12 பிப்ரவரி 2026


புஸ்தகா.கோ.இன் வெளியீடு.   சிறுகதைத் தொகுதி(12.02.2026)




 

 

சிறுகதை                 'மிச்சம்“  (குங்குமம் வார இதழ்) 20.02.2026




            நீங்க போயிட்டு வாங்கோ…நான் வரலை…என்றார் கோபாலன்.

            உறாலில் என்னவோ பேச்சு நடக்கிறது என்று தோன்றியபோதே மனதில் முடிவு செய்து கொண்டு விட்டார். அந்த இழுவை நம்மால ஆகாது? கிளம்பவே ஜாமம் ஆகும். இவர் மனது அலுத்துக் கொண்டது. மலைப்பாய் இருந்தது.

            கார்லதானேப்பா போகப் போறோம். வரலாமுல்ல…? என்றான் தயாளன்.

            கார்லதான் போறோம்…அங்க போனவுடனே கோயிலைச் சுத்தி பார்க்கிங் தேடவே ஒரு மணி நேரம் ஆகும். சுற்றிச் சுற்றி வரணும். அதுக்குள்ளயும் எனக்கு ஒண்ணுக்கு வந்துடும். அதுக்கு எடத்தைத் தேடணும். சொன்னா நீ சங்கடப்படுவே…நானா இறங்கி ஒரு ஓட்டலுக்குள்ள போய்த்தான் ஒன் பாத்ரூம் போக முடியும். அவன் சும்மா விடுவானா? ஒரு காப்பியைக் குடிக்கணும். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு ஒண்ணுக்கு வரும். ..எதுக்கு இந்த சிரமமெல்லாம்? நீங்க போயிட்டு வாங்கோ…நான் வீட்ல இருந்துக்கிறேன். எனக்கிருக்கிற உடல் சிரமத்துக்கு எங்கயும் கிளம்ப லாயக்கில்ல…!

            நீ பாத்ரூம் போயிட்டு வெளில வெயிட் பண்ணுப்பா…நாங்க கும்பிட்டுட்டு வந்திடுறோம்….

            நல்லாயிருக்கே நீ சொல்றது? கோயிலுக்குன்னு புறப்டுட்டு சாமி கும்பிடாம வர்றதா? அது சரியாயிருக்குமா? – சங்கடத்தோடு பேசினார் கோபாலன். ஆள விடுங்கன்னாலும் இதென்ன அன்புத் தொல்லை?

            ஏம்ப்பா…எத்தனையோ நாளு வெளி சுற்றுப் பிராகாரத்துல நீ உட்கார்ந்துடுவே…நாங்கதான் போயி எல்லா சந்நிதியையும் சுத்திக் கும்பிட்டுட்டு வருவோம்…என்னால அலைய முடியாது, வரிசைல நின்னெல்லாம் நகர்ந்து போய் சாமி கும்பிட முடியாதுன்னு சொல்லியிருக்கே…இன்னிக்கு மட்டும் இப்டிச் சொல்றியே…? –

            அதையேதான்ப்பா இப்பயும் சொல்றேன்….வெளிலன்னு வந்தாலே எங்க பாத்ரூம் இருக்குன்னு தேட வேண்டிய நிலைமைல நான் இருக்கேன்…அதுக்கு உன்னையும் சேர்த்து சிரமப்படுத்த விரும்பலை..யாரையும் சிரமப்படுத்த இஷ்டமில்லை…அதனாலதான் அப்படிச் சொல்றேன்….-பிடியாய் நின்று தன் பக்கத்தை விளக்கினார் கோபாலன்.

            அவருக்குத் தெரியும் அவர் சிரமங்கள். மற்றவர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? பெற்ற பிள்ளைதானே…கூட வருவது பெண்டாட்டிதானே…தனக்காகக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா?

            அதெல்லாம் இல்லை. தன்னால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம் என்பதுதான் அவர் கருத்து. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான். அதுபோல் ஒரு பொழுது பொறுத்தால் மறு பொழுது ஒரு வார்த்தை வரத்தான் செய்யும். அதை ஏன் கேட்கணும், மனசு கஷ்டப்படணும். அதற்கு ஏன் இடம் கொடுக்கணும்? எங்கும் போக வேண்டாம். எதையும் பார்க்க வேண்டாம். எந்த ஆசையும் இல்லை அவருக்கு. எல்லாவற்றையும் மொத்தமாய்த் துறந்து விட்டார் அவர். ஒரே சமயத்தில் பலவற்றையும் அப்படித் துறக்க ஒருவனால் முடியுமா என்றால் முடியும்தான். அதற்கான மனத் திண்மை அவருக்கு இருந்தது.

            அது எப்படித் தனக்குக் கை வந்தது என்று யோசித்தார் கோபாலன். சிறு வயது முதலே அது தன்னிடம் உடன் பிறந்ததாய்க் கிடக்கிறது என்பதை உணர்ந்தார். அது அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்டதாய் இருக்கும் என்றும் எண்ணலானார்.

            இல்லையென்றால் சொல்லி வைத்தாற்போல் ஐம்பது ஆண்டுகள் ஒரே பிடியாய் எந்தவிதச் சலனமுமின்றி ஓட்டலில் வேலை பார்த்து தன் எட்டுக் குழந்தைகளைக் காப்பாற்றிக் கரையேற்ற முடியுமா ஒருவரால்? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் குடும்ப முன்னேற்றமே குறி என்று ஒருவனால் வாழ்ந்து கழிக்க முடியுமா? தியாக வாழ்க்கையை இந்த உலகத்தில் எத்தனை பேர் வாழ்ந்து கடந்திருக்கிறார்கள்?

            அப்பா எந்தச் சந்தோஷத்தையும் அனுபவித்தவர் அல்ல. எந்தச் சந்தோஷத்திற்காகவும் மெனக்கெட்டவரும் அல்ல. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி என்ற வரிகளுக்கேற்ப தன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தவர்.

            லட்சியம் என்று மனதில் உறுதி செய்து கொண்டா அவர் வாழ்ந்தார்? முன்னோர்களின் நெறிமுறைகளும், ஆசீர்வாதங்களுமாய்ச் சேர்ந்து அவரை இயக்கியது. அதுவே அவரது சீரிய வாழ்க்கையாய் அமைந்து போனது.

            அதே மன உறுதியும் செயல்பாடும் தன்னிடமும் ஒட்டிக் கொண்டிருப்பதாய் கோபாலன் நினைத்தார். கொஞ்சமேனும் இல்லாமல் போகுமா என்ன?

            அதற்காக சும்மா இருப்பதே சுகம் என்றா அவர் கிடக்கிறார். அல்ல அல்ல….வீட்டில் தனியே இருந்தால் என்றுமே அவர் வெறுமே கிடந்ததில்லை. ஏதாவது வேலைகளை எடுத்துச் செய்து கொண்டேதான் இருப்பார். அது அவர் சுபாவம். ஆபீஸ் வேலைகளையே அப்படிக் கட்டிச் சுமந்தவர்தானே? அந்த குணம் வீட்டுக்கு என்று விட்டுப் போகுமா?

            துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வீடு பெருக்கிக் குப்பைகளை ஒருங்கிணைத்து  வெளியேற்றுவார். ஜன்னல் கம்பிகளில் ஏறியுள்ள அழுக்கை ஈரத் துணியை வைத்துத் துடைத்துப் போக்கி சுத்தம் பண்ணுவார். சாமி படங்களைத் துடைத்து மாட்டுவார். பூஜை அறைத் தரையை எண்ணெய்ப் பிசுக்குப் போக அழுந்தத் துடைத்து, விளக்கைத் துலக்கிப் பளீரென ஆக்கி புதிதாகத் திரியும் எண்ணெயும் ஊற்றிச் சரி செய்து வைப்பார். படுக்கைகளை வெளியில் கொண்டு உதறி, தூசி போக அழகாய் மடித்து ஒதுக்கி வைப்பார். ரொம்பவும் அழுக்காய் இருந்தால் வாஷிங் மெஷினில் போட்டு மாடியில் கொண்டு சென்று உலர்த்தி காய்ந்த பிறகு ஞாபகமாய் எடுத்து மடித்து ஒழுங்கு படுத்துவார். மின்சாரம் வராத சமயங்களில் பயன்படும் இன்வெர்ட்டர் பேட்டரிக்குத் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து அதற்கென்று வாங்கி வைத்துள்ள பதப்படுத்தப்பட்ட நீரை ஊற்றி பேட்டரி சிறப்பாய் இயங்கத் தயார் செய்வார். உலர்ந்த துணிகளை எடுத்து மடித்து வைப்பார். தோய்க்க வேண்டிய துணிகளை எடுத்துத் தனியே கூடையில் போட்டுத் தயாராய் வைப்பார். கட்டில், மெத்தை, நாற்காலி என்று பலவற்றையும் பகுதி பகுதியாய்த் துடைத்து சுத்தம் செய்து,  வீடு எவ்வளவு நீட்டா இருக்கு? என்று வருபவர் வியக்கும் வண்ணம் ஆக்கி வைப்பார்.

இதிலெல்லாம் அவருக்கு ஒரு மனதார்ந்த திருப்தியும் நிறைவும் இருந்தது . ஏனென்றால் இவை எல்லாமும் வீட்டில் இருந்து கொண்டே நூறடி சுற்றளவில் சுற்றிச் சுற்றி வந்து செய்து கொண்டிருப்பவை. இணக்கமான மனநிலையில் தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள் என்று பிரதி பலன் கருதாத தியாக மனநிலையில் அல்லது நிச்சலன மனநிலையில் அவர் விரும்பிச் செய்பவை. அவசரத்துக்கு சட்டென்று பாத்ரூமுக்குள் நுழைந்து கொள்ளலாம். எந்தச் சிரமமும் இல்லை.

இதை விட்டு விட்டு வெளியில் சென்று சுற்றுவதில் அவர் மனது ஏனோ இணங்கவில்லைதான். குறிப்பாக அவரது தற்போதைய உடல் ஸ்திதி. மனநிலை. எல்லாவற்றிலிருந்தும் விலகி நிற்கும் மனப்பாங்கு. எதுவும் கூடவரப்போவதில்லை என்கிற புரிதல். கொஞ்ச நாளாகவே மனம் தனிமை, தனிமை என்று அரற்றிக்கொண்டேயிருப்பது. எல்லாமும் அலுத்து விட்டதுதான். உறவுகளும் கூட என்றே சொல்லலாம். என்ன பெரிய உறவு? அப்படியா பாச பந்தத்தில் இழைந்து திழைக்கிறோம்? அவரவர் பாடு அவரவருக்கு. நீ சௌக்கியமா…நான் சௌக்கியம்….! என்கிற ஒற்றைக் கேள்விதான்.

எந்த சந்தோஷத்தையும் அவர் மனது ஏற்க மறுக்கிறது. எல்லாமும் தோன்றி மறைபவை, எவையும் இந்த உலகத்தில் நிரந்தரமானது அல்ல, இந்த ககனத்தில் தோன்றியதெல்லாமும் இந்த ககனத்திற்கே. எதுவும் இங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாது. இந்த மண்ணில் உள்ளவையெல்லாம் இந்த மண்ணுக்கே…! ஆத்ம ஞானம் ஒன்றே மனிதனைக் கடைத்தேற்றுவது…பக்தியும், தியானமும்தான் அதை அடையாளம் காட்டும். அர்த்தப்படுத்தும்…மற்ற எல்லாமும் வெறும் பிரமை… பிரேமை…. !

கிளம்பலாமாப்பா….! – தயாளனின் குரல் இவரை நனவுலகுக்குக் கொண்டு வந்தது. பெரியநாயகி, மருமகள் தயாளினி,  பேரன், பேத்தி…ஒரு படையே கிளம்பியாயிற்று. மொத்தம் ஆறு டிக்கெட்….

என்னை ஏம்ப்பா வற்புறுத்தறே? விட்ரேன்….-என்றார் இவர் சலிப்பாக.

இவ்வளவு வருந்திக் கூப்பிடுறான். வாங்களேன்…வந்து பேசாம உட்கார்ந்திட்டு இருக்கப் போறீங்க…இதுக்கு உங்களுக்கு வலிக்குதா? என்றாள் பெரியநாயகி. கூப்பிட ஆளில்லேன்னா அப்பத் தெரியும்…? இது முனகல்.

பேசாம உட்கார்ந்திருக்கிறதுக்கு இங்கேயிருந்து அம்புட்டுத் தூரம் வரணுமா? இங்கேயே சிவனேன்னு இருந்தா ஆகாதா? -என்றார் இவர்.

சிவ…சிவா…ன்னு அங்க வந்து உட்கார்ந்திருங்கப்பா….கபாலீஸ்வரர் கோயிலுக்குத்தான் போறோம்…உங்களுக்குப் பிடிச்ச கோயிலாச்சே…!

உண்மைதான் அவன் சொல்வது. அது என்னவோ அந்தக் கோயிலில் ஒரு ஈர்ப்பு. தொன்மம் மிளிரும் ஆலயம். பிறந்து வளர்ந்த சொந்த மண்ணின்   அம்மன் கோயிலுக்குப் போய் வருவதுபோல் ஒரு திருப்தி. நிறைவு. வானுயர்ந்த அந்த கோபுரத்தைப் பார்த்துக் கண்மூடி தியானித்தாலே போதும்.

இதென்னடா பெரிய அன்புத் தொல்லையாப் போச்சு? என்றவாறே எழுந்தார் கோபாலன்.  எம்புட்டுச் சொன்னாலும் விடமாட்டாங்க போல்ருக்கே? ஒட்டிண்டதைப் பிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…!

வாயை மூடிண்டு கிளம்பி வாங்க…என்னத்தையாவது உளர்றது?.-சமயம் பார்த்து வாங்குகிறாள்.

வெளிலதான நைட் டிபன்? என்றார் பையனைப் பார்த்து. சட்டென்று அந்த நினைப்பு தலை காட்டியது.

தயாளன் அப்பாவைப் பார்த்து அர்த்தத்தோடு  புன்னகைத்தான்.

பின்னே? கோயில் முடிக்கும்போதே மணி ஒன்பது ஆயிடும்…அப்புறம் வீடு வந்து, செய்து,  சாப்டுட்டுப் படுக்கிறதுன்னா மணி பன்னெண்டுதான்.!. அப்டியே எதுத்தாப்ல எதாச்சும் ஒட்டலாப் பார்த்து  நுழைய வேண்டியதுதான்…

போறது போறே…நல்ல தரமான ஓட்டலாப் பார்த்துப் போ. காரமா சூப்புக் கிடைக்கும்தானே?

கேள்வியைப் பாரு…இந்த வயசுல அய்யாவுக்கு சூப்புக் கேட்குதாக்கும்? வயித்துக்காகாதாக்கும். நாக்கு ருசியே இன்னும் போனபாடில்ல….! என்னவோ சந்நியாசி மாதிரிப் பேசறது? எல்லாம் நடிப்பு…!  – தோளில் நொடித்துக் கொண்டு பெரியநாயகி படியிறங்கியபோது கமுக்கமாய் நாய்க்குட்டி போல் கோபாலனும் பின்தொடர்ந்தார்.

                                    ---------------------------------

 

“அநாமதேயர்கள்“             உயிர் எழுத்து மாத இதழ் பிரசுரம் - பிப்ரவரி 2026

சிறுகதை





               கார்ப்பொரேஷன் ஆபீஸ்ல போய்ச் சொல்லுங்க…..-எடுத்த எடுப்பில் இப்படித்தான் பதில் வந்தது அவர்களிடமிருந்து. மேஜையிலிருந்த ஏதோ பேப்பரை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தது அந்தப் பெண். மேற்கொண்டு கேட்க விருப்பமில்லை என்பது போலிருந்தது.

அந்தப் பேப்பர்கள், வந்திருக்கும் மனுக்களோ என்று தோன்றியது. தானும் இப்படியொன்று எழுதிக் கொண்டு வந்து நீட்டியிருக்கலாமோ என்று நினைத்தார் வெங்கடாசலம். பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டு போகச் சொல்லியிருப்பார்கள். பிறகு அது என்ன ஆச்சு என்று அலைய வேண்டும். எங்கேயிருக்கிறது என்றே தெரியாது. தேடி எடுக்கவும் முடியாது. இன்னொண்ணு எழுதிக் கொடுத்திட்டுப் போங்க என்பார்கள் அசால்ட்டாக. வேறென்ன நடக்கப் போகிறது?

உங்ககிட்டத்தான் சொல்லணும்னு சொன்னாங்க…அதுனாலதான் புறப்பட்டு வந்தேன்…என்றார் வெங்கடாசலம்.  பன்னிரெண்டாவது வார்டு கவுன்சிலர் நீங்கதானே? என்றார் கூடவே.அந்தக் கேள்வி அதிகமோ என்று கேட்டவுடன்தான் தோன்றியது. காரியம் முக்கியம். பேச்சா?

அந்தப் பெண் இவரை நன்றாய் நிமிர்ந்து பார்த்தது. என்ன…பிரச்னை பண்ண வந்திருக்கீங்களா? என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை. கண்களில் சிமிட்டலின்றி தீர்க்கமாய் நோக்கினார் வெங்கடாசலம். இதிலென்ன தப்பிருக்கிறது? என்று தோன்றியது அவருக்கு. அவர் பார்வையில் எதிராளி எந்த அர்த்தத்தையும் உணர முடியாது. அப்படியொரு பார்வை வைத்திருக்கிறார் அவர்.

நான்தாங்க அந்த ஏரியாவுக்குக் கவுன்சிலர்..இல்லேங்கல…ஆனா நீங்க சொல்ற வேலையெல்லாம் கார்ப்பரேஷன்லதான் பார்ப்பாங்க…அங்க போய் ஒரு மனு எழுதிக் கொடுங்க…. …ஒரு பத்துப் பேர்ட்டக் கையெழுத்து வாங்கிச் சேர்த்துக் கொண்டு போய்க் கொடுங்க…என்னன்னு கவனிப்பாங்க…. …உங்க ஏரியாவுக்கு குடியிருப்போர் நலச் சங்கம் இருக்கில்ல….! அவுங்க என்ன செய்றாங்க…? அதன் மூலமா வரலாமே…?

அது இருக்கு மேடம்…அதுபாட்டுக்கு….இது நான் குடியிருக்கிற அபார்ட்மென்ட் சம்பந்தப்பட்ட பிரச்னை….அதனாலதான் நேர்ல சந்திச்சுச் சொல்லலாமேன்னு வந்தேன்…

ஐயா…நீங்க வந்ததப் பத்தி நான் ஒண்ணும் குத்தம் சொல்லலை. உங்க நகர் நலச் சங்கத்து மூலமா வந்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் எ.ஃபெக்டா இருக்குமேன்னு சொல்ல வந்தேன்….அபார்ட்மென்ட்களுக்கும் சேர்த்துதானே குடியிருப்போர் நலச் சங்கம்? இல்ல அபார்ட்மென்ட்களாச் சேர்ந்து தனிச் சங்கம் வச்சிருக்கீங்களா? – கேள்வி படு புதியது. இப்படியும் யோசனை தோன்றக் கூடும் என்பதாய் இருப்பதை உணர்ந்தார் வெங்கடாசலம்.

இன்னம் அதுவேறே  தனியா வேணுமா? மேடம்…நான் இங்க புதுசா வந்தவன். அஞ்சாறு வருஷம்தான் ஆகுது.  என் பேச்சையெல்லாம் அவுங்க கேட்க மாட்டாங்க…எங்க அபார்ட்மென்ட்லயே ஒருத்தர் இருக்கார்…அசோசியேஷன் ஆளுதான்…அவருக்குத் தெரியாதா இந்தச் சங்கடம்…தெரிஞ்சு என்ன பண்ண…கண்டுக்காம இருக்கார்…பிரச்னையைக் கையிலெடுத்தா மொத்தமும் தன் தலைல விடிஞ்சிடும்னு கம்முன்னு கிடக்கார்…என்ன செய்யச் சொல்றீங்க….? அந்த நலச் சங்கத்துல இ.சி. மெம்பர்னு நினைக்கிறேன்.

அப்ப நீங்க ஒத்தையாப் போய்த்தான் சொல்லணும்…சீக்கிரம் போய் மனுக் கொடுங்க…இல்லன்னா ஸ்க்வாடு வர்றபோது பார்த்திட்டு ஃபைன் போட்டுடப் போறாங்க…!

கார்ப்பரேஷன்காரங்க ஏற்கனவே வந்தபோது பார்த்து சொல்லிட்டுப் போய்ட்டாங்கம்மா…சீக்கிரம் கழிவு தண்ணி வழியறதச் சரி பண்ணுங்கன்னுட்டு நகர்ந்துட்டாங்க…

அவுங்ககிட்டயே சொல்லியிருந்தீங்கன்னா ஆட்களை அனுப்பிச்சிருப்பாங்களே…? ஒரே நாள்ல செய்து முடிச்சிட்டுப் போயிடுவாங்க…

அதக் கேட்கிறதுக்குள்ளதான் ஓட்டமெடுத்துட்டாங்களே…வேறே ஆட்கள் வருவாங்கன்னாங்க….புரியல…!அதான் உங்களைப் பார்த்துக் கேட்கலாம்னு வந்தேன்…

வேறே ஆட்கள்னா? டெய்லி வேஜஸ் ஆளுகளா? டெம்பரரியா சிலர் வேலை பார்க்குறாங்களே…அவுங்களச் சொல்றீங்களா?

அது எனக்கு எப்படிம்மா தெரியும்? நீங்கதான் சொல்லி ஆட்களை அனுப்புவீங்கன்னு நினைச்சு வந்தேன்…வந்தாங்கன்னா என்ன ஏதுன்னு பேசி, எவ்வளவு செலவு ஆகும்னு சொன்னாங்கன்னா அதத் தயார் பண்ண வசதியாயிருக்கும்…! நான் மட்டும் முடிவு பண்றதில்ல…ஆறு வீட்டுக்காரங்க இருக்காங்க…!

அந்தம்மாள் அமைதியாயிருந்தது. ஏதோ யோசனை செய்தது போலிருந்தது. சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியது போலவும் இருந்தது. இரண்டு முறை இவரை நிமிர்ந்து பார்த்துத் தலையைக் குனிந்து கொண்டது அதைத்தான் உணர்த்தியது.

ஆட்கள் வந்திருப்பாங்களே…? வரல்லியா? – மொட்டையாய் இப்படிக் கேட்டதும்…மனதில் நினைத்ததைச் சொல்வோமா வேண்டாமா என்று யோசித்தார் வெங்கடாசலம்.  

தான் சொல்ல நினைத்திருப்பதைக் கோபத்தில் ஏதேனும் வேண்டாத வார்த்தைகளில் சொல்லி விடுவோமோ என்று அவர் மனது தயங்கியது. அதே சமயம் சொல்லாமல் இருப்பதும் தவறு என்றுதான் தோன்றியது. எப்படி, எங்கு, எதில் ஆரம்பித்துச் சொன்னால் எடுபடும் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தது அவர் மனம்.

ரெண்டு மூணு ஆட்கள் வந்தாங்கம்மா….அதப்பத்திக் கேட்கலாமுன்னுதான்.……

வந்தாங்களா? அப்பப் பேசிற வேண்டிதானே?  டக்குனு வேலை முடிஞ்சிடுமே…..! கவுன்சிலரின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது.

அவுங்க யாருன்னே தெரிலயேம்மா…எல்லாத்தையும் மொட்ட மொட்டையாப் பேசறாங்க…கேட்டா சரியாச் சொல்ல மாட்டேங்கிறாங்க…இந்த ஏரியா ஆட்கள்தான்னு சொன்னா என்னன்னு நினைக்கிறது? தனியாச் செய்றதுன்னா நாமளே கூலி ஆட்களைப் பிடிச்சுச் செய்திடலாமே?

கூலி ஆட்கள் எதுக்கு? பயந்துட்டீங்களா? இந்தப் பகுதில  பல வீடுகளுக்கு அவுங்கதான் செய்திட்டு வர்றாங்க….லூஸ் டாங்க் போடுறது…கழிவு தண்ணிய அதுல இறக்கி விடுறது…வடிகால் கட்டியிருக்காங்கல்ல…அத்தோட ஜாயின் பண்ணி விடுறது….இப்டியான வேலைகள செய்து கொடுத்திடுவாங்க….சும்மா பயப்படாமச் செய்யச் சொல்லுங்க…சட்டுன்னு வேல முடிஞ்சி போயிடும்…

இல்ல…அது சம்பந்தமாத்தான் உங்களோட பேசலாமுன்னு……-தயங்கியவாறே நிறுத்தினார் வெங்கடாசலம். மேற்கொண்டு விரிவாகச் சொல்லப் புகுந்தால் சண்டையில் கொண்டு விட்டு விடுமோ என்கிற தயக்கமிருந்தது அவரிடம். கேள்விப்பட்ட வகையில் அது ஒரு ஏற்பாடுதான் என்று மனதில் தோன்றியிருந்தது.

என்கிட்டப் பேச என்ன இருக்கு? வேலை செய்றவுக அவுக…அவங்க கிட்டப் பேசி முடிச்சிக்குங்க…முன்னப் பின்ன இருக்கத்தான் செய்யும்…கூட்டிக் குறைச்சுப் பேசி முடிச்சிக்க வேண்டிதான். அபார்ட்மென்ட்ல எல்லா வீட்டுக்கும் பிரிச்சித்தானே  கொடுக்கப் போறீங்க…? தைரியமாச் செய்ங்க…கார்ப்பரேஷன் ஆளுக திரும்ப வந்திடாம…..! அபராதம் போட்டாங்கன்னா கன்னா பின்னான்னு இருக்கும்…

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் வெளியேறினார் வெங்கடாசலம். அதற்கு மேல் வெளிப்படையாகப் பேச அவருக்கு வாய் வரவில்லை. கிளம்பும்போது இருந்த வேகம் முற்றிலுமாகத் தணிந்திருந்தது. கவுன்சிலர் யாருக்காவது அவராகவே பேசி ஆட்களை ஏற்பாடு செய்து கொடுப்பார் என்பது அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அது நடக்கவில்லை. அந்தம்மாவே அவர்களை இன்னார் என்று குறிப்பிட்டுப் பேசாமல் யாரோ என்பதுபோல் பேசியது இவருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. தன் ஆட்களைத் தானே காட்டிக் கொடுத்தால் எப்படி என்று யோசிக்கிறார்களோ என்னவோ? நமக்கு எதுக்கு அந்த வம்பு?

ஒரு வேளை தன் ஆட்கள்தான் என்று காட்டிக் கொள்வதில் தயக்கமிருக்கும் போலிருக்கிறது. அவரே அப்படி ஜாக்கிரதையாக இருக்கும்போது, பணத்தை வசூல் பண்ணிக் கொடுக்கும் இடத்தில் நிற்கும் தான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாக வேண்டும்? யாரிடம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று ஒவ்வொரு வீட்டுக்காரனாய்க் கேட்பானே…அவர்களுக்கு என்ன என்று தீர்மானமான பதிலைச் சொல்வது?

இப்படி ரெண்டு மூணு கோஷ்டி திரியுதுங்க இந்த ஏரியாவுல…அவிங்கதான் செய்றானுங்க அங்கங்க இருக்கிற வீடுகள்ல…அத வச்சுதான் அவுங்களையே நாமளும் ஃபிக்ஸ் பண்ண வேண்டிர்க்கு….உங்க எல்லாருக்கும் சம்மதமா சொல்லுங்க…சம்மதம்னா பணத்தை அபார்ட்மென்ட் அக்கௌன்டுக்கு உடனடியா டிரான்ஸ்பர் பண்ணுங்க…இல்லன்னா விடுங்க…- இப்படிச் சொல்லி விடலாமா?

நினைக்கத்தான் முடிந்தது வெங்கடாசலத்தினால். நினைப்பதையெல்லாம் பேசி விட முடியுமா? வந்து மாட்டிக் கொண்டாயிற்று. வீட்டு ஓனர் என்று ஒரே ஒரு ஆள் மட்டும்தான் குடியிருக்கிறோம். மற்றதெல்லாம் வாடகை ஆட்கள்தான். அவர்களோட வாட்சப்பில் பேசிப் பேசிப் பொறுமையிழந்து நொந்து நூலாகிப் போயாயிற்று. ஒவ்வொரு காரியத்திற்கும் இழுபறிதான். ஒரு டியூப் லைட் மாற்றுவதென்றாலும் ஆயிரம் கேள்விகள். அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி மாய்வதற்குள் போனால் போகிறது என்று தன் செலவிலேயே ஒன்றை வாங்கி கமுக்கமாய் மாட்டி விட்டு  ஓய்ந்து விடலாம் போலிருக்கிறது.

அப்படியும் சில முறை செய்துதான் இருக்கிறார் வெங்கடாசலம். அதற்கு மனைவியிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம் அவருக்கு.

ஏன்…பென்சன் ஜாஸ்தியாப் போச்சாக்கும் அய்யாவுக்கு? ரொம்ப தாராளமா எடுத்து வீசுறாப்புல இருக்கு….ஒரு டியூப்பானா என்ன? கணக்குல ஏத்தி வச்சிக்கிறது. வேறே செலவுகள் பின்னாடி வராமயா போகப் போகுது? அப்போ அதோட இந்தச் செலவையும் சேர்த்து வசூல் பண்றது…யார் தரமாட்டேன்னு சொல்லப் போறாங்க…? மனுஷாள்னா ரெண்டு கேள்வி கேட்கத்தான் செய்வாங்க…பதில் சொல்லித்தான் ஆகணும்….சொன்னவுடனே தட்சிணையை எடுத்து கீழே வச்சிடுவாங்களா…? பொறுமையாப் பேச வேண்டிதான்….வாங்கிக்க வேண்டி தான்…..

தன் கணவர் இந்த வயதான காலத்தில் இந்தப் பொறுப்பை ஏன் சுமந்து திரிய வேண்டும் என்கிற பச்சாதாபமே இல்லியே கௌரியிடம். ஏதோ எனக்கான கடமை போல் அல்லவா சொல்கிறாள்?

அப்போ ஒண்ணு செய்யு…வாட்சப்புல நீயே டிஸ்கஸ் பண்ணு. சம்மதம் வாங்கு…எல்லார் பணமும் வந்து சேரட்டும். பிறகு வேலையைத் துவக்கலாம்….என்றார் படாரென்று.

எதச் சொன்னாலும் ஏறுக்கு மாறாப் பேசுங்க…வேறென்ன தெரியும்? எங்கிட்டதான் எல்லா வீராப்பும்….வழிமுறையைப் சொல்வோம்னா….இப்டியா பேசறது?

கைபேசி அலறியது. எடுத்தார். ஏற்கனவே வந்த எண்ணாய்த்தான் இருக்கும் என்று தோன்றியது. பெயர் கேட்டு சேமித்து வைக்கவில்லை. யாரோ, எவனோ…கண்டவன் பெயரையெல்லாம் ஃபோனில் சேர்த்து வைக்க முடியுமா? அப்புறம் இன்னொருத்தன் பேசுவான்….நான்தான் இந்த ஏரியாவுக்கும்பான்…ஏற்கனவே ஒருத்தர்ட்டப் பேசிட்டேன்னு அவன்ட்டச் சொல்ல முடியாது. சொன்னா…அந்தாள் ஃபிராடு…அவன்ட்டக் கொடுத்திடாதீங்க…அவன்ட்டப் பணத்தக் கொடுத்து ஏமாந்துடாதீங்க…அப்புறம் நான் பொறுப்பில்ல…என்று ஏதோ இவன் யோக்யன் போலப் பகருவான். எவனை நம்பி இந்த வேலையை முன்னெடுப்பது?

ஜன்னல் வழி வந்த நாற்றம் உமட்டியது.  

காத்துல வர்ற மணத்தப் பார்த்தீங்களா? பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்களாம்….இன்ஃபெக் ஷன் ஆயிடும்…சீக்கிரம் அடைக்கப் பாருங்கன்னு…

நாலு வீடு தள்ளி செப்டிக் டாங்க் எடுக்குறாங்கடீ….அதப் போய் நம்ம வீட்டு வாடைங்கிறியே…?

அந்த வாடை வேறே…இது வேறே…உங்களுக்கு வித்தியாசம் தெரில…சாக்கடைத் தண்ணிக்கும், கழிவு நீர் கிளீனிங்குக்கும் மணம் வெவ்வேறே….நல்லா கவனிங்க….

ஆஉறா…வீட்டைச் சுற்றி என்னெல்லாம் மணம்? சுகந்த மணங்கள் நம்மைச் சூழ்ந்து நின்று  மயக்குகின்றனவே…! என்னே கொடுப்பினை? -வயிற்றெரிச்சலில் அதை இலகுவாக்க முயன்றார் வெங்கடாசலம்.

ஏரியா பூராவும் எங்கேயாவது இந்தக் கழிவு நீரேற்று லாரி நின்று கொண்டுதான் இருக்கிறது. எந்த வீட்டிலாவது செப்டிக் டாங்க் கழிவு எடுக்கும் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி எடுக்கும்போது குறைந்தது இடதும் வலதுமாக நாலைந்து வீடுகளுக்கு அந்த மணம் பரவும்.

மனுஷன் உட்கார்ந்து சாப்பிட முடியுதா? வாயத் திறந்தா இந்த வாடைதான் வாய்க்குள்ள போகுது….பிறகு சோத்தை எங்கருந்து உள்ளே தள்றது? மூக்குல இந்த நாத்தத்தை வாங்கிக்கிட்டே எவனாவது சாப்பிட முடியமா? அட…ஒரு வாய் தண்ணி குடிக்க முடியுமா சொல்லு….? இருக்கிற ஜன்னல் பூராத்தையும் அடைச்சிட்டாலும் அதை மீறி வீட்டுக்குள்ள பூராவும் பரவி நிற்குது…இப்டி பக்கத்துல எங்கயாச்சும் செப்டிக் டாங்க் லாரி அள்றான்னா…நாம சமைக்கிறதையும், சாப்பிடுறதையும் நிறுத்திட வேண்டிதான் அரை மணிக்கு. டைம் இல்லயா…ரூமுக்குள்ள போயி கதவை இறுக்க அடைச்சிட்டு பாதகமில்லைன்னு நமக்கு நாமே நினைச்சிட்டு வாயில அள்ளி அள்ளிப் போட்டுக்க வேண்டிதான்…

நம்ம வீட்டுக்கு லாரி வந்து நிக்கிற போது மத்தவங்களுக்கும் இடைஞ்சலா இருக்குமே…அதையும் நினையுங்க…! இந்த நகர் புராவும் இப்படித்தான். எங்க பாதாளச் சாக்கடை போடலியோ அந்த ஏரியாவுக்குக் குடி வந்திருக்கக் கூடாது. வந்தது நம்ம தப்பு. விலைக்கே வாங்கிட்டு வந்து குந்திக்கிட்டு…குறைப்பட்டு என்ன புண்ணியம்?

நாம இங்க வந்தே சரியாக் கணக்குப் பண்ணினா ஏழெட்டு வருஷம் ஆகப் போகுது…இந்தப் பத்து வருஷத்துல படாத பாடு இல்ல…ஏண்டா அபார்ட்மென்ட்ல வீடு வாங்கினோம்னு இப்பத்தான் புத்தி வந்திருக்கு….தனி வீடு கட்டிப் போக கையில டப்பு வேண்டாமா? குறைஞ்சது ஒன்றரைக் கோடி இருந்தாத்தான் இடம் வாங்கி வீடும் கட்ட முடியும். நமக்கு அது சாத்தியமா? மழைல கஷ்டப்பட்டாச்சு, வெள்ளத்துல மிதந்தாச்சு….எல்லாமும் சாதாரண மக்களுக்குத்தான்…பெரிய பணக்காரனுக்கில்லே…அரசாங்கத்துக்கு இல்லே…நடுத்தர மக்களுக்கு மட்டும்தான் இந்தத் தீராத கஷ்டம். அதனாலதான் அவுங்க எல்லாத்துக்கும் பழகிக்கிட்டு, சகிச்சிட்டிருக்காங்க….வேறே வழி?

திரும்பவும் ஃபோன் அலறியது. எடுத்து இணுக்கினார் வெங்கடாசலம்.

சார்…நீங்க யாரோ வேறே ஆள்ட்டப் பேசியிருக்கிறதாக் கேள்விப்படுறேன்…அவுங்க இந்த ஏரியா ஆட்கள் கிடையாது. அப்டிச் சொல்லிட்டுத் திரியறானுங்க…எங்களுக்குத் தெரியாம அவிங்ககிட்டே இந்த வேலையைக் கொடுத்தீங்கன்னா நாங்க ராத்திரியோட ராத்திரியா வந்து இடிச்சிப் போட்டுட்டுப் போயிடுவோம்…பார்த்துக்குங்க….. – சொல்லிவிட்டு லைனை அந்தாள் உடன் கட்பண்ணி விட்டதை உணர்ந்தார் வெங்கடாசலம்.

உறலோ…உறலோ….என்று கத்திப் பார்த்தார். இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதே நம்பருக்குப் போட்டார். எடுக்கவில்லை. இந்த ரெண்டாவது மூஞ்சி யாரென்று இன்றுவரை வெங்கடாசலத்திற்குத் தெரியாது. அநாமதேயக் குரலாய் இருந்தது. அவர்களாய் வரும் அன்று வருவார்களாம். அதுவரை பொறுத்திருக்க வேண்டுமாம். என்ன தெனாவெட்டான பேச்சு? கார்ப்பரேஷன் ஆட்களும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்களாம். அவர்கள் சார்பாக இவர்களே…! யார் இவர்கள்? எங்கிருந்து புறப்பட்டார்கள்? கண்ணுக்கே தெரியாத மாயமாய்ப் பேசுகிறார்கள். வந்து பேசினவனையும் செய்ய விடமாட்டேனென்கிறார்கள்.

யோசனை பலமானது வெங்கடாசலத்திற்கு. நேற்றிருந்ததை விட கழிவு நீர் அதிகமாகி பிளாட்பாரத்தை விட்டுக் கீழிறங்கி, தார்ச்சாலையில் வியாபித்திருந்தது. வண்டிகள் போகும்போது பறந்தடித்தது. பக்கத்துவீட்டம்மா நின்று கவனித்துக் கொண்டேயிருந்தது.

எதடா புகார் சொல்லலாம் என்று காத்திருந்தது அது. ஏற்கனவே உப்புத் தண்ணிக் குழாய் தொட்டி நிரம்பி ஓவர்ஃப்ளோ ஆகுது. அந்தத் தண்ணி எங்க வீட்டுல தெறிக்குது…மோட்டாரை யாரும் டயத்துக்கு நிறுத்த மாட்டேங்கிறீங்க…எங்கிட்டயாவது பொறுப்பை விட்டுடுங்க…தெனமும் நானே மோட்டார் போடுறேன்…நிறுத்துறேன்…சரியா…ஒரு வேலை மிச்சம்தானே உங்களுக்கு? – எவ்வளவு கிண்டலான பேச்சு? தொட்டதெல்லாம் மென்டல் டார்ச்சர்? நினைவு தப்பிப் போகிறது சிலருக்கு வயசான காலத்தில். அப்படி ஆனால் கூடப் பரவாயில்லை போலிருக்கிறது…

சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் வெங்கடாசலம். நகரின் உட்பகுதிக்குள் மட்டும் ஓட்டிக் கொள்வார். மெயின்ரோட்டில் விட மாட்டார். சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சி என்று நினைத்தார். டூ வீலர் வைத்திருக்கிறார்தான். அதை எடுப்பதில்லை. என்றாவது அபூர்வமாய். இப்போதெல்லாம் மனதுக்குள் பயம் வந்துவிட்டது. பயம் வந்தால் அந்த பயமே விபத்தை உண்டாக்கி விடும் என்று எண்ணினார். அடேயப்பா…என்னா வேகமாய்ப் போறாங்க இந்த சிட்டில? இவங்களுக்கு நடுவே நான் போனால் அடிச்சுத் தூக்கி எறிஞ்சிடுவாங்க போல்ருக்கே…? ஊர்ல தொட்டதுக்கெல்லாம் டூ வீலர்ல போன தானா இப்படி அதைப் போட்டு வைத்திருக்கிறோம்? அவருக்கே வயிற்றெரிச்சலாய்த்தான் இருந்தது.

சும்மாக் கிடந்து துருப்பிடிக்கிறதுக்கு வேலை செஞ்சு தேயலாமே? என்பாள் கௌரி. மனுஷாளுக்கு அது பொருந்துமென்றால் ஒரு இயந்திரத்துக்கும் அது பொருந்தும்தானே?

ஓரத்தில் ஒரு ஃப்ளக்ஸ் போர்டு தென்பட்டது. நிறைய முகங்கள் தலை தலையாய். நண்பர்கள் குழு வட்டம். 18-வது வார்டு என்று போட்டிருந்தது. அதில் ஒன்று தன்னிடம் வந்து பேசி விட்டுப் போன ஒரு பையன் என்பதைக் கண்டு பிடித்து விட்டார் வெங்கடாசலம். ஆனால் சற்று முன் பேசிய அந்த இன்னொருவன், இடித்துப் போட்டு விடுவேன் என்று  மிரட்டியவன் யாராயிருக்கும் என்று அவர் பார்வை தேடியது. தேடி என்ன பயன்? அவனைத்தான் தான் நேரிலேயே பார்த்ததில்லையே? இதில்தான் யாரோ ஒருவனாக அவன் இருக்க வேண்டும்…என்று அவர் மனசு சொல்லியது.

போட்டோவில் பெரிய ஆகிருதியாய் இருப்பவர்கள் நேரில் சுணங்கித் தெரிகிறார்கள். நேரில் சுணக்கமாய்த் தோன்றுபவர்கள்  சிலர் போட்டோவில் தடாலடியாய்த் தென்படுகிறார்கள். முதலில் அங்கங்கே ப்ளக்ஸ் போர்டுகளை நட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என்று கிளம்பியிருக்கிறார்களோ என்னவோ? நண்பர்கள் குழு வட்டம் என்கிறார்கள். கீழே முகவரி என்று எதுவுமில்லை. ரெண்டு மூன்று ஃபோன் எண்கள் தென்பட்டன. தான் சேமித்து வைத்திருக்கும் ஒரு ஃபோன், சற்று முன் மிரட்டலாய் வந்த ஃபோன் எண். எதுவும் இதில் இருக்குமா என்று அவர் பார்வை துழாவியது. சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு எடுத்துப் பார்த்தார். அந்தப் பையனின் ஃபோன் எண். மட்டும் இருந்தது. சற்று முன் மிரட்டிய எண். போர்டில் இருந்த எண்களோடு பொருந்தவில்லை. அப்படியானால் அவன் யார்?  யோசனை போனது வெங்கடாசலத்திற்கு.

அப்போ அந்த முதல் பையன் மீண்டும் வந்தால் இந்த மிரட்டல் போனைப்பற்றிச் சொல்லலாமா? என்று யோசிக்க ஆரம்பித்தார். சாக்கடை வேலையை எப்படியாவது வெகு சீக்கிரம் முடித்தாக வேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது. கார்ப்பரேஷன் ஆட்கள் வந்து ஒரு வேளை ஃபைன் போட்டு விட்டால்…அந்தப் பணத்தைக் கட்டிவிட்டு குடியிருப்பவர்களிடம் வசூல் பண்ண முடியாது. தரமாட்டேன் என்பார்கள். எடுத்துச் செய்பவனுக்கு அவ்வளவுதான் மரியாதை.

எடுத்த முயற்சிகளையெல்லாம் வாட்சப்பில் பேச ஆரம்பித்தார் வெங்கடாசலம்.  சிலர் ஃபோனில் உடனடியாகப் பேசினார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது பெரும்பாடாய்ப் போனது வெங்கடாசலத்திற்கு. எதற்காகத் தான் கிடந்து இந்தப் பாடு படுகிறோம் என்று விரக்தி வந்தது இவருக்கு. ஆறு வீடுகளில் எவனுக்கும் இல்லாத அக்கறை தனக்கு மட்டும் எதற்கு? இங்கேயே குடியிருப்பதனால்தானே தன் தலையில் விடிந்திருக்கிறது? மற்ற வீட்டுக்காரப் பசங்கள் எல்லாம் .டி. வேலையில் இருப்பவர்கள். இருந்தால் என்ன? செய்யக் கூடாது என்றிருக்கிறதா? தன்னை விட வயதுக்காரப் பிள்ளைகள்தானே சுறுசுறுப்பாக இயங்க முடியும்? வேக வேகமாகப் போனில் பேசவும், வாட்சப்பில் இயங்கவும் அவர்களுக்குத்தானே சாத்தியம். தான் ஏன் வீணே மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்ள வேண்டும் இந்த வயதான காலத்தில்? யோசித்து யோசித்து நொறுங்கித்தான் போனார் வெங்கடாசலம். ஆபீசில் எடுத்து எடுத்து எல்லா வேலைகளையும் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டதுபோல் இங்கேயும் தன்னையறியாமல் இந்த வலைக்குள் விழுந்து விட்டோமோ? ஆபீசிலாவது எல்லாம் ஒழுங்காய் இருந்தது. அது வேண்டும் இது வேண்டும் என்றால் எடுத்துக் கொடுக்க ஆளிருந்தது. இங்கு எவனுமில்லையே? தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கக் கூட யாருக்கும் பொறுமையில்லையே?

            பாதி நாள் நான் வெளியூரு. நான் ஏன் சார் ரிப்பேர் செலவுக்குக் கொடுக்கணும்?

            நான் ஒருத்தன்தான் இருக்கேன். என் உபயோகமே ரொம்ப ரொம்பக் கம்மி. என்னால எப்படி சார் சாக்கடை அடைக்கும்?  ஓவர் ஃப்ளோ ஆகும்?

            சோக்பிட் ரிப்பேர்னா பில்டர்தான சார் பார்த்துக் கொடுக்கணும்…நாம ஏன் கார்ப்பரேஷன்  ஆள்ட்டச் சொல்லணும்? எதுக்கு ரிப்பேர் சரி பார்க்கணும்?

            பில்டர் காலம் பூராவும் பார்த்துக் கொடுத்திட்டே இருப்பாரா? அவர் உறான்ட் ஓவர் பண்ணினதோட விஷயம் முடிஞ்சிது. அப்புறம் வர்றதெல்லாம் நாமதான் பார்த்துக்கணும். நம்ம பொறுப்புதான்…

அப்ப ஒனர்ட்டப் பேசுங்க சார்…

ஒனர்ட்ட நான் ஏன்ங்க பேசணும். நீங்க காசைக் கொடுத்திட்டு உங்க வாடகைல கழிச்சிக்குங்க…நான் எடுத்து செய்றதே பெரிசு…இதுல என்னை ஏவுறீங்களா நீங்க…? -கோபமாய்த்தான் கேட்டார் வெங்கடாசலம்.

இனி இந்த மாதிரி வேலைகளில் தான் ஈடுபடுவதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் அப்போது. வயதான காலத்தில் நான் இதற்கு ஆளில்லை. இளைஞர்கள்…உங்களுக்குள்ள யாராவது எடுத்து செய்துக்குங்க…என்னால முடியாது. என்ன பைசாவோ அதத் தந்துடறேன். அதான் இனிமேல் என்னால முடியும்….என்று வாட்சப்பில் போட்டுக்கொண்டேயிருந்தார்.

சட்டென்று ஒன்று மனதில் தோன்றியது. அந்தப் பையனிடம் வேலையை ஒப்படைத்து செய்தால், நான் வந்து இடித்துப் போட்டு விடுவேன் என்று மிரட்டினானே அவன் எப்படி அந்த ப்ளக்ஸ் போர்டில் இருப்பான்? அவன்தான் சண்டைக்காரன் ஆயிற்றே…? ஒரு வேளை அவுங்களுக்குள்ளேயே கோஷ்டிச் சண்டையோ? ஏழெட்டுப் பத்துப் பேர் தெரிகிறார்களே போஸ்டரில்? ரெண்டு கோஷ்டி, மூணு கோஷ்டி என்று இருந்தால்….? அப்போ அந்தப் பையனிடம் வேலையை ஒப்படைத்தால் அவனுக்குத் தெரியாமல் போகுமா? வாங்கும் காசில் பங்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருப்பானோ? இப்போதெல்லாம் பங்குச் சண்டையில்தானே வெட்டும் குத்தும் நடக்கின்றன? அட…கொலை கூடச் செய்கிறார்களே? அதை முன் பகை என்று வேறு சொல்கிறார்கள்.

இப்போது என்னதான் செய்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்தானோ? தீவிரமாக யோசித்தார். தன் யோசனையை நிறைவேற்றுமுன் வாட்சப் குருப்பில் என்ன செய்யலாம் என்று கேட்டு விலாவாரியாக விவரித்தார்.

ஆளாளுக்கு தங்கள் அபிப்பிராயத்தை ரொம்பவும் பொறுப்பாகச் சொல்வது போல் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வாயால் வழிய விடுவதுதானே…காசா பணமா? யோசனை சொல்வதற்கு எவனுக்கு வலிக்கிறது? தாங்கள்தான் தீவிரச் சிந்தனையாளர்கள் என்று காட்டிக் கொண்டார்கள். விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு தங்களுக்கு ஈடு யாரும் இல்லை என்று வெளிப்படுத்தினார்கள்.

கவுன்சிலரையும் பார்க்க வேணாம்….கண்டபடி திரியறவங்களையும் அணுக வேண்டாம். எந்த நலச் சங்கமும் எதுவும் செய்யாது. எதுவானாலும் நாமதான் செய்தாகணும் நமக்கு….அதுக்கு ஒரே வழி இதுதான் என்றார்கள்.

எப்படியோ…மெஜாரிட்டிக் கருத்து ஒத்துப் போவதை உணர்ந்தார் வெங்கடாசலம். நீங்க சொன்னதைத்தானே செய்திருக்கேன் என்று நாளை கையைக் காட்டி விடலாம். எடுத்துச் செய்தது ஒரு பாவமா? எனக்கென்ன வேலையில்லாமயா அலையறேன்.   சொந்த வேலையை விட்டுட்டு இதுக்குன்னு நாயா பேயா தெனமும் அலைஞ்சிருக்கேன்…எவனும் நாக்கு மேல பல்லுப் போட்டு என்னை ஒரு வார்த்தை சொல்ல முடியாதாக்கும்….சொல்லித்தான் பார்க்கட்டுமே…? அப்புறம் என்ன ஆகுது பாரு….நான் இல்லைன்னா இந்த அபார்ட்மென்டே நாறிப் போகுமாக்கும். என்னவோ எல்லாப் பயலுகளும் கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடிட்டே இருக்கானுங்களே…நிக்க நேரமில்லாம அலையறானுங்களே…நம்ம பிள்ளை மாதிரிதானே ஒவ்வொருத்தனும்….முடியுதோ முடியலையோ நாம செய்ததாகவே இருக்கட்டும்னு நான் ஓடியாடிச் செய்திட்டிருக்கேன்…அதப் பழி சொல்ல வந்தா அந்தப் பாவம் சும்மா விடாது…. – தனக்குத்தானே புலம்பிக் கொண்டே புறப்பட்டார்.

அவர் போய் நின்ற இடம் கார்ப்பொரேஷன் அலுவலகம். கையில் விரிவாக எழுதப்பட்ட மனு இருந்தது. அந்த மனுவில் அபார்ட்மென்டில் குடியிருக்கும் அனைத்து நபர்களின் கையொப்பமும் தேதியுடன் இடப்பட்டிருந்தது.

நேரே உள்ளே நுழைந்து அலுவலகத் தலைமையையே சென்று பார்க்க உள்ளே அழைக்கப்பட்டார். எதிரே போய் அமர்ந்தார். தான் ஒரு முன்னாள் மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர்(ஓய்வு) என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கையோடு கொண்டு வந்திருந்த மனுவை எடுத்து  நீட்டினார்.

மனு கவனமாய்ப் படித்துப் பார்க்கப்பட்டது.

நீங்க எந்த வெளி ஆட்களிடமும் கொடுக்க வேண்டாம். அதெல்லாம் அதிகாரபூர்வமானதில்ல. ஆனா அப்படிச் சொல்லிட்டு நிறையத் திரியறாங்க…சில பேர் செய்யவும் செய்திருக்காங்க….போனது போகட்டும்…நீங்க இங்க வந்ததுக்கு மகிழ்ச்சி. இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்குங்க…நாளைக்கு எங்க ஆளுங்க வருவாங்க…வந்து என்ன ஏதுன்னு பார்த்துட்டு வேலையை முடிச்சிக் கொடுத்திடுவாங்க…கார்ப்பரேஷன் நிர்ணயிச்சிருக்கிற கூலியை நீங்க கொடுத்தாப் போதும்…புரிஞ்சிதா? அதிகமா ஒரு பைசா யாருக்கும் கொடுக்க வேண்டாம்..அப்படி யாராச்சும் ஏதாச்சும் கேட்டாங்கன்னா இங்க வந்து சொல்லுங்க…புகார் கொடுங்க…நான் பார்த்துக்கிறேன். சரிங்களாய்யா….! போயிட்டு வாங்க….! நாளைக்கு எங்க ஆட்கள் வந்து வேலையை முடிச்சிடுவாங்க….-சொல்லியவாறே வணக்கம் தெரிவித்தார் அந்த அதிகாரி.

ரொம்ப நல்லவராயிருக்காரே?-நினைத்துக் கொண்டார். திருப்தியோடு எழுந்து வாசலுக்கு வந்தார் வெங்கடாசலம்.

கேட்டைத் தாண்டி சாலைக்கு வந்து சேர்ந்தபோது கைபேசி அலறியது.

உறலோ…ஐயா….! நான்தான் கதிரவன் பேசறேன்…இன்னைக்கு ராத்திரி வந்து உங்க அபார்ட்மென்ட் சாக்கடை வேலையை முடிச்சிடலாமாங்கய்யா…ஆளுகளத் தயார் பண்ணிட்டேன்….மத்தியானம் போல ஃபோன் பண்ணிட்டு வர்றேன்….பணத்தைத் தயார் பண்ணி வையுங்க…வீட்டுக்கு அஞ்சாயிரம். ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல?  மொத்தம் முப்பதாயிரம். சரிங்களா….உங்களுக்கு மட்டும்தான் இந்த ரேட்டு. வேற எடம்னா அம்பது வாங்குவோம். … …புரிஞ்சிதுங்களா…! மத்தியானமா ஃபோன் பேசறேன்….இன்னைக்கு நைட்டு வேலையை முடிச்சிடுவோம்…சரிங்களா…?-லைன் துண்டிக்கப்பட்டது.

கைபேசியைப் பார்த்துக் கொண்டே பிரமித்து நின்றார் வெங்கடாசலம். இன்னைக்கு நைட்டே…என்றால் என்ன பொருள்? எதுக்காக ராத்திரி வந்து இந்த வேலையைச் செய்யணும்? யாருக்கும் தெரியாமச் செய்றதைத்தான் நைட்ல செய்வாங்க…சொல்லுவாங்க…யாருக்கும் தெரியாமன்னாலே அதுல ஏதோ தப்பு இருக்குன்னுல்ல அர்த்தமாகுது?  ஊரெல்லாம் தூங்கிட்டிருக்கும்போது….மிஷின் போட்டு, தடதடன்னு சத்தத்தோட தரையை உடைச்சு உடைச்சு குழி பறிச்சு இந்த வேலையைச் செய்வாங்களா? என்னய்யா தூக்கத்தக் கெடுத்திட்டுன்னு எவனாச்சும் சண்டைக்கு வந்தான்னா? நம்மளல்ல புகார் கொடுப்பானுங்க… அதிக பட்சம் அரை மூட்டை சிமின்டாகுமா…அட…ஒரு மூட்டைன்னே வைப்போம்…அரை வண்டி ஜல்லி போதாதா? ஒரு வண்டி மணல்?  தண்ணி இங்கயே இருக்கு….இதுக்கு எதுக்கு முப்பதாயிரம்? செய்ற வேலையே தப்பு…செய்ற முறையும் தப்பு…இதுல அதிகாரம் வேறே? என்னா தைரியமா உரத்துப் பேசுறானுங்க…? இவங்களெல்லாம் யாரு கேட்கறது? தண்டல் வசூல் மாதிரில்ல தடாலடி பண்றானுங்க…என்ன அநியாயம்?

அடுத்து மதியத்துக்கு மேல் ஃபோன் வந்தால் எடுப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டார் வெங்கடாசலம். ஆட்கள் நேரில் வந்தால்? என்று ஒரு கேள்வி விழுந்தது.

நேர்ல வந்தா என்ன? கார்ப்பரேஷன்ல சொல்லியாச்சு…அவுங்க வந்து செய்றாங்கன்னுட்டுப் போக வேண்டிதான்…! – முடிவு செய்து கொண்டார்.

எடுத்த நடவடிக்கைகளை வாட்சப்பில் எல்லோருக்கும் தெரிவித்தார்.

நாளைக்கு சனிக்கிழமை லீவுதான் சார்….நாங்க இருக்கோம்…வந்து நிக்கிறோம் சார்… பயப்படாதீங்க… என்றார்கள். அதுவே மிகப் பெரிய ஆறுதலாய் இருந்தது.அட…பொறுப்பாப் பேசுறாங்களே…? ஆச்சரியமாய் இருந்தது வெங்கடாசலத்திற்கு. பயப்படாதீங்க…அந்த வார்த்தைதான் உறுத்தியது. பயந்திருந்தால் இத்தனை செய்திருக்க முடியுமா? எட்டியே பார்க்காத, வழி முறையே அறியாத, இவர்கள் சொல்லும் வார்த்தையா இது? முதலுக்கு மோசமில்ல…அவ்வளவுதான்…  அவர்களை வைத்தே அந்த வேலைக்கான கூலியையும் பேசி, கார்ப்பரேஷன் பணியாளர்களுக்கு நேரடியாகக் கொடுத்துத் தீர்த்து விடவேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டார்.  கழிவு நீர் வடிகால் ரிப்பேர் திருவிழாவுக்காகக் காத்திருக்கலானார்.

எந்தக் காரியமானாலும் “முடிவெடுக்கும் திறன்“ என்பது அதி முக்கியமானது என்று அப்போது அவர் மனது சொல்லியது.

                                    ------------------------------------

 

 



தாய் வீடு - பிப்ரவரி 2025 இதழ் 




 

01 பிப்ரவரி 2026


My all time favourite

ல்லாப் புத்தகத்திலும் ஏதாச்சும் கொஞ்சமேனும் கண்டிப்பாப் படிச்சிருப்பேன்...கிளாஸிக்ஸ் தவிர...அடிக்கடி எடுத்துப் படிக்கிறது அதுதான். அ.மி.யோட "தண்ணீர்" குறைஞ்சது அஞ்சு முறையாச்சும். இ.பா.வோட "ஹெலிகாப்டர்கள் கீழே இறங்குகின்றன" பத்துத் தடவை படிச்சிருக்கேன்.தலைசிறந்த பத்து நாவல்கள்ல இது இரண்டும் கண்டிப்பா இடம் பெறும். குருதிப்புனல் நாவல்..மூணுவாட்டி படிச்சிருக்கேன். அவரது சிறுகதைகளைப் படிச்சிட்டேயிருப்பேன். ஆதவனும் பிடிக்கும்.இ.பா. மாதிரித் தெளிவா..புத்திசாலித்தனமா கதை சொல்ல யாராலும் முடியாது. My all time favourite அவர்தான்..







 

 

சிறுகதை      - பிரசுரம் - தாய் வீடு-பிப்ரவரி 2026 மாத இதழ்                       

”உள்ளொழுக்கு”






            நான் யாரோடும் பேசுவதில்லை  என்றார் ராமமூர்த்தி.

            பறவைகள் சலசலவென்ற சத்தத்துடன் கூட்டாகக் கிளம்பிப் பறந்தது இவர் சொன்னதற்கு சிரிப்பதுபோல் இருந்தது. வானத்தை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்.

            அவர் குரலில் இருந்த தீர்மானத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டார் சாமியப்பன்.

            ஏன்? – ஒற்றை வார்த்தையில் அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்துக்  கேட்டார்.

            ஏன்னா அது என் இயல்பில்லை…. என்றார் இவர் மறுபடியும்.

            அப்போ உங்களுக்கு ஃபோன் செலவில்லன்னு சொல்லுங்க…. – என்று சூழலைத் தளர்த்த முயன்றார் சாமியப்பன். முன்னால் பின்னால் என்று நடந்து வருபவர்கள் யாரும் தங்கள் பேச்சைக் கவனிப்பார்களோ என்றிருந்தது. காதில் விழத்தானே செய்யும்…!

            ஃபோன் செலவில்லன்னு எப்படிச் சொல்ல முடியும்? நம்ப நம்பருக்கு கனெக் ஷன் வச்சிருக்கமே…அது உயிரோட இருந்தாகணுமே…அதுக்குப் பணம் கட்டித்தானே ஆகணும்? வேலிடிட்டீ…..

            அதோட மட்டுமில்லே….நம்மளோட மத்தவங்க பேசினாலும் அதுக்கும் கனெக் ஷன் இருந்தாகணுமே…-அப்படியாவது யாரும் உங்களுடன் பேசுவதுண்டா? என்ற கேள்வி அதில் மறைந்திருந்தது.

            அதத்தான் சொல்ல வந்தேன்….யாராவது பேசினாங்கன்னா நான் பேசுவேன்…நானா யாருக்கும் பேசறதில்லை…அதுதான் என்னோட இயல்புன்னு உறவுக்காரங்களும் புரிஞ்சிக்கிட்டாங்க பாருங்க…அதுதான் அதுல பெஸ்ட்…! ….

            ஏன் அப்படி விட்டுட்டீங்க…? – யதார்த்தமாய்த்தான் கேட்டார் சாமியப்பன்.

            அவரிடம் சொல்வதில் ஒன்றும் தவறில்லைதான். எல்லாவற்றிற்கும் மனசு வெறுத்துப் போனதுதான் காரணம் என்கிற அடிப்படையை, அந்த ஆதங்கத்தை யாரிடமாவது சொல்லித் தீர்க்க வேண்டும்போலத்தான் இருந்தது இவருக்கும்.

 இவரைப் போலவே சாமியப்பனும் ஒரு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்தான். மாலை நேரம் வழக்கம்போல் அந்தப் பூங்காவிற்கு நடைப் பயிற்சிக்கு  வரும்போது பழக்கமானது. அதில் விசேஷம் என்னவென்றால் இருவரும் ஒரே தேதியில் ஒரே நாளில் பணியிலிருந்து ஓய்வு பெற்றதுதான். இந்த ஒற்றுமை அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தைக் கொண்டு வந்திருந்தது.

            ஓய்வூதியம் தொடர்பாக அவர்களுக்குள் கொஞ்சம் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. ராமமூர்த்தி ஒரு இரண்டாயிரம் ரூபாய் கூடத்தான் வாங்கினார். காரணம் கடைசி ஒரு வருடத்தில் அவர் வேறு துறைக்குப் பதவி உயர்வில்  கணக்கு அலுவலராய்ச் சென்றதுதான்.

            பச்சை இங்க்கில் கையெழுத்துப் போட வேண்டும் என்கிற வெறி அவருள்ளே புகுந்திருந்தது. அதற்கு அலுவரானால்தானே முடியும்?  அவர் வேலை பார்க்கும் சொந்தத் துறையில் அந்த இடத்தைப் பிடிக்க ஜனவரிக்கு மேல் ஆகும் என்கிற நிலை இருந்தது.  அதே சமயம் தனக்கிருக்கும் சிறப்புக் கல்வித் தகுதி கருதி எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற விதியின் கீழ் முப்பத்தி இரண்டு ஆண்டு காலம் வேலை பார்த்த தன் துறையை விட்டுப் புதிய இடத்திற்குத் தாவினார் ராமமூர்த்தி.

            வெளியேறும்போது ஒருவர் கேட்டார். சார் எங்களையெல்லாம் விட்டுட்டு இப்படிப் போறீங்களே… பெரிய இழப்பு சார் எங்களுக்கு…அப்பப்பப் பேசலாமா சார்….?

            வேண்டாம் என்றார் இவர். அவர் அதிர்ந்து போயிருக்க வேண்டும். என்ன இந்த மனுஷன் இப்படிச் சொல்றான்? அது எப்படியோ அத்தனை பேர் காதுக்கும் போய்விட்டது. அதற்குப்பின் யாரிடமிருந்துமே ஃபோன் வந்ததில்லை அவருக்கு.

            என்ன வேண்டிக் கிடக்கு? பூராப்பயலுவளும் லஞ்சப் பேர்வழிங்க…இவிங்ஞளுக்கு மத்தியிலேயிருந்து விலகினதே பெரிசு. அப்புறம் என்ன குசலம் விசாரிப்பு…கொண்டாட்டம்? ஒரு மண்ணும் தேவையில்ல….-மனசு வெறுத்துப் போய்த்தான் வெளியேறினார்.

            பார்ட்டியெல்லாம் வேண்டாம் என்று விட்டார். இவர்தான் தன் கைச் செலவில் எல்லோருக்கும் சாப்பாடு போட்டார். ஆபீஸ்களில் வேலைகள்தான் நடக்கும். ஆனால் அன்று அங்கு சாப்பாடு நடந்தது. கோப்புகளைப் பூராவும் எடுத்துத் தரையில் கிடாசிவிட்டு மேஜையில்  இலை விரித்து சித்ரான்னங்களுடன் ஜே ஜே. என்று உணவு பறிமாறப்பட்டது. எல்லோர் மனதையும் நிறைத்து விட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார். எதற்கும் எவனும் வயிறெரியக் கூடாதே பிற்பாடு!

            சார்…சாயங்காலம் பார்ட்டிக்கு நாங்க நாலு பேர் இருக்கோம்…என்று வந்து கெஞ்சுவதுபோல் நின்றார்கள். தொலைஞ்சு போங்க…என்று அதற்கும் கொடுத்துத்தான் தலைமுழுகினார்.

            யாராவது காசை இப்படி விரயம் பண்ணுவாங்களா? கூறு கெட்டுப் போச்சா உங்களுக்கு? அவுங்களப் பார்ட்டி வைக்கச் சொல்லி அரைப் பவுன் மோதிரத்தோடும் சந்தன மாலையோடும்  வந்து நிற்கத் தெரியலை…என்னமோ இவரு விருந்து வச்சாராம்…பீத்திக்கிறாரு….! – காயத்ரீ விட்டு வாங்கினாள்.

நானென்ன ரிடையர்ட் ஆயிட்டேனா? மோதிரம் போடுறதுக்கு? டிபார்ட்மென்ட்தானடீ  மாறிப் போறேன்…கழிசடையான எடத்தைவிட்டு இடம் பெயர்றேன்…திருஷ்டிக் கழிப்புன்னு ஒண்ணு இருக்குல்ல…என்றார்.

            தன்னை அங்கிருந்து விலக்கிக் கொள்ளும்முன், தனக்கான வேலைகளை, தேவைகளையெல்லாம் தானேதான் முடித்துக் கொண்டார். போட்டுப் பார்த்திடுவாங்ஞ என்கிற கவனமிருந்தது. ஸ்டிரிக்டா இருந்தவன எவனுக்குத்தான் இந்த உலகத்துல பிடிக்கும்?  வெளியேறிவிட்டால் எவனையும் எதற்கும் எதிர்பார்த்து நிற்கக் கூடாது. முப்பத்தியிரண்டாண்டுகள் பணி புரிந்த இடத்தில் பிடிப்பே இல்லாமல் போனது.சூழல் மாசு படிந்ததே அதற்கான பிரதான காரணம் என்று நினைத்துக் கொண்டார்.

            தேர்டு கிரேடு ஆபீசர்தான். ஆனாலும் நான் ப்ளூ இங்க்ல போட மாட்டேன். பச்சை மைப் பேனாவால்தான் ஒப்பமிடுவேன்….என்று பிடிவாதமாய் இருந்தார் ராம
மூர்த்தி. யெலிஜிபிலிட்டி உண்டே….! எவன் கேட்கிறது?

            சார்…உங்களுக்கு முன்னாடி இருந்த யாரும் பச்சை இங்க்ல போட்டதில்ல சார்…என்று பயந்து கொண்டு புலம்பினார்கள் பலர்.  இவர்கள் ஏன் இந்த பயம் பயப்படுகிறார்கள் என்றிருந்தது.  தவறு செய்பவர்களுக்கு மனதுக்குள் எப்போதும் ஒரு தயக்கமும், பயமும் இருந்து கொண்டேயிருக்கும். வருகைப் பதிவேட்டில் பணியாளர்கள் போலவே அவருக்கு முன்பிருந்தவரும் நீலநிற மையிலேயே சுருக்கொப்பமிட்டிருந்தார். தன்னை சிறப்பாகக் காண்பித்துக் கொள்ள அவருக்கு இஷ்டமில்லை…பத்தோடு பதினொன்றாகவே இருக்க விருப்பம். பின்னால் ஒளிந்து கொள்வது. அவர்கள் அப்படித்தான்…!

            மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கத்தான் செய்யும் என்பது பிறகுதான் புரிந்தது. கூட்டத்தோடு கும்மியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நான் அப்படியில்லை என்று காண்பிக்க முனைந்தார் ராமமூர்த்தி.

            சார்…கலெக்டர் ரௌன்ட்ஸ் வர்றார்…என்றனர்.

            வரட்டுமே…என்றார் இவர். அவர்களோ பரபரத்தார்கள். வந்த பின் எழுந்து வணங்கினால் போதாதா? இப்போதே எழுந்து நின்று கால்கடுக்கக் காத்திருக்கணுமா? அலுவலகத்திலிருந்தவர்களுக்கு இவரின் நடவடிக்கைகள் புதிதாய், புதிராய் இருந்தன.

            ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணித்தானே அந்த அம்பத்திநாலு வயதிலும் மாலை வகுப்பிற்குச் சென்று கணக்கியல் பயிற்சி பெற்றார்? இளநிலைக் கல்வித் தகுதியே போதுமானது என்றிருந்ததுதான். ஆனாலும் மேல்நிலைக் கல்வித் தகுதியையும் அடைந்தே தீர வேண்டும் என்கிற வெறி அவருள் புகுந்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம்தான் உள்ளூரிலேயே  அலுவலக மாறுதல் என்று வந்து அதைக் கெடுத்து விட்டது. பதவி உயர்விற்குப் போதுமான கல்வித் தகுதி இருக்கிறதுதானே என்று விட்டு விட்டார்.

            புதிய அலுவலகம்…புதிய வேலைகள்…புதிய பொறுப்புக்கள். அதை ஒழுங்காகச் செய்தாக வேண்டும். எவனும் குத்தம் குறை சொல்லி விடக் கூடாது…பொறுக்காதே…! கவரிமான் புத்தியாயிற்றே?

            இருந்தது இருந்துட்டீங்க…இன்னும் ஒரு வருஷம்…இங்கயே இருந்து ரிடையர்ட் ஆயிட வேண்டிதானே சார்…எதுக்கு கடைசி காலத்துல வேறே டிபார்ட்மென்ட்? -கேட்கத்தான் செய்தனர்.

தொலையட்டும்…இவன் இருந்தா நமக்குத்தான் இடைஞ்சல். அவனும் வாங்க மாட்டான்…நம்பளையும் வாங்க விட மாட்டான்…காசோட அருமை தெரியாத பய…!

எனக்கு வேண்டாம்…என் பங்கை இவங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்திடுங்க…என்றவர்தான். ஆனாலும் அவர்களுக்கு இவர் ஒரு இடைஞ்சல்தான்.

            ஒருவனின் உயர்வு என்பது பலரையும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கத்தானே செய்கிறது?  பிடியாப் பிடிச்சுக் கிளம்பிட்டானே…!

            புது டிபார்ட்மென்ட்டுக்குள்ள நுழைஞ்சிட்டு…எதுக்கு சார் கடைசி காலத்துல…அதெல்லாம் பெரிய கடல் சார்…நம்மால நீந்த முடியாது…

            மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் என்று சொன்னவர் எவருமில்லை.

            உங்களுக்கெல்லாம் வயசிருக்கு. அடுத்தடுத்து ப்ரமோஷன் வர வாய்ப்பிருக்கு. ஆனா எங்க காலத்துக்கு அது ரொம்பக் குறைவு. ரெண்டு ஸ்டெப், மூணு ஸ்டெப் தாண்டுறதே அதிகம். நான் இங்கயே இருந்தேன்னா மார்ச்சுக்குள்ளதான் எனக்கு நிர்வாக அலுவலர் பதவி உயர்வு கிடைக்கும். அதே ராங்க்கை இப்போதே அங்க போய் நான் அடைஞ்சிடுவேன். அதான் உதறிட்டுப் போறேன்….என்றார்.

            இந்த வயசுல இவனெல்லாம் படிச்சு எங்க பாஸ் பண்ணப் போறான்…என்று பூடகமாய்ப் பேசிக்கொண்டார்கள்தான்.  வீட்டில் கதவை அடைத்துக் கொண்டு பயிற்சி செய்தார். சின்ன வயசில் இருந்த அதே வேகம் இன்னும் தன்னிடம் அழியவில்லை என்று தோன்றியது. அந்த வேகம்தானே தன்னை சர்வீஸ் கமிஷன் வேலையையே வாங்க வைத்தது. லட்சக் கணக்கான பேர் எழுதிய தேர்வில் பாஸ் பண்ணுவது என்றால்? முதன் முதலில் நாளிதழில் ரிசல்ட் வந்த அந்த நியூஸ் பேப்பரை இன்னும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறார். இவர் நம்பரை அன்டர்லைன் பண்ணியிருப்பார். அன்று அப்பாம்மா முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி? வாங்கும் சம்பளத்தை அப்படி அப்படியே அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்து விடும் பழக்கமிருந்தது அவரிடம். அவர் செலவுக்கு என்று மிகச் குறைந்த தொகையே கேட்டு வாங்கிக் கொண்டார். இது போதுமாடா? போதுமா? என்று திரும்பத் திரும்ப அம்மா கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

அந்த நாள் இனிய நாள்…அது திரும்ப வராது. அம்மா அப்பாவோடு வாழ்ந்த நிறைவான நாட்கள் அவை. சத்தியத்தோடும் லட்சியத்தோடும் கை கோர்த்திருந்த நாட்கள் அவை.

            கணக்கியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் வாயடைத்துப்  போனார்கள். நினைச்சதைச் சாதிச்சிட்டீங்க…என்று உளமார்ந்த பாராட்டுதல்களுடன் வந்து நின்றவர் உதயசங்கரன் பொறியாளர் மட்டும்தான். இவனெல்லாம் எங்க அக்கௌன்டன்சி பாஸ் பண்ணப் போறான்? என்று கேவலமாய் முதுகுக்குப் பின் பேசியவர்கள் பலர்.  அதென்ன அப்படியான கஜகர்ண வித்தையா…பார்த்துடுவோம் ஒரு கை என்றுதான் இறங்கினார். எப்போதுமே தன் முயற்சியில் அசாத்திய நம்பிக்கை உண்டு ராமமூர்த்திக்கு. ஒன்றைக் கையிலெடுத்தால் உடும்புப் பிடியாய் பிடித்து உலுக்கி  எடுத்து விடுவார்.

            லெக்டரின் முதல் மீட்டிங்கில் நன்றாக மாத்து வாங்கினார் ராமமூர்த்தி. எல்லோர் முன்னிலையிலும் அந்தளவுக்கு அவர் காய்ச்சியிருக்கத் தேவையில்லைதான். வந்து ஒரு மாதம்தானே ஆகியிருக்கிறது என்கிற புரிதல் வேண்டாமா? ஆனாலும் அவரை யார் கேள்வி கேட்பது? அத்தனையையம் வாங்கிக் கட்டிக் கொண்டார். மூஞ்சி தொங்கிப்போய் வந்து உட்கார்ந்தார். மனசுக்குள் அசூயை பிறந்தது. என்னை என்ன முட்டாப்பயன்னு நினைச்சிட்டாரா? இந்தப் பேச்சு பேசுறாரு? மனதுக்குள் கருவிக் கொண்டார்.

            அன்றே சுதாரித்தார். அதற்குப் பின் எத்தனை சனி, ஞாயிறுகளுக்கு அவர் வீட்டுக்கு வந்து  திரும்பினார் என்பது அவருக்கே தெரியாது. வீடே மறந்து போனது.  இ.டென்டர் முதற்கொண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அதில்தான் பாராட்டுப் பெற்றார்.  அதற்குப்பின் அவர் இருக்கிறாரா, போய்விட்டாரா என்று எதையும் கண்டு கொண்டதில்லை ஆட்சியர். அவருக்கு எத்தனையோ வேலைகள். எத்தனையோ அரசியல்வாதிகள். யார் யாரோ விசிட்டர்ஸ்….

            விலகுங்க…விலகுங்க…சார் வரட்டும்….என்று கரை வேட்டியோடு நுழைந்த அந்த அரசியல்வாதிக்கு வழி விடச் சொன்ன அன்றே பலவற்றையும் புரிந்து கொண்டார் ராமமூர்த்தி.  எல்லா எடமும் கழிசடையாத்தான் இருக்கும் போல்ருக்கு என்று தோன்றியது. டென்டர்கள் அசலுக்கும், பினாமிக்குமாய் பகிரப்படுவதைக் கண்ணுற்றார். அதற்குப்பின் ஆட்சியர் மீது இருந்த மரியாதை அறவே விட்டுப் போனது. இன்னும் என்னென்னவோ மனதை உறுத்தத்தான் செய்தது. ஒதுக்கீடு செய்யப்படும் நிதி எப்படிஎப்படியெல்லாம் பாழாகிறது? திருப்பிவிடப்படுகிறது? கழுத விட்டைல முன் விட்டை என்ன பின் விட்டை என்ன?  சீக்கிரம் இங்கிருந்து என்று கழருவோம் என்று நினைக்க ஆரம்பித்தார். சரியாக ஒன்பது மாதங்கள்…கிடுகிடுவென்று ஓடிவிட்டதுதான்.  ஒரு நாள் கூட லீவு எடுக்கவில்லை. கணக்கிலிருந்த சாதா லீவு, மெடிக்கல் லீவு என்று எல்லாமும் காலாவதி ஆகிப் போனது.  லீவு எடுத்து விட்டு வீட்டில் கெதம் கெதம் என்று உட்கார்ந்து ஆபீசையே நினைத்துக் கொண்டிருப்பதற்கு ஆபீசிலிலேயே கதியாய்க் கிடப்பது மேல் என்று இருந்தே கழித்து விட்டார். என்ன நஷ்டமானாலும் பரவாயில்லை. கௌரவம்தான் முக்கியம். ஒரு பய ஒரு வார்த்தை சொல்லக் கூடாது. அதற்கு இடம் கொடுக்கவே கூடாது. அதுவே லட்சியம்.

            வாங்க மாட்டான் அந்த ஆளு என்கிற தகவல் மேலிடம் வரை போயிருப்பது எப்படியோ காதுக்கு வந்தது. அப்டியா…அப்டியா? என்று வியந்தாராம். இவர் வியந்தாலென்ன வியக்காவிட்டால்தான் என்ன…நான் என்னைக்குமே உயர்தரம்தான்…அதை எவன் பாராட்டி நான் கேட்கணும்… என்று வாளாவிருந்தார் ராமமூர்த்தி. மனதிற்குள் மிகுந்த கர்வம் உண்டு இந்த ஒரு விஷயத்தில்.

            டென்டருக்கென்று ஆபீசுக்குள் வரும்போதே கலெக்டர் சேம்பருக்குள் நுழையும் முன் அமர்ந்திருக்கும் இவர் பையில் செருகிவிட்டுப் போனார்கள். அதிர்ந்து போனார் இவர். உள்ளே கேட்டாலும் கேட்கட்டும்…என்று விரலசைத்து வைத்த ஆளைத் திரும்ப அழைத்து, எடு…என்றார்…ஒற்றை வார்த்தையில். உள்ளே கேட்டால் கேட்கட்டும் என்றுதான் சொன்னார்.  எல்லாம் வழக்கம்தான் சார்…இருக்கட்டும்…என்றான் அவன். உன் வழக்கத்தக் கொண்டு குப்பைல போடு..இதெல்லாம்  அங்கயோட நிறுத்திக்கோ…எங்கிட்ட வரப்படாது….என்றார் படு கறாராய். வார்த்தையும் பார்வையும் அதைத் துல்லியமாய் உணர்த்தியது.  ஒருமையில்தான் பேசினார். அதிர்ந்து போனான் வந்தவன். எவனெவனோ எது எதற்கோ வருகிறார்கள் போகிறார்கள்…அம்புட்டுப் பயலுகளுக்கும் இந்தப் புத்திதான் இருக்குமா? காரியம் சாதிக்கணும்னு இப்படியா பழக்கி விட்ருப்பானுங்க? செல் அரிச்ச மாதிரி ஆகிப் போச்சே?  இவனே போய் உள்ளே  சொன்னாலும் பரவாயில்லை என்றுதான் வாளாவிருந்தார். நா இப்டித்தான்….எங்க வேணா போய்ச் சொல்லிக்கோ…!

            அதற்குப்பின் டென்டர் இறுதி செய்யும் நிகழ்வுக்கு ஆட்சியர் இவரை அழைப்பதே நின்று போனது. அவருக்கே பயமோ என்னவோ? யார் கண்டது? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எவனுக்குத் தெரியும்?  இருக்கும் இடத்தை மதிப்பாய் வைத்திருப்பது யார் கையில்?

            வாங்கமாட்டாரா…வாங்க மாட்டாரா…அப்டியா…அப்டியா…என்று வளாகம்                               பூராவும்..பராபரியாய்ப் பேச்சுக்கள் பரவின.  அப்படிப்பட்ட அதிசயமான செய்தியாய் அது இருந்ததுதான் வியக்கக்தக்கது. அம்புட்டுப் பேரும் சகதியில் புரளும் இடம் அது. அங்கு போய் ஒருத்தன் மட்டும் மேட்டில் உட்கார்ந்து  வேடிக்கை பார்க்க முடியுமா?

            ப்பாடா… போதுண்டா சாமி…..அந்த 31ம் தேதி வளாகத்திற்கு வெளியே வந்து தலைக்கு மேலே கையை உயர்த்தி ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு சாஷ்டாங்கமாய்த் தரையில் விழுந்து வணங்கினார் ராமமூர்த்தி. எவனாவது கிறுக்கன் என்று நினைத்தாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்றுதான் விழுந்து எழுந்தார்.

            அவரை வழியனுப்பியவர்கள் நாலைந்து பேர்தான். ஆனால் யார் யாருக்கெல்லாம் மனசார அவர்களின் சர்வீஸ் பணியில் உதவி செய்திருந்தாரோ, இடர் நீக்கியிருந்தாரோ, பலன் அடையச் செய்திருந்தாரோ அவர்களெல்லாம் நன்றி மறக்காதவர்களாய் வந்து நின்றிருந்தார்கள்தான்.

            எங்கும் எந்த மாற்றமும் இல்லை…எல்லாமும் ஒரே கசடு என்றுதான் தோன்றியது. எப்படியோ வலையில் விழாமல் மீண்டாயிற்று. மீளுவதே போராட்டமாய் அமைந்து போனதை எண்ணிப் பெருமூச்செறிந்தார்.

            நல்லவனாய் உயிரோடு நடமாடுவதே இந்த உலகத்தில் கஷ்டமானது என்பதாய் உணர்ந்தார். தன் கணக்கு வழக்குகளையெல்லாம் தான் இருந்த கடைசிப் பத்து நாட்களில் சப்ஜாடாய் முடித்துக் கொண்டு வெளியேறியதுதான் இருப்பதிலேயே  உறலைட்டான விஷயம்.. கடைசியாய் அங்கும் கேட்டார்கள். 

சார்…அப்பப்பப் பேசலாமா?   -  இவர் சொன்னார்…..வேண்டாம்…….!!!

ன்ன சாமியப்பன்….ஏது அமைதியாவே வர்றீங்க…ஏதாச்சும் பேசுங்க….? என்றார் ராமமூர்த்தி. வெகு நேரம் அமைதியாகவே நடந்து விட்டோம் என்று உணர்ந்த கணம் அது. எவ்வளவு சிந்தனை பரந்து விரிந்து விட்டது அதற்குள்?

உங்களமாதிரியெல்லாம் நான் இல்லை சார்….கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தேன்…..நீங்க சொக்கத் தங்கம்……!!!

சொக்கமாவது…தங்கமாவது…எல்லாம் அவனவன் மனசப் பொறுத்தது…போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து…என்றார் இவர் யதார்த்தமாய்.

இந்த மனசுதான சார்…எல்லாத் தப்பையும் செய்ய வைக்குது…சலனமில்லாம அதை நீங்க கன்ட்ரோல்ல வச்சிருந்திருக்கீங்களே? அதைப் பாராட்டித்தானே ஆகணும்…!!

வீட்டுக்கு வந்து பாருங்க…எம் பொண்டாட்டி என்ன சொல்றான்னு, என் கன்ட்ரோல் என்ன லெவலுக்கு இருக்குன்னு அப்பப் புரியும்… சொல்லிவிட்டு பலமாய்ச் சிரித்தார் ராமமூர்த்தி.

அந்த நீண்ட ஆர்ப்பாட்டமான சிரிப்பினூடே ஒரு சின்ன சோகம் தொற்றியிருப்பதாய் சாமியப்பன் உணர்ந்தார்.

அதன் இறுதியில் ராமமூர்த்தியின் கண்களில் துளிர்த்திருந்த இரண்டு சொட்டுக் கண்ணீர்…..அவரின் உள்ளார்ந்த துயரத்தை இந்த உலகுக்குப் பறைசாற்றியது.

                                    ---------------------------------------------