30 ஜூன் 2021

“கலை, அனுபவம், வெளிப்பாடு...” -கட்டுரைத் தொகுப்பு - வெங்கட் சாமிநாதன் - க்ரியா வெளியீடு, சென்னை. -வாசிப்பனுபவம்-உஷாதீபன்

 

கலை, அனுபவம், வெளிப்பாடு...” -கட்டுரைத் தொகுப்பு - வெங்கட் சாமிநாதன் - க்ரியா வெளியீடு, சென்னை.  -வாசிப்பனுபவம்-உஷாதீபன்



     வரின் புத்தகங்களிலேயே, படிக்கக்  கடினமானதாக நான் உணர்ந்தது இப்புத்தகம்தான். இலக்கியம், மரபு, புலமை, சிந்தனை, தத்துவம், சிற்பம், ஓவியம், சங்கீதம் என்று இவருக்குத் தெரியாத சப்ஜெக்டே அல்லது இவர் நுழைந்து புறப்படாத பொருளே  இருக்காதோ என்றுதான் தோன்றுகிறது.

     எந்தவொரு விஷயத்தையும் மேம்போக்காகச் சொல்வதில்லை இவர். நுனிப்புல் மேயும் ஜோலியே கிடையாது. ஆழ்நிலைப் பயணம்தான் எல்லாவற்றிலும். ஒரு குறிப்பிட்ட பொருளில் பல்வேறு பட்டவர்களும் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு நோக்கி, யார் மனதும் புண்படுமோ என்றெல்லாம் யோசிக்காமல், அவர் ஏதேனும் நினைத்துக் கொள்வாரோ அல்லது இவர் அப்படி நினைத்து விடுவாரோ, நட்பு பாழாகுமோ  என்றெல்லாம் நினையாமல் மனதில் தோன்றியதைப் பளிச்சென்று முன் வைத்து, ஒரிஜினல் சரக்கு இதுதான் என்றும், இதுதான் உசத்தி என்றும்  அறுதியிட்டு நிலை நிறுத்தி விடுகிறார்.

     அதன் மூலம் வானளாவப் புகழப்பட்ட கலை அம்சம் பொருந்திய விஷயங்களெல்லாம், இவரென்ன இப்படிச் சொல்கிறார் என்று நம் மனதில் மதிப்பு குன்றிப் போகிறது அல்லது வருத்தம் மேலிடுகிறது. அதே சமயம் அவர் சொல்வதை ஒப்புக் கொள்ளவும் வேண்டித்தான் இருக்கிறது.

      பழக்கத்திற்கு அடிமையாகிப் போய் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பலரும் தேங்கிப் போகிறோம் என்றும், நாம் நினைப்பதுதான் உச்சம் என்ற முடிவில் அதிலிருந்து நகர மறுத்து, அதையெல்லாம் முறியடித்து முன்னே சென்று விட்ட விஷயங்களை எட்டிக் கூடப் பார்க்கத் தவறி கிணற்றுத் தவளையாய் இருந்துவிட்டதை ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறோம் என்று எடுத்துரைக்கிறார்.

     இம்மாதிரிக் கருத்துக்களை ஒரு சாதாரண மனிதன் சொல்லியிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டேன் என்று சொல்லி தி.ஜா. அவரது உதயசூரியன் என்கிற பயணநூலில் கூறியிருக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டி, தாம் அறிந்திராத, சம்பந்தப்படாத, தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளாத விஷயங்களைப்பற்றியெல்லாம் அபிப்பிராயம் சொல்ல தமக்குத் தகுதி கிடைத்திருப்பதாக நினைத்து அவர் எழுதியுள்ளார் என்று குறிப்பிடுகிறார். போதாததற்கு செல்லும் இடங்களில் எல்லாம் இந்த அபிப்பிராயங்களைத் திரும்பத் திரும்பக் கூறிவருகிறார் என்றும் வருந்துகிறார். அது ஒரு ஓவியக் கண்காட்சி பற்றியதும், ஜப்பானிய ஓவிய மரபுகளை அங்கே காண முடிந்தது என்றும் தி.ஜா. கூறியதற்கான மறுப்பாக அமைகிறது.

     இது தி..ஜா.வைப் பற்றிய கண்டனமாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது...நம்மிடம் உள்ள பார்வைக் குறுகலையே இது காட்டுகிறது என்று குறிப்பிட்டு, நம் நாட்டில் சங்கீதம், நாட்டியம் ஆகியவற்றிற்குத்தான் ஒரு மரபு உள்ளது...ஓவியம், சிற்பம் ஆகிய வேறு எதற்கும் எக்காலத்திலும் பயிற்சி பெற்ற minority audience கிடையாது என்று நிறுவுகிறார்.

     தாம் சொல்வது என்ன என்று அர்த்தம் அறிந்து சொன்னவனின் வார்த்தைகள்  இவை என்று சொல்லி ஒரு உ-ம். ஐ முன் வைக்கிறார்.

"I can't describe her beauty in words. But I can play it on a violin..."

      மது சிந்தனை வெளியீட்டிற்கும் அனுபவ வெளியீட்டிற்கும் நாம் தேடிக் கொள்ளும் குறியீடுகள் நம் மன இயல்பைப் பொறுத்தவை. நம் பார்வையையும், அனுபவத்தையும் பொறுத்தவை. நாம் ஒவ்வொருவரும் தனித்துச் சஞ்சரிக்கும் வெவ்வேறு கிரகங்கள் போன்றவர்கள். தன் சோகத்தைக் கேட்கத் தயாராய் எவரும் இல்லாத நிலையில்,வண்டிக்காரக் கிழவன் தன் குதிரையிடம் அழுது புலம்பித் தீர்த்துக் கொள்வதைப் போன்ற (செகாவின் சிறுகதை) பரிமாணம் கொண்டது நம் உணர்வுகளும், மன எழுச்சிகளும் என்று தத்துவார்த்தங்களை விரித்துக் கொண்டே போகிறார். படிக்கும் வாசகனுக்கு இவற்றை உள் வாங்குவதும், மனதில் நிறுத்திக் கொள்வதும் மிகுந்த கடினமாகத்தான் நிச்சயம் இருக்கும். நான்கைந்து முறை படிக்க வேண்டி வரும் என்றே தோன்றுகிறது.

     பிக்காஸோ பார்த்த பொருட்களுக்கு ஒரு யதார்த்தம் இருந்தது. அது அனுபவத்தில் படும் யதார்த்தம் இல்லை. பொருட்களில் உறைந்திருக்கும் யதார்த்தம் என்கிறார். 20-ம் நூற்றாண்டின் யதார்த்த அனுபவம், 19-ம் நூற்றாண்டின் யதார்த்த அனுபவம் இல்லை. அதை ஓவியத்தில் உணர்ந்த ஒரே ஒருவர் பிக்காஸோதான் என்று நிறுவுகிறார். 1970 ல் ஞானரதம் முதல் இதழிலிருந்து தொடராக வெளிவந்தது  இந்தக் கட்டுரை.  இதிலிருந்து ஒரு சிறு துளியைத்தான் இங்கே விரித்திருக்கிறேன்.

     இரண்டாவதாக உள்ள “பத்மினியின் நினைவில்....”என்ற தலைப்பிலான இன்னொரு ஓவியரைப் பற்றிய கட்டுரையும் நம்மை வியக்க வைக்கிறது. இவரது காலம் 1940-1969. அம்ரிதா ஷேர் கில் என்ற ஓவியரின் நினைவில் டெல்லி வானொலியில் மூன்று நிகழ்ச்சிகள் தொகுக்கப்படுகின்றன. அதில் பங்கேற்க வருபவர் காலஞ்சென்ற பத்மினியின் கணவரான தாமோதரன். அவர் மூலமாக அநேக விஷயங்களை அறிய முடிகிறது. அம்ரிதா பஞ்சாபில் பிறந்து வளர்ந்தவர்...பத்மினி கேரளத்தில் பிறந்தவர். இருவரது சிறந்த படைப்புக்களும் கேரள மக்களைப் பற்றியதானவை.  கேரளத்திலும், சென்னையிலுமாக ஓவியப் பயிற்சியை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயில்கிறார்.

     பத்மினியின் படைப்புக்கள் அனைத்தும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த கேரளத்து மக்கள், அவர்களின் வாழ்க்கை, பசுமை, செழுமை, கொழிக்கும் வயல்கள், வெளி, மரங்கள், பெண்கள் கூட்டம், சிறுவர், கேரளக் கோயில்கள், கோயில் தீபங்கள், கன்னிகைகள், சன்னியாசினிகள், குடிசைகள், கூரையில் அமர்ந்திருக்கும் பறவைகள், குழந்தைகள், பின்னிக் கிடக்கும் சர்ப்பங்களின் சிலைகள் இவைதான் அவரின் உலகமாய் இருந்திருக்கின்றன என்று அறிய முடிகிறது. சுமார் 200 க்கும் மேற்பட்ட ஓவியங்களை அவர் விட்டுச் சென்றிருக்கிறார் என்கிற தகவல் நமக்கு இந்நூலில் கிடைக்கிறது.

     இந்திய மரபில் அவரது இடம் என்ன என்பதையே “கசடதபற“ ஆகஸ்ட் 1971 இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை விளக்குகிறது. திரு வெங்கட்சாமிநாதன் அவர்கள் இலக்கிய விமர்சனங்களுடன், ஓவியம், இசை, திரைப்படம்  நாடகம் என்று பல துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கியவர் என்பதை நாம் அறிவோம்.  அவரது கருத்துக்கள் விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியவை. ஜான் ஆப்ரஉறாம் இயக்கிய “அக்ரஉறாரத்தில் கழுதை” என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியவர் என்பதையும் இங்கே வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

     உண்மையில் நமது அநேக நம்பிக்கைகளில், தீர்மானங்களில், முடிவுகளில், நாம் வெறும் அடிமைகள். பழக்கத்தின் அடிமைகள், பழக்கம் சிந்தனையின் இடத்தைப் பறித்துக் கொள்கிறது  என்கிற இவரின் தீர்மானமான கூற்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.  அதை மனம் ஒப்புதல் செய்யும்போது அதற்காக வெட்கப்படவும் செய்கிறது என்கிற உண்மையை உணராமல் இருக்க முடியவில்லை.

                           -------------------------------------------

    

 

26 ஜூன் 2021

அரங்க நாடகம் , “செய்ந்நன்றி” தினமணி சிறுவர் மணி

 

அரங்க நாடகம்                                                                      ,                    “செய்ந்நன்றி”       



 
                    

காட்சி-1  இடம் - ஒரு வீடு. எதிரே ஒரு மரம்-     மாந்தர் - முத்து-காக்கை மற்றும் நீலு அணில் (மரத்தில் உட்கார்ந்திருக்கிறது முத்து. நீலு அணில் அதனருகில் ஓடி வருகிறது)

நீலு அணில்--இன்னிக்கு சீக்கிரமே போய் நின்னிட்ட போலிருக்கு....? ஏதாச்சும் கிடைச்சுதா?

காக்கை முத்து - காலைல அந்த அய்யாதான் அடுப்படிக்கு வந்து பால் காய்ச்சுவாரு. அப்பவே போயிடுவேன்.....உடனே குரல் கொடுப்பேன்.  அதுக்குள்ள வந்திட்டியா...காபி குடிப்பியா? தர்றேன்னாரு ஒரு நா....

நீலு - அய்யய்ய...காப்பியா...கசக்குமே...? அந்த நேரம் போனா...அதத்தானே கேட்பாரு...?

முத்து - அது ஒரு மாதிரி மணத்துக்கிட்டுத்தான் இருந்திச்சு...இருந்தாலும் எனக்குப் பிடிக்கல...திரும்பக் கத்தினேன்.   புரிஞ்சிக்கிட்டாரு....அவருக்கு மனசு கேட்காது...நான் போய் நின்னா...எதாச்சும் உடனே எடுத்துப் போட்டிடுவாரு....இளகின மனசு அய்யாவுக்கு. அந்தம்மாவும் அப்டித்தான்.....சிரிச்ச முகம்...எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நீலு - எதாச்சும்னா....?

முத்து - வெல்லம், பொட்டுக்கடல, நிலக்கடல....சமயத்துல எப்பயாச்சும் பாதாம்பருப்பு, முந்திரின்னு, கிஸ்மிஸ்னு போடுவாரு.....அதனால அவர எனக்கு ரொம்பப் பிடிக்கும்..... சாதமும் போடுவாரு..இருந்தா.....

நீலு - அது பழைய சோறால்ல இருக்கும்....உனக்குத்தான் பிடிக்காதே...?

முத்து - பிடிக்காதுதான்....அவுங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்.. முதல் நாள் மிஞ்சின பழைய சோத்தை வீணாக்காம சாப்பிடுவாங்க...அதப் பார்த்திருக்கேன் நான். அதுல நமக்கும் கொஞ்சம் போடுறாங்களே...அது பெரிசில்லையா...அவுங்க நல்ல மனசை மதிச்சு நானும் சாப்பிட்டுக்கிறது.

நீலு - எனக்குப் பிடிக்காதுப்பா....நான் மதியம்தான் அங்க போவேன்...அந்தம்மா எனக்குன்னே மாடித் திட்டுல கொண்டு வந்து சூடா வைப்பாங்க....மணக்க மணக்க இருக்கும்...அதத்தான் நான் சாப்பிடுவேன்.....பருப்பும் நெய்யும் அப்டி மணக்குமாக்கும்...

முத்து - மாடித் திட்டுலயா...அப்போ புறா அண்ணன்லாம் வந்திடுவாங்களே...எப்படிச் சாளிக்கிறே....?

நீலு - அவுங்கள்லாம் வந்தாலும் நான் சாப்பிடைல நெருங்க மாட்டாங்க...அவங்களுக்குத்தான் தானியமெல்லாம் கிடைச்சிடுதே....

முத்து - தானியமா...அதென்னது?

நீலு - அது தெரியாதா உனக்கு? வரகு,  கம்பன்னு அந்த வீட்டம்மா சாப்பிடுவாங்க...அதுல கொஞ்சம் எடுத்திட்டு வந்து தவறாமப் போட்டிடுவாங்க.. அரிசியும் போடுவாங்க....இறைச்சு விட்டா....என்னா கூட்டம்ங்கிறே..?

முத்து - இந்தப் பகுதில புறா அண்ணன்க ஜாஸ்தி....கூட்டம் கூட்டமாத் திரியும்...பார்க்க ரொம்ப அழகா இருக்கும்...அதுக வந்து மொய்ச்சுக்கிட்டு...ஒரு பொட்டுத் தானியம் இல்லாமக் கொத்திட்டுப் போயிடும்....நானும் பார்த்திருக்கேன்....அந்தம்மாக்கு ரொம்ப தயாள குணம்....கோடை காலத்துல தண்ணி கிடைக்காம நாம கஷ்டப் படுவோம்ல....

நீலு - ஆமாமா....நானெல்லாம் குழாயடிக்குப் போயி அங்க தேங்கிக்கிடக்குறதை உறிஞ்சி தாகம் தீர்த்துக்குவேன்....ஏதாச்சும் வீட்டுக் கிணத்தடிக்குப் போய் வாளில இருக்கிற தண்ணிய உறிஞ்சுவேன்.

முத்து - எங்களுக்கெல்லாம் அந்தக் கவலையேல்ல. ஏன்னா அவரோட சம்சாரம் ஒரு சட்டில தண்ணிய ஊத்தி ஊத்தி மாடில வச்சிடுவாங்க...நாங்க போய்ப் போய்க் குடிச்சிக்கிடுவோம்...ஒரு நா கூட எங்களுக்கு தாகம்ங்கிறது கிடையாது....எழுந்தவுடனே எங்களத்தான் முதல்ல கவனிக்கும்....

நீலு - நல்ல இடமாத்தான் பிடிச்சிருக்கே....உன் பாடு கஷ்டமில்லாமக் கழிஞ்சிடுது....

முத்து - உனக்கு மட்டுமென்ன...தினமும் சூடா சாதம் கிடைக்குதுல்ல....மரத்துக்கு மரம் பட்டுப் பட்டுன்னு தாவி எத்தனை வீட்டுக்குப் போயிடுறே நீ....சமயத்துல கூட்டு, கறி, பொங்கல், வடைன்னு அமர்க்களப்படுதே உனக்கு....

நீலு - அதெல்லாம் எப்பயாச்சும்தான்....அதெல்லாம் வச்சாலும் கத்திக் கத்தி காகா...காகா...ன்னு உங்களத்தான கூப்பிடுறாங்க....நாங்க மரத்துலேர்ந்து பார்த்துக்கிட்டேயிருந்துல்ல ஓடி வர வேண்டியிருக்கு...முத்தண்ணே...நீங்க பரவால்ல...உங்க சகாக்கள் இருக்காங்களே....

முத்து - யாரு....யாரைச் சொல்றே....?

நீலு - வீட்டுக்குப் பின் பக்கம் போய்ப் பாருங்க....பெரிய வாதராட்சி மரம் இருக்குல்ல...அதுக்குள்ள முடங்கிக்கிட்டு அவுக பண்ற அட்டகாசம் தாங்க முடிலயாக்கும்....

முத்து - அப்டியா....? நான் கேட்கிறேன்....என்னன்னு பார்க்கிறேன்..... - சொல்லிவிட்டு காக்கை முத்து பறந்தது. (அந்தப் பக்கமே தான் போய் உணவு உண்ண முடியாததை ஆதங்கமாய் நினைத்திருந்த நீலு அணில், அதுக ஒழிஞ்சாச் சரி...என்று சந்தோஷமாய் அடுத்த வீட்டு மரத்தை நோக்கிப் பாய்ந்தது)

காட்சி-2 இடம் - அதே வீட்டின் கொல்லைப் புறம். மாந்தர் - முத்து.   (வாதராட்சி மரத்தில் யாருக்கும் தெரியாமல் பதுங்கியிருந்தது முத்து.   நீலு அணில் சொன்ன சகாக்கள் வருவதை எதிர்நோக்கிக் காத்திருந்தது.)

எதிர்பார்த்தது போலவே நான்கைந்து சகாக்கள் கா கா கா கா கா கா கா என்று ஒரே கூட்டமாய், இரைச்சலாய்க் கத்திக் கொண்டு மரத்தை ஒட்டிய காம்பவுன்ட் சுவரில் வரிசையாய் உட்காரவும், எழுந்து பறந்து குதிக்கவுமாய் இருந்ததைக் கண்ட முத்து எதற்காக என்று குறிப்பாய்க் கவனித்தது.எதாச்சும் இறைச்சி கிடைச்சிடுச்சோ...?  

எங்கிருந்தோ கொண்டு வந்திருந்த இறந்து போன பெருச்சாளி ஒன்றை அந்த வீட்டின் கொல்லைப் புறத்தில் நட்ட நடுத் தரையில் போட்டு அவை பறந்து பறந்து கொத்திக் குதறிக் கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சல் வந்தது முத்துவுக்கு. அருகில் துளசி மாடமும், அதில் போடப்பட்டிருந்த அழகான மாக்கோலமும், செம்பட்டையும், செழித்து வளர்ந்திருந்த துளசிச் செடியும்  அதைக் கும்பிட சற்று நேரத்தில் வந்து விடுமே மாமி என்று நினைத்து முத்துவுக்கு உடம்பெல்லாம் பதறியது.

கா...கா...கா...என்று இடைவிடாது கத்திக் கொண்டு அந்த இரையை நோக்கி நோக்கிப் பாயும் தன் சகாக்கள். பயங்கரமாய்க் கோபம் வந்தது முத்துவுக்கு. நாகரீகமில்லாத, மரியாதை தெரியாத ஜென்மங்கள்....

முத்து - உங்களுக்கெல்லாம் அறிவில்ல...? இந்தக் கண்றாவிய இங்க கொண்டு வந்து போட்டிருக்கீங்களே...? வீட்டுக்குள்ள... அதுவும் சாமி கும்பிடுற இடத்துல போட்டா...என்ன அர்த்தம்? திங்கறதுக்கு இதுவா இடம்? எங்கயாச்சும் ரோட்டு மூலைல மறைவா போட்டுட்டுத் தின்ன வேண்டிதானே...யார் கேட்கப் போறாங்க...? அறிவு கெட்ட ஜென்மங்களா...?

கூட்டக் காகங்களில் ஒன்று - முத்துண்ணே...பார்த்துப் பேசுங்க...எங்களுக்கு பெரிய இரை கிடைச்சிச்சு...தூக்கிட்டு வந்தோம். அது வயித்தெறிச்சலா இருக்கா உங்களுக்கு?

முத்து - இரை கிடைச்சிதுன்னா...? எங்க வேணாலும் வீசிப் போட்டு சாப்பிடுவீங்களா? கோயில் மாதிரி இடத்தை அசிங்கம் பண்ணுவீங்களா? நம்மள மதிக்கிறவங்களை பதிலுக்கு மதிக்கணும்ங்கிறது கூட உங்களுக்குத் தெரியாதா?

 இதே வீட்டுல எத்தனை வாட்டி சோறு வாங்கித் தின்னுறுக்கீங்க...? கொஞ்ச மாச்சும் நன்னி வேணாம்...வடை, பொங்கல், போளின்னு, பழம்னு வாய்க்கு ருசியா அந்தம்மா எவ்வளவு ஆசை ஆசையா உங்களுக்குக் கொண்டு  வந்து போட்டாங்க...? அப்பல்லாம் கொள்ளையடிக்கிற மாதிரி அடிச்சு அடிச்சுப் பறந்து வந்து கொத்திட்டு ஓடினீங்க?...அடுத்தவங்களுக்குக் கூட வைக்கக் கூடாதுன்னு பெரிசு பெரிசா தூக்கிட்டுப் மறைஞ்சீங்க....நம்மள நோகாமக் கவனிச்சவங்களுக்கு இதுதான் நீங்க காட்டுற மரியாதையா? அன்னமிட்ட இடத்துல அசிங்கம் பண்றதா?

காக்காய் கூட்டம் -(பல குரல்கள்)  நீங்க சொல்றபடி வெளில கொண்டு போட்டா, பூனைத் தொல்லை இருக்கு...நாய்கள் ஓடி வந்திருது வாடை பிடிச்சிட்டு...நாங்க கஷ்டப்பட்டுத் தூக்கி வந்ததைப் பறி கொடுத்திட்டு நிக்கச் சொல்றீங்களா...? இங்கன்னாதான் எங்களுக்கப் பாதுகாப்பு.....

(மரத்தில் ஒடுங்கிக் கொண்டிருந்த நீலு அணில் இதையெல்லாம் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.கடைசியாய் முத்து என்னதான் செய்யப் போகிறது என்று அறிய அதற்கு ஆவல்)

முத்து - அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்....இது கோயில் மாதிரி. இங்க வச்சு நீங்க இந்த அசிங்கத்தைப் பண்ணக் கூடாது. நம்மள மதிக்கிறவங்களை நாமளும் மதிச்சு நடக்கணும். அதுதான் பண்பு. இப்போ எடுக்கப் போறீங்களா இல்லையா?

காக்காய் கூட்டம் - (பல குரல்கள்) முடியாது....இதுதான் எங்களுக்கு பாதுகாப்பான இடம்...வெளில எடுத்திட்டுப் போனா எங்க இரை  பறி போயிடும்....முடியாது...முடியாது...இன்னிக்குச் சாப்பாடு இதுதான் எங்களுக்கு....தினமும் வெறும் சோத்தைத் தின்னு தின்னு ருசி செத்துப் போச்சு எங்களுக்கு...இத நாங்க விடமாட்டோம்....கொழு கொழு பெருச்சாளி...யார் கொடுத்த கொடையோ...?

இதைச் சொன்ன போது அடுத்த கணம்  முத்து அங்கே இல்லை.   எங்கே போச்சு? ஆளைக் காணலை? உறா...உறா....பயந்து ஓடிடுச்சி முத்தண்ணன்....வாங்க...வாங்க...நாம சீக்கிரம் சாப்பிட்டுக் காலி பண்ணுவோம்.....மறுபடி வந்திடப் போவுது....அதோட அதிகாரம் தாங்க முடில....

சொல்லிக் கொண்டிருந்தபோதே அங்கு  திடீரென்று தோன்றிய மின்னலைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் என்ன...என்ன....என்னாச்சு...என்னாச்சு....எதுவோ விர்ர்ர்ன்னு காத்தடிச்ச மாதிரி இருந்திச்சில்ல... பறந்து வந்த மாதிரி இருந்திச்சில்ல....யாரோ புயல் மாதிரி சர்ர்ர்ன்னு வந்துடுட்டு மறைஞ்சிட்டாங்களே.....யார் வந்தது? நீ பார்த்தியா...நீ பார்த்தியா...? அட...யாருமே பார்க்கலியா...ஒருத்தர் கூடப் பார்க்கலியா.... - ? எல்லாமும் கே...கே...கே...என்று கத்தித் தீர்த்தன.

காட்சி-3 மாந்தர் - முத்து காக்கை மற்றும் நீலு அணில் - (வாதராட்சி மரத்தின் உயரத்தில் அடர்ந்த கிளைகளின் ஊடே இருளில் அமர்ந்திருந்தது முத்து. அருகே நீலு. )

நீலு - நல்ல காரியம் பண்ணினே முத்துண்ணா....நீ மட்டும் கழுகண்ணாவக் கூட்டிட்டு வரல்லேன்னா இந்த வெட்டிக் கூட்டம் நீ சொன்னதைக் கேட்கவே கேட்காது. இன்னிக்கு ஏதோ விசேஷம் போல்ருக்கு....வீடு பூராவும் மாக்கோலம் போட்டிருக்காங்க மாமி...பார்த்தியா? இப்டி நாள்லயா இந்த அநாச்சாரம் பண்றது? எத்தனை சொல்லியும் ஒண்ணு கூடக் கேட்க மாட்டேங்குதே...? என்னா திமிர் இதுகளுக்கு? சரியான பதிலடி கொடுத்தே....

முத்து - வேறே வழி தெரில நீலு.. இனம் இனத்தோடன்னுவாங்க...என் ஆட்களே என் சொல்லைக் கேட்காதபோது நான் என்னதான் பண்றது? ..இதுக்கு கழுகண்ணன்தான் சரின்னு சட்டுன்னு மனசுல தோணிச்சு. ரெண்டு தெரு தள்ளிப் போயி இருக்கிற  சின்னத் தோப்புல காத்திருந்தேன். அது வந்திச்சு. இந்த மாதிரி சமாச்சாரம்னு சொன்னேன்....நீ பயப்படாதே...நான் பார்த்துக்கிறேன்னு வந்திடுச்சு....கண் மூடிக் கண் திறக்கிறதுக்குள்ளே முடிச்சிருச்சு பார்த்தியா?

நீலு - இதுகளப் பாரு.....எங்க போச்சு...யார் தூக்கிட்டுப் போனான்னு கூடத் தெரியாம கத்திட்டுக் கிடக்கிறதை? முட்டாப் பிள்ளைங்க...நல்லாதாப் போச்சு....மாமிக்கு இந்த நல்ல நாள்ல நாம ஒரு நல்லதைச் செய்திட்டோம்.புண்ணியம் கட்டிக்கிட்டோம். இப்பத்தான் மனசு நிறைஞ்சது....போகட்டும்...இப்ப உடனேயே நீ இந்தக் கூட்டத்துக்கு நடுவுல போயிடாதே...உன்னைக் குதறிக் காயப்படுத்தினாலும் போச்சு...அம்புட்டும் அவ்வளவு வெறில இருக்கு....வழக்கம்போல...பஜனை மடம் சாஸ்தா வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் வரலாம். இப்ப எல்லாம் உன் மேலே பயங்கரக் கோபமா இருக்கும்...சரியா....?

முத்து - கரெக்ட்..அதான் சரி....இது கண்ணுல முழிக்காமக் கொஞ்சம் தள்ளி இருப்போம் இந்த நல்ல நாள்ல....யோசனை சொன்னதுக்கு நன்றி...நா வர்றேன்....சாயங்காலம் பார்க்கலாம்.... சொல்லிவிட்டுக் கண் இமைக்கும் நேரத்தில் பறந்து மறைந்தது காக்காய் முத்தண்ணன்.

அது போவதையும் கொல்லைப் புறத்தில் தூணோரமாய் மாமி வைத்திருக்கும் நைவேத்தியப் பொங்கல் சாதத்தையும் ருசி பார்ப்பதற்கு சரியான தருணம் பார்த்துக் கொண்டு மாமி வரவை எதிர்நோக்கிக்  காத்திருந்தது நீலு அணில்.

                                  -----------------------------------------------------

 

 

 

 

 

 

 

      

 

 

                                                                     அரங்க நாடகம்                               “பானுவும்-ஜித்துவும்...”     



   
           ,  

காட்சி-1 இடம் - வீடு.  கருவேப்பிலை மரத்தடி. மாந்தர்-தாய்ப்பூனை-பானு- குட்டி-ஜித்து

தாய்ப்பூனை பானு- என்ன, காம்பவுன்ட் சுவத்தையே உத்துப் பார்த்துக்கிட்டிருக்கே...? இன்னும் பொழுது கூடச் சரியா விடியலை...? அதுக்குள்ளயும் ஏன் எழுந்தே...? (வீட்டினுள் லேசான சத்தம். யாரோ எழுந்து அடுப்படி விளக்கைப் போடுகிறார்கள்) பூனைக்குட்டி ஜித்து லேசாக நடுங்கியதுபோல் தன்னை மேலும் நன்றாக செடிக்குள் ஒடுக்கிக் கொள்கிறது. (வெளியில் உள்ள கருவேப்பிலைச் செடியை ஒட்டிய ஜன்னல் திறக்கும் சத்தம்).

பானு- என்ன...நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்...பதில் சொல்லாம இருக்கே...? (ஜித்துவின் பார்வை வாசல் காம்பவுன்ட் சுவற்றிலேயே நிலைத்திருக்கிறது.) ஓகோ...அதுவா சேதி...பால் பாக்கெட் எப்பப் போடுவான்னு காத்திட்டிருக்கியாக்கும்? அதுக்குள்ளே திருட்டுப் புத்தி வந்திடுச்சா?

ஜித்து - ம்...ம்...இல்ல....என்பதுபோல் தலையாட்டுகிறது.

பானு- குசும்பு....? ஆரம்பிச்சிட்டியா உன் வேலையை? உள்ளே ஒரு பாப்பா இருக்கு தெரியும்ல....?

ஜித்து - தெளியும்....அதுக்காக.?...எனக்குப் பால் வேண்டாமா...? நானும் பாப்பாதானே? பாப்பாக் குட்டி...

பானு - இப்பத்தான் தெரியுது...நேத்திக்கும் இந்த வேலை பண்ணினது - பாக்கெட்டைக் கடிச்சு, பாலை உறிஞ்சி காலி பண்ணினது நீதானா? அந்த அய்யா கம்பெடுத்து ஓங்கி ஒண்ணு போட்டாரே...நல்ல வேளை தப்பிச்சிட்ட...இல்லன்னா நேத்திக்கே செத்திருப்பே...! நான் பார்த்திட்டுத்தானே இருந்தேன்....!

ஜித்து - அப்போ ஏன் தடுக்கலை....? நான் அடி வாங்கணும்னு விட்டுட்டியா?

பானு - அப்டி விடுவனாடா தங்கம்....நீ என்ன செய்யப்போறேன்னே தெரியாம இருந்திட்டேன்...! நான் காம்பவுன்ட் சுவத்துல தள்ளி நின்னு அவரப் பார்த்து உர்ர்ர்ன்னு முறைச்சப்புறம்தான் பயந்து  உள்ளே போனாரு...பூனையா இது...புலி மாதிரியிருக்குது...ன்னு கூடச் சொன்னாரே...காதுல விழலியா?

ஜித்து - அடிச்சாரா உன்னையும்?

பானு - அடிக்க மாட்டாங்க...அடிக்கிற மாதிரி பாவலாதான் காட்டுவாங்க....அடிச்சு நாம செத்துட்டம்னா...நம்மள மாதிரி தங்கத்துல பூனை செய்து வைக்கணும்னு பேசிக்குவாங்க....! அதனால பயம்....

காட்சி-2 இடம் - வீடு. மாந்தர் - பால் போடும் பையன். மற்றும் ஜித்து ...பானு

 ஜித்து ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்தோடியது. காம்பவுன்ட் திட்டில் ஒரு பையன் இரண்டு பால் பாக்கெட்களை வைத்து விட்டு, கதவுக் கொண்டியை சத்தம் எழுப்பி, பால் என்று குரல் கொடுத்துவிட்டு சைக்கிளை விட்டான். அவன் நகர்ந்ததும் சற்றுத் தள்ளியிருந்த ஜித்து மெல்ல பாக்கெட்டை நோக்கி நகர்ந்தது. வாசல் கதவை யாரும் திறக்கவில்லை. சத்தம் உள்ளே கேட்டதோ என்னவோ?

பானு - இப்பத்தான சொல்லிக்கிட்டிருந்தேன். அதுக்குள்ளயுமா? சொன்னாக் கேளு...அவங்களுக்கு ஒரு பாப்பா இருக்கு தெரியுமோ? அதுக்குப் பால் வேணும். அந்த அய்யா இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திடுவாங்க...அவங்க காப்பி போட்டுக் குடிக்கணும்ல...ஓடி வா...ஓடி வா....

ஜித்து - ஏம்மா தடுக்கிறே...? எனக்குப் பசிக்குது....காலைல இந்தப் பச்சைப் பாலைக் குடிச்சா எவ்வளவு ருசியா இருக்கு தெரியுமா...? கொஞ்சூண்டு குடிச்சிக்கிறேனே...

பானு- கொஞ்சூண்டுன்னா...? அப்புறம் மிச்சப்பாலெல்லாம் வழிஞ்சி வீணாப் போகாதா? பாக்கெட் ஓட்டையாயிடும்ல......நாம வாய் வச்சிட்டம்னா அப்புறம் அவுங்க அதைத் தொட மாட்டாங்க...நம்ப முடியிருக்கும்னு பயம்....திருடித் திங்கிறது தப்புன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உனக்கு?  கேட்க மாட்டே?

வெளிக் கதவு திறக்கும் சத்தம். வாசல் லைட் பளிச்சென்று எரிந்தது.

பானு - ஓடி வந்திடு...ஓடி வந்திடு...அடிக்கப் போறாங்க.... (ஜித்து பாய்ந்து பாய்ந்து பறந்து மறுபடி கருவேப்பிலைச் செடி பின்னால் போய் ஒளிந்து கொண்டது)

ஜித்து - போம்மா... விட்டிருந்தேன்னா ரெண்டு நிமிஷத்துல குடிச்சிருப்பேன்.

பானு -அது கூடாது. அந்தப் பாப்பாவுக்குப் பால் இல்லாமப் போயிரும். அவுங்க நல்லவங்க..அவங்களாலதான் நீ இன்னிக்கு எனக்கு இவ்வளவு அழகாக் கிடைச்சிருக்கே...நீ வயித்துல இருக்கைல அவுங்க என்னை விரட்டவே மாட்டாங்க....நான் வந்தாலே எதாச்சும் சாப்பிட எடுத்து வச்சிடுவாங்க...அம்புட்டுப் பிரியம் எம்மேலே. நன்றியோட இருக்கணும்...சரியா...? .கெடுதல் செய்யக் கூடாது. தெரிஞ்சிதா?

ஜித்து - நல்லவங்கங்கிறே...அப்புறம் கம்பால அடிச்சாரே...?.

பானு - அப்புறம் நீ திருடித் தின்னா, அடிக்காம என்ன பண்ணுவாங்க..? பாச்சாதானே காட்டினாங்க...    உனக்குப் பசிக்கு நான் கொண்டு வந்து தர்றேன்...அதத்தான் சாப்பிடணும்....

ஜித்து - நீ எங்கேயிருந்தும்மா கொண்டு வருவே...?

பானு - ஏதாச்சும் வீடுகள்லேர்ந்துதான். சில வீடுகளை நான் பழக்கம் பண்ணி வச்சிருக்கேன். அங்க போய் நின்னேன்னா எனக்குப் போடுவாங்க....அதத்தான் தினமும் நான் உனக்குக் கொண்டு வர்றேன்...நமக்கு இந்த வீடு அந்த வீடுன்னு கணக்கெல்லாம் இல்லை...எல்லா வீடும் ஒண்ணுதான்...தெரிஞ்சிதா?

ஜித்து - அது சாப்பாடுதானே...எனக்கு பால் குடிக்க ஆசையா இருக்கே...?

பானு - பால் வேணும்னா திருடியா குடிக்கிறது? அது வயித்துல செரிக்க வேண்டாமா? எங்கயும் அன்பா, சாதுவா நல்ல பிள்ளையா நடந்துக்கணும்...நல்ல பூனைன்னு பேர் எடுக்கணும்...அப்பத்தான் பிரியமா நடத்துவாங்க...அப்டிச் செய்து பார்....உன் வயிறு தானே நிறையும்...அப்புறம் எனக்காகக் காத்திட்டிருக்க மாட்டே...தினமும் நீயே உன் வயித்தை நிரப்பிக்குவே...இவங்ககிட்டயே இரு...இரக்கமானவங்க...நல்லவங்க....

ஜித்து - ஏதோ புரிந்ததுபோல் சரிம்மா...என்றது.  மனதில் அன்றொரு நாள் அம்மாவோடு பக்கத்து வீட்டு கொல்லையில் போய் நின்றதும் அவர்கள் தடவிக் கொடுத்து சாதம் போட்டதும் படமாய் ஓடியது.

காட்சி-3 - இடம்-வீடு மாந்தர்- வீட்டுக்காரர் சாம்பு, அவர் மனைவி பத்மா. கொஞ்சம் தள்ளி மோட்டார் பம்ப் அருகில் ஜித்து..  காலை நேரம் மணி ஒன்பதைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஜித்துவுக்கு பசி உயிரெடுத்தது. அழுக்குத் தண்ணீரை ஊற்ற வந்த பத்மா பூனைக்குட்டி இருப்பதைப் பார்த்துத் தயங்கி, வேறு திக்கில் ஊற்றினாள். ஜித்துவைப் பார்த்து செல்லக் குட்டீ....என்று சிரிக்கிறாள்.

பத்மா - ஏங்க இங்க வாங்களேன்...அந்தக் குட்டிப் பூனையைப் பாருங்களேன்...எவ்வளவு அழகா இருக்குன்னு...வெள்ளை வெளேர்னு பஞ்சுப் பொதியா மெத்து மெத்துன்னு....அழகாப் பெத்தெடுத்திருக்கு...

சாம்பு - சர்தான்...உள்ளே குழந்தை எழுந்திரிச்சிடப் போறான்...அத மொதல்ல கவனி.....

பத்மா - உங்களுக்கு ரசனையே கிடையாது. நம்ப குழந்தை மாதிரிதானேங்க அதுவும். முன் காலை ஊனி உட்கார்ந்திருக்கிற அழகைத்தான் ஒரு தடவை பாருங்களேன்...மொபைல்ல ஒரு ஃபோட்டோ எடுங்களேன்...நல்லா சிரிச்ச மூஞ்சி அதுக்கு....

சாம்பு - பூனைக்கு சிரிச்ச மூஞ்சின்னு இப்போ நீ சொல்லித்தான் வாழ்நாள்ல முதல் தடவையா கேட்கிறேன்...அது எப்டியும் தன் இரையைத் தேடிக்கும்...குழந்தைக்கு நாமதான் கவனிச்சாகணும்...அதுக்கு பால் கொடுக்கிற வழியைப் பாரு....இதோட மிச்சம் ரெண்டு குட்டி நாலு வீடு தள்ளி ஒரு வீட்ல அலையுது...அது தெரியுமா? இருக்கிறதுலயே பியூட்டி இதுதான்...பெரிய பூனை அங்கயும் போகும், வரும்...

ஆபீஸ் கிளம்பத் தயாராய் குளித்து, தலைசீவி, விபூதியிட்டு, சாமி கும்பிட்டு,  சாப்பிட அமர்கிறார். பக்கத்தில் கொல்லைக் கதவு வாசலில் ஜித்து.

சாம்பு - அட, நீயும் வந்திட்டியா...? உனக்கும் பசிக்குதாக்கும்.. இரு...இரு....பத்மா...அந்தப் பூனைக் குட்டி வந்திருக்கு...அதுக்கு துளி சாதத்தைப் பால்ல பிசைஞ்சு வையேன்...

பத்மா - பக்கத்துல வந்து சமத்தா உட்கார்ந்ததைப் பார்த்ததும் இரக்கம் வந்திடுச்சாக்கும் ஐயாவுக்கு...? ஜித்துன்னு அழகாப் பேர் வச்சிட்டு என்னடா அதோட ஒதுங்கிட்டீங்களேன்னு நினைச்சேன்...திரும்பவும் பாசம் வந்திடுச்சு போல்ருக்கு...

சாம்பு-...நம்மள மாதிரி அதுவும் ஒரு ஜீவன்தானே...சின்னஞ்சிறு குட்டிவேறே...அப்பாவியா உட்கார்ந்திருக்கிற அழகப்பாரு....இதோட அம்மா பிரக்னன்டா இருக்கிறபோதுதானே பால் பாக்கெட்டைக் காலி பண்ணும்....அந்தப் பால்காரன் சொல்லித்தானே அது தாய்மையா இருக்கிறதே நமக்குத் தெரிஞ்சிது. வாசல் கொண்டைப்பூ மரத்தடில, ஈர மண்ணுல வயித்தைப் புதைச்சு,புஸ்ஸூன்னு கண்ணை மூடி சுருண்டு படுத்துக்குமே...தினம் கால் லிட்டர் பாக்கெட் வாங்க ஆரம்பிச்சதே அப்புறம்தானே...அதுக்குத்தானே...?

பத்மா - ஆமங்க...அதுக்கும் அழகான குட்டி....நமக்கும் புஷ்டியா ஒரு பையன்...ஆகையினால இதப் பார்த்தா நம்ம குழந்தைதான் ஞாபகம் வரும் எனக்கு....எப்ப வந்தாலும் விரட்டவே மாட்டேன்...குட்டிய வீட்டுக்குள்ள விட்டிட்டு, அது கொல்லைல காவல் காக்குமாக்கும்...அதப் பார்த்திருக்கீங்களா? சொல்லிக் கொண்டே பால் சாதத்தை ஒரு சிறு தட்டில் கொண்டு வைத்தாள் பத்மா. அவள் கண்கள் கலங்கியிருந்தது.

 ஜித்து - அவுங்க ரொம்ப நல்லவங்க.... - அம்மா சொன்னதை கவனமாக நினைத்துக் கொண்டது பூனைக்குட்டி.ஜித்து. இனிமே  காம்பவுன்ட்ல வைக்கிற பால் பாக்கெட்டைக் குடிக்கப் போகக் கூடாது என்று அப்பொழுதே நினைத்துக் கொண்டு அந்தப் பால் சாதத்தை  நன்றியோடு ரசித்து உண்ண ஆரம்பித்தது.

                                         ------------------------------------

 

 

 

 

 

13 ஜூன் 2021

“சுதந்தர பூமி” - நாவல் - By இந்திரா பார்த்தசாரதி - வாசிப்பனுபவம் - கட்டுரை

 

சுதந்தர பூமி” - நாவல் - By இந்திரா பார்த்தசாரதி -





     1960 க்குப் பிறகு வாசகர்களுக்கு அறிமுகமான சில முன்னணிப் படைப்பாளிகளில் இந்திரா பார்த்தசாரதி முக்கியமானவர்.   இவரது “Heஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன“ நாவலைப் படித்துவிட்டு ஜெட் விமானங்கள் கீழே இறங்கி விட்டன என்று தலைப்புக் கொடுத்திருக்கலாம் என்று தி.ஜா அவர்கள் பாராட்டினார். அத்தனை வேகம் இவரது எழுத்தில். அந்த நாவலை அப்படிப் புகழ்ந்து பாராட்டினார் தி.ஜானகிராமன். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத, புதிய உற்சாகத்தைக் கொடுக்கும் நாவல் அது.

     அதற்கு இணையாக அவரது அரசியல் நாவல்கள் பலவும் புகழ் பெற்றவை. பணி நிமித்தம் டெல்லியில் சில காலம் இருந்தவர் என்பதாலும், பல முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அறிமுகத்திலும் பழக்கத்திலும், இந்த நாவல் அவரிடம் உருப்பெற்றிருக்கின்றன எனக் கொள்ளலாம். எதானாலும் சுவைப குன்றாமல் சொல்ல முடியும் என்பதே இவரது திறமை.

     இந்த நாவலைப் பொறுத்தவரை நான்கைந்து கேரக்டர்கள்தான். டெல்லிக்கு வேலை தேடிச் செல்லும் ப்ரொபசர் முகுந்தன். அவன் சந்திக்கும் அரசியல்வாதி மிஸ்ரா. எதற்கும் துணிந்த பெண்மணியான டாக்டர் சரளா...இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். டாக்டர் சராளாவின் பேச்சு, நடவடிக்கைகளைக் கண்ணுறும்போது நமக்கு கொஞ்ச காலத்திற்கு முன் அதிகமாக அடிபட்டாரே நீரா ராடியா என்றொரு பெண்மணி...அவரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிரதமராக வரும் பாத்திரம் ஒரு பெண்மணியாக வரிக்கப்படுவதால் இந்திராகாந்தி காலத்துக்கு கதை என்றும் கொள்ளலாம்.

     கதாநாயகன் டெல்லிக்கு வேலை தேடிப் போய் மி-ஸ்ராவிடம் சமையல்காரனாகி, அவருக்குக் காபி கலந்து கொடுப்பதிலிருந்து படிப்படியாக அரசியல் சதுரங்க விளையாட்டில் அவன் எப்படி பங்கு பெறுகிறான் அல்லது பங்கு பெற வைக்கப்படுகிறான் என்று வளர்ந்து, கடைசியில் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவது வரை கதை  விறுவிறுப்பாகச் சொல்லப்படுகிறது. இதில் வரும் உரையாடல்கள் கதை தொடராக வெளிவந்த காலத்தில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிகிறோம்.

     ஒரு குறுகிய எல்லையை வகுத்துக் கொண்டு ஓர் இனத்தையே முட்டாளாக்கி அரசியல் லாபத்தை அனுபவித்து வரும் ஒரு ஃப்யூடல் கட்சியை எத்தனை நாள்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? என்று இதில் வரும் பிரதமர் கவலைப்படுகிறார். நீங்கள் சொல்வது புரிகிறது...தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் எதிர்நீச்சல்  போட்டு வெற்றி காண்பது என்பது ஒரு பகீரதப் பிரயத்தனம்தான் என்கிறான் முகுந்தன்.

     பகீரதப் பிரயத்தனமல்ல. தமிழ்நாட்டு பிரக்ஞைபற்றிய வரலாற்று ரீதியான சமூகவியல் பிரக்ஞை வேண்டும். தாழ்வு மனப்பான்மையினால் கஷ்டப்படுகிறார்கள் தமிழர்கள்..இவர்களைத் திருப்திப்படுத்த சின்னச் சின்ன விஷயங்களே போதும்...இந்தளவுக்குப் புரிந்து கொண்டு மாற்றுக் கோஷங்கள் கொடுத்தால் நிச்சயமாக வெற்றி அடையலாம் என்று யோசனை சொல்லப்படுகிறது.

     முகுந்தன் மிஸ்ராவால் எவ்வாறு படிப்படியாக மாற்றப்படுகிறான் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

     உனக்குக் கீழே இருக்கின்றவர்களை விரட்ட வேண்டும். கண்ணியம், கூச்சம், ஆகியவற்றை ஒதுக்கி வைப்பதுதான் முன்னேறி வரும் ஒரு அரசியல்வாதிக்குத் தேவை. அப்பொழுதுதான் ஒரு இயந்திர ரீதியான, ப்ரொஃபஷனல் அரசியல்வாதியாக நீ இருக்க முடியும்...நாட்டுக்குப் பணி செய்ய வேண்டும் என்ற லட்சியப்பூர்வமான காந்தியுகத் தாரக மந்திரங்களை மறந்து “அரசியல் ஒரு உத்தியோகம்” என்ற உண்மையைச் சந்திக்க உன்னைத் தயார் செய்து கொள்...-என்று உபதேசிக்கிறார் மிஸ்ரா.

     யோசிக்கிறான் முகுந்தன். அமெரிக்காவில் அரசியலை ஒரு உத்தியோகம் என்கிற ரீதியில்தான் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.லட்சியப் போர்வைகள் இல்லை...இதனால் மக்களுக்கும் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க வேண்டுமென்று தெரியும்.இதனால் இரு சார்பிலும் ஏமாற்றம் கிடையாது. பார்க்கப்போனா் தமிழ்நாட்டிலும் அத்தகைய அரசியல் சூழ்நிலை உருவாகித்தான் கிடக்கிறது. மந்திரிகளின், அந்த அரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கையைப்பற்றி மக்கள் கவலைப்பட்டிருந்தார்களென்றால் ஆளுங்கட்சி இவ்வளவு செல்வாக்குடன் மறுபடியும் பதவிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நாட்டில் ஏழை ஜனங்களுக்கு நன்மை செய்கிறோமோ இல்லையோ, பணக்காரனை அடிப்பது போல் ஒரு பாவனை செய்தால் போதும், அவர்களைத் திருப்திப்படுத்தி விடலாம்.

     இந்த உரையாடல்கள் நம்மை திருப்திப்படுத்தும்தான். அதே சமயம் இதை வெறும் அரசியல் நாவல் என்று நாம் வகைப்படுத்திவிட முடியாது. இந்த நாவலில் பேசப்படும் கவலை நிறைந்த விஷயங்கள், நம் நாடு சுதந்தரம் அடைந்த நாள் முதலாய் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பவைதான். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அங்கங்கே கேலி செய்து கொண்டே நகர்கிறார் இ.பா. “அயல்நாடு சென்று வெற்றி வாகை சூடி வரும் தமிழரே...வருக...வருக...” என்று வெறுமே மலேஷியா சென்று வரும் ஒரு அமைச்சரைப் புகழ்ந்து கோஷமிட்டு ஆர்ப்பரிக்க....எதற்கு? அந்த நாட்டோடு தமிழ்நாட்டுக்கு ஏதும் சண்டையா? என்று ஏதும் புரியாமல் அப்பாவியாகக் கேட்கிறார் மிஸ்ரா.....இங்கே இப்படித்தான் அரசியல் கேலிக்கூத்தாய் சிரித்துக் கிடக்கிறது என்று பின்னால் புரிந்து கொள்கிறார்.

     இந்திரா பாரத்தசாரதி அவர்கள் அவர் மனதில் பட்டதைச் சொல்லத் தயங்கியதேயில்லை என்பதை அவரது வெவ்வேறு நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் மூலமும், அவற்றிற்கிடையேயான உரையாடல்கள் மூலமும் நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கருத்துக்களை அவரது கட்டுரைகளிலும்  அவர் எழுதியிருக்கிறார்.

     தனது அரசியல் அபிலாஷைகளுக்கு இந்தத் தமிழ் இளைஞன் நன்கு பயன்படுவான் என்று ஆ ரம்பத்திலேயே புரிந்து கொள்ளும் மிஸ்ராவும், அவரை அணுகியே தன் அனுபவங்களைப் பெருக்கிக் கொண்டு தெளிவடையும் முகுந்தனும், இவர்களின் விளையாட்டை உடனிருந்தே கண்காணித்து, கூடப் பயணித்து பயனடையத் துடிக்கும் டாக்டர் சரளாவின் பங்களிப்பும்....நாவலுக்கு மிகுந்த சுவையூட்டுகின்றன.

     கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கட்சிக் கொடிகளோடு சேர்த்துக் காற்றில் பறக்கவிட்டு அரசியல் நடத்திக் கொண்டு இருப்போரே இந்நாவலின் இலக்கு என்ற முக்கியமான இப்புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பு கவனிக்கத் தக்கது. அந்தப் பின்னணியில் அழுத்தமும், சிந்தனையாழமும் கொண்ட  அற்புதமான நாவல் இது என்று சொல்லலாம்.                                        ---------------------------

    

09 ஜூன் 2021

“அறியப்படாத தீவின் கதை” - ஜோஸே ஸரமாகோ- (போர்த்துகீசிய நாவல்) ஆங்கிலம் வழி தமிழில்-ஆனந்த் - [ வாசிப்பனுபவம் - உஷாதீபன் ]

 

அறியப்படாத தீவின் கதை” - ஜோஸே ஸரமாகோ- (போர்த்துகீசிய நாவல்) ஆங்கிலம் வழி தமிழில்-ஆனந்த் - [ வாசிப்பனுபவம் - உஷாதீபன் ]



      றியப்படாத தீவு - என்ற தலைப்பே நம்மைக் கவனிக்க வைக்கிறது. அப்படியெனில் ஒரு தீவு உள்ளது என்றும், அது இப்பொழுதும் அறியப்படாமல் கிடக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். இதுவரை அறியப்படாத ஒன்றை அப்படிப் பெயரிட்டு அழைப்பதுதானே முறை.

     அப்படியான தீவு ஒன்றை அறிய முற்பட்டு ஒரு படகு வேண்டி அரசனிடம் போய் நிற்கிறான் ஒருவன். ( இங்கே முனிசிபாலிட்டியிலும், பஞ்சாயத்திலும் அல்லது மாநகராட்சியிலும் சொல்லி எந்தப் பயனும் இல்லை என்று கருதி நேரடியாக சீஃப் மினிஸ்டர் செல்-லுக்கே எழுதுவதில்லையா? அப்பொழுதுதான் காரியம் ஆகும் என்று கோரிக்கையைக் கவனத்திற்குக் கொண்டு செல்வதில்லையா?) அதுபோல அரசனிடம்தான் தன் கோரிக்கையை நேரடியாக அவரிடம்தான் சொல்ல வேண்டும் என்கிறான் அந்தப் பிரஜை. வாயிற்காப்போனிடம் சொல்லி, பிறகு கீழ்நிலைப் பணியாளனிடம் அதைப் பகிர்ந்து, அவன் மூலம் அடுத்தடுத்த படி நிலைகளைக் கடந்து கடைசியாக அரசனுக்குப் போய்ச் சேருவதுபோல, கோட்டை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் மணியை இழுத்து அடித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதைப்போல  என்றெல்லாம் அல்லாமல்  நேரடியாக மன்னனிடம்தான் சொல்லுவேன் என்று நிற்கும் ஒருவனை என்னதான் செய்வது?

     நாடும் சமூகமும் அளித்த பெருங்கொடையின் நிமித்தமாக அல்லது அவனுக்கென்று அளித்துள்ள சிறப்புச் சலுகைகளின் வழி அரசன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நிலையில், விண்ணப்பங்களுக்கான கதவுகளும் அவ்வப்போது தட்டப்படும், அந்த வாசலும் எப்போதாவது திறந்து மூடப்பட வேண்டிய அவசியம் நேரும் என்பதை உணர நேரும் இக்கட்டான நிலை. சலுகைகளையே அனுபவித்து அதிலேயே சந்தோஷித்து வாழும் அரசனின் பொறுப்பு வாய்ந்த கடமைகளுக்கும் அவ்வப்போது நெருக்குதல் ஏற்பட்டுப் போகும் என்பதுதானே யதார்த்தம்?

     அந்த விசித்திர மனிதன் கேட்பதென்ன? ஒரு படகு. எதற்காக? அறியப்படாத தீவு ஒன்றினைக் கண்டறிவதற்காக. அறியப்படாத தீவுகள் என்று ஏதுமில்லை. எல்லாமும் அறியப்பட்டுவிட்டன. வரைபடங்களை நன்றாக அறியட்டும். அதில் அப்படி ஒன்று இருக்கிறதா என்பதைத் தேடட்டும். அப்போது இந்த உண்மை புலப்படும். இது அரசனின் பதிலாக இருக்கிறது.

     அதை அந்த எளிய மனிதன் ஏற்றுக் கொள்கிறானா என்ன? அப்படி இருப்பதற்கு சாத்தியமேயில்லை. அறியப்படாத தீவு என்று ஏதேனும் ஒன்று இருந்தே தீரும்.அறியப்படாத ஒன்றின் அறிதலே இப்போதைய  என் பணி. அது என் மூலமாக முற்றுப் பெற வேண்டும் என்பதே என் கனவு. எனவே அதை அறிவதற்கு எனக்குப் படகு தந்து உதவுங்கள் என்று வேண்டி நிற்கிறான். அவனது தொடர்ந்த நச்சரிப்பின் காரணமாக மக்களின் ஆதரவுக் குரல் அதிகரிப்பதைக் கண்ணுற்று, அந்த உதவியை அளிக்காமல் அவனை அங்கிருந்து நகர்த்த முடியாது என்கிற உணர்தலில் துறைமுகத்திலிருந்து அவனுக்கு ஒரு பாய்மரக்கப்பல் படகு அளிக்க உத்தரவிடப்படுகிறது.

     அது வெகு காலத்திற்குப் பயன்படுத்தப்படாது உபயோகமின்றி சிதிலமடைந்த, பழைய படகாக இருப்பதைக் கண்டு இரக்கமுற்று ஒரு  கடைநிலைப் பணிப்பெண் உதவுகிறாள். அவன் கோரிக்கையோடு வந்து நின்ற நாள் முதலாய் அவனைக் கவனித்து வருபவள். அவன் மீது உண்டான இரக்கம் அவளை அந்த உதவிக்குத் தூண்டுகிறது. ஆனால் அவனோடு பயணிக்க எந்த மாலுமிகளும் மனமுவந்து வரச் சம்மதிக்கவில்லையே? அவனின் அந்த முயற்சியின் மீது எவருக்கும் நம்பிக்கை எழவில்லையே? பின் அவன் எப்படித் தன் பயணத்தை மேற்கொள்ளுவான்?எப்படிப் படகினை இயக்குவான்? எவரெவரின் ஒத்துழைப்பில் அந்த அறியப்படாத தீவினைக் கண்டறிவான்? கலங்கி நிற்கும் ஒவ்வொரு முயற்சியிலும் மனம் தளராது தன் சிந்தையில் அந்த லட்சியத்தைச் சுமந்து கொண்டேயிருக்கிறான் அவன்.

     அறியப்படாத தீவினை அறிய முயலுதல், அதற்காகப் படகு ஒன்று வேண்டும் என்று அரசனிடம் போய் நிற்றல், படகைப் பெறுவதற்காக துறைமுகத் தலைவனிடம் விவாதித்தல், அளிக்கப்பட்ட பழைய படகை முழுமையாகச் சுத்தம் செய்து அவன் பயணத்திற்கு உதவுகையில் அந்தப் பணிப்பெண் அவன்பால் ஈர்க்கப்படுதல், என்று வெவ்வேறு படிநிலைகளில் நாவல் புரியும் விவாதப் பயணம், அந்த மனிதனின் கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற ஆர்வத்தை நமக்கு ஏற்படுகிறது. அவனோடு சேர்ந்து நாமும் பயணிக்க யத்தனிக்கிறது. இந்த வாழ்க்கையின் உன்னதமான பயணத்தை இந்த நாவல் அடியாழமாக உணர்த்திச் செல்கிறதோ என்கிற புரிதலில் நாம் வியந்து நிற்கிறோம்.

     அன்றிரவு அவன் காணும் அரிய கனவு ஒன்றே அவனை அந்த அறியப்படாத தீவிற்கு அழைத்துச் செல்கிறது. அதில் அவனோடு  பலரும் பயணம் செய்கிறார்கள்.  விவாதித்த மனிதர்கள், கேலி செய்த மாலுமிகள், உடன் வர மறுத்த பணியாளர்கள் என்று பலர் மற்றும் நிறையப் பெண்கள் அவனோடு பயணிக்கிறார்கள். கோழி. மாடு,கழுதை, குதிரை, வாத்து என்று பலவும் அந்தப் பயணத்தில் பங்கு கொள்கின்றன. அறியப்படாத தீவினைத் தேடிக் கிளம்பிய அந்தக் கப்பலே மெய்ம்மையான அந்தப் புது உலகில் ஒரு சிறிய தீவாக  மாறிப் போகிறது. வாழ்க்கைப் பயணத்தின் புத்தம் புதிய அனுபவங்கள்.

     ...இந்தப் பயணத்திற்கு பேருதவியாய் இருந்த, அவன் மனதிற்குகந்த, அன்பின்பாற்பட்ட அந்தப் பணிப்பெண் என்ன ஆனாள்? அவளைக் காணவில்லையே? அவனோடு வந்தாளா என்றால் இல்லை. கரையிலேயே ஒதுங்கி விட்டாளே அவள்? அவன் கவனம் முழுதும் அவள் மீதே நிலைத்து விடுகிறது. அவளின் அளப்பரிய பணியை நினைத்து நெஞ்சம் உருகுகிறது. அவள் தன் பயணத்திற்குப் பேருதவியாய் இருந்திருக்கிறாள். தன் கனவுகளின், லட்சியங்களின், செயல்பாடுகளின் ஆணி வேராய் நின்று பணியாற்றியிருக்கிறாள். என் முனைப்பான முயற்சிக்குத் தன் முனைப்பாய் நின்று உதவியிருக்கிறாள். அவளோடு உயிரும், உடலுமாய் கலந்து அந்தக் கனவுலகில் பயணிக்கிறான் அவன். அதுவே அவனை வெற்றி கொள்ள வைத்து விடுகிறது.

     கப்பல் தானாகவே ஒரு தீவினைச் சென்றடைந்து விடுகிறது. உடன் பயணித்தவர்கள் எல்லோரும் இறங்கிப் போய் விடுகிறார்கள். அவன் அவளோடு, அவளுடனான கனவுகளோடு தனித்து விடப்படுகிறான். படகிற்கு வர்ணம் பூசும் நிகழ்வின்போது அந்த வண்ணங்களின் கலவையில் அந்தப் படகே அழகிய தீவாய் புதிய உருப்பெற்று விடுகிறது.

                ஒரு தீவைத் தேடிப் பயணம் புரியும் சின்னஞ் சிறு தீவு அளவிற்கான மிகச்சிறிய குறுநாவலே இது. அந்தப் பெண்ணிற்கும் ஆணிற்குமான உறவின், அன்பின் ஆழங்களை, அதன் உள்ளார்ந்த மெய்யுணர்வை ஆத்மார்த்தமாய் உணர்த்தி செல்லும் ஒரு இனிமையான பயணமாக அமைகிறது இந்தச் சிறு நாவல். அந்த ஆணோடு கலந்த அந்தப் பெண்ணின் பயணம், அவள் அவனுக்கு ஒத்துழைப்பாக இருந்து அவனை வழி நடத்திச் செல்லுதல், அவனின் பயணத்தை இனிமையாக்குதல், வாழ்க்கைப் பயணங்களில் சோர்வடையாத நிலையில் இருத்தல்...என்பதாக இந்த வாழ்க்கையின் பல படிநிலைகளை உணர்த்துவதாகவே நாம் இந்த நாவலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணோடு இணைந்து கொண்ட இந்த வாழ்வில் நம்மால் அதுவரை அறியப்படாத வாழ்வின் வெவ்வேறு விதமான அனுபவங்களை எதிர்கொள்வதும் அதன் மூலம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வதுமான மெய்யான உணர்வுகளை எய்த முடியும் என்பதாக இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      இந்தச் சிறு நாவலின் முன்னுரையில் இப்படிச் சொல்லப்படுகிறது.

     “மொழி பெயர்த்தல் என்பது மற்றொரு சுயமான  படைப்பை உருவாக்கும் செயலுக்கு ஒப்பானதாகும். மூலத்திற்கு இணையானதாகவும், நியாயம் செய்வதாகவும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு சித்திரத்தைப் பார்த்து வரையும் இன்னொரு சித்திரம் எனலாம். சில வண்ண மாற்றங்களும், வடிவ மாற்றங்களும் மூல சித்திரமாகவும், அதே நேரம் சுயமானதாகவும் இருக்க வேண்டும்”

     ஆனந்த அவர்களின் இந்த நாவலுக்கான மொழி பெயர்ப்பு அந்த உணர்வை நமக்கு முழுமையாக ஏற்படுத்துகிறது. மொழி பெயர்ப்பில் தெளிவான ஒரு வாசிப்பு அனுபவத்தை நமக்குத் தரும் சின்னஞ்சிறிய சிறப்பான நாவல் இந்த “அறியப்படாத தீவின் கதை”.

                           ----------------------------------

 

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...