24 ஏப்ரல் 2021

சிறுகதை “வனம் புகுதல்” - தினமணி கதிர் - 25.4.2021

 

சிறுகதை                          “வனம் புகுதல்”  


  

      ருவர் படுப்பதுபோலான அந்த அகலக் கட்டில் உறாலில் நடுநாயகமாய்க் கிடந்தது. அதை அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டது நான்தான். அதற்கு முன் எதிரேயுள்ள அறையில்தான் அது கிடந்தது. அங்கே குளிர் சாதனம் உண்டு. ஆனால் இரவில் அங்கே கதவை அடைத்துக் கொண்டு படுக்க எனக்கு பயம். யாரேனும் திருடன் நுழைந்து அறைக்கதவை வெளியே சாத்தி என்னை அடைத்து விட்டு, இருப்பதையெல்லாம் திருடிக் கொண்டு போய் விடலாம் என்று தோன்றியதால் அந்த இரும்புக் கட்டிலை உறாலுக்கு நகர்த்தினேன்.                               

சென்ற முறை ஊருக்கு வந்தபோதே இதைச் செய்து விட்டேன். எனக்கு எப்போதும் உறாலில் படுப்பதுதான் பிடிக்கும். தலைக்கு மேலே சுற்றும் ஃபேன் அப்படியே மாடி உஷ்ணத்தைக் கீழே இறக்கும். அது தாங்காமல் புரண்டு கொண்டேயிருந்து எப்போது கண்ணயர்ந்தேன் என்றே தெரியாமல் உறங்கி விடுவேன். அந்த இடத்தில் படுப்பதை ஏதோ பாதுகாப்பாக உணர்ந்தேன் நான்.                                                                                  எப்போதுமே டபுள் காட் உபயோகிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். வெளியூர்  சென்றாலும், உறவினர்கள் வீட்டில் பெரிய கட்டில் இருக்கிறதா என்று தேடுவேன். உறக்கத்தில் உருண்டு கீழே விழுந்து விடும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே எனக்கு உண்டு. ஒரு முறை அண்ணாவுடன் கன்னியாகுமரிக்குச் சென்றிருந்தபோது, நாகர்கோயிலில் அறை எடுத்திருந்த லாட்ஜில் உறக்கத்தில் அப்படித்தான் கீழே விழுந்து விட்டேன். தரையில் படுத்திருந்த  அண்ணா...டே...டே...டேய்....என்று தடுப்பதற்குள் டொப்பென்று பூமிக்கு இறங்கி விட்டேன். தலையில் பலமான  அடி. காலையில்  அந்தப் புது ஊரில் டாக்டரைத் தேடி ஓட வேண்டி வந்துவிட்டது. அதுவாவது ஊர் சுற்றின அசதியில் உருண்டேன் எனலாம். ஆனால் அந்தப் பழக்கம் இன்றுவரை என்னிடம் தொடர்கிறதே,  அது ஏன்? நல்ல ஓய்வில் இருக்கும் இப்பொழுதுகளிலும் ஒராள் படுக்கும் கட்டிலில் படுத்தால் அது நிகழ்ந்து விடும்...! எனவேதான் டபுள் காட். எப்படிக் காலைக் கையை மாற்றி விரித்துப் போட்டாலும்...பப்பரப்பே....என்று படுத்தாலும் கீழே விழ வாய்ப்பில்லை. தரைலயே விரிப்பு விரிச்சுப்  படுத்துக்கோ...சரியா...? எங்கு கிளம்பினாலும் அம்மாவின் மறக்காத அறிவுரை இது. இந்த வயதிலும் நினைவு வருகிறதே...!                                                                   உறாலில் நான் கட்டில் போட்டிருக்கும் இடம்...வாசலில் இருந்து பார்ப்பவருக்குத் தெரியாது. நானாக எட்டிப் பார்த்தால்தான் போச்சு...அப்படியும் தெரிவதற்கு வாய்ப்பில்லைதான். எழுந்து போனால்தான் யாரென்று தெரியும். மற்றப்படி குரல் கேட்டே மறைவிலிருந்து பதில்  சொல்லி விடுவதுதான்.

      என்ன முகம் பார்க்க வேண்டிக் கிடக்கிறது? எனக்கொன்றும் பிடிக்கவில்லை. உலகம் எப்போதும்  போல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே ஏழு மணிக்கு கீரைக்காரி வருகிறாள். ஏழரைக்கு தேங்காய்க்காரர் சைக்கிளில் பறக்கிறார். எட்டு மணி வாக்கில் மாயக்காள் மாடு குளிப்பாட்ட கண்மாயை நோக்கிப் போகிறாள். ஸ்கூல் பஸ்...ஆட்டோ...எல்லாமும் கீ கொடுத்ததுபோல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எதுவுமே மாறவில்லைதான். அமைதியான ஒரே மாதிரியான இயக்கம். ஒரு வகையில் சொல்லப்போனால் இந்த அமைதியை எதிர்நோக்கித்தான் நானே என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன். அது என் அதிர்ஷ்டம்...ஆம்...அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.       இதெல்லாம் போன வார நிகழ்வுகள்.                                  நான் ஊருக்கு வந்து சேர அடுத்த வாரம் கொரோனா ஊரடங்கு அறிவிக்க சரியாக இருந்தது. வசமான வாய்ப்பாக அமைந்து விட்டது. அப்படியே தங்கி விட்டேன். யாரும் என்னைக் குறை சொல்ல முடியாது பாருங்கள். வேண்டுமென்றே வீட்டை விட்டுவிட்டு இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. தனிமையில் இருக்க வேண்டும் என்ற என் தீராத ஆசையைக் கடவுளாய்ப் பார்த்துத் தீர்த்து வைத்தது போல்.. அந்த என் வீட்டில் தனிமையில் இருந்து கழிக்க வேண்டும் என்று எனக்கு வெகுநாளாய் ஆசை உண்டு. அதற்கு வாய்ப்பில்லாமலேயே போய்க் கொண்டிருந்தது. எதைச் சாக்கு வைத்து வண்டியைக் கிளப்புவது என்று காத்துக் கொண்டேயிருந்தேன்.                                 என் கடமையையெல்லாம்தான் நான் முடித்தாயிற்றே... எனக்காக, என் விருப்பத்துக்காகக் கொஞ்ச நாள் வாழ வேண்டாமா? எனக்கு அமைதி பிடிக்கும். தனிமை பிடிக்கும். யாருடனும் பேசாமல், யாரையும் பார்க்காமல் இருப்பது பிடிக்கும். கையில் விரும்பும் ஒரு புத்தகம் எனக்கிருந்தால் போதும். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தனியாய் இருந்து விடும் மனத் திண்மை உண்டு எனக்கு. இரவு நேரத்தில் ஏதோவோர் தொந்தரவு இருக்கிறதே என்பதைச் சிந்தித்துத்தான் உறாலுக்குக் கட்டிலை மாற்றினேன். இரவு அங்கு படுத்திருக்கையில் பாதுகாப்பாய் உணர்கிறேன். ஒரு சின்னச் சத்தம் கேட்டால் கூட சட்டென்று விழிப்பு வந்து விடும் எனக்கு.           அப்படித்தானே வந்தான் அந்த தேங்காய் பறிப்பவன். வாசலில் சிவனே என்று செல்லும் அவனை அழைத்தது நான்தான். கையில் அறிவாளோடு போகிறானே...! தென்னை மரம் சுத்தம் பண்ணனுங்களா...? என்று கூட ஒரு முறை கேட்டதாக நினைவு. இத்தனைக்கும் மூன்று, நான்கு முறை அவன் வந்திருக்கிறான். ஒரேயொரு மரமானாலும் வசமான, தோட்டக்கலைத்துறையிலிருந்து ஸ்பெஷலாகக் கேட்டுவாங்கிய கன்றை நட்டிருந்தேன் நான். அதுவோ விடுவிடுவென்று வளர்ந்து காய்த்துக் குலுங்கியது. நிறைமாத கர்ப்பிணி போல் நின்றது பொழுதுக்கும்.                                                                        வீட்டின் பக்கவாட்டு வழியாகக் கொல்லைப்புறம் வருவான் அவன். அசாதாரணமாய் மரம் ஏறுவான். இப்படித் திரும்பி நோக்குவதற்குள் உச்சியில் இருப்பான். பாளைகளையும், மட்டைகளையும் அநாயாசமாய்ச் சீவி, காய்களை வெட்டிக் கொப்போடு கயிற்றைக் கட்டி அவன் இறக்கும் அழகு....அதுவும் ஒரு தனிக்கலைதான். நல்ல உடல் திறன் உள்ளவனுக்குத்தான் அது சாத்தியம். அவன் உடம்பு கருகும்மென்று இரும்பாய் ஜொலிக்கும். முறுக்கிய மீசை. கூர் மூக்கு. பாடம் கட்டிய உடம்பு.   ஒரு முறை கூட கன்னா பின்னாவென்று காய்களைத் தனித் தனியாய்ச் சீவி தொப்பு தொப்பென்று தரையில் போட்டதில்லை. தென்னை சுத்தம் செய்யும் சத்தமே தெரியாது. அவன் வந்ததும் தெரியாது...போவதும் தெரியாது. அத்தனை  தொழில் சுத்தம்.

      இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு முறை வேறொரு ஆளை அழைத்து இந்த வேலையை ஒப்படைத்தபோது, அவன் பண்ணிய களேபரம் சொல்லி மாளாது. தடால் புடால் என்று வெட்டி வீழ்த்த ஆரம்பித்து விட்டான். பக்கத்து வீட்டு ஆஸ்பெஸ்டாசில் போய் காய்கள் விழ, அவை விரிசல் விட, மரத்த வெட்டுறீங்களா இல்லையா...அடுத்தாப்ல உங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்க மாட்டேன்...நானே செய்திடுவேன்....என்று அந்த அம்மாள் கத்திக் குடியைக் கெடுத்தது இன்னும் எனக்கு மறக்கவில்லைதான். சமாதானத்திற்கு நாலஞ்சு காய்களை ஓசியாகக் கொடுத்தபோது கூட வாங்கிக் கொள்ளவில்லை. அத்தனை கறார். ஆனால் அதற்கப்புறம்தான் இவன் கிடைத்துவிட்டானே...!                                                                    இப்போது அந்த மரமும் இல்லைதான். அந்தக் கொல்லைப் புறத்தையும் வளைத்து, குளிக்கும்  அறை, கழிவறை என்று கட்டியாயிற்று. ஆனால் ஒன்று அந்த மரமேறி அந்த இரவு ஏன் அப்படி வந்தான்? என்ன  நோக்கத்தில் வந்தான்? கொல்லைப் புறம் நின்று பறித்த காய்களை உறிக்கும் பொழுது அவன் பார்வை அடிக்கடி வீட்டுக்குள்ளேயே பாய்ந்து கொண்டிருந்ததே...! அதன் அர்த்தம் இதுதானா? நோட்டம் பார்த்திருக்கிறானா? அவன் எதிர்பார்த்ததுபோல் இரவில் உள்ளே நுழைய முடியவில்லையா? ஒரு வேளை ஆளில்லா வீடுதானே என்று நினைத்துவிட்டானோ? சுற்றிலும் இத்தனை குடியிருப்புகள் இருக்கையில் என்ன ஒரு தைரியம் அவனுக்கு. பளீரென்று தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கையில் எப்படி இப்படித் துணிகிறான்? திருடுவதற்கும்தான் எத்தனை தைரியம்  வேண்டும்? சும்மா நடக்குமா அந்தக் காரியம்?

      டொக்.....! - யாருப்பா அது...? ஏய்...யாரது...? பதற்றத்தில் என் இயல்பு மீறிக் கத்திக் கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் துள்ளி எழுந்து உள்ளிருந்தமேனிக்கே வாசல் லைட்டைப் போட்ட போது ஒரு கையை ஊன்றி அப்படி ஒரு துள்ளுத் துள்ளி காம்பவுன்ட் சுவரைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்தானே...! அது அவன்தானோ..! அவனேதான்...அவனேதான் சந்தேகமில்லை...! ஏன் அப்படி வந்தான். திருட வந்தானா? ஜன்னலோரம் உலர்த்தியிருக்கும் துணிமணிகளை உருவிக்கொண்டு போக வந்தானா? ஆள் தனியாய் இருப்பதை உணர்ந்து வந்தானா? ஒருவேளை காய் திருட வந்திருப்பானோ? வேணுமளவுக்கு எடுத்துக் கொண்டு, எனக்கும் வைத்துவிட்டுப் போ என்றுதானே அவனிடம் சொன்னேன். நான்கைந்து இளநீர் கூட சகஜமாய் வெட்டித் தந்தானே? அவனுக்கா இப்படி எண்ணம்?                                                             எழுத்துச் சித்தர் ஜெயகாந்தன் அவர்களுக்கு இப்படியொரு அனுபவம் உண்டு என்று படித்திருக்கிறேன்...! “எனக்கு மரமேறத் தெரியாது.“...என்று!! இதை இங்கே சொல்லும்போதே அவர் சொல்லிச் சென்றதைத்தான் காப்பியடித்துச் சொல்கிறேன் என்று நினைத்து விடுவார்களோ? ஏன்...அதே மாதிரி ஒரு அனுபவம் மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாதா?...ஏதாவது வேண்டுமென்றால் என்னிடம் அவன் கேட்டிருக்கலாமே...! அவனிடம் நான் என்னை எளிமையாய்க் காண்பித்துக் கொண்டுதானே  பேசினேன். அவனை ஒரு கூலி ஆளாய்க் கூட நினைத்துப் பேசவில்லையே...! ஒரு நண்பனைப் போலத்தானே  அந்தப் பணிக்கு அழைத்தேன். பிறகும் ஏன் அவனுக்கு அப்படித்  தோன்றியது? காம்பவுன்ட் தாண்டி ஓடாமல் நின்றிருந்தாலும் நான் அவனை ஒன்றும் செய்திருக்கப் போவதில்லையே? அந்த நம்பிக்கை அவனுக்கு ஏன் என்னிடம் ஏற்படவில்லை? முகத்தைக் காண்பிக்க வேண்டாம் என்பதுபோல் திரும்பாமல் இருட்டில் மறைந்து விட்டானே?  முகத்தைக் காண்பிப்பதில் அல்லது என்னை நேருக்கு நேர்  பார்ப்பதில் அவனுக்கு லஜ்ஜையோ? நான் எழுந்து இப்படிக் கத்துவேன் என்று எதிர்பார்க்கவில்லையோ?                        அவன் எதிர்பார்த்ததற்கு மேல்தானே அன்று கூலியும் கொடுத்தேன். எதுக்கு சார் இவ்வளவு? என்ற அவனிடம் இல்ல இருக்கட்டும்...வச்சிக்குங்க...உங்க தொழில் சுத்தம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...தடாலடியா இல்லாமச் செய்தீகளே? அதுதான் பெரிசு...! சந்தோஷமாத் தர்றேன்...கொண்டு போங்க....என் கண்களில் நீர் திரண்டதுதான் மிச்சம். அதற்குப் பின் அவனை அந்தத் தெருப்பகுதியிலேயே காணவில்லை. ஏன் வராமலேயே போனான்? முதன் முறையாய்த் திருட வந்திருப்பானோ? அடையாளம் தெரிந்திருக்குமோ என்ற அவமான உணர்ச்சியோ?              எங்கயாவது திருடிட்டு மாட்டிண்டிருப்பான்...ஜெயில்ல கிடக்கானோ என்னவோ...? என் மனையாள் இப்படிச் சொல்ல...அவனோடு மேலும் கொஞ்சம் பேசாமல் விட்டதுவும், அவன் நிலையை  அறிந்து கொள்ளாமல் போனதுவும் மனதுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. ஏதேனும் பண உதவி கேட்டிருந்தால் கூடச் செய்திருக்கலாமோ?       தயங்கித் தயங்கி மரியாதையாய்ப் பேசினானே...? அவன் போய் திருடுவானா?                               அப்போதாவது அறைக்குள் படுத்திருந்தேன். இப்போதுதான் உறாலுக்கு வந்தாயிற்றே...! கடந்த மூன்றாண்டுகளாகவே அங்கு வரும்போதெல்லாம் உறாலில்தான் படுக்கிறேன். ஏதோவோர் பாதுகாப்பு உணர்ச்சி இருக்கிறது அவ்விடத்தில். அந்த வீடு எனக்குக் கோயில் போல. அந்த வீட்டோடு நான் தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன். அது என் தாய் தந்தையர் காலடி பட்ட இடம். என் சார்பான ரகசியங்களை அது உள்ளடக்கியிருக்கிறது. ஒரு தவறு செய்த போது அது என்னைப் பாதுகாத்தது. யாருக்கும் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றியது. இன்று அந்தத் தவறை உணர்ந்து நான் தனிமையில் அழுகிறபோது அது என்னை ஆறுதல்படுத்துகிறது. மனிதர்கள் தவறுவது இயற்கை. வருந்தாதே...!  மனிதன் தன் தவறை உணர்ந்து திருந்தி விட்டானானால் அவனுக்கு மன்னிப்பு உண்டுதான். ஆனால் எனது அந்தத் தவறுக்கு மன்னிப்பு உண்டா? இன்னமும் எனக்குச் சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தவறு என்று உணர்ந்தபின்னும் அதை வெளியே சொல்ல முடிகிறதா? வெளியே சொல்ல முடியாத தவறு. தவறுகளுக்கெல்லாம் தவறு.  உரிய தண்டனையை நீ அனுபவித்துத்தான் ஆக  வேண்டும். அதுவும் அந்த வீட்டிலேயே நிகழட்டும் என்றுதான் நான் காத்திருக்கிறேன். கிடைக்கும் தண்டனையைக் கண்களை மூடி ஏற்றுக் கொள்வேன். அது திண்ணம். அந்தக் கோயில் அப்போதுதான் புனிதம் பெறும். என் பெற்றோர் மகி்ழ்வர். அவர்கள் ஆன்மா சாந்தியடையும். அது என்னால்தான், எனக்குக் கிடைக்கப்போகும் தண்டனையால்தான் சாத்தியம். இறைவா...திருந்தும் வாய்ப்பளித்த நீ, தண்டனையையும் பெற்றுக் கொடுத்து விடு....என் மனசாட்சிக்கு நான் உண்மையாய் இருந்தாக வேண்டும். அதுவே நான் பிறவியெடுத்ததன் பலன்.

      இம்முறைதான் நீண்ட நாள் வாசம். எப்போது கொரோனா முடியும்...எப்போது ஊருக்குச் செல்வேன் என்பதே எனக்குத் தெரியாது. ஏன், யாருக்குமே தெரியாதுதானே...! அப்படியே தெரிந்தாலும், நிலைமை சரியாகி விட்டாலும் நான் ஊர் கிளம்புவதாயில்லை. இதைச் சாக்கு வைத்து என் தனிமையை நீட்டித்துக் கொள்ளவே விரும்புகிறேன். ஏன்...இப்படியே கடைசிவரை இருந்து விடலாம் என்றும்தான் நினைத்திருக்கிறேன். ரொம்பவும் என்னைப் பிரஷர் பண்ணினால் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது போய்விடுவேன் என்று என் பையனையும், மனையாளையும் பயமுறுத்தியிருக்கிறேன்...! கண்காணாமல் போவதற்கு, ஊரிலுள்ள வீட்டிலாவது தனிமையில் கிடக்கட்டும்...எது சொல்லியும் கேட்காததுகள என்னதான் செய்றது? ஆள் இருக்கிறதுக்கு அடையாளமா, ஏதாச்சும் அப்பப்போ பேசவாவது செய்துக்கலாமே...!                    கட்டிலில் அந்த உறாலில் முதுகுக்கு வைத்திருக்கும் தலையணையில் ஆயாசமாய்ச் சாய்ந்து கொண்டு விடாமல் படித்துக் கொண்டிருப்பதும், எதையாவது பார்த்துக் கொண்டிருப்பதும்தான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். எதிரே ஜன்னல்...வலது புறம் ஒரு ஜன்னல்....எதிர் அறையில் ஒரு ஜன்னல்....இடது பக்கவாட்டு அறையினுள் ஒரு ஜன்னல். இவை எல்லாவற்றிலிருந்தும் காட்சிகள் எனக்குத் தெரிந்து கொண்டேயிருக்கும். படிக்கும் நேரம் தவிர மற்ற நேரம் பூராவும். அதன் வழி தெரியும் காட்சிகளை ரசித்துக் கொண்டிருப்பதே என் வேலை. ரசனைக்கு வயசு உண்டா என்ன?

      வலதுபுறம் அருகிலிருக்கும் இன்னொரு வீட்டு மாடியும் இங்கிருந்து நன்றாகத் தெரிகிறது. அந்த வீட்டுக்காரர் எனக்குத் தெரிய, சும்மா இருந்து நான் பார்த்ததேயில்லை. ஏதாவது செய்து கொண்டேயிருப்பார். குறிப்பாக கொல்லைப்புறம் வைத்திருக்கும் சட்டியில் மறவாமல் நீர் நிரப்பி அன்றாடம் வந்து செல்லும் சின்னஞ்சிறு பறவைகளுக்கு தாக சாந்தி செய்ய உதவுவார். மறக்காமல் கொல்லைப்புற மரம் செடி  கொடிகளுக்கு மண் அணைத்துக் கொடுப்பார். தண்ணீர் ஊற்றுவார். அவர் வீட்டு சாத்துக்குடி அத்தனை ருசி. ஒரு முறை ஊரிலிருந்து வந்திருந்த என்னிடம் ஏழெட்டுப் பழங்களைக் கொண்டு வந்து கொடுத்து ஊருக்குக் கொண்டு போங்கள் என்றார். வீட்டைச் சுத்தம் பண்ணுவது, மாடியைப் பெருக்குவது, கிரில் கம்பிகளைத் துடைப்பது, வாசலில் அவர் வீட்டிலும் இருக்கும் வானுயர் மரங்களை மின்சார வொயர் குறுக்கிடாத அளவுக்கு  கவனமாய் வெட்டி விடுவது...என்று மனம் சோரா வேலைக்காரர் அவர். எது செய்தாலும் அத்தனை ஈடுபாடு. மனிதனை அதுதானே வாழ வைக்கிறது?                                                    நம்ம நட்டு வளர்த்த மரத்த, இ.பி.க்காரன் வந்து எதுக்கு சார் சொல்லாமக் கொள்ளாம வெட்டி வீழ்த்திட்டுப் போகணும்...நாமளே அளவாச் செய்திடுவோம்....சுத்திலும் மரம் இருக்கிறதையே தொல்லையா நினைக்கிறாங்க சார்...அடியோட வெட்டிட்டுப் போயிடறாங்க...யாரையும் கேட்கணும்ங்கிற அவசியமில்லையாம் அவுங்களுக்கு....வேப்ப மரக் காத்தோட மகிமை தெரியுமா அந்த ஆளுங்களுக்கு?      வச்சு வளர்க்க எத்தன வருஷமாச்சு? புரியுமா எவனுக்காச்சும்? வேப்ப மரத்துல எத்தன வகையிருக்குன்னு கேளுங்க...யாராச்சும் சொல்றாங்களா பார்ப்பம்? இதுக்குப் பேரு கருவேம்பு சார்....எத்தனை மருந்து வகைக்குப் பயன்படுது தெரியுமா? நிமிஷமா வெட்டிச் சாய்ச்சிடலாம்...வளர்ந்து வானளாவி நிக்கிறதுக்கு? வெட்டிப் பசங்க.....! - அவர் பேச்சே அலாதிதான். கொல்லைப்புறத்தில் நிலவேம்பு என்று ஒரு மரம் உள்ளதாக வேறு சொன்னார். விட்டால் சந்தன மரத்தைக் கூட நட்டு வளர்த்து விடுவார். அத்தனை இயற்கை ஆர்வலர் அவர்.                                                                                 இந்த என் வீடு கட்டி முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. கட்டின பிறகு குடி வந்து அவ்வப்போது சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து, கிரகப்பிரவேசத்தின்போது இருந்த உருவத்தையே இழந்து விட்டது இந்த வீடு. யாரும் முழு ஐடியாவோடு வீடு கட்டி, நூறு சதவிகித திருப்தியாய் உள்ளே நுழைந்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்தத் தெருவில் இருக்கும் அநேக வீடுகள் தங்களை மாற்றிக்கொண்டேயிருந்திருக்கின்றன. என் வீடும் இப்போது பழையதாகிவிட்டதுதான். அங்கங்கே காரை உதிர்ந்து தென்படுகிறது. மாடியில் இருக்கும் தண்ணீர்த் தொட்டிக்கு நேர் கீழே உள்ள சுவரின் உத்திரப் பகுதியில் ஈரத்தின் அடையாளமாய் மேப் வரைந்தது போல் அழுக்கழுக்காய் வட்டங்கள் கோணலும் மாணலுமாய்ப் படிந்திருக்கின்றன. அங்கங்கே பல்லி புள்ளி புள்ளியாய் அசிங்கம் செய்து வைத்திருக்கிறது. ஒட்டடை  செதில்  செதிலாய்ப் படிந்து கொசுக்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. என்னால் முடிந்த அளவு சுத்தம் செய்யத்தான் செய்கிறேன். அதையும் மீறி, என் பார்வைக்குப் படாமல் போனவற்றைக் காண நேரும்போது, என் சோர்வு எனக்கு நினைவு வந்துவிடுகிறது. மாடியில் கூட ஓடுகள் பெயர்ந்துதான் கிடக்கின்றன. இது சமயம் எல்லாவற்றையும் மராமத்து பார்த்தால் என்ன? எப்படிப்பட்ட சந்தர்ப்பம். வேலைக்கு ஆள் கிடைக்குமா? சோர்வடையும் சிந்தனைகள்.  தனிமையை நாடி வந்த இடத்தில் என்ன இப்படி?          வயதானால் ஏன் மனம் தனிமையை நாடுகிறது? ப்ரம்மச்சரியம், கிரஉறஸ்தாஸ்ரமம், வானப்ரஸ்தம், சந்யாசம்.... - அப்படியானால் இப்போது நான் வானப்ரஸ்தம் என்று கொள்ளலாமா? அதற்கு வனத்தில் சென்றுதான் இருக்க வேண்டுமா என்ன? வானப்ரஸ்தம் என்பது ஒரு வகைத் துறவு. உலகியல் சார்ந்த எல்லா விஷயங்களிலுமிருந்து விடுபட்டு, அவனவனுடைய மன நிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான். பிள்ளைகள் வளர்ந்து குடும்ப வாழ்க்கைக்கு  வந்தபின் அதற்கு மேலும் ஒருவன் இந்த வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம். அதைவிட அவன் பெற்ற பிள்ளைகளுக்கும் அதைவிடக் கஷ்டம். விரும்பினால் மனைவியையும் உடனழைத்துக் கொண்டு செல்லலாம். வானப்ரஸ்தம் என்றால் வனம் புகுதல்.   வனம் புகுதல் என்றால் காட்டிற்கே சென்று வாழ்தல் என்று பொருளல்ல. காட்டில் இருந்தால் எப்படியிருப்போமோ அப்படியான வாழ்க்கையை தனியே வீட்டின் தனிமையில் அரங்கேற்றுதல்.                                                                      எனது இந்த வானப்ரஸ்தத்திற்கு என் மனைவி என்னுடன் வந்து இருக்கப் போகிறாளா என்ன? அவள் அவன் பையனுடன் இருப்பதில்தான் திருப்தி கொள்கிறாள். சாகும்வரை அவனுக்குச் சமைத்துப் போட வேண்டும். அம்மா கையால் அவனும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவன் மனைவிக்கு இது வசதியாயும் போயிற்று. சமையல் வேலை மிச்சமே...! இல்லாவிட்டாலும் யார் இந்தக் காலத்தில் வீட்டில் சமைக்கிறார்கள். ஃபோனில் ஆர்டர் செய்து விட்டுக் காத்திருக்கிறார்கள். அந்த சுதந்திரம் இப்போது அவர்களுக்குக் கிடைக்காதே...! விருப்பம் நிறைவேறாதே! ஓடுற மட்டும் ஓடட்டும் என்று இருக்கலாம். நாளைக்குக் குழந்தை பிறந்தால் ஒராள் பார்க்க வேண்டாமா? அதற்காகவேனும் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி...வாழ்ந்தாக வேண்டுமே...!                                                                                  எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்...எனக்கெதற்கு இந்தச் சிந்தனை? என்னை விட்டால் சரி....அப்படி விட்டுத்தான் விட்டார்கள். போனால் போகட்டுமென்று. வேலை செய்யத்தான் அம்மா இருக்கிறாளே...!                                                                                     பாவி...! வயதான காலத்தில் என்னோடு இருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லையே! அவர்களுக்குத்தான் அப்படியென்றால் உனக்குமா? அவர் இருக்குமிடம்தான் எனக்கும்...என்னையும் அவரோட அனுப்பிச்சிடு...! சொன்னாளா...,சொல்வாளா?                             இப்போதுதான் அந்தப் பிரச்னையே எழவில்லையே...! கொஞ்சநாளில் நான் திரும்பி விடுவேன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நானாவது திரும்புவதாவது? தற்செயலாய் நிகழ்ந்த நிகழ்வு இது என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இது ஊரடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் துல்லியமாய்க் கணித்து கன கச்சிதமாய்ப் புறப்பட்டு வந்த எனக்கல்லவா தெரியும் அந்த ரகசியம்? என் அதிர்ஷ்டம் அது மாதக் கணக்கில் நீட்டித்துக் கொண்டிருக்கிறது.                                                        அதற்காக கொரோனாவே...நீ வாழ்க...! என்றா சொல்ல முடியும்? எவ்வளவு வேக வேகமாய்ப் பரவுகிறது? தினம் தினம் சிலராவது செத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? வந்த இடத்தில் அடைபட்டுப் போனேன். என் மனதிற்கு அது இசைவாகவும் போயிற்று. நான் இப்போது கிளம்பிப் போவது நடவாது. எங்கே நான் திரும்ப வந்து விடுவேனோ என்றும் அவர்கள் நினைக்கலாமல்லவா? கொரோனாவைக் கையோடு கூட்டி வராமல் இருந்தால் சரி என்றும் நினைக்கலாமே...!                                                               கொரோனாவே நீ வாழ்க...!அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நீ எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தாய். இனி நீ இருந்தாலும், சென்றாலும் நான் இங்குதான். முடிந்த முடிபு இது.             இதுவே எனக்குப் பிடிச்சிருக்குப்பா....நான் இப்டியே, இங்கியே இருந்திக்கிறேன். உங்க அம்மாவ நீ வச்சிக்கோ....எனக்கு இதுதான் வசதியாயிருக்கு....என்னை விட்ரு.....                          கேட்டால் சொல்வதாய்த்தான் இருக்கிறேன். இது ஒன்றே வலுவான சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் பிறகு எப்போதும் கிளம்பி வர முடியாது. கிளம்பி வந்ததும், தற்செயலாய் கொரோனா தலை காட்டியதும், வளர்ந்ததும், ஊரடங்கு நீடித்ததும், இன்னும் நீட்டித்துக் கொண்டிருப்பதும். எங்கும் நகர முடியாததும், இதைவிடத் தனிமையில் இருக்க ஒரு வலுவான சந்தர்ப்பம் எவருக்கேனும் அமையுமா?                                                                   ரமணா...நீ...ஜெயிச்சுட்டடா....!!!                                                                   அமைதியாய் பத்மாசனத்தில் கையில் சின் முத்திரையோடு கண்களை மூடி தியானத்தில் அந்த உயர்ந்த படிக்கற்களில் அமர்ந்திருக்கிறேன். பரந்து ஓடும் கங்கையும், இடது புறம் சற்றுத் தள்ளி ஓய்வு ஒழிச்சலின்றி இரவு பகல் பாராமல், விடாமல் எரிந்து கொண்டிருக்கும் சிதையும், என்றோ வாரணாசி தந்த அந்த மெய் சிலிர்க்கும் அனுபவம் என் மனக் கண்ணில் ஓடிக்கொண்டேயிருக்கின்றன!.

                              ------------------------------------------------

 

21 ஏப்ரல் 2021

“கவிச்சக்கரவர்த்தியின் பணிவு”=பாரதி கிருஷ்ணகுமார்-வாசிப்பனுபவம்

 

“கவிச்சக்கரவர்த்தியின் பணிவு”=பாரதி கிருஷ்ணகுமார்-வாசிப்பனுபவம்-உஷாதீபன்      (வெளியீடு:- The Roots, bkkumar.theroots@gmail.com - 9444299656)






                இந்தப் புத்தகத்தை எழுதியபோது கம்பன் என்னோடு இருந்தான். தன்னை உணர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்தான். என்று ஆத்மபூர்வமாய்த் தெரிவிக்கிறார் ஆசிரியர் திரு.பாரதி கிருஷ்ணகுமார்.

      கம்பனின் சிறப்புகள்பற்றி இன்னும் மேன்மையாக, விரிவாக, பரந்து விரிந்து ஊர்கள் தோறும் பேசப்படாமல் இருக்கிறதோ என்கிற ஆதங்கம் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கம்பன் விழாக்கள் நடைபெறுகின்றன. காரைக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், புதுச்சேரி என்று இன்னும் பல இடங்களில் கம்பனின் பெருமைகள் சிறப்பாக அரங்கேறி புகழ்ந்துரைக்கப்பட்டு மக்களிடம் இடைவிடாது கொண்டு செல்லப்படுகின்றனதான்.

      கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், தமிழருவி மணியன், சுகி.சிவம், ஜெயமோகன், சுதா சேஷய்யன், நெல்லை கண்ணன், இந்நூலின் ஆசிரியர் என்று இன்னும் பல்வேறு  தமிழ்ப் பெருமக்கள்  கம்பனின் புகழை இடைவிடாது மேலெடுத்துச் செல்கின்றனர்.

      சிறியன சிந்தியான், கம்பனில் பிரமாணங்கள், கம்பனும் வான்மீகியும், தடந்தோள் வீரன், கம்பருக்குள் ஒரு கம்பர், கம்பனிடம் சில கேள்விகள் என்று பல்வேறு தலைப்புகளில் கம்பனின் பெருமைகள் பேசப்பட்டும், அலசப்பட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றன. சொல்லரங்கம், வழக்காடு மன்றம் என்று நாம் ரசிப்பதற்குப் பல மேடைகள் காணக் கிடைக்கின்றன.

      ஆனால் கம்பன் வாழ்ந்த காலத்தில் இந்தப் பெருமைகளுக்கெல்லாம் அவர் ஆட்பட்டாரா என்று ஆய்விடும்போது கடுமையான விமர்சனங்களுக்கும், கேலிக்கும், அலட்சியத்துக்கும், துரத்தலுக்கும் ஆட்பட்டிருக்கிறார் என்பதையும், அம்மாதிரி சமயங்களில் கவிச்சக்கரவர்த்தியின் பணிவும், பவ்யமும், தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்விக் கணைகளை அவர் எதிர்கொண்ட விதமும் ஆசிரியரால் பகிர்ந்தளிக்கப்படும்போது நமக்கு கம்பன் படைத்த ராமகாவியத்தின் மீது பன் மடங்கு மதிப்பு கூடுகிறது..

      வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி  ராமாயணத்தைப் பின்பற்றி எழுதப்பட்டதுதானே இது என்று சுலபமாக ஒதுக்கப்பட்டதும், அதிலுள்ளவைகள்தானே இதிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்றும், மிகைப்பாடல்கள் அனைத்தும் செருகுகவிகள்தானே எனவும் அவைகள் கம்பனால் எழுதப்பட்டதல்லவே என்றும், எல்லாம் அமைந்திருந்தபோதிலும், வான்மீகி எழுதியதை ஒட்டியே கம்பரின் உரை அமைந்துள்ளதால் மாற்றங்கள் பொருந்தாமல்தான் உள்ளன என்றும் பேசப்பட்டிருக்கிறது.

      அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் தனது  ராமகாவியம் அரங்கேற்றப்பட வேண்டும் என்று கம்பர் முயன்றபோது அவருக்கு  கோயில் வைணவர்களால் கிடைத்த கேலியும், அவமானமும், அலட்சியமும் எந்தவொரு தமிழ்ப் புலவனுக்கும் நிகழ்ந்திருக்காது என்றே தோன்றுகிறது.. எல்லாச் சூழ்நிலையிலும், பணிவோடும், மிகுந்த பொறுப்புணர்வோடும் தன் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார் கம்பநாட்டாழ்வார் என்பதை அறிந்து நம் மனம் அவருக்கு சார்பான ஆதரவை நல்குகிறது.

      ஆறு காண்டங்களுடன், பத்தாயிரத்து  ஐநூறு பாடல்களுடன், தொண்ணூற்று ஆறு வகையான விருத்தங்களுடன் தனது காப்பியத்தைப் படைத்து அளித்த கம்பன் அதனை சிறப்பான முறையில் அரங்கேற்றுவதற்கு என்னென்ன வகையிலான சோதனைகளுக்கெல்லாம் ஆட்பட்டிருக்கிறார் என்பதை ஆசிரியர் விரித்தளிக்கும்போது, ஒருவனின் கவித்துவமும், ஞானமும் இந்த அளவிற்கு அலைக்கழிக்கப்படும் மனநிலை கொண்ட கீழான மனிதர்களா அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள்? என்று எண்ணி அவர்கள்மேல் தாங்க முடியாத வெறுப்பும், விலகலும், ஆதங்கமும் நமக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

      ஸ்ரீரங்கத்தில் கற்றறிந்த  புலமையும், தெய்வ பக்தியும் உடைய சான்றோர்களிடம் படித்துக் காட்டுகிறார். ஆனால் அவர்களோ ஆழ்வார்களைத் தம் நூலில் போற்றாது இருந்ததைக் கண்டு, குற்றம் குறை சொன்னவண்ணமே இருக்கின்றனர். அதனால் கம்பர் நினைத்தபடி காவியம் அரங்கேறாமல் போய்விடுகிறது. தொடர்ந்து தன் பணிவான வார்த்தைகளால் கம்பர் வேண்டி நிற்கும்போது, பற்பல சோதனைகளுக்கு ஆளாக்குகிறார்கள்..அவ்வூர் அரங்கநாதனிடம் போய் இறைஞ்சி நிற்கிறார். இறைவனே தம் அடியார்க்கு ஆட்படுத்த எண்ணி, நம் சடகோபனைப் பாடு என்று விளித்து பிறகே அங்கீகரிப்போம் என்று அருள்கிறார்.  அதன் பின்னர்தான் சடகோபரந்தாதி என்னும் நூலைக் கம்பர் பாடி அருளினார் என்று தெரிகிறது.

      கம்பராமாயணம் வைணவ சமயக் கதை என்ற ஒரு சாரார்  கருத்தும் உலாவந்த காலம் அது.  திருவரங்கத்தில் வைணவ ஆச்சார்யர்களை சந்தித்து வேண்டி நின்றபோது அவர்கள் நரஸ்துதி பாடும் காவியமாய் உள்ளது என்றும், நீச பாஷையான தென் மொழியில் உள்ளது என்றும் கூறி ஒதுக்கியிருக்கிறார்கள். சிதம்பரம் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேர் ஒப்புதல் வேண்டும் என்று கூற அதற்கும் போராடிப் பெறுகிறார். இறந்த குழந்தை ஒன்றை உயிர்ப்பித்த கதை ஒன்று அங்கே நிகழ, அதன் மூலம் அவரது காவியத்திற்கு ஒப்புதல் கிடைக்கிறது. ஆனால் அரங்க வைணவர்கள் சமாதானம் ஆகாமல் மேலும் அவரை அலைக்கழிக்கின்றனர். திருநறுங்குன்றம் சென்று அங்குள்ள தமிழறிந்த சமணப் புலவர்களிடம் போய்ப் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறுகிறார். மாமண்டூரில் மெத்தப் படித்த ஒரு கொல்லனிடம் போய் படித்து ஒப்புதல் பெறுகிறார். அஞ்சனாட்சி என்னும் ஒரு தாசியிடம் சென்று தம் காவியத்துக்கான ஒப்புதலைப் பெறுகிறார். எல்லா நிபந்தனைகளையும் நிறைவேற்றித் திரும்பிய பின்பும் இன்னும் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு அங்கும் ஒப்புதல் பெற வேணும் என்று தயங்காது திருப்பி அனுப்புகிறார்கள். இதில் வியப்பென்னவெனறால் அம்பிகாபதி என்னும் அறிவிற் சிறந்த புலவரது ஒப்புதலையும் தாங்கள் பெற வேண்டும் என்ற நிபந்தனை வைத்ததுதான்.  தன் மகனிடமே சென்று அந்த ஒப்புதலுக்கும் நிற்கிறார் கம்பநாட்டாழ்வார். சிரமேற்கொண்டு அம்பிகாபதி தன் ஒப்புதலை மனமுவந்து வழங்க, இனியேதும் தடையிருக்காது என்று போய் நிற்க, கோயிலுக்கு ஒரு மண்டபம் கட்டித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். அதையும் செய்து முடித்தபின்னர்தான் அரங்கேற்றம் நடைபெற்று முடிந்தது என்று அறிய முடிகிறது. அரங்கேற்றம் திருவரங்கத்தில் நடைபெறவேயில்லை என்று இன்றும் சொல்லும் தகவல்களும் உள்ளன என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

      ஒரு ஆய்வு நூலாக இந்தப் புத்தகத்தை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. கதம்ப மாலையாய்த் தகவல்கள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. எத்தனை எத்தனையோ புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து அத்தனையையும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தி, கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அறிவும் செறிவும், பணிவும் பண்பும் நிறைந்த நடவடிக்கைகளை ஆசிரியர் எடுத்துரைக்கும்போது நம் மெய் சிலிர்த்துப் போவதுடன், இந்த நேரத்திலிருந்தாவது அவர் சொல்லியிருக்கும் தமிழறிஞர்களின் புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து, கம்பனின் ராமகாவியத்தை வாழ்வின் சில முறைகளாவது வாசித்து அனுபவித்து இந்தப் பிறவி எடுத்ததன் பலனை நாம் பெற்றே ஆக வேண்டும் என்கிற எழுச்சி நமக்கு ஏற்படுகிறது.  

      இராமாவதாரம் என்று கம்பர் பெயர் சூட்டிய  கம்பராமாயணம் கி.பி.869 ம் ஆண்டு திருவரங்கத்தில் அரங்கேறியிருக்கிறது. ஆனாலும் நமக்குக் கிடைக்கும் வாய் மொழி வரலாறு, கர்ண பரம்பரைக் கதைகள் இவைகளை ஒப்பு நோக்கும்போது கீழ்க்கண்ட உண்மைகள் புலப்படுகின்றன என்று ஆய்ந்துணர்ந்து தெரிவிக்கிறார் ஆசிரியர்.

      கம்பர் காலத்துக்கு முன்பிருந்தே நிலவிய சைவ, வைணவப் பகைமை                     வான்மீகி தெய்வப் புலவன், கம்பன் அப்படியல்ல                                         வடமொழி தேவபாஷை, தமிழ் நீச பாஷை என்ற கருத்தியல்                             இறைவனைப் பாடிய காப்பியத்துள், நன்றிப் பெருக்கில் மனிதனான சடையப்ப வள்ளலையும் கம்பர் புகழ்ந்துரைத்தது                                             ஆழ்வார்களைப் புகழ்ந்து காப்பியத்துள் பாடாமை                                       மனிதனாக வந்த பரம்பொருள் இறுதிவரை காப்பியத்துள் மனிதனாகவே நடமாடுவது            சோழ மன்னர்களோடு ஏற்பட்ட பகைமை, அவர்களை எதிர்த்து நின்ற ஞானச்செருக்கு            வான்மீகி ராமாயணத்தின் பலபகுதிகளை நீக்கியது, தொகுத்தது, விரித்தது, சுருக்கியது       வடமொழிப் பெயர்கள் அனைத்தையும் தமிழ்ப் பெயர்களாக்கியது.                      எதிர் மறைக் கதாபாத்திரங்களான இராவணனையும், வாலியையும்,       கைகேயியையும், புகழ்வதும் அவர்களது சிறப்புகளைப் பாடியதும்                                             ராமனை விடவும் துணைக்கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடித்துப் பாடியது                எளிய தமிழ் நடையில் காப்பியத்தை எழுதி முடித்தது.....

      இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது பாரதி கிருஷ்ணகுமாரோடு கம்பர் உடனிருந்து தன்னை உணர்ந்து ஆழமாய் அழகுற எழுதப் பணித்து, ஆதார சுருதியாய் நின்று அவரை வெற்றியடையச் செய்திருக்கிறார் என்பதை நாம் மனப்பூர்வமாய் உணர முடிகிறது.

                                    --------------------------------------             

     

 

12 ஏப்ரல் 2021

“தண்ணீர்” -நாவல் - அசோகமித்திரன் -வாசிப்பனுபவம்.-

 

தண்ணீர்” -நாவல் - அசோகமித்திரன் -வாசிப்பனுபவம்.-உஷாதீபன்        



    
வெளியீடு:- கிழக்கு பதிப்பகம், சென்னை-4./ நற்றிணை பதிப்பகம், சென்னை.

                வாழ்க்கையில் உன்னதமெல்லாம் இலவசம் - என்று அன்று ஒரு பழமொழி உண்டு. தெரிவிப்பவர் திரு அசோகமித்திரன்.  அந்த உன்னதத்தை நாம் மதித்து நடந்திருக்கிறோமா...? இலவசமாகக் கிடைப்பது எதுவுமே மதிப்பற்றதாகிப் போகுமோ? இயற்கையின் கொடையாக இருந்த அது அன்று இலவசம். கொடையாக இருந்து கொட்டித் தீர்த்ததைப் பாதுகாத்தோமா? வணங்கினோமா?  பாதுகாப்பாய் இருந்ததை மதிப்பாய்ப் பயன்படுத்தினோமோ? தேவை அறிந்து, பயந்து, பொறுப்பாய்ச்  சிக்கனமாய் உபயோகித்தோமா? எதுவுமில்லை நம்மிடம். இன்று லபோ...திபோ என்று அடித்துக் கொண்டு அதற்காக அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகளில் அதுவும் ஒரு முக்கிய அங்கம் வகிப்பதாகி விட்டது. அப்படியே செலவு மேற்கொண்டாலும் தடையின்றிக் கிடைக்கிறதா என்றால் இல்லை. அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.  வெளியூர்களுக்குச் செல்கையில் கூஜாவில் எடுத்துக் கொண்டு போய் பொறுப்பாயும், சிக்கனமாயும், பாதுகாப்பாயும் பயன்படுத்திய அதை இன்று எவ்வளவு ஆனால் என்ன என்று கைவீசிப் பணம் கொடுத்து வாங்கி உபயோகிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம். எல்லாம் காலத்தின் கோலம்.       எதிர்காலச் சந்ததி இதற்காக அடித்துக் கொண்டு சாகப் போகிறது என்கிற நிலை கண்டிப்பாக ஏற்பட்டே தீரும் என்று ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது சொல்லிச் சொல்லி நம்மை எச்சரிக்கைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். எதையும் நாம் காதில் வாங்கிக் கொள்வதேயில்லை. அப்படிக் காதில் வாங்கியிருந்தால் இப்போது கிடைப்பதை சிக்கனமாய் உபயோகிக்கக் கற்றுக் கொண்டிருப்போமே? அப்படியா கவனத்தோடு இருக்கிறோம் நம் வீட்டில்? இல்லையே? சொல்பவர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும்...வரும்போது பார்த்துக் கொள்வோம். என்றுதானே மெத்தனாய் இருக்கிறோம்....? தண்ணீர் எப்படியெல்லாம் நம்மைக் கவலைப்படுத்துகிறது? அன்றாடச் சிந்தனையில் அதன் தேவை கவலையுடன் நினைக்கப்படவில்லை என்று எவரேனும் இன்று சொல்ல முடியுமா?

      ஊர் பேர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக் கொண்டு அலைவதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் இந்தக் கதை எழுதப்பட்டது என்று மிகுந்த வருத்தத்தோடு கூறுகிறார் பெரியவர் அசோகமித்திரன். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் அந்த மனம் எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா? ம்ம்...பாவம்...சனம் தண்ணிக்காக எப்டி அலையுது....? என்று வாய் வார்த்தையாக வருத்தப்பட்டுக் கொண்டு தன் சொந்த வாழ்க்கையில் கரைந்து போகும் மனங்கள்தான் எத்தனையெத்தனை?

      தான் காணும் எளிய மக்களை, அவர்கள் படும் துயரங்களை, சின்னச் சின்னக் காரியங்களிலெல்லாம் விட்டுக் கொடுத்து, பொறுமை காத்து, நஷ்டப்பட்டு, தன் கஷ்டங்களைப் பொருட்படுத்தாது சமன் செய்து, எப்படியெல்லாம் இந்த ஆத்மாக்கள் தங்கள் அன்றாடங்களைத் துயரத்தோடு  கடந்து செல்கிறார்கள்?  ஐயோ...இந்த மனிதர்களின் தீராத சோகங்களுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? என்று மனம் வருந்தி, புழுங்கி, எதுவும் செய்வதற்கியலாது பேதலித்து நின்று, மனம் குமைந்து...தனக்குத்தானே அழுது, இறைவா...இவர்களின் துயரைத் துடைத்தெறி...அனுதினமுமான இந்த ஆதரவற்ற, சக்தியற்ற, வசதி வாய்ப்புக்கள் அற்ற எளிய மனிதர்களின் கஷ்டங்களைப் போக்கு.....என்பதான  வேண்டுதல் மனநிலையில்-    மனித மனத்தின் அடியாழங்களிலிருந்து  அசோகமித்திரன் வெளிக்கொண்டு வருகிற கனிவும், ஈரமும், நேயமும், கருணையும் வற்றாத பெரு நதியாய்க் காலம் கடந்தும் பெருகி நிற்கும் விதமாய் இப்படி ஒரு படைப்பை நமக்கு வழங்கிச் சென்றிருக்கிற பெரியவர் அசோகமித்திரனை நாம் வெறும் எழுத்தாளனாய்க் கொள்ளாமல் மனித தெய்வமாய்க் கொண்டாட   வேண்டாமா?

      வெறும் தண்ணீர்ப் பஞ்சத்தை, கஷ்டத்தை சொல்லிச் செல்லும் கதையா இது? அந்தக் கஷ்டங்களின் ஊடாகப் பயணம் செய்யும் ஜமுனாவும், சாயாவும் அவர்களின் தேய்ந்த வாழ்க்கை நிகழ்வுகளில் உற்றாரும், உறவினரும் இன்றி, இருப்போரின் துணையினை எதிர்பார்த்து நிற்காமல், தன் கையே தனக்கு  உதவி, நம் முயற்சியே நம் வாழ்க்கை என்று இருப்பதை ஈடுகட்டிக் கொண்டு செல்லும் பயணம் எத்தனை துயரம் நிறைந்தது? எத்தனை சமரசங்களைக் கொண்டது? எத்தனை வேதனைகளை உள்ளடக்கியது?

      வாழ்க்கை என்னதான் பிரச்னைகள் உடையதாய் இருந்தாலும், பற்றாக்குறையாய் விடிந்தாலும், அந்தப் பிரச்னைகளை அதன் போக்கிலேயே பொறுமையாய்க் கையாண்டால், நாளும் பொழுதும் தானாய்க் கடந்து போகும் என்கிற அரிய தத்துவத்தை, அனுபவத்தை ஜமுனாவின் வாழ்க்கை நமக்கு எவ்வளவு தெளிவாய்க் கற்றுக் கொடுக்கிறது?

      அந்த பாஸ்கர் ராவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை அக்கா...அவனைப் பார்த்தாலே அடிச்சு விரட்டணும்போல இருக்கு...ஒரு அசிங்கமான மனுஷனை எப்படி இத்தனை  சாதாரணமா நீ எதிர்கொள்றே? அவனோட எப்படி இவ்வளவு சகஜமா உன்னால பேச முடியுது? நடு வீட்டுக்குள்ள சர்வ சாதாரணமா வந்து குந்திக்கிறான். வெட்கங்கெட்ட எவனும் செய்யக் கூடிய காரியமா பட்டவர்த்தனமா அது தெரியுது. ஆனா அவனை நீ உனக்கு ரொம்ப வேண்டியவன் போல வரவேற்கிற...உடகார்த்தி வச்சுப் பேசறே...டீ வரவழைச்சிக் கொடுக்கிறே... உன்னை சீரழிச்சவன்ட்ட உன்னால எப்படி இத்தனை சமாதானமா நடந்துக்க முடியுது...? நா உறாஸ்டலுக்குப் போறேன்...உன்னோட இனிமே இந்த வீட்ல இருக்க விரும்பல.... - இது சாயாவின் சகிக்க முடியாத மனநிலை.

      சாயா...அடியே சாயா...நீயும் என்னை விட்டுப் போயிட்டேன்னா...அப்புறம் எனக்குன்னு யார்டி இருக்கா? தெனம் காலைல எந்திரிச்சு உன் முகத்தைப் பார்த்துத்தானேடி நானே என் நாளை ஆறுதலா, சமாதானமா ஆரம்பிக்கிறேன்...நீதானேடி என் நெஞ்சுக்கு  ஆறுதல்...என் ஒரே ரத்த உறவு நீ மட்டும்தான்னு நினைச்சிண்டிருக்கேன்...நீயும் போறேங்கிறியே...?

      அந்த பாஸ்கர்ராவ் இனிமே இந்த வீட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது....அப்டீன்னா சொல்லு....நான் இருப்பேன்...அந்தப் பொறுக்கியக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை...... - ஜமுனா மௌனம் காக்கிறாள்.

      எனக்கு வேறே வழி? அவனை விட்டா....நான் யாரைத் தேடிப் போவேன்...என்னிக்காவது ஒரு நாள் எனக்கு விடியாதா?

      உனக்கு விடியாதுக்கா...விடியாது...அவன் உன்னைப் பயன்படுத்திக்கிறான் தன் லாபத்துக்காக...உன்னை சீரழிச்சிட்டுக் காணாமப் போயிடுவான்.... - சொல்லிவிட்டு சாயா போயே விடுகிறாள்.

      ஜமுனா தனியளாக்கப்படுகிறாள். கிடந்து குமைகிறாள். எத்தனை நாட்கள் எத்தனை இரவுகள்? யார் யாரோ வந்து வந்து...எவரெவர் திருப்திக்கோ அலைந்து, சீரழிந்து.....இந்தப் பெண் ஜென்மம் என்பது எனக்கு மட்டும் ஏனிப்படி? சாயா சொன்னது நிஜமாகி விட்டதோ?

      நீதாண்டா எங்கக்காவச் சீரழிச்சே...இப்போ அவ வயித்துல சுமந்து நிக்கிறாளே...நீதான் அவளைக் கட்டிக்கணும்....கையில் குடையை எடுத்துக் கொண்டு அடிக்கப் போகும் சாயா...அவளைத் தடுக்கும் ஜமுனா...நீங்க கிளம்புங்க... என்று பாஸ்கர் ராவை கிளப்பும் நிதானம்.....அந்த நிலையிலும் தனக்கு ஒரு நல்ல நாள் தேடி வராதா என்று அலையும் அவள் மனது.

     

      ஜமுனாவின் வாழ்க்கை அவலங்கள் நம் மனதை உலுக்கி எறிந்து விடுகின்றன. ஆனாலும், இதுதான் தன் வாழ்வு என்று  சுற்றியிருக்கும் சுற்றங்களைத் தன் நட்பாய், உறவாய் நினைத்துக் கொண்டு, டீச்சரம்மாவோடு அவள் தண்ணீருக்கு அலைவதும், அதற்காக அதிகாலை அதிசீக்கிரமாய் எழுந்து, ஊரும் உலகும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரை மைல் நடந்து ஒரு வீடடைந்து, அடி பம்ப்பை பட்டுப் பட்டென்று அடித்து குடத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு திரும்புவதும், வாயேன்...ஒரு வாய் காபி சாப்பிட்டுட்டுப் போகலாம் என்று  ஆதரவாய் அழைக்கும் அந்த டீச்சரம்மாவின் நேசத்தை மறுக்க முடியாமல் அவள் வீட்டில் போய் நிற்பதும், அந்த வீட்டில் உள்ள இரண்டு கிழங்கள் அவளை விரட்டியடிப்பதும், கண்ட நாயெல்லாம் எதுக்கு இங்க வருது? என்று கேவலமாய்ப் பேசுவதும்... எதுவும் பதில் சொல்லாமல், கோபப்படாமல், டீச்சரின் அன்பிற்காக, அவளின் ஆதரவிற்காக, வயதில் பெரியவர்கள் ரெண்டு வார்த்தை தூஷணையாய்ச் சொல்லிவிட்டால்தான் என்ன? என்று பொறுமை காப்பதும் அடேயப்பா...இந்த வாழ்க்கையின் சின்னச் சின்ன அசைவுகள்...எவ்வளவெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுத்து விடுகிறது இந்தக் கதாபாத்திரத்தின் மூலமாய்....எப்படியெல்லாம் மனிதர்கள் துயர்ப்படுகிறார்கள்? எப்படி, எங்கெங்கெல்லாம் வசை வாங்குகிறார்கள்? எவ்வெவற்றையெல்லாம் பொறுத்துப் போகிறார்கள்? எவ்வளவு சகிப்புத் தன்மையைத்தான் உள்ளடக்கி நீந்துகிறார்கள்?  

      மனிதன் வறுமையில் உழல்வதும், இல்லாமையில் சீரழிவதும், ஒழுங்கில்லாத வாழ்க்கையில் கிடந்து அவதியுறுதலும், மீண்டு வெளி வர இயலாமல் தவித்தலும்...அத்தனையும் இருந்தாலும்...மூழ்கி முக்குளித்து அதில் சலிப்பில்லாமல் விரக்தியில்லாமல் பொறுமையோடும் நிதானத்தோடும் பயணித்தல் என்கிற அனுபவம் ஒருவனை எத்தனை செழுமையானவனாக ஆக்கி உலவ விடுகிறது?

      ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட  வாழ்க்கையை எத்தனை சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்கிறார்கள்? டீச்சரம்மாவை ஏன் ஜமுனாவுக்குப் பிடித்துப் போகிறது? தனக்கு ஆதரவாக இருக்கிறாள் என்பதற்காக மட்டுமா?

      ஸ்கூல்லர்ந்து வந்து இன்னும் ஒண்ணுக்கு ரெண்டுக்குக் கூடப் போகலை...உடனே பாத்திரத்தை தூக்கிண்டு பாலுக்கு ஓட வேண்டிர்க்கு...அதுக்கப்புறம் தண்ணி...அதுக்கப்புறம் கறிகாய்...பிறகு மளிகைச் சாமான், அதுக்கப்புறம் அம்பத்திரண்டு காம்போசிஷன் நோட்டுத் திருத்தணும்...அதுக்குள்ளே மருந்து ஏதாச்சும் தீர்ந்து போயிருந்தா அதை ஓடிப்போய் வாங்கி வச்சாகணும். அதுக்கப்புறம் இந்தக் கிழக் கோட்டான்களுக்கு பலகாரம் பண்ணிப் போட்டாகணும்...லாண்டரிக்குப் போய் துணியை வாங்கி வரணும்...பெட்பானை ஃபினாயில் போட்டுக் கழுவி வைக்கணும்...நாளைக்கு இன்ஸ்பெக் ஷனுக்கு நோட்ஸ் ஆப் லெசன்ஸ் சரிபார்த்து வைக்கணும்.....- ஜமுனா....அவளையே நோக்குகிறாள்...அக்கா...அக்கா...என்கிறாள். பிறகு அழுது விடுகிறாள். டீச்சர் மார்பில் சாய்கிறாள்....- இவளுக்குமுன் தன் துயரமட் ஒன்றுமில்லை என்ற எண்ணம் வந்து விடுகிறது. அல்லது இவள் சுமக்கும் சுமைக்கு முன்னால் நான் எம்மாத்திரம்? என்கிற எண்ணம் மேலெழுகிறது. எத்தனை உருக்கமான காட்சி...

      தன் துயருக்குச் சமாதானம் தேடி நிற்கும் இடத்தில் இருக்கும் துயரைக் கண்டு மனம் நெகிழ்ந்து, டீச்சரம்மாவை ஜமுனா அரவணைக்கும் இந்தக் காட்சி மனித மனத்தை ஆட்டிப் பிழிந்து விடுகிறதே...!

      வெறும் தண்ணீர்க் கஷ்டத்தைச் சொல்லவா இந்த நாவலை எழுதினார் பெருந்தகை அசோகமித்திரன். வாழ்க்கையின் அனுபவங்களை, அவலங்களை, முதிர்ச்சியை, பக்குவங்களை சாதாரண மக்களின் வாழ்வோட்டத்தின் ஊடாக எப்படிக் கண் முன் கொண்டு வந்து மனது உருக உருக நிறுத்துகிறார்...?

      ஆதரவில்லாத இரண்டு பெண்கள்...உறவுகள் நெருங்க விடாத விலகலான வாழ்க்கை அமைவில், ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்டு, மனச் சடவுகளை விலக்கிக் கொண்டு, பொருந்தாத சூழலை அனுதினமும் சமாளித்துக் கொண்டு வாழ்ந்து கழித்தலே வாழ்க்கை என்று சின்னச் சின்ன அடியாக எடுத்து வைத்து, நாட்களைக் கழிக்கும் அவலம் ஜமுனா-சாயா வாழ்வில் எத்தனை நுணுக்கமாய்ப் பகிரப்பட்டிருக்கிறது?

      அவளை உறீரோயின் ஆக்குகிறேன் என்றும், பிறகு  இரண்டாவது கதாநாயகியாகவாவது ஆக்கி விடுவேன் என்றும் விடாது சொல்லிக் கொண்டு அவளைத் தன் வசமாக்கி இழுத்துச் சென்று சீரழிக்கும் பாஸ்கர்ராவும், என்றாவது தனக்கு விடியாமலா போகும் என்று அவன் பின்னாலேயே நம்பிக்கையை விடாது அலையும் ஜமுனாவும், இனி வேறு எங்கென்று செல்வது என அவனே சதம் என்று நம்புவதும், அதனை, அவனை முற்றிலும் நம்பாது அவளை எச்சரிக்கும் சாயாவும்...அந்தப் பகுதியின் தண்ணீருக்காக அலைந்து அல்லல்படும் மக்கள் பலரின் கவனிக்கப்படாத வாழ்க்கையின் ஊடான நெகிழ்வான பயணமாக அவர்களின் வாழ்க்கைப் பாடுகள் எத்தனை உருக்கம் நிறைந்தவை?   நாவல் நம் மனதை பிழிந்து எடுத்து விடுகிறது. அங்கங்கே சிலவற்றைச் சுட்டிக் காட்டியதே இப்படி இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. முழு நாவலையும் வரி வரியாய் விவரிப்பதென்றால்? ஒரு புத்தகமே எழுதலாம்....உலகின் மிகச் சிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாய் பேசப்படும் இந்தத் தண்ணீர் நாவல்...ஒரு வாழ்க்கைப் பாடம்.

      சென்ற நூற்றாண்டில் தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று என மதிப்பிற்கும்  மரியாதைக்குமுரிய அசோகமித்திரனின் இந்தத் தண்ணீர் நாவல் நிறுவப்படுகிறது.

                        -------------------------

11 ஏப்ரல் 2021

ஆச்சரியம் என்னும் கிரகம்” - 5 சிறுகதைகள் - ஜப்பானிய மூலம்-ஷிஞ்ஜி தாஜிமா-தமிழாக்கம்-வெங்கட் சாமிநாதன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

 

“ஆச்சரியம் என்னும் கிரகம்” - 5 சிறுகதைகள் - ஜப்பானிய மூலம்-ஷிஞ்ஜி தாஜிமா-தமிழாக்கம்-வெங்கட் சாமிநாதன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன் (வெளியீடு - சாகித்ய அகாடமி,குணா காம்ப்ளெக்ஸ், அண்ணசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18)                                                           ---------------------------------------------------     



                                        

 சிறார் இலக்கியப் படைப்புக்கள் என்று இன்று எத்தனையோ புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல படைப்புக்கள் குழந்தைகளுக்கு எளிமையாகக் கதை சொல்ல வேண்டும் என்கிற நோக்கில் வலியக் கதை செய்யப்பட்டதாகவே தோன்றுகின்றன எனலாம். மிருகங்களுக்கு, வீட்டுப் பிராணிகளுக்கு என்று மனிதர்களின் பெயர்களை வைத்து உலவவிட்டு கதை பின்னினால் எளிமையானதாகத் தோன்றும் என்றும் அதன் மூலமே குழந்தைகளின் மனதில் சின்னஞ் சிறு  கதைகளை இருத்த முடியும் என்கிற எண்ணத்திலேயும் படைப்புக்களைக் காண முடிகிறது. அதுவே சிறுவர்களுக்கான இலக்கியம் என்றும் பேசப்பட்டு தொடர்ந்து படைப்புக்கள்  வலம் வந்து கொண்டிருக்கின்றன.

       ஆனால் சமூக நிகழ்வுகளை, மனிதர்களின் செயல்களை, ஆசைகளை, வஞ்சக எண்ணங்களை, எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கான வளர்ச்சிகளை விரட்டிக் கொண்டு ஓடும் மனித சமுதாயத்தை, தேய்ந்து கொண்டிருக்கும் மனித நேய உணர்வுகளை, சுயநலத்தை குழந்தைகளுக்கு நன்றாகப் புரியுமாறு கதையைப் பின்னியிருப்பதும், மிருகங்களின் நடவடிக்கைகள் மேற்கண்ட மனிதச் செயல்களைத் தோலுரித்துக் காட்டுவிதமாகவும் கதைகளை அமைத்திருப்பதும், சிறார் இலக்கியம் என்பது இவ்வகையிலேயே இருத்தல் வேண்டும் என்கிற  அவசியத்தை உணர்த்தும் விதமாக எளிமையாக திரு வெங்கட் சாமிநாதன் அவர்கள் மொழி பெயர்த்து அவசியம் படிக்க வேண்டிய முக்கியப் புத்தகங்களில் ஒன்றாக இதனை நிறுவியிருப்பது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.

       கோன் இச்சி என்கிற நரி கென்-போன்-டான் என்ற மந்திரத்தைப் பயன்படுத்தி மனித உருவம் கொள்கிறது. இந்த மந்திரம் என்ன உருவத்தை அடைய அந்த நரி விரும்புகிறதோ அந்தக் குறிப்பிட்ட உருவத்தை அடைய முடியும் என்கிற நிலையில் மனித உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது.

       இப்படி மனிதனாக மாறிய பல நரிகள் இன்று இருக்கும் இடமே தெரியாமல் எங்கெங்கோ சென்று விட்டார்கள். ஆகையினால் மகனே தயவுசெய்து நான் சொல்வதைக் கேள், இந்த விஷப் பரீட்சை  வேண்டாம் என்று  தாய் நரி சொல்ல, கோன் இச்சி அதைக் கேட்காமல் மனித உரு எடுத்து, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கண்ட ஒரு கம்பெனிக்குள் வேலை தேடிப் போகிறது. அதற்கு வணிக அதிகாரியாக வேண்டும் என்கிற ஆவல். நிறைய சம்பாதித்து உனக்கு சாப்பிடுவதற்கு ருசியான முயல்களை வாங்கி வருவேன் என்று தாய் நரியிடம் சொல்லிவிட்டு நேர்முகத் தேர்விற்குச் சென்று வணிக வரி அதிகாரியாகச் சேர்ந்து விடுகிறது. முயல் கோழி, எலி எல்லாம் வளர்க்கத் தெரியும் எனக்கு. ஒரு மிருகப் பூங்காவைப் பொறுப்பேற்று நடத்தத் தெரிந்தவன் என்று கூறுகிறது கோன் இச்சி.

       வீடுமலை (கோன் இச்சி இருக்கும் மலை) மிருகங்கள் பற்றியெல்லாம் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தேன்...என்று கூறி நிறுவனர் கோன் இச்சி பொறுத்தமான ஆள் என்று வேலை கொடுத்துவிடுகிறார். மாதங்கள் கழிகின்றன. வேனிற்காலம் கழிந்து, கோடை காலம் கடந்து பனிக் காலம் வருகிறது. விற்பனைக்கு நிறைய மயிர்த்தோல் ஆடைகள் வேண்டுமே என்று நிறுவனர் சொல்ல உற்பத்தியைப் பெருக்கும் வேலைகளில் கோன் இச்சி ஈடுபடுகிறான்.ஆடைகள் சேமித்து வைத்திருக்கும் பண்டகசாலைக்குச் செல்கிறான்...அங்கு அவனுக்கு பெரும் அதிர்ச்சி.

       அவன் தோழமைகள்...சக மிருக நண்பர்கள்...அவைகளின் பதப்படுத்தப் படுவதற்காக தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட தோல்கள்....அணில், முயல், கரடி, மரநாய், கீரி, வளைக்கரடி என்று எண்ண மிருகங்களின் கொத்துக் கொத்தான  தோல்கள் தலைகீழாக....மனம் கொதிக்கிறது. தேம்புகிறது. அழுகிறான் கோன் இச்சி. என் இனத்தையே அழிக்கும் இந்த உத்தியோகத்திலா நான் இருக்கிறேன். இதிலா இருந்து இத்தனை நாள் என் பசியைப் போக்கினேன்...இதென்ன பரிதாகம்?கடவுளே...! உனக்கு இரக்கமேயில்லையா...? இவற்றைக் கொள்ளை கொள்ளையாய் விற்றா இந்த நிறுவனர் லாபம் சம்பாதித்துக் கொழிக்கிறார்?  என்று குமுறுகிறது.

       அதே சமயம் இன்னொரு மனசு நான் மனிதன், இப்போது மிருகமில்லை...இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை...இப்படியாய் நினைத்துப் பார்ப்பதும் நியாயமில்லை என்று கூறுகிறது.

       மறுநாள் காலை ஒரு பெரிய வேட்டைக்காரக் கூட்டம் மலை நோக்கிச்  செல்கிறது. கூடச் செல்கிறான் கோன் இச்சி. துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சத்தத்திலிருந்து ஒதுங்கி விடு என்று நரியாய் இருந்தபோது அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது.

       நான் இப்போது மனிதன். ஒரு நிறுவனத்தின் பணியாளன். என்னை மதித்து அனுப்பியுள்ள நிறுவனருக்கு நான் செய்ய வேண்டிய கடமை இது என்று சொல்லிக் கொள்கிறர். பதுங்கும் நரிக்கூட்டங்களை, முயல் கூட்டங்களை, இன்ன பிற மிருகங்களை நோக்கி துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. ஒருநிலையில் தன்னை மறைத்துக் கொண்டு சரியான நேரத்துக்குக் காத்திருந்து, குறி பார்த்துப் பாயும் அந்த வெள்ளை உருவத்தை நோக்கித் தன் துப்பாக்கிக் குண்டை குறிப்பாகச் செலுத்துகிறது கோன் இச்சி.

       அலறி விழுகிறது அந்த வெள்ளை நரி.   ஆஉறா....இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு மிருகத்தை நம் நிறுவனம் கண்டதேயில்லை. என்ன அபாரமான திறமை உனக்கு. உன்னுடைய தொழில் பக்தி, கடமையுணர்ச்சி கண்டு நான் பெருமைப்படுகிறேன்...என்று நிறுவனர் அகமகிழ்ந்து பாராட்ட, அந்த வெள்ளித்தோல் நரி கோன்இச்சி சுட்டு வீழ்த்திய அவன் தாய் என்பதை அறியும்போது மனம் பதைத்துப் போகிறது நமக்கு.

       ஐயோ...என்ன பாவம் செய்துவிட்டேன்...எனக்கு இந்த வேலை வேண்டாம். வசதி வாய்ப்புக்கள் வேண்டாம், வருமானம் வேண்டாம்...எனக்கு என் அம்மாதான் வேண்டும்...அம்மாதான் வேண்டும் என்று கதறுகிறான் கோன் இச்சி.  மலையை நோக்கி ஓடுகிறான். யார் கண்ணிலும் படாமல் எங்கோ சென்று மறைந்து விடுகிறான். கோன்...கோன்...கோன்...என்ற ஒலி மட்டும் ஏங்கும் குரலாக அந்த மலைப்பிரசேத்தில் விடாது இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

       மனிதனாக மாறிவிட்ட ஒரு மிருகம் எப்படி இயந்திரத்தனமாக இயங்கி, தன் சுற்றங்களை அழிக்கிறது, இழக்கிறது என்கிற வேதனையாக உண்மையை இந்தச் சிறுகதையில் உணர்கிறோம் நாம். தாயை விட்டுப் பிரிந்து சென்று மனிதனாக மாறி நகர்ப்புறத்துள் புகுந்து, தன் சுற்றத்தையும், தாயையும் மறந்து, கடைசியில் தன் இனத்தின் அழிவையே தன் பணியில் காணுவதும், தானே அதற்குக் காரணமாய் அமைந்து விடுவதும், பெற்றெடுத்த தாயையே இழந்து நிற்பதும், இன்றைய ஐ.டி.. நிறுவனக் கலாச்சாரங்களோடும், வெளிநாட்டு மோகங்களோடும் பொருத்திப் பாருங்கள். கோன் இச்சி வீடுமலை என்ற தலைப்பிலான இந்தக் கதையின் உள்ளார்ந்த நோக்கமும், நியாயமும் நமக்குப் புரிபடும்.

       மனித இனம் தன்னுடைய வளர்ச்சிக்காக எப்படியெல்லாம் அசுரத்தனமாக இயற்கை வளங்களைச் சுரண்டுகின்றன என்பதை விளக்கும் சிறப்பான படைப்பாக ஆச்சரியம் என்னும் கிரகம் கதை விளங்குகிறது. தொகுதியின் ஐந்து கதைகளும் அன்பு கலவாத பேராசை மனித ஆத்மாவையே கொன்று விடும் என்கிற தத்துவத்தை உள்ளடக்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

       இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் இயற்கை வளங்களை எப்படியெல்லாம் சீரழித்து, வறட்சியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும், மனிதர்களின் பேராசைகள் எல்கையற்று விரிந்து பரந்து பற்பலவிதமாக அழிவுகளுக்கு எந்தெந்த வகையில் காரணமாய் அமைந்து விடுகிறது என்பதையும், பிற உயிரினங்களை அழித்து தன்னை வளப்படுத்திக் கொள்வதில் மனிதர்களின் முனைப்பும், இரக்கமற்ற தன்மையும், சுயநலத்தையும், பேராசையையும் முடிவற்ற நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருப்பதை குழந்தைகள் மட்டுமல்லாது வயது முதிர்ந்தோராகிய நம்மின் உணர்தலுக்கும் முக்கிய காரணமாய் நின்று இளைய தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி நம்மை பயப்படுத்தி விரக்தி கொள்ள வைக்கிறது.

       திரு வெங்கட்சாமிநாதன் அவர்களின் தமிழாக்கம் படிப்பதற்கு நெருடலின்றி, குழந்தைகளுக்குப் புரிவதுபோல் எளிய மொழியில் சரளமாகச் சொல்லப்பட்டிருப்பதே இப்புத்தகத்தின் சிறப்பாகும். சாகித்ய அகாடமியின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இந்த ஆச்சரியம் என்னும் கிரஉறம் விளங்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...