29 மார்ச் 2023

 

  “கட்டற்ற  சுதந்திரம்”   கட்டுரை - காற்றுவெளி பங்குனி 2023 இதழ்   




               

      ரு சமயம் நான் பார்த்த இந்த நிகழ்வோடு இந்தக் கட்டுரையைத் துவங்குவது பொருத்தமென்று நினைக்கிறேன். அது இன்றைக்குச் சாதாரணமாய், மதிப்பற்றதாய்க் கூடத் தோன்றலாம். இதென்ன பெரிசு? என்று. ஆனால் அன்றைக்கு அது பெரிசுதான். மதிப்பு மிக்கதுதான். காரணம் அந்த நிகழ்வின்போது அந்த மக்கள் காத்த அமைதி. அதைவிடக் கண்ணியமாக, எதிர்த்தரப்பினரும் பொறுமையுடன் அமைதி காத்து, அதை அளித்தவருக்கு, சுற்றியிருந்த அந்தக் கூட்டத்திற்கு மதிப்பளித்துக் கடந்து போன கண்கொள்ளாக் காட்சி. பண்பாட்டின் உச்சம்.

      மக்களிடம் அத்தனை மேன்மை படிந்திருந்த காலம். இன்னும் இங்கு நல்லவைகள், நன்மைகள் முற்றிலுமாக அழிந்துபடவில்லை என்பதை உணர்த்திய காலம். அது இன்றைக்கும் இருக்கிறதா என்பதே கேள்வி. இல்லாமல் போகுமா? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நான் சொல்வது அதே நிகழ்வைச் சுட்டி அல்ல. அந்த மேன்மையும் மதிப்பும் மிக்க நடப்பியல்களை.

      அது ஒரு அரசியல் பொதுக் கூட்டம். இரவு எட்டு மணி தாண்டி பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களின் எதிரே மேடையிட்டிருந்த இடத்தில், அமர்ந்த நிலையில் ஓங்கிக் குரலெடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் அவர். மொத்த ஜனமும் பேச்சை ஊன்றிக் கேட்டு லயித்திருக்கிறது. அவ்வப்போது நகைச்சுவை வெடிகள் சரளமாக வந்து விழுகின்றன. அர்த்தமுள்ள, அசிங்கமில்லாத  அந்த நகைச்சுவையை, அதில் பொதிந்துள்ள உண்மையை உணர்ந்து, அடங்கிச் சிரிக்கிறது ஜனக் கூட்டம். வெறும் கூடிக் கலையும் கும்பலல்ல, கூடிச் சிந்திக்கும் கூட்டம் என்பதாய் அந்த ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர் சொல்லும் தியாக நினைவுகளை தங்கள் எண்ண அடுக்குகளிலிருந்து வெளியே எடுத்து,  அவர் சொன்ன உண்மைகளின் தாத்பர்யத்தை உணர்ந்து இறுக்கமான மனநிலையில் கட்டுக்கோப்பாகக் கருத்தூன்றி நிற்கிறது ஜனம்.      

      அது திரு நெல்லை ஜெபமணி அவர்களின் பொதுக் கூட்டம். இன்றைய இளைய தலைமுறைக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், முதிய தலைமுறையிலேயே பலருக்கும் தெரிந்திருக்காதுதான். அவர் பேசியது பெருந்தலைவர் காமராஜர் காலத்து ஆட்சி பற்றி. அப்போதைய அரசியல் நிகழ்வுகள்பற்றி. ஒரு நாட்டின் தலைவன் எப்படி சுயநலமற்று இருந்தான் என்பது பற்றி. எப்படியிருந்தால் இந்த நாடு முன்னேறும் என்பது பற்றி.

      அந்த நீண்ட அகண்ட சாலையின் இரு மருங்கிலும் நெடுக ஒலி பெருக்கிக் குழாய்கள் கட்டப்பட்டுள்ளன. நேர் எதிர்ச்சாரியிலிருந்த பகுதியிலும் அவரது குரல் கம்பீரமாய் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்தச் சாலையின் நுனிப் பகுதியில் ஒரு சவ ஊர்வலம். இறந்தவரின் சடலம் பாடையில் ஏந்தி வர முன்னும் பின்னுமாகப் பெருந்திரளான ஆட்கள் சாலையில் மலர் தூவியவாறே பட்டாசு  வெடித்துக் கொண்டும், கோவிந்தா…கோவிந்தா என்று கோஷமிட்டுக் கொண்டும் அந்தப் பகுதியை மெல்லக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

      ரொம்பவும் ஆழ்ந்தும், ஸ்வாரஸ்யமாயும், மொத்தக் கூட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலும் வசீகரமாய்ச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த பெருந்தகை திரு ஜெபமணி அவர்கள், அவரது பேச்சை அந்தக் கணமே நிறுத்திக் கொள்கிறார். சொல்ல வந்த விஷயம் முழுமையடையாமல் ஏன் திடீரென்று பேச்சு நின்று போனது என்று கூட்டம் ஒரு கணம் திகைக்கிறது. சொற்பொழிவாளரின் பார்வை பக்கவாட்டில் சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்கும் இறுதி ஊர்வலத்தை நோக்கி அமைதியோடு பதிந்திருப்பதைப் பார்த்துப் புரிந்து கொள்கிறது. நிசப்தம்….நிசப்தம்…சுற்றிலும் மயான அமைதி. மொத்தக் கூட்டமும் கப்சிப் என்று கிடக்கிறது.  அந்த ஊர்வலத்திற்கான அமைதி அஞ்சலி இங்கே.

இதை விடவா வானுலகம் செல்லும் அந்த மனிதனுக்கு ஒரு மா மரியாதை வேண்டும்? சுற்றமும் சுழலும், அங்கே கூடியிருந்த கூட்டமும்  சற்றும் நினைத்துப் பார்த்திராத அந்தப் பொன்னான  நிமிஷங்கள்.  அந்தப் பெயர் தெரியாத மனிதனுக்கு அன்று அங்கே கிடைத்த மரியாதையும் மௌனாஞ்சலியும்….நான் கால காலத்திற்கும் கண்டறியாத காட்சி. அது அந்த மனிதர்களுக்கான சாட்சி.

      முன்னும் பின்னும் திரளாக, வரிசையாக நடந்து கொண்டிருந்த அந்தக் கூட்டமும், தாங்கள் கோஷமிடுவதையும், மலர் தூவுவதையும், பட்டாசு வெடிப்பதையும் அந்தக் கணமே நிறுத்திக் கொண்டு அமைதியாகத் தங்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்து, அந்த மேடைப் பகுதியையும், சுற்றியுள்ள, அதைத் தாண்டிய ஜனத் திரளையும், நடுவே விரிந்திருந்த பாதை நெடுகக் கடந்து, சற்று தூரத்தில் தொடங்கும் வேறொரு சாலையில் திரும்பி தங்கள் கோவிந்தா கோஷத்தையும், பட்டாசுக் குதூகலத்தையும் தொடர ஆரம்பிக்கிறது.

அய்யா ஜெபமணி அவர்கள், பார்வையிலிருந்து ஊர்வலம் மறைந்ததைக் கண்டு விட்டு,  எங்க விட்டேன்…..ஊம்……சரி… ….என்று நினைவுபடுத்திக் கொண்டு தனது பேச்சைத் தொடர்கிறார்.

      நமக்கான சுதந்திரம் என்பது இப்படியான கட்டுப்பாடான, அதன் முழுத் தாத்பர்யத்தை உணர்ந்த ஒன்றாகத் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உண்மை நிகழ்வோடு துவங்கினேன். சுதந்திரம் என்பது அதற்காகப் பாடுபட்ட தியாகிகள், பெரியவர்கள் நமக்காகப் பெற்றுத் தந்த  உரிமைகளை சுய கட்டுப்பாட்டோடும், ஒழுக்க நெறியோடும், கண்டிப்பாக வரையறுத்துக் கொண்டு அனுபவிப்பதற்காகத்தானேயொழிய இஷ்டம்போல் விட்டேற்றியாக, எப்படி வேண்டுமானாலும் என்கிற ரீதியில், அவிழ்த்து விட்ட காளையைப் போல் இருப்பதற்காக அல்ல. எப்படியும் இருக்கலாம், எம்மாதிரியும் வாழலாம் என்பதாக நினைத்துக் கொண்டு, கட்டறுத்துத் திரிவதற்காக அல்ல. சுதந்திரம் என்ற புனிதமான வார்த்தைக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது அதுதான்.

      ன்னொரு சம்பவம் சொல்கிறேன். அது புற நகர்ப் பகுதி. நகரத்தோடு ஒட்டி படிப்படியாக வளர்ந்து வரும் இடம். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வீடுகளும், கடைகளும், தோன்றியவண்ணம் இருந்தன. குடியிருப்போர் அதிகரிக்க அதிகரிக்க, அது நகர்ப்புறத்தின் தவிர்க்க முடியாத பகுதியாய் மெல்ல மெல்லத் தன்னை உறுமாற்றிக் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதிக்கென்று குடியிருப்போர் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து, போக்குவரத்து, சாலை வசதி, தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, சுகாதார வசதி, பேருந்து நிலையம் என்று ஒவ்வொன்றாக முயன்று ஒற்றுமையாக அதனை மேலெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

      ஓரளவு நல்ல நிலைக்கு வந்து விட்ட வேளையில் பேருந்துகள் தங்கு தடையின்றி வந்து செல்ல ஆரம்பிக்கின்றன. ஒரே சமயத்தில் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அங்கே அடுத்தடுத்து வந்து நிற்கும்போது இட நெருக்கடி ஏற்பட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.  

      எதிரே ஒரு சுடுகாடு. வெட்டவெளிப் பகுதி. ஒரு சிறு தகரக் கொட்டகை மட்டும்.  ஒரு காலத்தில் அதிகக் குடியிருப்புகள் இல்லாத காலத்தில், இரவு நேரங்களில் கூட என்றும் பாராமல், தப தபவென எரியும் பிணங்களைக் கடந்து பயந்தும், நடுங்கியும், பலரும் போய் வந்து கொண்டிருந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கியதுமே கண்ணில் படும் இந்தக் காட்சியை மனதில் கொள்ளாமல் ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமியரும், விடுவிடுவென நடந்து தங்கள் இல்லங்களை அடைவது ஒரு தந்திரோபாயக் காட்சியாக இருக்கும். சுற்றிலும் இருக்கும் வீடுகளின் ஜன்னல்கள் எந்நேரமும் அடைபட்டிருக்கும். திறந்து வைத்தால் வீட்டிற்குள் புகை மண்டும். எதிரே சுடுகாடு என்று தெரிந்தேதான் இடம் வாங்கி, வீடு கட்டினார்கள், மறுப்பதற்கில்லை. நாளாவட்டத்தில் போய்விடும் என்ற நம்பிக்கையோடு. அதுவரையிலான சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளலாம் என்கிற பொறுமையோடு.

ஆனால் இன்றைய அப்பகுதியின் முன்னேறிய நிலையில் அந்த சுடுகாட்டுப் பகுதியும் பேருந்து நிலையத்திற்கென்று கிடைக்குமாயின் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களின் விரிவாக்கம் என்பது எளிதாகும் என்பதும், வந்து, நின்று, பயணிகள் அனைவரும் அருகருகேயுள்ள சிறு சிறு காலனிகளிலிருந்து வந்து வசதியாகத் தங்களின் நகர்ப்புறப் பயணங்களை மேற் கொள்ள ரொம்பவும் ஏதுவாக அமையும் என்கிற நன்நோக்கில் புறநகர்ப் பகுதியின் தவிர்க்க இயலாத வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு   அந்தச் சுடுகாட்டை அங்கிருந்து எடுப்பதுதான் சிறந்தது என்ற முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தார்கள். மனுவுக்கான நடவடிக்கையில் -

நாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. வருஷங்களும் கடந்து விட்டன. இன்றுவரை அந்த மயானம் அங்கேயேதான் இருக்கிறது. நம் இன மக்களின் ஒரு பகுதியினருக்கான சுடுகாடு அது என்று அறிந்து, அதன் அவசியம் உணர்ந்து, மாற்று இடம் தரப்படும் என்று ஆட்சியரலுவலகத்தால் சொல்லப்பட்டும், இடம் சுட்டப்பட்டும், அந்த  மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விஷயம் கிடப்பில் போய் விட்டது. இன்று அது ஆறின கஞ்சி. பழங்கஞ்சி.

இப்போதும் அங்கே பிணங்கள் எரிகின்றன. புகை மண்டலம் சுற்றிலும் உள்ள வீடுகளில் பரவிக் கொண்டிருக்கின்றன. மொட்டை மாடியில் இதற்காகவே எவரும் எட்டிப் பார்ப்பதில்லை. வளர்ந்துவிட்ட நகரின் நடுவே ஒரு மயானம்.  எல்லோரும் ஒரு நாள் போவதுதான். எனினும் இந்த வருத்திக் கூட்டி அனுபவிக்கும் சங்கடம் எதற்கு என்று மக்கள் பெருத்த சகிப்போடுதான் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை சரி.

 ஆனாலும் அங்கே அடிக்கடி வரும் பிணங்களின் ஊர்வலத்தின் போதும், எரியூட்டின்போதும், கூடியிருக்கும் கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு நடுவேயான ஒருவகைக் கலவரமான சூழலும், சுற்றிலும் குடியிருக்கும் ஜனங்களைப் பயப்படுத்துவது போலான தடாலடி நடவடிக்கைகளும் என்னென்று சொல்வது? இன்றுவரை அந்தப் பகுதி மக்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன தலையெழுத்து?

சாவு என்பது இயற்கை. அவரவர் உறவினர்களின் மறைவு என்பது வருத்தமளிக்கக் கூடியதுதான். மறுப்பதற்கில்லை. அதை எந்த மனிதனும் மதிப்பதுதான். நமக்குச் சொந்தமில்லை என்பதற்காக அதை யாரும் இழிவாய் நினைப்பதில்லை, அம்மாதிரி நடந்து கொள்வதுமில்லை. அதுதான் நமது நேர்த்தியான பண்பாடும் கூட. அவர்கள் அவ்வகையினர்தான். எந்த உயிர் போனாலுமே, அடப் பாவமே…! என்கின்ற மனப்பான்மை உள்ள பண்பாளர்கள்தான்.

அப்படியிருக்கையில் சம்பந்தமில்லாது, வரைமுறையற்ற வகையில்  அந்தப் பகுதியையே பயப்பிராந்திக்கு ஆளாக்கினால்…? கேட்பதற்கு ஆளே இல்லை என்பதுபோல் நடந்து கொண்டால்? எவன் வர்றான் பார்க்கிறேன் என்றும் என்ன செய்திடுவான் பார்ப்போம் என்கிற ரீதியிலும் அச்சமூட்டினால்?

நாலாபுறமும் இருக்கும் கடைகளுக்கு முன் சென்று, சத்தமிட்டு பயமுறுத்தி அடைக்கச் சொல்வது, கல்லை விட்டு எறிவது, தடியால் அடிப்பது, அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளைத் திசை திருப்பி விடுவது, நின்று முகத்துக்கு முகம் பார்ப்பவர்களை, என்ன முறைக்கிறே? என்று கேட்டு விரட்டுவது,    மோட்டார் பைக்குகளில்  வந்து நின்று கொண்டு அவைகளை விர்ர்ர்ர்ர்ர்……விர்ர்ர்ர்ர்ர் என்று ரேசுக்குச் செல்வதுபோல் சத்தமாய்க் கிளப்பிக் கொண்டு புயலாய்ப் பாய்ந்து பறந்து முன்னும் பின்னுமாக மின்னலாய் ஓட்டிச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு அந்தப் பகுதியையே கலங்கடிப்பது, ஸ்தம்பிக்கச் செய்வது…. இப்படியெல்லாம் செய்தால்? இதிலென்ன வீரமிருக்கிறது? எந்தப் பெருமை நிலைநாட்டப்படுகிறது? அந்த மக்கள் இப்பொழுதெல்லாம் பழகி விட்டார்கள். அங்கு சடலம் வந்தவுடனேயே கடைகளை அடைத்து விடுகிறார்கள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு…! ஆனாலும் இது சரியா? அஞ்சலி செலுத்துவவதற்கு வந்து நிற்கும் அன்பான கூட்டமாயிற்றே அய்யா…! அவர்களை இப்படிக் கலவரப்படுத்தலாமா? எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை. எதற்கு இந்த அவலம்?

இதுதான் சுதந்திரமா? இது விட்டேற்றியான சுதந்திரமல்லவா? கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது எவ்வளவு அநாகரீகமாய்ப் போகிறது? நமக்கான சுதந்திரம் என்பது யாரையும் துன்புறுத்தாததாய் இருக்க வேண்டாமா? நமக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ, அடுத்தவனைப் பயப்படுத்துவதுபோல் இருக்கலாமா? நமக்கான சுதந்திரத்தை நாம் இப்படியெல்லாம்தான் பயன்படுத்துகிறோம் என்றால் அது எத்தனை வெட்கக்கேடு? இன்றுவரை யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஒரு நாள் இரண்டு நாள் கூத்துதானே என்று எத்தனை விஷயங்களை அவிழ்த்து விட்டாயிற்று இந்த நாட்டில்? ஒவ்வொன்றாய்க் கெட்டுச் சீரழிந்து…..முடிவுதான் என்ன? அழிந்துபடுதல் தானா?  சற்றே உங்கள் சிந்தனையைக் கடன் கொடுங்கள் இதற்காக.

பேருந்தில் வெளியூருக்குச் செல்கிறோம். சந்தோஷமான நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் இருப்பார்கள். வருத்தமான நிகழ்வுகளுக்குச் செல்வோரும் இருப்பார்கள். உடம்பு முடியாதவர்கள் இருப்பார்கள். வயதானவர்கள் இருப்பார்கள். அமைதியாகத் தூங்கிப்  போவோமே என்று புறப்பட்டு வந்து அயர்ச்சியில் பயணிப்பார்கள். குழந்தைகள் இருக்கும். சிறுவர் சிறுமியர்கள் இருப்பார்கள். பஸ்ஸின் கொஞ்ச தூர ஓட்டத்தில் அவை அயர்ந்து தாயின் மடியில் உறங்கக் கூடும். இம்மாதிரி எதையுமே மனதில் கொள்ளாமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல், சினிமாப் பாட்டை அலற விட்டுக் கொண்டு செல்கிறார்களே…அது எந்தவகையிலான சுதந்திரம்? என்ன நல்ல யோசனையின்பாற்பட்டு இது நடைமுறைக்கு வந்தது?  பாட்டுக் கேட்டுக் கொண்டே சந்தோஷமாய்ப் பயணிக்கட்டும் என்று நீங்களே மொட்டையாய் முடிவு செய்து கொள்வீர்களா? அப்படியானால்தான் ஓட்டுநர் உறங்காமல், அயர்ச்சி தெரியாமல் நேரத்திற்கு வண்டியைக் கொண்டு செல்வார் என்றால், அந்தக் காலத்தில் இப்படித்தான் நடந்ததா? பஸ்கள் அப்படியா ஓடிக் கொண்டிருந்தன?  சொல்லப் போனால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பை விட இந்தக் காலத்தில்தானே போக்குவரத்தும், ஜன நெருக்கடியும், ஆபத்துக்களும்  அதிகம்? இந்தக் கால கட்டத்தில்தானே கவனமாய், கருத்தாய், வண்டியை இயக்க வேண்டும்? அதை விட்டு விட்டு உங்களுக்காக இல்லை, இது எனக்காக என்ற கணக்காயும், உங்களுக்காகவும்தான் என்ற பொருளிலும், தொலைக்காட்சியையும் சேர்த்து அலற விட்டுக் கொண்டு விரும்பியும், விரும்பாமலும்  பயணிக்கச் செய்வது விபத்துக்கு வழி வகுக்குமா அல்லது நிம்மதியான பயணத்தைத் தருமா? பஸ்னா அப்டித்தான்…என்று சகிக்கப் பழகிக்கொண்டுவிட்ட பாவப்பட்ட ஜனங்கள்…..வீட்டை விட்டு வெளியில் இறங்கினால், அவர்கள் முதுகில் இந்தமாதிரி என்னவெல்லாம்  சுமைகள்?

நம் நாட்டில் அவிழ்த்து விட்ட கழுதையாய், சுதந்திரம் எவ்வளவு அலங்கோலமாய் பாழ்பட்டுக் கிடக்கிறது? எதையுமே கன்ட்ரோல் பண்ண முடியாது, எதையும் கட்டுப்படுத்துவதற்கில்லை, எல்லாமும் அப்படி அப்படியே தறிகெட்டுப் போய் எங்கே, எந்த இடத்தில் சென்று முட்டி மோதி நிற்கட்டுமோ நிற்கட்டும் என்று கட்டவிழ்த்து விட்ட அவல நிலையைத்தானே இன்றுவரை பலவற்றிலும்  நாம் காண்கிறோம்?

ஒரு தலைவனின் பிறந்த நாளுக்கோ,  நினைவு நாளுக்கு மாலை போட்டு மரியாதை செய்வதானாலுமோ இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் ஒன்று குறைகிறதா சொல்லுங்கள்? மக்களைப் பயப்பிராந்திக்குள்ளாக்குவதில் அப்படி என்ன சந்தோஷம்? யாருக்கு யார் பயப்பட வேண்டும்? ஏன் பயப்பட வேண்டும்? அப்பொழுதுதான் தலைவனின் பெருமை தெரியும் என்று இவர்களுக்கு யார் சொன்னது? அந்தத் தலைவர்களே விரும்பினதாகத் தெரியவில்லையே…! மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. எல்லாத் தலைவர்களின் அருமை பெருமைகளையும் அறிந்தவர்கள்தான்…! அவர்களுக்கு நல்லதும் தெரியும், கெட்டதும் தெரியும். எதைச் செய்ய வேண்டும் என்றும் தெரியும், செய்யக் கூடாது என்றும் தெரியும்தான். எந்த வேண்டாததையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியும்.  அதையெல்லாம் இம்மாதிரிச் செய்கைகளால் யாராலும் இம்மியும் மாற்ற முடியாது.

கோயிலில் சாமி கும்பிடுவதானாலும் நாலு தெருவுக்கு ஒலி பெருக்கி கட்டுதல், ராத்திரி பகலாய் அலற விடுதல், பிடித்த நடிகரின் பிறந்த நாளுக்கென்று ஊரையே ரெண்டு பண்ணுதல், எந்தப் போராட்டமானாலும் கற்களை வீசுவது, பஸ்களை எரிப்பது, பொது இடங்களில் தயக்கமின்றி எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, புகைபிடிப்பது, கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவது என்று எத்தனையெத்தனை ஒழுங்கீனங்கள் இந்த நாட்டில்?  

இதுவா சுதந்திரம்? இதுவா மானம்? இதுவா கௌரவம்? இதுவா விவேகம்? இல்லை இது அவமானம்…பெருத்த அவமானம்…..!!

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தேச பக்தியும், தெய்வ பக்தியும் மிகுந்த இந்த தேசத்து மக்களை நினைந்து நினைந்து என்னவெல்லாம் எண்ணியெண்ணிப் பெருமிதம் கொண்டோமோ, அதெல்லாவற்றிற்கும் நேர்மாறாய் நாம் வருத்தம் கொண்டு நொந்து வேதனையடையும் நிலையில்தான் பாடுபட்டுத் தேடிச் சேர்த்த இந்த சுதந்திரத்தை இன்று நாம் கட்டறுத்துப்  பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சற்றே சிந்தியுங்கள். மேலே சொன்னவற்றில்  உண்மைக்குப் புறம்பானவை ஏதேனும் உண்டா? உங்கள் மனசாட்சியே உங்களுக்கு சாட்சி…!!!

 

                              -----------------------------------------------

       

 

 

சிறுகதை         “ அந்தரம்”           திண்ணை இணைய இதழ் - 26.03.2023   




      வளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன்.

      இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள்வரைக்கும் யாருக்கும் தெரியாது. இத்தன வருஷத்துல ஒருத்தருக்கும் இம்மியும் சந்தேகம் வந்திருக்காது…இப்டியிருக்குமோ, அப்டியிருக்குமோன்னு எவனும் லேசா நினைச்சுப் பார்த்திருக்கக் கூட முடியாது. ஏன்னா, நாங்கதான் அடுத்தவங்க முன்னால எதையும் காண்பிச்சிக்க மாட்டோம்…அந்தக் கள்ளத்தனம் உண்டு எங்க ரெண்டு பேருக்கும்.இருவர் உள்ளம் படம் மாதிரி. எங்களப் போல ஒத்துமையா இருக்கிற தம்பதியர் யாருமேயில்லன்னு அத்தனை பேரும் நிச்சயம் நினைப்பான்…என்னா ஒரு இணக்கம் இவங்களுக்குள்ளன்னு மூக்கு மேல விரல வைப்பான்…

      அப்டிப் போலியா எப்டி  இருக்க முடிஞ்சிதுன்னு இப்ப நினைச்சுப் பார்த்தாக் கூட ஆச்சரியமாத்தான் இருக்கு…அப்டி இருந்து இருந்தே, அதுவே இயல்பாப் போயிடுச்சு….அதென்னவோங்க…என்னப் போலவே அவளும் கச்சிதமா நடிப்பா….அத்தனை தத்ரூபமா இருக்கும்….ஆர்ட் ஃபிலிம் எடுக்கலாம் போங்க…! ஆத்மார்த்தமா இருந்தாத்தானே அப்படிப் பொருந்தி வரும்? ரெண்டு பேர்ட்டயும் அவ்வளவு திறமை மறஞ்சிருக்குன்னுதான் சொல்லணும்…ஆனா ஒண்ணு…எல்லாரும் போயிட்டாங்களா…எங்கேயிருந்துதான் வருமோ அந்த விரிசலும் சண்டையும்…இன்ன காரணம்தான்னு அறுதியிட்டுச் சொல்லவே முடியாது…ஒரே கர்ர் புர்ர்ருதான்….கடுவம் பூனை மாதிரி….எதாச்சும் உப்புச் சப்பில்லாததாக் கூட இருக்கும்….ஆட்டமேடிக்கா வள் வள்ளுன்னு குலைச்சிக்கிட்டு விலகிடுவோம்….அப்டியே இருந்து இருந்து அது வந்திடுச்சா…இல்ல ஆரம்பத்துலேர்ந்தே அது சகஜமாயிடுச்சா…ரெண்டு பேருக்குமே அது தெரியாது….நாங்களே நினைச்சிக்கிறது சமயத்துல…இதையே ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிறதுக்குப் பயன்படுத்தியிருந்தா எவ்வளவுநல்லாயிருந்திருக்கும்?….புரிஞ்சிக்கிட்டதுனாலதான்இந்தவினை….ஈகோவிடமாட்டேங்குது ரெண்டு பேரையும்…புடிச்சி ஆட்டி வைக்குது….ரெண்டு பேரையும்னு சொன்னனோ? தப்பு…தப்பு…

      எனக்கு ஈகோவெல்லாம் கெடையாதுன்னுதான் நா சொல்லுவேன்…ஆனா அவ ஒத்துக்க மாட்டா…ஜாக்கிரதையா உன்னை ஒதுக்கிக்கிறயாக்கும்…பெரிய யோக்யன் மாதிரி….அது அப்டியில்ல…அதுதான் உண்மை…அதனால சொல்றேன்…ஏன்னா ஆரம்பத்துலேர்ந்தே தணிஞ்சு தணிஞ்சு போனவன் நான்தானே…பல வீடுகள்லயும் அதுதான் நடக்குது…எந்த வீட்ல ஆம்பள அட்ஜஸ்ட் பண்ணாம இருக்கான்…? நூத்துக்குத் தொண்ணூறு வீடு அப்டித்தான். எந்த வீட்ல பொம்பள அட்ஜஸ்ட் பண்ணியிருக்கா? அவ நிக்கிற எடத்துலயேதான் நிப்பா…இவன்தான் சரி சரின்னு போவான்…இதைத்தான் தணிஞ்சு போறதுன்னு சொல்லிட்டேன் நான்…..சரி, கெடக்கு…இதுலென்ன இருக்குன்னு சண்டை வர்றப்போவெல்லாம் ஒதுக்கிட்டு நாந்தான் வலியப் பேசுவேன்…ரைட் விடு…ரைட் விடுன்னு சொல்லிட்டே, கிட்டப்போய் கொஞ்சி, கோபத்தப் போக்கிட்டு, அடுத்தடுத்த காரியங்களச் செய்ய ஆரம்பிச்சிடுவேன்….பல வீடுகள்லயும் ஆம்பளைங்க அப்டித்தான போயிட்டிருக்காங்க…? யாராச்சும் இல்லன்னு சொல்ல முடியுமா? இவனுக்குத்தான் அப்பப்போ அவ வேண்டிர்க்கே…! அந்த வீக்னஸ்ஸே ஆள மண்டியிட வச்சிருமே…! பெரிய்ய்ய அசிங்கங்க அது…ஆனா எங்கதை தனி…

      தணிஞ்சு போறதுன்னா என்ன மட்டமா? நாமளா நினைச்சிக்கிறதுதான் இதெல்லாம்….தணிவு, குனிவு அப்டியெல்லாம் ஒண்ணும் கெடையாது….குடும்பம் நிம்மதியா ஓடணும்…அன்றாடப் பாடு அமைதியாக் கழியணும்…இதுக்கு யாரேனும் ஒருத்தர் கொஞ்சம் வளைஞ்சு கொடுத்திட்டோம்னு வச்சிக்குங்க…பிரச்னை ஓவர்….ஆனா ஒண்ணு…இதுக்கும் ஒரு பக்குவம் வேணும்னுதான் சொல்லுவேன்…சின்னப்புள்ளைலேர்ந்தே கஷ்டங்களையும், வறுமையையும் பார்த்து, அனுபவிச்சு வளர்ந்தவனுக்குத்தான் இந்தக் குணம் இருக்கும்….எடுத்த எடுப்புலயே அவன் தன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கத் தயாராயிடுவான்….எந்தப் பிரச்னையானாலும் அங்க தன்னால அந்தச் சிக்கல் தீரும்னா தன்னை ஒதுக்கிக்கிடுவான்…அல்லது முழுசாத் தாங்குறதுக்கு இம்மீடியட்டாத் தயாராயிடுவான்….ஒரு பெண்ணும் இப்டியெல்லாம் இருக்க முடியும்தான்…அவ வந்த வழியும் அப்டியிருக்கணும். ஆனா என்னன்னா, ஒரு ஆண் பெண்ணைச் சார்ந்து இருக்கிறதுனால இது சாத்தியமாகாமப் போயிடுது…ஊடல்னு ஒண்ணு உள்ளே நுழைஞ்சிடுது…ஆம்பள வளைஞ்சு கொடுத்துப் போறதுக்கு, அதுவும் ஒரு காரணமாயிடுதுங்கிறதுதான உண்மை…உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்….

      ஆனா ஒண்ணுங்க…இதுவேதான் அவனுக்குப் பிரச்னையும் ஆகிடுதுன்னுவேன்…வீட்டுப் பொம்பள இதுக்குப் பக்குவப்படாதவளா இருந்தான்னு வச்சிக்குங்க….தலவலிதான்…வாழ்க்க பூரா இவன் ஒருத்தனே வளைஞ்சிக்கிட்டு இருக்க வேண்டிதான்…குறுக்கு ஒடியற மட்டும் விடமாட்டாங்க…..நம்ம வீடு, நம்ம பிள்ள…எல்லாம் இருக்கும்…நம்ம புருஷன்ங்கிறது உதட்டளவுலதான்…உள்ளுக்குள்ள கசறெடுக்கிற வேலதான்…ஒரு நா நீங்க சிவனேன்னு இருக்க முடியாது…

      இப்போ இங்க கதயே அதுதான்னு சொல்லுவேன்….இன்னைவரைக்கும் ஒரு விஷயத்துல கூட அவ என்னை அட்ஜஸ்ட் பண்ணினதில்லீங்க…அதுதான் நிஜம்….தாங்க மாட்டாம ஒருநா சொன்னேன்….அப்பாடான்னு இருந்திச்சு….

      ன்னால எனக்கு மனசளவுலயும் நிம்மதியில்லே….உடலளவுலயும் திருப்தியில்லே…- போட்டேன் ஒரு போடு…

      அதுக்கு, சுகந்தி…அதான் அவ பேரு….என்னா பதில் சொன்னான்னு நினைக்கிறீங்க…? எந்தப் பொம்பளயும் இந்தப் பேச்சுப் பேச மாட்டா…அம்புட்டு வாய்த் துடுக்கு இவளுக்கு…மனசுல கண்டமேனிக்குத் தோணும்தான்..அதெல்லாத்தையும் பேசிட முடியுமா? அப்டிப்பார்த்தா மேலே சொன்னதை நானும் சொல்லியிருக்கக் கூடாதுங்கிறதுதான நியாயம்? ஏடா கூடமாப் பேசினம்னா அப்புறம் வாழ்க்கை நரகம்தான்…அத கட்ஷார்ட் பண்றதுக்குதான மனுஷனுக்குக் கடவுள் புத்தியக் கொடுத்திருக்கான்…அப்புறம் அவனுக்கும், மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? பேச்சக் கொற…பேச்சக் கொறன்னு நம்ம பெரியவங்க  வாய்க்கு வாய் அடிச்சிக்குவாங்களே…அதெல்லாம் சும்மா இல்லீங்க…அவ சொன்னா……

      அப்டீன்னா காவியக் கட்டிக்கிட்டு சந்நியாசியாப் போகலாம்…ஒண்ணு….இன்னொண்ணு ஏதாச்சும் ப்ராஸ்ட்டுகிட்டப் போயிட்டு வரலாம்…திருப்தி கிடைக்க…..- என்னா திமிரு பார்த்தீங்களா?

      என்னவொரு எடுத்தெறிஞ்ச பேச்சு? நா தேவடியாட்டப் போகணுமாம்….மனசளவுல, உடலளவுல திருப்தியில்லேன்னு நான் சொன்னது சரியாப்போச்சா…! அத ஒத்துக்கிட்டாளா? அப்டித்தான அர்த்தம் இந்தப் பேச்சுக்கு,?

      மொதக் குழந்தைக்கு டெலிவரிக்கு போனவ, வந்த பின்னாடி  அடியோட அப்டியே ஒதுங்கிட்டாங்க…அதுக்கப்புறம் என்னை அவ நெருங்கவே விட்டதில்ல….வெட்கத்த விட்டுச் சொல்றேங்க….இந்த என்னோட எடத்துல நின்னு பாருங்க தெரியும் வயித்தெறிச்சல்…சிசேரியனாம்…அதுனால பக்கத்துல வரக்கூடாதாம்…உலகத்துல அப்டியா இருக்காங்க மத்த பொம்பளைங்க…ஒவ்வொரு குழந்தைக்கும் சிசேரியன் பண்ணிக்கிட்டவங்கள நாம பார்த்ததேயில்லையா? அதெல்லாம் மனசு வேணுங்க…மனமுண்டானால் எடமுண்டு…அம்புட்டுதான்…

      அம்பது தாண்டின வயசுல பேசுற பேச்சா இதுன்னு தோணலாம்…எங்கம்மா அம்பத்திரெண்டு வயசுல என்னோட கடசித் தங்கச்சியப் பெத்தாங்க…நம்புவீங்களா….? இந்த வயசுல பிரச்னயத்தான் பேசுறேன் நான்….எத்தனையோ காலத்த தவற விட்டாச்சுங்கிறதுக்குச் சொல்ல வர்றேன்…ஒரு பொண்ணு பெத்துருக்கலாமில்ல…எம்புட்டோ சொன்னேங்க… கேட்கவேயில்ல….இன்னைக்கு அந்தப் பயமவனும் அம்மாக்கு சப்போர்ட்டா இருக்கான்…பசங்க எப்பயும் ஆத்தா பக்கம்தான…ஒரு பொண்ணு இருந்திச்சின்னா, அது அப்பாவுக்குப் பரிஞ்சு பேசுமில்ல…அதுக்கு வழியில்லாம அநாதயா நிக்கிறேன் நா…!. ஒரு வேளை அது தெரிஞ்சே இவனப் பழி வாங்கணும்னே இருந்திட்டாளோ என்னவோ? மறுபடியும் பிள்ளையாப் பெத்திருந்தா? டபுள் சப்போர்ட்டுல்ல அவளுக்கு…அத்த ஏன் நினைக்க மாட்டேன்னுட்டா…? பயங்கரப் பிடிவாதக்காரிங்க….

      அடி வாடீ…பெரிய்ய்ய இவ நீ…ன்னு இழுத்துக் கிடத்துறதுக்கு ஒண்ணும் ரொம்ப நேரம் ஆவாது…அத விரும்பல நா….உடலொழுக்கம், மன ஒழுக்கம்னு சம்பிரதாயங்கள் பார்க்கிறவன் நான்…அப்டி வன்முறையா ஒண்ணை அடைய விரும்பலை…அவ உரிமையுள்ள பொண்டாட்டியா இருந்தாக்கூட அது ஆகாதுன்னு நினைக்கிறவன் அநாகரீகமா இந்த விஷயத்துல நடந்துக்க நா என்னைக்குமே விரும்பினதுல்ல……அப்டி உருவாகுற குழந்தை நல்லபடியா இல்லாமப் போச்சின்னா, நாளைக்கு அதுவுமில்ல மனசப்போட்டு உருத்தும்….காலத்துக்கும் அந்தக் கொடுமைய எவன் அனுபவிக்கிறது? கூடப் படுக்கிறதுக்கே தயங்குற இவ, நாளைக்கு எனக்குத் தெரியாம அபார்ஷன் பண்ணிக்கிட மாட்டாங்கிறது என்ன நிச்சயம்? என் மனசுக்குப் பிடிக்காத குழந்தைய நான் உனக்குத் தர முடியாது….நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ…ன்னு தலைய விரிச்சிப் போட்டுட்டு நின்னா….அந்தக் கருமத்த நா எங்க போய்த் தொலைக்கிறது?

      முதலிரவு அறைல ஏன் குழந்தை படங்களயும், புல்லாங்குழலோட உள்ள கோகுலக்கிருஷ்ணன், ராதையோட படங்களையும் வைக்கிறாங்க…? அது ஒரு புனிதமான விஷயம்….ரெண்டு பேரும் மனசு ஒன்றி, பரிபூர்ணமா, ஆத்மார்த்தமா இணைஞ்சு இயங்குற சமாச்சாரம்…! அதுல பொறாமையும், கோபமும், அசூயையும், ஆங்காரமும் கலந்திருந்தா வௌங்குமா? அதத்தான் சொன்னேன் அநாகரீகம்னு….நா அப்டி ஆளில்லைங்கிறதே அவளுக்குப் ப்ளஸ்ஸாப் போயிடுச்சி…ஒரு லிமிட்டுக்கு மேல இவன் போக மாட்டான்….சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு, சமூகத்துக்கு,  உலக நடைமுறைகளுக்குப் பயந்தவன்ங்கிற தீர்மானம் அவ மனசுல இருக்கு…அதுனாலதான் என்னை அவ இப்டி ஆட்டி வைக்கிறான்னுவேன் நான்.

      அப்டி அவ மனசுல நெனச்சிக்கிட்டிருக்கலாம்தான்…ஆனா அவ தெனமும் ஒரு தண்டனையை விடாம அனுபவிச்சிட்டிருக்காங்கிறதுதான் உண்மை…அது ஒரு நாளைக்கு அவளுக்குக் கட்டாயம் உறுத்தும்…,இப்போ அதை அவ உணரலை…அவ்வளவுதான்…ஆனா அன்னைக்கு அது காலங்கடந்ததா இருக்கும்….கைய விட்டு நழுவிப் போயிருக்கும்..எந்த ஒருத்தனும், ஒருத்தியும் தன்னோட தவறுகள உணராம செத்ததேயில்லன்னுதான் சொல்லுவேன்…பல பேரு பேசக்கூட முடியாம, உதடு துடிக்க,  சாவோட நுனில படுத்துக் கெடக்கைல கண்கலங்குறாங்களே…அதல்லாம் என்னன்னு நினைச்சீங்க…விழியோரத்துல கண்ணீர் வழிஞ்சி ஓடிக்கிட்டேயிருக்கே….அதெல்லாம் என்ன சும்மாவா? உள்ளே நினைவுகள் படமா ஓடுதுன்னு அர்த்தம்…யார் யாரப் பார்க்கிறாங்களோ அவுங்க சம்பந்தமான நல்லது கெட்டதுகள் அத்தனையும் கணத்துல ஞாபகத்துல வந்து மறையுமாக்கும்…அப்போக் கெடந்து மனசு தவிக்குது பாருங்க…அதான் ஒரு மனுஷன் தன்னை உணர்ற கட்டம்….உணர்ந்து என்னா பிரயோஜனம்…? அப்டியே வாயப் பொளக்க வேண்டிதான பாக்கி….மிச்சம் மீதாரி இருந்திச்சின்னா அது அடுத்த ஜென்மத்துக்குப் ப்ராட் ஃபார்வர்ட் ஆகுமாயிருக்கும்….யார் கண்டது? எவன் கண்டு சொன்னவன்…?

      அப்டித்தான் இவளும் ஆகப்போறாளாயிருக்கும்….யார் முந்தி, யார் பிந்தின்னு யார் கண்டது? இதத்தான் ஆரம்பத்துலயே சொன்னேன்…இப்பத் திரும்பச் சொல்றேன்…யார் நம்புறீங்களோ இல்லியோ….சொல்லத் தோணுது…சொல்றேன்…அவளும் நானும் முகத்துக்கு முகம் பார்த்துப் பேசி வருஷம் முப்பதாவப் போகுது…..எம் பையனுக்கு இருபத்தஞ்சு….இப்போ வயசு….அதுக்கும் முன்னாடியே நாங்க பேசறத நிப்பாட்டியாச்சு….பொழுதன்னிக்கும் இவளோட பொருத முடிலப்பா நம்மளாலன்னு….ஒரு நாளைக்கு உதறினவன்தான்….இன்னைவரைக்கும் நிக்கிறேன் அதே எடத்துல….நம்புவீங்களா? நீங்க நம்பணும்னுட்டு நா இதச் சொல்லல….வாழ்ந்த வாழ்க்கையப் பத்தி யார்ட்டயாச்சும்….ஒரு வெட்ட வெளிலயாச்சும் வாய்விட்டுக் கத்தணும்னு தோணிச்சி….கணேசா…இந்த ஒலகத்துக்குச் சொல்லுடான்னு மனசு ஓலமிடுது…

      ஆனா பாருங்க….ஓ.கே.ன்னுட்டு அவளும் இருந்திட்டாளே இத்தன வருஷம்? ஒரு பொம்மனாட்டிக்கு எத்தன திண்ணக்கம் இருந்தா, ஒருத்தி இப்டிக் கிடப்பா? இவ என்ன பொம்பளதானா இல்ல வேறே ஏதாச்சுமா? இப்டி இருப்பாளாம்…ஆனா குடும்பம்ங்கிற அமைப்பு மட்டும் வேணுமாம்…நா வேணாம்னா, உதறிட்டுப் பொறந்த வீட்டுக்குப் போக வேண்டிதான…? அது மட்டும் முடிலல்ல? அப்போ பொத்திக்கிட்டுக் கிடக்க வேண்டிதான? பொத்திக்கிட்டுத்தான கிடக்குறா…! திறந்தா போட்டிருக்கா….?

      ஆனா குடும்பம் நடந்திருக்குதுங்க…என்ன பெரிய மாய்மாலமா இருக்குங்கிறீங்களா? வேணுங்கிறத பொதுவா வச்சிருக்கிற நோட்டுல எழுதிடுவா…நான் போயி வாங்கியாந்து போட்டிடுவேன்…ரெண்டு பேத்தோட சம்பளப்பணமும், வங்கிக் கணக்குக்குப் போயிடும்…தேவைக்கு அவளும் எடுத்துக்கிடுவா…நானும் எடுத்துக்கிடுவேன்….அதான் ஏ.டி.எம். கார்டு இருக்கே…ஒரு கார்டை வச்சி எப்டிங்கிறீங்களா? அதுவும் பொதுதான். டேபிள் ட்ராயர்ல கிடக்கும்….அவளுக்கு வேணுங்கிற டிரஸ்ஸை அவ எடுத்துக்கிடுவா…எனக்கு வேணுங்கிறதை நான் எடுத்துக்கிடுவேன்…ரெண்டு பேரும் சேர்ந்து போனோம்ங்கிற சோலி கிடையாது…ஆனா ஒண்ணு…பையன் வந்திட்டா மட்டும் அவ்வளவாக் காண்பிச்சிக்கிறதில்ல…அப்பப்போ ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்…ரொம்ப சகஜமா, யதார்த்தமா இருக்கும்….எவனுக்கும் இம்மியும் சந்தேகம் வராது….எதுக்கு இந்த நாடகம்னு தோணும்….வலிய வலியப் பேசி திரும்பத் திரும்பக் கேவலப்பட்டதுதான் மிச்சம். சுமுக நிலையில்லன்னா, அது என்ன குடும்பமா? சுடுகாடுங்க….

      என்னத்தக் கொண்டு போகப் போறோம் இந்த உலகத்துலேர்ந்து….ஒத்தப் பைசா எடுத்திட்டுப் போக முடியாது….நெத்திக் காசக் கூடத் தெரியாமக் கடைசில பிடுங்கிடுவாங்க….இந்தப் பூமிலர்ந்து வந்தது எல்லாமும், திரும்பவும் இந்தப் பூமிக்குத்தான்…எவனும் எதுக்கும் சொந்தம் கொண்டாட முடியாது…அப்பப்போ வெறுமே என்னுது…என்னுதுன்னு டிராமா போட்டுக்கிட்டு திரிய வேண்டிதானே தவிர, ஒரு பிரளயம் வந்திச்சின்னு வச்சிக்கிங்க…அது எதுக்கு, வெறுமே ஒரு பூகம்பம் வரட்டும்….6.5. ரிக்டருக்கு மேலே ஒண்ணு கூடட்டும்…..எவனெவன் எங்கருக்கான்றது எவனுக்குத் தெரியும்? பெரிய பெரிய பணக்காரன்லாம் ஒரே நாள்ல ரோட்டுக்கு வந்திட்டதை, குஜராத்துல நாம பார்க்கலயா…?

      ஆனாலும் வீர்யம் விடுதுங்கிறீங்களா? அவளுக்கும் விடல…எனக்கும் விடலன்னுதான் சொல்லணும்….உனக்கு நா பணிஞ்சு போறதாவது? அது இந்த ஜென்மத்துல இல்ல….பார்த்துருவோம் கடைசி வரைக்கும்…னு ரெண்டு பேரும் முறுக்கிக்கிட்டு நின்னே இத்தன வருஷம் ஓடிப் போச்சி….ஒரு உண்மை. அவ நின்ன இடத்துலயே நிலைச்சிட்டா…நாந்தான் ஆரம்பத்துலேர்ந்தே தடுமாறிட்டிருக்கேன்…அப்பப்போ விட்டுக் கொடுத்தது நாந்தானே?

      யாருக்காச்சும் எங்க கத முழுசாத் தெரிஞ்சிச்சின்னு வச்சிக்கிங்க….சிரிப்பாச் சிரிப்பானுங்க….சரியான கேனைங்கப்பா இவங்கன்னு… அதுக்காக விட்டிட முடியுமா? ஒரு பொம்பளயே வீட்டுக்கு அடங்காம இப்டி இருந்தா, ஒரு ஆம்பள அப்புறம் என்னதாங்க பண்றது? அதுலயும் நா ரொம்ப வறுமைப்பட்ட குடும்பத்துலேர்ந்து வந்தவன்….சின்ன வயசுல ரொம்ப ரொம்பக் கஷ்டப்பட்டவன்…எனக்கு கொஞ்சம் துடிப்பு அதிகமாத்தான இருக்கும்…சுயகௌரவம் உடம்போட ஒட்டினதா, ரத்தத்தோட ஊறினதாத்தான கிடக்கும்….ரொம்ப சென்சிடிவ்வான ஆளுங்க…நா அப்டித்தான இருக்க முடியும்…! அவதான் தன்னை மாத்திக்கணும்…..வீட்டுப் பொம்பளைங்க எப்டி அடங்கிக் கிடக்காங்கற்கிறதைப் பொறுத்துத்தான் ஒரு வீடு வௌங்கும்…வௌங்காமப் போகும்….குத்து விளக்கு மாதிரிங்க…அடக்கமா நின்னு எரியணும்…அப்பத்தான் அழகு…..

      எவ்வளவோ சொல்லிப்புட்டேன்….மறைமுகமாவும், நேரடியாவும் சொல்லிச் சொல்லி எனக்கும் அலுத்துத்தான் போச்சு….அவ திருந்துறாப்ல இல்ல….நா இருக்கிறபடிதான் இருப்பேன்னு இருந்துக்கிட்டிருக்கா….கேட்டா இது பிறவிக்குணம்ப்பா…அது ஒரு சாக்கு….அதென்ன பிறவிக் குணம்ங்கிறேன்? மனுஷன் தன்னை மாத்தியமைச்சிக்கிறதுக்குத்தான கடவுள் அறிவப் படைச்சிருக்கான்…? ஆறறிவு எதுக்காக? நாக்கு வழிக்கிறதுக்கா? வெறுமே யூஸ் பண்ணாம வச்சு பூஜை போடுறதுக்கா? ஆளு வளர வளர அறிவும் வளரணும்ல…? தனியா இருக்கந்தட்டியும் சரி…கலியாணம் ஆகி குழந்த குட்டிங்க…குடும்பம்னு ஆனப்புறமும் அப்டியே இருந்தா? சொந்த எடத்துலேர்ந்து, வந்த எடத்துக்கு மாறினப்புறமும் அப்பாம்மாட்ட முறுக்கிக்கிட்ட மாதிரியே இங்கயும் பண்ணினா? கழுத, எத்தன வருஷமாச்சு…மாற்ராங்கிறீங்களா? எனக்கும் சொல்லிச் சொல்லி, சண்ட போட்டுப் போட்டு அலுத்துத்தான் போச்சுங்க….இவ்வளவுதான் நம்ம லைஃப்புன்னு இப்பல்லாம் சுத்தமா உதறிட்டேன்….மனசு விட்டுப் போச்சுங்க…சாமியோவ்….அத்துக்கலாம்னு ஆயிரம்வாட்டி சொல்லிட்டேன்…அப்ப மட்டும் சைலன்ட் ஆயிடுவா…என்னவோ ஒரு அல்ப திருப்தி அப்போ எனக்கு…மனசோட மூலைல ஒரு சிறு நம்பிக்கை…என்னைக்காச்சும் கைகோப்பாளோ…?

      எவ்வளவோ தரம் நான் என்னை மாத்திக்கிட்டு, வலிய வலிய அவகிட்டப் பேச்சுக் கொடுத்து, சரி பண்ணப் போராடியிருக்கேன்… கட்டுன பொண்டாட்டிகிட்ட என்ன கௌரவம் வேண்டிக் கெடக்குன்னு விளக்குமாராத் தேய்ஞ்சு தணிஞ்சு போயாச்சுங்க….அவ இருக்கிற எடத்தவிட்டு நகர்றாப்ல இல்லை… சரியான லூசு போலிருக்கு….எதுக்காக நாம இப்டி இருக்கோம்னு என்னைக்கு அவளுக்குத் தோணப் போகுதோ? அப்டித் தோணிச்சின்னா, அன்னைக்குத்தாங்க அவளுக்கு விடிமோட்சம்…ஆனா அப்போ யாரு இருப்பா, யாரு இருக்க மாட்டாங்கங்கிறத, ஆண்டவன்தான் நிர்ணயிக்கணும்…அவளுக்கான தண்டனைன்னு சொன்னம்பாருங்க…அதுதான் இது…

      இந்த உலகத்துல பலருக்குமே, ஏன் எல்லாருக்குமேன்னே சொல்லலாம்….காலங்கடந்த ஞானமாத்தான அமைஞ்சிருக்கு….என்ன வாழ்க்க வாழ்ந்தோம்னு ஒரு நாளைக்கு தோணிச்சின்னு வச்சிக்குங்க….மனசு பட்டுன்னு வெறுத்துப் போயிடும்….அப்பத்தான் ஒருத்தன் ரெண்டு பேர் தற்கொலை, அது இதுன்னு போயிடுறான்….இவளுக்கெல்லாம் அப்டித் தோணுறதுக்கு, தோணாமயே இருக்கலாம்…ஏன்னா இவ அந்தமாதிரிக் கேசுதான்…..மனசுல வெட்டித் திமிராத் திரியறதென்ன மெச்சூரிட்டியா? அது இம்மெச்சூரிட்டில்ல? அப்டியாப்பட்ட ஆளுங்களுக்கு திடீர்னு ஞானோதயம் வந்திச்சின்னு வச்சிக்குங்க…அது ஏறுக்கு மாறாப் போயி முடியறதுக்கும் வாய்ப்பிருக்கு….கடைசி நஷ்டம் யாருக்கு? மீதமிருக்கிறவனுக்கு….குடும்பத்துக்கு….அதானே?

      இத யாராச்சும் யோசிக்கிறாங்களா? யோசிச்சு, ஆரம்பத்துலயே தன்னை முழுமையா மாத்திக்கிட்டவங்க ஒருத்தரச் சொல்லுங்க பார்ப்போம்….ஆம்பளயும் சரி, பொம்பளையும் சரி….ஒவ்வொரு எடத்துல ஒவ்வொரு மாதிரி இருக்குல்ல….எனக்கு அமைஞ்சது இப்படி…பல எடத்துல வீட்டு ஆம்பளைங்க கதையும் கந்தலாக் கெடக்குல்ல…பொம்பளைங்க கெடந்து பாடாப் படுறாங்கல்ல…இங்க நான் படுறமாதிரி…!

      ஆனா ஒண்ணு சொல்றேங்க…என்னத் தவிர வேறே எவன் இவளுக்கு அமைஞ்சிருந்தாலும் என்னைக்கோ தற்கொல பண்ணிட்டுச் செத்துப் போயிருப்பான்….அல்லது விட்டிட்டுக் கண்காணாம ஓடியிருப்பான்….அதுதாங்க நெஜம்….இம்புட்டுத் தொரட்டிழுப்புக்கும் ஈடுகொடுத்து வந்திருக்கேன்னா…அது எங்கப்பாம்மா என்னை வளர்த்த வளர்ப்புதாங்க….அதுல ஒண்ணும் சந்தேகமேயில்ல….

      என்னவோப்பா….என்னென்னவோ சொல்ற….நீ சொல்றதப் பார்த்தா எனக்குள்ள பயம்தான் வருது…எதுவும் ஏடா கூடாமாப் பண்ணிப்புடாத…பொம்பளயாக்கும்….அந்தப் பாவத்தக் கட்டிச் சுமக்க முடியாது….நெட்டயோ குட்டயோ….வச்சிட்டு ஓட்டு….இதுதான் நம்மளோட இந்த சன்மத்து தலவிதின்னு நெனச்சிக்க….என்னைக்காச்சும் உன்னப் புரிஞ்சு பொருந்தி வராமயா போகப்போறா….? வருவா…அந்த நம்பிக்கையோட காலத்த ஓட்டு…..!

      என்னை நினைச்சு எங்கம்மா சொன்ன வார்த்தைக இதுதான்….இந்த உளைச்சல்லயே அம்மா சீக்கிரமாப் போயிட்டாகளோன்னு அடிக்கடி எனக்குத் தோணும்….உங்கப்பா இருந்திருந்தா, இன்னும் திருத்தமாப் பார்த்திருப்பாக…எனக்கு அம்புட்டுத்தான் புத்தி….ன்னு அம்மா கடைசியாக் கண்கலங்கினது இன்னும் என் மனசுல அப்டியே….

      சரி விடுங்க….நீங்க எதுக்கு வருத்தப் படுறீங்க….என் துயரம் என்னோட போகட்டும்…என்னவோ சொல்லணும்னு தோணிச்சு இன்னைக்கு….கரை உடைஞ்சமாதிரி வந்திடுச்சி….கொட்டிட்டேன்…..காலம் மாறாமயா போயிடும்….சக்கரம் சுத்தும்தானே….என்னை மன்னிச்சிடுங்கன்னு ஒரு வார்த்த சொல்லாமயா போயிடப் போறா….அது கூட வேண்டாங்க….சம்பாதிக்கிறவ….அப்டிப் பகிரங்கமாக் கேட்குறதுக்கு லஜ்ஜையாக் கூட இருக்கலாம்…அப்டி ஓப்பனா எதிர்பார்க்கிறது கூடத் தப்புதான்னு சொல்லுவேன்….. மறந்திருங்க எல்லாத்தையும்னு சொல்லட்டும்…அது போதும்ங்கிறேன்….அப்டியே கட்டிப் பிடிச்சு அள்ளி முத்தத்தப் பொழிஞ்சிர மாட்டேன்? எம்புட்டு நேரம் ஆகும்….கணத்துல எல்லாஞ் சரியாப் போயிடாது…..நா அதுக்குத்தானங்க துடிச்சிக்கிட்டிருக்கேன்…! சுமுகமி்ல்லேன்னா அந்தரத்துல தொங்குறதாத்தான அர்த்தமாகும்? சந்தோஷமும் இல்லாம, துக்கமும் இல்லாம இதென்னங்க வாழ்க்கை?  அப்டியும் .இத்தன வருஷமா கல்லு மாதிரி நான் நிக்கிறேன்னா…எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கணும்னு நெனச்சிப்பாருங்க….எங்கப்பாம்மா எம்புட்டு உரத்தோட என்னை வளர்த்திருப்பாங்கன்னு நம்புங்க….அத்தனையும் நல்லதுக்குத்தான்னு நான் இருக்கேன்….அதான் இங்க முக்கியம்…எனக்கு எங்கம்மா வார்த்தைதான் முக்கியம்….அதக் காப்பாத்தேலேன்னா அப்புறம் அவுங்களுக்குப் புள்ளையாப் பொறந்து என்னா பிரயோசனம்? அவுங்க ஆத்மா என்னைக் கேட்டுக்கிட்டே கெடக்கும்ல…?

      நிலவைப் பார்த்து வானம் சொன்னது…..என்னைத் தொடாதே….

      நிழலைப் பார்த்து பூமி சொன்னது….. என்னைத் தொடாதே….. –

எங்கோ ஒலிக்கும் பாடல் வரிகள்.  என் உறவுகளே என்னைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் பாட்டைத்தான் பாடுவாங்க…கிண்டல் பண்ணுவாங்க…கேலி செய்வாங்க…சரண்டர் ஆயிடு கண்ணு…ன்னு அட்வைஸ் பண்ணுவாங்க….எல்லாம்தான் பண்ணிப் பார்த்தாச்சே…? பலன்? இவள் நம்பி முன்னாலயும் போக முடியாது…பின்னாலயும் போக முடியாது….அவளா என்னைக்கு ஆடி அடங்குறாளோ அன்னைக்குத்தான் எல்லாம் சரியாகும். என்ன ஒண்ணு…அப்ப உடம்பு பலவீனமாயிருக்கும்…ரத்தம் சுண்டியிருக்கும்…வியாதி அப்பப்போ எட்டிப் பார்க்கும்…! அது எனக்கும் நேரலாமே…!  யார் தலையெழுத்த யார் மாத்த முடியும்…? இதுக்குப் பேர்தான் அனுபவ யோகம்னு சொல்றாங்களோ பெரியவங்க…?

      அடடே…ஆள் வருதுங்க…நா அப்புறமாப் பேசறேன்….! இன்னைக்கு சண்டையையும் சேர்த்து நாளைக்குச் சொல்றேன்….கொஞ்சம் பொறுத்துக்குங்க….!!

                        ---------------------------------------------------------

 

                                         

 

     

     

     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

     

“துணை“ - சிறுகதை - பிரசுரம்-தினமணிகதிர் - 26.03.2023

 

சிறுகதை           

துணை





ன்ன தப்பு நான் சொல்றதுல...? - அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அன்று காலையிலேயே அவர்களின் விவாதம் துவங்கி விட்டது.  விவாதம்தான். பேச்சாக ஆரம்பித்து எப்போதும் விவாதமாகத்தானே முடிகிறது இதுநாள்வரை? விவகாரமாக ஆகாமல் இருந்தால் சரி.  அடக்கி வாசிக்கிறாள். தான் ஒரு கருத்தில் ஊன்றிவிட்டதைப் போல, அவளும் ஒன்றில்  நிலைத்து நிற்பவள்.

      யாராவது அப்படி இருப்பாங்களா? எதுக்கு அனாவசியத்துக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு...?  உங்களை இப்போ இங்க யாரு என்ன பண்றாங்க...? - ஒரே கேள்வியில் தன்னைத் தட்டி உட்கார்த்தி விட வேண்டும். அந்தப் பேச்சை எடுப்பதோ, தொடருவதோ அவளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அவருக்கு வேண்டியது அதுதானே...!

      இந்த எடத்துலதான் உனக்கும் எனக்கும் வேறுபடுது...வெறுமே சோற்றுப் பிண்டமா இருக்கச் சொல்றே நீ...! உயிர் வாழறதுக்காக சோறு திங்கிறது வேறே...சோத்துக்காகவே வாழறது வேறே... பேசறதுக்கே ஒண்ணும் இல்லே..... –

      வாசலில் கீரைக்காரியின் விடாத சத்தம்.   அவளுக்கு அவள் வியாபாரம் குறி. இவளுக்கு சமையல்கட்டு குறி.  எனக்கு?-.

      அடுப்பில் வைத்திருந்த சட்டியில் படபடவென்று வெடித்துக் கொண்டிருந்தது. கடுகு கருகிடப் போகுது...முதல்ல அதை அணை....நீதான் உன் நியமங்கள்லேர்ந்து தடுமார்றே...நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன்....

      நீங்க பேசுற பேச்சுலதான் எல்லாமும் மறந்து போறது. கல்யாணி அடுப்படியை நோக்கி நகர்ந்தாள்.

      இப்பல்லாம் நான் பேசுறது உனக்கு எரிச்சலா இருக்குல்ல?... முன்னாடி என்ன ரசிக்கவா செஞ்சிது? அந்தக் காலத்துலயே நீ என் பேச்சை எப்பவும் காது கொடுத்துக் கேட்க மாட்டே! என்னை விட்ருங்கிறேன்...அவ்வளவுதான்....

      உங்களை யாரு இப்ப பிடிச்சு வச்சிட்டிருக்கா....அதான் மாசா மாசம் போய்ட்டு வந்துட்டுத்தானே இருக்கீங்க...

      இப்பப் போக முடிலயே....! மூணு மாசம் ஓடிப் போச்சே...? - ஊர் போகவும் வரவும்னு இருந்தாத்தான் எனக்கு மூடே சரியா இருக்கும்..என்னுடைய ஸ்தலம் அதுதான்.  இல்லன்னா பைத்தியம் பிடிச்சது போல ஆயிடுது.

      இப்போ குழந்தை...குழந்தைன்னு காரணம் வச்சு ஆள நிப்பாட்டினா...? அங்கயே இருந்திட்டா என்னங்கிற முடிவுக்கு வந்துட்டேன். அலைய முடில என்னால.!

      அதுக்கென்ன பண்றது? நான் ஒருத்தியா எப்டிப் பார்த்துக்க முடியும்? அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க...இன்னொரு ஆள் வேணுமே...?  பேரனக் கொஞ்சிட்டிருங்க...

      அப்போ ஊர் போயி நான் பாடாப் படுவேனே ஒத்தையாஅது பரவால்லியா?

      இங்க பேரக் குழந்தையைப் பார்த்துக்கிறது முக்கியமாஊர் போறது முக்கியமா? என்னால வர முடியாது.அவ்வளவுதான்

      பார்த்தியா?...இதச் சொல்லிச் சொல்லியே என்னை மடக்குறே.!..... பேரன் என்ன நம்ம கூடயேவா இருக்கப்போறான்...விவரம் தெரிஞ்சா அப்பா அம்மாவ விட்டு நகர மாட்டான்......நமக்கே எப்பவோ எவனுக்குத் தெரியும்?  நாளைங்கிறதே நிச்சயமில்லையே.!

      நீங்க பேசுறது உங்களுக்கே நல்லாயிருக்கா யோசியுங்க...எழுபது தாண்டி உங்களமாதிரி யாராவது இப்டிப் பேசிட்டிருக்காங்களான்னு  கொஞ்சம் நினைச்சுப் பாருங்க...?- எதுக்கு இப்டித் துள்றாரும்பாங்க.அவளும் விடுவதாயில்லை.

      யாரும் என்னை மாதிரிப்  பேசறதில்லைன்னு எப்டிச் சொல்றே...? வீடு வீடாப் போய் நீ பார்த்தியா? ரொம்ப அனுபவப்பட்ட மாதிரிப் பேசுற? வந்தாச்சு...வீடு வாங்கியாச்சு...கல்யாணம் பண்ணியாச்சு...குழந்தை பெத்தாச்சு...இருந்து பார்த்துக்கிறதுக்கு உன்னையும் அர்ப்பணமாக் கொடுத்தாச்சு...அப்புறமும் நான் எதுக்கு? என்னை விட்ற வேண்டிதானே...? நான் தனியா இருந்துக்கிறேன்னுதானே புலம்பறேன்....நீ எனக்கு  வேண்டாம்னுதானே கத்தறேன்...-மறுபடி என் பழைய இடத்திற்கே போய் நின்றேன். என் ஆழ் மன விருப்பமே அதுதானே?

      என் வாழ்நாள்ல பாதில வந்தவதானே நீ? இருந்துக்கோ.உனக்கு நான் முக்கியமில்லேன்னா.எனக்கு நீயும் முக்கியமில்லே.! அவ்வளவுதான். போட்டு உடைத்தார்.  

      துடைச்சுப் பேசுறதுதானே உங்க வழக்கம். வேண்டாம்தான்யாருக்குதான் யார்தான் வேணும்? எல்லாரும் வேணும்னு நினைக்கிறவாளுக்குத்தான் எல்லாரும் வேணும்.வெட்டி வெட்டிப் பேசினா யாரும் வேண்டாம்தான் - சொல்லிக் கொண்டே வந்து நறுக்கென்று காபியை வைத்தாள் கல்யாணி.

      இது மூணாவது காபி ஞாபகம் இருக்கட்டும்.என்றாள். வயசாச்சுகன்ட்ரோல் வேணும் எல்லாத்துலயும்.

      ஒவ்வொரு முறையும் வாதம்-பிரதிவாதம் வரும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட  இடத்தில் அமைதியாகிவிடுகிறாள். அந்த ஒரு பிடிதான் இன்றுவரை பலமாயிருக்கிறது. அதைப் புரிந்து கொண்டார் இவர்.                 

உங்களுக்குத்தான் யாருமே வேண்டாமே...? தனிக்காட்டு ராஜாதனிமைதனிமைஅசாத்தியத் தனிமைதவிச்ச வாய்க்குத் தண்ணி கிடைக்காமப் போயிடப் போறது.ஆள் பலம் வேணும் மனுஷாளுக்குஅத மனசுல வச்சிக்குங்கோ-குரலில் ஒரு சின்ன நடுக்கம்..!

               மனுஷன் கொஞ்சகாலமேனும் வாழ்க்கைல சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு? ஒரு கட்டத்துல விலகின மனநிலை அமையலேன்னா அவன் என்ன மனுஷன்? என்னை விட்டிட்டு நீ உன் பையனோடவே இருக்கத் தயாராயிருக்கும்போது, நான் மட்டும் ஏன் அப்டி இருக்கக் கூடாது? நான் வேண்டாம்னு சொல்ற நீ எனக்கு வேண்டாம்ங்கிறேன். அவ்வளவுதான்.

      யாரு வேண்டாம்னு சொன்னாங்க? பேசாம இங்கயே கிடங்கன்னுதானே சொல்றது? முப்பது நாற்பது வருஷம் வாழ்ந்தவங்க பேசுற பேச்சா இது?

      எனக்கு நான் கிளம்பினா, பின்னாடியே சரின்னு வந்திடணும்அதான் பிடிக்கும்எதிர்வாதம் பண்றது பிடிக்காது. அங்க போய்த் தனியாக் கிடந்து கஷ்டப்படுவானேன்னு கொஞ்சமாவது உனக்குத் தோணுதா? இத்தனை வயசுக்கு மேலே ஒத்தை ஆளா இருந்து, சமைச்சு,..சாப்பிட்டுஓட்டல்ல தின்னுவயித்தையும் உடம்பையும் கெடுத்துக்கணும்னு.எனக்குத் தேவையா? எனக்கு அது ஒத்துக்குமா? இந்தக் கரிசனம் வேண்டாமா உனக்கு?

       அப்போதைக்கு அந்தப்  பேச்சு முடிந்தது.

முன்பு நடந்த ஒரு விவாதம் வரி பிறழாமல் சந்திரசேகரனுக்கு நினைவு வந்தது. தான் எப்படியும் கிளம்பி விடுவோமோ என்கிற ஆதங்கம் அவள் மனதைப் போட்டு அரிக்கிறதோ? அதைக் கிளறிக் கிளறிப் பார்ப்பதில் தனக்கு ஒரு குரூர திருப்தி இருக்கிறதோ? டிபனைச் சாப்பிட்டு விட்டு டி.வி.பார்த்துக் கொண்டிருந்த தன்னை அவள்தானே வலியப் பிடுங்கினாள்?

      யோசிச்சுப் பாருங்க...இங்கேயிருந்து அமெரிக்கா போறவங்ககூட சேர்ந்துதான் போறாங்க...அம்மாவ மட்டும் எந்தப் பிள்ளையும் அழைக்கிறதில்ல...அவ மட்டும் தனியாவும் போறதில்ல...! அப்பாவோட சேர்ந்து ரெண்டு கெழடுகளும்தான் ஏறிப் பறக்கறதுகள்...!

     

நாள் பூராவும் விழுந்து விழுந்து வேலை செய்யும்சமையல் அறையிலேயே கிடையாய்க் கிடக்கும் அவளையும்தான் எப்படிக் கிழடு என்று சொல்வது? நாலு பேருக்குச் சமைத்தாக வேண்டும். காலை டிபன், இரவு டிபன் குழந்தைக்கு என்று தனி. ஓய்வென்பதே இல்லைதான். ஆனாலும் மனதளவில் ஏற்றுக் கொண்டு விட்டாள். இருக்கும்வரை செய்து விட்டு, கண்ணை மூடுவோம் என்று! அதில்தான் அவள் மனம் நிறைவு காண்கிறதென்றால் பிறகு எதற்கு வேறு சிந்தனை? ஸ்திர புத்தி! தனக்குத்தான் ஓயாத தடுமாற்றம்! நினைப்பதைச் செய்ய விட்டால்தானே? எதைக் கொண்டு வந்தோம்கொண்டு செல்ல?

      யார் சொன்னா சேர்ந்து பறக்கறான்னு? நீ கண்டியா? பேச்சைத் தொடர்ந்தார் இவர். விட மனசில்லை. அவள் சொன்னதை ஒத்துக் கொண்டதாக ஆகி விடுமே? ஈகோ என்னாவது? கிழட்டுப் புத்திக்கு என்ன ஈகோ வேண்டிக்கெடக்கு? தடுக்கி விழுந்தால் படுக்கைதான்.இந்த லட்சணத்தில் கெத்து மட்டும் குறைந்தபாடில்லை.

      உங்ககிட்டே வந்து ஸ்பெஷலா சொல்லிட்டுப் போனாளாக்கும்? இஷ்டத்துக்குக் கதையளக்கிறதுஊரையே விலைக்கு வாங்கின மாதிரி!.

      கதையில்லடிஅத்தனையும் யதார்த்தமாக்கும்.நாலு வீட்டுக்கு சமைச்சுப் போடன்னு எத்தனை பேர் போறா தெரியுமா நோக்கு? கோயில்ல குருக்களா இருந்தா அங்க வருமானம் ஜாஸ்தின்னு ஏற்கனவே நிறையப் போயிட்டா? காரியம் பண்ணி வைக்கிறதுக்கு ஆள் பஞ்சம். அங்க போனாத்தான் ஆளுக்கும் துட்டுக்கும்  மதிப்புன்னு பல பேர் போய் வருஷமாச்சு...!  .துணைப்பொட்டலமா எந்த மாமியும் எந்த மாமாவையும் இன்னைக்கெல்லாம்  அழைச்சிண்டு போறதில்லே...அதத் தெரிஞ்சிக்கோ....மாமாக்கள் பூராவும் ஆள விட்டாச் சரின்னு சொந்த ஊர்லயே அக்கடான்னு இருக்கப் பழகிண்டுட்டா....விருப்பப்பட்ட ஸ்வீட், காரம், வடை பஜ்ஜின்னு சுதந்திரமா போய் மொசுக்கலாமோல்லியோ...! நாக்கை அடக்க முடியாமே... பொண்டாட்டியோட பிக்கல் பிடுங்கல் இல்லன்னா அந்த விசேஷமே தனி.....

      அப்போ நீங்களும் அதுக்காகத்தான் அலையறேளா...? எப்படா சான்ஸ் கிடைக்கும்னு...!      தனியாப் போய் இருந்தா, இஷ்டத்துக்குத் திங்கலாமோல்லியோ?

      நா என்னைக்கோ நாக்கை அடக்கிட்டவன்என் சாப்பாட்டு அளவைத்தான் நீ தினமும் பார்க்கிறியே!அப்டியுமா சந்தேகம்? எந்த ஒடம்பு நமக்கு இன்பமா இருக்கோஅதுவே ஒரு கட்டத்துல பாரமாயிடும்மனுஷன் தன் வயித்தை உணரணும். இல்லன்னா உணவே வியாதியாயிடுமாக்கும்

      நன்னாயிருக்குஜீவனில்லாமப் போகப் போறதுஅசந்து படுத்துக்கப் போறேள் ஒரேயடியா இன்டேக்கைக் குறைக்கிறதும் தப்பாயிடுமாக்கும். யோசியுங்கோ.

      இந்த பார்...உனக்கு  உன் லெவல்....அதுக்கு மேலே உன்னாலெல்லாம் சிந்திக்க முடியாது. நான்.எனக்குன்னு சில நியமங்கள் உள்ளவன். அதுல பிடிவாதமா இருக்கிறவன்

      ஆமாமாமத்தவாளெல்லாம் நியமமில்லாமத்தான் அலையறாளாக்கும்எல்லாருக்கும் ஒரு திட்டமுண்டு

தாராளமா இருந்துக்கோயார் வேண்டாம்னா? எனக்கு என் ஊர்ல என் ஜனங்களோட இருக்கணும்அதுதான் என் ஆரோக்யம்என் ஆயுசுகூட அதுனால கூடும்னா பார்த்துக்கோயேன்

      கல்யாணிக்கு ஆதங்கம் தீர்ந்தபாடில்லை. இந்த மனுஷனென்ன இப்டி பிடிச்ச பிடியாஒத்தக் கால்ல நிக்கிறது? நினைச்சதை நிறைவேத்திட்டுத்தான் விடும் போல்ருக்கு?

     

      இப்போ என்ன பண்ணனும்ங்கிறேள்? பேரக் குழந்தையக் கொஞ்சிண்டு, அதோட இருக்கிறதுக்கு உங்களுக்கு விருப்பம் இல்லே...அதானே...? யாராவது இப்டி இருப்பாளா? கொஞ்சம் கூடப் பாசமே இல்லையா உங்களுக்கு...! அவா அவா குழந்தை வரம் கிடைக்கலியேன்னு தவமிருந்திண்டிருக்கா...! ரெண்டு வருஷம் கழிச்சிப் பெத்துக்கிறோம்னு ஊதாரியாத் திரிஞ்சிண்டு சம்பாதிக்கிற காசக் கரியாக்கிண்டிருக்கா......நமக்கு ஆண்டவன் டக்குன்னு கொடுத்திட்டான்...உங்க பிள்ளை அதுல ரொம்ப சமத்தாக்கும்...ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னு தள்ளிப்போட்டு அதுக்குள்ளே ரெண்டு பேருக்கும் சண்டை வந்து, நிறையப் பேர்  கோர்ட்டுல போய் நின்னுண்டிருக்காளாக்கும்...அந்தக் கதை பிள்ளையப் பெத்துட்டா நடக்குமா? அடங்கி ஒடுங்கித்தானே  ஆகணும் கட்டித் தங்கமா கடவுள் ஒரு பேரக் கொழந்தையைக் கொடுத்திருக்கான்...கிருஷ்ணா ராமான்னு பேரனைக் கையிலெடுத்துக் கொஞ்சிண்டு பேசாமக் கெடப்பேளா...அது இதுன்னு கெடந்து துள்றேளே....? –

நான் என்ன சொன்னாலும் அவள் மசிவதாய் இல்லை. வேலை வேலைன்னு கெடந்து மாஞ்சாலும் பரவால்லன்னு முடிவு பண்ணிட்டா போல்ருக்குமருமகளையும் தன் பெண்ணாய் நினைத்து வரித்துக் கொண்டு விட்டாள். அவளும் தனக்கு ஒத்தாசையாய் நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இல்லை. போட்டி இல்லை. பொறாமை இல்லை. நிறைஞ்ச மனசாய் நின்று செயல்படுகிறாள். எத்தனை பேருக்கு  வரும் இந்த விசால மனசு? ஒரு துரும்பை நகர்த்துவதில்லை வந்த பெண். இவளுக்கு அது புரிந்ததோ இல்லையோ? செக்கு மாடு போல் சுற்றிக் கொண்டிருந்தால்?

      ஒவ்வொரு முறை பேச்சு வரும்போதும் அது இப்படித்தான், இங்கு போய்த்தான் முடிகிறது. அந்தக் குறிப்பிட்ட புள்ளியில்தான் சங்கமமாகிறது.  ஆனாலும் இவருக்கு மனசு ஆறமாட்டேனென்கிறது. அது என்னவோ தனியாய் இருப்பதில் அப்படி ஒரு சுகம். ஒரு சாமியார்த்தனம். பிக்கல் பிடுங்கல் என்று எதுவும் இல்லை. பிடித்தது பிடிக்காதது என்று எதையும் கண்கொண்டு பார்க்கத் தேவையில்லை. அது இது என்று எது ஒன்றையும் பார்த்துப் பார்த்துத் திருத்த வேண்டியதில்லை. தப்பு சொல்ல வேண்டியதில்லை. எதுக்கெடுத்தாலும் குறை சொல்றார் என்கிற கெட்ட பெயரில்லை.   நச்சு நச்சு என்று பிடுங்குவதாக பிறர் நினைக்க வேண்டியதில்லை. சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்க வேண்டியதில்லை.ஒதுங்கியிருப்பதாகப் பிறருக்கு தோன்ற வேண்டியதில்லை. உம்மணாமூஞ்சி என்று நினைக்க வேண்டியதில்லை.சொல்லப் போனால் மருமகளுக்கு இவர்தான் மாமியார். கல்யாணி இல்லை. அவள் அவன் பையனைப்போல் அந்தப் பெண்ணுக்கும் ஒரு தாய்.  தன்பாடுதான் திண்டாட்டம். ஆனால் அதைப் பொருட்படுத்த இங்கு ஆளில்லை. பேசாமக் கிட என்பதுதான் அதிகபட்சப் பொருட்படுத்தல். கடவுளேஇவளும் இல்லாமல், தான் படுக்கையில் விழுந்தால் தன் கதி? இதுவே தான் ஊரில் தனியாய்ப் போய் இருக்கையில் நடந்தால்? நடக்காது என்பது என்ன நிச்சயம்?

 வயதானவர்களின் எந்த அசௌகரியங்களையும் இவர்கள் உணருவதில்லை.  உடல் உபாதைகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. எதற்கும் கூச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் தனிமையின் இனிமை சிறப்புதான்.

      திறந்த உடம்போடு, ஒரு வேட்டியைக் கட்டினமா, துண்டைத் தோளில் போட்டமா, அதையே நீள நெடுகத் தரையில் விரித்து நெடுஞ்சாண்கிடையாய் சாய்ந்தோமா என்று எளிமையாக இருந்து  கழிக்கலாம். ரொம்பவும் வயிற்றுப் பாட்டுக்காக யோசிக்க வேண்டியதில்லை. சாதம், ரசம், ஒரு காய் அல்லது சாதம், சாம்பார், ஒரு காய், சுட்ட அப்பளம்... என்று போதும்.சில நாள் வெறும் மோர் சாதத்தோடேயே கூடக் கழித்து விடலாம். ஒரு நார்த்தங்காய் ஊறுகாய் இருந்தால் சரி.  இட்லி, தோசைக்கு தெருக்கோடியில் விற்கும் மாவு. மிளகாய்ப்பொடி... அல்லது இருக்கவோ இருக்கு...கொஞ்சம் மோர் விட்டுப் புரட்டி சாப்பிட்டால் ஆச்சு...நொறுக்குத் தீனி கிடையாது. ஏதேனும் ஒரு பழம் போதும் மறுநாள் காலையில் வயிறு சுத்தமாக....ஓட்டி விடலாமே...! எளிமையாய் ஆர்ப்பாட்டமின்றி பிறருக்கு எந்தவிதத் துன்பமுமின்றி இருக்குமிடம் தெரியாமல் இருப்பது கூட ஒருவகை ஆன்மீக தர்மம்தானே...! தனிமையிலே இனிமை காண முடியாது என்று எவன் சொன்னான்?

      சாகும்வரை கூட இருந்து தொண்டாற்றியே ஆக வேண்டுமா? என் ஆசைக்குக் கொஞ்ச நாள் நான் தனியாக வாழக்கூடாதா?  கடமையிலிருந்து வழுவியிருந்தால் சரி...எல்லாம்தான் பார்த்துப் பார்த்து ஓடி ஓடிச் செய்தாயிற்றே..எதில் குறை வைத்தது? யாரேனும் விரல்விட்டு சொல்ல முடியுமா? கைநீட்டி ஒரு கேள்வி கேட்க முடியுமா? எதுக்கு செய்தது? பின்னாளில் வச்சுக் காப்பாத்தணுமேன்னா? நெவர் உன் விருப்பத்துக்கு நீ உன் பையனோட இங்கயே இருக்கணும்னு விரும்பற மாதிரி...நான் என் விருப்பத்துக்கு தனியாப் போய் இருக்கிறது மட்டும் எப்படித் தப்பாகும்?

      சரி...விடுங்கோ... அநாவசியப் பேச்சு வேண்டாம்....உங்க பையன்ட்டக் கேட்டுக்குங்கோ...புறப்படுங்கோ...நா எப்டியோ இருந்துக்கிறேன். எனக்குக் குழந்தைதான் முக்கியம்......நாங்க இங்கே என்னமோ செய்துக்கிறோம்...நீங்க சந்தோஷமா இருந்தாச் சரி...சுருக்கமாய் முடித்துக் கொண்டாள்.

எதுவும் பலிக்காது என்று நினைத்திருப்பாளோ? நாங்க என்று சொல்லி தனியாய்ச் சட்டென்று தன்னைப் பிரித்துக் கொண்டு பேசுகிறாளே? என்னைப் பிரித்து விட்டாளே...! ஆனாலும் இது இவளுக்கு ஆகாது இந்த மனுஷனுக்குக் கூடப்போய்த் துணையா இருந்து மீதி நாட்களைப் கழிப்போம்னு ஒரு இரக்கச் சித்தம் இல்லையே?அவங்க குடும்பத்த அவங்களே கவனிச்சிக்க மாட்டாங்களா? இவ எதுக்கு தூக்கிப் பிடிக்கணும். அப்புறம் அவங்களுக்குன்னு எப்படி அனுபவம் சேகரம் ஆகும்? வளர்ற மரங்கள்தானே? வேலை செய்தா உடம்பு உரமாகப்போகுதுதளர்ந்தா போகும்? ஓடி ஓடிச் செய்யட்டுமே? தன் பிள்ளை, தன் மனைவி, தன் கணவன், தன் வீடுன்னு? ஒரு குடும்பம்ங்கிறது எப்படி ரன் பண்றதுங்கிறதை அப்புறம் அவுங்க எப்படித்தான், எங்கதான் கத்துக்கிறது? இது இவளுக்கு ஏன் தெரிய மாட்டேங்கது? படிச்சுப் படிச்சு சொன்னாலும் மண்டைல ஏறலேன்னா பிறகு என்னதான் பண்றதாம்?  

பையன் ஆதரவு இருந்தால் நான் கூட தூசுதானா அவளுக்கு?  வீடு வரை உறவுவீதி வரை மனைவி எவ்வளவு சரி?

      இது ஏதோ வயித்தெரிச்சல்ல சாபமிடுற மாதிரில்ல இருக்கு....உங்ககிட்டேயெல்லாம் பர்மிஷன் வாங்கிண்டுதான் கிளம்பணும்னு எனக்கொண்ணும் அவசியமில்லே...யாரும் எனக்கு அனுமதியும் தர வேண்டியதில்லை....நெனச்சா வண்டியைக் கௌப்பிடுவேன். என்னை ஒருத்தரும் தடுக்க முடியாதாக்கும்...ஏதோ சொல்லணுமேன்னு ஒரு கடமைக்காகச் சொன்னேன்..அவ்வளவுதான்...-புறப்படலாம்னு நினைச்சிட்டா என்னை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. அது அதுபாட்டுக்கு நடக்குமாக்கும். என் ஸ்டான்ட் கரெக்ட் என்னைப் பொறுத்தவரை! -  சொல்லிக் கொண்டே ஐ.ஆர்.சி.டி.சி.யில் சென்னை டூ நெல்லை டிக்கெட் அவெய்லபிளா என்று தேட ஆரம்பித்தார் சந்திரசேகரன். வைத்த கண் வாங்காமல் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல்யாணி கடைசியாகச் சொன்னாள்....

      நீங்க,  துணையா இங்கே இருக்கேளேங்கிற தைரியத்துலதான் நானே கொஞ்சம் தைரியமா இயங்கிண்டிருக்கேன்... முடிஞ்சும் முடியாமலும்...அதப் புரிஞ்சிக்காம கொக்குக்கு ஒண்ணே மதின்னு  பேசறேள். எனக்கு நீங்கதான் துணைன்னு உங்களுக்குத் தோணலை பாருங்கோஅது என்னோட துரதிருஷ்டம். நீங்க இல்லைன்னா நான் அநாதைன்னு உங்களுக்குத் தோணலையா? இப்டிப் பிடியா நின்னு கிளம்பிப் போறேங்கிறேளே? இது சரியா?  சந்தோஷமாப் .போயிட்டு வாங்கோ...விதி போல இருக்கு...! யார வச்சு யாரு? எல்லாரும் இந்த உலகத்துல தனித் தனியாத்தான் வந்தோம்..தனித் தனியாத்தானே போயாகணும்...எதுதான் கூட வரப்போறது? அவாவாளுக்கு விதிச்சிருக்கிறதுதானே நடக்கும்?

      சந்திரசேகரனை என்னவோ செய்தது கல்யாணியின் இந்தக் கடைசி வார்த்தைகள்...! சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவள் இப்படி முற்றிலுமாக இறங்கிச் சொன்னது அவரைச் சிலையாய் ஸ்தம்பித்து நிற்கச் செய்து விட்டது.

                              ----------------------------------------------------------

 

     

     

 

 

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...