26 ஜனவரி 2019

கி.ராஜநாராயணன் சிறுகதை-புறப்பாடு-வாசிப்பனுபவம்-மாயமான்-காலச்சுவடு க்ளாசிக்தொகுதி


               
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வாசிப்பனுபவம்   
உஷாதீபன்-கட்டுரை  
 சிறுகதை  “புறப்பாடு”   கி.ராஜநாராயணன்                                                               வாசிப்பனுபவம்   


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------         ,                                                     
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (காலச்சுவடு தமிழ் க்ளாசிக் சிறுகதைகள் தொகுப்பு- கி.ராஜநாராயணன்-“மாயமான்”                                                                         --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெவ்வேறு விதமாய் எப்படியெல்லாம் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்…தன் போக்கில், தன் இஷ்டத்தில் இருந்து கழித்திருக்கிறார்கள் என்பதை ஸ்வரஸ்யமாய் இவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும்.   கிராமங்களில் காலங்காலமாய் இருந்து வரும்  நம்பிக்கைகள், நடைமுறைகள் சில விஷயங்களில், சில பேர்களிடத்தில் எப்படித் தகர்ந்து போகின்றன, எப்படிப் பொய்யாகி விடுகின்றன என்பதும் இயல்பாய் நிகழ்ந்து விடும்போது அவை மிகுந்த ரசனைக்குரிய, மறக்க முடியாத நிகழ்வுகளாகி விடுகின்றன.
       ஒரு மனிதன் வயசாகி, தொண்டு கிழமாகி, உயிரோடு இருப்பது என்பது ரொம்பவும் கொடுமை. கூட இருந்த நண்பர்கள், உறவுகள், பழகிய மக்கள் என்று பலரும் அடுத்தடுத்து செத்துப் போவதைப் பார்த்துக் கொண்டே காலம் கழிப்பது பெரிய துரதிருஷ்டம்.
       ஆனால் கிராமங்களில் ஒரு சில பெரிசுகள் கடைசி காலம்வரை இப்படியிருந்து மதிப்பிற்குரியவர்களாய் மாறியிருக்கிறார்கள். அப்படி ஒருத்தர்தான் இக்கதையின் அண்ணாரப்பக் கவுண்டர்.
       பெரியவர் கி.ரா.விடம் அவரது உவமைகளையும், அதற்குப் பொருத்தமான மனிதர்களின் ஆகிருதிகளையும், நசிவு, நலிவுகளையும் ஆழ்ந்து கவனித்து ரசிக்க வேண்டும். போகிற போக்கில் படிப்பவர்களுக்குக் கூட ரசனை மேம்பட்டுவிடும்தான்.
       அந்த நடையில் அவ்வப்போது தடங்கலில்லாமல்  வந்து விழும் நகைச்சுவையையும் கவனித்துக் கொண்டே நகர வேண்டும்.
       ஒரு மனிதன் சாகக் கிடக்கும்போது அல்லது செத்துடுவான் என்று நினைக்கும்போது இவ்வளவு சிரிப்பா?
       ஒருவன் எப்போ சாவான் என்பது பலருக்கும் எதிர்பார்ப்பாகவும், சிலருக்கு அதுவே சிரிப்பாகவும் இருக்கும் விநோதம் இக்கதையில் நிகழ்கிறது.
        என்னத்துக்கு வாசிப்பனுபவம்? வரிக்கு வரி நான் சொல்லி ரசித்து, பிறகு அதைப் படிப்பதை விட நேரடியாய்க் கதையையே படித்து விடலாமே…! எளிய மொழியில்தானே சொல்லியிருக்கிறார்…? என்றும் தோன்றுகிறது. வாசக நண்பர்கள் தேடிப் படிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாசிப்பனுபவம்.
       அண்ணாரப்பக் கவுண்டர் இறப்பிலிருந்து தப்பிப்பதை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் பாருங்கள். முதலில் தகவல் இப்படிப் பரவுகிறது….
       அண்ணாரப்பக் கவுண்டர் – ஆள் தீந்து போயிட்டார்… - சொன்னவனும் சந்தோஷமாகச் சொன்னான். கேட்டவர்களும் சந்தோஷமாகக் கேட்டார்கள்.  நெசமாத்தான் சொல்லுதியா? – மத்தியில் ஒரு சந்தேகம்.  இடையில் என்ற வார்த்தையில்லை. மத்தியில் என்கிறார். கிராமத்து எழுத்து.
       அந்தாப் பாருங்க…பொய்யா சொல்லுதேன்…கயத்தாத்து மேளத்துக்கு ஆள் புறப்பட்டாச்சி….
       லேய் மக்காளி…மக்காளி… - பல்லைக் காட்டிக் கொண்டே வந்த அவன்…வாஸ்தவந்தான் என்றுவிட்டு வேகமாய்ப் போகிறான்.
       நம்ம அண்ணாரப்பக் கவுண்டர் ஆள் க்ளோஸ்….. – கிராமத்து ஜனங்கள் இப்படி ஆனந்தமாகச் சொல்லவும்  கேட்கவும் போதுமான காரணம் இருந்தது. அண்ணாரப்பக் கவுண்டரின் கையைப் பிடித்துப் பார்த்த பண்டிதன் சம்முகம் “சரீ்“ என்கிற மாதிரி தலையை அசைத்தான்.
       தலையை ஆட்டினால் தொடங்கி விடுவார்கள். முதல் காரியம் கட்டிலில் கிடப்பவனைக் கீழே எடுத்துப் போடுவது. இல்லையென்றால் கட்டிலையே ஆவி சுற்றிக் கொண்டிருக்கும். வேறு யாரும் பிறகு அதில் படுக்க மாட்டார்கள். அமாவாசை, பாட்டிமை (பிரதமை) கழிந்தது.
       கவுண்டர் ஒரு நாள் திடீரென்று கண்விழித்துப் பார்த்தார். கேட்குற கேள்வியப் பாருங்க…
       “எவண்டா என்னைக் கட்டில்லே இருந்து கீழே எறக்கிப் போட்டது….” என்று சத்தம் கொடுத்துவிட்டுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டு விட்டார். இந்தச் செய்தி பரவியதும் ஊரே சிரிப்பில் ஆழ்கிறது. பண்டிதனின் கணிப்பு பலித்தபாடில்லை.
       இத்தனைக்கும் நோய் நொடி  என்று ஒன்றுமில்லை. படுக்கையில் விழவில்லை. நல்ல வயசாகிவிட்டது. அவ்வளவே. எவ்வளவு என்று கேட்கக் கூடாது. தெரிந்தால்தானே…! பிறந்த நட்சத்திரம் கூடத் தெரியாது. அந்தப் பட்டியிலேயே வயசானவர் அவர்தான். மூன்று பெண்டாட்டிகள், ரெண்டு தொடுப்பு. அவர்கள் எப்பவோ செத்துப் போனார்கள். மகன்கள், மகள்கள் உட்பட. பேரன் பேத்திகள் சிலருக்குப் பல் விழுந்து விட்டது.சிலருக்கு நரையும், வழுக்கையும்.
       மன்னன் அண்ணாரப்பக் கவுண்டருக்கோ தந்தம் பன்னரிவாள்ப் பல்மாதிரி தேய்ந்து போனதே தவிர ஒன்று கூட உதிரவில்லை.
       நாப்பது நாளைக்குக் கோழிக்கறியும் பச்சை நெல்லுச் சோறும் போட்டா…இப்பவுங்கூட ஒரு கல்யாணம் பண்ணிக் காட்டுவேன்…
       இப்பவும் சத்தம்போட்டு, குரல் நடுங்காமல் பாட முடியும் அவரால். ஆளுகதான் சண்டைக்கு வருவார்கள்.
       முழு வயோதிகத்தினால் கம்பீரமும், உயரமும் உருவமும் வாடிய சருகுபோல் சுருண்டு வளைந்து சிறுத்து விட்டது. கட்டிலில் மூலை சேர்ந்து விட்டார். தேய்ந்து போன கலப்பை மாதிரி.
       என்னா ஒரு விவரிப்பு…!! ஒவ்வொரு பௌர்ணமியும் அமாவாசையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துதான் போகிறார்கள்.
       அந்தப் பெரிய உசிர் பிழைக்கவும் முடியாமல், சாகவும் முடியாமல் காலம் தாழ்த்துவதனால் பல காரியங்கள் தடை படுகின்றன. வந்த விருந்தாளிகள் திரும்ப முடியாமல்…கல்யாணம் காட்சி என்று வைக்க முடியாமல்….விவசாய வேலைகள் தொடங்க முடியாமல்….
       ஒரு நாள் திடீரென்று நிலைமை மோசமாகிறது. வைத்தியர் வருகிறார். நாடி பார்க்கிறார்.
       ஏதுகாரங்களையெல்லாம் செய்துரலாம். தூர இருக்கிற சொந்தக்காரங்களுக்குச் சொல்லிரலாம்…
பேரன் பேத்திகள் ஜாதகம் பார்த்து, “இந்தத் திசை விடுதி“, கர்மம் செய்வதற்கு வேண்டிய சட்டம் இருப்பதால் இந்தத் தடவை தப்பாது என்று நிச்சயிக்கிறார்.
       பந்துக்களுக்கும் தூர பந்துக்களுக்கும் கூட வரச்சொல்லியாகி விட்டது. பந்தல்போட, பெண்ணடிப் பாயசம் காய்ச்ச….-எல்லா ஏற்பாடுகளும் தடபுடல்….
       சுற்றிலும்  ஆட்கள் அமர்ந்து கிடக்க, ராப்பகல் கடந்து போகிறது. தேயிலைத் தண்ணி போட்டுக் குடித்து, வாலி மோட்சம் கதை படித்து…ஒரு நாளா ரெண்டு நாளா….ம்உறீம்….
       என்ன இப்படிப் பிடிவாதம் பண்றார்…… பிடிசாதகம் பண்றாரே கவுண்டர்….?
       சிலேப்பணம் கட்டுங்கய்யா…..
அப்படீன்னா….?
       பஞ்சுப்பால் விடணும்….என்ன பால் விட்டீங்க…?
பசுவம் பால்….
       எருமைப்பால் சொட்டு விடணும்…அதான் திக்காய் இருக்கும்…
       அப்டீன்னா ஆட்டுப்பால் விடலாமே…!
       சர்தான்…ஆட்டுப்பாலையும், பசுவம் பாலையும் விட்டு ஆள எழுப்பி உட்கார்த்திருவீக போல்ருக்கே…!
       எருமைக்கும் எமனுக்கும் எவ்வளவு சம்பந்தம்…? –மனசில் பலருக்கும் வியப்பு.
       காய்ச்சுறதா…இல்லயா…..பச்சைப்பாலே சிலாக்கியம்….
       எருமைப்பாலில் பஞ்சை முக்கி….பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள்….முத்தாத்தாவுக்கு திறந்திருந்த வாயில்…..
       தொண்டைக்கும் வாய்க்கும்தான் உயிர் ஊசலாடுகிறது. பாலினால் தொண்டையில் சிலேப்பனங்கட்டி கொஞ்ச நேரத்தில் உயிர் போய்விடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் எல்லோரும்.
       அப்பத்திக்கு இப்ப ஆள் கொஞ்சம் தெளிச்சியா இருக்காப்ல தெரியுது….-சொன்னார் ஒருத்தர்.
       ஏ….ஆமா…..!
       ஊர் முக்கியஸ்தர்கள் கூடுகிறார்கள். விசேஷ கேஸ் இது….குளுப்பாட்டி படுக்க வைக்க வேண்டிதான்….விளக்கெண்ணெய் கொண்டு வந்து தலையிலும் உடம்பிலும் அறக்கித் தேய்த்து தப்பணம் போட்டார்கள். மணி ராத்திரி பன்னெண்டு.
       கிணத்தடியில் கொண்டு உட்கார்த்தி, தண்ணீர் சேந்திச் சேந்தி கவுண்டரின் தலையில் கொட்டிக் கொண்டேயிருந்தார்கள். ரோட்டுக் கடை வைத்தியரும், கெப்பணக் கவுண்டரும் வெற்றிலை போட்டுக் கொண்டு, முத்தாத்தா கட்டிய கல் தொழுவைப் பார்த்தவாறே வந்து சேர, இடைவெளியில்லாமல் மூச்சு முட்டத் தண்ணி விடணும் என்பது தவற, கெப்பணக் கவுண்டருக்குக் கோபம் வர…..வீட்டுக்குள்ளே பொன்னுத்தாயி ஒரு அரைக்கால் ரூபாய் நாணத்தை எடுத்துப் புளி போட்டு விளக்கித் தயார் நிலையில் வைக்க, எ்ல்லோரும் சந்தோஷப் படுகிறார்கள்.ஒருத்தி நாடி கட்ட மல் துணி கிழித்து சரிபார்த்து வைக்கிறாள்.
தண்ணீர் விட்டவர்கள் அலுத்து அசந்து போக, நாடியைப் பார்த்த வைத்தியர் உள்ளே கொண்டு போங்கள் என்கிறார். 
நார்க் கட்டிலில் படுக்க வைத்து, அடியில் சாம்பிராணிப் புகை போட்டு….
கவுண்டர் பார்ப்பதற்கு இப்போது படு சுத்தமாக இருக்கிறார். சித்திரபுத்திர நயினார் கதையை ஒருவர் பாடுகிறார்…எல்லோரும் அசந்து அண்ணாக்கத்துக் கேட்கிறார்கள்.
மறுநாள்…அதற்கு மறுநாள்….அதற்கும் மறுநாள்…நாட்கள் ஆமையைப் போல் நகர்கின்றன. அந்த உடலில் உயிர் இழையோடிக்கொண்டே இருந்தது.
முதலில் பயந்தவர் வைத்தியர்தான். அவரது நாடி சாஸ்திரத்தைக் கேலி செய்வது போலிருக்கிறதே இது…!
கவுண்டருக்குப் பிடித்தமான பலகாரங்களைச் செய்து குழந்தைகளுக்கு விநியோகிக்கிறார்கள். குறிப்பாகப் பால் கொழுக்கட்டை…..
கெப்பணா…எனக்குப் பெரிய கவுண்டரைத் தெரியும்…அவரு அரும்பாடு பட்டுச் சம்பாரிச்ச நிலம்…அந்த எருவடிப் புஞ்சை…அங்க போயி கொஞ்சம் மண்ணை எடுத்துக்கிட்டு வா…அதைத் தண்ணில கரைச்சி ஒரு சங்கு ஊட்டு……தொட்டேரப்பக் கவுண்டர் இப்படிச் சொல்ல……
என்னவொரு சத்தியவாக்கு…! கூட்டம் விதிர்க்கிறது.
சொன்னபடி புகட்டுகிறார்கள். அந்த மண்ணைக் கரைத்துப் புகட்டியதாலோ அல்லது தற்செயலோ…மறுநாள் பின்னிரவில் அந்த விவசாயி அண்ணாரப்பக் கவுண்டர் காலமானார்.
விவசாயி என்கிற வார்த்தைப் பிரயோகம்….கவனியுங்கள்.
வயசானவர்கள் போனால் யாரும் அழக் கூடாது.இது சம்பிரதாயம்.
சத்தக் குழல், கொட்டு, மேளம் அந்த இசைப்புக் ஏற்ற மாதிரி சுற்றிச் சுற்றி வந்து ஆடும் பொய்க்கால் குதிரை…. – அமர்க்களமாய்ப் புறப்படும் ஊர்வலம்.
நொடி நிறைந்த வண்டிப்பாதை…லம்பல் அதிகம். குடிமகன், முறுக்கிய மாத்தை கவுண்டரின் மேல்நெற்றியில் இறுக்கிய கட்டு கொஞ்சம் நழுவியதாலோ என்னவோ வண்டியின் லம்பலில் கவுண்டரின் தலை இடது பக்கமாகவும், வலது பக்கமாகவும் ஆடிக்கொண்டே போகிறது….
மாட்டேன்…மாட்டேன்…..என்று சொல்வது போல……!!!!
சுந்தரராமசாமி சொல்கிறார்  =  அபூர்வமான அழகுணர்ச்சி, ரசனையில் திளைக்கும் மனோபாவம்,இவர் தமிழ் மண்ணுக்கே உரித்தான பழத்தோட்டம்…..வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல், கலை வன்மை…..!
இதற்கு மேல் நான் என்ன சொல்ல….?
                           ----------------------------------------------------

      
      
      
      
        


தி.ஜானகிராமனின் சிறுகதைகள் உஷாதீபன் - கட்டுரை “வேண்டாம் பூசணி” சிறுகதை வாசிப்பனுபவம்


        தி.ஜானகிராமனின் சிறுகதைகள்              உஷாதீபன் - கட்டுரை                              “வேண்டாம் பூசணி”    சிறுகதை    வாசிப்பனுபவம்                                       
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (தி.ஜானகிராமன் சிறுகதைகள்-முழுத் தொகுப்பு)
        தி.ஜா.ரா.வின் கதையைப் பற்றிச் சொல்ல நாமெல்லாம் ஒரு ஆளா? என்றுதான் தோன்றுகிறது. அதைப் படிப்பதற்கும்…ரசிப்பதற்குமே நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
      தகுதி இருக்கிறது என்று திருப்திப்படாமல், இல்லைதான் என்று வருத்தப்படாமல் ஆர்வம் மிகுதியில் எழுதத் தலைப்படுகிறேன். 


 

ஏதோ கொஞ்சம் ரசனையையாவது இறைவன் விட்டு வைத்திருக்கிறானே…! அம்மா, அப்பா மூலம் கிடைத்த அதை வீண் பண்ணலாமா?
      கண்ணில் நீர் துளிர்க்க, வரி வரியாய் விடாமல் படிப்பாளே அம்மா…! அந்தக் காட்சி மனதில் பதிந்திருக்கிறதே…!
      அருமை…அருமை என்று நாக்கை உள்ளுக்குள் மடித்து…கிர்…கிர்…என்று சத்தம் எழுப்புவாரே அப்பா…அது அவரின் ஆழ்ந்த ரசனையின் வெளிப்பாடுதானே…! அதில் துளியேனும் ஒட்டிக் கொண்டிருக்காதா எனக்கு?
      “வேண்டாம் பூசணி…”   - இதுதான் கதையின் தலைப்பு.
      ஆரஞ்சுப் பழத்தைப் பிழிந்து எடுத்தது போல் இருக்க வேண்டும் தலைப்பு என்பார் எழுத்துச் சித்தர் ஜெயகாந்தன். அப்படி அர்த்தப்படுகிறது இப்படைப்பின் தலைப்பு. வலியத் திணித்த தலைப்பு அல்ல. தானே வந்து பாந்தமாய் உட்கார்ந்து கொண்டது. கதை கூடி வரும்போது அந்தத் தலைப்புக்கு அப்படி ஒரு அர்த்தம் வெளிப்படுகிறது.
      யசானால் சின்னச் சின்ன  வேலைகள் கூட மனதுக்கு மாச்சலாய்த் தெரியும். உட்காருவதும், எழுவதும் கூட சிரமம்தான். அதிலும் போஷிக்க ஆள் இல்லையானால் ஏன் வாழ்கிறோம் என்றிருக்கும். உயிர் போகாதா? என்று மனம் வெறுக்கும்.
      வயதானவர்களுடைய பாடுகளை, சிரமங்களை உணர்ந்திருக்கிறீர்களா? அதை தி.ஜா.ரா. சொல்லிக் கேட்க வேண்டும்.
      வாசிப்பனுபவத்தைச் சொல்வதா அல்லது கதையையே படித்து விடுங்கள் என்று கொடுப்பதா? கதையையே படி என்றால் நமக்கிருக்கும் ரசனை எதிரணிக்கு வேண்டாமா? இருக்கும் என்பது என்ன நிச்சயம்? வெறுமே வரிகளைத் தாண்டிச் செல்பவராய் இருந்தால்? அதிகமாய் இருந்தால் சந்தோஷம். தலை வணங்கிக் கேட்டுக் கொள்ளலாம். குறைந்தால்? சொல்லி, சுட்டிக் காட்டித்தானே ஆக வேண்டும்?
      அம்மா, அப்பாவுக்கு சோறு போடுறத, அவங்க வயிறார சாப்பிடுறத, மருமகள்…அதான் மனைவி ஏசினால், வாயை மூடிக் கொண்டிருப்பவன் மனுஷனா? நடக்குதய்யா இன்னைக்கும் உலகத்துல….உலகம் தாங்குகிறதே…!
இனிமேல் சாப்பாடு சாப்பிட்டா ரத்தம் ஊறப் போகிறது? பாட்டிக்குக் கைகால்கள் எல்லாம் வீங்கி விட்டன. வருகிற கந்த சஷ்டிக்கு எண்பத்திரண்டு நிறைந்து விடுகிறது. யாராவது வந்தால் ஏதோ தேய்த்துவிட்டாற்போல் தெரிகிறது. பொழுது சாய்ந்து விட்டால் அந்த அரைப் பார்வையும் மங்கி விடுகிறது.
வாசலில், ப்ளாஸ்திரி போட்டாப்போல இப்படி சின்னதா மெழுகியிருக்கியே…? என்று சுந்தராம்பாக் கிழவி ராதைப் பாட்டியைக் கேள்வி கேட்பதோடு துவங்குகிறது கதை.
தான் தன் மாமியாருக்கு செய்த சிஸ்ருஷைகளை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, உனக்கு ஒரு குறையும் வராதடி அம்மா என்று  அவள் வாழ்த்தியிருந்தும் அந்த உத்தமி வாக்குக் கூடப் பலிக்கவில்லையே என்று மூன்று பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் கல்லுக் கல்லாகப் பெற்றுவிட்டு இந்தக் காடு அழைக்கிற வயசில் தனியாய்க் கிடந்து அல்லாட வீங்கின காலும் வீங்கின கையுமாக….ராதைப்பாட்டி.
சாயங்காலம் திண்ணையில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டுவிட்டால் பொழுது போவதே தெரியாது. இயந்திரம் மாதிரி கை ருத்ராட்சக் காய்களை எண்ணும். வாய் ராமாயணத்தைச் சொல்லும். ஆனால் மனம் மட்டும் பழைய முகங்கள் ஆசைகள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும்.
மூத்த பிள்ளையைப் பார்த்து ரெண்டு வருஷம் ஆகி விட்டது. எப்போதாவது நான்கு வருஷத்திற்கு ஒரு தடவை வருவான். வந்தால் தாயாரைப் பார்க்கத் தோன்றாது. அவனுக்கு தாயார், தகப்பனார் இருவர் மீதும் கோபம். சின்னப் பிள்ளைக்கு  அதிகமாகச் செய்து விட்டார்கள் என்பது அவன் எண்ணம். இந்த மாதிரி அசட்டு எண்ணங்கள் தோன்றிவிட்டால் படைத்தவன் கூடத் திருத்த முடியாது. அதுவும் அவனுக்காகப் படாமல், பொண்டாட்டி சொல்லி ஏற்பட்டு விட்டால், அது கல்லில் செதுக்கினாற் போலத்தான்…. அவன் மனைவி “படாமணி“…!
தகப்பனார் செத்தபோது வந்தான். ஈமக் கடன் செய்ய முடியாது என்று ஒற்றைக் காலில் நின்றான். கடைசியில் நடுப்பிள்ளை அவனுக்குப் பணத்தைக் கொடுத்து செய்யச் சொன்னான். ஸ்வீகாரம் போய்விட்டோமே என்று நினைக்காமல். மூத்த நாட்டுப் பெண் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. யாருமே அப்படித் துவேஷம் பாராட்ட மாட்டார்கள். பரம அசடுதான் அப்படிச் செய்யும். இல்லைன்னா மனுஷ ஜென்மமா இருக்காது அது…
-இதெல்லாம் பாட்டி தனக்குத்தானே அசைபோட்டுக் கொண்டு சமாதானம் செய்து கொள்ளும் மன ஆதங்கங்கள். பாட்டி அறுபது வருஷமாய்க் குடியிருந்த வீட்டில் பிதுரார்ஜிதமாய் இருக்கிறான் கடைசிப் பிள்ளை. அவன் பெண்டாட்டி சொன்ன வார்த்தை அத்தனை லேசில் மறந்து போகுமா?
அம்மாடியோவ்…வயசாவது…ஆகவாவது? ஒண்ணரைப் படி சாதம் சாப்பிடுறதே…ஆனாலும் இந்த மாதிரிப் பகாசுரத் தீனி திங்கிறதைப் பார்த்தா…எனக்குப் பயமாயிருக்கு…உங்கம்மாவுக்குப் போட்டு முடியாது…தனியாச் சமைக்கச் சொல்லுங்கோ….
சீ நாயே…! என்று சொல்லத் துப்பில்லையே இவனுக்கு? என்று ஏங்கினாள் பாட்டி.
ஏ, முண்டமே…! இந்த எச்சில் இலையை யார் தூக்கிண்டு போவா? என்று இலையை எடுத்து பாட்டி தலை மீது வீசி விட்டாள் அவள். பாட்டி அழுது கொண்டே வெளியேறி நடுப்பிள்ளை வீட்டுக்குச் சென்று சொல்லி அழுகிறாள்.
ரௌத்ராகாரமாய்ச் சீறிக்கொண்டு வருகிறான் அவன். ஏ நாயே! என்ன துளுத்துப் போச்சு கட்டை…! இனிமே வாயைத் திறந்தயோ மூட்டை கட்டி அனுப்பிச்சிடுவேன்…ஏண்டா, பெண்டாட்டியை ஆள்கிறது அழகாயிருக்குடா…மானங்கெட்டவனே…! இடுப்பில நாலு உதை விடுறதுக்கில்லாம இதென்னடா மானங்கெட்ட பிழைப்பு? கூறு கெட்டவனே…முதுகெலும்பு இல்லே உனக்கு? என்று தம்பியைப் பார்த்துச் சத்தம் போடுகிறான். அன்று முதல் பாட்டி அந்த வீட்டில் தனிச் சமையல். ஆறு மாதத்தில் அதுவும் முடிந்து போகிறது. ஏன்?
எத்தனை அழகாய்ச் சுருக்கமாய்ச் சொல்கிறார் பாருங்கள்.
“திடீரென்று உலர்த்தியிருக்கிற புடவையின் நடுவில் தானாக ஒரு கஜம் கிழிந்திருக்கும். படுக்கிற இடத்தில் ஒரு முட்டுச் சாணம் இறைந்து கிடக்கும். கரண்டிகள் மறைந்து விடும்…“
நீ செத்த இடத்தில் செங்கழுநீர் பூக்கும்டியம்மா… - மாமானாரின் ஆசீர்வாதம் பலித்ததா என்ன? திடமாய் இருந்த கிழவர் திடீரென்று மாரடைப்பு வந்து முந்திக் கொண்டு விட்டாரே…! எதுதான் நிஜமானது?
அன்று சாயங்காலம்….திண்ணையை விட்டு எழுந்தவளுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்ற மறுகணம் நடுவாசலில் மயக்கம் போட்டு மடேரென்று விழுந்து விட்டாள்.  மண்டையில் நல்ல அடி. ரத்தம் சடசடவென்று கொட்டிக் கொண்டிருந்தது. சாணார வைத்தியன் வந்து மருந்து போட்டு விட்டுப் போனான். நடுப்பிள்ளை நன்றாகத்தான் கவனித்தான். இரண்டு நாள் கழித்து பாட்டியின் பெண்ணும், மாப்பிள்ளையும் பக்கத்து கிராமத்திலிருந்து வந்தார்கள். வாழ்க்கையில் அடிபட்டவள்.சம்சாரி. பாட்டி அவளோடு போவது என்று முடிவாகிறது.
கடைசிக் காலத்தில் கிழவிக்குச் செய்த புண்ணியமும் கிடைக்கும். நூற்றைம்பது இருநூறு ரூபாய்ப் பாத்திரங்களும் கிடைக்கும் என்று புள்ளி போட்டு விட்டாள்.
பாத்திர வகைகளின் அழகைப் பாருங்கள்.
ஈய ஜோட்டி, ஈயச் சொம்பு, சீனாச்சட்டி, அகப்பைக்கூடு, பித்தளைச் செம்புகள், வெண்கல டம்ளர்கள், உருளி, கால் பவுனில் ஒரு சிகப்புக்கல் மோதிரம் எல்லாம் ஒரு வண்டியில் ஏறி மாப்பிள்ளை வீட்டுக்குப் போயின.  பாட்டிக்கு ஒரு மாதிரியாய்க் கஷ்டங்கள் விடிகின்றன.
பாட்டிக்கு இப்போது குனிந்து நிமிர வேண்டிய வேலை இல்லை. தண்ணீர் இழுக்க வேண்டியதில்லை. வீடு பெருக்க வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்திலேயே கறி நறுக்கிக் கொடுப்பாள். இல்லாலிட்டால் காலை நீட்டிக் கொண்டு பெண்ணின் கைக்குழந்தையை இரண்டு கால் மீதும் மல்லாக்க விட்டு ஆராரோப்பாடி இட்டாச்சுக் காண்பிப்பாள். ரெண்டு பேத்திகள்.
நான் வந்து எட்டு மாசமா ஆச்சு…..! ஆச்சரியத்தோடு கேட்கிறாள் பாட்டி. அங்குதான் விழுகிறது கொக்கி..
ஆனா என்னம்மா…நீ சாப்பிட்டா இங்கே  ஆயிடப்போகுது… என்கிறாள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல். அது உறுத்துகிறது பாட்டிக்கு.
பாத்திரத்தையெல்லாம் அவளிடம் கொடுத்துவிட்டு ரெண்டு மாசத்தில் செத்துப் போகலாம் என்றால்…இப்படி இழுக்கிறதே…!
ஊருக்கு வந்து பார்த்தேன். இஞ்ச வந்துட்டதா சொன்னா…வந்தேன். அடுத்த திங்கட்கிழமை எனக்கு சஷ்டியப்தபூர்த்தி…
தீர்க்காயுசா இருடாப்பா…-பாட்டிக்கு பிள்ளையின் அறுபதாம் கல்யாணத்தைப் பார்க்க ஆசைதான். அழைத்தால்தானே…!
கல்யாணம்னு சாக்கு வச்சுண்டாவது அம்மாவை அழைச்சிண்டு போகணும்னு தோணித்தா பாரும்மா உம்பிள்ளைக்கு…என்கிறாள் மகள்.
வர வர பெண்ணும் தான் போட்ட கெடுவிற்குமேல் அம்மா பிழைப்பதைச் சுட்டிக் காட்டுவது போலப் பேசிக் கொண்டிருந்தாள். இறைவனை வேண்டுகிறாள் பாட்டி.
பூமி, ஜலம் எல்லாத்தையும் சுட்டுக் கொளுத்தறயே…! என்னையும் பொசுக்கிப்புடேன்…ஏன் என்னை வச்சுக் கொல்றே அப்பனே…!
அன்று மாலை தாழ்வாரத்திலிருந்து முற்றத்தில் இறங்கும்போது கால் தடுக்கிறது. பாட்டி இசைகேடாக விழுந்தாள். உதடு, மூக்கு என்று அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது.
அடிபட்டுக் கிடக்கும் தாயாரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதில் எத்தனை தயக்கம் எல்லோருக்கும்? அப்படியே விட்டால் போய்விடாதா? மகள் சொல்கிறாள்.
எம் பாட்டி, தாத்தா ரெண்டு பேரும் இப்படி விழுந்துதான் செத்துப் போனா….அதே மாதிரிதான் அம்மாவுக்கும் வந்திருக்கு….
டாக்டர் என்ன மளிகைக் கடைக்காரரா…கடை பூட்டினப்புறம் வியாபாரம் பண்ணமாட்டேன்னு சொல்றதுக்கு…பூட்டும் வண்டியை…. எதிர்வீட்டுப் புலி விரட்டுகிறது
மனைவி சொல்வதைப் பார்த்துத் தயங்கும் மாப்பிள்ளை.
இரவு வெகுநேரம் கழித்துத்தான் ரத்தப் பெருக்கு நிற்கிறது பாட்டிக்கு. பாட்டிக்கு லேசாக நினைவு வருகிறது.
சிவராத்திரி நாளைக்குதானே…? ஒரு காரியம் செய்றியா…? பாட்டி கேட்கிறாள்.
அறுபது வருஷமா ஒரு சிவராத்திரி விடாம கங்காதரேஸ்வரரை தரிசனம் பண்ணின்டு வந்திருக்கேன்…இந்த சிவராத்திரிதான் கடைசி சிவராத்திரியா இருக்கும்…ஒரு வண்டியை வச்சு ஊர்லே கொண்டு விடச் சொல்லு…அடுத்த சிவராத்திரி எனக்குக் கிடையாதுன்னு தோணறது…
கட்டாயமாப் போய்த்தான் ஆகணுமா…
போனாத் தேவலை….
சிவராத்திரியன்று பாட்டி நடுப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். வண்டி கைலாசத்தை நோக்கிப் போவதுபோல் தோன்றுகிறது அவளுக்கு. ஈசனே…என்னை ஏமாற்றித் திருப்பியனுப்பி விடாதே…!  வேண்டாத பூசணிக்காயை நீதான் எடுத்துக் கொள்ளணும்… இவ்வளவு வயசாகி மனுஷா உயிரோட இருக்கலாமா? ஈசனே உனக்கா தெரியாது…? மனம் உருகி வேண்டுகிறது பாட்டிக்கு.
வண்டி நடுப்பிள்ளை வாசலில் நிற்கிறது.
அம்மா……!
அம்மா…!
ராத்திரிக் கண் முழிக்கணும்னு இப்பத் தூங்கறாப்போல இருக்கு….
அம்மா…அம்மா… - பிள்ளை எழுப்பினார்.
அம்மா…அம்மா… - வண்டிக்காரன் குரல் கொடுக்கிறான்.
அம்மா காதில் ஒன்றும் விழவில்லை. அம்மா கைலாசத்தில் சிவனாரின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
வேண்டாத பூசணியை இறைவன் எடுத்துக் கொள்கிறார். மொத்த வாழ்க்கையில் பாட்டியின் வேண்டுதல் இப்போதுதான் முதல்முறையாய் நிறைவேறுகிறது.
நம் மனம் கனத்துப் போகிறது.
அதிக வயது இருக்கக் கூடாது. இருக்க நேர்ந்தால் நிரந்தரமாய், அன்பாய் வைத்துப் போஷிக்க ஒரு இடம் என்று இல்லாமல் யாரும் அல்லல்படுதல் கூடாது. ராதுப் பாட்டியின் கதை நம் மனதை உருக்கி நெகிழ வைத்து விடுகிறது.
தி.ஜானகிராமனின் கதைகளின்    தனித்துவம் அதில் வரும் உரையாடல்கள். கதாபாத்திரங்களின் வழி உண்டாகும் சம்பாஷனைகள் மூலமாய் அவர்களின் குணாதிசயங்களையும், சம்பவங்களின் வீர்யத்தையும் கதையின் உருவத்தையும் அவர் கொண்டு வந்து விளக்கி நிறுத்தும் அழகு. 
அவை எழுதப் புகுந்தவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்….!                                          ------------------------------------------------



        


25 ஜனவரி 2019

தி.ஜா.ரா. சிறுகதை-பசி ஆறிற்று - வாசிப்பனுபவம்- உஷாதீபன் கட்டுரை


       கட்டுரை - உஷாதீபன்,                        தி.ஜானகிராமன்                                                              சிறுகதை“பசி ஆறிற்று”                  வாசிப்பனுபவம் 
----               ,                   ----------------------------------               -----------------------------


       நாம எதுக்கு எழுதணும்…? எல்லாந்தான் எழுதித் தள்ளியிருக்காங்களே…எழுதினா இப்படி எழுதணும்… ஏதாச்சும் மிச்சம் வச்சிருந்தாத்தானே…!
      கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் சொல்வதா?
      தோன்றிய கதையினால் அழகு பிறந்ததா…? அல்லது அழகியலைச் சொல்வதற்காக கதையை உருவாக்கினாரா?
       என்னதான் கலாரசனையோடு, காதல் மொழியை, காம உணர்வுகளை விவரித்தாலும்….
      ஒழுக்க சீலங்களை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்திற்கும் அழியா கலாசார சம்பிரதாயங்களை இகழ்வதில்லை. மனித மேன்மைக்கு உதவும் நல்லியல்புகளைப் புறந்தள்ளுவதில்லை.
      மனித உணர்ச்சிகளின்பாற்பட்ட தடுமாற்றங்களுக்காக, அடிப்படை ஒழுக்கம், பண்பாடு சிதைந்து விடக் கூடாது என்கிற தீர்மானம்…! வியக்க வைக்கிறது எழுத்தின் வன்மை!
      ஒவ்வொரு கணத்திற்கும் மனசு என்னவெல்லாம் நினைக்கும் என்பதை, உடல் மொழியிலும், வார்த்தை விளையாட்டிலும் என்னமாய்  வெளிப்படுத்துகிறார்?
      க்ளாசிக் என்றால், மொத்தக் கதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெறிப்பதல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படி மிளிர வேண்டாமா? இதுதான் க்ளாசிக்…
      வாழ்நாளுக்கெல்லாம் இவர் ஒருத்தர் போதும் போலிருக்கிறதே…!
      திரும்பத் திரும்பப் படித்தே ஆயுள் கழிந்து விடுமே…!
      “பசி ஆறிற்று…”   - என்னமாய் ஒரு தலைப்பு? உள்ளே எத்தனை அர்த்தங்கள்?
      வெறும் வயிற்றுப் பசியா…? இல்லை…சோற்றுப் பசியா…?
      இந்த உணர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லையே….எப்படி அடுத்த கதைக்குப் போவது?
      அடிப்படை தர்மங்கள் சிதிலமாவதில்லை. மனிதர்கள் தடுமாறலாம். வழுவுவதில்லை. பிறகு நிலைக்கு வரலாம். தவறில்லை. இந்த உணர்வுகளைப் படிப்படியாகச் சொல்லிச் செல்ல என்னவொரு பக்குவம் வேண்டும் இந்தப் படைப்பாளிக்கு?  
      வாழ்க்கை அனுபவங்கள்தான் ஒருவனை இப்படி எழுத வைக்கின்றன என்றால், இவ்வளவு அனுபவங்களும் ஒருவருக்கு எப்படி சாத்தியமாயின? இத்தனையையும் நுணுகிப் பார்க்கும் திறன் எப்படி வாய்த்தது?
      அந்த முதல் பத்தியிலேயே அவர் ஒரு செவிடு என்பதை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்.
சொல்ல ஆரம்பித்தால் மொத்தக் கதையையும் வரிக்கு வரி சொல்லித்தான் வாசிப்பனுபவத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். காரணம் ரசனையின்பாற்பட்ட விஷயமாயிற்றே…இது…!
விமர்சனமா செய்கிறேன்…ஏற்ற இறக்கம் சொல்ல….? நகரும் வரிகள் இதைத்தான் பறைசாற்றுகின்றன.
மணி பன்னிரண்டாகப் போகிறது…சுருக்க வாங்கோ… - கத்தின கத்தில் குரல் விரிந்து விட்டது. போய்க் கொண்டிருந்த சாமிநாதக் குருக்கள், என்ன? என்று திரும்பி நெற்றியைச் சுருக்குகிறார். நாசமாப் போச்சு…..முற்றத்தில் வந்திருந்த வெள்ளை வெயிலையும், நிழலையும் காட்டி ஜாடை செய்கிறாள் அகிலாண்டம். புரிந்து கொள்கிறார் அவர்.
உடனே விட்டாரா பாருங்கள். அடுத்த வரி….
ஏனக்கா…ஏன் இவ்வளவு மெதுவாப் பேசுகிறாள் அடுத்த வீட்டு அம்மாமி? – இந்தக் கிண்டலை உள்வாங்கும் அகிலாண்டம்…
டமாரச் செவிடுக்கு மாலைபோட்டுவிட்டு இதையெல்லாம் சட்டை செய்ய முடியுமா? ஆதங்கம். பேச்சை சட்டை செய்யவில்லைதான்….ஆனால் அந்தக் குரல்….?
“நான் காவேரிக்குப் போய் குளித்து விட்டு வருகிறேன் அக்கா….“
காதில் விழுந்ததும் இருப்புக் கொள்ளாமல்…வாசலுக்கு ஓடுகிறாள் அகிலாண்டம். ஈர்ப்பு எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்….
வாசலுக்கு வந்த அவன் அகிலாண்டம் நிற்பதைப் பார்க்க…வெறுமே பார்க்க அல்ல…தைரியமாய்ப் பார்க்க….
“உடனே உள்ளே ஒருமுறை பார்த்தான். தெருவில் கிழக்கும் மேற்குமாக ஒரு முறை பார்த்தான். குரைக்கக் கூடச் சோம்பல்படும் நாயைத் தவிர வேறு ஈ, காக்காய் இல்லை. தைரியமாய் அவளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்…“
நறுக்கென்று அவள் மறைகிறாள். ஆனால் ரேழிக்குப்போனதும் கால்கள் தயங்குகின்றன. காட்சியாய் மனதில் ஓடவிடுங்கள்…ரசனை மேம்படும்.
எல்லாவற்றிற்கும் மனசுதானே காரணம். அதுதானே ஒருவனைப் பாடாய்ப் படுத்துகிறது.
“உள்ளுக்கா, வாசலுக்கா என்று கேட்டுக் கொண்டிருந்த மனத்தைக் கடைசியில் வாசல் பக்கமே திருப்பி விட்டாள்…“ –
மனதைத் திருப்பி விடுகிறாளாம். எழுத்தின் அழகை ரசிக்கத் தவறலாமா?
சோப்புப் பெட்டியை ஆட்டிக் கொண்டு அவன் சென்று கொண்டிருக்க…உள்ளே வந்த இவளுக்கு…தான் செய்தது தப்பு என்று படுகிறது..
“வேறு என்ன செய்வது? பைத்தியக்காரப் பெண் ஜென்மம்…!அந்த சமயத்தில் வேறு என்ன செய்யும்?“
“மேல் வீட்டில் எல்லோருமே  அழகுதான். ருக்மணி மாமிக்கு நாற்பது வயது ஆனாற்போலவே இல்லை…“..என்று எழுதுகிறவர்…மேற்கொண்டு ஒரு வரி சொல்லுகிறார் பாருங்கள்….
கன்னமும் காலும் பட்டுத் துடைத்துவிட்டாற்போல இருக்கின்றன. தம்பியும் அப்படித்தான். ஓடுகிற பாம்புக்கு கால் எண்ணுகிற வயசு…..
அகிலாண்டத்தின் மனது எங்கெங்கோ சஞ்சரிக்கிறது. கல்யாணம் ஆவதற்கு முன் பிறந்த ஊரில் எதிர் வீட்டுக்கு வந்திருந்த ஒரு பையனை நினைக்கிறது.
“அவன் பார்த்த பார்வை…என்ன ஒரு குளுமை…விழுங்கி விழுங்கிப் பார்த்து விட்டு, கடைசியில் ஊருக்குப் போய்விட்டான்…“
உடனே மனம் ஆதங்கப் படுகிறது. பெருமூச்சு எழுகிறது.
இந்த டமாரச் செவிடுக்கு வாழ்க்கைப் பட்டாகி விட்டது. குருக்கள் பெண், குருக்களுக்குத்தான் வாழ்க்கைப்பட வேண்டும் என்றாலும் அப்பாவுக்கு இந்தப் பூ மண்டலத்தில் வேறு ஒரு வரன் கூடவா அகப்படவில்லை?
“கிடைக்கவில்லை“ இல்லை. …அகப்படவில்லை…என்கிறார். ஆதங்கத்தின் ஆழமான வெளிப்பாடு. படைப்பாளிக்கு வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணருவதற்கான இடம்.
“கட்டை குட்டையாய் கல்லுமாதிரி உடம்பு. காதிலே கடுக்கன்…எதற்காகவோ தெரியவில்லை….கேட்காத காதுக்குக் கடுக்கன் என்ன? மாட்டல் என்ன?“
காது கேட்கவில்லை என்றால் கடுக்கன் போடக் கூடாதா? அதற்குக் கூடத் தகுதியில்லையாம் செவிட்டுக் காதுகளுக்கு….! அகிலாண்டத்தின் மன ஆதங்கம் அப்படிப் பட்டுத் தெறிக்கிறது.
இவள் குரல் எப்படி இருக்குமென்று அவனுக்குத் தெரியுமோ என்னவோ? அவனிடம் கத்திக் கத்திப் பேசிப் பேசி…தொண்டை பெருகி விட்டது. ஊருக்குச் சென்ற போது தங்கைகள் கேட்கிறார்கள்….ஏண்டீ இப்படிக் கத்தறே எல்லாத்துக்கும்? ஊர் முழுக்கக் கிடுகிடுக்கணுமா?
அங்கேயும் ஆதங்கம் பிடுங்கித் தின்கிறது அவளை.
அத்திம்பேருக்கு நீங்க மாலைபோட்டிருந்தா தெரியும் சேதி…! அவர் காது கிட்டப் பீரங்கி வெடிச்சா…நெருப்புக் குச்சி கிழிச்ச மாதிரி இருக்கு அவருக்கு…. – சிரிக்கிறார்கள் எல்லோரும்.
கச்சேரி கேட்க நட்ட நடுவில் சென்று அமர்ந்திருக்கும் கணவனைப் பார்த்து மனது வெடிக்கிறது….இப்படி….
“போன வருஷம் எதிர்வீட்டில் ராதா கல்யாணத்தின் போது மதுரை மணி சங்கீதக் கச்சேரி நடந்தது. கூட்டத்திற்கு நடுவில் அவள் புருஷனும் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் வாயைப் பிளந்தும், ஆகாரம் போட்டும் மெய் மறந்திருந்தவர்களை ஜடம் மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுநடுவே பெரிய வீட்டு வாயாடி கிட்டுச்சாமி…“கச்சேரி எப்படி?” என்று கண்ணைச் சிமிட்டி அவனிடம் ஜாடை செய்து கொண்டிருந்தான். ஸ்திரீகளுக்கு நடுவே உட்கார்ந்திருந்த அகிலாண்டத்திற்கு வந்த ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் அளவே இல்லை….

“காதுதான் இல்லையே….நடுக் கச்சேரியில் உட்கார்ந்து அசட்டுத் தனத்தை தப்படி அடித்துக் கொள்ளுவானேன்…?”
செவிட்டு ரசனையைப் பாருங்கள்…பாருங்கள்…என்று ஊருக்குச் சொல்வதைத்தான் “தப்படி” என்கிற அந்த ஒரு வார்த்தையில் உரைக்கிறார் தி.ஜா.ரா.
இந்த ஆதங்கம் வேறொரு ஆதங்கத்திற்கு வழி வகுத்து பெருமூச்சை ஏற்படுத்துகிறது.
“அகிலாண்டம் பாடகரைப் பார்க்க பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். ஆனால் கண் ராஜத்தின் மேலேயே திரும்பித் திரும்பி விழுந்தது. அவன் பாட்டை ரஸிக்கும் அழகைக் கண்டு வியந்து கொண்டிருந்தாள்”.
பக்கத்து வீட்டு ராஜம் முன் வரிசையில்….
ஸிக்கும் அழகு…… ரசிக்கும் இல்லை…..அந்த எழுத்து மாறக் கூடாது. அதுதான் அழகு….அங்கே.  மனம் என்ன பாடு படுகிறது பாருங்கள்….
“பிறகு இரண்டு நாளைக்கு அகிலாண்டத்திற்கு ஒன்றும் ஓடவில்லை. தேனீ மாதிரி அவன் நினைவே வந்து அவளை ஒட்ட ஒட்ட மொய்த்துக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு சாக்கைச் சொல்லி எதிர்வீட்டுக்கு, மணிக்கு ஏழு தடவை போக ஆரம்பித்தாள். ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த ராஜத்தைப் பார்த்தாள். அப்பொழுதுதான் அவன் கண்ணெடுக்காமல் இத்தனை நாளாக இல்லாத ஒரு பார்வை பார்த்தான். அவளைப் புரிந்து கொண்டுவிட்டதாகச் சொல்வதுபோல் இருந்தது…”
வீட்டுக்கு வந்தபோது…“காபி போட்டாச்சா…?” என்று கூடத்தில் துணியை விரித்துப் படுத்திருந்த அவள் புருஷன் தூக்கம் தெளிந்து கேட்க…அப்போதுதான் அவளுக்கு மறந்து போன காரியங்களெல்லாம் நினைவுக்கு வருகிறது. நினைவுகள் முழுக்க அங்கே பதிந்திருக்க…வீட்டுக் காரியங்கள் மறந்து போகிறது அகிலாண்டத்திற்கு.
ஊருக்குக் கிளம்புகிறான் ராஜம். சர்க்கரை கடன் கேட்கப் போன அகிலாண்டம், ஏக்கம் தாளாமல் திரும்புகிறாள். பார்த்து விடுகிறாள் மாமி. நன்னாத் திரும்பிப் போறாள்…அசடு…வாங்கிண்டு போயேன்….என்கிறாள். நிறையக் கொடுடி…ஒரு கரண்டி என்ன? என்று சகுனம் கழிந்த மகிழ்ச்சியில் வார்த்தைகளை நிறைவாக உதிர்க்கிறார் ராஜத்தின் தகப்பனார். (ஊருக்குக் கிளம்புகையில் சுமங்கலி எதிரே வந்த சகுனம் அவரை மகிழ்ச்சிப் படுத்துகிறது….சொல்ல மாட்டார் தி.ஜா.ரா.   புரிந்து கொள்ள வேண்டும்)
போயிட்டு வரேம்மா….அந்த மாமி கிட்டவும் சொல்லு…என்கிறான் ராஜம்.
போயிட்டு வரேன்னு சொல்லிக்கிராண்டி..என்று அகிலாண்டத்திற்கு அஞ்சல் செய்தாள் தாயார். அஞ்சல்…..வார்த்தையைக் கவனியுங்கள். படைப்பாளி பொறுக்கிப் போடும் வார்த்தைகளில் எப்படி மிளிர்கிறார் பாருங்கள்.
சரி…என்று வேதனையை அடக்கிப் புன் சிரிக்க…உடனேயே வாசலுக்கு வந்து விட… பார்த்தாயா….ஊஞ்சல்ல வச்சிருந்த புஸ்தகத்த மறந்துட்டேன்…என்று ராஜம் உள்ளே போக யத்தனிக்க…நா போய் எடுத்துண்டு வரேண்டா  என்று தகப்பனார் ஓட…அம்மா ஒரு கிராம்பு கொண்டு வாயேன்…என்று அம்மாவையும் ராஜம் திருப்பி விட….அது நல்ல சந்தர்ப்பமாய் அமைகிறது.
போயிட்டு வரட்டுமா? என்கிற பாவனையில் அகிலாண்டத்திடம் பேசுகிறான் ராஜம். தன்னிடம் தனியாகச் சொல்லிக் கொள்ள  அவன் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் அவளுக்குள் பெருமையை ஏற்படுத்துகிறது. கண்களில் நிறைந்த ஜலத்தைத் விழாமல் தேக்கிக்  கொண்டு தலையாட்டுகிறாள்.
விழாமல் தேக்கிக் கொண்டு தலையாட்டினாள்…என்ற வரிகளில்தான் எவ்வளவு ஆழமான ரசனை.
கிராம்பும் புஸ்தகமும் வந்து விட்டன. சலங்கை ஒலிக்கிறது. ஒரு நிமிடத்தில் இடம் வெறிச்சோடி விடுகிறது. மனது அடித்துக் கொள்கிறது. பித்துப் பிடித்த நிலை. எதுவும்  செய்யவொண்ணாத தவிப்பு….மாலை வேலைக்காரி பற்றுப் பாத்திரம் தேய்க்க வருகிறபோது அவளிடம் பாய்கிறது….
விதியிடம் பட்ட ஆத்திரத்தை அவள் மீது திருப்பி விட்டாள்….என்கிறார் தி.ஜா.ரா. ஒரே வரி…முடிந்து போகிறது….
வேலைக்காரி பதிலுக்குக் கோபப்பட்டு….சர்தாம்மா…கணக்கை முடி…என்றுவிட்டுப் பறந்து விடுகிறாள்.
நடந்ததை நினைத்து அழுகிறாள் அகிலாண்டம். நிம்மதியிலிருந்து நழுவிவிட்ட மனம்…வேதனையில் துடிக்கிறது. ஊரிலிருந்து தகப்பனார் வருகிறார். அவரோடு பிறந்தகம் போய் பத்துப் பதினைந்து நாட்கள் இருந்து விட்டு வந்தபின்புதான் மனம் சமனம் கொள்கிறது.இரண்டு நாள் அவள் கற்பனையில் நாடகம் ஆடிவிட்டுப் போன ராஜத்தை மறந்து விடுகிறாள்.
இப்போது அந்த ஸ்தானத்திற்கு வந்து விட்டான் அடுத்த வீட்டு ருக்மணி அம்மாமியின் தம்பி. அவனுக்குப் பத்துப் பதினைந்து நாள் லீவு. இருந்தால் என்ன? அவள் அதிர்ஷ்டம் தெரிந்ததுதானே? இருந்தும் மனது கேட்கிறதா என்ன?
குளிக்கப்போனவனை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. துடிக்கத் துடிக்கக் காத்திருக்கிறாள்.
 என்ன யோஜனை பலமாயிருக்கு? – குரல் கேட்டு அதிர்கிறாள். அவள் புருஷன் நைவேத்தியப் பாத்திரத்துடன்…புன் சிரிப்போடு….
ரொம்ப நாழி பண்ணி விட்டேனா…? பசி துடிக்கிறதாக்கும் அம்பாளுக்கு…?
செத்தான்யா மனுஷன் இந்த ஒரு வார்த்தைல….“அம்பாளுக்கு…”  - மனைவி மீது என்னவொரு அன்பு? அம்பாளாகவே பார்க்கும் தன்மையா? அல்லது அத்தனை பக்தியோடு, பிரியத்தோடு அவளை எதிர்கொள்ளும் ஆவலா…? தன் மனைவி அம்பாள் மாதிரி என்கிற பெருமிதமா? எப்படியான ஒரு அற்புதமான வெளிப்பாடு?
செவிடனின் சிறுகுரலில் எவ்வளவு பரிவு? எவ்வளவு கனிவு? எவ்வளவு நம்பிக்கை…? என்ன நிர்மாயமான, நிர்மலமான பார்வை…!
ஜன்மத்திலேயே போகத்தை அறியாத கண்ணும் உதடும் வழக்கம் போல் புன்சிரிப்பில்.
இதை விட என்ன வேண்டும்?-உணர்ந்து மயங்கிப் போகிறாள் அகிலாண்டம்.
எப்படிச் சொல்லி முடிக்கிறார் பாருங்கள்.   யாராவது எழுதியிருக்கிறார்களா? எங்கேனும் உணர்ந்திருக்கிறீர்களா? சொந்த வாழ்க்கையில் இப்படியான உணர்ச்சிகளுக்கு நீங்கள் ஆட்பட்டதுண்டா…? அட…படித்தாவது ரசித்திருக்கிறீர்களா…? அந்த பாக்கியமாவது கிட்டியிருக்கிறதா? தி.ஜா.ரா….முடிக்கிறார்…..
“சிரித்துக் கொண்டே நைவேத்தியப் பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவ்வளவு அன்பைக் காட்டிய விதியை உள்ளே அழைத்துப் போய்க் கதவைத் தாழிட்டு, அதன் உடல் வேர்வையைத் துடைத்தாள். அது, இலையில் உட்கார்ந்து சாப்பிட்டபோது அவளுக்கு…
எல்லாப் பசியும் தீர்ந்து விட்டது……”
எல்லாவற்றிலும் மேன்மையானது கள்ளம் கபடமில்லாத, விகல்பமில்லாத, மெய்மையான அன்பு….! அது அங்கே ஜெயிக்கிறது.
பசி ஆறிற்றா படித்த உங்களுக்கு…? தி.ஜா.ரா….இன்னும் நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருப்பார் தன் எழுத்தில்…!!!!
                  ------------------------------------------------------------------





  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...