சிறுகதை பேசும் புதிய சக்தி மாத இதழ் (செப்டம்பர் 2026) பிரசுரம்
“மனசே…கொஞ்சம்
ரிலாக்ஸ்…!”
இந்தப் பெண் கொஞ்சம் அனுசரணையாய்
நடந்து கொண்டால் தேவலை என்றிருந்தது ரத்னகிரிக்கு.
அனுசூயா…அனுசரணை…அனுசரணை…என்று கத்த வேண்டும்
போலிருந்தது.
அனுசரணைன்னா என்னன்னு சொல்ற? அட்ஜஸ்ட்மென்ட்…அதானே…?
அது நான் பார்த்துக்கிறேன்ப்பா…யூ டோன்ட் ஒர்ரி….-என்றான் விஸ்வம்.
அனுசரணைன்னா வீட்டுக் காரியங்களுக்கு,
உனக்கு என்று ஒத்துழைப்பது.கோபப்படாம, சுமுகமா, சிரிச்ச முகத்தோட வீட்டுக் காரியங்கள்ல
பங்கெடுத்துக்கிறது…எனக்கென்னன்னு இல்லாம இருக்கிறது…-சொல்ல நினைத்தார். முடியவில்லைதான்.
பல சமயங்களில் அவன் பேச்சுக்கு அவள் மறுத்து
மறுத்துப் பேசுவதை சகித்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். அவரால் அதைச் சகிக்க முடியவில்லை. கேட்டுக்கொண்டு கம்மென்று தான் இருப்பதுதான் அனுசரணை
என்று அவன் நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது இவருக்கு.
அவன் ஒண்ணு சொன்னான்னா அதுக்கு சரின்னு
கேட்டுக்கிட்டா என்னம்மா? அத உடனே மறுத்துப் பேசியாகணுமா? எல்லாத்தையும் எதிர்த்து
எதிர்த்துப் பேசணுமா? – என்றார் ஒரு நாள்.
அதற்கு அந்தப் பெண் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
பதில் சொல்லாததே அதில் தனக்கு ஒப்புதலில்லை என்பதாகத்தானே அர்த்தம் என்று இவர் புரிந்து
கொண்டார். இதுவே பலதடவையானால் தன்னையும் அந்தப் பெண் எதிர்த்துப் பேசக் கூடும் என்றுதான்
தோன்றியது. தன் கௌரவத்தைத் தான்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? எனவே ஜாக்கிரதையாய்
இருந்தார்.
சும்மா நச்சு நச்சுன்னுக்கிட்டு? என்று
ஒரு சவுண்டு விட்டால் போதாதா? சின்ன வயசு…சொல்லாது என்பது என்ன நிச்சயம்?
ரொம்பச் சாதாரணமான விஷயங்களில் கூட அனுசூயா
தன் விருப்பப்படிதான் நடக்க வேண்டுமென்பதுபோல் பிடிவாதம் கொள்வது இவருக்கு ஆச்சரியமாயிருந்தது.
கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போவோம்னா இல்ல…நங்கநல்லூர்
அனுமார் கோயிலுக்குப் போயிட்டு வருவோம்ங்கிற…வடபழனி கோயிலுக்குப் போவோம்னா இல்ல…இங்க
இருக்கிற ராமர் கோயிலுக்குப் போனாப் போதும்னு மாத்துற…நான் எதச் சொல்லி நீ சரின்னிருக்க?
இது என்ன உறாபிட்….எல்லாத்தையும் மறுத்து மறுத்துப் பேசறது? நான் சொல்றத ஓகேன்னு கேட்டுட்டா குறைஞ்சு போவியா?
உன் தலக் கிரீடம் இறங்கிடுமா? ச்சும்மா….இப்டியே பேசிக்கிட்டு…எரிச்சலாயிருக்கு…!
சண்டை பெரிதாவதைக் கவனித்துக் கொண்டேயிருந்தார்
ரத்னகிரி. தான் குறுக்கே புகுவது சரியில்லை என்றே அமைதி காத்தார். அவர்களே பேசி அவர்களே
தீர்த்துக் கொள்ளட்டுமே! நாம் எதற்குக் குறுக்கே? இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்…!
போய்ச் சொல்லுங்க…அப்பத்தான் அந்தப் பொண்ணுக்கு
மண்டைல ஏறும்…இதென்ன பேச்சு அவன் சொல்றதைக் கேட்டுக்காம, எல்லாத்தையும் எதிர்த்து எதிர்த்துப்
பேசுறது? லூசா இது? என்று கோபம் பொங்க வந்து நின்றாள் பார்கவி.
தொட்டதுக்கெல்லாம் நாம குறுக்க போய் நிற்கக்கூடாது…அவுங்களாப்
பேசி ஒரு முடிவு பண்ணிக்கட்டும்…அவுங்க ரெண்டு பேருக்குள்ள சமனமானாச் சரி…விடு….என்றார்
இவர்.
இந்தக் கஷ்டமெல்லாம் எதற்கு? அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு. நமது மீதி வாழ்க்கை
நமக்கு. எதற்காகக் கூட இருந்து கழுத்தறுக்க
வேண்டும்? இது இவர் கருத்து.
கழுத்தறுப்பு அது இதுன்னு எதையாச்சும்
வாயில வந்ததைப் பேசாதீங்க…என்று அடக்கினாள் பார்கவி.
பையன் காதுல விழுந்தா வருத்தப்படுவான்.
அப்பா அம்மாவக் கூட வச்சிக்கணும்னு நான் இருக்கேன். இப்படிச் சொன்னா எப்படி? என்று
ஒரு முறை அவன் வருத்தப்பட்டது இவர் காதில் விழுந்திருந்ததுதான். ஆனாலும் அப்படி ஒட்டிக்
கொண்டிருப்பது சரியில்லை என்பதுதான் இவர் கருத்தாயிருந்தது. எப்படியோ விருப்பம்போல
இருந்துட்டுப் போகட்டுமே. நாம எதுக்குக் குறுக்க நிற்கணும்.?
விடிந்திருந்த இக்காலைப் பொழுதில் இதென்ன
சிந்தனை? என்று ஜன்னல் வழி வானத்தைப் பார்த்தார் ரத்னகிரி. வெண்மை மேகங்கள் அமைதியாக
நகர்ந்து கொண்டிருந்தன. மங்கலாகத் தெரிந்த நிலவை மறைத்து வேகமாய் அவை விரைந்தபோது அவற்றோடு
சேர்ந்து தானும் காற்றில் பறந்து வானத்தில் கலந்து விடக் கூடாதா என்று மனம் ஆதங்கப்பட்டது.
போதுமே…எல்லாம் பார்த்தாச்சு…இன்னும் என்னத்துக்கு…பூமிக்கு பாரமாய்?
பணி ஓய்வுக்குப்பிறகான
தன் வாழ்க்கை அத்தனை ஸ்வாரஸ்மாய் இல்லை என்றே தோன்றியது இவருக்கு. பத்தாண்டுகள் கழிந்து போன இவ்வேளையில் என்னென்னவோ
நடந்து விட்டதுதான். ஓய்வு பெற்ற ஒரு
வாரத்தில் காந்தி மியூசியத்தில் பதிவு செய்து கொண்டு ரெகுலராக யோகா வகுப்புகளுக்குப் போக
ஆரம்பித்ததை நினைத்துக் கொண்டார். எத்தனை அற்புதமான நாட்கள் அவை. விடிகாலை
நான்கு மணிக்குஎழுந்து பல தேய்த்து, ஒரு காபியை ஊற்றிக் கொண்டு (யோகாவுக்கு முன் வெறும் வயிறாய்த்தான் இருக்க வேண்டும் என்பது விதி…தண்ணீர் குடிக்கலாம்…ஆனால் பழக்க தோஷம் விட முடியவில்லையே…சூடாய் உள்ளே இறக்கினால்தான் சுறுசுறுப்பே வருகிறது. மாஸ்டரே வரும்
வழியில் விசாலத்தில் காஃபின்னா…? நரசுஸ்தான்….என்று இறக்கிக் கொண்டுதானே வருகிறார்)
அந்த தமுக்கம் சாலையில் நான்கு நண்பர்களுடன் ஐந்து ரவுன்ட் நடைப் பயிற்சியும், பின்னர்
வகுப்பு நடக்கும் பூங்காவிற்குள் போய் மேட் விரித்து சவாசனத்தில் பத்து நிமிடங்கள்
கிடப்பதும், பிறகு வகுப்புகள் ஆரம்பிப்பதும் எவ்வளவு ஆரோக்கியமான நாட்கள்? இத்தனை லேசாகவா
காற்றாய் மாறிப் போகும் இந்த உடம்பு? ஆச்சரியப்பட்டிருக்கிறார். அதிசயப்பட்டிருக்கிறார்.
அதுவே அவரை அங்கேயே கிடக்க வைத்தது.
மாஸ்டர்…உங்க உடம்பு ரப்பர் பேன்ட் மாதிரி
இருக்கு. எந்த ஆசனமானாலும் ரொம்ப ஈஸியா வளைச்சு நெளிச்சு நிமிர்ந்து குனிஞ்சு சொல்லிக்
கொடுத்துடறீங்க…எங்களுக்கு அந்தளவுக்கு உடம்பு
வளைய மாட்டேங்குதே…? என்று ஆரம்பத்தில் புலம்பினார் இவர். பின்னர் தொடர் பயிற்சியில்
தானா அப்படி மாறினோம் என்று அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு, மாஸ்டர் வராத நாட்களில்
வகுப்பு எடுக்கும் நிலைக்கு வந்ததும், யோகா மேளா நடந்த போது போட்டியில் கலந்து கொண்டு
சான்றிதழ் பெற்றதும்…தான் குடும்பத்தோடு மதுரையை விட்டு இந்தச் சென்னைக்கு வந்தது மாபெரும்
தவறு என்று இப்போது உணர்வதுமாய்த் தன் பொழுதுகள் கழிவதை நினைத்துக் கொண்டார் ரத்னகிரி.
பையன் ரூம்ல தங்கி, கண்ட கண்ட இடத்துல
சாப்டுக்கிட்டு, உடம்பக் கெடுத்துக்கிட்டு ஒரு ரெகுலாரிட்டி இல்லாமக் கழிக்கிறான்.
நாளைக்குக் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட சந்தோஷமா வாழ வேண்டியவன். அதுக்கு முன்னாடி
கட்டு செட்டா வளர்ந்து கிண்ணுன்னு நிமிர்ந்து நிற்க வேண்டாமா? என்று பார்கவியிடம் ஒரு
நாள் விவரிக்க ஆரம்பித்தபோதுதான் அந்த முடிவு பிறந்தது இவரிடம்.
எதுக்கு அவன் அங்கே தனியே கிடந்து ஓட்டல்ல
சாப்டுக்கிட்டு கஷ்டப்படணும்? நாம போய்க் கூட இருந்திடுவோம். வீட்டுச் சாப்பாடு அவன் உடம்பைத் தேத்தும்.
நாம கூட இருக்கிறது அவனுக்குப் பெரும் துணையா இருக்கும்…என்று சொல்லி இந்தச் சென்னைக்கு
வந்து சேர்ந்தே விட்டார்.
எல்லாம் சரிதான். ஆனால் அவனுக்குப் பெண் பார்த்து வைத்ததுதான் தப்பாய்ப்
போயிற்றோ என்று இப்போது தோன்றுகிறது. சென்னை தவிர்த்து உள் மாவட்டங்களில் ஜாதகம் தேடிப்
பார்த்திருந்தால் இன்னும் அவனுக்குப் பொருந்தி, குடும்பத்திற்கும் அனுசரணையாய் ஒன்று அமைந்திருக்குமோ என்கிற ஆதங்கம் அவரிடம் தொக்கி
நின்றது. தப்ப பண்ணி விட்டோமோ என்று மனது உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
வீட்டுக் காரியங்களில் உதவியாய் இருப்பது
என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது தன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போவதே பெரும்பாடு
என்றுதான் தோன்றியது. சாவகாசமாய் ஏழு மணிக்குப் படுக்கையை விட்டு எழுவதும், அடிச்சுப்
பிடிச்சு குளிச்சும் குளிக்காமலும் ஆபீஸ் கிளம்புவதும் அறவே அவனுக்குப் பிடிக்கவில்லைதான்.
அதென்ன தினசரி சாயங்காலம் வந்து குளிக்கிறது?
ஏன் அஞ்சு மணிக்கு எழுந்தா குறைஞ்சு போவியா? குளிச்சிட்டு ஃப்ரெஷ்ஷா ஆபீஸ் போகத் தெரியாதா?
குளிக்காமயே ஆபீஸ் போய், டிபன் சாப்பிட்டு, மதியம் சாப்பாட்டையும் உள்ளே தள்ளி என்ன
கெட்ட பழக்கம் இது? இப்படித்தான் உங்க வீட்டுல சொல்லிக் கொடுத்தாங்களா? ஏதோ ஒரு நாள்னா
பரவால்ல…தினமும் அப்படியே செய்தேன்னா? ஆரோக்கியக் கேடாக்கும்… - சொல்லித்தான் பார்த்தான்.
கேட்டால்தானே? அதென்ன அப்படி ஒரு தூக்கம்? திங்க…தூங்க…பாத்ரூம் போக…இப்படியேவா இருப்பாங்க?
என்று எகிறினான்.
வயசான எங்கம்மாவுக்கு உதவியா இருப்பேன்னு
பார்த்தா, இப்படி அடிச்சிப் போட்ட மாதிரித் தூங்கிறியே? இதுக்கா உன்னை இந்த வீட்டுக்கு
மருமகளாக் கொண்டு வந்தது? என்று புலம்பினான்.
காலைல சீக்கிரம் எழுந்திரிச்சி பால் காய்ச்சி,
டிகாக் ஷன் போட்டு வெந்நீர் போட்டு, இப்டி ஏதாச்சும் சில்லரை வேலைலயாவது உதவியா இருக்கலாமுல்ல…துரும்ப
நகர்த்த மாட்டேங்கிறே? இப்படியே இருந்தீன்னா உடம்
புல வியாதிதான் மிஞ்சும் பார்த்துக்கோ… - சொல்லத்தான் செய்தான் விஸ்வம்.
ஏதாவது பதில் சொன்னால்தானே? மூஞ்சியை மட்டும்
கடு கடு என்று வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய்ப் பாய்ந்தது அந்தப் பெண்.
காபியைக் குடித்துவிட்டு வட்டா டம்ளரை
அப்படியே மேஜை மீது வைத்துவிட்டுப் போனது. பழத்த உரித்து, தோல் டேபிளிலேயே கிடந்தது.
துணி மணிகள் அங்கங்கே தரையில் சிதறிக் கிடந்தன. குழந்தைக்கான விளையாட்டு சாமான்கள்
கால்களில் தடுக்கின. எது விழுப்பு, எது துவைத்தது என்கிற வித்தியாசம் தெரியாமல் ஆடைகள்
கிடப்பது அருவருப்பை எற்படுத்தின.
வேலைக்காரி இதையெல்லாம் எடுத்து வைப்பான்னு
போட்டது போட்டமேனிக்கே போறியா? எல்லாத்தையும் ஒழுங்கா எடுத்து அந்தந்த எடத்துல அடுக்கி
வைக்கணும்னு நீ பழகவேயில்லையா? அப்போ உங்க வீட்ல என்னதான் சொல்லிக் கொடுத்தாங்க? வேளா
வேளைக்கு வயிறு நிறையக் கொட்டிக்கிறது மட்டும்தானா? – கோபத்தில் பொரிந்து கொட்டினான்
விஸ்வம்.
கம்மென்று கல்லுப் பிள்ளையார் மாதிரி அது
உட்கார்ந்திருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை இவருக்கும் பார்கவிக்கும். இருவரும் மனதுக்குள்
அழுதார்கள். இப்படியொரு உதவாக்கரையை அவனுக்குக் கல்யாணம் பண்ணி அவன் வாழ்க்கையைக் கெடுத்து
விட்டோமே? என்று மனதுக்குள் மறுகினார்கள்.
சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலிதானே நீங்க…பணக்காரக்
குடும்பமா? அப்புறம் எப்படி இப்படி எனக்கென்னன்னு இருக்கே? உங்க வீட்டுல நீ வேலை செய்ததே
இல்லையா? அங்கயும் இப்படியே உட்கார்ந்து தின்னுதான் பழக்கமா? நல்லா வளர்த்திருக்காங்க
உன்னைய…அவமானம்…!
எவ்வளவோ சொல்லித்தான் இருக்கிறான். பொழுது
பொழுதாய்ச் சண்டைதான் மிச்சம். இங்கே நடப்பது அத்தனையையும் தன் தகப்பனிடம் அப்படியே
ஃபோனில் கொட்டுவது. அந்தாளுக்கோ எந்தப் பொறுப்பான புரிதலும் இல்லை. அவனே ஒரு தறுதலை
போலும் என்று நினைத்தார் ரத்னகிரி. எதையும் கணிக்காமல் நிச்சயம் பண்ணியதும், திருமணம்
பண்ணி வைத்ததும் தங்களுடைய தவறுதான் என்று எண்ணி நொந்து கொண்டார். தனக்கு வாய்த்த சம்பந்தி
இப்படியா இருக்கணும்?
புகுந்த வீட்டுல நடக்கிறதைப் பொறந்த வீட்டுக்குச்
சொல்றவ பொம்பளையே இல்லை…அதக் கேட்டுட்டு தப்புத் தப்பாச் சொல்லித் தர்றவன் ஒரு நல்ல
தகப்பனும் இல்லை…சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை மாதிரி அது உளற, இவன் பதிலுக்குக்
கத்த, இடையில் இவர் பூற…வீடே அல்லோல கல்லோலப்பட்டது சமயங்களில். சமயங்களிலென்ன, பல நாளும் அப்படித்தான் கழிந்தது.
அவ ஆபீஸ் போற பொண்ணு சார்…ஆபீஸ் வேலையையும்
பார்த்துட்டு வந்து வீட்டு வேலையையும் செய்யணும்னா எப்படி சார்? – என்று நீட்டி முழக்கிச்
சொல்லிக் கொண்டு வந்து நின்றார் ஒரு நாள்.
அது எங்களுக்கும் தெரியும். நீரொண்ணும்
சொல்ல வேண்டியதில்லை. கொஞ்சத்துக்குக் கொஞ்சம் உதவியா இருக்கலாமேங்கிறதுதான் எங்க தரப்பு.
அதுக்கே வழியில்லயே? புகுந்த வீட்டுல ஒரு பொண்ணு இப்படியாய்யா இருக்கும்? பொறுப்பா
நடந்துக்க வேண்டாம்? ஏதாச்சும் அதுக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா இல்லையா? இல்ல…உட்கார்த்தி
வச்சே சோத்தமுக்கியா வளர்த்து தள்ளி விட்டுட்டீங்களா? அட, சுமுகமான ஒரு பேச்சு இல்லய்யா
உம்ம பொண்ணுகிட்ட? நாங்க என்ன செய்றோம் அதை? எப்பப் பார்த்தாலும் அதென்ன கடு கடுன்னு
ஒரு மூஞ்சி? அந்த முகத்துல ஒரு சாந்தம், சிரிப்பு இன்னிவரைக்கும் ஒரு நாள் கூடப் பார்க்கலய்யா…! ஏதோ உறாஸ்டல்ல தங்கியிருக்கிற மாதிரி இருக்குது…கெஸ்ட்
மாதிரி எதையும் கண்டுக்காம, அலுங்காமக் குலுங்காமக் கழிச்சா…? எவன்தான்யா சகிப்பான்?
எல்லாம் போகப் போகச் சரியாகும் சம்பந்தி…கோபப்படாதீங்க…!
என்றார் கங்காதரன் என்ற அனுசூயாவின் தகப்பன். எதையுமே சீரியஸாக அவர் எடுத்துக் கொண்டதாகத்
தெரியவில்லை. அவருக்குப் பழகிப் போயிருக்கும். அத்தனையையும் அனுபவித்து விட்டுத்தானே
இங்கே தள்ளிவிட்டிருக்கிறார்? ஒருவேளை மனதுக்குள் சிரித்துக் கொள்வாரோ என்னவோ? தப்பிச்சம்யா
ஒரு வழியா…சரியான ஆளுங்களா வகையா மாட்டினானுங்க…!- மனதுக்குள் நிம்மதிப் பெருமூச்சு
விடுவாரோ என்னவோ?
எல்லாம் போகப் போகச் சரியாகுமாம்? எங்க
சரியாகுறது? வருஷம் அஞ்சாச்சுய்யா…ஒரு குழந்தையை வேறே பெத்துப் போட்டாச்சு… நான்தான்
கேட்குறேன்…நீங்க என்ன பெரிய ராயல் ஃபேமிலியா? சாதாரண மிடில் கிளாஸ்தான? ஒரு நடுத்தரக்
குடும்பத்துல நாளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போற ஒரு பொண்ணை இப்படியாய்யா வளர்ப்பாங்க.?
இன்னொரு வீட்டுக்குப் போகுற பொண்ணை எவ்வளவு அக்கறையா, பொறுப்பா வளர்த்தெடுக்கணும்?
அதென்ன எப்பவும் பெரிய கெத்து மாதிரித் திரியறது? எதாச்சும் உம்ம பொண்ணுக்கு சொல்லிக்
கொடுத்திருக்கிறீரா இல்லையா? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கா உம்ம பொண்ணு?
பெரிய திறமைசாலியா? அதோட ஆபிஸ் வேலையைப் பல சமயங்கள்ல எம் பையன் பார்த்துக் கொடுக்கிறான்யா…!
திடீர்னு வேலை போயிடுச்சின்னா, ரெஸ்யூம் போட்டு இன்னொரு கம்பெனிக்கு மாறிக்கிற திறமையுண்டாய்யா
உம்ம டாட்டருக்கு? வீட்டுல இருந்து வேலை செய்ற நாட்கள்ல அதோட மேலிடத்துலர்ந்து எவ்வளவு
திட்டு வாங்குதுன்னு எங்களுக்குத்தான் தெரியும்? மக்கு போல்ருக்குன்னு நாங்க நினைக்க
வேண்டியிருக்கு…இவ்வளவு மைனஸ் பாயின்ட்ஸ் இருக்கைல என்ன கெத்துக் காண்பிக்கிறது? பொத்திக்கிட்டு
சும்மாக் கிடக்க வேண்டிதானே? தொட்டதுக்கெல்லாம் எதிர்த்து எதிர்த்துப் பேசினா எவனுக்குத்தான்யா
பிடிக்கும்? திறமையும் காரியக் கெட்டியும் உள்ள பொண்ணு வாய் பேசினாக்கூடப் பொறுத்துக்கலாம்.
எதுவுமேயில்லை. வாய் ஜாலம் மட்டும் தெறிக்குது…எவன்யா சகிச்சிப்பான்?
கங்காதரன் தலையைக் குனிந்து கொண்டு அமைதியாய்த்தான்
கிடந்தார். தான் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை என்பது போலிருந்தது அந்த அமைதி. இம்மாதிரி
எத்தனை முறை சண்டை போட்டாயிற்று? எவ்வளவு சொல்லியாயிற்று? ஒரு மாற்றமும் இல்லை. பொழுது
பொழுதாய்ச் சண்டை சச்சரவு. ஒரு பிசாசைக் கொண்டு வந்து நடு வீட்டிற்குள் வைத்து விட்டோமோ
என்று உள்ளுக்குள் புழுங்கி மறுகினார் ரத்னகிரி. எப்படித்தான் இதற்குத் தீர்வு காண்பது?
யோசித்துக் கொண்டேயிருந்தார். தன் வீட்டு மருமகளை இப்படியெல்லாமும் நினைக்க வேண்டி
வந்துவிட்டதே, இது என்ன தலைவிதி? என்றும் புழுங்கினார்.
அந்தக் குழந்தைக்கு ஆய் அலம்பி விடுவதிலிருந்து
அதைக் காலடியில் கிடத்திக் குளிப்பாட்டித் துவட்டி, டிரஸ் மாட்டி விடுவது வரை அவனே
செய்து கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க இவருக்கு வயிறெரிந்தது. எல்லாம் தன் விதியென்று வரித்துக் கொண்டு விட்டானோ?
அடக்கத் தெரியாமல் அ டங்கியல்லவோ போகிறான். இதைத்தான் அட்ஜஸட்மென்ட் என்று நினைக்கிறானா?
அப்படியானால் அதன் பங்கு என்ன? படுக்கையில் இடம் கொடுப்பது மட்டும்தானா? அந்த ஆளுமைக்கே
அத்தனையும் அடங்கிக் காணாமல் போகுமா?
அப்பா…அவளைக் கொண்டு ஆபீசுக்கு
வண்டியேத்தி விட்டுட்டு வர்றேன்… குழந்தையைப்
பார்த்துக்குங்க…!-இதெல்லாம் தெளிவாத்தான் வருது….கடமையைச் செய்றானாம்! அவன் பொண்டாட்டிக்கும்
கடமையுண்டுன்னு தெரியாது போல்ருக்கு?
குடும்பத் தலைவன் குடும்பத்தைச் சுமக்க
வேண்டியதுதான். அதுதான் நியாயமும் கூட. ஆனால் கூடத் தோள் கொடுக்க ஆளே இல்லையென்றால்?
அதற்குத்தானே திருமணம் பண்ணி வைப்பது? கல்யாணத்திற்கு முன் எப்படி எப்படியோ விட்டேற்றியாய்
இருந்திருக்கலாம்தான். ஆனால் ஆஃப்டர் மாரேஜ் கொஞ்சமாவது பொறுப்பாய் வளைய வர வேண்டாமா?
பிறந்த வீட்டில் துள்ளித் திரிந்ததுபோலவேவா அப்படியே கிடப்பது? தான்தோன்றியாய் இருக்கும்
ஆம்பளைக்குத்தான் ஒரு கால் கட்டுப் போட்டால் எல்லாம் சரியாய்ப் போகும் என்பார்கள்.
இங்கென்னடாவென்றால் பொம்பளைக்கு அதைச் செய்யணும் போலிருக்கு. அதுதான் செய்தாயிற்றே…..கால்
கட்டுப் போட்ட இடத்தில் அது தானே கைக்கட்டும் போட்டுக்கொண்டு எனக்கென்ன என்று வலம்
வருகிறது.
குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு
கொஞ்ச ஆரம்பித்தார் ரத்னகிரி.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே…அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே…
சத்தம் போட்டு இந்த வரிகளை அவர் அனுபவித்துப் பாடிய போது குழந்தை இவரையே கூர்மையாய்ப்
பார்த்து சிரிப்பது போலிருந்தது. வேறே வழியில்லாமப் பாடுறியா தாத்தா? அட…கேள்விதான்
எத்தனை கூர்மை?
நீயாவது சிறப்பா வந்தாச் சரிதான்….என்று
அதைப் பார்த்து ஆதுரத்துடன் சொன்னார் ரத்னகிரி.
அவனுக்கென்ன ராஜ்ஜாவாக்கும்…முகத்துல இருக்கிற
தேஜஸ்ஸே சொல்லலியா? என் பேரன் உலகையே ஆளுவானாக்கும்…-என்று சொல்லிக் கொண்டே வந்து குழந்தையை
அவரிடமிருந்து வாரி எடுத்துக் கொணடாள் பார்கவி.
குழந்தைச் செல்வம் கொண்டாடும் இடத்திலே….-
இதுவும் இல்லாம இந்த உலகத்துல எத்தனை பேர்
கஷ்டப்படுறாங்க…வேதனைப்படுறாங்க! கடவுள் நம்மை நல்லாத்தான் வச்சிருக்கான்…! – என்று
மனதைத் தேற்றிக் கொள்வதுபோல் பகன்றார் ரத்னகிரி.
ஆமாம்…அதிலென்ன சந்தேகம்? தாமரைப் பூப்போல
பேரன்…சிரிப்பப் பாருங்க…கொள்ளை போகுது… என்று கூடவே திருப்தியாய் ஒத்து ஊதினாள் பார்கவி.
----------------------------



