16 ஏப்ரல் 2012

“பிசிறு” சிறுகதை


 

தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.

பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருப்பார்கள். பின்புறக் கேரியரில் ஒரு சாக்கினை மடித்துப் போட்டு இருபக்கத்திற்கும் சமமாகத் தொங்குமாறு குடங்களைக் கட்டியிருப்பார்கள். குடத்தின் கழுத்தில் இறுக்கமான சுருக்கு. தண்ணீர் பிடித்துச் செல்லும்போது சிக்கென்று நிற்கும். நிற்க வேண்டும்.

எல்லோருக்கும் கை வந்த அந்தக் கலை ஏனோ எனக்கு மட்டும் படியவில்லை. அவர்களைப் போல நானும்தான் செய்து பார்த்தேன். தண்ணீர் பிடித்துத் தொங்கவிட்டுப் பாதி தூரம் கூட வந்திருக்கவில்லை. கழுத்துப் பகுதியிலிருந்து மேற்புறமாகச் சுருக்கு இளகி அப்படியே கயிறு மேலேறி குடம் பொத்தென்று கீழே விழுந்து விட்டது. நடு ரோட்டில் தண்ணீர் ஆறாய்ப் பெருகி நீராய் ஓடியது. எனக்கோ பெருத்த அவமானமாக இருந்தது. நாலாங்கிளாஸ் படிக்கும் சின்னஞ்சிறுவன் கூட குடத்தைக் கட்டிக் கொண்டு சிட்டாய்ப் பறக்கிறான். தடிமாடு மாதிரி வளர்ந்த எனக்கு அது ஏனோ கைவரவில்லை. நல்ல கனமான குடமா இருக்கணும் சார்…என்றார்கள் உதவிக்கு வந்தவர்கள். பாதித் தண்ணீரோடு நிமிர்த்திக் கொடுத்தார்கள். இதை எங்க கொண்டு போக…என்று அதையும் ரோட்டில் ஊற்றினேன். காலிக் குடத்தைக் கட்டிக் கொண்டு வீடு பயணிக்கையில் ஜோராக நிமிர்ந்து வந்தது அது.

சவக்காடு என்று ஒரு இடம். ஒரு காலத்தில் பிணங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் இடமாக இருந்ததால் அந்தப் பெயர் விளங்கிற்று என்றார்கள். ஒரு சிலர் சவக்காடில்லை, சிவக்காடு என்றார்கள். சிவன் சாம்பலைப் பூசிக் கொண்டு ஆடியதாய் மனதில் நினைத்துக் கொண்டு. அந்த இடத்தில்தான் வழக்கமாய் எல்லோரும் சென்று அடைவார்கள் தண்ணீர் பிடிப்பதற்கு. கூட்டமான கூட்டம். நாலு ஐந்து இடங்களில் அடி பைப் வைக்கப்பட்டிருக்கும். படக்கு படக்கு என்று தண்ணீர் அடிக்கும் சத்தம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

என்ன விசேஷம் என்றால் ஊரெல்லாம் நாயாய் பேயாய் தண்ணீருக்கு அலைந்தாலும், அங்கு மட்டும் எந்நேரமும் வந்து கொண்டேயிருக்கும். நின்றது என்கிற பேச்சுக்கே இடமில்லை. பூமிக்கடியிலான பைப் லைன் வெகு பள்ளம் அங்கே, அதனால்தான் அப்படி வருகிறது என்று சொன்னார்கள். அருகில் நூறடி தூரத்தில் உள்ள வீடுகளில் பொட்டுத் தண்ணீர் வராது. இங்கே அடி பைப்பை வைத்து சிறிது தண்ணீரை உள்ளே ஊற்றி படக் படக்கென்று அடித்து பிரஷரை ஏற்றினால் எழும்பிக் கொண்டு மேலே வந்து தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும்.

குடம் ஒரு ரூபாய். ஒரு அடி பைப்பில் நாளெல்லாம் தண்ணீர் கொட்டுவதால் எப்படியும் நூறு நூற்றைம்பது குடங்களுக்காவது காசு தேறும். இப்படியான சேதி ஊர் பூராவும் பரவி கார்ப்பரேஷன்காரர்கள் வந்து தண்ணீரைக் காசுக்கு விற்கக் கூடாது என்றார்கள். சரி, ஓசி கொடுக்கிறோம் என்று தெரியாமல் காசு வாங்கிக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள். அதுவும் தெரிந்து போய் கார்ப்பரேஷனில் தண்ணீர் விடும் நாள், நேரம், தவிர மற்ற நேர, நாட்களில் யாருக்கும் தண்ணீர் அடிக்க விடக் கூடாது, அப்படிச் செய்தால் குழாய் கனெக் ஷன் பிடுங்கப்படும் என்று கண்டிப்பாகச் சொல்லப் போக கொஞ்ச நாட்களுக்கு அந்தக் களேபரம் ஓய்ந்தது அங்கே. அடிக்கடி சம்பந்தப்பட்டவர்கள் வேறு வந்து வேவு பார்க்கப் போக, ஜனங்களுக்குத் தண்ணீர் விடுவது நின்றது.

பழையபடி ஆட்கள் சைக்கிளில் குடங்களைச் சுமந்து கொண்டு சர்ரு, புர்ரு என்று வேகமாய் மிதித்துக் கொண்டு எங்கடா தண்ணீர் கிடைக்கும் என்று அலைய ஆரம்பித்தார்கள்.

கார்ப்பரேஷன் கமிஷனர் பங்களாக் குழாய்ல தண்ணி கொட்டுதாம்….என்று யாரோ சொல்லப் போக கூட்டம் அலை மோதியது அங்கே. போலீஸ் வந்து இங்கல்லாம் தண்ணி பிடிக்கக் கூடாது என்று விரட்ட, பிடிச்சிட்டுப் போகட்டும்யா விடுங்க…என்றாராம் கமிஷனர். என்ன ஒரு இரக்கம் பாருங்கள். மவராசனா இருக்கட்டும் என்று வாழ்த்தியது ஜனம். அதுக்காக இப்படியா? டிராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு கூட்டம் கட்டி ஏறியது என்றால்? கடைசியில் போலீஸ் பந்தோபஸ்து போட வேண்டிய நிலை வந்தது. ஒரு கட்டத்தில் கமிஷனர் தன் பங்களாவுக்கு முன் அப்படியான கச்சரா புச்சராக் கூட்டம் விடாமல் இருப்பதை வெறுக்க தண்ணீர் விடுவது அறவே நின்றது. பங்களா வெளி கேட் இழுத்து மூடப்பட்டது.

இப்படியாகத்தானே சைக்கிளில் குடத்தைக் கட்டிக் கொண்டு தவறு, தவறு அதுதான் ஆகாமல் ஆயிற்றே, என் மொபெட்டில் ஒரே ஒரு குடத்தை வைத்துக் கொண்டு அல்லது கேனை நிறுத்திக் கொண்டு நானும் அலைய ஆரம்பித்தேன். அப்படி அலைந்த போது நான் கண்டுபிடித்த இடம்தான் அந்த வீடு.

வாங்க…எங்க இன்னும் கடந்து போறீங்க…இங்கதான் தண்ணி வருதுல்ல.. என்று சாலையைப் பார்த்துக் கொண்டு நின்ற அந்த அம்மாள் வலிய அழைத்தது என்னை. எப்பொழுதுமே யாராவது அங்கு தண்ணீர் பிடித்துக் கொண்டேயிருப்பார்கள்தான். யாரேனும் ரெண்டு பேர் காத்துக் கிடப்பார்கள். இதையெல்லாம் பார்த்தவாறே நகர்ந்து விடுவது என் வழக்கம். சொல்லப்போனால் அங்கிருந்து அரைக் கி.மீ. தூரம் கடந்தால்தான் நான் வழக்கமாய்ப் பிடிக்கும் அந்த சவக்காடு இடம் வரும்.

அதுதான் இல்லை என்று ஆகிவிட்டதே என்று கேட்கிறீர்களா? அது அப்படியல்ல. இல்லை என்று ஆகும். பிறகு இருக்கும். பின்னும் ஒரு நாள் இல்லை என்று ஆகிப் போகும். இதுதான் வழக்கம்.

போகட்டும்யா…சனம் தண்ணிக்காக என்ன பாடு படுது…நம்மளாலதான் எல்லா எடத்துக்கும் விட முடியல…அங்க அதுபாட்டுக்கு வந்திட்டிருக்குது…அத நிறுத்தி என்னா செய்யப் போறோம்…அதக் கெடுப்பானே…அங்க நிறுத்தப் புகுந்தோம்னா அதோட கனெக் ஷன் உள்ள மேட்டு வீடுக பலதுக்கும் இல்லாமப் போகும். பெறவு அங்க பிரச்னை கௌம்பும்…அவுகளுக்குப் பதில் சொல்லி மாளாது. கழுத கெடக்கு விடு…என்னா அந்தத் துட்டை வாங்கி அவுக என்ன கோட்டையா கட்டிடப் போறாக…ஏற்கனவே நம்ம செக் ஷன் ஆபீசரு ஒருத்தர் போயி அடி பெத்துட்டு வரல்லியா…இனியும் அங்க பிரச்னை பண்ணினம்னா டப்பா கழன்டு போகும்…

இதுதான் நடந்தது. இப்பொழுதும் அங்கே ஜே.ஜே. என்று திருவிழாக் கூட்டம்தான். யம்மா, அய்யா, அண்ணே, யக்கா, என்னங்ணா, வந்துட்டங்ணா, சரிங்ணா, என்று மக்களிடையே உறவு முறை ரெம்பவும் நெருக்கமாகி விட்டது அங்கே.

அரை கி.மீ. கடந்து அந்தச் சந்து நுனியில் நுழையும்போதே காத்துக் கிடக்கும் கூட்டத்தைப் பார்த்து வதக் என்கும் எனக்கு. இங்க போயி என்னத்த நின்னு, என்னத்த அடிச்சு, என்னத்த தண்ணிய என்னத்தப் பிடிச்சு….. என்று மலையாய் அலுப்பு வந்தது எனக்கு. போதும்டா சாமி இந்தத் தண்ணிக்குப் படற பாடு…..

உங்கள யாரு பாடு படச் சொன்னா…அதான் ட்ரை சைக்கிள்ல புருஷன் பொண்டாட்டியா ரெண்டு பேர் தள்ளிட்டுப் போறாங்களே… …அவுங்ககிட்டச் சொல்லுங்க…தெனம் நமக்கும் ரெண்டு கொடம் வேணும்னு…தருவாங்க…

அந்தாளு கொடம் அஞ்சு, ஏழுங்கிறான்…தூரத்துக்கேத்தமாதிரி….தெனம் இதுக்கு இருபது முப்பதுன்னு கொடுக்கச் சொல்றியா…அவன் கொடத்தக் கழுவுறானோ இல்லியோ…எந்நேரமும் ஒரு பாக்கப் போட்டு மென்னுக்கிட்டே கிடக்கான்…அங்கங்க புளிச் புளிச்சின்னு துப்ப வேற செய்றான்…அப்டியே வாயத் துடைச்சிக்கிறான். அதே கையால தண்ணிக் கொடத்தத் தூக்கிக் கவுத்து ஊத்துறான்…அங்கங்க நின்னு பீடியை இழுக்கிறான்…அன்டர்வேர் தெரியறமாதிரி சொறியறான்…இதெல்லாம் நீ பார்த்திருக்கியா…நா தெனம் பார்க்கிறேன்…அவன்ட்டப் போயி தண்ணிய வாங்குங்கிற…வௌங்கினாப்லதான்…

அவள் வாய் அத்தோடு அடைத்துப் போனது. எப்டியோ கொண்டுவந்தாச் சரி என்று விட்டு விட்டாள். பாடெல்லாம் எனக்குத்தானே..தினமும் 25 லிட்டர் மினரல் வாட்டர் கேனைக் கொண்டு வந்து இறக்க எவனிடம் ஐவேஜூ உள்ளது.

நீங்க என்ன சைக்கிள்லயா போறீங்க…செலவாகாம இருக்க…? மொபெட்லதான போறீங்க…அதுக்கு பெட்ரோல் எங்கிருந்து வருது? ஓசிலயா ? அந்தச் செலவையும் கணக்குப் பண்ணினீங்களா? – கேட்டாள்.

நானென்ன லேசுப்பட்டவனா? என்ன கவனித்தாள் அவள்? ஏதேனும் கடை கண்ணி என்று செல்லும்போதே ஒரே வேலையாய் நாலைந்து காரியத்தை முடிப்பதுபோல்தானே சென்று வருகிறேன். இந்த ஒன்றுக்கு மட்டும் என்றா வண்டியைக் கிளப்புகிறேன்?

என்ன சார்…லைப்ரரிக்கு கொடத்தோட வர்றீங்க…?

என்ன சார்…பேங்க் வேலையா வர்றபோதும் கையில குடம்தானா?

அட, உழவர் சந்தைக்கு பைக்கு பதிலா குடத்தக் கொண்டு வந்த ஆள இப்பத்தான்யா பார்க்கிறேன்… - நண்பர் கேலி செய்யவில்லையா?

எத்தனை கேள்விகள்? எத்தனை கிண்டல்கள்? எதைக் கண்டாள் எதைக் கேட்டாள்? எல்லாப் புகழும் ஒருவனுக்கே….

ண்டி தானாக நின்று போகிறது அந்த இடத்தில். ஒரு அடி அதற்கு மேல் வைக்க முடியாது. இப்படி நின்று தடுத்தால்? ஓரமாய் மரத்தடியில் நிறுத்தி ஸ்டான்ட் போடுகிறேன். அதற்குள் அந்தத் தண்ணீர்க் கேனை உரிமையோடு எடுத்து உள்ளே செல்கிறது அந்தம்மாள்.

என்னா கேனப்போயி இப்டி வச்சிருக்கீங்க…கழுவவே மாட்டீகளா…? – கேட்டுக் கொண்டே குழாயின் குறுக்கே நீட்டி சிறிது தண்ணீரைப் பிடித்துக் குலுக்குகிறது.

தெனம் கழுவணுமாக்கும்…அப்பத்தான் உள்ளாற பாசம் பிடிக்காம இருக்கும்…தண்ணி வீச்சமில்லாம இருக்குமாக்கும்…

என்னவோ ஒரு பொடியை உள்ளே தூவி மீண்டும் குலுக்குகிறது. கொஞ்ச நேரத்தில் வெளியில் இருந்து பார்த்த எனக்கு உள்ளே தெரியும் வெளிச்சம். மனிதர் மனங்களையும் இப்படி நுணுகிப் பார்த்தால்தான் உள்ளே இருக்கும் வெளிச்சம் தெரியும் போலும்.

அடேயப்பா எத்தனை குடங்கள்? இத்தனை எண்ணிக்கையை எப்படிச் சேர்த்திருக்கும் இந்த அம்மாள்? தண்ணீர் பிடிக்க வந்து மறந்து போனவர்கள் இருப்பார்களோ? அஞ்சாறு குடம் என்று வைத்துப் போனவர்கள் மறந்து விட்டிருப்பார்களோ? அப்படி ஒன்றிரண்டாய் மறந்து மறந்து இத்தனை சேர்ந்திருக்குமோ? பழைய குடங்கள் எங்கும் விற்பதில்லையே? புதிதுதானே வாங்கியாக வேண்டும். ஒட்டும் போட முடியாதே? ஓட்டை விழுந்தால் அடைக்க முடியாதே…அடைத்தாலும் நிற்காதே…!

நீ இருக்கியே…இப்டியே கண்டமேனிக்கு விட்டேத்தியா நினைக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு…சும்மாக் கெடடா… வந்தமா, தண்ணியப் பிடிச்சமா, போனமான்னு இல்லாம…இதென்ன விருதாச் சிந்தனை?

கேனுக்குள் தண்ணீர் ஃபோர்சாக இறங்கும் சத்தம். ஒரு குறிப்பிட்ட அளவு நிறையும் வரை சாய்ந்து விடாமல் இருக்க கேனைக் கையால் பிடித்துக்கொண்டு நிற்கும் அந்த அம்மாள். என்ன ஒரு அக்கறை? செய்யும் வேலையில்தான் என்ன ஒரு அர்ப்பணிப்பு உணர்வு? அங்கே வரிசையாக அணிவகுத்து நிற்கும் நீர் நிறைந்த குடங்களே அதற்கு சாட்சி. அது விற்பதற்கோ அல்லது கொண்டு வந்தவர்கள், வந்து எடுத்துச் செல்வதற்கோ? எதுவானாலும் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு. என்ன ஆனாலும் மூத்த தலைமுறையினரின் பொறுப்புணர்வே தனிதான். இந்த சமூகம் இன்னும் அவர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களால் காப்பாற்றப்படும் விழுமியங்கள்தான் நம் குடும்ப அமைப்பின் ஆதார சுருதியாக விடுபடாமல் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மாற்றம் என்ற ஒரு வார்த்தையைத் தவிர எல்லாமும் மாறுதலுக்குட்பட்டது என்கிறோம். ஆனால் மாறாத, காலம் காலமான, அழிவற்ற, அடிப்படை ஒழுக்கங்களும், பண்பாடும், பொறுப்புணர்வும், செயல்பாடும்தான் இன்னும் மீதமாகி நாம் வீழ்ந்து படாமல் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறு நிகழ்வுகளிலும் இப்படி எத்தனை எத்தனையோ அர்த்தப்பூர்வமான மேன்மைகள். இந்தாங்க,எடுத்துக்குங்க…சொல்லியவாறே தண்ணீர் கேனைத் தூக்கி என்னருகே வைத்தது அந்த அம்மாள்.

கையில் காசைத் திணித்தேன்.

என்னாது…? ஒத்த ரூபாயக் கொடுக்கிறீங்க…..மூணு ரூபா கொடுங்க…..

எது? மூணு ரூபாயா? எல்லா எடத்துலயும் ஒரு ரூபாதான…? எல்லார்ட்டயும் வாங்குறத என்ட்டயும் வாங்கிக்குங்க…- அந்த அம்மாள் என்னிடம்தான் ஸ்பெஷலாகக் கேட்கிறது என்று தோன்றியது எனக்கு.

பின்ன? உங்ககிட்ட மட்டுமா கூடக் கேட்கப் போறேன்….அல்லாருந்தான் கொடுக்கிறாக…கொடுங்க…கொடுங்க…பாட்டிக்குக் கொடுத்தா என்ன கொறஞ்சா போவீங்க…கொடுங்க….- தன்னைப் பாட்டி என்று எனக்கு பாவித்துக் கேட்டதில் நான் இறங்கலாம் என்ற நினைப்பு..

எங்கிட்டக் காசில்ல….ஒர்ரூபாதான் கொண்டாந்தேன்….அடுத்தவாட்டி பார்ப்போம்….சொல்லிக் கொண்டே கீழே இறங்கினேன்….நான் அங்கே நின்ற வேளையில் வெறும் ஐம்பது பைசாவும், ஒரு ரூபாயும் கைமாறுவதைத்தான் பார்த்தேன். என்னிடம் மூன்று கேட்டால் எப்படி? நான் என்ன இளிச்சவாயனா? ஏன் என்னிடம் மட்டும் அப்படிக் கேட்கிறது? எல்லோரும் சைக்கிளில் தண்ணீர் எடுத்துச் செல்ல, நான் மட்டும் மொபெட்டில் வருகிறேனே, அதனாலா? வேறு சிலரும் அப்படி வருகிறார்கள்தானே? ஆனால் அவர்களில் யாரும் இங்கு பிடிப்பதாய்த் தெரியவில்லை. இங்கு வருவதெல்லாம் வெறும் சைக்கிள் பார்ட்டிதான். அப்படியானால் மாட்டிய முதல் கிறுக்கன் நான்தானா? வசதியான பார்ட்டி என்று நினைத்துவிட்டதோ?

நல்லாயிருக்கு நீங்க பண்றது…கேனை வச்சு தண்ணிய அடிச்சி, நிரப்பிக் கொடுத்திருக்கேன்….அதுக்காச்சும் காசு கொடுத்திட்டுப் போங்க…நீங்க பாட்டுக்குப் போறீங்க…நல்ல ஆளுங்க நீங்க….அஞ்சு ரூவால்லாம் கொடுக்கிறாக…நீங்க என்னடான்னா மூணு கொடுக்க அழுகிறீங்க….

இன்னும் கொஞ்சம் போனால் சத்தம் பலமாகி தெருவில் மானத்தைக் கூட்டிவிடும் போலிருக்கிறது. நல்லா மாட்டினன்யா நானு….

பையைத் துழாவினேன். இன்னொரு ஒரு ரூபாய் தட்டுப் பட்டது. எடுத்து நீட்டினேன்.

இம்மாம் பெரிய கேனைத் தூக்கிட்டு வந்து ஒத்த ரூபா கொடுக்கிறாரு…? ஆளப்பாரு….

அந்தம்மாள் சத்தம் போடுவது வந்து கொண்டிருந்த என் காதில் விழுந்தது. எப்படி அழுத்தமாய் உழைக்கிறதோ அதுபோல் படு அழுத்தமாய்ப் பேசவும் செய்யும் போலும்…

தோ…இன்றும், இப்பொழுதும் தண்ணீர் பிடிக்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் அங்கே அல்ல. வழக்கமான சவக்காட்டுப் பக்கம்தான். காத்திருந்துதான் பிடித்தாக வேண்டும். கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ…சொல்ல முடியாது. ஆனாலும் அங்கு ஒரு ரூபாய்தான். அதில்தான் மனதுக்கு நிம்மதி. அரைக் கிலோ மீட்டர் அதிகம்தான். போக, வர ஒரு கி.மீ. தூரம். அந்தப் பெட்ரோலுக்கான காசு என்னாவது? வண்டி என்ன தண்ணீரிலா ஓடுகிறது? காற்றாய்க் கரைவது காசுதானே? அதை நினைத்து அந்தம்மாளுக்கு ஒத்த ரூபாய் கூடக் கொடுக்கக் கூடாதா? மனசாகவில்லையே? நான் என்ன செய்ய? எல்லோரிடமும் வாங்கும் துட்டை என்னிடமும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே? அதென்ன என்னிடம் மட்டும் கூடக் கேட்பது? அது எனக்கு நியாயமாகப் படவில்லை. இன்று என்னிடம் மூணு கேட்டால் நாளை என்றேனும் மற்றவர்களுக்கு உயர்த்தும்போது எனக்கும் ரேட் கூடுமல்லவா? அப்போது அஞ்சக்கொண்டா, பத்தக் கொண்டா என்றால் நான் எங்கு போவது? அப்போது இன்னும் மனசுக்குக் கஷ்டமாக இருக்குமே?

இதென்னடா இது வம்பாப் போச்சு? வேலியோட போற ஓணானை வலிய மடில பிடிச்சுக் கட்டின கதை?

ஏண்ணே…பேசாம நடந்து வர வேண்டிதானே…உங்கள யாரு அந்தச் செடியப் பிடிச்சு இழுக்கச் சொன்னாங்க? என்று கையில் முள் கோடாய் இழுத்துவிட்ட வேதனையில் சுரீர் என்று துள்ளித் துடிக்கும் பாலையாவைப் பார்த்து, காகா ராதாகிருஷ்ணன் ஏதோவொரு பழைய அரதப் பழசுப் படத்தில் கூறுவார். அது ஞாபகம் வந்து சிரிப்பை மூட்டியது எனக்கு.

அம்புட்டு தூரம் சென்று பிடித்தாலும் பிடிப்பேனேயொழிய ஒரு ரூபாய் அதிகம் கொடுப்பதாக இல்லை. என்ன மனசு இது? எனக்கு நானே கேட்டுக் கொள்ளத்தான் செய்கிறேன். ஒரு வகையில் பார்த்தால் முட்டாள்தனமாகக் கூடத் தோன்றத்தான் செய்கிறது. மனிதன் தான் ஏமாற்றப்படுவதாக உணரும்போது ஏதோ ஒரு பிடிவாதம் அவனிடம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை, ஏமாறுவதில்லை என்கிற வைராக்கியம் பிறக்கிறது. ரொம்பச் சாதாரண விஷயம்தான். ஆனாலும்….

ங்க வீட்டுக்காரரென்ன தண்ணி பிடிக்கவே வரமாட்டேங்குறாரு இப்பல்லாம்…வரச் சொல்லுங்க…. – அந்த அம்மாள் கேட்டதாக என் மனையாள் சொல்கிறாள்.

அவுங்களுக்கு எப்டித் தெரிஞ்சது நீதான் என் பொண்டாட்டின்னு….? ஜோடியா எப்பப் பார்த்தாங்களாம்? அப்டியே பார்த்திருந்தாலும், நீ என் பொஞ்சாதின்னு எப்டி முடிவு பண்ணினாங்களாம்?

எப்டியோ தெரிஞ்சுது….இப்ப அதுவா முக்கியம்…? இந்த வாய்தான ஆகாதுங்கிறது? போகட்டும், அங்கயே பிடிங்க…அந்தம்மா கேட்குற காசைக் கொடுங்க…பிசினாறித்தனம் பண்ணாதீங்க…பாவம் அவுங்க…பல சமயம் காசிராஜன் க்ளினிக்குல அவுங்களைப் பார்த்திருக்கேன்….எலும்பும் தோலுமான வீட்டுக்காரரக் கூட்டிட்டு வர்றதப் பார்க்கணுமே….பெரிய்ய்ய்ய கொடுமை அது… இன்னைக்கோ நாளைக்கோன்னு இருப்பார் அவர்…யார் வாயிலயும் விழாதீங்க…. ஆகாது…கேட்டதக் கொடுத்திட்டு, தண்ணியப் பிடிச்சிட்டு வந்து சேருங்க….ஒண்ணும் நஷ்டமாயிடாது…..குடி முழுகிடாது…..புரியுதா….

உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது அவள் சொன்னது. அநேகமாக நாளை அங்கேதான் செல்வேன். அதற்கு மேல் என் வண்டி நிச்சயம் நகராது. அந்தளவுக்குத் தளர்ந்தாயிற்று நான். கடைசியாக என்னவள் சொன்ன அந்தச் செய்தி…மனதை என்னவோ பாடாய்ப் படுத்துகிறது? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு…! அங்கேயே செல்வோம்…பழக்கத்தில், பின்னால் ஏதாவது கடன் உடன் கேட்டாலும் கொடுத்து உதவலாம்தான். பாவமாய்த்தான் இருக்கிறது பார்க்கப் பார்க்க…! மனதைத் தொடர்ந்து சங்கடப்படுத்தத்தான் செய்கிறது. போனால் போகிறது. நம்மாலான உதவி. தேவையென்றால் செய்துதான் வைப்போமே…போகுமிடத்திற்குப் புண்ணியம் தேடி…. மனம் பட்டென்று ஒரு அதீத முடிவுக்குச் சென்றது. திடீரென்று உறுதிப் பட்டது. தேர் நிலைக்கு வந்தது.

எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்ல…? (திண்ணை இணைய இதழ் வெளியீடு – 15.4.2012)

--------------------------------------------------------------------

10 ஏப்ரல் 2012

கிசு…கிசு… சிறுகதை



 

கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்… -அந்த நள்ளிரவில் சவமாகத் தூங்கிக் கொண்டிருந்த நடிகை மேகலா பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது.

கிர்ர்ர்ர்ர்…..

“யாரது?“ கேட்டவாறே ஓடிப்போய் மாடிப்படி லைட்டைப் போட்டவள் இறங்கினாள்.

யாருன்னு சொல்றீங்களா? – மீண்டும் கேட்டுவிட்டுக் கதவை நெருங்கினாள்.

கதவைத் திற மேகலா…நான்தான்….

நீங்களா? நீங்க அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கிறதால்ல சொன்னாங்க…? – குரல் நடுங்கியது அவளுக்கு.

போகலே…அந்த மாதிரி ஒரு புரளியைக் கிளப்பினேன்… - சொல்லியவாறே உள்ளே நுழைந்தான் பிரேம்குமார்.

உன்னைத் தீர்த்துக்கட்டுறதுக்காகத்தான் அப்படி ஒரு செட்அப் பண்ணினேன்… - உள்ளே நுழைந்தான்.

ஆமாண்டி…நாலு காசுக்கு ஓட்டலில் டான்ஸ் ஆடிட்டிருந்த உன்னைக் கொண்டுபோய் பெரிய ஸ்டார் ஆக்கினேன் பாரு…நீ எனக்குக் காண்பிச்ச நன்றி இருக்கே…அதுக்கு ஏதாச்சும் பரிசு தர வேண்டாமா? உன்னோட மார்க்கட் டல்லாயிடக் கூடாதுன்னு என் படத்திலெல்லாம் உன்னை சிபாரிசு பண்ணினேனே…அப்பல்லாம் உன்னைப்பத்திப் புரிஞ்சிக்கலடி…இப்போ என் மார்க்கெட் ஓய்ஞ்சு போற வேளைல எனக்குக் கிடைக்கிற ஒன்றிரண்டு சான்சையும் கெடுக்கிறியே…ஏன்? அன்னைக்கு என் கூட நடிக்கிறதுல ஒரு இன்பம் இருக்கு…த்ரில் இருக்கு…நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குது…அது இதுன்னல்லா பேட்டி கொடுத்த நீ…பிரேம்குமாரைப் போட்டா நடிக்க மாட்டேன்னு சொல்றியாமே? பிடிவாதம் பிடிச்சு எனக்கு வர்ற வாய்ப்புக்களையெல்லாம் கெடுக்க ஆரம்பிச்சிட்டியே…உன்னை சும்மா விடலாமா? அதுக்காகத்தான் இன்னைக்கு ஒரு முடிவோட வந்திருக்கேன்…

பிரேம்… வேண்டாம்…என்னை ஒண்ணும் செஞ்சிடாதே…அப்புறம் போலீஸ்ல மாட்டிக்குவே…

பயமுறுத்துறியா…உனக்கு வழி காண்பிச்ச எனக்கே புத்தி சொல்றியா…? அவுட்டோர் ஷூமட்டிங்குக்கு இன்னைக்குப் பெங்களுரு போயிருக்கிறதா யூனிட்டையே நம்ப வச்சிட்டுத்தான் வந்திருக்கேன்…சந்திராலயா யூனிட்டே எனக்காக சாட்சி சொல்லும்…பெங்களுர்ல ஓட்டல் டிரடிஷன் தெரியமா உனக்கு…இன்னிக்கு தேதிக்கு நான் அங்க இருக்கேன்…ஆனா இங்க உன்னைக் கொலை பண்றேன்…

பொற கலங்கிப் போய் பின் வாங்கினாள் மேகலா.

டைரக்டர் கோபிநாத் மேல் உத்தரத்தைப் பார்த்தவாறே மோவாயைச் சொறிந்தார். கூடவே அப்படி ஒண்ணும் மேகலாவுக்கு எதிரிகள் இருக்கிறதாத் தெரில இன்ஸ்பெக்டர்…என்றார்.

நேத்து முழுக்க உங்க படத்தோட ஷூட்டிங்லதான் மேகலா இருந்திருக்காங்க…அப்போ யார் கூடவாவது ஏதாச்சும் தகராறு இருந்திச்சா? தொடர்ந்து தோண்டினார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்.

நோ நோ இன்ஸ்பெக்டர்….அவுங்க ஆக்டிங்க டைம் தவிர மத்த நேரத்துல யார் கூடவும் எதுவும் பேச மாட்டாங்க….ஏதாச்சும் புத்தகமும் கையுமாத்தான் இருப்பாங்க…

ஐ…ஸீ…சமீப காலமா அவுங்க யார் கூட அதிகமாச் சேர்ந்து நடிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?

வருஷத்துக்கு மூணோ நாலோதான் பண்ணுவாங்க…அதுவும் பெரிய பட்ஜெட் கம்பெனிங்கதான்…பிரபலமான உறீரோக்களோடதான் இருக்கும்…

ஸாரி மிஸ்டர் கோபிநாத்…நா சினிமாவுல அதிகமா கவனம் செலுத்துறதில்லை…அந்தப் பிரபலமான உறீரோக்கள் யார் யாருன்னு சொல்ல முடியுமா?

சிக்கலான கேள்வி…ஸாரி இன்ஸ்பெக்டர்….இதுக்கு பதில் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது…ஃபீல்டுல இப்பத்தான் காலூன்றியிருக்கேன் நா….என்னை வம்புல மாட்டி விட்டிடும் இதுக்கு பதில் சொன்னேன்னா…சினிமாக்காரங்களைப் பத்தி செய்தி போடாத பத்திரிகைகளே கிடையாது…நீங்களே படிச்சுத் தெரிஞ்சிக்க வேண்டிதானே… - கூறியவாறே அங்கிருந்த பத்திரிகைகளை எடுத்து டேபிள் மேல் போட்டார் கோபிநாத்.

சற்று நேரம் அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரஉறீமுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தி கவனத்தை ஈர்த்தது.

பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது. பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின் பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான்.

ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் காட்சியைக் கவனிக்கச் சொல்லிவிட்டுத் திரும்பிய டைரக்டர் உறலோ சார்…என்றவாறே வரவேற்றார் வர்மாவை.

என்ன டைரக்டர் சார்…பந்தோபஸ்து ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு? ஐ திங்க் யு ஆர் சாடிஸ்ஃபைட்…

யெஸ்…யெஸ்…ஐ ஆம் ஃபுல்லி சாடிஸ்ஃபைட்…வெளி மாநிலத்துல வேலை பார்த்தாலும் தமிழர் பண்பாடுங்கிறதை மறக்காம எங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆதரவா இருக்கீங்களே…அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்…

நான் என்ன பெரிசா செய்திட்டேன்…மேலதிகாரி ஆர்டர்…அவ்வளவுதானே…இருந்தாலும் அதையும் இவ்வளவு சின்சியரா செய்யணுமே…

அது சரி டைரக்டர் சார்…நம்ம பிரேம்குமார் எப்ப வந்தாரு…

அவருதான் ட்யூட்டியில ரொம்ப ப்ராம்ப்ட் ஆச்சே…முந்தியே வந்திட்டாரே…

ஐ. ஸீ….

எதுக்குக் கேட்குறீங்க…?

நத்திங்…முன்னே இருந்த மார்க்கெட் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டேன்…இருந்தாலும் அவருடைய ட்யூட்டி கான்ஷியஸைப் பார்த்தீங்களா?

இதற்குள் காட்சி முடிந்து பிரேம் குமார் அங்கே வந்து சேர்ந்தான்.

உறலோ இன்ஸ்பெக்டர்…உறவ் ஆர் யூ…கேட்டவாறே வந்து கை குலுக்கினான்.

வெரி ஃபைன் மிஸ்டர் பிரேம்…உங்க சினிமா வாழ்க்கை எப்படி இருக்கு? ரொம்ப சீக்கிரமா பெங்களுரு வந்திட்டீங்களாமே?

ஆமா இன்ஸ்பெக்டர்…மெட்ராசிலே ஷூட்டிங் இல்லே…வேற வேலையும் இல்லே…சரி இங்கே வந்து ரெஸ்ட் எடுப்போமேன்னுதான் புறப்பட்டேன்…

ஐ..ஸீ…எங்கே தங்கியிருக்கீங்க..வழக்கம்போல் Nஉறாட்டல் டிரடிஷன்தானே…

யெஸ்…பெங்களுருவில் அதைவிட்டு வேறே எங்கேயும் நா போறதில்லே…

ஓகே. மிஸ்டர் பிரேம்…அப்போ நான் புறப்படுறேன்…

அச்சா…விடை கொடுத்தான் பிரேம்குமார்.

றுநாள் காலையே இன்ஸ்பெக்டர் வர்மா மீண்டும் தன்னைத் தேடி தன் அறைக்கே வருவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உறலோ…விஷயம் தெரியுமா? சென்னைல நடிகை மேகலா கொலையாம்…

அப்படியா…? செயற்கையாய் அதிர்ந்தான் பிரேம்.

தெரியாதா? கேட்டவாறே தினசரியை நீட்டினார்.

பிரபல நடிகை மேகலா கொலை…சென்னையில் பயங்கரம்…முதல் நாள் மாலைப் பேப்பரின் அந்தத் தலைப்புச் செய்தியைப் படித்தபோது அவனை அறியாமல் கைகள் ஆட்டம் கண்டன. அடக்கிக் கொண்டான்.

அப்புறம் இன்ஸ்பெக்டர்…எப்படி நடந்திருக்க முடியும் இந்தக் கொலை…? ரொம்பக் கவலையோடு கேட்டான்.

உங்களை மாதிரித்தான் நானும்…யாருக்குத் தெரியும்..ஆமாம் மிஸ்டர் பிரேம்…உங்களோட சேர்ந்து சில படங்களில் நடிச்சவங்களாச்சே…அவங்க கேரக்டர் எப்படி?

என்ன இன்ஸ்பெக்டர் நான் அறிமுகப்படுத்திய பொண்ணு அவங்க…இப்டிக் கேட்கிறீங்களே?

சார்…சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்…

ஷூட்டிங் டயத்துலயே அவுங்க யார் கூடவும் பேச மாட்டாங்க…அவங்ககிட்ட யாரும் தப்பாப் பேச முடியாது…அவ்வளவு நல்ல பொண்ணு…சில பேர் ராங்கிக்காரின்னு சொல்வாங்க…ஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லே…

ஐ.ஸீ…

எனி ப்ராப்ளம் இன்ஸ்பெக்டர்?

நோ…நோ..ஃபார் இன்ஃபர்மேஷன் கேட்டேன்…ஆனா ஒண்ணு மிஸ்டர் பிரேம்…கொலையாளி ரொம்ப சாமர்த்தியசாலி…

ஏன் அப்டிச் சொல்றீங்க…? பிரேம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.

கைக்கு கிளவுஸ் மாட்டிக்கிட்டு, ஃபிங்கர் பிரின்ட்ஸ் கூடக் கிடைக்காம… ஆனா பூட் பிரின்ட்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன்..

இசிட்…அது சரி…இதெல்லாம் உங்களுக்கு எப்டித் தெரியும்?

இன்னிக்கு மாரினிங் நியூஸை வச்சித்தான் சொல்றேன்…

பேப்பர் படிக்கக் கூட டைம் இல்ல இன்ஸ்பெக்டர்…ரொம்ப டைட்…

ஆல்ரைட் மிஸ்டர் பிரேம்…நா கிளம்பறேன்…

தூக்கம் வராமல் புரண்ட பிரேம்குமார் துள்ளி எழுந்து அமர்ந்தான்.

ஃபூட் பிரின்ட்ஸ்…ஃபூட் பிரின்ட்ஸ்…கொலை நடந்த இடத்தில் ஃபூட் பிரின்ட்ஸ்…வர்மாவின் வார்த்தைகள் அவனைப் பயமுறுத்த ஆரம்பித்தன. மனதிற்குள் யாரோடு பிளேடால் அறுப்பதுபோல் இருந்தது. பயம் பூதாகாரமாய் உருவெடுத்தது.

எப்படி சாத்தியம்? இருக்கலாம். நம் போதாத வேளைக்கு மாட்டிக் கொண்டாலும் போயிற்று. விபரீதம். எப்படியாவது அழித்துவிட வேண்டும். அதற்கு முன்னோடியாச சென்னை அறையில் வைத்திருக்கும் ஷூவை அகற்றியாக வேண்டும்.

முடிவு செய்தான். பயணத்தை ரத்து செய்த ஒரு வி.ஐ.பி.யின் இடத்தைப் பிடித்துப் பறந்து சென்னை வந்து சேர்ந்தான். பரபரப்பான கூட்டத்தின் நடுவே புகுந்து கடந்து அறையை அடைந்தபோது -

வாங்க மிஸ்டர் பிரேம்குமார்…என்ன இவ்வளவு அவசரமா புறப்பட்டு வந்திட்டீங்க? ஷூவை எடுத்து மறைக்கிறதுக்கா? மல்லேஸ்வரம் இன்ஸ்பெக்டர் வர்மா சொன்னதை நம்பிப் புறப்பட்டு வந்திட்டீங்களா? நாங்க சந்தேகப்பட்டது சரியாப் போச்சு…

என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்…அவரைப் பார்த்துக் கத்தினான் பிரேம்.

ஒய் ஆர் யூ ஷவுட்டிங்? எவ்வளவோ கேர்ஃபுல்லாத்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கீங்க…இத்தனைக்ளவரா நடந்துக்கிட்ட நீங்க கொஞ்சம் இந்தக் காவல்துறையோட திறமையயும் நினைச்சுப் பார்த்திருக்க வேண்டாமா? அதென்ன எங்க மேலே அத்தனை அவநம்பிக்கை உங்களுக்கு?

சதுர வடிவமாக வைரத்துண்டு போல் பளபளத்தது ஒரு பட்டன்.

இது எப்படி எங்க கைக்குக் கிடைச்சதுன்னு நினைக்கிறீங்களா? போஸ்ட் மார்ட்டத்துலதான்…நீங்க கொலை செய்தபோது உங்களோட ஏற்பட்ட போராட்டத்துல மேகலா இதை விழுங்கியிருக்காங்க…சினிமா டெக்னிக் மாதிரி இல்ல? அப்படித்தான். ஆனா இது அவுங்க வயித்துக்குள்ள போனதுதான் உங்க துரதிருஷ்டம்…இன்னும் சந்தேகமாக? ஒரு பட்டனை வச்சு எப்படிடா இவன் நேரா நம்மளைத் தேடி வந்தான்னுதானே? ஒரு சந்தேகந்தான்…என்னடா ஆயிரத்தெட்டு நடிகைகள் இருக்கிற போது நேரா நம்ம ரூமுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கானேன்னுதானே யோசிக்கிறீங்க…காரணம் இல்லாமலா? இந்த பட்டனைக் கொண்டு வந்து திரும்பவும் உங்க சட்டைல வச்சுத் தைச்சாகணும்னு நான் எவ்வளவு அக்கறையா வந்திருக்கேன் பார்த்தீங்களா? ரியலி இடீஸ் பியூட்டி மிஸ்டர் பிரேம்…இத்தனை அழகான பட்டன்களோட இந்தச் சட்டையை எங்கே வாங்கினீங்க? என்ன விழிக்கிறீங்க? மேகா வாங்கிக் கொடுத்தாங்களா? அவங்களுக்கும் உங்களுக்கும்தான் சண்டையாச்சே? புரியல…? இதோ பாருங்க… - கூறியவாறே அந்தப் புத்தகத்தை நீட்டினார் இன்ஸ்பெக்டர்.

அமுதம் என்ற வாரப்பத்திரிகையில் இப்படி வெளியாகியிருந்தது அந்தச் செய்தி –

”பிரேம்மயான நடிகருக்கு இப்பொழுது மார்க்கெட் அவ்வளவு இல்லையென்று அவரோடு இனி சேர்ந்து நடிப்பதில்லையென முடிவு செய்து விட்டாராம் ஸ்கையையும் சட்டத்தையும் தன் பெயராகக் கொண்ட அந்தப் பிரபல நடிகை. அவரோடு சேர்ந்து வரும் வாய்ப்புக்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறாராம். ஒரு காலத்தில் அவரைப் பற்றி பிரேமையோடு உளறித் தள்ளிய இந்த நடிகை இப்பொழுது அவரை எதிரில் கண்டால் கூட கண்டு கொள்வ தில்லையாம். இதனால் பிரேமையான நடிகர் குமுறுகிறாராம். அது சரி…இவர்கள் சண்டையைக் கவனிக்கவா நமக்கு நேரம்…”

என்ன மிஸ்டர் பிரேம்…கிசு கிசு செய்தி கூட எவ்வளவு… உபயோகப்படுது பார்த்தீங்களா? உங்க சந்தேகமெல்லாம் தீர்ந்திருக்குமுன்னு நினைக்கிறேன்…லேட்டாச்சு போகலாமா? கேட்டவாறே எழுந்தார் இன்ஸ்பெகட்ர் ரஉறீம்

பிரேதமாய் பின் தொடர்ந்தான் பிரேம்குமார்.

---------------------- (உயிரோசை – இணைய வார  இதழ்- 9.4.2012)

04 ஏப்ரல் 2012

“சூ ழ ல்” சிறுகதை

 

சுறுசுறுப்பாக வேலை ஓடியது ராகவாச்சாரிக்கு.. சுற்றிலும் படர்ந்த அமைதி. வாசலில் அடர்ந்து பரந்து விரிந்திரிக்கும் மரத்தின் குளிர்ச்சியான நிழல். தலைக்கு மேலே சரசரவென ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறி. அதன் சத்தம் மட்டும் துல்லியமாய் காதுகளில்.

கதவைச் சாத்திடு…யாருக்கும் நான் இருக்கிறதைச் சொல்ல வேண்டாம்…என்று விட்டு, தனது டூ வீலரையும் உள்ளே தூக்கி நிறுத்தியிருந்தார்.

விடுமுறை நாளில் வேலைக்கு வருவது நிலுவை வேலைகளை முடிக்க. அன்றும் யாரேனும் தேடி வந்து விட்டால் வேலை கெட்டுப் போகும். அதோடு மட்டுமல்லாமல் அப்படி ஆட்கள் வருவதும் தங்கள் காரியங்களுக்காக வேண்டுவதும் வேறு வகையான அர்த்தங்களைக் கொடுக்கும். வந்த நோக்கம் முக்கியப் பணிகளை முடிப்பது. வாரத்தின் முதல் வேலை நாளில் அலுவலர் கேட்கும்போது தயாராய் இருப்பது.

அந்த மிகப் பெரிய காம்பவுன்டின் வலது கோடியில் இருக்கும் நுழைவாயிலின் ஆரம்பத்தில் இருக்கும் சின்னப் பிள்ளையார் கோயிலில் படுத்துக் கிடப்பான் வாட்ச்மேன் ரங்கன்.

காலைல பல்லும் விளக்காம, கக்கூசுக்கும் போகாம இப்டிப் படுத்து உருண்டு கோயிலை அசிங்கப்படுத்தற நீ….பிள்ளையார் ஒண்ணும் கேட்கலையா? என்று கொண்டேதான் உள்ளே நுழைந்தார்.

அவுருக்குத் தெரியும் சார் நா ராத்திரி பூராவும் தூக்கம் முழிச்சுக் காவக்காக்குறேன்னு…- ரங்கனும் அசராமல் பதில் சொன்னான். அவன்தான் இவரிடம் சகஜமாகப் பேசுபவன். அதென்னவோ அவனோடு ஒரு ஒட்டுதல் இவருக்கு. அதற்குக் காரணம் தெரியவில்லைதான். ஏதோவொரு வகையில் அவனின் பேச்சு பல சமயங்களில் இவருக்குப் பிடித்திருந்தது. அவ்வளவுதான்.

அடேங்கப்பா….பிள்ளையார் முழிச்சிட்டு இருந்தாத்தானே நீ காவக் காக்குறதை அவர் பார்க்க முடியும்…அவர் தூங்கிட்டார்னா?

அவுருக்கு ஏது சார் தூக்கம்? எந்நேரமும் கண்ணுமூடாம உலகத்தைக் காக்குறதுதான கடவுளுக்கு வேலை…

அப்போ நீ எதுக்கு? அவர்தான் காவல் காக்குறாருல்ல…?

அப்டியில்ல சார்…அவர் சஞ்சாரம் செய்யப் போயிட்டாருன்னா?

சிரித்தவாறே கேட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்தவர்தான். அடேயப்பா…லீவு நாளில்தான் எப்படி வேலை ஓடுகிறது? இதில் பாதி கூட இருப்பதில்லையே வேலை நாட்களில்….சதா ஆட்கள் வருவதும் போவதுமாய்….இன்று எப்படியும் டேபிளைக் காலி செய்து விட வேண்டும். அதென்னவோ எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள். காலையிலிருந்து நடவடிக்கை எடுத்த கோப்புகளை அடுக்கி வைத்துக் கொண்டு மொத்தமாக மாலை நான்கு மணியைப் போல் தன் டேபிளில் கொண்டு சுமத்தினால், தான் வீட்டுக்குப் போக வேண்டாமா? தினசரி ஆறு மணிக்கு மேல் உட்கார்ந்து ஒவ்வொன்றாகப் பார்த்து, அடித்து, திருத்தி, சரி செய்து, அல்லது வேறு ஒன்று எழுதி ராத்திரி ஒன்பதே வழக்கமாகிப் போனதே! இதற்காகவா உள்ளுர் வந்தது? தினசரி தாமதம் என்றால்?

ந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்து சேர்ந்தது முதல் வேலை அதிகம்தான். உள்ளுர் என்றால் அப்படித்தான். கிளம்பினாலும் அரை மணிக்குள் வீடு போய்ச் சேர்ந்து விடலாமே…! ரொம்பவும் சந்தோஷமாய் உணர்ந்தார் இந்த அனுபவத்தை. வீட்டுச் சாப்பாட்டின் ருசியே தனிதான். வெறும் தயிர்சாதம் மாவடு என்றாலும் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது என்கிற உறுதி உண்டு. காலம் போன கடைசியிலாவது வந்து சேர்ந்தோமே…! எந்தப் பிரக்ஞையும் இல்லாமலே இத்தனை காலம் ஓட்டியாயிற்று.. சொச்ச காலத்தையாவது இங்கே ஓட்டுவோம் என்று நிம்மதியாய் அவரது கடமையைச் செய்து கொண்டிருந்தார்.

அப்பாய்ன்ட்மென்ட் ஆன நாள் முதல் இன்றுவரை கடந்த முப்பது ஆண்டுகளாக அவர் வெளியூர்தான். சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னங்க சொல்றீங்க? முப்பது வருஷமாவா உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கலை? என்று புரியாமல் அல்லது பொய்யோ என்பதுபோல் பார்ப்பார்கள். விதி வலியது என்று அவர்களுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது?

சலிக்காமல், சளைக்காமல் விடுமுறை நாளில் ஊர் வருவது, இருப்பது, பின் புறப்பட்டுச் சென்று விடுவது என்று இருந்தே காலத்தைக் கழித்துவிட்டார். அவருக்குப் பின் வந்தவர்களெல்லாம் மாறுதல் விண்ணப்பம் கொடுத்து நேரில் சென்று என்னென்ன செய்ய வேண்டுமோ செய்து உள்ளுர் வாங்கிக்கொண்டு போய்ச் சேர்ந்து விட்டார்கள். இவரது ஊரைச் சேர்ந்தவர்களே, இவரோடு கூட அப்பாய்ன்ட் ஆன பலரும் உள்ளுர் வந்து பல காலமாயிற்று. என்னவோ இவருக்கு அது வாய்க்கவில்லை. அப்ளிகேஷன் அனுப்புவதோடு சரி. எவனையும் நேரில் சென்று பார்க்கும் ஜோலியெல்லாம் இல்லை. இங்கே நான் க்ளார்க் மாதிரி அங்கே அவன் க்ளார்க். அவனையென்ன நான் போய்ப் பார்ப்பது? கெஞ்சுவது, தலையைச் சொரிவது? இம்மாதிரிக் கேள்விப் பட்டாலே அவருக்கு எரிச்சல்தான் வரும். அதெல்லாம் என்னால முடியாதுங்க….இதுதான் அவர் பதில்.

மனைவி அபிதா. பள்ளி ஆசிரியை. அவளை அலைக்கழிக்க வேண்டாம் என்று விட்டு விட்டார். இல்லையென்றால் இவர் வேலை பார்க்கும் ஊருக்கு அவளை மாறுதல் வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கலாமே…! அவளுக்கும் அதில் முனைப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்னவோ ஆர்வமில்லை. எல்லாம் செக்கு மாடு கதைதான்.

லீவு நாளுக்கு வாங்க…அது போதும்…நா இங்கியே இருந்துக்கிறேன்….என்று சொல்லி விட்டாள். பக்கத்து பக்கத்து ஊர்களுக்கு மாறுதல் கிடைத்தாலும் அவள் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. போய்ப் போய் வந்து கொண்டிருந்தாள். அப்படிப் போய் வந்ததனாலேயே அது பெரிதும் இரக்கத்திற்குள்ளாகி, கடந்த ஏழெட்டாண்டுகளாய் அவள் உள்ளுரிலேயே இருக்கிறாள்.

எந்தப் புண்ணியவாளன் கண்களில் இவரின் அப்ளிகேஷன் பட்டதோ!

என்னய்யா இது…அநியாயமா இருக்கு…..வருஷா வருஷம் அவர் அப்ளிகேஷனும் வந்திருக்கு…ரிஜிஸ்டர்ல பதிஞ்சு பதிஞ்சு சுழிச்சிருக்கீங்களே…ஒரு மனுஷன் நேர்ல வந்து உங்களப் பர்சனலாப் பார்த்தாத்தான் எதுவும் செய்வீங்களா…இல்லன்னா எனக்கென்னன்னு விட்ருவீங்களா? செக் ஷன்ல எத்தனை ஆள் மாறினா என்னய்யா…ரிஜிஸ்டர் என்ட்ரி பேசும்ல…? அப்புறம் எதுக்கு இதெல்லாம்? சும்மா கண் துடைப்புக்கா…? இதுக்குப் பேர்தான் சீனியாரிட்டியா…? க்ளார்க்கா சேர்ந்து, செக் ஷன் அசிஸ்டன்ட் ஆகி, இப்போ கண்காணிப்பாளராவும் ஆயிட்டார். அவரும் வருடாந்திரக் கடன்ங்கிற மாதிரி அப்ளிகேஷன் அனுப்ப, நீங்களும் காலியிடமில்லை காலியிடமில்லைன்னு எழுதி எழுதி முடிச்சிருக்கீங்களே? இது அநியாயமில்லை? இத்தனை வருஷத்துல எப்பவோ சீனியாரிட்டில அவர் மொத ஆளா வந்திருக்கணுமேய்யா….என்னா ஃப்ராடு பண்ணினீங்க…? என்று வாங்கு வாங்கென்று வாங்கியதாக இவர் காதுகளுக்கு வந்த அந்தப் போதில் மனசுக்குள் குளிர் பரவியது ராகவாச்சாரிக்கு. மானசீகமாய்க் கும்பிட்டுக் கொண்டார். அந்தப் பலன்தான் இன்று இங்கு உட்கார்ந்திருக்கிறார். பைசாக் கொடுக்காமல், யாரையும் நேரில் சென்று பார்க்காமல் அப்ளிகேஷன் மட்டும் பேசியது அவரது இந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான் என்று சொல்லலாம்.

கையில் அந்தக் கோப்பை எடுத்தவுடன் மனத்துக்குள் ஒரு தடங்கல் வந்தது இவரிடம். அவரையறியாமல் சுற்றிலும் எவரும் இருக்கிறார்களா என்று பார்வை ஓடியது. இந்தப் பட்டப் பகலின் தனிமை கூடவா இப்படிப் பயமுறுத்தும்?

சார்…பார்த்து முடிச்சி விடுங்க….ஏதாச்சும் செய்திருவோம்….

என்ன சொல்றீங்க….?

என்ன சார், புரியாத மாதிரிக் கேட்குறீங்க…ரிலீஸ் பண்ணி எழுதி வைங்க சார்…ஒரு பர்சன்ட் வாங்கிக்குங்க….சொல்லணுமா இதுக்கு நா….

ராகவாச்சாரிக்கு உடம்புக்குள் சில்லென்று என்னவோ பரவியது. ஒரு பர்ஸன்ட்…ஒரு பர்ஸன்ட்…..ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ரூபாய்…..

படுபாவி…சர்வ சாதாரணமாய்த் தருகிறேன் என்று சொல்கிறானே…? வேறு யாரேனும் சொல்லி அனுப்பியிருப்பார்களோ? அல்லது நான் என்ன செய்கிறேன் என்று சோதனை செய்கிறார்களா? ரொம்பவும் கவனமாய் இருக்க வேண்டும். இந்த ஆபீசே ஒரு மர்மமாய் இருக்கிறது. யார் எப்படி என்று இன்னும் நன்றாகப் பிடிபடவில்லை. அதற்குள் தடுமாறக் கூடாது…முடிவு செய்து கொண்டார்.

செக் ஷன் க்ளார்க் லீவுங்க…அவரு இல்லாம நா எப்டிச் செய்றது?

என்னசார்…எனக்கென்ன தெரியாதா? எத்தனை வருஷமா இங்க கான்ட்ராக்ட் பார்க்கிறேன் நான்….அவுரு இல்லேன்னா என்ன? நீங்க எழுதி வச்சா ஓ.கே. ஆயிட்டுப் போகுது….

தன்னை அவசரப்படுத்தி க்ளார்க்குக்குக் கொடுக்கும் அரை பர்ஸ்ன்ட் பணம் மிச்சம் என்று வாங்கிக் கொண்டு மீளப் பார்க்கிறான் ஆள். லட்ச லட்சமாய் காசு பார்ப்பவனுக்கு இந்த அரை பர்சன்ட் ஒரு பர்சன்ட்டில்தான் வந்துவிடப் போகிறதா? மனசோடு அதையும் சேர்த்துக் கொடுத்துவிட்டுப் போவோம் என்ற நல்ல எண்ணமில்லை. நாளை அந்தோணி வந்தால் நான் என்ன பதில் சொல்வது? சார், என் பங்கு….என்று இழுப்பானே….தரலை என்றால் சந்தேகப்படுவானே? தானே சேர்த்து வாக்கட்டை போட்டு விட்டதாய் நினைப்பானே…?

நீங்க கிளம்புங்க…பார்த்து செய்வோம்….என்றார் பொதுவாய்.

வந்தவனின் முகம் மாறியது.

உங்ககிட்ட சொன்னா ஈஸியா முடிஞ்சு போகும்னு ஜே.இ., சொன்னாரு…நீங்க என்னடான்னா இப்டிச் சொல்றீங்க….

யாரு ஜே.இ.,…?

ஜெகந்நாதன் சார்…..

அவரே சொல்லிட்டாரா…? அவர்தாங்க இந்தப் பீரிட்ல இருந்திருக்காரு….அவர ரெக்கமன்ட் பண்ணச் சொல்லுங்க….முடிஞ்சு போகும்…..

நா இல்லன்னு சொல்றாரு அவுரு…..?

என்னங்க, நான் இல்லைன்னு சொன்னாலும் நியாயம்…இப்பத்தான் வந்திருக்கேன்….பத்துப் பதினைஞ்சு வருஷமா குத்துக்கல்லு மாதிரி இந்தக் காம்பவுன்ட்டுக்குள்ளயே குதிரை ஓட்டுறாரு….அவுரு ரெக்கமன்ட் பண்ணக் கூடாதா? யாராச்சும் ஒரு செக் ஷன் ஆபீசர் ரெக்கமன்டேஷன் இல்லாம கதையாகாது….அதுதான் ப்ரொசீஜர்…..முதல்ல ஜெகந்நாதனச் சரி பண்ணுங்க…..

சொல்லி அனுப்பியதுதான். இன்றோடு ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. என்ன காரணத்துக்காக அந்த ஆள் வரவில்லை என்று தெரியவில்லை. அந்த ஜே.இ., ஜெகந்நாதனும் ஒரு வார்த்தை பேசவில்லை இவரிடம்.

என்னவோ ரகசியங்கள் இருப்பது போல் உள்ளது இந்த அலுவலகத்தில். எழுத்தர்கள் ரொம்பவும் பவ்யமாய் நடந்து கொள்வதுபோல் தெரிகிறார்கள். இருக்கும் ஏ.இ., ஜே.இ., க்களும் பணிவாய்த்தான் இருக்கிறார்கள். அலுவலக சூப்பிரன்டென்டென்ட் என்ற மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அந்த மரியாதையில் என்னவோ மறைந்திருக்கிறது. ஏதோவொரு கள்ளத்தனம்.

வெளிப்படையாய்ப் பேசாத்தனம். பேச முடியாத் தன்மை. ஒவ்வொருவர் மனதிலும் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அட, இந்தக் க்ளார்க்குப் பசங்களும் கூடவா இப்படி இருப்பார்கள்? பதினோரு மணிக்கு டீ சாப்பிடக் கிளம்பும் போது அவர்களோடு கை கோர்த்துக் கொண்டல்லவா அலைகிறார்கள்? ஒரு நாள் கூட என்னைச் சேர்த்துக் கொண்டதில்லையே?

நானும் வரலாமா? என்றார் ஒரு நாள். போகவும் செய்தார். ஆனால் ஒட்டவில்லை. அவர்களின் பேச்சு ஜாடையாய் இருந்தது. கூட நடக்கும் இவரைப் பொருட்படுத்தாமல் அவர்களாக என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். புரிந்தும் புரியாததுமாய் இவரும் சிரித்துக் கொண்டார். அந்தச் சிரிப்பு நீடிக்கவில்லை. அன்று எல்லோருக்கும் சேர்த்து இவரைக் காசு கொடுக்கச் செய்து விட்டார்கள். பத்து டிக்கெட்டுக்குக் குறையாது. ஒரு நாளுக்கு நூறு வரை செலவு செய்ய யாரிடம் இருக்கு ஐவேஜு…! கொடுக்கல் வாங்கல் இருக்கும் அவர்களுக்குச் சரி….தான் அப்படி இருக்க முடியுமா? விலகிக் கொண்டார். மறுநாளிலிருந்து போவதை நிறுத்திக் கொண்டார். பியூனைக் கொண்டு ப்ளாஸ்க்கில் வாங்கி வரச்சொன்னார்.

பெண் பணியாளர்களோடு சேர்த்து நாலஞ்சு டீ தேவைப்பட்டது. பியூன் ரெங்கசாமி ஒரு டீக் காசை ஆட்டை போடுவான் என்றார்கள்.

என்னய்யா இது கொஞ்சமா ஊத்திட்டு வர்றே…முக்கா டம்ளராவது கொடுக்க வாணாம்? என்று சத்தம் போட்டார். அதிலிருந்து அவருக்கு மட்டும் அப்படி வந்தது. மற்றவர்கள் கொடுத்ததைக் குடித்தார்கள். அவ்வளவுதான் சார்…அவன்ட்டப் போயி என்னத்தச் சண்டை போடச் சொல்றீங்க…? என்றார்கள். வெளியே பெஞ்சில் அமர்ந்து கொண்டு முக்க முழுங்க முழு டம்ளரில் டீ குடித்தான் அவன்.

ஆபீசே என்ன இத்தனை பீத்தலாய் இருக்கிறது? என்று தோன்றியது இவருக்கு. படு சல்லிப் பயல்களாய் இருப்பார்கள் போலிருக்கிறதே…

காலைல ஆபீசுக்கு வந்திட்டு சாயங்காலம் வீடு திரும்பைல பையில அம்பது நூறு இல்லாமப் போக மாட்டான் சார் அந்த ரெங்கசாமி….வாட்ச்மேன் சரவணனின் கூற்று இது. செகன்ட் ஷிப்ட் காவலன் அவன்.

முன்னே விரிந்திருந்த அந்தக் கோப்பைப் புரட்டலானார் ராகவாச்சாரி. முழுக்க முழுக்கப் பிணை வைப்புப் பத்திரங்களை விடுவிப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் அடங்கிய கோப்பாக இருந்தது அது. வந்திருக்கும் விண்ணப்பங்களில் எது எது டிஸ்போஸ் செய்யப்பட்டது எது எது இன்னும் பென்டிங் என்பதே தெரியவில்லை. ஒரே கலவையாய்க் கிடந்தது. இடையிடையில் சம்பந்தமில்லாத வேறு பொருள் கொண்ட கடிதங்களும் இடைச் செருகல்களாகக் இணைந்திருந்தன. அவையெல்லாம் எதற்கு இதில் வந்தன? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். இதென்ன மிஸ்ஸலேனியஸ் ஃபைலா? என்று கோபம் வந்தது. அன்று பூராவும் பார்த்தாலும் அந்த ஒரு கோப்புக்கான அலசல் தீராது என்று தோன்றியது. அந்தக் கோப்பு அப்படிக் கலவையாய் இருப்பதுதான் பாதுகாப்பு என்ற கவனம் இருக்குமோ? யாரும் எதுவும் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு கோப்பு கலவையாய் இருப்பதுதான் சேஃப்டி…! ஆஉறா…என்ன ஒரு கண்டுபிடிப்பு? தப்புச் செய்பவர்களுக்குத்தானே இதெல்லாம் தோன்றும்? தன் சர்வீசில் எத்தனை பார்த்திருக்கிறார் அவர்!

ஆனால் ஒன்று மட்டும் வித்தியாசமாய் இருந்தது. அதுதான் அது. ஒரே முகவரியில் வெவ்வேறு பெயர்களிலான விண்ணப்பங்கள். கீழே கையெழுத்து மட்டும் ஒரே ஆள்.

இதெல்லாம் அவரோட ஆட்கள் சார்….பத்திரம் பூராம் அவர் வாங்கிக் கொடுக்கிறதுதான்…தன் பேர்லயே எல்லாத்தையும் தர முடியாதுல்ல…அவரோட அசிஸ்டன்ட்கள் வேலை செய்வாங்க….கொடுத்திரலாம்…ஒண்ணும் பயமில்லே…..

நீங்க எதுக்குத்தான்யா பயந்தீங்க…?

வருஷா வருஷம் இப்டித்தான் சார்….சென்னைக்குப் போயி அங்கேயே ஆர்டரை வாங்கிட்டு வந்திடுவாங்க…நாம ஒண்ணும் செய்றதுக்கில்லே….சரி சரின்னு வாங்கி வச்சிக்கிட வேண்டிதான்…கேட்டாத் திருப்பிக் கொடுக்க வேண்டிதான்…

எல்லாம் சரி…என்னவோ இருந்து விட்டுப் போகட்டும்…குறைந்த பட்சம் அந்தந்த ஆட்கள் வந்தாவது ஒரு கையெழுத்துப் போடலாமில்லையா….

அதெல்லாம் வரமாட்டாங்க சார்…எல்லாம் வெவ்வேறு ஊர்ல இருப்பாங்க…ரெண்டு பேர் துபாய்ல இருப்பாங்க…இன்னும் ரெண்டு பேர் சிங்கப் பூர் போயிருப்பாங்க…இல்லன்னா ஏதாச்சும் டூர்ல இருக்காங்கன்னுவாரு…என்ன பண்ணச் சொல்றீங்க…?

அதுக்காக…?

அதுக்காகன்னா அப்டித்தான்….எல்லாக் கையெழுத்தையும் இவரே போட்ருவாரு…..

பதறிப் போனார் வரதாச்சாரி. பதிவேட்டைப் பக்கம் பக்கமாய்ப் புரட்டினார். எல்லாம் அந்தந்தப் பெயரை அப்படி அப்படியே எழுதினாற்போல இருந்தது. வலது கையிலும், இடது கையிலுமாக மாறி மாறிப் போட்டிருப்பானோ அந்த ஆள். அப்படித்தான் தோன்றியது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாமே…அந்த ஆள்தான் வர வேண்டும் என்று என்ன இருக்கிறது? என்ன ஒரு கூட்டு சதி….கூட்டு சதியா, கூட்டுக் கொள்ளையா?

இது நாள்வரை வெளியூரில் நிர்வாகப் பிரிவில் இருந்து கழித்து விட்டு வந்த இவருக்கு இந்தக் கொடுமை பெருங் கொடுமையாய்த் தோன்றியது. ஒரு கணம் ஏனடா உள்ளுர் வந்தோம் என்று உடம்பு ஆடிப் போனது. ஒன்றும் அதற்கு மேல் ஓடவில்லை. கிடக்கட்டும் என்று அப்படியே தூக்கித் தள்ளி வைத்தவர்தான்.

சார்…நாளைக்குப் பார்ட்டி வந்துரும்….

வரட்டுமேன்யா…வந்தா என்ன…தலையையா சீவிடுவாங்க…எல்லாம் எனக்குத் தெரியும்…நீ உன் வேலையைப் பாரு - கத்தினார். சத்தம் பெரிதாய் இருப்பதைக் கண்டு பதறிப் போய் ஒதுங்கி விட்டான் அந்தோணி.

தற்குப் பின் அவரும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்றிருந்தார். இதோ, இன்று, இப்பொழுது, அவர் முன்னால் அந்தக் கோப்பு.?

அட, ராமச்சந்திரா…..இந்த விடுமுறை நாளிலும் இதுதான் கண்ணில்பட்டு உபத்திரவம் செய்ய வேண்டுமா? எரிச்சல் வந்தது. அன்று போல் இன்றும் எந்தச் சலனமும் இல்லாமல் அதைத் தள்ளி வைத்தார். வேறு ஒரு கோப்பினை எடுத்தார். உறாய்யாச் சாய்ந்து கொண்டு மைன்ட் ஃப்ரீயாகப் பார்க்கத் தொடங்கினார். லீவு நாளில் வந்து வேலை பார்த்தால் டென்ஷன் இல்லாமல் பார்க்க வேண்டாமோ? அன்றைக்குமா பிக்கலும், பிடுங்கலும்….?

வேலையையெல்லாம் முடித்து விட்டுக் கிளம்பிய பொழுது மணி ஏழு ஆகி விட்டது.

இன்றைக்குமா இந்தப் பாடு? என்று கண்டிப்பாகச் சலித்துக் கொள்வாள் அபிதா. பல சமயங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பது ரொம்பவும் வசதியாகப் போய்விடுகிறது. இங்கிருக்கும் நிலைமை அவளுக்குப் புரிவதில்லை. சொன்னாலும் அலட்சியம். ஊர் உலகத்துல வேறே ஆபீஸே இயங்கலியா? உங்க ஆபீஸ் மட்டும்தான் இப்டியா? அதிசயமாத்தான் இருக்கு…என்று அர்த்தம் பொருத்தம் இல்லாமல் எதையேனும் பேசுவாள். அவள் சலிப்பு, சொல்லித் தீருவது. இல்லையென்றால் அது ஆதங்கமாக மாறிவிடும் அபாயம் உண்டு. எனவே புலம்புவதைப் புலம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார். கொஞ்ச நேரத்தில் எல்லாமும் சமனுக்கு வரும். பிறகு வழக்கமான இயக்கம்.

எந்தக் குடும்பத்திலுமே பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே போவதனால்தானே சண்டை வளர்கிறது. அன்றாட வேலையைப் போலவே இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் தானே எழும்பி தானே அடங்கிக் காணாமல் போய் விடுமே…! இது குடும்ப சைக்காலஜி. எத்தனை பேருக்குத் தெரிகிறது இந்தத் தாத்பரியம். எல்லாம் நான் பெரிசா, நீ பெரிசா என்கிற கதைதான். பாதிக் குடும்பங்கள் நிம்மதியற்று அலைவது இந்தக் காரணத்தினால்தான்.

உலகத்திலே விட்டுக் கொடுத்தலைப் போல நிம்மதியான பாடு வேறு ஒன்றுமில்லை. சில நஷ்டங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நஷ்டம் என்று மனது கணக்குப் பண்ணினால்தானே அந்தத் தாக்கம். எல்லாமும் பூஜ்யம் என்கிற உணர்வு வந்து விட்டால் மனதுக்கு எந்த ஏற்ற இறக்கமும் தோன்றாது.

நமது பாட்டனார், முப்பாட்டனார் எப்படி வாழ்ந்தார்கள் என்று நமக்குத் தெரியுமா? அவர்கள் தம்பதி சமேதராய் சந்தோஷ போஷகர்களாய்த்தான் வாழ்ந்து மறைந்தார்கள் என்று அறிய ஆதாரங்கள் உண்டா? நம் தாயாரிடம் கேட்டாலே தன் தந்தையைப் பற்றி, அதாவது நம் தாத்தாவைப் பற்றிச் சொல்வார்கள். தாத்தாவுக்கு அப்பாவைப் பற்றிக் கேட்டால் சொல்லத் தெரியுமா? அப்பப்போ ஏதோ பார்த்திருக்கேன் என்பார்கள். நமக்கு முந்திய மூன்று தலைமுறையைப் பற்றியே நம்மால் சொல்ல முடியவில்லை. எதை நிர்ணயித்து என்ன ஆகப் போகிறது?

மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அதாவது அந்த ஒரு வார்த்தையைத் தவிர எல்லாமும் இந்த உலகத்தில் மாறுதலுக்குரியது. காலத்தால் அழிந்து போகக் கூடியது. மறந்து மண்ணடிச்சுப் போவதானது. இதில் வாழும் காலத்தை எத்தனை பேர் நரகமாக்கிக் கொண்டு திரிகிறார்கள்?

சலனமின்றி ஓடும் நதியை நடுவே இறங்கி வெட்டியாய் கலக்கிக், கெடுத்துக் கொண்டுதான் நான் குளிப்பேன் என்றால் யார் தடுக்க முடியும்? எல்லாமும் நம் கையில்தான் இருக்கிறது. இருப்பது போதும், இது இப்படியே நிம்மதியாய் ஓடினால் சரி என்று விட்டு விட்டால் அவனுக்கு நிம்மதி. அல்லாமல் ஸ்வாரஸ்யமே இல்லையே என்று தேவையில்லாமல் பொருத்தமில்லாமல் ஒன்றுக்குள் நுழைந்தால் அது விபரீதம்தான்.

மனிதன் தன் இயல்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். தனக்கு எது பொருந்தும் என்று ஒருவன் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் இயல்பு நிலையிலிருந்து மாறக் கூடாது. அதற்குப் பெயர்தான் ஒரிஜினாலிட்டி. அதுதான் அழகு. எப்படித்தான் ஒருவன் செயற்கையாக நடந்து கொண்டாலும், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவனின் ஒரிஜினாலிட்டி அவனைக் காட்டிக் கொடுத்து விடும்.

எனது ஒரிஜினாலிட்டி சதும்ப ஆபீஸ் வேலை பார்ப்பது. அதை நிம்மதியாக்கிக் கொள்வது. வீட்டில் குறையில்லாமல் பொறுப்பாக இயங்குவது. இயன்றவரை இவையிரண்டையும் முழுமையாகச் செய்ய முயல்வது. நிம்மதியாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை அனாவசியமாகக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது.

டேயப்பா…! வண்டியில் வரும்போதே என்னவெல்லாம் சிந்தனை. இது ரொம்ப ஆபத்தாயிற்றே…இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த மாதிரிச் சிந்தனைகள், அதுவும் சாலையின் நடுவே…என்ன இது கண்றாவி…ஏன் இப்படி ஆகிப் போனேன். எதற்காக இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும்? இப்போ அப்படி என்ன வந்தது? படு பாவி…ஒரு பர்ஸன்ட்…ஒரு பர்ஸன்ட் என்று சொல்லி என்னையும் சலனப்படுத்தி விட்டானே…நானுமா இந்தச் சபலத்திற்கு ஆட்பட்டுப்போனேன். இத்தனை காலம் வெளியூரில் என் மனதில் தோன்றாத சலனமும், சபலமும் இப்போது ஏன் தோன்றுகிறது? ஏன் என் மனதைப் போட்டு இப்படி அலைக்கழிக்கிறது? வினாச காலே விபரீத புத்தி என்பார்களே…அதுவோ…!

குழப்பத்தோடேயே வீடு போய்ச் சேர்ந்தார் ராகவாச்சாரி. வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்து மின் விசிறியைச் சுழல விட்டு அமர்ந்தவர்தான். வேகமெடுத்தபோது கீச், கீச், கீச் என்று அது கத்த ஆரம்பித்து விட்டது.

மொத்தமா நின்னவுடனே கழற்றிக்கிடுவோம் சார்…கொஞ்ச நாளைக்கு இப்டியே ஓடட்டும்…இப்பத் தொட்டா காயலும் மாத்தணும். செலவு ஜாஸ்தியாகும்… என்று சொல்லிவிட்டுச் சென்ற எலெக்ட்ரீஷியனை நினைத்துக் கொண்டார். அது போடும் சத்தத்தைப் பார்த்தால் தூங்கிக் கொண்டிருக்கும்போது தலையில் விழுந்து விடுமோ என்பது போலிருந்தது. வீட்டுச் செலவுகளையெல்லாம் யோசித்து யோசித்துத்தான் செய்வார் ராகவாச்சாரி. அபிதா சொன்னாளே என்பதற்காக சிரமேற்கொண்டு உடனே எதையும் நிறைவேற்றி விடுவதில்லை. அது அவர் மனதுக்கு நியாயமானதாகத் தோன்ற வேண்டும். தவிர்க்க முடியாத அவசியம்தான் என்று உறுதிப்பட வேண்டும். தேவை என்று ஒன்றை நீட்டித்துக் கொண்டே போனோமானால் பிறகு அதற்கு ஒரு முடிவே இல்லாமற் போய்விடும். அப்படித்தான் கோடுகளை வரையறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார் அவர்.

என்னவோ அவர் மனதைப் போட்டு அரித்தது. அலுவலரின் அறைக்குள் சென்று மீண்டிருந்த அந்தக் கோப்பின் ஞாபகம் வந்தது. ஆஉறா…! அது அவர் கேம்ப் ஆபீசுக்கல்லவா சென்று மீண்டது? அந்த அறைக்கு எப்பொழுது சென்றது? யார் அனுப்பினார்கள்? நான் பார்க்கவேயில்லையே? ஒப்பமாகி வந்திருக்கிறதா? இப்பொழுதுதான் என் டேபிளுக்கு வந்திருப்பதுபோல் ஒதுக்கிவிட்டேனே? அப்படியானால் என்ன உத்தரவாகியிருக்கிறது? எடுத்துப் பார்த்திருக்கலாமோ?

தொலைபேசி மணி அடித்தது. இன்று விடுமுறை நாள். ஆனாலும் ஏதேனும் சந்தேகம் கேட்பதற்காக அல்லது நாளைய பணியை நினைவுபடுத்தி உறுதி செய்து கொள்வதற்காக அலுவலர் பேசலாம். இவரிடம் ஒன்றைக் கேட்டுக் கொண்டுதான் பயணத்தைத் தொடருவார். இப்பொழுது வேண்டாம், இன்ன தேதியில் அதைச் செய்து கொள்ளலாம் என்பதான இவரது யோசனைகள் அவருக்கு பக்கபலமாக இருந்தது. அதுதான் ராகசாச்சாரியின் சிறப்பு. ஒரு வேளை அந்தமாதிரியான முதன்மை ஸ்தானம்தான் தன்னை லேசாக ஆட்டிப் பார்க்கிறதோ, ஒரு அதீதமான தைரியத்தைக் கொடுத்து தன்னைச் சிக்கலில் மாட்டிவிட யத்தனிக்கிறதோ?ரொம்பவும் கவனமாக யோசிக்கத் தலைப்பட்டார்.

உறலோ, ராகவாச்சாரி உறியர்…..

நான்தான் எஸ்.இ., பேசறேன்….ச்சாரி சார்.. ….நாளைக்கு நாம என்கொயரிக்காக மணிகண்டம் போறோம்…..தகவல் போயிடுச்சில்லையா?

அனுப்பிச்சு அக்னாலெட்ஜ்மென்ட்டும் வாங்கியாச்சு சார்…அந்த டிரைவர், பியூன், சம்பந்தப்பட்ட செக் ஷன் ஆபீஸர், அந்தப் பார்ட்டி நாலுபேரையும் ரெஸ்ட் உறவுசுக்கு வரச் சொல்லியிருக்கு…

கண்டிப்பா நீங்களும் வரணும்…வேறே யாரையும் அனுப்பிடாதீங்க…ஃபைல் எடுத்திட்டீங்களா…? செபரேட் ரிட்டர்ன் ஸ்டேட்மென்ட்ஸ் ஷூட் பி அப்டெய்ன்ட் ஃப்ரம் த இன்ட்விஜ்வல்ஸ்…ஓ.கே. கீப் இட் கான்ஃபிடன்ஷியல்….காலைல எட்டு மணிக்கு கரெக்டா பஸ் ஸ்டான்ட் வந்திடுங்க…..

தொலைபேசி லைன் துண்டிக்கப்பட்டது.

எங்கே தான் வராமல் போய்விடுவோமோ என்று எதையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று பேசிவிட்டு ஃபோனை வைத்துவிட்டதும், எல்கைதாண்டிப் போகிற ஊர் என்பதனால் ஜீப்பைத் தொடாமல் பேருந்து நிலையத்திற்கு வரச் சொல்வதும், எல்லாவற்றிற்கும் மேலாக கண்டிப்பின் அடையாளமாகப் பயன்படுத்தும் சொல்லாக சார் போட்டுப் பேசுவதையும், துல்லியமாய் உணர்ந்து கொண்டார் ராகவாச்சாரி. அக்கடா என்று இருப்போம் என்று நினைத்து உள்ளுர் வந்தால், அங்குதான் எல்லாமும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுகிறது. கஷ்டப்படுபவன் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? அவனுக்கு விடிவு என்பதே கிடையாதா? ஆனாலும் ஒரு விஷயம் தன்னைச் சார்ந்து இருப்பதில்தான் என்னவொரு திருப்தி, நிறைவு?

உடனடியாக எழுந்து முகம் கைகால் கழுவிக் கொண்டு அபிதா தந்த அற்புதமான காபியைக் குடித்து விட்டு அந்தக் குறிப்பிட்ட கோப்பினை எடுத்து வைத்துக் கொண்டு அதில் மூழ்கிப் போனார் ராகவாச்சாரி. மனதுக்குள் மொத்தப் படமும் உருவாக வேண்டும் அவருக்கு. எங்கெங்கு எடிட் செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாரும் அதில் தலையிடுவது அவருக்குப் பிடிக்காது. இவர் எழுதி அனுப்பிய கோப்பிலே அலுவலரே கை வைப்பது ஆகாது. அத்தனை துல்லியமாக இருக்க வேண்டும் அவருக்கு. என் கடன் பணி செய்து கிடப்பதே…! மாதச் சம்பளம் என்கிற வட்டத்துக்குள் இந்த மனிதனின் கடமையாற்றல் சொல்லி மாளாது. ஆத்ம திருப்தி என்று சொல்வார்களே…அது இன்று தேய்ந்து போன சொல் வழக்கு. ஆனால் அதற்காக மட்டுமே இத்தனை ஆண்டு காலம் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து போனவர் இந்த ராகவாச்சாரி.

றுநாள் அந்த ஓய்வு விடுதியில் வைத்து விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம் அந்தத் தொலைபேசி வந்தது அவருக்கு. சட்டைப் பையிலிருந்து எடுத்து இரண்டு முறை அணைத்தும், மறுபடியும் மறுபடியும் ரிங் வருவதைக் கண்டு என்னவோ அவசரம் என்று உணர்ந்தவராக அறைக்குள் பேசுவது முறையல்ல என்று எழுந்து “சாரி சார்…“ என்று விட்டு சுற்றுப்புறத் தோட்டப் பகுதிக்குள் நுழைந்தார் ராகவாச்சாரி. அந்த இடிச் செய்தி வந்து இறங்கியது அவர் காதில்.

சார்….நா சரவணன் வாட்ச்மேன் பேசறேன்….நம்ம ஆபீஸ்ல விஜிலன்ஸ் ரெய்டு வந்திருக்காங்க சார்….

என்னய்யா சொல்ற…? பதறிப்போய்க் கேட்டார் ராகவாச்சாரி.

ஆமா சார்…கரெக்டா காலைல பத்தரைக்கு நுழைஞ்சிட்டாங்க…வாசக் கதவைச் சாத்திட்டு யாரும் உள்ளே வராதபடிக்கு ஆரம்பிச்சிட்டாங்க சார்….டிராப்டிங் ஆபீசர் மேகநாதன் மாட்டிக்கிட்டார் சார்….அந்தோணி சார் செக் ஷன் பைலில் ஏதோவொண்ணை எடுத்து ஆர்டர் கொடுக்கைல பிரச்னை ஆகியிருக்கு சார்….வழக்கமா வருமே ஒரு பார்ட்டி அந்தாள்தான் சார். எதுத்தாப்ல உட்கார்ந்திருந்தாரு…அந்தோணி சார் இன்னைக்கு வரலை…கேம்ப் முடிச்சிட்டு இன்னைக்கு ஆபீஸ் வராதீங்க…அப்டியே வீட்டுக்குப் போயிடுங்க சார்…யாருக்கும் சொல்லிக்கிட வேணாம்…இது நா உங்களுக்கு மட்டும் பேசுறது…..வச்சிடறேன்….நா பேசினேன்னு தெரிய வேணாம்…

விக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தார் ராகவாச்சாரி. எந்தக் கோப்பு அலுவலரின் அறைக்குள் சென்று மீண்டிருக்கிறதோ அதில்தான் பிரச்னையாகியிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது. அது, தான் பார்த்து ஒப்பமிடாமல் போய் மீண்டது. கை வைத்தால் பிரச்னை வரும் என்று தெரிந்துதான் ஒத்திப்போட்டது. ஆனால் தன் பார்வைக்கு வராமல் நேரடியாக எல்லாமும் நடந்திருக்கிறது. போகட்டும்…யாருக்கென்ன? வினை விதைத்தால் அதைத்தான் அறுத்தாக வேண்டும். ஆனால் ஒன்று! உள்ளே விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் அவரும் ஒரு வார்த்தை தன்னிடம் கூறவில்லையே! என்ன ஒரு அழுத்தம்? அப்படியானால் என்ன பொருள்? திறமையானவன் தனக்கு வேண்டும். தான் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அவனின் உழைப்பும் வேண்டும். தனக்குப் பக்கபலமான அவனை விட்டுவிடத் தயாரில்லை. அதே சமயம் இன்னொரு பக்கமான அந்தப் பேராசையும் வேண்டும். தான் இதில் தலையைக் கொடுக்க விரும்பவில்லை என்று உணர்ந்துதான் இதைப்பற்றித் தன்னிடம் பேசவேயில்லையோ? ஒரு மாதமாக அடிக்கடி வந்து போகும் அந்த ஆள் இப்படித்தான் காரியத்தை முடித்துக் கொண்டிருக்கிறானா? இத்தனை விபரீத முடிவுக்கு ஏன் போனான்? இந்த மேகநாதன் ஏன் அதில் தலையிட்டார்? அப்படியானால் மேகநாதனுக்கும் பாஸுக்கும் இடையில் என்ன நடந்தது? பிரிவு எழுத்தர் அந்தோணி ஏன் கழற்றி விடப்பட்டான்? கழற்றி விடப்பட்டானா அல்லது எதுக்கு வம்பு என்று நேக்காக ஒதுங்கி விட்டானா? அவன் எம்டன் ஆச்சே…இம்மாதிரி விஷயங்களில். இந்த உலகில் எப்படி வாழ்வது என்பதை விட எப்படித் தப்பிப்பது என்பதைத்தான் முதலில் கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டுமோ? யோசனைகள் நீண்டு கொண்டே போனது ராகவாச்சாரிக்கு.

ஆயிரத்தைந்நூறு ரூபாய் என்று அன்றொரு நாள் அந்தப் பார்ட்டி ஒரு பர்ஸன்ட் ஆசை காட்டியதையும், அந்தக் கணத்தில் தன் மனது லேசாகச் ஆடிப் போனதையும், இப்போது நினைத்த போது, மெல்லிய நடுக்கம் பரவியது அவர் உடம்பில்.

கூடவே தனது பணி ஓய்வு வெகு பக்கத்தில் என்ற எண்ணம் வந்தபோது ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காத கதையாய் இதுகாலம் வரையிலான நேர்மையும், கண்ணியமும், கடமை தவறா நற்பெயரும், நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்த நிச்சலனமான வாழ்க்கையை அனாவசியமாய் அல்ப சபலத்திற்கு ஆட்பட்டு மொத்தமாய்க் கெடுத்துக் கொண்டு நிற்கக் கூடாது என்ற சுதாரிப்பு அந்தக் கணத்தில் அவர் மனதில் பிரதிக்ஞையாய் மாறி அவரை மிகத் தெளிந்த மனநிலைக்குத் தள்ளியது. --------------------------------

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...