உஷாதீபன்
13 மார்ச் 2026
04 மார்ச் 2026
சிறுகதை “பொறு…பொறு…!”பிரசுரம்-தாய்வீடு-மார்ச்“26
நீயும் உங்கம்மாவும் சரின்னு சம்மதம்
சொல்லித்தானே கல்யாணம் பண்ணி வச்சது? – எடுத்த எடுப்பிலேயே கேள்வியை ஆழமாகப் போட்டார்
கமலேசன். அதாவது நீங்க ரெண்டு பேரும் ஒப்புக்கலேன்னா
இது எங்க நடந்திருக்கப் போகுது என்ற கேள்வி அதில் தொக்கியிருந்தது.
சரிப்பா…அதுக்காக…? – சட்டென்று கோபப்பட்டதுபோல்
கேள்வியை வீசினான் சசிதரன்.
அதுக்காக வாழ்க்கை பூராவும் கஷ்டப்படணும்னு
சொல்றியா? என்று கேட்கிறானோ? அதையும் அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தார். சேர்த்து
வைப்பதற்குத்தான் பெரியவர்கள். பிரிந்து செல்வதற்கு அல்ல.
எப்பப் பார்த்தாலும் சண்டையைப் போட்டுக்கிட்டிருந்தா
அப்டித்தானேப்பா தோணும்? -சொல்லிவிட்டு இவர் முகத்தைப் பார்த்தான் சசி.
எந்த வீட்ல சண்டை இல்ல…சொல்லு பார்ப்போம்….?
என்றார் இவர்.
எப்போது உள்ளே நுழைய வேண்டும் என்று தனக்குத்
தெரியும் என்பதுபோல் வாளாவிருந்தாள் கமலினி.
டீ கேட்டேல்ல…வந்து எடுத்துக்கோ சசி….-
என்று குரல் கொடுத்தாள். மேற்கொண்டு காலங்கார்த்தாலயே பேச்சை வளர்த்த வேண்டாம் என்று
நினைத்தாளோ என்னவோ? அட்டென்ஷன் டைவர்ட் பண்ணுகிறாள்.
ஆம்மா…இந்த டீ ஒண்ணுதான் குறைச்சல்…இதக்
குடிக்கலேன்னா உசிர் போயிடும் பாரு….
கமலினி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அப்புறம் எதுக்குக் கேட்டே? வேலை மெனக்கெட்டுப் போட்டு நீட்டுறேன்…இப்டிச் சொல்றியே?
என்னவோ கேட்டேன். அதக் குடிச்சாவது மனச
ஆத்துவோமேன்னு…!
ஆத்தித் தரவா? ரொம்பச் சூடா இருக்கு போல்ருக்கே…-என்றவாறே
எழுந்தார் கமலேசன்.
அவனுக்கென்ன ஆத்திக்கத் தெரியாதா? சின்னப்
பிள்ளையா? போய் உட்காருங்க தேமேன்னு…. – எரிந்து விழுந்தாள் கமலினி.
தனக்கு இது வேண்டாத வேலை என்று அப்போதுதான்
உறைத்தது இவருக்கு. சூடா டீ குடிச்சா மனசு ஆறும்னு அவன் கேட்க, அதை ஆத்தித்தரேன்னு
இவர் சொன்னா? பொருத்தமாயிருக்கா?
அதுக்கில்லப்பா…பொழுது விடிஞ்சு பொழுது
போனா சண்டையாவே இருந்தா? எரிச்சலா இருக்குல்ல…? எதையெடுத்தாலும் குதர்க்கமாவே பேசறாப்பா?
தேவையில்லாமக் கோபப்படுறா?
விடுறா…விடுறா…எல்லாம் போகப் போக சரியாப்
போகும்…பொறுமையா இரு…..!
என்னத்தப் பொறுமையா இருக்கிறது? அதுக்குள்ளே
எனக்கு உறார்ட் அட்டேக்கே வந்துடும் போல்ருக்கு…
என்னடா சொல்ற நீ? ஆபீஸ் டென்ஷன்னால சொல்றியா?
அல்லது இதுக்காகச் சொல்றியா? – புரியாமல் கேட்டார். அவன் கேள்வி இவருக்கு வேடிக்கையாக
இருந்தது. சற்றுப் பயமாகவும் இருந்தது.
புரியாத மாதிரியே கேளுங்கப்பா…ஆபீஸ் வேலை
எவ்வளவானாலும் சமாளிச்சிடுவேன்…இவ கரச்சல்தான் தாங்க முடில என்னால…..! ஏண்டா கல்யாணம்
பண்ணினோம்னு…!
மருமகள் பிரதீபா ஆபீஸ் போனது நல்லது என்றே
தோன்றியது. வாரத்தில் மூன்று நாள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்தான். ஆனால் அது
ஆபீஸ் போகிறது. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. ஆளவிடுங்க என்று அவனும் போய்விடுகிறான்.
இரண்டு கிழங்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே…அது அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.
அத்தோடு கமலினி செய்து வைக்கும் டிபனும் ஆகவில்லை.
எப்பப் பாரு…இட்லி…தோசை…இல்லன்னா பொங்கல்…இதத்தவிர
வேற எதுவுமே உங்கம்மாவுக்கு மனசுல தோணாதா…? – ஒரு நாள் அந்தப் பெண் இப்படிக் கேட்டு
வைக்க பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டான் சசிதரன்.
ஏன்…அம்மாவுக்கு தொண்டைக்குள்ள இறங்காதோ?
சுத்தமா, ஆரோக்கியமா வீட்டுல செய்து நீட்டுற உணவு கசக்குதாக்கும்? அம்புட்டு அக்கறை
இருந்தா நீயே சீக்கிரமா எழுந்திரிச்சு செய்துக்கிறது? உன் ஒருத்திக்கு மட்டுமாவது செய்து
எடுத்துக்கிட்டுப் போக வேண்டிதானே? யாரு தடுத்தா? எங்க அடுப்படிக்குள்ள நுழைஞ்சா ஒட்டிக்குமோன்னு
பயம். வீட்டுக்கா உன்னைச் சமைக்கச் சொன்னாங்க? அதுக்கும்
துப்பில்ல….ஒன்பது மணி வரைக்கும் குறட்டை விட்டுத் தூங்கவேண்டிது….ஒருக்களிச்சுப் படுத்து
அந்தக் குறட்டையை ஒதுக்கணும்ங்கிற சின்ன அறிவு கூட இல்ல. பப்பரப்பா…ன்னு கால விரிச்சுக்
கிடக்க…இப்டித்தான் ஒரு வீட்டுப்பொம்பள தூங்குவாளா? உங்க வீட்டுல இதுக்குக் கூட உனக்குச்
சொல்லித் தரலியா? திரேகம் தெரியாமயா ஒருத்தி கிடப்பா? வெட்கமாயில்ல? ஒரு துரும்ப நகர்த்துறதில்ல
நீ…இதுல பேச்சு வேறே….? கம்முனு கொடுக்கிறதப் பொத்திட்டு எடுத்திட்டுப் போகணும்…-பொழிந்து
தள்ளி விட்டான்.
வாயடைத்துப் போனது அதுக்கு. கொஞ்ச நேரம் கழித்து அறைப் பக்கம் பார்த்த போது
அழுது கொண்டிருந்தது.
பாவம்டா…விடுறா….சத்தம் போடாதே…எல்லாம்
காலப் போக்குல சரியாப் போகும்….விட்டுத் தள்ளு…பெரிசு பண்ணாதே….
எப்போ சரியாகும்?…இல்லே எப்போங்கறேன்?
நீங்க மண்டையைப் போட்டப்புறமா? இல்ல நான் கிழவனானப் பிறகா? இவ திருந்த மாட்டாப்பா….!
மனசில் அதையே போட்டு உழட்டிக் கொண்டிருப்பானோ
என்னவோ? சதா டென்ஷனிலேயே நெளிகிறான். ராத்திரி படுக்கையிலாவது சந்தோஷமாக இருக்கிறார்களா?
என்று யோசித்தார் கமலேசன். எந்தப் பிணக்கும் படுக்கையில் மறைந்து போகுமே…!
இந்தப் பயலுக்கு அந்த ஆசையும் அதிகமாய்
இருப்பதாய்த் தோன்றவில்லை. பெண் எப்படித் தானே வலிய வரும்? ஆம்பளை சீண்டினால்தானே?
அது சிணுங்கும்…நெளியும், சுணங்கும்…முறுக்கிக்கும்…அப்புறம்
படியும். அதில்தானே இன்பமே? அப்படியாவது சரி பண்ண மாட்டானா இந்த இளைஞன்? வயசுக்கான
ஆசை இவனிடம் இருக்கிறதா இல்லையா? அதில் மடங்குமே எந்தப் பெண்மையும்? பல கேள்விகள் பிறந்தது கமலேசனுக்கு.
தானும் கமலினியும் போடாத சண்டையா? உறவுக்காரர்கள்
எல்லோரும் சொல்வார்கள்…எப்பப் பார்த்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருப்பாங்க…இதுதான்
அவர்கள்பற்றிய அபிப்பிராயம். ஒரு கல்யாணம்
காட்சி என்று கூட அவர்கள் இருவரும் சேர்ந்து சென்றதில்லை. எல்லாவற்றிற்கும் அவர் ஒருவர்
மட்டுமே சென்று ஆஜராவார்.
ஏம்ப்பா…உன் பெண்டாட்டிய நாங்களெல்லாம்
கண்கொண்டு பார்க்கக் கூடாதா? ஒரு விசேடத்திற்காவது கூட்டிட்டு வந்து அவ முகத்தை எங்களுக்குக்
காட்ட மாட்டியா? என்று கேட்டிருக்கிறார்கள். அதிரூப சுந்தரியோ அவள்? என்ற மறைமுகக்
கேள்வி அதில் தொக்கி நிற்பதாக உணர்வார் இவர்.
நான் வந்திருக்கேன்ல…அவளும் வந்த மாதிரிதான்…
என்னில் பாதிதானே அவள்…என்பார் இவர் சாமர்த்தியமாய்.
யப்பாடீ…இரண்டறக் கலந்துட்டாங்க போல்ருக்கு..அர்த்தநாரீஸ்வரர்டோய்..!….என்று
கிண்டல் செய்வார்கள். பொருட்படுத்த மாட்டார் கமலேசன். அவர்களோடு சேர்ந்து இவரும் சிரித்துக்
கொள்வார்.
ஆனால் உறவுக்காரர்கள் விசேடங்கள் அனைத்திற்கும்
ஒத்தையாய்ப் போய் நிற்கும்போது இவர் மனம் வேதனைப்படத்தான் செய்யும். அழுத்தி தொண்டைக்குள்
முழுங்கிக் கொள்வார்.
நான் வரலை…நீங்க போயிட்டு வாங்க…இதுதான்
அவள் எப்போதும் சொல்லும் ஒரே பதில். தன் வீட்டுக்காரர்களோடு அவள் ஒட்டினதேயில்லை. கல்யாணம்
முடித்தவுடனேயே நேரடியாய் தனிக்குடித்தனம் கூட்டி வந்தாயிற்று. தன் வீட்டில் கொஞ்ச
காலமாவது சேர்ந்து இருந்து ஒன்றுவதற்கான வாய்ப்பே இல்லாமற் போனது. தனிக்குடித்தனம்
என்று நேரடியாய் வீடு பார்த்து வந்து குடியேறியதில் அவர்கள் வீட்டில் ஏக சந்தோஷம்.
தங்களுக்கான முதுகு வேலைக்கு இடமில்லாமல் போனதே என்று. அதற்காக அவர்களும் வந்து உட்கார்ந்து
கொண்டு கும்மியடித்தார்களா என்ன? அதுவும் இல்லைதான். ஏழெட்டுப் பேர் இருக்கும் குடும்பத்தில்
தன் பெண் வாக்கப்படுகிறாளே…என்ன பாடு படப் போகிறாளோ, எம்புட்டு வேலை செய்து மாயப் போகிறாளோ
என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு இது பெரிய ரிலீஃப்தானே?
அது முழுக்க முழுக்கக் கமலேசனின் மனம்
சார்ந்த செயல்பாடு என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லைதான். குடும்பம் இருந்தது சென்னையில். இவர் வேலை பார்த்தது
மதுரையில். அதனால் நேரடியாய் மதுரையிலேயே வீடு பார்த்துக் குடி புகுந்து விட்டார்.
இதிலென்ன தப்பு இருக்கிறது? அப்பா, அம்மா, தங்கைகள், அண்ணா, மன்னி என்று சென்னையிலிருந்தார்கள்.
இவர் மனது சுதந்திரம் வேண்டியது போல் அவள் மனதும் வேண்டியிருக்கலாமில்லையா? ஆனால் அதற்குப் பின் ஒட்டாமல் போனதுதான் துரதிருஷ்டம்.
ஒட்டியென்ன ஒட்டாமலென்ன…எல்லாமும் இன்று அவரவர் காரியம், அவரவர் நலம், அவரவர் கஷ்ட
நஷ்டம் என்றுதானே தனித்துப் போய்க் கிடக்கிறது? உலகமே அப்படியாகிப் போனதே? கூட்டுக்
குடும்பம் என்கிற பழக்கமே அருகிப் போனதே? அவரவர் தனியாய் இருப்பதைத்தானே விரும்புகிறார்கள்?
சுயநலம் என்பதே விஞ்சி நிற்கிறது இன்றைய நாளில்…!
இது இப்படியே போயிட்டிருந்திச்சின்னா
ஒரு நாளைக்கு நான் டைவர்சுக்கு அப்ளை பண்ணிடுவேம்ப்பா…எனக்கு நிம்மதிதான் முக்கியம்…
கடைசியில் அந்தப் புள்ளிக்கு வந்து விட்டான்
சசிதரன். எதை எதிர்பார்த்திருந்தாரோ அதைச் சொல்லியே விட்டான். இந்தக் காலத்துப் பசங்களே
இப்படித்தான். மனம் சலித்தது.
என்னடா…நீபாட்டுக்குப் பேசிட்டே போறே?-
கொஞ்சம் யோசிச்சுப் பேசப் பழகிக்கோ…-குரல் சற்று உயர்ந்தது கமலேசனிடம்.
யோசிக்கல்லாம் ஒண்ணுமில்ல…எல்லாம் வேணுங்கிற
அளவு யோசிச்சாச்சு…சும்மாச் சும்மா தினசரி
பொழுது விடிஞ்சு பொழுது போனா சண்டை போட்டுக்கிட்டே இருக்க முடியாது. சலுப்பக் குடி
மாதிரி… வேறே பொழப்பில்லயா மனுஷனுக்கு? அது
எனக்கு அவசியமில்லே…இதான் என்னோட முடிவு….! வெட்டி விட்ற வேண்டிதான்...
ஓஉறா…முடிவே பண்ணிட்டீங்களா…?
கமலேசனின் இந்தக் கேள்வியில் அவரைச் சட்டென்று
திரும்பிப் பார்த்தான் சசிதரன். அந்தக் கேலியை உணர்ந்து கொண்டானோ?
என்னடா பார்க்கிறே? நிதானமாக் கேளு…கல்யாணம்
பண்ணனும்ங்கிறபோது மட்டும் பெரியவங்களெல்லாம் சேர்ந்து கூடிப் போய்ப் பார்த்து, நல்ல குடும்பமா, நல்ல மனுஷாளா,
நல்ல குணமா, பக்குவமா பேசறாங்களா…ஃபேமிலி பேக்ரௌன்ட் என்னன்னு ஒண்ணொண்ணையும் நுணுகிப் பார்த்து உங்களுக்குப் பாந்தமாப் பேசி முடிச்சு
வைக்கணும். ஆனா டைவர்ஸ் பண்ணனும்ங்கிறது போது மட்டும் சட்டுன்னு நீங்களே ஒத்தையா முடிவு
எடுத்திடுவீங்க…? யாரையும் கேட்க மாட்டீங்க…கன்சல்ட்
பண்ண மாட்டீங்க…பெரிய அறிவுஜீவி மாதிரி உங்களை நீங்களே நினைச்சிட்டு தடால்னு போட்டுக்
கவிழ்த்திடுவீங்க…அதுக்கு நாங்களும் வாய மூடிட்டு, கண்ணக் கசக்கிட்டு, பொச்சப் பொத்திட்டு
சரின்னு சம்மதிக்கணும்…இல்ல? அதானே? அப்டியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும்
செஞ்சிட முடியாதாக்கும்…!
ஒரு கணம் நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தார்
கமலேசன். என்னவோ வாய்க்குள் முனகிக் கொள்கிறான். சொல்வதைச் சொல்லி விடுவோம்…என்று துணிந்தார்.
வச்சு வாழத்தான் வேணும்…முன்னப் பின்ன இருக்கத்தான்
இ ருக்கும்…எல்லார் வாழ்க்கையும் அப்படித்தான்…யாரும் ஒண்ணும் இங்க நிம்மதியா இருந்திடல…புரிஞ்சிதா?
உலகத்துல உள்ளவங்க வாழ்க்கையெல்லாமுமே ஏத்த இறக்கம்தான்…அதுக்காக எவனும் விட்டுட்டு
ஓடிடுறதில்ல…ஆத்துல இறங்கிக் குளிக்கிறபோது எப்படி கசடுகள ரெண்டு கையாலயும் விலக்கிட்டு,
ஒதுக்கிட்டு, நீக்கிட்டுக் குளிக்கிறமோ அது
போலத்தான் நம்ம அன்றாட வாழ்க்கையும்…! புரிஞ்சிதா…நீபாட்டுக்குத்
தடாலடியா எதையாவது பேசிட்டிருக்காதே… போய் கண்ணை மூடிட்டு சாமி முன்னாடி உட்கார்ந்து
கொஞ்ச நேரம் தியானம் பண்ணு…எல்லாம் சரியாப் போகும்…!
ஆம்மா…இத ஒண்ணு சொல்லிடுவீங்க…எதுக்கெடுத்தாலும்
தியானம் பண்ணு, சாமியக் கும்பிடுன்னு…எந்தச் சாமியக் கும்பிட்டு என்ன பண்ண? நடக்கிறது
நடந்திட்டேதான் இருக்கு. அதுக்கு ஒண்ணும் மாத்துக் கிடச்ச மாதிரித் தெரில….!
மாத்துக் கிடைக்கிறதும், மாய்ஞ்சு போறதும்
நம்ம கைலதாண்டா இருக்கு…அதுக்கு சாமியக் குறை சொல்லி என்ன பண்ண? நல்ல பழக்கங்கள முறைப்படுத்திக்கிட்டேன்னா
உனக்குத்தான் நல்லது. எதுலயும் ஒழுங்குன்னு
ஒண்ணு உண்டுதானே? அதுதான் நம்மள நல்வழிப்படுத்தும். பொறுமையும் சகிப்புத் தன்மையும்
அதுக்கு அவசியம்…! நம்ம அன்றாட நியமங்கள்தான் நம்மை நெறிப்படுத்தும். அத விடாமக் கண்டின்யூ
பண்ணு…உன்னை, உன் இருப்பைப் பார்த்துப் பார்த்து அவ மாறுவா…கொஞ்சம் கொஞ்சமா பதத்துக்கு
வருவா..அதுவரை பொறுத்திருக்கத்தான் வேணும். எதிர்பார்க்கிறது கிட்டினவுடனே கிடைக்கிற
நிம்மதியும் சந்தோஷமும் இருக்கே..அதுக்கு ஈடே இல்லை….காலம் எல்லாத்தையும், எல்லாரையும்
மாற்றிப் போடும். யாரும் பிறந்ததுலேர்ந்து இறப்பு வரை ஒரே மாதிரி இருந்து மறைஞ்சவங்க
இல்லை…எல்லார் வாழ்க்கையும் மாறியிருக்கு…நேர் பட்டிருக்கு…ஒரு குறிப்பிட்ட புள்ளில
சங்கமமாகியிருக்கு….மறக்கப் பழகிக்கோ…மன்னிக்கப் பழகிக்கோ…அவளுக்கும் அதுதான் உனக்குமே
அதுதான்…!!! வாழ்க்கையை நமக்கு ஏத்தாப்ல மாத்திக்கிறது
நம்ம கைலதான் இருக்கு. அது பணத்துனாலயோ வசதி வாய்ப்பினாலயோ வராது. நம்ம குணத்துனாலதான்
கைகூடும்… குணத்துனால மட்டும்தான் கைகூடும்….நல்லா ஞாபகம் வச்சிக்கோ….!!
நீளமாய்ச் சொல்லி முடித்தார் கமலேசன்.
கொஞ்சம் ஓவர் டோசாகிவிட்டதோ என்று தோன்றியது அந்தக் கணத்தில். ஆனாலும் இருக்கட்டும்…நல்லதைத்தானே
சொல்லியிருக்கிறோம் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.
ஃபோன் மணி அடித்தது. சசிதரன் அதை எடுத்து இணுக்கியவாறே காதுக்கருகில்
வைத்தான்.
எதிரே பேசுவது பிரதீபா என்று தெரிந்தது.
சசியின் முகம் மாறியது சட்டென்று. என்னவாயிருக்கும்?
அப்பா…அவளுக்கு என்னவோ வாமிட் சென்சேஷனாம்…உட்கார்ந்து
வேலை பார்க்க முடிலயாம். லீவு போட்டுட்டாளாம். ஆட்டோல வந்திட்டிருக்காளாம்….!
துண்டு துண்டாய் அவன் சொன்ன அவசரச் சேதியைக்
கேட்டு என்னவோ மனதில் ஓடியது கமலேசனுக்கு.
ஒரு ஃபோன் பண்ணி டாக்டர் செக்அப்புக்கு
இப்ப வரலாமான்னு உறாஸ்பிடல்ல கேளு….அப்பாய்ன்மென்ட் ஃபிக்ஸ் பண்ணு என்றார் துரிதமாக.
காரியக்காரப் பயலுங்க…! மனதுக்குள் முனகிக்
கொண்டார். கமலினி ஆதுரத்தோடு மகன் அருகில் வந்து தோளில் ஆதரவாய்க் கை வைத்தாள்.
----------------------------------
சிறுகதை - “நிர்விகல்பம்” - பிரசுரம் “மயிர்“ மின்னிதழ் பிப்.2026
“யாரையும் யாரும் எதுவும் சொல்லித்
திருத்த முடியாது. அவுங்களாகவே உணர்ந்து திருந்தினாத்தான் உண்டு….இதுதான் பொதுவான நியதி…“.
– அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் நாறும்பூ.
திரும்பி நின்று அவரையே சற்று நேரம் உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தாள் கார்த்தியாயினி. தன் கணவனிடமிருந்து வந்து விழும் வார்த்தைகளின்
அழுத்தத்தை அவள் அறிவாள். அதற்குப்பின் தம்பிடி பேறாது என்பது அவளுக்குத் தெரியும்.
ஆனாலும் அவரைத் தவிர வேறு யாரிடம்தான் அவள்
சொல்ல முடியும்?
பையனிடம் சொல்லப் புகுந்தால் எடுத்த எடுப்பில்
எரிச்சல் படுவான். அது தப்பித்தல் என்றும் கொள்ளலாம் அல்லது சொல்ல பயம் என்றும் எடுத்துக்
கொள்ளலாம். காரணம் எதைச் சொன்னாலும் அதற்கு ஒரு விபரீத எதிர்வினையை முன் வைப்பவள் அவன்
மனைவியான தீபிகா. அது அறிவுபூர்வமாக நினைத்து எதிர்வினை ஆற்றுவதாக அவளால் நினைக்கப்படுகிறது
என்றுதான் தோன்றியது. ஆனால் அதில் பொதிந்துள்ள அடிப்படையான வளர்ப்பு முறையை அவள் உணர்ந்தாளில்லை.
அதைச் சொல்லப் புகுந்தால் தன் தாய் தந்தையரைக் குறை சொல்வதாக உணரப்படும் அபாயம் உண்டு.
அப்படித்தான் அவளின் பட்டுத் தெறிக்கும் வார்த்தைகள் உணர்த்துகின்றன. நேர் கோணத்தில்
இதுவரை எதுவுமே எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை. அது வளர்ப்பு சார்ந்த விஷயம் என்பதை நன்கு
உணர்ந்திருந்தார் நாறும்பூநாதன்.
அது சமாதானமாகச் சொன்னாலும் சரி அல்லது
கோபமாய்ச் சொன்னாலும் சரி..ஒரே விகிதத்தில்தான் எடுத்துக் கொள்ளப்படும். நிச்சயம் மறுக்கத்தான்
போகிறாள்…எதற்கு வீணாய் வார்த்தைகளை விரயமாக்கிக் கொண்டு? என்று விலகிச் செல்கிறான் அவன். ஏற்கனவே ஆபீசில்
மண்டை காய்கிறது. இதில் இவள் காய்ச்சல் வேறா? ஆம்…காய்ச்சல்தான். ஒன்றுக்குப் பத்தாக
அவள் பேசுவதைக் கேட்டால் யாராலேயும் சகிக்க முடியாதுதான். இவள் என்ன உறிஸ்டீரியா பேஷன்டோ?
என்று நினைக்குமளவுக்கு அந்தப் பேச்சு தீயாய்த் தெறிக்கும்? நாறும்பூ, கார்த்தியாயினி,
பிரசாந்த் என்று மூவரும் அந்தரத்தில் பறப்பார்கள். தீபிகாவின் வார்த்தைகள் தீக்கங்குகளாய்ப் பறந்தனதான்.
“விட்ரு…எல்லாம் காலப் போக்குல சரியாகும்…“.என்றார்
நாறும்பூ மனைவியைப் பார்த்து.
“காலப் போக்குலன்னு காலம்தான் போகுது…எங்க
சரியாச்சு….வருஷம் எட்டாச்சு…இன்னொரு குழந்தையும் வந்தாச்சு…இதையும் நாமதான் கட்டிக்
காக்கணும்….அது அதுபாட்டுக்குத்தான் இருக்கும்…இதுக்கும் நமக்குத்தான் பொறுப்பு. பெத்துப்
போட்டதோட சரி…பெத்த கடனுக்குப் பால் கொடுக்குது…நல்லவேளை அதுவாவது இருக்கே…? இல்லன்னா
அந்தப் பவுடர் இந்தப் பவுடர்னு நாமதான் கலக்கி
ஃபீடு பண்ணியாகணும்…அது ஒண்ணைக் கவனிச்சீங்களா…எனக்கென்னன்னு விட்டுட்டுப் போறதை?“
– கொதித்துப் போய்ச் சொன்னாள் கார்த்தியாயினி.
“எதச் சொல்றே?“ – என்று புரியாதவர்போல்
கேட்டார். எல்லாக் குறைகளுமாய்த்தான் இருக்கிறது அந்தப் பெண். யாராவது கேட்டால் அல்லது
பார்த்தால்…உங்க கண்ணுக்கு எல்லாமும் குத்தமாகவே படுது என்றுதான் சொல்வார்கள். கூட
இருந்து பார்த்தால்தான் எதுவும் தெரியும்…புரியும்…அது கூடப் பத்தாது. கூடவே இருந்து
அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
“உங்களுக்குப் புரியலயா? எதத்தான் நீங்க
கவனிக்கிறீங்க?“ என்று அலுத்துக் கொண்டாள் கார்த்தியாயினி.
“என்னன்னுதான் சொல்லேன்…“.என்றார் இவர்.
தான் நினைப்பதையெல்லாம் அவளும் நினைக்கிறாளா என்று ஒரு சோதனை. அவ்வளவே…
“சாவகாசமா ஒன்பதரை பத்துன்னு இது படுக்கையவிட்டு
எழும்புமாம். குழந்தையைக் கொண்டு வந்து நடு உறால்ல விட்டுட்டு கண்டுக்காத மாதிரி பாத்ரூமுக்குள்ள
நுழைஞ்சிக்குமாம். நாமளும் கவனிக்காதது போல இருந்தா? குழந்தை நிலைமை என்னாகுறது? எதையாச்சும்
தரைலர்ந்து பொறுக்கி வாயில போட்டுண்டதுன்னா? இங்கென்ன வீடு வீடாவா இருக்கு? கோடவுன்
மாதிரிக் கெடக்கு….எந்த விபரீதம் நடக்காதுன்னு சொல்றது? “
“அதுதானே அதோட டிரிக்கே? நீயோ நானோ எப்டியும்
ஓடி வந்து தூக்கிக்கிடுவோம்னு தெரிஞ்சிதானே அப்டிக் கொண்டு வந்து விடுது…“
“அதத்தாங்க சொல்ல வர்றேன். அம்மா…குழந்தை இந்தாங்க…கொஞ்சம் பார்த்துக்குங்க…ரெஸ்ட்
ரூம் போயிட்டு வந்துடறேன்…ங்கிற சுமுகமான வார்த்தையில்லையே? ஒரு பணிவு இல்லியே…? ரெண்டு
வார்த்தை பேசிக் கொடுத்திட்டுப் போனா குறைஞ்சி போயிடுவாளா? கிரீடம் இறங்கிடுமா? அப்டியென்ன பெரிய கௌரவம் கிழியறது? திமிருங்கிறேன்…“
– கோபத்தில் சொல்கிறாளா? இயலாமையால் சொல்கிறாளா? ஐயோ பாவம்…அவள்…!
“திமிரெல்லாம் இல்லடி….அதுக்குத் தெரிஞ்சதே
அவ்வளவுதான். அதுதான் அதோட லட்சணம்….!“
“என்ன லட்சணம்? எல்லாமும் பொறுப்பாச்
சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டாமா ஒரு பொண்ணை? இப்பிடியா லங்கிணியா வளர்த்து விடுறது?
“
“லங்கிணின்னா தாடகைன்னு அர்த்தம். எதையாச்சும்
சொல்லாதே! அது இப்படித்தான்னு உனக்கு எப்பத்
தெரிஞ்சிது? கல்யாணத்துக்குப் பிறகுதானே? முன்னாடியே கண்டுபிடிக்க முடிலயே? அப்டிக்
கண்டு பிடிக்கணும்னா குறைஞ்சது ஒரு மாசமாவது அவுங்க வீட்ல டேராப் போடணும். அது சாத்தியமா?
அதான் தலைவிதிங்கிறது. லங்கிணிய அவுத்து விட்டுட்டாங்க…அவுங்க ஃப்ரீ ஆயிட்டாங்க…நாம
மாட்டிக்கிட்டோம்….எதையும் இனிமே சொல்லிப் புண்ணியமில்லை…அவ்வளவுதான்..எல்லாத்தையும்
சரி பண்ணிட வேண்டியது அவனோட பொறுப்பு…நாம அந்த எடத்துல இல்லை…..அதப் புரிஞ்சிக்கோ…”.
பேச்சை முடிக்க நினைத்தார் இவர்.
“ஏன், உங்களுக்கு வாயில்லையா? நீங்க சொல்லப்படாதா?
எங்கிட்ட வேண்டாம்…ரூம்லதானே நீங்க இருக்கீங்க…அப்பா…குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்குங்கன்னு
கொண்டு விடப்படாதா? அதென்ன யாரையும் மதிக்காத தன்மை? “
அமைதியாகிப் போனார் நாறும்பூநாதன். இவள்
கிளப்பும் பூகம்பத்தைப் பார்த்தால் அழிவில்தான் கொண்டு விடும் என்று அவருக்குத் தோன்றியது.
இதுக்குத்தான் நான் அன்றைக்கே சொன்னேன்….நாம நம்ம ஊருக்குப் போயிடுவோம்னு….என்று திரும்பவும்
ஆரம்பிக்க முடியுமா? அந்தப் பேச்செடுத்தாலே அவளுக்குப் பழியாய்க் கோபம் வருகிறதே?.
“நான் வரல்லே….நீங்க வேணும்னா போங்க….“-
என்று ஒரே உதறாய் உதறி விடுகிறாள். அதாவது
தனியாய் அடிமையாய்க் கிடந்து கொள்கிறேன் என்கிறாள். அடிமைதானே…பிறகென்ன? காலை விழித்ததிலிருந்து
ராத்திரி பத்துக்குப் படுக்கைக்குப் போகும்வரை வேலை…வேலை..வேலை…சலிக்காமல் செய்கிறாளே?
அடிப் பாவி! இப்படியொரு அர்ப்பணிப்பா? நிர்விகல்ப சமாதி! மனம் சிந்தனையற்ற, எண்ணங்கள்
அற்ற ஒரு நிலை. ஆத்மா, அறிவு மற்றும் அறியப்படும்
பொருள் ஆகிய வேறுபாடுகள் மறந்து, மறைந்து எண்ணங்களின் குறுக்கீடுகள் எதுவுமின்றி ஆழ்ந்த
அமைதியோடு அறிவின் ஒளியின் துணையோடு ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாக இயங்குதல்…!
இது அவளால் மட்டுமே முடியும்.! தெய்வ சங்கல்பம்…இல்லையானால் சாத்தியமேயில்லை!
முடிகிறதோ இல்லையோ…வாயை மூடிக்கொண்டு அமைதியாய் மாங்கு
மாங்கு என்று இயங்குகிறாள். பலிகிடா போல் செய்கிறாள்.
கடைசி மூச்சு நிற்கும்வரை செய்வாள் போலிருக்கிறது. பிரதிக்ஞை. யாருக்கும் இந்த மனசு
வரவே வராது.
அட…அவனுக்காவது தெரிய வேண்டாமா? அம்மா
இத்தனை கஷ்டப்படுகிறாளே என்று? இப்படியா ஒருத்தன் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பான்?
மனசாட்சி வேண்டாமா? பொண்டாட்டி சொகுசாக நடமாடுவாள்…தேர் போல் அலுங்காமல் குலுங்காமல்
நகர்ந்து கொண்டிருப்பாள். உன் அம்மா கிடந்து சாக வேண்டுமா? என்ன நியதி இது? ஆசை அறுபது நாள்…மோகம் முப்பது நாள் என்பார்களே…வருஷம்
ஏழாயிற்றே…இன்னும் ஆசை அடங்கவில்லையா? அலுக்கவில்லையா? அப்படியென்ன அவள் பிரசித்தம்
…? இவரும் ஓரிரு முறை தெறித்துத்தான் பார்த்தார். சமையலுக்கு ஆள் போடு என்றார். பொறுக்கமாட்டாமல்
கூப்பாடு போட்டார். மனசு தாளவில்லை.
“என் பெண்டாட்டி மட்டும் கிடந்து சாகணுமா?
நாங்க தனியா இருந்தா இன்னும் பதினஞ்சு வருஷம் அவ எனக்குத் துணையா இருப்பா…நான் அவளுக்குத்
துணையா இருப்பேன். இப்போ நீ அதைக் கெடுக்கிறே…அதான் உண்மை…உழைச்சு உழைச்சு சீணிச்சுப்
போய் சீக்கிரம் பொட்டுன்னு அவ கத முடியப் போகுது. நான் அநாதையாயிடுவேன்…அதானே உன் விருப்பம்?
செய்…நல்லாச் செய்…அந்தப் பாவம் பூராவும் உன்னைத்தான் சேரும்….வயிறெஞ்சு சொல்றேன்…அவ
போயிட்டான்னு வச்சிக்கோ…அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்…அது மட்டும்
சத்தியம். என் ஊர்ல என் வீட்டுக்குப் போயி அங்க கிடையாக் கிடப்பனே தவிர…உங்க கூட இருந்து
மாய மாட்டேன். காலும் கையும் முடங்கித்துன்னா நகர்ந்து நகர்ந்தாச்சும் என் வேலையைச்
செய்திண்டு, சக்கர நாற்காலி வாங்கி அதுல உட்கார்ந்துண்டு என் வேலைகளைப் பார்ப்பேன்.
..அதுதான் நடக்கப்போறது…அவ புண்ணியவதி…பொட்டுன்னுபோயிடுவா…நான்தான் சீரழியப்போறேன்…அதுக்குத்தான்
நீ வழி பண்றே….!“ – எல்லாவற்றையும் காதாரக் கேட்டுக் கொண்டு கல்லுளிமங்கனாய் இருக்கிறான்.
இவனை என்னென்று சொல்வது? மனிதர்கள் சுயநலமானவர்கள்தான். தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்த
பின்னால் அடியோடா அப்படி மாறிப்போவார்கள்? தன் நலம் தவிர வேறெதுவுமே கண்ணுக்குத் தோன்றாதா?
இளம் பிரயாத்தில் தான் எழுதி பத்திரிகையில்
பிரசுரமான ஒரு கவிதைதான் அப்போது இவருக்கு ஞாபகம் வந்தது.
அம்மா கையால் சாப்பிட்டு சாப்பிட்டு அயர்ந்து
போச்சு… அப்பா கம்பால் அடி வாங்கி அலுத்துப் போச்சு…தங்கையை வாயால் திட்டித் திட்டித்
தளர்ந்து போச்சு…தம்பியை வீச்சாய் விரட்டி
அடித்து வீணாய் ஆச்சு… எல்லாம் சலித்து, எதிலும் ஒன்றாமல் …புதிதாய் எதைச் செய்ய?-
ம்ம்…அதுதான் சரி…சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணனும்…!!
அந்தக் கவிதை பிரசுரமாகி, ஆசிரியரே ஃபோன்
செய்து பாராட்டியது பசுமையாய் மனதில். எல்லாமும் சலித்து எதிலும் ஒன்றாமல் கடைசியாய்த்
தன் மகன் பிரசாந்த் இப்படியாகிவிட்டானோ? அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டானா?
அவள் குறித்து வாயே திறக்க மாட்டேங்கிறானே?
கடமையையெல்லாம் ஒழுங்காச் செய்தவன் கடைசி
காலத்துல தனியாப் போய்க் கிடந்து கஷ்டப்படணும்னு என்ன தலைவிதியா? – என்று இவரும் பலமுறை
கேட்டுத்தான் விட்டார். அவள் அசந்தால்தானே?
“அப்ப கம்முன்னு கிடங்க…உங்கள யாரு போகச்
சொன்னாங்க?“ – இப்படி அவள் சொல்வதிலும் ஒரு சூட்சுமம் இல்லாமல் இல்லை என்றுதான் நாறும்பூவுக்குத்
தோன்றியது.
நான் அப்படித் தனியே போய்க் கிடக்க மாட்டேன்
என்கிற தைரியம் ஒரு புறம். இங்கிருக்கையில் அவளின் வீட்டுக் காரியங்களுக்கு உதவியாய்
இருக்கிறேனே…அது கை விட்டுப் போய்விடக் கூடாதே என்கிற பயம் இன்னொரு புறம். மறு பேச்சுப் பேசாமல் சரி சரி
என்று செய்ய இவன்தானே லாயக்கு?
நானேதான் பலவீனனாகிவிட்டேனோ…! என்று
தன்னைத்தானே நொந்து கொண்டார் நாறும்பூ. அதிகபட்சம் ரெண்டு வருஷத்துக்கு முன்னால் இருந்த
மன தைரியம் இப்போது தன்னிடம் இல்லையே? உடல் பலவீனப்பட்டுப் போனால் மனசும் பலவீனமாகிவிடுமோ?
இங்கேயே கிடந்து இவளுக்கே உதவியாய் இருந்து
கடத்தி விடுவோமே நாட்களை! யார் முந்தி, யார் பிந்தி…யார் கண்டது? என்னை வேண்டாம் என்று
அவளால் சொல்ல முடியாதுதான். அவனும் சொல்லி விடுவானா என்ன? அன்றாடம் என் பணிகளைக் கண்கொண்டு
பார்க்கிறானே…? காய்கறி நறுக்கிக் கொடுக்கிறேன். பால் காய்ச்சுகிறேன்…டிகாக் ஷன் போடுகிறேன்…தோசைக்கு
வாரா வாரம் மாவு அரைக்கிறேன்….கடைக்குப் போகிறேன். சாமான்கள், காய்கறி வாங்கி வருகிறேன்….மோட்டார்
போடுகிறேன். மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றுகிறேன்…தண்ணீர் சம்பில் இருக்கிறதா,
தீர்ந்து விட்டதா என்று பார்த்துப் பார்த்து சுதாரித்து லாரிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லி
தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் நிரப்பி விடுகிறேன். செப்டிக் டாங்க் நிறைந்தால் கழிவு
நீர் லாரிக்குச் சொல்லி வரவழைத்து எடுக்க வைத்து சுத்தம் செய்கிறேன். குடி தண்ணீர்
கேன் தடங்கலில்லாமல் வரவழைத்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாக்கிறேன். இப்படி
எத்தனையெத்தனை உதவிகள் என்னால்? சமயங்களில் காலை டிபன் முழுக்கத் தான்தானே பார்க்கிறோம்?
இதெல்லாம் உதவிகளா? இவைகளுக்கு உதவி என்றா
பெயர்? கடமையில்லையா? நீயும்தானே இருந்து அனுபவிக்கிறாய்? எல்லோரும் சேர்ந்து இருப்பது
உன் வீடு இல்லையா? அது எப்படி பையன் வீடு என்று உன்னால் பிரித்துப் பார்க்க முடிகிறது?
அப்படிப் பிரித்து நினைத்துப் பார்ப்பதால்தானே மனதுக்குள் வேற்றுமை வளர்கிறது? வேற்றுமை
எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருப்பதால்தானே, தனியாப் போகணும்…தனியாப் போகணும் என்கிற எண்ணம்
வலுப்படுகிறது?
பையனே சேர்ந்து இருக்க முனையும்போது,
அப்பாம்மாவைத் தனியே விடக் கூடாது என்று கூடி வைத்துக் கொண்டு கூத்தடிக்கும்போது, தனக்கு
அந்த எண்ணம் வரலாமா? சதா ஊரில் போய் இருப்போம்…இருப்போம் என்று அவளை அனத்தலாமா? – தனக்குத்தானே
எண்ணி எண்ணித் தன்னைத் தணித்துக் கொண்டார் நாறும்பூநாதன். உடம்பு வலுவற்றுப் போனதுதான்
மிச்சம். காலம் மனிதனை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு விடுகிறது?
பெரிசு அடங்கிக் கிடக்க மாட்டார் போலிருக்குதே?
ஓட்டப் பாய்க்குள்ள நண்டு விட்ட மாதிரி சதா முணு முணுன்னுட்டே …! ?
யாரோ பின்னாலிருந்து முனகுவதுபோல் உணர்ந்தார்
நாறும்பூநாதன்.
நிற்சிந்தையாய், நிச்சலனமாய், நிற்விகற்ப
சமாதியாய்த் தன் கடமைகளை இம்மி குறையாது இன்றும் கண்ணும் கருத்துமாய்ச் செய்து கொண்டிருக்கும்
தன் அன்பு மனையாளை மனதில் கொண்டார்….
கார்த்தியாயினி…! அவள் அவள்தான்…ஈடு இணையில்லாதவள்!!
அவள் காலடியே சரணம்…அதுதான் சொர்க்கம்….! – தனக்குத்தானே ஆத்மார்த்தமாய் உணர்ந்தவராய்,
கசிந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்து விட்டுக் கொண்டார் நாறும்பூநாதன்.
------------------------------------
15 பிப்ரவரி 2026
“கண்டடைந்தது” - சிறுகதை தினமணி கதிர் - 15.02.2026 பிரசுரம்
சார்…என்ன
சொல்றீங்க…புரியல…..! – எதிர்த்தரப்பிலிருந்து பதில் தணிந்து வந்தது. வேறெப்படி வரும்?
புரியும்தான்…ஆனால்
புரியாததுபோல் பேசுகிறான் அந்த ஆள். செய்வது
அத்தனையும் உள்குத்து வேலை. நேரிலோ, ஃபோனிலோ பேசும்போது இங்க சுகம், அங்க சுகம் என்பதாய்
மேம்போக்காய்த் தடவுவது.உள்ளடி வேலை அதற்கு நேர்மாறாய்! ..-நினைக்கவே எரிச்சலாயிருந்தது
சண்முகநாதனுக்கு. என்ன கீழ்த்தரமான ஆள்? அறுபது தாண்டியவனின் செயலா இது? வெட்கமாயில்லை?
சரியான சில்ரப் பயலா இருப்பான் போல்ருக்கு!
அடுத்த
வார்த்தையைப் பேசும் முன் அருகில் வந்து நின்றாள் நாராயணி. தடுக்கத்தான் வருகிறாள்…புரிந்து
கொண்டார் இவர்.
வேண்டாம்…சொன்னாக்
கேளுங்க…-என்பதற்கடையாளமாய் சைகை செய்தாள்.
பிரச்னையாய்ப் போட்டுப் பிடுங்கி எடுப்பது. சரி செய்வோம் என்று முனைந்தால் வந்து நின்று
தடுப்பது? இதென்ன ரெண்டுங்கெட்டான் வேலை?
ஏண்டீ…என்னை
ஏத்தி விடுறதுபோல எப்பப் பார்த்தாலும் வந்து புலம்பித் தள்றது….நானா பேசி ஒரு தீர்வு
காணுவோம்னு கிளம்பும்போது முன்னே வந்து தடுக்கிறது…இதான்
உன் வேலயா? என்னை என்ன கிறுக்கன்னு நினைச்சீங்களா? – ஃபோனின் வாயை அடைத்துக் கொண்டே கோபமாய்க் கேட்டார்.
பிறகு என்னவோ தோன்ற லைனைக் கட் பண்ணினார்.
…திடீர்னு
கட் பண்ணிட்டீங்க…மூஞ்சில அடிச்சாப்ல….?- திடுக்கிட்டாள் நாராயணி.
இருக்கட்டுமே…என்ன
கெட்டுப் போகுது…? அந்தாள் செய்ற காரியத்துக்கு இது ஒண்ணும் தப்பில்லே… நான் இப்ப எல்லாத்தையும்
பேசியிருப்பேன்…நீ வந்து கெடுத்தே…! என்றார்.
மறுபடி
ஃபோன் வரும் என்று எதிர்பார்த்தார். அந்தாளா பேசுபவன்? கல்லுளிமங்கனாச்சே! நேரடியா
எதையும் எதிர்நோக்காமல் உள்ளடி வேலைகள் செய்றதுதானே அந்தாளுக்கு வேலையே! சில்ர…..!
– மனசுக்குள் கடுப்பேறியது சண்முகநாதனுக்கு.
அப்போதைக்கு
விஷயம் முடிந்தது என்று அடுப்படியை நோக்கி நகர்ந்தாள் நாராயணி. ஒவ்வொரு முறையும் இப்படித்தான்
தவறிப் போகிறது. பேசவிடாமல் வந்து தடுத்து விடுகிறாள். தன்னிடம் வந்து மலையளவு புலம்புகிறாள்.
பிறகு என்றுதான் தீர்வு இதற்கு?
ஒரு வாரமாகவே இவர் மனது புகைந்து கொண்டுதானிருந்தது. நிம்மதியில்லாமல்
ஆக்கி விட்டானே இந்த ஆள்? பெண்ணைக் கட்டிக் கொடுத்தோமா, பொறுப்பு விட்டதா என்றில்லாமல்?
எத்தனை நாளைக்குத்தான் இந்த வேதனையை அனுபவிப்பது? இந்தாள் அங்கிருந்து இந்தப் பெண்ணைத்
தூண்டித் தூண்டி விடுவான்…அது கிளிப்பிள்ளை போல் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருக்கும்…எப்பப்
பார்த்தாலும்…! பொழுது பொழுதாய்ச் சண்டை…அர்த்தமில்லாத …எடுத்தெறிஞ்ச பேச்சு…வீட்டில்
யாரையும் மதிக்காத தன்மை…! நல்லதே சொல்லிக் கொடுக்க மாட்டானோ?-திமிர் பிடிச்சு அலையுதே…!
-இதை எப்படி ஒடுக்குவது என்று தீவிரமாய்ச் சிந்திக்க ஆரம்பித்திருந்தார் சண்முகநாதன்.
புகுந்த வீட்டுல நடக்கிறதையெல்லாம் பொறந்த
வீட்டுக்குச் சொல்லக் கூடாதும்மா…அது தப்பு…அப்படிப்பட்டவ ஒரு பொம்பளையே இல்ல…அதக்
கேட்டுட்டு இப்படிச் செய்…அப்படிச் செய்யுன்னு ஒரு அப்பன் தூண்டி விட்டான்னா …அவன்
நல்ல தகப்பன் இல்லை…அது தெரியுமா உனக்கு…? –,இத அந்தாள் இந்தப் பெண்கிட்ட ஒருவாட்டியாவது கேட்டிருப்பானா? அவனே தூண்டிவிடுற
ஆளால்ல இருக்கான்…?
இவர் நாராயணியை நோக்கி இப்படிக் கேள்விகளை
வீசியபோது அவள் கேட்டாள்.
என்ன நீங்க…அவன் இவன்ங்கிறீங்க? அப்டியெல்லாம்
பேசாதீங்க….
இப்போ இதுதான் கெட்டுப் போச்சாக்கும்? என்றார் எரிச்சலுடன். பிறகு தொடர்ந்தார்.
இப்டி உன்கிட்டே சொல்றதுக்கே உனக்கு உறைக்குதே…அந்தாள்ட்டப்
பேசினேன்னா கெதி என்னா ஆகும்? இந்த பாஷைல பேசுறதுக்குத்தாண்டீ அவன் தகுதியானவன்….பெண்ணுக்கு
நல்லது சொல்லிக் கொடுப்பாங்கன்னு கண்டிருக்கு…புகுந்த வீட்டுல எப்படிப் பொறுப்பா நடந்துக்கணும்னு
பாடம் சொன்னா அவன் பொறுப்பான அப்பன். சதா வில்லங்கத்தல்ல இழுத்து விடுறான்? இவன் மனுஷனா?
நல்ல சம்பந்தி வந்து வாச்சான்யா நமக்குன்னு…!
நல்லதே கத்துக் கொடுக்கல்லியே அந்தப் பெண்ணுக்கு?
…எல்லாம் நம்ம தலவிதி…நல்லா நிதானமாக்
கவனிச்சு இன்னும் சிலது பார்த்து முடிவு பண்ணியிருக்கணும்…!
அவசரப்பட்டுட்டோம்…!-மிகுந்த துக்கத்தோடு பகன்றது போலிருந்தது நாராயணியின் வார்த்தைகள்.
நிதானமா அவங்களோட அன்றாட நடவடிக்கைகளைக்
கவனிச்சு ஒரு பெண்ணோட கல்யாணத்தை முடிவு பண்ணனும்னா குறைஞ்சது ஆறு மாசமாவது அவுங்க
வீட்டுல நாம டேராப் போடணும்…நிச்சயம் பண்ற வீட்டுல கல்யாணத்துக்கு முன்னாடி எவனாவது
உட்கார்ந்து கை நனைப்பானா? இல்ல அவுங்கதான் விடுவாங்களா? அது அசிங்கமில்லே? ஏதோ சில
முக்கியமானதைக் கவனிச்சு…நல்லது கெட்டது பார்த்து …சரின்னு முடிவு பண்றதுதான்…எல்லாமும்
கல்யாணத்துக்கப்புறம் பலதும் சரியாப்போகும்னுதான் நினைப்பாங்க…அப்படி ஒரு தியரி இருக்கே…அது
இந்தப் பொண்ணைப் பொறுத்தவரை ஒர்க் அவுட்டாகாது போல்ருக்கே…. ? சுய புத்தியே இல்லையே…சொல்புத்தி
எங்கயாவது விளங்குமா? நல்லதைச் சொல்லிக் கொடுத்தா ஒருவேளை விளங்கலாம்…இந்தாள்தான் வில்லங்கப்
பார்ட்டியாவுல்ல இருக்கான்….
அதுக்கு அந்தாள் மண்டையைப் போட்டாத்தான்
ஆகும்…அப்புறம்தான் படிப்படியா எல்லாமும் சரியாகும்…ஒரே தீர்வு அதுதான்…
இப்படி ஒரு பதிலை நாராயணி சொல்வாள் என்று
சண்முகநாதன் எதிர்பார்க்கவேயில்லை. சிரிப்புத்தான்
வந்தது அவருக்கு. ஒரு பெண் இப்படிப் பேசலாமா? அதிலும் தன் மனைவி இவ்வாறு பகன்றதை இவரால்
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவரால். சீ…வாயை மூடு…! என்றார் ஆவேசமாக. ஒரு பேச்சுக்குத்தான்
சொல்லியிருப்பாள். மனதாரச் சொல்வார்களா என்ன? வாய் தவறி…மனம் தவதாயப்படும்போது அப்படி
வந்துவிடுகிறதுதான்…அந்தளவுக்கு அந்த மனுஷன் படுத்தறானே?
ஒருவர் இருப்பதும் இறப்பதும் நம் கையிலா
இருக்கிறது? அது ஆண்டவன் சித்தம். யாருக்குத்தான் இருப்பு நிரந்தரம்? ஏன் நானே அடுத்த
நிமிடம் சாகக் கூடாதா? இவள் தலை கவிழக் கூடாதா? இந்த உலகத்திலேயே நிச்சயமானது மரணம்
ஒன்றுதான். அதையும் மறைத்து வைத்து விட்டான் இறைவன். இறந்து விடுவோமோ என்று தோன்றலாமே
தவிர…இறந்து விட்டோம் என்பதை இருப்பவர்கள்தானே சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்களுக்கு…நமக்கில்லையே?
செத்த பிணத்தைப் பார்த்து நீ செத்துட்டே என்றா சொல்ல முடியும்?
அந்தப் பெண் இந்தக் குடும்பத்திற்கேற்றாற்போல் மாற
வேண்டும் என்று வேண்டுமானால் நாம் விரும்பலாமேயொழிய அதுக்கு அவுங்க அப்பன் சாவணும்
என்றால் எப்படி? அது நடந்தால் இது நடந்து விடுமா என்ன? சொல்ல முடியாதுதான். கடவுளைத்தான்
வேண்ட வேண்டும். கதியற்றவர்களின் பிரார்த்தனை பலிக்காமல் போகுமா? குணசாலியாய் இருக்கும்
என்றுதான் கட்டி வைத்தது. அது இப்படி முறுக்கிக்கொண்டு நின்றால்?
அந்த அளவுக்கு வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிறான்
அந்த ஆள். அதனால சொன்னேன். எனக்கென்ன வந்தது? அவர் இருந்தா என்ன போனா என்ன? அது யார்
கைல இருக்கு? அநாவசியமா நம்ப குடும்ப விஷயத்துல தலையிடுறாரேங்கிற கோபம்தான். இங்க நடக்கிறது
ஒவ்வொண்ணையும் இந்தப் பொண்ணு அவர்ட்ட வரி விடாமச் சொல்லிட்டேயிருக்கு. உட்கார்ந்தது,
எந்திரிச்சது, என்ன சமைச்சோம், சாப்பிட்டோம், என்ன பேசினோம்ங்கிறது முதற்கொண்டு எல்லாத்தையும்
தப்பாவே பார்த்து தப்பாவே திரிச்சுத் திரிச்சு தானே விபரீதமா நினைச்சு அவன் அப்பனுக்குச் சொல்றது….அந்தாளும்
கேட்டுட்டு…மேலும் மேலும் தப்புத் தப்பாச் சொல்லிக்கொடுக்கிறான்…எடுத்த எடுப்புல முதல்ல
இப்படி வெளில சொல்றதை நிறுத்துன்னுல்ல ஒரு நல்ல அப்பன் சொல்லணும். அது இல்லை அந்தாள்கிட்ட….இப்படிச்
சொல்றது மூலமா நீ என் பெயரைக் கெடுக்கிற அங்கே…ன்னு சொல்ல வேண்டாமா? என் பொண்ணா இருந்திட்டு
நீ இப்படிப் பேசலாமா?ன்னுல்ல நல்ல மனுஷனாயிருந்தாக் கேட்பான்? எல்லாத்தையும் அந்தாளும்
தப்பாவே எடுத்திட்டு விபரீதமாச் சொல்லிக் கொடுக்கிறான். அதக்கேட்டுட்டு சண்டைக்கு நிற்குது
இது. அதுதான் உண்மைன்னு, சரின்னு, நம்பிண்டு
இந்தப் பொண்ணும் ஆடறது. சுயமாச் சிந்திக்கும் திறனில்லை…அத்தனையும் சொல்புத்தி !
நீ வேணுங்கிறதை வெளில ஆர்டர் பண்ணி இஷ்டம்போல
வாங்கிச் சாப்பிடு…யாரு கேட்கிறது? நீ வேலைக்குப் போறே, சம்பாதிக்கிறே… ஃபினான்ஷியல் இன்டிப்பன்டென்ஸ் வேணும்
பெண்ணுக்கு…அதான் பெண்ணுரிமை…! அதை யாரும் தடுக்க முடியாதாக்கும். அப்படித் தடுத்தா
என்கிட்டே சொல்லு…நான் ஒரு கை பார்த்திடுறேன்….அது இதுங்கிறான்….நல்லதே சொல்லித் தரமாட்டாம்
போல்ருக்கு….! நீ ராணியாக்கும்…உனக்கு எல்லாம் கிடைக்கும்..அதுக்கு நான் கியாரண்டி..ன்னு
உளர்றான் அந்தாள். இதுவும் அப்பா சொல்றது அத்தனையும் வேத வாக்குன்னு நினைச்சிண்டு பேயாட்டம் போடறது! இப்படி ஒரு பிசாசு
நம்ம வீட்டுக்கு மருமகளா வரும்னு கனவுல கூட நான் நினைக்கலே…! இன்னிவரைக்கும் அந்தப் பொண்கிட்ட நீ என்ன சம்பளம்
வாங்குறே…ன்னாவது நாம ஒரு வார்த்தை கேட்டிருப்பமா? இல்ல அவன்தான்…சம்பளப் பணத்தை என்கிட்ட
மாதா மாதம் கொடுத்திரணும்னு சொல்லியிருப்பானா? அதுதான் வச்சிண்டிருக்கு…தனக்குத்தான்
செலவு பண்ணிக்கிறது….இந்த நியாயத்தை யார் சொல்றது? மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா…அப்டியெல்லாம்
இல்லப்பா…அவுங்க என்கிட்டே எதுவுமே கேட்கிறதில்லே…இதுவரை கேட்டதுமில்லேன்னுல்ல சொல்லியிருக்கணும்?
தின்னு தின்னு உடம்பை வளர்த்திருக்கே தவிர…மண்டைல மசாலாதான் இருக்கு அதுக்கு…எல்லாம்
நம்ம தலைவிதி…!
தவதாயப்பட்டாள் நாராயணி. இந்தப் புலம்பலில்
அவளுக்கு ஏதும் நோய் நொடி வந்து படுக்கையில் விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்
று இவர் பயப்பட்டார். தன்னிடம் கொட்டித் தீர்ப்பதுதான்
அவளுக்கு ரிலீஃப் போலிருக்கிறது. அதுவும் ஒரு வகை நிவாரணிதானே…! அவள் புலம்பல் எந்தப் புள்ளியில்தான் நிற்கும் என்றே
இவருக்குத் தெரியவில்லை.
என்ன கோமாளித்தனம் இது? எல்லாம் காதுல விழறதே…!
ஸ்பீக்கர்ல போட்டுல்ல அந்தப் பெண் பேசுது? கேட்டாக் கேட்கட்டும்ங்கிற திமிரு! அதானே?
அந்தாளே ஒரு ஓட்டாண்டி…பையன லோன் போடச் சொல்லி…அபார்ட்மென்ட்
வீடு வாங்கி அவன டியூ கட்ட வச்சிருக்கான்….ஒரு சேமிப்பில்ல..அத்தனையும் கைவீசிச் செலவு
பண்ணி வீணடிச்சிருக்கான்..! ஜாலியா இருந்து கழிச்சிருக்கான்…! எப்டியோ ரெண்டு பிள்ளைகளையும்
படிக்க வச்சிட்டான்…கடன உடன வாங்கி வாங்கி அடைச்சிட்டேயிருந்திருக்கான்..சிக்கனமாக்
குடும்பம் நடத்தணும்னு அவன் அகராதில் இல்ல போலிருக்கு…விட்டேத்தியா இருந்தே கழிச்சிருக்கான்.
..அதே பழக்கத்தைத் தன் பெண்ணுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கான்…
அப்பப்ப இதுகிட்டப் பணம் வாங்கிப்பான்
போல்ருக்கு…? அப்படித்தான் தெரியுது…நாம என்ன அந்தப் பொண்ணோட பாங்க பாஸ் புத்தகத்தையா
வாங்கிப் பார்க்கப் போறோம்? - சொல்லி விட்டு
நிறுத்தினாள் நாராயணி. இவர் முகத்தை நோக்கினாள்.
அப்படியிருந்ததுன்னா அதை நம்ம பிள்ளைதான்
தடுக்கணும். உதவி செய்யலாம் தப்பில்லை…அதை அவனுக்குத் தெரிவிச்சிட்டுக் கொடுக்கணும்.
புருஷனுக்கே சொல்லாமச் செய்றதுதான் தப்பு. இவனுக்கு ரோஷம் வேணுமே…! ….இவன் கேட்கலை,
கண்டுக்கலைன்னா இவன்தான் ஏமாளி. அதுக்கு நாம என்ன பண்றது? நாம குறுக்கே புகுந்து பேசுறது
அசிங்கம். இதெல்லாமுமே நாம அவுங்க கூட இருக்கிறதுனாலதானே தெரிய வருது. என்னவோ பண்ணிட்டுப்
போறாங்க. புருஷன் பொண்டாட்டி பாடு. நாம ஏன் தலையிடணும்…? வயசான காலத்துல நமக்கு இது
தேவையா?-அடங்காத கோபத்தோடு சொன்னார் சண்முகநாதன். தனிக் குடித்தனம் போகட்டும் என்ற
இவரது யோசனை எடுபடவில்லையே? பையனோடு பிசினாய் ஒட்டிக் கொண்டுதான் இருப்பேன் என்கிறாளே?
அவர்களுக்கு என்று குடும்பம் நடத்தப் பழகும்? வரவு செலவு எப்போது கைக்குள் அடங்கும்?
சேமிப்பு என்பது எப்படிக் கைவரும்? எத்தனையோ கேள்விகள் இவரிடம்.
குடும்பத்தின் அதிகாரம் ஆண் கையில் இருந்தால்தான்
குடும்பம் விளங்கும். ஆனால் அந்த ஆண் பொறுப்பானவனாய், நேர்மையானவனாய், நன்மை தீமைகளைச்
சீர்தூக்கிப் பார்த்து செயல்படுபவனாய் இருத்தல் வேண்டும். சண்முகநாதன் தன் வாழ்க்கையில்
அப்படித்தான் இயங்கி வந்திருக்கிறார். தன் குடும்பத்தை அக்கறையோடும், கருத்தோடும் சிந்தித்து
செயல்பட்டு முன்னேற்றியிருக்கிறார். இல்லையென்றால் ரெண்டு வீடு, ஒரு பிளாட், இத்தனை
சேமிப்புகள் என்று கைவந்திருக்க முடியுமா? மனிதனின் தேவைகள் மிகக் குறைவு என்கிற எண்ணம்
கொண்டவர் அவர்.அநாவசியச் செலவுகள் அவர் வாழ்க்கையில் எட்டிப் பார்த்ததேயில்லை. மாதத்தின்
முதல் செலவே சேமிப்பு என்றுதான் வாழ்ந்து கழித்திருக்கிறார் அவர். தன் மனதும், செயலுமே
தனக்கு சாட்சி. வேறு எவன் சொல்லிப் பாராட்ட வேண்டும். யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா
போங்க…!
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனார் சண்முகநாதன்.
ஆனால் நாராயணியின் புலம்பலை நிறுத்தவே முடியவில்லையே! தன்னை விட்டால் வேறு யாரிடம்
தன் மனக்குறைகளைச் சொல்லிப் புலம்புவாள் அவள்?
அவுங்க அப்பா இருக்கிற தைரியத்துல இதுவும் அடங்காப்பிடாரியா
நடந்துக்கிறது. இங்க யாரு என்ன சொல்றாங்க அவளை? அவபாட்டுக்குத்தானே இருக்கா? ஏதாச்சும்
குத்தம் குறை சொல்றமா? காலைல பதினோரு மணிக்குத்தான் எழுந்திருக்கிறா…ஒரு நாளாச்சும்
ஏதாச்சும் சொல்லியிருக்கனா? அடுப்படிப் பக்கம் லீவு நாளாச்சும் எட்டிப் பார்த்திருக்கா
அது? துரும்ப நகர்த்துறதில்ல…சொகுசா தின்னுட்டுத் தின்னுட்டு மொபைல் பார்த்துண்டு,
தூங்கிண்டு…பாத்ரூம் போயிண்டு காலங்கழிக்கறச்சே…இம்புட்டுத் திமிரு இருந்தா…நாள் பூராவும்
வேலை செய்ற எனக்கு எப்படியிருக்கும்? கொஞ்சமேனும் நன்றி வேணாம்? காலைல அஞ்சுக்கு எழுந்திருந்து
ராத்திரி வரைக்கும் இவ்வளவு வேலை செய்றாளேங்கிற கரிசனம் வேண்டாம்? என்ன வளர்த்திருக்காங்க
பொண்ணை? நீங்க சொன்ன மாதிரி தனிக்குடித்தனம் வச்சா விளங்கினாப்லதான்…எம் பையன் பாடு
படு திண்டாட்டமாயிடும்…நல்ல சாப்பாடு கூடக் கிடைக்காது அவனுக்கு. இதுக்கு சமைக்கத்
தெரியுமோ என்னவோ…நான் செய்றேன்…நான் செய்றேன்னு அந்தாள் வந்து நின்னாருன்னா? நம்ம வீட்ல
வந்து அவன் நிர்வாகம் பண்றதா? அப்படி ஆள்தான் அந்தாளு? உள்ளே விட்டோம்னா நாளடைவில நம்மளையே
அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடுவான்…கேடு கெட்ட மனுஷன்….-பொரிந்து தள்ளினாள் நாராயணி. மன
பாரம் அப்படியாவது இறங்கட்டும் என்று தேமேனென்று கேட்டுக் கொண்டிருந்தார் சண்முகநாதன்.
இந்தப் பேச்சு சொல்லப்போனால் தினசரியே
இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருவருக்கும் மனசு ஆறுதலடைய மாட்டேனென்கிறது.
பையனுக்கு சரியாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணவில்லை என்று ஆ தங்கப்படுகிறது மனசு.
பரஸ்பரம் கொட்டித் தீர்த்துக் கொண்டால்தான் வேதனை குறைகிறது. இல்லையென்றால் உடம்புக்கு
ஏதேனும் வியாதி வந்து விடுமோ என்று மனசு பயப்படுகிறது. படுக்கையில் விழுந்தால்…அது
இன்னும் மோசமாயிற்றே…? தனக்கும் பதிலுக்குப் பதில் பேசினால்தானே மனம் ஆறுகிறது?
அட…வேலதான் செய்ய வேண்டாம். அன்பா நாலு வார்த்தை…மரியாதையா
ஒரு சொல்….வேண்டாமா ஒரு பொண்ணுக்கு? அப்படியென்ன பேரழகியா இது? பணக்கார ஃபேமிலியா,?
சாதாரண மிடில் கிளாஸ்தானே? அதி புத்திசாலியா? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கா?
அவர் தன் பொண்ணுக்குப் போட்டதைவிட நாமதான் அதிகமாப் போட்டு வச்சிருக்கோம். எதுக்காக?
எல்லாம் நம்ம பையனுக்காக. இவளுக்காகவா? எல்லாத்தையும் நாளைக்கே கொண்டு போய் பாங்க்
லாக்கர்ல வைக்கச் சொல்றேன்…இந்த வீட்டையும், நகை நட்டுக்களையும் பேரன்கள்தான் எடுத்து
அனுபவிக்க முடியும்…அதுவரை யாருக்கும் தொடுறதுக்கு அனுமதியில்லேன்னு உயில் எழுதி வைக்கப்
போறேன். பத்திரமே எழுதிப் பதிவு செய்து வைக்கிறேனா இல்லையா பாருங்க…!
சரி…சரி…போதும் போதும் நிறுத்து…நிறுத்து…நான்
அவர்ட்டப் பேசலாம்னு கிளம்பப் போக…அதைத் தடுத்திட்டு…இப்போ நீ எங்கிட்டப் பேசிட்டிருக்கே…நாம
பேசறதோட சாராம்சமாவது அவருக்குத் தெரிய வேண்டாமா? அப்பத்தானே அந்தாளுக்குக் கொஞ்சமாவது
சொரணை வரும்? அதையும் தடுத்திட்டியே நீ?
நான் எங்கே தடுத்தேன் …நீங்கதானே ஃபோனை
ஆஃப் பண்ணினீங்க…?
ஆமாண்டீ…யாரு இல்லைன்னு சொன்னா? அவர்
கூடப் பேச ஆரம்பிச்ச வேளைல குறுக்க புகுந்தா? கமுக்கமா நின்னு நான் என்னென்ன பேசறேன்…எப்படிப்
பேசறேன்னு அப்சர்வ் பண்ணனும். ஆரம்பிக்கிறப்பவே வந்து நின்னு தடுக்கக் கூடாது…! அப்புறம்
எனக்கு அந்த வீரியம் விட்டுப் போகுமில்ல…? நியாயம் மனசுல பெருக்கெடுக்கிற போது அதை
அப்படியே கொட்டிடணும்….உண்மை வேகமாத்தான் வெளில வரும். அது உஷ்ணமாத்தான் இருக்கும்.
அதை நாமளே பொருட்படுத்தலைன்னா எப்படி? எதிராளிக்கு எப்படிப் போய்ச் சேரும்? என்னிக்கானாலும்
பேசினாத்தானே தீரும்? விளைவு என்னங்கிறதை அப்புறம் பார்த்துக்கலாம். வயற்றெரிச்சல்
குறையுமே? அதத் தடுத்திட்டியே?
பேசி ஓய்ந்ததுபோல் திடீரென்று அமைதியானார்
சண்முகநாதன். ஒரு நல்ல சந்தர்ப்பம் நழுவவிட்டதாய் உணர்ந்தார். வெகு நாட்களாய் மனதில்
உருப் போட்டுக் கொண்டிருந்த ஒன்றை வடித்தெடுக்கும் முன் குறுக்கே புகுந்து கெடுத்து
விட்டாள் நாராயணி. இவளை வைத்துக் கொண்டு இனி பேசக் கூடாது என்று முடிவு செய்து கொண்டார்.
வீட்டுப் பெண்கள் எல்லாவற்றையும் வீட்டு
ஆண்களிடம் புலம்புகிறார்கள். அவர்கள்தான் தீர்க்க வேண்டுமென்று. இஷ்டம்போல் கதறத் தெரிந்த
அவர்களுக்கு, இஷ்டம்போல் வீட்டு ஆம்பளையைச் சுதந்திரமாய் விட வேண்டும் என்று தெரியவில்லையே?
பிறகு எப்படிப் பிரச்னைகளைத் தீர்ப்பது? நானென்ன கையில் தடியையா எடுத்துக் கொண்டு அடிக்கப்
போகிறேன்? வெறும் வார்த்தை விளையாட்டுத்தானே? அது கம்பால் அடிப்பதை விட அதிகக் காயத்தை
உண்டு பண்ணுமே…! சொரணை உள்ளவனுக்கு. உப்புப் போட்டுத் தின்பவனுக்கு ஒரு சில வார்த்தைகள்
போதும்தான். அல்லாதவனுக்கு? வெட்கத்தை உதிர்த்தவனுக்கு? சூடு, சொரணை என்று எதுவுமே
இல்லாதவனுக்கு? எது சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் உறைக்காதுதான். இந்தாள் அந்த ரகமாய்
இருப்பானோ?
சிந்தனை இந்த திசையில் போக…தலை மூர்ச்சைக்கு
வந்தது சண்முகநாதனுக்கு.
ஆள விடு…என்று சொல்லிவிட்டு அறைக்குள்
சென்று கதவைத் சாத்திக் கொண்டார். அவர் மனது அமைதியைத் தனிமையை நாடிக் கொண்டேயிருக்கிறது.
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுபோல் இங்கே அன்றாட நிகழ்வுகள் நடக்கின்றன. இவரும்
எவ்வளவோ ஒதுங்கி ஒதுங்கித் தான் செல்கிறார். விடாது கருப்பு என்பதுபோல் வந்து வந்து
ஒட்டிக் கொண்டு நமநம என்று அரிக்கிறது. எப்படி
விலகிப் போவது? பையனின் வாழ்க்கையாயிற்றே? சுமுகமாய்க் கழிந்தால்தானே பெற்றோர்களுக்கு
நிம்மதி? நாளும் பொழுதும் கலகமாய்க் கடந்தால்?
கீழே கேட் திறக்கும் சத்தம். அவன்தான்
வந்துவிட்டான். காரை பார்க்கிங் ஏற்றிவிட்டு வந்து சேரப் பத்து நிமிஷம் ஆகும். அதற்குள்
பள்ளிக்குச் சென்றிருக்கும் பேரன் வந்து விடுவான். காத்திருந்து அவனையும் அழைத்துக்
கொண்டு மேலே வரக் கூட அஞ்சு நிமிஷம். பிறகு ஆறு மணிக்கு அவனை டியூஷனுக்குக் கொண்டு
விட வேண்டும். எட்டு மணிக்குத் திரும்பக் கூட்டி வர வேண்டும். காலையில் அவனைக் குளிப்பாட்டி,
பல் தேய்த்து விட்டு, யூனிபார்ம் அணிவித்துக் கிளப்புவதும் அவன்தான். அதற்குத்தான்
தினசரித் தவறாமல் அஞ்சுக்கு எழுந்து டிபன் தயார் செய்கிறாளே நாராயணி. ஒரு நாள் ஒரு
பொழுதாவது அந்தப் பெண் எதுவும் செய்ததில்லை. அதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை
என்பதுபோல் தூங்கிக் கொண்டிருக்கும். சின்னஞ்சிறுவன் ஆறுக்கெல்லாம் எழுந்து பள்ளிக்குத்
தயாராகிவிடுகிறானே என்கிற உறுத்தல் கூட இல்லை. தினசரி காலை எட்டு வரைக்கும் வீடு அல்லோல
கல்லோலப்படுகிறதே என்கிற தாக்கம் சிறிதுமில்லை. நாமும் எழுந்து நம் பங்குக்கு ஏதாவது
செய்வோம் என்கிற எண்ணமில்லை. உலகமே தலைகீழப் புரண்டாலும் நான் பத்துக்கும் பதினொண்ணுக்கும்தான்
எழுந்திருப்பேன் என்று கும்பகர்ணத் தூக்கம் போட்டால்? அசிங்கமாயில்லை. இதைச் சொல்லப்
புகுந்தால் சண்டை…! ஓவென்ற அழுகை. எடுத்தெறிந்த பேச்சு…!
பிள்ளை பெறுவது மட்டும் ஆண்மையில்லப்பா…ஆளுமைத்
திறனோட ஒரு ஆண் இருக்கிறதுதான் ஆண்மை. குடும்பத்துல அது ரொம்ப முக்கியம். அதத் தெரிஞ்சிக்கோ….-பலமுறை சொல்லிவிட்டார்தான்.
உறைத்தால்தானே? இவருக்கோ மனசு புழுங்கியது. எதற்கு உடன் இருந்து கொண்டு இந்தக் கண்றாவியையெல்லாம்
பார்த்துப் பார்த்து மனசு வேக வேண்டும்? அவுங்க பிள்ளை…அவுங்க வாழ்க்கை…தனியா வாழட்டுமே!
நாம ஏன் குறுக்கே நின்று கொண்டு? – எத்தனையோ முறை சொல்லித் தீர்த்து விட்டார். நாராயணி
கேட்பதாயில்லை.
நான் இருந்துக்கிறேன்..நீங்க வேணும்னா
போங்க….-இப்படியொரு பதில் சொல்லலாமா? சொல்கிறார்களே? குடும்பப் பெண்ணுக்கு அழகா அது? குடும்பமாவது…அழகாவது? வயதானால்
எல்லாப் பெண்களுக்கும் வாய் நீண்டு விடுகிறது. காதுவரை கிழிகிறது. எல்லாக் கடமைகளையும்
சீரும் சிறப்புமாய் முடித்தவன் கடைசிக் காலத்தில் தனியாய்ப் போய் இருந்து கஷ்டப்பட
வேண்டுமென்று தலையெழுத்தா என்ன?
உன்னை வச்சுக் காப்பாத்துற மாதிரி என்னையும்
வச்சுக் காப்பாத்த மாட்டானா? அவனோட பேசிட்டுத்தான் இந்த வார்த்தையை என்கிட்டே நீ சொல்றியா?
நாக்கு மேலே பல்லுப் போட்டு என்னைப் பார்த்து
இப்படிப் பேசுறதுக்கு உனக்கு எப்படி மனசு வருது? மனசாட்சின்னு ஒண்ணு உனக்கு
இருக்கா இல்லையா? பையனுக்காக அதை அவுத்து எறிஞ்சிட்டியா வெளில? -கேட்கத்தான் செய்தார்
சுடச்சுட…!
ஆனால் அந்தக் கேள்விக்குத்தான் பதிலே
இல்லை. மழுங்குண்ணி மாங்கொட்டையாய் ஒருவன் இருந்தால்தான் இந்த வாழ்க்கையைப் பிரச்னைகள்
இன்றி ஓட்ட முடியும்….கண்ணையும், காதையும் பொத்திக் கொள்ள வேண்டும். மொழி மறந்து போகும்
அளவுக்கு வாயை மூடிக் கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் இருக்கப் பழகினால்தான் ஓரளவுக்கு
இந்த வாழ்க்கையை, அன்றாடங்களைப் பிரச்னையின்றிக் கடந்து செல்ல முடியும்.
இதுதான், தான் இத்தனை வருஷ வாழ்க்கை அனுபவத்தில்
கண்ட பேருண்மையா? நினைக்க நினைக்க வேதனைச் சிரிப்புத்தான் வெளிப்பட்டது அவரிடம்.
வாழ்க்கையே வேஷம்…இதில் பாசமென்ன, நேசமென்ன….காலத்தின்
கோலம்…புரிந்தது….ஞானிதானே நானும்…!!!!
--------------------------
12 பிப்ரவரி 2026
சிறுகதை 'மிச்சம்“ (குங்குமம் வார இதழ்) 20.02.2026
நீங்க போயிட்டு வாங்கோ…நான் வரலை…என்றார்
கோபாலன்.
உறாலில் என்னவோ பேச்சு நடக்கிறது என்று
தோன்றியபோதே மனதில் முடிவு செய்து கொண்டு விட்டார். அந்த இழுவை நம்மால ஆகாது? கிளம்பவே
ஜாமம் ஆகும். இவர் மனது அலுத்துக் கொண்டது. மலைப்பாய் இருந்தது.
கார்லதானேப்பா போகப் போறோம். வரலாமுல்ல…?
என்றான் தயாளன்.
கார்லதான் போறோம்…அங்க போனவுடனே கோயிலைச்
சுத்தி பார்க்கிங் தேடவே ஒரு மணி நேரம் ஆகும். சுற்றிச் சுற்றி வரணும். அதுக்குள்ளயும்
எனக்கு ஒண்ணுக்கு வந்துடும். அதுக்கு எடத்தைத் தேடணும். சொன்னா நீ சங்கடப்படுவே…நானா
இறங்கி ஒரு ஓட்டலுக்குள்ள போய்த்தான் ஒன் பாத்ரூம் போக முடியும். அவன் சும்மா விடுவானா?
ஒரு காப்பியைக் குடிக்கணும். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு ஒண்ணுக்கு வரும்.
..எதுக்கு இந்த சிரமமெல்லாம்? நீங்க போயிட்டு வாங்கோ…நான் வீட்ல இருந்துக்கிறேன். எனக்கிருக்கிற
உடல் சிரமத்துக்கு எங்கயும் கிளம்ப லாயக்கில்ல…!
நீ பாத்ரூம் போயிட்டு வெளில வெயிட் பண்ணுப்பா…நாங்க
கும்பிட்டுட்டு வந்திடுறோம்….
நல்லாயிருக்கே நீ சொல்றது? கோயிலுக்குன்னு
புறப்டுட்டு சாமி கும்பிடாம வர்றதா? அது சரியாயிருக்குமா? – சங்கடத்தோடு பேசினார் கோபாலன்.
ஆள விடுங்கன்னாலும் இதென்ன அன்புத் தொல்லை?
ஏம்ப்பா…எத்தனையோ நாளு வெளி சுற்றுப் பிராகாரத்துல
நீ உட்கார்ந்துடுவே…நாங்கதான் போயி எல்லா சந்நிதியையும் சுத்திக் கும்பிட்டுட்டு வருவோம்…என்னால
அலைய முடியாது, வரிசைல நின்னெல்லாம் நகர்ந்து போய் சாமி கும்பிட முடியாதுன்னு சொல்லியிருக்கே…இன்னிக்கு
மட்டும் இப்டிச் சொல்றியே…? –
அதையேதான்ப்பா இப்பயும் சொல்றேன்….வெளிலன்னு
வந்தாலே எங்க பாத்ரூம் இருக்குன்னு தேட வேண்டிய நிலைமைல நான் இருக்கேன்…அதுக்கு உன்னையும்
சேர்த்து சிரமப்படுத்த விரும்பலை..யாரையும் சிரமப்படுத்த இஷ்டமில்லை…அதனாலதான் அப்படிச்
சொல்றேன்….-பிடியாய் நின்று தன் பக்கத்தை விளக்கினார் கோபாலன்.
அவருக்குத் தெரியும் அவர் சிரமங்கள். மற்றவர்களை
ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? பெற்ற பிள்ளைதானே…கூட வருவது பெண்டாட்டிதானே…தனக்காகக்
கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா?
அதெல்லாம் இல்லை. தன்னால் யாருக்கும் கஷ்டம்
வேண்டாம் என்பதுதான் அவர் கருத்து. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்.
அதுபோல் ஒரு பொழுது பொறுத்தால் மறு பொழுது ஒரு வார்த்தை வரத்தான் செய்யும். அதை ஏன்
கேட்கணும், மனசு கஷ்டப்படணும். அதற்கு ஏன் இடம் கொடுக்கணும்? எங்கும் போக வேண்டாம்.
எதையும் பார்க்க வேண்டாம். எந்த ஆசையும் இல்லை அவருக்கு. எல்லாவற்றையும் மொத்தமாய்த்
துறந்து விட்டார் அவர். ஒரே சமயத்தில் பலவற்றையும் அப்படித் துறக்க ஒருவனால் முடியுமா
என்றால் முடியும்தான். அதற்கான மனத் திண்மை அவருக்கு இருந்தது.
அது எப்படித் தனக்குக் கை வந்தது என்று
யோசித்தார் கோபாலன். சிறு வயது முதலே அது தன்னிடம் உடன் பிறந்ததாய்க் கிடக்கிறது என்பதை
உணர்ந்தார். அது அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்டதாய் இருக்கும் என்றும் எண்ணலானார்.
இல்லையென்றால் சொல்லி வைத்தாற்போல் ஐம்பது
ஆண்டுகள் ஒரே பிடியாய் எந்தவிதச் சலனமுமின்றி ஓட்டலில் வேலை பார்த்து தன் எட்டுக் குழந்தைகளைக்
காப்பாற்றிக் கரையேற்ற முடியுமா ஒருவரால்? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் குடும்ப
முன்னேற்றமே குறி என்று ஒருவனால் வாழ்ந்து கழிக்க முடியுமா? தியாக வாழ்க்கையை இந்த
உலகத்தில் எத்தனை பேர் வாழ்ந்து கடந்திருக்கிறார்கள்?
அப்பா எந்தச் சந்தோஷத்தையும் அனுபவித்தவர்
அல்ல. எந்தச் சந்தோஷத்திற்காகவும் மெனக்கெட்டவரும் அல்ல. இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி என்ற வரிகளுக்கேற்ப தன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து
மறைந்தவர்.
லட்சியம் என்று மனதில் உறுதி செய்து கொண்டா
அவர் வாழ்ந்தார்? முன்னோர்களின் நெறிமுறைகளும், ஆசீர்வாதங்களுமாய்ச் சேர்ந்து அவரை
இயக்கியது. அதுவே அவரது சீரிய வாழ்க்கையாய் அமைந்து போனது.
அதே
மன உறுதியும் செயல்பாடும் தன்னிடமும் ஒட்டிக் கொண்டிருப்பதாய் கோபாலன் நினைத்தார்.
கொஞ்சமேனும் இல்லாமல் போகுமா என்ன?
அதற்காக
சும்மா இருப்பதே சுகம் என்றா அவர் கிடக்கிறார். அல்ல அல்ல….வீட்டில் தனியே இருந்தால்
என்றுமே அவர் வெறுமே கிடந்ததில்லை. ஏதாவது வேலைகளை எடுத்துச் செய்து கொண்டேதான் இருப்பார்.
அது அவர் சுபாவம். ஆபீஸ் வேலைகளையே அப்படிக் கட்டிச் சுமந்தவர்தானே? அந்த குணம் வீட்டுக்கு
என்று விட்டுப் போகுமா?
துடைப்பத்தை
எடுத்துக் கொண்டு வீடு பெருக்கிக் குப்பைகளை ஒருங்கிணைத்து வெளியேற்றுவார். ஜன்னல் கம்பிகளில் ஏறியுள்ள அழுக்கை
ஈரத் துணியை வைத்துத் துடைத்துப் போக்கி சுத்தம் பண்ணுவார். சாமி படங்களைத் துடைத்து
மாட்டுவார். பூஜை அறைத் தரையை எண்ணெய்ப் பிசுக்குப் போக அழுந்தத் துடைத்து, விளக்கைத்
துலக்கிப் பளீரென ஆக்கி புதிதாகத் திரியும் எண்ணெயும் ஊற்றிச் சரி செய்து வைப்பார்.
படுக்கைகளை வெளியில் கொண்டு உதறி, தூசி போக அழகாய் மடித்து ஒதுக்கி வைப்பார். ரொம்பவும்
அழுக்காய் இருந்தால் வாஷிங் மெஷினில் போட்டு மாடியில் கொண்டு சென்று உலர்த்தி காய்ந்த
பிறகு ஞாபகமாய் எடுத்து மடித்து ஒழுங்கு படுத்துவார். மின்சாரம் வராத சமயங்களில் பயன்படும்
இன்வெர்ட்டர் பேட்டரிக்குத் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து அதற்கென்று வாங்கி வைத்துள்ள
பதப்படுத்தப்பட்ட நீரை ஊற்றி பேட்டரி சிறப்பாய் இயங்கத் தயார் செய்வார். உலர்ந்த துணிகளை
எடுத்து மடித்து வைப்பார். தோய்க்க வேண்டிய துணிகளை எடுத்துத் தனியே கூடையில் போட்டுத்
தயாராய் வைப்பார். கட்டில், மெத்தை, நாற்காலி என்று பலவற்றையும் பகுதி பகுதியாய்த்
துடைத்து சுத்தம் செய்து, வீடு எவ்வளவு நீட்டா
இருக்கு? என்று வருபவர் வியக்கும் வண்ணம் ஆக்கி வைப்பார்.
இதிலெல்லாம் அவருக்கு ஒரு
மனதார்ந்த திருப்தியும் நிறைவும் இருந்தது . ஏனென்றால் இவை எல்லாமும் வீட்டில் இருந்து
கொண்டே நூறடி சுற்றளவில் சுற்றிச் சுற்றி வந்து செய்து கொண்டிருப்பவை. இணக்கமான மனநிலையில்
தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள் என்று பிரதி பலன் கருதாத தியாக மனநிலையில் அல்லது
நிச்சலன மனநிலையில் அவர் விரும்பிச் செய்பவை. அவசரத்துக்கு சட்டென்று பாத்ரூமுக்குள்
நுழைந்து கொள்ளலாம். எந்தச் சிரமமும் இல்லை.
இதை விட்டு விட்டு வெளியில்
சென்று சுற்றுவதில் அவர் மனது ஏனோ இணங்கவில்லைதான். குறிப்பாக அவரது தற்போதைய உடல்
ஸ்திதி. மனநிலை. எல்லாவற்றிலிருந்தும் விலகி நிற்கும் மனப்பாங்கு. எதுவும் கூடவரப்போவதில்லை
என்கிற புரிதல். கொஞ்ச நாளாகவே மனம் தனிமை, தனிமை என்று அரற்றிக்கொண்டேயிருப்பது. எல்லாமும்
அலுத்து விட்டதுதான். உறவுகளும் கூட என்றே சொல்லலாம். என்ன பெரிய உறவு? அப்படியா பாச
பந்தத்தில் இழைந்து திழைக்கிறோம்? அவரவர் பாடு அவரவருக்கு. நீ சௌக்கியமா…நான் சௌக்கியம்….!
என்கிற ஒற்றைக் கேள்விதான்.
எந்த சந்தோஷத்தையும் அவர்
மனது ஏற்க மறுக்கிறது. எல்லாமும் தோன்றி மறைபவை, எவையும் இந்த உலகத்தில் நிரந்தரமானது
அல்ல, இந்த ககனத்தில் தோன்றியதெல்லாமும் இந்த ககனத்திற்கே. எதுவும் இங்கிருந்து எடுத்துச்
செல்ல முடியாது. இந்த மண்ணில் உள்ளவையெல்லாம் இந்த மண்ணுக்கே…! ஆத்ம ஞானம் ஒன்றே மனிதனைக்
கடைத்தேற்றுவது…பக்தியும், தியானமும்தான் அதை அடையாளம் காட்டும். அர்த்தப்படுத்தும்…மற்ற
எல்லாமும் வெறும் பிரமை… பிரேமை…. !
கிளம்பலாமாப்பா….! – தயாளனின் குரல் இவரை
நனவுலகுக்குக் கொண்டு வந்தது. பெரியநாயகி, மருமகள் தயாளினி, பேரன், பேத்தி…ஒரு படையே கிளம்பியாயிற்று. மொத்தம்
ஆறு டிக்கெட்….
என்னை ஏம்ப்பா வற்புறுத்தறே?
விட்ரேன்….-என்றார் இவர் சலிப்பாக.
இவ்வளவு வருந்திக் கூப்பிடுறான்.
வாங்களேன்…வந்து பேசாம உட்கார்ந்திட்டு இருக்கப் போறீங்க…இதுக்கு உங்களுக்கு வலிக்குதா?
என்றாள் பெரியநாயகி. கூப்பிட ஆளில்லேன்னா அப்பத் தெரியும்…? இது முனகல்.
பேசாம உட்கார்ந்திருக்கிறதுக்கு
இங்கேயிருந்து அம்புட்டுத் தூரம் வரணுமா? இங்கேயே சிவனேன்னு இருந்தா ஆகாதா? -என்றார்
இவர்.
சிவ…சிவா…ன்னு அங்க வந்து
உட்கார்ந்திருங்கப்பா….கபாலீஸ்வரர் கோயிலுக்குத்தான் போறோம்…உங்களுக்குப் பிடிச்ச கோயிலாச்சே…!
உண்மைதான் அவன் சொல்வது.
அது என்னவோ அந்தக் கோயிலில் ஒரு ஈர்ப்பு. தொன்மம் மிளிரும் ஆலயம். பிறந்து வளர்ந்த
சொந்த மண்ணின் அம்மன் கோயிலுக்குப் போய் வருவதுபோல் ஒரு திருப்தி.
நிறைவு. வானுயர்ந்த அந்த கோபுரத்தைப் பார்த்துக் கண்மூடி தியானித்தாலே போதும்.
இதென்னடா பெரிய அன்புத் தொல்லையாப்
போச்சு? என்றவாறே எழுந்தார் கோபாலன். எம்புட்டுச்
சொன்னாலும் விடமாட்டாங்க போல்ருக்கே? ஒட்டிண்டதைப் பிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…!
வாயை மூடிண்டு கிளம்பி வாங்க…என்னத்தையாவது
உளர்றது?.-சமயம் பார்த்து வாங்குகிறாள்.
வெளிலதான நைட் டிபன்? என்றார் பையனைப் பார்த்து.
சட்டென்று அந்த நினைப்பு தலை காட்டியது.
தயாளன் அப்பாவைப் பார்த்து
அர்த்தத்தோடு புன்னகைத்தான்.
பின்னே? கோயில் முடிக்கும்போதே
மணி ஒன்பது ஆயிடும்…அப்புறம் வீடு வந்து, செய்து, சாப்டுட்டுப் படுக்கிறதுன்னா மணி பன்னெண்டுதான்.!.
அப்டியே எதுத்தாப்ல எதாச்சும் ஒட்டலாப் பார்த்து நுழைய வேண்டியதுதான்…
போறது போறே…நல்ல தரமான ஓட்டலாப்
பார்த்துப் போ. காரமா சூப்புக் கிடைக்கும்தானே?
கேள்வியைப் பாரு…இந்த வயசுல
அய்யாவுக்கு சூப்புக் கேட்குதாக்கும்? வயித்துக்காகாதாக்கும். நாக்கு ருசியே இன்னும்
போனபாடில்ல….! என்னவோ சந்நியாசி மாதிரிப் பேசறது? எல்லாம் நடிப்பு…! – தோளில் நொடித்துக் கொண்டு பெரியநாயகி படியிறங்கியபோது
கமுக்கமாய் நாய்க்குட்டி போல் கோபாலனும் பின்தொடர்ந்தார்.
---------------------------------















