16 மார்ச் 2024

 

'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம்


ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும்ச் உசரித்தால் கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டுதான் பாக்கியிருக்கிறது இவருக்கு. அதற்குள்ளாகவாவது இவர் மனதில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிக் காத்திருக்கிறேன்.       அப்பழுக்கில்லாத ஆசாமி. நல்லவர். ஆனால் வல்லவர் இல்லை.

      அதாவது சாமர்த்தியசாலி இல்லை என்று சொல்ல வந்தேன்.       உலகமே கை கோர்த்திருக்கிறது என்னோடு. இவருக்கு மட்டும் என்ன கொள்ளை? என்ன இப்படிக் கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். அவர் மேலுள்ள அதீதக் கோபம் என்னை அப்படிக் கேட்க வைக்கிறது.        

                                                                                          காரணம்  நிரந்தர வேலை கிடைக்குமுன் சுமார் ஐந்து வருடங்கள் பல அலுவலகங்களிலும் தற்காலிகமாகப் பணியாற்றி நல்ல அனுபவத்தைச் சேகரித்திருந்தார். ஆனால் அங்கும் இவர் என்னை எப்போதும் நெருங்க விட்டதில்லை. சீந்தியதேயில்லை. அதுதான் சரியான வார்த்தை.  

      பரவால்ல...இருக்கட்டும்.......என்று பலரும் நெருக்கியிருக்கிறார்கள். சட்டையில் திணித்திருக்கிறார்கள். விரலால் கூடத் தொட மாட்டார். அவர்களைக் கொண்டே எடுக்கச் சொல்லி விடுவார்.  .இம்மியும் அசைந்து கொடுத்ததில்லை. அதெல்லாம் உங்களோடயே....என்று கண்ணியமாகச் சொல்லி விலகி விடுவார். ஒரு மென்மையான புன்னகையோடு அவர் விலகுவதே தனி அழகு. அவரது உறுதியின் அடையாளம் அது.. சலனமில்லாத மெய்ப்பாடு. நானே அதிர்ந்து போயிருக்கிறேன். அவரோடு எப்போது கை குலுக்குவது என்று எண்ணி எண்ணி ஏங்கியிருக்கிறேன்.

      வெவ்வேறு ரூபத்தில் நான் இருக்கிறேன் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். ஆபீசே பஜ்ஜி, வடை, டீ...காப்பி என்று கொண்டாட்டமாய் இருக்கும். ஒப்பந்ததாரர்களின் உபயம். எளிய மனிதர்கள்...சுலபமாய் வளையக் கூடிய யதார்த்தவாதிகள். மிடில் க்ளாஸ்....பிலோ மிடில் க்ளாஸ்....வலிய வருவதை ஒருபோதும் ஒதுக்கியதில்லை. அப்படி மறுப்பது பாபம் என்கிற கருதுகோளில் நிற்பவர்கள். யார் மனதையும், எதற்காகவும் புண்படுத்தக் கூடாது என்ற கொள்கையுடையவர்கள்.

        சிறிதும் சலனமில்லாமல் எழுந்து சென்று டீக்கடைக்குப் போய் தன் பையிலிருந்து பைசா எடுத்துக் கொடுத்து தேநீர் அருந்திவிட்டு அமைதியாக வந்து உட்கார்ந்து கொண்டு தன்பாட்டுக்கு வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த இடத்திற்கே பொருந்தாதவர் என்பது துல்லியமாய்த் தெரியும். ஆனாலும் அலுவலகங்கள் எப்போதும் தன் கடமையை ஒழுங்காகச் செய்பவர்களைக் கை கழுவுவதில்லை. அவர்கள்தான் அந்த அவர்களுக்கு எப்போதுமான அரண். வேலை செய்பவர்களுக்கு வேலையைக் கொடு, அல்லாதவர்களுக்கு சம்பளத்தைக் கொடு என்கிற தாரக மந்திரம் என்றோ நிலைபெற்றுவிட்ட பொன்னுலகம் அது.     

      அவர்கள் யாரும் இவரை எப்போதும் வெறுத்ததில்லை. தம்பி...தம்பி...என்று அன்பாகவே வைத்துக் கொள்வார்கள். ஆரம்ப காலம் அது. அந்தப் பங்கு எப்போதும் பரவலாகிக் கொண்டிருக்கிறதே என்கிற ஆதரவாகக் கூட இருக்கலாம்.         அனுப்பும் ஒவ்வொரு பேப்பரிலும் லட்சுமி தேவியின்  முகம் பார்க்கும் அத்தனை பேரின் நடுவில் நிச்சலனமாய் அப்படி ஒருவன் இருக்கவே முடியாது. லட்சுமிதேவின்னா சாமிய்யா...அந்தப் பேரப்போய் அதுக்கு சூட்டுறீங்க...இப்படியா களங்கப்படுத்தறது? என்று எரிந்து விழுந்திருக்கிறார்                                                                    அலுவலகத்தில் உள்ளோர் அதிகாரியைத் தூண்டினார்கள். சொல்லிக் கொடுத்தார்கள். பிரச்னையான ஆளுக நமக்கெதுக்கு சார்...? என்று லேசாக தூபம் போட்டார்கள். தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாமும் மனுஷன்தானே என்கிற பயமிருந்தது அவர்களுக்கும்.           

      இவரது இந்த குணத்தினால் இதுவரை இவர் தமிழ்நாட்டில் போகாத இடமில்லை. எங்கு போட்டாலும் தயங்காமல் மூட்டையைக் கட்டி விடுவார். வீடு அதுபாட்டுக்கு ஒரு ஊரில் இருந்தது. இவர்தான் அங்கங்கு பறந்து கொண்டிருந்தார். நம்மை இதனால்தான், இதற்காகத்தான் மாற்றம் செய்கிறார்கள் என்று புரிந்துதான் செல்கிறாரா? அல்லது துறை என்றால் இம்மாதிரி மாறுதல் என்பது வந்து கொண்டுதான் இருக்கும் என்று விகல்பமின்றி நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்று தோன்றியது பலருக்கும். உள்ளுக்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். நாயா அலையுறான்யா....!       அவர் எங்கு போனாலும் நானும் அவருக்குத் துணையாக, அவரறியாது பின்னால் போய்க் கொண்டுதான் இருந்தேன். அவர்தான் என்னை ஒரு நாளும் திரும்பிப் பார்த்ததேயில்லை. என்னங்க...அனுபவமில்லாத ஆளா இருக்காரு...டிபார்ட்மென்டுக்குப் புதிசு போல்ருக்கு என்று அவரைப்பற்றித் தெரியாதவர்கள் கூறினார்கள். தம்பி...ஆபீஸ் எப்படி ஃபங்ஷன் ஆகுதோ அதுபடி ஒத்துப் போகப் பாருங்க...அதுதான் உங்களுக்கு நல்லது....என்றார்கள். காலைல பத்துலேர்ந்து, சாயங்காம் அஞ்சரை வரை ஃபங்ஷன் ஆகுது...நான்தான் முன்னாடியே வந்து, பின்னாடிதானே போறேன்...வேறென்ன ஒத்துப் போகணும்? என்றார். இந்த பதில் இருப்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டியது. இவன் நம்மை கிண்டல் பண்றான்யா...இருக்கட்டும்...இருக்கட்டும்...ஒரு நாளைக்கு வசமா ஆப்பு வைப்போம்....என்று கருவிக் கொண்டார்கள். எண்ண அளவில் பலரையும் தொந்தரவு செய்தது அவரது இருப்பு.                                                                                 இந்த மாதம் உங்க டர்ன்....டிரஷரிக்குப் போறது, பில் பாஸ் பண்றது, கேஷ் பண்றது...எல்லாம் நீங்கதான்... என்று மேலாளர் சொன்னபோது, ம்ம்...போறேன்....என்று ஆள் கிளம்பியாச்சு. அங்க போனாலும் பிரச்னைதான். சார்...என் ஜி.பி.எப்...என்னைக்குப் பாஸ் பண்றது...என்னைக்கு நான் பணத்தக் கண்ணால பார்க்குறது? இந்தாள அனுப்பிச்சா வேலையாகுமா சார்...நானே போறேன்....என்று கிளம்பினார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்றார்கள். உனக்கு வேணும்னா நீ கொடு...எனக்கென்னய்யா வந்திச்சு? பில் ப்ராப்பரா இருக்குன்னா பாஸ் பண்ண வேண்டிதான அவன் வேலை? அதுக்கென்ன கை நீட்டுறது? ஒழுங்கா பாஸ் பண்ணுங்கன்னுதான் என்னால சொல்ல முடியும்...தரகு வேல பார்க்குறது எல்லாம் என்னால ஆகாது.....                       அந்த வாரத்தில் டிரஷரிக்குப் போவது நின்றது. ஆபீஸ்ல உட்கார்ந்து, இருந்த எடத்துல வேலயப் பார்க்குறதுக்குத்தான் சார் அந்தாளு லாயக்கு....நான் போறேன் சார்...என்று கில்லாடி சிலர் வலியக் கிளம்பினார்கள். பில் பாஸ் பண்ண, கேஷ் வாங்க என்று கிளம்பினால் மத்தியானம் சாப்பாட்டுக்கு மேல் நாலு மணி போல் மீண்டும் ஆபீஸ் வந்து, ஒரு மணி நேரம் பேருக்கு பெஞ்சைத் தடவி விட்டு வீட்டுக்குக் கிளம்பி விடலாமே...! இந்த வசதி ஆபீசிலேயே ஆணியடித்தாற் போல் உட்கார்ந்து கிடப்பதில் கிடைக்குமா? ஏதாச்சும் அவசர ஃபைல் என்றால் அவர்களே, அதாவது மேலாளரே எடுத்து செய்து கொள்வார்...பொறுப்பு விட்டது. அநாவசிய டென்ஷன் கிடையாது....டிரஷரி என்று கிளம்ப, அந்த வளாகத்தில் நண்பர்களைப் பார்க்க,பேச...டீக்கடையில் போய் நிற்க, வடையைத் திங்க...என்று பொழுது கழியும்...அந்த சுகம் எங்கு கிடைக்கும்?

      என்ன..உங்க சர்வீஸ் ரிஜிஸ்டரைப் பார்த்தா எல்லாம் ஒரு வருஷம், ஒன்றரை வருஷம், அதிக பட்சம் ரெண்டு வருஷம்னே இருக்கு...? எங்கயுமே நிலைக்கல போல்ருக்கு... ஏனிப்படி...? என்று அலுவலக மேலாளர் கேட்டதற்கு....எனக்கென்ன தெரியும் சார்...போட்டாங்க...போனேன்...என்று பட்டுக் கொள்ளாமல் பதில் சொல்லி அமைதியாகி விடுவார்.   அவரை யாரும் அதற்குமேல் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தது என்பதுதான் உண்மை. வேலையில் கச்சிதமான ஆளாயிற்றே.... 

      கொஞ்சம் கொஞ்சமாய் வைங்க...எதுக்கு ஒரே நாள்ல இத்தனை ஃபைலை இறக்குறீங்க...? வேலையே செய்யாத ஆட்களுக்கு மத்தியில் இப்டி ஒரு பிரகிருதி....என்று ஒரு நாள் மேலாளர் முனகியது எப்படியோ அவர் காதுக்குப் போய்விட்டது. சின்சியரா வேலை செய்றவனை பாராட்டாட்டாலும், குத்தம் குறை சொல்லாமயாச்சும் இருக்கலாம்ல...அதுக்கு வக்கில்ல இங்க....என்றுவிட்டார் பதிலுக்கு. இந்த பதிலும் மேலாளரின் காதுக்குச் சென்று விட்டதுதான். வேறென்ன....அடுத்தாற்போல் டிரான்ஸ்ஃபர்தான். தயாராயிருக்கச் சொல்லு அந்தாள....!                     அட போய்யா...இந்த மடம் இல்லன்னா...சந்த மடம்....இதுதான் அவரின் பதிலாய் இருந்தது. சுதந்திரநாதன் என்று யார் பெயர் வைத்தது இவருக்கு என்று நினைத்துக் கொண்டேன் நான். இவரைப்பற்றி விசாரித்த இடத்திலெல்லாம் இப்படித்தான் சொன்னார்கள்....நல்ல ஆள்தாங்க...ஆனா ஒத்துவரமாட்டாரு...-ஊர் பூராவும் இதே பேச்சாயிருந்தது. மாறுதல் என்கிற பெயரில் உள்ளூரிலேயே இவரை வேறு ஆபீசுக்கு மாற்றி விடலாமென்றாலும்...எனக்கு வேண்டாம்...உனக்கு வேண்டாம் என்றார்கள்.சரி...பாவம் போகட்டும் என்று பக்கத்தில் எதாச்சும் ஊருக்கு அனுப்புவோமென்றாலும், தன் விருப்பத்தைத் தெரிவிப்பதில்லை அவர். அதெல்லாம் என்னால எதுவும் கேட்க முடியாது சார்...நீங்க எங்க போடணுமோ போடுங்க...எனக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லை...போற எடத்துல வேலை செய்தா  சம்பளம் கிடைக்குமுல்ல...அது போதும் எனக்கு....என்று முறித்துச் சொன்னார். இவரின் இந்த பதிலிலேயே டென்ஷனாகிப் போனார்கள் பலரும். பல மாதங்களாய்க் காலியாய்க் கிடக்கும் இடத்திற்குத் தூக்கியடித்தார்கள். அங்க போய் குப்பையாக் கெடக்கும் ஃபைல்களக் கட்டியழட்டும்...என்று அவர் காது கேட்கவே சொன்னார்கள்.                                     அவர் மறுத்தது ஒன்றே ஒன்றைத்தான். தணிக்கைப் பிரிவில் போட்டார்கள் ஒரு முறை. ஊர் ஊராய்ப் போகும் வேலை அது. இங்கிருப்பதை விட அது மேல் என்று கிளம்பினால் அதுவும் ஒத்து வரவில்லை. எனக்கே சந்தேகமாய்த்தான் இருந்தது. நான் பரிபூர்ணமாய் நிறைந்திருக்கும் இடம் அது. தணிக்கை மறுப்புப் பத்திகள் நிறைய எழுதிக் கையில் வைத்துக் கொண்டு அலைவார்கள் குழுவினர். கடைசி நாளில்தான் அறிக்கை தயாரிக்கப்படும். அதுவரை மறுப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்துவிட்டால் அந்தப் பத்திகளை எடுத்து விடலாம். அதுவும் திருப்திகரமாய் இருந்தாக வேண்டும். திருப்திகரமாய் இருந்தாலும் இது சரியில்லை, அது சரியில்லை என்று சொல்லி அல்லாட விடலாமே...பேரம் படிய வேறு என்னதான் வழி...! பேரம் படிந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள் மறுப்பாவது ஒண்ணாவது....அந்தப் பத்திகளே காணாமல் போகும்.  அப்படிக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டவை ஏராளம்...ஏராளம்...இப்படியெல்லாம் உலவும் குழுவில் இந்தாளைக் கொண்டு போட்டால் விளங்குமா? தணிக்கைக் குழுவிற்கு என்று உள்ள கண்காணிப்பாளரே சொன்னாலும் கேட்கமாட்டானே இந்த ஆள். அதெல்லாம் முடியாது சார்...டிஃபெக்டை ரெக்டிஃபை பண்ணச் சொல்லுங்க...அப்ஜெக் ஷனை டிராப் பண்றேன்...இந்த ஒரே பதிலைத்தான் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் சுதந்திரநாதன். என்னடா இது வம்பாப்போச்சு....பூனைய மடில கட்டிட்டு சகுனம் பார்த்தாப்போல ஆயிடுச்சே...என்று மறுநாளே எனக்கு இந்த ஆள் வேண்டாம்...வேறே டீமுக்கு மாத்துங்க...இல்லன்னா எதாச்சும் ஆபீஸ்ல தூக்கிப் போட்டுக்குங்க...என்று கையைக் கழுவினார் க.கா.      நம்மாளா அசறுவது? நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு கமுக்கமாய்க் கிடந்தார். இருடி இரு...ஆர்டர் வந்திட்டிருக்கு உனக்கு...என்று கறுவினர் குழுவிலுள்ளோர். மயிரக் கட்டி மலையையே இழுப்பன்யா நான்...போய்யா...அதுக்கெல்லாம் வேறே ஆளப்பாரு.... என்று நம்மாள் நிற்க....ஆடிட் பிரிவு அத்தோடு முடிந்தது தனிக் கதை.

      எதற்கும் ஆள் அசருவதாய் இல்லை. இவங்கள மாதிரி ஈனப் பிழைப்புப் பிழைக்கிறதுக்கு, போட்ட எடத்துக்குப் போறது ஒண்ணும் தப்பு இல்ல......என்று விட்டு மொத்தமாக ஆபீசைப் பார்த்து, எல்லாருக்கும் வர்றேன் என்று ஒரே கும்பிடாய்ப் போட்டுவிட்டுக் கிளம்பி விட்டார். இதற்குப் பெயர் மன தைரியமா? நேர்மையா? வீம்பா?  அல்லது அசட்டுத் துணிச்சலா? என்று தோன்றும் பார்ப்பவர்களுக்கு.    நாளைக்கு இவருக்குக் கல்யாணம் ஆச்சின்னா அந்தப் பொண்ணை வச்சு காப்பாத்துவானா இந்தாளு? இல்ல அந்தப் பொண்ணும் கோவிச்சிட்டுப் போயிடுமா இவனோட எப்டிக் குப்பை கொட்டுறதுன்னு? சுத்தக் கிராக்கா இருப்பான் போல்ருக்கே...-இப்படித்தான் சொன்னார்கள் எல்லோரும்.          

      எனக்குத்தான் இவரை நினைக்க நினைக்கப் பரிதாபமாய் இருந்தது. ஊரோடு ஒத்து வாழ் என்று இல்லாமல் இப்படி விநோதமாய் அலைகிறாரே...? என்று. ஒரே பிரச்னை அதுதான். இவ்வளவு வேண்டும், அவ்வளவு வேண்டும், இவ்வளவு கொடுத்தால்தான் செய்வேன், அவ்வளவு கொடுத்தால்தான் நடக்கும் என்று டிமாண்ட் பண்ணாமல், கொடுப்பதை வாங்கிக் கமுக்கமாய்ப் பையில் போட்டுக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் எந்த வம்புமில்லையே...! இந்த எளிய சூட்சுமம் இந்தாளுக்குத் தெரியவில்லையே...தெரியவில்லையா அல்லது தெரிந்தும் தெரியாதது போலிருக்கிறாரா? அட அது கூட வேண்டாம்...எனக்கு வேண்டாம்...ஆனால் என் பங்கை ஆபீசில் எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்து விடுங்கள்...என்று சொன்னாலே போதுமே...தோளில் வைத்துக் கொண்டாடுவார்களே...! கை நீட்டி வாங்கத்தான் வேண்டாம்...அவ்வப்போது பஜ்ஜி, வடை, காபி என்று வரும்போதாவது எதையும் கண்டு கொள்ளாமல் வாயில் ஊற்றி, வயிற்றில் போட்டு வைக்கலாமில்லையா? அதையும் மறுத்தால்? அதனால்தானே எல்லோருக்கும் கோபம் வருகிறது? மந்தையில் ஒரு ஆடு மட்டும் எப்படித் தனித்து மேய முடியும்? எதையோ மடியில் கட்டிக் கொண்டு ஜோசியம் பார்க்க முடியுமா? என்றதுபோல் இந்தாளைக் கண்ணுக்கு முன்னே வைத்துக் கொண்டு எந்தக் காரியத்தைத்தான் செய்ய முடியும்? என்றாவது, எதையாவது செய்து வைத்தால்? எகனைக்கு முகனையாக எதிலாவது மாட்டி விட்டு விட்டானென்றால்? விதிமுறைகளும், நடைமுறைகளும் நன்கு அறிந்தவன்...யாரிடமும் எந்த உதவிக்கும் நிற்காதவன், யாரையும் எதற்கும் அணுகாதவன்...அவசியமில்லை என்று நெஞ்சை நிமிர்த்துபவன்...யார்தான் விரும்புவார்கள்?               இப்போது இவர் இருக்கும் ஸ்டேஷன் 13-வது. நம்பரே சரியில்லை. எத்தனை நாளைக்கோ இது? ஒரு பணியாளருக்கு மூன்றாண்டுக்கு மேல்தான் ஒரு அலுவலகமே மாறும். அதுவும் உள்ளூரில். இவர் ஊர் ஊராய்ப் பயணிக்கிறார். அவரது இருப்பு அவரை அப்படி அலைக்கழிக்கிறது.மாதக் கணக்கில்தான் ஒரு அலுவலகத்தில் இவர் பணியாற்றியிருக்கிறார். வருடக் கணக்கு என்கிற நாமதேயமே இவர் சரி்த்திரத்தில் இன்றுவரை இல்லை.   அநேகம் பேருக்கு சுதந்திரநாதன் எங்கிருக்கிறார்? எந்த மாவட்டத்தில் பணி புரிகிறார் என்பதே தெரியாது. அவரைப் பற்றிய கவனமும் எவருக்குமில்லை. இன்ன இடம் என்று நிலையான ஒரு முகவரி இல்லைதான் அவருக்கு. இப்போது எந்த ஊரில் எந்த அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்று அவர் வீட்டுக்கே தெரியுமோ என்னவோ? இப்படியாகத்தான் அவர் சர்வீஸ் கழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும்போது என் மனமும் வேதனையுறுகிறதுதான். நம்மால் ஒரு நேர்மையான பணியாளர் இவ்வளவு அவதியுற வேண்டியிருக்கிறதே என்று நினைக்கையில் என் மனமும் கசிகிறதுதான். இன்னொரு செய்தி....விரைவில் அவருக்கு மேலாளர் பதவி உயர்வு வேறு வரவுள்ளது என்பதுதான் அது.                                                                                            எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ அல்லது நான் அவரிடம் மாட்டிக் கொண்டு எப்படி முழிக்கப் போகிறேனோ...? எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நான் போய் ஆண்டவனைச் சொல்கிறேனே என்று தோன்றுகிறதா?  அப்பொழுதாவது அவருக்கு ஒரு நிரந்தர முகவரி கிடைக்கட்டுமே என்றுதான். அதிலாவது ஓரிடம் என்று அவர் நிலைக்க மாட்டாரா? அவர் குடும்பம் செழிக்காதா? மகிழ்ச்சியாக இருக்காதா?  அந்த நந்நாளுக்காகக் காத்திருக்கிறேன் நான். பிறகு சாவகாசமாய் கடைசி காலத்திலாவது அவரை மசிய வைக்க முயலலாமே?                              நான் அவருக்காக இப்படி ஏங்கிக் கொண்டிருக்க அந்த அதிசயம் நடந்தே விட்டது. சுதந்திரநாதன் எப்படியோ மீண்டும் தன் குடும்பம் இருந்த ஊருக்கே போஸ்டிங் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். இந்த அதிசயம் எப்படி நடந்தது. யாராலேயும் நம்ப முடியவில்லை. என்னால் ஊகிக்க முடிந்தது. மேலாளர் பதவி உயர்வில் சொந்த ஊர் வந்திருந்தார். ஒரு பணியாளர் ஓய்வு பெறும் கடைசி வருடத்தில் அவரை இடமாற்றல் செய்யக் கூடாது என்று ஒரு விதி உள்ளது. அதன்படி ப்ரமோஷன் லிஸ்டில் இருக்கும் அவரை வேண்டா வெறுப்பாகத் தூக்கியடித்தது தப்புதான். அடங்கிக் கிடந்தால்தானே? ஆனால் அதற்குள் இந்தப் பதவி உயர்வு கைக்கு வந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான். எந்த அலுவலகத்தில் யாருக்கும் மசியாத, சீனியர் எழுத்தராய் அவர் இருந்து கழித்தாரோ அதே அலுவலகத்தில், அவர் அன்றாடம் சண்டையிட்ட, பலருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்த,  யாருக்குத்  தினமும் பொழுது விடிந்து பொழுது போனால் தலைவலியாய் இருந்தாரோ அவரைத் தூக்கி விட்டு விட்டு அந்த இடத்தில், அதே இடத்தில், மனதில் கறுவியது போல், சபதம் நிறைவேற்றியது போல் வந்து அமர்ந்தார் சுதந்திரநாதன்.                                               கடைசி ஒரு வருடத்துக்கு உள்ளூருங்கிற சலுகைல இப்டிக் கூட ஒருத்தன் வந்து உட்கார முடியுமாய்யா? அதுவும் அந்தத் திமிங்கிலத்தல்ல தூக்கி விட்டிருக்கான்? எப்டிய்யா நிகழ்ந்தது இந்த அதிசயம்? எவ்வளவோ செல்வாக்குல மிதக்குற அந்தாளுக்கு இம்மியும் தெரியாம இது நடந்து போச்சேய்யா...? இதப் பெரிய பிரஸ்டிஜ் இஷ்யூவால்ல அவரு நெனப்பாரு...?

      எல்லோரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இனி என்ன நடக்குமோ என்கிற பயத்தில் நாமும் வேணும்னா எடத்த மாத்திக்குவமா என்று சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். கட்டக் கடைசியாக நான்தான் அங்கே பயன்பட்டிருப்பேனோ என்கிற சந்தேகம் மட்டும் எனக்குள் விடாது நமுட்டிக் கொண்டிருந்தது. முதலும் கடைசியுமா ஒரு தடவை…ஒரே ஒரு தடவை நான்தான் ஜெயிச்சேன். சுதந்திரநாதன்….தந்திரநாதனானது எனக்கு மட்டும்தான் தெரியும். ஒருவேளை நாள் செல்லச் செல்ல மற்றவர்களுக்கும் தெரிய வரலாம். ஆயிரந்தான் சொல்லுங்க…மனுஷன் சுயநலமானவன்தான். இல்லன்னா இப்படிப்பட்ட கல்லுளிமங்கனையும் நான் அசைச்சுப் பார்க்க முடியுமா? பிரகிருதின்னா அசலானவன்னு அர்த்தம். இயற்கையா…இயல்பா…னவன்னும் பொருளுண்டு. கடைசியா அந்த அசல நகலாக்கிட்டேன் பார்த்தீங்களா? அவன் இயல்பையே மாத்திட்டேன்.  அப்போ யார் ஜெயிச்சா? நான்தானே…!!!    

                                                ---------------------------------------------------------

                            

                                         

14 மார்ச் 2024

 “மனச் சாய்வு“, ஜெயந்தன் சிறுகதை-வாசிப்பனுபவம்----------------------------------------------------------------------------

மனசாட்சி உள்ளவனாகப் படைப்பாளி இருக்க வேண்டும். உள்ளொன்றும் புறமொன்றுமாக இருத்தல் நல்லதல்ல. தன் உண்மையைத் தானே அறிந்திருத்தல் அவசியம். தான் எங்கே நிற்கிறோம் என்பது புரிந்திருக்க வேண்டும்.
அதை நியாயமாய் எவன் உணர்கிறானோ அவனே தன் பயணத்தை திடமாய்த் தொடர முடியும். புற வாழ்க்கைச் சிக்கல்கள் அவனைக் கட்டிப் போடாமல் இருந்தால். அம்மாதிரித் தன் எழுத்து வன்மையை உணர்ந்து நகர்ந்த படைப்பாளிகள் மிகச் சிலர்தான். அவர்கள் அவர்களிடத்தில் ஆணித்தரமாய் நின்றார்கள். அவர்களைத் தேடி வருபவர்கள் வந்தார்கள்.
இப்படி ஒருவர் வீர்யமாய்த் தொடர்ந்து எழுதுகிறாரே…அவரைப் பார்க்க வேண்டுமே….என்று அறிந்து பாராட்டி…நீங்கள் நம் இதழில் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொன்னார் அந்தப் பிரபல வார இதழின் ஆசிரியர். அந்த மாதிரி ஒரு கௌரவம் கிடைக்க வேண்டும் படைப்பாளிக்கு.
அப்படியொரு ஆணித்தரமான எழுத்து வன்மை அமைய வேண்டும். எடுத்துக் கொண்ட கருவை முதலில் தான் உள்வாங்கி, அசை போட்டு, தெளிவு பெற்று –கையில் பேனாவை எடுத்தால்தான், சொல்ல வந்ததை, சொல்ல நினைத்ததை

பிறத்தியாருக்கும் தெளிவாகச் சொல்ல முடியும். தனக்கே புரியாமல் எழுதப் புகுந்தால், என்ன சொல்றான் இந்தாளு? என்று சுலபமாய் நகர்ந்து விடும்-ஒதுக்கி விடும் அபாயம் நிறைய உண்டு.
இவர் ஒரு போதும் அப்படியிருந்ததில்லை. ஆணித்தரமாய் சொல்கிறேன்-கேட்டுக்கோ – என்று எழுதியவர். பொட்டில் அறைந்ததுபோல் படீர் படீரென்று முன் வைத்தவர். அவனவன் பக்கம் அவனவன் நியாயம் என்பது உண்மையானால், அதை அவரவர் நிலையில் வாதிட்டு வெற்றி கண்டவர்.
அழுத்தம் திருத்தமான எழுத்து என்று சொல்வது வெறும் வாய் வார்த்தையல்ல. இவரின் படைப்பில் கல்வெட்டுப் போல் பதிந்து , அதுதான். இவர மாதிரி இவர்தான். இவர் மட்டும்தான்.அதுதான் வித்தியாசமான, தனித்துவமான எழுத்து. மிகக் குறைவாக இருந்தாலும் காலத்துக்கும் பேசப்படும் எழுத்து.
“மனச் சாய்வு” என்ற கதையாடலுக்கு இவ்வளவு முகமன் சொல்லி ஆரம்பித்தால்தான் அந்தப் படைப்பாளிக்குப் பெருமை. திறமை மிகுந்தவர்களைக் கொண்டாடும் மனம் வேண்டும். நாம் செய்யாததை, செய்ய நினைத்து ஆகாததை, இவர் செய்து விட்டார்…எப்படியோ பதிவாகிவிட்டது எழுத்துலகில். அந்தவகையில் திருப்தியோடு நிறைவு கொள்ள வேண்டும். அந்த மேம்பட்ட மனநிலையில் இந்தக் கதையாடல்:-
ஒரு கதையைப் படிப்பதும், ஆழ்ந்து ரசிப்பதும் பெரிதல்ல. அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது எவ்வாறு முன் வைக்கிறோம் என்பதே முக்கியம். படைப்பாளி எழுதியதுபோலவே சொல்லி விடுவது சரியா? எதை மையப்படுத்தி அந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அந்தக் குறிப்பிட்ட கருத்தை அங்கங்கே எப்படியெப்படித் தொட்டுச் செல்கிறார் என்பதை ஊன்றிக் கவனித்து, அப்படியான நகர்த்தல் மூலம் சொல்ல வந்த கருத்து எவ்வாறு பலம் பெறுகிறது எப்படித் தன்னை முகிழ்த்துக் கொள்கிறது என்பதை வாசக மனத்தில் ஆழப் பதியும்படி நிலை நிறுத்துவதுதான் கதை சொல்லியின் தலையாய பணி.
சிதம்பரநாதன் அந்தப் பெண்ணைக் கூர்ந்து கவனித்தார். பெண் மூக்கும் முழியுமாக இருக்கிறாளே தவிர குறிப்பிட்ட ஜாதியாக எந்த முத்திரையும் இல்லை.
கோவிச்சுக்காதேம்மா. இவன் அப்பாவோட பேசுறதுக்காக ஒரு புள்ளி விவரம் தேவைப்படுது. உங்க ஜாதி பெயர் என்ன?
அந்தப் பெண் பட்டென்று அழுத்தம் திருத்தமாக பொட்டில் அடித்தாற்போல் சொன்னாள்:-“பறையர்”
அப்பா தங்கள் காதல் கல்யாணத்துக்கு தடை சொல்றார் என்று ராஜசேகரன் சொல்ல, என்ன பிரச்னை என்று இவர் கேட்க ஜாதி என்று ஒரே வார்த்தையில் அவன் சொன்னது இப்போது சுரீரென்றது இவருக்கு.
ஒரு கணம் திகைக்கிறார். மறுகணம் சபாஷ் என்கிறது மனம். எத்தனையோ தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பதவியினால், பொருளாதார மேம்பாட்டினால் மேலே வந்த பிறகு தங்கள் ஜாதியைப் பற்றிச் சொல்லக் கூச்சப்படுகிறார்கள். அல்லது மெதுவாய்ச் சொல்கிறார்கள். மறைக்கிறார்கள். மெல்லிய தொனியில் உறரிஜன் அல்லது எஸ்.ஸி., என்று சொல்லக் கேட்டிருக்கிறார். இவள் பரவாயில்லையே…பட்டென்று சொல்கிறாளே….இந்த அமைப்பை உடைத்து நொறுக்குகிறவரை எங்கள் கோபாக்னி தணியாது என்று இப்படி உரத்துச் சொல்கிறாளோ…? ஒருவகையில் இது சவாலும் கூட….
சரி…சேகர்…உங்கப்பாட்டப் பேசறேன்…..
தாங்க்யூ பெரியப்பா…..
நீ போய் நீபாட்டுக்கு உன் வேலைகளைப் பார்த்திட்டு இரு…பிரச்னையை ஆரம்பிக்காதே…அவுங்க ஆரம்பிச்சாலும்…பெரியப்பா வர்றாருன்னு சொல்லிடு….
ஒரு பிரச்னைக்கு எத்தனையோ கோணங்கள் உண்டே…! எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோணங்கள்.ரேகை சாஸ்திரம் சொல்வது போல் ஒருவனுடைய கைரேகை போல் வேறொரு கைரேகை இருக்கவே இருக்காது. ஒரு கோடாவது மாறியிருக்கும். கூட இருக்கும்….குறைய இருக்கும்…இருந்தே தீரும்….பிரச்னை மனிதர்கள் இடையேயும் இப்படித்தான்.
தன் வீட்டுக்குப் போன ராஜசேகரன் பெரியப்பா சொல்படியே அமைதி காக்கிறான். ஆனால் வீட்டில் பாட்டி என்று ஒருத்தி இருக்கிறாளே…பெரியப்பா வரும்முன் காரியம் மிஞ்சி விடுகிறது. பாட்டிகள் பிரச்னைகளின் மேல் விவாதங்களை வைப்பவர்கள். தாங்கள் இதுகாறும் தலையில் சுமந்தவைகளை, பிறர்பால் ஏற்றி வைக்க நினைப்பவர்கள். தங்களது சென்ற காலத்தை நியாயப்படுத்திப் பேசுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே சந்தோஷம்.
நான் சொல்றனேன்னு கோவிச்சுக்காதடா ராஜா….உலகத்துல படிச்சவன்தாண்டா முட்டாள்….
ஆமாம் பாட்டி…..
என்ன ஓமாம்….இல்லாட்டி உன் புத்தி ஏன் இப்டிப் போகுது?
இருமல் எப்டியிருக்கு பாட்டி…?
ஒரு மட்டா தூக்கிட்டுப் போகாமக் கெடக்கு….இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்காமப் போய்ச் சேரலாமே…?
மணப்பாற முறுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன் பாட்டி…அம்மாட்ட கேட்டு ஒரு பத்து வாங்கிக்க…..
தங்கை சாந்தா சிரிக்க… அம்மா பிரவேசிக்கிறாள்.
வாயை மூடுடி…அவன் திமிர்தண்டமாப் பேசுறான்…இவ சிரிக்கிறா…..அவன் செய்ற வேலைனால நாளைக்கு உனக்கு என்ன ஆவும்னு தெரியுமா? தெரிஞ்சா சிரிப்பு வருமா….? ஒனக்காகத்தாண்டி எங்க அடி வயிறு கலங்குது….ஒரு கீழ் ஜாதியக் கட்டினவன் வீட்டுல எவன்டி வந்து பொண்ணு கேப்பான்….
ஏன் அவளுக்கும் அந்த ஜாதியிலேயே மாப்ள தேடுவான்… - இது பாட்டி.
பாத்தா போச்சு பாட்டி…..
விளக்கமாத்தால அடிப்பேன் நாயி…வாயை மூடுடா…..
சரி…இவர்கள் கிடக்கட்டும். அசலான பிரச்னை அப்பாதான். அவர் என்ன சொல்லப் போகிறார்?
அப்பா வந்தாச்சு…. – தங்கை சாந்தா.
அப்பாவோடு இந்த விவாதம் எப்படிப் போகும் என்பதை எவராலும் யூகிக்க முடியாது. யூகித்தாலும் எழுதியவர் எவரும் கிடையாது. எந்த இடத்தில் நெருடல் என்பதை எவரும் தெளிவுறப் பகன்றது கிடையாது. எப்படியானாலும் ஏற்றுக் கொள்வது கடினம் என்றுதான் பிரச்னைகள் பயணித்திருக்கின்றன.ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுண்டு….அதுதான் ஜாதிப்புத்தி…..அது எல்லோருக்கும் உண்டு. அங்கும் உண்டு…இங்கும் உண்டு. எங்கும் உண்டு என்பதனால்தானே பிரச்னையே…!
எப்போ வந்தே…?
கொஞ்சம் முன்னாடிதாம்ப்பா…….
நீ மட்டும்தான் வந்தியா…?
ராஜசேகரன் அப்பாவை அமைதியாய்ப் பார்க்கிறான்.
இல்ல…உன் வருங்கால மனைவியையும் கூட்டிட்டுத்தான் வந்திருக்கியான்னு கேட்டேன்…
கோபத்தை அடக்கி வாசிக்கிறாரோ…தாக்குதலை ஆரம்பத்திலேயே கடுமையாக்கும் யுக்தி.
நீங்க இப்டி வரவேற்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா கூட்டியாந்திருப்பேன்….
ஒரு விஷயம் ஒரு குடும்பத்தில் எப்படி வெடிக்கும்….பெரியோர்கள் மத்தியில் அது எப்படி விகசிக்கும்…படிப்படியாக எப்படி வளரும்….? காட்சிப்படுத்தல் என்பது என்ன அத்தனை சுலபமா? இயல்பான தன்மையிலே பிரச்னையை மையமாக வைத்து படிப்படியாக அது தன் முதிர்ச்சியை நோக்கி நகர்தல் அல்லது நகர்த்துதல்-இதில்தான் படைப்பாளியின் எழுத்துத்திறனே அடங்கியிருக்கிறது.
என்னடா சொன்னே…? என்று மகனைப் பார்த்துத் திரும்பி முறைக்கிறார் நாகசுந்தரம்.
என்னங்க இது…வந்ததும் வராததுமா? – அம்மா இடையே பாய்கிறாள். எல்லாம் நீங்க செஞ்ச வேலைதான். நீங்க சீர்திருத்தம்…சீர்திருத்தம்னு பேசினீங்க…அவன் செஞ்சுட்டான்….இப்ப மொறச்சு என்ன பண்ண? – அம்மா பேசுவதை மகன் பிடித்துக் கொள்கிறான்.
நீங்க ஒரு போலின்னா எங்களுக்கும் அதையே சொல்லிக் கொடுத்திருக்கணும்…
என்னடா போலி?
ஜாதி இல்லே…மதம் இல்லேன்னு நாள் பூரா பேசுறது….கலப்புக் கல்யாணம்தான் அசல்னு சொல்றது. தனக்குன்னு வந்தா மட்டும் சீறுறது…..
காலம் பூராவும் புதிய சித்தாந்தம் பேசியவர் விட்டுக் கொடுப்பாரா என்ன…? நாகசுந்தரம் ஒன்றும் அத்தனை மசிந்தவரில்லை.
இப்பவும் அதையேதாண்டா சொல்றேன். கலப்புக் கல்யாணம் செய்யலாம்தான். ஆனா கலாச்சார மோதல் இல்லாம செய்யணும்…
ராஜசேகரன் யோசிக்கறான். இதென்ன புதுசா ஒண்ணு சொல்றாரு…இதுநாள்வரை இதச் சொன்னதில்லையே….! புது சிந்தனையா…? அல்லது புது சாக்கா….?
வெங்காயம்….ஒரு ஜாதி சைவமா இருக்கு. இன்னொண்ணு அசைவமாயிருக்கு. ஒருத்தன் சாராயத்த சொர்க்கம்ங்கிறான். இன்னொருத்தன் அதைப் பாவம்ங்கிறான். நியாய அநியாயம் ஒரு பக்கம் கெடக்கட்டும்….ஒரு ஜாதி அன் கல்ச்சர்டா இருக்கு…இன்னொன்ணு பெரும்பாலும் எல்லாரும் படிச்ச கல்ச்சர்டா இருக்கு…நாம் அவங்களுக்கு என்ன சாம்பார் வைக்கிறது? அவுங்க நமக்கு என்ன கொழம்பு வைப்பாங்க…? அவுங்க சொந்தக்காரங்க நாலு பேரு நாளைக்கி கன்னங்கரேல்னு மேல் சட்டடையில்லாம> நம்ம நடு வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்தா பொருத்தமாயிருககுமா? சோபாவுல கால் வச்சி குந்திக்கி்ட்டு வெத்தில எச்சியை எங்க துப்புறதுன்னு தெரியாம முழிச்சா எப்படியிருக்கும்? அட அதுதான் போகட்டும்…சமயல் கட்டுல சம்பந்தி அம்மாக்கள் என்னா பேசிக்கிறது? கலப்புத் திருமணம் நடக்கட்டும்…முதல்ல அது ஒரே கலாச்சார எல்லைக்குள்ள இருக்க ஜாதிக்குள்ள நடக்கட்டும்…..
ராஜசேகரன் நினைக்கிறான். இந்தியாவில் ஜாதிப் பகைமை பெருமளவு மறைந்து விட்டாலும், திருமணக் கலப்பில் இன்னும் பிரிந்துதான் கிடக்கிறது.
கலாச்சாரம் ஒண்ணுதான் உங்க பிரச்னைன்னா இந்த விஷயம் சுலபமா முடிஞ்சி போகும்ப்பா….அவுங்க நம்மள விட மேம்பட்டவங்க…அவங்க தாத்தா ஸ்சூல் தலைமையாசிரியர். அப்பா தாசில்தார். அண்ணன் ஆர்மில கேப்டன்…அக்காவும் ஒரு டாக்டர்…அமெரிக்காவுல…அவுங்க யாரும் நம்ம வீட்டு சோபாவுல உட்கார்ந்துக்கிட்டு வெத்தல எச்சிய எங்க துப்புறதுன்னு முழிக்க மாட்டாங்க….
நாகசுந்தரம் விதிர்த்துப் போகிறார். குடும்பமே அவரைப் பார்க்கிறது. என்ன சொல்லப் போகிறார்?
ஆடிப் போகிறார் நாகசுந்தரம். தோற்றுப் போய்விட்டோமோ?
சட்டென எழுந்து வேகமாகவும் வெறுப்பாகவும் சொல்கிறார்.
அதெல்லாம் சும்மாடா….என்னதான் ஆனாலும் ஜாதிப்புத்தின்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யும்…- விருட்டென்று இடத்தைக் காலி பண்ணுகிறார்.
ராஜசேகரன் எழுந்து குளியலறைக்குப் போகிறான். பெரியப்பாவுக்குத் தந்தி கொடுக்கணும். நினைத்துக் கொள்கிறான். வரவேண்டாம்…திருமணம் நிச்சயமாகிவிட்டதென்று.
அகரமுதல்வன் சொல்கிறார்….மானுட இருட்டிலிருந்து சம்பவங்களைப் பொறுக்கியெடுத்து எல்லைகளற்ற மேன்மையான வெளிச்சத் தோற்றத்துக்கு அழைத்துப்போகும் சிறப்பம்சம்தோடு எண்ண எழுச்சி மிக்க படைப்பாளி ஜெயந்தன்.
கதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடிய ஒரு தனி உலகம். இது ஓரான் பாமுக். ஜெயந்தனின் தேர்ந்தெடுத்த இந்தச் சிறுகதைத் தொகுப்பு….இந்தத் தனிச் சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.
---------------------------------------------------------------
May be a doodle of text

Like
Comment
Share

 என் கதைகளை ஒரு நண்பர் தேடி எடுத்து சேகரித்து...ரசித்துப் படித்து வருகிறார்...அவருக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும்.. நான் உயிர்எழுத்து...கணையாழி...பேசும் புதிய சக்தி.. ஆவநாழி...வாசகசாலை... அந்திமழை...சொல்வனம்...பதாகை என்றும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எது...எதற்கு...ஏற்ற கதை என்பதை நான் அறிவேன்...அவைகளையும் அவர் சேகரித்துப் படித்து என் எழுத்தின் வித்தியாசங்களை அவரும் மற்றோரும் உணர வேண்டும் என்பது என் அவா...!


11 மார்ச் 2024

 ஜெயந்தனின் “இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்”–சிறுகதை வாசிப்பனுபவம் -உஷாதீபன்

-------------------------------------------------------------------------


கால்நடை ஆய்வாளராக இருந்து ஜெயந்தன் சேகரித்த அனுபவங்கள் அநேகம்.
மனிதனுக்கு வைத்தியம் பார்ப்பது என்பதே பெரிய விஷயம். இவரு நல்ல டாக்டரா? நல்லா பார்ப்பாரா? உறவி டோசேஜா போட்டுத் தள்றாரே…! அனுபவஸ்தர் மாதிரித் தெரிலயே…? சின்ன வயசுக்காரரா இருக்காரே…! – இப்படிப் பல.
மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பதென்றால்? அதுவும் கடைக்கோடி கிராமத்துக்கு வேலையாகி, அங்கு கால்நடை ஆய்வாளராகச் சென்று திக்கு திசை தெரியாமல் அமர்ந்தால்?
எந்த நம்பிக்கையில் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளைக் கொண்டு வந்து நிறுத்துவார்கள்? இதையெல்லாம்தான் செய்யணும்…இதையெல்லாம் செய்யக் கூடாது என்று அவர்களிடம் எப்படிச் சொல்வது? அவர்களை எப்படி நம்ப வைப்பது? அவர்களின் நம்பிக்கையை எப்படிப் பெறுவது?
இவைகளெல்லாம் இருக்கிறதோ இல்லையோ…அந்த மனிதர்களை ஒதுக்கி விட முடியுமா? இந்த மாதிரி அறியாதவற்றிற்கெல்லாம் அவர்கள் மீது கோபம் கொண்டு அவர்கள் மனிதப் பண்பற்றவர்கள் என்று கொள்ள முடியுமா?
கிராமத்து அழகை ரசிக்க ஒரு தனி மனசு வேண்டும். அவர்களின் மொழியே தனி. நாம் திருத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் பல வார்த்தைகளை அவர்கள் கொச்சையாக உச்சரிப்பார்கள். அப்படியான ஓரிரு சுருக்க வார்த்தைகளில் பெரிய பொருள் அடங்கியிருக்கும். இவை ஒவ்வொன்றையும் நுணுகிப் பார்த்து, அவைகளை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நம்மைப் பக்குவப் படுத்திக் கொண்டோமென்றால், நம்மை அவர்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம்.
கால்நடை ஆய்வாளரான ராகவன் அப்படித்தான் படிப்படியாக அந்த மக்களை அறிந்து கொள்கிறான். உணர்ந்து நிதானிக்கிறான். முதல் முறையாக அந்தக் கிராமத்தைப் பார்த்த அவனுக்கு தலை சுற்றிக்கொண்டுவர சொல்லாமல் கொள்ளாமல ஓடிப் போய்விடலாமா என்று கூடத் தோன்றுகிறது.
போஸ்டிங் போட்ட ஊர் இது. ஒப்புக்கொள்ளாமல் என்ன செய்வது? ஒரு ஆறு மாசமாவது இருந்து கழித்துவிட்டுத்தான் வேறு ஊர் இட மாறுதலுக்கு விண்ணப்பம் கொடுப்பது சாத்தியம். அதுவும் இதனிலும் மேம்பட்டதாக அமையும் என்பது என்ன நிச்சயம்? இந்த இடம்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்க முடியுமா? அல்லது கிடைத்துத்தான் விடுமா?
இன்று நண்பர்கள் நான்கு பேர் அவனைப் பார்க்க வந்திருக்கிற விசேஷத்தில், அனுபவித்த சங்கடங்களெல்லாம் இனிய நினைவுகளாக இப்போது மாறியிருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொண்டான் ராகவன்.
அந்த கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு பார்பர் ஷாப். அங்கு போய் அமர்ந்திருக்கும் வேளையில்… ரத்தம் தெரிய ஷேவிங் நடந்து கொண்டிருக்கும் காட்சி….அப்டீங்கிறதுக்குள்ள சட்டுன்னு அசையுறீங்க…செத்த நேரம் கமுக்கமா இருக்க மாட்டீகளா…ன்னு பார்பர் ஒருவனை சமாளிக்க.. நான் ஷேவிங் செட்டை ஊர்லயே மறந்திட்டு வந்திட்டேன். சரி…அடுத்தவாட்டி போறவரைக்கும் உள்ளூர்லயே அட்ஜஸ்ட் பண்ணுவோம்னு போய் நின்னா…ரணகளமாயிருக்கு அங்க….பரவால்லன்னு உட்கார்ந்தா அந்தாளுக்குப் போர்த்துனதையே எனக்கும் போர்த்துறான். நாத்தம் தாங்காம, வேற துணியில்லையான்னு கேட்டேன். உடனே இப்டித் திரும்பி, அப்டித் திரும்பி சட்டுன்னு ஒண்ணைப் போர்த்தி விட்டுட்டான். கண்மூடித் திறக்கிறதுக்குள்ள எம்மேல வெறே துணி. அதுவும் என்னவோ வாடைதான். சரி கழுத கெடக்குன்னு பொறுத்தக்கிட்டேன். ஷேவிங் முடிச்சி, எழுந்து நின்னா முதல்ல எனக்குப் போர்த்தினாம்பாரு…அது அவன் இடுப்புல….அசந்து போனேன்….என்னடா விஷயம்னு பார்த்தா…அவன் கட்டுன வேட்டிய எனக்குப் போர்த்தியிருக்கான்….
ஏண்டா…அன்டர்வேர்…கின்டர்வேர் எதாச்சும் போட்டிருந்தானா இல்லையா…?
அதான் எனக்குச் சந்தேகம்….அது இருந்தா ஏன் அந்தத் துண்டைச் சுத்துறான்….-எல்லோரும் சிரிக்கிறார்கள்.
ஆபீசுக்கு வர…..தீவிர கால்நடை அபிவிருத்தித் திட்டம், செயற்கைமுறை கருவூட்டு நிலையம்….என்று போர்டைப் படிக்கிறார்கள் நண்பர்கள்.
ஒராள் மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்து நின்று அதை இன்னொரு மாடு குத்திவிட்டதாகச் சொல்ல, என்ன கை மருந்து போட்டீங்க என்று கேட்க…அடுப்புக்கரி, சீனி, கொஞ்சம் ஒட்டட, மூணையும் ஒண்ணா அரச்சுத் தடவுனேன்….
ஆஸ்பத்திரி இருக்கைல இப்டி கை மருந்துங்கிற பேர்ல எதையாச்சும் செய்றதா…அதான் அந்த எடம் பச்சப் பசேல்னு இருக்கேன்னு சந்தேகப்பட்டுக் கேட்டேன்….
என்னமோ எங்க பழக்கங்க….. – வரும்போகும் ஆட்களெல்லாம் இந்த வார்த்தையையே சொல்லுகிறார்கள்….என்னமோ எங்க பழக்கங்க….!
ஒரு எருமை மாடு வந்து போய், பிடியில் அடங்காமல் தவ்வி ஓடி விடுகிறது. அந்த எருமையை மனித உறவில் நிறுத்திக் கொண்டு திட்டித் தீர்க்கிறார்கள. ஒருவன் தத்துவார்த்தமாய் –
இந்தக் கழுதகிட்ட இந்தப் பாலு மட்டும் இல்லன்னா மனுஷன் இத கழுதையாக் கூட மதிக்க மாட்டான்….
பன்னிரெண்டு மணிக்கு மேல் புறப்பட யத்தனித்தபோது…ஒருவன் காளமாட்டுக்கு வயிறு ஊதிக்கிட்டு ரொம்ப டேஞ்சரா இருக்குதுன்னு வந்து நிற்கிறான். எத்தன நாளா?ன்னு கேட்க…
ஒரு வாரமாவே இருக்குது சார்…இந்தா சரியாப் போவும்…அந்தா சரியாப் போவும்னு இருந்தேன். வெத்தல சாத்தயும், விருவ நெய்யும் குடுத்திட்டிருந்தேன்…கடைசில இப்படியாயிடுச்சி…(விருவம் என்பது பன்றி)
வயிறு ஊதியிருக்கிறதுக்கும் பன்னி நெய்க்கும் என்னா சம்பந்தம்?
என்னமோ எங்க பழக்கமுங்க….. –
அவன் புறப்பட, நண்பர்கள் நாங்களும் வருகிறோம் என்க….கிளம்புகிறார்கள். மாட்டிற்கு வயிறு நான்கு பகுதிகளாய் இருக்குமாம். காற்று உப்புசத்திற்கு ரூமன் என்னும் பகுதி. அந்தப் பகுதியிலிருந்து அடைத்திருக்கும் காற்றை துளை போட்டுத்தான் வெளியேத்தணும்….அப்ப சரியாகும்…
அந்த வீட்டை அடைய மாட்டைச் சுற்றிக்கொண்டு பெரும் கூட்டம். நெருப்புக் கனலை மாட்டிற்கு முன்னால வைத்து கருவாட்டையோ எதையோ போட்டு புகை கிளப்பிக்கொண்டிருக்க, ஒரு பெண் முறத்தில் இருந்து புடைத்த சாம்பலை மாட்டின் மீது கொட்ட, மாட்டின் கழுத்தில் ஏதோ பச்சைக் கொடி மாலையாய்க் கிடக்க…ஒரே அமர்க்களம்.
மாடு கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு….வயித்தப் பொத்து, காத்த எடுக்கணும்…. – சொல்கிறான். ஒருவேளை மாடு போய்விட்டதென்றால் நாமதான் கொன்னுட்டோம் என்றல்லவா சொல்வார்கள்.?
எ்னது வயித்தப் பொத்தணுமா…? - மாட்டுக்குச் சொந்தக்காரன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மாடு சாய்ந்து விடுகிறது. மாட்டைச் சுற்றி நின்று கை கோர்த்துக் கொண்டு ஒப்பாரி வைக்கக் கிளம்பி விடுகிறார்கள். கூட்டம் சற்று நேரத்தில் கலைகிறது
ரொம்பக் கைராசி….வந்து கை வைக்கிறதுக்குள்ள மாடு போயிடுச்சி…. – ஒரு கிழவியின் ஆசீர்வாதம்.
நான்கைந்து பேராகச் சேர்ந்து கிழக்கு நோக்கிப் போகிறார்கள். என்ன என்று பெட்டிக்கடைக்காரரிடம் கேட்க….கேதத்துக்குப் போறாங்க…மாடு செத்துப் போச்சில்ல…..அதான்… - மனுஷன் செத்தாலும், மாடு செத்தாலும் கேதந்தான் அந்த கிராமத்துக்கு. சிரிக்கிறார்கள்.
டேய் நம்ம ராகவன் வேல செய்ற கிராமத்துல மாடு செத்தாலும் கன்டலன்ஸ் போவாங்கடா… - ஊரில் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நண்பன்.
ஒரு நாள் காலையில் ஏழு ஏழரை இருக்கும். தண்டோரா போட்டுக்கொண்டு ஒருவன்…சேனாபதி செத்துட்டாரு…சேனாபதி செத்துட்டாரு…..டம….டம….டம….டம…டட்…டட்…..
என்னாடாது…நேத்துவரைக்கும் குத்துக்கல்லாட்டம் இருந்த ஆளு…ஊருக்கு அந்த ஒரே சேனாபதிதான். அந்தாளு செத்துட்டாரா? எந்தச் சேனாபதிடா…?
அந்த சேனாபதிதான்…சேனாபதி செத்துட்டாரு…சேனாபதி செத்துட்டாரு…. அடப்பாவி மவனே…!
நாந்தான் கல்லாட்டம் நிக்கிறனடா…எந்தச் சேனாபதியச் சொல்ற? சேனாபதியே நிறுத்திக் கேட்கிறார்.
யார்ரா தண்டரா அடிக்கச் சொன்னது?
பெரசன்டுங்க….
பஞ்சாயத்து பிரசிடென்டைப் போய்க் கேட்டதும்தான் உண்மை தெரிகிறது. நம்ம ஜனாதிபதியே இறந்து போய்ட்டாருன்னு…. – ஆத்தாடீ…இன்னும் என்னென்ன கதைதான் இருக்கு? கெக்கலித்து, விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
காட்டுப் பக்கம் வருகிறார்கள் நண்பர்கள். கம்பஞ்செடியைப் பார்க்கிறார்கள். கம்பங் கதிர்….ஓடிப் போய் ஒரு கதிரை ஒடிக்கிறான் ராகவன். முற்றிய கதிரெல்லாம் அறுத்து முடித்து, பிஞ்சுகள் மட்டும் அப்படியே…
காட்டுக்காரன் கண்டா வெரட்டப் போறான்….
நாம என்ன எடத்தையேவா தூக்கிட்டுப் போறோம்…வயக்காடு அப்டியேதான இருக்கு…-சிரிப்பாய்ச் சொல்லிக் கொண்டு ஆளுக்கொன்றாய்.பறித்து, சிலுப்பி, திருகி, உமியை ஊதிவிட்டு, மணிகளைக் கையில் குவித்துக் கொண்டு ருசித்து உண்கிறார்கள். பச்சைப் பாலோடு தொண்டையில் இறங்க ருசியாய்த்தான் இருக்கிறது கம்பங்கதிர்.
பக்கத்துக் கிணற்றிலிருந்து திடீரென்று ஒரு உருவம். அட…பெருமாள் கவுண்டர்… - குளித்துவிட்டு வருகிறாரா….? அவருடைய காடல்லவா இது…! திட்டுவாரோ..?
ஏம்ப்பா..படிச்ச புள்ளைங்கதானா நீங்க…இப்டி ஆளுக்கு நாலு கதிரக் கைல பறிச்சு வச்சித் தின்னா நல்லாவாயிருக்கு? – கேட்பாரோ….கதிரை மறைப்பதற்குள் நெருங்கி விடுகிறார்.
கம்பு திங்கிறீங்களா ஐயா….ரெண்டு நாளைக்கு முந்தி வந்திருந்தா முத்துன கதிரா கிடைச்சிருக்கும்… சொல்லிக் கொண்டே போய்க்கொண்டிருந்தார் அவர். ஈரத் துண்டு போர்த்தின முதுகுதான் அவர்களுக்குத் தெரிந்தது.
அவர்கள் பிறந்து வளர்ந்த நகரத்திற்கென்று ஒரு நாகரீகம் உண்டு. . பக்கத்து வீட்டுக்காரனை பத்து வருஷமானாலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை என்பதான சமூகம். அடுத்த வீட்டில் இழவு விழுந்திருந்தாலும், இவர்கள் வீட்டு ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். கூடிக் கூடி மணிக்கணக்கில் கதையளக்கிற பெண்கள், கடைசியில் ஒரு குடம் தண்ணீருக்கு அடித்துக் கொள்வார்கள். அந்த நாகரீகத்தில் பிறந்த இந்த இளைஞர்கள்…அழையா விருந்தாளியாய், கேளாமலே எடுத்துக் கொண்ட விருந்தைக் கூட பொருட்படுத்தாது கௌரவமாய் ஏற்று புன்னகையோடு போய்க் கொண்டிருக்கும் கவுண்டரின் கிராமிய உபசரிப்பு. இந்த அனுபவம் இவர்களுக்கு முற்றிலும் புதிது.
அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை தாங்கள் காலையிலிருந்து இந்தக் கிராமத்தார்களைப் பற்றிப் பேசிப் பேசி செய்த கேலிக்கும், கிண்டலுக்கும் இந்த பெருமாள் கவுண்டர் ஏதும் பதில் சொல்லிவிட்டுப் போகிறாரோ?
இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்… - என்ன ஒரு அருமையான உணர்த்தல்? ஜெயந்தனின் கருக்கள் எல்லாமே சொல்ல வந்த விஷயத்தை அழுத்தம் திருத்தமாய், பொட்டில் அறைந்ததுபோல்தான் நிறுவியிருப்பார். கிராமத்து மனிதர்களின் விகல்பமற்ற தன்மையையும், அறியாமையையும், ஆட்களை உணர்ந்து கௌரவமாய் நடத்தும் தன்மையையும்…..இதற்கு மேல் வேறு எப்படித்தான் சொல்லிச் செல்வது…?
அது என்னமோ எங்க பழக்கமுங்க….!!!
-----------------------------------------------------------
May be an image of 1 person and text
All reactions:
Aravind Vadaseri, Jeeva Nanthan and 10 others

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...