15 பிப்ரவரி 2026

 

“கண்டடைந்தது”  - சிறுகதை    தினமணி கதிர் - 15.02.2026  பிரசுரம்




  
உறலோ….நீங்களா…? பேசறதுக்கு நிறைய இருக்கு….மொத்தமாப் பேசிடுவோமா…? –  எடுத்த எடுப்பில்  குரலில் அத்தனை கோபம் காண்பிக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தார். அவரை மீறி வெடித்து விட்டது சண்முகநாதனுக்கு.

              சார்…என்ன சொல்றீங்க…புரியல…..! – எதிர்த்தரப்பிலிருந்து பதில் தணிந்து வந்தது. வேறெப்படி வரும்?

              புரியும்தான்…ஆனால் புரியாததுபோல் பேசுகிறான் அந்த ஆள்.  செய்வது அத்தனையும் உள்குத்து வேலை. நேரிலோ, ஃபோனிலோ பேசும்போது இங்க சுகம், அங்க சுகம் என்பதாய் மேம்போக்காய்த் தடவுவது.உள்ளடி வேலை அதற்கு நேர்மாறாய்! ..-நினைக்கவே எரிச்சலாயிருந்தது சண்முகநாதனுக்கு. என்ன கீழ்த்தரமான ஆள்? அறுபது தாண்டியவனின் செயலா இது? வெட்கமாயில்லை? சரியான சில்ரப் பயலா இருப்பான் போல்ருக்கு!

              அடுத்த வார்த்தையைப் பேசும் முன் அருகில் வந்து நின்றாள் நாராயணி. தடுக்கத்தான் வருகிறாள்…புரிந்து கொண்டார் இவர்.

              வேண்டாம்…சொன்னாக் கேளுங்க…-என்பதற்கடையாளமாய்  சைகை செய்தாள். பிரச்னையாய்ப் போட்டுப் பிடுங்கி எடுப்பது. சரி செய்வோம் என்று முனைந்தால் வந்து நின்று தடுப்பது? இதென்ன ரெண்டுங்கெட்டான் வேலை?

              ஏண்டீ…என்னை ஏத்தி விடுறதுபோல எப்பப் பார்த்தாலும் வந்து புலம்பித் தள்றது….நானா பேசி ஒரு தீர்வு காணுவோம்னு கிளம்பும்போது முன்னே  வந்து தடுக்கிறது…இதான் உன் வேலயா? என்னை என்ன கிறுக்கன்னு நினைச்சீங்களா?  – ஃபோனின் வாயை அடைத்துக் கொண்டே கோபமாய்க் கேட்டார். பிறகு  என்னவோ தோன்ற லைனைக் கட் பண்ணினார்.

              …திடீர்னு கட் பண்ணிட்டீங்க…மூஞ்சில அடிச்சாப்ல….?- திடுக்கிட்டாள் நாராயணி.

              இருக்கட்டுமே…என்ன கெட்டுப் போகுது…? அந்தாள் செய்ற காரியத்துக்கு இது ஒண்ணும் தப்பில்லே… நான் இப்ப எல்லாத்தையும் பேசியிருப்பேன்…நீ வந்து கெடுத்தே…! என்றார்.

              மறுபடி ஃபோன் வரும் என்று எதிர்பார்த்தார். அந்தாளா பேசுபவன்? கல்லுளிமங்கனாச்சே! நேரடியா எதையும் எதிர்நோக்காமல் உள்ளடி வேலைகள் செய்றதுதானே அந்தாளுக்கு வேலையே! சில்ர…..! – மனசுக்குள் கடுப்பேறியது சண்முகநாதனுக்கு.

              அப்போதைக்கு விஷயம் முடிந்தது என்று அடுப்படியை நோக்கி நகர்ந்தாள் நாராயணி. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் தவறிப் போகிறது. பேசவிடாமல் வந்து தடுத்து விடுகிறாள். தன்னிடம் வந்து மலையளவு புலம்புகிறாள். பிறகு என்றுதான் தீர்வு இதற்கு?

ரு வாரமாகவே இவர் மனது புகைந்து கொண்டுதானிருந்தது. நிம்மதியில்லாமல் ஆக்கி விட்டானே இந்த ஆள்? பெண்ணைக் கட்டிக் கொடுத்தோமா, பொறுப்பு விட்டதா என்றில்லாமல்? எத்தனை நாளைக்குத்தான் இந்த வேதனையை அனுபவிப்பது? இந்தாள் அங்கிருந்து இந்தப் பெண்ணைத் தூண்டித் தூண்டி விடுவான்…அது கிளிப்பிள்ளை போல் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருக்கும்…எப்பப் பார்த்தாலும்…! பொழுது பொழுதாய்ச் சண்டை…அர்த்தமில்லாத …எடுத்தெறிஞ்ச பேச்சு…வீட்டில் யாரையும் மதிக்காத தன்மை…! நல்லதே சொல்லிக் கொடுக்க மாட்டானோ?-திமிர் பிடிச்சு அலையுதே…! -இதை எப்படி ஒடுக்குவது என்று தீவிரமாய்ச் சிந்திக்க ஆரம்பித்திருந்தார் சண்முகநாதன்.

புகுந்த வீட்டுல நடக்கிறதையெல்லாம் பொறந்த வீட்டுக்குச் சொல்லக் கூடாதும்மா…அது தப்பு…அப்படிப்பட்டவ ஒரு பொம்பளையே இல்ல…அதக் கேட்டுட்டு இப்படிச் செய்…அப்படிச் செய்யுன்னு ஒரு அப்பன் தூண்டி விட்டான்னா …அவன் நல்ல தகப்பன் இல்லை…அது தெரியுமா உனக்கு…? –,இத அந்தாள் இந்தப் பெண்கிட்ட  ஒருவாட்டியாவது கேட்டிருப்பானா? அவனே தூண்டிவிடுற ஆளால்ல இருக்கான்…?

இவர் நாராயணியை நோக்கி இப்படிக் கேள்விகளை வீசியபோது அவள் கேட்டாள்.

என்ன நீங்க…அவன் இவன்ங்கிறீங்க? அப்டியெல்லாம் பேசாதீங்க….

இப்போ இதுதான் கெட்டுப் போச்சாக்கும்?  என்றார் எரிச்சலுடன். பிறகு தொடர்ந்தார்.

இப்டி உன்கிட்டே சொல்றதுக்கே உனக்கு உறைக்குதே…அந்தாள்ட்டப் பேசினேன்னா கெதி என்னா ஆகும்? இந்த பாஷைல பேசுறதுக்குத்தாண்டீ அவன் தகுதியானவன்….பெண்ணுக்கு நல்லது சொல்லிக் கொடுப்பாங்கன்னு கண்டிருக்கு…புகுந்த வீட்டுல எப்படிப் பொறுப்பா நடந்துக்கணும்னு பாடம் சொன்னா அவன் பொறுப்பான அப்பன். சதா வில்லங்கத்தல்ல இழுத்து விடுறான்? இவன் மனுஷனா?  நல்ல சம்பந்தி வந்து வாச்சான்யா நமக்குன்னு…! நல்லதே கத்துக் கொடுக்கல்லியே அந்தப் பெண்ணுக்கு?

…எல்லாம் நம்ம தலவிதி…நல்லா நிதானமாக் கவனிச்சு இன்னும் சிலது பார்த்து  முடிவு பண்ணியிருக்கணும்…! அவசரப்பட்டுட்டோம்…!-மிகுந்த துக்கத்தோடு பகன்றது போலிருந்தது நாராயணியின் வார்த்தைகள்.

நிதானமா அவங்களோட அன்றாட நடவடிக்கைகளைக் கவனிச்சு ஒரு பெண்ணோட கல்யாணத்தை முடிவு பண்ணனும்னா குறைஞ்சது ஆறு மாசமாவது அவுங்க வீட்டுல நாம டேராப் போடணும்…நிச்சயம் பண்ற வீட்டுல கல்யாணத்துக்கு முன்னாடி எவனாவது உட்கார்ந்து கை நனைப்பானா? இல்ல அவுங்கதான் விடுவாங்களா? அது அசிங்கமில்லே? ஏதோ சில முக்கியமானதைக் கவனிச்சு…நல்லது கெட்டது பார்த்து …சரின்னு முடிவு பண்றதுதான்…எல்லாமும் கல்யாணத்துக்கப்புறம் பலதும் சரியாப்போகும்னுதான் நினைப்பாங்க…அப்படி ஒரு தியரி இருக்கே…அது இந்தப் பொண்ணைப் பொறுத்தவரை ஒர்க் அவுட்டாகாது போல்ருக்கே…. ? சுய புத்தியே இல்லையே…சொல்புத்தி எங்கயாவது விளங்குமா? நல்லதைச் சொல்லிக் கொடுத்தா ஒருவேளை விளங்கலாம்…இந்தாள்தான் வில்லங்கப் பார்ட்டியாவுல்ல இருக்கான்….

அதுக்கு அந்தாள் மண்டையைப் போட்டாத்தான் ஆகும்…அப்புறம்தான் படிப்படியா எல்லாமும் சரியாகும்…ஒரே தீர்வு அதுதான்…

இப்படி ஒரு பதிலை நாராயணி சொல்வாள் என்று சண்முகநாதன் எதிர்பார்க்கவேயில்லை.  சிரிப்புத்தான் வந்தது அவருக்கு. ஒரு பெண் இப்படிப் பேசலாமா? அதிலும் தன் மனைவி இவ்வாறு பகன்றதை இவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவரால். சீ…வாயை மூடு…! என்றார் ஆவேசமாக. ஒரு பேச்சுக்குத்தான் சொல்லியிருப்பாள். மனதாரச் சொல்வார்களா என்ன? வாய் தவறி…மனம் தவதாயப்படும்போது அப்படி வந்துவிடுகிறதுதான்…அந்தளவுக்கு அந்த மனுஷன் படுத்தறானே?

ஒருவர் இருப்பதும் இறப்பதும் நம் கையிலா இருக்கிறது? அது ஆண்டவன் சித்தம். யாருக்குத்தான் இருப்பு நிரந்தரம்? ஏன் நானே அடுத்த நிமிடம் சாகக் கூடாதா? இவள் தலை கவிழக் கூடாதா? இந்த உலகத்திலேயே நிச்சயமானது மரணம் ஒன்றுதான். அதையும் மறைத்து வைத்து விட்டான் இறைவன். இறந்து விடுவோமோ என்று தோன்றலாமே தவிர…இறந்து விட்டோம் என்பதை இருப்பவர்கள்தானே சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்களுக்கு…நமக்கில்லையே? செத்த பிணத்தைப் பார்த்து நீ செத்துட்டே என்றா சொல்ல முடியும்?

 அந்தப் பெண் இந்தக் குடும்பத்திற்கேற்றாற்போல் மாற வேண்டும் என்று வேண்டுமானால் நாம் விரும்பலாமேயொழிய அதுக்கு அவுங்க அப்பன் சாவணும் என்றால் எப்படி? அது நடந்தால் இது நடந்து விடுமா என்ன? சொல்ல முடியாதுதான். கடவுளைத்தான் வேண்ட வேண்டும். கதியற்றவர்களின் பிரார்த்தனை பலிக்காமல் போகுமா? குணசாலியாய் இருக்கும் என்றுதான் கட்டி வைத்தது. அது இப்படி முறுக்கிக்கொண்டு நின்றால்?

அந்த அளவுக்கு வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிறான் அந்த ஆள். அதனால சொன்னேன். எனக்கென்ன வந்தது? அவர் இருந்தா என்ன போனா என்ன? அது யார் கைல இருக்கு? அநாவசியமா நம்ப குடும்ப விஷயத்துல தலையிடுறாரேங்கிற கோபம்தான். இங்க நடக்கிறது ஒவ்வொண்ணையும் இந்தப் பொண்ணு அவர்ட்ட வரி விடாமச் சொல்லிட்டேயிருக்கு. உட்கார்ந்தது, எந்திரிச்சது, என்ன சமைச்சோம், சாப்பிட்டோம், என்ன பேசினோம்ங்கிறது முதற்கொண்டு எல்லாத்தையும் தப்பாவே பார்த்து தப்பாவே திரிச்சுத் திரிச்சு  தானே விபரீதமா நினைச்சு அவன் அப்பனுக்குச் சொல்றது….அந்தாளும் கேட்டுட்டு…மேலும் மேலும் தப்புத் தப்பாச் சொல்லிக்கொடுக்கிறான்…எடுத்த எடுப்புல முதல்ல இப்படி வெளில சொல்றதை நிறுத்துன்னுல்ல ஒரு நல்ல அப்பன் சொல்லணும். அது இல்லை அந்தாள்கிட்ட….இப்படிச் சொல்றது மூலமா நீ என் பெயரைக் கெடுக்கிற அங்கே…ன்னு சொல்ல வேண்டாமா? என் பொண்ணா இருந்திட்டு நீ இப்படிப் பேசலாமா?ன்னுல்ல நல்ல மனுஷனாயிருந்தாக் கேட்பான்? எல்லாத்தையும் அந்தாளும் தப்பாவே எடுத்திட்டு விபரீதமாச் சொல்லிக் கொடுக்கிறான். அதக்கேட்டுட்டு சண்டைக்கு நிற்குது இது.  அதுதான் உண்மைன்னு, சரின்னு, நம்பிண்டு இந்தப் பொண்ணும் ஆடறது. சுயமாச் சிந்திக்கும் திறனில்லை…அத்தனையும் சொல்புத்தி !

நீ வேணுங்கிறதை வெளில ஆர்டர் பண்ணி இஷ்டம்போல வாங்கிச் சாப்பிடு…யாரு கேட்கிறது? நீ வேலைக்குப் போறே,  சம்பாதிக்கிறே… ஃபினான்ஷியல் இன்டிப்பன்டென்ஸ் வேணும் பெண்ணுக்கு…அதான் பெண்ணுரிமை…! அதை யாரும் தடுக்க முடியாதாக்கும். அப்படித் தடுத்தா என்கிட்டே சொல்லு…நான் ஒரு கை பார்த்திடுறேன்….அது இதுங்கிறான்….நல்லதே சொல்லித் தரமாட்டாம் போல்ருக்கு….! நீ ராணியாக்கும்…உனக்கு எல்லாம் கிடைக்கும்..அதுக்கு நான் கியாரண்டி..ன்னு உளர்றான் அந்தாள். இதுவும் அப்பா சொல்றது அத்தனையும் வேத வாக்குன்னு  நினைச்சிண்டு பேயாட்டம் போடறது! இப்படி ஒரு பிசாசு நம்ம வீட்டுக்கு மருமகளா வரும்னு கனவுல கூட நான் நினைக்கலே…!  இன்னிவரைக்கும் அந்தப் பொண்கிட்ட நீ என்ன சம்பளம் வாங்குறே…ன்னாவது நாம ஒரு வார்த்தை கேட்டிருப்பமா? இல்ல அவன்தான்…சம்பளப் பணத்தை என்கிட்ட மாதா மாதம் கொடுத்திரணும்னு சொல்லியிருப்பானா? அதுதான் வச்சிண்டிருக்கு…தனக்குத்தான் செலவு பண்ணிக்கிறது….இந்த நியாயத்தை யார் சொல்றது? மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா…அப்டியெல்லாம் இல்லப்பா…அவுங்க என்கிட்டே எதுவுமே கேட்கிறதில்லே…இதுவரை கேட்டதுமில்லேன்னுல்ல சொல்லியிருக்கணும்? தின்னு தின்னு உடம்பை வளர்த்திருக்கே தவிர…மண்டைல மசாலாதான் இருக்கு அதுக்கு…எல்லாம் நம்ம தலைவிதி…!

தவதாயப்பட்டாள் நாராயணி. இந்தப் புலம்பலில் அவளுக்கு ஏதும் நோய் நொடி வந்து படுக்கையில் விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்
று இவர் பயப்பட்டார்.   தன்னிடம் கொட்டித் தீர்ப்பதுதான் அவளுக்கு ரிலீஃப் போலிருக்கிறது. அதுவும் ஒரு வகை நிவாரணிதானே…!  அவள் புலம்பல் எந்தப் புள்ளியில்தான் நிற்கும் என்றே இவருக்குத் தெரியவில்லை.

 ன்ன கோமாளித்தனம் இது? எல்லாம் காதுல விழறதே…! ஸ்பீக்கர்ல போட்டுல்ல அந்தப் பெண் பேசுது? கேட்டாக் கேட்கட்டும்ங்கிற திமிரு! அதானே?  அந்தாளே ஒரு ஓட்டாண்டி…பையன லோன் போடச் சொல்லி…அபார்ட்மென்ட் வீடு வாங்கி அவன டியூ கட்ட வச்சிருக்கான்….ஒரு சேமிப்பில்ல..அத்தனையும் கைவீசிச் செலவு பண்ணி வீணடிச்சிருக்கான்..! ஜாலியா இருந்து கழிச்சிருக்கான்…! எப்டியோ ரெண்டு பிள்ளைகளையும் படிக்க வச்சிட்டான்…கடன உடன வாங்கி வாங்கி அடைச்சிட்டேயிருந்திருக்கான்..சிக்கனமாக் குடும்பம் நடத்தணும்னு அவன் அகராதில் இல்ல போலிருக்கு…விட்டேத்தியா இருந்தே கழிச்சிருக்கான். ..அதே பழக்கத்தைத் தன் பெண்ணுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கான்…

அப்பப்ப இதுகிட்டப் பணம் வாங்கிப்பான் போல்ருக்கு…? அப்படித்தான் தெரியுது…நாம என்ன அந்தப் பொண்ணோட பாங்க பாஸ் புத்தகத்தையா வாங்கிப் பார்க்கப் போறோம்?  - சொல்லி விட்டு நிறுத்தினாள் நாராயணி. இவர் முகத்தை நோக்கினாள்.

அப்படியிருந்ததுன்னா அதை நம்ம பிள்ளைதான் தடுக்கணும். உதவி செய்யலாம் தப்பில்லை…அதை அவனுக்குத் தெரிவிச்சிட்டுக் கொடுக்கணும். புருஷனுக்கே சொல்லாமச் செய்றதுதான் தப்பு. இவனுக்கு ரோஷம் வேணுமே…! ….இவன் கேட்கலை, கண்டுக்கலைன்னா இவன்தான் ஏமாளி. அதுக்கு நாம என்ன பண்றது? நாம குறுக்கே புகுந்து பேசுறது அசிங்கம். இதெல்லாமுமே நாம அவுங்க கூட இருக்கிறதுனாலதானே தெரிய வருது. என்னவோ பண்ணிட்டுப் போறாங்க. புருஷன் பொண்டாட்டி பாடு. நாம ஏன் தலையிடணும்…? வயசான காலத்துல நமக்கு இது தேவையா?-அடங்காத கோபத்தோடு சொன்னார் சண்முகநாதன். தனிக் குடித்தனம் போகட்டும் என்ற இவரது யோசனை எடுபடவில்லையே? பையனோடு பிசினாய் ஒட்டிக் கொண்டுதான் இருப்பேன் என்கிறாளே? அவர்களுக்கு என்று குடும்பம் நடத்தப் பழகும்? வரவு செலவு எப்போது கைக்குள் அடங்கும்? சேமிப்பு என்பது எப்படிக் கைவரும்? எத்தனையோ கேள்விகள் இவரிடம்.

குடும்பத்தின் அதிகாரம் ஆண் கையில் இருந்தால்தான் குடும்பம் விளங்கும். ஆனால் அந்த ஆண் பொறுப்பானவனாய், நேர்மையானவனாய், நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுபவனாய் இருத்தல் வேண்டும். சண்முகநாதன் தன் வாழ்க்கையில் அப்படித்தான் இயங்கி வந்திருக்கிறார். தன் குடும்பத்தை அக்கறையோடும், கருத்தோடும் சிந்தித்து செயல்பட்டு முன்னேற்றியிருக்கிறார். இல்லையென்றால் ரெண்டு வீடு, ஒரு பிளாட், இத்தனை சேமிப்புகள் என்று கைவந்திருக்க முடியுமா? மனிதனின் தேவைகள் மிகக் குறைவு என்கிற எண்ணம் கொண்டவர் அவர்.அநாவசியச் செலவுகள் அவர் வாழ்க்கையில் எட்டிப் பார்த்ததேயில்லை. மாதத்தின் முதல் செலவே சேமிப்பு என்றுதான் வாழ்ந்து கழித்திருக்கிறார் அவர். தன் மனதும், செயலுமே தனக்கு சாட்சி. வேறு எவன் சொல்லிப் பாராட்ட வேண்டும். யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க…!

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனார் சண்முகநாதன். ஆனால் நாராயணியின் புலம்பலை நிறுத்தவே முடியவில்லையே! தன்னை விட்டால் வேறு யாரிடம் தன் மனக்குறைகளைச் சொல்லிப் புலம்புவாள் அவள்?

 

வுங்க அப்பா இருக்கிற தைரியத்துல இதுவும் அடங்காப்பிடாரியா நடந்துக்கிறது. இங்க யாரு என்ன சொல்றாங்க அவளை? அவபாட்டுக்குத்தானே இருக்கா? ஏதாச்சும் குத்தம் குறை சொல்றமா? காலைல பதினோரு மணிக்குத்தான் எழுந்திருக்கிறா…ஒரு நாளாச்சும் ஏதாச்சும் சொல்லியிருக்கனா? அடுப்படிப் பக்கம் லீவு நாளாச்சும் எட்டிப் பார்த்திருக்கா அது? துரும்ப நகர்த்துறதில்ல…சொகுசா தின்னுட்டுத் தின்னுட்டு மொபைல் பார்த்துண்டு, தூங்கிண்டு…பாத்ரூம் போயிண்டு காலங்கழிக்கறச்சே…இம்புட்டுத் திமிரு இருந்தா…நாள் பூராவும் வேலை செய்ற எனக்கு எப்படியிருக்கும்? கொஞ்சமேனும் நன்றி வேணாம்? காலைல அஞ்சுக்கு எழுந்திருந்து ராத்திரி வரைக்கும் இவ்வளவு வேலை செய்றாளேங்கிற கரிசனம் வேண்டாம்? என்ன வளர்த்திருக்காங்க பொண்ணை? நீங்க சொன்ன மாதிரி தனிக்குடித்தனம் வச்சா விளங்கினாப்லதான்…எம் பையன் பாடு படு திண்டாட்டமாயிடும்…நல்ல சாப்பாடு கூடக் கிடைக்காது அவனுக்கு. இதுக்கு சமைக்கத் தெரியுமோ என்னவோ…நான் செய்றேன்…நான் செய்றேன்னு அந்தாள் வந்து நின்னாருன்னா? நம்ம வீட்ல வந்து அவன் நிர்வாகம் பண்றதா? அப்படி ஆள்தான் அந்தாளு? உள்ளே விட்டோம்னா நாளடைவில நம்மளையே அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடுவான்…கேடு கெட்ட மனுஷன்….-பொரிந்து தள்ளினாள் நாராயணி. மன பாரம் அப்படியாவது இறங்கட்டும் என்று தேமேனென்று கேட்டுக் கொண்டிருந்தார் சண்முகநாதன்.

இந்தப் பேச்சு சொல்லப்போனால் தினசரியே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருவருக்கும் மனசு ஆறுதலடைய மாட்டேனென்கிறது. பையனுக்கு சரியாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணவில்லை என்று ஆ தங்கப்படுகிறது மனசு. பரஸ்பரம் கொட்டித் தீர்த்துக் கொண்டால்தான் வேதனை குறைகிறது. இல்லையென்றால் உடம்புக்கு ஏதேனும் வியாதி வந்து விடுமோ என்று மனசு பயப்படுகிறது. படுக்கையில் விழுந்தால்…அது இன்னும் மோசமாயிற்றே…? தனக்கும் பதிலுக்குப் பதில் பேசினால்தானே மனம் ஆறுகிறது?

ட…வேலதான் செய்ய வேண்டாம். அன்பா நாலு வார்த்தை…மரியாதையா ஒரு சொல்….வேண்டாமா ஒரு பொண்ணுக்கு? அப்படியென்ன பேரழகியா இது? பணக்கார ஃபேமிலியா,? சாதாரண மிடில் கிளாஸ்தானே? அதி புத்திசாலியா? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கா? அவர் தன் பொண்ணுக்குப் போட்டதைவிட நாமதான் அதிகமாப் போட்டு வச்சிருக்கோம். எதுக்காக? எல்லாம் நம்ம பையனுக்காக. இவளுக்காகவா? எல்லாத்தையும் நாளைக்கே கொண்டு போய் பாங்க் லாக்கர்ல வைக்கச் சொல்றேன்…இந்த வீட்டையும், நகை நட்டுக்களையும் பேரன்கள்தான் எடுத்து அனுபவிக்க முடியும்…அதுவரை யாருக்கும் தொடுறதுக்கு அனுமதியில்லேன்னு உயில் எழுதி வைக்கப் போறேன். பத்திரமே எழுதிப் பதிவு செய்து வைக்கிறேனா இல்லையா பாருங்க…!

சரி…சரி…போதும் போதும் நிறுத்து…நிறுத்து…நான் அவர்ட்டப் பேசலாம்னு கிளம்பப் போக…அதைத் தடுத்திட்டு…இப்போ நீ எங்கிட்டப் பேசிட்டிருக்கே…நாம பேசறதோட சாராம்சமாவது அவருக்குத் தெரிய வேண்டாமா? அப்பத்தானே அந்தாளுக்குக் கொஞ்சமாவது சொரணை வரும்? அதையும் தடுத்திட்டியே நீ?  

நான் எங்கே தடுத்தேன் …நீங்கதானே ஃபோனை ஆஃப் பண்ணினீங்க…?

ஆமாண்டீ…யாரு இல்லைன்னு சொன்னா? அவர் கூடப் பேச ஆரம்பிச்ச வேளைல குறுக்க புகுந்தா? கமுக்கமா நின்னு நான் என்னென்ன பேசறேன்…எப்படிப் பேசறேன்னு அப்சர்வ் பண்ணனும். ஆரம்பிக்கிறப்பவே வந்து நின்னு தடுக்கக் கூடாது…! அப்புறம் எனக்கு அந்த வீரியம் விட்டுப் போகுமில்ல…? நியாயம் மனசுல பெருக்கெடுக்கிற போது அதை அப்படியே கொட்டிடணும்….உண்மை வேகமாத்தான் வெளில வரும். அது உஷ்ணமாத்தான் இருக்கும். அதை நாமளே பொருட்படுத்தலைன்னா எப்படி? எதிராளிக்கு எப்படிப் போய்ச் சேரும்? என்னிக்கானாலும் பேசினாத்தானே தீரும்? விளைவு என்னங்கிறதை அப்புறம் பார்த்துக்கலாம். வயற்றெரிச்சல் குறையுமே? அதத் தடுத்திட்டியே?

பேசி ஓய்ந்ததுபோல் திடீரென்று அமைதியானார் சண்முகநாதன். ஒரு நல்ல சந்தர்ப்பம் நழுவவிட்டதாய் உணர்ந்தார். வெகு நாட்களாய் மனதில் உருப் போட்டுக் கொண்டிருந்த ஒன்றை வடித்தெடுக்கும் முன் குறுக்கே புகுந்து கெடுத்து விட்டாள் நாராயணி. இவளை வைத்துக் கொண்டு இனி பேசக் கூடாது என்று முடிவு செய்து கொண்டார்.

வீட்டுப் பெண்கள் எல்லாவற்றையும் வீட்டு ஆண்களிடம் புலம்புகிறார்கள். அவர்கள்தான் தீர்க்க வேண்டுமென்று. இஷ்டம்போல் கதறத் தெரிந்த அவர்களுக்கு, இஷ்டம்போல் வீட்டு ஆம்பளையைச் சுதந்திரமாய் விட வேண்டும் என்று தெரியவில்லையே? பிறகு எப்படிப் பிரச்னைகளைத் தீர்ப்பது? நானென்ன கையில் தடியையா எடுத்துக் கொண்டு அடிக்கப் போகிறேன்? வெறும் வார்த்தை விளையாட்டுத்தானே? அது கம்பால் அடிப்பதை விட அதிகக் காயத்தை உண்டு பண்ணுமே…! சொரணை உள்ளவனுக்கு. உப்புப் போட்டுத் தின்பவனுக்கு ஒரு சில வார்த்தைகள் போதும்தான். அல்லாதவனுக்கு? வெட்கத்தை உதிர்த்தவனுக்கு? சூடு, சொரணை என்று எதுவுமே இல்லாதவனுக்கு? எது சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் உறைக்காதுதான். இந்தாள் அந்த ரகமாய் இருப்பானோ?

சிந்தனை இந்த திசையில் போக…தலை மூர்ச்சைக்கு வந்தது சண்முகநாதனுக்கு.

ஆள விடு…என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவைத் சாத்திக் கொண்டார். அவர் மனது அமைதியைத் தனிமையை நாடிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுபோல் இங்கே அன்றாட நிகழ்வுகள் நடக்கின்றன. இவரும் எவ்வளவோ ஒதுங்கி ஒதுங்கித் தான் செல்கிறார். விடாது கருப்பு என்பதுபோல் வந்து வந்து ஒட்டிக் கொண்டு நமநம என்று அரிக்கிறது.  எப்படி விலகிப் போவது? பையனின் வாழ்க்கையாயிற்றே? சுமுகமாய்க் கழிந்தால்தானே பெற்றோர்களுக்கு நிம்மதி? நாளும் பொழுதும் கலகமாய்க் கடந்தால்?

கீழே கேட் திறக்கும் சத்தம். அவன்தான் வந்துவிட்டான். காரை பார்க்கிங் ஏற்றிவிட்டு வந்து சேரப் பத்து நிமிஷம் ஆகும். அதற்குள் பள்ளிக்குச் சென்றிருக்கும் பேரன் வந்து விடுவான். காத்திருந்து அவனையும் அழைத்துக் கொண்டு மேலே வரக் கூட அஞ்சு நிமிஷம். பிறகு ஆறு மணிக்கு அவனை டியூஷனுக்குக் கொண்டு விட வேண்டும். எட்டு மணிக்குத் திரும்பக் கூட்டி வர வேண்டும். காலையில் அவனைக் குளிப்பாட்டி, பல் தேய்த்து விட்டு, யூனிபார்ம் அணிவித்துக் கிளப்புவதும் அவன்தான். அதற்குத்தான் தினசரித் தவறாமல் அஞ்சுக்கு எழுந்து டிபன் தயார் செய்கிறாளே நாராயணி. ஒரு நாள் ஒரு பொழுதாவது அந்தப் பெண் எதுவும் செய்ததில்லை. அதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுபோல் தூங்கிக் கொண்டிருக்கும். சின்னஞ்சிறுவன் ஆறுக்கெல்லாம் எழுந்து பள்ளிக்குத் தயாராகிவிடுகிறானே என்கிற உறுத்தல் கூட இல்லை. தினசரி காலை எட்டு வரைக்கும் வீடு அல்லோல கல்லோலப்படுகிறதே என்கிற தாக்கம் சிறிதுமில்லை. நாமும் எழுந்து நம் பங்குக்கு ஏதாவது செய்வோம் என்கிற எண்ணமில்லை. உலகமே தலைகீழப் புரண்டாலும் நான் பத்துக்கும் பதினொண்ணுக்கும்தான் எழுந்திருப்பேன் என்று கும்பகர்ணத் தூக்கம் போட்டால்? அசிங்கமாயில்லை. இதைச் சொல்லப் புகுந்தால் சண்டை…! ஓவென்ற அழுகை. எடுத்தெறிந்த பேச்சு…!

பிள்ளை பெறுவது மட்டும் ஆண்மையில்லப்பா…ஆளுமைத் திறனோட ஒரு ஆண் இருக்கிறதுதான் ஆண்மை. குடும்பத்துல அது  ரொம்ப முக்கியம். அதத் தெரிஞ்சிக்கோ….-பலமுறை சொல்லிவிட்டார்தான். உறைத்தால்தானே? இவருக்கோ மனசு புழுங்கியது. எதற்கு உடன் இருந்து கொண்டு இந்தக் கண்றாவியையெல்லாம் பார்த்துப் பார்த்து மனசு வேக வேண்டும்? அவுங்க பிள்ளை…அவுங்க வாழ்க்கை…தனியா வாழட்டுமே! நாம ஏன் குறுக்கே நின்று கொண்டு? – எத்தனையோ முறை சொல்லித் தீர்த்து விட்டார். நாராயணி கேட்பதாயில்லை.

நான் இருந்துக்கிறேன்..நீங்க வேணும்னா போங்க….-இப்படியொரு பதில் சொல்லலாமா? சொல்கிறார்களே? குடும்பப்  பெண்ணுக்கு அழகா அது? குடும்பமாவது…அழகாவது? வயதானால் எல்லாப் பெண்களுக்கும் வாய் நீண்டு விடுகிறது. காதுவரை கிழிகிறது. எல்லாக் கடமைகளையும் சீரும் சிறப்புமாய் முடித்தவன் கடைசிக் காலத்தில் தனியாய்ப் போய் இருந்து கஷ்டப்பட வேண்டுமென்று தலையெழுத்தா என்ன?

உன்னை வச்சுக் காப்பாத்துற மாதிரி என்னையும் வச்சுக் காப்பாத்த மாட்டானா? அவனோட பேசிட்டுத்தான் இந்த வார்த்தையை என்கிட்டே நீ சொல்றியா? நாக்கு மேலே பல்லுப் போட்டு என்னைப் பார்த்து  இப்படிப் பேசுறதுக்கு உனக்கு எப்படி மனசு வருது? மனசாட்சின்னு ஒண்ணு உனக்கு இருக்கா இல்லையா? பையனுக்காக அதை அவுத்து எறிஞ்சிட்டியா வெளில? -கேட்கத்தான் செய்தார் சுடச்சுட…!

ஆனால் அந்தக் கேள்விக்குத்தான் பதிலே இல்லை. மழுங்குண்ணி மாங்கொட்டையாய் ஒருவன் இருந்தால்தான் இந்த வாழ்க்கையைப் பிரச்னைகள் இன்றி ஓட்ட முடியும்….கண்ணையும், காதையும் பொத்திக் கொள்ள வேண்டும். மொழி மறந்து போகும் அளவுக்கு வாயை மூடிக் கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் இருக்கப் பழகினால்தான் ஓரளவுக்கு இந்த வாழ்க்கையை, அன்றாடங்களைப் பிரச்னையின்றிக் கடந்து செல்ல முடியும்.

இதுதான், தான் இத்தனை வருஷ வாழ்க்கை அனுபவத்தில் கண்ட பேருண்மையா? நினைக்க நினைக்க வேதனைச் சிரிப்புத்தான் வெளிப்பட்டது அவரிடம்.

வாழ்க்கையே வேஷம்…இதில் பாசமென்ன, நேசமென்ன….காலத்தின் கோலம்…புரிந்தது….ஞானிதானே நானும்…!!!!

                                                --------------------------

 

             

 

 

 

           

12 பிப்ரவரி 2026


புஸ்தகா.கோ.இன் வெளியீடு.   சிறுகதைத் தொகுதி(12.02.2026)




 

 

சிறுகதை                 'மிச்சம்“  (குங்குமம் வார இதழ்) 20.02.2026




            நீங்க போயிட்டு வாங்கோ…நான் வரலை…என்றார் கோபாலன்.

            உறாலில் என்னவோ பேச்சு நடக்கிறது என்று தோன்றியபோதே மனதில் முடிவு செய்து கொண்டு விட்டார். அந்த இழுவை நம்மால ஆகாது? கிளம்பவே ஜாமம் ஆகும். இவர் மனது அலுத்துக் கொண்டது. மலைப்பாய் இருந்தது.

            கார்லதானேப்பா போகப் போறோம். வரலாமுல்ல…? என்றான் தயாளன்.

            கார்லதான் போறோம்…அங்க போனவுடனே கோயிலைச் சுத்தி பார்க்கிங் தேடவே ஒரு மணி நேரம் ஆகும். சுற்றிச் சுற்றி வரணும். அதுக்குள்ளயும் எனக்கு ஒண்ணுக்கு வந்துடும். அதுக்கு எடத்தைத் தேடணும். சொன்னா நீ சங்கடப்படுவே…நானா இறங்கி ஒரு ஓட்டலுக்குள்ள போய்த்தான் ஒன் பாத்ரூம் போக முடியும். அவன் சும்மா விடுவானா? ஒரு காப்பியைக் குடிக்கணும். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு ஒண்ணுக்கு வரும். ..எதுக்கு இந்த சிரமமெல்லாம்? நீங்க போயிட்டு வாங்கோ…நான் வீட்ல இருந்துக்கிறேன். எனக்கிருக்கிற உடல் சிரமத்துக்கு எங்கயும் கிளம்ப லாயக்கில்ல…!

            நீ பாத்ரூம் போயிட்டு வெளில வெயிட் பண்ணுப்பா…நாங்க கும்பிட்டுட்டு வந்திடுறோம்….

            நல்லாயிருக்கே நீ சொல்றது? கோயிலுக்குன்னு புறப்டுட்டு சாமி கும்பிடாம வர்றதா? அது சரியாயிருக்குமா? – சங்கடத்தோடு பேசினார் கோபாலன். ஆள விடுங்கன்னாலும் இதென்ன அன்புத் தொல்லை?

            ஏம்ப்பா…எத்தனையோ நாளு வெளி சுற்றுப் பிராகாரத்துல நீ உட்கார்ந்துடுவே…நாங்கதான் போயி எல்லா சந்நிதியையும் சுத்திக் கும்பிட்டுட்டு வருவோம்…என்னால அலைய முடியாது, வரிசைல நின்னெல்லாம் நகர்ந்து போய் சாமி கும்பிட முடியாதுன்னு சொல்லியிருக்கே…இன்னிக்கு மட்டும் இப்டிச் சொல்றியே…? –

            அதையேதான்ப்பா இப்பயும் சொல்றேன்….வெளிலன்னு வந்தாலே எங்க பாத்ரூம் இருக்குன்னு தேட வேண்டிய நிலைமைல நான் இருக்கேன்…அதுக்கு உன்னையும் சேர்த்து சிரமப்படுத்த விரும்பலை..யாரையும் சிரமப்படுத்த இஷ்டமில்லை…அதனாலதான் அப்படிச் சொல்றேன்….-பிடியாய் நின்று தன் பக்கத்தை விளக்கினார் கோபாலன்.

            அவருக்குத் தெரியும் அவர் சிரமங்கள். மற்றவர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? பெற்ற பிள்ளைதானே…கூட வருவது பெண்டாட்டிதானே…தனக்காகக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா?

            அதெல்லாம் இல்லை. தன்னால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம் என்பதுதான் அவர் கருத்து. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான். அதுபோல் ஒரு பொழுது பொறுத்தால் மறு பொழுது ஒரு வார்த்தை வரத்தான் செய்யும். அதை ஏன் கேட்கணும், மனசு கஷ்டப்படணும். அதற்கு ஏன் இடம் கொடுக்கணும்? எங்கும் போக வேண்டாம். எதையும் பார்க்க வேண்டாம். எந்த ஆசையும் இல்லை அவருக்கு. எல்லாவற்றையும் மொத்தமாய்த் துறந்து விட்டார் அவர். ஒரே சமயத்தில் பலவற்றையும் அப்படித் துறக்க ஒருவனால் முடியுமா என்றால் முடியும்தான். அதற்கான மனத் திண்மை அவருக்கு இருந்தது.

            அது எப்படித் தனக்குக் கை வந்தது என்று யோசித்தார் கோபாலன். சிறு வயது முதலே அது தன்னிடம் உடன் பிறந்ததாய்க் கிடக்கிறது என்பதை உணர்ந்தார். அது அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்டதாய் இருக்கும் என்றும் எண்ணலானார்.

            இல்லையென்றால் சொல்லி வைத்தாற்போல் ஐம்பது ஆண்டுகள் ஒரே பிடியாய் எந்தவிதச் சலனமுமின்றி ஓட்டலில் வேலை பார்த்து தன் எட்டுக் குழந்தைகளைக் காப்பாற்றிக் கரையேற்ற முடியுமா ஒருவரால்? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் குடும்ப முன்னேற்றமே குறி என்று ஒருவனால் வாழ்ந்து கழிக்க முடியுமா? தியாக வாழ்க்கையை இந்த உலகத்தில் எத்தனை பேர் வாழ்ந்து கடந்திருக்கிறார்கள்?

            அப்பா எந்தச் சந்தோஷத்தையும் அனுபவித்தவர் அல்ல. எந்தச் சந்தோஷத்திற்காகவும் மெனக்கெட்டவரும் அல்ல. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி என்ற வரிகளுக்கேற்ப தன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தவர்.

            லட்சியம் என்று மனதில் உறுதி செய்து கொண்டா அவர் வாழ்ந்தார்? முன்னோர்களின் நெறிமுறைகளும், ஆசீர்வாதங்களுமாய்ச் சேர்ந்து அவரை இயக்கியது. அதுவே அவரது சீரிய வாழ்க்கையாய் அமைந்து போனது.

            அதே மன உறுதியும் செயல்பாடும் தன்னிடமும் ஒட்டிக் கொண்டிருப்பதாய் கோபாலன் நினைத்தார். கொஞ்சமேனும் இல்லாமல் போகுமா என்ன?

            அதற்காக சும்மா இருப்பதே சுகம் என்றா அவர் கிடக்கிறார். அல்ல அல்ல….வீட்டில் தனியே இருந்தால் என்றுமே அவர் வெறுமே கிடந்ததில்லை. ஏதாவது வேலைகளை எடுத்துச் செய்து கொண்டேதான் இருப்பார். அது அவர் சுபாவம். ஆபீஸ் வேலைகளையே அப்படிக் கட்டிச் சுமந்தவர்தானே? அந்த குணம் வீட்டுக்கு என்று விட்டுப் போகுமா?

            துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வீடு பெருக்கிக் குப்பைகளை ஒருங்கிணைத்து  வெளியேற்றுவார். ஜன்னல் கம்பிகளில் ஏறியுள்ள அழுக்கை ஈரத் துணியை வைத்துத் துடைத்துப் போக்கி சுத்தம் பண்ணுவார். சாமி படங்களைத் துடைத்து மாட்டுவார். பூஜை அறைத் தரையை எண்ணெய்ப் பிசுக்குப் போக அழுந்தத் துடைத்து, விளக்கைத் துலக்கிப் பளீரென ஆக்கி புதிதாகத் திரியும் எண்ணெயும் ஊற்றிச் சரி செய்து வைப்பார். படுக்கைகளை வெளியில் கொண்டு உதறி, தூசி போக அழகாய் மடித்து ஒதுக்கி வைப்பார். ரொம்பவும் அழுக்காய் இருந்தால் வாஷிங் மெஷினில் போட்டு மாடியில் கொண்டு சென்று உலர்த்தி காய்ந்த பிறகு ஞாபகமாய் எடுத்து மடித்து ஒழுங்கு படுத்துவார். மின்சாரம் வராத சமயங்களில் பயன்படும் இன்வெர்ட்டர் பேட்டரிக்குத் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து அதற்கென்று வாங்கி வைத்துள்ள பதப்படுத்தப்பட்ட நீரை ஊற்றி பேட்டரி சிறப்பாய் இயங்கத் தயார் செய்வார். உலர்ந்த துணிகளை எடுத்து மடித்து வைப்பார். தோய்க்க வேண்டிய துணிகளை எடுத்துத் தனியே கூடையில் போட்டுத் தயாராய் வைப்பார். கட்டில், மெத்தை, நாற்காலி என்று பலவற்றையும் பகுதி பகுதியாய்த் துடைத்து சுத்தம் செய்து,  வீடு எவ்வளவு நீட்டா இருக்கு? என்று வருபவர் வியக்கும் வண்ணம் ஆக்கி வைப்பார்.

இதிலெல்லாம் அவருக்கு ஒரு மனதார்ந்த திருப்தியும் நிறைவும் இருந்தது . ஏனென்றால் இவை எல்லாமும் வீட்டில் இருந்து கொண்டே நூறடி சுற்றளவில் சுற்றிச் சுற்றி வந்து செய்து கொண்டிருப்பவை. இணக்கமான மனநிலையில் தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள் என்று பிரதி பலன் கருதாத தியாக மனநிலையில் அல்லது நிச்சலன மனநிலையில் அவர் விரும்பிச் செய்பவை. அவசரத்துக்கு சட்டென்று பாத்ரூமுக்குள் நுழைந்து கொள்ளலாம். எந்தச் சிரமமும் இல்லை.

இதை விட்டு விட்டு வெளியில் சென்று சுற்றுவதில் அவர் மனது ஏனோ இணங்கவில்லைதான். குறிப்பாக அவரது தற்போதைய உடல் ஸ்திதி. மனநிலை. எல்லாவற்றிலிருந்தும் விலகி நிற்கும் மனப்பாங்கு. எதுவும் கூடவரப்போவதில்லை என்கிற புரிதல். கொஞ்ச நாளாகவே மனம் தனிமை, தனிமை என்று அரற்றிக்கொண்டேயிருப்பது. எல்லாமும் அலுத்து விட்டதுதான். உறவுகளும் கூட என்றே சொல்லலாம். என்ன பெரிய உறவு? அப்படியா பாச பந்தத்தில் இழைந்து திழைக்கிறோம்? அவரவர் பாடு அவரவருக்கு. நீ சௌக்கியமா…நான் சௌக்கியம்….! என்கிற ஒற்றைக் கேள்விதான்.

எந்த சந்தோஷத்தையும் அவர் மனது ஏற்க மறுக்கிறது. எல்லாமும் தோன்றி மறைபவை, எவையும் இந்த உலகத்தில் நிரந்தரமானது அல்ல, இந்த ககனத்தில் தோன்றியதெல்லாமும் இந்த ககனத்திற்கே. எதுவும் இங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாது. இந்த மண்ணில் உள்ளவையெல்லாம் இந்த மண்ணுக்கே…! ஆத்ம ஞானம் ஒன்றே மனிதனைக் கடைத்தேற்றுவது…பக்தியும், தியானமும்தான் அதை அடையாளம் காட்டும். அர்த்தப்படுத்தும்…மற்ற எல்லாமும் வெறும் பிரமை… பிரேமை…. !

கிளம்பலாமாப்பா….! – தயாளனின் குரல் இவரை நனவுலகுக்குக் கொண்டு வந்தது. பெரியநாயகி, மருமகள் தயாளினி,  பேரன், பேத்தி…ஒரு படையே கிளம்பியாயிற்று. மொத்தம் ஆறு டிக்கெட்….

என்னை ஏம்ப்பா வற்புறுத்தறே? விட்ரேன்….-என்றார் இவர் சலிப்பாக.

இவ்வளவு வருந்திக் கூப்பிடுறான். வாங்களேன்…வந்து பேசாம உட்கார்ந்திட்டு இருக்கப் போறீங்க…இதுக்கு உங்களுக்கு வலிக்குதா? என்றாள் பெரியநாயகி. கூப்பிட ஆளில்லேன்னா அப்பத் தெரியும்…? இது முனகல்.

பேசாம உட்கார்ந்திருக்கிறதுக்கு இங்கேயிருந்து அம்புட்டுத் தூரம் வரணுமா? இங்கேயே சிவனேன்னு இருந்தா ஆகாதா? -என்றார் இவர்.

சிவ…சிவா…ன்னு அங்க வந்து உட்கார்ந்திருங்கப்பா….கபாலீஸ்வரர் கோயிலுக்குத்தான் போறோம்…உங்களுக்குப் பிடிச்ச கோயிலாச்சே…!

உண்மைதான் அவன் சொல்வது. அது என்னவோ அந்தக் கோயிலில் ஒரு ஈர்ப்பு. தொன்மம் மிளிரும் ஆலயம். பிறந்து வளர்ந்த சொந்த மண்ணின்   அம்மன் கோயிலுக்குப் போய் வருவதுபோல் ஒரு திருப்தி. நிறைவு. வானுயர்ந்த அந்த கோபுரத்தைப் பார்த்துக் கண்மூடி தியானித்தாலே போதும்.

இதென்னடா பெரிய அன்புத் தொல்லையாப் போச்சு? என்றவாறே எழுந்தார் கோபாலன்.  எம்புட்டுச் சொன்னாலும் விடமாட்டாங்க போல்ருக்கே? ஒட்டிண்டதைப் பிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…!

வாயை மூடிண்டு கிளம்பி வாங்க…என்னத்தையாவது உளர்றது?.-சமயம் பார்த்து வாங்குகிறாள்.

வெளிலதான நைட் டிபன்? என்றார் பையனைப் பார்த்து. சட்டென்று அந்த நினைப்பு தலை காட்டியது.

தயாளன் அப்பாவைப் பார்த்து அர்த்தத்தோடு  புன்னகைத்தான்.

பின்னே? கோயில் முடிக்கும்போதே மணி ஒன்பது ஆயிடும்…அப்புறம் வீடு வந்து, செய்து,  சாப்டுட்டுப் படுக்கிறதுன்னா மணி பன்னெண்டுதான்.!. அப்டியே எதுத்தாப்ல எதாச்சும் ஒட்டலாப் பார்த்து  நுழைய வேண்டியதுதான்…

போறது போறே…நல்ல தரமான ஓட்டலாப் பார்த்துப் போ. காரமா சூப்புக் கிடைக்கும்தானே?

கேள்வியைப் பாரு…இந்த வயசுல அய்யாவுக்கு சூப்புக் கேட்குதாக்கும்? வயித்துக்காகாதாக்கும். நாக்கு ருசியே இன்னும் போனபாடில்ல….! என்னவோ சந்நியாசி மாதிரிப் பேசறது? எல்லாம் நடிப்பு…!  – தோளில் நொடித்துக் கொண்டு பெரியநாயகி படியிறங்கியபோது கமுக்கமாய் நாய்க்குட்டி போல் கோபாலனும் பின்தொடர்ந்தார்.

                                    ---------------------------------

 

“அநாமதேயர்கள்“             உயிர் எழுத்து மாத இதழ் பிரசுரம் - பிப்ரவரி 2026

சிறுகதை





               கார்ப்பொரேஷன் ஆபீஸ்ல போய்ச் சொல்லுங்க…..-எடுத்த எடுப்பில் இப்படித்தான் பதில் வந்தது அவர்களிடமிருந்து. மேஜையிலிருந்த ஏதோ பேப்பரை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தது அந்தப் பெண். மேற்கொண்டு கேட்க விருப்பமில்லை என்பது போலிருந்தது.

அந்தப் பேப்பர்கள், வந்திருக்கும் மனுக்களோ என்று தோன்றியது. தானும் இப்படியொன்று எழுதிக் கொண்டு வந்து நீட்டியிருக்கலாமோ என்று நினைத்தார் வெங்கடாசலம். பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டு போகச் சொல்லியிருப்பார்கள். பிறகு அது என்ன ஆச்சு என்று அலைய வேண்டும். எங்கேயிருக்கிறது என்றே தெரியாது. தேடி எடுக்கவும் முடியாது. இன்னொண்ணு எழுதிக் கொடுத்திட்டுப் போங்க என்பார்கள் அசால்ட்டாக. வேறென்ன நடக்கப் போகிறது?

உங்ககிட்டத்தான் சொல்லணும்னு சொன்னாங்க…அதுனாலதான் புறப்பட்டு வந்தேன்…என்றார் வெங்கடாசலம்.  பன்னிரெண்டாவது வார்டு கவுன்சிலர் நீங்கதானே? என்றார் கூடவே.அந்தக் கேள்வி அதிகமோ என்று கேட்டவுடன்தான் தோன்றியது. காரியம் முக்கியம். பேச்சா?

அந்தப் பெண் இவரை நன்றாய் நிமிர்ந்து பார்த்தது. என்ன…பிரச்னை பண்ண வந்திருக்கீங்களா? என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை. கண்களில் சிமிட்டலின்றி தீர்க்கமாய் நோக்கினார் வெங்கடாசலம். இதிலென்ன தப்பிருக்கிறது? என்று தோன்றியது அவருக்கு. அவர் பார்வையில் எதிராளி எந்த அர்த்தத்தையும் உணர முடியாது. அப்படியொரு பார்வை வைத்திருக்கிறார் அவர்.

நான்தாங்க அந்த ஏரியாவுக்குக் கவுன்சிலர்..இல்லேங்கல…ஆனா நீங்க சொல்ற வேலையெல்லாம் கார்ப்பரேஷன்லதான் பார்ப்பாங்க…அங்க போய் ஒரு மனு எழுதிக் கொடுங்க…. …ஒரு பத்துப் பேர்ட்டக் கையெழுத்து வாங்கிச் சேர்த்துக் கொண்டு போய்க் கொடுங்க…என்னன்னு கவனிப்பாங்க…. …உங்க ஏரியாவுக்கு குடியிருப்போர் நலச் சங்கம் இருக்கில்ல….! அவுங்க என்ன செய்றாங்க…? அதன் மூலமா வரலாமே…?

அது இருக்கு மேடம்…அதுபாட்டுக்கு….இது நான் குடியிருக்கிற அபார்ட்மென்ட் சம்பந்தப்பட்ட பிரச்னை….அதனாலதான் நேர்ல சந்திச்சுச் சொல்லலாமேன்னு வந்தேன்…

ஐயா…நீங்க வந்ததப் பத்தி நான் ஒண்ணும் குத்தம் சொல்லலை. உங்க நகர் நலச் சங்கத்து மூலமா வந்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் எ.ஃபெக்டா இருக்குமேன்னு சொல்ல வந்தேன்….அபார்ட்மென்ட்களுக்கும் சேர்த்துதானே குடியிருப்போர் நலச் சங்கம்? இல்ல அபார்ட்மென்ட்களாச் சேர்ந்து தனிச் சங்கம் வச்சிருக்கீங்களா? – கேள்வி படு புதியது. இப்படியும் யோசனை தோன்றக் கூடும் என்பதாய் இருப்பதை உணர்ந்தார் வெங்கடாசலம்.

இன்னம் அதுவேறே  தனியா வேணுமா? மேடம்…நான் இங்க புதுசா வந்தவன். அஞ்சாறு வருஷம்தான் ஆகுது.  என் பேச்சையெல்லாம் அவுங்க கேட்க மாட்டாங்க…எங்க அபார்ட்மென்ட்லயே ஒருத்தர் இருக்கார்…அசோசியேஷன் ஆளுதான்…அவருக்குத் தெரியாதா இந்தச் சங்கடம்…தெரிஞ்சு என்ன பண்ண…கண்டுக்காம இருக்கார்…பிரச்னையைக் கையிலெடுத்தா மொத்தமும் தன் தலைல விடிஞ்சிடும்னு கம்முன்னு கிடக்கார்…என்ன செய்யச் சொல்றீங்க….? அந்த நலச் சங்கத்துல இ.சி. மெம்பர்னு நினைக்கிறேன்.

அப்ப நீங்க ஒத்தையாப் போய்த்தான் சொல்லணும்…சீக்கிரம் போய் மனுக் கொடுங்க…இல்லன்னா ஸ்க்வாடு வர்றபோது பார்த்திட்டு ஃபைன் போட்டுடப் போறாங்க…!

கார்ப்பரேஷன்காரங்க ஏற்கனவே வந்தபோது பார்த்து சொல்லிட்டுப் போய்ட்டாங்கம்மா…சீக்கிரம் கழிவு தண்ணி வழியறதச் சரி பண்ணுங்கன்னுட்டு நகர்ந்துட்டாங்க…

அவுங்ககிட்டயே சொல்லியிருந்தீங்கன்னா ஆட்களை அனுப்பிச்சிருப்பாங்களே…? ஒரே நாள்ல செய்து முடிச்சிட்டுப் போயிடுவாங்க…

அதக் கேட்கிறதுக்குள்ளதான் ஓட்டமெடுத்துட்டாங்களே…வேறே ஆட்கள் வருவாங்கன்னாங்க….புரியல…!அதான் உங்களைப் பார்த்துக் கேட்கலாம்னு வந்தேன்…

வேறே ஆட்கள்னா? டெய்லி வேஜஸ் ஆளுகளா? டெம்பரரியா சிலர் வேலை பார்க்குறாங்களே…அவுங்களச் சொல்றீங்களா?

அது எனக்கு எப்படிம்மா தெரியும்? நீங்கதான் சொல்லி ஆட்களை அனுப்புவீங்கன்னு நினைச்சு வந்தேன்…வந்தாங்கன்னா என்ன ஏதுன்னு பேசி, எவ்வளவு செலவு ஆகும்னு சொன்னாங்கன்னா அதத் தயார் பண்ண வசதியாயிருக்கும்…! நான் மட்டும் முடிவு பண்றதில்ல…ஆறு வீட்டுக்காரங்க இருக்காங்க…!

அந்தம்மாள் அமைதியாயிருந்தது. ஏதோ யோசனை செய்தது போலிருந்தது. சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியது போலவும் இருந்தது. இரண்டு முறை இவரை நிமிர்ந்து பார்த்துத் தலையைக் குனிந்து கொண்டது அதைத்தான் உணர்த்தியது.

ஆட்கள் வந்திருப்பாங்களே…? வரல்லியா? – மொட்டையாய் இப்படிக் கேட்டதும்…மனதில் நினைத்ததைச் சொல்வோமா வேண்டாமா என்று யோசித்தார் வெங்கடாசலம்.  

தான் சொல்ல நினைத்திருப்பதைக் கோபத்தில் ஏதேனும் வேண்டாத வார்த்தைகளில் சொல்லி விடுவோமோ என்று அவர் மனது தயங்கியது. அதே சமயம் சொல்லாமல் இருப்பதும் தவறு என்றுதான் தோன்றியது. எப்படி, எங்கு, எதில் ஆரம்பித்துச் சொன்னால் எடுபடும் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தது அவர் மனம்.

ரெண்டு மூணு ஆட்கள் வந்தாங்கம்மா….அதப்பத்திக் கேட்கலாமுன்னுதான்.……

வந்தாங்களா? அப்பப் பேசிற வேண்டிதானே?  டக்குனு வேலை முடிஞ்சிடுமே…..! கவுன்சிலரின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது.

அவுங்க யாருன்னே தெரிலயேம்மா…எல்லாத்தையும் மொட்ட மொட்டையாப் பேசறாங்க…கேட்டா சரியாச் சொல்ல மாட்டேங்கிறாங்க…இந்த ஏரியா ஆட்கள்தான்னு சொன்னா என்னன்னு நினைக்கிறது? தனியாச் செய்றதுன்னா நாமளே கூலி ஆட்களைப் பிடிச்சுச் செய்திடலாமே?

கூலி ஆட்கள் எதுக்கு? பயந்துட்டீங்களா? இந்தப் பகுதில  பல வீடுகளுக்கு அவுங்கதான் செய்திட்டு வர்றாங்க….லூஸ் டாங்க் போடுறது…கழிவு தண்ணிய அதுல இறக்கி விடுறது…வடிகால் கட்டியிருக்காங்கல்ல…அத்தோட ஜாயின் பண்ணி விடுறது….இப்டியான வேலைகள செய்து கொடுத்திடுவாங்க….சும்மா பயப்படாமச் செய்யச் சொல்லுங்க…சட்டுன்னு வேல முடிஞ்சி போயிடும்…

இல்ல…அது சம்பந்தமாத்தான் உங்களோட பேசலாமுன்னு……-தயங்கியவாறே நிறுத்தினார் வெங்கடாசலம். மேற்கொண்டு விரிவாகச் சொல்லப் புகுந்தால் சண்டையில் கொண்டு விட்டு விடுமோ என்கிற தயக்கமிருந்தது அவரிடம். கேள்விப்பட்ட வகையில் அது ஒரு ஏற்பாடுதான் என்று மனதில் தோன்றியிருந்தது.

என்கிட்டப் பேச என்ன இருக்கு? வேலை செய்றவுக அவுக…அவங்க கிட்டப் பேசி முடிச்சிக்குங்க…முன்னப் பின்ன இருக்கத்தான் செய்யும்…கூட்டிக் குறைச்சுப் பேசி முடிச்சிக்க வேண்டிதான். அபார்ட்மென்ட்ல எல்லா வீட்டுக்கும் பிரிச்சித்தானே  கொடுக்கப் போறீங்க…? தைரியமாச் செய்ங்க…கார்ப்பரேஷன் ஆளுக திரும்ப வந்திடாம…..! அபராதம் போட்டாங்கன்னா கன்னா பின்னான்னு இருக்கும்…

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் வெளியேறினார் வெங்கடாசலம். அதற்கு மேல் வெளிப்படையாகப் பேச அவருக்கு வாய் வரவில்லை. கிளம்பும்போது இருந்த வேகம் முற்றிலுமாகத் தணிந்திருந்தது. கவுன்சிலர் யாருக்காவது அவராகவே பேசி ஆட்களை ஏற்பாடு செய்து கொடுப்பார் என்பது அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அது நடக்கவில்லை. அந்தம்மாவே அவர்களை இன்னார் என்று குறிப்பிட்டுப் பேசாமல் யாரோ என்பதுபோல் பேசியது இவருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. தன் ஆட்களைத் தானே காட்டிக் கொடுத்தால் எப்படி என்று யோசிக்கிறார்களோ என்னவோ? நமக்கு எதுக்கு அந்த வம்பு?

ஒரு வேளை தன் ஆட்கள்தான் என்று காட்டிக் கொள்வதில் தயக்கமிருக்கும் போலிருக்கிறது. அவரே அப்படி ஜாக்கிரதையாக இருக்கும்போது, பணத்தை வசூல் பண்ணிக் கொடுக்கும் இடத்தில் நிற்கும் தான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாக வேண்டும்? யாரிடம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று ஒவ்வொரு வீட்டுக்காரனாய்க் கேட்பானே…அவர்களுக்கு என்ன என்று தீர்மானமான பதிலைச் சொல்வது?

இப்படி ரெண்டு மூணு கோஷ்டி திரியுதுங்க இந்த ஏரியாவுல…அவிங்கதான் செய்றானுங்க அங்கங்க இருக்கிற வீடுகள்ல…அத வச்சுதான் அவுங்களையே நாமளும் ஃபிக்ஸ் பண்ண வேண்டிர்க்கு….உங்க எல்லாருக்கும் சம்மதமா சொல்லுங்க…சம்மதம்னா பணத்தை அபார்ட்மென்ட் அக்கௌன்டுக்கு உடனடியா டிரான்ஸ்பர் பண்ணுங்க…இல்லன்னா விடுங்க…- இப்படிச் சொல்லி விடலாமா?

நினைக்கத்தான் முடிந்தது வெங்கடாசலத்தினால். நினைப்பதையெல்லாம் பேசி விட முடியுமா? வந்து மாட்டிக் கொண்டாயிற்று. வீட்டு ஓனர் என்று ஒரே ஒரு ஆள் மட்டும்தான் குடியிருக்கிறோம். மற்றதெல்லாம் வாடகை ஆட்கள்தான். அவர்களோட வாட்சப்பில் பேசிப் பேசிப் பொறுமையிழந்து நொந்து நூலாகிப் போயாயிற்று. ஒவ்வொரு காரியத்திற்கும் இழுபறிதான். ஒரு டியூப் லைட் மாற்றுவதென்றாலும் ஆயிரம் கேள்விகள். அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி மாய்வதற்குள் போனால் போகிறது என்று தன் செலவிலேயே ஒன்றை வாங்கி கமுக்கமாய் மாட்டி விட்டு  ஓய்ந்து விடலாம் போலிருக்கிறது.

அப்படியும் சில முறை செய்துதான் இருக்கிறார் வெங்கடாசலம். அதற்கு மனைவியிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம் அவருக்கு.

ஏன்…பென்சன் ஜாஸ்தியாப் போச்சாக்கும் அய்யாவுக்கு? ரொம்ப தாராளமா எடுத்து வீசுறாப்புல இருக்கு….ஒரு டியூப்பானா என்ன? கணக்குல ஏத்தி வச்சிக்கிறது. வேறே செலவுகள் பின்னாடி வராமயா போகப் போகுது? அப்போ அதோட இந்தச் செலவையும் சேர்த்து வசூல் பண்றது…யார் தரமாட்டேன்னு சொல்லப் போறாங்க…? மனுஷாள்னா ரெண்டு கேள்வி கேட்கத்தான் செய்வாங்க…பதில் சொல்லித்தான் ஆகணும்….சொன்னவுடனே தட்சிணையை எடுத்து கீழே வச்சிடுவாங்களா…? பொறுமையாப் பேச வேண்டிதான்….வாங்கிக்க வேண்டி தான்…..

தன் கணவர் இந்த வயதான காலத்தில் இந்தப் பொறுப்பை ஏன் சுமந்து திரிய வேண்டும் என்கிற பச்சாதாபமே இல்லியே கௌரியிடம். ஏதோ எனக்கான கடமை போல் அல்லவா சொல்கிறாள்?

அப்போ ஒண்ணு செய்யு…வாட்சப்புல நீயே டிஸ்கஸ் பண்ணு. சம்மதம் வாங்கு…எல்லார் பணமும் வந்து சேரட்டும். பிறகு வேலையைத் துவக்கலாம்….என்றார் படாரென்று.

எதச் சொன்னாலும் ஏறுக்கு மாறாப் பேசுங்க…வேறென்ன தெரியும்? எங்கிட்டதான் எல்லா வீராப்பும்….வழிமுறையைப் சொல்வோம்னா….இப்டியா பேசறது?

கைபேசி அலறியது. எடுத்தார். ஏற்கனவே வந்த எண்ணாய்த்தான் இருக்கும் என்று தோன்றியது. பெயர் கேட்டு சேமித்து வைக்கவில்லை. யாரோ, எவனோ…கண்டவன் பெயரையெல்லாம் ஃபோனில் சேர்த்து வைக்க முடியுமா? அப்புறம் இன்னொருத்தன் பேசுவான்….நான்தான் இந்த ஏரியாவுக்கும்பான்…ஏற்கனவே ஒருத்தர்ட்டப் பேசிட்டேன்னு அவன்ட்டச் சொல்ல முடியாது. சொன்னா…அந்தாள் ஃபிராடு…அவன்ட்டக் கொடுத்திடாதீங்க…அவன்ட்டப் பணத்தக் கொடுத்து ஏமாந்துடாதீங்க…அப்புறம் நான் பொறுப்பில்ல…என்று ஏதோ இவன் யோக்யன் போலப் பகருவான். எவனை நம்பி இந்த வேலையை முன்னெடுப்பது?

ஜன்னல் வழி வந்த நாற்றம் உமட்டியது.  

காத்துல வர்ற மணத்தப் பார்த்தீங்களா? பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்களாம்….இன்ஃபெக் ஷன் ஆயிடும்…சீக்கிரம் அடைக்கப் பாருங்கன்னு…

நாலு வீடு தள்ளி செப்டிக் டாங்க் எடுக்குறாங்கடீ….அதப் போய் நம்ம வீட்டு வாடைங்கிறியே…?

அந்த வாடை வேறே…இது வேறே…உங்களுக்கு வித்தியாசம் தெரில…சாக்கடைத் தண்ணிக்கும், கழிவு நீர் கிளீனிங்குக்கும் மணம் வெவ்வேறே….நல்லா கவனிங்க….

ஆஉறா…வீட்டைச் சுற்றி என்னெல்லாம் மணம்? சுகந்த மணங்கள் நம்மைச் சூழ்ந்து நின்று  மயக்குகின்றனவே…! என்னே கொடுப்பினை? -வயிற்றெரிச்சலில் அதை இலகுவாக்க முயன்றார் வெங்கடாசலம்.

ஏரியா பூராவும் எங்கேயாவது இந்தக் கழிவு நீரேற்று லாரி நின்று கொண்டுதான் இருக்கிறது. எந்த வீட்டிலாவது செப்டிக் டாங்க் கழிவு எடுக்கும் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி எடுக்கும்போது குறைந்தது இடதும் வலதுமாக நாலைந்து வீடுகளுக்கு அந்த மணம் பரவும்.

மனுஷன் உட்கார்ந்து சாப்பிட முடியுதா? வாயத் திறந்தா இந்த வாடைதான் வாய்க்குள்ள போகுது….பிறகு சோத்தை எங்கருந்து உள்ளே தள்றது? மூக்குல இந்த நாத்தத்தை வாங்கிக்கிட்டே எவனாவது சாப்பிட முடியமா? அட…ஒரு வாய் தண்ணி குடிக்க முடியுமா சொல்லு….? இருக்கிற ஜன்னல் பூராத்தையும் அடைச்சிட்டாலும் அதை மீறி வீட்டுக்குள்ள பூராவும் பரவி நிற்குது…இப்டி பக்கத்துல எங்கயாச்சும் செப்டிக் டாங்க் லாரி அள்றான்னா…நாம சமைக்கிறதையும், சாப்பிடுறதையும் நிறுத்திட வேண்டிதான் அரை மணிக்கு. டைம் இல்லயா…ரூமுக்குள்ள போயி கதவை இறுக்க அடைச்சிட்டு பாதகமில்லைன்னு நமக்கு நாமே நினைச்சிட்டு வாயில அள்ளி அள்ளிப் போட்டுக்க வேண்டிதான்…

நம்ம வீட்டுக்கு லாரி வந்து நிக்கிற போது மத்தவங்களுக்கும் இடைஞ்சலா இருக்குமே…அதையும் நினையுங்க…! இந்த நகர் புராவும் இப்படித்தான். எங்க பாதாளச் சாக்கடை போடலியோ அந்த ஏரியாவுக்குக் குடி வந்திருக்கக் கூடாது. வந்தது நம்ம தப்பு. விலைக்கே வாங்கிட்டு வந்து குந்திக்கிட்டு…குறைப்பட்டு என்ன புண்ணியம்?

நாம இங்க வந்தே சரியாக் கணக்குப் பண்ணினா ஏழெட்டு வருஷம் ஆகப் போகுது…இந்தப் பத்து வருஷத்துல படாத பாடு இல்ல…ஏண்டா அபார்ட்மென்ட்ல வீடு வாங்கினோம்னு இப்பத்தான் புத்தி வந்திருக்கு….தனி வீடு கட்டிப் போக கையில டப்பு வேண்டாமா? குறைஞ்சது ஒன்றரைக் கோடி இருந்தாத்தான் இடம் வாங்கி வீடும் கட்ட முடியும். நமக்கு அது சாத்தியமா? மழைல கஷ்டப்பட்டாச்சு, வெள்ளத்துல மிதந்தாச்சு….எல்லாமும் சாதாரண மக்களுக்குத்தான்…பெரிய பணக்காரனுக்கில்லே…அரசாங்கத்துக்கு இல்லே…நடுத்தர மக்களுக்கு மட்டும்தான் இந்தத் தீராத கஷ்டம். அதனாலதான் அவுங்க எல்லாத்துக்கும் பழகிக்கிட்டு, சகிச்சிட்டிருக்காங்க….வேறே வழி?

திரும்பவும் ஃபோன் அலறியது. எடுத்து இணுக்கினார் வெங்கடாசலம்.

சார்…நீங்க யாரோ வேறே ஆள்ட்டப் பேசியிருக்கிறதாக் கேள்விப்படுறேன்…அவுங்க இந்த ஏரியா ஆட்கள் கிடையாது. அப்டிச் சொல்லிட்டுத் திரியறானுங்க…எங்களுக்குத் தெரியாம அவிங்ககிட்டே இந்த வேலையைக் கொடுத்தீங்கன்னா நாங்க ராத்திரியோட ராத்திரியா வந்து இடிச்சிப் போட்டுட்டுப் போயிடுவோம்…பார்த்துக்குங்க….. – சொல்லிவிட்டு லைனை அந்தாள் உடன் கட்பண்ணி விட்டதை உணர்ந்தார் வெங்கடாசலம்.

உறலோ…உறலோ….என்று கத்திப் பார்த்தார். இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதே நம்பருக்குப் போட்டார். எடுக்கவில்லை. இந்த ரெண்டாவது மூஞ்சி யாரென்று இன்றுவரை வெங்கடாசலத்திற்குத் தெரியாது. அநாமதேயக் குரலாய் இருந்தது. அவர்களாய் வரும் அன்று வருவார்களாம். அதுவரை பொறுத்திருக்க வேண்டுமாம். என்ன தெனாவெட்டான பேச்சு? கார்ப்பரேஷன் ஆட்களும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்களாம். அவர்கள் சார்பாக இவர்களே…! யார் இவர்கள்? எங்கிருந்து புறப்பட்டார்கள்? கண்ணுக்கே தெரியாத மாயமாய்ப் பேசுகிறார்கள். வந்து பேசினவனையும் செய்ய விடமாட்டேனென்கிறார்கள்.

யோசனை பலமானது வெங்கடாசலத்திற்கு. நேற்றிருந்ததை விட கழிவு நீர் அதிகமாகி பிளாட்பாரத்தை விட்டுக் கீழிறங்கி, தார்ச்சாலையில் வியாபித்திருந்தது. வண்டிகள் போகும்போது பறந்தடித்தது. பக்கத்துவீட்டம்மா நின்று கவனித்துக் கொண்டேயிருந்தது.

எதடா புகார் சொல்லலாம் என்று காத்திருந்தது அது. ஏற்கனவே உப்புத் தண்ணிக் குழாய் தொட்டி நிரம்பி ஓவர்ஃப்ளோ ஆகுது. அந்தத் தண்ணி எங்க வீட்டுல தெறிக்குது…மோட்டாரை யாரும் டயத்துக்கு நிறுத்த மாட்டேங்கிறீங்க…எங்கிட்டயாவது பொறுப்பை விட்டுடுங்க…தெனமும் நானே மோட்டார் போடுறேன்…நிறுத்துறேன்…சரியா…ஒரு வேலை மிச்சம்தானே உங்களுக்கு? – எவ்வளவு கிண்டலான பேச்சு? தொட்டதெல்லாம் மென்டல் டார்ச்சர்? நினைவு தப்பிப் போகிறது சிலருக்கு வயசான காலத்தில். அப்படி ஆனால் கூடப் பரவாயில்லை போலிருக்கிறது…

சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் வெங்கடாசலம். நகரின் உட்பகுதிக்குள் மட்டும் ஓட்டிக் கொள்வார். மெயின்ரோட்டில் விட மாட்டார். சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சி என்று நினைத்தார். டூ வீலர் வைத்திருக்கிறார்தான். அதை எடுப்பதில்லை. என்றாவது அபூர்வமாய். இப்போதெல்லாம் மனதுக்குள் பயம் வந்துவிட்டது. பயம் வந்தால் அந்த பயமே விபத்தை உண்டாக்கி விடும் என்று எண்ணினார். அடேயப்பா…என்னா வேகமாய்ப் போறாங்க இந்த சிட்டில? இவங்களுக்கு நடுவே நான் போனால் அடிச்சுத் தூக்கி எறிஞ்சிடுவாங்க போல்ருக்கே…? ஊர்ல தொட்டதுக்கெல்லாம் டூ வீலர்ல போன தானா இப்படி அதைப் போட்டு வைத்திருக்கிறோம்? அவருக்கே வயிற்றெரிச்சலாய்த்தான் இருந்தது.

சும்மாக் கிடந்து துருப்பிடிக்கிறதுக்கு வேலை செஞ்சு தேயலாமே? என்பாள் கௌரி. மனுஷாளுக்கு அது பொருந்துமென்றால் ஒரு இயந்திரத்துக்கும் அது பொருந்தும்தானே?

ஓரத்தில் ஒரு ஃப்ளக்ஸ் போர்டு தென்பட்டது. நிறைய முகங்கள் தலை தலையாய். நண்பர்கள் குழு வட்டம். 18-வது வார்டு என்று போட்டிருந்தது. அதில் ஒன்று தன்னிடம் வந்து பேசி விட்டுப் போன ஒரு பையன் என்பதைக் கண்டு பிடித்து விட்டார் வெங்கடாசலம். ஆனால் சற்று முன் பேசிய அந்த இன்னொருவன், இடித்துப் போட்டு விடுவேன் என்று  மிரட்டியவன் யாராயிருக்கும் என்று அவர் பார்வை தேடியது. தேடி என்ன பயன்? அவனைத்தான் தான் நேரிலேயே பார்த்ததில்லையே? இதில்தான் யாரோ ஒருவனாக அவன் இருக்க வேண்டும்…என்று அவர் மனசு சொல்லியது.

போட்டோவில் பெரிய ஆகிருதியாய் இருப்பவர்கள் நேரில் சுணங்கித் தெரிகிறார்கள். நேரில் சுணக்கமாய்த் தோன்றுபவர்கள்  சிலர் போட்டோவில் தடாலடியாய்த் தென்படுகிறார்கள். முதலில் அங்கங்கே ப்ளக்ஸ் போர்டுகளை நட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என்று கிளம்பியிருக்கிறார்களோ என்னவோ? நண்பர்கள் குழு வட்டம் என்கிறார்கள். கீழே முகவரி என்று எதுவுமில்லை. ரெண்டு மூன்று ஃபோன் எண்கள் தென்பட்டன. தான் சேமித்து வைத்திருக்கும் ஒரு ஃபோன், சற்று முன் மிரட்டலாய் வந்த ஃபோன் எண். எதுவும் இதில் இருக்குமா என்று அவர் பார்வை துழாவியது. சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு எடுத்துப் பார்த்தார். அந்தப் பையனின் ஃபோன் எண். மட்டும் இருந்தது. சற்று முன் மிரட்டிய எண். போர்டில் இருந்த எண்களோடு பொருந்தவில்லை. அப்படியானால் அவன் யார்?  யோசனை போனது வெங்கடாசலத்திற்கு.

அப்போ அந்த முதல் பையன் மீண்டும் வந்தால் இந்த மிரட்டல் போனைப்பற்றிச் சொல்லலாமா? என்று யோசிக்க ஆரம்பித்தார். சாக்கடை வேலையை எப்படியாவது வெகு சீக்கிரம் முடித்தாக வேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது. கார்ப்பரேஷன் ஆட்கள் வந்து ஒரு வேளை ஃபைன் போட்டு விட்டால்…அந்தப் பணத்தைக் கட்டிவிட்டு குடியிருப்பவர்களிடம் வசூல் பண்ண முடியாது. தரமாட்டேன் என்பார்கள். எடுத்துச் செய்பவனுக்கு அவ்வளவுதான் மரியாதை.

எடுத்த முயற்சிகளையெல்லாம் வாட்சப்பில் பேச ஆரம்பித்தார் வெங்கடாசலம்.  சிலர் ஃபோனில் உடனடியாகப் பேசினார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது பெரும்பாடாய்ப் போனது வெங்கடாசலத்திற்கு. எதற்காகத் தான் கிடந்து இந்தப் பாடு படுகிறோம் என்று விரக்தி வந்தது இவருக்கு. ஆறு வீடுகளில் எவனுக்கும் இல்லாத அக்கறை தனக்கு மட்டும் எதற்கு? இங்கேயே குடியிருப்பதனால்தானே தன் தலையில் விடிந்திருக்கிறது? மற்ற வீட்டுக்காரப் பசங்கள் எல்லாம் .டி. வேலையில் இருப்பவர்கள். இருந்தால் என்ன? செய்யக் கூடாது என்றிருக்கிறதா? தன்னை விட வயதுக்காரப் பிள்ளைகள்தானே சுறுசுறுப்பாக இயங்க முடியும்? வேக வேகமாகப் போனில் பேசவும், வாட்சப்பில் இயங்கவும் அவர்களுக்குத்தானே சாத்தியம். தான் ஏன் வீணே மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்ள வேண்டும் இந்த வயதான காலத்தில்? யோசித்து யோசித்து நொறுங்கித்தான் போனார் வெங்கடாசலம். ஆபீசில் எடுத்து எடுத்து எல்லா வேலைகளையும் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டதுபோல் இங்கேயும் தன்னையறியாமல் இந்த வலைக்குள் விழுந்து விட்டோமோ? ஆபீசிலாவது எல்லாம் ஒழுங்காய் இருந்தது. அது வேண்டும் இது வேண்டும் என்றால் எடுத்துக் கொடுக்க ஆளிருந்தது. இங்கு எவனுமில்லையே? தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கக் கூட யாருக்கும் பொறுமையில்லையே?

            பாதி நாள் நான் வெளியூரு. நான் ஏன் சார் ரிப்பேர் செலவுக்குக் கொடுக்கணும்?

            நான் ஒருத்தன்தான் இருக்கேன். என் உபயோகமே ரொம்ப ரொம்பக் கம்மி. என்னால எப்படி சார் சாக்கடை அடைக்கும்?  ஓவர் ஃப்ளோ ஆகும்?

            சோக்பிட் ரிப்பேர்னா பில்டர்தான சார் பார்த்துக் கொடுக்கணும்…நாம ஏன் கார்ப்பரேஷன்  ஆள்ட்டச் சொல்லணும்? எதுக்கு ரிப்பேர் சரி பார்க்கணும்?

            பில்டர் காலம் பூராவும் பார்த்துக் கொடுத்திட்டே இருப்பாரா? அவர் உறான்ட் ஓவர் பண்ணினதோட விஷயம் முடிஞ்சிது. அப்புறம் வர்றதெல்லாம் நாமதான் பார்த்துக்கணும். நம்ம பொறுப்புதான்…

அப்ப ஒனர்ட்டப் பேசுங்க சார்…

ஒனர்ட்ட நான் ஏன்ங்க பேசணும். நீங்க காசைக் கொடுத்திட்டு உங்க வாடகைல கழிச்சிக்குங்க…நான் எடுத்து செய்றதே பெரிசு…இதுல என்னை ஏவுறீங்களா நீங்க…? -கோபமாய்த்தான் கேட்டார் வெங்கடாசலம்.

இனி இந்த மாதிரி வேலைகளில் தான் ஈடுபடுவதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் அப்போது. வயதான காலத்தில் நான் இதற்கு ஆளில்லை. இளைஞர்கள்…உங்களுக்குள்ள யாராவது எடுத்து செய்துக்குங்க…என்னால முடியாது. என்ன பைசாவோ அதத் தந்துடறேன். அதான் இனிமேல் என்னால முடியும்….என்று வாட்சப்பில் போட்டுக்கொண்டேயிருந்தார்.

சட்டென்று ஒன்று மனதில் தோன்றியது. அந்தப் பையனிடம் வேலையை ஒப்படைத்து செய்தால், நான் வந்து இடித்துப் போட்டு விடுவேன் என்று மிரட்டினானே அவன் எப்படி அந்த ப்ளக்ஸ் போர்டில் இருப்பான்? அவன்தான் சண்டைக்காரன் ஆயிற்றே…? ஒரு வேளை அவுங்களுக்குள்ளேயே கோஷ்டிச் சண்டையோ? ஏழெட்டுப் பத்துப் பேர் தெரிகிறார்களே போஸ்டரில்? ரெண்டு கோஷ்டி, மூணு கோஷ்டி என்று இருந்தால்….? அப்போ அந்தப் பையனிடம் வேலையை ஒப்படைத்தால் அவனுக்குத் தெரியாமல் போகுமா? வாங்கும் காசில் பங்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருப்பானோ? இப்போதெல்லாம் பங்குச் சண்டையில்தானே வெட்டும் குத்தும் நடக்கின்றன? அட…கொலை கூடச் செய்கிறார்களே? அதை முன் பகை என்று வேறு சொல்கிறார்கள்.

இப்போது என்னதான் செய்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்தானோ? தீவிரமாக யோசித்தார். தன் யோசனையை நிறைவேற்றுமுன் வாட்சப் குருப்பில் என்ன செய்யலாம் என்று கேட்டு விலாவாரியாக விவரித்தார்.

ஆளாளுக்கு தங்கள் அபிப்பிராயத்தை ரொம்பவும் பொறுப்பாகச் சொல்வது போல் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வாயால் வழிய விடுவதுதானே…காசா பணமா? யோசனை சொல்வதற்கு எவனுக்கு வலிக்கிறது? தாங்கள்தான் தீவிரச் சிந்தனையாளர்கள் என்று காட்டிக் கொண்டார்கள். விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு தங்களுக்கு ஈடு யாரும் இல்லை என்று வெளிப்படுத்தினார்கள்.

கவுன்சிலரையும் பார்க்க வேணாம்….கண்டபடி திரியறவங்களையும் அணுக வேண்டாம். எந்த நலச் சங்கமும் எதுவும் செய்யாது. எதுவானாலும் நாமதான் செய்தாகணும் நமக்கு….அதுக்கு ஒரே வழி இதுதான் என்றார்கள்.

எப்படியோ…மெஜாரிட்டிக் கருத்து ஒத்துப் போவதை உணர்ந்தார் வெங்கடாசலம். நீங்க சொன்னதைத்தானே செய்திருக்கேன் என்று நாளை கையைக் காட்டி விடலாம். எடுத்துச் செய்தது ஒரு பாவமா? எனக்கென்ன வேலையில்லாமயா அலையறேன்.   சொந்த வேலையை விட்டுட்டு இதுக்குன்னு நாயா பேயா தெனமும் அலைஞ்சிருக்கேன்…எவனும் நாக்கு மேல பல்லுப் போட்டு என்னை ஒரு வார்த்தை சொல்ல முடியாதாக்கும்….சொல்லித்தான் பார்க்கட்டுமே…? அப்புறம் என்ன ஆகுது பாரு….நான் இல்லைன்னா இந்த அபார்ட்மென்டே நாறிப் போகுமாக்கும். என்னவோ எல்லாப் பயலுகளும் கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடிட்டே இருக்கானுங்களே…நிக்க நேரமில்லாம அலையறானுங்களே…நம்ம பிள்ளை மாதிரிதானே ஒவ்வொருத்தனும்….முடியுதோ முடியலையோ நாம செய்ததாகவே இருக்கட்டும்னு நான் ஓடியாடிச் செய்திட்டிருக்கேன்…அதப் பழி சொல்ல வந்தா அந்தப் பாவம் சும்மா விடாது…. – தனக்குத்தானே புலம்பிக் கொண்டே புறப்பட்டார்.

அவர் போய் நின்ற இடம் கார்ப்பொரேஷன் அலுவலகம். கையில் விரிவாக எழுதப்பட்ட மனு இருந்தது. அந்த மனுவில் அபார்ட்மென்டில் குடியிருக்கும் அனைத்து நபர்களின் கையொப்பமும் தேதியுடன் இடப்பட்டிருந்தது.

நேரே உள்ளே நுழைந்து அலுவலகத் தலைமையையே சென்று பார்க்க உள்ளே அழைக்கப்பட்டார். எதிரே போய் அமர்ந்தார். தான் ஒரு முன்னாள் மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர்(ஓய்வு) என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கையோடு கொண்டு வந்திருந்த மனுவை எடுத்து  நீட்டினார்.

மனு கவனமாய்ப் படித்துப் பார்க்கப்பட்டது.

நீங்க எந்த வெளி ஆட்களிடமும் கொடுக்க வேண்டாம். அதெல்லாம் அதிகாரபூர்வமானதில்ல. ஆனா அப்படிச் சொல்லிட்டு நிறையத் திரியறாங்க…சில பேர் செய்யவும் செய்திருக்காங்க….போனது போகட்டும்…நீங்க இங்க வந்ததுக்கு மகிழ்ச்சி. இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்குங்க…நாளைக்கு எங்க ஆளுங்க வருவாங்க…வந்து என்ன ஏதுன்னு பார்த்துட்டு வேலையை முடிச்சிக் கொடுத்திடுவாங்க…கார்ப்பரேஷன் நிர்ணயிச்சிருக்கிற கூலியை நீங்க கொடுத்தாப் போதும்…புரிஞ்சிதா? அதிகமா ஒரு பைசா யாருக்கும் கொடுக்க வேண்டாம்..அப்படி யாராச்சும் ஏதாச்சும் கேட்டாங்கன்னா இங்க வந்து சொல்லுங்க…புகார் கொடுங்க…நான் பார்த்துக்கிறேன். சரிங்களாய்யா….! போயிட்டு வாங்க….! நாளைக்கு எங்க ஆட்கள் வந்து வேலையை முடிச்சிடுவாங்க….-சொல்லியவாறே வணக்கம் தெரிவித்தார் அந்த அதிகாரி.

ரொம்ப நல்லவராயிருக்காரே?-நினைத்துக் கொண்டார். திருப்தியோடு எழுந்து வாசலுக்கு வந்தார் வெங்கடாசலம்.

கேட்டைத் தாண்டி சாலைக்கு வந்து சேர்ந்தபோது கைபேசி அலறியது.

உறலோ…ஐயா….! நான்தான் கதிரவன் பேசறேன்…இன்னைக்கு ராத்திரி வந்து உங்க அபார்ட்மென்ட் சாக்கடை வேலையை முடிச்சிடலாமாங்கய்யா…ஆளுகளத் தயார் பண்ணிட்டேன்….மத்தியானம் போல ஃபோன் பண்ணிட்டு வர்றேன்….பணத்தைத் தயார் பண்ணி வையுங்க…வீட்டுக்கு அஞ்சாயிரம். ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல?  மொத்தம் முப்பதாயிரம். சரிங்களா….உங்களுக்கு மட்டும்தான் இந்த ரேட்டு. வேற எடம்னா அம்பது வாங்குவோம். … …புரிஞ்சிதுங்களா…! மத்தியானமா ஃபோன் பேசறேன்….இன்னைக்கு நைட்டு வேலையை முடிச்சிடுவோம்…சரிங்களா…?-லைன் துண்டிக்கப்பட்டது.

கைபேசியைப் பார்த்துக் கொண்டே பிரமித்து நின்றார் வெங்கடாசலம். இன்னைக்கு நைட்டே…என்றால் என்ன பொருள்? எதுக்காக ராத்திரி வந்து இந்த வேலையைச் செய்யணும்? யாருக்கும் தெரியாமச் செய்றதைத்தான் நைட்ல செய்வாங்க…சொல்லுவாங்க…யாருக்கும் தெரியாமன்னாலே அதுல ஏதோ தப்பு இருக்குன்னுல்ல அர்த்தமாகுது?  ஊரெல்லாம் தூங்கிட்டிருக்கும்போது….மிஷின் போட்டு, தடதடன்னு சத்தத்தோட தரையை உடைச்சு உடைச்சு குழி பறிச்சு இந்த வேலையைச் செய்வாங்களா? என்னய்யா தூக்கத்தக் கெடுத்திட்டுன்னு எவனாச்சும் சண்டைக்கு வந்தான்னா? நம்மளல்ல புகார் கொடுப்பானுங்க… அதிக பட்சம் அரை மூட்டை சிமின்டாகுமா…அட…ஒரு மூட்டைன்னே வைப்போம்…அரை வண்டி ஜல்லி போதாதா? ஒரு வண்டி மணல்?  தண்ணி இங்கயே இருக்கு….இதுக்கு எதுக்கு முப்பதாயிரம்? செய்ற வேலையே தப்பு…செய்ற முறையும் தப்பு…இதுல அதிகாரம் வேறே? என்னா தைரியமா உரத்துப் பேசுறானுங்க…? இவங்களெல்லாம் யாரு கேட்கறது? தண்டல் வசூல் மாதிரில்ல தடாலடி பண்றானுங்க…என்ன அநியாயம்?

அடுத்து மதியத்துக்கு மேல் ஃபோன் வந்தால் எடுப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டார் வெங்கடாசலம். ஆட்கள் நேரில் வந்தால்? என்று ஒரு கேள்வி விழுந்தது.

நேர்ல வந்தா என்ன? கார்ப்பரேஷன்ல சொல்லியாச்சு…அவுங்க வந்து செய்றாங்கன்னுட்டுப் போக வேண்டிதான்…! – முடிவு செய்து கொண்டார்.

எடுத்த நடவடிக்கைகளை வாட்சப்பில் எல்லோருக்கும் தெரிவித்தார்.

நாளைக்கு சனிக்கிழமை லீவுதான் சார்….நாங்க இருக்கோம்…வந்து நிக்கிறோம் சார்… பயப்படாதீங்க… என்றார்கள். அதுவே மிகப் பெரிய ஆறுதலாய் இருந்தது.அட…பொறுப்பாப் பேசுறாங்களே…? ஆச்சரியமாய் இருந்தது வெங்கடாசலத்திற்கு. பயப்படாதீங்க…அந்த வார்த்தைதான் உறுத்தியது. பயந்திருந்தால் இத்தனை செய்திருக்க முடியுமா? எட்டியே பார்க்காத, வழி முறையே அறியாத, இவர்கள் சொல்லும் வார்த்தையா இது? முதலுக்கு மோசமில்ல…அவ்வளவுதான்…  அவர்களை வைத்தே அந்த வேலைக்கான கூலியையும் பேசி, கார்ப்பரேஷன் பணியாளர்களுக்கு நேரடியாகக் கொடுத்துத் தீர்த்து விடவேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டார்.  கழிவு நீர் வடிகால் ரிப்பேர் திருவிழாவுக்காகக் காத்திருக்கலானார்.

எந்தக் காரியமானாலும் “முடிவெடுக்கும் திறன்“ என்பது அதி முக்கியமானது என்று அப்போது அவர் மனது சொல்லியது.

                                    ------------------------------------