01 பிப்ரவரி 2026


My all time favourite

ல்லாப் புத்தகத்திலும் ஏதாச்சும் கொஞ்சமேனும் கண்டிப்பாப் படிச்சிருப்பேன்...கிளாஸிக்ஸ் தவிர...அடிக்கடி எடுத்துப் படிக்கிறது அதுதான். அ.மி.யோட "தண்ணீர்" குறைஞ்சது அஞ்சு முறையாச்சும். இ.பா.வோட "ஹெலிகாப்டர்கள் கீழே இறங்குகின்றன" பத்துத் தடவை படிச்சிருக்கேன்.தலைசிறந்த பத்து நாவல்கள்ல இது இரண்டும் கண்டிப்பா இடம் பெறும். குருதிப்புனல் நாவல்..மூணுவாட்டி படிச்சிருக்கேன். அவரது சிறுகதைகளைப் படிச்சிட்டேயிருப்பேன். ஆதவனும் பிடிக்கும்.இ.பா. மாதிரித் தெளிவா..புத்திசாலித்தனமா கதை சொல்ல யாராலும் முடியாது. My all time favourite அவர்தான்..







 

 

சிறுகதை      - பிரசுரம் - தாய் வீடு-பிப்ரவரி 2026 மாத இதழ்                       

”உள்ளொழுக்கு”






            நான் யாரோடும் பேசுவதில்லை  என்றார் ராமமூர்த்தி.

            பறவைகள் சலசலவென்ற சத்தத்துடன் கூட்டாகக் கிளம்பிப் பறந்தது இவர் சொன்னதற்கு சிரிப்பதுபோல் இருந்தது. வானத்தை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்.

            அவர் குரலில் இருந்த தீர்மானத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டார் சாமியப்பன்.

            ஏன்? – ஒற்றை வார்த்தையில் அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்துக்  கேட்டார்.

            ஏன்னா அது என் இயல்பில்லை…. என்றார் இவர் மறுபடியும்.

            அப்போ உங்களுக்கு ஃபோன் செலவில்லன்னு சொல்லுங்க…. – என்று சூழலைத் தளர்த்த முயன்றார் சாமியப்பன். முன்னால் பின்னால் என்று நடந்து வருபவர்கள் யாரும் தங்கள் பேச்சைக் கவனிப்பார்களோ என்றிருந்தது. காதில் விழத்தானே செய்யும்…!

            ஃபோன் செலவில்லன்னு எப்படிச் சொல்ல முடியும்? நம்ப நம்பருக்கு கனெக் ஷன் வச்சிருக்கமே…அது உயிரோட இருந்தாகணுமே…அதுக்குப் பணம் கட்டித்தானே ஆகணும்? வேலிடிட்டீ…..

            அதோட மட்டுமில்லே….நம்மளோட மத்தவங்க பேசினாலும் அதுக்கும் கனெக் ஷன் இருந்தாகணுமே…-அப்படியாவது யாரும் உங்களுடன் பேசுவதுண்டா? என்ற கேள்வி அதில் மறைந்திருந்தது.

            அதத்தான் சொல்ல வந்தேன்….யாராவது பேசினாங்கன்னா நான் பேசுவேன்…நானா யாருக்கும் பேசறதில்லை…அதுதான் என்னோட இயல்புன்னு உறவுக்காரங்களும் புரிஞ்சிக்கிட்டாங்க பாருங்க…அதுதான் அதுல பெஸ்ட்…! ….

            ஏன் அப்படி விட்டுட்டீங்க…? – யதார்த்தமாய்த்தான் கேட்டார் சாமியப்பன்.

            அவரிடம் சொல்வதில் ஒன்றும் தவறில்லைதான். எல்லாவற்றிற்கும் மனசு வெறுத்துப் போனதுதான் காரணம் என்கிற அடிப்படையை, அந்த ஆதங்கத்தை யாரிடமாவது சொல்லித் தீர்க்க வேண்டும்போலத்தான் இருந்தது இவருக்கும்.

 இவரைப் போலவே சாமியப்பனும் ஒரு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்தான். மாலை நேரம் வழக்கம்போல் அந்தப் பூங்காவிற்கு நடைப் பயிற்சிக்கு  வரும்போது பழக்கமானது. அதில் விசேஷம் என்னவென்றால் இருவரும் ஒரே தேதியில் ஒரே நாளில் பணியிலிருந்து ஓய்வு பெற்றதுதான். இந்த ஒற்றுமை அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தைக் கொண்டு வந்திருந்தது.

            ஓய்வூதியம் தொடர்பாக அவர்களுக்குள் கொஞ்சம் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. ராமமூர்த்தி ஒரு இரண்டாயிரம் ரூபாய் கூடத்தான் வாங்கினார். காரணம் கடைசி ஒரு வருடத்தில் அவர் வேறு துறைக்குப் பதவி உயர்வில்  கணக்கு அலுவலராய்ச் சென்றதுதான்.

            பச்சை இங்க்கில் கையெழுத்துப் போட வேண்டும் என்கிற வெறி அவருள்ளே புகுந்திருந்தது. அதற்கு அலுவரானால்தானே முடியும்?  அவர் வேலை பார்க்கும் சொந்தத் துறையில் அந்த இடத்தைப் பிடிக்க ஜனவரிக்கு மேல் ஆகும் என்கிற நிலை இருந்தது.  அதே சமயம் தனக்கிருக்கும் சிறப்புக் கல்வித் தகுதி கருதி எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற விதியின் கீழ் முப்பத்தி இரண்டு ஆண்டு காலம் வேலை பார்த்த தன் துறையை விட்டுப் புதிய இடத்திற்குத் தாவினார் ராமமூர்த்தி.

            வெளியேறும்போது ஒருவர் கேட்டார். சார் எங்களையெல்லாம் விட்டுட்டு இப்படிப் போறீங்களே… பெரிய இழப்பு சார் எங்களுக்கு…அப்பப்பப் பேசலாமா சார்….?

            வேண்டாம் என்றார் இவர். அவர் அதிர்ந்து போயிருக்க வேண்டும். என்ன இந்த மனுஷன் இப்படிச் சொல்றான்? அது எப்படியோ அத்தனை பேர் காதுக்கும் போய்விட்டது. அதற்குப்பின் யாரிடமிருந்துமே ஃபோன் வந்ததில்லை அவருக்கு.

            என்ன வேண்டிக் கிடக்கு? பூராப்பயலுவளும் லஞ்சப் பேர்வழிங்க…இவிங்ஞளுக்கு மத்தியிலேயிருந்து விலகினதே பெரிசு. அப்புறம் என்ன குசலம் விசாரிப்பு…கொண்டாட்டம்? ஒரு மண்ணும் தேவையில்ல….-மனசு வெறுத்துப் போய்த்தான் வெளியேறினார்.

            பார்ட்டியெல்லாம் வேண்டாம் என்று விட்டார். இவர்தான் தன் கைச் செலவில் எல்லோருக்கும் சாப்பாடு போட்டார். ஆபீஸ்களில் வேலைகள்தான் நடக்கும். ஆனால் அன்று அங்கு சாப்பாடு நடந்தது. கோப்புகளைப் பூராவும் எடுத்துத் தரையில் கிடாசிவிட்டு மேஜையில்  இலை விரித்து சித்ரான்னங்களுடன் ஜே ஜே. என்று உணவு பறிமாறப்பட்டது. எல்லோர் மனதையும் நிறைத்து விட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார். எதற்கும் எவனும் வயிறெரியக் கூடாதே பிற்பாடு!

            சார்…சாயங்காலம் பார்ட்டிக்கு நாங்க நாலு பேர் இருக்கோம்…என்று வந்து கெஞ்சுவதுபோல் நின்றார்கள். தொலைஞ்சு போங்க…என்று அதற்கும் கொடுத்துத்தான் தலைமுழுகினார்.

            யாராவது காசை இப்படி விரயம் பண்ணுவாங்களா? கூறு கெட்டுப் போச்சா உங்களுக்கு? அவுங்களப் பார்ட்டி வைக்கச் சொல்லி அரைப் பவுன் மோதிரத்தோடும் சந்தன மாலையோடும்  வந்து நிற்கத் தெரியலை…என்னமோ இவரு விருந்து வச்சாராம்…பீத்திக்கிறாரு….! – காயத்ரீ விட்டு வாங்கினாள்.

நானென்ன ரிடையர்ட் ஆயிட்டேனா? மோதிரம் போடுறதுக்கு? டிபார்ட்மென்ட்தானடீ  மாறிப் போறேன்…கழிசடையான எடத்தைவிட்டு இடம் பெயர்றேன்…திருஷ்டிக் கழிப்புன்னு ஒண்ணு இருக்குல்ல…என்றார்.

            தன்னை அங்கிருந்து விலக்கிக் கொள்ளும்முன், தனக்கான வேலைகளை, தேவைகளையெல்லாம் தானேதான் முடித்துக் கொண்டார். போட்டுப் பார்த்திடுவாங்ஞ என்கிற கவனமிருந்தது. ஸ்டிரிக்டா இருந்தவன எவனுக்குத்தான் இந்த உலகத்துல பிடிக்கும்?  வெளியேறிவிட்டால் எவனையும் எதற்கும் எதிர்பார்த்து நிற்கக் கூடாது. முப்பத்தியிரண்டாண்டுகள் பணி புரிந்த இடத்தில் பிடிப்பே இல்லாமல் போனது.சூழல் மாசு படிந்ததே அதற்கான பிரதான காரணம் என்று நினைத்துக் கொண்டார்.

            தேர்டு கிரேடு ஆபீசர்தான். ஆனாலும் நான் ப்ளூ இங்க்ல போட மாட்டேன். பச்சை மைப் பேனாவால்தான் ஒப்பமிடுவேன்….என்று பிடிவாதமாய் இருந்தார் ராம
மூர்த்தி. யெலிஜிபிலிட்டி உண்டே….! எவன் கேட்கிறது?

            சார்…உங்களுக்கு முன்னாடி இருந்த யாரும் பச்சை இங்க்ல போட்டதில்ல சார்…என்று பயந்து கொண்டு புலம்பினார்கள் பலர்.  இவர்கள் ஏன் இந்த பயம் பயப்படுகிறார்கள் என்றிருந்தது.  தவறு செய்பவர்களுக்கு மனதுக்குள் எப்போதும் ஒரு தயக்கமும், பயமும் இருந்து கொண்டேயிருக்கும். வருகைப் பதிவேட்டில் பணியாளர்கள் போலவே அவருக்கு முன்பிருந்தவரும் நீலநிற மையிலேயே சுருக்கொப்பமிட்டிருந்தார். தன்னை சிறப்பாகக் காண்பித்துக் கொள்ள அவருக்கு இஷ்டமில்லை…பத்தோடு பதினொன்றாகவே இருக்க விருப்பம். பின்னால் ஒளிந்து கொள்வது. அவர்கள் அப்படித்தான்…!

            மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கத்தான் செய்யும் என்பது பிறகுதான் புரிந்தது. கூட்டத்தோடு கும்மியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நான் அப்படியில்லை என்று காண்பிக்க முனைந்தார் ராமமூர்த்தி.

            சார்…கலெக்டர் ரௌன்ட்ஸ் வர்றார்…என்றனர்.

            வரட்டுமே…என்றார் இவர். அவர்களோ பரபரத்தார்கள். வந்த பின் எழுந்து வணங்கினால் போதாதா? இப்போதே எழுந்து நின்று கால்கடுக்கக் காத்திருக்கணுமா? அலுவலகத்திலிருந்தவர்களுக்கு இவரின் நடவடிக்கைகள் புதிதாய், புதிராய் இருந்தன.

            ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணித்தானே அந்த அம்பத்திநாலு வயதிலும் மாலை வகுப்பிற்குச் சென்று கணக்கியல் பயிற்சி பெற்றார்? இளநிலைக் கல்வித் தகுதியே போதுமானது என்றிருந்ததுதான். ஆனாலும் மேல்நிலைக் கல்வித் தகுதியையும் அடைந்தே தீர வேண்டும் என்கிற வெறி அவருள் புகுந்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம்தான் உள்ளூரிலேயே  அலுவலக மாறுதல் என்று வந்து அதைக் கெடுத்து விட்டது. பதவி உயர்விற்குப் போதுமான கல்வித் தகுதி இருக்கிறதுதானே என்று விட்டு விட்டார்.

            புதிய அலுவலகம்…புதிய வேலைகள்…புதிய பொறுப்புக்கள். அதை ஒழுங்காகச் செய்தாக வேண்டும். எவனும் குத்தம் குறை சொல்லி விடக் கூடாது…பொறுக்காதே…! கவரிமான் புத்தியாயிற்றே?

            இருந்தது இருந்துட்டீங்க…இன்னும் ஒரு வருஷம்…இங்கயே இருந்து ரிடையர்ட் ஆயிட வேண்டிதானே சார்…எதுக்கு கடைசி காலத்துல வேறே டிபார்ட்மென்ட்? -கேட்கத்தான் செய்தனர்.

தொலையட்டும்…இவன் இருந்தா நமக்குத்தான் இடைஞ்சல். அவனும் வாங்க மாட்டான்…நம்பளையும் வாங்க விட மாட்டான்…காசோட அருமை தெரியாத பய…!

எனக்கு வேண்டாம்…என் பங்கை இவங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்திடுங்க…என்றவர்தான். ஆனாலும் அவர்களுக்கு இவர் ஒரு இடைஞ்சல்தான்.

            ஒருவனின் உயர்வு என்பது பலரையும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கத்தானே செய்கிறது?  பிடியாப் பிடிச்சுக் கிளம்பிட்டானே…!

            புது டிபார்ட்மென்ட்டுக்குள்ள நுழைஞ்சிட்டு…எதுக்கு சார் கடைசி காலத்துல…அதெல்லாம் பெரிய கடல் சார்…நம்மால நீந்த முடியாது…

            மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் என்று சொன்னவர் எவருமில்லை.

            உங்களுக்கெல்லாம் வயசிருக்கு. அடுத்தடுத்து ப்ரமோஷன் வர வாய்ப்பிருக்கு. ஆனா எங்க காலத்துக்கு அது ரொம்பக் குறைவு. ரெண்டு ஸ்டெப், மூணு ஸ்டெப் தாண்டுறதே அதிகம். நான் இங்கயே இருந்தேன்னா மார்ச்சுக்குள்ளதான் எனக்கு நிர்வாக அலுவலர் பதவி உயர்வு கிடைக்கும். அதே ராங்க்கை இப்போதே அங்க போய் நான் அடைஞ்சிடுவேன். அதான் உதறிட்டுப் போறேன்….என்றார்.

            இந்த வயசுல இவனெல்லாம் படிச்சு எங்க பாஸ் பண்ணப் போறான்…என்று பூடகமாய்ப் பேசிக்கொண்டார்கள்தான்.  வீட்டில் கதவை அடைத்துக் கொண்டு பயிற்சி செய்தார். சின்ன வயசில் இருந்த அதே வேகம் இன்னும் தன்னிடம் அழியவில்லை என்று தோன்றியது. அந்த வேகம்தானே தன்னை சர்வீஸ் கமிஷன் வேலையையே வாங்க வைத்தது. லட்சக் கணக்கான பேர் எழுதிய தேர்வில் பாஸ் பண்ணுவது என்றால்? முதன் முதலில் நாளிதழில் ரிசல்ட் வந்த அந்த நியூஸ் பேப்பரை இன்னும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறார். இவர் நம்பரை அன்டர்லைன் பண்ணியிருப்பார். அன்று அப்பாம்மா முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி? வாங்கும் சம்பளத்தை அப்படி அப்படியே அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்து விடும் பழக்கமிருந்தது அவரிடம். அவர் செலவுக்கு என்று மிகச் குறைந்த தொகையே கேட்டு வாங்கிக் கொண்டார். இது போதுமாடா? போதுமா? என்று திரும்பத் திரும்ப அம்மா கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

அந்த நாள் இனிய நாள்…அது திரும்ப வராது. அம்மா அப்பாவோடு வாழ்ந்த நிறைவான நாட்கள் அவை. சத்தியத்தோடும் லட்சியத்தோடும் கை கோர்த்திருந்த நாட்கள் அவை.

            கணக்கியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் வாயடைத்துப்  போனார்கள். நினைச்சதைச் சாதிச்சிட்டீங்க…என்று உளமார்ந்த பாராட்டுதல்களுடன் வந்து நின்றவர் உதயசங்கரன் பொறியாளர் மட்டும்தான். இவனெல்லாம் எங்க அக்கௌன்டன்சி பாஸ் பண்ணப் போறான்? என்று கேவலமாய் முதுகுக்குப் பின் பேசியவர்கள் பலர்.  அதென்ன அப்படியான கஜகர்ண வித்தையா…பார்த்துடுவோம் ஒரு கை என்றுதான் இறங்கினார். எப்போதுமே தன் முயற்சியில் அசாத்திய நம்பிக்கை உண்டு ராமமூர்த்திக்கு. ஒன்றைக் கையிலெடுத்தால் உடும்புப் பிடியாய் பிடித்து உலுக்கி  எடுத்து விடுவார்.

            லெக்டரின் முதல் மீட்டிங்கில் நன்றாக மாத்து வாங்கினார் ராமமூர்த்தி. எல்லோர் முன்னிலையிலும் அந்தளவுக்கு அவர் காய்ச்சியிருக்கத் தேவையில்லைதான். வந்து ஒரு மாதம்தானே ஆகியிருக்கிறது என்கிற புரிதல் வேண்டாமா? ஆனாலும் அவரை யார் கேள்வி கேட்பது? அத்தனையையம் வாங்கிக் கட்டிக் கொண்டார். மூஞ்சி தொங்கிப்போய் வந்து உட்கார்ந்தார். மனசுக்குள் அசூயை பிறந்தது. என்னை என்ன முட்டாப்பயன்னு நினைச்சிட்டாரா? இந்தப் பேச்சு பேசுறாரு? மனதுக்குள் கருவிக் கொண்டார்.

            அன்றே சுதாரித்தார். அதற்குப் பின் எத்தனை சனி, ஞாயிறுகளுக்கு அவர் வீட்டுக்கு வந்து  திரும்பினார் என்பது அவருக்கே தெரியாது. வீடே மறந்து போனது.  இ.டென்டர் முதற்கொண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அதில்தான் பாராட்டுப் பெற்றார்.  அதற்குப்பின் அவர் இருக்கிறாரா, போய்விட்டாரா என்று எதையும் கண்டு கொண்டதில்லை ஆட்சியர். அவருக்கு எத்தனையோ வேலைகள். எத்தனையோ அரசியல்வாதிகள். யார் யாரோ விசிட்டர்ஸ்….

            விலகுங்க…விலகுங்க…சார் வரட்டும்….என்று கரை வேட்டியோடு நுழைந்த அந்த அரசியல்வாதிக்கு வழி விடச் சொன்ன அன்றே பலவற்றையும் புரிந்து கொண்டார் ராமமூர்த்தி.  எல்லா எடமும் கழிசடையாத்தான் இருக்கும் போல்ருக்கு என்று தோன்றியது. டென்டர்கள் அசலுக்கும், பினாமிக்குமாய் பகிரப்படுவதைக் கண்ணுற்றார். அதற்குப்பின் ஆட்சியர் மீது இருந்த மரியாதை அறவே விட்டுப் போனது. இன்னும் என்னென்னவோ மனதை உறுத்தத்தான் செய்தது. ஒதுக்கீடு செய்யப்படும் நிதி எப்படிஎப்படியெல்லாம் பாழாகிறது? திருப்பிவிடப்படுகிறது? கழுத விட்டைல முன் விட்டை என்ன பின் விட்டை என்ன?  சீக்கிரம் இங்கிருந்து என்று கழருவோம் என்று நினைக்க ஆரம்பித்தார். சரியாக ஒன்பது மாதங்கள்…கிடுகிடுவென்று ஓடிவிட்டதுதான்.  ஒரு நாள் கூட லீவு எடுக்கவில்லை. கணக்கிலிருந்த சாதா லீவு, மெடிக்கல் லீவு என்று எல்லாமும் காலாவதி ஆகிப் போனது.  லீவு எடுத்து விட்டு வீட்டில் கெதம் கெதம் என்று உட்கார்ந்து ஆபீசையே நினைத்துக் கொண்டிருப்பதற்கு ஆபீசிலிலேயே கதியாய்க் கிடப்பது மேல் என்று இருந்தே கழித்து விட்டார். என்ன நஷ்டமானாலும் பரவாயில்லை. கௌரவம்தான் முக்கியம். ஒரு பய ஒரு வார்த்தை சொல்லக் கூடாது. அதற்கு இடம் கொடுக்கவே கூடாது. அதுவே லட்சியம்.

            வாங்க மாட்டான் அந்த ஆளு என்கிற தகவல் மேலிடம் வரை போயிருப்பது எப்படியோ காதுக்கு வந்தது. அப்டியா…அப்டியா? என்று வியந்தாராம். இவர் வியந்தாலென்ன வியக்காவிட்டால்தான் என்ன…நான் என்னைக்குமே உயர்தரம்தான்…அதை எவன் பாராட்டி நான் கேட்கணும்… என்று வாளாவிருந்தார் ராமமூர்த்தி. மனதிற்குள் மிகுந்த கர்வம் உண்டு இந்த ஒரு விஷயத்தில்.

            டென்டருக்கென்று ஆபீசுக்குள் வரும்போதே கலெக்டர் சேம்பருக்குள் நுழையும் முன் அமர்ந்திருக்கும் இவர் பையில் செருகிவிட்டுப் போனார்கள். அதிர்ந்து போனார் இவர். உள்ளே கேட்டாலும் கேட்கட்டும்…என்று விரலசைத்து வைத்த ஆளைத் திரும்ப அழைத்து, எடு…என்றார்…ஒற்றை வார்த்தையில். உள்ளே கேட்டால் கேட்கட்டும் என்றுதான் சொன்னார்.  எல்லாம் வழக்கம்தான் சார்…இருக்கட்டும்…என்றான் அவன். உன் வழக்கத்தக் கொண்டு குப்பைல போடு..இதெல்லாம்  அங்கயோட நிறுத்திக்கோ…எங்கிட்ட வரப்படாது….என்றார் படு கறாராய். வார்த்தையும் பார்வையும் அதைத் துல்லியமாய் உணர்த்தியது.  ஒருமையில்தான் பேசினார். அதிர்ந்து போனான் வந்தவன். எவனெவனோ எது எதற்கோ வருகிறார்கள் போகிறார்கள்…அம்புட்டுப் பயலுகளுக்கும் இந்தப் புத்திதான் இருக்குமா? காரியம் சாதிக்கணும்னு இப்படியா பழக்கி விட்ருப்பானுங்க? செல் அரிச்ச மாதிரி ஆகிப் போச்சே?  இவனே போய் உள்ளே  சொன்னாலும் பரவாயில்லை என்றுதான் வாளாவிருந்தார். நா இப்டித்தான்….எங்க வேணா போய்ச் சொல்லிக்கோ…!

            அதற்குப்பின் டென்டர் இறுதி செய்யும் நிகழ்வுக்கு ஆட்சியர் இவரை அழைப்பதே நின்று போனது. அவருக்கே பயமோ என்னவோ? யார் கண்டது? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எவனுக்குத் தெரியும்?  இருக்கும் இடத்தை மதிப்பாய் வைத்திருப்பது யார் கையில்?

            வாங்கமாட்டாரா…வாங்க மாட்டாரா…அப்டியா…அப்டியா…என்று வளாகம்                               பூராவும்..பராபரியாய்ப் பேச்சுக்கள் பரவின.  அப்படிப்பட்ட அதிசயமான செய்தியாய் அது இருந்ததுதான் வியக்கக்தக்கது. அம்புட்டுப் பேரும் சகதியில் புரளும் இடம் அது. அங்கு போய் ஒருத்தன் மட்டும் மேட்டில் உட்கார்ந்து  வேடிக்கை பார்க்க முடியுமா?

            ப்பாடா… போதுண்டா சாமி…..அந்த 31ம் தேதி வளாகத்திற்கு வெளியே வந்து தலைக்கு மேலே கையை உயர்த்தி ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு சாஷ்டாங்கமாய்த் தரையில் விழுந்து வணங்கினார் ராமமூர்த்தி. எவனாவது கிறுக்கன் என்று நினைத்தாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்றுதான் விழுந்து எழுந்தார்.

            அவரை வழியனுப்பியவர்கள் நாலைந்து பேர்தான். ஆனால் யார் யாருக்கெல்லாம் மனசார அவர்களின் சர்வீஸ் பணியில் உதவி செய்திருந்தாரோ, இடர் நீக்கியிருந்தாரோ, பலன் அடையச் செய்திருந்தாரோ அவர்களெல்லாம் நன்றி மறக்காதவர்களாய் வந்து நின்றிருந்தார்கள்தான்.

            எங்கும் எந்த மாற்றமும் இல்லை…எல்லாமும் ஒரே கசடு என்றுதான் தோன்றியது. எப்படியோ வலையில் விழாமல் மீண்டாயிற்று. மீளுவதே போராட்டமாய் அமைந்து போனதை எண்ணிப் பெருமூச்செறிந்தார்.

            நல்லவனாய் உயிரோடு நடமாடுவதே இந்த உலகத்தில் கஷ்டமானது என்பதாய் உணர்ந்தார். தன் கணக்கு வழக்குகளையெல்லாம் தான் இருந்த கடைசிப் பத்து நாட்களில் சப்ஜாடாய் முடித்துக் கொண்டு வெளியேறியதுதான் இருப்பதிலேயே  உறலைட்டான விஷயம்.. கடைசியாய் அங்கும் கேட்டார்கள். 

சார்…அப்பப்பப் பேசலாமா?   -  இவர் சொன்னார்…..வேண்டாம்…….!!!

ன்ன சாமியப்பன்….ஏது அமைதியாவே வர்றீங்க…ஏதாச்சும் பேசுங்க….? என்றார் ராமமூர்த்தி. வெகு நேரம் அமைதியாகவே நடந்து விட்டோம் என்று உணர்ந்த கணம் அது. எவ்வளவு சிந்தனை பரந்து விரிந்து விட்டது அதற்குள்?

உங்களமாதிரியெல்லாம் நான் இல்லை சார்….கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தேன்…..நீங்க சொக்கத் தங்கம்……!!!

சொக்கமாவது…தங்கமாவது…எல்லாம் அவனவன் மனசப் பொறுத்தது…போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து…என்றார் இவர் யதார்த்தமாய்.

இந்த மனசுதான சார்…எல்லாத் தப்பையும் செய்ய வைக்குது…சலனமில்லாம அதை நீங்க கன்ட்ரோல்ல வச்சிருந்திருக்கீங்களே? அதைப் பாராட்டித்தானே ஆகணும்…!!

வீட்டுக்கு வந்து பாருங்க…எம் பொண்டாட்டி என்ன சொல்றான்னு, என் கன்ட்ரோல் என்ன லெவலுக்கு இருக்குன்னு அப்பப் புரியும்… சொல்லிவிட்டு பலமாய்ச் சிரித்தார் ராமமூர்த்தி.

அந்த நீண்ட ஆர்ப்பாட்டமான சிரிப்பினூடே ஒரு சின்ன சோகம் தொற்றியிருப்பதாய் சாமியப்பன் உணர்ந்தார்.

அதன் இறுதியில் ராமமூர்த்தியின் கண்களில் துளிர்த்திருந்த இரண்டு சொட்டுக் கண்ணீர்…..அவரின் உள்ளார்ந்த துயரத்தை இந்த உலகுக்குப் பறைசாற்றியது.

                                    ---------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

           

 

                         

30 ஜனவரி 2026

 

“நீர்த்தாண்டவம்”-நாவல் - பேசும் புதிய சக்தி - பிப்ரவரி 2026 -அறிமுகம்

------------------------------------------------------------------------------------------------------------------------








 


பேசும் புதிய சக்தி-இலக்கிய மாத இதழ் - ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டி-2026-ல் ஒரு சிறப்புச் சிறுகதை தேர்வு- “ மாயமே நானறியேனே...!”





 

பேசும் புதிய சக்தி-பிப்ரவரி 2026 - சிறுகதை        பிரசுரம்               

“எதிர்பார்ப்புகள்”                                                                          ------------------------------------------------




புவனாவும் நம்ம பொண்ணுதானேன்னு நினைச்சு விட்ரு…அவ்வளவுதான்… - எடுத்த எடுப்பில் பாயின்ட்டுக்கு வந்தார் நவநீதன். எத்தனை நாளைக்கு இதை இழுப்பது? அலுப்பு வந்துவிட்டது அவருக்கு.சதா இதைப்பற்றியா நினைத்துக் கொண்டிருப்பது? பிரச்னைகளை நாமே உருவாக்கி வீடு பூராவும் இறுக்கமாக்கிக் கொண்டு மயான அமைதியில் வளைய வருவதா? தனதும் அவளுடைய வயதிற்குமான பொருத்தம் என்று இதை எப்படிக் கொள்வது? பெரியவர்கள், அனுபவப்பட்டவர்கள் என்பதற்கு அப்புறம் என்னதான் பொருள்? குறைந்தபட்சம் தங்களுக்குத் தாங்களே அதை உணர வேண்டாமா? அவரவர் மனதிற்காவது அந்தச் சமாதானம் கொள்ள வேண்டாமா? சும்மா முறுக்கிக் கொண்டு திரிவதா அழகு? இளசுகளுக்கும் நமக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்?

            உடனடியாக பதில் எதுவுமில்லை. பதில் வராது என்று தெரியும் இவருக்கு. அதற்கு ஒரு மனசு வேணும். ஒரு பக்குவம் வேணும்தான். அல்லது சொல்பவர்கள் வார்த்தைகளையாவது ஆய்ந்து பார்க்கத் தெரிய வேணும். அதற்கும் ஒரு சம்மதம் இருக்கணும். இப்படி ஏதாவதொன்று பாகேஸ்வரியிடம் இருக்கும் என்று தோன்றவில்லை. அவ்வளவு எளிதாய் அவள் மசிய மாட்டாள்தான். மாமியார் ஸ்தானம் என்பதை அம்மா ஸ்தானம் என்று விரிவாக நினைக்க அவள் தயாரில்லை.

            ஒண்ணு சொல்றேன் கேளு….இந்த வாழ்க்கையை ரொம்ப யோசிச்சோம்னா அது விபரீதத்துலதான் கொண்டு போய் விடும். எதையும் மனசுல போட்டுக்காம,  அன்றாடக் காரியங்களைச் செய்திட்டே போகணும்…அப்பத்தான் தடுமாறாம ஓடம் கடந்து போகும். யோசிக்க ஆரம்பிச்சோம்னா எல்லாம் குழப்பம்தான்…..- அவள் மூஞ்சியைப் பார்த்து நேரடியாகச் சொன்னார் நவநீதன்.

            கவனமாய்த்தான் கேட்டுக் கொண்டாள். ஆனால் எந்த ரியாக் ஷனும் இல்லை. மாமியாராயிற்றே…அதெப்படி உடனடியாகச் சம்மதிப்பது? தன் கௌரவம் என்னாவது? தானும் ஒரு வீட்டு மருமகளே என்கிற நினைப்பிருந்தால்தானே? வந்த புதிதில் கொஞ்சம் வித்தியாசமாய்த்தானே தானும் இருந்தோம் என்கிற நினைப்பு வேண்டாமா?

            உறால்ல போய் உட்காருங்க…காப்பி கலந்து எடுத்திட்டு வர்றேன்…..என்றாள். சம்பந்தமேயில்லாமல் பதில் சொல்வதில் கெட்டிக்காரி.  அதாவது தான் கேட்டதற்கு ஒப்புதல் இல்லை என்பதான பொருளடங்கியது.

            என்ன கௌரவம் வேண்டிக் கிடக்கிறது? எல்லாமுமே கடைசியில் ஒரு டம்பளர் சாம்பல்தான். இவ்வளவுதான் இவர் நினைப்பு. காவி உடுத்தாத சந்நியாசி. வெறும் கௌபீனத்தோடு போய் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் பகவான் ரமணரைப் போல் அமர்ந்து விடுவோமா என்று பல சமயங்களில் யோசிக்கிறார். மனம் அந்தளவுக்கு விட்டுத்தான் போகிறது. அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டு வாழ்வதுதான் விவேகம்….எங்கோ படித்தது…அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து வெறுமையை விரிக்கிறது.

            புவனாவுக்குப் பிரியமான அம்மாவாக இருந்து விடு என்கிறார் இவர். அவ்வளவுதான் அவர் சொன்னது. தன் மனது ஏற்றுக் கொண்டதை அவள் மனதும் ஏற்க வேண்டும் என்கிற கட்டாயமா என்ன? அவரவர் ஸ்தானம் என்று ஒன்று இருக்கிறதே?

            அத்தனை சுலபத்திலா தானும் ஏற்றுக் கொண்டோம்? அதுவும் கொஞ்சம் காலம் கடந்ததுதானே? எல்லா ஆட்டமும் ஆடித்தானே ஓய்ந்தது மனம்?

            சூடான காப்பி வந்தது. அதைக் கொஞ்சம் மெதுவாய் வைத்திருக்கலாம் டேபிளில். நறுக்கென்று தலையில் குட்டியது போலிருந்தது. ஆனாலும் ஆவி பறக்கும் அந்தக் காப்பி மணம் அவள் கைபாகத்தை உச்சி முகர்ந்தது.

            மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். நாலு பேர் வீட்டிலிருந்தால் நாலும் நாலு விதம்தான். யாரை யார் மாற்ற முடியும்? அவரவரே பக்குவப்பட்டு மாறிக் கொள்ள வேண்டியதுதான்.  மாறிவிட்டோம் என்று உணர்ந்து மாறினாலும் சரி, உணராமலே அதுவே மாயமாய் காலப்போக்கில் நிகழ்ந்து போனாலும் சரி…நல்லது நடந்தால் முடிந்தது விஷயம். அவ்வளவே அவர் எதிர்பார்ப்பு.

            நாம இன்னும் கொஞ்சம் நல்லபடியாத் தேடி  சரியாப் பார்த்திருக்கணும்…அவசரப்பட்டுட்டோம்….. – பழையபடி ஆரம்பித்தாள் பாகேஸ்வரி. மனசு தாளவில்லை அவளுக்கு. சமாதானம் ஆக மாட்டேனென்கிறது.

            பார்த்தியா…அடியப்பிடிடா பாரத பட்டான்னு திரும்பவும் ஆரம்பிக்கிறியே? இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்கப் போகுது அவனுக்கு.  மனச சமனப் படுத்திக்கோ…புகைய விடாதே…! எல்லாமும் நாள் ஆக ஆக சரியாப் போகும்.  எவ்வளவோ ஸ்லோகம் சொல்றே…சாமி கும்பிடுறே…கோயிலுக்குப் போறே….இவ்வளவுதானா உன் முதிர்ச்சி? சராசரி மனுஷங்க வாழ்க்கைல பக்குவப்படணும்னுதான் நியமங்களையே உண்டாக்கி வச்சிருக்கான்…அதிகபட்சம் மனசும் உடம்பும் கெட்டுப் போகாம இருக்கிறதுக்கு அது உதவும்ங்கிறதுதான் நடைமுறை. அந்த அன்றாட நியமங்கள் ஓரளவு கூட நம்மைப் பக்குவப்படுத்தலைன்னா அப்புறம் என்னதான் இருக்கு?  இப்படித் தொட்டதுக்கெல்லாம் புலம்பிட்டுத் திரியறதா? வாழ்க்கைல கஷ்டப்பட்டு, வறுமைல அடிபட்டு மேலே வந்தவனுக்கு பக்குவம்ங்கிறது உடம்போட ஒட்டின விஷயமாயிடுது. அல்லாதவங்களுக்கு அதுவே துன்பமாயிடுது….! அந்த எல்கையைத் தொட முடியலை…

            தன் விளக்கங்கள் அவளை சமாதானப்படுத்தியதோ என்னவோ? அவளின் அமைதி இவருக்குப் புரியாத ஒன்றாயிருந்தது.  நீங்க ரொம்ப முதிர்ச்சிதான்…தெரியாதா எனக்கு? என்று கோபப்படுவாள்.

            தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லாததே தன் மருமகளின் மீதான வாஞ்சையாக மாறிப் போனதோ? என்னவோ தெரியவில்லை அவருக்கு அந்தப் பெண்ணின் மேல் கோபமே வருவதில்லை. அதே சமயத்தில் ஒரேயடியாக மகிழ்ந்து குலாவுவதுமில்லை.  நிதானம் அவரது இயல்பு.  உடம்போடு ஊறிப் போன விஷயம்.

தேவைக்குப் பேசுவதோடு சரி.  அளந்த வார்த்தைகளில் ஒன்றிரண்டு நிமிடங்கள்.. அம்மாதிரி நேரங்களில் அவர் தன் மருமகளின் முகத்தை நேருக்கு நேர்கூடப் பார்த்துப் பேசியதில்லை. வேறு திசையில் நோக்கியோ அல்லது அநாயாசமாய்த் தலை குனிந்து கொண்டோ அல்லது நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் நிலையிலோதான் பேச்சுக் கொடுத்திருக்கிறார். சொல்லும் பதில்கள் அத்தனை பொருத்தமாய் இல்லாததுபோல்தான் தோன்றுகின்றன. சமயங்களில் அவை புரியாதனவாயும் இருக்கின்றனதான்.  சரி…சரி…என்று விட்டு விடுகிறார். என்ன பெரிய மந்திராலோசனை இந்த எளிய வாழ்க்கையில்?  நாளும் பொழுதும் நயமாய் ஓடினால் சரி….அவ்வளவுதான்.

அடுப்படியில் சமையலில் மும்முரமாய் இருந்தாள் பாகேஸ்வரி. எதுவும் பேச நேரமில்லை. சமையல் பக்குவமாய் அமையவில்லையெனில் அதற்கு ஒரு சண்டை வரும்.

எனக்கு உங்கம்மா சமையல் பிடிக்கவேயில்லை.  காரசாரமில்லாம…மந்தமா…வயசானவங்களுக்கு சமைக்கிற மாதிரி…!

அதுதான் வயித்துக்கும் உடம்புக்கும் நல்லது. ஓட்டல்ல போய் அடிக்கடி தின்னா…அப்புறம் ஆஸ்பத்திரியைத் தேடிப் போக வேண்டிதான்…-ராகவனின் பதில் அந்தப் பெண்ணைப் பொறுமை இழக்கச் செய்திருக்கிறது. இருப்பினும் அவனால் முற்றிலும் தடுக்க முடியவில்லை. பல நாட்கள் இவள் மாங்கு மாங்கு என்று செய்து வைத்திருக்கும் சமையல் வகைகள் வீணாகின்றன. வேலைக்காரிக்குத் தூக்கிக் கொடுக்கிறாள். அது சந்தோஷமாய் வாங்கிக் கொண்டு போவதில் ஒரு திருப்தி.

புவனாவும் ராகவனும் திரும்பும் நேரமாயிற்று. ஏதோ அதி முக்கிய வேலைகள் இருப்பதுபோல் பரபரவென்று கிளம்பிப் போனார்கள்.…எண்ணிலடங்காப் பொருட்களை…அவைகளின் தேவைகளை உணராது அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து சேருவார்கள். பாதிக்கு மேல் வீணாகும். இடம் அடைந்ததுதான் மிச்சம்.   இந்தத் தலைமுறை செய்யும் எத்தனையோ விரயங்களில் இதுவும் ஒன்று. காசுக்கு ஏது மதிப்பு? அள்ளிவிட்டதுபோக மீதம்தான்.

ஓய்வூதியம் இல்லா இவர்கட்கு நாலு காசு சேர்த்து வைத்துக் கொண்டால்தானே ஆச்சு? அந்த புத்தி, தெளிவு, அக்கறை எவனுக்காச்சும் இருக்கா?  சினிமால காண்பிக்கிற ஆடம்பரத்தையெல்லாம் நடப்பு வாழ்க்கைலயும்  கொண்டு வர முடியுமா? ஒரு நிதானம் வேண்டாம்?  வெறும் பொழுதுபோக்கும், கும்மாளமும்தான் வாழ்க்கையா? ரத்தம் சுண்டிப் போச்சுன்னா அப்புறம் என்ன பண்ணுவாங்களாம்? ஆஸ்பத்திரில போய் படுத்துக்குவாங்களா? எண்ணி எண்ணி மறுகுகிறார். பாகேஸ்வரியை விடத் தானே அதிகம் இவர்கள்பற்றி வேதனைப் படுவதாய் உணர்ந்தார். இந்த மனசுதான் எதையெதையெல்லாம் நினைத்து  அல்லாடுகிறது?

சும்மாக்கிடந்து துருப்பிடிக்கிறதை விட வேலை செஞ்சு தேயுறது மேல்.. என்று பலமுறை கோபமாய்ச் சொல்லியிருக்கிறார். அது அந்தப் பெண் இந்த வீட்டுக்கு வந்த புதிதில்  சுறுசுறுவென்று கோபப்பட்டுச் சொன்னது. காதில் வாங்கினால்தானே? தனக்குத்தான் சொல்கிறார் என்ற புரிதலே இருக்காது போலிருக்கிறது. எதையும் நேரடியாய் மட்டையடியாய் அடித்தால்தான் மண்டையில் ஏறுமோ என்னவோ?

துரும்பை நகர்த்த மாட்டாங்குதே? ஆணியடிச்ச மாதிரி ஒரேயிடத்துல அசையாம உட்கார்ந்திருக்கே…? எப்படிச் சொல்வது? வாய்விட்டுச் சொன்னால் சண்டைதான் மிச்சம். அவனுக்குமே பிடிக்கவில்லையே? சதா நொய்…நொய்யின்னுட்டு…என்று முனகுகிறானே? அம்மா அடுப்படியில் கிடந்து சாகிறாளே என்கிற கரிசனம் வேண்டாம்? புதுப் பொண்டாட்டி மயக்கம்.

கொஞ்ச நாளில் அந்த வேகமும் இவருக்குத் தணிந்துதான் போனது. யாரையும் யாரும் சொல்லித் திருத்த முடியாது என்பதைப் புரிந்து அமைதியாகிப் போனார். ஆனால் மனசு புழுங்குவது குறையவில்லையே? நமக்குப் பின் நலமாய், வசதி வாய்ப்பாய், ஆரோக்கியமாய் இருகக வேண்டுமே என்கிற ஆதங்கம்தானே? ஓடியாடி வேலை செஞ்சாத்தானே உடம்புக்கு நல்லது. கொஞ்சமேனும் இயக்கம் வேண்டாமா?

அவுங்க வீட்டுல அது அப்டிப் பழகியிருக்குடி….இங்க வந்த பிறகு திடீர்னு மாறணும்னா…காலைல ஆறுக்கு எழுந்திரின்னா எப்படி விழிக்கும்? அந்தப் பத்துமணிங்கிறது…கொஞ்சம்கொஞ்சமாய்த்தான்குறையும் இதையெல்லாம் நாம பார்க்கத்தான் முடியுமே தவிர, சொல்ல முடியாது. அவன்தான் சொல்லணும். நம்ம பிள்ளை. அவனே கம்னு இருக்கான். அப்புறம் எப்படி நாம சொல்றது? சொல்லி சண்டையிழுக்கச் சொல்றியா?

அவன் சொல்லத் தைரியமில்லாமல் இருக்கிறானா அல்லது பயந்து கிடக்கிறானா? புதுப் பெண்ணின் மோகத்தில் திளைத்திருப்பவனுக்கு மற்ற எதுவும் பெரிதாய்த் தெரியாதே? அதைச் சுட்டிக் காட்டினால் நாம்தான் குற்றவாளியாவோம்.

இன்னொரு  வீட்டுக்குப் போகும் பெண்ணை இப்படியா வளர்ப்பது? அந்த அப்பன்காரனுக்கு வெட்கமில்லையா? எவ்வளவு பொறுப்பா வளர்க்கணும் ஒரு பெண் பிள்ளையை? என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கணும்?  சொல்லி என்ன செய்ய? நாம கவனிச்சிருக்கணும்…எப்பப் படுக்கும்…எப்ப எழுந்திரிக்கும்? சமைக்குமா… அடுப்படிப் பக்கமாச்சும் போகுமா? ஒரு காப்பித்தண்ணியாச்சும் போடத் தெரியுமா? அட…நமக்குச் செய்ய வேண்டாம். அவனுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கவாச்சும் துப்பு வேணாமா? சண்டிக் குதிர மாதிரி அந்த அறைக்குள்ளயே ஒண்டிக் கிடந்தா எப்படி?  ஆறு மாசம் கூடவே இருந்து பார்த்தாத்தான் இதையெல்லாம் கண்டு பிடிக்க முடியும். அது சாத்தியமா? எங்கும் சாத்தியமில்லை. தோராயமாய் ஒரு முடிவுதான் எடுக்க முடியும். பலரும் அப்படி எடுத்துத்தான் திண்டாடுகிறார்களோ?

சின்ன வயசுல எல்லாப் பிள்ளைகளும் அழகாத்தான் தெரியும்…வயசுப் பசங்களுக்கு அந்த அழகு கண்ணை மறைச்சிரும். அதனாலதான் பெரியவங்க பார்த்து முடிவு செய்யணும்னு சொல்றது. நாமளும் அதத்தான் பார்க்கிறோம். கண்ணு. காது, மூக்கு, வாய், சிரிப்பு, காலு கையின்னு…பார்த்து மகிழ்ந்திடுறோம்.  திருப்தியடையறோம். ஆனா பேச்சு எப்டியிருக்குன்னு, பக்குவம் தெரியுதான்னு கணிக்க முடியறதில்லை. ஆணும் பொண்ணும் போய் தனியா நின்னு பேசிட்டு வர்றாங்க..அது அவுங்களுக்குள்ள ஈர்ப்புல முடிஞ்சு போயிடும்…நடைமுறை வாழ்க்கைக்கு உதவுறதக் கணிக்க முடியறதில்லை…அதுலதான் பெரியவங்களும் கோட்டை விட்டுடறோம்…தனியாக் கூட்டிட்டுப் போய், எப்டிப் பேசுதுன்னு அறிய  பெரியவங்க கேள்வி கேட்டா…அது தப்பால்ல போயிடுது?

இப்போது சொல்லி என்ன செய்ய? எல்லாமும் முன்னப்பின்னதான் இருக்கும். எதுவும் உறன்ட்ரட் பர்சன்ட் பெர்ஃபெக்ட் கிடையாது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…-இதைத்தான் இவர் விடாமல் சொல்கிறார்.

து நாள் வரைக்கும் மூணு பேருக்குச் செஞ்சேன். இனிமே இந்த மகராணிக்கும் சேர்த்து வடிச்சிக் கொட்டணும் போல்ருக்கு? தலேலெழுத்தா எனக்கு? நல்லா வந்து வாய்ச்சிதே….? நமக்கு அறிவில்லே.யாரச் சொல்லி என்ன பயன்? நம்ம பையன் பாடுதான் திண்டாட்டம்…..காலம் பூராவும் எப்படிச் சமாளிக்கப் போறானோ?

உன் பையன் மட்டுமா திண்டாடுறான்…நாமளும்தான்…அவ்வளவுதான் உனக்குத் தெரிஞ்சிது…இந்தக் காலத்துப் பிள்ளைகளக் கட்டுனவன் பாடு பூராவும் இந்த ரேஞ்ச்தான்…இந்த மட்டுக்கும் ஓட்டல்ல போய் டிரிங்ஸ் அடிச்சிட்டு டான்சாடாம இருக்குதுங்களேன்னு நினை…அவுங்க வேலை பார்க்குற கம்பெனி அன்யூவல் டே கொண்டாடுறாங்களே…அப்ப என்ன நடக்குதுன்னு நினைச்சே…இதே ஆட்ட பாட்டம்தான்….இந்தப் பொண்ணு ஆடுறதயெல்லாம் நீ பார்த்தேன்னா…நீ ஆடிப் போயிடுவே… உறார்ட் அட்டாக்கே வந்திடும் உனக்கு…! நம்ம இருக்கிறதையே மறந்து ஆட்டம் போடுமாக்கும். ஒரு மரியாதையேயில்லையேன்னு நீ நினைக்கக் கூடாது…!

என்னங்க…என்னென்னமோ சொல்றீங்க…? நான் பார்க்கலியே?

நீதான் வரல்லியே…இந்த ஐ.டி. கலாச்சாரம் இதத்தான் வளர்த்து விட்டிருக்காக்கும்…அவ அவ  தன்னோட புருஷனோடதான் ஆடுறாளான்னெல்லாம் நீ கேட்கப் படாது…யாரோடவேணாலும்            ஆடலாம்…பாடலாம்…குலுங்கலாம்…குலுக்கலாம்…அந்தளவுக்குக் கேவலமாப் போச்சு இப்போ….உருப்படியாச் சொல்லப் போனா…வேலைக்குப் போகாத, ஒரு கிராமத்துப் பெண்ணா பார்த்துக் கட்டி வச்சிருந்தோம்னா நிம்மதியான பாடாயிருந்திருக்கும்….

அது வந்திச்சின்னா அதென்ன லட்சணமாயிருக்குமோ? இதாச்சும் பார்க்கிற வேலைல நாலு காசு கொண்டு வரும்…நாளப் பின்ன நம்மளுக்குப் பிறகு கொஞ்சம் வசதி வாய்ப்பா இருப்பாங்க….வெறும் பிள்ளப் பூச்சியக் கூட்டியாந்து என்ன செய்ய?

பார்த்தியா பார்த்தியா…கிராமத்துப் பொண்ணுன்னவுடனே என்னமோ சொல்றியே? அதுலயும் நம்பிக்கையில்லையா? இந்தப் பேச்சை இத்தோட விட்டிடு…அவ்வளவுதான் …மேற்கொண்டு ஏதாச்சும் சொல்லப் புகுந்தேன்னு வச்சிக்கோ, விபரீதமாகி அப்புறம் எதுல போய் நிக்கும்னு சொல்ல முடியாது. யுத்த களம் ஆரம்பமாயிடும் பிறகு…! அப்புறம் அது சரியாக ஒரு மாசம் ஆகும்…பழி நம்ம மேலதான் விழும்…ஜாக்கிரதை…! மாமனார், மாமியார் கொடுமைன்னு கெட்ட பேர்தான் வரும்…

கொஞ்சம் அதிகமாகவே சொல்கிறோமோ என்றிருந்தது இவருக்கு. ஒரு மூன்றாவது நபரைச் சொல்வது போல… தன் மருமகப் பெண்ணைத் தானே நம்பிக்கையில்லாமல் பேசுவது சரியா? அது மருமகளாய் இந்த வீட்டோடு ஒன்றி விட்டதா? இன்னும் வேற்றாள் மாதிரித்தானே ஒதுங்கிக் கிடக்கிறது. ஆளும் ஒட்டவில்லை. மனசும் ஒட்டவில்லையே?

நான் செய்றேன்…நீங்க உட்காருங்க…என்று ஒரு நாளைக்காவது வந்து நின்றிருக்கிறதா? அட அது கூட வேண்டாம். அம்மா..காய் நறுக்கட்டுமா? இன்னிக்கு டிபன் நான் செய்யட்டுமா? சட்னி அரைக்கட்டுமா?  இப்டி ஏதாச்சும் உபகாரமாவது உண்டா? கிட்ட வந்தா ஒட்டிக்குமோன்னு  ஒதுங்கியே கிடந்தா? இந்த வயசுக்கு வேலை செய்யாமே சோம்பி இருத்தல் தகுமா? ஆபீஸ் வேலை மட்டும் பார்த்தா போதும் போல்ருக்கு….லீவு நாள்ல கூட அண்டப்டாதா? இனிமே நமக்கு இந்த வீடுதான்…இவங்களோடதான் காலட்சேபம்…கழிச்சாகணும்…இவங்கதான் நம்ம உறவுங்கிற  நெருக்கமான எண்ணமே வந்த மாதிரித் தெரிலயே…? அந்தப் பக்குவத்துக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தாத்தானே அது சாத்தியம்?

எதுவும் புலம்பாத….அந்தப் பொண்ணு காதுல விழுந்துடப் போவுது…சுருட்டி மடக்கி சூட்கேஸ் எடுத்திட்டுக் கிளம்பிடப் போகுது…அப்புறம் தனிக்குடித்தனம்தான் பார்த்துக்கோ….உன் பையன்தான் சமைக்க வேண்டியிருக்கும்…! நம்ம கூட இருக்கச்சே இப்போ அவனை ஸ்பெஷலா கவனிக்கிற நீ…அவனும் அம்மா…அம்மான்னுட்டு உங்கிட்டதான் எல்லாத்தையும் கேட்கிறான்…அவளக் கண்டுக்கிறதேயில்லை அதைக் கவனிச்சியோ…? தன் பாடு கழிஞ்சாச் சரின்னு அவன் இருக்கான்.

அப்புறம்? எம் பிள்ளை எப்டியிருப்பான்? எம்மேலே பாசமா இருக்கிறதுல என்ன தப்புங்கிறேன்? அவன் சப்போர்ட்லதான் நான் தைரியமா வளைய வரேன்…

இந்த பார்…இதெல்லாம் வெட்டிப் பேச்சு…தெரிஞ்சிக்கோ…என்னைக்கு அவனுக்குக் கல்யாணம் ஆச்சோ அன்னைலர்ந்து அவன் அவளோட ஆளு…! அதுதான் சரியும் கூட…நாம என்ன ஆயுசு முழுக்க கூட இருக்கப் போறமா? என்னைக்கு திடீர்னு தனிக்குடித்தனம்ங்கப் போறானோ? யாருக்குத் தெரியும்? நாமதான் இன்னும் எத்தனை நாளைக்கு? மனச விலகலா வச்சிக்கப் பழகிக்கோ…!

எம் பையன் அப்டியெல்லாம் தப்புப் பண்ண மாட்டான்….உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்…-வார்த்தைகளில் பெருமை ஜொலித்தது.

நினைச்சிட்டிரு….இந்த மாதிரி அசட்டு அம்மாக்கள் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கேன்…கேள்விப்பட்டிருக்கேன்…அவனா வாய்விட்டுச் சொல்லு முன்னாடி நாமளா கழன்டுக்கிறதுதான் கௌரவம். அதத் தெரிஞ்சிக்கோ…நாமளே அவங்களைத் தனிக்குடித்தனம் வச்சு, இருங்கன்னுட்டு வெளியேறதுதான் நமக்குப் பெருமை. அப்பத்தான் அவங்களுக்கும் எல்லாமும் பழகும். அனுபவம் கைகூடும். வரவு செலவுகள் புரியும்.  தனியா குடும்பம் நடத்துறதுல இருக்கிற கஷ்ட நஷ்டங்கள் தெரியவரும்.  எல்லாத்துக்கும் பழகி ஒரு நிதானத்துக்கு வர ஏதுவாயிருக்கும். இப்போ அதைக் கெடுக்கிற நீ…!  பிடியா அடுப்படிய விட்டு நகராம அடம் பிடிக்கிறே…அது ஒரு நாள் பழி சண்டைல வந்து நிக்கப் போகுது…அன்னிக்குக் கேவலப்படப் போறே…!

தனிக்குடித்தனம் போனா அந்தப் பொண்ணு வீட்டுல சமைக்காதாக்கும். எல்லாம் வெளிலர்ந்துதான் வரும். வயிறும் உடம்பும் கெட்டுப் போகும் அவனுக்கு….

அதுக்குக் கெட்டா பரவால்லியா? அதயும் சொல்ல மாட்டேங்கிறே…? நாளைக்கு குழந்தை பெறப் போறது அவனா அவளா? அதுக்கும் உடம்பு நல்ல ஆரோக்கியமா இருக்கணும்தானே? நம்ம வம்ச வாரிசைக் கொடுக்கப் போறது அதுதானே?

தன்னோட அம்மாவக் கொண்டு வச்சிக்கிது. உனக்கென்ன? அவுங்க சமைப்பாங்கல்ல? மனசுக்கு அதுதான் சமாதானம் எந்தப் பெண்ணுக்கும். உனக்கு ஒரு பெண்ணிருந்தா அப்பத் தெரியும் அந்த அருமை…!

அதெல்லாம் நடவாது….அவுங்க என்னால முடியாதுன்னுட்டாங்களாம். அது தெரியாதா உங்களுக்கு? அது பெரிய மேனாமி
னுக்கி….! தேர் மாதிரி அசைஞ்சிண்டு நின்னுண்டிருக்கும்…

 போகட்டும்…இவங்களுக்கென்ன காசுக்கா பஞ்சம்? தினசரி வெளிலதான்…எழுதி வச்சிக்க… சூரை விட வேண்டிதானே? ரெண்டு பேர் சம்பாத்தியம்னா சும்மாவா? ஒருத்தர் சம்பளம் பூராவும்  வயித்துக்குப் போனாலும் இன்னொருத்தர் துட்டு மிஞ்சுமே…?  இன்னிக்குத் தேதிக்கு எந்தப் பொம்பளை வீட்டுல சமைக்கிறா? ஓட்டல்ல ராத்திரி ரெண்டு மணிக்குத் திங்குறதப் பார்த்திருக்கியா? வெளில காத்துக் கிடந்து டோக்கன் வாங்கி பழி கிடக்கானுங்க..காலம் தறிகெட்டுப் போயிடுச்சாக்கும்…!  குடும்பம் குடும்பமா நடு ராத்திரிக்கும் மூணாம் ஜாமத்துக்கும் ஓட்டல்ல தவம் கிடக்குதுங்க…திங்குற நேரம், தூங்குற நேரம் எல்லாமும் மாறிப் போச்சு…வியாதிகள் எப்படிப் பெருகிச்சின்னு நினைக்கிறே? இந்த மாதிரி எல்லாமும் தலை கீழா மாறித்தான்…ஆஸ்பத்திரிகள்லாம் நிரம்பி வழியுது…

பேசிப் பேசி ஓய்ந்ததுதான் மிச்சம். எதுவும் முன்னேற்றமில்லை.

ரெண்டு பேர் மனசும் தவியாய்த் தவித்தது என்பதுதான் உண்மை. ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் என்று பேர். ஆறுதல்பட்டால்தானே? இப்படிக் கூறுகெட்டுப் போய் ஒரு கல்யாணத்தப் பண்ணி பையன் வாழ்க்கையைக் கெடுத்திட்டமே என்று தீராத வயிற்றெரிச்சலில் கிடந்தார்கள். எதைச் சொல்வது எதை விடுவது? நடை உடை பாவனை என்று எதை நினைத்தாலும் இவருக்கு ஒட்டவில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொன்றாய் தவிர்க்க முடியாமல் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கிறதுதான்.

இந்தக் காலத்துப் பெண்கள் அணியும் அந்த நைட்டியே இவருக்குப் பிடிப்பதில்லைதான். தன் வீட்டில் நைட்டி அணியும் பெண்ணா? அதிர்ந்தார். அந்த அவலத்தை நைட் மட்டும் அணிந்து கொண்டால் போதாதா? தொலையுது என்று விடலாம்தான்.  நாள் பூராவுமா அதோடு திரிய வேண்டும்?  உள்ளே பாவாடை அணிந்து மேலங்கியாக இதை அணிவார்களா அல்லது இது மட்டும்தானா? எப்படிக் கூச்சமில்லாமல் இருக்கிறார்கள்? அவர்களுக்கே கூச வேண்டாமா இது? அந்த டிரஸ்ஸோடு ஃப்ரீயாகப் பழகுகிறார்களோ?

பாகேஸ்வரியைக் குழந்தை பிறப்பின்போது மருத்துவமனையில் இந்த உடையோடு சில நாட்கள் பார்த்ததோடு சரி.  அங்கிருந்து வீட்டுக்குக் கிளம்பும்போதே புடவையோடுதானே அடியெடுத்து வைத்தாள். இந்தப் பாழாய்ப் போன நைட்டியை எவன் கண்டு பிடித்தான்?

அட…தூங்கி எழுந்தாச்சா…கழட்டி வீச வேண்டிதானே? அதோடயேவா நாள் பூராவும் அலையறது? கீழே குப்பை போட என்று கூட இதோடுதான் ஓடுகிறது அந்தப் பெண். இதுதான் இப்படியென்றால் அடுக்ககத்தில் உள்ள வேறு சிலரும் இப்படித்தானே திரிகிறார்கள்? ஐநூறடி தூரத்தில் உள்ள கடைக்குப் போய் அவசரத்துக்குப் பால் கூட வாங்கி வருகிறார்களே? வரிசையாய் இரு பக்கமும் இருக்கும் வீட்டிலிருப்பவர்கள் பார்க்க மாட்டார்களா?  வாசலில் வரும் வண்டிக்காரனிடம் நின்று காய்கறிகளை சாவகாசமாய் லஜ்ஜையின்றிப் பொறுக்கி எடுக்கிறார்களே? அவனுக்கும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதோ என்னவோ? அல்லது மரத்துப் போயிருக்கலாம்.  அந்த ஆளுக்கு இருக்கும் பக்குவத்தைத் தானும் தனக்குள் வரவழைத்துக் கொள்ள வேண்டுமோ? லகிடு மாதிரித் திரிகின்றன ஒவ்வொன்றும்.  யாருமே இந்த உடையை அப்படியொன்றும் பொருட்படுத்தியமாதிரித் தெரியவில்லையே? நான்தான் இப்படித் தவிக்கிறேனா?

 உலகமயமாக்கலின் விரிந்த கலாச்சார வெளியில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் மாறிப் போயின? அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கான உடைகள்…! சல்வார் கமீஸ் என்று ஒரு உடை இருந்தது என்றுதான் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. மூன்று துண்டுகள் கொண்ட இந்திய இன அணியாக அது கருதப்பட்டது. ஒரு கமீஸ், ஒரு சல்வார்…அதாவது ஒரு ஜோடி கால்சட்டை மற்றும் ஒரு துப்பட்டா…அதாவது தாவணி என்று சொல்லலாம்…அந்த டிரஸ் கூடப் பரவாயில்லைதான். இன்றைய சிக் ஆடைகளுக்கு அவை எவ்வளவோ மேல்  என்றுதான் தோன்றுகிறது.  கவர்ச்சியும் அழகும் ஊருக்கெல்லாமா வெளிச்சம் போட வேண்டும்? புருஷன் பார்த்தாப் போறாதா?

அதுவும் தன் மருமகளாய் வந்த பெண் இப்படி டிரஸ்ஸில் திரியும் என்று இவர் கனவில் கூடக் கருதவில்லை.  கல்யாணத்தின் போதே பலத்த சந்தேகம் வந்து விட்டது இவருக்கு? இதென்னடா இது வம்பாப் போச்சு? ஆளாளுக்கு இப்படி டான்ஸாட ஆரம்பிச்சிட்டாங்களே? குதி குதின்னு குதிக்கிறாங்களே…போதாக் குறைக்கு நம்மள வேறே இழுக்குறாங்க…சும்மா வாங்க…இன்னைக்கு ஒரு நாத்தானே? – ஒரு முறை முறைத்தாரே பார்க்கலாம். கேட்டவன் கூட்டத்தில் காணாமல் போனான். மாப்பிள்ளை அழைப்பிற்கு  காரில் கோயிலுக்குப் போய்த் திரும்புகையில் என்ன ஆட்டம் பாட்டம்? அட…நம்ம பய ராகவனும் சேர்ந்தில்ல குதிக்கிறான் வெறி பிடிச்ச மாதிரி?

டாய்ய்ய்ய்…! ஓங்கி நிலமதிரக் கத்தி பூமியை மிதித்து எழும்ப வைத்து அந்தக் கும்மாளத்தை நிறுத்த வேண்டும் என்கிற அளவுக்குக் கோபம் வந்து விட்டது இவருக்கு. எப்படி அந்தக் கணத்தைச் சமாளித்தார் என்றே தெரியவில்லை. ஏதோ சின்னப் புள்ளைங்க…ஆடிட்டுப் போகட்டும்…விடுங்க…என்றார் ஒருவர். உளறாதே என்று கர்ஜித்தார். …மனது தாளவில்லை.

அட…புரோகிதர் மந்திரம் சொல்ல விட்டாங்களா?  அதுக்குள்ளயும் எத்தனை ஃபோட்டோக்கள்?எவ்வளவு குறுக்கீடுகள்?  அந்த மந்திரங்களின் புனிதமான அர்த்தங்களை யாரேனும் உள் வாங்கினார்களா? வெறுமே மந்திரத்தை சம்பாவனைக்காக ராகமாய் உச்சரித்து விட்டுப் போகாமல் அதற்குத் தெளிவாய் அர்த்தம் வேறு சொன்னாரே மைக்கில். அதன் அருமை உணர்ந்தார்களா எவரும்? அந்தப் பாண்டித்யத்தை மதிக்க வேண்டாமா? என்ன ஒரு தீட்சண்யம்?  அதை யாரேனும் காது கொடுத்துக் கேட்டார்களா? நெருப்பை சாட்சியாய் வைத்து மந்திர உச்சாடனங்களை நிறைவேற்றி, அனைத்துப் பெரியோர் முன்னும் தாலிகட்டும் அந்த நிகழ்வு என்ன வெறும் சம்பிரதாயச் சடங்கா? எவன் உணர்கிறான் அதன் புனிதத் தன்மையை? எல்லாமும் ஆரவாரமாய்ப் போய் அமர்க்களமாய்  வெடித்து நிற்கிறது இங்கே!. காசு தண்ணீராய் இறைகிறது. அது ஒன்றுதான் மிச்சம்.

எல்லாக் கூத்தும் முடிந்து ஒரு வழியாய்  வீட்டிற்குக் கூட்டி வந்தாயிற்று. யப்பாடா….ஓய்ஞ்சிச்சிப்பா எல்லா ஆர்ப்பாட்டமும்….இனிமே கொஞ்சம் அமைதியாயிருக்கலாம்தான்…என்றால் இனிமேல்தான் பலதும் இருக்கிறது என்பது போலல்லவா நடக்கிறது இங்கு எல்லாமும்?  ஏன் தன்னால் இந்தச் சூழலை ஜீரணிக்கவே முடியவில்லை? தான் கூடப் பர வாயில்லையே…அவளானால் கொதித்து மருகுகிறாளே…? இந்த மன உளைச்சலிலேயே  அவள் படுக்கையில் ஏதும் விழுந்து விடாமல் இருக்க வேண்டுமே? ஈஸ்வரா…என் பாடு திண்டாட்டமாய்ப் போய் விடுமே…?

வாசலில் டாக்ஸி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அவர்கள்தான். வெளியில் என்று கிளம்பினால் கேப்ஸ்தான். ஆட்டோ கூட இல்லை. அதற்கும் காருக்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம்? ஆனாலும் அஞ்சாமல் இப்படிக் காசை எடுத்து வீசும் இந்தத் தலைமுறையை நினைத்து இவருக்குத் தலைமூர்ச்சைக்கு வருகிறது. விரைவில் சொந்தக் கார் வந்து நிற்கப் போகிறது.ஆர்டர் பண்ணியாச்சு. பணம் கொடுத்தாச்சு. எல்லாம் கண நேரம்தான். காசு காற்றில் பஞ்சாய்ப் பறக்கிறது.  அது இருந்தால்தான் கௌரவமாம். வீட்டிற்கு வீடு கார்…அடுக்ககத்தில் எல்லோருக்கும் கார் உள்ளது. தன் இடம் மட்டும் காலியாயிருக்கிறது. கேவலமில்லையா?

அஞ்சு பைசாவுக்கும், பத்துப் பைசாவுக்கும் டவுன் பஸ்ஸில் ஏறிச் சீரழிந்த காலங்களை நினைத்துக் கொண்டார் நவநீதன். தனது ஒவ்வொரு பைசா வரவுக்கும் செலவு எழுதி வைத்ததையும், அதிலேயும் வேண்டாத செலவு என்று கருதியவற்றை, அதன் தேவையையே விட்டொதுக்கியதையும், அன்று இருந்த கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் எண்ணி வியந்து கொண்டார். அது இரும்புக் கோட்டை. யாராலும் அசைக்க முடியாதது.

இன்று கட்டுக்களை மீறுவதுதான் வாழ்க்கை. சம்பிராதாயங்களை உடைப்பதுதான் முற்போக்கு என்று கொடி கட்டிப் பறக்கிறது.

தன் அறைக்குள் சென்று புகுந்து கொள்வதற்காகச் சட்டென்று எழுந்தார் நவநீதன். அது அவர் வழக்கம். அவர்கள் முன் உட்கார, அமர்ந்து சம்பாஷிக்க அவர் கூசினார்.  அதுதான் உண்மை. அவர்களின் நவநாகரீக உடைகளைக் கண்ணோட்டமிடாமல் அவரால் பேச முடிவதில்லை. அதன் மீது அவரின் வெறுப்பை அவரால் தவிர்க்க முடிவதில்லை. பெரியவர்கள் முன்னால், பெற்றோரின் முன்னால் அவர்கள் அப்படித் தோன்றுவது, தங்களை  வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வது மரியாதையற்ற செயலாய் அவருக்குத் தோன்றி அவரை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கியது. வயதானவர்கள் தனியாய் இருத்தல்தான் உத்தமம்.

நம் கௌரவத்தை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திலேயே அவர் அவ்வாறு எழுந்து செல்கிறார். தன்னை அந்த அறையில் முடக்கிக் கொள்கிறார். பாகேஸ்வரி அடுப்படியில் வேகிறாள். இவர் அந்த அறையினுள் தனிமையில் வேகிறார். ஃபேனுக்கடியில் கிடந்தாலும் மனசு வேகத்தானே செய்கிறது.  அந்த வேக்காட்டைக் காலம்தான் தணிக்க வேண்டும். மனம் சமனநிலை அடைய இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது. தலைமுறை இடைவெளி அதை சாத்தியமாக்குமா அல்லது புரட்டிப் போடுமா?  காலம்தான் பதில் சொல்ல வேண்டும் இந்தக் கேள்விக்கு.  

காலம் காட்டும் திசையின் வழி அவர்கள் பயணிக்கிறார்கள். அந்த நால்வரும்தான். யாருக்குச் சலுகை காட்டும் இந்த இயற்கையும் எதிர்காலமும்?

                                    ----------------------------------

           

                       

22 ஜனவரி 2026




“நனவிலி” நாவல்  - சென்னை புத்தகக் கண்காட்சி 2026 ஜனவரி 8-21
வெளியீடு.
புலம் பதிப்பகம், சென்னை.






 அட்டை மாறலாம்....

19 ஜனவரி 2026



“பிற்பகல் விளைந்தது” - சிறுகதைத் தொகுதி 
நன்னூல் பதிப்பகம், மணலி.  சென்னை 2026 ஜனவரி 20.01.2026 புத்தகக் கண்காட்சி வெளியீடு (ஸ்டால் 656)





 

17 ஜனவரி 2026



சென்னை புத்தகக் கண்காட்சி- 2026 நன்னூல் பதிப்பகம், ஸ்டால் எண்.656
கட்டுரைத் தொகுப்புகள்




பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-170-சென்னை புத்தகக் கண்காட்சி 2026 வெளியீடு  -நாவல்



2024 திருப்பூர் தமிழ்ச் சங்கம் பரிசு பெற்ற சிறுகதை நூல் சென்னை புத்தகக் கண்காட்சி 2026 ஜனவரி 8-21  நன்னூல் பதிப்பகம், ஸ்டால் 696





சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 2026 -நன்னூல் பதிப்பகம், ஸ்டால் 696

குறுநாவல்கள் தொகுப்பு



 

09 ஜனவரி 2026







நீர்த்தாண்டவம், நாவல்-பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-17




நன்னூல் பதிப்பகம், மணலி.


தினமணி - புத்தக அறிமுகம்



நிவேதிதா பதிப்பகம், சென்னை 

                                            புலம் பதிப்பகம், சென்னை





புஸ்தகா.கோ.இன்.    இ.புக்


                                                    புஸ்தகா .கோ.இன்.    வெளியீடு இ..புக்.மற்றும் பேப்பர் பேக்





பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-17