06 ஜூன் 2026

 

“ஒரு நாள் கூத்து”   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு மாத இதழ்-ஜூன்2026.




 “ஆர்த்தி…! என்ன இந்நேரத்துல…? – ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தாள் பிரேமா.

      பதில் சொல்லாமல் வீட்டுக்குள் போனவளைப் பின் தொடர்ந்தாள்.

      ஆபீசுக்குப் போகாமே இங்கே வந்திருக்கே…?  லீவு போட்டுட்டியா? – கேள்வி மேலும் தொடர்ந்தது.

      உறாலில் இருந்த காற்றாடியை உயிர் பெறச் செய்து விட்டு ஸ்ஸ்ஸ்….என்று ஆசுவாசப்பட்டவாறே அங்கிருந்த சோபாவில் சாய்ந்தாள் ஆர்த்தி.

      அருகில் வந்து அமர்ந்து தலையைத் தடவிக் கொடுத்தாள் பிரேமா. எதும் பிரச்னையா? என்றாள்.

      அக்கா….கொஞ்ச நேரத்துக்கு எதுவும் கேட்காதே….முடியுமானா எனக்கு ஒரு ஸ்டாராங்க் காஃபி கொடு….. –கேட்டுக் கொண்டே சட்டென்று அவள் மடியில் படுத்துவிட்டாள் ஆர்த்தி. நண்பனின் மனைவி. எவ்வளவு நெருக்கம்…!

      பிரேமாவின் மனம் இளகியது. ஏண்டீ இப்டீ…? சரி, படுத்திரு… எடுத்திட்டு வர்றேன்…. என்றவாறே அவள் தலையைத் தூக்கி ஒரு தலையணையை அண்டக் கொடுத்து எழுந்தாள் பிரேமா.

      நல்ல சூடா இருக்கணும்….இல்லன்னா வேண்டாம்…..

      சரீடீ…சரி…..என்றவாறே உள்ளே போனாள் பிரேமா. அதற்குள் ஆர்த்தி அசந்து விட்டதுபோல் இருந்தது.

      உடம்பு எதுவும் சரியில்லையோ? லீவு போட்டு,  வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே? அந்த மூன்று நாளின் முதல் நாளில் வயிற்று வலி, வயிற்று வலி என்று பிதற்றுவாளே? அதுவாய் இருக்குமோ?

      தொலைபேசி அலறியது. யாராய் இருக்கும்? அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை சிம்மில் வைத்து விட்டு, போய் எடுத்தாள்.

      பிரேமா…நான்தான்…அங்க டேபிள் டிராயர்ல என் பர்ஸ் இருக்கா பாரு…? – ரவீந்திரன் பதற்றத்தோடு கேட்டான்.

      போச்சு, மறந்திட்டீங்களா? சமீபமா உங்களுக்கு இதே வேலையாப் போச்சு….எங்கிருக்கீங்க….?

      பர்ஸ் இருக்கா பாருன்னா? ரோட்டுலதான் நிக்கிறேன்….திடீர்னு டிக்கெட் பாக்கெட்டைப் பார்க்கிறேன்…பர்ஸைக் காணோம்….பயந்திட்டேன்…

      சரி, பதறாதீங்க…..ஒரு நிமிஷம்…. – போனை வைத்துவிட்டுப் போய்ப் பார்த்தாள்.  

       ஏ.டி.எம். டெபிட் கார்டு பர்ஸில்தான் இருக்கும். எடுத்து உபயோகித்துவிட்டு அப்படியே மறந்து வைத்து விட்டுப் போயிருக்கிறான். கொண்டு வந்து டிராயரில் வைத்தாள். கிளம்புவதற்கு முன் தேவையானவற்றை டேபிளில் கண்பார்வையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று எத்தனையோ முறை  சொல்லிப் பார்த்திருக்கிறாள். அவன் செய்வதாயில்லை. இப்படித்தான் வழியில் பதறிக்கொண்டு நிற்பதா?

      ஃபோனை எடுத்தாள். லைன் துண்டிக்கப்பட்டிருந்தது. அவன் செல்லுக்கு அடித்தாள். ரிங் போய்க்கொண்டேயிருந்தது. டிராபிக்கில் இருப்பான். ஆபீஸ் போய்ச் சேரட்டும், பிறகு சொல்லலாம் என்று நினைத்து வைத்தாள். அதற்குள் அவனிடமிருந்தே மீண்டும் போன்.

      இருக்கு…..என்றாள். கண்டேன் சீதையை என்பதுபோல் சொன்னால்தான் அவனுக்குப் பிடிக்கும்.

நல்லவேளை…அதுல ரெண்டாயிரம் பணம் இருக்கும். அதை எடுத்து பீரோவுல வை. பணத்தோட டிராயர்ல வைக்காதே….பயந்தே போயிட்டேன்… -சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டான். ஆர்த்தி வந்திருப்பதைச் சொல்ல வாயெடுத்தாள். ஏனோ சொல்லவில்லை. ஆபீஸ் போகாம இங்கே வந்து என்ன பண்றா? அவுங்க வீட்ல சத்தம் போடப் போறாங்க…என்பான்.

யக்கா….என்னாச்சு காபி…? – கத்தினாள் ஆர்த்தி.

இதோ வந்துட்டேண்டி…..- சொன்னவாறே அடுப்படியை நோக்கி ஓடினாள் பிரேமா. நல்லவேளை சிம்மில் வைத்திருந்ததால் பால் மெல்லப் பொங்கி சாவகாசமாய் மேலே வந்து கொண்டிருந்தது. அணைத்து, ஆர்த்தி கேட்டதுபோல் ஸ்டாராங்க் காபி கலந்து எடுத்து வந்தாள்.                           

ஆர்த்திக்குப் பிடித்தது அவள் வீட்டின் காபிதான். எப்போது வந்தாலும் முதலில் அதை நீட்டிவிட வேண்டும் அவள் முன்.

ஆனாலும் தொழில் சுத்தம்கா உங்கிட்டே…எப்டி இப்டி ஒரு காபி போடறே…? பாலுக்குச் சொட்டுத் தண்ணி கலக்க மாட்டே போலிருக்கு…கள்ளிச் சொட்டா டிகாக் ஷன் இறக்கிடுறே…அப்புறம் உன் காபியை எப்படித் தவிர்க்க முடியும்? இந்தக் காபியைக் கொடுத்தே ரவியை உங்க முந்தானைல முடிஞ்சி வச்சிருக்கீங்க….                                                                      சீ…போடி….அதெல்லாமில்லை….அவர் ஒரு சுதந்திரப் பறவை….அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது…..                                           

அப்டியா? வேறே எங்கேயாச்சும் கூடு கட்டிடப் போறார்க்கா… - சொல்லி விட்டுச் சிரித்தாள் ஆர்த்தி.

விளையாட்டுக்குத்தான் சொன்னாள் என்றாலும் அந்த வார்த்தைகள் பிரேமாவுக்கு சற்றுக் கலக்கத்தைத்தான் தந்தன.

என்னக்கா...நானும் வந்ததுலேர்ந்து பார்க்கிறேன்...உன்கிட்டே ஒரு கலகலப்பே இல்ல இன்னிக்கு...? அங்க என்னடான்னா எங்கம்மா பால் உறைல தண்ணிய விட்டு விட்டு அலசுவாங்க…அதுவே நூறு மிலி கலந்திடும். அப்புறம் எப்டி காபி நல்லாயிருக்கும்?  சொன்னாக் கேட்க மாட்டாங்க….? பிரேமாக்கா மாதிரிப் போடு அப்பத்தான் எனக்குப் பிடிக்கும்னு ஆயிரந்தடவை சொல்லிட்டேன்…அப்போ அங்கயே போய் குடிச்சிக்கோன்னுவாங்க….அம்புட்டுக் கோபம் வருமாக்கும்…..

அந்தக்காலத்துப் பெரியவங்க அப்டித்தாண்டீ இருப்பாங்க… அவுங்களுக்கு எதையும் பொட்டுக்கூட வீண் பண்ணப் பிடிக்காதாக்கும்….அவுங்ககிட்டேயிருந்து நாம நிறையக் கத்துக்கணும்….நீ இத்தனை ஸ்டாராங்கா குடிக்கிறது சரியில்லை. அவ்வளவும் பித்தமாக்கும். ஒரு நாளைக்குத் தலையைச் சுத்திக் கிறு கிறுன்னு வரப்போவுது…. வாமிட் பண்ணப்போறே….ஜாக்கிரதை….

என்னக்கா, காபியையும் கொடுத்திட்டு, இப்டியும் சொல்றே…என்னை அனுபவிச்சுக் குடிக்க விடு….அடா…அடா…அடா….கா.பின்னா நரசுஸ்தான்…அதோட சுவையும் மணமுமே தனி…….- விளம்பரத்தில் வருவதைச் சொல்லிக்கொண்டே அவள் அனுபவித்துக்  குடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரேமா.          அதெல்லாம் இருக்கட்டும்….இப்போ திடீர்னு இங்கே ஏன் வந்தே…? ஏன் ஆபீஸ் போகலை…?                                                      

ஆபீசுக்கு இன்னைக்கு லீவு போட்டுட்டேன்……

அப்போ வீட்டுலதானே இருக்கணும்…கரெக்டா ஆபீஸ் டயத்துக்குக் கிளம்பினாப்ல இருக்கு நீ இங்கே வந்திருக்கிறது…?

வர்ற வழில திடீர்னு வயித்து வலி…அதான் அப்டியே இங்க ஒதுங்கிட்டேன் - எவ்வளவு உரிமையோடு சொல்கிறாள்?

ஏய்ய்ய்ய்…! பொய் சொல்ற பார்த்தியா? அப்போ ஆபீசுக்குன்னு கிளம்பிட்டே…அப்டித்தானே?

அதாங்க்கா…கிளம்பி போறச்சே…வயித்து வலி வந்துட்டதுனால இங்க வந்திட்டேன்ங்கிறேன்ல…- அவள் முழிக்கும் முழி சந்தேகத்தைக் கிளப்பியது இவளுக்கு.

சரி, அப்பக் கிளம்பு வீட்டுக்கு…போய் நல்லா ரெஸ்ட் எடு…எல்லாம் சரியாப் போயிடும்…..

ஏன், இங்கே ஓய்வெடுத்தா ஒத்துக்க மாட்டியா? எதுக்கு விரட்டறே…? படுத்திருந்திட்டு சாயங்காலமாப் போறேன்….

அப்போ மதியச் சாப்பாடு…?                                                இங்கதான்….நீதான் போடணும். ஏன் போட மாட்டியா?

இதிலேர்ந்தே நீ சொல்றது பொய்ன்னு தெரியிதுல்ல….ஆபீசுக்குக் கிளம்பியிருந்தேன்னா சாப்பாடு எங்கே? உன் டிபன் பாக்ஸைக் காட்டு…..இல்லன்னா கேரியரைக் கொண்டா பார்ப்போம்….

யக்கா, போட்டு அறுக்காதே…வீட்டுல சமையல் ஆகலை….அதான் கிளம்பி வந்துட்டேன்…!

எப்பவும் எட்டரைக்கெல்லாம் ரெடியாகிடும் உங்க வீட்டுல…எனக்கு நல்லாத் தெரியும்…அப்டியிருக்கைல, இன்னைக்குத் தயாராகலைன்னு சொன்னா என்னா அர்த்தம்? அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? அப்டீன்னா உங்கப்பா சமைக்க ஆரம்பிச்சிடுவாரே…! உங்கம்மாவுக்கு முன்னே சமையலைச் செய்து முடிச்சிடுவாரே…? உள்ளதைச் சொல்லு….நீ எதையோ மறைக்கிறே…?

விட மாட்டே போலிருக்கே….ஒரு காபியைக் கொடுத்துப்பிட்டு, என்னல்லாம் கேள்வி கேட்கிறே? உன்னோட பெஸ்ட் காபிக்காகவே உன்கிட்டே பொய் சொல்லக் கூடாதுதான்….சொல்லிப்புடறேன்……

சொல்லு…என்ன விஷயம்…ஏனிப்படி இங்கே ஓடி வந்தே?

இதை நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமாக்கும்….எல்லாம் வழக்கம் போலத்தான்….

என்னாச்சு…! உன்னைப் பெண் பார்க்க வர்றாங்களா? எந்தூர்லேர்ந்து?

சென்னையிலேர்ந்து………

சென்னையா…? அப்டீன்னா காலைலயே வந்திருக்கணுமே …?

காலைலயே வந்திட்டாங்கதான்… காலேஜ் உறவுஸ்ல ரூம் எடுத்துத் தங்கியிருக்காங்களாம்…..கோயிலுக்குப் போயிட்டு வருவாங்க போலிருக்கு….

ஆர்த்தி சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கே பாலாமணி அலறிக் கொண்டிருந்தாள்.

பார்த்தீங்களா உங்க பொண்ணு செய்திருக்கிறதை…? எப்போ வெளியேறினான்னு கூடத் தெரியலை…யாருகிட்டயும் சொல்லிக்கவும் இல்லே…அவபாட்டுக்குக் கிளம்பிப் போயிருக்காளே….இப்போ பன்னெண்டு மணிக்குள்ளே அவங்க வந்திடுவாங்களே…நான் என்ன செய்வேன்….

மனைவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றார் சந்திரசேகர். உறாலிலிருந்து அவரைக் கடந்துதான் ஆர்த்தி வெளியேறியாக வேண்டும். அவர் குளிக்கப் போன நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கிளம்பியிருக்கிறாள்.

முதல் நாள் விபரம் சொன்னபோது சரிப்பா என்று ஒப்புதலாகப் பதில் சொன்னாளே…? நான் நம்பியதுதான் தவறோ? என்னவோ மனதில் தோன்ற செல்லில் எண்களை இணுக்கினார்.

எதிர்முனையில் எடுத்தது பிரேமா…!

உறலோ என்றவுடனேயே பேசுவது யாரென்று தெரிந்து போனது பிரேமாவுக்கு.

ஏம்மா…ஆர்த்தி அங்கே வந்திருக்காளா? – சந்திரசேகரிடமிருந்து வந்த முதல் கேள்வியிலேயே சுதாரித்துக் கொண்டாள் பிரேமா.

இல்லையே அங்கிள்….இங்க எதுக்கு வர்றா? இன்னிக்கு ஆபீஸ் உண்டுதானே…? - தன் குரல் எத்தனை இயல்பாய் இருக்கிறது? அவளுக்கே ஆச்சரியமாயிருந்தது.

ஆபீஸ் உண்டும்மா…யாரு இல்லேன்னு சொன்னா….அங்க வந்திருக்காளான்னு கேட்டேன்….

என்ன அங்கிள் இப்டி கேட்கிறீங்க…? ஆபீசுக்குக் கிளம்பினா அங்கதானே போயிருப்பா…இங்கே ஏன் வரணும்?

டிமிக்கி கொடுத்திட்டு அங்க வந்திட்டாளோன்னுதான்…அவளை நம்ப முடியாது...அதான் கேட்டேன்...

வரல்லை அங்கிள்….அப்டியெல்லாம் வரமாட்டா…வந்தான்னா எதாச்சும் சொல்லணுமா…. வேணும்னா சொல்லுங்க…

இன்னைக்கு  அவளைப் பெண் பார்க்க வர்றாங்கம்மா….சரின்னு சொல்லிப்புட்டு, திடீர்னு கிளம்பிப் போயிட்டா….இப்டியெல்லாம் பண்ணினா எப்படி சொல்லு? வயசான காலத்துல ஒரு பொண்ணை வச்சிக்கிட்டு படாத பாடு பட வேண்டிர்க்கு….இன்னும் கொஞ்ச நேரத்துல அவுங்க வந்துடுவாங்க….சரி, நான் ஆபீசுக்கே பேசறேன்…

அங்கிள்…அங்கிள்…- போனை வைத்து விடுவாரோ என்று பதறினாள் பிரேமா.                                                                       என்ன, சொல்லும்மா…? நான் பதட்டத்துல இருக்கேன்…சீக்கிரம் சொல்லு…

நான் வேணும்னா ஆபீசுக்குப் பேசிப் பார்க்கட்டுமா…?             எதுக்கும்மா உனக்கு சிரமம்…நானே பேசிக்கிறேன்….என்ன ஒரு சங்கடம்னா செல்லுல பேசினா எடுக்க மாட்டா….ஆபீஸ் லேன்ட் லைனுக்குப் பேசினா அது எங்கேஜ்ட்டாகவே இருக்கும்…லைன் கிடைச்சாலும் யாரும் வாங்கிக் கொடுக்க மாட்டாங்க…

அதான் அங்கிள், என் நம்பர்னு தெரிஞ்சிதுன்னா எடுப்பால்ல….நான் பேசி வரச்சொல்றேன் அங்கிள்….நீங்கள் கவலைப்படாதீங்க…..

ஓ.கே.ம்மா… சரியான ஐடியா...ரொம்ப தேங்க்ஸ்…வச்சிடட்டுமா? – லைன் துண்டிக்கப்பட்டது.

…உன் பொண்ணு ஒரு வேளை அவ க்ளாஸ்மேட் ஃப்ரெண்டு அந்த ரவீந்திரன் வீட்டுக்குப் போயிருப்பாளோன்னு கேட்டேன். அங்கே வரல்லியாம்….

பொண்ணு பார்க்கிற நாளும் அதுவுமா அங்க போய் உட்கார்ந்தா நல்லாத்தான் இருக்கும்? எல்லாம் என் தலையெழுத்து… யாராவது கேள்விப் பட்டாங்கன்னா மானம் போகும்...

அங்க போகலையாம்டீ…அதுக்கு எதுக்கு டென்ஷனாகிறே?       அப்போ ஆபீசுக்குப் போடுங்க….                                ஆபீசுக்குப் போட்டாத்தான் கிடைக்காதே…..செல்லுக்குப் பேசினா எடுக்கமாட்டா உன் பொண்ணு….ஆபீஸ் லைன் கிடைக்கவே கிடைக்காது….

அவ ஆபீசுக்குப் போயிருக்க மாட்டா….அந்த பிரேமா வீட்டுக்குத்தான் போயிருப்பா…எனக்கு நல்லாத் தெரியும்…..

அவதான் அங்க வரலேங்கிறாளே…

அப்டித்தான் சொல்லுவா…எல்லாம் கூட்டுக் களவாணிங்க…..வேறே போக்கிடம் ஏது அவளுக்கு. அந்த பிரேமாதான்  இவளை ஆட்டி வைக்கிறா…..போனை திரும்ப அவள் லைனுக்குப் போட்டு எங்கிட்டக் கொடுங்க சொல்றேன்…. – படபடத்தாள் பாலாமணி.

எண்களைச் சொடுக்கினார் சந்திரசேகர். பாலாமணியிருக்கும் பதட்டத்தில் எண்களை மாற்றி அமுத்தி விட்டார். அது எதுவோ ஆஸ்பத்திரிக்குப் போனது. சாரி….சாரி…..என்றுகொண்டே மீண்டும் அழுத்தினார்.

லைன் கிடைக்கும் முன் சந்திரசேகரிடமிருந்து கோபமாய்ப் பிடுங்கி, உறலோ…என்று கர்ஜித்தாள் பாலாமணி.

எதிர்முனையில் பிரேமா.

இந்த பார், என் பொண்ணு அங்கே வந்திருந்தான்னா உடனே அவளை நல்ல வார்த்தை சொல்லி இங்கே அனுப்பிச்சு வை….அநாவசியமா அவளுக்கு எதையாவது அட்வைஸ் பண்ணிட்டிருக்காதே….இன்னைக்கு அவளைப் பெண் பார்க்க வர்றாங்க…அவ அங்கேயிருந்தான்னா இன்னும் அரை மணி நேரத்துல இங்கே இருந்தாகணும்…ஞாபகம் வச்சிக்கோ…இல்லைன்னா நான் போலீசுக்குப் போக வேண்டிர்க்கும்……என்னடா இப்டி பேசறேனேன்னு நினைக்காதே…சொன்னா செய்வேன்…..-பாலாமணி போனை வைத்துவிட்டாள்.     

சந்திரசேகரன் அசந்து விட்டார். ரொம்பவும் பழகியவர்களிடம் எப்படி இந்த மாதிரித் திடீரெனக் கோபமாய்ப் பேசுகிறாள். ஆர்த்தி அங்குதான் சென்றிருப்பாள் என்று உறுதியாய் நினைத்து இப்படிப் பேசுகிறாளோ? எப்படி இத்தனை உறுதியாய் ஊகிக்கிறாள்?                                       

என்ன பாலா இப்டி, போலீஸ் அது இதுன்னு? நல்லாவாயிருக்கு? சாதாரணமாக் கேட்க வேண்டிதானே….பழகினவங்ககிட்டே போய் திடீர்னு இப்டியா பேசறது…?                                                                   பரவால்ல, ஒண்ணும் கெட்டுப் போகாது. வீட்டுல உங்களுக்கு அடங்கிப் போறது போதும்…..வெளிலயும் என்னை அடக்காதீங்க…..

தன்னால் இப்படியெல்லாம் முடியாது என்றுதான் தோன்றியது சந்திரசேகருக்கு. நாளைப் பின்ன முகம் பார்க்க வேண்டாமா? இப்படியா முறித்துப் பேசுவது இங்கிதமில்லாமல்? அந்த ரவீந்திரன் எவ்வளவு நல்ல பையன்? அவனுக்காகவாவது இவள் சாந்தமாய்ப் பேசலாமே? - நினைத்துக் கொள்ளத்தான் முடியும். சொன்னால் சண்டை வரும்...பெரிதாகும்...பிறகு தலையில் அடித்துக் கொண்டு டென்ஷனாகி படுக்கையில் விழுந்து விடுவாள். பெண்களே ஏனிப்படி எல்லாவற்றிற்கும் நிதானமில்லாமல் திரிகிறார்கள்? எந்த விஷயத்தையும் ஆர அமரக் கடந்து செல்ல வேண்டும் என்ற பக்குவம் ஏன் இல்லை இவர்களுக்கு?

ன்னடீ, உங்கம்மா என்னென்னமோ பேசறாங்க…? – ஆர்த்தியைப் பார்த்துக் கேட்டாள் பிரேமா.

நாந்தான் உன்னைப் பிடிச்சு வச்சிட்டிருக்கிறதா நினைச்சிட்டுப் பேசறாங்க….ஏற்கனவே உங்கம்மாவுக்கு என்னை அவ்வளவாப்  பிடிக்காது. இதுல நீவேறே இப்டி வந்து உட்கார்ந்திருக்கே…இதுக்கு மேலே என்னால சமாளிக்க முடியாது. நீ கிளம்பு உன் வீட்டுக்கு…இங்கே வந்ததாச் சொல்லாதே…

போயீ? என்னக்கா இப்டி வெரட்டுறே?

போயி, அலங்காரம் பண்ணிட்டு நில்லு. வர்றவனுக்கு உன்னைப் பிடிச்சிருந்தா சம்மதம் சொல்லு….

நாந்தான் சொல்லியிருக்கேன்லக்கா….எனக்கு வெளிநாட்டுல வேலை பார்க்கிற மாப்பிள்ளைதான் வேணும்னு….அதில்லாம ஏன் பார்க்கிறாங்க….?

நல்லாயிருக்குடி….நீ இங்க வேலை பார்க்கிறே…? வர்றவன் வெளிநாட்டுலன்னா, நீ என்ன செய்வே?

என் வேலையை ரிசைன் பண்ணிட்டுப் போவேன்….

அப்படி என்னடி வெளிநாட்டு மோகம்? நம்ம நாட்டுல இல்லாத பெருமையா?

அதெல்லாம் எனக்குத் தெரியாது. ரொம்ப நாளா, ஏன் ரொம்ப வருஷமான்னு கூடச் சொல்லலாம்….என் மனசுல இருக்கிற ஆசை இதுதான். கல்யாணம் பண்ணினா வெளிநாட்டுல வேலை பார்க்குற பையன்தான். என் வேலையைப் பார்க்காமே, என் அழகைப் பார்த்திட்டு விரும்பி என்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போகணும்….ராணி மாதிரி நான் சந்தோஷமா இருக்கணும்….எனக்குப் பிடிச்சிருந்தா அங்க ஒரு வேலையைத் தேடிக்குவேன்...சம்பாதிப்பேன்....

நீ சொல்றது அதீதக் கற்பனையாயிருக்கே…விரலுக்கேத்த வீக்கமாத் தெரிலயே?                                                                          அப்டித்தான்…வருதா இல்லையா பாரு…..எனக்குன்னு ஒருத்தன் நான் நினைக்கிறமாதிரியே வருவான் ….                                             நீ என்னமோ விளையாட்டாப் பேசற மாதிரி இருக்கு….சீரியஸா மனசில சிந்திச்சு முடிவு பண்ணிப் பேசற மாதிரித் தெரிலயே….?                         எல்லாம் அதிரடிதான். எங்கப்பா அம்மாவ இப்டித்தான் ஒரு ஆட்டு ஆட்டப் போறேன்…..

நீ அயல்நாட்டுக்குப் போனேன்னா, உங்கப்பா, அம்மா?

அவங்க எங்க ரெண்டு அண்ணன்ல யாரோடயாச்சும் போய் இருக்கட்டும்…பெத்த பிள்ளைகதானே வச்சிக் காப்பாத்தணும்….அவங்களுக்குத்தானே கடமையிருக்கு. நான் வேறொரு குடும்பத்துல போய் வாழப் போறவதானே?              

மீண்டும் போன் மணி அடித்தது. எடுத்தாள் பிரேமா. எதிர் வரிசையில் பாலாமணி.. அவளை முந்திக் கொண்டு இவள் பேச ஆரம்பித்தாள்.

இந்த பாருங்கம்மா…நான் ஒண்ணும் உங்க பெண்ணை இங்கே பிடிச்சு வைக்கலை….அவ இங்கேயிருந்தான்னா நீங்க வந்து தாராளமாக் கூட்டிட்டுப் போகலாம். திடீர்னு போன் பண்ணி இப்படி அநாவசியமா மிரட்டிட்டிருந்தீங்கன்னா அது நல்லாயில்லே. எதோ பெரியவங்களாச்சேன்னு பார்க்கிறேன்… அப்புறம் நானும் போலீசுக்குப் போக வேண்டிர்க்கும்….உங்க பொண்ணு இங்கே வரல்லை…அவ்வளவுதான்….                                    என்னக்கா இப்டிப் பேசிட்டே போலீசு அது இதுன்னு?                   சாரீடீ…கோபத்துல..சரியா யோசிக்கலை… …உங்கம்மாவும் அப்டிப் பேசினாங்களா…எனக்கும் பதிலுக்கு அப்டியே வந்திடுச்சு….உளறல்னு வச்சிக்கயேன்…இந்த டி.வி. சீரியல்கள்ல பொம்பளைக்குப் பொம்பளை சவால் விட்டுக்கிறாங்களா….அதப் பார்த்துப் பார்த்து நமக்கும் அந்த வேகந்தான் வருது….இதுக்குத்தான் அந்த அசட்டுப் பிசட்டு சீரியல்களையெல்லாம் பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறது….பொழுது போகணுமேன்னு போட்டு விட்டா…அது பைசாசம் மாதிரி நம்மளப் பிடிச்சிக்கிது. ஐயையோ, அடுத்தாப்ல உங்கம்மா முகத்துல நான் எப்டி முழிப்பேன்? இப்டி உளறிட்டேனே….? பேசாம மன்னிப்புக் கேட்ற வேண்டிதான்….    -கையைப் பிசைந்தாள் பிரேமா.                          அதெல்லாம் ஒண்ணும் ஒர்ரிப் பண்ணாதே…எல்லாத்தையும் ரவி சரி பண்ணிப்பார்…..எனக்காக அவளை மன்னிச்சிடுங்கன்னு ஒரே வார்த்தைல ப்ளேட்டையே திருப்பிடுவார் கவலைப்படாதே….-ஆர்த்தி சமாதானப்படுத்தினாள்.

ஆர்த்திக்கு  ரவீந்திரனுடனான நட்பு பால்ய காலத்திலிருந்தானது. இருவரும் ஒரே ஊர். ஒரே பள்ளி. சிறு பிராயத்திலிருந்து பழகிய பழக்கம் அவன் கல்யாணம் ஆகி மனைவியோடு தனிக் குடித்தனம் வந்தபோது மேலும் நெருக்கமாகியது. பிரேமா இவளைத் தன் தங்கைபோல்தான் நினைத்தாள். பாலாமணி கூட அடிக்கடி அங்கெல்லாம் போகக் கூடாது என்று தடுத்திருக்கிறாள். ஆர்த்திதான் கேட்பதில்லை.      ஆரம்பத்தில் பிரேமாவுக்கே சற்று சங்கடமாய்த்தான் இருந்தது. ஆனால் அதை முற்றிலும் தகர்த்தவன் ரவீந்திரன்தான். அவனது பக்குவமான பேச்சில் அவளுக்கு நம்பிக்கை வந்தது. உனக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம்…யாரையும் நீ நம்ப மாட்டே….ரவீந்திரனைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்….அவருக்கு நான் ஒரு நல்ல தோழி மாதிரி. ஒண்ணும் தப்புத் தண்டா நடந்துடாது….என்பாள் இவள். அவளது விகல்பமில்லாத பேச்சை பிரேமாவும் ரசிக்க ஆரம்பித்தாள். நாளடைவில் அவளைத் தன் தங்கையாகவே வரிக்க ஆரம்பித்து விட்டாள். அவ்வளவு சுதந்திரம் அவள் வீட்டில் ஆர்த்திக்கு.

அப்பாவும் அம்மாவும் சென்னைக்கு ஒரு முறை சுதாகரன் அண்ணாவைப் பார்க்கப் போயிருந்த போது, நான் வரலை என்று விட்டு ரவீந்திரன் வீட்டில்தான் இருந்தாள் ஆர்த்தி. அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். வயசுக்கு வந்த பொண்ணை இப்படி இன்னொரு வீட்டுல விட்டிட்டு நான் வரலை என்று மறுத்தாள். அப்பாதான் தடுத்தார். ரவீந்திரனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும் என்று சொன்னவர் அவர்தான். அந்த நம்பிக்கை இன்றுவரை காப்பாற்றப்பட்டுத்தான் வருகிறது. அப்படியான ஒரு கண்ணியமான குடும்பத்தில் உள்ளவர்களோடு பாலாமணி சர்வ சாதாரணமாய் வார்த்தையை விட்டுப் பேசி விடுகிறாளே….? பெண் கல்யாணம் இப்படித் தள்ளிப் போகிறதே என்கிற ஆதங்கம் அவளுக்கு. ஆர்த்தியின் விருப்பப்படி வெளிநாட்டில் வேலை பார்க்கும் பையன் வரன் ஒன்றிரண்டு வரத்தான் செய்தது. போய் ரெண்டு நாள்ல விபரம் சொல்றோம் என்று போனவர்கள் தகவல் எதுவுமே தெரிவிக்கவில்லை.                               இவ வாயை வச்சிட்டு சும்மா இருந்தாத்தானே...? அந்தப் பையன்ட்ட என்ன பேசினாளோ? அவன் என்ன நினைச்சானோ? யம்மாடீ...இவளைச் சமாளிக்க முடியாதுப்பான்னு கம்முனு போயிட்டான். பதில் வரலை....ஊருல அவனவன் விருப்பத்துக்குப் பொண்ணா இல்லை...அதெல்லாம் கிடைக்கும். இந்த மாதிரி வாயாடிகளுக்குத்தான் கிடைக்காது....எல்லாம் நம்ம தலையெழுத்து..... - பாலாமணி கோபமும், கொந்தளிப்பமாய்ப் புலம்பினாள்.       எங்க அம்மா எப்பவுமே அப்டித்தான்…உங்களுக்குத்தான் தெரியுமே அக்கா…அதைப் பொருட்படுத்தாதீங்க…..இவள்தான் சமாதானம் செய்தாள். அங்கிருந்து கிளம்பும்போது, சாயந்தரம் நான் திரும்பவும் வருவேன்…ஒரு முக்கியமான விஷயத்தை ரவி கூடப் பேசணும்….என்னோட இந்தப் பெண் பார்க்கப் போகிற நாடகத்தில் நீங்க ரெண்டு பேரும்தான் பிரதானப் பாத்திரம்…ஞாபகம் வச்சிக்குங்க…..ரவிகிட்டே சொல்லிடுங்க…நான் என்ன சொன்னாலும் கேட்பான் அவன்…..உங்களைத்தான் நான் கெஞ்ச வேண்டிர்க்கும்….கால்ல கூட விழறேன்…உங்க வீட்டுக்காரர் கூடச் சேர்ந்து நீங்கதான் இதை முடிச்சு வைக்கணும்……                                               என்ன, என்னென்னவோ புதிர் போடுகிறாள்? என்ன திட்டம் வைத்திருக்கிறாள்?– பிரேமா விழித்தாள்.                                                அர்த்தம் பொருத்தம் இல்லாமல், தான் கோபப்பட்டு விட்டோமோ என்று அங்கே பாலாமணி நினைத்துக் கொண்டிருந்த அதே வேளையில், வாசலில் நுழைந்தாள் ஆர்த்தி.

எங்கடீ கிளம்பிப் போயிட்டே….இன்னைக்கு அவுங்க வர்றாங்கன்னு உனக்குத் தெரியுமில்லே…ஏன் அநாவசியமா இப்படி எங்களைப் படுத்தறே?

உனக்கு அது மட்டும்தான் தெரியும்…வேறென்ன தெரியும்…காலைலேர்ந்து எனக்கா ஒரே வயித்துவலி…ஏதாச்சும் கேட்டியா நீ? உன் காரியந்தான் உனக்குக் குறி….

வயித்து வலியா? இன்னைக்குன்னு அந்தச் சனியன் வந்து தொலைச்சிடுச்சா? இல்ல பொய் சொல்றியா?

ஆமா பொய் சொல்றேன்…..இதோ பார்…டாக்டர் சீட்டு…..கொஞ்சமாச்சும் எனக்கு நாள் எப்படி? ஒத்துவருமா? வரச்சொல்லலாமான்னு ஏதாச்சும் என்கிட்டக் கேட்டியா? நீபாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்வே…அதுக்கு நான் ஒத்துப் போகணும்….அதானே…? கல்யாணம் எனக்கா உனக்கா? எதை எடுத்தாலும் தாம் தூம்னு கிளம்பிடுவியா? எப்படியாவது என்னை ஒருத்தன்ட்டப் பிடிச்சுக் கொடுத்தி்ட்டு சனியன் ஒழிஞ்சிதுன்னு நிம்மதியா இருக்கணும் உனக்கு...அதானே...?

உன்கிட்டக் கேட்டுட்டுத்தானேடீ சொன்னோம்…..நாங்களா எங்கே செய்தோம்….?                                                                  ஆமா, இதுக்காக நான் நாளை எண்ணிட்டே இருக்கணுமாக்கும்…என்ன கண்றாவி…? வர்ற ஒதுக்கம் சொல்லிட்டா வருது...இல்ல நம்ம உடம்பு ஒரே மாதிரியா வருஷம் பூராவும் இயங்கிட்டிருக்கு? அப்பப்போ மாறுதல் ஏற்படுதுதானே? நீயும் பொம்பளைதானே? தாயாருக்குத் தெரியாதா, பொண்ணோட பாடு?                                                                         என்னடி தப்பு? என்னென்னவோ பேசறே? உன்கிட்டே கேட்டுட்டுத்தானே இறங்கினோம்...இப்ப வந்து என்னென்னவோ சொல்றே?

என்ன கேட்டீங்கங்கிறேன்….வர்றவன் ஒரு காலேஜ் லெக்சரர்….எத்தனை பெரிய சம்பளம் இருக்கப் போகுது…? அப்டியே இருந்தாலும் போஸ்ட் நிரந்தரமா? பார்த்தீங்களா? எனக்கு வேணாம்னு சொன்னேன்ல…யாராச்சும் கேட்டீங்களா? நீ எப்பவுமே நான் சொல்றதைக் கேட்கமாட்டே…அப்பாவாச்சும் கேட்டாரா? அவர் நீ சொல்றதைத்தான் கேட்பாரு…வேறே எதுவும் அவர் காதுலயே ஏறாது….எதாச்சும் ஒண்ணை முடிச்சு என்னை வெளில தள்ளி விடணும்…இதுதானே உங்க ரெண்டு பேரோட குறிக்கோள்….இந்த வரன் எனக்குப் பிடிக்கலை…அதான் வெளில போனேன்…

அப்போ இப்போ எதுக்கு திரும்பி வந்தே?

மனசு கேட்கலை… வந்தேன்….டாக்டர்ட்டப் போயி, காட்டிட்டு, ஆபீசுக்கு லீவு சொல்லிட்டு, கடனேன்னு வர்றேன்…..

தொலைபேசி மணி அடித்தது. ஓடிப்போய் எடுத்தார் சந்திரசேகர். எதிர் முனையில் அவர்கள்.

சார், நான் பரமநாயகம் பேசறேன்…நாங்க இப்போ கோயில் முடிச்சிட்டு வந்திட்டிருக்கோம்….இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிடுவோம்…ரூமுக்குப் போயிட்டுக் கொஞ்ச நேரத்துல புறப்படுறோம்….

சார், நான் வேணும்னா டாக்ஸி அனுப்பட்டுமா…..புது ஊராச்சே…..

புது ஊருன்னா என்ன? கேட்கிற காசைக் கொடுத்தா வர்றான்….இங்க லாட்ஜ் வாசல்லயே டாக்ஸி ஸ்டான்ட் இருக்கு….ஒண்ணும் சிரமமில்லே….

ஓ.கே.சார்…..கிளம்பினவுடனே போன் பண்ணுங்க….

கண்டிப்பா….சொல்லாம வருவனா? டாக்ஸிக்காரனுக்கு சரியா வழி தெரியலைன்னா உங்ககிட்டேதானே கேட்கணும்…வச்சிடறேன்…

லைன் துண்டிக்கப்பட்டது.

அவுங்க சரியா இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள வந்திடுவாங்கம்மா…நம்ம கச்சேரியை அப்புறமா வச்சிக்கலாம்….அது என்னைக்குந்தான் இருக்கு…நீ கொஞ்சம் உன்னை ரெடி பண்ணிக்கோ…..

இப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் என்னைப் படுத்தறீங்க….எனக்கு உடம்பு முடியாத நாள்ல இதென்ன கூத்து? – சொல்லிக் கொண்டே பாத்ரூமுக்குள் போய் கதவைப் படாரென்று அடைத்துக் கொண்டாள் ஆர்த்தி.

அவள் உடல் நலத்தை மேலும் அல்லது மறுபடியும் உறுதி செய்யாமல் முடிவு செய்தது தவறுதானோ என்று நினைத்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

--------------------------------------

19 மே 2026

 


“முதுகு”  -                                                                            ---------------------   சிறுகதை

       ஸார்....லேசா கொஞ்சம் பென்ட் பண்ணி உட்காருங்க... மறைக்குது.....- சொன்னான் சரவணன்.                          

      படம் ஓடும் சத்தத்தில் காதில் விழுந்ததா தெரியவில்லை. வந்தது முதல் முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். முதுகில் தப்பை வச்சுக் கட்டிய மாதிரி இவரு இருக்கிற வளர்த்திக்கு நாலு வரிசைக்கு மறைப்பார் போல்ருக்கே? எரிச்சலாக இருந்தது இவனுக்கு. 

      போதாக்குறைக்கு தலை “பம்“மென்றிருந்தது. முடி வெட்டி வருஷக் கணக்காகும் போல....- நினைத்துக் கொண்டான். தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டு படம் பார்க்க முனைந்தான். ஆனாலும் திரை முழுக்க பார்வையில் விழவில்லை..

      படம் போட்டதிலிருந்து ரெண்டு மூணு முறை சொல்லி விட்டான். ஒரு தடவை மட்டும் லேசாய் அசைந்தது போலிருந்தது. அவ்வளவுதான். ஆஜானுபாகுவான ஆள். எந்திரிச்சு சண்டைக்கு வந்தான்னா? பொழுது போக்க ஒரு சினிமாவுக்கு வந்துட்டு இதெல்லாம் தேவையா?                                                            அப்படி இப்படி அசைந்து அசைந்தே நேரம் பூராவும் போனதுதான் மிச்சம். வேறு எங்கும் போய் உட்கார வழியில்லை. உறவுஸ் ஃபுல்.

இந்த நினைப்பிலேயே படம் முடிந்து விட்டது. கதவு திறக்க கூட்டம் வெளியேற ஆரம்பித்தது.                                           வயிற்றெரிச்சலில் முன்னே போகும் அந்தாளை வெறித்தபடியே நடந்தான். ஆளும் மூஞ்சியும்....! கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்....பின்னாடி உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு மறைக்குமேன்னு...அறிவு கெட்ட முண்டம்....!                                    முனகிக் கொண்டே வந்த இவனை பின்னால் கேட்ட அந்தக் குரல் தடுத்தது.                                                                       தலையத் தலைய ஆட்டி ஆட்டியே படம் பார்க்க விடாமப் பண்ணிட்டான்யா இந்தாளு.....ஒரு நிலைல சீட்ல உட்காருராங்கிற?ஆட்டிக்கிட்டே இருக்கான்யா.... போறாம்பாரு....தட்டக்குச்சி கணக்கா.....? “பூ”ன்னு ஊதி விட்ரலாம் போல்ருக்கு....

      அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்பதை தட்டக்குச்சி சரவணன் உணர்ந்தான். 

                        -------------

16 மே 2026

 


தீராத தாகம் - மாலைமதி நாவல் மே1-15 -  2026


 மனச் சாய்வு-ஜெயந்தன் சிறுகதை - விமர்சனம் - உஷாதீபன்







“மனச் சாய்வு“ -சிறுகதை - ஜெயந்தன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

-------------------------------------------------------------------------- மனசாட்சி உள்ளவனாகப் படைப்பாளி இருக்க வேண்டும். உள்ளொன்றும் புறமொன்றுமாக இருத்தல் நல்லதல்ல. தன் உண்மையைத் தானே அறிந்திருத்தல் அவசியம். தான் எங்கே நிற்கிறோம் என்பது புரிந்திருக்க வேண்டும்.
அதை நியாயமாய் எவன் உணர்கிறானோ அவனே தன் பயணத்தை திடமாய்த் தொடர முடியும். புற வாழ்க்கைச் சிக்கல்கள் அவனைக் கட்டிப் போடாமல் இருந்தால். அம்மாதிரித் தன் எழுத்து வன்மையை உணர்ந்து நகர்ந்த படைப்பாளிகள் மிகச் சிலர்தான். அவர்கள் அவர்களிடத்தில் ஆணித்தரமாய் நின்றார்கள்.
அவர்களைத் தேடி வருபவர்கள் வந்தார்கள்.
இப்படி ஒருவர் வீர்யமாய்த் தொடர்ந்து எழுதுகிறாரே…அவரைப் பார்க்க வேண்டுமே….என்று அறிந்து பாராட்டி…நீங்கள் நம் இதழில் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொன்னார் அந்தப் பிரபல வார இதழின் ஆசிரியர். அந்த மாதிரி ஒரு கௌரவம் கிடைக்க வேண்டும் படைப்பாளிக்கு.
அப்படியொரு ஆணித்தரமான எழுத்து வன்மை அமைய வேண்டும். எடுத்துக் கொண்ட கருவை முதலில் தான் உள்வாங்கி, அசை போட்டு, தெளிவு பெற்று –கையில் பேனாவை எடுத்தால்தான், சொல்ல வந்ததை, சொல்ல நினைத்ததை பிறத்தியாருக்கும் தெளிவாகச் சொல்ல முடியும். தனக்கே புரியாமல் எழுதப் புகுந்தால், என்ன சொல்றான் இந்தாளு? என்று சுலபமாய் நகர்ந்து விடும்-ஒதுக்கி விடும் அபாயம் நிறைய உண்டு.
இவர் ஒரு போதும் அப்படியிருந்ததில்லை. ஆணித்தரமாய் சொல்கிறேன்-கேட்டுக்கோ – என்று எழுதியவர். பொட்டில் அறைந்ததுபோல் படீர் படீரென்று முன் வைத்தவர். அவனவன் பக்கம் அவனவன் நியாயம் என்பது உண்மையானால், அதை அவரவர் நிலையில் வாதிட்டு வெற்றி கண்டவர்.
அழுத்தம் திருத்தமான எழுத்து என்று சொல்வது வெறும் வாய் வார்த்தையல்ல. இவரின் படைப்பில் கல்வெட்டுப் போல் பதிந்து , அதுதான். இவர மாதிரி இவர்தான். இவர் மட்டும்தான்.அதுதான் வித்தியாசமான, தனித்துவமான எழுத்து. மிகக் குறைவாக இருந்தாலும் காலத்துக்கும் பேசப்படும் எழுத்து.
“மனச் சாய்வு” என்ற கதையாடலுக்கு இவ்வளவு முகமன் சொல்லி ஆரம்பித்தால்தான் அந்தப் படைப்பாளிக்குப் பெருமை. திறமை மிகுந்தவர்களைக் கொண்டாடும் மனம் வேண்டும். நாம் செய்யாததை, செய்ய நினைத்து ஆகாததை, இவர் செய்து விட்டார்…எப்படியோ பதிவாகிவிட்டது எழுத்துலகில். அந்தவகையில் திருப்தியோடு நிறைவு கொள்ள வேண்டும். அந்த மேம்பட்ட மனநிலையில் இந்தக் கதையாடல்:-
ஒரு கதையைப் படிப்பதும், ஆழ்ந்து ரசிப்பதும் பெரிதல்ல. அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது எவ்வாறு முன் வைக்கிறோம் என்பதே முக்கியம். படைப்பாளி எழுதியதுபோலவே சொல்லி விடுவது சரியா? எதை மையப்படுத்தி அந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அந்தக் குறிப்பிட்ட கருத்தை அங்கங்கே எப்படியெப்படித் தொட்டுச் செல்கிறார் என்பதை ஊன்றிக் கவனித்து, அப்படியான நகர்த்தல் மூலம் சொல்ல வந்த கருத்து எவ்வாறு பலம் பெறுகிறது எப்படித் தன்னை முகிழ்த்துக் கொள்கிறது என்பதை வாசக மனத்தில் ஆழப் பதியும்படி நிலை நிறுத்துவதுதான் கதை சொல்லியின் தலையாய பணி.
சிதம்பரநாதன் அந்தப் பெண்ணைக் கூர்ந்து கவனித்தார். பெண் மூக்கும் முழியுமாக இருக்கிறாளே தவிர குறிப்பிட்ட ஜாதியாக எந்த முத்திரையும் இல்லை.
கோவிச்சுக்காதேம்மா. இவன் அப்பாவோட பேசுறதுக்காக ஒரு புள்ளி விவரம் தேவைப்படுது. உங்க ஜாதி பெயர் என்ன?
அந்தப் பெண் பட்டென்று அழுத்தம் திருத்தமாக பொட்டில் அடித்தாற்போல் சொன்னாள்:-“பறையர்”
அப்பா தங்கள் காதல் கல்யாணத்துக்கு தடை சொல்றார் என்று ராஜசேகரன் சொல்ல, என்ன பிரச்னை என்று இவர் கேட்க ஜாதி என்று ஒரே வார்த்தையில் அவன் சொன்னது இப்போது சுரீரென்றது இவருக்கு.
ஒரு கணம் திகைக்கிறார். மறுகணம் சபாஷ் என்கிறது மனம். எத்தனையோ தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பதவியினால், பொருளாதார மேம்பாட்டினால் மேலே வந்த பிறகு தங்கள் ஜாதியைப் பற்றிச் சொல்லக் கூச்சப்படுகிறார்கள். அல்லது மெதுவாய்ச் சொல்கிறார்கள். மறைக்கிறார்கள்.
மெல்லிய தொனியில் உறரிஜன் அல்லது எஸ்.ஸி., என்று சொல்லக் கேட்டிருக்கிறார். இவள் பரவாயில்லையே…பட்டென்று சொல்கிறாளே….இந்த அமைப்பை உடைத்து நொறுக்குகிறவரை எங்கள் கோபாக்னி தணியாது என்று இப்படி உரத்துச் சொல்கிறாளோ…? ஒருவகையில் இது சவாலும் கூட….
சரி…சேகர்…உங்கப்பாட்டப் பேசறேன்…..
தாங்க்யூ பெரியப்பா…..
நீ போய் நீபாட்டுக்கு உன் வேலைகளைப் பார்த்திட்டு இரு…பிரச்னையை ஆரம்பிக்காதே…அவுங்க ஆரம்பிச்சாலும்…பெரியப்பா வர்றாருன்னு சொல்லிடு….
ஒரு பிரச்னைக்கு எத்தனையோ கோணங்கள் உண்டே…!
எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோணங்கள்.ரேகை சாஸ்திரம் சொல்வது போல் ஒருவனுடைய கைரேகை போல் வேறொரு கைரேகை இருக்கவே இருக்காது. ஒரு கோடாவது மாறியிருக்கும். கூட இருக்கும்….குறைய இருக்கும்…இருந்தே தீரும்….பிரச்னை மனிதர்கள் இடையேயும் இப்படித்தான்.
தன் வீட்டுக்குப் போன ராஜசேகரன் பெரியப்பா சொல்படியே அமைதி காக்கிறான். ஆனால் வீட்டில் பாட்டி என்று ஒருத்தி இருக்கிறாளே…பெரியப்பா வரும்முன் காரியம் மிஞ்சி விடுகிறது. பாட்டிகள் பிரச்னைகளின் மேல் விவாதங்களை வைப்பவர்கள்.
தாங்கள் இதுகாறும் தலையில் சுமந்தவைகளை, பிறர்பால் ஏற்றி வைக்க நினைப்பவர்கள். தங்களது சென்ற காலத்தை நியாயப்படுத்திப் பேசுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே சந்தோஷம்.
நான் சொல்றனேன்னு கோவிச்சுக்காதடா ராஜா….உலகத்துல படிச்சவன்தாண்டா முட்டாள்….
ஆமாம் பாட்டி…..
என்ன ஓமாம்….இல்லாட்டி உன் புத்தி ஏன் இப்டிப் போகுது?
இருமல் எப்டியிருக்கு பாட்டி…?
ஒரு மட்டா தூக்கிட்டுப் போகாமக் கெடக்கு….இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்காமப் போய்ச் சேரலாமே…?
மணப்பாற முறுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன் பாட்டி…அம்மாட்ட கேட்டு ஒரு பத்து வாங்கிக்க…..
தங்கை சாந்தா சிரிக்க… அம்மா பிரவேசிக்கிறாள்.
வாயை மூடுடி…அவன் திமிர்தண்டமாப் பேசுறான்…இவ சிரிக்கிறா…..அவன் செய்ற வேலைனால நாளைக்கு உனக்கு என்ன ஆவும்னு தெரியுமா? தெரிஞ்சா சிரிப்பு வருமா….? ஒனக்காகத்தாண்டி எங்க அடி வயிறு கலங்குது….ஒரு கீழ் ஜாதியக் கட்டினவன் வீட்டுல எவன்டி வந்து பொண்ணு கேப்பான்….
ஏன் அவளுக்கும் அந்த ஜாதியிலேயே மாப்ள தேடுவான்… - இது பாட்டி.
பாத்தா போச்சு பாட்டி…..
விளக்கமாத்தால அடிப்பேன் நாயி…வாயை மூடுடா…..
சரி…இவர்கள் கிடக்கட்டும். அசலான பிரச்னை அப்பாதான். அவர் என்ன சொல்லப் போகிறார்?
அப்பா வந்தாச்சு…. – தங்கை சாந்தா.
அப்பாவோடு இந்த விவாதம் எப்படிப் போகும் என்பதை எவராலும் யூகிக்க முடியாது. யூகித்தாலும் எழுதியவர் எவரும் கிடையாது. எந்த இடத்தில் நெருடல் என்பதை எவரும் தெளிவுறப் பகன்றது கிடையாது.
எப்படியானாலும் ஏற்றுக் கொள்வது கடினம் என்றுதான் பிரச்னைகள் பயணித்திருக்கின்றன.ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுண்டு….அதுதான் ஜாதிப்புத்தி…..அது எல்லோருக்கும் உண்டு. அங்கும் உண்டு…இங்கும் உண்டு. எங்கும் உண்டு என்பதனால்தானே பிரச்னையே…!
எப்போ வந்தே…?
கொஞ்சம் முன்னாடிதாம்ப்பா…….
நீ மட்டும்தான் வந்தியா…?
ராஜசேகரன் அப்பாவை அமைதியாய்ப் பார்க்கிறான்.
இல்ல…உன் வருங்கால மனைவியையும் கூட்டிட்டுத்தான் வந்திருக்கியான்னு கேட்டேன்…
கோபத்தை அடக்கி வாசிக்கிறாரோ…தாக்குதலை ஆரம்பத்திலேயே கடுமையாக்கும் யுக்தி.
நீங்க இப்டி வரவேற்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா கூட்டியாந்திருப்பேன்….
ஒரு விஷயம் ஒரு குடும்பத்தில் எப்படி வெடிக்கும்….பெரியோர்கள் மத்தியில் அது எப்படி விகசிக்கும்…படிப்படியாக எப்படி வளரும்….?
காட்சிப்படுத்தல் என்பது என்ன அத்தனை சுலபமா? இயல்பான தன்மையிலே பிரச்னையை மையமாக வைத்து படிப்படியாக அது தன் முதிர்ச்சியை நோக்கி நகர்தல் அல்லது நகர்த்துதல்-இதில்தான் படைப்பாளியின் எழுத்துத்திறனே அடங்கியிருக்கிறது.
என்னடா சொன்னே…? என்று மகனைப் பார்த்துத் திரும்பி முறைக்கிறார் நாகசுந்தரம்.
என்னங்க இது…வந்ததும் வராததுமா? – அம்மா இடையே பாய்கிறாள். எல்லாம் நீங்க செஞ்ச வேலைதான். நீங்க சீர்திருத்தம்…சீர்திருத்தம்னு பேசினீங்க…அவன் செஞ்சுட்டான்….இப்ப மொறச்சு என்ன பண்ண? – அம்மா பேசுவதை மகன் பிடித்துக் கொள்கிறான்.
நீங்க ஒரு போலின்னா எங்களுக்கும் அதையே சொல்லிக் கொடுத்திருக்கணும்…
என்னடா போலி?
ஜாதி இல்லே…மதம் இல்லேன்னு நாள் பூரா பேசுறது….கலப்புக் கல்யாணம்தான் அசல்னு சொல்றது. தனக்குன்னு வந்தா மட்டும் சீறுறது…..
காலம் பூராவும் புதிய சித்தாந்தம் பேசியவர் விட்டுக் கொடுப்பாரா என்ன…? நாகசுந்தரம் ஒன்றும் அத்தனை மசிந்தவரில்லை.
இப்பவும் அதையேதாண்டா சொல்றேன். கலப்புக் கல்யாணம் செய்யலாம்தான். ஆனா கலாச்சார மோதல் இல்லாம செய்யணும்…
ராஜசேகரன் யோசிக்கறான். இதென்ன புதுசா ஒண்ணு சொல்றாரு…இதுநாள்வரை இதச் சொன்னதில்லையே….! புது சிந்தனையா…? அல்லது புது சாக்கா….?
வெங்காயம்….ஒரு ஜாதி சைவமா இருக்கு. இன்னொண்ணு அசைவமாயிருக்கு. ஒருத்தன் சாராயத்த சொர்க்கம்ங்கிறான். இன்னொருத்தன் அதைப் பாவம்ங்கிறான். நியாய அநியாயம் ஒரு பக்கம் கெடக்கட்டும்….ஒரு ஜாதி அன் கல்ச்சர்டா இருக்கு…
இன்னொன்ணு பெரும்பாலும் எல்லாரும் படிச்ச கல்ச்சர்டா இருக்கு…நாம் அவங்களுக்கு என்ன சாம்பார் வைக்கிறது? அவுங்க நமக்கு என்ன கொழம்பு வைப்பாங்க…? அவுங்க சொந்தக்காரங்க நாலு பேரு நாளைக்கி கன்னங்கரேல்னு மேல் சட்டையில்லாம> நம்ம நடு வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்தா பொருத்தமாயிருககுமா?
சோபாவுல கால் வச்சி குந்திக்கி்ட்டு வெத்தில எச்சியை எங்க துப்புறதுன்னு தெரியாம முழிச்சா எப்படியிருக்கும்? அட அதுதான் போகட்டும்…சமயல் கட்டுல சம்பந்தி அம்மாக்கள் என்னா பேசிக்கிறது? கலப்புத் திருமணம் நடக்கட்டும்…முதல்ல அது ஒரே கலாச்சார எல்லைக்குள்ள இருக்க ஜாதிக்குள்ள நடக்கட்டும்…..
ராஜசேகரன் நினைக்கிறான்.
இந்தியாவில் ஜாதிப் பகைமை பெருமளவு மறைந்து விட்டாலும், திருமணக் கலப்பில் இன்னும் பிரிந்துதான் கிடக்கிறது.
கலாச்சாரம் ஒண்ணுதான் உங்க பிரச்னைன்னா இந்த விஷயம் சுலபமா முடிஞ்சி போகும்ப்பா….அவுங்க நம்மள விட மேம்பட்டவங்க…அவங்க தாத்தா ஸ்சூல் தலைமையாசிரியர். அப்பா தாசில்தார். அண்ணன் ஆர்மில கேப்டன்…அக்காவும் ஒரு டாக்டர்…அமெரிக்காவுல…அவுங்க யாரும் நம்ம வீட்டு சோபாவுல உட்கார்ந்துக்கிட்டு வெத்தல எச்சிய எங்க துப்புறதுன்னு முழிக்க மாட்டாங்க….
நாகசுந்தரம் விதிர்த்துப் போகிறார். குடும்பமே அவரைப் பார்க்கிறது. என்ன சொல்லப் போகிறார்?
ஆடிப் போகிறார் நாகசுந்தரம். தோற்றுப் போய்விட்டோமோ?
சட்டென எழுந்து வேகமாகவும் வெறுப்பாகவும் சொல்கிறார்.
அதெல்லாம் சும்மாடா….என்னதான் ஆனாலும் ஜாதிப்புத்தின்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யும்…- விருட்டென்று இடத்தைக் காலி பண்ணுகிறார்.
ராஜசேகரன் எழுந்து குளியலறைக்குப் போகிறான். பெரியப்பாவுக்குத் தந்தி கொடுக்கணும். நினைத்துக் கொள்கிறான். வரவேண்டாம்…திருமணம் நிச்சயமாகிவிட்டதென்று.
அகரமுதல்வன் சொல்கிறார்….மானுட இருட்டிலிருந்து சம்பவங்களைப் பொறுக்கியெடுத்து எல்லைகளற்ற மேன்மையான வெளிச்சத் தோற்றத்துக்கு அழைத்துப்போகும் சிறப்பம்சம்தோடு எண்ண எழுச்சி மிக்க படைப்பாளி ஜெயந்தன்.
கதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடிய ஒரு தனி உலகம். இது ஓரான் பாமுக். ஜெயந்தனின் தேர்ந்தெடுத்த இந்தச் சிறுகதைத் தொகுப்பு….இந்தத் தனிச் சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.
-------------------------------------

03 மே 2026

30 ஏப்ரல் 2026

 சிறுகதை

“கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு”-தாய் வீடு - மே 2026  இதழ்





சார்…தபால் திரும்பி வந்திருக்கு …..-ஒரு வணக்கம் போட்டு சொல்லிக் கொண்டு வந்த போஸ்ட்மேனை நிமிர்ந்து பார்த்தார் கனகமணி. 

நீட்டிய தாளில் கையொப்பமிட, பியூன் செல்லச்சாமி வந்து சீல் வைத்து திருப்பிக் கொடுத்தார். .

தபாலை நிதானமாக சிசர் வைத்து நுனியில் கட் பண்ணினார். உள்ளே இருந்த  தாளை எடுத்தார். ஒரு மெல்லிய பதற்றம் அவரிடம் பரவியிருந்ததை உணர்ந்தார். 

எழுத்தர் அவிநாசிக்கு  அனுப்பிய முக்கியக் கடிதம்தான் திரும்பியிருந்தது.  அனுப்பிச்சதே திரும்பிடுச்சா? 

தேர்தல் பணிக்கு  அவரை நியமனம் செய்திருந்த ஆணை குறித்து தகவல் தெரிவித்திருந்த கடிதம் அது. உடனடியாக வரச்சொல்லி.  அன்று புதன் கிழமை.  முதல் வாரம் வெள்ளிக்கிழமை அனுப்பியிருந்த கடிதம். சனிக்கிழமை கொடுத்திருக்கலாம். அல்லது திங்கட்கிழமை டெலிவரி செய்யப்பட்டிருக்கலாம். அப்படி டெலிவரி செய்யும்போது வாங்க மறுத்து திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறது. அதானே? வாங்கிப் பார்ப்பதில் என்ன சங்கடம் வந்துவிடப் போகிறது? 

ஆள் வரும்முன்னே அனுப்பிய கடிதம் திரும்ப வந்து விட்டது. தேர்தல் பணி ஏற்றே ஆக வேண்டும், மறுத்தல் கூடாது என்கிற நோக்கில் ஒப்புதல் அட்டையோடு பதிவஞ்சலில் அனுப்பப்பட்ட தபால் திரும்பியிருக்கிறது. 

. வெளியூரில் இருக்கும் ஆள் ஒருவேளை வராமலே போய்விட்டால்? தேர்தல் பணியை மறுக்க முடியாதே…? பணி ஆணை தன்னிடம் இருப்பதை டிராயரைத் திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டார்.

சொல்லப்போனால் இம்மாதிரித் தபால்களை நேரடியாக வழங்கி, கையொப்பம் பெற வேண்டும். அதுதான் முறை. நடைமுறையே அதுதான். ஆள் வெளியூரில் இருந்ததால் அவசரம் பார்த்து வந்து சேர வேண்டும் என்று  தகவல் தெரிவிக்கப்பட்டது. ஃபோனில் பிடிக்க முடியவில்லையே? அப்படியும் தபால் திரும்பியிருக்கிறது. ஆளில்லையா? வாங்கவில்லையா? வெவ்வேறாக முயற்சித்தும் பலனில்லை.

வந்த தபாலைத் திருப்பித் திருப்பிக் கவனமாய்ப் பார்த்தார் கனகமணி. இவங்களோட பெரிய்ய்ய்ய தொல்லையப்பா….!.  …Door locked …என்று மூலையில் கிறுக்கப்பட்டிருந்தது.

இன்று புதன் கிழமை.  பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும். நேற்றோடு விடுப்பு முடிந்தது. அவநாசி வரவில்லை. ஒரு வேளை தேர்தல் பணிக்குப் பயந்து கொண்டு விடுப்பை நீட்டிப்பாரோ? சந்தேகம் வந்தது. அப்படி ஆளும் இல்லையே? 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை எடுத்துக் கொண்டு டெலிவரி செய்ய வந்த பணியாளர் இன்று மீண்டும் வரக்கூடும். எல்லாத் தபால்களும் எல்லாருக்கும் டெலிவரி செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய. என்ன பதில் சொல்வது?

தேர்தல் பணியை மறுப்பது கூடாது. மறுக்கும் பணியாளர் மீது நடவடிக்கை உண்டு. 

யோசித்தவாறே அமர்ந்திருந்தார் கனகமணி.   வேறு வேலை ஓடவில்லை. எதிரே இருந்த எழுத்தர்கள், தட்டச்சர்களின் இருக்கைகள் காலியாயிருந்தன. அனைத்துப் பேரும் தேர்தல் பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் போடப்பட்டிருந்தது. டவுனுக்குள்ளேயும், சற்று ஒதுக்குப் புறமாகவும்….வகுப்பு அரை நாளில் முடிந்து விடும்தான்.   மதியம் ஆபீஸ் வந்து விட வேண்டும். ஆனால் யாரும் வருவதில்லை்.  வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வருவதானாலும் இரண்டரை, மூன்றுக்குள் வந்துவிடலாம்தான். போனால் போனதுதான். குறைந்தது நான்கு வகுப்புகளாவது இருக்கும். போகும் இடத்தில் எப்போது வகுப்பு ஆரம்பிக்கும், எப்போது முடியும் என்றும் சொல்ல முடியாது. வகுப்பு எடுப்பவர் கொஞ்சம் முன்னே பின்னே வந்தால் நேரம் ஆகத்தானே செய்யும்? அதனால் பணியாளர் ஏன் மதியம் ஆபீஸ் வரவில்லை என்று யாரையும் கேட்கவும் முடியாது. கேட்டும் பயனில்லை. கொடுத்த ஆணைப்படி ஒழுங்காகத் தேர்தல் பணியைச் செய்து முடிக்கட்டும் அதுவே போதுமானது என்று தோன்றிவிடும். இல்லையென்றால் அலுவலருக்குக் கெட்ட பெயர். அவருக்குக் காரணங்கள் கேட்கப்படும். 

எனவே மதியம் ஆபீஸ் வருவதைப்பற்றி பொதுவாய் யாரும் பொருட்படுத்துவதில்லை. அது அந்தந்த ஆபீஸ் சம்பந்தப்பட்ட, அங்குள்ள அலுவலகம் சம்பந்தப்பட்ட நடைமுறை விஷயங்கள். 

கனகமணிக்கு மதியம் இரண்டு மணிக்கு மேல் தேர்தல் வகுப்பு. பகல் அரைநாள் ஆபீஸ் போய் இருக்கும் வேலைகளை முடித்து விடுவோம் என்று வந்திருந்தார் அவர். குறிப்பாய் அவர் மனதிலிருந்த விஷயம் இதுதான். அவிநாசி தபால் பெற்றாரா இல்லையா? 

சந்தேகப்பட்டதுபோலவே ஆகிப் போனது. 

எதற்காக தேர்தல் பணியை ஏற்க மறுக்கிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்? அங்கென்ன அடிக்கிறார்களா, பிடிக்கிறார்கள்? அப்படியென்ன அறிவில் ஏறாத விஷயமா அது? எவ்வளவு எளிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? ஒருவர் பெயர் படிக்க இன்னொருவர் பட்டியலில் அன்னாரின் பெயரும் படமும் இருப்பதை உறுதி செய்து கொண்டு கையொப்பம் பெற, மூன்றாவது நபர் இடது கை ஆள்காட்டி விரலை நீட்டச் சொல்லி நகத்திற்கும் சதைப் பகுதிக்கும் குறுக்கே சமமாய் விழுவது போல் மையைத் தடவி அனுப்ப வேண்டியதுதான்.  இதில் இந்த மை வைக்கும் வேலைக்குக் கூடப் பயந்தால் எப்படி? 

முதல் நாள் மாலையே எங்கு பணி செய்ய ஆணையிடப்பட்டிருக்கிறதோ அந்தப் பள்ளிக்கு அல்லது இடத்திற்குச் சென்று விட வேண்டும். ஒரு இரவு மட்டும்  அங்கேயே தங்கி உண்டு உறங்கி எழுந்து மறுநாள் காலை தயாராக வேண்டும். இதற்கென்ன சுணக்கம்? இதிலென்ன பயம்? புதுஇடத்தில் ஓர் இரவு படுத்திருந்தால்  தொலைந்து போவோமா? அப்படியே சரியான தூக்கம் இல்லையென்றாலும்தான் என்ன? நாட்டின் பணிக்காக ஓர் இரவு தூக்கம் முழிக்கக் கூடாதா?  குடி முழுகி விடுமா? ஒரு குறிப்பிட்ட சூழலுக்கே உடம்பு பழகி விட்டதால் புதிதாய் எதைச் சொன்னாலும் ஏற்க மறுக்கும் அல்லது பயப்படும் மனது. அவசியம் சொல்லி மனதை மாற்றியாக வேண்டும். உற்சாகமாகக் காத்திருக்கும் பணியாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? 

வேண்டாம் சார்…ஏதாச்சும் தகராறு…அடிதடி வரும்…எதுக்குப் பிரச்னை? எனக்கு எலெக் ஷன் டியூட்டி வேண்டாம் சார்…. – கணக்குப் பிரிவு எழுத்தர் முனியம்மா இப்படிச் சொன்னது நினைவுக்கு வந்தது கனகமணிக்கு.

அப்படியெல்லாம் நினைச்சு பயப்பட வேண்டியதில்ல…எதுவும் நடக்காது. எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணியிருப்பாங்க…பாதுகாப்புக்குப் போலீஸ் காவல் போட்டிருப்பாங்க… தேர்தல் பணியை வேண்டாம்னு சொல்ல முடியாது…செய்தே ஆகணும். அது நம்மளோட கடமை…புரிஞ்சிக்குங்க…

சரி சார்…நீங்க சொல்றீங்களேன்னுதான் சம்மதிக்கிறேன். எங்க வீட்டுக்காரரு வேண்டாம்னு சொல்றாரு…வாங்காதங்கிறாரு…..அப்புறம் நான் என்ன சார் பண்றது? நாளைக்கு ஏதாச்சும் பூத்ல கலாட்டா கிலாட்டா அடிதடின்னு நடந்திச்சின்னா…காயம் பட்டுப் போச்சின்னா…யார் சார் பொறுப்பாறது? நீங்களா வருவீங்க….? 

இது எனக்காக வர்றதில்லம்மா…நல்லாப் புரிஞ்சிக்குங்க…நான் சொல்றதுனால நீங்க ஏத்துக்க வேண்டாம். சொல்ல வேண்டியது என் கடமை…அதனால சொன்னேன். இது கலெக்டர் ஆர்டர்..இல்லன்னா உங்க பேர்ல ஆக் ஷன் எடுப்பாங்க…பரவால்லியா? மெமோ கொடுப்பாங்க…ஏன் தேர்தல் பணியை ஏத்துக்கலைன்னு காரணம் கேட்பாங்க….அலைய வேண்டியிருக்கும்… அதுக்கு கமுக்கமா ஏத்துக்கிட்டு செய்துட்டு வந்துடறதே பெட்டர். நான் உங்களுக்கு நல்லதத்தான் சொல்லுவேன்…நம்புங்க…நம்மள மாதிரி ஊழியர்களை நம்பித்தாம்மா எலெக் ஷனே நடக்குது…நாம செய்யாம வேறே யாரு செய்வாங்க…மகிழ்ச்சியா ஏத்துக்கிட்டுப் போயிட்டு வருவீங்களா? எதை எதையோ சொல்லிப் புலம்புறீங்களே? செய்த வேலைக்குப் பணமும் கொடுக்கிறாங்கல்ல…இந்தியா முழுக்க இது நடக்குது? உங்கள மாதிரி அங்கங்க இருக்கிறவங்க உனக்கு வேண்டாம்…எனக்கு வேண்டாம்னு சொன்னா அப்புறம் யாரை நம்பிம்மா தேர்தல நடத்தும் அரசாங்கம்…? 

கவர்ன்மென்ட் சர்வன்டா இருக்கோம்….தேர்தல் கமிஷன் அரசாங்க மெஷினரிய நம்பித் தேர்தலை நடத்துறாங்க…நம்பள நம்பித்தான் முறையாத் திட்டமிட்டு இந்த வேலைல இறங்குறாங்க…செய்து கொடுக்க வேண்டியது நம்ப கடமையில்லையா? அத விட வேறே வேலை என்ன நமக்கு? சந்தோஷமா ஏத்துக்கிட்டுப் போயிட்டு வர வேண்டாமா? இப்டியா சீக்குப் பிடிச்ச கோழி மாதிரிச் சுணங்குறது? தப்பும்மா….ரொம்பத் தப்பு….முதல்ல கையெழுத்துப் போட்டு எலெக் ஷன் டியூட்டி ஆர்டரைக் கும்பிட்டுக் கைல வாங்குங்க…

கலெக்டர் ஆபீஸிலிருந்து வந்திருந்த அதிகாரி முன்னேயே இப்படி ஒரு நீண்ட லெக்சர் கொடுத்து அவரவர் ஆணைகளை வாங்கச் செய்தார் கனகமணி. தன்னால் கூட இப்படி விளக்கிச் சொல்ல முடியாது என்று அகமகிழ்ந்து தேர்தல் பணி ஆணைகளை வழங்கிவிட்டுப் போனார் அந்த அதிகாரி. போகும்போது மட்டும் ஒன்று சொன்னார்….

மலைப் பகுதிக்கெல்லாம் தேர்தல் வேலைக்குப் போறாங்கம்மா…தெரியுமா? கழுதை முதுகுல, குதிரை மேலே…எல்லாச் சாமான்களையும் ஏத்திட்டு, மொத நா ராத்திரியே போய் கெதம் கெதம்னு கிடக்காங்க….அவுங்களும் நம்மள மாதிரி கவர்ன்மென்ட் சர்வன்ட்கள்தான்…மனுசங்கதான்….கொஞ்சம் எல்லாத்தையும் நினைச்சுப்பாருங்க….

முனியம்மா பயந்தது என்னவோ ஓரளவு நியாயம்தான் என்றும் தோன்றியது கனகமணிக்கு. ஏனென்றால் அவருக்கே அப்படியான ஒரு அனுபவம் உண்டு. மானேஜர் ஆவதற்கு முன் இருபதாண்டு காலம் உதவியாளராகப் பணி புரிந்த காலங்களில் மூன்று நான்கு தேர்தல் பணிகளுக்குச் சென்றுள்ளார் கனகமணி. அப்படிச் சென்ற ஒரு இடத்தில் பெரிய கலாட்டாவே நடந்து போனது என்பதுதான் உண்மை. கும்பலாக வந்து தேர்தல் நடக்கும் பூத்தை நோக்கி கற்களை விட்டெறிந்து, உள்ளே புகுந்து இருந்த ஆட்களையெல்லாம் விரட்டி அடித்து மேஜை நாற்காலிகளை உடைத்து,  தேர்தல் ஆவணங்களைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டு, பிறகு மிலிட்டரி போலீஸ் வந்து அவர்களை விரட்டி விரட்டிப் பிடித்த கதையும் காட்சியும் இப்போதும் அவர் மனதில் அழியாது நிலைபெற்ற ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறதுதான். 

எங்கோ என்றோ ஒன்றிரண்டு நடந்து விட்டது என்பதற்காக தேர்தல் பணிக்கே செல்ல மாட்டேன் என்று சொல்வது என்ன நியாயம்? அப்படி மறுப்பது மனசாட்சிப்படி நியாயமாகுமா? நாமெல்லாம் ஒன்று சேர்ந்துதானே தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டும்? அது நம் அத்யந்தக் கடமையில்லையா? ஓட்டுப்போடுவது எப்படி மக்களின் ஜனநாயகக் கடமையோ அதுபோல தேர்தல் பணிக்கும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் உற்சாகமாய் அந்தக் கடமையை நிறைவேற்றுவது இந்த நாட்டின் பிரஜையாகிய நமது கடமையும் ஆகிறதுதானே? 

பெரும்பாலும் யாரும் வாங்க மாட்டாங்க சார்…அந்தந்த ஆபீஸ் சூப்பிரன்ட், மானேஜர்னுதான் நாங்க கொடுத்திடுவோம். அவரோட பொறுப்பு அதை அவரவருக்கு விநியோகிப்பதும், ஏற்றுக் கொள்ளச் செய்வதும்….இப்டி ஒவ்வொரு ஆபீசா நாங்களே உட்கார்ந்து கொடுத்துக் கையெழுத்து வாங்கிட்டிருந்தோம்னா எங்களுக்கு வேலை முடியாது சார்…ஒவ்வொரு ஆபீஸ்லயும் பாதிக்குப் பாதிதான் விரும்பி வாங்குறாங்களேயொழிய எல்லாரும் சந்தோஷமா ஏத்துக்கிறதில்ல …பயப்படுறாங்க…அதான் ஏன்னு தெரில…? அப்படியென்ன கஜகர்ண வித்தையா இந்த வேலை? அதான் நாலஞ்சு வகுப்பு எடுக்கிறாங்களே…அதுலயே எல்லாமும் நல்லாத் தெரிஞ்சி போயிடுமே…? பிறகென்ன சார் தயக்கம்? நம்ம ஊழியர்களை நிறையப் பேர்களை மாத்தவே முடியாது சார்…இப்டி சோம்பின மனநிலைல இருக்கிற பலரை உசுப்பிவிட்டு உசுப்பி விட்டுத்தான் ஆள் சேர்த்து இந்தத் தேர்தலை நடத்தி முடிச்சாக வேண்டியிருக்கு….இதாச்சும் பரவால்ல….தேர்தல் அன்னைக்கு வராம இருந்த ஆட்களும் உண்டு…அது தெரியுமா? ஒருத்தரே ரெண்டு பேர் வேலையைப் பார்க்க வேண்டிய நிலமையும் வந்திருக்கு. அதையும் அவுங்களேதான் திறமையாச் செய்றாங்க…பொறுப்பான ஊழியர்கள்தான். ஆனா அங்கங்கே சுணக்கமும் உண்டுதான். எல்லாத்தையும்தான் சார் சமாளிச்சிக்கிட்டிருக்கோம்…. – ஆணைகளை வழங்க வந்து போன அதிகாரி குறைபட்டுக் கொண்ட ஆதங்கம் இது. 

திரும்பி வந்த தபாலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் கனகமணி. என்ன செய்யலாம் என்கிற யோசனை அவர் மனதில் தீவிரமாக ஓடிக் கொண்டிருந்தது. 

அவிநாசி வேலைக்கு வரவில்லை. விடுப்பு நீட்டித்து விண்ணப்பமும் வரவில்லை. கதவு பூட்டப்பட்டிருக்கிறது என்று எழுதி தபால் திரும்பி வந்திருக்கிறது. ஆளை எங்கே போய்த் தேடுவது? ஒரு வேளை தபால் இன்று அலுவலகத்திற்குத் திரும்பக் கிடைத்து விடும் என்று தெரிந்து…ஒரு நாள் விட்டுத் தாமதமாக அலுவலகம் செல்வோம் என்றிருப்பாரோ? தேர்தல் பணி என்றால் வந்துவீடும் ஆள்தானே? அதில் கிடைக்கும் சன்மானம் அவருக்கான குடும்பத் தேவையாயிற்றே? வேறென்ன அவசரமோ?  நீட்டித்த ஒரு நாளைக்கு ஆபீஸ் போய் விடுப்பு எழுதிக் கொடுத்துக் கொள்வோம் என்று  முடிவு செய்து மௌனம் சாதிக்கிறாரோ? 

ஏற்கனவே அடிக்கடி பொய்க் காரணங்கள் சொல்லி விடுப்பு எடுக்கும் ஆசாமி. தாத்தா இறந்துட்டார்…பெரியப்பா போயிட்டார்….(எத்தனை முறை இறந்தார்களோ!)  என்று. வேறு ஏதேனும் வியாபாரம் செய்கிறாரோ என்றெல்லாம் கூடச் சந்தேகம் வந்தது இவருக்கு. வெளியூர் ஆசாமி. தினமும் வந்து செல்பவர். இதையெல்லாம் போய் உளவறிந்து கொண்டிருக்க முடியுமா? அதுவா வேலை? அவராய்ச் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம். 

எதற்கு இத்தனை யோசனை? இப்போது இந்த உத்தரவை யாருக்காவது கொடுத்தாக வேண்டும். அதற்கு பெயர் மாற்றி எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஒரு பணியாளைப் பிடிக்க வேண்டும். யோசித்து யோசித்து மண்டைதான் குழம்பியது கனகமணிக்கு. 

திடீரென்று ஏதோ தோன்ற அவநாசிக்கான தேர்தல் பணி ஆணையினைத் திரும்பவும் எடுத்துப் புரட்டினார்.  அவருக்கும் தான் செல்லும்  பள்ளியில்தான் முதல் தேர்தல் வகுப்பு என்பது தெரிந்தது.  சரி என்று மனதில் ஒரு முடிவுக்கு வந்தார். மணியைப் பார்த்தார். பன்னிரெண்டு. கொண்டு வந்த டிபனை விலுக் விலுக்கென்று முழுங்கினார். அரை பாட்டில் தண்ணீரை உள்ளே செலுத்தினார். அலுவலரின் அறைக்குள் நுழைந்தார்.

ஆச்சு…நீங்களும் கிளம்பிட்டீங்களா? என்றார் அதிகாரி. 

ஆமா சார்…இப்போ போய் பஸ் பிடிச்சாத்தான் டயத்துக்கு எலெக் ஷன் கிளாசுக்குப் போய்ச் சேர முடியும்….அந்தப் பகுதிக்கு அடிக்கடி பஸ் வேறே வராது. மேலூர் போற பஸ்ல த்ரூ டிக்கெட்தான் போடுவான்…இடைல நிக்க மாட்டான்…அந்த ஊர் வண்டி  அடிக்கடி வராது. காத்திருந்துதான் ஏறணும்….

சரி…சரி…கிளம்புங்க…கேஷ் செஸ்ட்லாம் பூட்டிட்டீங்கல்ல…ஞாபகமா ஒரு தரம் இழுத்துப் பார்த்துட்டுப் போங்க…அப்போ இன்னைக்கு நாந்தான் இந்த ஆபீசுக்குக் காவல்…அப்படித்தானே…? 

பதில் சொல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றார் கனகமணி. 

பியூன் ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தராவது இருக்காங்களா? என்றார். இல்ல சார்…அவுங்களுக்கும்தான் டியூட்டி….

அவுங்களுக்குமா? என்னாது…மை வைக்கிற வேலயா…? 

ஆமா…சார்….பேரு படிச்சிக் கூட கையெழுத்து வாங்குவாங்க…நம்மள விட நல்லாவே செய்வாங்க…அதெல்லாம் டிரெயினிங் கொடுத்திடுவாங்கல்ல சார்….நாலு வகுப்பு எதுக்கு வைக்கிறாங்க…? 

ஓ.கே….வாட்ச்மேன் சரவணனை இங்க வந்து இருக்கச் சொல்லுங்க…பெல் அடிச்சா வர்றதுக்கு ஒரு ஆள் வேணும் எனக்கு…ஒரு டீ சாப்பிடணும்னாக் கூட ஆள் இல்லேன்னா எப்டி? 

வாசல்ல பிள்ளையார் கோயில்ல படுத்திருப்பான் சார்…சொல்லிட்டுப் போறேன்….! – சொல்லிக்கொண்டே வெளியேறினார் கனகமணி.

அரசமரப் பிள்ளையார் கோயில். வெக்கயே தெரியாது. குளு குளுன்னு இருக்கும்….தூங்குறதுக்குக் கேட்கணுமா? ஆளப் பத்தி விடுங்க…என்றார். 

அவிநாசிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணித் தபாலிலேயே அவரின் முழுக் கவனமும் குவிந்திருந்தது. எப்படியாவது தேர்தல் வகுப்பின்போது வந்திருக்கும் அதிகாரியிடம் விபரத்தைச் சொல்லி அந்தக் கூட்டத்தில் வேறு யாருக்கேனும் அவர்களது அலுவலகத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு அந்தப் பணியை வழங்கச் செய்ய வேண்டும். அங்கேயே அவநாசியின் பெயரை அடித்துவிட்டு புதிய பணியாளரின் பெயரை எழுதச் செய்து வழங்கியாக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார். அதுபோல் முன்னம் நடந்தது அவர் மனதில் நிலைத்திருந்தது.  அத்தோடு கலெக்டர் அலுவலகம் சென்று அவிநாசியின் பணி வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்கிற விபரத்தைச் சொல்லி மேற்கொண்டு அவருக்கு ஏதும் நடவடிக்கை வராமல் தடுக்கச் செய்ய வேண்டும். அதுவும் அவர் விருப்பமாய் இருந்தது. நம் பணியாளரை நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? எல்லாரையும்தான் சேஃப்கார்டு பண்ணனும்…

அதற்கு முதல் வேலையாக அவிநாசியை இன்னும் ஓரிரு நாட்கள் சேர்த்து விடுப்புக் கேட்டு மருத்துவச் சான்றிதழ் வாங்கி வரச் செய்ய வேண்டும். 

வேறென்ன செய்வது? தன்  அலுவலகப் பணியாளரைத் தான்தானே காப்பாற்ற வேண்டும்? சமய சந்தர்ப்பங்களில் சேர்த்து அணைத்துத்தானே கொண்டு போயாக வேண்டும்? அலுவலகத் தலைமைக்கு வேலை வாங்குவது மட்டும்தானா வேலை? அவர்களின் நலன்களில் அக்கறை கொள்வதும்தானே? 

முடிவு செய்து கொண்டு பஸ்ஸில் ஏறினார் கனகமணி. அவிநாசியின் தேர்தல் பணி ஆணையை இன்னொருவருக்கு எப்படியாவது ஒதுக்கீடு செய்து விட்டால்தான் தனக்கு நிம்மதி என்கிற தீவிர சிந்தனையே அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

சார்….வந்திட்டீங்களா….? உங்கள எதிர்பார்த்திட்டுத்தான் காத்துக் கிடக்கேன்….-சொல்லிக் கொண்டே எதிரே திடீரென்று  தோன்றிய  அவிநாசியைக் கண்டதும் பிரமித்துப் போனார் கனகமணி. 

என்னங்க இது…திடீர்னு கடவுள் மாதிரித் தோன்றி நிற்கிறீங்க…உடம்பு சௌகரியமாயிடுச்சா…? – என்று தனது சங்கடங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  கேட்டார் கனகமணி. 

ஆயிடுச்சு சார்…இன்னைக்கு டேரக்டா நீங்க க்ளாசுக்கு  வருவீங்கன்னு செல்லச்சாமிதான் எல்லா விபரமும் சொன்னாரு….அவரும் திருமங்கலம்தான சார்…என் தபால் கொண்டு வந்திருக்கீங்கல்ல சார்….? 

பின்னே?  உங்களுக்கு தகவல் அனுப்பிச்சதுதான்  திரும்பிடுச்சே…? யாருக்காவது சர்வ் பண்ணி ஆகணுமே…அதுக்காகத்தான் எடுத்திட்டு வந்திருக்கேன்…இல்லன்னா எம்பொழப்பு நாறிப் போகுமேங்க…கலெக்டருக்கு யாரு பதில் சொல்றது? ….கலெக்டர் நம்ம பாஸைக் கேள்வி கேட்பாங்களே….? அதுக்கு எடம் வைக்கலாமா? நம்ம ஆபீசுக்குத்தானே கெட்ட பேரு…? ஏங்க வர்றேன்…வரல்ல…விடுப்பு நீடிக்கிறேன்…ன்னு ஏதாச்சும் ஒரு தகவலை அனுப்ப மாட்டீங்களா? இப்ப மட்டும் செல்லச்சாமி சொன்னார்ங்கிறீங்க…? மத்த நேரத்துல ஆள் கண்ணுல படலையாக்கும்? 

ஸாரி சார்…மன்னிச்சிடுங்க….உங்க ரிஜிஸ்டர் தபால் வந்தன்னிக்கு மொத நாள் எங்க அப்புத்தா இறந்து போயிடுச்சி…அதுக்கு ஊருக்குப் போயிருந்தோம் எல்லாரும்…அதான் தபால் திரும்பியிருக்கு…எனக்குத் தேர்தல் வேலன்னா பிடிக்குமே சார்…விடுவனா….அதான் நேரா இங்க வந்திட்டேன். ஒரு எலெக் ஷன் ட்யூட்டி கூட மிஸ் பண்ணினதில்ல சார் நான்…!  கலெக்டர் ஆபீசுக்கு போய் எனக்குக் கொடுங்கன்னு கேட்டு வாங்கியிருக்கேன்…! என் ராங்குக்கு பிரிசைடிங் ஆபீசர்-1 தர மாட்டாங்க…தந்தாங்கன்னா அதையும் சக்ஸஸ்ஃபுல்லா செய்து முடிச்சிடுவேன். நான் ஆபீஸ் வர….நீங்க இங்க கிளம்பி வந்திருக்க…சந்திக்க முடியாமப் போச்சின்னா….சிக்கலாயிடுமே சார்…அதான் த்ரூ வண்டில அட்வான்சாக் கிளம்பி வந்திட்டன்….எங்கூர்லர்ந்து டேரக்ட் வண்டி மேலூருக்கு இருக்குல்ல சார்…அதப் பிடிச்சேன்….

அப்புத்தா இறந்ததாகச் சொல்கிறார். உண்மையோ பொய்யோ… ஆள் வந்தாச்சு. அந்தவரைக்கும் நிம்மதி. 

அது சரிங்க…எதுக்கும்  ஒரு ஃபோன் அடிக்க மாட்டீங்களா? இப்டியா கிணத்துல போட்ட கல்லு மாதிரிக் கிடக்கிறது? நாங்க என்னன்னு நினைக்கிறது? இந்தத் தபால வச்சிட்டு அல்லாடிட்டேன் தெரியுமா? எலெக் ஷன் டியூட்டிங்கிறது எவ்வளவு சீரியஸ் தெரியுமா? யாருமே ரிஜெக்ட் பண்ண முடியாதாக்கும். டிஸிப்ளினரி ஆக் ஷன் எடுத்திருவாங்க…அனுபவப்பட்ட ஆள் நீங்களே இப்டி செய்தா என்ன அர்த்தம்? 

வெரி வெரி ஸாரி ஸார்…தப்பா நினைக்காதீங்க…அப்புத்தா கடைசிக் காரியத்துக்குப் பணத்துக்கு அலைஞ்சிட்டிருந்தேன்…எங்கப்பாவால எதுவும் ஆகாது…நாந்தான் எல்லாம் பார்த்து செய்யணும்…அதுனால அதெத் தவிர வேறே எந்தச் சிந்தனையும் என் மனசுல இல்ல….மன்னிச்சிடுங்க….! டெத் வந்து முடக்கிடுச்சு…நம்புங்க….!

சரி…விடுங்க…வந்திட்டீங்கல்ல…அது போதும்…! ஒருவகைக்கு நல்லதாப் போச்சு நீங்க நேரடியா இங்க வந்தது. இன்னைக்கு உங்களுக்கும் தேர்தல் வகுப்பு இங்கதான்….பாருங்க இந்த ஆர்டரை….-என்றவாறே அந்த ஆணையை நீட்டினார் கனகமணி.

ஆவலோடு வாங்கிக் கொண்டார் அவிநாசி.

வாங்க…முதல்ல எலெக் ஷன்  ஆபீசரப் பார்ப்போம்…உங்க ஆர்டரும் சர்வுடு…ஆளும் வந்தாச்சுங்கிறதைப் பதிவு பண்ணுவோம்…

சந்தோஷமாக இருவரும் உள்ளே நுழைந்தனர். 

மலை போலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும்…-பழைய பாடலின் வரிகள் சட்டென்று கனகமணியின் மனதில் ஒலிக்க, யப்பா…பெரிய இக்கட்டுலர்ந்து தப்பிச்சன்…..நரி முகத்துல முழிச்சேன் போல்ருக்கு இன்னைக்கு …சங்கடம் நீங்கிருச்சு….-சிரித்தவாறே அவிநாசியைப் பார்த்துக் கூறிக்கொண்டேஉற்சாகமாக  நடந்தார் கனகமணி.

அப்டியெல்லாம் உங்கள இக்கட்டுல விட்ருவனா சார்…அதான் கன் மாதிரி டயத்துக்கு வந்திட்டன்ல…என்ற அவிநாசி, மானேஜரின் மீதான மரியாதையில் ஒரு நிமிடம் நின்று அவர் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.                                 ---------------------------


---------------------------------