மாலைமதி (குமுதம்) மே 1-15, 2026 இதழில் ஒரு நாவல்
சிறுகதை
“கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு”-தாய் வீடு - மே 2026 இதழ்
சார்…தபால் திரும்பி வந்திருக்கு …..-ஒரு வணக்கம் போட்டு சொல்லிக் கொண்டு வந்த போஸ்ட்மேனை நிமிர்ந்து பார்த்தார் கனகமணி.
நீட்டிய தாளில் கையொப்பமிட, பியூன் செல்லச்சாமி வந்து சீல் வைத்து திருப்பிக் கொடுத்தார். .
தபாலை நிதானமாக சிசர் வைத்து நுனியில் கட் பண்ணினார். உள்ளே இருந்த தாளை எடுத்தார். ஒரு மெல்லிய பதற்றம் அவரிடம் பரவியிருந்ததை உணர்ந்தார்.
எழுத்தர் அவிநாசிக்கு அனுப்பிய முக்கியக் கடிதம்தான் திரும்பியிருந்தது. அனுப்பிச்சதே திரும்பிடுச்சா?
தேர்தல் பணிக்கு அவரை நியமனம் செய்திருந்த ஆணை குறித்து தகவல் தெரிவித்திருந்த கடிதம் அது. உடனடியாக வரச்சொல்லி. அன்று புதன் கிழமை. முதல் வாரம் வெள்ளிக்கிழமை அனுப்பியிருந்த கடிதம். சனிக்கிழமை கொடுத்திருக்கலாம். அல்லது திங்கட்கிழமை டெலிவரி செய்யப்பட்டிருக்கலாம். அப்படி டெலிவரி செய்யும்போது வாங்க மறுத்து திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறது. அதானே? வாங்கிப் பார்ப்பதில் என்ன சங்கடம் வந்துவிடப் போகிறது?
ஆள் வரும்முன்னே அனுப்பிய கடிதம் திரும்ப வந்து விட்டது. தேர்தல் பணி ஏற்றே ஆக வேண்டும், மறுத்தல் கூடாது என்கிற நோக்கில் ஒப்புதல் அட்டையோடு பதிவஞ்சலில் அனுப்பப்பட்ட தபால் திரும்பியிருக்கிறது.
. வெளியூரில் இருக்கும் ஆள் ஒருவேளை வராமலே போய்விட்டால்? தேர்தல் பணியை மறுக்க முடியாதே…? பணி ஆணை தன்னிடம் இருப்பதை டிராயரைத் திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டார்.
சொல்லப்போனால் இம்மாதிரித் தபால்களை நேரடியாக வழங்கி, கையொப்பம் பெற வேண்டும். அதுதான் முறை. நடைமுறையே அதுதான். ஆள் வெளியூரில் இருந்ததால் அவசரம் பார்த்து வந்து சேர வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஃபோனில் பிடிக்க முடியவில்லையே? அப்படியும் தபால் திரும்பியிருக்கிறது. ஆளில்லையா? வாங்கவில்லையா? வெவ்வேறாக முயற்சித்தும் பலனில்லை.
வந்த தபாலைத் திருப்பித் திருப்பிக் கவனமாய்ப் பார்த்தார் கனகமணி. இவங்களோட பெரிய்ய்ய்ய தொல்லையப்பா….!. …Door locked …என்று மூலையில் கிறுக்கப்பட்டிருந்தது.
இன்று புதன் கிழமை. பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும். நேற்றோடு விடுப்பு முடிந்தது. அவநாசி வரவில்லை. ஒரு வேளை தேர்தல் பணிக்குப் பயந்து கொண்டு விடுப்பை நீட்டிப்பாரோ? சந்தேகம் வந்தது. அப்படி ஆளும் இல்லையே?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை எடுத்துக் கொண்டு டெலிவரி செய்ய வந்த பணியாளர் இன்று மீண்டும் வரக்கூடும். எல்லாத் தபால்களும் எல்லாருக்கும் டெலிவரி செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய. என்ன பதில் சொல்வது?
தேர்தல் பணியை மறுப்பது கூடாது. மறுக்கும் பணியாளர் மீது நடவடிக்கை உண்டு.
யோசித்தவாறே அமர்ந்திருந்தார் கனகமணி. வேறு வேலை ஓடவில்லை. எதிரே இருந்த எழுத்தர்கள், தட்டச்சர்களின் இருக்கைகள் காலியாயிருந்தன. அனைத்துப் பேரும் தேர்தல் பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் போடப்பட்டிருந்தது. டவுனுக்குள்ளேயும், சற்று ஒதுக்குப் புறமாகவும்….வகுப்பு அரை நாளில் முடிந்து விடும்தான். மதியம் ஆபீஸ் வந்து விட வேண்டும். ஆனால் யாரும் வருவதில்லை். வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வருவதானாலும் இரண்டரை, மூன்றுக்குள் வந்துவிடலாம்தான். போனால் போனதுதான். குறைந்தது நான்கு வகுப்புகளாவது இருக்கும். போகும் இடத்தில் எப்போது வகுப்பு ஆரம்பிக்கும், எப்போது முடியும் என்றும் சொல்ல முடியாது. வகுப்பு எடுப்பவர் கொஞ்சம் முன்னே பின்னே வந்தால் நேரம் ஆகத்தானே செய்யும்? அதனால் பணியாளர் ஏன் மதியம் ஆபீஸ் வரவில்லை என்று யாரையும் கேட்கவும் முடியாது. கேட்டும் பயனில்லை. கொடுத்த ஆணைப்படி ஒழுங்காகத் தேர்தல் பணியைச் செய்து முடிக்கட்டும் அதுவே போதுமானது என்று தோன்றிவிடும். இல்லையென்றால் அலுவலருக்குக் கெட்ட பெயர். அவருக்குக் காரணங்கள் கேட்கப்படும்.
எனவே மதியம் ஆபீஸ் வருவதைப்பற்றி பொதுவாய் யாரும் பொருட்படுத்துவதில்லை. அது அந்தந்த ஆபீஸ் சம்பந்தப்பட்ட, அங்குள்ள அலுவலகம் சம்பந்தப்பட்ட நடைமுறை விஷயங்கள்.
கனகமணிக்கு மதியம் இரண்டு மணிக்கு மேல் தேர்தல் வகுப்பு. பகல் அரைநாள் ஆபீஸ் போய் இருக்கும் வேலைகளை முடித்து விடுவோம் என்று வந்திருந்தார் அவர். குறிப்பாய் அவர் மனதிலிருந்த விஷயம் இதுதான். அவிநாசி தபால் பெற்றாரா இல்லையா?
சந்தேகப்பட்டதுபோலவே ஆகிப் போனது.
எதற்காக தேர்தல் பணியை ஏற்க மறுக்கிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்? அங்கென்ன அடிக்கிறார்களா, பிடிக்கிறார்கள்? அப்படியென்ன அறிவில் ஏறாத விஷயமா அது? எவ்வளவு எளிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? ஒருவர் பெயர் படிக்க இன்னொருவர் பட்டியலில் அன்னாரின் பெயரும் படமும் இருப்பதை உறுதி செய்து கொண்டு கையொப்பம் பெற, மூன்றாவது நபர் இடது கை ஆள்காட்டி விரலை நீட்டச் சொல்லி நகத்திற்கும் சதைப் பகுதிக்கும் குறுக்கே சமமாய் விழுவது போல் மையைத் தடவி அனுப்ப வேண்டியதுதான். இதில் இந்த மை வைக்கும் வேலைக்குக் கூடப் பயந்தால் எப்படி?
முதல் நாள் மாலையே எங்கு பணி செய்ய ஆணையிடப்பட்டிருக்கிறதோ அந்தப் பள்ளிக்கு அல்லது இடத்திற்குச் சென்று விட வேண்டும். ஒரு இரவு மட்டும் அங்கேயே தங்கி உண்டு உறங்கி எழுந்து மறுநாள் காலை தயாராக வேண்டும். இதற்கென்ன சுணக்கம்? இதிலென்ன பயம்? புதுஇடத்தில் ஓர் இரவு படுத்திருந்தால் தொலைந்து போவோமா? அப்படியே சரியான தூக்கம் இல்லையென்றாலும்தான் என்ன? நாட்டின் பணிக்காக ஓர் இரவு தூக்கம் முழிக்கக் கூடாதா? குடி முழுகி விடுமா? ஒரு குறிப்பிட்ட சூழலுக்கே உடம்பு பழகி விட்டதால் புதிதாய் எதைச் சொன்னாலும் ஏற்க மறுக்கும் அல்லது பயப்படும் மனது. அவசியம் சொல்லி மனதை மாற்றியாக வேண்டும். உற்சாகமாகக் காத்திருக்கும் பணியாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
வேண்டாம் சார்…ஏதாச்சும் தகராறு…அடிதடி வரும்…எதுக்குப் பிரச்னை? எனக்கு எலெக் ஷன் டியூட்டி வேண்டாம் சார்…. – கணக்குப் பிரிவு எழுத்தர் முனியம்மா இப்படிச் சொன்னது நினைவுக்கு வந்தது கனகமணிக்கு.
அப்படியெல்லாம் நினைச்சு பயப்பட வேண்டியதில்ல…எதுவும் நடக்காது. எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணியிருப்பாங்க…பாதுகாப்புக்குப் போலீஸ் காவல் போட்டிருப்பாங்க… தேர்தல் பணியை வேண்டாம்னு சொல்ல முடியாது…செய்தே ஆகணும். அது நம்மளோட கடமை…புரிஞ்சிக்குங்க…
சரி சார்…நீங்க சொல்றீங்களேன்னுதான் சம்மதிக்கிறேன். எங்க வீட்டுக்காரரு வேண்டாம்னு சொல்றாரு…வாங்காதங்கிறாரு…..அப்புறம் நான் என்ன சார் பண்றது? நாளைக்கு ஏதாச்சும் பூத்ல கலாட்டா கிலாட்டா அடிதடின்னு நடந்திச்சின்னா…காயம் பட்டுப் போச்சின்னா…யார் சார் பொறுப்பாறது? நீங்களா வருவீங்க….?
இது எனக்காக வர்றதில்லம்மா…நல்லாப் புரிஞ்சிக்குங்க…நான் சொல்றதுனால நீங்க ஏத்துக்க வேண்டாம். சொல்ல வேண்டியது என் கடமை…அதனால சொன்னேன். இது கலெக்டர் ஆர்டர்..இல்லன்னா உங்க பேர்ல ஆக் ஷன் எடுப்பாங்க…பரவால்லியா? மெமோ கொடுப்பாங்க…ஏன் தேர்தல் பணியை ஏத்துக்கலைன்னு காரணம் கேட்பாங்க….அலைய வேண்டியிருக்கும்… அதுக்கு கமுக்கமா ஏத்துக்கிட்டு செய்துட்டு வந்துடறதே பெட்டர். நான் உங்களுக்கு நல்லதத்தான் சொல்லுவேன்…நம்புங்க…நம்மள மாதிரி ஊழியர்களை நம்பித்தாம்மா எலெக் ஷனே நடக்குது…நாம செய்யாம வேறே யாரு செய்வாங்க…மகிழ்ச்சியா ஏத்துக்கிட்டுப் போயிட்டு வருவீங்களா? எதை எதையோ சொல்லிப் புலம்புறீங்களே? செய்த வேலைக்குப் பணமும் கொடுக்கிறாங்கல்ல…இந்தியா முழுக்க இது நடக்குது? உங்கள மாதிரி அங்கங்க இருக்கிறவங்க உனக்கு வேண்டாம்…எனக்கு வேண்டாம்னு சொன்னா அப்புறம் யாரை நம்பிம்மா தேர்தல நடத்தும் அரசாங்கம்…?
கவர்ன்மென்ட் சர்வன்டா இருக்கோம்….தேர்தல் கமிஷன் அரசாங்க மெஷினரிய நம்பித் தேர்தலை நடத்துறாங்க…நம்பள நம்பித்தான் முறையாத் திட்டமிட்டு இந்த வேலைல இறங்குறாங்க…செய்து கொடுக்க வேண்டியது நம்ப கடமையில்லையா? அத விட வேறே வேலை என்ன நமக்கு? சந்தோஷமா ஏத்துக்கிட்டுப் போயிட்டு வர வேண்டாமா? இப்டியா சீக்குப் பிடிச்ச கோழி மாதிரிச் சுணங்குறது? தப்பும்மா….ரொம்பத் தப்பு….முதல்ல கையெழுத்துப் போட்டு எலெக் ஷன் டியூட்டி ஆர்டரைக் கும்பிட்டுக் கைல வாங்குங்க…
கலெக்டர் ஆபீஸிலிருந்து வந்திருந்த அதிகாரி முன்னேயே இப்படி ஒரு நீண்ட லெக்சர் கொடுத்து அவரவர் ஆணைகளை வாங்கச் செய்தார் கனகமணி. தன்னால் கூட இப்படி விளக்கிச் சொல்ல முடியாது என்று அகமகிழ்ந்து தேர்தல் பணி ஆணைகளை வழங்கிவிட்டுப் போனார் அந்த அதிகாரி. போகும்போது மட்டும் ஒன்று சொன்னார்….
மலைப் பகுதிக்கெல்லாம் தேர்தல் வேலைக்குப் போறாங்கம்மா…தெரியுமா? கழுதை முதுகுல, குதிரை மேலே…எல்லாச் சாமான்களையும் ஏத்திட்டு, மொத நா ராத்திரியே போய் கெதம் கெதம்னு கிடக்காங்க….அவுங்களும் நம்மள மாதிரி கவர்ன்மென்ட் சர்வன்ட்கள்தான்…மனுசங்கதான்….கொஞ்சம் எல்லாத்தையும் நினைச்சுப்பாருங்க….
முனியம்மா பயந்தது என்னவோ ஓரளவு நியாயம்தான் என்றும் தோன்றியது கனகமணிக்கு. ஏனென்றால் அவருக்கே அப்படியான ஒரு அனுபவம் உண்டு. மானேஜர் ஆவதற்கு முன் இருபதாண்டு காலம் உதவியாளராகப் பணி புரிந்த காலங்களில் மூன்று நான்கு தேர்தல் பணிகளுக்குச் சென்றுள்ளார் கனகமணி. அப்படிச் சென்ற ஒரு இடத்தில் பெரிய கலாட்டாவே நடந்து போனது என்பதுதான் உண்மை. கும்பலாக வந்து தேர்தல் நடக்கும் பூத்தை நோக்கி கற்களை விட்டெறிந்து, உள்ளே புகுந்து இருந்த ஆட்களையெல்லாம் விரட்டி அடித்து மேஜை நாற்காலிகளை உடைத்து, தேர்தல் ஆவணங்களைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டு, பிறகு மிலிட்டரி போலீஸ் வந்து அவர்களை விரட்டி விரட்டிப் பிடித்த கதையும் காட்சியும் இப்போதும் அவர் மனதில் அழியாது நிலைபெற்ற ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறதுதான்.
எங்கோ என்றோ ஒன்றிரண்டு நடந்து விட்டது என்பதற்காக தேர்தல் பணிக்கே செல்ல மாட்டேன் என்று சொல்வது என்ன நியாயம்? அப்படி மறுப்பது மனசாட்சிப்படி நியாயமாகுமா? நாமெல்லாம் ஒன்று சேர்ந்துதானே தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டும்? அது நம் அத்யந்தக் கடமையில்லையா? ஓட்டுப்போடுவது எப்படி மக்களின் ஜனநாயகக் கடமையோ அதுபோல தேர்தல் பணிக்கும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் உற்சாகமாய் அந்தக் கடமையை நிறைவேற்றுவது இந்த நாட்டின் பிரஜையாகிய நமது கடமையும் ஆகிறதுதானே?
பெரும்பாலும் யாரும் வாங்க மாட்டாங்க சார்…அந்தந்த ஆபீஸ் சூப்பிரன்ட், மானேஜர்னுதான் நாங்க கொடுத்திடுவோம். அவரோட பொறுப்பு அதை அவரவருக்கு விநியோகிப்பதும், ஏற்றுக் கொள்ளச் செய்வதும்….இப்டி ஒவ்வொரு ஆபீசா நாங்களே உட்கார்ந்து கொடுத்துக் கையெழுத்து வாங்கிட்டிருந்தோம்னா எங்களுக்கு வேலை முடியாது சார்…ஒவ்வொரு ஆபீஸ்லயும் பாதிக்குப் பாதிதான் விரும்பி வாங்குறாங்களேயொழிய எல்லாரும் சந்தோஷமா ஏத்துக்கிறதில்ல …பயப்படுறாங்க…அதான் ஏன்னு தெரில…? அப்படியென்ன கஜகர்ண வித்தையா இந்த வேலை? அதான் நாலஞ்சு வகுப்பு எடுக்கிறாங்களே…அதுலயே எல்லாமும் நல்லாத் தெரிஞ்சி போயிடுமே…? பிறகென்ன சார் தயக்கம்? நம்ம ஊழியர்களை நிறையப் பேர்களை மாத்தவே முடியாது சார்…இப்டி சோம்பின மனநிலைல இருக்கிற பலரை உசுப்பிவிட்டு உசுப்பி விட்டுத்தான் ஆள் சேர்த்து இந்தத் தேர்தலை நடத்தி முடிச்சாக வேண்டியிருக்கு….இதாச்சும் பரவால்ல….தேர்தல் அன்னைக்கு வராம இருந்த ஆட்களும் உண்டு…அது தெரியுமா? ஒருத்தரே ரெண்டு பேர் வேலையைப் பார்க்க வேண்டிய நிலமையும் வந்திருக்கு. அதையும் அவுங்களேதான் திறமையாச் செய்றாங்க…பொறுப்பான ஊழியர்கள்தான். ஆனா அங்கங்கே சுணக்கமும் உண்டுதான். எல்லாத்தையும்தான் சார் சமாளிச்சிக்கிட்டிருக்கோம்…. – ஆணைகளை வழங்க வந்து போன அதிகாரி குறைபட்டுக் கொண்ட ஆதங்கம் இது.
திரும்பி வந்த தபாலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் கனகமணி. என்ன செய்யலாம் என்கிற யோசனை அவர் மனதில் தீவிரமாக ஓடிக் கொண்டிருந்தது.
அவிநாசி வேலைக்கு வரவில்லை. விடுப்பு நீட்டித்து விண்ணப்பமும் வரவில்லை. கதவு பூட்டப்பட்டிருக்கிறது என்று எழுதி தபால் திரும்பி வந்திருக்கிறது. ஆளை எங்கே போய்த் தேடுவது? ஒரு வேளை தபால் இன்று அலுவலகத்திற்குத் திரும்பக் கிடைத்து விடும் என்று தெரிந்து…ஒரு நாள் விட்டுத் தாமதமாக அலுவலகம் செல்வோம் என்றிருப்பாரோ? தேர்தல் பணி என்றால் வந்துவீடும் ஆள்தானே? அதில் கிடைக்கும் சன்மானம் அவருக்கான குடும்பத் தேவையாயிற்றே? வேறென்ன அவசரமோ? நீட்டித்த ஒரு நாளைக்கு ஆபீஸ் போய் விடுப்பு எழுதிக் கொடுத்துக் கொள்வோம் என்று முடிவு செய்து மௌனம் சாதிக்கிறாரோ?
ஏற்கனவே அடிக்கடி பொய்க் காரணங்கள் சொல்லி விடுப்பு எடுக்கும் ஆசாமி. தாத்தா இறந்துட்டார்…பெரியப்பா போயிட்டார்….(எத்தனை முறை இறந்தார்களோ!) என்று. வேறு ஏதேனும் வியாபாரம் செய்கிறாரோ என்றெல்லாம் கூடச் சந்தேகம் வந்தது இவருக்கு. வெளியூர் ஆசாமி. தினமும் வந்து செல்பவர். இதையெல்லாம் போய் உளவறிந்து கொண்டிருக்க முடியுமா? அதுவா வேலை? அவராய்ச் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.
எதற்கு இத்தனை யோசனை? இப்போது இந்த உத்தரவை யாருக்காவது கொடுத்தாக வேண்டும். அதற்கு பெயர் மாற்றி எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஒரு பணியாளைப் பிடிக்க வேண்டும். யோசித்து யோசித்து மண்டைதான் குழம்பியது கனகமணிக்கு.
திடீரென்று ஏதோ தோன்ற அவநாசிக்கான தேர்தல் பணி ஆணையினைத் திரும்பவும் எடுத்துப் புரட்டினார். அவருக்கும் தான் செல்லும் பள்ளியில்தான் முதல் தேர்தல் வகுப்பு என்பது தெரிந்தது. சரி என்று மனதில் ஒரு முடிவுக்கு வந்தார். மணியைப் பார்த்தார். பன்னிரெண்டு. கொண்டு வந்த டிபனை விலுக் விலுக்கென்று முழுங்கினார். அரை பாட்டில் தண்ணீரை உள்ளே செலுத்தினார். அலுவலரின் அறைக்குள் நுழைந்தார்.
ஆச்சு…நீங்களும் கிளம்பிட்டீங்களா? என்றார் அதிகாரி.
ஆமா சார்…இப்போ போய் பஸ் பிடிச்சாத்தான் டயத்துக்கு எலெக் ஷன் கிளாசுக்குப் போய்ச் சேர முடியும்….அந்தப் பகுதிக்கு அடிக்கடி பஸ் வேறே வராது. மேலூர் போற பஸ்ல த்ரூ டிக்கெட்தான் போடுவான்…இடைல நிக்க மாட்டான்…அந்த ஊர் வண்டி அடிக்கடி வராது. காத்திருந்துதான் ஏறணும்….
சரி…சரி…கிளம்புங்க…கேஷ் செஸ்ட்லாம் பூட்டிட்டீங்கல்ல…ஞாபகமா ஒரு தரம் இழுத்துப் பார்த்துட்டுப் போங்க…அப்போ இன்னைக்கு நாந்தான் இந்த ஆபீசுக்குக் காவல்…அப்படித்தானே…?
பதில் சொல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றார் கனகமணி.
பியூன் ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தராவது இருக்காங்களா? என்றார். இல்ல சார்…அவுங்களுக்கும்தான் டியூட்டி….
அவுங்களுக்குமா? என்னாது…மை வைக்கிற வேலயா…?
ஆமா…சார்….பேரு படிச்சிக் கூட கையெழுத்து வாங்குவாங்க…நம்மள விட நல்லாவே செய்வாங்க…அதெல்லாம் டிரெயினிங் கொடுத்திடுவாங்கல்ல சார்….நாலு வகுப்பு எதுக்கு வைக்கிறாங்க…?
ஓ.கே….வாட்ச்மேன் சரவணனை இங்க வந்து இருக்கச் சொல்லுங்க…பெல் அடிச்சா வர்றதுக்கு ஒரு ஆள் வேணும் எனக்கு…ஒரு டீ சாப்பிடணும்னாக் கூட ஆள் இல்லேன்னா எப்டி?
வாசல்ல பிள்ளையார் கோயில்ல படுத்திருப்பான் சார்…சொல்லிட்டுப் போறேன்….! – சொல்லிக்கொண்டே வெளியேறினார் கனகமணி.
அரசமரப் பிள்ளையார் கோயில். வெக்கயே தெரியாது. குளு குளுன்னு இருக்கும்….தூங்குறதுக்குக் கேட்கணுமா? ஆளப் பத்தி விடுங்க…என்றார்.
அவிநாசிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணித் தபாலிலேயே அவரின் முழுக் கவனமும் குவிந்திருந்தது. எப்படியாவது தேர்தல் வகுப்பின்போது வந்திருக்கும் அதிகாரியிடம் விபரத்தைச் சொல்லி அந்தக் கூட்டத்தில் வேறு யாருக்கேனும் அவர்களது அலுவலகத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு அந்தப் பணியை வழங்கச் செய்ய வேண்டும். அங்கேயே அவநாசியின் பெயரை அடித்துவிட்டு புதிய பணியாளரின் பெயரை எழுதச் செய்து வழங்கியாக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார். அதுபோல் முன்னம் நடந்தது அவர் மனதில் நிலைத்திருந்தது. அத்தோடு கலெக்டர் அலுவலகம் சென்று அவிநாசியின் பணி வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்கிற விபரத்தைச் சொல்லி மேற்கொண்டு அவருக்கு ஏதும் நடவடிக்கை வராமல் தடுக்கச் செய்ய வேண்டும். அதுவும் அவர் விருப்பமாய் இருந்தது. நம் பணியாளரை நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? எல்லாரையும்தான் சேஃப்கார்டு பண்ணனும்…
அதற்கு முதல் வேலையாக அவிநாசியை இன்னும் ஓரிரு நாட்கள் சேர்த்து விடுப்புக் கேட்டு மருத்துவச் சான்றிதழ் வாங்கி வரச் செய்ய வேண்டும்.
வேறென்ன செய்வது? தன் அலுவலகப் பணியாளரைத் தான்தானே காப்பாற்ற வேண்டும்? சமய சந்தர்ப்பங்களில் சேர்த்து அணைத்துத்தானே கொண்டு போயாக வேண்டும்? அலுவலகத் தலைமைக்கு வேலை வாங்குவது மட்டும்தானா வேலை? அவர்களின் நலன்களில் அக்கறை கொள்வதும்தானே?
முடிவு செய்து கொண்டு பஸ்ஸில் ஏறினார் கனகமணி. அவிநாசியின் தேர்தல் பணி ஆணையை இன்னொருவருக்கு எப்படியாவது ஒதுக்கீடு செய்து விட்டால்தான் தனக்கு நிம்மதி என்கிற தீவிர சிந்தனையே அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
சார்….வந்திட்டீங்களா….? உங்கள எதிர்பார்த்திட்டுத்தான் காத்துக் கிடக்கேன்….-சொல்லிக் கொண்டே எதிரே திடீரென்று தோன்றிய அவிநாசியைக் கண்டதும் பிரமித்துப் போனார் கனகமணி.
என்னங்க இது…திடீர்னு கடவுள் மாதிரித் தோன்றி நிற்கிறீங்க…உடம்பு சௌகரியமாயிடுச்சா…? – என்று தனது சங்கடங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டார் கனகமணி.
ஆயிடுச்சு சார்…இன்னைக்கு டேரக்டா நீங்க க்ளாசுக்கு வருவீங்கன்னு செல்லச்சாமிதான் எல்லா விபரமும் சொன்னாரு….அவரும் திருமங்கலம்தான சார்…என் தபால் கொண்டு வந்திருக்கீங்கல்ல சார்….?
பின்னே? உங்களுக்கு தகவல் அனுப்பிச்சதுதான் திரும்பிடுச்சே…? யாருக்காவது சர்வ் பண்ணி ஆகணுமே…அதுக்காகத்தான் எடுத்திட்டு வந்திருக்கேன்…இல்லன்னா எம்பொழப்பு நாறிப் போகுமேங்க…கலெக்டருக்கு யாரு பதில் சொல்றது? ….கலெக்டர் நம்ம பாஸைக் கேள்வி கேட்பாங்களே….? அதுக்கு எடம் வைக்கலாமா? நம்ம ஆபீசுக்குத்தானே கெட்ட பேரு…? ஏங்க வர்றேன்…வரல்ல…விடுப்பு நீடிக்கிறேன்…ன்னு ஏதாச்சும் ஒரு தகவலை அனுப்ப மாட்டீங்களா? இப்ப மட்டும் செல்லச்சாமி சொன்னார்ங்கிறீங்க…? மத்த நேரத்துல ஆள் கண்ணுல படலையாக்கும்?
ஸாரி சார்…மன்னிச்சிடுங்க….உங்க ரிஜிஸ்டர் தபால் வந்தன்னிக்கு மொத நாள் எங்க அப்புத்தா இறந்து போயிடுச்சி…அதுக்கு ஊருக்குப் போயிருந்தோம் எல்லாரும்…அதான் தபால் திரும்பியிருக்கு…எனக்குத் தேர்தல் வேலன்னா பிடிக்குமே சார்…விடுவனா….அதான் நேரா இங்க வந்திட்டேன். ஒரு எலெக் ஷன் ட்யூட்டி கூட மிஸ் பண்ணினதில்ல சார் நான்…! கலெக்டர் ஆபீசுக்கு போய் எனக்குக் கொடுங்கன்னு கேட்டு வாங்கியிருக்கேன்…! என் ராங்குக்கு பிரிசைடிங் ஆபீசர்-1 தர மாட்டாங்க…தந்தாங்கன்னா அதையும் சக்ஸஸ்ஃபுல்லா செய்து முடிச்சிடுவேன். நான் ஆபீஸ் வர….நீங்க இங்க கிளம்பி வந்திருக்க…சந்திக்க முடியாமப் போச்சின்னா….சிக்கலாயிடுமே சார்…அதான் த்ரூ வண்டில அட்வான்சாக் கிளம்பி வந்திட்டன்….எங்கூர்லர்ந்து டேரக்ட் வண்டி மேலூருக்கு இருக்குல்ல சார்…அதப் பிடிச்சேன்….
அப்புத்தா இறந்ததாகச் சொல்கிறார். உண்மையோ பொய்யோ… ஆள் வந்தாச்சு. அந்தவரைக்கும் நிம்மதி.
அது சரிங்க…எதுக்கும் ஒரு ஃபோன் அடிக்க மாட்டீங்களா? இப்டியா கிணத்துல போட்ட கல்லு மாதிரிக் கிடக்கிறது? நாங்க என்னன்னு நினைக்கிறது? இந்தத் தபால வச்சிட்டு அல்லாடிட்டேன் தெரியுமா? எலெக் ஷன் டியூட்டிங்கிறது எவ்வளவு சீரியஸ் தெரியுமா? யாருமே ரிஜெக்ட் பண்ண முடியாதாக்கும். டிஸிப்ளினரி ஆக் ஷன் எடுத்திருவாங்க…அனுபவப்பட்ட ஆள் நீங்களே இப்டி செய்தா என்ன அர்த்தம்?
வெரி வெரி ஸாரி ஸார்…தப்பா நினைக்காதீங்க…அப்புத்தா கடைசிக் காரியத்துக்குப் பணத்துக்கு அலைஞ்சிட்டிருந்தேன்…எங்கப்பாவால எதுவும் ஆகாது…நாந்தான் எல்லாம் பார்த்து செய்யணும்…அதுனால அதெத் தவிர வேறே எந்தச் சிந்தனையும் என் மனசுல இல்ல….மன்னிச்சிடுங்க….! டெத் வந்து முடக்கிடுச்சு…நம்புங்க….!
சரி…விடுங்க…வந்திட்டீங்கல்ல…அது போதும்…! ஒருவகைக்கு நல்லதாப் போச்சு நீங்க நேரடியா இங்க வந்தது. இன்னைக்கு உங்களுக்கும் தேர்தல் வகுப்பு இங்கதான்….பாருங்க இந்த ஆர்டரை….-என்றவாறே அந்த ஆணையை நீட்டினார் கனகமணி.
ஆவலோடு வாங்கிக் கொண்டார் அவிநாசி.
வாங்க…முதல்ல எலெக் ஷன் ஆபீசரப் பார்ப்போம்…உங்க ஆர்டரும் சர்வுடு…ஆளும் வந்தாச்சுங்கிறதைப் பதிவு பண்ணுவோம்…
சந்தோஷமாக இருவரும் உள்ளே நுழைந்தனர்.
மலை போலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும்…-பழைய பாடலின் வரிகள் சட்டென்று கனகமணியின் மனதில் ஒலிக்க, யப்பா…பெரிய இக்கட்டுலர்ந்து தப்பிச்சன்…..நரி முகத்துல முழிச்சேன் போல்ருக்கு இன்னைக்கு …சங்கடம் நீங்கிருச்சு….-சிரித்தவாறே அவிநாசியைப் பார்த்துக் கூறிக்கொண்டேஉற்சாகமாக நடந்தார் கனகமணி.
அப்டியெல்லாம் உங்கள இக்கட்டுல விட்ருவனா சார்…அதான் கன் மாதிரி டயத்துக்கு வந்திட்டன்ல…என்ற அவிநாசி, மானேஜரின் மீதான மரியாதையில் ஒரு நிமிடம் நின்று அவர் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். ---------------------------
---------------------------------
"நன்னூல்" பதிப்பகத்தின் பதிப்புத்தடத்தில் இன்று ஒரு சிறப்பான பேரொளி...
சிறுகதை “பொறு…பொறு…!”பிரசுரம்-தாய்வீடு-மார்ச்“26
நீயும் உங்கம்மாவும் சரின்னு சம்மதம்
சொல்லித்தானே கல்யாணம் பண்ணி வச்சது? – எடுத்த எடுப்பிலேயே கேள்வியை ஆழமாகப் போட்டார்
கமலேசன். அதாவது நீங்க ரெண்டு பேரும் ஒப்புக்கலேன்னா
இது எங்க நடந்திருக்கப் போகுது என்ற கேள்வி அதில் தொக்கியிருந்தது.
சரிப்பா…அதுக்காக…? – சட்டென்று கோபப்பட்டதுபோல்
கேள்வியை வீசினான் சசிதரன்.
அதுக்காக வாழ்க்கை பூராவும் கஷ்டப்படணும்னு
சொல்றியா? என்று கேட்கிறானோ? அதையும் அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தார். சேர்த்து
வைப்பதற்குத்தான் பெரியவர்கள். பிரிந்து செல்வதற்கு அல்ல.
எப்பப் பார்த்தாலும் சண்டையைப் போட்டுக்கிட்டிருந்தா
அப்டித்தானேப்பா தோணும்? -சொல்லிவிட்டு இவர் முகத்தைப் பார்த்தான் சசி.
எந்த வீட்ல சண்டை இல்ல…சொல்லு பார்ப்போம்….?
என்றார் இவர்.
எப்போது உள்ளே நுழைய வேண்டும் என்று தனக்குத்
தெரியும் என்பதுபோல் வாளாவிருந்தாள் கமலினி.
டீ கேட்டேல்ல…வந்து எடுத்துக்கோ சசி….-
என்று குரல் கொடுத்தாள். மேற்கொண்டு காலங்கார்த்தாலயே பேச்சை வளர்த்த வேண்டாம் என்று
நினைத்தாளோ என்னவோ? அட்டென்ஷன் டைவர்ட் பண்ணுகிறாள்.
ஆம்மா…இந்த டீ ஒண்ணுதான் குறைச்சல்…இதக்
குடிக்கலேன்னா உசிர் போயிடும் பாரு….
கமலினி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அப்புறம் எதுக்குக் கேட்டே? வேலை மெனக்கெட்டுப் போட்டு நீட்டுறேன்…இப்டிச் சொல்றியே?
என்னவோ கேட்டேன். அதக் குடிச்சாவது மனச
ஆத்துவோமேன்னு…!
ஆத்தித் தரவா? ரொம்பச் சூடா இருக்கு போல்ருக்கே…-என்றவாறே
எழுந்தார் கமலேசன்.
அவனுக்கென்ன ஆத்திக்கத் தெரியாதா? சின்னப்
பிள்ளையா? போய் உட்காருங்க தேமேன்னு…. – எரிந்து விழுந்தாள் கமலினி.
தனக்கு இது வேண்டாத வேலை என்று அப்போதுதான்
உறைத்தது இவருக்கு. சூடா டீ குடிச்சா மனசு ஆறும்னு அவன் கேட்க, அதை ஆத்தித்தரேன்னு
இவர் சொன்னா? பொருத்தமாயிருக்கா?
அதுக்கில்லப்பா…பொழுது விடிஞ்சு பொழுது
போனா சண்டையாவே இருந்தா? எரிச்சலா இருக்குல்ல…? எதையெடுத்தாலும் குதர்க்கமாவே பேசறாப்பா?
தேவையில்லாமக் கோபப்படுறா?
விடுறா…விடுறா…எல்லாம் போகப் போக சரியாப்
போகும்…பொறுமையா இரு…..!
என்னத்தப் பொறுமையா இருக்கிறது? அதுக்குள்ளே
எனக்கு உறார்ட் அட்டேக்கே வந்துடும் போல்ருக்கு…
என்னடா சொல்ற நீ? ஆபீஸ் டென்ஷன்னால சொல்றியா?
அல்லது இதுக்காகச் சொல்றியா? – புரியாமல் கேட்டார். அவன் கேள்வி இவருக்கு வேடிக்கையாக
இருந்தது. சற்றுப் பயமாகவும் இருந்தது.
புரியாத மாதிரியே கேளுங்கப்பா…ஆபீஸ் வேலை
எவ்வளவானாலும் சமாளிச்சிடுவேன்…இவ கரச்சல்தான் தாங்க முடில என்னால…..! ஏண்டா கல்யாணம்
பண்ணினோம்னு…!
மருமகள் பிரதீபா ஆபீஸ் போனது நல்லது என்றே
தோன்றியது. வாரத்தில் மூன்று நாள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்தான். ஆனால் அது
ஆபீஸ் போகிறது. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. ஆளவிடுங்க என்று அவனும் போய்விடுகிறான்.
இரண்டு கிழங்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே…அது அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.
அத்தோடு கமலினி செய்து வைக்கும் டிபனும் ஆகவில்லை.
எப்பப் பாரு…இட்லி…தோசை…இல்லன்னா பொங்கல்…இதத்தவிர
வேற எதுவுமே உங்கம்மாவுக்கு மனசுல தோணாதா…? – ஒரு நாள் அந்தப் பெண் இப்படிக் கேட்டு
வைக்க பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டான் சசிதரன்.
ஏன்…அம்மாவுக்கு தொண்டைக்குள்ள இறங்காதோ?
சுத்தமா, ஆரோக்கியமா வீட்டுல செய்து நீட்டுற உணவு கசக்குதாக்கும்? அம்புட்டு அக்கறை
இருந்தா நீயே சீக்கிரமா எழுந்திரிச்சு செய்துக்கிறது? உன் ஒருத்திக்கு மட்டுமாவது செய்து
எடுத்துக்கிட்டுப் போக வேண்டிதானே? யாரு தடுத்தா? எங்க அடுப்படிக்குள்ள நுழைஞ்சா ஒட்டிக்குமோன்னு
பயம். வீட்டுக்கா உன்னைச் சமைக்கச் சொன்னாங்க? அதுக்கும்
துப்பில்ல….ஒன்பது மணி வரைக்கும் குறட்டை விட்டுத் தூங்கவேண்டிது….ஒருக்களிச்சுப் படுத்து
அந்தக் குறட்டையை ஒதுக்கணும்ங்கிற சின்ன அறிவு கூட இல்ல. பப்பரப்பா…ன்னு கால விரிச்சுக்
கிடக்க…இப்டித்தான் ஒரு வீட்டுப்பொம்பள தூங்குவாளா? உங்க வீட்டுல இதுக்குக் கூட உனக்குச்
சொல்லித் தரலியா? திரேகம் தெரியாமயா ஒருத்தி கிடப்பா? வெட்கமாயில்ல? ஒரு துரும்ப நகர்த்துறதில்ல
நீ…இதுல பேச்சு வேறே….? கம்முனு கொடுக்கிறதப் பொத்திட்டு எடுத்திட்டுப் போகணும்…-பொழிந்து
தள்ளி விட்டான்.
வாயடைத்துப் போனது அதுக்கு. கொஞ்ச நேரம் கழித்து அறைப் பக்கம் பார்த்த போது
அழுது கொண்டிருந்தது.
பாவம்டா…விடுறா….சத்தம் போடாதே…எல்லாம்
காலப் போக்குல சரியாப் போகும்….விட்டுத் தள்ளு…பெரிசு பண்ணாதே….
எப்போ சரியாகும்?…இல்லே எப்போங்கறேன்?
நீங்க மண்டையைப் போட்டப்புறமா? இல்ல நான் கிழவனானப் பிறகா? இவ திருந்த மாட்டாப்பா….!
மனசில் அதையே போட்டு உழட்டிக் கொண்டிருப்பானோ
என்னவோ? சதா டென்ஷனிலேயே நெளிகிறான். ராத்திரி படுக்கையிலாவது சந்தோஷமாக இருக்கிறார்களா?
என்று யோசித்தார் கமலேசன். எந்தப் பிணக்கும் படுக்கையில் மறைந்து போகுமே…!
இந்தப் பயலுக்கு அந்த ஆசையும் அதிகமாய்
இருப்பதாய்த் தோன்றவில்லை. பெண் எப்படித் தானே வலிய வரும்? ஆம்பளை சீண்டினால்தானே?
அது சிணுங்கும்…நெளியும், சுணங்கும்…முறுக்கிக்கும்…அப்புறம்
படியும். அதில்தானே இன்பமே? அப்படியாவது சரி பண்ண மாட்டானா இந்த இளைஞன்? வயசுக்கான
ஆசை இவனிடம் இருக்கிறதா இல்லையா? அதில் மடங்குமே எந்தப் பெண்மையும்? பல கேள்விகள் பிறந்தது கமலேசனுக்கு.
தானும் கமலினியும் போடாத சண்டையா? உறவுக்காரர்கள்
எல்லோரும் சொல்வார்கள்…எப்பப் பார்த்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருப்பாங்க…இதுதான்
அவர்கள்பற்றிய அபிப்பிராயம். ஒரு கல்யாணம்
காட்சி என்று கூட அவர்கள் இருவரும் சேர்ந்து சென்றதில்லை. எல்லாவற்றிற்கும் அவர் ஒருவர்
மட்டுமே சென்று ஆஜராவார்.
ஏம்ப்பா…உன் பெண்டாட்டிய நாங்களெல்லாம்
கண்கொண்டு பார்க்கக் கூடாதா? ஒரு விசேடத்திற்காவது கூட்டிட்டு வந்து அவ முகத்தை எங்களுக்குக்
காட்ட மாட்டியா? என்று கேட்டிருக்கிறார்கள். அதிரூப சுந்தரியோ அவள்? என்ற மறைமுகக்
கேள்வி அதில் தொக்கி நிற்பதாக உணர்வார் இவர்.
நான் வந்திருக்கேன்ல…அவளும் வந்த மாதிரிதான்…
என்னில் பாதிதானே அவள்…என்பார் இவர் சாமர்த்தியமாய்.
யப்பாடீ…இரண்டறக் கலந்துட்டாங்க போல்ருக்கு..அர்த்தநாரீஸ்வரர்டோய்..!….என்று
கிண்டல் செய்வார்கள். பொருட்படுத்த மாட்டார் கமலேசன். அவர்களோடு சேர்ந்து இவரும் சிரித்துக்
கொள்வார்.
ஆனால் உறவுக்காரர்கள் விசேடங்கள் அனைத்திற்கும்
ஒத்தையாய்ப் போய் நிற்கும்போது இவர் மனம் வேதனைப்படத்தான் செய்யும். அழுத்தி தொண்டைக்குள்
முழுங்கிக் கொள்வார்.
நான் வரலை…நீங்க போயிட்டு வாங்க…இதுதான்
அவள் எப்போதும் சொல்லும் ஒரே பதில். தன் வீட்டுக்காரர்களோடு அவள் ஒட்டினதேயில்லை. கல்யாணம்
முடித்தவுடனேயே நேரடியாய் தனிக்குடித்தனம் கூட்டி வந்தாயிற்று. தன் வீட்டில் கொஞ்ச
காலமாவது சேர்ந்து இருந்து ஒன்றுவதற்கான வாய்ப்பே இல்லாமற் போனது. தனிக்குடித்தனம்
என்று நேரடியாய் வீடு பார்த்து வந்து குடியேறியதில் அவர்கள் வீட்டில் ஏக சந்தோஷம்.
தங்களுக்கான முதுகு வேலைக்கு இடமில்லாமல் போனதே என்று. அதற்காக அவர்களும் வந்து உட்கார்ந்து
கொண்டு கும்மியடித்தார்களா என்ன? அதுவும் இல்லைதான். ஏழெட்டுப் பேர் இருக்கும் குடும்பத்தில்
தன் பெண் வாக்கப்படுகிறாளே…என்ன பாடு படப் போகிறாளோ, எம்புட்டு வேலை செய்து மாயப் போகிறாளோ
என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு இது பெரிய ரிலீஃப்தானே?
அது முழுக்க முழுக்கக் கமலேசனின் மனம்
சார்ந்த செயல்பாடு என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லைதான். குடும்பம் இருந்தது சென்னையில். இவர் வேலை பார்த்தது
மதுரையில். அதனால் நேரடியாய் மதுரையிலேயே வீடு பார்த்துக் குடி புகுந்து விட்டார்.
இதிலென்ன தப்பு இருக்கிறது? அப்பா, அம்மா, தங்கைகள், அண்ணா, மன்னி என்று சென்னையிலிருந்தார்கள்.
இவர் மனது சுதந்திரம் வேண்டியது போல் அவள் மனதும் வேண்டியிருக்கலாமில்லையா? ஆனால் அதற்குப் பின் ஒட்டாமல் போனதுதான் துரதிருஷ்டம்.
ஒட்டியென்ன ஒட்டாமலென்ன…எல்லாமும் இன்று அவரவர் காரியம், அவரவர் நலம், அவரவர் கஷ்ட
நஷ்டம் என்றுதானே தனித்துப் போய்க் கிடக்கிறது? உலகமே அப்படியாகிப் போனதே? கூட்டுக்
குடும்பம் என்கிற பழக்கமே அருகிப் போனதே? அவரவர் தனியாய் இருப்பதைத்தானே விரும்புகிறார்கள்?
சுயநலம் என்பதே விஞ்சி நிற்கிறது இன்றைய நாளில்…!
இது இப்படியே போயிட்டிருந்திச்சின்னா
ஒரு நாளைக்கு நான் டைவர்சுக்கு அப்ளை பண்ணிடுவேம்ப்பா…எனக்கு நிம்மதிதான் முக்கியம்…
கடைசியில் அந்தப் புள்ளிக்கு வந்து விட்டான்
சசிதரன். எதை எதிர்பார்த்திருந்தாரோ அதைச் சொல்லியே விட்டான். இந்தக் காலத்துப் பசங்களே
இப்படித்தான். மனம் சலித்தது.
என்னடா…நீபாட்டுக்குப் பேசிட்டே போறே?-
கொஞ்சம் யோசிச்சுப் பேசப் பழகிக்கோ…-குரல் சற்று உயர்ந்தது கமலேசனிடம்.
யோசிக்கல்லாம் ஒண்ணுமில்ல…எல்லாம் வேணுங்கிற
அளவு யோசிச்சாச்சு…சும்மாச் சும்மா தினசரி
பொழுது விடிஞ்சு பொழுது போனா சண்டை போட்டுக்கிட்டே இருக்க முடியாது. சலுப்பக் குடி
மாதிரி… வேறே பொழப்பில்லயா மனுஷனுக்கு? அது
எனக்கு அவசியமில்லே…இதான் என்னோட முடிவு….! வெட்டி விட்ற வேண்டிதான்...
ஓஉறா…முடிவே பண்ணிட்டீங்களா…?
கமலேசனின் இந்தக் கேள்வியில் அவரைச் சட்டென்று
திரும்பிப் பார்த்தான் சசிதரன். அந்தக் கேலியை உணர்ந்து கொண்டானோ?
என்னடா பார்க்கிறே? நிதானமாக் கேளு…கல்யாணம்
பண்ணனும்ங்கிறபோது மட்டும் பெரியவங்களெல்லாம் சேர்ந்து கூடிப் போய்ப் பார்த்து, நல்ல குடும்பமா, நல்ல மனுஷாளா,
நல்ல குணமா, பக்குவமா பேசறாங்களா…ஃபேமிலி பேக்ரௌன்ட் என்னன்னு ஒண்ணொண்ணையும் நுணுகிப் பார்த்து உங்களுக்குப் பாந்தமாப் பேசி முடிச்சு
வைக்கணும். ஆனா டைவர்ஸ் பண்ணனும்ங்கிறது போது மட்டும் சட்டுன்னு நீங்களே ஒத்தையா முடிவு
எடுத்திடுவீங்க…? யாரையும் கேட்க மாட்டீங்க…கன்சல்ட்
பண்ண மாட்டீங்க…பெரிய அறிவுஜீவி மாதிரி உங்களை நீங்களே நினைச்சிட்டு தடால்னு போட்டுக்
கவிழ்த்திடுவீங்க…அதுக்கு நாங்களும் வாய மூடிட்டு, கண்ணக் கசக்கிட்டு, பொச்சப் பொத்திட்டு
சரின்னு சம்மதிக்கணும்…இல்ல? அதானே? அப்டியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும்
செஞ்சிட முடியாதாக்கும்…!
ஒரு கணம் நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தார்
கமலேசன். என்னவோ வாய்க்குள் முனகிக் கொள்கிறான். சொல்வதைச் சொல்லி விடுவோம்…என்று துணிந்தார்.
வச்சு வாழத்தான் வேணும்…முன்னப் பின்ன இருக்கத்தான்
இ ருக்கும்…எல்லார் வாழ்க்கையும் அப்படித்தான்…யாரும் ஒண்ணும் இங்க நிம்மதியா இருந்திடல…புரிஞ்சிதா?
உலகத்துல உள்ளவங்க வாழ்க்கையெல்லாமுமே ஏத்த இறக்கம்தான்…அதுக்காக எவனும் விட்டுட்டு
ஓடிடுறதில்ல…ஆத்துல இறங்கிக் குளிக்கிறபோது எப்படி கசடுகள ரெண்டு கையாலயும் விலக்கிட்டு,
ஒதுக்கிட்டு, நீக்கிட்டுக் குளிக்கிறமோ அது
போலத்தான் நம்ம அன்றாட வாழ்க்கையும்…! புரிஞ்சிதா…நீபாட்டுக்குத்
தடாலடியா எதையாவது பேசிட்டிருக்காதே… போய் கண்ணை மூடிட்டு சாமி முன்னாடி உட்கார்ந்து
கொஞ்ச நேரம் தியானம் பண்ணு…எல்லாம் சரியாப் போகும்…!
ஆம்மா…இத ஒண்ணு சொல்லிடுவீங்க…எதுக்கெடுத்தாலும்
தியானம் பண்ணு, சாமியக் கும்பிடுன்னு…எந்தச் சாமியக் கும்பிட்டு என்ன பண்ண? நடக்கிறது
நடந்திட்டேதான் இருக்கு. அதுக்கு ஒண்ணும் மாத்துக் கிடச்ச மாதிரித் தெரில….!
மாத்துக் கிடைக்கிறதும், மாய்ஞ்சு போறதும்
நம்ம கைலதாண்டா இருக்கு…அதுக்கு சாமியக் குறை சொல்லி என்ன பண்ண? நல்ல பழக்கங்கள முறைப்படுத்திக்கிட்டேன்னா
உனக்குத்தான் நல்லது. எதுலயும் ஒழுங்குன்னு
ஒண்ணு உண்டுதானே? அதுதான் நம்மள நல்வழிப்படுத்தும். பொறுமையும் சகிப்புத் தன்மையும்
அதுக்கு அவசியம்…! நம்ம அன்றாட நியமங்கள்தான் நம்மை நெறிப்படுத்தும். அத விடாமக் கண்டின்யூ
பண்ணு…உன்னை, உன் இருப்பைப் பார்த்துப் பார்த்து அவ மாறுவா…கொஞ்சம் கொஞ்சமா பதத்துக்கு
வருவா..அதுவரை பொறுத்திருக்கத்தான் வேணும். எதிர்பார்க்கிறது கிட்டினவுடனே கிடைக்கிற
நிம்மதியும் சந்தோஷமும் இருக்கே..அதுக்கு ஈடே இல்லை….காலம் எல்லாத்தையும், எல்லாரையும்
மாற்றிப் போடும். யாரும் பிறந்ததுலேர்ந்து இறப்பு வரை ஒரே மாதிரி இருந்து மறைஞ்சவங்க
இல்லை…எல்லார் வாழ்க்கையும் மாறியிருக்கு…நேர் பட்டிருக்கு…ஒரு குறிப்பிட்ட புள்ளில
சங்கமமாகியிருக்கு….மறக்கப் பழகிக்கோ…மன்னிக்கப் பழகிக்கோ…அவளுக்கும் அதுதான் உனக்குமே
அதுதான்…!!! வாழ்க்கையை நமக்கு ஏத்தாப்ல மாத்திக்கிறது
நம்ம கைலதான் இருக்கு. அது பணத்துனாலயோ வசதி வாய்ப்பினாலயோ வராது. நம்ம குணத்துனாலதான்
கைகூடும்… குணத்துனால மட்டும்தான் கைகூடும்….நல்லா ஞாபகம் வச்சிக்கோ….!!
நீளமாய்ச் சொல்லி முடித்தார் கமலேசன்.
கொஞ்சம் ஓவர் டோசாகிவிட்டதோ என்று தோன்றியது அந்தக் கணத்தில். ஆனாலும் இருக்கட்டும்…நல்லதைத்தானே
சொல்லியிருக்கிறோம் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.
ஃபோன் மணி அடித்தது. சசிதரன் அதை எடுத்து இணுக்கியவாறே காதுக்கருகில்
வைத்தான்.
எதிரே பேசுவது பிரதீபா என்று தெரிந்தது.
சசியின் முகம் மாறியது சட்டென்று. என்னவாயிருக்கும்?
அப்பா…அவளுக்கு என்னவோ வாமிட் சென்சேஷனாம்…உட்கார்ந்து
வேலை பார்க்க முடிலயாம். லீவு போட்டுட்டாளாம். ஆட்டோல வந்திட்டிருக்காளாம்….!
துண்டு துண்டாய் அவன் சொன்ன அவசரச் சேதியைக்
கேட்டு என்னவோ மனதில் ஓடியது கமலேசனுக்கு.
ஒரு ஃபோன் பண்ணி டாக்டர் செக்அப்புக்கு
இப்ப வரலாமான்னு உறாஸ்பிடல்ல கேளு….அப்பாய்ன்மென்ட் ஃபிக்ஸ் பண்ணு என்றார் துரிதமாக.
காரியக்காரப் பயலுங்க…! மனதுக்குள் முனகிக்
கொண்டார். கமலினி ஆதுரத்தோடு மகன் அருகில் வந்து தோளில் ஆதரவாய்க் கை வைத்தாள்.
----------------------------------
சிறுகதை - “நிர்விகல்பம்” - பிரசுரம் “மயிர்“ மின்னிதழ் பிப்.2026
“யாரையும் யாரும் எதுவும் சொல்லித்
திருத்த முடியாது. அவுங்களாகவே உணர்ந்து திருந்தினாத்தான் உண்டு….இதுதான் பொதுவான நியதி…“.
– அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் நாறும்பூ.
திரும்பி நின்று அவரையே சற்று நேரம் உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தாள் கார்த்தியாயினி. தன் கணவனிடமிருந்து வந்து விழும் வார்த்தைகளின்
அழுத்தத்தை அவள் அறிவாள். அதற்குப்பின் தம்பிடி பேறாது என்பது அவளுக்குத் தெரியும்.
ஆனாலும் அவரைத் தவிர வேறு யாரிடம்தான் அவள்
சொல்ல முடியும்?
பையனிடம் சொல்லப் புகுந்தால் எடுத்த எடுப்பில்
எரிச்சல் படுவான். அது தப்பித்தல் என்றும் கொள்ளலாம் அல்லது சொல்ல பயம் என்றும் எடுத்துக்
கொள்ளலாம். காரணம் எதைச் சொன்னாலும் அதற்கு ஒரு விபரீத எதிர்வினையை முன் வைப்பவள் அவன்
மனைவியான தீபிகா. அது அறிவுபூர்வமாக நினைத்து எதிர்வினை ஆற்றுவதாக அவளால் நினைக்கப்படுகிறது
என்றுதான் தோன்றியது. ஆனால் அதில் பொதிந்துள்ள அடிப்படையான வளர்ப்பு முறையை அவள் உணர்ந்தாளில்லை.
அதைச் சொல்லப் புகுந்தால் தன் தாய் தந்தையரைக் குறை சொல்வதாக உணரப்படும் அபாயம் உண்டு.
அப்படித்தான் அவளின் பட்டுத் தெறிக்கும் வார்த்தைகள் உணர்த்துகின்றன. நேர் கோணத்தில்
இதுவரை எதுவுமே எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை. அது வளர்ப்பு சார்ந்த விஷயம் என்பதை நன்கு
உணர்ந்திருந்தார் நாறும்பூநாதன்.
அது சமாதானமாகச் சொன்னாலும் சரி அல்லது
கோபமாய்ச் சொன்னாலும் சரி..ஒரே விகிதத்தில்தான் எடுத்துக் கொள்ளப்படும். நிச்சயம் மறுக்கத்தான்
போகிறாள்…எதற்கு வீணாய் வார்த்தைகளை விரயமாக்கிக் கொண்டு? என்று விலகிச் செல்கிறான் அவன். ஏற்கனவே ஆபீசில்
மண்டை காய்கிறது. இதில் இவள் காய்ச்சல் வேறா? ஆம்…காய்ச்சல்தான். ஒன்றுக்குப் பத்தாக
அவள் பேசுவதைக் கேட்டால் யாராலேயும் சகிக்க முடியாதுதான். இவள் என்ன உறிஸ்டீரியா பேஷன்டோ?
என்று நினைக்குமளவுக்கு அந்தப் பேச்சு தீயாய்த் தெறிக்கும்? நாறும்பூ, கார்த்தியாயினி,
பிரசாந்த் என்று மூவரும் அந்தரத்தில் பறப்பார்கள். தீபிகாவின் வார்த்தைகள் தீக்கங்குகளாய்ப் பறந்தனதான்.
“விட்ரு…எல்லாம் காலப் போக்குல சரியாகும்…“.என்றார்
நாறும்பூ மனைவியைப் பார்த்து.
“காலப் போக்குலன்னு காலம்தான் போகுது…எங்க
சரியாச்சு….வருஷம் எட்டாச்சு…இன்னொரு குழந்தையும் வந்தாச்சு…இதையும் நாமதான் கட்டிக்
காக்கணும்….அது அதுபாட்டுக்குத்தான் இருக்கும்…இதுக்கும் நமக்குத்தான் பொறுப்பு. பெத்துப்
போட்டதோட சரி…பெத்த கடனுக்குப் பால் கொடுக்குது…நல்லவேளை அதுவாவது இருக்கே…? இல்லன்னா
அந்தப் பவுடர் இந்தப் பவுடர்னு நாமதான் கலக்கி
ஃபீடு பண்ணியாகணும்…அது ஒண்ணைக் கவனிச்சீங்களா…எனக்கென்னன்னு விட்டுட்டுப் போறதை?“
– கொதித்துப் போய்ச் சொன்னாள் கார்த்தியாயினி.
“எதச் சொல்றே?“ – என்று புரியாதவர்போல்
கேட்டார். எல்லாக் குறைகளுமாய்த்தான் இருக்கிறது அந்தப் பெண். யாராவது கேட்டால் அல்லது
பார்த்தால்…உங்க கண்ணுக்கு எல்லாமும் குத்தமாகவே படுது என்றுதான் சொல்வார்கள். கூட
இருந்து பார்த்தால்தான் எதுவும் தெரியும்…புரியும்…அது கூடப் பத்தாது. கூடவே இருந்து
அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
“உங்களுக்குப் புரியலயா? எதத்தான் நீங்க
கவனிக்கிறீங்க?“ என்று அலுத்துக் கொண்டாள் கார்த்தியாயினி.
“என்னன்னுதான் சொல்லேன்…“.என்றார் இவர்.
தான் நினைப்பதையெல்லாம் அவளும் நினைக்கிறாளா என்று ஒரு சோதனை. அவ்வளவே…
“சாவகாசமா ஒன்பதரை பத்துன்னு இது படுக்கையவிட்டு
எழும்புமாம். குழந்தையைக் கொண்டு வந்து நடு உறால்ல விட்டுட்டு கண்டுக்காத மாதிரி பாத்ரூமுக்குள்ள
நுழைஞ்சிக்குமாம். நாமளும் கவனிக்காதது போல இருந்தா? குழந்தை நிலைமை என்னாகுறது? எதையாச்சும்
தரைலர்ந்து பொறுக்கி வாயில போட்டுண்டதுன்னா? இங்கென்ன வீடு வீடாவா இருக்கு? கோடவுன்
மாதிரிக் கெடக்கு….எந்த விபரீதம் நடக்காதுன்னு சொல்றது? “
“அதுதானே அதோட டிரிக்கே? நீயோ நானோ எப்டியும்
ஓடி வந்து தூக்கிக்கிடுவோம்னு தெரிஞ்சிதானே அப்டிக் கொண்டு வந்து விடுது…“
“அதத்தாங்க சொல்ல வர்றேன். அம்மா…குழந்தை இந்தாங்க…கொஞ்சம் பார்த்துக்குங்க…ரெஸ்ட்
ரூம் போயிட்டு வந்துடறேன்…ங்கிற சுமுகமான வார்த்தையில்லையே? ஒரு பணிவு இல்லியே…? ரெண்டு
வார்த்தை பேசிக் கொடுத்திட்டுப் போனா குறைஞ்சி போயிடுவாளா? கிரீடம் இறங்கிடுமா? அப்டியென்ன பெரிய கௌரவம் கிழியறது? திமிருங்கிறேன்…“
– கோபத்தில் சொல்கிறாளா? இயலாமையால் சொல்கிறாளா? ஐயோ பாவம்…அவள்…!
“திமிரெல்லாம் இல்லடி….அதுக்குத் தெரிஞ்சதே
அவ்வளவுதான். அதுதான் அதோட லட்சணம்….!“
“என்ன லட்சணம்? எல்லாமும் பொறுப்பாச்
சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டாமா ஒரு பொண்ணை? இப்பிடியா லங்கிணியா வளர்த்து விடுறது?
“
“லங்கிணின்னா தாடகைன்னு அர்த்தம். எதையாச்சும்
சொல்லாதே! அது இப்படித்தான்னு உனக்கு எப்பத்
தெரிஞ்சிது? கல்யாணத்துக்குப் பிறகுதானே? முன்னாடியே கண்டுபிடிக்க முடிலயே? அப்டிக்
கண்டு பிடிக்கணும்னா குறைஞ்சது ஒரு மாசமாவது அவுங்க வீட்ல டேராப் போடணும். அது சாத்தியமா?
அதான் தலைவிதிங்கிறது. லங்கிணிய அவுத்து விட்டுட்டாங்க…அவுங்க ஃப்ரீ ஆயிட்டாங்க…நாம
மாட்டிக்கிட்டோம்….எதையும் இனிமே சொல்லிப் புண்ணியமில்லை…அவ்வளவுதான்..எல்லாத்தையும்
சரி பண்ணிட வேண்டியது அவனோட பொறுப்பு…நாம அந்த எடத்துல இல்லை…..அதப் புரிஞ்சிக்கோ…”.
பேச்சை முடிக்க நினைத்தார் இவர்.
“ஏன், உங்களுக்கு வாயில்லையா? நீங்க சொல்லப்படாதா?
எங்கிட்ட வேண்டாம்…ரூம்லதானே நீங்க இருக்கீங்க…அப்பா…குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்குங்கன்னு
கொண்டு விடப்படாதா? அதென்ன யாரையும் மதிக்காத தன்மை? “
அமைதியாகிப் போனார் நாறும்பூநாதன். இவள்
கிளப்பும் பூகம்பத்தைப் பார்த்தால் அழிவில்தான் கொண்டு விடும் என்று அவருக்குத் தோன்றியது.
இதுக்குத்தான் நான் அன்றைக்கே சொன்னேன்….நாம நம்ம ஊருக்குப் போயிடுவோம்னு….என்று திரும்பவும்
ஆரம்பிக்க முடியுமா? அந்தப் பேச்செடுத்தாலே அவளுக்குப் பழியாய்க் கோபம் வருகிறதே?.
“நான் வரல்லே….நீங்க வேணும்னா போங்க….“-
என்று ஒரே உதறாய் உதறி விடுகிறாள். அதாவது
தனியாய் அடிமையாய்க் கிடந்து கொள்கிறேன் என்கிறாள். அடிமைதானே…பிறகென்ன? காலை விழித்ததிலிருந்து
ராத்திரி பத்துக்குப் படுக்கைக்குப் போகும்வரை வேலை…வேலை..வேலை…சலிக்காமல் செய்கிறாளே?
அடிப் பாவி! இப்படியொரு அர்ப்பணிப்பா? நிர்விகல்ப சமாதி! மனம் சிந்தனையற்ற, எண்ணங்கள்
அற்ற ஒரு நிலை. ஆத்மா, அறிவு மற்றும் அறியப்படும்
பொருள் ஆகிய வேறுபாடுகள் மறந்து, மறைந்து எண்ணங்களின் குறுக்கீடுகள் எதுவுமின்றி ஆழ்ந்த
அமைதியோடு அறிவின் ஒளியின் துணையோடு ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாக இயங்குதல்…!
இது அவளால் மட்டுமே முடியும்.! தெய்வ சங்கல்பம்…இல்லையானால் சாத்தியமேயில்லை!
முடிகிறதோ இல்லையோ…வாயை மூடிக்கொண்டு அமைதியாய் மாங்கு
மாங்கு என்று இயங்குகிறாள். பலிகிடா போல் செய்கிறாள்.
கடைசி மூச்சு நிற்கும்வரை செய்வாள் போலிருக்கிறது. பிரதிக்ஞை. யாருக்கும் இந்த மனசு
வரவே வராது.
அட…அவனுக்காவது தெரிய வேண்டாமா? அம்மா
இத்தனை கஷ்டப்படுகிறாளே என்று? இப்படியா ஒருத்தன் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பான்?
மனசாட்சி வேண்டாமா? பொண்டாட்டி சொகுசாக நடமாடுவாள்…தேர் போல் அலுங்காமல் குலுங்காமல்
நகர்ந்து கொண்டிருப்பாள். உன் அம்மா கிடந்து சாக வேண்டுமா? என்ன நியதி இது? ஆசை அறுபது நாள்…மோகம் முப்பது நாள் என்பார்களே…வருஷம்
ஏழாயிற்றே…இன்னும் ஆசை அடங்கவில்லையா? அலுக்கவில்லையா? அப்படியென்ன அவள் பிரசித்தம்
…? இவரும் ஓரிரு முறை தெறித்துத்தான் பார்த்தார். சமையலுக்கு ஆள் போடு என்றார். பொறுக்கமாட்டாமல்
கூப்பாடு போட்டார். மனசு தாளவில்லை.
“என் பெண்டாட்டி மட்டும் கிடந்து சாகணுமா?
நாங்க தனியா இருந்தா இன்னும் பதினஞ்சு வருஷம் அவ எனக்குத் துணையா இருப்பா…நான் அவளுக்குத்
துணையா இருப்பேன். இப்போ நீ அதைக் கெடுக்கிறே…அதான் உண்மை…உழைச்சு உழைச்சு சீணிச்சுப்
போய் சீக்கிரம் பொட்டுன்னு அவ கத முடியப் போகுது. நான் அநாதையாயிடுவேன்…அதானே உன் விருப்பம்?
செய்…நல்லாச் செய்…அந்தப் பாவம் பூராவும் உன்னைத்தான் சேரும்….வயிறெஞ்சு சொல்றேன்…அவ
போயிட்டான்னு வச்சிக்கோ…அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்…அது மட்டும்
சத்தியம். என் ஊர்ல என் வீட்டுக்குப் போயி அங்க கிடையாக் கிடப்பனே தவிர…உங்க கூட இருந்து
மாய மாட்டேன். காலும் கையும் முடங்கித்துன்னா நகர்ந்து நகர்ந்தாச்சும் என் வேலையைச்
செய்திண்டு, சக்கர நாற்காலி வாங்கி அதுல உட்கார்ந்துண்டு என் வேலைகளைப் பார்ப்பேன்.
..அதுதான் நடக்கப்போறது…அவ புண்ணியவதி…பொட்டுன்னுபோயிடுவா…நான்தான் சீரழியப்போறேன்…அதுக்குத்தான்
நீ வழி பண்றே….!“ – எல்லாவற்றையும் காதாரக் கேட்டுக் கொண்டு கல்லுளிமங்கனாய் இருக்கிறான்.
இவனை என்னென்று சொல்வது? மனிதர்கள் சுயநலமானவர்கள்தான். தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்த
பின்னால் அடியோடா அப்படி மாறிப்போவார்கள்? தன் நலம் தவிர வேறெதுவுமே கண்ணுக்குத் தோன்றாதா?
இளம் பிரயாத்தில் தான் எழுதி பத்திரிகையில்
பிரசுரமான ஒரு கவிதைதான் அப்போது இவருக்கு ஞாபகம் வந்தது.
அம்மா கையால் சாப்பிட்டு சாப்பிட்டு அயர்ந்து
போச்சு… அப்பா கம்பால் அடி வாங்கி அலுத்துப் போச்சு…தங்கையை வாயால் திட்டித் திட்டித்
தளர்ந்து போச்சு…தம்பியை வீச்சாய் விரட்டி
அடித்து வீணாய் ஆச்சு… எல்லாம் சலித்து, எதிலும் ஒன்றாமல் …புதிதாய் எதைச் செய்ய?-
ம்ம்…அதுதான் சரி…சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணனும்…!!
அந்தக் கவிதை பிரசுரமாகி, ஆசிரியரே ஃபோன்
செய்து பாராட்டியது பசுமையாய் மனதில். எல்லாமும் சலித்து எதிலும் ஒன்றாமல் கடைசியாய்த்
தன் மகன் பிரசாந்த் இப்படியாகிவிட்டானோ? அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டானா?
அவள் குறித்து வாயே திறக்க மாட்டேங்கிறானே?
கடமையையெல்லாம் ஒழுங்காச் செய்தவன் கடைசி
காலத்துல தனியாப் போய்க் கிடந்து கஷ்டப்படணும்னு என்ன தலைவிதியா? – என்று இவரும் பலமுறை
கேட்டுத்தான் விட்டார். அவள் அசந்தால்தானே?
“அப்ப கம்முன்னு கிடங்க…உங்கள யாரு போகச்
சொன்னாங்க?“ – இப்படி அவள் சொல்வதிலும் ஒரு சூட்சுமம் இல்லாமல் இல்லை என்றுதான் நாறும்பூவுக்குத்
தோன்றியது.
நான் அப்படித் தனியே போய்க் கிடக்க மாட்டேன்
என்கிற தைரியம் ஒரு புறம். இங்கிருக்கையில் அவளின் வீட்டுக் காரியங்களுக்கு உதவியாய்
இருக்கிறேனே…அது கை விட்டுப் போய்விடக் கூடாதே என்கிற பயம் இன்னொரு புறம். மறு பேச்சுப் பேசாமல் சரி சரி
என்று செய்ய இவன்தானே லாயக்கு?
நானேதான் பலவீனனாகிவிட்டேனோ…! என்று
தன்னைத்தானே நொந்து கொண்டார் நாறும்பூ. அதிகபட்சம் ரெண்டு வருஷத்துக்கு முன்னால் இருந்த
மன தைரியம் இப்போது தன்னிடம் இல்லையே? உடல் பலவீனப்பட்டுப் போனால் மனசும் பலவீனமாகிவிடுமோ?
இங்கேயே கிடந்து இவளுக்கே உதவியாய் இருந்து
கடத்தி விடுவோமே நாட்களை! யார் முந்தி, யார் பிந்தி…யார் கண்டது? என்னை வேண்டாம் என்று
அவளால் சொல்ல முடியாதுதான். அவனும் சொல்லி விடுவானா என்ன? அன்றாடம் என் பணிகளைக் கண்கொண்டு
பார்க்கிறானே…? காய்கறி நறுக்கிக் கொடுக்கிறேன். பால் காய்ச்சுகிறேன்…டிகாக் ஷன் போடுகிறேன்…தோசைக்கு
வாரா வாரம் மாவு அரைக்கிறேன்….கடைக்குப் போகிறேன். சாமான்கள், காய்கறி வாங்கி வருகிறேன்….மோட்டார்
போடுகிறேன். மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றுகிறேன்…தண்ணீர் சம்பில் இருக்கிறதா,
தீர்ந்து விட்டதா என்று பார்த்துப் பார்த்து சுதாரித்து லாரிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லி
தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் நிரப்பி விடுகிறேன். செப்டிக் டாங்க் நிறைந்தால் கழிவு
நீர் லாரிக்குச் சொல்லி வரவழைத்து எடுக்க வைத்து சுத்தம் செய்கிறேன். குடி தண்ணீர்
கேன் தடங்கலில்லாமல் வரவழைத்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாக்கிறேன். இப்படி
எத்தனையெத்தனை உதவிகள் என்னால்? சமயங்களில் காலை டிபன் முழுக்கத் தான்தானே பார்க்கிறோம்?
இதெல்லாம் உதவிகளா? இவைகளுக்கு உதவி என்றா
பெயர்? கடமையில்லையா? நீயும்தானே இருந்து அனுபவிக்கிறாய்? எல்லோரும் சேர்ந்து இருப்பது
உன் வீடு இல்லையா? அது எப்படி பையன் வீடு என்று உன்னால் பிரித்துப் பார்க்க முடிகிறது?
அப்படிப் பிரித்து நினைத்துப் பார்ப்பதால்தானே மனதுக்குள் வேற்றுமை வளர்கிறது? வேற்றுமை
எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருப்பதால்தானே, தனியாப் போகணும்…தனியாப் போகணும் என்கிற எண்ணம்
வலுப்படுகிறது?
பையனே சேர்ந்து இருக்க முனையும்போது,
அப்பாம்மாவைத் தனியே விடக் கூடாது என்று கூடி வைத்துக் கொண்டு கூத்தடிக்கும்போது, தனக்கு
அந்த எண்ணம் வரலாமா? சதா ஊரில் போய் இருப்போம்…இருப்போம் என்று அவளை அனத்தலாமா? – தனக்குத்தானே
எண்ணி எண்ணித் தன்னைத் தணித்துக் கொண்டார் நாறும்பூநாதன். உடம்பு வலுவற்றுப் போனதுதான்
மிச்சம். காலம் மனிதனை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு விடுகிறது?
பெரிசு அடங்கிக் கிடக்க மாட்டார் போலிருக்குதே?
ஓட்டப் பாய்க்குள்ள நண்டு விட்ட மாதிரி சதா முணு முணுன்னுட்டே …! ?
யாரோ பின்னாலிருந்து முனகுவதுபோல் உணர்ந்தார்
நாறும்பூநாதன்.
நிற்சிந்தையாய், நிச்சலனமாய், நிற்விகற்ப
சமாதியாய்த் தன் கடமைகளை இம்மி குறையாது இன்றும் கண்ணும் கருத்துமாய்ச் செய்து கொண்டிருக்கும்
தன் அன்பு மனையாளை மனதில் கொண்டார்….
கார்த்தியாயினி…! அவள் அவள்தான்…ஈடு இணையில்லாதவள்!!
அவள் காலடியே சரணம்…அதுதான் சொர்க்கம்….! – தனக்குத்தானே ஆத்மார்த்தமாய் உணர்ந்தவராய்,
கசிந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்து விட்டுக் கொண்டார் நாறும்பூநாதன்.
------------------------------------