல்லப் போகிறானா அல்லது தள்ளிப் போடப் போகிறானா என்பதான கண்ணோட்டத்திலும்  வளைய வந்து கொண்டிருந்தார். இந்த முடிவுக்குத்தான் அவன் வரவேண்டியிருக்கும் என்று அவன் சார்பில் என்றோ சிந்திக்க ஆரம்பித்து விட்டார் அவர். அவரைப் பொறுத்தவரை ஆனது ஆகிப் போனது,  மேற்கொண்டு பிரச்னையில்லாமல்  வண்டி ஓடினால் சரி. அவ்வளவே!  அவனின் முடிவுக்கு அவர் தயாராகி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தயாராகாவிட்டாலும் நடக்கத்தானே போகிறது…என்று நினைத்து மௌனப் புன்னகை பூத்தார்.

            மனைவி தாட்சாயிணியிடம் முன்னதாகச் சொல்லியும் வைத்திருந்தார். அவள் மனதளவில் தயாராக வேண்டுமே என்கிற கலக்கமிருந்தது இவருக்கு. யதார்த்த உலகின் நடப்புகளைக் கண்கொண்டு அறிவு பூர்வமாக உள்வாங்கி ஓரளவு பக்குவ நிலைக்குத் தான் வந்து விட்டதாகத்தான் உணர்ந்தார். அவரைப் பொறுத்தவரை வயதும் தள்ளாமையும்தான் இடித்தது. ஒருத்தருக்கொருத்தர் துணை என்று இருந்துவிடலாம்தான் என்கிற தைரியமும் இருந்தது. மனசு தயாராகிவிட்டால் அது தெம்பைக் கொடுக்காவிட்டாலும், தளர்ச்சியை உண்டாக்காது  என்கிற நம்பிக்கை இவருக்குண்டு. அவள்தான் பாவம்…மகனைப் பிரிந்து எப்படியிருப்பாளோ? பிரிவாளா அல்லது சண்டைக்கு நிற்பாளா? சண்டைக்கு நின்றால் கேவலப்பட்டுத்தான் வெளியேற வேண்டியிருக்கும்.  இன்னும் எத்தனை காலம்தான் பையனை மடியில் கட்டிக் கொண்டு அலைவது என்கிற பிரக்ஞை அவளுக்கு வந்தமாதிரித் தெரியவில்லை. இனிமேலும் தன் பின்னாலேயே கொடுக்கு மாதிரி அலைவது அவளுக்கே கூச்சமாய் உணர வேண்டாமா?

            நான் துணைக்கு இருக்கிறேன் என்கிற தைரியமேயில்லையே அவளிடம்? தொட்டதற்கெல்லாம் சுதா…சுதா…என்று அழைத்து அவனிடம் தன் கோரிக்கைகளை, தேவைகளைச் சொல்லும் அவளும், அதனை உடனுக்குடன் சிரமேற்கொண்டு  நிறைவேற்றும் அவனும், அம்மா கோண்டு, அம்மா கோண்டு என்று அந்தப் பெண்ணின் காதுக்குக் கேட்கும் அளவுக்கே தான் அடிக்கடி வேடிக்கையாய்ச் சொன்னதுதான் இப்போது வினையாய்ப் போய்விட்டதோ என்று எண்ணத் தலைப்பட்டார். உண்மையிலேயே அந்தப் பெண்ணும் அதை நம்ப ஆரம்பித்து, அதனாலேயே எரிச்சல் கொண்டிருக்குமோ என்னவோ? இவனுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மனைவியின் முன் தான் அப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று. அவள் முன்னாலேயே அவன் அப்படித்தானே நிற்கிறான். ஓ.கே.ம்மா…ஓகே.ம்மா…என்று சட்டுச் சட்டென்று அம்மா சொன்னதைச் செய்ய முனையும் போது…அந்தப் பெண் எரிச்சல் அடையாமல் என்ன செய்யும்? கணவன் தனக்காகத்தான் அதிகமாய் ஓடியாட வேணும் என்கிற முனைப்பு வந்திருக்கலாம். அல்லது என்னது, சும்மா அவர வேல வாங்கிக்கிட்டு..என்றுகூட எண்ணமிடலாம். யார் கண்டது எந்தப் புத்தி எப்படி வேலை செய்யும் என்று? ஒரு நாள் இல்லாவிட்டடால் ஒரு நாள் வார்த்தை விட்டால்? கேட்டுக் கொண்டு நிற்பாளா அல்லது ஒத்தைக்கு நிற்பாளா? அல்லது அழுது ஆதங்கம் பண்ணுவாளா? இல்ல…அவன்தான் என்ன நீ எங்கம்மாவையே எதிர்த்துப் பேசறே? என்று கேட்பானா? எந்தப் பயல் இந்தக் காலத்தில் அப்படிக் கேட்கிறான்? அப்படிக் கேட்டால், போடா சொக்கா….! என்று சொல்லி விட்டு விலகி விடும் காலம் இது. அல்லது விலக்கி கொண்டு சென்று விடும் அல்லி தர்பார்  ராணிகள்தான்.

            கொஞ்சம் புத்திசாலியான, சுமுகமான குணமுள்ள பெண்ணாயிருந்தால் அதுவும் அம்மா அம்மா என்று ஒட்டிக் கொள்ளும். இந்த வீட்டுக்கு என்று வந்தாயிற்று. இனிமேல் இதுதான் தன் வீடு..தன் சுற்றம் என்று குணமாய் உணர்ந்தால் அந்த நல்எண்ணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதைப் புகட்டி அவர்கள் வீட்டில் வளர்த்திருக்க வேண்டும். அல்லது பாங்காகப் பக்குவமாகச் சொல்லியனுப்பி இருக்க வேண்டும். கணவனைத் தன் அதிகாரத்தின் கீழ் வைத்தாக வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் விபரீதமாய்த்தானே தோன்றும். முதல்ல இதக் கட் பண்ணனும்…அப்பத்தான் அவன் நம் வழிக்கு வருவான் என்றல்லவா நினைக்கும். நெஞ்சில் வன்மம் வைத்தால்?

            இவர் சொல்லி அவன் எதையுமே உடனுக்குடன் செய்ததில்லைதான். இப்ப முடியாதுப்பா, பார்க்கிறேன்ப்பா, செய்றேன்ப்பா…என்றுதான்  கூறியிருக்கிறான். சொல்லி, ரெண்டு மூன்று முறை நினைவுறுத்தி பிறகுதான் செய்வான். போனாப் போகுது என்பதுபோல.  அதையெல்லாம் கூட இவர் பெரிதாய் என்றுமே எடுத்துக் கொண்டதில்லை. அப்பன் என்றைக்குமே ஒரு வீட்டில் இரண்டாவது, மூன்றாவதுதான். முடியாது என்று சொல்லாதமட்டும் கௌரவம் என்றுதான் நினைத்துக் கொள்வார். உடனே ஆகாது என்று அவர் மனதுக்குத் தோன்றும் பலவற்றை முடிகிறதோ இல்லையோ இவரே புறப்பட்டு ஒரு முறைக்கு இருமுறை அலைந்து செய்து கொண்டு விடுவார். தனக்கும் ஒரு இயக்கம் என்று இருந்தாக வேண்டுமே…ஒரேயடியாக முடங்கிப் போய் விடக் கூடாதே என்கிற பயமும் கூடவே இருக்க அதுவே  அவரை விடாது இயக்கிக் கொண்டிருந்தது.  மனைவி இருக்கும் வரை ஏதோ ஓட்டலாம். பிறகு? காலம் தன்னை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ,  யார் கண்டது? அப்புறமும் உட்கார்ந்து சோறு தின்பது என்பது மானக்கேடுதானே? என்று நினைத்துக் கொள்வார். தன் காசுதான் வேண்டும்…தான் வேண்டாம். அதுவே இன்றைய  யதார்த்தம்.

னாலும் அதற்குள் இப்படி ஒரு முடிவுக்கு அவன் வரவேண்டாம்தான். ஒரு குழந்தை பிறந்து, அதற்கு நாலு, அஞ்சு வயசாகி… கிளம்பிப் போவது என்பது பொருத்தமான முடிவாய் இருக்கும். அதுவும் ஒரு கடமை என்றுதானே பெற்றோர்கள் நினைப்பார்கள்.  அதற்கு இடம் தராமல், இப்போதே…என்று திருமணமாகி மூன்றாவது ஆண்டு ஆரம்பிக்கையிலேயே அவன் வாயெடுத்ததுதான் இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பிள்ளை பெறுவதை சாமர்த்தியமாய்த் தள்ளிப் போடுவது போல், அம்மா அப்பாவை விலக்குவதிலும், தள்ளி வைப்பதிலும் சாமர்த்தியமாய்த்தான் இயங்குகிறார்கள்.

ஒருவேளை அவர்கள் வீட்டில் வந்து இருக்கத் திட்டமிட்டிருப்பார்களோ? தான் பெறப்போகும் குழந்தைக்குத் தன் அம்மா இருந்தால்தான் சரியாய் வரும் என்று அந்தப் பெண் நினைத்திருக்குமோ? பல வீடுகளிலும் அதுதானே யதார்த்த உண்மையும் கூட. பெண்ணுக்குத் தன் தாயார் இருந்தால்தான் திருப்தி. அங்குதான் உரிமையோடு கோபப்பட முடியும். எரிந்து விழ முடியும். சலித்துக் கொள்ள முடியும். என்னால முடில…நீயே பண்ணு…என்று வேலைகளிலிருந்து நைஸாக நழுவ முடியும்.

 சாப்பாட்டில் ருசி கண்டு, ப்ரீதி உள்ள பெண்ணோ என்னவோ? நினைத்ததையெல்லாம் வித விதமாய்ச் செய்து சாப்பிட முடியாது. வாங்கிச் சாப்பிட முடியாது. தன் அம்மாவை வரவழைத்துச் செய்து தரச் சொல்லிச் சாப்பிட முடியாது. இஷ்டத்துக்கு வெளியில் சென்று தின்ன முடியாது. இதற்கெல்லாம் தடை என்றால்…அது என்ன வாழ்க்கை? இந்தக் காலத்தில் வீட்டில் எந்தப் பெண்தான் சமைக்கிறது? அபூர்வமாய் சிலர் இருந்தால் அதிசயம்.– இப்படியெல்லாம் சிந்தித்தும்  முடிவு செய்திருக்கலாம்.

அவர்களை இங்கு வரவழைத்து, தன் பையன் எப்படிச் சமாளிக்கப் போகிறான் அவர்கள் நடுவில்? ஒதுங்கியிருப்பதுதானே அவனின் அடிப்படை குணம்? அதுவே அடக்கியாள்வதற்கு அவர்களுக்கு வசதியாய்ப் போய்விட்டால்? புக்ககம் போகும் பெண்ணை நினைத்துத்தான் கவலைப்படுவார்கள் பெற்றோர்கள். இங்கே எல்லாம் தலைகீழாகிவிட்டது. என்ன யோசித்து என்ன செய்ய? தலையைக் கொடுத்தாச்சு…இனி வர்றதை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்? உதறவா முடியும்? அவன் தலைவிதி அது! நாம் என்ன செய்ய முடியும்? சிந்தித்து நொந்தார் தணிகாசலம்.  

எங்கப்பாம்மாவே தனியாத்தான் இருக்காங்க…இவங்களுக்கென்ன இங்க ஜோலி? என்று குரூரமாய் நினைத்து விட்டதோ என்னவோ? அவர்களையும் தனித்து விடுவதே அதன் திட்டமாயும் இருக்கலாம். யார் கண்டது? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு  இருக்குமென்று?

இந்தச் சென்னையிலேயே அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதும் முக்கியமாய் நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயமாய் இருந்தது. ஆகையால் எதற்கும் பயப்படுவதற்கில்லை. ஒருவேளை இப்படி நகர்ந்ததும் அப்படி வந்து உட்காருவதற்கான திட்டமாயும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? எங்கு வெளிப்படையான பேச்சும், சிரிப்பும் நின்றுபோனதோ, இல்லையோ,   அங்கு இடைவெளியிருக்கிறது என்றுதானே பொருள்? நடுவில் திரையில்லாத மனிதன்தான் யார்? எல்லா மனிதர்களும் ரெண்டு ரெண்டு.  போதாக் குறைக்கு காதல் திருமணம் வேறு. சுமுக நிலை அத்தனை சீக்கிரத்தில் வந்து விடுமா என்ன? வருவதற்கு இடம் கொடுத்தால்தானே? அதற்குள் விரட்டப் பார்த்தால்? காதல் மட்டும்தான் ஒட்டும் போலிருக்கிறது!! மற்றவையெல்லாம் தொட்டும் தொடாமலும். பட்டும் படாமலும்….என்னடா உலகம் இது?

ஆளுமை என்பது குடும்பங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஆண்களிடம் இருப்பதில்லை என்றுதான் தோன்றியது தணிகாசலத்திற்கு. அலுவலகங்களில் வெளிப்படும் அதிகாரத் திறன், ஆளுமைத் திறன் வீட்டில் அடங்கிப் போகிறது. அல்லது முடங்கிக் கிடக்கிறது. இதுதான் யதார்த்தம். ஆளுமை என்றாலே பிறரை அடக்குவது, அடக்கி ஆள்வது என்று ஏன் தவறாகப் பொருள் கொள்ள வேண்டும்? எது சரியோ அதைத் தீர்க்கமாய்ச் செய்வதும், சரியல்லாததை அது எந்தத் திசையிலிருந்து வந்தாலும் மறுத்து விடுவதும், அதற்கு நியாயமான காரணங்களை முன் வைத்து எதிராளியை வாயடைக்கச் செய்வதும், இப்படி எல்லாவற்றையும் தலையில் சுமந்து தேவையானதைப் பொறுப்பாய்ச் செய்ய ஒருவன் கிடைத்தானே என்று வெளியில் சொல்லாவிட்டாலும் மனதிற்குள் பெருமைப்படச் செய்வதும், எதிர்க்க முடியாமல் அடங்கிப் போவதும், அடங்கிப் போவதென்ன, சரியானதற்கு ஒத்துப் போவதுதானே குடும்பப் பண்பாடு என்று நேர் கோணத்தில் புரிந்து கொள்வதுமான நடவடிக்கைகள்  காலப் போக்கில் தலைகீழாகி விடுகின்றனவே!

பணியில் இருக்கும்வரை தணிகாசலம்தான் கிங். அவரன்றி ஒர் அணுவும் அசையாது. எந்தவொன்றையும் தவறாகச் செய்ததில்லை அவர். செய்ய முனைந்ததும் இல்லை. வண்டி அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கையில் எதற்கு வக்கரித்துக் கொள்ள வேண்டும்? இந்தச் சிந்தனை பாமரனுக்கும் வரக்கூடிய ஒன்றுதான். நல்லது கெட்டது என்று எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு என்று ஒருவர் அரணாய் நிற்கையில் அதுபோன்ற ஒரு பாதுகாப்பும், விடுவிப்பும்,  சுகமும், சந்தோஷமும் எங்கேனும் கிடைக்குமா? தாட்சாயிணியும் அப்படித்தான் இருந்தாள்.

ஆனால் பையன் தலையெடுத்ததும் அவளிடம் ஏன் இந்த அதிரடி மாற்றம்? ஒருவன் ஓய்வு பெற்று விட்டால் அதற்குப்பின் அவன் கையில் செங்கோல் இருக்கக் கூடாதா? அவன் தன் தலைவன் பொறுப்பை, அந்தக் கிரீடத்தைக் கழற்றித் தரையில் வைத்து விட வேண்டுமா? கைமாற்றியாக வேண்டுமா? கிரீடம் இன்னொரு தலைக்குப் பொருந்த வேண்டாமா? அந்த பாரத்தைச் சுமக்கும் மனப் பக்குவமும், அனுபவமும், அந்த சரீரத்துக்கு, அந்த மனதுக்கு  அமைந்திருக்க வேண்டாமா? குருவி தலையில் பனங்காயை வைத்ததுபோல் ஆகாதா?

உங்களுக்கு ஒண்ணும் தெரியாது…நீங்க பேசாம இருங்க…. – எதற்கெடுத்தாலும் இது ஒரு வார்த்தை? இத்தனை ஆண்டுகள் எல்லாம் தெரிந்தவனாய் இருந்தவன் எப்படி திடீரென்று ஒன்றும் தெரியாதவனானேன்? சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை இவருக்கு.  எல்லாம் தெரிந்தவன் எதிரே நிற்கிறான். இனி நீங்கள் அடங்கிக் கிடவுங்கள் என்று சொல்வது…அல்லது சொல்லாமல் செய்வது என்பது சரியான திசையில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு போய் நிறுத்த உதவுமா?  அந்தத் தீர்மானம் மனதிற்குள் வந்தபின்னால்தானே படிப்படியாக , ஒன்றொன்றாகப் பொறுப்புகளிலிருந்து விலகுவது, ஒப்படைப்பது  என்பது நியாயமான செயலாக  இருக்கும்?

அவனை அவனிஷ்டத்திற்கு விட்டதும், அதைப் பெருமையாய் நினைத்துக் கொண்டு தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியதும், இனி எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று வாய்க்கு வாய் சொல்லி தன்னை அடக்கியதும்….ஏதோ…நடந்தாச் சரி….என்று வேறு வழியின்றி தானும் இருந்து விட்டதுவும்…கையாலாகாமல் போனவை இன்று கைநழுவிப் போனதாக உணரப்படுவதும்…எல்லாம் காலத்தின் கோலம்….எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது…எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்….இதுவும் கடந்து போகும்…என எல்லாமும் வேறு வழியற்ற சமாதானமாய்த்  தாண்டி வந்து நிற்கிறது இன்று.

அந்தப் பெண்ணின் ஆகிருதியே அவனை அச்சப்படுத்தியிருக்க வேண்டும். ஏன் இவருக்கே கூடக் கொஞ்சம் படபடப்பாய்த்தான் இருந்தது. திண்ணென்று ராஜாளிக் குதிரை மாதிரி நிற்கும் அப்பெண்ணின் மீது அவன் காதல் கொண்டதுதான் ஆச்சரியம். அதைவிட அவளுக்கு இவன் மீது நாட்டம் வந்தது என்பது அதைவிட ஆச்சர்யம். சாந்தமான குணசாலியாய்த் தேடி வலை விரிப்பார்களோ என்னவோ? இவன் ஒன்றும் காதலித்தமாதிரித் தெரியவில்லையே? தெரியவில்லையா அல்லது அமுக்குளி மாதிரி இருந்துவிட்டானா? எவனத்தான் நம்ப முடியுது இந்தக் காலத்துல? பசங்க நம்மகிட்ட ரொம்ப மரியாதை என்று எந்த அப்பன்தான் பெருமைப்பட முடியும்?  மனம் ஒன்றிப்போனால் வேறு எதுவும் பெரிதாகத் தோன்றாது போலும்! அவள் காது உயரத்திற்குத்தான் இருந்தான் சுதர்ஸன். உயரமான ஷூ மாட்டினான் என்றால் ஓரளவு சரிக்கட்டியதாகிவிடும். குட்டை நெட்டையா கணக்கு? அதிகாரத்தில் அவள்தான் உயரம் போலும்.

            ஆள் உயரமா பெரிது? மன உயரங்கள் எந்தளவுக்கு எட்டுகின்றன என்பதுதானே கேள்வி. எப்பொழுது எந்த வேற்றுமையும் பார்க்காமல் ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தானோ அப்பொழுதே எதிர்பார்ப்புகள் குலைந்து போயினதான். நாமே பார்த்துப் பேசி முடித்து வைத்திருந்தாலும் அது சரியாய்த்தான் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? முறைப்படியான திருமணம் என்கிற நாமகரணமே மிஞ்சும். பெற்றோரும், உற்றாரும், சுற்றத்தாரும் மனமுவந்து அழைக்கப்பட்டு, வந்து வாழ்த்தி நடத்திக் கொடுப்பது என்பது பெரிய கொடுப்பினைதான். ஆனால் அம்மாதிரித் திருமணங்களும் இன்று பெருமளவில் நிலைப்பதில்லையே?

            கூடிக் கலையும் கூட்டம்தான்.  இப்போது கூடாமலே சி்ந்திக்க வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டது சி்ந்தித்துச் செயல்பட உற்றவர்கள் இருக்க, நிந்திக்காமல் இருந்தால் போதும் என்று விலகி நின்று விட்டான். அவன் எடுத்த முடிவு, அவர்களாய் எடுத்த முடிவு, விலகி நின்று வினா எழுப்பிய நிகழ்வுதானே?

            இனம் மாறுபட்டால் மனம் மாறுபடுமா என்ன? அப்படியும் சொல்வதற்கில்லை. ஆனால் மாறுபட்டு விட்டது. அதுதான் யதார்த்தம். மனிதர்களின் குண விசேஷங்களைப் பொறுத்தது இதெல்லாம் என்று நினைத்துக் கொண்டார் தணிகை. என்னதான் பெற்றோர்களின் வளர்ப்பு சரியாய் இருந்தாலும், கால மாறுபாட்டில், தலைமுறை இடைவெளியில் வாழ்வியல் நோக்குகள் மாறுபட்டுத்தான் போகின்றன. நம் காலம் முடிந்தது, விலகிக் கொள்வோம், ஒதுங்கிக் கொள்வோம் என்றுதான் நம் இருப்பைச் சுருக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அல்லது கண்காணாமல் ஆக்கிக் கொண்டு கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள முனைப்பு கொள்ள வேண்டியிருக்கிறது.

            ஜன்னல் வழியே வெளியே நோக்கிய போது வேப்பமரத்து இலைகள் அசைவற்று நிற்பது போன்றதான உணர்வு. அவைகளும் கவனிக்கின்றனவோ? இந்த வீட்டில் என்னென்ன நடக்கிறது என்பது அதற்கும் தெரியும்தான். பல சமயங்களில் நடைபெறும் அர்த்தமுள்ள அர்த்தமற்ற உரையாடல்களை அவைகளும் கேட்டிருக்கிறதுதான். பேச்சு சூடாகும்போது ஜன்னலை ஒட்டியுள்ள கிளை கம்பித் தடுப்பு வழியே உள்ளே தலை நீட்டி போதும்…போதும்…எதுக்கு அநாவசியமான பேச்சு….என்று மட்டுப் படுத்துவது போல் உணர்வார் தணிகை.

நாய் ஒன்று வாசல் திட்டியில் படுத்திருந்தது. உள்ளே எழும் சத்தம் அதைத் தொந்தரவு செய்ததோ என்னவோ? கம்முனு இருக்க மாட்டீங்களா? நா தூங்குறதா இல்லையா? என்று அடிக்கடி தலையைத் தூக்கித் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு இவர் வீட்டு வாசல்தான் யதாஸ்தானம். பார்க்கச் செழுமையாய் இருக்காது. ஆனாலும் அந்தக் கண்ணில் இருக்கும் தீட்சண்யம் ஆயிரம் பேசும். அந்த நாயின் அடங்கிய தன்மை அதனை அங்கிருந்து விரட்டவே தோன்றவில்லை. கிடந்துட்டுப் போகட்டும்….என்று விட்டு விட்டார் தணிகாசலம். அவ்வப்போது தாட்சாயிணி அதற்கு சோறு வைத்தாள். பாவம்…இங்கயே கதியாக் கிடக்கு…என்று சொல்லிக் கொண்டாள். வாயில்லா ஜீவன்கள் கதியாய்த்தான் கிடக்கும் என்பதே நடப்பியல்.

            தனிமையில் இருக்கும் தருணங்களில் அவர் அந்த மரத்தோடுதான் பேசுகிறார். தன் எண்ணங்களை, மனக் குமுறல்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு ஆதரவாய் அவை தலையாட்டுகின்றன அல்லது சோர்ந்து போய் நின்று விடுகின்றன. சந்தோஷத் தருணங்களில் ஆடி மகிழ்ந்து சுகமான காற்றை  இதமாய்  அனுப்பிக்கொண்டேயிருக்கின்றன.

மனிதன் தனக்கான ஆறுதல்களை உள்ளே தேடுவதை விட வெளியே அதிகமாய்த் தேடுகிறான். யாரேனும் தன்னை மானசீகமாய் உணர்ந்து அவர்களாகவே நாலு நல்ல வார்த்தைகள் சொல்ல மாட்டார்களா என்று மனதுக்குள் ஏங்குகிறான். அவனின் சோர்வற்ற இயக்கத்திற்கு இம்மாதிரித் தூண்டுதல்கள் அடிக்கடி தேவைப்படுகின்றனதான்.அந்தளவுக்கு முதிர்ச்சி கொண்ட மனிதர்கள் குறைவுதான். என்ன செய்வது? உலகம் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போலவா  இருக்கிறது?  அது தன்னிச்சையானது. மனிதனும் தன்னிச்சையானவன்தான். ஆனால் குடும்பம் என்கிற அமைப்பின் கட்டுப்பாடு ஆட்டம் காணும்போது அவனை அலைக்கழிக்கிறது. ஸ்திர புத்தியாய் இருக்க விடுவதில்லை.

            இப்போது ஜன்னலுக்கு நேரே அருகில் தலை நீட்டும் அந்தக் கிளை ஸ்தம்பித்து நிற்பதாக உணர்கிறார் அவர். இவரின் சோகங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஜீவன். ஆறுதலளிக்கும் உயிரோட்டமுள்ள பந்தம். இந்த உலகத்தில் கவலைகள் இல்லாத மனிதன்தான் யார்? பிரச்னைகளைத் தேடி வரவழைத்துக் கொள்ளாத எளிய மனிதனுக்கும் ஏதேனும் எதிர்பாராத துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றனதான். வேண்டும் வேண்டும் என்று அலைபவனுக்கும், வேண்டாம், வேண்டாம் என்று ஒதுங்கிக் கிடப்பவனுக்கும் இடையில் வாழ்க்கைச் சிக்கல்களில்  அதிக வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆசைகளைக் களைந்தவன் நிம்மதியாய் இருக்கலாம் என்பது முதுமொழி. ஆசைகளற்ற வாழ்க்கையிலும் அவ்வப்போது புயல் வீசத்தானே செய்கிறது? தனி மனிதனாய் இருப்பவனுக்குத்தான் இந்தத் தத்துவ விசாரங்கள் எல்லாம் சாத்தியமோ?

            ரி…என்ன செய்யணும்…சொல்லு…. – சாதாரணமாய்த்தான் கேட்டார் தணிகாசலம்.  சுதர்ஸன் என்ன சொல்லுவான் என்பது தெரியும்தான்.  ஆனாலும் அது அவன் வாயால் வரட்டும் என்று காத்திருந்தார். இதை மட்டும் தன்னிடம் வந்து சொல்வானேன்.  அவனின் இஷ்டமான அம்மாவிடம் சொல்லிச் சாதித்துக் கொள்ள வேண்டியதுதானே? அம்மாவையும் தாண்டி இப்போது அந்த முடிவுக்கு வந்து விட்டான் அவன். அவளிடம் வாய்விடப் பயம். அப்பாதான் இப்போது பாதுகாப்பு.

            நியாயமாய்ப் பார்த்தால் தனிக்குடித்தனம் வைத்து விட்டு,  ஆள விடுங்கடா சாமி…என்று நாமே விலகிக் கொள்ள வேண்டும். அதுதான் கௌரவம். நியாயம். கண்ணியமும் கூட. நிம்மதியான பாடு. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டுமே! வாழ்ந்து முடித்த நாம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்? அன்பு நிலைக்க வேண்டுமென்றால் அல்லது அவ்வப்போது தளிர்க்க வேண்டுமென்றால் அது ஒன்றுதான் வழி.  அதையும் தாட்சாயினியிடம் எப்பொழுதோ சொல்லிவிட்டார் இவர். அவள் கேட்டால்தானே? வந்ததே சண்டை பார்க்கணும்…வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாள்.

            அது ஒழுங்கா நாம பார்த்து வச்சுக் கல்யாணம் பண்ணியிருந்தா…யாரையோ இழுத்திட்டு வந்து நின்னிட்டிருக்கானே…அந்தப் பொண்ணுக்காக நாம விலை கொடுத்து வாங்கின இந்த வீட்டை விட்டுப் போகணுமா? எந்தச் சட்டம் சொல்லுது அப்படி? என்று குமுறினாள். வேணும்னா அவுங்க போகட்டும் என்றும் ஒரு வார்த்தை அதிகமாய்ப் போட்டாள். வந்தது வந்தாச்சு…மருமகள் என்பதை மறுக்கத்தான் முடியுமா? உலகம் ஏற்குமா? பொருந்தியும் பொருந்தாமலும் கலந்து கட்டி இருந்து கழிக்க வேண்டியதுதான்.

            இப்படியெல்லாம் பேசலாமா? யாரையோ இழுத்திட்டு வந்து!….இந்த வார்த்தைகள் அவன் காதில் விழுந்தால் என்னாவது? இத்தனை காலம் இஷ்டமாய் இருந்த அம்மா எப்படிப் பேசுகிறாள்? கம்முன்னு கிடந்த அப்பா சகித்து இப்போதும் கமுக்கமாய் இருக்கவில்லையா? அம்மா மட்டும் ஏன் இப்படிக் கொதிக்கிறாள்?  என்றுதான் கண்டிப்பாய் நினைப்பான். அந்தப் பெண் காதில் விழுந்தால்? கேட்கவே வேண்டாம், பிரளயம்தான். அது ஒன்றே வெளியேற வசமான சாக்காகி விடும்.

            பெற்ற வயிறு அத்தனை சீக்கிரம் சமாதானமாகி விடுமா? எவ்வளவு கனவுகளோடு வளர்த்திருப்பாள். எவ்வளவு ஆசை ஆசையாய்ச் செய்து போட்டிருப்பாள். எவ்வளவு பார்த்துப் பார்த்து ஊட்டியிருப்பாள்.  கண் காண அவன் வளருவதைக் கண்டு எவ்வளவு மானசீகமாய் ரசித்திருப்பாள். அவன் நலத்திற்காக எத்தனை கோயில் கோயிலாய் அலைந்து வேண்டியிருப்பாள். எத்தனை வேண்டுதல்களை நிறைவேற்றியிருப்பாள். சுயநலம் பார்க்காது, கண் துஞ்சாது காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று எப்படியெல்லாம் பொத்திப் பொத்திப் பாதுகாத்திருப்பாள்? எல்லாமும் தூள் தூளாகிவிட்டதே? கானல் நீராகி விட்டதே…!

உன் பையனுக்குப் பிடிச்சதுதான் இனி இந்த வீட்ல சமையல் போலிருக்கு. நா ஆசைப்பட்டு இனி எதுவும் கேட்க முடியாது. கேட்டுறவும் கூடாது. அவனுக்குப் பிடிச்சதை எனக்குப் பிடிச்சதா நினைச்சு முழுங்கிட்டுப் போகணும்…அதானே? இல்லன்னா வேண்டாம்னு எழுந்திரிச்சு ஓடணும். இப்பத்தான் உண்மையிலேயே சாப்பாட்டுக் கஷ்டத்தை உணர்றேன் நான். சர்வீஸ்ல இருக்கைல எத்தனையோ வெளியூர்ல சாப்பிட்டுக் கழிச்சிருக்கேன்…அப்பல்லாம் எதுவும் பாதிச்சதில்லை. இப்ப…சொந்த வீட்லயே என் நிலைமையைப் பார்த்தியா? எங்கயாவது சொந்த வீட்லயே பிச்சக்காரனா ஒருத்தன் இருக்கிறதைப் பார்த்திருக்கியா? என் வயிறு, என் ஜீரண சக்தி, என் பசி என்று பொருட்படுத்தி ஏதேனும் தயாராகிறதா இந்த வீட்டில்? எனக்கு எந்த நோக்காடும் வராம இருக்க வேணும்னா நீ வச்சத வாயை மூடிட்டுத்  திங்கணும் இல்லன்னா ஒதுக்கணும். அதுதானே?

ரிடையர்ட் ஆகி வருஷம் ஓடிப் போச்சு..…இன்னும் என்ன நாக்கு ருசி கேட்குது? போடுறதத் தின்னுட்டு பேசாமக் கிடங்க…- வாய்விட்டுச் சொல்லியே விட்டாள். எதத் தின்னாலும் வாயு….வர்ணம்னு  அங்க பிடிக்குது, இங்க பிடிக்குதுன்னு முதுகையும், வயித்தையும் பிடிச்சிட்டு நெளிஞ்சிட்டிருக்கீங்க…? நாக்கு ருசியெல்லாம் மட்டுப் படுத்துங்க…!! இன்னும் வித விதமா சாப்பாடு கேட்கிறதாக்கும் ஐயாவுக்கு?

தனக்கு மட்டும் சுளீர் சுளீர் என்று கொடுப்பாள்.  பேச்சில் தன்னிடம் கிடைக்கும் சுதந்திரம் பையனிடம் கிடைத்திருக்கிறதா அவளுக்கு? ஏதாச்சும் வித்தியாசமாய்ச் சொன்னால் முணுக்கென்று கோபித்துக் கொண்டு ரெண்டு நாளைக்குச் சாப்பிட மாட்டான் அவன். அவ்வளவு அம்மாச் செல்லம்…! அப்புறம் என்னவெல்லாமோ புதிதாய்ச் செய்து போட்டு தாஜா பண்ணுவாள் அவனை. இனி அம்மாச் செல்லம்…சும்மாச் செல்லமாகிவிடும்!

என்ன…தொட்டதுக்கெல்லாம் கோவிச்சிக்கிட்டிருக்கே? போடுறதத் தின்னுட்டுக் கிளம்பு….எல்லாம் எங்களுக்குத் தெரியும்….எதைச் செய்யணும்,  எப்படிச் செய்யணும்னு…என்று ஒரு போடு போட்டிருந்தால் பயப்படுவான். ஒரு முறையேனும் கண்டித்திருப்பாளா? அடியாத மாடு படியாது. அதைப் போலத்தானே பிள்ளைகளும்? கண்டிச்சு வளர்த்தால்தான் பிள்ளைகள். ஒழுக்க நெறி என்பது பின் எப்படிப் படியும்? அன்பு செலுத்தும் அளவுக்குக் கண்டிப்பும் வேண்டாமா? நல்லவைகள் உஷ்ணமாய்த்தான்  வரும். கடைப்பிடிக்கக் கஷ்டமாய்த்தான் இருக்கும். படிந்தால் விடவே விடாதே…! அதுவல்லவோ வளர்ப்பு…? இளம் வயதிலேயே புகட்டி விட்டால்தானே தடம் மாறாமல் கழியும்?

எதைச் சொன்னாலும்…ஒண்ணே ஒண்ணு…கண்ணே கண்ணு….என்று முடியும். அந்த ஒண்ணே ஒண்ணு இன்றைக்கு அன்பைக் கொட்டிய அம்மாவுக்கே தெரியாமல் இன்னொன்றை இழுத்துக் கொண்டு வந்து நிற்கிறதே…? அவளுக்கே, அவள் அன்புக்கும் பாசத்திற்குமே வந்தது வினை.

எல்லாம் நினைத்துப் பார்த்து, நினைத்துப் பார்த்து பெருமூச்சுதான் மிஞ்சியது தணிகாசலத்திற்கு. வம்பு தும்பு இல்லாமல் வாழ நினைப்பவனுக்குத்தான் வேண்டாததெல்லாம் வலை கட்டி நிற்கிறது.

வீட்டை அவன் பேருக்குத்தான் வாங்கிப் பதிஞ்சிருக்கோம்…ஞாபகம் இருக்கில்ல? அம்மா மறந்திட்டீகளோ? அவன் பேருக்கே பதிஞ்சிடுங்கன்னு நீதானே பரிஞ்சு பரிஞ்சு சொன்னே…! நல்லா யோசிச்சுக்குங்கன்னு பில்டர் கூட ஒரு வார்த்தை தன் பங்குக்குன்னு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சுக் கடைசியாச் சொன்னான். ஞாபகம் இருக்கில்ல…வாயை மூடிட்டுக் கிளம்புற வழியைப் பாரு…இன்னம் வேறே இழுத்தடிச்சு, கேவலப்பட்டு வெளியேத்தணும்னு, வெளியேறணும்னு தலைவிதியா? அது என்னால ஆகாது….-பொட்டியக் கட்டுற வழியைப் பாரு…சொல்லிப்புட்டேன்.  என் பேச்சுக்கு மறு பேச்சுங்கிறது இருக்கப்படாது. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்….சொல்றது புரியுதுல்ல….? மீதி வாழ்க்கையினுடைய கௌரவம் நம்ம கைல…ஞாபகமிருக்கட்டும்…-என் வழக்கமான அந்தப் பழைய பாணியில்  குரல் உயர்த்தி கள யதார்த்தத்தை அழுத்தமாய்ப் பதிவு செய்தேன். ஆளுமை கணீரென்று வெளிப்படும்போது அதில் சத்தியமும் தத்துவமும் விஞ்சி நிற்க வேண்டும். அதுவே அதற்குப் பெருமை…!

நீங்களே கிளம்பிட்ட போது அப்புறம் எனக்கென்னங்க….? என்றாள் தாட்சாயிணி.                                                               -------------------------------

                                               

           

           

 

           

           

 

           

17 நவம்பர் 2023

 

சிறுகதை                              “ர ண ம்” (தமிழ்ப்பல்லவி இதழ்-அக்-டிச.2023)


    ன்று வீட்டை விட்டு அநாதைபோல் வெளியேறிய காட்சி கண் முன்னே அப்படியே நிற்கிறது. அதற்குப் பின் அம்மாவின் இறப்பிற்குக் காலடி வைத்ததுதான்.

      ஒரு நாள் இருந்திட்டுப் போகப்டாதா? அம்மா கேட்ட அந்தக் கடைசிக் கேள்வி. கடைசி ஆசை என்றும் சொல்லலாம்.

      எனக்கொண்ணும் இல்ல....அங்க சொல்லு....நா இருக்கிறதை அவன் விரும்பல....- அம்மாவைப் பார்த்து உட்கார்ந்திருந்தவன்...விரல்களால் சைகை செய்தான். அதை அவள் புரிந்து கொண்டாளா என்று தெரியவில்லை.

      கொண்டு தள்ளியாச்சு....அவ்வளவுதான்....பொறுப்பு விட்டுது....என்று கூட நினைத்திருக்கலாம். அல்லது பெரியவன்ட்ட இந்த நிலைமைல என்னால எப்படிச் சொல்ல முடியும்? எதுக்காக உடனே புறப்படுற? என்று மனதுக்குள் வேதனைப் பட்டிருக்கலாம். ஆனால் ஒன்று.



அந்த நிலையிலும், தான் இருக்க வேண்டும் என்று அவள் மனம் விரும்பியிருக்கிறது. அது போதும். அது ஒன்றே சாட்சி...தான் அவளைத் திருப்தியாய்த்தான் வைத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கு. அதுதான் தனக்கு மட்டும் தெரிந்த ஒன்றாய்ப் போனதே...! எடுத்துச் சொல்லவே யாருமில்லையே...! சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படவில்லையே!. ஆனால் அம்மா மட்டும் புரிந்து கொண்டிருக்கிறாள்..! மூத்தவன் என்ன நினைக்கிறானோ அதுதான் சட்டம். அவன் என்ன பேசுகிறானோ அதுதான் உண்மை. மற்றதெல்லாம் பொய். மற்றவர்களும் பொய்.

      எப்படியோ....அவள் மனது விரும்பிய இடத்திற்கு அம்மா வந்து சேர்ந்து விட்டாள்...இனி ஆவி பிரிந்தாலும் நிம்மதியாய்ப் போய்ச் சேருவாள். ஆத்மா சாந்தியடையும். ஆனால் அப்படி அவள் வந்து சேர்ந்ததற்கு, தான் காரணமில்லை. ஆனால் நான்தான் காரணம் என்று அவன் சொல்கிறான். யார்...? பெரியவன். நான்தான் காரணம் என்று ஸ்தாபித்திருக்கிறான். உருவாக்கி நிலை நிறுத்துகிறான். அதில் ஒரு பதட்டம் தெரிகிறது. அவசரம் புலப்படுகிறது. பிறர் வாயை அடைக்கும் வன்மம் தெறிக்கிறது. யாரும் தன்பால் குறை சொல்லி விட நேருமோ என்கிற கவனம் தெரிகிறது.முரணாய் நினைத்துவிடக் கூடக் கூடாது என்கிற கவனம். உள்ளார்ந்த உண்மையை அறியக் கூடுமோ என்று அஞ்சுகிறான். அந்த ரகசியம் அவனுக்கு மட்டுமே ஆனது. அது அவன் மன நியாயம். அங்கும் அவன் வைத்ததுதான் சட்டம். அது பொது நியாயமா என்கிற கேள்விக்கு இடமில்லை.  அவனது இருப்பே அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தாயிற்று. பெரியவனுக்கு அந்தச் சலுகை கூட இல்லையென்றால் எப்படி? பெரியவா செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி...! வாயைத் திறக்கப்படாது யாரும்!

      உனக்கு நீ நினைத்தது நடந்து போனது. ஆனால் எனக்கு? ஏன் இந்தக் கேவலம்? எதற்கிந்த அவமானம்? நான் புறப்படுறேன்...அம்மாவிடம் கூடச் சொல்லிக் கொள்ள முடியவில்லை. அவள் தூங்குகிறாள் அல்லது உடல்நோவில் மயங்கியிருக்கிறாள். ம்...கிளம்பு...கிளம்பு...விரட்டாத குறை...கொஞ்சம் போனால் உன்னைக் கண் கொண்டு பாரக்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை...என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் போச்சு...!  கையில் சூட்கேஸை எடுத்துக் கொண்டு வெளிப் போந்தபோது வாசல் கேட் வரை பம்மியவாறே பின்னாலே வந்து சடாரென்று கேட்டை அடைத்துத் தாள்ப்பாளைப் போட்டானே? அந்தக் காட்சி மறக்குமா அல்லது மறையுமா? அந்தச் சத்தந்தான் அழியுமா?  பகைவனா நான்? அல்லது இழி செயல் செய்தவனா? இனி இந்தப் படி மிதிக்கக் கூடாது என்பதுபோல் வெளியேற்றினால்? அன்றைய அந்த அவமானம் வாழ்நாளில் மறக்குமா? கண் மூடும் வரை கூடக் கனவிலும் வந்து தாக்குமே? சபையில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்களே...! வாய் மூடியிருந்தார்களே...!!

      சுந்தர்...நீ இரு....நீ கௌம்பு....! கூரான அம்பு...நேராய் வந்து நடு நெஞ்சிலே பாய்ந்து, பின்புறமாய் வெளியேறி விட்டது. நானென்ன சூடில்லாதவனா...அல்லது சுரணையற்றவனா? பகைவனா? இதென்ன முகத்திலடித்தாற்போல்...? இப்படியும் நேரடியாக ஒருவனைப் பார்த்துச் சொல்ல  முடியுமா? ரெண்டு அடி கூட அடித்து விடலாமே? வார்த்தைச் சூட்டினை எவன் தாங்குவது? .-இரவு முழுவதும் தூக்கம் விழித்து, உட்கார்ந்தமேனிக்கே ஆம்புலன்ஸில் அம்மாவைக் கண்காணித்து விடிகாலை பொழுது புலரும் தருவாயில் கொண்டு வந்து  பாதுகாப்பாய்ச் சேர்த்தவனிடம் சொல்லக் கூடிய வார்த்தையா இது? உடனே வெளியேறவில்லையாயின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விடுவானோ? நீ கிளம்பு... என்ற வார்த்தையின் தீர்மானம் அப்படியல்லவோ இருந்தது. அப்படி நான் என்ன தவறு செய்தேன்? என்னோடு சேர்ந்து வந்தவன்தானே அண்ணா சுந்தரும்? அவனுக்கு மட்டும் என்ன சலுகை? எனக்கு மட்டும் ஏன் இந்தக் கேவலம்? அந்த அவமானம் அவனுக்குமில்லையா? இவன் நினைப்பில் என்னை மட்டும் ஏன் குறி வைக்கிறான்? கண் கொண்டு பார்க்கக் கூடத் தயாரில்லை என்பதுபோல் வெளியேற்றி விட்டானே? இது ஏன் மற்ற எவருக்கும் பாதிக்கவில்லை? சே...சே...அப்டி அனுப்பாதே...வெளியேத்துற மாதிரி...! அது தப்பு...! – சொல்ல ஒருவர் இல்லையே?   வாழ்நாளில் மறக்குமா இந்தக் காட்சி? வீடே மயான அமைதி. அண்ணியோ, அண்ணாவோ ஒரு வார்த்தை சொல்லவில்லை. யாரும் தடுக்கவில்லை.. ஒரு வேளை அவர்களுக்கும் போனால் போகட்டும், தொலையட்டும் என்று இருந்திருக்குமோ? மனிதர்களின் முக்கியமான பிரச்னையே இந்த மனசுதான். எல்லாம் பௌதீக ரீதியிலானவை. இதில் இயற்கை எப்போதும் வெல்வதில்லை. அந்த மாதிரி ஒரு கேவலத்தை வாழ்நாளில் எப்போதும் எதிர்நோக்கியதில்லை. அதுவே முதன் முறை.

      டிக்கெட் கூட ரிசர்வ் செய்யவில்லை. திடீரென்று போனால் எப்படி?  போய் நின்றால் எப்பொழுது எந்த பஸ்ஸில் ஏற முடியுமோ? எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ? கிடைக்குமோ கிடைக்காதோ? ராத்திரி பூராவும் தூங்கவில்லை. பகலில் விரட்டியடித்தாயிற்று. ஒரு மணித் துளி கூட ஓய்வின்றி ஆளைக் கிளப்பியாயிற்று. கண்ணிலேயே முழிக்காதே என்பதுபோல்...!  கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளக்கூட இல்லை. படுத்தால் நீட்டி நிமிர்ந்து விடுவான் என்றுதான் விரட்டி விட்டானோ?  நல்லவேளை சோறு போட்டான். அதையும் வெட்கமில்லாமல் தின்றேனே..... பாவி...! பசி பத்தையும் மறைத்து விடுமோ?  அதையும் வெளில பார்த்துக்கோ...என்று சொல்லவில்லை. சொல்லவில்லையா, சொல்லத் தெரியவில்லையா? தெரிந்திருந்தால் சொல்லியிருப்பான்தான்...!  அந்த மட்டும் நெஞ்சின் மூலையில் எங்கோ கொஞ்சம் இரக்கம் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது. அது பெரும் பாவமாகிவிடும் என்று தோன்றியிருக்குமோ என்னவோ? தன் மன நியாயத்தை நிலை நிறுத்தத் துடிப்பவனுக்கு மற்ற எவையும் ஒரு பொருட்டாயிருப்பதில்லை. அல்லது கோபம் கண்ணை மறைக்கிறது.! ஈகோ முன்னின் தடுக்கிறது. தன் தவறை மறைத்துக் கொள்வதில் ஏற்பட்ட முனைப்பு அது...! அதே சமயம் யாரும் அதைக் கண்டு பிடித்துவிடக் கூடாது. அதனால் பழியும், பாவம் ஓரிடத்திலேயே குவியும் அவலம்...!

சட்னு சோத்தப் போட்டு ஆள வெளில அனுப்பு என்று அண்ணியிடம் சொல்லியிருப்பானோ? எனக்கு மட்டும் தட்டை எடுத்து வைத்து சாப்பிட வா என்றார்களே...? எதற்கு அத்தனை அவசரம்? ஆளை வெளியேற்றவா? இத்தனை திட்டமிடலா இதற்கு? வந்து சேரும் முன்னே பேசி வைத்திருப்பார்களோ? அந்தச் சோற்றிலும் கை வைத்தேனே? என்னைச் சொல்லணும். அந்தப் பொழுது பட்ட கேவலத்தைவிடவா பசி பெரிது? கையை நனைக்காமல் ஏன் வெளியேற முடியவில்லை? அதுவும் அவன் மீது வைத்திருந்த மரியாதையா? அண்ணி மீது கொண்ட மதிப்பா?

  அறையில் சுந்தர் அண்ணா நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இருக்கும் உடல் அயற்சிதானே எனக்கும்? அவனும் என்னோடு பயணித்து வந்தவன்தானே? நானும் சொந்தத் தம்பிதானே? அவனுக்குக் கிடைத்த அந்தச் சலுகை எனக்கு மட்டும் ஏன் இல்லை? சலுகை வேண்டாம். ஒரு மனிதாபிமானம் வேண்டாமா? மனித நேயம் வேண்டாமா?

எதை மறைக்க இந்த நாடகம்? எதை திருப்தி செய்ய இந்தச் செயல்பாடு? எந்தக் கேள்விக்கு பதில் சொல்லி இந்த நடவடிக்கை? முரணான நடவடிக்கைகளினால் ஒரு தவறான விஷயத்தை மறைத்து விட இயலுமா? இதுதான் சரி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு செய்வதனால் ஒரு விஷயம் நியாயமாகி விடுமா? மனசாட்சி ஒன்றைச் சொல்ல, செயல் வேறு மாதிரி இருக்க, அந்த மனசாட்சி மறைந்து விடுமா? உறங்கப் போய் விடுமா?  அல்லது அதற்கு ஒத்தடம் கொடுத்ததுபோல் ஆகி விடுமா? எது சரி என்று முடிவெடுப்பதிலும் மனிதனின் மனம் தடுமாறி அங்கேயும் சுயநலம் தலை நீட்டத்தானே செய்கிறது? அது சுயநலம் என்ற பேரில் இல்லாமல் நியாயம் என்ற பெயரிலான முத்திரை குத்தப்பட்டால் அது நியாயமாகி விடுமா? இதுதான் நியாயம் என்பது ஒருவன் தனக்குத்தானே நிர்ணயிப்பதா?  அவரவர் மனதுப்படிதான் நியாயங்கள் நிலை நிறுத்தப்படுகின்றன. அவரவர் மனதுப்படிதான் நியாயங்கள் வரையறுக்கப்படுகின்றன. மனிதன் என்றும் சுயநலமானவன். அவனைப் பாதிக்காதவரை உரக்கச் சொல்லும் நியாயம் வேறு, பாதிப்பு என்று வரும்போது விவரிக்கப்படும், சித்தரிக்கப்படும் அல்லது ஒதுங்கும் நியாயங்களும் உருவாக்கும் காட்சிகளும் வேறு வேறு. தன்னைப் பாதிக்காதவரை அது சரி. அடுத்தவரைப் பாதித்ததென்றால் பரவாயில்லையா? தனக்குத் தேடிக்கொள்ளும் நியாயத்தால் எதிராளி எந்நிலை அடைந்தாலும், எப்படிச் சீரழிந்தாலும் தேவலையா? அதுபற்றிக் கவலையேயில்லையெனில் அதுதானே சுயநலம்?

ஏன் ரமணனை உடனே அனுப்பிச்சே...? – அம்மா கேட்கவா போகிறாள்? அவளே சக்தியின்றிக் கிடக்கிறாள்.  தன் பாடே இன்றோ நாளையோ என்று கிடக்கிறது அவளுக்கு. பிராணன் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. நாட்கள் எண்ணப்படுகின்றன. உயிர் ஆட்டம் கண்டு போனது. எதைக் கேட்டு என்ன நடக்கப் போகிறது? அல்லது கேட்டால்தான் மாறி விடப் போகிறதா? வந்து சேர்ந்ததே போதும். இவன் மன விளையாட்டுக்கு, ஊசலாட்டத்துக்கு, மனைவி சொல்லில் நியாயம் இருக்கு என்று மதி கெட்டவனுக்கு, இன்னும் கொஞ்ச நாட்கள் மிஞ்சிப் போனால்..! .அதற்குள் ஒரு மாற்றம் வேணுமா? இது தேவையா?  இதைச் செய்யணுமா?  என்று யோசியாமல், அம்மாவின் விருப்பத்தைக் கேட்காமல், அவளையென்ன கேட்கிறது, போ என்றால் போக வேண்டிதான் என்பதாய் தானே வீராப்பாய் தீர்மானமாய் ஒரு முடிவு செய்து கொண்டு, கடைசி நேரத்தில் கதியிழந்த தாயை “போய்ச் சின்னவனிடம்  இரு...” என்று விரட்டினால் அந்தத் தாய் மனம் என்ன பாடுபடும்? எவ்வளவு நொந்திருக்கும்? எத்தனை சாபமிட்டிருக்கும்?

இங்கே இறந்து, கடைசிக் காரியம் அத்தனையும் தங்கள் தலையில் விழும்...அதிலிருந்து தப்பித்ததுபோல் ஆகட்டும் என்று அதுநாள் வரை பொறுமையாய் வைத்துப் பாதுகாத்தது மறந்து, சரீர ரீதியாய் உதவிக் கரமாய் இருந்தது மறந்து, கடைசி நேரத்தில் வந்த பொருத்தமற்ற, காலம் ஒப்புக் கொள்ளாத யோசனையை,  காரியத்தை, படுக்கையில் விழும் நிலையில் தாயை இடம் மாற்றம் செய்யும் விபரீதத்தை  சரி என்று ஒப்புக் கொண்டானே? இதை என்னென்று சொல்வது? மனசு இணங்கிப் போனால் அறிவு வேலை செய்யாதோ? இக்கால கட்டத்தில் மனையாளின் ஆலோசனை சரியா? என்று ஏன் அவன் மனம் சிந்திக்கவில்லை? சரி என்று தலையாட்டி எதற்காகக் குருட்டுத்தனமாய் இப்படி ஒப்புக் கொள்ள வைத்தது? கேடு காலம் என்று வந்தால் புத்தி மந்தித்துப் போகும் என்பது எவ்வளவு உண்மை?

நானேதான் சாகிற வரைக்கும் வச்சிக்கணும்னு என்ன தலவிதியா? மூத்தவன்னா அவனுக்கு மட்டும்தான் பொறுப்பா? மத்தவங்களுக்கு இல்லையா? எம் பொண்டாட்டி மட்டும் கிடந்து சாகணுமா? அவங்களெல்லாம் சுகமா இருக்கணுமா? எங்களுக்குக் குழந்தை எதுவும் இல்லைங்கிறதுக்காக நாங்கதான் பொறுப்பா? நாங்க ஃப்ரீயா இருக்கக் கூடாதா? இருக்க வேண்டாமா?  எங்களுக்கு மட்டும் என்ன தலைவிதி?

இந்த யோசனை காலம் போன கடைசியிலா வருவது? தள்ளாத வயதில் தாயை அங்க போ, இங்க போ, அவன்ட்டப் போ, இவன்ட்டப் போ என்று தள்ளி விடுவது தப்பான செயலில்லையா? மனசாட்சியைக் கொன்ற காரியம் இல்லையா? எப்போதோ யோசித்து, முறை வைத்து செய்திருக்க வேண்டியது...அப்போது அதெல்லாம் வேண்டாம்...என்னிடமே இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொன்ன மனசுதான் இன்று இப்படிப் பேதலித்துத் தடுமாறுகிறது. அந்தத் தாயின் மனம் என்ன பாடுபடும்? மூத்தவன்ட்டத்தான் இருக்கணும் என்று வந்து சேர்ந்தவர்கள், ஆயிரந்தான் இருந்தாலும் அவனுக்குத்தான் பொறுப்பு, அவன்ட்ட இருக்கிறதுதான் எங்களுக்குப் பெருமை, நீங்க ரெண்டு பேரும் அவனுக்கப்புறம்தான் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட பெரியவனா இன்று சீவன் நிற்கும் காலத்தில் இந்தக் காரியத்தைச் செய்கிறான்? அப்பாவைக் கடைசிவரை வைத்துப் பாதுகாத்துக் கரையேற்றியவன், எனக்கு மட்டும் ஏனிப்படி மறுதலிக்கிறான்? தந்தை செய்த பாக்கியம் தாய் செய்யவில்லையா? பெற்றவளல்லவா நான்? என்னை மட்டும் ஏனிப்படி காலம் போன கடைசியில் மற்ற பிள்ளைகளிடம் அனுப்பப் பார்க்கிறான். இந்த அலைக்கழிப்பு தகுமா? படுக்கையில் விழுந்து விட்ட என்னைப் பராமரிப்பது கஷ்டம் என்று முடிவு செய்து விட்டானோ? பீ, மூத்திரம் எவன் எடுக்கிறது? என்று பழி சொல்கிறானே?

ரு நர்ஸ் சொல்லியிருக்கேன்...தினசரி வந்து அம்மாவுக்கு வேணுங்கிறதைச் செய்துட்டுப் போறதுக்கு...பெட் ஃபேன் வாங்கி வச்சிருக்கேன்....அந்த நர்ஸ் காலைல ஏழு மணிக்கு வந்து கவனிச்சி, எல்லாம் செய்திட்டுப் போய்டுவா...சாயங்காலம் ஒருதரம் வருவா....பதினஞ்சாயிரம்....நீங்க ரெண்டு பேரும் பணம் அனுப்பிடணும்....கரெக்டா...தாமதம் கூடாது.... – இப்படித்தானே சொன்னான். சொல்லியிருந்தான்? அவர்கள் மறுக்கவில்லையே? பின் ஏன் மாறினான்? இந்த யோசனையை ஏன் மாற்றினான்? தலையணை மந்திரம் தாமதமாக வேலை செய்கிறதா?. எது நியாயம், எது அநியாயம்? எது சரி, எது தவறு? என்று தொட்டதற்கெல்லாம் விலாவாரியாய்ப் பேசுபவனுக்கு, நியாயத்தை எனக்கு மட்டுமே கண்டுபிடிக்கத் தெரியும், என்னால் மட்டுமே செய்ய முடியும் என்று இறுமாப்போடு இருந்தவனுக்கு புத்தி ஏன் இப்படி மாறிப் போயிற்று? எதற்கு இப்படி பேதலித்தது?

சுந்தர்.....நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ...தெரியாது.....நான் இங்கிருந்து ஃபோன் பண்ணிப் பேசி ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.....கித்வாய் நகர் ஆஸ்பத்திரிக்கு அடுத்தாப்ல....நிறைய வாடகை ஆம்புலன்ஸ் நிற்கும். அதுல இந்த நம்பருள்ள வண்டியப் பேசி முடிவு பண்ணியிருக்கேன். டிரைவர் பெயர் முத்துப்பாண்டி...அவன்ட்டப் பேசின பணத்தைக் கொடுத்திரணும்...ராத்திரி எட்டரை மணிக்கு வீட்டுக்கு வந்திடுவான்...ஒன்பதுக்குள்ள அம்மாவோட நீங்க கிளம்பியாகணும். அப்டு மெட்ராஸ் வரைக்கும் சைரனோடதான் வருவான்....வண்டிலயே ஆக்ஸிஜன், டிரிப்ஸ்க்கு ஏற்பாடு பண்ணியிருக்கு. ஒரு நர்ஸூம் கூடவே வருவாங்க....அவங்க அம்மா கண்டிஷனக் கவனிச்சிப்பாங்க....காலைல அஞ்சரைலர்ந்து, ஆறுக்குள்ள மெட்ராஸ் ரீச் ஆயிடும். வீட்டுக்குக் கொண்டு வந்து பேஷன்டை இறக்கிட்டு வண்டி போயிடும். இதுதான் ப்ளான்....

எதுக்குண்ணா இப்டி திடீர்னு? நான்தான் பார்த்திட்டிருக்கேனே...டாக்டரை வீட்டுக்கே வரவழைச்சிப் பார்க்க வச்சு, மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்து, சரியாத்தானே போயிட்டிருக்கு....நா ஒண்ணும் முடிலன்னு சொல்லலியே...?

எங்க சரியாப் போயிட்டிருக்கு? ஒரு வாரமாச்சு......நான் தூங்கவேயில்ல....உடம்பு கண்டிஷன் அவ்வளவு மோசமாயிருக்கு...என்னால முடில....செத்துருவேன் போல்ருக்குன்னு புலம்புறே.....அதென்னவாம்.? அதுக்கு என்ன அர்த்தமாம்? ....அம்மாவக் கொண்டு விட்டு ஒரு மாசம் கூட  ஆகல....அதுக்குள்ளேயும் ஐயோ...அப்பான்னா என்ன அர்த்தம்? செத்துருவேன்னா என்ன அர்த்தம்? நான் வருஷக் கணக்கா அப்பாவப் பார்த்துக்கல? கரையேத்தல?  நாங்க இத்தனை வருஷமாச் செத்தது பரவாயில்லயா? செத்துத்தான் போயேன்....தாயாரைப் பார்த்துக்கிறதுல என்ன அத்தனை சலிப்பு? வெட்கமாயில்லே...! நீ மனுஷன்தானா? நாலு நாள் தூங்காட்டி என்ன, செத்துருவியா? அப்டியே உருகுற...? அப்போ வருஷக் கணக்கா நாங்க பட்டதெல்லாம் என்னவாம்?

இவன் அதிர்ந்துதான் போனான். எதற்காக ஒரு பேச்சுக்கு யதார்த்தமாய்ச் சொன்னதை இப்படிப் பெரிதாக்குகிறான்? பார்க்க மாட்டேன் என்று நான் சொல்லவேயில்லையே...? யாரேனும் ஒருவர் உதவிக்கு இருந்தால் தேவலை என்றுதானே சொன்னேன்...அது தப்பா? அதை அவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம்?  அதுதான் தகவல் சொல்லி சுந்தர் அண்ணா வந்தாயிற்றே...மாற்றி மாற்றி ஓய்வெடுத்துக் கொண்டு, நாங்களே பார்த்துக் கொள்ள மாட்டோமா? எதற்காக இந்த அவசரம்? ஏனிந்தக் கோபம்? என்னைப் பேசவே விடாமல் .போனை வைத்து விட்டானே...? என்ன காரணம்? அத்தனை வெறுப்பு வந்து விட்டதா? தேவையில்லாமல் எதற்கு இந்த விரட்டு விரட்டுகிறான்? அவனுக்கே செயற்கையாயில்லையா இது? குறுக்கே பேசவே விடவில்லையே? என்ன காரணம்? மனசாட்சியின் விரட்டல்...! அதன் படபடப்பு....

கூப்பிட்டுட்டான் பார்த்தியா? அவனுக்கு மனசு கேட்காது....எனக்குத்தான் தெரியும் அது. மெட்ராஸ்ல அவ்வளவு பழகியிருக்கேனாக்கும்....தினம் இருபது முப்பது பேர் வரிசையா வந்துண்டேயிருப்பா தெருவுல..என்ன மாமி...எப்டியிருக்கேள்...ன்னு வீட்டுக்குள்ளே நுழைஞ்சு விசாரிக்காமப் போகவே மாட்டா...அதுதான் மனசுக்கு ஆரோக்யம் எனக்கு. நீங்க ரொம்பப் புண்ணியம் செய்தவா...பெத்த பிள்ளை இப்டி பக்கத்துலயே வச்சிக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிறதுக்குக் கொடுத்து வைக்கணுமே...நல்ல பிள்ளையைப் பெத்துருக்கேள்....ன்னு வாயாரப் புகழ்ந்து சொல்லிட்டுப் போவா...அவனை வாய் நிறைய ஆசீர்வாதம் பண்ணிட்டுக் கிளம்புவா...அதை இழக்கலாமா? அவனுக்கு மனசு கேட்காது...உங்க மன்னியிருக்காளே...அவளும் நல்லவதான்...இரக்கச் சிந்தை நிறைய உண்டு அவளுக்கு....அவ என்ன சொன்னா கேட்டியோ...எங்கிட்டப் பேசினபோது....?

ரெண்டு மூணு நாளா என்னென்னவோ கெட்ட கனவா வருதுங்கிறார்....தூக்கத்துல கன்னா பின்னான்னு புலம்புறார்....தெரியாமத் தப்புப் பண்ணிட்டேனேன்னு எங்கிட்ட அழறார்..தவியாத் தவிக்கிறார்.....உன் பேச்சைக் கேட்டு இப்டி கடைசி நேரத்துல அசட்டுத்தனம் பண்ணிட்டனேன்னு புலம்பறார்..என்னைத் திட்ட ஆரம்பிச்சிட்டார்...இப்டியா யோசனை சொல்வேன்னு கை நீட்டிட்டார்....வர்றவா போறவால்லாம்....என்னது...அம்மாவ அனுப்பிச்சிட்டேளா....? தம்பிட்ட அனுப்பிச்சிட்டேளா....? இப்டித் தள்ளாத வயசுல இடமாற்றம் செய்யலாமா மாமா? யாரு உங்களுக்கு இந்த அசட்டு யோசனையைச் சொன்னா? என்று  ஆளாளுக்குக் கேள்வி கேட்டுத் துளைச்சிட்டா... எல்லாருக்கும் ஒரே வருத்தம். ஒரு மாமி உட்கார்ந்து அழவே ஆரம்பிச்சிட்டா...எங்கம்மாவப் பார்க்கிறாப்ல இருக்கும்...மனசுக்கு அவ்வளவு ஆறுதல் பாட்டிட்டப் பேசிட்டுப் போனா...அதக் கெடுத்துட்டேளேங்கிறா..... பாட்டியிருந்தா நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிண்டு போலாம்னு வந்தேன். இப்டியாயிடுத்தேன்னு மூக்கைச் சிந்திண்டு போறா.....

அதுலேர்ந்து அவருக்கு மனசே சரியில்லை....ரெண்டு நாளா பைத்தியம் பிடிச்ச மாதிரியிருக்கார்....சரியாச் சாப்பிடுறதில்லை...தூங்குறதில்லை...ராத்திரி இருட்டுல ஒத்தையா நடமாடிண்டேயிருக்கார்...தப்பு செய்த மனசு குத்தறது...குத்திக் கிழிக்கிறது....இப்டியே போனா அவருக்கே என்னமாவது ஆயிடுமோன்னு எனக்கு பயமாயிருக்கும்மா....நீங்க இங்கயே திரும்ப வந்திடுங்கோம்மா....வண்டி ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்கேன்...பண்ணிடுவார்...உடனே கிளம்பி வந்திடுங்கோ...நர்ஸ் வச்சுப் பார்த்துக்கலாம்...ஒண்ணும் சிரமமில்லை....தயவுசெய்து தள்ளிப் போடாதீங்கோ....இப்டித் தப்பான யோசனையைச் சொல்ற புத்தி எனக்கு எங்கிருந்துதான் வந்ததோ...? கிறுக்கு மாதிரிச் சொல்லிட்டேன்...புத்தி மழுங்கிப் போச்சு...என்னை மன்னிச்சிடுங்கோ...நீங்க இங்க திரும்ப வந்தாத்தான் எங்களுக்கு நிம்மதி......ன்னு அடிச்சிக்காத குறையா அழுது தீர்த்துட்டா...தெரியுமோ? – அம்மாவின் முகத்தில் அப்படியொரு பெருமிதம். சந்தோஷம். பாதி வியாதி இப்பொழுதே குறைந்து விட்ட மாதிரி.

இப்பயும் சொல்றேன்...நீ இங்கயே இருக்கிறதானால் இருக்கலாம். கடைசிவரை நான் உன்னைப் பார்த்துக்கிறேன்...இது சத்தியம்.....

வேண்டாம்டா...எதுக்கு வீணா...? எனக்கு அங்கேயிருந்தாத்தான் மனசுக்கு சரியாயிருக்கும். கொஞ்சம் வியாதியே குறைஞ்சா மாதிரி ஆயிடும். நாலு மனுஷா வந்து போகுற இடமில்லையா? அதுவே ஆரோக்யம்... ஆயிரந்தான் ஆனாலும் பெரியவன்ட்ட இருக்கிறதுதான் சரி...அதுதான் எங்களுக்கு மதிப்பு..பெருமை..அவனுக்கு சிரமம்தான்...ஆனாலும் அதுதான் சரி...அதுதான் இடம்....அந்த வீடுதான் என்னோட கோயில்...அவர் உயிர் போன எடத்துலயே, அந்த வீட்டுலயே என் ஆவியும் பிரியட்டும்....

அம்மாவின் அந்தக் கடைசி வார்த்தைகள் இவன் வாயை அடைத்து விட்டது. அம்மா உயிரே அங்குதான் இருக்கிறது. வேற வழியின்றி, வக்கில்லையே என்றுதான்  வேதனையோடு கிளம்பி வந்திருக்கிறாள். ஒட்டாமல் கிடந்த வேளையில் மறு பயணம் சித்தித்து விட்டது. அதுவும் அவள் பிரார்த்தனையின் பலன்தானோ என்னவோ?   இப்போதுதான் திரும்பவும் அழைத்தாயிற்றே....! போ என்று சொன்னவன் இப்போது உடனே திரும்ப வந்து விடு என்கிறான். அந்தப் “போ“ இப்போது மறைந்து விட்டது. அதிலிருந்த வன்மம் செத்து விட்டது. மூத்தவனுக்கு எந்தச் சலுகையும் உண்டு. மற்றவர் எல்லாம் ஒரு படி கீழ்தான்.

 ண்டி எப்ப வரும்? கண்டிப்பா வந்திடும்ல...? ஒன்பதுக்குள்ள கிளம்பிட்டோம்னா, பொழுது விடியறதுக்குள்ள போய்ச் சேர்ந்துடலாம்....ஊர் முழிக்கிறதுக்குள்ள வீட்டுக்குள்ள புகுந்துக்கலாமே..! ஸ்டெர்ச்சர்ல படுக்க வச்சித் தூக்கித்தானே வேன்ல ஏத்துவா? இருக்கட்டும் பரவால்ல...நான்பாட்டுக்கு தூங்கிண்டே வந்துடுவேன்....நீ வர்றதானே? சுந்தரோடு நீயும் வா...அங்க கொண்டு போய் என்னைச் சேர்த்திடுங்கோ...புண்ணியமாப் போகும்...குழந்தைபோல் புலம்புகிறாள்.

எல்லாம் சரி...ஆனால்....ஏன் எனக்கு அந்தக் கேவலம், அவமானம்? நீ கிளம்பு என்று, இறங்கிச் சில மணி நேரத்தில்  சொல்லி, ஒரு அநாதையைப் போல் கையில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு யாருமே விடை கொடுக்காமல் அமைதியாக, தலைகுனிந்தவாறே ஏதோ கொலைக் குற்றவாளி போல் வாசலைத் தாண்டியபோது, ஆளை வெளியே தள்ளிய வேகத்தில் வெறுப்போடு அந்தக் கேட்டை டமால் என்று கண் முன்னே, சொந்தத் தம்பியின் மூஞ்சிக்கு முன்பு சாத்தித் தாழ்ப்பாளைப் போட்டானே...! அது ஏன்? ஏன் அப்படிக் கேவலப்படுத்தினான்? அப்படிச் செய்வது தவறு என்று ஏன் அன்று அவனுக்குத் தோன்றவில்லை? எது அவன் புத்தியை மறைத்தது? மழுங்கடித்தது?அப்படி என்ன பாவம் செய்தேன் நான்? என்ன தவறு செய்தேன்? சுந்தர் அண்ணாவும் இந்த மொத்த நிகழ்விலும் என் கூடவே இருந்திருக்கிறானே.....அவன் மீது ஏன் பொட்டுக் கோபம் எழவில்லை? அதெல்லாம் வேண்டாம்...நாங்க ரெண்டு பேருமே இங்க இருந்து பார்த்துக்கிறோம்...ஒண்ணும் பிரச்னையில்ல...-அவனும் சொல்லவில்லையே? அது குற்றமாகப் படவில்லையே? அவன் இந்தப் படத்திற்குள் வரவேயில்லையே? மொத்த நிகழ்விற்கும் பலிகடா நான்தானா? அவன் மனசாட்சிக்கு அவன் பதில் சொல்லிக் கொள்ள, ஒத்தடம் கொடுக்க, தன் தவறைத் தானே மறைத்துக் கொள்ள...நான் பலிகடா ஆக்கப்பட்டேனா...? கல்யாணமாகி, குடும்பம் உள்ள, ஒரு குழந்தைக்குத் தந்தையான என்னை, இந்த வயதில் இப்படிக் கேவலப்படுத்தி ஒரு அகதிபோல் வெளியேற்றி  அனுப்பி விட்டானே? ஆறுமா எனக்கு?

மறக்க முடியாதது...!.காலத்தால் அழியாதது....!! அந்த அவமானம் ஆயுசுக்கும் மறக்காது... மறையாது. உள்ளுக்குள் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறேன் நான். யாருக்குத் தெரியும் என் ரணம்?

 ஆறப் பொறுக்காத நிகழ்வுகளெல்லாம் இப்படித்தான் விபரீதங்களைத் தாங்கி நிற்குமோ?

                        ----------------------------------------------------------------

     

உஷாதீபன், (ushaadeepan@gmail.com)                                           எஸ்.2இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                               மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                    ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,          -            மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188).

 

06 நவம்பர் 2023

 

சிறுகதை                                 “மீதம்”   சிறுகதை -உயிர் எழுத்து நவம்பா் 2023





    
                                                                             

             நான் சொன்னது புரிஞ்சிதா? மனசுல இருத்திட்டியா?? – மாடியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சத்தமின்றிக் கேட்டார் பிரானேஷ்வரன்.

            நா வாயே திறக்கலை…நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம்….என்றாள் மிருணாளினி.

            ஆனாலும் சந்தேகமாகத்தான் இருந்தது எனக்கு. முணுக்-கென்று எதிர்பாராமல் பேசி விடுவதுதானே அவள் வழக்கம். நாக்கு நுனி வரை வருவதைத் தடுத்து நிறுத்தத் தெரியாதவள்.

            ஐயய்ய…அப்படியிருந்தாலும் தப்பாச்சே….வீட்டுக்கு வந்த ஆள்ட்ட நாலு வார்த்தையாவது பேசாம இருந்தா எப்படி? நாம வந்திருக்கிறது பிடிக்கலையோன்னு தோணும்ல? ஒரேயடியா வாயை மூடிட்டு இருந்திடாதே…ஏதாச்சும் ரெண்டு வார்த்தையாவது பேசி வை…. – மனைவியை சகஜப்படுத்துவது போல் சொன்னார்.

            நீங்க சொல்ற அந்த ரெண்டு வார்த்தைல நா ஏதாவது கேட்டு வச்சு, அதுவே தப்பாப் போயிடுச்சின்னா? –

            மிருணா விளையாட்டுக்கு இப்படிக் கேட்கிறாளா அல்லது உண்மையாகவே பயப்படுகிறாளா? அவள் மேலேயே அவளுக்கு நம்பிக்கையில்லையோ?

            ல சமயங்கள்ல இடத்துக்குப் பொருத்தமில்லாம, ஆளுக்குப் பொருத்தமில்லாம, யோசிக்காம சகஜமாப் பேசுறதா நினைச்சிக்கிட்டு நீ எதையாவது தத்துப் பித்துன்னு கேட்டு வச்சிடறே…அதனாலதான் உன்னை அடிக்கடி எச்சரிக்க வேண்டிர்க்கு….- இது அவர் அவளிடம் பலமுறை சொல்லியிருந்த கூற்று.

            சேலத்துக்குப் பெண் பார்க்கப்  போயிருந்தோம்…பையனுக்கு…அந்த ஊர் மாம்பழத்துக்குப் பேர்போனதாச்சே! அதான் ஒரு டஸன் வாங்கினோம். உங்களுக்குப் பாதி….இந்தாங்கோ…தனியாச் சாப்பிட சிலபேர் பயப்படுவா…வயித்துக்கு ஒத்துக்காது…மாம்பழம் சூடோல்லியோ?  …சாதத்தோட கலந்து சாப்பிடலாமே… தாலத்துல போட்டுக்கலாமே…சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்கோ. ருசி எப்படியிருந்ததுன்னு…-அக்கறையாய் பக்கத்து வீட்டுக்காரர் எங்களையும் நினைவு வைத்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். ஆறு பழம். எவ்வளவு தாராளம்? காசு கேட்காதது அதிசயம்.

            பட்டென்று கேட்டுவிட்டாள் மிருணா….இத எதுக்கு அங்கேயிருந்து, வேலை மெனக்கிட்டுச் சுமந்துண்டு வந்தேள்….இந்த மெட்ராஸ்லதான் கடைக்குக் கடை சீரழியறதே…ரோட்டோரம் கூடாரம் கூடாரமா கூரையைப் போட்டுத் தடுத்து,  பழமுதிர்ச்சோலைன்னு பேர் வச்சிண்டு, என்னமோ கடைக்கு வந்துதான் எல்லாப் பழமும் பழுக்கிறமாதிரி வச்சு வித்திண்டிருக்கானே….அதுல கிடைக்காத ஜாதி மாம்பழமா?

            வந்தவருக்கு சப்பென்று ஆகிவிட்டது. ஆனாலும் சமாளித்தார். அன்னன்னிக்குப் பறிச்சுக் கடைக்குக் கொண்டு வராளாக்கும் அங்கே. எங்கயோ பேக் பண்ணி, என்னைக்கோ கொண்டு வந்து விக்கிறதில்லே…இங்க மாதிரி….! மரத்துலேர்ந்து நேற்றைக்கு இறக்கிக் கடைக்கு வந்து, இன்னிக்கு உங்க கைக்கு வந்திடுத்து ….ஃப்ரெஷ்னா ஃப்ரெஷ்…அப்படியொரு ஃப்ரெஷ்…!!-போய்விட்டார்.

            என்ன மிருணா இது…தானம் கொடுத்த மாட்டைப் பல்லப்பிடுங்கிப் பார்க்கிற மாதிரி…கொஞ்சம் யோசிக்க மாட்டியா பேசறதுக்கு முன்னாடி?

            இதிலென்ன தப்பிருக்கு? சாதாரணமாக் கேட்டேன்… எந்தப் பொருள் எங்கே கிடைக்கலை இன்னைய தேதிக்கு? நியூயார்க்ல திருப்பூர் பனியன்களும், குழந்தேள் டிரஸ்ஸும் சீறழியறது…உறத்ராபாத் திராட்சை இங்க கொட்டிக் கிடக்கு…ஆஸ்திரேலியா ஆப்பிள் ரிலயன்சுல சீரழியறது…இந்தப் பாழாப்போன மாம்பழத்த அங்கேயிருந்து வெட்டியாச் சுமக்கணுமான்னு சொன்னேன்…யதார்த்தமாப் பேசினா அது தப்பா? – அவளும் விடுவதாயில்லை.

            பாழாய்ப்போன மாம்பழம்….இந்த வார்த்தைகள் கொடுத்தவர் காதில் விழுந்திருந்தால்?

            பிரச்னையே இதுதான். தான் அதிகமாகப் பேசுகிறோமோ? பொருந்தாததைச் சட்டென்று சொல்லி விடுகிறோமோ? என்று ஒரு கணம் அவள் யோசித்தால் போதும். எல்லாம் சரியாகி விடும்.  அல்லது குறையவாவது செய்யும். இங்கேதான் தன் முனைப்பு மூக்கின் நுனியில் படமெடுத்து ஆடுகிறதே…?

            சொல்லிக் கொண்டே அவள் தட்டில் வைத்துத் தந்த இரண்டு டிபன் செட்களை இரு கையிலும் வாங்கிக் கொண்டு மாடியை நோக்கி நடந்தார் பிரானேஷ்வரன். அதுவே தப்பாகத்தான் தோன்றியது அவருக்கு. வீட்டுக்கு வந்த விருந்தாளியை மெயின் உறாலில், டைனிங் டேபிளில், பொதுவான இடத்தில் அமர வைத்து சாப்பிட வைப்பதுதானே முறை, பண்பாடு. இப்படித் தூக்கிக் கொண்டு தனியிடம் தேடிப் போனால்?

            என்னாச்சு? இங்கயே கொண்டாந்திட்டீங்க…? எதுக்கு இப்டித் தூக்கிட்டு? கீழே வாங்கன்னா வந்திட்டுப் போறேன்…சட்னி, சாம்பார்னு ஒவ்வொண்ணுக்கும் போவீங்களா? – அவன் யதார்த்தமாய்த்தான் கேட்டான். 

            டேய் முத்து…உன்னோட தனியா ஜாலியாப் பேசிட்டு சாப்பிடணும்னு நான் தூக்கிட்டு வந்தா…கீழ வா…மேல வாங்கிறியே…அங்கயிருந்தா எம் பொண்டாட்டியிருப்பா…நாம சுதந்திரமாப் பேச முடியாதுறா…என்னானாலும் நமக்குள்ள இருக்கிற அந்நியோன்யம் அங்க கிடைக்குமா?  வந்து உட்காரு….பேசிட்டே சாப்பிடுவோம்….

            எங்கடா சாப்பிடுறது? அதான் தொட்டுக்க எதுவுமில்லையே?

            ஓகோ…நா ஒரு முட்டாள்…அத மறந்திட்டு திங்க உட்கார்ந்திட்டேன் பார்… என்று விண்ட தோசையை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு படியிறங்கினார் ப்ரானேஷ். கீழே வந்து சாம்பார், சட்னியை எடுத்துக் கொண்டு…கவனமாய் திரும்பவும் மாடிப் படியேறினார். இடுக்கியில் பிடித்த சாம்பார் பாத்திரம் நழுவி விடுமோ என்று பயமாயிருந்தது. சூடு வேறு.  புதிய அனுபவமாய் இருந்தது .

            இதுவரை மாடியில் வைத்து ஒரு முறை கூட அவர் சாப்பிட்டதேயில்லை. பால்கனியில் வானத்தைப் பார்த்துக் கொண்டே, வெளி மரங்களில் விளையாடும் பறவைகளை நோட்டமிட்டுக் கொண்டு சாப்பிட்டு மகிழ வேண்டும் என்கிற ரசனையான ஆசை உண்டுதான் அவருக்கு. மனிதனின் சுதந்திரமான சின்னச் சின்ன ஆசைகள் எல்லாமும் நிறைவேறி விடுகிறதா என்ன?

            வாழ்க்கையில் மனிதன் நினைப்பது வேறு. அமைவது வேறு. அமைந்ததைச் சரி பண்ணிக்கொண்டுதான் எல்லா மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாமுமே சரியாய் அமைந்தது என்று ஒரு பிறவியாவது உண்டா? அன்றைய அனுபவம் அவருக்குப் புதிது.

            முதல்ல இதத்தான் கேட்கணும்னு நினைச்சேன். ஏண்டா…நான் வேலை பார்த்த அதே டிபார்ட்மென்ட்லதான் நீயும் இருந்திருக்கிறேங்கிற விஷயம் ரிடையர்ட் ஆகுற வரைக்கும் தெரியாமப் போச்சே…எப்டி? என்னால நம்பவே முடியலப்பா….- பெரிய வருத்தமாய் உணர்ந்து இதைக் கூறினார் ப்ரானேஷ்.

            எனக்கும் இது ஆச்சரியமாத்தான் இருக்கு. இந்தச் சீஃப் இன்ஜினியர் பார்ட்டி இல்லன்னா இதுவும் தெரிஞ்சிருக்காது…அதுவும் சென்னைத் தலைமையகத்துல வச்சதுனால…நான் டெக்னிகல் சைடு போயிட்டேன். பெரும்பாலும் நார்த் ஆற்காடு, சௌத் ஆற்காடுன்னு சுத்திட்டேன். நீ மதுரை, திருநவேலின்னு இருந்திருக்கே…அட்மினிஸ்டிரேடிவ் சைடு வேறே…அதான் தெரியாமலேயே போயிடுச்சி…

            நம்ப சீஃப் இன்ஜினியர் (பிராஜெக்ட்ஸ்) ஆபீஸ் ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி மதுரைக்கு மாற்றல் ஆகி வரலேன்னா, அவர்  ரிடையர்ட் ஆகலேன்னா நாம சந்திச்சிருக்கவே முடியாது போல்ருக்கே…?

            அது கூட இல்லப்பா…ரிடையர்ட்மென்ட் பார்ட்டிய சென்னைல தலைமை அலுவலகத்துல வைச்சதுனாலதான்னு சொல்லு. அதுதான் நிஜம்.…ஸ்டாஃப் எல்லாரும் அங்க வந்திங்க பாருங்க…ஒண்ணு கூடினாத்தான சந்திக்க முடியும்? அப்படித்தான் இது நடந்திருக்கு….-முத்துக்கருப்பன் உற்சாகத்தோடு கூறியதை மனமுவந்து கேட்டுக் கொண்டிருந்த  பிரானேஷ்-தன் பால்யகால நண்பனைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு…இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கடா….என்றவாறே அடுக்கிலிருந்து  எடுத்து அவன் தட்டில் வைத்தார். குளிக்கப்போன மிருணாளினி வந்தாச்சா என்று அங்கிருந்தே எட்டிப் பார்த்தார். இன்னும் ஆள வெளியே வரவில்லை என்றே தோன்றியது. அதற்குள் சாப்பிட்டு முடித்து விடலாம்தான்.

            மறுக்காமல் அதற்கும் சாம்பாரை விட்டுக் கொண்டு-பயங்கர டேஸ்ட்ப்பா….உங்க வீடுகள்ல இந்த சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, அவியல், பொறியல்னு தனி கைபாகமப்பா…சாப்பாடும் சரி….டிபனும் சரி….உங்க வீடுகள்னாலே அந்த டேஸ்டு வேறே எங்கயும் கிடைக்காது….-வாயாரப் புகழ்ந்தார் முத்துக்கருப்பன்.

            அதுலயும் இந்தக் ஜவ்வரிசிப் பாயசம்னு ஒண்ணு வைப்பீங்களே….என்னா ருசி…என்னா ருசி…அடடடடா…! அதோட இன்னொண்ணு…ஊறுகாய் வகைல “வேப்பிலைக்கட்டி”ன்னு ஒண்ணு போடுறீங்களே…எங்கிருந்தய்யா அதப் பிடிச்சீங்க…திருநவேலில அது ரொம்ப ஃபேமஸாமே? மோர் சாதத்துக்கு அத வச்சி சாப்பிட்டா ரெண்டு பங்கு சாதம் இழுக்குதப்பா….!  

            அது வேறொண்ணுமில்லடா….நார்த்தை இலைப் பொடி இல்லே? அதான். நார்த்தங்காய் ஊறுகாய் போடுவோமே... அந்த மரத்தோட இலைகளைப் பறிச்சு, அதை எண்ணெய் விட்டு வறுத்து, இன்னும் உப்பு, பருப்பு, மிளகாயெல்லாம் தனியா வறுத்து சேர்த்து அரைச்சு… கட்டி கட்டியாப் பிடிக்கிறது. நம்ப தி.நகர் பக்கம் போனேன்னு வச்சிக்கோ…அங்க கடைகள்ல கிடைக்கும். நாலு உருண்டையை வச்சிட்டு எழுபது எண்பதும்பாங்க…படு கிராக்கி அதுக்கு?

            ஒரு குழந்தையைப் போல மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்த நண்பனை பழைய நினைவுகள் கலந்து நிற்க, விழி அசையாமல் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பிரானேஷ்.

            ஊரில், வறுமை மிகுந்த அந்த நாட்களில் அவன் வீட்டுக்கு வரும்பொழுது அம்மா கையால் சாப்பிட்டதை இன்றும் நினைவு கூறுகிறான். மோர் சாதத்துக்கு நார்த்தங்காய்னு ஒரு உப்பு ஊறுகாய் கொடுப்பீங்களே…அது ஒண்ணுக்காகவே எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்டா….அவ்வளவு ஜீரண சக்திடா அதுக்கு…மஞ்சளாற்றுல வெள்ளம் வரும்போது யானைக்கல், குதிரைக்கல்னு குதிச்சுக் குதிச்சு நீச்சலடிப்போமே…அக்கரைக்குப் போய் தாழம்பூ பறிச்சிட்டு வருவமே…அதெல்லாம் மறக்குமாடா…கோலாட்ட ஜோத்திரை விழாவும், ஆடி பதினெட்டும் ஆற்றங்கரைல நீ பசுவனா உட்கார்ந்திருக்கிறதும், உன்னச் சுத்தியிருக்கிற பாத்திரம் பூராவும் கலந்த சாதம் நிறைஞ்சு வழிய, நம்ப் ஃப்ரென்ட்ஸ் எல்லாரும் உங்க வீட்ல கூடி, சுத்தி வட்டமா உட்கார்ந்திருக்க, உங்கம்மா நீயும் வாடான்னு என்னையும் உட்காரச் சொல்வாங்க.  கை கையா எடுத்துப் போட்டு ஆசை ஆசையாப் பறிமாறுவாங்களே…அதெல்லாம் சாகுற வரைக்கும் மறக்கவே மறக்காதுடா….நாம ஊர்ல இருந்தபோதெல்லாம், சின்னப்பிள்ளைல நமக்குள்ள எந்த வித்தியாசமுமே இருந்ததில்லே…பெரியவங்களும் அதப்பத்தியெல்லாம் நினைச்சதேயில்லை. பெரியவனாக ஆகத்தான் எல்லாமும் வந்து சேர்ந்திடுச்சி….விரும்பியோ, விரும்பாமலோ அதைச் சுமக்க வேண்டியதாப் போச்சு…இல்லே? பழசைப்  பேச ஆரம்பித்து அது எங்கேயோ வந்து முடிந்தது. அவன் முகத்தில் கவலைக் குறிகள்.

            நான் அவனைப் பார்த்து மென்மையாய்ச் சிரித்துக் கொண்டேன். கல்லூரி போக வசதியில்லாமல் நான் சர்வீஸ் கமிஷன் எழுதி குமாஸ்தா வேலையைப் பிடித்ததும், ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பயன்படுத்தி படித்துப் படித்து மேலே வந்து  அவன் அதிகாரியாய் நின்றதும் அவனைச் சமீபத்தில் மீண்டும் சந்தித்ததில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

            சலுகைகளை அக்கறையாப் பயன்படுத்தி உயரத்தை அடையறதுக்கும் ஒரு பெரு முயற்சி தேவைப்படுதுதானே? சும்மா தூக்கித் தூக்கிப் போட்டுடுவாங்களா எல்லாத்துலயும்? நம்ப திறமையையும் காண்பிச்சாத்தானே எடுபடும்? நீ இந்த நிலைல உயர்ந்திருக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்டா…-மனதாரக் கூறினார் பிரானேஷ்.

            நம்ப ஸ்கூல்ல பதினோராம் வகுப்பு முடிய விடாம ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கினவன் நீ. நானெல்லாம் சுமாராப் படிச்சவன்தான். காலேஜ் போக வசதியில்லாட்டாலும்,  விடாமுயற்சியா பரீட்சை எழுதி, அரசு வேலை வாங்கி, டிபார்ட்மென்ட் பிரமோஷன் டெஸ்டெல்லாம் பாஸ் பண்ணி மேலே வந்து, சீனியாரிட்டிப் பிரகாரம் அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசராவும் உட்கார்ந்து ரிடையர்ட் ஆகியிருக்கே பாரு….அதுதாண்டா  பெஸ்ட்…..! உன்னைத் திரும்பச் சந்திச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா…..- ஆத்மார்த்தமான வாழ்த்தோடு முத்துக்கருப்பன் கூறுவதாகப் பட்டது பிரானேஷூக்கு.

            இப்ப அதெல்லாம் எதுக்கு? அதான் நாம ரெண்டு பேருமே ரிடையர்ட் ஆகியாச்சே… சௌரியமாத்தானே இருக்கோம்…அதுதான் வேணும்…அன்பு மாறாம இருக்கமே அதுவே போதும்…பால்ய கால நட்புக்கு ஈடு உண்டா? அன்புதான் பிரதானம்.

            உங்கம்மா மாதிரியே பேசுறடா நீ.  இன்னமும் துளிக் கூட மாறலை. அப்படியே இருக்கே…உங்கம்மாதான் வாய் ஓயாமச் சொல்லுவாங்க….முத்துக்கருப்பன் பாரு…படிச்சு பட்டதாரியாகி, ஆபீசராகறானா இல்லையா பாருன்னு ஆசீர்வாதம் பண்ணி மனசார வாழ்த்திச் சொல்லுவாங்க…அது அப்படியே பலிச்சிடுச்சுடா…இல்லன்னா நானெல்லாம் படிச்ச படிப்புக்கு எங்க….? என்னோட ஒவ்வொரு பிரமோஷனும்போதும் உங்கம்மாவத்தான் மறக்காம நினைச்சிக்கிடுவேன்…அவுங்க மானசீகமான வாழ்த்துதான் என்னை மேலே கொண்டு வந்திடுச்சு…-முத்துக்கருப்பன் கண் கலங்கியது போலிருந்தது.

            மனிதர்களின் நற்சிந்தனைகள்தான் பிரதானம்.அவைதான் எல்லா ஊக்கத்தையும் வழங்குகின்றன. அதுதான் அவர்களை மேலே கொண்டு வருகிறது என்று தோன்றியது எனக்கு.

            சாப்பிட்டு முடித்துக் வைகழுவி அவன் உட்கார்ந்தபோது, தட்டில் இரண்டு டவரா டம்ளர்களோடு காபி எடுத்து வந்தாள் மிருணாளினி. இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. உலக மகா அதிசயம்.

            என்ன…நீயே வந்திட்டியா….அதான் மாடிக்கும் பெல் மாட்டியிருக்கோம்ல….அடிச்சிருந்தீன்னா நானே வந்திருப்பனே…?

            பரவால்ல….டிபன் கொடுத்து நேரமாயிடுச்சேன்னு பார்த்தேன். எவ்வளவு நேரம்தான் காத்திருக்கிறது? பேசிட்டேயிருக்கீங்க… அடுத்து சமையல் வேலை இல்லயா எனக்கு? அதான்  நானே எடுத்து வந்திட்டேன்…என்றுவிட்டு தட்டுகளை இங்கேயே ஸிங்க்குல போட்டிருங்க…வேலைக்காரம்மா தேய்ச்சிடுவாங்க……என்று விட்டு விறு விறுவென்று கீழே இறங்கிப் போனாள் மிருணா. அவள் பேச்சில் சின்னக் கோபம் தொனிப்பதை உணராமலில்லை நான்.

            முத்துக்கருப்பன் மகிழ்ச்சியோடு…டிபன் பிரமாதம் மேடம்…சட்னி, சாம்பார் அபாரம்…..புதினாச் சட்னி தூக்கல்  – என்று சத்தமாய்க் கூறினான்…!

            காதில் விழாததுபோலவே போய்க் கொண்டிருந்தாள் மிருணாளினி. தாங்க்ஸ் என்றாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். காதென்ன செவிடா?

            கீழே அடுப்புல எதாச்சும் வச்சிருப்பாங்க போல்ருக்கு. அதான் ஓடுறாங்க…என்று சொல்லிக் கொண்டான் முத்துக்கருப்பன். ஏதோ புரிந்துதான் சொல்கிறானோ?

            இரு…இத வச்சிட்டு வந்திடுறேன்…என்றவாறே சாம்பார்…சட்னிப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நானும் கீழிறங்கினேன்…அடுத்து அவள் டிபன் சாப்பிட வேண்டுமே…!

            மிருணாளினி சொன்னாள் –

            சாம்பார்…சட்னிப் பாத்திரத்தை வச்சமேனிக்கு மொத்தமா  அப்டியேவா தூக்கிட்டுப் போவீங்க…அதுவும் இடுக்கில? பிடி நழுவிடுச்சின்னா?  ஒரு கிண்ணத்துல தனியா விட்டுத் தந்திருக்க மாட்டேன்? மாடில தனியா உட்கார்த்தி வச்சு டிபன் போடத் தெரியுது….இது தெரிலயா? அடுப்படில அன்றாடம் புழங்குறதையெல்லாம் அப்டி அப்டியேவா தூக்கிட்டுப் போய் பொதுவா வைப்பீங்க?ஆளாளுக்குக் கை வச்சிண்டு?   உங்களுக்கு ஒரு விவஸ்தையே கிடையாது எதிலயும்…! -கோபம் பளிச்சிட்டது அவள் முகத்தில்.

            என்ன அர்த்தத்தில் இதைச் சொல்கிறாள்?  என்னைச் சொல்வதுபோல் அவனைச் சுட்டுகிறாளா? என்ன ஒட்டிக் கொள்ளுமாம்?  தெளிவாய் எதுவும்  விளங்காமல், ஏதோ தப்பாய்ச் சொல்கிறாள் என்பது மட்டும் புரிய …நாய் வாலை நிமிர்த்தவா முடியும்…? சிலபேரை என்றைக்கும் எதிலும் மாற்றவே முடியாது…என்று முனகிக் கொண்டே மீண்டும் மாடிப்படி ஏறினேன் நான்.

                                                            -------------------------------------

           

 

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...