29 டிசம்பர் 2024

 

சிறுகதை                தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம்

“நெத்தியடி”





            தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்தக் கேள்வியால் துணுக்குற்றுப் போனார் நித்யானந்தம். இதுவரை அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வந்ததில்லை.

            கேள்வியே வந்ததில்லை. அதுதான் உண்மை.  தன்னிடம் உள்ள மரியாதை என்று நினைத்துக் கொண்டார். தன் வயதுக்கு உரிய கௌரவம் கொடுத்து அவன் அமைதி காக்கிறான் என்று மனதுக்குள் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தார் நித்யா. இதுதான் முதல் முறை.ரொம்பவும் சலித்துப் போய்க் கூறியது போலிருந்தது.

            எப்பொழுதும் அவர் லிமிட் தாண்டிப் போனதில்லை. அபூர்வமாய்த்தான் ஏதாவது சொல்வார்.  அவன் லிமிட் இதுதானோ?  இப்போது இந்தக் கேள்வி வந்து விழுந்து விட்டது. பொறுமை இழந்துதான் கேட்கிறான் போலும்.  உறாலிலிருந்து கேட்கும் கேள்வி.  சத்தமாக, அறைக்குள் இருக்கும் தனக்குக் கேட்பதுபோல்.  முகத்துக்கு முகம் வந்து நின்று கேட்கத் தயக்கம். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருவானோ என்னவோ?

            அவன் பெண்டாட்டிக்கும் காதில் விழட்டும் என்றா? அட…அவன் அம்மாவும் அங்கேதானே இருக்கிறாள்? சுபாவுக்கும் இதில் ஒப்புதல் இருக்கலாம்.  சந்தேகம் வந்தது இவருக்கு.

            என்னடா இப்டிக் கேட்கிறே? உங்கப்பாவையே எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிட்டியா? – இதெல்லாம் சினிமாவில்தான் வரும். அதுவும் பழைய சினிமாவில். இன்றைய சினிமா என்ன அப்படியா இருக்கிறது? அதன் அங்க லட்சணமே வேறு.

            என்னப்பா சொல்றே? – அறையில் அமர்ந்தமேனிக்கே கேள்வியை வீசினார்.  வந்து பதில் சொல்லட்டுமே…நானென்ன எழுந்து அங்கு போவது?

            எந்த எதிர்வினையும் இல்லை. காதில் விழுந்ததா இல்லையா? அவளுக்குமா விழவில்லை? உங்கப்பா என்னமோ கேட்கிறார் பாரு? என்று உசுப்பி விட மாட்டாளா?  பதிலாக அவள் வந்து நின்றாள்.

            எதையாவது சொல்லி வைக்காதீங்க…நம்மளை மாதிரியே இருப்பாங்களா அவங்களும்? …எல்லாம் நாளடைவுல சரியாப் போகும்….! – என்றாள் சுபா.  அதையும் சத்தமில்லாமல் பதவாகமாகத்தான் பகன்றாள். அப்படி அட்ஜஸ்ட் ஆகிறாளாம்! ரெண்டு பக்கமும் சமன் செய்கிறாளாம்…!

            அவளும் அவன் பெண்டாட்டிக்குப் பயப்படுகிறாளா அல்லது எதற்கு அநாவசியச் சண்டை என்று நினைக்கிறாளா?

            நான் சுபாவின் முகத்தையே பார்த்தேன். எனக்கு நீ சொல்லித் தர்றியா? என்பதுபோல. பிறகு கேட்டேன்.

            போன இ.பி. பில் எவ்வளவு தெரியும்ல? பதிமூணாயிரம்…அதுவும் ஒன்றரை மாசக் கணக்குக்குத்தான் எடுத்திருக்கான். ஏண்டீ…ராத்திரிதான் ஏ.சி. ஃபுல்லா ஓடுதுன்னா பகல்லயுமா போட்டுக்குவாங்க…? நீயும் நானும் இந்த அறைல ஒரு மணி நேரத்துக்கு மேலே போட்டதில்லையே…அணைச்சிடுவமே…? பிறகு ஃபேன்தானே ஓடும்?  இப்படிப் பகல்லயும் போட்டு எரிச்சா… கட்டுபடியாகுமா? கொஞ்சமாச்சும் சிக்கனம் வேண்டாம்? இதச் சொன்னா தப்பா?

            இப்பல்லாம் வசதிதான் முக்கியம். சிக்கனம் ரெண்டாம் பட்சம்தான்… அவுங்க சம்பாதிக்கிறாங்க குடுக்கறாங்க…நமக்கென்ன…வந்தது? கண்டுக்காம இருக்கப் பழகுங்க….அதத்தான் அவன் இப்படிச் சொல்றான்…எதாச்சும் சொல்லிட்டேயிருப்பியான்னா என்னா அர்த்தம்? எரிச்சல் பட்டுட்டான்னு அர்த்தம். ஏற்கனவே நீங்க சொன்னதெல்லாம் நினைச்சித்தான் இப்ப இப்படிச் சொல்றான். அடுத்தாப்ல சண்டைதான். அதுக்கு இடம் கொடுக்காதீங்க…புரிஞ்சிதா?

            இதுவரைக்கும் அவன் இப்படிக் கேட்டதில்லை…இப்பத்தான் வாயைத் திறந்திருக்கான்…-இதை அவர் சொன்னதும் அறைக் கதவைச் சாத்தினாள் சுபா.

            எதுக்குச் சாத்துறே? அவனுக்கென்ன பயமா? நீ வேணா உன் பையனுக்குப் பயப்படு….உன் மருமகளுக்குப் பயப்படு…நான் ஏன் பயப்படணும்? திற கதவை…-சற்றுச் சத்தமாகவே சொன்னார் நித்யானந்தம்.

            வாயப் பொத்துங்க…பண்ணின ராஜ்ஜியமெல்லாம் போதும்…சிவனேன்னு இருக்க மாட்டாம….எதையாச்சும் தொண தொணன்னு….

            நித்யா டென்ஷனானார்.  நீ முதல்ல வெளிய போ…நான் பேசிக்கிறேன். அவன்ட்ட…!  சொல்ல வேண்டியதைச் சொன்னாத்தானே அவங்களுக்குத் தெரியும்? அனுபவப்பட்டவங்களா? புதுசுதானே…நாமதானே சொல்லிக் கொடுக்கணும்…நல்லது சொன்னாத் தப்பா? தடுக்க வர்றே? கதவைச் சாத்துறே? என்னைத் தனிமைப்படுத்துறியா?  நான் என்ன இந்த வீட்டுல தண்டத்துக்கா உட்கார்ந்திருக்கேன்…? என் பென்ஷன் காசைக் கொடுத்துட்டுத்தாண்டி சோத்துல கை வைக்கிறேன். வெட்டின்னு நினைச்சியா?கூட இருக்கிறது நல்லது கெட்டது சொல்றதுக்குத்தான்…அதுவும் கூடாதுன்னா அப்ப எதுக்கு சேர்ந்து இருக்கணும்…?

            கதவு தட்டும் சத்தம் கேட்டது. பேச்சு நின்றது. தலையைக் குனிந்தவாறே வெளியேறினாள் சுபா.

            என்னப்பா பிரச்னை? – அலுத்துக்கொண்டே கேட்டான் கண்ணன்.

            ஒரு பிரச்னையுமில்ல…போய் உன் வேலையைப் பாரு….-கோபமாய்ச் சொன்னார் நித்யானந்தம்.

            செலவெல்லாம் நான் பார்த்துக்கிறேம்ப்பா…நீ எதுக்குத் தலையைக் குடுக்கறே? சொல்றேன் கேளு…அவளும் நானும் சேர்ந்து பொதுவா ஒரு எஸ்.பி. அக்கவுன்ட் ஓப்பன் பண்ணியிருக்கோம்…அதுலர்ந்துதான் வீட்டுச் செலவுக்குக் கொடுக்கிறேன். இ.பி.கட்டுறேன்.  சிலது கொஞ்சம் முன்னப் பின்ன ஆகத்தான் செய்யும்…வீட்டுலர்ந்து வேல பார்க்கிறோமில்லியா? ஆன் லைன் மீட்டிங்னா கதவச் சாத்திக்க வேண்டிர்க்கு…அப்போ வியர்த்து வடியுது…ஏ.சி.போட்டுத்தான் ஆகணும். இல்லன்னா பீஸ்ஃபுல்லா வேல பார்க்க முடியாது. நானும் அங்கதான உட்கார்ந்து என் வேலையைப் பார்க்கிறேன்…ஆகையினால…

            போதும்…இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம். – சட்டென்று தடுத்தார் நித்யா.  கண்ணனின் முகம் சுருங்கியது. வெளியேறினான். நல்லவேளை கதவை டம்-மென்று சாத்தவில்லை. அடுத்தடுத்து அது வரும் போலிருக்கிறது. வெள்ளம் படிப்படியாத்தானே மேலேறும்?

            வீடு தனது நிர்வாகத்தில் இருந்தபோது இப்படி இல்லை. இப்போது எவ்வளவோ மாறிவிட்டது. படிப்படியாக எல்லாமும் கைநழுவி அல்லது கை கழுவிப் போயிற்று  அவன் கல்யாணத்திற்குப் பிறகு. இவரும் சுமைகள் குறைந்தால் பரவாயில்லை என்றுதானே நினைத்தார்.  உடம்பும் மனசும் தளர்ந்தால் செயலும் தளர்ந்துதானே போகும்?

முன்பெல்லாம் இவர்தான் போய் காய்கறிகள் வாங்கி வருவார். டூ வீலரில்தான் போவார். வருவார். ஒரு கடையில் விலை ஜாஸ்தி என்று உணர்ந்தால்  அடுத்த கடைக்குச் சலிக்காமல் போய் விசாரிப்பார். பொருட்காட்சி மாதிரிப் பெரிய பெரிய கடைகளாகத் திறந்திருக்கிறார்கள். எரிய விட்டிருக்கும் பலபடியான கலர் கலர் விளக்குகள், ஃபேன்கள், காய் எடுக்கக் கூடைகள், பைகள், அங்கங்கே கண்காணிக்க அல்லது எடுத்துத்தர நிற்கும் வேலையாட்கள்  என்று எல்லாத்துக்கும் சேர்த்துதானே விலை வைப்பான்? ஆனாலும் பெரிய எடுப்புதான் என்று நினைத்துக் கொள்வார்.  தன் வசதிக்கெல்லாம் இம்புட்டுப் பெரிய இடம் ஆகுமா என்று  மலைப்பாய் இருக்கும். கடையின் அளவே விலையின் அளவையும் நிர்ணயிக்கும். நடுவே நிற்கவே கூச்சமாயிருக்கும்.

நீயெல்லாம் இங்க எதுக்குய்யா இங்க வர்ற? போய் ரோட்டோரமா கூர் கட்டி வித்திட்டிருப்பான்…அங்க போய் நில்லு…பொருத்தமாயிருக்கும்…-யாரோ சொல்லி விரட்டுவதுபோல் உணர்ந்தார்.

            அதென்னவோ இந்தச் சென்னைக்கு வந்த பிறகு குடும்பச் செலவுகள் எல்லாமே தாறுமாறாய்ப் பிய்த்துக் கொண்டு போவதாய்த்தான் இவருக்குத் தோன்றியது. ஒவ்வொன்றுக்கும் தூர தூரமாய்ப் போய் வருவது பெரும் மாய்ச்சலாய் இருந்தது. போகாமலும் முடியவில்லை. போக வரச் செலவு, அங்கு ஒரு காபி, டீ குடித்தால் வீண் செலவு (அதென்ன டீ தானா? ஊளத்தண்ணி), பிறகு சுமையைச் சுமந்துகொண்டு வருகையில் மீதிப் பணத்தைத் திருடு கொடுக்காமல் இருக்க வேண்டிய கவனம் என்று பலமாதிரி இவருக்கு யோசனைகள். ஆனாலும் வீட்டிற்கு அருகில் அநியாய விலை கொடுத்து வாங்க மனசு வரவில்லையே! முடியுமட்டும் அலைந்து பார்ப்போம்…என்று கிளம்பியிருந்தார்.

            தன் ஊரில் உழவர் சந்தையில் வாங்கி வரும் பொருட்களின் அதே அளவு இங்கு டபிள் பங்கு என்று நினைத்தார். தாறுமாறான விலை வாங்கக் கைவரவில்லை. வேடிக்கை பார்க்கத்தான் தோன்றியது. காய்கறிக் கண்காட்சி.

 அங்கெல்லாம் தோட்டக் காய்கள் கிடைக்கும். விலை குறைவாய் இருக்கும். காலைல பறிச்சதுங்கய்யா…வாங்கிட்டுப் போங்க…கல்கண்டு மாதிரி இருக்கும் என்று அன்பொழுகச் சொல்லி தராசில் நன்றாய் விட்டு அளந்து போடுவார்கள். போதாக் குறைக்கு ஒரு கை அள்ளி வேறு பையில் போட்டு விடுவார்கள். எலெக்ட்ரானிக் தராசில் வரும் ஸீரோவே தப்பு என்று பிறகுதான் தெரிந்தது. கள்ளமில்லா மக்களிடம் எப்படி இந்தக் கள்ளம் புகுந்தது? சொல்லிக் கொடுத்து மாற்றி விடுகிறார்களே? நடப்பு உலகம் காலத்தின் தேவை கருதி அவர்களையும் நிறம் மாற்றி விட்டதோ என்று நினைத்து வருந்துவார். வெள்ளந்தி மக்கள் கள்ளந்தி ஆகிப் போனார்கள்.

            இங்குதான் எல்லாத்தையும் பரத்தி வைத்திருக்கிறார்களே…எத வேணாலும் பார்த்துக்கோ, எடுத்துக்கோ…என்று. திசைக்கொன்றாக மூலையில் சிசிடிவி காமிராக்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அட, காய்கறிக் கடைக்குக் கூடவா இது? ஒரு கடையில் பார்த்தாரே?  அப்படித் திருடி என்ன கோட்டையா கட்டப் போறாங்க?  ஆனால் ஒன்று இங்கு காய்கறிகள் எல்லாமும் செழிப்பாய்த் தெரிகின்றன. பளபளவென்று மின்னுகின்றன. ஒரு செய்தி கேள்விப்பட்டிருந்தார். அதை நினைத்து பயமாகவும் இருந்தது. இதென்னடா வம்பாப் போச்சு…வாங்குறதா வேண்டாமா? உடம்பக் கெடுக்கிறதுக்குன்னு சென்னைக்கு வந்திருக்கமா? காசு கொடுத்து விஷத்த வாங்குறதா?

            காய்களெல்லாம் ஆந்திரா சைடுலர்ந்துதான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும்…அங்க என்னைக்குப் பறிச்சது, எப்போ அவுங்க ஊர் சந்தைக்கு வந்திச்சு, இங்கே எப்போ வருது, வந்து எவ்வளவு நாளாச்சுன்னு எவனுக்கும் தெரியாது…அதெல்லாம் கேட்கப்படாது. உண்மையெல்லாம் சொல்ல மாட்டாங்க…மருந்தடிச்சு, மருந்தடிச்சு, காய்கள எப்பவும் புதிசாவே வச்சிருப்பாங்க…வாடவே வாடாது. நீங்க வாங்கிட்டுப் போனீங்கன்னா அன்னிக்கு வந்த காய்கதான்னு நினைப்பீங்க…ஆனா அது வந்து பத்து இருபது நாளுக்கு மேலாகியிருக்கும்.

கீரைகளைக் கட்டுக் கட்டா ஒரு டிரம் தண்ணில முக்கி முக்கி எடுப்பான். கலகலன்னு பளபளன்னு மலர்ந்து சிரிக்கும். அது வெறும் தண்ணிதானான்னு கேட்கப்படாது. கெமிக்கல் கலந்த தண்ணி. முக்கி எடுத்தா அன்னிக்குப் பூராவும் கீரை வாடவே வாடாது. அதை வெந்து தின்னா நம்ம வயிறுதான் வாடும்.  வேன் வேனா நகரத்துல பல எடத்துக்கும் எக்கச் சக்கமான கடைகளுக்கு இங்கிருந்துதான் சப்ளை…இவன் விக்கிற விலை, அவனோட டிரான்ஸ்போர்ட், ஏத்து எறக்குக் கூலி இப்டி எல்லாமும் சேர்த்து வச்சு இன்னொரு புது விலை போட்டுத்தான் உங்க கைக்கு வந்து சேரும். நீங்களும் தெனமும் கோயம்பேடு போய் வர முடியுமா? எவன் அலையுறதுன்னுட்டு அங்கயேதான் வாங்கிடுவீங்க…இது எல்லாமும் போக அந்தக் காய்கறிகளைச் சமைச்சு உங்க வயித்துக்கு எந்த பாதகமும் இல்லாமச் செமிக்கணும்…நீங்க வாழணும்….நானும் வாழணும்..எல்லா மக்களும் வாழணும். அது தனிக் கணக்கு….!

            இப்படித் தன்னோடு கூட எலெக்ட்ரிக் டிரெயினில் காய் வாங்க வந்த தன் வயதொத்த ஒருவர் சொல்லக் கேட்டபோதுதான் இனிமேல் இப்படி எடுத்துப் பிடித்து கோயம்பேடுக்கு அலைவதில்லை என்கிற முடிவுக்கு வந்தார் நித்யானந்தம்.

            என்னவோ பெரிய சொத்தைக் கட்டிக் காப்பதுபோல் ஆரம்பத்தில் வீராவேசமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தவர் நாளடைவில் அடங்கியே போனார்.  காய்கறிகள், பலசரக்கு சாமான்கள், மருந்து மாத்திரைகள் என்று எல்லாவற்றுக்கும் இவரேதான் அலைகிறார். சில சமயங்களில் காலுக்குப் பயிற்சியாக இருக்கட்டும் என்று நடந்தே போகிறார்.  ஆனால் திரும்பி வருவதற்குள் மூத்திரம் நெருக்கி விடுகிறது. சந்து பொந்துகளில் ஒதுங்குவதற்கு எங்கும் இடம் இல்லை. எந்தச் சந்தில் ஒதுங்கினாலும் வானுயர்ந்த அடுக்ககங்களிலிருந்து ஒரு கண் பார்க்கிறது.  செத்தேன், பிழைச்சேன் என்று வீடு வந்து சேர வேண்டியிருக்கிறது. வேட்டியில் கசிந்து விட்டதோ என்று கூடப் பல சமயங்களில் சந்தேகம் .. மனசு வெட்கிப் போகிறது.

            பெரும் வேதனை. மனுஷனுக்கு வயசாகக் கூடாது. ஆனால் பொட்டென்று போய்விட வேண்டும். அநாவசியமாய் இருந்து தொலைத்து கழுத்தறுக்கக் கூடாது. அது அவரவருக்கும், கூட இருப்பவர்க்கும் வேண்டாத சிரமம். என்றாவது ஒரு நாள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வார்த்தை கேட்க வேண்டி வரும். எல்லாப் பயலுகளும் பேசத்தான் செய்வான்கள். அப்பன், ஆத்தா ஆச்சேன்னு பார்க்க மாட்டான்கள். அவிங்ஞ வயசு அப்படி! வேலை அப்படி…! பொண்டாட்டி முறுக்கு வேறே…!

            பாரு இப்போ…! அவனே வாயத் திறக்க ஆரம்பிச்சிட்டான். இத்தன நாள் கமுக்கமா இருந்தவன் இப்போ மெல்ல நூல் விட்டுப் பார்க்கிறான்.

            இதுக்குத்தான் அப்பவே சொல்லித் தொலைச்சேன். நாம போய்ச் சேருவம்டின்னு. கேட்டாளா? பொறுங்க…இப்பத்தான கல்யாணம் ஆகியிருக்கு. அவுங்களுக்கும் ஒரு பொறுப்பு வரட்டும்…கூட இருந்து சொல்லிக் கொடுத்தாத்தான ஆச்சுன்னா…! சொல்லிக் கொடுத்ததா, சொல்லிக் கெட்டதா?

            அவுங்க உனக்கும் எனக்கும் சேர்த்துச் சொல்லிக் கொடுப்பாங்க…நீ நினைக்கிற அந்தக் காலமில்லே இது! 21ம் நூற்றாண்டாக்கும். எதுவானாலும் அவுங்க இஷ்டப்படிதான் செய்வாங்க…நீ இப்டிச் செய்…அப்டிச் செய்னு சொன்னேன்னா ரொம்ப ஒபீடியன்டா தலையைத் தலைய ஆட்டுவானுங்க உன் முன்னாடி…ஆனா வெளில போனா அவுங்க நினைக்கிறதத்தான் செய்துட்டு வருவாங்க…! நீ கிறுக்கச்சி மாதிரி பேந்தப் பேந்த முழிச்சிட்டு நிக்க வேண்டிதான்.  இப்போ கூட ஒருத்தி வந்திட்டால்ல…அப்போ நீ சொல்றதா நடக்கப் போவுது…அந்தம்மா சொல்றதுதான் கப்பலேறும்….எதுக்கு அநாவசியமா வார்த்தையை விட்டு ஏமாந்திட்டு? என்னத்தவோ செய்திட்டுப் போகட்டும்…கண்ணையும் காதையும் பொத்திட்டு இருங்கிறேன்……ஆனா ஒண்ணு…எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு….அது தாண்டுதான்னு கண்காணிக்கணும்…அது மட்டும்தான் முக்கியம். நான் சொல்றது புரியுதா உனக்கு? நம்ம மரியாதையைக் காப்பாத்திக்கிறதுதான் அது…-சொல்லிவிட்டு நித்யானந்தம் மனைவியை நோக்கினார்.

            சுபா அமைதியாய் நின்றாள். எதுவும் பதில் சொல்லாதது அவளுக்குப் புரியவில்லையோ என்று தோன்றியது. அம்மாவே சதம் என்று கிடந்தவன் பையன். தொட்டதுக்கெல்லாம் அம்மா…அம்மான்னு  கொடுக்கு மாதிரித் திரிவான்….முந்தானைல முடிஞ்சு வச்சிருந்தா…இப்போ அவிழ்ந்து போச்சோ…அவிழ்த்து விட்டுட்டாளோ?

            கல்யாணம் ஆன பிறகு பாரு…இந்த மாதிரிப் பசங்களெல்லாம் தலைகீழா மாறிப் போவானுங்க…எத்தன பேரப் பார்த்திருக்கோம்….?

            எம் பையன் அப்டியெல்லாம் இருக்க மாட்டான்….என்னிக்கும் அவன் அம்மா பிள்ளைதான்…!

இந்த மாதிரியான உன் நெனப்பே தப்புங்கிறேன்..…ஒரு நாளைக்கு மொத்தமா ஏமாறப் போறே…அப்போ எங்கிட்டதான் வந்து நிக்கணும்…கடைசிப் புகலிடம் உனக்கு நான்தான். அத மனசில வச்சிக்கோ…

அப்போதும் அவள் ஒத்துக்கொள்ளவில்லை. இப்படியா மகன் மீது ப்ரீதியாய் இருப்பாள்? ஒரு பிள்ளை பெற்றவர்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்களோ என்னவோ? முப்பத்தி ஒன்பதில் பிள்ளை பெற்றால்? ஓ! அது என் வயசாயிற்றே…அவள் முப்பத்தி அஞ்சு…! போதுமே ஒன்று என்று தோன்றிப் போனது நியாயம்தானே?   இந்த மனசை மாறும் நிலைகளுக்கேற்பப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டாமா? வயசானதற்கு அப்புறம் என்னதான் அர்த்தம்….மதிப்பு?

            ப்போ சிம்பிளா உனக்கு சுலபமாப் புரியறமாதிரி  ஒண்ணு சொல்றேன்… சினிமாவுக்குக் கிளம்புறாங்கன்னு வையி…நீங்களும் வாங்கன்னுதான் கூப்பிடுவாங்க…ஆனா போகப்படாது. ஏன்னா அது சம்பிரதாயத்துக்குக் கூப்பிடுறது. ஆத்மார்த்தமா நிச்சயமா கிடையாது.  அந்த இங்கிதம் வேணும் உனக்கு. நம்ம பையன் நம்மளக் கூப்பிடுறான்…போறதுல என்ன தப்புன்னு புடவையைச் சுத்திண்டு கிளம்பறது மடத்தனம்! மொட்டையா எதையும் நினைக்கக் கூடாது..அவன் பொண்டாட்டிக்கு முன்னாடி முந்திட்டு  நீ ரெடியாகக் கூடாது…அது மாதிரி அசட்டுத்தனம் உலகத்துல வேறேதுவுமில்ல.  ஏன்னா இப்போ கூட ஒருத்தி பக்கத்துலயே நிக்கிறா…அவளுக்கு அப்புறம்தான் நீ…புரிஞ்சிதா?

அந்தப் பொண்ணு அவன் சொல்றதை மறுத்துச் சொல்லாட்டா அதுக்கு சம்மதம்னு அர்த்தமில்லே…! ஆரம்பத்துலயே எதிர்த்துப் பேச வேணாம்னு இருப்பா. கண்டுக்காம நீ விலகிட்டா மனசுக்குள்ள சந்தோஷப்பட்டுக்கிடும்…அதுதான் சூட்சுமம். நீ பசை மாதிரி ஒட்டிட்டே திரிஞ்சேன்னு வச்சிக்கோ…கூடிய சீக்கிரமே நீ பிரிச்சி விடப்படுவே…! அந்தக் காரியத்தை உன் பையனே வெற்றிகரமாச்  செய்வான்…பிறகு வருத்தப்பட்டுப் பிரயோஜனமில்லே... இப்போ அவன் என்னையும் சேர்த்துக் கூப்பிடுறான்னு வச்சிக்கோ…நான் எடுத்த எடுப்புல வரலைன்னு சொல்லிடுவேன்…அதுதான் நம்ம பாணி…! அது அவனுக்கும் தெரியும்தான். உன்னைப் புரிஞ்சிண்டிருக்கானோ இல்லியோ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டிருப்பான்.  ஆனா நீயும் போகாதேன்னு உன்னை நான் சொல்ல முடியாது…ஏன்னா நீ உன் பையனோட போறதை நான் தடுக்கிறேன்னு  குதர்க்கமா நினைப்பே…குட்டுப்பட்டாத்தான் உனக்கெல்லாம் புரியும். நீ அந்த டைப்.  …விவேகம்ங்கிறது இதுதான்….எதுல ஒட்டணும், எதுவரைக்கும் ஒட்டணும், எதுல ஒதுங்கணும்னு எல்லாத்துக்கும் ஒரு கணக்கிருக்கு…காலத்துக்குக் காலம் அது மாறும். அதைப் புரிஞ்சிக்கிட்டு நாம நடந்துக்கணும். அப்பத்தான் நமக்கு மதிப்பு…மரியாதை….புரிஞ்சிதா…?

இப்போதும் சுபா எதுவும் சொல்லவில்லை. அவள் மனசு எதையும் ஏற்கவில்லை என்பதுதான் அதன் பொருள். தாயின் மனசு வேறு. தந்தையின் மனசு என்பது வேறு. இது அவரவர் தனியாய் இருக்கும் காலம். கூட்டுக் குடும்பம் என்பது என்றோ அழிந்து போன விஷயம். ஒரே வீட்டில் இருபது பேர் வரை இருந்து பொங்கித் தின்னு பொழுதைக் கழித்தது அந்தக் காலம்.  இப்போது விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்கிற காலம். மூன்று நாள் கூடக் கிடையாது. ஒரு நாள் எனலாம். அது கூடச் சில இடங்களில் இல்லை. ஒரே வேளை. வண்டியக் கட்டிரணும்…அதுதான் மரியாதை!  

பெண்கள் வேலைக்குப் போவது என்றாகிப் போன பின்னால், பொருளாதாரச் சுதந்திரம் வந்துவிட்ட நிலையில் படிப்படியாக எல்லாமும் தனித் தனியே பிரிந்துதான் போனது. குழந்தை பிறந்தால் கூடப்போய் நான்கைந்து மாதங்கள் சம்ரட்சணைக்காய் இருந்து வரலாம். அதுவும் கசக்கும் முன் வெளியேறிவிடுவதே நன்று. பிறகு ஏண்டா போனோம் என்று நினைத்து மறுகிப் புண்ணியமில்லை.

தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் இருந்து கொள்ளப் பழகிக் கொள்வது மிக மிக முக்கியம். வேறு எந்தத் தத்துவம் பேசியும் கதையாகாது. எல்லாமும் தோற்றுத்தான் போகும்.

போவோம்…அவனுக்கு ஒரு வீடு வாங்குவோம்…ஒரு கல்யாணத்தைப் பண்ணுவோம்…தனிக் குடி த்தனம் வைப்போம்…கிளம்பி வந்திடுவோம்…என்று சொல்லித்தான் கிளம்பியது. எல்லாத்துக்கும் தலையாட்டினாளே? மனசுக்குள் வேறு இருந்திருக்குமோ?

இப்போதென்னடாவென்றால் பிசினாய் ஒட்டிக் கொண்டு நிற்கிறாள். அவனுக்காவது தெரிய வேண்டாம்? தனியாய்ப் பிரிந்து ஜாலியாய் இருப்பானா? இப்படியா அப்பா அம்மாவைக் கூட வைத்துக் கொண்டு அவஸ்தைப் படுவான்?  எப்படி அனுபவம் சேகரமாகும்? காரியங்களைச் சுயமாய்ச் செய்து பழகினால்தானே தனித்து இயங்கும் தைரியம் வரும்?

இன்றும் கூட அவனுக்கு ஒரு பால் பாக்கெட் என்ன விலை என்பது தெரியாது. அது பச்சை, நீலம், ஆரஞ்சு என்ற வகை மாதிரிகளை அவன் அறிய மாட்டான்.  ஒரு கிலோ அரிசி எவ்வளவு தெரியாது. சாப்பாட்டு அரிசி எது, மாவுக்கான அரிசி எது? பச்சரிசியா, புழுங்கலா எது எதற்குப் பயன்படும்? எது எது என்ன அளவில் வாங்கியாக வேண்டும்? எதுவும் தெரியாது.

ஒரு கிலோ வெண்டைக்காய் என்ன விலை சொல்லு? என்றால் முழிப்பான். ஒரு கிலோ பெல்லாரி வெங்காயம்  வாங்கி வா என்றால் சிறிசா, பெரிசா…என்று கேட்பான். இந்த அளவில்தான் இருக்கிறான். ஊரிலுள்ள மற்ற பசங்களெல்லாம் எப்படியென்று தெரியாது. கண்ணன் இப்படித்தான். இதை வாய்விட்டுச் சொன்னால் அவள் ஒத்துக் கொள்வாளா? பழி சண்டைக்கு வருவாள். பொத்திப் பொத்தி வளர்த்தால் இப்படித்தான். உலக நடப்பு ஒன்றும் தெரியாமல்தான் போகும்.  இவளே ஓட்டைக் காயைத்தான் வாங்குவாள். வெண்டிக்காயை ஒடித்து வாங்காமல் அள்ளியா போடுவே? எத்தனையோ முறை கேட்டிருக்கிறான். சுண்டிப் பார்த்துத் தேங்காய் வாங்கத் தெரியாது. தேங்காயை எந்த இடத்தில் அடித்தால் நடுவில் சரி சமமாய் உடையும் தெரியாது. அனுபவம் என்றால் சும்மாவா? ஆயிரம் புஸ்தகத்தப் படிச்சவன விட ஆயிரம் நிலத்தை உழுதவன் பெரியவன்…அதுதான் சத்தியம்.

அந்தப் பெண் என்ன லட்சணமோ? அடுப்படிப் பக்கம் எட்டிப் பார்த்திருக்குமோ என்னவோ? அணியும் உடைகளே அவைகளைப் பறைசாற்றுகின்றனவே? நமக்கே கூச்சமாய் இருக்கிறது பார்க்க! மருமகளைத் தலை நிமிர்ந்து கண்கொண்டு பார்க்க வேண்டாமோ?  சுலபமாகக் குனிஞ்சு நிமிர முடியுமா அதுகளால்? எதாச்சும் சொல்ல வாய் வந்தால்தானே? சொல்வதை விட வாய்மூடி இருப்பதே மேல்!(நீயும் மேல்…நானும் மேல்…!)  வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமோ என்று தோன்றுகிறதே?

தெரிந்ததெல்லாம் கணினி ஒன்றுதான். அது முன்னால் பிள்ளையார் போல் வயிற்றைக் குழைத்துக் கொண்டு உட்கார்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். காதில் வேறு மாட்டிக் கொண்டு இருப்பதால் வெளிச் சத்தம் எதுவும் கேட்காது. அதுதான் அறைக்கதவையே சாத்திக்கொண்டுதானே கிடக்கிறார்கள்?

இந்தப் பக்கம் எவனாச்சும் நுழைஞ்சு கழுத்தைத் திருகிப் போட்டுத் திருடிட்டுப் போனாலும் போச்சு…கதவைத் திறக்கும்  போதுதான் பார்ப்பார்கள்….அசந்து தூங்குறாங்க போல……!

ஊரில் ஒரு பயல் இப்படியில்லை. இவன்தான் கூட வைத்துக் கொண்டு கும்மியடிக்கிறான். அட…அண்ணன் பையன், பொண்ணுன்னு எல்லாமும் இந்தச் சென்னையில்தானே கிடக்கிறார்கள்? அவர்களைப் பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டாமா? உரைக்கலியே? அவ்வளவு எதற்கு? இவன் கூடப் படித்தவன் ஒத்தன் ரெண்டு பேர் இந்தச் சென்னையில்தானே குப்பை கொட்டுகிறார்கள். அவர்களெல்லாம் தனிக்குடித்தனம் தானே நடாத்துகிறார்கள்? அந்த கனவான்களெல்லாம் கண்ணில் படவில்லையா?

எதுவுமே உரைக்கலியே? ரெண்டு பேரும் வேலைக்குப் போறதுனால வேளா வேளைக்கு நிம்மதியாச் சாப்பிட தூங்க எழுந்திரிக்க, அக்கடான்னு ஆபீஸ் வேலையைப் பார்க்க, சனி ஞாயிறானா ஊரச் சுத்த, ஓட்டல்ல மூக்குப் பிடிக்கத் திங்கன்னு ஜாலியாத்தான் கழிப்பமேன்னு பேசி வச்சு முடிவு பண்ணிட்டாங்களா?

அதுதான் சமைச்சுக் கொட்டுறதுக்கு ஒருத்தி இருக்காளே?

சமயா சமயங்களில் சார்…டிபன்…சார் மீல்ஸ்….-வாசலில் ஸ்விகி.

இவரும் பொறுத்துப் பொறுத்துத்தான் பார்த்தார். அவள் கிளம்புவதாய் இல்லை. ஆணியடித்தாற்போல் கிடந்தாள்.

வந்த வேலை முடிஞ்சது. நாம கிளம்புவோம்…அவுங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும்..நம்ம மீதி வாழ்க்கையை நாம வாழ்ந்து கழிப்போம்.. தேவைப் படுறபோது வருவோம்….யாரும் யாரையும் விட்டு உதறல…அப்படி உதறவும் முடியாது…புரிஞ்சிதா? கிளம்பு…வண்டியைக் கட்டு…

உத்வேகமாய்த்தான் சொன்னார் நித்யானந்தம். மலையைக் கூட அசைச்சிடலாம்…ஆனா இந்த மடுவைக் காலத்துக்கும் அசைக்கவே முடியாது. கண்ணன் பார்த்துக் கொண்டேயிருந்தான். சுபா சொன்னாள்.

நான் வரலை. இங்கதான் இருப்பேன்…நீங்க வேணும்னா போயிட்டு வாங்க….!!

                                                            --------------------------

           

           

           

16 டிசம்பர் 2024

 

சிறுகதை         தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 









                

“பால் மனக்  கணக்கு”

                        துக்கு இருபத்தி ஒண்ணுதான் விலை. கார்டுக்கு அதுதான் ரேட்டு. காசுக்கு வாங்கினா இருபத்திரெண்டு. அவ்வளவுதான்.  அந்தக் கிழவர் பாவம்…இந்த வயசுலயும் உழைக்கிறார்…போனாப் போறது…இருபத்தி மூணு….அப்டீன்னாலும் மூணு பாக்கெட்டுக்கு அறுபத்தி ஒன்பதுதானே ஆச்சு…நூறு ரூபா கொடுத்தீங்கன்னா மீதி முப்பத்தி ஒண்ணு தரணுமே… - விடியாத அந்த நாலரை மணி விடிகாலையிலும், தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு துல்லியமாய்க் கணக்குப் பண்ணி சுளீர் என்று  எனக்குச் சொன்னாள் வைதேகி.

பிறகுதான்  எனக்கே உரைத்தது. அந்த நேரம் வீட்டு வாசலில், சற்றும் எதிர்பாராமல் பால் கிடைத்ததே பெரிது என்கிற எண்ணமே என் மனதில் நிறைந்திருந்தது.

ரெண்டு ஃபர்லாங் நடந்தால்தான் பால் டெப்போ.  அங்கேயும் இப்போதே பால் பெட்டிகள் வந்த இறங்கியிருக்குமா தெரியாது. அப்படியே வந்திருந்தாலும் பொறுப்பாளி வந்து விநியோகிப்பதற்கு எப்படியும் அஞ்சரைக்கு மேல்  ஆகிவிடும். நடக்கும் வழியில்தான் எத்தனை நாய்த் தொல்லை? குலைத்துத் தள்ளி குலை நடுங்க வைத்துவிடும். இந்த ஏரியா ஆள்தான் நான்…என்று அவைகளிடம் சொன்னால் புரிந்து கொள்ளவா போகிறது? தினசரி நம்மைப் பார்த்திருந்தால்தான் ஓரளவு ரெண்டே ரெண்டு குலைப்போடு வாயைமூடும். அதிலும் இருட்டிலும், அரைகுறை வெளிச்சத்திலும் நிச்சயம் அதற்குப் புரியாது. புது ஆள் என்கிற நினைப்பிலேயே உறுமலை ஆரம்பித்து விடும். எனக்கு நாய் என்றால் அநியாய பயம். யாருக்குத்தான் இல்லை?

சரக் சரக்…சரக்….என்று மெது மெதுவாய்ச் சாலையில்  அந்தத் தேய்ந்த ரப்பர் செருப்பை அணிந்த  கால்களைத் தேய்த்துத் தேய்த்து அவர் பால் கொண்டு வரும் சத்தம்தான் என்னை எழுப்பவே செய்தது. ஊரெல்லாம் உறங்கி வழியும்போது ஒரு வயதான குடுகுடு கிழம் கருமமே கண்ணாகத் தேய்ந்து மாய்கிறது. உழைப்பே பிரதானம் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது.

            முதல் நாள் கோயிலுக்குப் போய் மணிக்கணக்கில் வரிசையில் நின்று தரிசனம் செய்துவிட்டு, பிறகு ரொம்ப நேரமாகிவிட்டதே என்று ஓட்டலில் போய் வயிற்றுக்குக் கொட்டிக் கொண்டு, டாக்சி பிடித்து வீடு வந்து சேர்கையில் மணி பதினொன்றைத் தொட்டு விட்டது. மூடும் கடையைச் சட்டென்று பார்த்து, வண்டியிலிருந்து இறங்கி ஓடி…நாலு பாக்கெட் பால் வேணும்…என்று கத்தியபோது…பால் எப்பயோ தீர்ந்திடுச்சேய்யா…இனி காலைல ஆறு…ஆறரைக்குத்தான்…என்று பழக்கமான கடைக்காரன் கையை விரித்து விட்டான். ஃபோன் பண்ணிச் சொல்லியிருந்தீங்கன்னாக் கூட எடுத்து வச்சிருப்பேனே…என்று தன்னிரக்கம் வேறு.

            எது நடக்கிறதோ இல்லையோ…காலையில் அஞ்சரைக்கு எழுந்ததுமே காப்பி குடித்தாக வேண்டும்…! தொண்டையில் அது சூடாக இறங்கினால்தான் நாளே துவங்கும்.  இல்லையென்றால் உலகம் ஸ்தம்பித்துப் போகாதா? பால் இல்லாமப் போச்சே…பால் இல்லாமப் போச்சே….அடச்சே…ச்சே…!! என்று பெரும் சோகத்தோடு அலுத்துக் கொண்டே தூங்கியாயிற்று. அந்தப் பால் நினைப்பே மைன்ட்டில் செட்டாகி ஆளைக் கிள்ளி எழுப்பி விட்டது.

            பொழுது விடியும் வேளையில் ஆபத்பாந்தவனாய் அந்தக் கிழவர்.  நாலரைக்கு எனக்கு சட்டென்று விழிப்பு வந்தது பெரும் ஆச்சர்யம்தான். அவரின் செருப்புச் சத்தம்தான் என்னை உசுப்பித் தூக்கி நிறுத்திற்று.  புத்தி நம் உறக்கத்திலும் எப்படி வேலை செய்கிறது பாருங்கள்?

            ஊரும் உலகமும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் ஒரு ஜீவன் யாரையும் தொந்தரவு செய்யாமல் அந்தப் பகுதியில் வீடு வீடாய்ப் போய் பால் பாக்கெட் போட்டுக் கொண்டு தன்னிச்சையாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நாய்கள் வாய்மூடி மௌனியாய் அவர் பின்னால் வந்துகொண்டேயிருக்கின்றன அவருக்குக் காவல்போல். எவ்வளவு புத்திசாலிகள்?

 வயது  தொண்ணூறுக்கு மேல். ஆனாலும் விடாத உழைப்பு. கடை வைத்திருக்கும்  மகனுக்கு உதவி. உயர்ந்த உள்ளம். .அதுவே தெய்வம். பால் வண்டியான சைக்கிளை அவரால் ஓட்ட முடியாதுதான். ஆனால் பின் சீட்டில் பிளாஸ்டிக் பெட்டியை வைத்து இறுக்கக் கட்டி, அதில் பால் பாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டு தள்ளியபடியே தளராது சென்று கொண்டிருக்கும் அந்த உருவம்….பார்ப்போர் மனதை நெகிழச் செய்யும். வீடு வீடாய் ஸ்டான்ட் போட, எடுக்க…எத்தனை கஷ்டம்? அதென்ன எக்ஸர்சைஸா?  அங்கங்கே வண்டியைச் ஸ்டான்ட் போட்டு நிறுத்தி, தேவையான பாக்கெட்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டு  வாசல் கேட்டைத் திறந்து கயிறால் கட்டி விட்டிருக்கும் பையில் போடுவதும், மாடியிலிருந்து கயிறு கட்டி ஊஞ்சலாடித்  தொங்கிக் கொண்டிருக்கும் கூடைகளில், பைகளில் போட்டுவிட்டு நகர்வதும்,…அட…அட…அடா…என்னே பொறுமையும் சகிப்புத் தன்மையும்  இந்தப் பெரியவருக்கு? இந்த வயதிலும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்கிற தீர்மானமும், உறுதியும்…..பையனோடுதான் இருக்கிறார் என்றாலும்  அவனுக்குப் பெரும் உதவியாய் இருந்து மீதி நாட்களைக் கழிப்பதுதான் நியாயம், தர்மம் என்று செயல்படும் அந்தக் கிழவர் எவ்வளவு போற்றத் தக்கவர்? எத்தனை மதிக்கத் தக்கவர்?

            அவரிடம் போய் எப்படிக் கணக்குப் பார்ப்பது? ஆத்திர அவசரத்துக்குப் பால் தந்ததே பெரிய விஷயம்.  வீட்டுக்கு வீடு இத்தனை பாக்கெட் என்று கணக்குப் பண்ணி எடுத்துக் கொண்டு வரும் அவரிடம் பால் இருக்கா தாத்தா….? என்று மாடியிலிருந்து அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கத்தியபோது…இருக்கு….வாங்க…என்று சொல்லியபடியே…உருட்டிக் கொண்டிருந்த வண்டியைத் தட்டுத் தடுமாறி நிறுத்தி, அதைத் தன் கைகளாலும், இடுப்பு அணைப்பிலும் தாங்கிப் பிடித்து நிறுத்தி,  மாடியை நோக்கிய அந்தக் கணம்….. அவரின் தள்ளாட்டமும், தடுமாற்றமும், கண்கள் சரியாய்த் தெரியாத நிலையில் அவரின் இடுங்கிய பார்வையும்….இவனை ஒரு கணம் ஆட்டி எடுத்துவிட்டதுதான்.

            ஐயையோ…பெரியவரத் தெரியாம நிப்பாட்டிட்டமோ? அவசரப்பட்டுட்டனே….! என்று மனது சங்கடப் பட, கிடு கிடுவென்று மாடியிலிருந்து இறங்கி ஓடி….பால் பாக்கெட்டை அவரிடமிருந்து வாங்கியபோது மனசு எவ்வளவு நன்றி பாராட்டியது அந்தக் கிழவருக்கு. பொழுது விடியும் முன் சூடாய் மணக்க…மணக்கக் காப்பி குடித்தாக வேண்டும் என்கிற வாழ்க்கை லட்சியம் இன்று அவரால் தவறாமல் நிறைவேறப் போகிறதே…? எவ்வளவு பெரிய வாழ்நாள் லட்சியம் அது…!! வெளியே சொன்னால் சிரிப்பார்கள்.

            அவர் சொன்ன கணக்கே மண்டையில் ஏறாத அந்தக் கணத்தில், இன்னும் ஒரு பாக்கெட் கொண்டு வந்து தந்திடுறேன்….அதோட கணக்குச் சரியாப் போயிடும்…அடுத்தாப்ல இன்னொரு ரவுண்டு வருவேன்…அப்பத் தர்றேன்…என்று அவராகவே சொன்னதும் பதிலுக்கு வெறுமே மண்டையைத்தான் ஆட்ட முடிந்தது. புத்திக்குக் கணக்குப் பண்ணத் தெரியவில்லை. தோன்றவுமில்லை. கேட்க வாயுமில்லை.

            அந்த நாலரை மணிக்கு அந்தப் பகுதியில் கிடைக்காத பால் வீட்டு வாசலில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி ஏதோ பெரும் சாதனையை நிகழ்த்தி விட்டது போன்றதான உணர்வைத்தான் எனக்கு ஏற்படுத்தியிருந்தது. எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்குகையில் நான் மட்டும் விழித்து அவர்களுக்காக ஓடுகிறேனே?  வீட்டிலுள்ள எல்லோருக்கும் என்னால், என் முனைப்பால் கிடைத்த ஏமாற்றமில்லாத காலைப் புத்துணர்ச்சி. பாக்கிக் காசைப் பற்றி  மனம் எண்ணவேயில்லை. வந்து இன்னொரு பாக்கெட் தருகிறேன் என்று சொன்ன தாத்தாவையும் மேற்கொண்டு எதிர்பார்க்கவில்லை. முதல்ல போய் அடுப்பை மூட்டி. பாலைக் காய்ச்சி, காபியை உள்ளே இறக்குற வழியைப் பாருய்யா….!

            இப்போது இவள் என்னடாவென்றால், புத்தியைத் தீட்டி, மனக் கணக்குப் போட்டு மீதிக் காசெங்கேய்யா என்று ஒத்தைக்கு நிற்கிறாள்? ஏமாந்துட்டீங்க…என்று சொல்லாமல் சொல்கிறாள். கேலி செய்கிறாள். இவனை எதிலடா மடக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பாளோ? திருடனை “மடக்கிப்“ பிடித்தனர் என்பதுபோல் அகப்பட்டக்கொண்டேன்.

            ஏமாந்தால்தான் என்ன? அப்படியே வைத்துக் கொள்வோமே…என்ன குடி முழுகிப் போகிறது? அந்தப் பெரியவரின் உழைப்பின் முன்னால் இதுவெல்லாம் தூசு!  பாக்கெட் இருபத்தஞ்சு ரூபாய் என்று கூடச் சொல்லட்டுமே…இன்னும் ஒரு மீதிப் பாக்கெட் கொண்டு வந்து கொடுக்கப் போகிறார்? நூறுக்குக் கணக்குத் தீர்ந்து விடும். பிறகென்ன நஷ்டம்?  அந்த மீதி ஒன்றைக் கொடுக்காவிட்டால்தான் என்ன?

             வராதுங்கிறனே... என்னைக்கு இன்னொரு ரவுன்ட் வந்திருக்கார் அவர்? அவர் வயசுக்கு ஒரு ரவுன்ட் வர்றதே பிரம்மப் பிரயத்தனம். அவர் ஏதோ சொல்லியிருக்கார்…நீங்களும் மொண்ணையாக் கேட்டுட்டு வந்து நிக்கிறீங்க…? காசு கொடுத்துதானே பால் வாங்கினோம்…அப்பக் கணக்குப் பண்ணி மீதி வாங்கத் தெரியாதா? அதிலென்ன தப்பு? கௌரவக் குறைச்சல்? அவர் சொன்னதைக் கேட்டுட்டு அப்டியே வந்து நிப்பீங்களா? இருபத்தி ஒண்ணுதானே தாத்தா…காசுக்கு இருபத்திரெண்டு, ஒரு ரூபா கூட வச்சிக்குங்க…மூணு பாக்கெட்டுக்கு அறுபத்தி ஒன்பது போக மீதி முப்பத்தி ஒண்ணு கொடுங்கன்னு வாய் விட்டுக் கேட்டு வாங்கியிருக்க வேண்டாமா? இந்தச் சின்னக் கணக்குக் கூடவா உங்களுக்குப் போடத் தெரியாது?தூக்கம் தெளியலயா அப்போ…அவர் முன்னாடி தூங்கிக்கிட்டே நின்னீங்களா?   – விட்டு வாங்கினாள் வைதேகி. அடேயப்பா…என்னா வாய்? என்னா பேச்சு? சந்தர்ப்பம் கிடைத்தால் ஆளைப் போட்டு அமுக்கி துவம்சம் செய்து விடுவாள்.

            எனக்குள் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. ஏழு மணிக்கு மேல் சாவகாசமாய்க் கிளம்பிப் போய் ஆடி அசைந்து வாங்கிக் கொண்டு வந்து, இந்தா பிடி…என்று சொல்லியிருந்தால்தான் இவளுக்கெல்லாம் சரியாய் வரும். ஒருத்தன் கஷ்டப்பட்டு சத்தம் கேட்டு அலர்ட் ஆகி, தூக்கத்தை விரட்டி, மாடியிலிருந்து திடுதிடுவென்று இறங்கி ஓடிப் போய் அக்கறையாய் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறானே…என்ற நன்றியில்லையே? வாங்கின பாலைப் பக்குவமாய்ச் காய்ச்சி எடுத்து வைத்திருக்கிறானே? என்கிற சமாதானப் பார்வையில்லை. வெட்டி ஓட்டு ஓட்டுகிறாள். சண்டைக்கு அடிபிடி மாடுபிடி…!

            மீதி ஒரு பாக்கெட்டை அவர் எங்க கொண்டு வந்து தரப் போறார்? அதெல்லாம் வர மாட்டார்….பாக்கிக் காசும் மொங்கான்தான். அப்படியென்ன அவசரம்? காலைல ஏழு மணிக்கு மேலே காப்பி சாப்பிட்டா தொண்டைல இறங்காதா உங்களுக்கு? ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டா காப்பி சாப்பிட்டா உயிர் போயிடுமா? யாருக்காக இப்டி உசிர விட்டுண்டு ஓடிப்போய் வாங்கினீங்க? நாங்க யாரும் கேட்கலையே? நீங்களா எங்களுக்கு உதவி செய்றதா நினைச்சிட்டு இப்டியெல்லாம் கோமாளித்தனம் பண்ணினா அதுக்கு நாங்க என்ன பண்றது? நாங்களா பொறுப்பாக முடியும்? பொண்ணும். பையனும் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த அறையில் மாமியார்.  யார் இருந்தால் எனக்கென்ன, சொல்ல வேண்டியதைச் சொன்னால்தான் என் மனசு ஆறும்…! உழைக்கவும் உழைத்து, கொத்தடிமையாவும் இருத்தல் இருக்கிறதே…! அதைப்போல் ஒரு கொடுமை உலகில் வேறேதுமில்லை.

            அடக் கடவுளே…! இதற்கா இவ்வளவு பேச்சு?ஈஸ்வரா…என்று எனக்கு விடுதலை?  ஆனாலும் இவளுக்கு வாய் ரொம்ப அதிகம்தான். எப்படித்தான் அடக்குவது இதை? பிஞ்சுல பழுத்தவ மாதிரி இப்படி எகிறிப் பாய்கிறாளே? இவளை எப்படி இவர்கள் வீட்டில் பொறுத்திருந்தார்களோ? மாட்டினான்யா வசம்மா ஒரு கிறுக்கன்…என்று என்னிடம் தள்ளிவிட்டு விட்டார்களோ?

            கொஞ்சம் உன் திருவாயை மூடிட்டு சும்மா இருக்கியா? ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஓ…ஓ…ன்னு கத்திட்டு? தேவையில்லாத டென்ஷன்.  பக்கத்து வீட்டுல காதுல விழுந்தா உன்னைப் பத்தித்தான் தப்பா நினைப்பாங்க…கொஞ்சம் அடக்கி வாசி…ஓட்ட வாயி….!! பொம்பளைக்கு இவ்வளவு வாய் ஆகாது….ஊர் சிரிச்சிப் போகும் அப்புறம்….! மனசு வெறுத்துப் போயிடும்…!

            சொல்லிவிட்டு வேகமாய்க் கீழே இறங்கி என் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தேன்.  இத்தனை வருடம் வேலை பார்த்தும் இன்னும் ஒரு மொபெட் கூட வாங்க முடியாத நிலையில்தான் நான் இருக்கிறேன். இரண்டு முறை டிபார்ட்மென்ட் லோனுக்கு அப்ளை பண்ணி, ஃபன்ட் இல்லை…ஃபன்ட் இல்லை  என்று திரும்பி வந்து விட்டது. எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும்…கடன் பெறுவதில் கூடவா இத்தனை சிரமங்கள்? ஆபீசில் இன்னும் சைக்கிளில் வரும் ஒரே ஆள் நான்தான்.

அந்தக் குறை வைதேகிக்குத் தாளாத ஒன்று.  ஒரு கோயில் குளம்னு எங்கயாச்சும் ஃப்ரீயாப் போக முடியுதா? வர முடியுதா?  எல்லாத்துக்கும் நடந்து நடந்தே சாக வேண்டியிருக்கு….பஸ்ல போயிப் போயி காசு கொடுத்து மாளல…..அந்தக் கூட்டத்துல நசுங்கிச் செத்து, யாரு போவாங்க? அப்டி என்ன சாமி வேண்டியிருக்குன்னுதான் அலுப்பு வருது.  எனக்கு எதுக்கும் யோகமில்லை….வீடு வீடுன்னு கெதியாக் கெடந்து செத்து மடிய வேண்டிதான்…..வாழ்க்கைப்பட்ட எடம் சரியில்லை…யாரை நோகுறது? –எனக்கும்தான்…நானும் என் மனதில் சொல்லிக் கொள்வேன்தான்.

 நாமே இப்படிக் குறைபட்டுக் கொண்டால் தாத்தா மாதிரி ஆட்கள்? எந்தச் சாமியைக் கும்பிட்டால் இந்தத் துயரம் தீரும்? நன்மையும் தீமையும் பிறர் தர வாரா…! எல்லாமும் நமக்கு நாமே சம்பாதித்துக் கொள்வதுதான். இருப்பதை வைத்து அல்லது நியாயமாய்க் கிடைக்கும்வரை  ..….திருப்தி கொள்ள முடியாத மனசு.

அவள் மனக்குறையைத் தீர்த்து வைக்க என்றுதான் எனக்கு வேளை வரப்போகிறதோ? இந்தச் சமயம் பார்த்துத்தான் எல்லா நினைப்பும் வருகிறது. நினைப்பு என்று வருவதென்ன? எப்போதும்  இதெல்லாமும் மனதில் காட்சிகளாய் ஓடிக் கொண்டிருப்பதுதான். நான் நடுத்தர வர்க்கத்தவனா அல்லது கீழ் நடுத்தர வர்க்கத்தவனா? இன்னும் எவ்வளவு வருவாய் இருந்தால் என்னால் என் குடும்பத்தை சந்தோஷமாய்க் கொண்டு செலுத்த முடியும்?        பற்றாக்குறையோடு குடும்பம் நடத்துவது பாவமா? கடன் எதுவுமில்லையே? அந்த திருப்தி ஏன் வரமாட்டேனென்கிறது?

தீராத, ஓயாத சிந்தனைகள் என் மனதில். இருந்தால் பெரும் பணக்காரனாய் வலம் வர வேண்டும். அல்லது பரம ஏழையாய்ச் சுற்றித் திரிய வேண்டும் . இந்த ரெண்டும்கெட்டான் மத்தியதர வர்க்க வாழ்வு இருக்கிறதே….அப்பப்பா…! மனுஷனால் நினைத்துப் பார்க்கவே முடியாத துன்பங்கள் அடங்கியவை அவை. பற்றாக் குறை…பற்றாக் குறை… அநியாயப் பற்றாக்குறை….எது வந்தாலும் போதாது. எவ்வளவு வந்தாலும் போதாது. எண்ணிச் சுட்டது விண்ணப்பம் என்று ஒரு முதுமொழி.   எண்ணிச் சுடவே இருந்தால்தானே? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? வெறும் கையில் முழம் போட முடியமா?

ட…நீங்க எதுக்கு வந்தீங்க…..? நாந்தான் வருவனே….இதோ கிளம்பிட்டேயிருக்கேன்ல… - கையில் ஒரு பால் பாக்கெட்டோடு கொந்திக் கொந்தி நடந்து வந்து கொண்டிருந்தார் அந்தக் கிழவர்.  அடப் பாவி மனுஷா…!

என்னாச்சு…ஒத்தப் பாக்கெட்டோடு வர்றீங்க…? என்றேன் நான்.

ஒங்களுக்குத்தான்…..கொண்டாந்து தர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்ல…..? கொடுக்க வேண்டாமா?  பெறவு நீங்க எதுக்கு வர்றீங்க? நா வரமாட்டன்னு நினைச்சிட்டீங்களா? – சொல்லிவிட்டுப் பொக்கு பொக்கென்று பொக்கை வாயால் சிரித்தார். ஒரு குழந்தையின் குதூகலம் அதில் தெறித்தது. ரொம்பவும் அனுபவம் வாய்ந்த சிரிப்பு அது. ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது.

இதக் கொடுக்க வாணாமா? இன்னைக்கு அடுத்த ரவுன்ட் இல்லாமப் போச்சு…பால் பாக்கெட் கொறச்சுப் போட்டுட்டாங்க….ராத்திரி பார்லர்ல ஏதோ நிறையப் பால் கெட்டுப் போயிடுச்சாமுல்ல….கீழே கொட்டிட்டாகளாம். எல்லாக் கடைக்கும் அளவாத்தான் போட்டிருக்காக இன்னைக்கு…சரி…உங்க ஒரு பாக்கெட்டை ஏன் தொங்கலா விடணும்னு எடுத்திட்டுப் புறப்பட்டேன்…..இந்தாங்க பிடிங்க……-சொல்லிக் கொண்டே  பால் பாக்கெட்டை என் கையில் திணித்தவர்…இருங்க…பாக்கி தர்றேன்….என்றார்.

இன்னும் என்ன பாக்கி? அதான் பால் பாக்கெட் கொடுத்திட்டீங்களே…என்றேன் புரியாமல். அப்போதும் என்னிடம் கணக்கு ஏதுமில்லை.   அவரிடம் போய் மனக் கணக்குப் போட்டு வாங்க எனக்கு மனசே இல்லை. மீதி ஒரு பாக்கெட்டைக் கொடுத்து விட வேண்டும் என்று புறப்பட்டுப் பாதி வழி வந்திருக்கிறாரே…என்ன ஒரு நேர்மையான உணர்வு இந்த மனுஷனுக்கு? பழையவர்கள் பழையவர்கள்தான். அந்த மகிமையே தனி.  தொண்ணூறு தாண்டிய ஒரு ஜீவன் பொழுது விடிந்தும் விடியாததுமாய் உழைக்கும் உழைப்பா இது? துவங்கிய வேலையை ஒட்டுக்க முடித்தால்தான் ஆயிற்று என்கிற தீர்மானம். என்ன ஒரு ஒழுங்கும் நேர்மையும்…!

இந்தாங்க பாக்கி…நாலு பாக்கெட்…நாலிருபது எண்பது…நா மூண பன்னெண்டு….தொண்ணூத்தி ரெண்டு போக மீதி எட்டு….சரியா இருக்கா பார்த்துக்குங்க….

எதுக்குத் தாத்தா இதெல்லாம்…? மீதியைத் தராட்டாத்தான் என்ன? எதுக்கு இந்தக் கணக்கு? வாடிக்கையல்லாத எனக்கு, கேட்டவுடனே மறுக்காம எடுத்துத் தந்தீங்களே…அது எவ்வளவு பெரிய விஷயம்? பால்லெல்லாம் இல்ல…ன்னு முகத்தத் திருப்பிட்டுப் போறவுங்கதான் அதிகம்.  போதாக்குறைக்கு இன்னிக்குப் பால் ஷார்ட்டேஜ்னு வேறே சொல்றீங்க…நான் வாங்கின பால் வேறே யாராச்சும் வாடிக்கையாளருக்கு குறையில்லாமப் போயிருக்கும்….இன்னைக்குப் பார்த்து நான்தான் உங்களுக்குக் குறுக்கே  சங்கடமா வந்து நின்னுட்டேன் போலிருக்கு….

சே…சே…அது ஏன் அப்டி நினைக்கிறீங்க…ஒவ்வொரு நாளைக்கு இப்டி ஏதாச்சும் ஆகுறதுதான்.  சகஜம்தானே…எதிர்பாராம நடக்குறதுக்கு நாமதான் என்ன பண்ண முடியும்? அதுக்காகப் பாலை ஒரு நியாயமில்லாத விலைக்கு விற்க முடியுமா? காசுக்கு இருபத்திரெண்டு…நா ஒரு ரூபா கூடக் கேட்குறேன்….அவ்வளவுதான்…..வீட்டுக்கு வந்து டெலிவரி கொடுக்குறவுக இருபத்தஞ்சுன்னெல்லாம் கூட விற்குறாங்க…நமக்கு அது வாணாம். எதுலயும் மனுசனுக்கு ஒரு நிதானம் வேணும்…நியாயம் வேணும்…அப்டி வர்ற எதுவும்தான் ஒருத்தனுக்கு நிலைக்கும்…நீங்க கொண்டு போங்க….என்று மீதிச் சில்லரையை என்னிடம் திணித்து விட்டு நடையைக் கட்டினார் அவர்.  அவர் கணக்கு பாக்கி கொடுப்பதோடும், முடிந்தது அன்றைய வேலை என்று திரும்புவதோடும்தான் நிறைவு பெறுகிறது. கோடு போட்டுக்கொண்டு பயணிக்கும் அன்றாட நியமங்கள். அவரவர் மனது நிர்ணயித்து வைத்திருக்கும் தர்ம நியாயங்கள். அந்த மனக் கணக்கு தனிக் கணக்கு. அது என்ன வெறும் பால் கணக்கா, மனக் கணக்கா அல்லது பால்மனக் கணக்கா?

மீதி ஒரு பாக்கெட்டும் வராது…பாக்கிச் சில்லரையும் வராது….நல்லா ஏமாந்தீங்க…மொங்கான்தான் –என்னவொரு இளக்காரமான பேச்சு?  வைதேகியின் வார்த்தைகள் என் காதுகளை அறைந்தன. நமக்கு வாய்த்தது இப்படி…என்ன செய்ய? அவள் கணக்கும் தனிக்கணக்குதான். தனி நபர் கணக்குகள் பல இடங்களில் மாறுபடும்தானே? ஒத்து வராத கணக்குகளோடும் ஒன்றித்தானே பயணிக்கிறோம்? உலக நடைமுறையிலிருந்து விலகிச் செல்ல ஏலுமா? நன்னெஞ்சே நீ  அறிவாய்…!  சில பெண்கள் பலவற்றில் எப்போதும் கொஞ்சம் அதீதம்தான்…! நினைத்து சிரித்துக் கொண்டேன்.

பாக்கிச் சில்லரையையும் எடுத்துக் கொண்டு ஒரு பால் பாக்கெட்டோடு தட்டுத் தடுமாறி பாதி வழிக்கும் மேல் வந்து, ஏன் நீங்க வந்தீங்க…நான்தான் வருவனே..என்று பவ்யமாய்ச் சொல்லிக்  கொடுத்து விட்டு படு நிதானமாய், நிச்சலனமாய்த் திரும்பி நடந்து கொண்டிருந்த அந்தத் தாத்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றேன் நான்.

  -------------------------------------

                                               

 

 

15 டிசம்பர் 2024



“தனித்துவன்” - குறுநாவல் தொகுப்பு - அமேஸான் கிண்டில் நூல் 
விலை ரூ.200 
--------------------------------




 

14 டிசம்பர் 2024



கிண்டில் நூல் - அசோகமித்திரனுக்கு ஒரு அஞ்சலி - அமேஸான் கிண்டிலில் .  கட்டுரைத் தொகுப்பு  -  விலை ரூ.100. 











 

01 டிசம்பர் 2024

 


“தவறிச் செய்த தவறு”-சிறுகதை - கணையாழி டிசம்பர் 2024




            சார்…தொட்டி நிரம்பி வழியுது…நிப்பாட்டுங்க….-பக்கத்து வீட்டு அம்மாள் கத்திய சத்தம் யார் காதிலும் விழுந்த மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் அவரவர் குச்சிலுக்குள் அடைந்து கிடக்கும்போது எப்படி விழும்.? இவருக்கு மட்டும் விழுகிறதே…அதுதான் துரதிருஷ்டம்…!

            மோட்டார் போட மட்டும் தெரிகிறது எல்லாருக்கும். கீழே போய் வெறுமே ஸ்விட்சைத் தட்டுவதுதானே?  அதை நேரம் பார்த்து அணைக்கத் தெரியவேண்டாம்? தண்ணீர் ஏறுகிறதா, சம்ப்பில் தண்ணீர் இருக்கிறதா? என்று யாரும் பார்ப்பதில்லை. டக்கென்று சுவிட்சை ஸ்டைலாகத் தட்டுவதோடு சரி. இவர்கள் சொன்னபடி கேட்கிறதாம் அந்த மோட்டார்…! சம்ப்பில் தண்ணீர் இல்லாமல் பல சமயங்களில் ஏர் லாக் ஆகிவிடும். அந்த சத்தமே அபஸ்வரமாய் இருக்கும். அத்தோடு காணாமல் போய் விடுவார்கள்.

ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வந்து மோட்டார் மேற்பகுதியில் இருக்கும் குழாய் வழி பொறுமையாய் ஊற்றி அது நீரை நிறுத்துகிறதா அல்லது கீழே இறக்கிக்கொண்டேயிருக்கிறதா என்று கவனித்து, நிறுத்தி நீர்க் குமிழ்களோடு மேலாக நின்றால், போய் சுவிட்சைத் தட்டி, தண்ணீர் ஊற்றிய வழி எகிறி அடிக்கிறதா என்று கவனித்து காற்று அடைப்பை வெளியேற்றி பிறகு மேலே தொட்டியில் தண்ணீர் ஏறுகிறதா என்பதையும் செக் பண்ணி…அப்பாடா…! என்று ஓய வேண்டும்.  எவன் செய்வான் இத்தனையும்?  

இவன்தான். வேறு யார்? அதாவது இவர்தான் செய்கிறார் இன்றுவரை.

நீங்க ஏன் ஓடி ஓடிப் போய் செய்றீங்க? இளவட்டப் பசங்க எட்டு வீட்டுக்கும் எட்டுப் பேர் இருக்கைல உங்களுக்கென்ன வந்தது? – மேலேயும் கீழேயும் ஏறி இறங்கி எங்கயாச்சும் விழுந்து, வழுக்கி, காலக் கைய ஒடிச்சிக்கிறதுக்கா? விலாசினி புலம்பல் அவளோடு.

வெறும் புலம்பலா அது? ஊனமாகிப் போய் வீட்டுக்கே பாரமாய் அமைந்து விட்டால்? யார் படுவது என்கிற பயம். நியாயம்தானே? அந்த பயம் இவருக்கில்லாமல் போகுமா?

ஒரு முறை சம்பிரதாயமாய்ச் சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்து விடுவாள். அவள் வாய் தொடர்ந்து சாமி ஸ்லோகங்களை உச்சரிக்கும்.  அடுப்படிக் காரியத்திற்குத் தண்ணீர் வேண்டுமே? பாத்ரூம் போனால் குழாய் சொட்டினால்? அடக் கன்றாவியே,  வேலை நின்று போகுமே?

மோட்டாரைப் போட்டுவிட்டு உள்ளே போய் அடைந்து கொண்டால் டி.வி. ஓடும் சத்தத்தில் லயித்துப் போய் எப்படி அணைக்கும் ஞாபகம் வரும்? அதை ஏன் அப்படிப் பேயாய் கத்த விடுகிறார்கள்? அவர்களுக்கு மட்டும் கேட்டால் போதாதா? நம் வீட்டுக் கதவைத் திறந்தால் குடி கெடுத்த கதையாய் அலறித் துடிக்கிறது. கொஞ்சமாவது அறிவு வேண்டாம்? காட்டிலா வாழ்கிறார்கள்? தப்பு…தப்பு…காடு இவ்வளவு கொடூரமாய் இராது. இனிமை தவழும் இடம் அது!

 என் வீடு…என் டி.வி. எப்படியும் வைப்பேன்…! நீ யாரு கேட்கிறதுக்கு?  இது ஒரு மனப்பான்மையா? வீட்டு நபர்கள் ஒருவருக்குக் கூடவா தோன்றவில்லை?  ஒரே அபார்ட்மென்டில் இருப்பதால் இவர்களோடெல்லாம் பொய்யாய்ச் சிரித்தாக வேண்டியிருக்கிறது. நட்பு பாராட்டி மகிழ வேண்டிய அவலம்.

மனிதர்கள் பலவிதமாய்த்தான் இருப்பார்கள், கண்டிருக்கிறது. ஆனால் சொல்லி வைத்தாற்போல் எல்லோருமா மோசமாய் இருப்பார்கள்? இருக்கிறார்களே? அதற்கு இந்த அடுக்ககமே சான்று.

            மாடியில் ஓவர்ஃப்ளோ ஆகி நல்ல தண்ணீர் வடிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. மொட்டை மாடியில் தண்ணீர் வெள்ளம். காசு தண்ணியாக் கரையுது என்பது இதுதானோ? ஒரு லாரித் தண்ணீர் ஆயிரத்து அறுநூறு. எவன் காசை எவன் வீணாக்குறது? எல்லார் காசும் உண்டு என்றாலும் பங்குப் பணம் வீணாகிறதே?

            ஒருத்தனாவது கண்டுக்கிறானா பார்த்தியா? யாராச்சும் அணைப்பாங்கன்னு இருக்கிறது. இல்லன்னா நமக்கென்னன்னு கிடக்கிறது. என்ன மனுஷங்க? காசு விரயமாகுறதுபத்தி எவனுக்கும் கவலையில்லையா? எப்படியிருக்கும்? அதான் அள்ளி அள்ளிக் கொடுக்கிறானே ஐ.டி. கம்பனிலா? -புலம்பிக்கொண்டே கீழே ஓடினார் வாத்சல்யம்.

 லிப்ட் இருந்தது. ஆனால் இல்லை. உபயோகமாய் இருந்தால்தானே உயிரோடு இருப்பதாய் அர்த்தப்படும். அது நின்று மாசக் கணக்காகிறது. அதற்கு ஏ.எம்.சி. போட (வருடாந்திரப் பராமரிப்புக்கான புக்கிங்) எவனுக்கும் மனசில்லை. அதென்ன வருடக்கணக்காய் ஓடிக் கொண்டேயிருக்குமா? மனுஷனே ப்ரேக் ஆறான்…மெஷின் ஆகாதா? அதைப் பராமரிக்கத் துட்டுக் கொடுக்கக் கைவரவில்லை ஒருவனுக்கும். துள்ளித் துள்ளி இரண்டிரண்டு படிகளாய் ஏறுகிறார்களே…இளமைத் துள்ளல். தன் இளமைக் காலத்தில் தான் இப்படியெல்லாம் குதித்துக் கும்மாளம் போட்டதில்லையே என்று நினைத்துக் கொண்டார்.  

எங்க அபார்ட்மென்ட்லயும் லிஃப்ட் இருக்குன்னு சொல்லிக்கலாம். ஓடுதான்னு கேட்கப்படாது.

            சைடுக் கம்பியைப் பிடித்துக் கொண்டு படிகளில் பத்திரமாய் இறங்கினார் வாத்ஸல்யம். எப்படி இறங்கினாலும் ஏதேனும் ஒரு சமயம் வழுக்கி விடுகிறதுதான். ஒன்று செருப்பு வழுக்கி விடுகிறது. அல்லது தரை வழுக்கி விடுகிறது. அந்த மாடிப்படி சைடு ஜன்னலைச் சாத்தித் திறக்க நாதியில்லை. மழை பெய்தால் தண்ணீர் உள்ளே சரம் சரமாய்ப் பாய்ந்து படிகளில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. லைட் போடவில்லையென்றால் கண்ணுக்குத் தெரியாது. பளிங்கு போல் தெரிந்தால் பார்த்து வைக்கலாமே பாதத்தை…!

            யாருக்கும் பராமரிப்புப் பற்றி எந்தக் கவலையுமில்லை.  வீட்டுச் சொந்தக்காரன் எவனாவது குடியிருந்தால்தானே? இவர் ஒரு குடும்பம் தவிர மற்ற அத்தனையும் வாடகை. ம்ம்ம்…தவறு…தவறு…முதல் மாடியில் ஒரு வயதான லேடி.. கவர்ன்மென்ட் சர்வீசில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். திருமணம் செய்து கொள்ளாத தனித்துவ ஜீவன்-ஜீவனம். அவர்களுக்கு நடக்க முடியாமல் போய் எவ்வளவோ நாளாயிற்று. வந்த புதிதில் நடந்து பார்த்தது. இப்போது நாலு சுவருக்குள் அன்றாடம். நடக்கிறார்களோ, தேய்கிறார்களோ?

 ஜன்னல் வழி கயிறு கட்டி குப்பை இறங்கும். மக்கும் குப்பை, மக்காக் குப்பையெல்லாம் இல்லை.. எல்லாம் ஒரே குப்பைதான்.  மாதம் நூறு ரூபாயும் அன்பளிப்பாக அந்த வாளியிலேயே குப்பையோடு குப்பையாய்…மேலாகப் பரிணமித்து  இறங்கி ….அந்தப் பணியாளைச் சந்தோஷப்படுத்தும்.

பால் வண்டி காலை நாலு முப்பதுக்கு வருகையில் தயாராய்த் தொங்கும் வாளியில் பாக்கெட்டைப் போட்டுவிட்டு நகர்ந்து விடும். பிறகு அது தானே மேலே வந்து அந்தம்மாள் கைக்கு எட்டும். அடுக்ககத்தில் இருப்பவர்கள் அவர்களை வெளி ஜன்னல் வழி ரோட்டில் நின்று பார்த்தால்தான் ஆச்சு. முதல் தளம் கதவு திறக்காது. செருப்பும் உள்ளேயே கிடக்கும். ஆள் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாது. அவர்களுக்கு என்று வந்திருக்கும் தபால்களோ கீழே தபால் பெட்டியிலேயே தூங்கும். எடுப்பதற்கோ எடுத்துக் கொடுப்பதற்கோ நாதியில்லை. கொடுத்தால் அதன் நிமித்தம் ஏதேனும் வேலை தொடரும் என்கிற பயம். அந்த லேடி வேலை வாங்காத ஆளில்லை அந்த அபார்ட்மென்டில். இவரே மாட்டிக் கொண்டு முழித்திருக்கிறார்.  ஒரு நாள் வாத்ஸல்யத்தை உதறிக் கோபமாய் ஒரு கத்துக் கத்த…உங்கப்பா ஏன் இப்டிக் காட்டுக் கத்து கத்துறார் என்று பையனிடம் கேட்க…அன்றோடு உறவு முறிந்தது.

அட…அவர்களைத்தான் மெயின்டனன்ஸிலிருந்து ஒதுக்கியாயிற்று. மிச்சம் ஆறு பேர் என்னவாயிற்று? நா மாட்டேன்…நீ மாட்டேன் என்றால்? ஒருவனே கிடந்து மாரடிக்க முடியுமா? ஆளுக்கு மூன்று மாசம்தான். ஆனாலும் மூக்கால் அழுகிறார்களே!

இதுக்குத்தான் சொன்னேன்….வாடகைக்கு வர்றவங்கள்டல்லாம் ஒரு இருபது ரூபாப் பத்திரத்துல கண்டிஷன்ஸை டைப் பண்ணி கையெழுத்து வாங்கணும்னு. அசோசியேஷன் ஃபார்ம் பண்ணனும்னு. வெறும் எட்டு வீடுதானேன்னு உதறியாச்சு.  அப்பத்தான் மூணு மாசத்துக்கொரு தரம் அவனவன் பராமரிப்பப் பணிகளைப் பார்ப்பான். நாம மட்டும் கிடந்து மாயணும்னு என்ன தலவிதியா?

தண்ணி லாரிக்குச் சொல்லணும்…மாசா மாசம் அவனவன் யூஸ் பண்ணின தண்ணி அளவை மீட்டர்ல பார்த்துக் குறிச்சு,கணக்குப் பண்ணி துட்டு வசூலிக்கணும்… அப்பப்போ சம்ப்ல தண்ணி இருக்கா தீர்ந்து போச்சான்னு பார்த்து தாமதமில்லாம லாரிக்குச் சொல்லி வர வச்சு  சம்ப்பை நிரப்பணும், ஏர் லாக் ஆகாமப் பாதுகாக்கணும், கார் பார்க்கிங், மாடி, மாடிப்படி, மொட்ட மாடின்னு ஆள் போட்டுக் கூட்ட  வச்சு சுத்தம் பண்ணனும், ஒட்டடை எடுக்கணும்…அவளுக்குச் சம்பளம் கரெக்டா வசூல் பண்ணிக் கொடுக்கணும், எங்கயாச்சும் லைட்டுப் போயிடுச்சின்னா புது பல்பு வாங்கி மாட்டணும், அப்பப்போ கீழ வரும்போது கேட்கள் திறந்து கிடந்தா கௌரவம் பார்க்காம சாத்திக் கொண்டி போடணும்…அப்பத்தான் தெரு நாய்கள் நுழை யாது. அசிங்கம் பண்ணாது. எவ்வளவு வேலை கெடக்கு….எல்லாத்தையும் நீ ஒருத்தனே தூக்கிச் சுமக்கணும்னு விதியா? எழுதி வச்சிருக்கா நமக்கு மட்டும்?

நா என்ன சொல்றேன்னா…தண்ணி காலியாயிடுச்சின்னு வையி…பேசாமப் போட்டு வச்சிடு…அவனவன் குளிக்கவும் கழுவவும் தண்ணி இல்லாமக் கஷ்டப்படுவானுங்கல்ல…அப்பத் தெரியும் சேதி….! அவனே தண்ணி இருப்பைப் பார்த்து, லாரிக்கு ஃபோன் பண்ணட்டும். செய்தா தேய்ஞ்சு போயிடுவாங்களா?

மாடில உப்புத் தண்ணி போர்க் குழாய் ஒண்ணு மாட்டியிருக்கோம்லப்பா…அதுலேர்ந்து பிடிச்சிக்கிறாங்கப்பா…டெம்ப்பரரியா யூஸ் பண்ணிக்குவோம்னு…பக்கத்து வீட்ல முப்பதடிதான் போர் போட்டிருக்கான்…இதே போர் தண்ணிதான். உப்பில்லாம வருதுங்கிறாங்க…இந்த ஐடியா இங்க அபார்ட்மென்ட் கட்டின பில்டருக்கு ஏன் இல்லாமப் போச்சு? …அவன யாரு நூறடி, நூத்தம்பதுன்னு போட வச்சது? கண்ண மூடிட்டு நெளு நெளுன்னு இறக்கிட்டாங்ஞளோ…? கீழே போகப் போக கல்கண்டு மாதிரித் தண்ணி கிடைக்கும்னு நினைச்சிட்டாங்க போல்ருக்கு? அது கடல் தண்ணி கணக்கா கரிச்சிக் கொட்டுது….!

புலம்பித் தள்ளி என்ன பயன்? இப்படியேதான் கழிகிறது அபார்ட்மென்ட் குடியிருப்பு நாட்கள். கீழே அந்தம்மா பூச்செடிகளாய் வைத்தது. அவை பூத்துக் குலுங்குகின்றன. நித்திய மல்லியைத் தவறாமல் யாரோ பறித்து விடுகிறார்கள். ஒரே மர்மமாயிருக்கிறது. அந்தச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றுவது யாரென்று நினைத்தீர்கள்? அந்த லேடியா? வச்சதோடு சரி. இவரல்லவோ நீர் பாய்ச்சுகிறார்.

நாற்று நட்டாயா, களை பறித்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? என்றா கேட்க முடியும்? அவை வாடுவதில் இவருக்கு உவப்பில்லை. எனவே கடமையாய் ஊற்றுகிறார். அவற்றோடு அன்றாடம் பேசுகிறாரே, அந்த பாஷை யாரேனும் அறிவரா? அதற்கெல்லாம் ஒரு ரசனை வேண்டும். அழகுணர்ச்சி வேண்டும். அப்போதுதான் சாத்தியம். அவ்வப்போது பாம்புகளைக் கூடப் பார்க்கத்தான் செய்கிறார். அதுபாட்டுக்குப் போகும், வரும் என்று விட்டு விடுகிறார். யாரிடமும் சொல்வதில்லை. பக்கத்தில் காலி மனை.மரம் செடி கொடிகளோடு அப்பிக் கிடந்தால் வராமல் என்ன செய்யும்?

பட்டென்று சுவிட்சைத் தட்டி மோட்டாரை அணைத்தார் வாத்ஸல்யம். அதைக் கூடக் கவனமாய்த்தான், மென்மையாகத்தான் கையாள வேண்டியிருக்கிறது. இதுவரை எத்தனை ஸ்விட்ச் மாற்றியாயிற்று? ஒரு சுவிட்ச் போனால், தனியே அதை மட்டும் வாங்கிப் போட முடியாதாம். அந்த போர்டே செட்டாக மாற்ற வேண்டுமாம். என்ன அநியாயம்? அதுவும் லோகல் கடைகளில் கிடைக்காதாம். பாரிஸ் கார்னர் போயாக வேண்டுமாம். அப்போ மத்த ஸ்விட்செல்லாம் வேஸ்டா? இது ஒருவகைக் கொள்ளையாய்த் தெரியவில்லை?  எதில்தான் எப்படித்தான் எமாற்றுவார்கள்?

எதனில்தான் ட்யூப்ளிகேட் இல்லை? எதுதான் அசல்? எல்லாமுமா இப்படி மாறும்? எதில் யாரை எப்படி ஏமாற்றுவது என்றா யோசிப்பார்கள்? எப்படி தரமான நல்ல சரக்கைக் கொடுப்பது என்பதான சிந்தனைகளெல்லாம் அற்றுப் போய்விட்டதா? சாதா, ஸ்பெஷல் என்று சொல்லியே பலவற்றில் ஏமாற்றி விடுகிறார்களே? ஏமாற்ற ஆரம்பித்த பிறகு மக்கள் ஏமாறினார்களா? அல்லது மக்கள் ஏமாறத் தயாராய் இருந்தபோது ஏமாற்ற ஆரம்பித்தார்களா? எது முன்னே, எது பின்னே? எதற்காக இந்த உலகம் இப்படிப் பொய்யும் புரட்டுமாய் மாறிப் போனது? நல்லது என்பதே கண்ணில் கிட்டாது போலும்? எதைத் தொட்டாலும் சந்தேகம் வருவது போல் ஆக்கி விட்டார்களே? எல்லாவற்றிலும் குறுக்கு வழியைக் கண்டு பிடித்து, அதுவே நடைமுறை என்று ஆக்கி விட்டார்களே படுபாவிகள்?

ஏர் லாக்கிலேயே கவனிக்காமல் மோட்டாரை மணிக்கணக்காய் ஓடவிட்டு, லோ வோல்டேஜில் மோட்டாரை ஆன் பண்ணி ஓடவிட்டு அதன் காயலைக் கருக்கி, புதுக் காயல் போட அல்லது புது மோட்டார் மாற்ற என்று மூணு நாளைக்குத் தண்ணி இல்லாமல் தவிக்க விட்டு…திடீர்ச் செலவு உண்டாக்கி, ஆளாளுக்கு உள்ளூர் உறவினர் வீடுகள், தெரிந்தவர் வீடுகள் என்று பாய்ந்து ஓடி காலைக் கடன்களை முடிக்கவும், குளிக்கவும் என்று அலமந்து பறந்து அப்பப்பா…என்ன பாடு…என்ன பாடு…? ஒரு அடுக்ககத்திற்குக் குடி வந்தால் என்னவெல்லாம் பிரச்னைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை அனுபவித்துத்தான் உணர்ந்தாக வேண்டும். அப்போதுதான் மனுஷ ஜென்மங்களுக்கு புத்தியில் உறைக்கும். சம்ப்பிலிருந்து வாளியில் மொண்டு மொண்டு மாடிக்குத் தண்ணீர் தூக்கும்போது தெரியும் அந்தமான் கைதியாய் அலையும் அவலம்.

அந்த நேரத்திலும் கார் பார்க்கிங்கில் இருந்த அத்தனை லைட்டுகளும்  பக பகவென்று எரிந்து கொண்டிருந்தன.  எத்தனையோ பேர் கீழே வந்தாயிற்று, போயாயிற்று. யார் கண்ணிலுமா படவில்லை?  ஒரு நாளைக்கு நானே மறந்து விட்டேன். அப்படியானாலும் நான்தான் வந்து அணைக்க வேண்டுமா? யாருமே இவ்வளவு நேரம் கீழே வரவேயில்லையா? யார் கண்ணிலுமே இந்த வெளிச்சம் படவில்லையா? அல்லது பட்டும் உறைக்கவில்லையா? அல்லது இதுக்கெல்லாம் கரன்ட் சார்ஜ் இல்லை என்று நினைத்து விட்டார்களா?

எவ்வளவு சுருக்கமாய் மின்சாரம் செலவழிக்கிறோமோ             அவ்வளவுக்கவ்வளவு கட்டணம் குறைவாய் வருமே…அது ஏன் ஒருவருக்கும் தெரியவில்லை? ஒரு ஸ்லாப் தாண்டினால் தாறுமாறாய் எகிரும் மின் கட்டணத்தை அநாவசியம் என்று ஏன் எவரும் உணரமாட்டேனென்கிறார்கள்?

கார் பார்க்கிங் வட புறமும், தென்புறமும் என்று எல்லா லைட்டுகளையும் அணைத்தார் வாத்ஸல்யம். தினமும் அவர்தான் அணைக்கிறார். காலை சரியாக ஆறு மணிக்கு நன்றாய் வெளிச்சம் வந்தவுடன் பொறுமையாய்க் கீழே இறங்கி வந்து அத்தனை லைட்டுகளையும் அணைப்பார். யாரையும் எதிர்பார்ப்பதில்லை. எவனும் அணைப்பதுமில்லை, அணைக்கப்போவதுமில்லை என்று உறுதி செய்துதான் அவரே இதைச் செய்ய ஆரம்பித்தார்.  எல்லாத்தையும் அந்தப் பெரிசு பார்த்துக்கிடும் என்று விட்டு விட்டார்களோ என்னவோ? கண்டுக்காத….என்று புத்திசாலித்தனம் காட்டுகிறார்கள். கள்ளப் பயல்கள்!

அட…மாலையில் இருட்டும்போது லைட்டுகளைப் போடக் கூடவா கூடாது. சுவிட்சுகளைத் தட்டினால் கை வலிக்குமோ என்னமோ? ஆபீஸ் முடிந்து வருகிறார்களே…என்ன இப்படி இருண்டு கிடக்கு? என்று ஒருவருக்குக் கூடவா தோன்றாது? மனசாட்சி இல்லையா ஒருத்தனுக்கும்? இந்த ஓட்டம் ஓடுகிறார்களே? இதில் மட்டும் ஏன் ஜடமாய் நிற்கிறார்கள்? இருட்டுக் குகையாக் கிடக்கே என்று தோன்றாதா?

இதெல்லாம் நம்ம வேலை இல்ல என்று நினைத்துக் கொள்வார்களோ இந்த ஐ.டி. கனவான்கள்? தன் வேலையே உறுதி இல்லாதவர்கள். இவர்களுக்கு என்ன கௌரதை வேண்டிக் கிடக்கிறது? காலையில் ஆபீசில் காலடி எடுத்து வைக்கும்போது இப்டி உட்காருங்க என்று வாயிலிலேயே செக்யூரிட்டி நிறுத்தி விட்டானென்றால் கதை முடிந்தது.  என்னவோ கோளாறு?  என்று அர்த்தம். அந்த லட்சணத்தில்தான் இவர்கள் பார்க்கும் வேலை அலமந்து கிடக்கிறது!

ஒரு வேலை நிறுத்தம் செய்ய முடியுமா இவர்களால்? ஒரு கூட்டம் போட முடியுமா? ஒரு கோஷம்?  ஒரேயொரு கோரிக்கையையாவது எடுத்து முன் வைக்க ஏலுமா? போய்யா…நீ இல்லாட்டி இன்னொருத்தன்…! இதுதான் நிலை.

அவர்களுக்கும்தான். இந்த மடம் இல்லாட்டி இன்னொரு சந்தை மடம்…! அப்படித்தானே மாறி மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்? முப்பத்தஞ்சு வருஷம் கம்பீரமா சர்வீஸ் பண்ணி அம்பதாயிரம் பென்ஷன் வாங்குற  கௌரதை உண்டா இவனுங்களுக்கு? என் பையனையும் சேர்த்துத்தான் சொல்லிக்கிறேன். அடிச்சிக்கிட்டனே…கேட்டானா? ஏதாச்சும் பாங்க் வேலை, சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப்னு போ…இந்த ஐ.டி. வேல வேணாம்….காதுல வாங்கினானா? படிச்சது இராமாயணம்…இடிக்கிறது பெருமாள் கோயில்…!! இவன் படிச்ச பி.இ. (இஇஇ) க்கும் பார்க்குற வேலைக்கும் என்ன சம்பந்தம்?

ஜெயகாந்தன் சொன்ன மாதிரி கொஞ்சம் இங்கிலீஷ், கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் தமிழ்ன்னுவார்…இதானே மிச்சம்ப்பார். பள்ளிப் படிப்புக்கே போகாத அந்த மனுஷனோட துல்லியமான விமர்சனம் இது. அதுதானே உண்மை. அப்டித்தானே சர்வீசை ஓட்டியாச்சு. ஆனாலும் அந்த மதிப்பு இந்த ஐ.டி.ஃபீல்டுக்கு இருக்கா? வேலையே செய்யாம, வேலையே கத்துக்காம, அடுத்தவனப் போட்டுக்கொடுத்தே எத்தன பேர் இங்க வண்டியை ஓட்டுறான்? வேலை செய்றவனாப் பார்த்துக் கொல்றானுக. எட்டு மணி நேரம் வேலைங்கிறது என்னைக்கோ காணாமப் போயிடுச்சி. எல்லாப் பயலுகளும் பன்னெண்டு மணி நேரம் பாடாப் பட்டு முதுகு ஒடிஞ்சு போய்க் கெடக்கான். நாப்பத்தஞ்சு வயசுக்குள்ளாறயே கூனு விழுந்து போகுது…எப்டிச் சமாளிக்கப் போறானுங்களோ…எதுவும் நம்ம கைல இல்ல….எதெதுக்குன்னுதான் வருத்தப் படுவீங்க…? அதுக்கும் உடம்புல தெம்பு வேணும்ல?

நோய் என்பது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையிலிருந்து உருவாகக் கூடியது. அவ்வாழ்க்கை முறைக்குக் காரணமாக அமையும் மனோபாவமே  ரிபு என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று ரிபுவாகிறது. இதை விரிவாகச் சொல்கிறது தாராசங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதனம்” . படித்தபோது இந்த ஐ.டி. பசங்களின் வாழ்க்கை முறையை நினைக்க மனதில் பயம்தான் தொற்றிக் கொண்டது. ஐயோ பாவம் என்றிருந்தது.

அவனும்தான் என்ன…அப்பா இந்த வயசுல  இப்படிக் கஷ்டப்படுறாரேன்னு துடிச்சா போறான்? நீதான வாங்கின இந்த அபார்ட்மென்ட் வீட்டை…அனுபவி…என்பான்கள் போலிருக்கிறது. காலம் கலிகாலம்…என்னத்தைச் சொல்ல…? எதைத்தான் சொல்ல? ஒவ்வொன்றுக்கும் இவர்தான் மேலுக்கும் கீழுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்.  நான் ஒருத்தனே பார்த்துக்கிறேன். எவனும் உதவிக்குத் தேவையில்லை…என்கிற வீராப்பு இருக்கிறதுதான். ஆனாலும் அவிழ்த்து விட்ட கழுதையாய்க் கதை மாறிப் போகுமே? பொறுப்பு பரவலாக நின்றால்தான் சமூகம் பிழைக்கும்.

ய்யா….மோட்டாரக் கவனிச்சு அணைக்கச் சொல்லுங்க…தண்ணி ஓவர் ஃப்ளோ ஆகி எங்க வீட்டுல மழை பொழிஞ்ச மாதிரித் தெறிக்குது….எத்தனையோ வாட்டி நானும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போனேன். வேணும்னா ஒண்ணு செய்யுங்க…சுவிட்சு எங்கருக்குன்னு எனக்கும் சொல்லிப் புடுங்க…நானே வந்து அணைச்சிட்டுப் போயிடுறேன்….அப்பயாச்சும் உறைக்குதா பார்ப்போம்… சுளீர் என்றது இவருக்கு, சமயம் பார்த்துப்  பொருத்தமாய்ப் பேசுவது என்பதும் ஒரு தனிக் கலைதான்…

திரும்பி அந்தம்மாவின் முகத்தைப் பார்க்க லஜ்ஜையாக இருந்தது வாத்ஸல்யத்துக்கு. அமைதியாக மேலேறி வந்தார். படிகளில் அவசரமாய் இறங்கி வந்ததும் இப்போது திரும்பவும் மேலேறிப் போவதும் மூச்சு வாங்கியது. ஏற ஏறப் படிகள் நீண்டு கொண்டே போயின…! ரெண்டு மாடிதானே? சந்தேகமே வந்து விட்டது.

அடுக்ககத்தில் பையன் பெயரில் வீடு வாங்கி அவனைத் தீராத அவஸ்தைக்குள்ளாக்கி விட்டோமோ என்று அவர் மனம் குற்றவுணர்ச்சியில் தவித்தது.  விரைவில் தனி வீடு ஒன்று கட்டி வெளியேறி விட வேண்டும் என்றும் இதை வாடகைக்கு விட்டு விட வேண்டும் என்றும் உறுதி செய்து கொண்டார்.

                                    -----------------------------

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...