19 பிப்ரவரி 2023

சுவாசம் - பிப்ரவரி 2023 மின்னிதழில் ஒரு கட்டுரை - அசேகாகமித்திரனின் “தண்ணீர்” வாசிப்பனுபவம்

தண்ணீர்” -நாவல் - அசோகமித்திரன் -வாசிப்பனுபவம்.-

                    வாழ்க்கையில் உன்னதமெல்லாம் இலவசம் - என்று அன்று ஒரு பழமொழி உண்டு. தெரிவிப்பவர் திரு அசோகமித்திரன்.  அந்த உன்னதத்தை நாம் மதித்து நடந்திருக்கிறோமா...? இலவசமாகக் கிடைப்பது எதுவுமே மதிப்பற்றதாகிப் போகுமோ? இயற்கையின் கொடையாக இருந்த அது அன்று இலவசம். கொடையாக இருந்து கொட்டித் தீர்த்ததைப் பாதுகாத்தோமா? வணங்கினோமா?  பாதுகாப்பாய் இருந்ததை மதிப்பாய்ப் பயன்படுத்தினோமோ? தேவை அறிந்து, பயந்து, பொறுப்பாய்ச்  சிக்கனமாய் உபயோகித்தோமா? எதுவுமில்லை நம்மிடம். இன்று லபோ...திபோ என்று அடித்துக் கொண்டு அதற்காக அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகளில் அதுவும் ஒரு முக்கிய அங்கம் வகிப்பதாகி விட்டது. அப்படியே செலவு மேற்கொண்டாலும் தடையின்றிக் கிடைக்கிறதா என்றால் இல்லை. அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறதுவெளியூர்களுக்குச் செல்கையில் கூஜாவில் எடுத்துக் கொண்டு போய் பொறுப்பாயும், சிக்கனமாயும், பாதுகாப்பாயும் பயன்படுத்திய அதை இன்று எவ்வளவு ஆனால் என்ன என்று கைவீசிப் பணம் கொடுத்து வாங்கி உபயோகிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம். எல்லாம் காலத்தின் கோலம்.        எதிர்காலச் சந்ததி இதற்காக அடித்துக் கொண்டு சாகப் போகிறது என்கிற நிலை கண்டிப்பாக ஏற்பட்டே தீரும் என்று ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது சொல்லிச் சொல்லி நம்மை எச்சரிக்கைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். எதையும் நாம் காதில் வாங்கிக் கொள்வதேயில்லை. அப்படிக் காதில் வாங்கியிருந்தால் இப்போது கிடைப்பதை சிக்கனமாய் உபயோகிக்கக் கற்றுக் கொண்டிருப்போமே? அப்படியா கவனத்தோடு இருக்கிறோம் நம் வீட்டில்? இல்லையே? சொல்பவர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும்...வரும்போது பார்த்துக் கொள்வோம். என்றுதானே மெத்தனாய் இருக்கிறோம்....? தண்ணீர் எப்படியெல்லாம் நம்மைக் கவலைப்படுத்துகிறது? அன்றாடச் சிந்தனையில் அதன் தேவை கவலையுடன் நினைக்கப்படவில்லை என்று எவரேனும் இன்று சொல்ல முடியுமா?

      ஊர் பேர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக் கொண்டு அலைவதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் இந்தக் கதை எழுதப்பட்டது என்று மிகுந்த வருத்தத்தோடு கூறுகிறார் பெரியவர் அசோகமித்திரன். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் அந்த மனம் எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா? ம்ம்...பாவம்...சனம் தண்ணிக்காக எப்டி அலையுது....? என்று வாய் வார்த்தையாக வருத்தப்பட்டுக் கொண்டு தன் சொந்த வாழ்க்கையில் கரைந்து போகும் மனங்கள்தான் எத்தனையெத்தனை?

      தான் காணும் எளிய மக்களை, அவர்கள் படும் துயரங்களை, சின்னச் சின்னக் காரியங்களிலெல்லாம் விட்டுக் கொடுத்து, பொறுமை காத்து, நஷ்டப்பட்டு, தன் கஷ்டங்களைப் பொருட்படுத்தாது சமன் செய்து, எப்படியெல்லாம் இந்த ஆத்மாக்கள் தங்கள் அன்றாடங்களைத் துயரத்தோடு  கடந்து செல்கிறார்கள்?  ஐயோ...இந்த மனிதர்களின் தீராத சோகங்களுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? என்று மனம் வருந்தி, புழுங்கி, எதுவும் செய்வதற்கியலாது பேதலித்து நின்று, மனம் குமைந்து...தனக்குத்தானே அழுது, இறைவா...இவர்களின் துயரைத் துடைத்தெறி...அனுதினமுமான இந்த ஆதரவற்ற, சக்தியற்ற, வசதி வாய்ப்புக்கள் அற்ற எளிய மனிதர்களின் கஷ்டங்களைப் போக்கு.....என்பதான  வேண்டுதல் மனநிலையில்-     மனித மனத்தின் அடியாழங்களிலிருந்து  அசோகமித்திரன் வெளிக்கொண்டு வருகிற கனிவும், ஈரமும், நேயமும், கருணையும் வற்றாத பெரு நதியாய்க் காலம் கடந்தும் பெருகி நிற்கும் விதமாய் இப்படி ஒரு படைப்பை நமக்கு வழங்கிச் சென்றிருக்கிற பெரியவர் அசோகமித்திரனை நாம் வெறும் எழுத்தாளனாய்க் கொள்ளாமல் மனித தெய்வமாய்க் கொண்டாட   வேண்டாமா?

      வெறும் தண்ணீர்ப் பஞ்சத்தை, கஷ்டத்தை சொல்லிச் செல்லும் கதையா இது? அந்தக் கஷ்டங்களின் ஊடாகப் பயணம் செய்யும் ஜமுனாவும், சாயாவும் அவர்களின் தேய்ந்த வாழ்க்கை நிகழ்வுகளில் உற்றாரும், உறவினரும் இன்றி, இருப்போரின் துணையினை எதிர்பார்த்து நிற்காமல், தன் கையே தனக்கு  உதவி, நம் முயற்சியே நம் வாழ்க்கை என்று இருப்பதை ஈடுகட்டிக் கொண்டு செல்லும் பயணம் எத்தனை துயரம் நிறைந்தது? எத்தனை சமரசங்களைக் கொண்டது? எத்தனை வேதனைகளை உள்ளடக்கியது?

      வாழ்க்கை என்னதான் பிரச்னைகள் உடையதாய் இருந்தாலும், பற்றாக்குறையாய் விடிந்தாலும், அந்தப் பிரச்னைகளை அதன் போக்கிலேயே பொறுமையாய்க் கையாண்டால், நாளும் பொழுதும் தானாய்க் கடந்து போகும் என்கிற அரிய தத்துவத்தை, அனுபவத்தை ஜமுனாவின் வாழ்க்கை நமக்கு எவ்வளவு தெளிவாய்க் கற்றுக் கொடுக்கிறது?

      அந்த பாஸ்கர் ராவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை அக்கா...அவனைப் பார்த்தாலே அடிச்சு விரட்டணும்போல இருக்கு...ஒரு அசிங்கமான மனுஷனை எப்படி இத்தனை  சாதாரணமா நீ எதிர்கொள்றே? அவனோட எப்படி இவ்வளவு சகஜமா உன்னால பேச முடியுது? நடு வீட்டுக்குள்ள சர்வ சாதாரணமா வந்து குந்திக்கிறான். வெட்கங்கெட்ட எவனும் செய்யக் கூடிய காரியமா பட்டவர்த்தனமா அது தெரியுது. ஆனா அவனை நீ உனக்கு ரொம்ப வேண்டியவன் போல வரவேற்கிற...உடகார்த்தி வச்சுப் பேசறே...டீ வரவழைச்சிக் கொடுக்கிறே... உன்னை சீரழிச்சவன்ட்ட உன்னால எப்படி இத்தனை சமாதானமா நடந்துக்க முடியுது...? நா உறாஸ்டலுக்குப் போறேன்...உன்னோட இனிமே இந்த வீட்ல இருக்க விரும்பல.... - இது சாயாவின் சகிக்க முடியாத மனநிலை.

      சாயா...அடியே சாயா...நீயும் என்னை விட்டுப் போயிட்டேன்னா...அப்புறம் எனக்குன்னு யார்டி இருக்கா? தெனம் காலைல எந்திரிச்சு உன் முகத்தைப் பார்த்துத்தானேடி நானே என் நாளை ஆறுதலா, சமாதானமா ஆரம்பிக்கிறேன்...நீதானேடி என் நெஞ்சுக்கு  ஆறுதல்...என் ஒரே ரத்த உறவு நீ மட்டும்தான்னு நினைச்சிண்டிருக்கேன்...நீயும் போறேங்கிறியே...?

      அந்த பாஸ்கர்ராவ் இனிமே இந்த வீட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது....அப்டீன்னா சொல்லு....நான் இருப்பேன்...அந்தப் பொறுக்கியக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை...... - ஜமுனா மௌனம் காக்கிறாள்.

      எனக்கு வேறே வழி? அவனை விட்டா....நான் யாரைத் தேடிப் போவேன்...என்னிக்காவது ஒரு நாள் எனக்கு விடியாதா?

      உனக்கு விடியாதுக்கா...விடியாது...அவன் உன்னைப் பயன்படுத்திக்கிறான் தன் லாபத்துக்காக...உன்னை சீரழிச்சிட்டுக் காணாமப் போயிடுவான்.... - சொல்லிவிட்டு சாயா போயே விடுகிறாள்.

      ஜமுனா தனியளாக்கப்படுகிறாள். கிடந்து குமைகிறாள். எத்தனை நாட்கள் எத்தனை இரவுகள்? யார் யாரோ வந்து வந்து...எவரெவர் திருப்திக்கோ அலைந்து, சீரழிந்து.....இந்தப் பெண் ஜென்மம் என்பது எனக்கு மட்டும் ஏனிப்படி? சாயா சொன்னது நிஜமாகி விட்டதோ?

      நீதாண்டா எங்கக்காவச் சீரழிச்சே...இப்போ அவ வயித்துல சுமந்து நிக்கிறாளே...நீதான் அவளைக் கட்டிக்கணும்....கையில் குடையை எடுத்துக் கொண்டு அடிக்கப் போகும் சாயா...அவளைத் தடுக்கும் ஜமுனா...நீங்க கிளம்புங்க... என்று பாஸ்கர் ராவை கிளப்பும் நிதானம்.....அந்த நிலையிலும் தனக்கு ஒரு நல்ல நாள் தேடி வராதா என்று அலையும் அவள் மனது.

     

      ஜமுனாவின் வாழ்க்கை அவலங்கள் நம் மனதை உலுக்கி எறிந்து விடுகின்றன. ஆனாலும், இதுதான் தன் வாழ்வு என்று  சுற்றியிருக்கும் சுற்றங்களைத் தன் நட்பாய், உறவாய் நினைத்துக் கொண்டு, டீச்சரம்மாவோடு அவள் தண்ணீருக்கு அலைவதும், அதற்காக அதிகாலை அதிசீக்கிரமாய் எழுந்து, ஊரும் உலகும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரை மைல் நடந்து ஒரு வீடடைந்து, அடி பம்ப்பை பட்டுப் பட்டென்று அடித்து குடத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு திரும்புவதும், வாயேன்...ஒரு வாய் காபி சாப்பிட்டுட்டுப் போகலாம் என்று  ஆதரவாய் அழைக்கும் அந்த டீச்சரம்மாவின் நேசத்தை மறுக்க முடியாமல் அவள் வீட்டில் போய் நிற்பதும், அந்த வீட்டில் உள்ள இரண்டு கிழங்கள் அவளை விரட்டியடிப்பதும், கண்ட நாயெல்லாம் எதுக்கு இங்க வருது? என்று கேவலமாய்ப் பேசுவதும்... எதுவும் பதில் சொல்லாமல், கோபப்படாமல், டீச்சரின் அன்பிற்காக, அவளின் ஆதரவிற்காக, வயதில் பெரியவர்கள் ரெண்டு வார்த்தை தூஷணையாய்ச் சொல்லிவிட்டால்தான் என்ன? என்று பொறுமை காப்பதும் அடேயப்பா...இந்த வாழ்க்கையின் சின்னச் சின்ன அசைவுகள்...எவ்வளவெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுத்து விடுகிறது இந்தக் கதாபாத்திரத்தின் மூலமாய்....எப்படியெல்லாம் மனிதர்கள் துயர்ப்படுகிறார்கள்? எப்படி, எங்கெங்கெல்லாம் வசை வாங்குகிறார்கள்? எவ்வெவற்றையெல்லாம் பொறுத்துப் போகிறார்கள்? எவ்வளவு சகிப்புத் தன்மையைத்தான் உள்ளடக்கி நீந்துகிறார்கள்?  

      மனிதன் வறுமையில் உழல்வதும், இல்லாமையில் சீரழிவதும், ஒழுங்கில்லாத வாழ்க்கையில் கிடந்து அவதியுறுதலும், மீண்டு வெளி வர இயலாமல் தவித்தலும்...அத்தனையும் இருந்தாலும்...மூழ்கி முக்குளித்து அதில் சலிப்பில்லாமல் விரக்தியில்லாமல் பொறுமையோடும் நிதானத்தோடும் பயணித்தல் என்கிற அனுபவம் ஒருவனை எத்தனை செழுமையானவனாக ஆக்கி உலவ விடுகிறது?

      ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட  வாழ்க்கையை எத்தனை சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்கிறார்கள்? டீச்சரம்மாவை ஏன் ஜமுனாவுக்குப் பிடித்துப் போகிறது? தனக்கு ஆதரவாக இருக்கிறாள் என்பதற்காக மட்டுமா?

      ஸ்கூல்லர்ந்து வந்து இன்னும் ஒண்ணுக்கு ரெண்டுக்குக் கூடப் போகலை...உடனே பாத்திரத்தை தூக்கிண்டு பாலுக்கு ஓட வேண்டிர்க்கு...அதுக்கப்புறம் தண்ணி...அதுக்கப்புறம் கறிகாய்...பிறகு மளிகைச் சாமான், அதுக்கப்புறம் அம்பத்திரண்டு காம்போசிஷன் நோட்டுத் திருத்தணும்...அதுக்குள்ளே மருந்து ஏதாச்சும் தீர்ந்து போயிருந்தா அதை ஓடிப்போய் வாங்கி வச்சாகணும். அதுக்கப்புறம் இந்தக் கிழக் கோட்டான்களுக்கு பலகாரம் பண்ணிப் போட்டாகணும்...லாண்டரிக்குப் போய் துணியை வாங்கி வரணும்...பெட்பானை ஃபினாயில் போட்டுக் கழுவி வைக்கணும்...நாளைக்கு இன்ஸ்பெக் ஷனுக்கு நோட்ஸ் ஆப் லெசன்ஸ் சரிபார்த்து வைக்கணும்.....- ஜமுனா....அவளையே நோக்குகிறாள்...அக்கா...அக்கா...என்கிறாள். பிறகு அழுது விடுகிறாள். டீச்சர் மார்பில் சாய்கிறாள்....- இவளுக்குமுன் தன் துயரமட் ஒன்றுமில்லை என்ற எண்ணம் வந்து விடுகிறது. அல்லது இவள் சுமக்கும் சுமைக்கு முன்னால் நான் எம்மாத்திரம்? என்கிற எண்ணம் மேலெழுகிறது. எத்தனை உருக்கமான காட்சி...

      தன் துயருக்குச் சமாதானம் தேடி நிற்கும் இடத்தில் இருக்கும் துயரைக் கண்டு மனம் நெகிழ்ந்து, டீச்சரம்மாவை ஜமுனா அரவணைக்கும் இந்தக் காட்சி மனித மனத்தை ஆட்டிப் பிழிந்து விடுகிறதே...!

      வெறும் தண்ணீர்க் கஷ்டத்தைச் சொல்லவா இந்த நாவலை எழுதினார் பெருந்தகை அசோகமித்திரன். வாழ்க்கையின் அனுபவங்களை, அவலங்களை, முதிர்ச்சியை, பக்குவங்களை சாதாரண மக்களின் வாழ்வோட்டத்தின் ஊடாக எப்படிக் கண் முன் கொண்டு வந்து மனது உருக உருக நிறுத்துகிறார்...?

      ஆதரவில்லாத இரண்டு பெண்கள்...உறவுகள் நெருங்க விடாத விலகலான வாழ்க்கை அமைவில், ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்டு, மனச் சடவுகளை விலக்கிக் கொண்டு, பொருந்தாத சூழலை அனுதினமும் சமாளித்துக் கொண்டு வாழ்ந்து கழித்தலே வாழ்க்கை என்று சின்னச் சின்ன அடியாக எடுத்து வைத்து, நாட்களைக் கழிக்கும் அவலம் ஜமுனா-சாயா வாழ்வில் எத்தனை நுணுக்கமாய்ப் பகிரப்பட்டிருக்கிறது?

      அவளை உறீரோயின் ஆக்குகிறேன் என்றும், பிறகு  இரண்டாவது கதாநாயகியாகவாவது ஆக்கி விடுவேன் என்றும் விடாது சொல்லிக் கொண்டு அவளைத் தன் வசமாக்கி இழுத்துச் சென்று சீரழிக்கும் பாஸ்கர்ராவும், என்றாவது தனக்கு விடியாமலா போகும் என்று அவன் பின்னாலேயே நம்பிக்கையை விடாது அலையும் ஜமுனாவும், இனி வேறு எங்கென்று செல்வது என அவனே சதம் என்று நம்புவதும், அதனை, அவனை முற்றிலும் நம்பாது அவளை எச்சரிக்கும் சாயாவும்...அந்தப் பகுதியின் தண்ணீருக்காக அலைந்து அல்லல்படும் மக்கள் பலரின் கவனிக்கப்படாத வாழ்க்கையின் ஊடான நெகிழ்வான பயணமாக அவர்களின் வாழ்க்கைப் பாடுகள் எத்தனை உருக்கம் நிறைந்தவை?   நாவல் நம் மனதை பிழிந்து எடுத்து விடுகிறது. அங்கங்கே சிலவற்றைச் சுட்டிக் காட்டியதே இப்படி இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. முழு நாவலையும் வரி வரியாய் விவரிப்பதென்றால்? ஒரு புத்தகமே எழுதலாம்....உலகின் மிகச் சிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாய் பேசப்படும் இந்தத் தண்ணீர் நாவல்...ஒரு வாழ்க்கைப் பாடம்.

      சென்ற நூற்றாண்டில் தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று என மதிப்பிற்கும்  மரியாதைக்குமுரிய அசோகமித்திரனின் இந்தத் தண்ணீர் நாவல் நிறுவப்படுகிறது.

                        -------------------------






 

 மனத்தொற்று - சிறுகதைத் தொகுதி    இறுதி வடிவம்  (வெளியீடு பிப்.2023)



23)

09 பிப்ரவரி 2023

அவரவர் மனசு.....! சிறுகதை - பிரசுரம்-குங்குமம் வார இதழ் - 17.02.2023

 

சிறுகதை

அவரவர் மனசு.....!            பிரசுரம்-குங்குமம் வார இதழ் - 17.02.2023





               யய்யோ...இங்கே உடைக்காதீங்க...-அம்புஜம் கத்தியது ராமசாமியின் காதுகளில் விழவில்லை. கணத்தில் தேங்காய் சிதறி விட்டது அந்தக் கோயில் வாசலில்.

      சிதறு தேங்காய்ங்கிறதே குழந்தைகளுக்கானது. அதை வாசல்லதான் உடைக்கணும்...கோயிலுக்குள்ளயா உடைக்க முடியும்? கோயில் வாசல்ல வந்து ஐயய்யோங்கிறியே? என்றார் அவளை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டே...!

      பதட்டத்துல வாயில வந்துடுத்து....என்று உள்ளே பிராகாரத்தைப் பார்த்து, தப்பு...தப்பு....என்பதாய்க் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அம்புஜம்.

      .உங்களுக்குத் தெரியாதா? அதோ பாருங்க..உள்ளே....மூலைல...ஒரு தொட்டி...அதுலதான் சிதறடிக்கணும்.....நீங்கபாட்டுக்கு கேட்காமக் கொள்ளாம இங்க உடைச்சீங்கன்னா எப்டி? எல்லாத்துக்கும் ஒரு  அவசரம்...! - இவளே போய் புகார் கொடுத்து விடுவாள் போலிருந்தது.

      கொரோனா பீரியட்ல கோயில் மூடியிருந்தது. அப்ப எல்லாரும் எங்க உடைச்சாங்களாம்...? இந்த வாசல்லதானே...? அதனால பரவால்லே.....!  - இவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பகுதிச் சிறுவர்கள் நாலைந்து பேர் ஓடி வந்து சிதறிய தேங்காய்களைப் பொறுக்கினர். அடித்த வேகத்தில் அது சுக்குச் சுக்காய்!. சில சமயம் எவ்வளவு ஓங்கி வேகமாகத் தரையில் அடித்தாலும் ரெண்டாகவோ மூன்றாகவோதான் பிரியும். ஆனால் இன்று நன்றாகச் சிதறியது திருப்தியாக இருந்தது ராமசாமிக்கு. அதைவிடக் குழந்தைகள் வந்து எனக்கு உனக்கு என்று  ஓடி ஓடி எடுத்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி தந்தது.

      டேய்...போங்கடா...போங்க...போங்க...- அம்புஜத்தின் விரட்டல் கோபத்தை உண்டாக்கியது.

      எதுக்கு அதுகளை விரட்டறே...? அவாளுக்கில்லாம வேறே யாருக்கு? குழந்தைகளுக்குச் சொந்தமானதுதான் அது. வேண்டுதல் நிறைவேற்றியாச்சில்ல...அத்தோட விடு....வேண்டின காரியம் தாமதமில்லாம நடந்திட்டமாதிரி, தேங்காயும் சில்லுச் சில்லா எப்டி சிதறித்து பார்த்தியா? சிதறு தேங்காய் சிதறிப் போனாத்தான் வேண்டுதலுக்கான மகிமை. வெறுமே ரெண்டா உடைஞ்சா...மனசுக்கு சங்கடமாயிடும்....திருப்தி வராது....புரிஞ்சிதா....?

      அம்புஜம் திருப்தியான மாதிரித் தெரியவில்லை. உள்ளே தொட்டியில் உடைக்காதது அவளுக்குக் குறைதான் போலும்....அப்பொழுதுதான் கோயிலுக்கென்று, அந்த விநாயகருக்கு எதிரே உள்ள மூலைத் தொட்டியில் நேர்ச்சை நிறைவேற்றி உடைத்ததாக ஆகும் என்று நினைக்கிறாளோ? நல்ல சென்டிமென்ட்...!

      மூஞ்சியே சரியில்லையே உனக்கு? இதுக்குப் போயி இப்டியா குறைப்பட்டுக்கிறது? கோயில் ஆபீஸ்காரங்க எதாச்சும் சொல்லுவான்னு பயப்படுறியா? அதெல்லாம் ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்க....விடு....பெரியவரே சொல்லியிருக்காரே...நீ படிச்சதில்லையா....? என்றார் அவளைப் பார்த்து....

      புரியாமல்...என்ன? என்பது போல் அவர் முகத்தைப் பார்த்தாள் அம்புஜம்.

      தெய்வத்தின் குரல் படிச்சிருக்கியோ நீ...? அதுலதான் சொல்றார்.....சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிச்சிருக்கும்போது, ஒரு கோயில்ல யாரோ சிதறு தேங்காய் அடிக்க...குழந்தைகள் கூட்டம் திபு திபுன்னு கூடிடுறது....பெரியவர் மேலே விழுந்திடுங்களோன்னு பயந்து குழந்தைகளை விரட்டறாங்க.....அப்போ அந்தக் கூட்டத்துல ஒரு சிறுவன் கேட்கிறான்.....சிதறு தேங்காய் போடறதே எங்களுக்காகத்தானே...எங்களுக்கு இல்லாத உரிமை வேறே யாருக்கு? எதுக்காக எங்களை விரட்டறீங்க...ன்னு கேள்வி வீசறான்....அதைக் கேட்ட மகா பெரியவர் நெகிழ்ந்து போறார். அந்தப் பையனோட பேச்சிலிருந்த உறுதியைப் பார்த்திட்டு...வாஸ்தவந்தான்....குழந்தை ஸ்வாமியின் (விநாயகர்) பிரஸாதம் குழந்தைகளுக்குத்தான் சேரணும். முழுப் பாத்தியதையும் அவாளுக்குத்தான்னு...சொல்றார்..... ஆகையினால நீ ஒண்ணும் குறையா நினைச்சுக்காதே....! என்றார் உறுதி தொனிக்க...! கூடவே இன்னொன்றையும்  மறக்காமல் சொன்னார்.

      இதையும் தெரிஞ்சிக்கோ....இந்த சிதறு தேங்காய் அடிக்கிற வழக்கம் நம்ப தமிழ்நாட்டுல மட்டும்தான்....தெரியுமோ உனக்கு? இதுவும் அதுலதான் சொல்லப்பட்டிருக்கு....!

      காதில் வாங்கினாளோ இல்லையோ...கோயிலுக்குள் நுழைந்து விட்டாள். சரி என்று இவரும் பின் தொடர்ந்தார். ஸ்வாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் நின்று நிதானித்துக் கும்பிட்டு விட்டு, தீபாராதனை முடித்து கண்ணில் ஒற்றிக் கொண்ட போது தட்டில் காசு போட்டார் இவர். அருகில் நிற்கும் அம்புஜத்திடம் ஸ்வாமி பாதப் புஷ்பம் அளிக்க அர்ச்சகர் நீட்டியதைப் பக்தியோடு ஏற்று  கண்ணில் ஒற்றிக் கொண்டாள் அம்புஜம். ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்ட நிலை...!

      சுற்றுப் பிராகாரங்களை வணங்கக் கிளம்பியபோது கேட்டாள். உண்டியல்ல காசு போட்டீங்களா....?

      போட்டேனே....நீ பார்க்கலியா....?    

      நான் கேட்கிறது....உண்டியல்ல போட்டீங்களான்னு...? - அழுத்தமாக வந்தது அவள் குரல்.

      வழக்கமா நீதானே உண்டியல்ல காசு போடுவே....நான் அர்ச்சகர் தட்டுலதான் போட்டேன்...அதானே என் பழக்கம்....ஏன் நீ போடலியா?  - என்றார் இவர் பதிலுக்கு.

      என்னவோ முனகியதைப் போலிருந்தது. சட்டென்று திரும்பியவள் விடுவிடுவென்று நடந்து கைப் பர்சைத் திறந்து ரூபாயை எடுத்து உண்டியலில் போட்டு விட்டு வந்தாள். கையை எதற்கு இவ்வளவு உள்ளே நுழைக்கிறாள்? மோதிரமும் சேர்ந்து விழுந்துடப் போகுது...!? ரெண்டு விரல்ல பிடிச்சி துளைக்குள்ள நுனில போட்டாப் போதாதா?, இவருக்கு பயம்...!

      எப்போ கோயிலுக்கு வந்தாலும், மறக்காம உண்டியல்ல காசு போடுங்க...தெரிஞ்சிதா? ஸ்லோகம் சொல்லிண்டே கும்பிடுற சாக்கில் நான் மறந்திடுவேன்...!

      லேசாகப் புன்னகைத்துக் கொண்டே...அது உன் வழக்கம்...நா சூடத் தட்டுலதான் போடுவேன்...அர்ச்சகருக்குச் சேரும் அந்தக் காசு.... குறைஞ்ச வருவாய் உள்ளவா...நம்பள மாதிரி நாலு பேர் போடுற பைசாலதான் தொட்டுக்கோ..துடைச்சுக்கோன்னு அவங்க ஜீவனம் கழியறது....பாவமில்லையா?

      உண்டியல்லயும் போட்டா...கோயில் காரியங்களுக்கு உதவுமில்லையா? அதுவும் புண்ணியம்தானே?

      எது அதிகப் புண்ணியம்னெல்லாம் தெரியாது. அந்தப் புண்ணியத்தை நீ எடுத்துக்கோ...இந்தப் புண்ணியத்தை நான் எடுத்துக்கிறேன்....எனக்கு இதுலதான் திருப்தி, நிறைவு..... என்றார் ராமசாமி....!

      என்னிக்கு நான் சொல்லிக் கேட்டிருக்கீங்க...எல்லாம் உங்க இஷ்டம்தான்.... - என்றாள் சலிப்போடு. இப்போ கோயிலுக்குக் கூட்டி வந்ததே அவள் இஷ்டம்தானே...?

      சொல்ற ஸ்லோகங்களுக்கு நடு நடுவே இது வேறேயா...? போ...போ...போய் நன்னா ஆசை தீரச் சுத்திட்டு வா.....என்று கையைக் காண்பித்தார். கூட நடப்பவர்கள் இவர்களைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தார்கள். அமைதி காத்தாலே அதுவே பெரிய பக்தி  என்றிருந்தது இவருக்கு. ஆலயத்தில் அமைதி தவழ வேண்டும் என்பது இவர் எண்ணம்.

      மனசு போல் கும்பிட்டு விட்டு வரட்டும் என்று ஓரமாய் அமர்ந்தார் ராமசாமி. கோயிலுக்கு என்று வந்தால் அங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும், சாமி அலங்காரமும்தான் அவர் கண்களையும் கருத்தையும் கவரும்..! டம்...டம் என்று ஓசையெழுப்பும் வாத்தியங்கள் சங்கடப்படுத்தும்.  ஓடியாடும் குழந்தைகளையும் மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்ப்பார்.  அப்புறம்தான் பக்தி. எல்லோரும் கண்களை மூடி சந்நிதியை நோக்குகையில் இவர் நன்றாய்த் திறந்து வைத்துக் கொண்டு சாமி கும்பிடுவார். அந்த அலங்காரம் இவரை ஈர்க்கும். அம்பாளின் மூக்குத்தி ஜொலிப்பதை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார். ஆனாலும் தனி ஈர்ப்புதான் அந்தக் காட்சி...!  அது வேண்டும், இது வேண்டும் என்று என்றுமே வேண்டியதில்லை. அது  அவர் வழக்கமுமில்லை. வெறுமே கும்பிடுவார். அத்தோடு சரி. நம்பினாற் கெடுவதில்லை...நான்கு மறைத் தீர்ப்பு...நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு....- சினிமாப் பாட்டானாலும் எத்தனை அர்த்தம் பொதிந்தது?

      மூன்று நான்கு என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் அம்புஜம். எப்போது முடியும் தெரியவில்லை. சமயங்களில் அடிப் பிரதட்சிணம் வைக்க ஆரம்பித்து விடுவாள். போச்சுடா....! என்று பொறுமை கழறுவார் இவர். என்றாவது யாராவது சுண்டல் தருவார்கள். அப்படி ஏதும் இன்று உண்டா என்று கண்கள் தேடியது.. எதுவுமில்லை.

      சாமிய வேரோட பிடுங்காம விடமாட்ட போல்ருக்கே...என்றிருக்கிறார் அவளிடம்.

      உங்களுக்கு மனசில பக்தியில்லை. அதுக்கு நான் என்ன செய்றது? என்பாள் அவள். ஆனாலும் உன் பக்தி யாருக்கும் வராதுதான்...! - நினைத்துக் கொள்வார்.

      சோற்றுக்கே இல்லாதவனிடம் அவன் பசியைப் போக்கும் உணவுதான் அவனுக்குக் கடவுள். பசியோடிருப்பவனிடம் பக்தியைப்பற்றிப் பேசாதே...என்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். வாழ்க்கையில் இளம் பிராயத்தில் மிகுந்த வறுமையைக் கண்டவர் ராமசாமி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் அவர் தாய் தந்தையரின் உழைப்பும், தியாகமும்தான். காலமெல்லாம் உழைத்து உழைத்து உருக்குலைந்து ஆறு குழந்தைகளைப் படிக்க வைத்து ஆளாக்கிய அந்தத் தியாகத்திற்கு விஞ்சியதாய் இன்றுவரை எதுவுமே அவருக்குத் தோன்றியதில்லை. கண்களை மூடினால் பெற்றோரின் உருவம்தான் முன்னே...! எண்ணங்களில் அழியாது இருந்துகொண்டேயிருக்கிறார்கள். மறந்தால்தானே நினைப்பதற்கு? பட்ட  தரித்திரக் கஷ்டமும், பட்டினியும்,  துன்பமும் நினைவில் வந்து கண்ணீர் கசிய வைத்துக் கொண்டேயிருக்கிறது.. அதற்கு மீறியா ஒரு கடவுள்? அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம். அவ்வளவுதான் அவரைப் பொறுத்தவரை. ஆலயம் தொழுவது சாலவும் நன்று...இது அடுத்துதான்...!

      எங்களுக்கெல்லாம் இல்லையாக்கும்? என்று கேலி நிரம்பக் கேட்பாள் அம்புஜம்.

      உனக்கு பின்னெறி தெய்வமால்ல இருக்கும் போல்ருக்கு...என்று பதில் கிண்டலடிப்பார் இவர்.

      யப்பாடி...ஒரு வழியா முடிஞ்சிதா  ?.... - என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். துவஜஸ்தம்பத்திற்குப் பிறகு விழுந்து வணங்கினாள் அம்புஜம். நீங்களும் ஒரு நமஸ்காரம் பண்ணுங்க...என்றாள் இவரைப் பார்த்து.

      ஏற்கனவே பண்ணி விட்டேன் என்று சொன்னால் நம்ப மாட்டாள். அவளுக்காக இன்னொரு தடவை விழுந்து எழுந்தார் இவர். ஜோடியாய்ப் பண்ணனுமாம்...!

      அம்பாளோட வலது கைப்பக்கமாப் பார்த்து, ஆசீர்வாதம் வாங்குற மாதிரி,  இந்தக் கொடிக் கம்பத்துக்கு அப்புறம் இங்கே விழுந்து வணங்கணுமாக்கும்...என்று அவளுக்குச் சொன்னவரே இவர்தான். பலரும் எதிர் வரிசையில் விழுந்து வணங்குகிறார்கள். கொடிக் கம்பத்திற்கு முன் பகுதியிலும் நமஸ்கரிக்கிறார்கள். என்னத்தைச் சொல்வது?. மனதில் பக்தி இருந்தால் சரி...என்று நினைத்துக் கொள்வார்.

      அப்படிப் பார்த்தால் கோயில் வாசலில் நூற்றுக் கணக்கான செருப்பு ஜோடிகள் கிடக்கின்றன. சந்நிதிக்கு நேரே...அம்பாரமாய்.....ஒரு மறைவாய்க் கூட இல்லை. .அதுவே மனதை நெருடத்தான் செய்கிறது. வந்த சமயங்களில் சில சமயம் மறைவாய்த் தள்ளி விட்டுப் பார்த்தார். ஏன் சார் ஒதுக்குறீங்க...? என்று யாரோ ஒருவர் சத்தம் போட்டார். விட்டு விட்டார்.

       இங்கே நேர் வாசலில் போடக்கூடாது...தள்ளி “மறைவாய் எதிர் வரிசையில் காலணிகளைப் போடவும்“ என்று எழுதி வைக்கலாமே? உள்ளே வரும் எத்தனை பேர் ஓரக் குழாயில் கை -  கால் கழுவுகிறார்கள்? எல்லாம் காலத்தின் பரபரப்பிற்கேற்றாற்போல் சரி...சரி...என்றாகி விட்டது. எதையும் துல்லியமாய்ச் செய்ய எவருக்கும் போதில்லை..பொறுமையுமில்லை. அதுபற்றிய குற்றவுணர்வும் இல்லைதான். அவசர பக்தி....!

      வந்து வெகு நேரம் ஆகிவிட்டது. பசி கிள்ளியது ராமசாமிக்கு. ஏதாச்சும் அர்ச்சனை பண்ணியிருந்தாலும் ஒரு பழத்தை உரித்துப் போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் தேங்காயைக் கொரிக்கலாம். ஒரு மூடி கண்டிப்பா அர்ச்சகருக்கு...கொடுத்திடு...! இன்று அதற்கும் வழியில்லை. வரவர பசி தாள முடிவதில்லை..! -

      வாங்க போகலாம்...நேரமாச்சு....விரைவு படுத்தினாள் அம்புஜம்.

      நா எப்பவோ ரெடி....நீதான் லேட்டு...சுற்றுப் பிராகாரம் எவ்வளவு பெரிசு?  எத்தனை சுத்துதான் சுத்துவே...? .என்று சொல்லிக் கொண்டே நடந்தார். பைக்குள் கையை விட்டு ஐந்து ரூபாய்ச் சில்லரைகளாக இருந்த நாணயங்களைக் கையில் எடுத்துக் கொண்டார் ராமசாமி. கோயில் என்றாலே இந்த ஏற்பாட்டோடுதான் கிளம்புவார். அதற்காகவே நாணயங்களைச் சேகரித்து வைத்திருப்பது அவர் வழக்கம்..ஒரு சிறு மண் உண்டியல் உடைபட்டது இன்று. உண்டியல் பழக்கம் இளம் பிராயத்திலிருந்து தொற்றிக் கொண்ட விஷயம். அதுபற்றி அவள் கேட்டதேயில்லை.

      அம்புஜம் கோபம் கொண்டதுபோல் முன்னால் வீச்சு வீச்சென்று நடக்க... புன்னகையோடு பார்த்தார் இவர். எண்ணங்களும், மனமும் நிதானம் கொள்வதும், பக்குவப்படுவதும் என்ன அவ்வளவு எளிதா? சாதாரண மனுஷ ஜென்மம்தானே? எல்லாமும் கலந்துதான் இருக்கும்....! சகிப்புத்தன்மை மனித வாழ்க்கையின் முக்கியமான அம்சம்...!

      வாசலில் வரிசையாக உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கொன்றாய்ப் போட்டுக் கொண்டே வந்தார். கை நீட்டி வாங்கும்போது அந்த முகங்களின் மகிழ்ச்சி இவருக்கு முக்கியம். எல்லாருக்கும் காசு போட்டாச்சா என்று ஒரு முறை நிமிர்ந்து சுற்று முற்றும் பார்த்தார். அந்தக் கோயிலில் ஆள் அதிகம்தான். எங்கு கூட்டம் கூடுகிறதோ அங்கு பிச்சை எடுப்பவர்களும் நிறையக் கூடி விடுகிறார்கள். உண்டியலைக் குலுக்கி எடுத்து வராமல்,  உடைத்து எடுத்து வந்தது எவ்வளவு சரி? எதிர்த் திசையில் இருந்த தனிப் பிச்சைக்காரன் ஒருவன் விடுபட்டிருப்பது தெரிய அவனுக்கும் சென்று காசு போட்ட போது.....டூ வீலருக்கு அருகே நின்று கொண்டிருந்த அம்புஜம் சத்தமாய்க் கத்தினாள் -

      நீங்க இப்ப வரப் போறீங்களா இல்லையா....?- குரல் உரத்து ஒலிக்க இதோ...வந்தாச்சு... என்று ஓட்டமும் நடையுமாய்  நெருங்கினார் அவர்.

      இந்தாங்க பிரசாதம்...என்று தொன்னையோடு நீட்டிய அதை வாங்கிப் பிரித்தார் ராமசாமி.   அட....சர்க்கரைப் பொங்கலா...? பார்றா...? ..என்று மகிழ்ச்சியாய்ச் சொல்லியவாறே தாமதிக்க மனமின்றி வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டார். நெய் மணத்தோடு நல்ல சுவை. நாக்கிற்கு இதமாய்..முழுங்கவே மனசில்லை. முகம் பளீரென்று மலர்ந்தது. சரியான பசி தெரியுமோ..நேக்கு..? என்று சொன்னபோது பார்க்கவே பாவமாய் இருந்தது அம்புஜத்திற்கு.

      உங்களுக்குப் பசி பொறுக்காதுன்னு தெரியும் எனக்கு. அதான் பின் பக்கம் துர்க்கை அம்மன் சந்நிதில வரிசைல நின்னு வாங்கிண்டு வந்தேன்...- என்றாள் அம்புஜம்.

                              ----------------------------------------

       

     

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...