20 ஜூலை 2024

 

     ”சிவாஜி ஒரு சகாப்தம்”    (17.07.2024 நடிகர்திலகம் நினைவு நாள்)

      ----------------------------------------


      நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.

      வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.

      மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.

      யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள்.  இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.

      மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது. அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது.வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை.       அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.

      மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு  இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

      விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேவா ஒரு நடிகரால இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார் அவர்.

      நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் தன்னின் வழக்கமான நடிப்பு குறித்து.

      இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் நடிப்புத்திறன்கள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது.

      ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு கொண்ட பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு.

      பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய அந்த வேடத்திலேதான் இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப்  பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும்.

      நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.

      இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.

      உடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.

      திரு எஸ்.வி.ரங்காராவ், திரு நாகையா, திரு எஸ்.வி.சுப்பையா, திரு எம்.என் நம்பியார், திரு பாலையா, திரு சகஸ்ரநாமம்,திரு டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், திரு சாரங்கபாணி, திரு வி.எஸ்.ராகவன், திரு பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.

      அத்துடன் அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.   

      இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன. அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது. சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம். சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டைப் பார்த்து வைக்கிறார்கள் என்பது வேறு. பொழுது போவதற்கான முக்கியமான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது. சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரைத் தன் முதல்நிலையை விட்டு அவர்  கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.

      திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.

      போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.

      மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் இங்கே மகிழ்ச்சி கொள்கிறது. யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங் களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே என் தீராத அவா. அது இத்தோடு நிற்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடரும்.

 

                        ----------------------------------------------------

 


          


13 ஜூலை 2024

"கலியன் மதவு"=நாவல் மற்றும் 5 சிறுகதைகள் தொகுப்பு - புஸ்தகா வெளியீடு


 "கலியன் மதவு"=நாவல் மற்றும் 5 சிறுகதைகள் தொகுப்பு - புஸ்தகா வெளியீடு

ஜூனியர் தேஜ் - என்னிடம் வழங்கிய போது (11.07.2024)
--------------------------------------------------------------------------------------------------------------
எழுத்தாளர் நண்பர் திரு.ஜூனியர் தேஜ் சீர்காழியிலிருந்து சென்னை வந்தவர்...அவரது பல அலுவல்களுக்கிடையே இன்று என்னைச் சந்திக்க வந்தார். என் கதைகளின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். ரசித்துப் படித்து சேகரித்து வைத்துள்ளார்.அது எனக்குப் பெருமை. தொடர்ந்து என் எழுத்துக்களை ரசிக்கும் பிரியமான வாசக எழுத்தாளர். அவரே நிறையச் சிறுகதைகளூம்..நாவலும் எழுதியுள்ளார். M.A.literature படித்தவர்.கேட்கவா வேண்டும். பெரிய்ய்ய சாதனை படைப்பார் எதிர்காலத்தில்...அவரது மிகப் பெரிய நாவலான "கலியன் மதவு" பிரதியை என்னிடம் வழங்கியபோது....(Pustaka வெளியீடு)





 

சிறுகதை             "தளம்“ காலாண்டிதழ்  பிரசுரம் ஏப்ரல் - ஜூன் 2024

            ஒட்டுப்-பொட்டு“

-----------------------------------------




னக்கு எங்கப்பா மேலே  ஒரு சந்தேகம் உண்டு.என்னமோ அவர்ட்ட ஒரு வித்தியாசம் இருக்குன்னு தோணுது.  ஆனா அது என்னன்னுதான் என்னால கண்டு பிடிக்க முடில.  கண்டு பிடிக்கிறதென்ன…துல்லியமா மனசுக்குத் தெரில. அப்படித் தெரிஞ்சாத்தான, எனக்கு நானே உறுதி செய்துக்கிட்டாத்தானே நேரடியாக் கேட்க முடியும், அல்லது அம்மாட்டச் சொல்ல முடியும்? யாரையும் அவர் நிமிர்ந்து பார்க்கிறதில்லை. குனிஞ்சமேனிக்கே பேசுறாரு. பதில் சொல்றாரு. அதான் பெரிய சந்தேகம்.

            எனக்கே உறுதியில்லாம மொட்டையா அம்மாட்டச் சொன்னா…அப்டியெல்லாம் பேசப்படாது…ன்னு அம்மா நிச்சயமா என்னைக் கண்டிப்பாங்க……ஒருத்தருக்கொருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் வாழ்க்கை.!. அதை அநாவசியமா அவங்களுக்கு நடுவுல புகுந்து நான் கெடுத்துடக் கூடாது. அதனாலதான் இவ்வளவு எச்சரிக்கையா இருக்கேன். ஏன்னா என் சந்தேகம் அப்படி….ஒரு வேளை அம்மாவே இதை உணர்ந்து வச்சிருந்தா? நேத்து முளைச்சவன், இவனுக்கென்ன வந்ததுன்னு நினைச்சா? அதான் ஜாக்கிரதையா இருக்கேன். அத்தோட இன்னொண்ணு…நாம்பாட்டுக்கு அநாவசியமா சந்தேகப்பட்டதாகவும் ஆயிடக் கூடாதுதானே…அது அப்பாவுக்குச் செய்ற அவமரியாதை ஆயிடுச்சின்னா? அவசரப்பட வேண்டாம்னு தோணுது….

            எங்கம்மா ரொம்ப அழகானவங்க. அஞ்சரை அடி உயரத்துல கச்சிதமா இருப்பாங்க…எந்தப் புடவையைக் கட்டிக்கிட்டாலும் பளிச்சினு இருப்பாங்க…முகத்துல அப்டி ஒரு ஃபேமிலி லுக். நடு வகிடு எடுத்து வாரின தலைல  வகிடு ஆரம்பிக்கிற இடத்துல வச்சிருக்கிற குங்குமப் பொட்டு அம்மாவுக்கு அத்தனை எடுப்பா இருக்கும்.  அங்க அசல் குங்குமத்த வச்சிக்கிடுற அம்மா, நெற்றில ஸ்டிக்கர் பொட்டுதான் அழுத்திப்பாங்க…எப்பயாச்சும் அது கீழ விழுந்திடுச்சின்னு வச்சிக்குங்க…அம்மா முகத்தைப் பார்க்கவே சங்கடமாயிருக்கும். சகிக்காது.

            நெத்தில பொட்டு இருக்கா இல்லையான்னு கூடக் கவனிக்க மாட்டியா? நீபாட்டுக்கு இருக்க? சகிக்கல…தாலியறுத்த மாதிரி இருக்கு. முதல்ல பொட்ட வை….என்று ஆக்ரோஷமாக் கத்தியிருக்கேன். அந்த வார்த்த சொல்லக் கூடாதுதான். அப்பா சொன்னாக் கூடப் பொருந்தும். பொறுத்துக்கலாம்.  ஆனா நா சொல்லக்கூடாது.  கோபத்துல வந்திடுதே…! மன்னிச்சிக்கம்மான்னுட்டேன்.  அழுகை வந்திடுச்சு…சட்டுன்னு மனசு வருந்திடுச்சு. அந்த  முறைதான் நான் அப்படிப் பேசினது. அதுக்குப் பிறகு எதையும் கவனிக்க ஆரம்பிச்சேன். வாய் நுனி வரை வந்ததை முழுங்கினேன். எதுவும் பேசறதில்லன்னு முடிவுக்கு வந்தேன். அப்டித்தான் அப்பாவும்  என் கவனத்துல வந்தார்.  

அம்மாவோட நரைச்ச முடிக்கும் அதுக்கும்…பொட்டு இல்லன்னா…ஏதோ துக்கத்துக்குப் போயிட்டு வந்த மாதிரியிருக்கும். எழவு விழுந்த வீட்ல இருப்பாங்களே அதுபோல….அது என்னவோ…அம்மாவோட அந்தப் பொட்டில்லாத முகத்த என்னால பார்க்கவே முடியறதில்ல….எல்லாப் பொம்பளைகளுக்கும் அப்டியிருக்கிறதில்ல. ஒரு சிலருக்குத்தான் அது சகிக்காது. அதுல அம்மாவும் ஒண்ணு. பொம்பளைங்க பீரியட்ஸ் டயத்துல பொட்டில்லாமப் போறதப் பார்த்திருக்கேன்…அதைப் புரிஞ்சிக்கிறதுக்கு அதுன்னு தெரியும். லைட்டா மஞ்சப் பொட்டு வெளிறி வச்சிருப்பாங்க…அதான் அடையாளம். அன்னைக்குப் பார்த்து நிமிர்ந்து பேசமாட்டாங்க பெரும்பாலும். இதெல்லாம் கூர்ந்து கவனிச்சிருந்தாத்தான் தெரியும். நான் தட்டச்சுப் பள்ளில வேலை பார்க்கைல பொம்பளப் பிள்ளைங்க பயிற்சிக்கு வருவாங்க…டைப் அடிச்சிக்கிட்டு இருக்கைலயே வயித்தப் பிடிச்சிட்டு உட்கார்ந்திடுவாங்க…சில பிள்ளைங்க நான் வர்றேன் சார்னு சொல்லிட்டுக் கிளம்பிடுங்க…எனக்கா புரியாது. எதுக்கு இப்படி தூரம் தூரமா வரணும்…உடனே எந்திரிச்சுப் போகணும்?னு கோபம் வரும்.பக்கத்துல ரெண்டு மூணு தியேட்டர் உண்டு. டவுனுக்கு வந்து ஸ்கூலுக்கு டிமிக்கி கொடுத்திட்டு. படம் பார்க்கப் போகுதுங்களோன்னு நினைப்பேன். கிராமத்துப் பிள்ளைங்களுக்கு எங்க தட்டச்சுப் பள்ளில பாதி ஃபீஸ்தான். கூட்டமான கூட்டம் எகிறிடுச்சு. நாப்பது மிஷின் வச்சிருந்தும் பத்தல. ரெயில் தடதடக்கிறமாதிரி சத்தம் இடைவிடாம வந்திட்டேயிருக்கும். ரோட்டோட போறவங்க…நின்னு ஒரு நிமிஷம் திரும்பிப் பார்த்துட்டுத்தான் நகருவாங்க. எங்க பிரின்ஸிபால் ரொம்ப இரக்க குணம் படைச்சவரு. கிராமத்துப் பிள்ளைங்கள்லாம் நல்லா படிச்சு வேலைக்குப் போகணும்னு விரும்புறவரு. அதனாலதான் அந்தக் கன்செஷன் கொடுத்தாரு…புண்ணியவான்….

லேடீ ஸ்டூடன்ஸ் டயத்துக்குள்ள  கிளம்பிட்டாங்கன்னா பேசாம விட்டிடுங்க கோபால்……எதுவும் சொல்லாதீங்க…ன்னு பிரின்ஸிபால் ஜஸ்டின் எங்கிட்ட ஒருநாள் சொன்னாரு…எதுக்கு இப்டி சொல்றாரு? அப்புறம் ஸ்கூல் டிஸிப்ளின் என்னாகுறதுன்னு யோசிச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சிதான் எனக்குக் காரணம் புரிஞ்சிது. நா ஒரு மரமண்ட….புரிஞ்சபோது  அடப் பாவமே..!ன்னு இருந்தது.  போயிட்டறேன் சார்…ன்னா…பவ்யமா சரிங்கம்மான்னுடுவேன்.  அதுகளுக்கு உடம்புல என்ன வாதையோன்னு தோணி மனசு இரக்கப்பட்டுடும்…

அந்த டயத்துல அம்மா, என் தங்கச்சிங்கல்லாம் வயித்து வலின்னு துடிச்சதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. அதென்ன எப்பப் பார்த்தாலும் வயித்து வலி வயித்து வலின்னுட்டு…நான் திங்கிறதத்தான நீயும் திங்கிற…உனக்கு மட்டும் என்ன நோக்காடு…?ன்னு வீட்டுல கத்தியிருக்கேன். அம்மா அப்டி உட்கார்ந்தபோதுதான் பரிதாபம் வந்திச்சு. அந்த டயத்துல அப்பா எது சொன்னாலும் அவரு மேலதான் என் கோபம். இந்த மனுஷன் புரிஞ்சு கத்துறாரா…புரியாம அலர்றாரா?ன்னு நினைப்பேன்.

அதுக்குள்ளயும் உட்கார்ந்திட்டியா? இப்பத்தான ஆன…! இருபத்தஞ்சு நாள் ஆயிப்போச்சா…இல்ல பத்துப் பதினஞ்சு நாள்லயே வந்திடுதா…? என்ன கண்றாவியோ…? எனக்கு வேல வைக்கணும் உனக்கு…கங்கணம் கட்டிட்டிருக்கே…! நான் கொஞ்சம் சுதந்திரமா இருந்திட்டா உனக்குப் பொறுக்காதே…? போ…போ…போய் கொல்லைல உட்காரு…அதுதான் உனக்கு சாஸ்வதமான எடம்….- வாயில் கன்னா பின்னா என்ற வரும். எவ்வளவோ புத்தகங்களெல்லாம் படிக்கிறார். அதெல்லாம் இவருக்கு எதுவும் சொல்லித் தருவதில்லையா என்று நினைப்பேன். இல்ல அதெல்லாம் படிச்சிட்டுத்தான் மனசு இப்படி வக்கரிச்சுப் போய்க் கிடக்கா? என்று எண்ணுவேன்.

ஆனால் சமையல் என்று புகுந்து விட்டால் சின்சியர் ஆகி விடுவார். ஒரு டைரியில் அம்மா சொல்லியிருப்பவற்றை எழுதி வைத்துக் கொண்டுள்ளார். அதன்படி செய்து செய்து பழகி விட்டார். அப்பா கைபாகம் கச்சிதமாய் இருக்கும் உப்பு, உரைப்பு, புளிப்பு என்று சரிவிகிதம்தான். அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் சமையலை முடித்து விடுவார்தான். அதுக்கு முன்தான் தினமும் இந்த ஆர்ப்பாட்டம். கொஞ்சம் திட்டாமத்தான் செய்தா என்ன? தினசரி அம்மாவுக்கான பூஜை அது.

எதுத்த வீட்டு புவனேஸ்வரி  அக்கா எப்பயாச்சும் வீட்டுக்கு வரச்சே,..ஒரு மாதிரி வாடையடிக்கும். அன்னைக்குன்னு பார்த்து எதையாச்சும் திங்குறதுக்குக் கொண்டு வந்து கொடுப்பாங்க…எனக்கு அத வாங்கவே பிடிக்காது. அம்மாதான் வாங்கி வச்சிக்கிடுவாங்க…அன்பாக் கொண்டு வந்து தர்றத வேண்டாம்னு சொல்லக்கூடாதுப்பா…என்பாள் அம்மா. விசேடங்களுக்கு பண்டம் மாத்திக்கிடுவாங்க…அது அவுங்களுக்குள்ளே….இது யார் வீட்டுது…எதிர் வீடா…எனக்கு வேண்டாம்னுடுவேன் நான். அந்தப் பொருளப் பார்த்தாலே அந்த வாடைதான் மனசுல  வரும் எனக்கு. அந்த மூணு நாளைக்கு வீட்டோட வீடா அடங்கிக் கிடக்க மாட்டாங்களா? இல்ல அதுக்கான பாதுகாப்ப செய்துக்க மாட்டாங்களா? என்ன அநித்யம் இது…வீட்டையே நாறடிச்சிக்கிட்டு…?ன்னு எரிச்சலா இருக்கும். இந்த நாட்கள்ல ஏன் இங்க வர்றாங்கன்னு நினைப்பேன். தலைல வச்சிருக்கிற பூவையும் மீறி வாடை எதிரடிக்கும். இந்த மூணு நாள்ல பூவேறேயா? ன்னு தோணும். எல்லாம் வாடையைப் போக்கத்தான். ஆபீசுக்குப் போறவங்க வச்சிக்கிறதில்லயா? சென்ட் போடுறதில்லையா? அதப்போலத்தான்.

பொம்பளைங்களே பாவம்தான். உடல் ரீதியா அவுங்களுக்கு நிறையக் கஷ்டங்கள் இருக்கு. இயற்கையாவே அப்படி அமைஞ்சிருக்கிறதுக்கு நாம என்ன செய்ய முடியும்னு அலட்சியப்படுத்த முடியல. சகிக்க முடியாத விஷயங்கள்ல உள்ளார்ந்து இருக்கிற கஷ்டங்கள உணராத மனுஷன் என்ன ஆளு? அந்தப் பொம்பளைங்க வயித்துலேர்ந்து வந்தவங்கதானே இந்த ஆம்பளைங்க…கொஞ்சமேனும் இரக்கம் வேணாம்? என்னா அதிகாரம்?

எங்கம்மா இப்டியெல்லாம் கிடையாது. படு சுத்தம். ரொம்ப சேஃப்டியா டிரெஸ்ஸிங் பண்ணிக்குவாங்க…அந்த மூணு நாளும் பூஜா ரூம் பக்கம் போகமாட்டாங்க…பால்கனில நின்னமேனிக்கே சூரிய நமஸ்காரம்தான்….வழக்கம்போல அப்பாதான் சமைப்பாரு….ஏதோ அவருக்குத் தெரிஞ்சதை வைப்பாரு.. அவர் இஷ்டத்துக்கு வச்சதுதான்…சாப்டதுதான்…ஒரு சாம்பார், ஒரு கறி, மோரு…இதான் அப்பாவோட சமையல். அவரே மாவு கிரைன்டர்ல அரைச்சிடுவாரு…சமயங்கள்ல சப்பாத்தி போடுவாரு நைட் டிபனா…சப்பாத்தி வட்டமாவே இருக்காது. கோணக் கொக்கர இருக்கும். வயித்துக்குள்ளதான போகுது….பிச்சுப் பிச்சித்தானே திங்கறோம்…போதும் இது…என்பார்.

 புவனேஸ்வரி அக்கா  அசல் குங்குமத்ததான் நெத்தில பதிச்சிருப்பாங்க…மாரியாத்தா…காளியாத்தா, பகவதி அம்மேங்கிற மாதிரி…நெத்தி பெரிசுன்னா…அதுல பாதி பொட்டுக்கா…? இப்ப பத்து ரூபாக் காசு வருதே…அந்த சைஸ்….இவ்வளவு பெரிய வட்டமா? அதுலென்ன அப்படியொரு பெருமை? இவங்களப் பார்த்தாலே மத்தவங்களுக்கு ஒரு பயம் வரணும்னா? போதாக் குறைக்கு வகிடு நுனில.  நெத்திலயும், மூஞ்சிலயும் வழியுற வியர்வை.   குங்குமம் மூக்குல கோடா ஒழுகுதே…அதக்கூடத் துடைச்சிக்க மாட்டாங்க? என்ன அழகோ…என்ன ரசனையோ? மூணு பையனப் பெத்தவங்க அவுங்க…ஆனா தளர்ச்சி பார்க்க முடியாது. கிண்ணுன்னு இருப்பாங்க….அம்மாதான் பாவம்…என் ஒருத்தனப் பெத்துட்டு…டொய்ங்ங்னு போயிட்டாங்க…ஆனா லட்சணம் அந்த முகத்துல. லட்சுமி கடாட்சம். அம்மாவத் தவிர வேறே யாருக்கும் வராது.

 அம்மாவோட ஸ்டிக்கர் பொட்டு, பழக்கத்துல…அடிக்கடி கீழே விழுந்திடுது . அடுப்படில வியர்க்க வியர்க்க வேலை செஞ்சிட்டு யப்பாடி…ன்னு  வந்து உட்கார்றப்போ சேலைத் தலப்பை வச்சு மூஞ்சியையும், கழுத்தையும் அழுந்தத் துடைச்சி விட்டுக்கிறபோது…கவனமில்லாம .இது நடந்து போகும். பாத்ரூம்ல குழாய் பூராவும், கண்ணாடிலன்னு பொட்டாப் பதிச்சிருக்கும். அதுல ஒண்ணை எடுத்து நெத்தில வச்சிட்டு வருவாங்க…பழைய பொட்டு அது…நிக்காம உதிர்ந்து போகும். எத்தனவாட்டியானாலும் அம்மாவுக்கு அந்தப் பிரக்ஞை இருக்கிறதேயில்ல. ஒரு வேளை உடம்ப மீறின அலுப்போ என்னவோ? நம்ப வீடுதான…நம்ப பையன்தான…நம்ப வீட்டுக்காரர்தான…ங்கிற எண்ணமாக் கூட இருக்கலாம். ஆனா அந்தப் பொட்டில்லாத மொகத்தப் பார்க்கவே முடியறதில்லையே…?

திடீர்னு நா போயிட்டேன்னு வச்சிக்கோ…அப்புறம் பொட்டு வச்சிக்கிறத மட்டும் விட்டுடாதே…ன்னு அப்பா அடிக்கடி சொல்றதக் கேட்டிருக்கேன்…அப்பாவுக்கே அம்மாவோட பாழ் நெற்றி மேல அப்படியொரு வெறுப்பு…என்னைக்கும் சுமங்கலி மாதிரியே பூவோடும் பொட்டோடும் காட்சியளிக்கணும்…புரிஞ்சிதா? நா பித்ருவாயிருந்து  கவனிச்சிட்டேயிருப்பேன். தெனமும் பொட்டு பதிச்சிட்டு என் ஃபோட்டோ முன்னாடி வந்து நின்னு எனக்கு முகத்தக் காண்பிக்கணுமாக்கும்…

போதும்…உங்க நாற வாயை வச்சிட்டு கொஞ்சம் சும்மா இருங்க…என்பாள் அம்மா. வாயத் தொறந்தா அபத்தப் பேச்சுதான்…நல்லதாப் பேசுங்களேன்…என்று சொல்வாள். அப்பா பேச்சு மாறவே மாறாது.

அன்னைக்கு என் ஆபீஸ்மேட் வைகுண்டம் வந்தாரே…எங்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? உங்க ஒய்ஃப்கிட்ட ஒரு ஃபேமிலி லுக் இருக்குன்னு பெருமையாச் சொன்னார். அந்த உன்னோட முகம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சுன்னு புரிஞ்சிக்கிட்டேன். அவர் கதை தனி. அதச் சொல்ல ஆரம்பிச்சா ஒரு நாளாகும்…ஒரே வீட்டுல மாடில இவரும் கீழ அந்தம்மாவும் இருப்பாங்க…சமையல் முடிச்சு டேபிள்ல எல்லாமும் எடுத்து வச்சிருப்பாங்க…இவரு ரோபோட் மாதிரி வந்து உட்கார்ந்து தின்னுட்டு திரும்ப மாடிக்குப் போயிடுவாரு…ஒருத்தருக்கொருத்தர் அன்றாடம் மூஞ்சியவாவது பார்த்துக்கிறாங்களான்னு கூட எதிராளிக்குத் தெரியாது. விரிவாச் சொல்ல ஆரம்பிச்சா நம்ம வீடு தங்கம்….! .அதனாலதான் இத மட்டும் சொன்னேன்….மறந்துடாதே….பொட்டு உனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமாக்கும்…..என்றாவது ஒரு நாள் வெள்ளம் பெருக்கெடுத்ததுபோல் அப்பா நிறையப் பேசி விடுவார்.  நல்லதும், கெட்டதும் கலந்து கட்டி பிரளயமாய் வெடிக்கும்.

             பெரும்பாலும்  இதெல்லாம் அலட்டிக்கிட்டதேயில்ல. அவர்பாட்டுக்கு இருக்கிறவர்தான். அம்மாவ அவர் நிமிர்ந்து பார்க்கிறதே அபூர்வம். பிடிக்காத மாதிரியே வளைய வருவாரு…அவுங்க ரெண்டு பேரும் எப்போ சிநேகமா இருப்பாங்கன்னு தேட வேண்டிர்க்கும். தொட்டதுக்கெல்லாம் சண்டதான். அநாவசியமான பேச்சுதான்.  அன்னைக்கொருநாள் அவர் இப்படி அதிசயமாப் பேசிப்புட்டதுதான் எங்களுக்கெல்லாம் பேரதிசயமாப் போச்சு.

            அப்பா தன் மூஞ்சிய ரசிச்சிருக்கார்ங்கிறதும், அவர் ஃப்ரென்ட் வைகுண்டம் ரசிச்சு அப்படிச் சொன்னதும் அம்மாவுக்குப் பெருமை தாங்கலை.  அதுக்காக அம்மாவும்  அப்பாவும் சமாதானமாயிட்டாங்கன்னு நினைச்சிடாதீங்க…

என்ன சமைச்சிருக்கே…ஒண்ணுத்துலயும் உப்பக் காணோம்…உனக்கு உப்பு வேண்டாம்னா ஊரு உலகத்துல இருக்கிற எவனுக்கும் வேண்டாம்னு அர்த்தமா? ஒரு ரசனையே இல்லாம சமைச்சா இப்டித்தான். எந்நேரமும் ஊர்ல இருக்கிற உங்க அம்மாவையும், அக்காவையும் நினைச்சிட்டேயிருக்கிறது…எப்படா அவுங்ககூடப் பேசுவோம்னு நேரம் பார்த்திட்டே வேல செஞ்சா…எங்கேயிருந்து ருசி வரும்? ருசின்னு ஒரு பேப்பர்ல எழுதிப் பார்த்துக்க வேண்டிதான்.

படிய வாரி, கொண்டை முடிஞ்சு, அழகாப் பொட்டு வச்சி தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடி போட்டு அம்மா செய்தித்தாள் படிக்கிற  அழகே தனி.  அந்த இங்கிலீஷ் பேப்பர்ல அப்படி என்னதான் இருக்கோ….தலையங்கம், கட்டுரைகள்னு ஒண்ணு விடமாட்டாங்க…! எல்லாம் முடிஞ்சிதுன்னா, சுடுகு போட ஆரம்பிச்சிடுவாங்க. மைன்ட எப்பயும் ஷார்ப்பா வச்சிக்கணுமாம். வேலை செய்ற போது அம்மாட்ட இருக்கிற அலுப்பும் சலிப்பும், நியூஸ் பேப்பர் படிக்கிறபோது இருக்கவே இருக்காது. அது என்ன அதிசயமோ?

 ஆனா அப்பாட்ட அந்த வேலயே கெடையாது. அவருக்குத் தமிழ் பேப்பர்தான். அதையும் கூட ஒரு புரட்டு. தலைப்புச் செய்தியாப் பார்த்திட்டு தூக்கிப் போட்டுடுவாரு. எங்க பார்த்தாலும் கொல, கொள்ளை, திருட்டு. கற்பழிப்பு, விபத்து, லஞ்சம் அடிதடின்னு….இதுதான் நாட்டு நடப்பா….? அரசாங்கம் எப்டி இயங்குதுன்னு தெரிஞ்சிக்கத்தான பேப்பரு….முக்கால்வாசிப் பேப்பர இதுவே ஆக்ரமிச்சா….? என்ன எழவோ…நாடு போற போக்கே சரியில்ல…. என்று அலுத்துக் கொள்வார். புரட்டின அந்தப் பேப்பரை அவர் தூக்கி எறியும் தன்மையில் அது தெரியும். டி.வி. தலைப்புச் செய்திகள் கேட்டவுடன் அணைத்து விடுவார். விரிவான செய்திகளைக் கேட்க, காட்சிகளைப் பார்க்க அவருக்குப் பொறுமை கிடையாது. இவன் சொன்னதை யே அவன் திருப்பிச் சொல்லுவான்…இதுக்கெதுக்குப் பார்க்கணும்? என்பார்.

            அப்பா தனியாத்தான் தன் ரூம்ல உட்கார்ந்திருப்பாரு. எதாச்சும் எப்பயும் படிச்சிட்டிருக்கிறதே அவரோட வேல. கண்ட புஸ்தகமெல்லாம் வாங்கி வச்சிருப்பாரு. அத்தனையும் படிக்கிறாரா தெரியாது. வாங்கிக் குமிச்சு, தூசி தட்டுறதும், இறக்கி ஏத்தி திரும்ப அடுக்கிறதும் அடிக்கடி அவர் செய்ற வேல. எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் புக்ஸ் எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா? என்று பெருமையாகக் கூறுவார்.

            ஆத்தர்வைஸ் அடுக்கிறேன்…எப்டியோ மாறி மாறிப் போயிடுது…-என்று அவரே சொல்லிக் கொள்வார். மண்ட மண்டையா எத்தனையோ புஸ்தகங்கள். ஆனா அப்பா கைல வச்சிருக்கிறதப் பார்த்தா நூறு இருநூறு பக்க அளவுள்ளதா இருக்கும். அப்பாடா…முடிஞ்சிது….என்று படித்து முடித்து, முடித்த புத்தகங்களுக்கென உள்ள வரிசையில் வச்சிடுவார். மொத்தமே இவ்வளவுதான் படிச்சிருக்கீங்களாப்பா…ன்னா…கோபம் வந்துடும்.

            திடீர் திடீர்னு நினைப்பு வர்றப்போ இங்க இருக்கிற எல்லாப் புத்தகங்களையும்தான் அப்பப்போ  உருவி எடுத்துப் புரட்டியிருக்கேன். அதுக்காக தொடவேயில்லைன்னு அர்த்தமா? நினைச்ச நேரம், நினைச்ச புத்தகம் கைக்குக் கிடைக்கணும்னுதானடா வாங்கி வைக்கிறது? அதெல்லாம் தனி ரசனை….உனக்குத் தெரியாது அதோட மகிமை….என்பார். அவங்கல்லாம் என் கூடவே இருக்கிறமாதிரியாக்கும்…என்று பெருமைப்படுவார்.

            அப்புறம் செவுத்தப் பார்த்து உட்கார்ந்துக்கிட்டு என்னத்தையோ யோசிச்சிக்கிட்டேயிருப்பாரு. படிச்ச புஸ்தகத்தை அசை போடுறார் போல்ருக்குன்னு நான் நினைச்சுக்குவேன். திடீர்னு கம்ப்யூட்டரத் திறந்து டைப் அடிக்க ஆரம்பிச்சிடுவாரு. பக்கமானா சரசரன்னு ஓடும். அந்த நேரம் அம்மாட்ட ஒரு டீ குடுன்னு கேட்பாரு. கொதிக்கக் கொதிக்கக் குடிக்கிறது அப்பாவோட வழக்கம். எதுக்கு இப்டி தீயை உள்ளே அனுப்புறாருன்னு பார்க்கிறவங்களுக்குத் தோணும். சூடு இம்மி குறையக் கூடாது. குறைஞ்சா காட்டுக் கத்து கத்துவாரு.  ஒரே மூச்சுல நினைச்சதை அடிச்சு முடிச்சி சேகரிச்சுட்டு, சட்டுன்னு கம்ப்யூட்டர ஆஃப் பண்ணிடுவாரு.  அப்புறம் அடிச்சதையெல்லாம் அசை போடுவாரு. இப்டியே ஒரு நாள் ஓடிடும். வெளில போவாரு, வருவாரு…கம்ப்யூட்டரத் திறந்து, திருத்திக்கிட்டேயிருப்பாரு….சில சமயம் ம்க்கும்….வேண்டாம்னு தனக்குத்தானே சொல்லிக்கிட்டு, எழுதின மொத்தத்தையும் டிலீட் பண்ணிடுவாரு…?

எதுக்கு இப்டி மாங்கு மாங்குனு உட்கார்ந்து கையொடிய டைப் அடிக்கணும், பிறகு அழிக்கணும்? வச்சாக் குடுமி, அடிச்சா மொட்டைன்னு என்னத்துக்கு இப்டிப் பிராணனை விடணும்? அதுக்கு எனக்காச்சும் ஏதாச்சும் உதவி பண்ணலாம்ல…? என்று அம்மா புலம்புவாள்.

            கம்ப்யூட்டர்ல உட்கார்ந்தாச்சா…போச்சு…காய்கறி நறுக்கித் தருவீங்கன்னு பார்த்தேன். இன்னைக்கு அவ்வளவுதானா? ன்னு அம்மா குறை பட்டுக்குவாங்க….அதெல்லாம் அப்பாவ யாரும் எதுவும் சொல்லவும் முடியாது. எதுக்கும் இழுக்கவும் முடியாது. அவருக்கா இஷ்டம் இருந்தாத்தான். அம்மா சொல்லி அவர் சரின்னு செய்திருக்கிறதவிட, முறுக்கிட்டுப் போனதுதான் ஜாஸ்தி. இதால ஒண்ணும் ஆகாதுன்னு அம்மா ஒருமைல அலுத்துகிறது இருக்கே…சிரிப்புத்தான் வரும். அப்பாவும் அப்போ லேசாச் சிரிச்சிக்கத்தான் செய்வாரு. சொன்னாச் சொல்லிட்டுப் போறா…அவளுக்கு அந்தச் சுதந்திரம்கூட இல்லையா என்னன்னு அப்பா இருக்கிறதாத் தோணும். அம்மா கோபப்பட்டு அப்பா ஒதுக்கிட்டுப் போனதுதான் ஜாஸ்தி.  ஒரு வேளை அதுவே அவுங்க ரெண்டு பேரையும் நெருக்கமா வச்சிருக்கோ என்னவோ?

            அவர்பாட்டுக்கு தானுண்டு, தன் டைப் வேல உண்டு, தன் புஸ்தகங்கள் உண்டுன்னு இருக்கிற ஆள்தான். ஆனா சமீபமா அவர்ட்ட என்னவோ ஒரு வித்தியாசம் இருக்கிறதா தோணுதே….? அதை எப்படிக் கண்டு பிடிக்கிறது?ன்னு என் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கு. தப்புச் செய்றவன அவன் முகமே காட்டிக் கொடுத்திடும். ஒரு சிறு அசைவு போதும்…கண்ணு காமிச்சிடும் எதையும். அப்பாவோட பளீர் கண்ணு ஏன் இப்போல்லாம் சுருங்கிக் கிடக்குது? உடல் ரீதியா அவருக்கு என்ன பிரச்னை? என்ன நோவு? அப்படி எதுவும் இருக்குமோ? பணம், செலவுன்னு நினைச்சிக்கிட்டு வாதையை அனுபவிச்சிக்கிட்டு, தனக்குத்தானே மனசுக்குள்ள புழுங்கிக்கிட்டுக் கிடக்கிறாரோ? 

            தெனமும் எங்க வீட்டு வாசல் வழியா ஒருத்தர் போவாரு.. குனிஞ்ச தல நிமிராம…! வச்ச அடி தப்பாம….எந்தக் காரியத்துக்குன்னு சென்றாலும் எங்க தெரு வழியாத்தான் போவாரு. தெருக்காரங்களுக்கெல்லாம் அவரத் தெரியும். அப்டியொரு ஒல்லியான, நாலு முழ வேட்டி கட்டின, தலை வழுக்கை ஆசாமி, தினசரி போறார், வர்றார்ங்கிற அளவிலே அதுக்குமேலே அவரைப்பத்தித் தெரிஞ்சிக்கணும்னு  யாரும் அக்கறை காட்டினதில்லை. அந்தத் தெரு வழியே நடந்து நடந்து பாதச் சுவடுகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட நேர் வரிசையில் தடம் பதிச்சுக் கிடந்திச்சு எங்க தெருவுல. அந்தச் சுவடுகள்ல அவரோட மன அழுத்தம் தெரியும். யோசனை விரியும். காலம் இப்டியே போயிடுச்சேங்கிற இயலாமை நிற்கும். அதிசயமா அவர் தலை திரும்புறதும், எங்கப்பாவைப் பார்க்கிறதும், ஒரு சின்னப் புன்னகை உதட்டோரத்துல தெறிக்கிறதும் பேசா நட்பு ரெண்டு பேருக்கும் இடைல மலர்ந்திருக்கோன்னு நினைக்க வைக்கும்.

            அப்பாவே அமைதியான ஆள்தானே? தனிமையை அதிகம் விரும்புறவர்தானே? தனிமைல தனக்குத்தானே பேசிட்டிருக்கிறவர்தானே? நாள் முழுக்க ஒரு ரூமுக்குள்ள கதவ அடைச்சிட்டு இருன்னா அப்பாவால சர்வ சாதாரணமா இருந்திட முடியும்தான்.  யார்ட்டயும் பேசணும், சிரிக்கணும், விசாரிக்கணும்னு அப்பாவுக்கு எப்பவும் எந்த விஷயமும் இருந்ததில்லதான். அபூர்வமா வீட்டுக்கு யாரும் வந்துட்டாலும்…வாங்க…உட்காருங்கன்னு சொல்றதோட அவரோட வரவேற்பு முடிஞ்சு போயிடும். அதுக்கு மேலான உபசரிப்பெல்லாம் அம்மாதான். வந்தவங்களும் அந்தாளு ஒரு அப்புண்டுன்னு கேர் பண்ணாமப் புறப்பட்டுப் போயிடுவாங்க….அதப்பத்தி அப்பாவும் அலட்டிக்க மாட்டாருன்னு வைங்க…

            எனக்குத் தெரிய பொதுவா சதா புத்தகம் படிச்சிட்டிருக்கிறவங்களே இப்படித்தான்னு சொல்லுவேன். அவுங்களுக்கு சமத்தா பேச வராது. கச்சிதமா உபசரிக்கத் தெரியாது. யார்ட்டப் பேசினாலும் படிச்ச புத்தகத்தப் பத்திச் சொல்லலாமான்னு யோசிப்பாங்க…அல்லது அவுங்க ஏதேனும் படிச்சதப் பத்தி சொல்வாங்களான்னு எதிர்பார்ப்பாங்க….ரெண்டும் இல்லன்னா இது வேலைக்காகாதுன்னு ஆளக் கிளப்பிவிடப் பார்ப்பாங்க….பேச்சச் சுருக்கிட்டா ஆள் கிளம்பிடும்ல…அந்த உத்திதான்….!  அப்பாவ ஒரு முசுடுன்னு கூடச் சொல்லலாம்தான். பார்த்தீ்ங்களா…தெருவுல போற ஒருத்தரப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு எங்கப்பாவுக்குள்ள புகுந்துட்டேன்….இவங்கள மாதிரிச் சில பேர் ஊர் உலகத்துல எப்பவும் இருக்கத்தான செய்றாங்க…

நீண்டு கிடக்குற நேர் தெருவில் நெடுகப் போயி  ஒரு காலியிட வளைவிலான பொட்டல் வெளியைக் கடந்து பேருந்து நிலையத்தை எட்டுவாரு அந்த ஆளு.  அந்தப் பொட்டல் வெளியின் தனிமையையும், சூன்யத்தையும், படர்ந்து, உள்வாங்கிக்கிட்டே நடப்பார் போல.  சிற்சில சமயங்களில் தன்னை யாரோ பின்தொடருவது போல் தனக்குத்தானே உணர்ந்து வேக வேகமாய் நடக்க முனைவாரு. ஒரு பயத்தோடயே கடந்தாலும் வழிய மாத்துனதில்ல. நானே அந்த வழி ஓரொரு சமயம் அவர் பின்னாடி போயிருக்கேன். அவர்தான் எனக்குப் பாதுகாப்பு மாதிரி.  நட்ட நடுப் பொட்டல்ல, எரியிற வெயில்ல ஜடமா நிப்பார். எதுக்கு இங்க நிக்கிறாருன்னா கேட்க முடியும்? ஏதேனும் பித்துப் பிடிச்சிடுச்சா?ன்னு பார்க்கிறவங்களுக்குத் தோணும். பிளாட் போட்டிருக்கிற குத்துக் கல்லுல உட்கார்ந்து கெடப்பாரு…வானத்தப் பார்த்தமேனிக்கே வாய் என்னத்தையோ முனகிட்டே கிடக்கும். ஏதேனும் மந்திரம் சொல்வாரோ? அல்லது பாட்டுப் படிப்பாரோ?  அப்பா ரூம்ல ஏகாங்கியாக் கிடக்கார். இவர் இந்தப் பொட்ட வெளிலன்னு… நினைச்சுக்குவேன் நான்.

அப்பல்லாம் எங்கூர்ல வீட்டுக்கு வீடு பால் ஊத்தும் பெண்டுகளுக்கு பிரசவம் பார்க்கும் மருதாயி ஞாபகம் வரும் எனக்கு. வெத்தல, பாக்கு, பழம் ரெண்டு ரூபாக் காசுக்குப் பிரசவம் பார்த்த புண்ணியவதி அவங்க. கடைசி வரை அந்தம்மா வாழ்க்கை ஒத்தையா இருந்தே கழிஞ்சு போச்சு. எங்க ஊர் தெரு மக்களோட மக்களா இருந்தே மறைஞ்சு போனாலும் எவ்வளவு அர்த்தம் பொதிஞ்ச வாழ்க்கைன்னு எனக்குத் தோணிக்கிட்டேயிருக்கும்.

அத மாதிரி எதுவும் அர்த்தம் பொருத்தமேயில்லையேன்னு தோணும். இவரு வாழ்க்கை வீணாத்தான்  கழிஞ்சிடுமோன்னு நினைக்கிறேன். எதோ ஒரு துறைல கொஞ்ச காலம் வேல பார்த்திருப்பார் போல…அந்தப் பென்ஷன் காசு வருது அவருக்கு. அத அவர் தங்கியிருக்கிற தன்னோட தங்கை வீட்ல கொடுத்திட்டு  நாட்கள ஓட்டிக்கிட்டிருக்கார்னு கேள்விப்பட்டேன். நாலு தங்கச்சிக உண்டாம் அவருக்கு. ஒவ்வொருத்தர்ட்டயும் மும்மூணு மாசம் நாலு மாசம்னு இருப்பார் போல…அங்கங்க இருக்கைல அந்தந்த மாசக் காச அவுங்ககிட்டக் கொடுத்திடுவாராம். அவரு தின்னு தீர்க்குறத விட பணம் அதிகமா வர்றதால யாரும் அவர எதுவும் சொல்றதில்ல. இதெல்லாம் கேள்விப்பட்டதுதான். பராபரியாக் காதுக்கு வந்தவை.

சமயங்கள்ல தன்னோட தங்கச்சியைக் கூட்டிட்டு அபூர்வமா அவர் நடந்து போறதப் பார்க்கலாம். அப்பயும், நேரம் காலம் பார்க்காம அந்தப் பொட்டல் வழியாத்தான் போவாரு, வருவாரு….அத ஒரு நா சாயங்காலம் மேல இருட்டுற நேரம் கூட்டிட்டுப் போகைல ஏதோ சலங்கச் சத்தம் கேட்குதுன்னு அது பயந்து போயி…நாலஞ்சு நாள் காய்ச்சல்ல கெடந்து மீண்டுச்சுன்னு ஒரு கத சொன்னாங்க…ஆனாலும் இன்னைவரைக்கும் அந்த ரூட்ட அவர் மாத்துனதில்ல. எந்தப் பிசாசு தன்னப் பிடிக்கப் போவுதுன்னு நினைச்சிட்டார் போல. அது எப்டியிருக்குன்னு பார்ப்போம்னும் கூட நினைச்சிருக்கலாம்.

பேய் இருக்கோ இல்லையோ…பயமிருக்கு நமக்கெல்லாம்…அவருக்கு அதுவும் இல்லன்னுதான் சொல்லணும்…

தெரு வழியாவே போங்க…அந்தப் பொட்டல் வெளில ஏன் கடக்குறீங்க? காக்காயும், நாயும், பூனையும் அடிச்சிக்கிட்டு இருக்கிற அந்த வழி சீண்ட்ரம் பிடிச்ச எடமாச்சே…பாம்பு பல்லி ஓடுமேங்க…ஏன் அப்டிப்  போறீங்க…? ன்னு யார் யாரோ எத்தனையோ தடவை சொல்லுறத நானே கேட்டிருக்கேன். கொக்குக்கு ஒண்ணே மதின்னு அவரு அப்டித்தான் இன்னைவரைக்கும் போயிட்டிருக்காரு…தானே ஒரு பேய்தானேன்னு நினைச்சுக்குவாரோ என்னவோ?

எங்க காலனிக்குள்ள ஒரு காபிப்பொடிக் கடை இருக்கு. புதுசா வந்த ஒரு காபித்தூள் ஏஜென்சியை  ஒருத்தர் எடுத்து கடை திறந்திருக்காரு. அந்த ஏரியாவே கமகமன்னு ஒரே மணம்தான்.  அங்க காபிக்கொட்டையை அரைச்சு உடனுக்குடனே சூடா பொடிய எடை போட்டு அழகா பாக்கெட் பண்ணிக்  கொடுப்பாங்க…வாங்குற அளவுக்குத் தகுந்த மாதிரி பாயின்ட்ஸ் அறிவிச்சு, பல பரிசுப் பொருட்களும் கொடுக்கிறதா விளம்பரப்படுத்தியிருந்தாங்க. .அங்கதான் இவரு சமீபமா வேல பார்க்கிறதா யாரோ சொன்னாங்க….அங்க வேல பார்க்கிறார்ங்கிறதுக்காக ரூட்டை மாற்றணுமா என்ன? எப்பயும் போல போறார் வர்றார்னுதான் எல்லாரும் நினைச்சிருந்தாங்க….நானும் கூட அப்டித்தான் அவர நினைச்சிக்கிறது. தெனமும் நான் வண்டில போகைல வர்றைல ஒருநா தற்செயலா பார்வை பட்டுச்சு. அவரு காபிக் கொட்டை அரைச்சிக்கிட்டிருக்கிறது!. மிஷின் சத்தம் கடுமையாயிருந்திச்சு. பழைய மெஷின் போல்ருக்கு.   அந்த ஏரியாவுலயே  காபிப் பொடி மணம்தான் ஆளைத் தூக்குமே….! ஆனா அவ்வளவு பிஸியான கடைல இந்தாள எப்படிச் சேர்த்தாங்கங்கிறதுதான் எனக்கு அதிசயம். நாமதான் அவர்ட்டப் பேசிப் பார்த்ததேயில்லையே? அவர்ட்டப் பேசின அவுங்களுக்குப் பிடிச்சிருச்சோ என்னவோ? அப்பாவுக்கே பிடிச்சிருக்கே?

….அப்பா எப்படி அவர ஃப்ரென்ட் பிடிச்சாரு? அதான் என் கேள்வி? வழக்கமா சாயங்காலம் நடை போயிட்டு நேரா வீடு வந்து சேர்ற ஆசாமி அங்க நுழைஞ்சு டேரா போட்டுடறாரே இப்பல்லாம்…..! அவருக்கு வேல கிடைச்சதே பெரிசு….இவர் போயி…அதையும் கெடுத்துடப் போறாரு….!  நான் இப்டி நினைக்க நினைக்க அப்பாவுக்கும் அந்தத் தெரு நடைக்காரருக்கும் (எனக்குத்தான் அவர் பேர் தெரியாதே…!இப்பவாச்சும் அப்பாட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்கலாமோ? ) அநியாயத்துக்கு ஒட்டிக்கிச்சுங்கிறதுதான் எனக்கும் அம்மாவுக்கும் பேரதிசயம். எப்டி இப்டி பசையா ஒட்டினாங்க…?

ஆபீஸ் போனமா வந்தமான்னு இல்லாம புதுசா இது வேறே என்ன? அந்தக் கடைல போய் உட்கார்றது… வம்பளக்கிறது….வீட்டுல பேசவே பேசாத அப்பா அங்க மட்டும் எப்டி போய் உட்கார்ந்து அரட்டையடிக்கிறாரு? பேச்சு மும்முரத்துல காச விட்டிறப் போறாரு அந்தாளு! வேல போயிடப் போகுது…அவருக்கென்ன பணக் கஷ்டமோ? இத்தன வருஷமா வெறும் நடை நடந்திட்டிருந்தவரு, இப்பத்தான்  ஒண்டியிருக்கிற எடத்துக்கு இன்னும் கொஞ்சம் உபயோகமா இருப்பமேன்னு நினைக்கிறார் போல்ருக்கு…! அப்பாவோட அவருக்கும் ஒட்டிக்கிச்சே…அதான் அதிசயம்…! வீடு கிட்ட வர்றைல மென்மையா சிரிப்பாரே…அந்தப் புன்னகைக்கு பலம் அதிகமோ? அதுக்கு அப்பாவுக்கு மட்டும்தான்  அர்த்தம் தெரியுமோ? ரகசியப் புன்னகையாவுல்ல இருக்கு…?

எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்திச்சு…ஆனா இந்தக் கொரங்கு புத்தி எங்கிருந்து வந்திச்சு….அதுவும் ரெண்டு பேருக்கும்? அப்போ நா இத்தன நாள் அப்பாவப் பத்தி புரியாம ஒண்ணை நினைச்சிட்டிருந்தேனே அது சரிதானா?  என்னவோ கொஞ்சம் அப்பாட்ட வித்தியாசமாத் தோணுதேன்னு சொன்னனே….அது இதுதானா? அவருக்காக அப்பா துணை போறாரா அல்லது இவருக்குமே நோங்கிருச்சா? இந்த வயசுல எதுக்கு இப்படி? அந்தத் தனியா அலைஞ்சிக்கிட்டிருந்த மனுஷனுக்கு (ஆங்ங்….. இப்பத்தான் ஞாபகம் வருது…அந்தாள் பேரு…சிகாமணி….சிகாமணி….ஞானசிகாமணி…) அம்மாட்டக் கூட அப்பா என்னவோ சொல்லிட்டிருந்தபோது இந்தப் பேரு அடிபட்டுச்சே…  அவுரு பேருக்கேத்தமாதிரி அந்தாளுக்கு இப்பத்தான்  ஞானம் வந்திருக்கு போல்ருக்கு….! இனி திரிகால ஞானியாயிடுவாரோ? சிரிப்புத்தான் வருது…காலம்போன கடைசில…இதென்ன கண்றாவி…? –புத்தி இப்டியா கெட்டுப் போகணும்? இந்தச் சந்தேகத்த உறுதி செய்தாகணுமே…! அப்பாவையும் சேர்த்து பலிகடா ஆக்குறானோ இந்த ஆளு…? சரியான அமுக்குளிப் பய…..எவன் அமைதியா…அப்பாவி மாதிரி இருக்கானோ அவனெல்லாம் நம்பக் கூடாது போலிருக்கே? அவன் மனசுலதான் எல்லாத் தப்பும் ஓடும் போலிருக்கே?

மைதியாகித் திகைத்தேன்  நான். கூர்ந்து அந்த இடத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் நின்ற இடம் இருளில் மூழ்கிக் கிடக்க, எவரும் அறிவதற்கில்லை. அந்த நாள் இரவும் அந்த இடமும் எனக்குப் புதிசு. அது அந்தப் பொட்டல் முடிந்து ஒரு மேடு தாண்டி  சந்திற்குள் நுழையும் குறுகிய வீதி. வீதி கூட இல்லை…முடுக்கு…!  இரு பக்கங்களும் தள்ளித் தள்ளி மினுக்கென்று மங்கலாக அழுது வழிந்து கொண்டிருந்த வீதிக் கம்பங்கள். வெளிச்சம் என்று ஒன்று வருகிறதா என்ன? பல்பைச் சுற்றி கொசுக்களின் பெருங் கூட்டம் மொய்த்தது. வண்டுகளின் ரீங்காரம். குப்பை மேடு எதுவும் உள்ளதோ? இந்தப் பாழ்வெளியில் எதற்கு இந்தக் கட்டிடம்? பூட் பங்களா போல்? .

அந்த  வாசலில் ஆட்டோக்கள் சர்ரு…சர்ரு…. என்று வந்து நிற்பதும், பெண்கள் இறங்கி உள்ளே கணத்தில் ஓடி மறைந்து இருளோடு இருளாக ஒன்றுவதும் உடனே எதிர்த் திசையில் வண்டிகள் சட்டென மறைவதும்,….அந்தப் பகுதி எதையோ உணர்த்திக் கொண்டேயிருக்கிறதே…! அது சரி… ஏன் முன் விளக்குப் போடாமல் வருகிறார்கள்? எரியலையா அல்லது எரியவிடலையா? எங்க சவாரியே இத வச்சித்தான் …என்பதுபோல்  வருவதும் போவதுமாய்….மின்னல் தோன்றி மறையும் லாவகம்….! யாரும் எதையும் சுற்றி முற்றி நோக்குவதேயில்லை.  எல்லாமும் நிழலுருவ அசைவுகள்.

இத்தனை நாள் என் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத இந்த ஈசான மூலை இப்போது மட்டும் ஏன் ஈர்க்கிறது? இருளில் நன்றாய் என்னை மறைத்துக் கொள்கிறேன். போக்குவரத்து அதிகமில்லாத அப்பகுதியில் அந்தக் கணம் மயான அமைதி. திடீரென்று ஒரு ஐந்து நிமிஷத்திற்கு கொஞ்சம் சத்தம்…பரபரப்பு. பிறகு வழக்கமான அமைதி. இப்படியே மாறி மாறி ஏதோ மர்மப் பிரதேசம் போல. அங்கேதான் நிற்கின்றன அந்த இரண்டு உருவங்கள். எதற்காக? எதோ பேச்சுச் சத்தம் கேட்கிறதே…அந்தாள் அவர்களிடம் என்னவோ கேட்கிறான்?

என்னா சாரே…ஆள் வேணுமா?   சைலன்டா  நின்னா எப்டி? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா…

 உள்ளே போறீங்களா? அவன் கேட்டு முடிக்கவில்லை. சுற்று முற்றும் பார்த்துவிட்டு சட்டென்று நுழைந்து விடுகிறார்அவர். அட…அப்பாவும் கூடவே போகிறாரே?

அங்க என்ன அப்படி அதிசயம்? யாராச்சும் தெரிஞ்சவங்க வீடோ?  அந்த ஆள் என்னமோ கேட்டானே? அதுக்கு என்ன அர்த்தம்?

பைசா….இருக்கா…சாரே…?பணம்…பணம்……துட்டு….….விரலைச் சுண்டி ராகமாய்க்  கேட்கிறான் வாயில்காரன். அவர் கோலம் அவனை அப்படிக் கேட்க வைத்ததோ?

யாரப் பார்த்து என்ன கேட்கிற? திமிரா?  இந்தா பிடி…..-பாக்கெட்டுக்குள்ளிருந்து எடுத்து அவன் கையில் திணிக்கிறார்.  வாங்க போவோம்…அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே பாய்கிறார்.  

உடம்பு நடுங்க அந்தக் காட்சியைப்  பார்க்கிறேன். அசைவில்லை என்னிடம்.   மீண்டும் அந்த வாசலில் இருள்.  வராண்டா லைட் அணைகிறது. மீண்டும் இருள்.    

அப்பா…! வேணாம்ப்பா……!!  - என் வாய் என்னையறியாமல் முணுமுணுக்கிறது..என்னவோ மனசு விபரீதமாய் உணர்கிறது.  அம்மாவின் முகம் மனக் கண்ணில் நிழலாடுகிறது.

ன்னங்க….ஏன் இவ்வளவு நேரம் இன்னிக்கு? காலா காலத்துல வந்து சாப்பிட்டுப் படுக்க மாட்டீங்களா? நாளைக்கு ஆபீஸ் கிடையாதாக்கும்…அதுதானா இப்டி?….அதுக்காக மத்தவங்க பழியாக் கிடக்கணுமா….? நான் சாப்டாச்சு….எனக்குப் பசி பொறுக்கல….

எதுக்கு அநாவசியத்துக்குக் கத்துறே….? அஞ்சே நிமிஷம் ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துர்றேன்….ஒரே வியர்வை நாத்தம்…யப்பாடி…என்னா புழுக்கம்? வெக்க…வெக்க…அநியாய வெக்க…தாங்கவே முடில…உடம்பெல்லாம் தீயா எரியுது….! தட்டை எடுத்து வச்சிப் பரிமாறு….இதோ வந்தாச்சு….. – சொல்லிக்கொண்டே பாத்ரூமை நோக்கிப் பாய்கிறார் அப்பா.  சட்டென்று எதற்கு இப்படி ஓடி ஒளிகிறார்? தன்னை மறைத்துக் கொள்கிறார்?

வீட்டுக்குள்ள நுழைஞ்சாலே ஆர்ப்பாட்டம்தான்…என்ன ஜென்மமோ…?

இந்தா,..இந்தா இந்தத் துணியெல்லாம் அழுக்குக் கூடைல போடு…காலைல வாஷ் பண்ணனும்.  - அப்பா விட்டெறிந்த வேட்டி சட்டை, உள் ட்ரவுசர், பனியன் என்று அள்ளிக் கொண்டு வந்து அம்மா கூடையில் அமிழ்த்த ….அவளின் பார்வை ஒன்றில்  நிலைக்கிறது

…..என்னம்மா….என்னாச்சு….? என்றவாறே நெருங்குகிறேன் நான்.

ஒண்ணுமில்லை..என்னவோ கறைபோல இருக்கு…அதான் பார்த்தேன்… அடையா அழுக்கு…! பிரஷ் பண்ணி வாஷ் பண்ணனும்…….முகச் சுழிப்போடு  அழுக்குத் துணிக் கூடையில் துணிகளை அமிழ்த்தினாள் அம்மா. டிபன் ரெடி பண்ணனும். வேலை அவளை விரட்டியது. அப்படி நகர்ந்து அடுப்படியை நோக்கிப் போனபோது…மனதில் என்னவோ தோன்ற நான் அப்பாவின் சட்டையைக் கூடையிலிருந்து  எடுத்து விரித்துப் பிடித்தேன். இடப்புறப் பகுதியில் என்னவோ சிவப்பாகக் கறைபோல்  படிந்திருக்க…சட்டைப் பை லேசாய்க் கிழிந்திருந்தது. சங்கடத்தில் நோக்க… விரலால் சுரண்டியபோது தெரிந்தது.  நக நுனியில் பிய்ந்த அது என்ன? அட…இதுவா?  பழுப்பு நிற  ஒட்டுப் பொட்டு….!! அம்மா வச்சிக்கிறத விட கொஞ்சம் சின்ன சைஸில்….!!  இந்தக் கலர்ப் பொட்டு அம்மாவுக்குப் பிடிக்கவே பிடிக்காதே என்று சட்டென்று தோன்றியது எனக்கு.  ஒட்டுப் - பொட்டு…மனதில் தோன்றிய…இந்த வார்த்தை உறுத்தலாக என் மனதைச் சுண்டியது.

 

                                                ------------------------

02 ஜூலை 2024

 

 “பிரளயத்தின் நடுவே…!”         நெடுங்கதை - பிரசுரம் தாய்வீடு மின்னிதழ்-ஜூலை 2024

----------------------------------        



    

               ப்பா…தண்ணி ஏறிட்டேயிருக்கு…கீழே போய் காரை ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்திட்டு வந்திடுவோம்…இல்லன்னா இன்ஜினுக்குள்ள தண்ணீர் போயிடும்… - பிரபு  சொன்ன வேகத்தில்  படபடப்புத் தெரிந்தது. எப்படா பொழுது விடியும் என்று காத்திருந்ததுபோல் கூறினான் அவன். கார் வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது. அவன் கவலை அவனுக்கு. இப்பொழுதுதான் மூன்று ஃப்ரீ சர்வீஸ் முடிந்திருக்கிறது. மூன்றாவது சர்வீஸ் பண்ணிக் கொண்டு வந்து நிறுத்தி ரெண்டு நாள்தான் ஆகிறது. மழை பிடித்துக் கொண்டது.

            புயல்பற்றிய அறிவிப்பு வந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் இந்த அளவுக்குப் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விடாமல் ஊற்ற ஆரம்பித்ததும்தான் பயம் வந்தது. அருகிலுள்ள மேம்பாலத்தில் கொண்டு நிறுத்தியிருந்தார்கள் பலர். நூற்றுக் கணக்கான கார்கள் ஏற்கனவே வந்து விட்டது என்றார்கள். பெரிய பெரிய மால்களில் ரூபாய் ஆயிரம் ஒரு நாளைக்கு வாடகை என்று அங்கு கொண்டு போயும் நிறையப் பேர் விட்டிருந்தார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று வசமாய் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்களோ என்று தோன்றியது. வீட்டு வாசலில், சாலையோரங்களில் கார் நிறுத்தினால் அபராதம் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் வீட்டுக்கு ஒரு கார் என்கிற விகிதத்தில் வெளியே கார்கள் நின்று கொண்டுதான் இருந்தன. ஒரு வேளை இந்தப் பகுதியெல்லாம் அரசின் கண்களில் படவில்லையோ என்று நினைத்துக் கொண்டார் இவர். இப்படிப் பயப்படாம நிறுத்தியிருக்காங்களே…என்று ஆச்சரியப்படுவார். இப்போது தண்ணீர் ஏற ஏற அந்தக் கார்களெல்லாம் என்ன கதியாகும் என்று நினைத்தபோது ஐயோ…பாவமே…என்று வயிற்றைக் கலக்கியது கருணாகரனுக்கு. என்ன ஆகுதோ ஆகட்டும் என்று விட்டு விட்டது போலிருந்தது. அல்லது எந்த யோசனையும் பலன் தராமல் கையைப் பிசைந்து கொண்டிருப்பார்களோ என்று நினைக்க முற்பட்டார்.

            பெரு நகரத்தில் காரின் தேவை அத்தியாவசியமாகியிருந்தது. உறவினர்கள் வீட்டு விசேடங்களுக்கு என்று டாக்ஸிகளுக்கு வாடகை கொடுத்து மாளவில்லை. கோயில் குளம் என்று போக , குழந்தைகளைப் பள்ளி கொண்டு விட, கூட்டி வர, கடைகளுககுப் போக,  திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்ள என்று பல நிலைகளிலும் காரின் தேவை அத்தியாவசியமாகி விட்டதோ என்று தோன்றியது. அதற்குச் செய்யும் செலவு முக்கியமில்லை…வசதிதான் முக்கியம் என்ற கதையாகிப் போனது. ஒரு காலத்தில் ராலே – பச்சை நிற சைக்கிள் வைத்திருந்தாலே கௌரவம், பிறகு எவன் ஸ்கூட்டர் வைத்திருக்கிறானோ அது கௌரவம்…இப்போது கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்றாகிப் போயிருக்கிறது. காரினால் அனுபவித்த வசதிகள் அதிகமா அல்லது அதற்குப் பராமரிப்பிற்காகச் செய்த செலவுகள் அதிகமா என்றால் இரண்டாவதுதான். ஆனாலும் கார் மோகம் மக்களை விட்டபாடில்லை. இன்றைய உலகமயமாக்கல் கற்றுக் கொடுத்த பாடங்களில் இதுவும் ஒன்று.

ரெண்டு பேரும் சம்பாதிக்கிறார்கள் என்றாலும், தன் பங்கும் இருக்கட்டும் என்று ஒரு தொகையை இவரும் அந்தக் கார் வாங்க என்று வழங்கியிருந்தார். அப்படியானால்தான் அதில் ஏறி உட்காருவதற்கு ஒரு அருகதை இருக்கும் என்பதும் இவரின் எண்ணமாயிருந்தது. மூணு லட்சம் கொடுத்திடுங்க…என்று வள்ளிசாய் காயத்ரி சொன்னபோது இவர் மறுக்கவில்லை. மீதி அஞ்சோ, ஆறோ அவர்கள் சம்பாத்தியத்தில் போட்டுக் கொள்ளட்டுமே.! அந்தக் காரைக் காப்பாற்ற வேண்டியது இன்றைய தினத்தில் முக்கியமாகிப் போனது.  கார் பார்க்கிங்கில் எந்த நேரம் தண்ணீர் நுழையுமோ என்றிருந்தது. கன மழை, மிக கனமழை, அதிமிக கனமழை என்று பிரித்து அறிவிப்பதைப் பார்த்தால் எதுவொன்றையும் இந்த  நகரம் தாங்காது என்றுதான் தோன்றியது.

முந்தைய புயலின்போது டூவீலர் மட்டுமே இருந்தது. ஆனால் கார் பார்க்கிங் பகுதியில் வண்டி முக்கால்வாசி மூழ்கிப் போனது. சர்வீசுக்கு விட்ட போது இன்ஜினுக்குள் பாம்பு சுற்றி இருக்கு சார் என்று மெக்கானிக் சொன்னபோது அடிவயிற்றில் கலக்கி அங்கேயே மயக்கம்போட்டு விடும் நிலைக்கு வந்து விட்டார் இவர். எப்படி ஓட்டி வந்தோம்? என்ற கேள்விதான் அவரை அந்நிலைக்குத் தள்ளியிருந்தது. சிறிது தூரம்தான் எனினும் அதுவரை அது அடங்கிக் கிடந்ததா?  அல்லது சுற்றிய பகுதியிலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் போனதா? அல்லது செத்துப் போய்விட்டதோ?

சாகல சார்….நல்லவேளை உங்க அதிருஷ்டம்…சாரைப் பாம்பு சார்…சாரை….வெளில இழுத்துப் போட்டதும் என்னா வேகம்ங்கிறீங்க…அடிக்க முடில…அந்தா…அந்தப் பொந்துக்குள்ள போயிருச்சு……என்றார் மெக்கானிக். அந்தத் தடவை அவன் கேட்ட கூலியை வாய் மூடிக் கொடுத்தார். வண்டியை இவர் எடுப்பதே இல்லை. பெரு நகரச் சாலைகளில் வண்டிகள் பறக்கும் வேகம் பயப்படுத்தியது. தன்னால் அதன் நடுவே சமாளித்து, ஜாக்கிரதையாக ஓட்ட முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ரோடு வரை போவது வருவது என்றுதான் வைத்துக் கொண்டார். ரோட்டுக்குள்ளே கலப்பது என்பதில்லை. எங்கேயாவது விழுந்து அல்லது மோதி கால் கையை உடைத்துக் கொண்டால்? பிறகு இந்த வயசுக்கு எலும்பு சேராதே? நொண்டியாய் மற்றவர்களுக்கு சிரமம் அளித்து எப்படி மீதி வாழ்க்கையைக் கழிப்பது? கவனம், கவனம் என்று அவர் மூளை அவரை எச்சரித்திருந்தது.

இப்போதுதான் பெருமையாகக் கார் வேறு சேர்ந்து கொண்டிருக்கிறதே? தேவைகளை அதிகரிக்க அதிகரிக்கத் துன்பம்தான் போலும்….ஆசைகளே துன்பத்திற்குக் காரணம்…எளிய வாழ்க்கையே என்றும் நிம்மதி…!

            இருக்கிற குடிசைகளை இழந்துட்டு குடி படை எங்க ஒண்டுறதுன்னு அலையுது. நமக்கு நம்ம காரை எப்படிப் பாதுகாக்கிறதுங்கிறதுல கவனமாயிருக்கோம். எவ்வளவு நகை முரண் பாரு… பெருங்கவலையாயிருக்கு…இந்த ஏழை ஜனம் எங்க போகும். நினைத்து .நினைத்துத் தனக்குத்தானே மனதுக்குள் நொந்து கொண்டார் கருணாகரன்.

 பின்னால் உள்ள குடிசைப் பகுதி முழுக்கத் தண்ணீர் நிரம்பி விட்டது. இருக்கும் பொருட்களையெல்லாம் விட்டு விட்டு ஒரு பெரும் கூட்டம் பக்கத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் ஒண்டியிருந்தது. அதையாவது திறந்து விட்டார்களே என்றிருந்தது. சின்னப் பள்ளிக் கூடம்தான்.  மாடியிலிருந்து பார்த்தபோது அங்கு ஒண்டியிருக்கும் கூட்டத்தைப் பார்த்து மனம் பதை பதைத்தது. ஜே.சி.பி.இயந்திரங்களில் எப்படி எப்படியோ  பெட்டி பெட்டியாகப் பார்சல்களைக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். அரசு இயன்றவரை உதவிகளை வழங்கிக் கொண்டுதான் இருந்தது. வரிசை…வரிசை…என்கிற சத்தம் இங்கு கேட்டது. கூட்டத்தில் சாப்பாட்டுப் பொட்டணம் வாங்க ஒரே அடிபிடி. அதை ஒழுங்கு படுத்தப் போலீசார். எல்லாருக்கும் உண்டு…எல்லாருக்கும் உண்டு என்று கத்திக் கொண்டே விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டும்,  இடிபட்டும், மிதிபட்டும் சனம் பரபரத்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் வானத்தில் உறலிகாப்டர் வேறு பறக்க ஆரம்பித்திருந்தது. எந்தெந்த மாடியில் ஆட்கள் அதிகமாக நின்று கையசைக்கிறார்களோ அங்கு மட்டும் பார்சல் பொட்டலங்கள் விழுவது தெரிந்தது. அவ்வளவு மழையிலும் மக்களுக்கு இந்த வேடிக்கை பார்க்கும் புத்தி போகவில்லையே என்று நினைத்தார் இவர். ஏம்பா…நாமளும்தானே அதுக்கு வந்திருக்கோம்… என்றான் பிரபு. இரண்டு மூன்று உறலிகாப்டர்கள் வெவ்வேறு பகுதிகளில் பறந்து கொண்டிருந்தன.  ஆனால் இவர்கள் இருக்கும் பகுதிக்கு வரவேயில்லை.   இவனும் பிரபுவும் மட்டும் இங்கு நின்றார்கள். மற்றெல்லாரும்தான் அவரவர் ஊர் போயாயிற்றே? என்னதான் போடுறான் பார்த்து விடுவோம் என்று வீச்சு வீச்சென்று கையசைத்தும் பலனில்லை. எட்டியே பார்க்கவில்லை இந்தப் பக்கம். மத்திய மந்திரி வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டதாகச் செய்தி வந்தது.

            இடம் பத்தாம இந்த அபார்ட்மென்டுக்கு ஏதாச்சும் ஒரு கூட்டம் வந்தாலும் நாம யாரும் விரட்டக் கூடாது…சொல்லிட்டேன்…என்று கண்டிஷன் போட்டார் கருணாகரன்.

            நாம மட்டும்தானேப்பா இங்கே இருக்கோம்…மத்த எல்லாரும்தான் கிளம்பிப் போயிட்டாங்களே….அந்த காலேஜ் மேடம் ஒருத்தங்க மட்டும் இருக்காங்க…அவுங்களுக்கும் ஏதாச்சும் உதவின்னா நாமதான் செய்யணும்…

            ஆபத்துக்குப் பாவமில்லே…தாராளமா செய்யலாம். சொல்லிக் கொண்டிருந்தபோதே கீழே சத்தம் கேட்டது. ஒரு சனக்கூட்டம் உள்ளே நுழைந்திருந்தது. பக்கத்திலுள்ள தேவ நகர் குடும்பங்கள் என்று சொன்னார்கள். இடுப்பளவு தண்ணீரிலேயே வந்து ஒண்டியிருந்தார்கள்.

            கார் பார்க்கிங்ல ஒரு கக்கூஸ் இருக்குல்ல…அத அவங்களுக்குத் திறந்து விட்ரு…வெளில இருக்கிற குழாயைப் பயன்படுத்திக்கட்டும்…..என்றார் இவர்.

            அப்பா…அது மழைத் தண்ணி…மேல் தொட்டில தண்ணி தீர்ந்து போச்சு…மூடியத் திறந்து வச்சிருக்கு…மழைத் தண்ணி அதுல விழட்டும்னு…தொட்டில மழைத்தண்ணி கொஞ்சமாச்சும் சேர்ந்தாத்தான் நமக்கே தண்ணி கிடைக்கும். இன்னும் நாலு நாளைக்கு மழை இருக்கும்ங்கிறான்…மழை நின்னாலும் தெருக் குளம் வத்துற வரைக்கும் கரன்ட் வராது. நாமளும் அந்த மேடமும் சமாளிச்சாகணும்…கீழ்க் குழாய் லீவரை மாடில மூடியாச்சு…கழுவத்தானே…மழைத் தண்ணியப் பிடிச்சு உபயோகப்படுத்திக்குவாங்க…-

ஓகே என்று விட்டுவிட்டார் கருணாகரன். அதற்கு மேல் வற்புறுத்த முடியாது. காரணம் ஓடியாடுபவன் அவன். ரெண்டு நாளாய் உட்காராமல், சளி இருமலோடு அல்லாடிக் கொண்டிருக்கிறான். எல்லாவற்றிலும் அவனுக்கு உதவ முடியவில்லையே என்று இவருக்கு வருத்தம். இன்னும் வண்டிக்கு ஜாக்கி போடுவோம் என்று வேறு சொல்கிறான். தண்ணீர் ஏறும் முன் போட்டுத் தூக்கியாக வேண்டும். அதுவரை தண்ணீர் ஏறாமல் இருக்க வேண்டும்.  தண்ணீர் ஏறினால் அதில் நின்று ஜாக்கி ஏற்றும் வேலை செய்தாக வேண்டும். அது காய்ச்சலில் கொண்டு  விடாமல் இருக்க வேண்டும். இருக்கும் நிலைமை மிகுந்த வருத்தத்தைத் தந்தது கருணாகரனுக்கு.

            அடுக்ககத்தில் உள்ள எட்டு வீட்டிலும் இருப்பவர்கள் அவரவரைக் காப்பாற்றிக் கொள்ள என்று முன்னமே கிளம்பிப் போய் விட்டார்கள். எல்லோரும் வாடகைக்கு இருப்பவர்கள். மழை ஓய்ந்து. தண்ணீர் வற்றி. மின்சாரம் வந்து எல்லாம் நார்மலான பிறகு சாவகாசமாய் உறலோ…என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். அதுவரை என்னென்ன வேலை நடந்தது என்று ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ள மாட்டார்கள். வாட்ஸப் குரூப்பில் இன்னின்ன பணிக்கு இவ்வளவு இவ்வளவு என்று நீட்டிமுழக்கிக் கொண்டிருப்பான் இவன். அதற்கு ஆயிரம் காரணம் கேட்பார்கள். கைக்காசு போட்டு செலவழித்த பணம் லேசில் வந்து சேராது. என்றைக்கானாலும் கொடுக்காமல் முடியாது, அதே நேரத்தில், காலதாமதமின்றிக் கொடுத்துத் தொலைப்போம் என்கிற அறிவு கிடையாது. அறிவென்ன, மனசு இல்லை. அவ்வளவுதான். இத்தனையையும் ஓடி ஓடி ஒருவன் செய்திருக்கிறானே…அவன் கைப்பணம் போட்டிருக்கிறானே…அவனுக்கு மட்டும் என்ன தலைவிதி என்கிற சிந்தனை ஒருவனுக்கும் இல்லை. வெறும் சுயநலமிகள். இதில் பராமரிப்புச் செலவு மிக அதிகம்…என்கிற முனகல் வேறு. பிரதி மாதமும் அவரவர்க்கான பராமரிப்புச் செலவினத்தை லேசில் தருவதில்லை. மாதக் கடைசி வரை இழு இழு என்று இழுத்து கடைசியில் மனசில்லாமல் வங்கிக் கணக்கில் தொகை மாற்றம் செய்வது. அதையும்  பணம் அனுப்பியாச்சு என்று மனசோடு தகவல் தருவதில்லை. மனிதர்கள் ஏனிப்படி அல்பமாய்  இருக்கிறார்கள்? வந்தபின்னால்தானே தெரிகிறது…என்னென்ன பிரச்னை எழும் என்று? இதையெல்லாம் முன் வேறு எங்கேயும் படித்து அறிய  வாய்ப்பேயில்லை. அனுபவப்பட அனுபவப்படத் தெரிந்து கொள்வதாய் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் தன்னைத்தான் நொந்து கொண்டார் கருணாகரன். அடுக்ககத்தில் வீடு வாங்கியது மகா தவறு..அதுதான் அவர் நிலை. இன்றுவரை அந்தத் தவறுக்காக நொந்து கொண்டிருக்கிறார்.

            வீட்டை வாடகைக்கு விட்டுட்டு நாம தனி வீடு பார்த்துப் போயிடுவோம்ப்பா…இந்த வாடகையை வாங்கி அங்க கொடுப்போம். கூடக் கொஞ்சம் சேர்த்துன்னாலும் வசதியா, பிரச்னையில்லாமத் தனி வீடா நிம்மதியா இருக்கலாம்தானே…? – பையன் பிரவுவிடம் பொறுக்கமாட்டாமல் அனத்த ஆரம்பித்திருந்தார் கருணாகரன்.

                                                            ( 2 )

            ப்பாவின் அனத்தல் பொறுக்க மாட்டாமல் ஒரு நாள் பிரபு  கோபமாய்ச் சொன்னான். என்ன இப்படிக் கோபப்பட்டுட்டான் என்றிருந்தது கருணாகரனுக்கு. இப்படி அவன் மறுத்துச் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. மிகுந்த வருத்தமாயிருந்தது.

            இங்கிருந்து கிளம்பினால் இடம் வாங்கி, லோன் போட்டு, வீடு கட்டித்தான் நகருவேம்ப்பா….அப்போ இதை வாடகைக்கு விட்டாப் போதும்…வேறே வாடகை வீடு பார்த்து நாம போய் இருக்கிறாப்ல எல்லாம் ஐடியா இல்ல….-முடிவாய்ச் சொல்லி விட்டான்.

            அப்போதுதான் யோசித்தார் கருணாகரன் தன் தவறை. பெரிய மனதோடு அவன் பெயருக்கு இந்த டபிள் பெட்ரூம் ஃப்ளாட்டை வாங்கினது தப்பு என்று. வாங்கினது கூடத் தப்பில்லைதான் அதைத் தன் பெயரிலேயே பதிவு செய்யாமல் விட்டதுதான் மாபெரும் தவறு என்று நினைத்தார். அதைச் செய்திருந்தால்  இப்போதான தன் விருப்பத்தை சுதந்திரமாய் நிறைவேற்றியிருக்கலாம். யாரும் தடுக்க முடியாது.  அநாவசியக் கஷ்டங்களுக்கு இடமில்லாமல்  போயிருந்திருக்கும். அவன் பெயருக்கு வீடு இருப்பதை மனதில் வைத்து, மாற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறான். தன் வார்த்தைக்கு மதிப்பில்லை. நல்லது சொன்னால் கேட்க வேண்டாமா? அதென்ன அத்தனை பிடிவாதம்? நான்தான் இருக்கேன்லப்பா…எல்லா உதவியும் செய்றதுக்கு? பிறகென்ன உனக்கு வீடு மாத்தறதுல கஷ்டம்? என்று சொல்லிப் பார்த்தார். அவன் அசைவதாய் இல்லை.

            சென்னைக்கு வந்த பிறகு, அதிலும் அவனுக்குத் திருமணம் ஆனபிறகு அதிகாரம் தன் கையிலிருந்து போய் விட்டாற்போல் உணர்ந்தார் கருணாகரன். இனிமே அவனை டா போட்டுக் கூப்பிடாதீங்க…என்றாள் ஒருநாள் காயத்ரி. இவருக்கு அதிசயமாய் இருந்தது இது. என் பையனுக்கு என்றும் நான் தகப்பன்தானே? இதிலென்ன தப்பு? இது என் அன்பான உரிமையில்லையா? இதைப் போய்த் தடுக்கிறாளே? என்று எண்ணினார். ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனும் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தபோதுதான் “டா“ வை நிறுத்த வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.  கல்யாணம் ஆகிவிட்டதால் மனைவி முன், தான் “டா” போட்டு அழைக்கப்படுவதை ஒருவேளை அவனே விரும்பவில்லையோ? அல்லது அந்தப் பெண் விரும்பவில்லையா? சரி…விட்டு விடுவோம் என்று நிறுத்திக் கொண்டார் கருணாகரன். ஆனால் அந்த “டா“வில் இருந்த நெருக்கம் சற்றே விலகியது போல்தான் அவரால் உணர முடிந்தது.

            ன் அவன் பெயருக்கு எழுதினீங்க…? யாராச்சும் இப்படி செய்வாங்களா? மடத்தனமால்ல இருக்கு….காலம் எதை எப்படி மாற்றும்னு சொல்ல முடியாதுங்க…உங்களையே வெளியேத்தினாலும் போச்சு….ப்ராப்பர்ட்டிலாம் கடைசி வரை நம்ம பெயரில்தான் இருக்கணும். அப்பத்தான் சிதைல போய் அடங்குறவரைக்கும் மதிப்பு மரியாதையா இருக்க முடியும். உலகம் போற போக்குத் தெரியாமச் செய்திட்டீங்களே? -பலரும் இப்படித்தான் சொன்னார்கள். யோசிக்க ஆரம்பித்திருந்தார் கருணாகரன். இனி கைவசம் இருப்பதையும் கைவிட்டுவிடக் கூடாது என்கிற தீர்மானம்   வந்தது அவருக்கு. ஆனால் தன் பையன் அப்படியெல்லாம் இருக்க மாட்டான் என்கிற நம்பிக்கையும் ஒரு பக்கமாய் இருக்கத்தான் செய்தது.  ஆனால் கைபேசியில் பார்க்கும் வீடியோக்கள் அந்த நம்பிக்கையைத் தகர்த்தன.  மருமகள் தன் மாமியாரைப் பிடித்துத் தள்ளிவிடும் ஒரு காட்சி. போ…போய்த்தொலை…என்ற சுடுசொற்களோடு. அந்தக் கிழவி தடால் என்று கட்டிலிலிருந்து கீழே விழும் காட்சி மனதைப் பதை பதைக்கச் செய்தது.

            அப்பாவின் நினைவு தினத்திற்கு ஒரு முதியோர் இல்லம் சென்று பணம் கட்டியிருந்தார் கருணாகரன். அன்றைய தினம் அங்கிருக்கும் அனைவருக்கும் பாயாசம், வடை. நாலுவகைக் காய்கறிகள், பச்சடி, கிச்சடி, இனிப்பு, பழம், இவைகளோடு விருந்து. சாப்பாட்டு இலையின் முன் அமர்ந்து அவர்கள் தன் தந்தைக்காகத் தியானித்ததும், தனக்கு நன்றி தெரிவித்ததும், அவர்களை ஒவ்வொருவராக நின்று, தான் கவனித்ததும். பின் அவர்களோடு அமர்ந்து உண்டதும் மறக்க முடியாத நிகழ்வாயிருந்தது. மாலையில் அங்கு போய் காற்றாட அமர்ந்திருந்த பொழுது அவர்களில் பலர் வாசலையே நோக்கிக் கொண்டிருந்ததும், சாலையில் யார் வருகிறார்கள் என்று கவனித்துப் பார்த்ததும்.. மாதம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் செல்லும் மகனைக் காணவில்லையே என்று ஏங்கிக் கிடந்ததும் இவரை மிகவும் வருத்தியது. அந்த நிலை தனக்கும் வந்து விடக் கூடாது என்று அப்போதைக்கு மனதைத் திடப் படுத்திக் கொண்டார் கருணாகரன். ஆனால் காலம் யாரை எவ்வாறு. எங்கு  கொணடு நிறுத்துமோ என்கிற பயமும் அவருள் இருக்கத்தான் செய்தது.

சிந்தனை அறுபட்டது. பல சமயங்களில் பின்னோக்கிப் போய்விடுவதாக உணர்ந்தார். எதிர்காலம் எப்படியிருக்குமோ என்கிற பயம் கூடவே வந்து கொண்டிருந்தது. சென்னைக்கு வரும் முன்பான தனக்கும் தன் மனைவிக்குமான பேச்சை நினைத்துப் பார்த்தார்.

சென்னைல ஒரு வீடு வாங்குவோம்…நாம அங்க போயிடுவோம்.. அவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணுவோம். தனிக்குடித்தனம் வைப்போம்…பிறகு நாம இந்த மதுரைக்குத் திரும்ப வந்திடுவோம்…-இதுதான் கிளம்பும் முன் உண்டான சுருக்கமான பேச்சு, ஒப்பந்தம். அக்ரிமென்டா எழுதிக் கொடுக்க முடியும்? புருஷன் பெண்டாட்டிக்குள் என்ன அக்ரிமென்ட்? வாய் வார்த்தைதான் ஒப்பந்தம். அதற்கு மதிப்பில்லை என்றால்?  அவள் இப்போது வர மறுக்கிறாள். பையனும் அமைதி காக்கிறான். நீ வேணா போய் இருந்துக்கோ…என்று சொல்லி விடுவானோ? என்ற சந்தேகம் வந்தது இவருக்கு. நான் வராப்ல இல்லை. பையனோடுதான் இருப்பேன். அவன் போயிடுங்கன்னு சொல்லட்டும். கிளம்பறேன்…அல்லாமல் நான் நகர்றாப்ல இல்லை என்றாள். அவன் அப்படிச் சொல்ல மாட்டான் என்கிற திடமிருந்தது அவளிடம். ஆனால் நீயும் இருப்பா…அங்க ஏன் போறே? என்று ஒரு வார்த்தை வரவில்லை. போனாப் போய்க்கோ…ரோட்டுல விழுந்து செத்தா சாவு..! இதுதான் தன் கதியா?

 ஆரம்பம் முதலே. அதாவது படிக்கிற காலம் முதலே அவன் அம்மா கோண்டுதான். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒன்றாய் கோயில் போவார்கள். கடைக்குப் போவார்கள்.  அவன் ஊரில் இருந்தால் இவருக்கு வண்டி கிடைக்காது. அம்மாவைப் பின்னால் உட்கார்த்திக் கொண்டு ஊர்வலம் வருவான். சரி…நாலு நாளைக்குத்தானே என்று விட்டுவிடுவார். காலேஜ் படிக்கும்போதும், பிறகு வேலைக்குப் போனபோதும் அப்படித்தான்.   ஏதாவது முக்கிய வீட்டுக் காரியமாய் வேண்டுமென்றால் மட்டும் அவர்களால் செய்ய முடியாததற்கு  இவரை அணுகுவார்கள். மற்றப்படி பேச்சு…பேச்சு…பேச்சு…அப்படி என்னதான் பேசுவார்களோ என்று நினைத்துக் கொள்வார் இவர்.  தனக்கு எதிராகவா பேசிவிடப் போகிறார்கள்? இதை ஏன் இத்தனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்? பையனுக்கு அம்மாமேல் பிரியம் ஜாஸ்தி. இருந்துவிட்டுப் போகட்டுமே! அதனால் தனக்கென்ன பாதகம்? என்று விட்டு விட்டார் இவர். தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் பேசிவிட்டால் கூட…போதும்…போதும் இன்னைக்கு..அப்புறம் உங்கம்மா கோவிச்சிக்கப் போறா…! என்று கிண்டலடிப்பார் சமயங்களில்.

அந்த ஒப்பந்தம் இப்போது காலாவதியாகி விட்டது. அவருக்கும் சேர்த்துத்தான். ஆனால் இவருக்குத்தான் இந்தச் சென்னையில் இருப்புக் கொள்ள மாட்டேனென்கிறது. ரெண்டு மாதத்திற்கொருமுறை ஊர் சென்று வருகிறார். அங்கு போய் அவர் ஜனங்களைப் பார்த்தால்தான் திருப்தி. அவர்கள் பேசுகிறார்களோ இல்லையோ, ஒரு சிறு புன்னகை, நல்லாயிருக்கீங்களா? என்ற ஒற்றை வார்த்தைக் கேள்வி…வேண்டாமே…அவர்களையெல்லாம் கண் கொண்டு பார்த்தாலே போதுமே..மனதிற்குப் புதிய உற்சாகமும், ஆரோக்கியமும் வந்துவிடுகிறதுதான். அப்படித்தான் இவரது மீதி வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கே வாழ்க்கை துவங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது…..!! பாதையெல்லாம் மாறி வரும்…பயணம் முடிந்து விடும்… - பாடலின் கடைசி வரி…அவரை ஈர்த்தது. என்று முடியுமோ இந்தப் பயணம் என்று அவர் மனது ஏங்கியது. கடந்து போன காலங்களின் ஈரத்தில்தான் இப்போது தான் மீதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டார் கருணாகரன். நடப்பு வாழ்க்கை அவருக்கு அத்தனை ஸ்வாரஸ்யம் தருவதாயில்லை.  சொல்லப்போனால் பையனின் திருமணத்திற்குப் பின்பே அந்த ஸ்வாரஸ்யம் போய்விட்டது என்று துல்லியமாயத் தோன்றியது அவருக்கு.  தனிக் குடித்தனம் வைத்து விட்டு நாம் நம் இடம் பெயர்ந்து விடுவோம் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அவருள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

                                                            ( 3 )

            வுங்கள்லாம் ஏதாச்சும் சாப்டாங்களா என்று கீழே போய்க் கேட்டார் கருணாகரன். மழைத் தண்ணில தப்பிச்சு வர்றதே பெரும்பாடாப் போச்சு சாமி..எங்க சாப்பிடுறது…என்று அவர்கள் துக்கமாய் சொன்னார்கள். வாங்கி வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொண்டு போய்க் கொடுத்தார். எதற்கும் இருக்கட்டும் என்று படகில் வந்தவர்கள் கொடுத்த ரொட்டிப் பாக்கெட்டுகள் கிடந்தன. அவற்றையும் எடுத்துப் போய் நீட்டினார். பிரட் ரோஸ்ட் பண்ணிச் சாப்பிடணும்னு சொன்னீங்க…? என்று கேட்க காயத்ரியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இறங்கினார். ரொம்ப முக்கியம்…என்று கேலியாய் அவர் மனது நினைத்தது.  பால் பாக்கெட் என்று கேட்டு வெள்ளத்தில் இறங்கிய போது அடுத்தாப்ல வண்டி வரும் சார்…என்று சொல்லி விட்டுப் போயிருந்தார்கள். அதுபோல் அடுத்து வந்த படகில் கை நீட்டிய போது பால் பாக்கெட்டிற்கு பதிலாக பால் பவுடர் பாக்கெட்டுகளை தாராளமாய்க் கொடுத்து விட்டுப் போனார்கள். அதை எடுத்துக் கொண்டு கொடுக்கக் கிளம்பினார்.

            இதக் கொண்டு கொடுக்கப் போறீங்களே…? தண்ணிக்கு எங்க போவாங்க…? என்று காயத்ரி நினைவு படுத்த, நம்மகிட்டதான் மூணு கேன் இருக்கே…ஒண்ணை அவங்களுக்குக் கொடுத்திடுவோம் என்று அவர் சொல்லியது அவளுக்குப் பிடிக்கவில்லை. இதக் கொடுங்க வேண்டாங்கலை…தண்ணி கேன் நமக்கு வேணும்…என்று அவள் தடுத்தபோது…அவருக்குக் கோபம் வந்தது. போகட்டும் காயத்ரி…நமக்கு வாங்கிக்கிடுவோம்….எதிர் கட்டிட பீகார் பசங்கள்ட்ச்  சொல்லி நான் வாங்கிட்டு வரச்சொல்றேன். ஒரு அவசரத்துக்குத்தான்…எத்தனை குழந்தைகள் இருக்கு தெரியுமா அங்கே…? என்றார்.

            சுட வச்சுக் கொடுத்தாப் பரவால்ல…வெறும் தண்ணில கரைச்சு சாப்பிட்டாங்கன்னா வயித்துக்கு  என்ன செய்யுமோ? என்றாள் காயத்ரி.

            அவங்களுக்கு அதெல்லாம் ஒண்ணும் செய்யாது. எல்லாக் கோளாறும் நமக்குத்தான் வரும். நமக்குத்தான் குடல்  வீக். அவுங்களுக்கு எதுவும் ஜீரணிக்குமாக்கும்…என்றுவிட்டு ஒரு கேனையும் கஷ்டப்பட்டுத் தூக்கக் கிளம்பினார்.

            நீ இறங்குப்பா…நான் கொண்டு வந்து தர்றேன்….என்று எழுந்தான் பிரபு. தான் அந்தக் கேனையும் தூக்கிக் கொண்டு இறங்கினால் நிச்சயம் மாடிப் படிகளில் வழுக்கி விழத்தான் செய்வோம். பின் எப்படி செய்யத் துணிந்தோம் என்று எண்ணி ஒரு கணம் தன்னைத் தடுத்த மகனை நினைத்துக் கொண்டார். ஆபத்திற்கு நிச்சயம் வரத்தான் செய்வான் என்ற நம்பிக்கை வந்தது அவருக்கு. அத்தனை சுலபமாய் நம்பிக்கை இழந்து விடத் தேவையில்லைதான். எப்போதுமே எந்த விஷயத்தையுமே தான் கொஞ்சம் அதீதமாய்க் கற்பனை செய்து கொள்வதாய் அவருக்குத் தோன்றியது.

ஃபோனை எடுத்து கார்ப்பரேஷனுக்குத் தகவல் சொன்னார். வெகு நேரம் யாருமே எடுக்கவில்லை.  ரிங் போய்க்கொண்டேயிருந்தது. ஆபீசே திறந்திருக்கிறதோ என்னவோ என்ற சந்தேகம் வந்தது.  ஃபோனில் 30 பாயின்ட்தான் இருந்தது மிச்சம். இன்னும் பத்து குறையும் வரை பேசலாம். சார்ஜ் போட முடியாது. கரன்ட் இல்லை. ஏதாச்சும் ரெண்டு மூணு ப்ளக் பாயின்ட்டில் இன்வெர்ட்டர் கனெக் ஷனும் கொடுத்திருக்கலாம். இந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் சார்ஜ் போடவாவது உதவும். இப்போது புத்தியில் உறைத்தது.

நாம் குறிப்பாய்க் கவனித்துச் சொல்வதை எங்கே பசங்கள் கேட்கிறார்கள். அவன் அம்மா சொல்வதுதான் வேத வாக்காக இருக்கிறது அவனுக்கு. எப்படியோ போங்கள் என்று ஒதுங்க நினைத்தது மனம். அதுவும் அவனது திருமணத்திற்குப் பிறகு அவர் அடியோடு ஒதுங்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னவோ செய்து கொள்ளுங்கள்…எனக்குத் தெரியாது என்றிருந்தார். வரவு செலவு எதிலும் தலையிடுவதில்லை.ஆனாலும் இந்த மாதிரி இக்கட்டான சமயங்களில் அப்படி ஒதுங்கியிருக்க முடியுமா?

இருக்கும் களேபரத்தில் தான் சொன்னது எதிர்த்தரப்பில் காதில் விழுந்ததா என்று கூட தீர்மானிக்க முடியவில்லை.   வருவாங்க சார்…வருவாங்க சார்…என்ற வார்த்தை மட்டும் கேட்டது. எதுக்கு வருவாங்க..யார் வருவாங்க…எங்க வருவாங்க…இந்த ஜனங்களையெல்லாம் ஏதாச்சும் பாதுகாப்பான இடத்துல கொண்டு சேர்ப்பாங்களா…அல்லது தண்ணி வத்துற வரைக்கும் அவங்க இங்கதானா….? கீழே இம்புட்டு ஆட்களைப் பரிதவிக்க விட்டிட்டு…மேலே நாம எப்படிச் சாப்பிடறது? சோறு உள்ளே இறங்குமா? என்றிருந்தது இவருக்கு. குறைந்தது மோர் சாதமாவது ஆளுக்கு ஒரு கப் ஒரு கப் என்று சாதம் வடித்துக் கொடுக்கலாம். தான் சொன்னால் காயத்ரி கேட்பாளா? அல்லது பையன்தான் சரி என்பானா? இம்மாதிரிக் காரியங்களெல்லாம் அவர்களுக்குப் பழக்கமில்லை. தேவைப்படும் இக்கட்டான காலங்களில் ஒரு சமய சந்தர்ப்பம் என்று இல்லையா? செய்தால் என்ன கௌரவம் குறைஞ்சு விடப் போகிறது? புண்ணியம்தானே? ஆனால் அவர் வார்த்தைகள் அங்கே எடுபடாது. 

சின்ன வயசிலிருந்தே ரொம்பவும் வறுமையையும், தரித்திரத்தையும், பற்றாக்குறைகளையும், அவமானங்களையும் சந்தித்து வளர்ந்தவர் கருணாகரன். அதனால் ஏழ்மை என்பது எவ்வளவு துயரமானது என்பதை அவர் அறிவார். கஷ்டப்படுபவர்களைப் பார்த்தால் என்னமாவது தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று நினைப்பார். ஒரு பிச்சைக்காரனுக்கு ஏதாவது போடுவது என்றால் கூட பத்து ரூபாய்தான் போடுவார். ரெண்டு ரூபாய் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் என்று என்றுமே பிச்சையிட்டதில்லை அவர். இல்லையென்றால் பக்கத்து டீக்கடையில் சொல்லி டீ சாப்பிடுங்க என்று கடையில் காசைக் கொடுத்து விடுவார். கோயிலுக்கு என்று சென்றால் சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு கிளம்புவார்.  வெளியே அமர்ந்திருக்கும் எல்லாப் பிச்சைக்காரர்கள், பண்டாரங்களுக்கும் வித்தியாசமின்றி ஒரே மாதிரி பத்துப் பத்தாய் எடுத்து நீட்டி விடுவார். அவரைப் பொறுத்தவரை சாமி கும்பிட்ட திருப்தி அதில்தான் வந்தது அவருக்கு.

இந்தச் சமயத்தில் இன்னொன்று ஞாபகம் வந்தது அவருக்கு. மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளத்தின்போது அப்பா இ.பி.கான்டீனில்  வேலை பார்த்த சமயம். பள்ளிகளிலும், கோயில்களிலும், கல்யாண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்த பொது ஜனங்களுக்கு பொங்கல், தயிர்சாதம், உப்புமா, கிச்சடி என்று  இரவு பகல் பார்க்காது செய்து போட்டு கடைசியில் அது நான் இந்த மக்களுக்கு செய்த சேவையாய் இருக்கட்டும் என்று கூலி வாங்க மறுத்து விட்டதும், மூன்று நாட்களாய்த் தூக்கமில்லாமல் உழைத்து, வீடு வந்து நாள் முழுக்க உறங்கி ஓய்வு எடுத்ததும்…அந்த மாதிரி நிகழ்வுகளையெல்லாம் இந்தக் காலத்து இளைய தலைமுறையிடம் சொல்ல முடியுமா? காது கொடுத்துத்தான் கேட்பார்களா…அல்லது அதன் மதிப்பைத்தான் உணருவார்களா? அது வெறும் செய்தியாகத்தான் அவர்களின் காதில் விழும். இன்னொரு காது வழியே வெளியேறிவிடும். மூத்த தலைமுறையின் விழுமியங்களான விஷயங்கள் மதிப்பற்றுப் போன காலம் இது. சொல்லிப் புண்ணியமில்லை.

நாம காரைப் பத்தி யோசிக்காமயே போயிட்டோம்….என்றாள் காயத்ரி.

முதல்ல நம்மள எப்படிப் பாதுகாத்துக்கிறதுங்கிறதப் பார்ப்பியா…காரைப் பத்திச் சொல்றே? அதைக் காசு கொடுத்து சரி பண்ணிக்கலாம். இல்ல…இன்ஷூரன்ஸ் வந்திடும்…அதுவா இப்பப் பெரிசு? என்றார் இவர்.  

ன்னப்பா இப்டிச் சொல்றே, எவ்வளவு உபயோகமா இருக்கு காரு? பத்து லட்சம் மதிப்பான அதைக் காப்பாத்துறதும் முக்கியம்தானே? கொஞ்சம் யோசிக்காமப் போயிட்டேன்…சுதாரிச்சிருக்கணும். நிறையப் பேரு பாலத்துல கொண்டு நிறுத்திட்டாங்க…நம்மஅபார்ட்மென்ட்லயே கீழே ஒருத்தர் அப்டி செய்திருக்கார்.  பெரிய காத்து அடிச்சிதுன்னா காரை அப்டியே புரட்டி அலாக்காக தூக்கி பாலத்துக்குக் கீழே எறிஞ்சிடும்ப்பா… நீங்க வர்றதுக்கு முன்னாடி அப்டி நடந்திருக்கு. நான் பார்த்திருக்கேன். அங்க கொண்டு நிறுத்தறதெல்லாம் சரிப்படாது….என்றான் பிரபு. இவ்வளவு நேரம் அதையே நினைத்துக் கொண்டிருந்திருப்பானோ? உறவினர்கள் வீடு ஏதேனும் வசதியா என்றும் யோசனை போனதுதான். அங்கு ஏற்கனவே அவர்களின் கார், அடுக்ககமாயிருந்தால் அங்குள்ளவர்களின் கார்…என்று இருக்குமே…எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. காரில் மதுரைக்கே கிளம்பி விடலாமா என்றும் ஒரு யோசனை வந்தது. ஒரு வாரம் கழித்து வந்தால் போயிற்று. ஆனால் இதுவரை வெளியூர் என்று காரில் நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டதில்லை. அதுவும் இந்த மழை நேரம் வேண்டாம் என்று தோன்றியது. பகலி்ல்  விடிகாலை வெளிச்சம் வந்தவுடன் கிளம்பி, மாலைக்குள் மதுரை சென்றடைந்து விட வேண்டும். இரவுப் பயணம் கூடாது. அப்படி ஒரு முறை போவோம் என்று சொல்லியிருந்தார் பையனிடம். ஆனால் அதற்கு இது சமயமில்லை.

            நல்லவேளை…ஒர்க் ஷாப்பிலயே நிக்காம சர்வீஸ் முடிஞ்சவுடனேயே எடுத்துட்டு வந்துட்டோம்…இல்லன்னா அங்க மாட்டியிருக்கும். என்ன கதியாகியிருக்குமோ?  அந்த ஒர்க் ஷாப் கிரவுன்டே ஒரு பெரிய குளம். நூத்துக்கும் மேலே வண்டி நிற்கும். அதோகதிதான். ….

இப்போதைக்கு அவன் செல்லப்பிள்ளை அந்தக் கார்தான். இந்த அளவுக்கு சாதாரணமாக ஓட்டக் கற்றுக் கொள்வான் என்று எதிர்பார்க்கவேயில்லை. கார் தயாரிப்பு நிறுவனமே ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கிற இடத்தில் சென்று சேர்ந்து அவனுக்கு டிரைவிங் நன்றாகக் கை வந்திருந்தது.

நல்லா ஓட்டுவேம்ப்பா…பயப்படாம வா…என்று அவன் ஆசைப்பட்டு அழைத்தபோது மறுத்துவிட்டார் கருணாகரன். காயத்ரிதான் நான் வரேண்டா…உங்கப்பா ஒரு பயந்தாங்கொள்ளி…என்று கூடப் போனாள். அவளை வைத்துக் கொண்டு இந்தச் சென்னையையே பல முறை சுற்றி வந்து விட்டான் அவன். ஓட்டலுக்கெல்லாம் போய் அம்மாவுக்கு விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுத்து திருப்தி பண்ணிக் கூட்டி வந்தான்.

நான் வரட்டுமாடா…என்று இவர்தான் வலியக் கேட்டார். அப்போது இவருக்கு அவன் மேல் நம்பிக்கை வந்திருந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டார். நன்றாகத்தான் ஓட்டினான். அந்த நிதானம் இவருக்குப் பிடித்திருந்தது. இரண்டாவது மாடிதான் வீடு என்பதால் இப்போது காரைக் காப்பாற்ற வேண்டியதே முதல் பணி. வீட்டிற்கு வேண்டியதைக் கூட இடுப்பளவு தண்ணீரில் நடந்து போய் வாங்கி வந்து விடலாம். அதற்கு மேல் ஏறாமல் இருக்க வேண்டும். முன்பு வந்து பிரளயப்படுத்தின  புயல் இந்த அனுபவத்தைக் கொடுத்திருந்தது.

ஓரளவுக்கு மூன்று நாளைக்குத் தாங்குமாறு குடி நீர், காய்கறி என்று இருந்தது. பால்தான் பற்றாக்குறை வரும். பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. மேல் தொட்டியில் தண்ணீர் இல்லை. மூடியைத் திறந்து வைத்தாயிற்று. மழை நீர் இறங்குமளவுக்கு இறங்கட்டும் என்று.  கீழே சம்ப்பில் முதல் நாள்தான் லாரித் தண்ணீர் வந்து நிரப்பியிருந்தது. இப்போது கார் பார்க்கிங்கில் தண்ணீர் ஏறினால் அந்தச் சாக்கடைத் தண்ணீரும் அப்படியே மூடி வழியே சம்ப்பில் இறங்கி விடும். அத்தனையும் பாழ். அந்த நீரைப் பிறகு பயன்படுத்தவே முடியாது. மோட்டார் கொண்டு வந்து இறைத்து வெளியேற்ற வேண்டும். சம்ப்பைச் சுத்தம் செய்து, புது லாரித் தண்ணீர் ஏற்ற வேண்டும். நினைக்க நினைக்க கருணாகரனுக்கு வயிற்றைக் கலக்கியது.

தெரியாத்தனமா…ஏன் முட்டாள்தனமான்னே சொல்லலாம்…சென்னைல அடுக்கக வீடு வாங்கினது பயங்கரத் தப்பு. அதுலயும் இந்த மாதிரி ஏரியாவுல வாங்கினது படு மடத்தனம் என்று நினைத்துக் கொண்டு மனதுக்குள் அழுதார். அங்க தண்ணி தேங்கும்னு சொல்வாங்க…பார்த்து வாங்கு…. என்றார்கள். தண்ணீர் தேங்குறதப் பார்த்து வாங்கு என்று சொன்னார்களோ என்று நினைத்து அத்தனை சோகத்திலும் சிரிப்பு வந்தது இவருக்கு. அப்படிப்பார்த்தால் இன்று உறவினர்கள் இருக்கும் பகுதிகளும் வெள்ளக் காடாய்த்தான் கிடக்கிறது என்று தகவல் வருகிறது. அதில் ஒரு சமாதானம் என்று சொல்லலாமா? மனிதனுக்கு தான் கஷ்டப்படுவதைவிட அடுத்தவன் சுகமாய் இருந்து விடுவானோ என்பதில் அக்கறை அதிகம். அப்படிப்பார்த்தால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கும். வாங்காதே…வேறு இடம் பார்…என்று யாருமே உறுதியாய்ச் சொல்லவில்லையே?

ரெண்டு மூணு நாள் தண்ணி சேரும் சார்….பிறகு வத்திடும்…அப்டி ஒண்ணும் பயப்பட வேண்டியதில்ல….-இது பில்டர் சொன்னது. ஐந்தடி தோண்டினால் தண்ணீர் நிற்கிறது. உப்புத் தண்ணீர். உபயோகப்படுத்த முடியாத தண்ணீர். இருந்து என்ன புண்ணியம்? அதில் பெல்ட் போட்டு, பில்லர் நிறுத்தி கட்டடம் எழுப்பியிருக்கிறார்கள். அந்தப் பகுதி முழுவதுமே ஒரே அடுக்ககங்கள்தான். எத்தனையைத்தான் இந்த ஈரப்பகுதி தாங்கப் போகிறதோ? பூமி மாதா எவ்வளவுதான் பொறுப்பாளோ? சிவனே என்று ஊரிலேயே இருந்திருக்கலாமோ என்கிற அளவுக்குக் கற்பனை போனது கருணாகரனுக்கு. வலிய வந்து சென்னையில் மாட்டிக் கொண்டோமே என்று நினைக்க ஆரம்பித்தார். சென்னை அவருக்குள் ஒட்டாமல் போனதற்கு இதுவே பிரதானமான காரணமாய்த் தோன்றியது.

                                                ( 4 )

            வெளியே மழை விடாது பெய்து கொண்டிருந்தது.  குழாய்களைத் திறந்து விட்டதுபோல் தண்ணீர் தொடர்ச்சியாக இறங்கிக் கொண்டிருந்தது. மழை பெய்தல் என்பது வேறு, பொழிதல் என்பது வேறு என்று அந்த நேரம் கருணாகரனுக்குத் தோன்றியது. இரவு பூராவும் நிற்காமல் பெய்த மழை. காலையில் சாலையை அடைத்து குப்பை கூளங்களுடன் பொதக் பொதக் என்று பக்க வீட்டுச் சுவர்களில் மோதி தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அலம்பிக் கொண்டிருந்த காட்சி மனதுக்குள் பயத்தை ஏற்படுத்தியது.

            கார் பார்க்கிங்கிற்குள்ள வந்திடுச்சா தண்ணீ….? என்றார் கருணாகரன். அவ்வளவு உயரத்திற்கு வராது என்ற எண்ணமிருந்தது அவருக்கு. எட்டுச் சறுக்குத் தடுப்புகளோடு சாலையிலிருந்து உயரமாய்த்தான் கார் பார்க்கிங் பகுதி இருந்தது. அந்தப் பகுதிகளில் உள்ள மற்ற அடுக்ககங்களில் இருக்கும் உயரத்தைக் காட்டிலும் கூடுதல்தான் என்று வெளியே நடைப் பயிற்சிக்குச் செல்லும் சமயங்களில் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து ஆறுதல்பட்டிருக்கிறார் கருணாகரன். ஆனாலும் இந்த முறை பெய்யும் மழை பயப்படுத்தியது.

            முதல் நாள் காலையில் ஆரம்பித்த மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. முன்ஜாக்கிரதையாக உடனுக்குடனே மின்சாரத்தைத் துண்டித்து விட்டார்கள். இருக்கும் இன்வெர்ட்டர் எத்தனை நாளைக்கு வரும்? அதிக பட்சம் ரெண்டு நாள். பிறகு அதுவும் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்குள் மழை நிற்குமா? மழை நின்று என்ன பயன்? தேங்கியுள்ள தண்ணீர் வடிந்தாக வேண்டுமே?

            பகல்ல லைட் போடாதீங்கப்பா….உங்க ரூம்ல ஒரு ஃபேன் மட்டும் ஓடட்டும். அதுவும் தேவைன்னாத்தான். அணைச்சு வச்சீங்கன்னா…ராத்திரி தூங்குறபோது உதவும். எங்களுக்கு ஃபேன் வேண்டாம். இப்பவே குளிர் வந்தாச்சு….தாங்க முடில….-சொல்வதைச் சொல்லி வைப்போம் என்று ஓதிவிட்டார் கருணாகரன்.

            சாதாரண சமயங்களில் ஆளில்லாத இடத்தில் ஓடி ஓடிச் சென்று ஃபேனை அணைப்பார். கரன்ட் என்ன ஓசிலயா கொடுக்கிறான்? இடத்த விட்டு எந்திரிச்சா, ஃபேனை அணைங்கப்பா…என்று பொத்தாம் பொதுவாய்த்தான் சொன்னார். ஆனால் அதுவே சண்டையாகிவிடுமோ என்று பயமாய் இருந்தது. பாத்ரூம் போனேன். வந்திட மாட்டனா? அதுக்குள்ளயும் அணைக்கணுமா? என்று காயத்ரீயே கூறுகிறாள். இப்படி தினமும் பாத்ரூம் போக, அடுப்படி போக, துணி உலர்த்தப் போக, எடுக்கப்போக என்று நகரும் போதெல்லாம் அணைக்காமல் போனால்  கரன்ட் வீணாகி மாதம் கூடி யூனிட்  அதிகரிக்காதா? ரெண்டு மாசத்திற்கொருமுறைதான் பில். ரேட்டை ஏற்றி விட என்றே ஏற்பட்ட கணக்கு. இ.பி.யில் வைத்திருக்கும் ஸ்லாப் பில் தொகையை  எங்கோ கொண்டு நிறுத்தியது. இவ்வளவு மின் கட்டணமெல்லாம் நம்மள மாதிரி சாதாரண ஆட்கள் வீட்ல வர்றது நியாயமா? பொறுப்பில்லாம செயல்பட்டா அப்டித்தான் எகிறும். தேவைக்குப் போட்டுக்க வேண்டிதான். ஆனால் விரயம் பண்ணக் கூடாது. அதை நிறுத்தினாலே பாதிக் கட்டணம் குறையும்…! சொல்லித்தான் பார்த்தார். சங்கடமாய்த்தான் நினைத்தார்கள். இன்னும் கொஞ்சம் போனால் பெரிய தொல்லையாப் போச்சே இவரால…! என்று சொன்னாலும் போச்சு…!  வயதான காலத்தில் வாயை அடக்கித்தான் வாழ்ந்தாக வேண்டும் போலிருக்கிறது.

            அப்படிப் பார்த்தால் கீழே கார் பார்க்கிங் லைட்கள் பக பகவென்று எரிந்து கொண்டிருக்கின்றன. வண்டிகளும், கார்களும் நிற்கின்றன. டூவீலரில் பெட்ரோல் திருடு போகிறது. டூ வீலர் காணாமல் போகிறது. வெளிச்சம் இருந்தாலாவது திருட வருபவனுக்கு ஒரு பயம் இருக்கும். தயக்கம் ஏற்படும். கார் பார்க்கிங் ஏரியாவிற்கு கமர்ஷியல் ரேட் போடுகிறார்கள் இ.பி.யில். நானூறு ஐநூறு என்று வந்தது இப்போது நாலாயிரம் தாண்டி வருகிறது.

            எல்லாமும் சொல்லித்தானே, தகவல் அறிஞ்சுதானே வாடகைக்கு வர்றாங்க…? அப்புறம் இப்போ மெயின்டனன்ஸ் சார்ஜ் கொடுக்க அழுதா? ஒருத்தனே கைக்காசு போட்டுட்டிருக்க முடியுமா? பத்துத் தேதிக்குள்ளாவது கொடுக்கணும்ல…மாசக் கடைசி வரை இழுத்தா என்ன அர்த்தம்? புலம்பிக்கொண்டேதான் இருந்தான் பிரபு. மூன்று மாதத்திற்கொருமுறை பராமரிப்பினை சுழற்சி முறையில் ஒவ்வொரு வீட்டுக்காரர் பார்த்தாக வேண்டும் என்பது பேச்சு.   வெறும் பேச்சுதான். அக்ரிமென்ட்லாம் கிடையாது. வெறும் எட்டு வீடு. இதற்கு  ஒப்பந்தம்  ஒரு கேடா என்று விட்டாயிற்று.  எல்லாமும் வாய் வார்த்தையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் என்னால முடியாது, உன்னால முடியாது என்று ஆளாளுக்கு மறுக்கிறார்கள். வெறு வழியின்றி பிரபுவே பொறுமையோடு இழுத்துச் செல்கிறான்.

நீயும் முடியாதுன்னு படுத்துக்கோ…இல்ல ஒரு வாரம் லீவைப் போடு…மதுரை போயிடுவோம்…யாரோ பார்த்துக்கிறாங்க…இவ்வளவு எதுக்கு? வீடை வாடகைக்கு விட்டுட்டுக் கிளம்புன்னா கேட்க மாட்டேங்கிறே…?  எல்லாக் கஷ்டங்களுக்கும் அது ஒண்ணுதான் தீர்வு…அப்பா சொல்றதக் கேளு….-மன்றாடினார் கருணாகரன்.

அது மட்டும் அவனுக்கு ஏனோ மனசாகவில்லை. வாங்கிய இந்த வீட்டில் எவ்வளவோ அழகு படுத்தியிருக்கிறான். மேலே ஃபால்ஸீலிங் போட்டு குளிர்ச்சியாக்கி இருக்கிறான். டிசைன் டிசைனாக விளக்குப் போட்டிருக்கிறான்.  அங்கங்கே பார்த்துப் பார்த்துச் சொல்லி ஷெல்ப் வைக்கச் செய்து, அதைக் கண்ணாடிக் கதவுகள் கொண்டு மூடி…அத்தனையும் நாம் அனுபவிப்பதற்காகச் செய்தது. அடுத்தவனுக்குக் கொடுத்துட்டுப் போகவா? ஒரு பத்து வருஷமாச்சும் அனுபவிக்க வேண்டாமா? அப்புறம் சொந்த வீடுங்கிறதுக்கு என்னதான் அர்த்தம்? ஆபீசுக்குப் பக்கமா இருக்கு…அதுவே பெரிய வசதி….நகரத்துக்குள்ள போய்வர எலெக்ட்ரிக் டிரெய்ன்….வசதி…பஸ் வசதி…பக்கா ஏரியா….தள்ளியிருக்கிறவங்ககிட்டல்லாம் கேட்டுப் பார்த்தாத்தான் இந்த ஏரியாவோட அருமை தெரியவரும்…என்று சொல்லி வாயை அடக்கினான்.

            கருமேகங்கள் அடர்ந்திருக்க பட்டப் பகலில் எங்கும் இருள். ஜன்னல் வழியே துளி வெளிச்சமில்லை. திறந்து வைக்கவும் வழியில்லை. பிறகு லைட்டைப் போடாதே என்றால் எப்படி? இருட்டுக்குள் எப்படிப் புழங்குவது? ஆகையால் ஓரளவுக்கு மேல் எதுவும் சொல்ல முடியாத நிலையிருந்தது.

            உங்க அப்பா என்ன ஓடி ஓடி வந்து லைட்டை அணைச்சிட்டுப் போறார்? போட்டவங்களுக்குத் தெரியாதா அதை எப்ப அணைக்கணும்னு? காரியம் முடியறவரைக்கும் அந்த ரூமுக்கும் இந்த ரூமுக்கும் எனப் போகத்தானே  வேண்டியிருக்கும்…உடனே படக்குன்னு லைட்டை அணைச்சு அணைச்சுப் போட முடியுமா? பல்ப் ஃபியூஸ் ஆயிடாது சும்மாச் சும்மா அணைச்சுப் போட்டா? குழந்தை தூங்குறான்ல? அங்கயும் வந்து அணைச்சிடப் போறாரு! கொஞ்சம் சொல்லுங்க அவர்ட்ட….-பிரீதி சொல்வதைக் கேட்டுக்கொண்டே அமைதி காத்தான் பிரபு.  பையன் தூங்கும் இடத்திலுமா வந்து அணைப்பார்? அந்த அறிவு கூட அவருக்கு  இல்லையா என்ன? வேண்டாத பேச்சு…!!

            எதிர் வீடுகளில் ஒன்றிரண்டில் வெளிச்சம் தெரிந்தது. அவர்களுக்கு மட்டும் எங்கிருந்து எரிகிறது? இன்னுமா இன்வெர்ட்டர் தீரவில்லை? அந்த வெளிச்சம் வீதியில் நிறைந்திருக்கும் தண்ணீரிலும் பளிச்சிட்டது. அப்பாடீ…! எவ்வளவு குப்பைகள்? அங்கங்கே கொத்துக் கொத்தாக…நகர இடமின்றித் தேங்கிக் கிடக்கின்றனவே! மழை நீர் வடிகாலுக்குப் போட்டிருக்கும் துளைகளில் போய் அடைத்துக் கொள்கிறது. அந்த வடிகாலுக்குத் தண்ணீர் இறங்க மறுக்கிறது. யார் போய் எடுத்து விடுவது? குப்பையை விலக்கினால் தொப தொபவென்று தேங்கியிருக்கும் தண்ணீர் இறங்க வாய்ப்பு. இந்த மழையில் எவன் போய் பொந்தில் கையை விடுவான்? அவனும் மனுஷன்தானே? ஏதேனும் விஷ ஜந்துக்கள் கடித்து வைத்தால்? ஆரோக்கியமற்றுப் போனால்? வியாதி வந்தால்?

            மக்கும் குப்பை…மக்கா குப்பை…பிரித்துப் போட்டா நலமாகும்….-என்று பாடிக் கொண்டு வரும் கார்ப்பரேஷன் குப்பை வண்டி வர குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். அந்த பேட்டரி வண்டி என்ன கதியாகியிருக்கிறதோ? நிச்சயம் ரிப்பேர் ஆகியிருக்கும்.  குப்பையைச் சேர்த்துச் சேர்த்து வச்சீங்கன்னா உங்களுக்குத்தான் வியாதி வரும்…எத்தனைவாட்டிதான் சொல்றது? – என்று அறிவுரையாக ஒலிபெருக்கியில் வரும் குரல் கேட்டு நான்கு நாளாயிற்று. அவனோடு அங்கங்கே வீடுகளில் எப்போதும் பிரச்னைதான். யாராவது மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று பிரித்துப் போட்டால்தானே? நா அப்டித்தான் போடுவேன்…நீதான் பிரிச்சிக்கணும்…என்பதுபோல் அந்தந்த வீடுகளில் நடந்து கொள்வது இவர்களெல்லாம் படித்தவர்களாதானா என்ற நினைப்பை இவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. மஞ்சள் நிறப்பெட்டி மக்கா குப்பை, நீலநிறப் பெட்டி மக்கும் குப்பை என்று வகுத்துச் சொல்லியும் பின்பற்றவில்லயெனில்? நம் மக்களை எப்படித்தான் திருத்துவது?  அவனோடு ஏற்பட்ட ஒரு நீண்ட அனுபவம் இவருக்குள் நினைவுகளாய் ஓடியது. அதற்குப் பின்னால்தான் அந்த ஆள் இவருக்கு நண்பனானான்.

            குப்பை வண்டிக்காரனெல்லாம் உங்களுக்கு ஃபிரென்டா? வெளில சொல்லிக்காதீங்க…சிரிக்கப் போறாங்க…! என்றாள் காயத்ரி. ஏன்…அவன் மனுஷனில்லையா? உழைச்சித்தானே பிழைக்கிறான்? திருடல, கொள்ளையடிக்கலையே…? நம்ம ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறான் அவன். தெருவை சுத்தமா வைக்க அவன் இல்லாட்டா முடில….நாறிப் போகுமாக்கும்! எந்த மனுஷனையும் கேவலமா நினைக்காதே…திருடக் கூடாது…பிச்சையெடுக்கக் கூடாது….இது ரெண்டும்தான் கேவலமான பிழைப்பு. மத்த எல்லாமும் மதிப்பானதுதான்….

            எவ்வளவு கஷ்டமான வேலை? தினசரி தவறாமல் வருகிறானே…! ஒரு நாள் ஆப்சென்ட் ஆனதுண்டா? அவனை நினைத்துப் பெருமைப் பட்டார் கருணாகரன். லஞ்ச லாவண்யமும், கொள்ளையும், அபகரிப்பும், அதிகரித்துக் கிடக்கும் நாட்டில் இம்மாதிரி இன்னும் கஷ்டப்பட்டு உழைக்கவும், சராசரியான, அதற்கும் கீழான வகையில் வாழ்க்கையை வறுமையோடு ஓட்டவும், நேர்மையான ஜீவனம் பண்ணவும் இன்னும்  பெருவாரியான மக்கள் இருக்கிறார்களே? அவர்களால்தானே நியாயமும், தர்மமும் காப்பாற்றப்படுகிறது? சொல்லப்போனால் மழையே அவர்களுக்காகத்தான் பெய்கிறதோ? – நாலு நாளாய் கண்ணில் படாத அந்தக் குப்பை அள்ளும் பணியாளர்களை நினைத்து பாவம், அவர்கள் பாடுகளெல்லாம் எவ்வாறு ஆனதோ இந்தப் பேய் மழையில் என்று மனசுக்குள் வருத்தம் கொள்ளலானார் கருணாகரன்.

                                                            ( 5 )

மாடில செங்கல் இருக்குப்பா…அடுக்கி வச்சிருக்கேன். கிரகப்பிரவேசத்தின் போது காசு கொடுத்து வாங்கினமே…கணபதி பூஜைக்கு…அதைப் பாதுகாத்து வச்சிருக்கேன்…அதை எடுத்துக்கலாம்…-என்றார் கருணாகரன்.

பிரபு தயங்குவது போலிருந்தது.  என்ன பேசாம இருக்கே…? என்றார்.

ஒண்ணுமில்லே…அது தாங்குமான்னு யோசிக்கிறேன். பழைய செங்கலாச்சே…இத்தனை வருஷம் மழைலயும். காத்துலயும்….கிடந்திருக்குமேன்னு….

ஒண்ணும் ஆகாதுப்பா…மாடி லிப்ட் ரூமுக்குப் போகுற படி அடில தண்ணி படாத இடத்துலதான் அடுக்கி வச்சிருக்கேன். மழைல நனைஞ்சதேயில்லை…பூஜாஸ்டோன்ஸ்…எஸ்2…டோன்ட் டச்…ன்னு எழுதி வச்சிருக்கனே …கவனிச்சதில்லையா?பிரபு லேசாய்ச் சிரிப்பது கேட்டது.

அந்தச் செங்கல்களைப் பாதுகாப்பதே பெரும்பாடாய்ப் போய்விட்டது இவருக்கு. என்னதான் எழுதி வைத்திருந்தாலும் யார் பொருட்படுத்துகிறார்கள்? அவரவர் உபயோகத்திற்கு என ஒன்று இரண்டு என்று எடுத்துக் கொள்ள வேண்டியது…பிறகு அங்கங்கே விட்டு விட வேண்டியது. அல்லது உடைத்துப் போட வேண்டியது. எடுத்த இடத்தில் திரும்பக் கொண்டு வைக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி எவருக்குமில்லை. எடுப்பதற்கு முன் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்கிற  முறைமையும் இல்லை. தினசரி மாடிக்கு வந்து வந்து அதைப் பார்த்துப் போவார் கருணாகரன்.  சரியாய் இருக்கிறதா என்று எண்ணிப் பார்ப்பார்.

அத யாரு எடுக்கப் போறாங்க…என்னவோ சொத்தப் பாதுகாத்து வச்சிருக்கிற மாதிரி….? என்று கோபப்படுவாள் காயத்ரி.

காசு கொடுத்து வாங்கினதுட…ஓசில கிடைச்சதில்ல..அதைப் பாதுகாக்குறதுல என்ன தப்பு? உனக்குத் தெரியாது நம்ம ஜனங்களோட மனப்பான்மை… ஃப்ரீயாக் கிடைக்குதுன்னா, கேட்பாரில்லாமக் கிடக்குதுன்னா…யார் வேணாலும், எப்படி வேணாலும் எடுத்து தன்னிச்சையா உபயோகிச்சுப்பாங்க…எடுக்கிறபோது இருக்கிற அக்கறை, திரும்பக் கொண்டு வந்து வைக்கிறதுல நிச்சயம் இருக்காது….என்றார் இவர் பதிலுக்கு.

நம்ம வீட்லயே எல்லாமும் அப்படித்தானே கிடக்கு…எந்தப் பொருள் வச்ச இடத்துல வச்சமேனிக்கே இருக்கு? எடுக்கிறது ஒரு இடம், திரும்பக் கொண்டு வைக்கிறது இன்னொரு இடம். நீ வச்ச இடத்துல நீ தேடுவே…அது இருக்காது. வேறே எங்கேயாவது கூட்டத்தோடு கூட்டமாக் கெடக்கும்…தேடி எடுக்கப் பொறுமை இருக்காது. கேட்டாலும் எடுத்துக் கொடுக்க மாட்டாங்க…! கோபப்படுவாங்க…முனகுவாங்க…எரிச்சல்படுவாங்க… சின்னச் சின்ன விஷயங்கள்தான்னாலும்…இங்க படியுற பழக்கங்கள்தானே வேலை பார்க்கிற ஆபீஸ்லயும் வரும். அங்கெல்லாம் இவங்களை எப்படிப் பொறுத்துக்கிறாங்களோ…? வீட்டுல பொறுப்பா ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பழகியிருந்தாத்தானே வெளிலயும் அது வரும்? இல்லன்னா கெட்ட பெயர்தான்…..

எல்லாமும் வச்சது வச்ச இடத்துல இருக்கணும்னா அது வீடுல்லை…மியூசியம்….-காயத்ரி அவர்கள் சார்பாக இந்தப் பதிலைச் சொல்கிறாளோ என்று தோன்றியது இவருக்கு. மூத்த தலைமுறையான அவளது பேச்சு அவளுக்கே பொருத்தமாய் இல்லை என்பது அவளுக்குத் தெரிய வேண்டாமா? பையனையும். மருமகளையும் தன்னைக்கட்டிப் பேசி அரவணைக்கிறாளாம். நல்லது கொஞ்சம் உஷ்ணமாய்த்தான் வரும். கடைப்பிடித்தால் அவர்களுக்குத்தான் நல்லது. தான் சொன்னால் பிடிக்காத பல விஷயங்களை அவர்களாகவே கடைப்பிடிக்கட்டுமே? சொல்லிக் கொடுத்து வளர்ப்பது என்பது எது? இம்மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்கள்தானே? இவளே புரிந்து கொள்ளவில்லையென்றால் பிறகு அவர்களைச் சொல்லி என்ன பயன்?

இதையெல்லாம் எத்தனையோ பேர் சொல்லிக் கேட்டாச்சு. பொருளை எடுக்க வேணாம்னு யாரும் சொல்லலியே…? எடுத்த எடத்துல திரும்ப வைக்கணும்னுதானே சொல்றோம்…அதுதான் பொறுப்பு. செய்து பழகினாத்தான் எல்லாமும் வரும்.  விட்டேத்தியா இருந்தா அந்த அவலட்சணம் நம்மளோட அடையாளமாப் போயிடும். அதை ஞாபகம் வச்சிக்கோ…

வீடு அந்தலை சந்தலையாய்க் கிடப்பதைப் பார்த்துப் பார்த்து மனசு பொறுக்க மாட்டாமல் பொறுமிக் கொண்டிருந்தார் கருணாகரன். அவரால் எதையும் சொல்ல முடிவதில்லை. சொன்னால் நை…நை…ன்னு அரிச்சு எடுப்பதாய் நினைத்து சங்கடப்படுகிறார்கள். பெத்த பையனிடமே சொல்ல முடிவதில்லையே…பெண்டாட்டி ரொம்பக் கேட்கிறாளா? அவளும்தான் சங்கடப்படுகிறாள். அப்படியிருக்கையில் அந்த மருமகப்பெண்ணைச் சொல்லி என்ன பயன்? ஆயிரம்தான் சொன்னாலும் அந்த மூத்த தலைமுறையின் பொறுப்புணர்ச்சியும், கடமையுணர்ச்சியும், சகிப்புத்தன்மையும் நடப்பு இளைய தலைமுறைக்கு நிச்சயம் வராது.  அதைச் சொல்லிச் சொல்லித் திருத்தக்கூட முடிவதில்லையே என்பதுதான் விநோதம்.

தெல்லாம் சரிதாம்ப்பா…செங்கல் மேலே ஏத்தி நிறுத்தி ஜாக்கி போட்டா தாங்குமான்னு யோசிக்கிறேன்…முன் வரிசைக்கு ஆறும் ஆறும் பன்னெண்டு செங்கல் வேணும்..ரெண்டு ரெண்டா ஒரு டயருக்கு மூணு வரிசைல ஆறு செங்கல் மேனிக்கு…பின் வரிசைக்கு ரெண்டு வரிசை போதும்…அதுக்கு ஒரு எட்டு செங்கல்…ஆக இருபது செங்கல் வேணும். இருக்குமா?

தாராளமா இருக்கு. எடுத்தது போக மீதி கிடக்கும்…யோசிக்காதே…தண்ணீர் விறு விறுன்னு ஏறிடும்…-பையனைத் துரிதப்படுத்தினார் கருணாகரன்.

இதற்குள் முதல் தளத்தில் இருக்கும் வினோத் என்கிற பையன் இடுப்பளவில் இருக்கும் தண்ணீரில் இறங்கி, அருகில்  கட்டட வேலை நடக்கும் இடத்திலிருந்து செங்கல்களை வாங்கி வருவது தெரிந்தது.  

அது அத்தனையும் புதுசுப்பா…நம்மளது அரதப் பழசு…தாங்கும்னு எனக்குத் தோணல…..-என்று சலித்தான் பிரபு.

நம்மதுதான் நல்லா காய்ஞ்சது. அவர் வாங்கிட்டு வர்றது அத்தனையும் புதுச் செங்கல்…வெளில அடுக்கினது. ஈரமா இருக்கும். பயப்படாம வை….அதுக்காக இந்தத் தண்ணில நடந்து போய் எங்க செங்கல் வாங்கிட்டு வருவ…? ஊரெல்லாம் எது எதுக்கோ அல்லாடும்போது, செங்கல் எங்க கிடைக்கும்னு அலைவியா? எல்லாக் கடைகளும் அடைச்சிக் கிடக்காம். அந்தச் சேதி தெரியுமா? நம்ம செங்கல்  என்னா வெயிட் இருக்கும் தெரியுமா? ஆபத்துக்குப் பாவமில்லே….மேலே சேமிச்சு வச்சிருக்கிற செங்கல்கள் இந்த சமயத்துலயாவது பயன்படட்டும். அடுத்தாப்ல வர்ற வீட்டு விசேடத்துக்குப் புதுசு வாங்கிக்கலாம்…சொன்னாக் கேளு…. – அழுத்தமாய்ச் சொன்னார் கருணாகரன். இவர்களை ஒவ்வொன்றுக்கும் பேசிப் பேசி திருப்தி பண்ணுவதே பெரும்பாடாயிருப்பதாய்த் தோன்றியது.

தண்ணீர் சறுக்கு அடுக்ககளையெல்லாம் தாண்டி உள்ளே புக ஆரம்பித்திருந்தது இப்போது. இன்னும் அஞ்சு பத்து நிமிடங்களில் காருக்கடியில் வந்து விடும் என்று நிச்சயமாய்த் தோன்றியது.

கொஞ்சம் பொறுப்பா…அவசரப்படுத்தாதே….கைடுலைன்சை எடுத்து ஒரு பார்வை பார்த்துக்கிறேன்…இதுவரை ஜாக்கி போட்டதேயில்லை. இதுதான் முதல் தடவை….

இவனென்ன இப்படிச் சொல்கிறான் என்றிருந்தது இவருக்கு. இதற்குள் அருகிலுள்ள தன் காருக்கு அந்த வினோத் தன் வேலையைத் துவக்கியிருந்தான்.

அப்பா…முதல் வேலையா பேட்டரியை டிஸ்கனெக்ட் பண்ணியாகணும்…இல்லன்னா பெரிய டேஞ்சர்…-சொல்லியவாறே அந்த வினோத்தை நோக்கிப் போனான்.

ஜி….உங்களமாதிரியே என் வண்டிக்கும் கொஞ்சம் பேட்டரியைக் கழற்றி விட்ருங்களேன்…இதுவரைக்கும் அத நான் செய்ததில்ல….

ஒண்ணுமில்ல ப்ரோ….சின்ன வேலைதான்….என்றவாறே வந்து இவன் கார் பேனட்டைத் திறந்து பேட்டரியை டிஸ்கனெக்ட் செய்தான் வினோத். சொன்னவுடன் சங்கடப்படாமல் உடனே வந்து செய்தது இவருக்குப் பிடித்திருந்தது. அவரவர் பொருளைப் பாதுகாப்பதில் அக்கறையாய் இருக்கிறான்…இதிலென்ன தவறு?

அப்டியே ஜாக்கியையும் போட்டு வண்டியை ஏத்தித் தரச் சொல்லேன் என்று பையனிடம் முனகினார் இவர்.

நல்ல கதையா இருக்கே…அதென்ன சாதாரண வேலையா…என்னப்பா நீபாட்டுக்கு இப்படிச் சொல்றே….அவர் வண்டிக்கு சுத்தி சுத்தியே கை ஓய்ஞ்சு போகும் தெரியுமா? அத நாமளே செய்துக்குவோம்….நீ ஒண்ணும் பயப்படாதே…நான் ஏற்கனவே ஒருவாட்டி மொத்த கைட்லைன்சையும் படிச்சிருக்கேன். இப்போ…ஜஸ்ட் ஒரு பார்வை அவ்வளவுதான்….என்றவாறே புத்தகத்தை ஒரு புரட்டுப் புரட்டிவிட்டுத் தயாரானான்.

இதற்குள் மாடியிலிருந்து கற்களை ஒரு சாக்கில் வைத்து தூக்கமாட்டாமல் தூக்கி வந்தார் கருணாகரன்.  பாரத்தைத் தூக்கியவுடன் நெஞ்சில் பிடித்துக் கொண்டது.  மனசிலிருக்கும் டென்ஷன் வேறு. ஏற்கனவே வாய்வுத் தொந்தரவு அவருக்குக் கணிசமாய் உண்டு. அதை இந்தச் சமயத்தில் சொல்ல முடியுமா? ஆக வேண்டிய காரியத்தை மட்டும் பார்ப்போம்…பையனை ஒத்தையில் விட முடியுமா? இக்கட்டான காலகட்டத்திலாவது கூட இருக்க வேண்டாமா? ஃபிசிகலாய் ஆள் நிற்பதே பெரிய துணையாயிற்றே?

வண்டியை ஜாக்கி போட்டுத் தூக்கி நிறுத்தியபோது தண்ணீரின் அளவு பாதிச் சக்கரத்திற்கு வந்திருந்தது. எந்த வேலையைச் செய்தாலும் அதுக்குன்னு உள்ள பொஸிஷன்ல உட்கார்ந்து செய்யணும். அப்பத்தான் வேலை திருத்தமா நடக்கும்….தான் அடிக்கடி சொல்வதை அப்படியே கடைப்பிடித்து அந்த வேலையை சுருக்க முடித்துவிட்டான் பிரபு. கொஞ்சமாவது தன் குணம் அவனிடம் படிந்திருக்கிறதே என்று மனதுக்குள் பெருமைப் பட்டுக்கொண்டார் கருணாகரன். உட்கார்ந்து செய்ததில் இடுப்புவரை ஈரம் சொட்டச் சொட்ட நின்றான். இளவயசு…தாங்குது…என்று நினைத்துக் கொண்டார் இவர்.

நல்லவேளைப்பா…முன் பக்கம் மூணு வரிசை வச்சு ஏத்திட்டோம். இன்ஜின் வரைக்கும் தண்ணி ஏறாதுன்னு நினைக்கிறேன். அப்டியே ஏறினாலும் என்ன செய்யப் போறோம்? கொண்டுபோய் கம்பெனி ஒர்க் ஷாப்புல விட வேண்டிதான். இன்ஷ்யூரன்ஸ் நாம எதிர்பார்க்கிறது கிடைக்கும்னு தோணலை…! கிடைச்ச வரைக்கும் லாபம்…!

ஓ.கே….காரை இப்போதைக்கு சேஃப்டி பண்ணியாச்சு….அடுத்தாப்ல ப்ரிதியையும், குழந்தையையும் கொண்டு அவுங்க வீட்டுல விடுற வழியைப் பாரு….அதுதான் பாதுகாப்பு…!

ஏம்ப்பா இப்டிச் சொல்ற…? புரியாமல் கேட்டான் பிரபு.

வீட்ல தண்ணி இல்ல…கரன்ட் இல்ல…எதாச்சும் வாங்கணும்னா நீதான் ஒவ்வொண்ணுக்கும் வெளில ஓடணும்…என்னைக்கு தண்ணி இறங்கும். கரன்ட் வரும்னு தெரியாது…மழை நிக்காமப் பெய்திட்டிருக்கு….ரோட்டுல தண்ணி ஏறிட்டேயிருக்கு…இப்போ கொஞ்சம் வானம் வெறிச்சிருக்கும்போதே கொண்டு அவுங்க வீட்ல விட்டுட்டேன்னாத்தான் நமக்கு சேஃப்டி…அங்க அவுங்க வீட்டுக்கு முன்னாடி தண்ணி தேங்கலையே…இங்க எல்லாமும் செட்ரைட் ஆகுறவரைக்கும் அங்கே இருக்கலாமே….நான் பேசறேன்…சம்பந்திட்ட…ப்ரீதி அப்பா அப்போவே டயல் பண்ணினமாதிரியிருந்தது. நமக்குத்தான் சரியா லைன் கிடைக்கலை…ஏதாச்சும் சொல்றதுக்குத்தான் பேசியிருப்பார்…அது இதாத்தான் இருக்கும்…நான் சொல்றதச் செய்…குழந்தையைத் தலைக்கு மேலே கழுத்துல தூக்கி உட்கார்த்திக்கோ…முன் பக்கமா அவன் தொடைல கை வச்சு ஆடாமப் பிடிச்சிக்கோ…அவளையும் கூட்டிக்கோ…நடையைக் கட்டு…இருக்கிற சுமைகளை நான் தூக்கிட்டுப் பின்னாடியே வர்றேன்….

ஓகே..ப்பா….ஓ.கே…ஆனா நீ வரவேண்டாம்…நாங்களே போய்க்கிறோம்…

எப்டிப் போவே….மூணு நாலு பையை ப்ரீதியே தூக்க முடியுமா? நான் ரெண்டு தூக்கிட்டு வந்து ரோட்டுல தர்றேன். அங்கே ஆட்டோ பிடிச்சுப் போகட்டும்….இல்லன்னா வீடு வரை கொண்டு விட்டுட்டு வா….

அவ தம்பி பாலு வர்றேன்னிருக்கான். அநேகமா மெயின் ரோடு ஆரம்பத்துல நிப்பான். அவன் தன் வண்டில கூட்டிண்டு போயிடுவான்…

ஏற்கனவே பேசியாச்சா…பலே…பிளான் பண்ணித்தான் எல்லாம் செய்றீங்க போல்ருக்கு…ஓகே…பிரச்னை இல்லாம வண்டி ஓடினாச் சரி…எனக்குத் தேவை அதுதான். வீட்ல அநாவசிய சண்டை சச்சரவு கூடாது. அவ்வளவுதான்…..-பேசி முடித்தபிறகுதான் கூடக் கொஞ்சம் பேசிவிட்டது உரைத்தது கருணாகரனுக்கு. அவர்கள் ரெண்டு பேரும் அடிக்கடி போடும் சண்டை அவரை அப்படி நினைக்க வைத்திருந்தது. உப்புச் சப்பில்லா விஷயத்திற்கெல்லாம் வாய்ச் சண்டை. உர் புர் என்று  முனகல். முறைப்பு…வீட்டில் இரண்டு பெரியவர்கள் இருக்கிறார்களே என்கிற மதிப்பு  மரியாதையே கிடையாது. வீடுன்னா அப்டித்தான் இருக்கும். எல்லாம் கலந்துதான் இருக்கும்…என்று விட முடியவில்லை. வயசான காலத்தில் மனுஷனுக்கு ஒரு நிம்மதி வேண்டாமா?

தனிக்குடித்தனம் வைத்து விட்ட நாம் கம்பி நீட்டி விடுவோம் என்றால் பையனோடுதான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாளே? அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்…நம் மீதி வாழ்க்கையை நாம் தனியே இருந்த வாழ்ந்து கழிப்போம்…என்றால் கேட்டால்தானே? வீட்டு வேலைகள், பொறுப்புகள், கடமைகள்…நியமங்கள் என்று எப்பொழுது அவர்கள் பழகுவது? சின்ன வயசுதானே? உழைத்தால் உடல் உரம் பெறத்தானே செய்யும். தேய்ந்தா போகும்? தேய்தல் என்பதெல்லாம் ஐம்பது வயசுக்குப் பிறகுதானே? இது ஏன் தெரியமாட்டேனென்கிறது? அமைதி, தனிமை என்று கடைசி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும் என்கிற தன் தணியாத ஆசை நிறைவேறவே செய்யாது போலிருக்கிறது. மனதிற்குள் அன்றாடம் புழுங்கிக் கொண்டுதான் இருக்கிறார் கருணாகரன்.

அப்பாவின் யோசனை பிரபு மனதிலும் ஓடிக் கொண்டிருந்ததுதான். குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம். ஆகவே அவளோடு அதை அனுப்பி வைப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு அவனும் வந்திருந்தான். இருமல், ஜலதோஷம், காய்ச்சல் என்றால் அங்கு ஆஸ்பத்திரி பக்கம். இங்கு மாட்டிக் கொண்டால்? திரு திருவென்று முழித்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்.  காரை எப்படிப் பாதுகாப்பது என்கிற சிந்தனையிலேயே நேரம் போய்விட்டது. இனி கொண்டு விடுவதில் தாமதிப்பது சரிவராது என்று கிளம்பினான்.

இடுப்பளவு தண்ணீரில் அவன் குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கி ஷோல்டரில் அமர்த்தி நடையைக் கட்ட, ப்ரீதி பின்தொடர, இவரும் ரெண்டு தோல்பை பாரங்களைத் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு தண்ணீருக்குள் மெல்ல மெல்ல ஆழம் பார்த்து நடக்கலானார்.

தான் பண்ணிய அடி முட்டாள்தனமான செயலால் தன்னைச் சார்ந்தவர்கள் எல்லோரும் மிகுந்த கஷ்டத்துக்குள்ளாவதாய்த் தோன்றி  மனசாட்சி அவரைக் குத்திக் கிழித்தது.

நடந்து செல்லும் இடமெல்லாம் அடை அடையாகக் குப்பைகள் மிதந்து கொண்டிருந்தன. வலது. இடது என்று தெருக்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனார் கருணாகரன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நீர்ப்படலாமாய்த்தான் தெரிந்தன. மக்கள் எல்லோரும் அச்சத்தோடு வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். மொட்டை மாடியிலிருந்து செய்வதறியாது கீழே நிரம்பித் தளும்பி நிற்கும் தண்ணீரையும், அதில் வேறுவழியின்றி மூட்டை முடிச்சுகளோடு இஞ்ச் பை இஞ்சாக நடந்து கடக்கும் மனிதர்களையும்  பார்த்தவாறிருந்தனர்.  ஒரு பெரிய இரும்பு போட் வந்தது.

அதில் தடி தடியாய் ஏழெட்டு ஜவான்கள். ஆட்கள் பார்ப்பதற்கு மிகுந்த பலசாலிகளாய்த் தோற்றமளித்தனர். சீருடை அணிந்திருந்தனர். சரி…தண்ணீரில் தவிக்கும் மக்களைக் காப்பாற்றத்தான் வருகிறார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டனர் பலர்.   அதோ போட் வந்திருச்சு…போட் வந்திருச்சு…என்று வீட்டு வாசலில் நின்று பலரும் குரலெடுத்துக் கத்தினர். அந்த போட் அவர்கள் குரல்களைக் காதில் வாங்காமல் கடந்து சென்று கொண்டிருந்தது. வீடுகளைக் கடந்து கடந்து வேகமாய்ச் சென்று கொண்டிருக்கும் அந்தப் படகில் இருந்த ஜவான்கள் இவர்கள் யாரையும் கவனித்ததாகவே தெரியவில்லை.    அப்போது தண்ணீரில் நின்ற ஒரு கார்ப்பரேஷன் பணியாள் சொன்னான்.

இந்தத் தெருக் கடைசில ஒரு மிலிட்டரி ஆபீஸர் இருக்காரு. அவரையும் அவுங்க வீட்டுக்காரவுகளையும் கூட்டிட்டுப் போகுறதுக்கு வர்றாங்க இவுங்க…..

நல்லாக் கூட்டிட்டுப் போகட்டும்ங்க…யாரு வேண்டாம்னாக…கூடவே இந்தத் தண்ணி நடுவுல நின்னு பரிதவிச்சிக்கிட்டு முன்னாடி போறதா, பின்னாடி திரும்பிடுறதான்னு தெரியாம நிக்கிறாங்களே இவுங்களையும் கொஞ்சம் கரை சேர்த்திட்டுப் போகலாமுல்ல….அந்த ஒதவி செய்யக் கூடாதா….நாங்கள்லாம் மனுஷாளுக இல்லையா….கண்ணு முன்னாடி இப்படிப் பார்த்தமேனிக்குக் கடந்து போறாகளே….இது நியாயமா…? – அந்தத் தெப்பக்குளக் கூட்டத்தினர் நடுவே நின்று கொண்டிருந்த ஒருவன் ஓங்கிக் குரலெடுத்து நீட்சியாக இப்படிக் கூறினான்.      

அந்தப் பேச்சும் காதில் விழாமல் இன்னொரு பெரிய இரும்புப் படகும் நிறைய பார்சல்களைச் சுமந்து கொண்டு அந்த எளிய மனிதர்களையும் அவர்களின் புலம்பல்களையும் கண்டு கொள்ளாமல்  வேகமாய் கடந்து  போய்க் கொண்டிருந்தது.  

 அய்யா….எங்களுக்கும் சோத்துப் பொட்டணம் கொடுத்திட்டுப் போங்க…..நல்லாயிருப்பீக….ஆளுக்கொரு தண்ணி பாட்டிலாச்சும் கொடுங்க….என்றான் விடாமல்.

உங்களுக்கு வேறே படகு தனியே வருது….இது அங்கே…. இருக்கிறவுங்களுக்கு….. – புரிந்தும் புரியாத கொச்சைத் தமிழில் ஒரு ஜவான் இப்படிச் சொல்லிக் கொண்டே கையசைத்து, சைகை செய்து நகர்ந்து போனதை எதுவும் புரியாமல் அப்பாவியாய்க் கலங்கிய நீருக்கு  நடுவே  நின்று கொண்டிருந்த அந்த மக்கள் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்றனர். மழை இப்போது மீண்டும் வலுக்க ஆரம்பித்திருந்தது.

                                    --------------------------------------

 

                       

 

 

           

 

 

          ”சிவாஜி ஒரு சகாப்தம்”     (17.07.2024 நடிகர்திலகம் நினைவு நாள்)       ----------------------------------------       நீ ங்கள் ...