11 மார்ச் 2021

புதுமைப்பித்தனின் "கண்மணி கமலாவுக்கு" - வாசிப்பனுபவம்

 





புதுமைப்பித்தனின் "கண்மணி கமலாவுக்கு" - வாசிப்பனுபவம்



-----------------------

வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம் என்றார் புதுமைப்பித்தன்.

அந்த அளவுக்கான ஆழ்ந்த ரசனையோடுதான் தனது ஒவ்வொரு படைப்பினையும் வடித்தெடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதனால்தான் இலக்கியம் என்பதன் முழு அர்த்தத்தை உள்ளடக்கியதாக நம்மை பிரமிக்க வைக்கிறது அவரது ஒவ்வொரு படைப்புக்களும்.

இல்லையென்றால் தனது மனைவிக்கு எழுதும் கடிதங்களைக் கூட இத்தனை ரசனையோடும், பிடிப்போடும், உள்ளார்ந்த அனுபவச் செறிவோடும் அன்பையும், பாசத்தையும், பொறுப்புணர்ச்சியையும், கடமையுணர்ச்சியையும் நுணுகி நுணுகி உணர்ந்து, அனுபவித்து அதன் ஆழமான உட்பரிமாணங்களில் மனமுவந்து பயணித்து, தனக்கு ஊனாகவும், உடலாகவும் இருந்து பரிமளித்திடும் தன் மனையாளிடம் அதன் மொத்த சாரத்தையும் வடித்துக் கொடுத்துக் கடிதங்கள் எழுதியிருப்பாரா?

கண்மணி கமலாவுக்குபுதுமைப்பித்தன்

இதுதான் புத்தகம். இத்தனை கடிதங்களைத் தொகுக்கும் பணி என்ன சாதாரணமா? என்ன விலையோ அதைத் தயங்காமல் கொடுத்து, ஆர்வமாகப் படித்து முடித்து விடுகிறோம். ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர் என்ன ஒரு உழைப்பையும், முனைப்பையும் காட்டியிருப்பார்? திரு இளையபாரதி அவர்கள் நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான்.

நாமெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்றுதான் தோன்றுகிறது நமக்கு. முணுக்கென்றால் முன்னூறு முறை கோபித்துக் கொள்ளும், முகத்தைத் திருப்பிக் கொள்ளும், சண்டைக்கு சதிராய்ப் பறக்கும் சாதாரண மானிடப் பிறவியாய் அன்றாட வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.

இத்தனைக்கும் பொருளாதாரத் தேவை என்பது நிறைவடைந்திருக்கும் நிலையில், எதடா சாக்கு என்று ஒன்றுமில்லாததற்கெல்லாம் முறுக்கிக் கொண்டு அலைகிறோம். என்னதான் புத்தகங்கள் படித்தாலும், உணர்ந்தாலும், மனிதனின் இயல்பான கோணல் புத்தி என்ன அத்தனை சீக்கிரமாகவா தன்னை மூடி மறைத்துக்கொள்கின்றன? அல்லது எல்லா முரண்களிலிருந்தும் விலகிக் கொள்கின்றனவா?

அன்றாட வாழ்க்கையே பிரச்னையாக இருந்த நிலையில், பொருள் ஆதாரத்தை முற்றிலுமாக நம்பி நின்ற பொழுதில், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அவரவருக்கான மனச் சங்கடங்களைக் கூட நேரில் பகிர்ந்து கொள்ள முடியாது வெகு தூரம் பிரிந்து நின்ற வேளையில், எத்தனை கரிசனத்தோடும், அன்போடும், கருணையோடும், பாசத்தோடும், பரஸ்பரம் எப்படியெல்லாம் உறவாடியிருக்கிறார்கள்? மனதுக்குள்ளே எப்படி ஆரத் தழுவியிருக்கிறார்கள்? இதுதான் உண்மையான அன்பு என்பதோ?

மூத்த தலைமுறையினரின் அடிப்படையான விழுமியங்கள் அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் செழுமைப் படுத்தியிருக்கின்றன! ஒழுக்கமும், பண்பாடும், கடமையுணர்ச்சியும், கட்டுப்பாடும், இந்த வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றல்லவா நமக்குப் பாடம் கற்பிக்கின்றன! சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும் என்கிற உண்மை இங்கே எப்படியெல்லாம் பரிணமிக்கின்றன!

பொருளீட்டுவதற்கான நமது உழைப்பு என்பது எங்ஙனம் இருக்க வேண்டும், ஈட்டிய பொருள் எத்தனை அர்த்தபூர்வமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும், பொருள் ஆதாரம் என்பது அதற்கான தேவைகளை நீட்டித்துக் கொண்டே போகாமல் அவசரம், அவசியம் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தவிர்க்க முடியாதவைகளாயும், தவிர்க்கக் கூடியவைகளாகவும் எப்படிப் பொறுப்போடு உணரப்பட வேண்டும், என்பதாக வாழ்க்கையின் நிகழ்வுகளை எத்தனை அக்கறையோடு போதிப்பதாக உள்ளன!.

வாழ்க்கையில் மனிதனுக்கு எல்லாவிதமான அனுபவங்களும் கிட்டி க்ஷவவிடுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் ஒருவனுடைய வாழ்க்கை எல்கை மிகக் குறுகிய அளவிலானதாக இருப்பதுதான். வீடு, அங்கிருந்து பொருளீட்டும் நிறுவனம் வரையிலான தூரம். வீடு, அங்கிருந்து பணியாற்றும் அலுவலகம் வரையிலான தூரம். இடைப்பட்ட மற்றும் பணியாற்றும் இடங்களில் பழகும் மனிதர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் நடத்தைகள், பழக்க வழக்கங்கள், அனுபவங்கள் என்று மிகக் குறிப்பிட்ட அளவிலான மனிதர்களின் சந்திப்புகளோடு பெரும்பாலும் முடிந்து போகின்றனவாய் அமைந்து விடுகின்றன.

அப்படியானால் ஒரு மனிதன் முழுமையான அனுபவம் வாய்ந்தவனாக, இந்த சமூகத்தை, அதன் நிகழ்வுகளை முற்றிலுமாகப் புரிந்து நடந்துகொள்பவனாக ஒரு முழு மனிதனாக எப்பொழுது, எப்படி உலா வருவது?

அதற்குத்தான் வாசிப்பு அனுபவம் என்பது பெரிதும் உதவுகிறது எனலாம். வாசிப்பு ஒரு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. அவனது சளசளப்பைப் போக்கி அவனை அமைதியானவனாக்குகிறது. வாசிப்பனுபவத்தினால் மிகப்பெரிய விவேகியானவர்கள் பலர் என்று கூறுகிறார் திரு சுந்தரராமசாமி அவர்கள். இதுதான் சத்தியமான உண்மை.

மேற்கண்ட புத்தகத்தின்பால் ஏற்பட்ட வாசிப்பனுபவம்தான் இந்த அளவுக்கான தொகையறாவை முன்னே வைக்கும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டது.

திரு இளையபாரதி அவர்கள் தொகுத்து புதுமைப்பித்தன் அவர்கள் தனது துணைவியாருக்கு எழுதிய கடிதங்கள்தான் கண்மணி கமலாவுக்கு என்கிற பெயரில் அற்புதமான ஒரு இலக்கியப் பெட்டகமாக இங்கே மிளிர்கிறது.

வாழ்வதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்கிறோமா? என்று கேட்ட கலைஞனின் வாழ முடியாமல் போன வாழ்வு அவன் வாக்கு மூலமாய் இங்கே ஒலிக்கிறது என்று தனது முன்னுரையில் முன் வைக்கிறார் திரு இளையபாரதி அவர்கள்.

புதுமைப்பித்தன் என்கிற மகாகலைஞனின் இன்னொரு பரிமாணம் இந்தக் கற்பூர ஆரத்தியில் தரிசனமாகிறது என்கிறார்.

ஆம்! அவர் சொன்னது போல் தன் இருதயத்தை, அதன் தவிப்பை, தணலைக்கொட்டி முழக்கியிருக்கிறார் புதுமைப்பித்தன்.

வாழ்க்கை எப்படியெல்லாம் நீண்ட காலத்திற்குப் பிரிந்து நின்றது, எப்படியெல்லாம் சிதைந்து போனது, தேவைகள் எங்ஙனமெல்லாம் குன்றிப் போயின, சுயபூர்த்தியில்லாமலே நாட்கள் எத்தனை வேதனையாய்க் கழிந்தன, அவற்றினூடே மனம் தன்னை, தன் எண்ணங்களை அகல விரித்து எப்படியெல்லாம் ஆறுதல் தேடிக் கொண்டன என்பனவாக விரிந்து செல்லும் கண்மணி கமலாவுக்கு என்னும் இந்த இலக்கியப் பெட்டகம் நம் மனதைப் பிழிந்து எடுத்து விடுகிறது என்பது சத்தியமான உண்மை.

இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்ட ஒருவனின் வாழ்க்கை எப்படித்தான் சிதைந்தாலும், அந்தக் கனவின்பால் ஏற்பட்ட பிடிப்பு ஒருவனை எங்ஙனம் ஆட்டிப் படைக்கிறது என்பதைத் தன் மனைவிக்கான ஒவ்வொரு கடிதம் மூலமாக அப்படியே வடித்தெடுத்திருக்கிறார் பு.பி. அவர்கள்.

பழைய திரைப்படங்களிலும், நாவல்களிலும், கடிதம் எழுதும் முறைமையில் கண்டவற்றை தன் மனைவிக்கான முதல் அழைப்பின் வாயிலாக பு.பி. அவர்கள் முன் வைக்கும்போது இம்மாதிரியெல்லாம் விளித்து நாம் எழுதியதேயில்லையே என்று தோன்றத்தான் செய்கிறது. அப்படி எழுதியிருந்தால் அது ஒரு செயற்கையான விஷயமாகத்தானே பட்டிருக்கும். எல்லோராலும் விரும்பப் பட்டிருக்குமா, மனைவியால் கூட விரும்பத் தக்கதாக இருந்திருக்குமா என்றெல்லாம் கூடத் தோன்றினாலும், பு.பி. அவர்கள் கடிதத்திற்குக் கடிதம் அப்படியே தன் மனைவியை விளித்து, தன் ஆழமான அன்பை, பாசத்தை, தன் குடும்பத்தின்பாலான தன் நேசத்தை நிலைநிறுத்தும்போது ஒரு மனிதன் முதலில் தன்னை நேசித்தால்தான் தன் நெருக்கமான சொந்தத்தை, சுற்றத்தை இப்படி நேசித்து, அரவணைக்க முடியும் என்கிற மன நியாயம் நம்மைக் கட்டுப்படுத்தி நிலை நிறுத்தி விடுகிறது.

கண்மணி கமலாவுக்கு…. எனதாருயிர்க் கண்ணாளுக்குஎனதாருயிருக்குகமலாளுக்குஎனது கட்டிக் கரும்பான ஆருயிர்க் கண்ணாளுக்கு, என் கண்ணம்மாகண்ணாகண்ணாளுக்குஎனது கண்ணாளுக்குகண்ணான எனது உயிருக்குஎனது கண்ணுக்குக் கண்ணான கட்டிக் கரும்புக்குஎனது உயிருக்கு உயிரான கட்டிக் கரும்புக்குஎனது கண்ணான கட்டிக் கரும்புக்குஎனது அருமைக் கண்ணாளுக்கு….

கடிதத்தின் முதல் அழைப்பே எவ்வளவு அன்பைப் பொழிந்து நிற்கிறது?

…. பொருளை மட்டுமே ஆதாரமாக வைத்து வாழும் தற்போதைய வாழ்க்கையில் விழுமியங்களான விஷயங்கள் எங்கிருந்து எடுபடும்?

பழைய மதிப்பு மிக்க விஷயங்கள் இன்றும் அந்த மூத்த தலைமுறையினரால் மட்டுமே உணரப்படுகிறது என்றால் அதுதான் உண்மை. இவற்றையெல்லாம் நாம் நம் வாரிசுகளுக்குச் சொன்னோமா? அப்படியே சொல்லப் புறப்பட்டால்தான் யார் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாராயிருக்கிறார்கள்?

. 1938 களிலிருந்து 1948 வரையிலான சுமார் பத்தாண்டு கால கடிதப் போக்குவரத்துகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இக்குறிப்பிட்ட பத்தாண்டு கால இடைவெளியில் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில் வெவ்வேறு முகவரிகளில் மாறி மாறி இருந்திருக்கிறார். மதுரை, புனே, பெங்களுர், என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கிறார். அதுவே அவரின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஆரம்ப அடையாளங்களாக, காரண காரியங்களை முன்னிறுத்தியதானதாய் நமக்குத் தோன்றி மனதை மிகவும் கஷ்டப்படுத்தி விடுகிறது.

மனிதன் வறுமையோடு போராடுவது என்பது மிகக் கொடுமை. பொருளாதாரக் கஷ்டத்தினால் ஒருவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளே சீர்குலைந்துதான் விடுகிறது. கையில் கிடைக்கும் பணத்தைக் கண்ணும் கருத்துமாகக் கணக்கிட்டு, கவனமாகச் செலவு செய்து, விரயங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து, குடும்பத்திற்கு என்று கரிசனத்தோடு அனுப்பி வைத்து மன நிறைவு கொள்ளுதலும், கடிதத்திற்குக் கடிதம் அன்பையும், ஆறுதலையும், அரவணைப்பையும் தந்து பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க முயலுதலும், அருகில் இல்லாவிட்டாலும் என் கடிதங்கள் கட்டாயம் உன்னை ஆறுதல்படுத்தும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு கடிதத்தையும் அவர் வடித்திருக்கும் பாங்கு….பின்னால் இது இலக்கியமாகப் பேசப்பட வேண்டும் அல்லது பேசப்படும் என்கிற எதிர்பார்ப்பிலா எழுதப்பட்டது?

மன ஆழத்திலிருந்து உண்மையான அன்பின், பாசத்தின் வெளிப்பாடல்லவா அவைகள்! அதிலும் குழந்தை குஞ்சு இறந்து போய்விட அவர் அந்தத் துயரத்தை மறக்க தன் மனைவிக்கு எழுதும் வரிகள் நம் நெஞ்சத்தை அறுத்து எடுக்கின்றன.

தொலைபேசி வசதி கூட இல்லாத அந்தக் காலத்தில் வெறும் கடிதங்கள் மட்டுமே தொடர்பு படுத்துபவை என்கிற அளவில், கடுமையான வேலைகளுக்கு இடையில் அடுத்தடுத்து விடாமல் அவர் தன் மனைவிக்கு எழுதியுள்ள கடிதங்கள், வீட்டின் தொடர்ந்த நடவடிக்கைகளை சென்னையிலிருந்தே எவ்வளவு பொறுப்பாக இயக்க முடியுமோ அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டோடு இயக்கி, மனைவியையும் ஆறுதல்படுத்தி, தான் இல்லாத குறையைப் போக்க அவர் எடுத்திருக்கும் முயற்சிகள், மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சீர்பட நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்பதற்கான அற்புதமான அடையாளங்களாகப் பரிணமிக்கின்றன.

எப்படியும் வாழலாம் என்பது எந்தக் காலத்திலும் எவருக்கும் பொருந்தியதாக இருந்ததில்லை. நமது குடும்ப அமைப்பு கற்றுக் கொடுத்த பாடங்கள் அவை. இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும், அதுதான் ஒரு மனிதனின், அவன் சார்ந்த குடும்பத்தின் நன்னடத்தைகளின் அடையாளங்களாகக் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதுதான் சத்தியமான உண்மை.

அம்மாதிரியான விழுமியங்களை அவற்றின் அடையாளங்களை வறுமையும், பொருளாதாரப் பற்றாக்குறையும் குலைக்க முயலும்போது மனிதன் முரண்படாமல், அந்தப் பேரலையில் அடித்துச் செல்லப்படாமல், அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறுகிறான் என்பதுதான் வறுமையிற் செம்மை என்ற தத்துவ நிகழ்வாகக் காலத்துக்கும் இகருந்து வந்திருக்கின்றன. இந்த அடையாளங்களின் பிரதிநிதியாய் பு.பி. அவர்கள் இந்தப் புத்தகத்தில் தான் வரைந்த கடிதங்களின் மூலம் நம் மனக் கண்ணில் திகழ்கிறார்.

கமலா கண்ணே! கட்டிக் கரும்பே! மறந்து விடாதே. உனக்கு ஏற்படும் துன்பம் எனக்கும்தான். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிக்கிறோம். அதனால் உனக்கென்று ஒரு வழி என்னும் அசட்டு யோசனைகளை விட்டுவிடு. மனசை மாத்திரம் தளர விடாதே! அது எனக்கு எவ்வளவு கவலை கொடுக்கிறது தெரியுமா? உன்னுடன் தவிக்கும். உனது சொ..வி.

விடாமல் கடிதத்திற்குக் கடிதம் அவர் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் விதம், அடக் கடவுளே, ஒரு அற்புதமான படைப்பாளிக்கு வாழ்க்கைப் போராட்டம் எத்தனை கொடுமையாக அமைந்து விட்டது என்று நம்மைப் பிழிந்து எடுத்து விடுகிறது.

மனைவியை ஊக்கப்படுத்தும் நிமித்தம், அவர் எழுதும் கதைகளைத் தனக்கு அனுப்பிவைக்கச் சொல்கிறார். அடுத்தடுத்து விடாமல் எழுது என்று உற்சாகப்படுத்துகிறார். உன் கதைகள் நன்றாகவே உள்ளன, ஓரிரு வார்த்தைகளை மாற்றிப் போட்டால் போதும். அவற்றை நான் சரி பண்ணி, பிரசுரத்திற்குக் கொடுத்து விடுகிறேன் என்று கூறி, இன்னும் ஏதாவது எழுதியிருந்தாயானால் உடன் எனக்கு அனுப்பிக் கொடு என்று கேட்கிறார்.

1947 ஆரம்ப வரையிலான காலங்கள் சென்னையிலேயே கழிந்து விடுகின்றன. பிறகுதான பட விஷயமாக என்று மதுரைக்குப் பயணிக்கிறார். சூழ்ந்திருந்த இருள் விலக ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ச்சியை மனைவியோடு பகிர்ந்து கொள்கிறார்.

மதுரை சித்திரகலா ஸ்டுடியோவில் பட வேலைகளைக் கவனிக்க என்று கிளம்புகையில் அவர் மனம் பெரிதும் உவகை கொள்கிறது. அப்பொழுது கூட அங்கிருந்து உன் மனக் கவலை தீர்க்கும் தகவலை உனக்கு அனுப்ப முடியும் என்று நினைக்கிறேன் என்று மனைவிக்குத் தெரிவிக்கிறார்.

மதுரையில் மேலமாசி வீதியில் இருந்த உடுப்பி Nஉறாட்டலில்தான் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் வந்தால் தங்குவார்கள் என்று கேள்விப் பட்டதுண்டு. அங்கு அறை எண் 13ல் பு.பி. வந்து தங்கியிருக்கிறார் என்கிற தகவல் இன்று பெரிய ஜவுளி நிறுவனமாயும் வேறு பல கடைகளாயும் இருக்கும் அவ்விடத்தைப் பார்க்கும்போது நம் மனதை கனக்க வைக்கிறது.

எல்லாவிதமான பழைய அடையாளங்களும்தான் பணம் என்கிற புள்ளியில் இங்கே படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டனவே! காலத்தின் வேக ஓட்டத்தில் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனவே!

1948 களில் புனாவிற்கும் பிறகு பெங்களுருக்கும் செல்லும் வாய்ப்புக் கிட்டிய பு.பி. அவர்கள் பெங்களுரிலிருந்து எழுதும் ஒரு கனமான கடிதத்தோடு இப்புத்தகம் நிறைவு பெறுகிறது. நம் மனதையும் அது நிறைத்து கனக்க வைத்து விடுகிறது.

அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப் பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டுக் கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம்தான் முடிவு. என்பதாக அந்தக் கடிதத்தின் வரிகள் விரிகின்றன.

முக்கியமான செய்தி ஒன்றைத் தரும் ஒரு கடிதத்தையும் நாம் இங்கே கவனித்தாக வேண்டும். அது புனேயிலிருந்து எழுதப்படுகிறது.

5.2.48 என்று தேதியிட்ட அந்தக் கடிதத்தில் மகாத்மாவைச் சுட்டுக் கொன்றுவிட்ட செய்தியைப் பெரும் அதிர்ச்சியோடு தெரிவித்து, அதன் தொடர்பான கலகங்களைச் சுருக்கமாக விவரிக்கிறார்.

கொன்றது உறிந்து, புனா நகரத்து ஆள் என்று சொன்னார்கள். புனாவில் உறிந்து மகாசபை பத்திரிகை நடத்தியவன் என்று தெரிந்ததும், நகரம் கொந்தளித்துப் போயிற்று. உறிந்து மகா சபைக்காரர்களைக் குத்தி அவர்கள் வீடுகளை எரித்தார்கள். காந்தியைச் சுட்டவன் பத்திரிகாலயத்தை ஜனங்கள் எரிக்கும்போது நெருப்பு அணைக்கும் யந்திரம் வந்தது. அணைக்கக் கூடாது என்று ஜனங்கள் தடுக்க, ராணுவம் துப்பாக்கி பிரயோகித்து எட்டுப் பேர் மரணம். எங்கு பார்த்தாலும் பிராமணர்களை அடித்துக் கொல்லுவது அவர்கள் வீடுகளைக் கொளுத்துவது என்ற காரியம் நாலு நாட்களாக நடந்து வருகிறது. காந்தி மாண்டதற்காகச் சர்க்கரை கொடுத்த ஒருவன்ய கடை தீ. வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை. நான்கு நாட்கள் எனக்கு வெற்றிலை இல்லை என்றால் நிலை எப்படி என்று யோசித்துக் கொள் என்று முடிக்கிறார். இருக்கும் அதிரடியைச் சொல்லி அவருக்கான வெற்றிலையோடு முடிக்கும் பாங்கு எத்தனை சரளமும் யதார்த்தமும் நிறைந்தது. நல்லிலக்கியம் என்பது தானே கூடி வருவதாய்த்தானே இருக்க வேண்டும். காலம் பின்னால் உணரும் என்று அவர் நினைத்திருப்பாரா? அவரது உள்ளக் கிடக்கை அத்தனை தத்ரூபமாய்ப் பரிணமித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரு முயற்சி செய்து இந்தக் கடிதங்களைத் தொகுத்தளித்த திரு இளையபாரதி மிகவும் பாராட்டுக்குரியவர்.

இந்தக் கடிதங்களில் காணக் கிடைக்கும் புதுமைப் பித்தன் நமக்கு முற்றிலும் புதியவர். ரொம்பவும் நெகிழ்ச்சியானவர். தமிழ் இலக்கியத்தின் எல்லாவிதமான பரிசோதனைகளுக்கும் என்னிடம் வாருங்கள் என்று களம் அமைத்துக் கொடுத்த பெருமை பு. பி. அவர்களைச் சாரும். அவரைத் தொடாமல் இந்த இலக்கிய வானுக்குள் எவரும் சஞ்சாரம் செய்ய இயலாது. தன் மனைவிக்கு அவர் எழுதிய இக்கடிதங்கள் காலத்தால் இலக்கியமாகப் பரிணமிக்கும் என்ற நினைத்தெல்லம் அன்று அவர் எழுதவில்லை. ஆனால் இன்று அவையும் அந்தத் தகுதியைப் பெற்று தலை நிமிர்ந்து நிற்கின்றன. நாம்தான் அவற்றை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியத்தை விரும்பும் ஒவ்வொருவர் நூலகத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இது!

.வு.சி. நூலகம், ஜி-1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை,சென்னை-14 ன் அற்புதமான வெளியீடு இது. இந்தப் பதிப்பகம் எத்தனையோ நல்ல நூல்களைத் தேடித் தேடி வெளியிட்டு வருகிறது. அதில் இது அதி முக்கியமானது.

-------------------------------------------

,

 




07 மார்ச் 2021

நிவேதிதா பதிப்பகம் வெளியீடு ”துருவங்கள்” குறுநாவல்கள் (2021 - பிப்-மார்ச் சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு

 நிவேதிதா பதிப்பகம் வெளியீடு ”துருவங்கள்” குறுநாவல்கள் (2021 - பிப்-மார்ச் சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு




சிறுகதை படிமம் உஷாதீபன் தினமணி கதிர் (28.02.2021) பிரசுரம்

 

        சிறுகதை       படிமம்                                               உஷாதீபன் 

        தினமணி கதிர் (28.02.2021) பிரசுரம்



                    

       மாடியிலிருந்து தரை தளத்திற்கு வந்திருந்த சுசீலா  சட்டென்று புடவைத் தலைப்பை எடுத்து மூக்கையும், வாயையும் சேர்த்துப் பொத்திக் கொண்டு பார்த்தாள். படியிறங்கி வந்ததிலும் அவளுக்கு மூச்சு வாங்கியது. ஒரு மாசமாயிற்று. லிஃப்ட் வேலை செய்யவில்லை. அதற்கு செலவு இருபதாயிரத்தைத் தாண்டுகிறது என்பதால் யாரும் காசு தர முன்வரவில்லை. ஏறி, இறங்கிச் செத்தாலும் சரி...தம்பிடி பேராது என்றிருக்கிறார்கள். அடுக்ககத்தில் குடியிருப்பதில் அடுக்கடுக்காய்ப் பல சிரமங்கள் உண்டு. வந்த பின்னால்தானே தெரிகிறது?

      காம்பவுண்டு நுனியில் மூடப்பட்டிருந்த சதுர இரும்பு மூடியைக் கடப்பாரையைக் கொண்டு நெம்பித் தூக்கி கழிவு நீர் வழித் தொட்டியைத் திறந்தான் உச்சிப்புளி.

      நீங்க தள்ளிப் போயிருங்க சார்...என்றான் அருகில் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்து. மேல் துண்டால் பொத்திக் கொண்டிருந்த சுந்தரம்... இருக்கட்டும்...நீங்க வேலையை ஆரம்பிங்க....என்றார்.

      தொட்டியில் கொழ கொழவென்ற கழிவும், நீரும் கசடுமாகத் தளதளத்து மிதந்து கொண்டிருந்தது. வாடை ஆளைத் தூக்கியது.  வெளியே மூடியை மீறி வழிந்து சென்றிருந்ததால், துர் நாற்றம் அதிகமாயிருந்தது. கசடுகளோடு கழிவுத் தண்ணீர்  இரும்பு கேட்டைத் தாண்டி சரிவுப்படிகளில் இறங்கியிருந்தது.

      இன்னும் கொஞ்சம் போச்சுன்னா ரோட்டுல ஓட ஆரம்பிச்சிடும் சார்.....அப்புறம் பிரச்னை ஆயிடும்....என்றான் உச்சிப்புளி.

      ஆமாமா....அதான் அவசரமா உங்களக் கூப்பிட்டது....என்றார். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டார். யார் வீட்டிலாவது வேடிக்கை பார்க்கிறார்களா? என்று. புகார் கொடுக்காமல் இருந்தால் சரி. கார்ப்பரேஷன் வண்டி வாரம் ஒரு முறையோ, இரு முறையோ வருகிறதுதான். அந்த நேரம் கண்ணில் பட்டால் அபராதம் பதினஞ்சாயிரம். அருகில் குடியிருப்பவர்கள் புகார் சொல்லியும் இது நடந்து விடுகிறது. இங்காவது லாரியில் இறைக்கப்படுகிறது. பல வீட்டில் ரோட்டுச் சாக்கடையோடல்லவா இணைத்திருக்கிறார்கள்? அதை யார் சொல்வது? சொல்லாமல் இருக்கத்தான் காசைக் கொடுத்து வாயை அடைத்திருக்கிறார்களே? வேலியே பயிரை மேய்ந்தால்?

      சுத்தம் பண்ணிடுவோம் சார்...அதுக்குச் சொல்லல....இங்க மட்டுமில்ல.....பெரிய செப்டிக் டாங்க் போறவரைக்கும் வழில இருக்கிற நாலு சதுரத்தையும் தோண்டிக் க்ளீன் பண்ணனும்....இல்லன்னா இது போயி...அங்கங்க அடைச்சிக்கிட்டு நிக்கும்....என்று சொல்லி நேர் கோட்டின் இடது கடைசி நுனியில் இருக்கும் பெரிய செப்டிக் டாங்க் வரை அங்கங்கே உள்ள சதுரங்களைக் காண்பித்தான் அவன்.

      இது ஒண்ணுதானே ஒழுகுது....இங்கதானே ஓவர்ஃப்ளோ ஆகுது...அப்போ...இங்கே மட்டும் தோண்டினாப் பத்தாதா...? நீ என்னப்பா...பெரிய்ய்ய வேலயா இழுத்து விடுறே....?

      அப்டியில்ல சார்....அதெல்லாமும் அடைச்சி அடைச்சிதான் இங்க வந்து தேங்கியிருக்கு....எட்டு வீட்டுக்கும் லிங்க் இருக்குல்ல சார்... அவசரத்துக்கு என்ன பண்றதுன்னு, பேசின்ல கண்டதையும் போடக் கூடாது....பேப்பர், பீத்துணி, முடிக் கத்தை..காய்கறித் தோல், .குழந்தைங்க கழிவுன்னு சுருட்டிச் சுருட்டி அதுக்குள்ள வீசியெறிஞ்சா...கொஞ்சம் கொஞ்சமாச் சேர்ந்து அடைக்கத்தான சார் செய்யும்....சரியா தண்ணியும் ஊத்த மாட்டாங்க....அப்டியே ஊத்துனாலும், இந்தக் கழிவுகளோட சேர்ந்து மத்த கழிவுகளும் போய் நின்னுக்கிடும்....பெரிய டாங்குக்குப் போற வழி இப்டித்தான் அடைபடும்... யாரும் சொன்னாக் கேட்குறதில்ல.....நாம என்ன சார் பண்ண முடியும்? அப்பப்போ இப்டிக் க்ளீன் பண்ணித்தான் ஆகணும்....

      இங்கு அடுக்ககம் கட்டும்போது உச்சிப்புளிதான் வாட்ச்மேன். அவனுக்கு எதெது எங்கே லிங்க் இருக்கிறது என்று நன்றாய்த் தெரியும். ரிப்பேருக்கு அடிக்கடி அவனை அழைப்பதே அதற்காகத்தானே!

      இதற்குத் துட்டுப் பிரட்டுவதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் மூணு வீட்டில் காசு வந்தபாடில்லை. இவன் என்னடான்னா பெரிய செலவு வச்சிருவான் போல்ருக்கே...? என்று பயந்தார் சுந்தரம். மனதுக்குள் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருந்தது அவருக்கு.

      ஒவ்வொரு முறையும் இவர்தான் இந்தக் க்ளீனிங் வேலைகளைக் கவனிக்கிறார். வேறு எவரும் தலையைக் காட்டுவதில்லை. மொத்தம் எட்டு வீட்டில் ஆறு வீட்டுக்காரர்கள் வாடகைக்கு வந்தவர்கள். ஒரு சொந்த வீடு தனி மனுஷி. அதுவும் வயசான கேஸ். இவரும் வயசானவர்தான். ரிடையர்ட் ஆயாச்சே...! ஆனால் அது கணக்கில் வராது. ஆம்பிளயாச்சே...!  எனக்கென்ன வந்தது என்றிருக்கிறார்கள். சொந்த வீடு வைத்திருப்பவன்தான் பாடாய்ப் பட வேண்டியிருக்கிறது,

      சங்கம் அமையுங்கள் என்கிறார்கள். எட்டு வீட்டு அடுக்ககத்திற்கு என்ன சங்கம் வேண்டிக் கிடக்கிறது? ஆளுக்கு மூணு மூணு மாசம் பராமரிப்புப் பொறுப்பு.  அவ்வளவுதான். அதாவது ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுவுமில்லை. சம்ப்பில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கூடப் பார்க்காமல் மோட்டார் ஸ்விட்ச்சைத் தட்ட வேண்டியது. வெத்து மோட்டார் ஓடி ஓடி ஏர் லாக் ஆக வேண்டியது. பிறகு குய்யோ முறையோ என்று வந்து நிற்க எத்தனை முறைதான் ஓடி ஓடிப் போய்ச் சரி பண்ணுவது? ஏர் லாக் ரிலீஸாகி மேலே தொட்டியில் தண்ணீர் விழுகிறதா என்று கூட நாமே போய்ப் பார்த்து உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. பொறுப்பிலிருப்பவர் பாதி நாள் ஊரில் இருப்பதில்லை. பிறகு தண்ணி லாரிக்கு எவன் புக் பண்ணுவது?

      இன்று சொன்னால் நாளைதான் வரும் மெட்ரோ லாரி. தொட்டி காலி. தேவைக்கு என்ன செய்வது? ஆளாளுக்கு கழுவாமல் கிடப்பார்கள் போலிருக்கிறது? யாரோ பார்க்கட்டும் நமக்கென்ன வந்தது என்றிருந்தால்?  பிரைவேட் லாரிக்குச் சொல்ல அடுத்த ஒரு மணியில் அவன் வந்து கொட்டிவிட்டுப் போய் விடுகிறான். ரேட் ஜாஸ்தி.  இவர்களின் கவனக் குறைவுக்கு,  பொது நஷ்டமா? இதென்ன அநியாயம்?   சொந்த வீடு என்று ஒரு சந்தோஷம், நிறைவு உண்டா? சதா என்னவாவது  ஒரு பிரச்னை. போதுண்டாப்பா...சாமி...!

      தனி வீடு என்றால் எதுவானாலும் நம்மோடு போகும். இது பெருந்தொல்லையாவில்ல போச்சு?  சுந்தரத்திற்கு தாளாத அலுப்பு. பெரிய தப்புப் பண்ணியாயிற்று என்கிற நினைப்பு வந்து விட்டது. நல்ல வேளை நூறு, நூற்றைம்பது வீடுகள் உள்ள அபார்ட்மென்டில் போய் மாட்டவில்லை.. அங்கிருக்கும் பிரச்னைகளைக் கவனித்தால் இது தங்கம்...! ஆனாலும் காசையும் கொடுத்து, பணத்தையும் லட்சக்கணக்காய் இழந்து, தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்ட மாதிரி ஆகிப் போனது!!

      பையன் பெயருக்கே வீட்டை ரிஜிஸ்டர் பண்ணியிருந்ததால் பொறுமுவதைத் தவிர வேறு வழியில்லாமல் நின்றார் சுந்தரம். தன் பெயருக்கு என்று பதிந்திருந்தால் என்றோ விற்றுத் தலை முழுகியிருப்பேன் என்று  வீரம் பேசினார்.  பசங்களுக்கென்ன நன்றி உணர்ச்சியா இருக்கு?  தலைமுறை மாறிய தவறுகள்...! ஐம்பது லட்சம் கொடுத்து வீடு வாங்கியது ஒரு விலையாகவே தெரியவில்லையே அவர்களுக்கு? இப்பத்தான் எல்லாத்தையும் கோடில பேசறாங்களே...!

      பக்கா ஏரியாப்பா இது. இன்னும் ரெண்டு வருஷத்துல தண்ணிக் குழாய், பாதாளச் சாக்கடை எல்லாம் வந்துடப் போறது.   ரெயில்வே ஸ்டேஷன், பஸ்-ஸ்டான்டு, அத்தனையும் பக்கம். குறிப்பா இங்கயிருந்து எல்லா ஐ.டி. ஆபீஸ்களும் நார்மலான தூரம்தான். மெயின் ரோடுல போய் நின்னா எல்லா கம்பெனி பஸ்ஸூம் இந்த வழியாத்தான் போறது வருது. இந்த வசதி வேறே எங்கயும் கிடைக்காது....தெரிஞ்சிக்கோ....நீ நல்ல இடமாப் பார்த்துத்தான் வாங்கியிருக்கிறே...எதுக்கு அநாவசியமாக் குறைப்பட்டுக்கிறே.... சமாதானம் சொல்றானாம் அப்பனுக்கு....!

      ன்ன....உங்களைத்தானே....! - சத்தம் கேட்டுத் திரும்பினார்.   இங்க வாங்கோ....என்று முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு அழைத்தாள் சுசீலா.   என்ன என்றவாறு போய் நின்றார். எதற்காக இத்தனை எள்ளும் கொள்ளும்?

      அங்க பக்கத்துல போய் நின்னுண்டு என்ன கொஞ்சிண்டிருக்கேள்? ஈஷிக்காதீங்கோ...  எம்புட்டு நேரம் ஒட்டிண்டு வேடிக்கை பார்க்கணும்....தள்ளி நின்னுண்டு சொன்னாப் போறாதா? ஏதாச்சும் வியாதி வெக்கை வந்து வைக்கப் போறது......இங்கயே இருந்தமேனிக்கே சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கோ....இல்லாட்டா சீக்கிரம் சரி பண்ணுப்பான்னுட்டு சட்டுன்னு வந்து குளிக்கிற வழியப் பாருங்கோ...சம்ப்ல தண்ணி குறைவா இருக்கு...லாரி வந்தாத்தான் ஆச்சு...! அவனோட என்ன உறவாடல்...வள வளன்னு.? ஊருல எத்தன குழி தோண்டினேன்னு கேட்டாகணுமா? கோபமாய் நொடித்தாள் சுசீலா.

      சுந்தரத்திற்கு சங்கடமாயிருந்தது அவளின் பேச்சு. அப்டிச் சொல்லாதறீ...எவ்வளவு கஷ்டமான வேலை தெரியுமா? க்ளீன் பண்றேன்னு அவன் வந்து நிக்கிறதே பெரிசு....உறவாடல் அது இதுன்னு அவன் காது கேட்கப் பேசறியே? தகுமா?  இந்த வேலை பண்றவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். அதைத் தெரிஞ்சிக்கோ...! குத்தி விட்டு, தோண்டி எடுத்து வெளில போட்டு, சரி பண்றது என்ன சாதாரணமா?.நாத்தம் கொடலப் பிடுங்கும்...தெரியுமில்ல?  ஆழமான தொட்டில க்ளீன் பண்ண இறங்கி, எத்தனை பேர் விஷ வாயு தாக்கி இறந்து போயிடறாங்க... அவுங்க உயிர் மட்டும் என்ன அவ்வளவு மலிவாப் போச்சா? நம்மள மாதிரி மனுஷாள்தானே. அவாளும் ?..  பாவம்டீ.....ரெண்டு வார்த்தை அவனோட சகஜமாப் பேசினாத்தான் என்ன? குறைஞ்சு போயிடுவோமா? அப்படி நாம என்ன உசத்தி, அவனென்ன தாழ்த்தி? ? தெய்வப் பிறவிகளா? அநாவசியமா ஒருத்தர் மனசு சங்கடப் படுற மாதிரிப் பேசக் கூடாது...! தப்பாக்கும்...ஆகாத வார்த்தை சொல்லாதே....! அடுக்காது. செப்டிக் டாங்க் கழிவு எடுக்கிறது என்ன அத்தனை ஈஸியாப் போச்சா உங்களுக்கு? இன்னைக்கு சாயங்காலம் போய் பாதுகாப்புக்கு ஊசி போட்டுக்குவான் அவன். அது தெரியுமா உங்களுக்கு? அப்பத்தான் நாளைக்கு ஏதாச்சும் இப்டி வேலை வந்தா அவன் தொடர முடியும்...! செத்துப் பிழைக்கிற பிழைப்புடீ....சாதாரணமா நினைச்சிடாதே...! அது பாவமாக்கும்....!!

      முறைத்துக் கொண்டே படியேறினாள் சுசீலா. இது என்ன சொன்னாலும் கேட்காது.....அஉற்றிணையில் அவள் முனகிக்கொண்டே போனது இவருக்குக் கேட்கத்தான் செய்தது. ஆள் நேரடியாய் நின்று, இருந்து பார்த்து செய்கிறாரே என்கிற நன்றியில்லையே? ஏன்...இவ பையனை வந்து நிக்கச் சொல்றது? சுருங்கிப் போயிடுவானோ? அது சரி....மத்த வீட்டுக்காரன்களுக்கே எதுவும் அக்கறை இல்லை...இவளைச் சொல்லி என்ன செய்ய? - நொந்து கொண்டார் தனக்குத்தானே...! ஏழு வீட்டில் ஒருவன் கூட தலை நீட்டவில்லையே? ஆட்கள் இருக்கிறார்களா, இல்லையா என்கிற அளவுக்கு கமுக்கமாய் கிடக்கிறார்களே....! சொந்த வீடு வச்சிருக்கிறவனுக்குத்தான் அக்கறை....எங்களுக்கென்ன வந்தது?

      சார்....வந்து பாருங்க..... - குரல் கேட்டு.....நகர்ந்தார் சுந்தரம். அடுத்தடுத்த  சதுரங்களைத் திறந்து குத்தி விட்டு, அடைசல் சரி பண்ணி,  வாளியில் தண்ணீர் பிடித்துப் பிடித்து நாலு குழிகளிலும் அடித்து ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தான் உச்சிப்புளி.  ஏற்றுக் கொண்ட வேலையில் அவனது கவனமும், அதைத் தெளிவுறச் செய்வதில்  இருந்த தீவிர ஈடுபாடும்....இன்னொரு ஆளைக் கூடக் கூட்டி வந்திருக்கலாம் என்றுதான் அவருக்குத் தோன்றியது. கூலி அதிகமாகும்...இதுக்கே முக்கி முனகுகிறார்கள்...! நாங்க ரெண்டே பேர்தான். காலைல ஒரு முறை கக்கூஸ் போனா முடிஞ்சிது. அதிலும் பாதி நாள் நாங்க ஊர்லயே இருக்கிறதில்லை...பிறகு எதுக்கு சம பங்கு கொடுக்கணும்? இப்படியான ஆராய்ச்சியும் கேள்வியும் வேறு. மனிதர்கள் மனசு எப்படியெல்லாம் வேலை செய்யும், சிந்திக்கும் என்று யாராலுமே கணிக்க முடியாது. பீத்த புத்தி என்பது பலருக்கும் பொது போலும்?

      சாலையில் கழிவு நீர் லாரிகள் போய்க் கொண்டிருந்தன. இந்தப் பகுதியில் இது சகஜம். சதா ஒன்று கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கும். ஏதாவது ஒரு அபார்ட்மென்டில் சுத்தம் நடந்து கொண்டேயிருக்கும். நல்ல பைசா. கைல காசிருந்தா நாமளே இப்டி நாலு லாரி வாங்கி விடலாம் போல்ருக்கே...என்று தோன்றும். இன்ன வேலையை இவனிவன்தான் செய்யணும்னு ஏதேனும் சட்டம், வரைமுறை இருக்கா என்ன?

      சார்....எல்லா வீட்லயும் டாய்லெட் பேசினைச் சுத்தம் பண்ணச் சொல்லுங்க...ஆளுக்கு ஒரு வாளித் தண்ணிய அடிச்சி ஊத்தி விடச் சொல்லுங்க.....வழில அடைச்சிருந்ததுன்னா அதுவும் கீழே இறங்கி ஓடி வந்திடும்.....-அவன் சொற்படி அங்கிருந்தபடியே ஒவ்வொரு வீட்டுக்கும் ஃபோன் போட்டார் சுந்தரம். இந்த வயசான காலத்தில் நல்ல வேலை தனக்கு. அடுக்ககத்தில் வீடு வாங்கினதுக்கு இதுவும் வேணும்...இன்னமும் வேணும்...!

      எல்லாம் சுத்தமாகி, நான்கு சதுரங்களையும் மூடியபிறகு சுற்றிலும் டெட்டால் கலந்து தெளித்து, பிறகு ப்ளீச்சிங் பவுடரைத் தூவச் சொன்னார்.  கழுவி விட்ட இடங்களிலும் தண்ணீர் போகப் பெருக்கி,  பரவலாகப் பவுடர் தூவி எந்த துர் நாற்றமும் இல்லாமல் ஆக்கி கை கால்களைக் கழுவிக் கொண்டு வந்து நின்றபோது,  கூலியைத் தயாராய் நீட்டினார் சுந்தரம்.

      வாங்கி எண்ணிப் பார்த்தவன்...திருப்தியோடு...ரொம்பச் சந்தோசம் சார்....என்று பெரிய கும்பிடாய்ப் போட்டான். இங்கே யார்ட்டயும் எதுவும் சொல்லிக்க வேண்டாம்...தெரிஞ்சிதா....? என்றார் சுந்தரம்.

      ஏதோ புரிந்து கொண்டவனாய் சரிங்...சார்....என்று சல்யூட் அடித்தான். வர்றன் சார்...ஏதாச்சும் வேலைன்னா  கூப்டுங்க.. நானே வர்றேன்....என்றவாறே நகர்ந்தான். அதுவே அவன் திருப்தியை உணர்த்தியது.

      விறு விறுவென்று மாடிக்கு ஏறினார் சுந்தரம். அறுபது தாண்டிய வயதிலும் தன்னால் தடங்கலின்றி ரெண்டு மாடி ஏற முடிந்திருப்பதை எண்ணி மனம் சந்தோஷப்பட்டது.

      ப்பா....யப்பா....யப்பா.....? பையன் அலறுவதைக் கண்டு, என்னடா...என்னாச்சு? என்று பதறிப் போனார்.  நாலடி தூரத்தில் எதற்கு இப்படிக் கத்துகிறான்?  ஏண்டா....? என்றார் பதிலுக்கு.    

      அப்டியே பாத்ரூமுக்குள்ள நேராப்  போயிடு....இங்க எங்கியும் உட்கார்ந்துடாதே....! எல்லாத் துணியையும் நனைச்சிடு....குளிச்சிட்டு பிறகு உறாலுக்குள்ள வா....நீ உள்ளே நுழைஞ்சவுடனேயே கப்பு அடிக்கிறாப்ல இருக்கு...எனக்கு குமட்டுது.....

      ஏண்டா..படுபாவி...  என்னடா இப்டிச் சொல்றே....? ஒரு வாய் காப்பி சாப்டுட்டுப் போறேண்டா....இவ்வளவு நேரம் அங்க கால் கடுக்க நின்னிருக்கேன்ல....? கண்காணிச்சிருக்கேன்ல...டயர்டா இருக்குடா....?

      போய்...நாலு சொம்பு படக்குன்னு தலைல விட்டுண்டு வாங்கோ...அப்புறம் காப்பி குடிக்கலாம்....அந்த அநாச்சாரத்துல போய் நின்னுட்டு, அதே வாயோடயும், கையோடயும் காபி வேறே ஊத்தணுமா...?...போங்கோ...சடார்னு போயிட்டு வாங்கோ.....இம்புட்டு நேரம் ஜன்னல் வழியா வந்த சுகந்த மணம்  பத்தாதா? யப்பாடா...என்னா நாத்தம்? - பையனுக்கு சப்போர்ட்.

      ஜன்னல சாத்திக்க வேண்டிதானே...யார் வேண்டான்னா? நா என்னடீ பண்ணினேன்...வேடிக்கைதானே பார்த்தேன்....அதுக்கே ஒட்டிண்டிடுத்தா? நன்னாயிருக்குடி உங்க ஆச்சாரம்....? எனக்கே விலக்கா....? ஒரு வாய் காபிக்கு இதுவா பேச்சு? ரொம்ப அநியாயம்டீ....? என்றவாறே தன் அறைக்குள்ளிருக்கும் பாத்ரூமுக்குள் நுழையப் போனார் சுந்தரம்

      பையன் அவரின் புத்தக அலமாரிப் பக்கம் ஒளிந்தவன் போல்  நின்று தீவிரமாய்ப் பார்த்துக்  கொண்டிருந்தான்.

      இந்த மாதிரிக் கண்ட கண்ட புஸ்தகத்தையெல்லாம் படிச்சிட்டுத்தான் அப்பா இஷ்டத்துக்குப் பேசறார்...தெரிஞ்சிதாம்மா....இங்க வந்து பாரு...என்னென்ன புக்ஸெல்லாம் வரிசை கட்டியிருக்குன்னு....அவருக்குன்னு தனி டேஸ்ட்டு.....கொடி பிடிச்சிண்டு....!

      அதுநாள்வரை தன் அறையின் அந்த அலமாரிப் பக்கமே எட்டிக் கூடப் பார்க்காத, தலையைக் கூடத் திருப்பி நோக்கியிராத தன் மகன், அன்று அவன் மனது சொன்ன பாதுகாப்பு அவசியம் கருதி, அங்கு வந்து புகுந்து கொண்டதைக் கவனித்தார் சுந்தரம்....

      இன்னிக்குத்தான் உனக்கு இந்தப் புஸ்தக வாசனையே அடிச்சிதாக்கும்? ஒரு பார்வை பார்த்தவுடனே எல்லாமும் தெரிஞ்சி போச்சா...? பேஷ்... வெறுமே.... பார்த்திட்டுச் சொல்லாதே... எதையும்.....! .படிச்சிட்டுச் சொல்லு, புரியுதா...?  - என்றவாறே நிதானமாய் பாத்ரூமுக்குள்  குளிக்க நுழைந்தார்.

                              -----------------------------------------------------

 

நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி பேசும் புதிய சக்தி - மார்ச் 2021 கட்டுரை

நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி     கட்டுரை -    உஷாதீபன், 





  சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற அதீத ஆசை ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமானதா? அது பெண்களுக்கும் உண்டு. அதிலும் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்த ஆசைகள்தான் அதிகம். சின்னச் சின்ன ஊர்களில் கோயில் திருவிழாக்களில், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் என்று நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பலருக்கு எப்படியாவது சினிமாவுக்குள் நுழைந்து விட வேண்டும் என்கிற வெறியே இருந்தது அந்தக் காலத்தில். இந்த ஆசையில் அதிகமாக வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் ஆண்கள்தான் என்று சொல்லலாம். பெண்கள் அப்படி ஓடி வந்ததாகக் கேள்விப்பட்டதில்லை. செய்தியாகவும் வந்ததில்லை.  எப்படியாவது பிழைத்துக் கொள்வோம். சின்ன வேலைகளில் இருந்து கொண்டு, அரைப் பட்டினி, கால் பட்டினி என்று கழித்துக் கொண்டாவது முயற்சி செய்வோம் என்று இல்லாமையின் கோரப் பிடியில் சிக்கி, தளர்ந்து விடாமல்  முனைந்த பலர் நட்சத்திரமாகி இருக்கிறார்கள். இந்தக் காலத்திலும் அந்த ஆசை  இல்லாமலா இருக்கிறது? ஐம்பதுகள், அறுபதுகளிலேயே சினிமாவில் நடிப்பதற்கென்று வீட்டை விட்டு ஓடி வந்து பைத்தியமாய் அலைந்தவர்களைப் பற்றிய கதைகள் அப்பொழுதே எழுதப்பட்டிருக்கிறது. எங்கேனும் ஒரிரு யதார்த்தம் இல்லாமல் அம்மாதிரி எழுதப்படுவது சாத்தியமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.                                      ஆனால் சென்னையில்தான் உறவினர் இருக்கிறாரே அங்கு சென்று, பிறகு சினிமாவுக்காக முயற்சி செய்து எப்படியும் அதில் நுழைந்து விடலாம் என்கிற ஆசையோடு, நம்பிக்கையோடு, உறுதியோடு வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி வந்தவர் இவர். தன்னால் நன்றாக நடிக்க முடியும், தன் நடிப்பின் மூலம் மக்களைத் திருப்திப்படுத்த முடியும், தொடர்ந்து வாய்ப்புக்களைப் பெற முடியும் என்கிற அசாத்தியமான தன்னம்பிக்கையோடு வந்து வெற்றி கண்டவர்.                      வெடுக்...வெடுக்....என்ற வசன உச்சரிப்பு...அதற்கேற்ற கச்சிதமான கண்ணசைவு, சிரிப்பு, தலையாட்டல், உடலசைவு இவையெல்லாவற்றோடு ஒத்துழைக்கும் நடிப்பு என்று தன்னோடு நடிப்பவர்களிலிருந்து  தன்னை வேறுபடுத்தி, நினைத்துப் பார்த்து ரசிப்பதுபோல் பண்ணியவர். இவரது  நடிப்பாகத் தெரியவில்லையே இவர் இயல்பே இதுதானோ என்று நினைக்கும் வண்ணம் இயற்கையாக அமைந்திருந்தது முத்துலட்சுமியின் நடிப்புத் திறமை.                                    நடிப்பவர்களுக்கு குரல் வளம் என்பது முக்கியமாகக் கைகொடுக்க வேண்டும். ஆண்கள் என்றால் கணீரென்ற அந்த கனத்த குரலும், பெண்கள் என்றால் துல்லியமாய் வெண்கலத்தில் அடித்ததுபோல் பளீரென்று இருப்பதான சிலீர் குரலும், வசன உச்சரிப்பில் “ளகர“ “ழகர“ “லகர“ ங்கள் பிறழாது சரளமாய் ஏற்ற இறக்கங்களோடு பேசும் திறமையும் ஒரு நடிகைக்கு மிகவும் முக்கியமான லட்சணங்களாய், அது இவருக்குப் பெரிய ப்ளஸ்ஸாகி, யாரும் குறை சொல்ல முடியாத அளவில் தொடர் வாய்ப்புக்களைக் கொண்டு வந்து சேர்த்தது.  பெண் நடிகைகளின் குரல்களில் குறிப்பாகக் கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது போலல்லாமல், கேட்ட மாத்திரத்தில் சட்டென்று புரிந்து கொள்ளும் வண்ணம்,  இவர்தானே என்று பெயர் சொல்லும் வகையில் அமைந்த அடையாளமான குரல் டி.பி.முத்துலட்சுமியினுடையது.                          டி.பி. முத்துலட்சுமி.  பெயரே மனதுக்கு மிகவும் நெருக்கத்தை உண்டுபண்ணுகிறதுதானே? ஏதோ பக்கத்து வீட்டுப் பெண் போல.... நடிப்பும் அப்படித்தான்.  அந்தப் படத்தின் கதைக்கென்று  தனி காரெக்டர் செய்வதுபோலவே தோன்றாது. ..சாதாரணமாய்ப் பேசி விட்டுப் போவதாய்த்தான் தோன்றும்...அப்படி அவர் பேசுவதும், உருண்டு குண்டான உடம்பை வைத்துக் கொண்டு டுடுக் டுடுக் கென்று வெட்டி வெட்டி நடிப்பதும் நமக்கு அவர் மேல் இயல்பாய் ஒரு பிரியத்தை ஏற்படுத்தும். சொல்லும் வசனங்களை அவரது நடிப்பு அப்படி அர்த்தப்படுத்தும்.  நகைச்சுவை நடிகைகள் படத்துக்குப் படம் வருவார்கள். எல்லா கதாநாயக, நாயகி நடிகர், நடிகைகளோடும் நடித்திருப்பார்கள். நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாகவும் வந்து களை கட்டுவார்கள். ஆனால் அந்தப் படத்தில் அவர் இருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல் அவரைத் தனித்து ஞாபகப்படுத்திக் கொள்வதுபோல் காட்சிகளுக்கான அவசியம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் இவரை ஞாபகப்படுத்துவதுபோல்  நகைச்சுவைக் காட்சிகள் அமைந்தது இவருக்குத்தான் என்றே சொல்லலாம். நான் சொல்வது ஐம்பது, அறுபதுகளிலான கருப்பு வெள்ளைப் படங்களில். ராஜாராணிக் கதைப் படங்களிலும், சமூகப் படங்களிலும் இவருக்கென்று என்றும், இன்றும் கேட்பது போல், பார்ப்பதுபோல் பிரத்தியேகமாகப் படங்கள் அமைந்து விட்டன என்பதையே...!         அம்மா...வெள்ளையம்மா....வந்திருச்சுடியம்மா உன் காளைக்கு ஆபத்து.....என்று மைதானத்தில் சீறிப்பாயும் அந்த முரட்டுக் காளையை அடக்க வெள்ளையத்தேவன் (ஜெமினிகணேசன்)  களம் இறங்கியதும், முத்துலட்சுமி பேசும் அந்த வசனம் பார்ப்போரைப் பளிச்சென்று  சிரிக்க வைக்கும்.   அதற்குள் அவசரப்படாதே...! என்று பத்மினி (வெள்ளையம்மாள்) அலட்சியமாக அதை மறுக்க, பிறகு காளையை அடக்கிய பின் வெள்ளையத்தேவனின் வீரத்தில் மயக்கம் கொண்டு காலரியை விட்டு பள்ளம் இருப்பதை அறியாமல் தன்னை மறந்து நகர்ந்து கீழே இறங்க யத்தனிக்கும் நேரம்,  ம்...ம்...ம்....பார்த்து...பார்த்து....அது சரி....என்று கீழே விழுந்து விடாமல் வெள்ளையம்மாளைத் தடுக்கும் அந்தக்      காட்சி மிகவும் ஸ்வாரஸ்யம். உண்மையிலேயே அவர் பெரிய வீரர்தானடி....என்று பத்மினி சொல்ல.அவரா...எவரு? .. என்று கேட்க, ...இனிமே பேரச் சொல்ல முடியுமா...அவுரு...இவரு...அத்தான்... அப்டித்தான் அந்தம்மா வாயிலிருந்து வரும் என்று கேலி செய்ய....பத்மினி அந்த இடத்தில் இருக்கையில் அந்தக் காட்சிதான் எப்படி அழகுபட்டுப் போகிறது?   வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் வைத்தியர் வேஷம் போட்டுக் கொண்டு பத்மினி, ஜெமினிக்கு சிகிச்சை செய்ய ஓடி வர, அழைத்துக் கொண்டு வரும் முத்துலெட்சுமியை தனக்கான ஜோடியாக நினைத்து ஆசைப்பட்டு,  அவரை மடக்கப் பார்க்கும் ஏ.கருணாநிதியும்,இங்க கும்பிட்டாத்தான் உள்ளே அனுமதி என்று  அவர் பண்ணும் கிராக்கியும் கூடிய  நகைச்சுவை காட்சிகள் என்றும் ரசிக்கத் தக்கவை. அந்தப் பொல்லாத காளை அவரை ரொம்பவும் காயப்படுத்திவிட்டதடி...என்று வெள்ளையம்மாள் வருந்த...அப்டியா...உனக்கு வேண்டியவருன்னு அதுகிட்டச் சொல்லி வச்சிருந்தீன்னா...சும்மா இருந்திருக்கும்...என்று முத்துலட்சுமி கிண்டலடிக்கும்  அந்தக் காட்சியும்...இது சொல்றத நம்பிட்டு இப்படி வருத்தப்படுறியே...என்று கருணாநிதியை இடிக்கும் காட்சியும் படத்தில் எந்த இடத்திலும் தொய்வு விழக் கூடாது என்று கவனமாய் எடுக்கப்பட்ட  ரசனை மிகுந்த காட்சிகளாகும்.                நடிப்பு என்பது யாரிடம்தான் இல்லை. ஒருவருக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவருவதுதான் முக்கியம். ஒருவர், தன் திறமையைத் தானே உணர்ந்து முனைவதுதான் சிறப்பு. டி.பி.முத்துலட்சுமிக்கு அந்த ஆர்வம் இருந்தது. ஆசையும் இருந்தது. முயற்சியும் கை கொடுத்தது.  படங்களும் கை கொடுத்தது.            

1931 ல் தூத்துக்குடியில் பிறந்த இவர் அதன் பின்பு ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகள் கழித்துத்தான் திரையுலகத்திற்குள் நுழைகிறார். நகைச்சுவை நடிகையான குமாரி சச்சுவுக்கு குழந்தை நட்சத்திரமாகவே திரையுலக வாய்ப்புக்கள் தேடி வந்து நடிப்புலகமே நிலைத்து விட்டதுபோல், எல்லோருக்கும் அமைவதில்லையே...!    முத்துலட்சுமியின் நடிப்புலகப் பிரவேசம் அவரது மாமா மூலம் நிகழ்கிறது. இயக்குநர் திரு.கே.சுப்ரமணியத்திடம் இருந்த திரு.எம். பெருமாள் என்பவர்தான் முத்துலட்சுமியின் மாமா.  அவரிடம் சென்று நிற்க...அவர் இவருக்கு நடனமும், பாட்டும் கற்றுக் கொடுக்கிறார். எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகாவில் குழுவோடு சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு வந்து சேருகிறது.  அதன் பிறகுதான் மாடர்ன் தியேட்டர்ஸின் பொன்முடி பட வாய்ப்பு கைக்கு வந்து சேருகிறது. 1950 களில் திரையுலகில் காலடி எடுத்துக் வைக்கும் இவர், பொன் முடி படத்தில் நடித்து பிறகு படிப்படியாக முன்னேறி 2008 வரை தனது திரையுலகப் பயணத்தைத் தொடர்கிறார். சுமார் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்ட புகழ் பெற்ற நடிகையாக டி.பி.முத்துலட்சுமி பவனி வந்தார். 1951ல் அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு படத்தில் கதாநாயகன் டி.கே.சண்முகம் அவர்களுக்கு மனைவியாக  பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.                                     திரும்பிப்பார் படத்தில் தங்கவேலுவுக்கு மனைவியாக வந்து ஊமையாக நடித்த இவர், அவரோடு சேர்ந்து அறிவாளி படத்தில் போட்ட போடு, அடித்த கொட்டம் யாரால்தான் மறக்க முடியும். அந்தப் படத்தில் வாய் பேசாத ஊமை என்றால், அறிவாளி படத்தில் கல்வியறிவில்லாத,  ஒன்றுமறியாத வெள்ளந்தியான சேரிப் பெண்ணாக  வந்து தங்கவேலு இவர் மேல் பிரியம் கொண்டு மணந்து, பிறகு அவர் சொல்வதையெல்லாம் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டு தப்பாகவே  செய்து, அதையெல்லாம் சரி சரியென்று தங்கவேலு  தலையிலடித்துக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து சகித்துக் கொண்டு  நகரும் காட்சிகள் விழுந்து விழுந்து சிரித்து வயிறு புண்ணாக வைக்கும். அந்த வெகுளித் தனம், ஒன்றுமறியாத பாவம் தத்ரூபமாய் இருக்கக் கண்டதும்தான் படம் முழுவதுமான நகைச்சுவைக் காட்சிகளின் வெற்றிக்கு ஆதாரம். ஏன், அறிவாளி படத்திற்கே ஆதாரத் தூண் அதுதான் என்றே சொல்லலாம்.                                                     ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் அதுவரை எந்தப் படத்திலும் இல்லாத வகையில் சிறப்பாக அமைந்து விட்டால் அது படத்தின் வெற்றிக்கே மிகவும் பக்க பலமாய் அமைந்து விடும் என்கிற உண்மை அறிவாளி போன்ற திரைப்படங்களுக்கு பக்காவாகப் பொருந்தும்.   இந்தப் படத்தில் முத்துலட்சுமியின் பெயர் தங்கலட்சுமி...தங்கவேலுவின் பெயர் முத்துவேலு....பெயர் வைத்திருப்பதைப் பார்த்தீர்களா? ஏன்...இப்டி வச்சிக்கலாமே...என்று சுலபமாய்த் தேர்வு செய்தது போலிருக்கும்.  அது ஒரு பிரச்னையே இல்லை...கதையும் காட்சிகளும்தான் முக்கியம் என்று கருத்தாய் திரைப்படங்களை  உருவாக்கிய காலம் அது.                          முத்துலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டு கொடைக்கானல் உறனிமூன் சென்றிருப்பார் தங்கவேலு. அங்கு இவர்களைப் போன்றே புது மணத் தம்பதியர் அவரைப் பார்க்க வருவார்கள். அவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தங்கலட்சுமிக்கு சொல்லிக் கொடுப்பார் முத்துவேல்.   இதென்ன கண்ணுக்கு கீழே?...மையா...நீ எழுதிக்கிட்டியா...இல்லீங்களே...நீங்கதான எழுதினீங்க......ஓகோ...கொஞ்சம் அதிகமாப் போச்சு போலிருக்குது..பரவால்ல...இருந்தாலும் அழகாத்தான் இருக்குது....அது கெடக்கட்டும்....நீ முகத்துலல்லாம் மாவு பூசிக்கிட்டு இங்கயேயிரு... நான் அங்க போய்   இருந்துக்கிட்டு...ஒரு பெல் அடிப்பேன்....இதோ வந்துட்டேங்க....அப்டீங்கணும்...ம்...ம்...ரெண்டு பெல் அடிப்பேன்...இங்கருந்து கடகடகடன்னு வந்து அங்க நின்னுடணும்....சரி.....மூணு பெல் அடிப்பேன்....உட்கார்ந்துடணும்....ம்...நாலாவது மணி அடிச்சா? ன்னு கேட்க....ஒரு முறை முறைத்து...சோத்துக்குஓடணும்...நாலாவதுமணியா...?பெல்லு...பெல்லு.....ம்...பல்லு....ம்ம்....உடைச்சுகோ.........கல்லு கொண்டாந்து தாரேன் உடைச்சுக்கோ.....பல்லு இல்ல...பெல்லு...பெல்லு........ம்...! வல்ல....சரி...அப்புறம் சொல்லிக்கோ....தயாராயிருக்கியா....என்று விட்டு உறாலுக்குள் அவர்களை வரவேற்கச் சென்று அமர்வார்...வந்தவர்கள் புது மணத் தம்பதிகளான உங்களைப் பார்த்தி்ட்டுப் போகலாம்னு வந்தோம் உங்க மனைவியை வரச் சொல்லுங்களேன்...என்க...அதுக்கென்ன கூப்பிட்டாப் போச்சு....என்று ஒரு பெல் அடிப்பார்...திடு திடுவென்று தங்கலட்சுமி ஓடி வந்து டபால் என்று நிற்க....முகத்தில் பூசப்பட்ட பௌடர் அழிக்காமல் அப்பியபடி இருப்பதைப் பார்த்து, சார்...அம்மா என்ன உள்ளே சுண்ணாம்பு அடிச்சிட்டிருந்தாங்களோ? என்று வேலைக்காரப் பையன் கேட்க.. டேய்...போடா...என்று இவர் விரட்ட...வந்தவர்கள் சிரித்து விடுவார்கள். .கிணி...கிணி...கிணி....என்று தொடர்ந்து பெல்லை அடிக்க....பயந்து போய் முத்துலட்சுமி உள்ளுக்குள் ஓடி விடுவார். ...                                                                          சிரிக்காத தம்பி......என்று சொல்லி வள்ளுவர் அழைத்தவுடன் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த வாசுகி...தண்ணீர் வாளியை அப்படியே பாதியில் விட்டு விட்டு ஓடி வந்து நின்ற அந்தக் கதையைச் சொல்லி சமாளிக்க...பார்த்தியா....எப்டி உடனே வந்து நிற்கிறாங்கன்னு...நான் உன்னை ஆயிரம் தடவை கூப்பிட்டு ஆயிரத்தி ஒண்ணாவதா நான் எழுந்து வந்து உன்னைப் பார்க்க வேண்டிர்க்கு...என்று வந்தவர் தன் புது மனைவியிடம் சலித்துக் கொள்வார். அவர்களும் இனிமே சரியா நடந்துக்கிறேங்க...என்று பவ்யமாய் சொல்ல....இப்படி ஒவ்வொரு காட்சியும் அறிவாளி படத்தில் தங்கவேலுவின் சமாளிப்பாகவே தொடரும். படத்தின் பெயரும் அறிவாளி. கதாநாயகனின் சார்பான கதையும், நகைச்சுவைப் பாத்திரத்தின் சார்பான காட்சிகளும் ஆக இரண்டுமே அறிவுபூர்வமானவைகளாக அமைக்கப்பட்டிருக்கும். அறியா மனைவியின் அத்தனை தவறுகளுக்கிடையிலும் அவள் மீது அவர் வைத்திருக்கும் அன்பு மாறவே மாறாது. விரும்பிக் கல்யாணம் பண்ணியவளை...எவ்வளவு குறை இருந்தாலும் சமரசம் செய்து கொண்டுதான் போயாக வேண்டும் என்கிற பாடத்தை  அழுத்தமாய் உணர்த்தும் காட்சிகள் இவை.                     அறிவாளி படத்தின் நகைச்சுவைக் காட்சிகளுக்கென்றே தனியே ஒரு கட்டுரை எழுதலாம். சேரிப் பெண்ணின் மீது மனதைப் பறிகொடுத்து மணந்து கொண்டுவிட்டு, அவரை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் தங்கவேலு என்ன பாடுபடுகிறார் என்பதற்குப் பொருத்தமான நச்சென்ற காட்சிகள் அவை. ஆனால் ஒன்று. எதிலும் அவர் தன்னைத்தான் சலித்துக் கொள்வாரேயொழிய மனைவியைத் திட்டவே மாட்டார். அவளின் அறியாத்தன்மையை அப்படியே உணர்ந்தவராய் எதிர்நோக்குவார்.                                                   வீட்டினுள், இருட்டாருக்குதே...என்று புரியாமல்  தவித்து நின்று கொண்டு  கொட்டுக் கொட்டென்று நிற்கும் மனைவியைப் பார்த்து. நுழையும் முத்துவேல்...தங்கலட்சுமி...எங்கயிருக்கிற? என்று கத்த, என்னாங்க...நீங்க எங்க இருக்குறீங்க...? என்று இவர் கேட்க.....ஏன் விளக்கேத்தல...? அதையேன் கேட்குறீங்க...அந்தப் பையன் எங்கயோ போயிட்டான்... இந்த சீமெண்ணைப்  புட்டிய எங்க வச்சேன்னு தெரில..விளக்கேத்த முடில...வீடெல்லாம் ஒரே இருட்டா இருக்குது....அதான் தவிச்சிட்டிருக்கேன்....என்று தங்கலட்சுமி சொல்ல..சீமெண்ணப் புட்டியா...? உறய்யோ..? என்று சுவிட்சைப் போட லைட் எரியும்..  அட....பரவால்லியே....? என்று இவர் வியந்தவாறே...நா இதத்தான் தேடிட்டிருந்தேன்...என்றவாறே வெத்தலை பாக்குத் தட்டை எடுப்பார்...நாந்தான் ஏற்கனவே உங்கிட்ட சொல்லியிருக்கனே...கதவுக்குப் பின்னால சுவிட்சு போர்டு இருக்குது.ன்னு.....?  ஏன் சீமெண்ணப் புட்டி கேட்குறே...?  அய்யய்யோ...நா மாட்டேன்...அதத் தொட்டாப் புடிச்சிக்குமாம்ல...? என்க...ம்...ஒம்மேல ஆச...அது புடிச்சிக்குது...கரன்ட் வர்ற கம்பி இருக்கே...அதத் தொட்டாத்தான் புடிச்சிக்கும்....இது சுவிட்ச்சு...இதத் தொட்டா புடிச்சிக்காது...அப்டின்னா ஆனு...இப்டின்னா ஆஃப்பு....என்று விரலை மேலும் கீழுமாக ஆட்டிச் செய்து காண்பிப்பார். என்னது? ஆனா.....என்றுபுரியாமல்தங்கலட்சுமிகேட்க...ம்...ஆணு..பொண்ணு...ஓர்ப்படியா...கொழுந்தியா...எல்லாம் ஒரு குடும்பமே அங்க இருக்குது...என்று சலித்துக் கொள்வார். ம்ம்...நா...என்னத்தப் பண்ண...அதாவது...அதுக்குப் பேரு என்ன தெரியுமா...என்ன? சுவிட்ச்....என்னது சொச்சியா? ம்...சொச்சி...இடியாப்பம்...ஊத்தப்பம்...முறுக்கு மசால்வடை....என்னா பலகாரம் பேரக் கொண்டு அதுக்கு வைக்கிற...? நீ வா....விவரமா சொல்றேன்....அதுக்குப் பேரு...சுவிட்ச்ச்சு....என்று அழுத்திச் சொல்லிக் கொடுக்க...சூழ்ச்சியா...? என்று இவர் வாயில் நுழையாமல் கேட்க...ம்....சூழ்ச்சி...வஞ்சனை, பொறாமை....இப்டி எல்லாம் இருக்கு இந்தத் தட்டுல...வையி...என்றவாறே வைத்தல பாக்குத் தட்டை வாங்குவார்...                         இப்படி இப்படத்தில் இன்னும் அநேகக் காட்சிகள் உள்ளன. இன்றைய ஸ்பெஷல் என்று மனைவியை பூரி செய்யச் சொல்லிக் கேட்டு...தெரியாது என்று சொல்ல...தெரியாதா...வா...நா சொல்லித் தர்றேன்...என்று இவர் உட்கார்ந்து...ஒரு பெரிய்ய்ய அண்டாவ எடுத்துக்கணும்...என்று ஆரம்பிக்க...அதான் எனக்குத் தெரியுமே...அதான் எனக்குத் தெரியுமே...என்று மாவு எடுக்க...பிசைய என ஒவ்வொன்றுக்கும் முன்னமே தெரியுமே என்று பாட்டுப் பாட...எரிச்சல் அடைந்து...எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து நல்ல்ல்லாக் கலக்கி எடுத்து வை...நா வந்து அதுல குதிக்கிறேன்....என்று கோபப்படுவார். பிறகு அடக்க ஒடுக்கமாக் கேளு...எதச் சொன்னாலும்...அதேன் எனக்குத் தெரியுமே...அதேன் எனக்குத் தெரியுமே..அதென்ன...என்னெத்தத் தெரியும்...?பெரிய்ய்ய...இவ மாதிரி... என்று கடிந்து விட்டு சொல்லிக் கொடுப்பார். இந்த நகைச்சுவைக் காட்சிகள் டணால் தங்கவேலுவுக்கு மட்டும் அமைந்த சிறப்புக் காட்சிகள் அல்ல. டி.பி.முத்துலட்சுமியையும் அகலாது நினைவில்   வைத்திருக்கும் காட்சிகள். அந்த வெகுளித்தனமும், வெள்ளந்தியான பேச்சும், படிப்பறிவில்லா பாமரத்தனமும் அதற்கேற்ப அமைந்த அவரது இயல்பான நடிப்பும்...நம்மால் மறக்க முடியாதவை.                                          இம்மாதிரி காரெக்டர்கள் இருந்தால் இவரைத் தவிர வேறு யாரையும் போடக் கூடாது என்று நிர்ணயித்ததுபோல் இருவர் உள்ளம் படத்தில் இவருக்கு ஒரு வேஷம் அமைந்திருக்கும். நிறையப் பிள்ளைகளைப் பெற்ற தாயாக, காது கேட்காதவராக, வீட்டின் பெரியண்ணன் எம்.ஆர்.ராதாவின் மனைவியாக இப்படத்தில் திறம்பட நடித்திருப்பார்.  கீழே அம்மா, தம்பியுடன் ராதா பேசிக் கொண்டிருக்கையில் குழந்தைகள் குதூகலித்து அம்மாம்மா...அப்பா வந்தாச்சி....என்று ஓடி வந்து முத்துலட்சுமியிடம் சொல்ல...காது கேளாத அவர்....பப்பர்மிட்டா...இல்லடா...ஆயிப் போச்சி...என்று சொல்வார்....பப்பர்மிட் இல்லம்மா...அப்பா வந்தாச்சின்னு சொன்னேன்....அப்பளமா...? சாப்பிடுறப்ப போடுறன்டா அப்பளம்....ஓயாம அப்பளம் சாப்பிடக் கூடாது.....ஐயோ...அப்பளம் இல்லம்மா...அப்பா வந்தாச்சின்னு சொன்னேன்...என்று குழந்தை திருத்துவான்....                 எம்.ஆர்.ராதா அவருக்கு ஒரு உறியரிங் எய்டு வாங்கி வந்திருப்பார். இந்தத் தொல்லை இனிமே உனக்கு இருக்கக் கூடாதுன்னுதான் இத வாங்கியாந்திருக்கேன்...என்று ஆசை மனைவியிடம் சொல்ல....செவிட்டு மிஷினா....என்று காதில் மாட்டிக் கொண்டு, பேசுவதெல்லாம்...அடெ...அடெ...நல்லாக் கேட்குதே....என்று அவர் குதூகலிப்பது இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும்.                                                குழந்தைகளுக்கு அவர் வாங்கி வந்திருக்கும் விளையாட்டு சாமான்களை ஆளுக்கொன்றாகக் கொடுத்து விரட்டும்போது ஆசையாய் கணவனைப் பார்த்து முத்துலட்சுமி நின்றுகொண்டிருக்கும் காட்சி அவ்வளவு அழகாய் இருக்கும்.   தனக்கு என்ன வாங்கி வந்திருப்பான் என்ற எதிர்பார்ப்பு  தொனிக்கும். குழந்தைகளை விரட்டிவிட்டு...அவரைப் பார்த்து...கண்ணம்மா...என்று ஆசையோடு ராதா நெருங்க...வெடுக்கென்று சொடுக்கிக்கொண்டு உள்ளே செல்வார் முத்துலட்சுமி. அஸ்வதி, பரணி....ன்னு எல்லாத்தியும் பார்த்தேன் கார்த்திக் எங்க...தூங்குதா?  என்று அவரைப் பார்த்துக் கேட்க....இவர்...பின்னே கவலையிருக்காதா...? இத்தனை வருஷமா எங்கயிருந்தீங்கன்னே தெரில...? என்று கோபப்பட...ஐயோ...நா ஒண்ணு கேட்குறேன்...நீ ஒண்ணுசொல்றியே...என்று அலுத்துக் கொள்ள...குழந்தைகள்லாம் இன்னும் சாப்பிடல...என்று மேலும்  சொல்வார்.   ராமச்சந்திரா...ராமச்சந்திரா...என்றவாறே அந்த  செவிட்டு மிஷினை எடுப்பார் எம்.ஆர்..ராதா.                                                                  புத்தி சிகாமணி பெத்த பிள்ளை...என்று ஆறாவதாய் வந்த செல்லப்பிள்ளையை முத்துலட்சுமி தாலாட்டும் காட்சியில் ராதாவும் கூடச் சேர்ந்து பாடும் அந்தப் பாட்டு இன்றும் மூத்த தலைமுறை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். நடிகன் என்பவன் எந்தப் பாத்திரத்தையும் திறம்படச் செய்யும் திறன் படைத்தவனாய் இருத்தல் வேண்டும் என்பதற்கு இப்படத்தில் எம்.ஆர்.ராதா ஏற்றிருக்கும் வேஷம் ஒரு முக்கிய உதாரணம். கொடுமையான வில்லனாகவே பார்த்த நமக்கு, கதாநாயகிக்கு அப்பாவாக வந்தாலும் வில்லன்தான் என்று நடித்தவருக்கு, காமெடி கலந்த, குடும்பஸ்தனான வழக்கறிஞருமான வேடம் புதுமையாகவும்,  ரொம்பவும் ரசிக்கும்படியும் அமைந்திருக்கும். இவருக்கு அவர் பொருந்தினாரா அல்லது அவருக்கு இவர் பொருந்தினாரா என்று வியக்கும் வண்ணம் நட்சத்திரத் தேர்வு படத்தின் இயக்குநரை நினைத்துப் பெரிதும் பாராட்ட வைக்கும்.                                                            இலக்கியத்தில் அதிகமாக எழுதிக் குவித்தவர்கள் இருப்பார்கள். ஆனால் எதுவும் பேசப்படாது. ஒன்றிரண்டு அல்லது சில என்று மட்டும் எழுதியிருப்பவர்கள் காலத்துக்கும் நினைவு கூறும் படைப்புக்களாகத் தந்திருப்பார்கள். நிறைய எழுதிக் குவித்தவர்களிடத்திலும் சிலவை மட்டும் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும். முத்துலட்சுமி முன்னூறு படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், எல்லாவற்றிலும் அவர் தன் நடிப்பை இயல்போடு வழங்கியிருந்தாலும், அவரது சில குறிப்பிட்ட படங்கள் மட்டும் திரும்பத் திரும்ப நினைவு கூறத் தக்கவை காலத்துக்கும் மறக்க முடியாதவை. அவையே அவரது கிளாஸிக்ஸ்.                         அன்னையின் ஆணை, தங்கப்பதுமை, கொஞ்சும் சலங்கை, அடுத்த வீட்டுப் பெண், டவுன் பஸ், படிக்காத மேதை, திருவருட்செல்வர், போர்ட்டர் கந்தன், வாழ வைத்த தெய்வம் என்று வெற்றி பெற்ற படங்களிலெல்லாம் இவர் கண்டிப்பாக இருப்பார். எம்.ஆர்.ராதா, தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, டி.எஸ்.பாலையா ஜோடியாய் நடித்தவர்.                                   பழகுவதற்கு இனிமையானவர் என்றும் என்னுடன் சில படங்களில் நடித்தவர் என்றும் ஜெயலலிதாவால் நினைவு கூறப்படுகிறார். 1957 ல் ஆரவல்லி திரைப்படத்தில் சிங்காரவல்லி என்ற பாத்திரமேற்று திறம்பட தன் நடிப்பை வெளிப்படுத்தியவர். 1958 ல் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னனில் நடித்தார். விரைவில் கல்யாணம் நடக்கணும் என்று புருஷன்....புருஷன்...புருஷன்...என்று சதா பூஜை செய்து கொண்டேயிருப்பார். அப்படி ஒரு காரெக்டர் அவருக்கு. உன் பூஜைப்படி, வேண்டுதல்படி உனக்கு சீக்கிரத்திலேயே ஒரு நல்ல புருஷன் கிடைப்பான் என்று எம்.ஜி.ஆர். சொல்லப்போக, அது அப்படியே நடந்தது என்று பெருமிதம் கொள்கிறார். படம் முடியுமுன்பே இந்த நல்ல காரியம் அவர் வாக்குப்படியே நடந்து விட, தம்பதியரை அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். என்கிறது செய்தி. அன்பே வா படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் கலர்ஃபுல்லாக பணக்கார தம்பதியராய் உலா வருவார்.                        எத்தனையோ நடிகர்களுடன் நடித்திருந்தாலும், தங்கவேலு அண்ணனுடன் நடித்ததில்தான் தனக்கு திருப்தி என்று கூறும் இவர், தங்கவேலு பந்தா இல்லாதவர் என்றும், கலைவாணருக்குப் பிறகு தனக்கான நகைச்சுவைக் காட்சிகளைத் தானே அமைத்துக் கொண்டவர் என்றும், மொத்தத் திரைப்பட வாழ்க்கையில் அபசகுனமாய் எங்கும் எப்போதும் யார் பற்றியும், எதுபற்றியும் ஒரு வார்த்தை தப்பாய்ப் பேசாதவர் என்றும் அவர்பற்றிச் சொல்லி கண்கலங்குகிறார். டி.ஆர்.ராஜகுமாரிக்காக சில படங்களில் நடனமும் ஆடியிருக்கிறார் என்றால் இவரது தேவை எவ்வளவு முக்கியப்பட்டிருக்கிறது என்பதும், எல்லோரின் பிரியத்துக்கு உரியவராக விளங்கியிருக்கிறார் என்பதும் புலப்படும். எல்.வி.பிரசாத் டைரக் ஷனில், கலைஞர் கருணாநிதி வசனத்தில், கண்ணதாசன் பாடல்களோடு வெளிவந்த பிராம்மண சமுதாயக் குடும்பக் கதையான தாயில்லாப்பிள்ளை என்கிற  படத்தில் டி.எஸ்.பாலையாவுக்குத் தங்கையாக பிராம்மண மாமியாக வந்து கெடுதல் செய்பவராக இவர் நடித்த நடிப்பு அப்படத்தை இப்பொழுதும் பார்ப்பவருக்கு இவர் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தும். இவரது கணவராக அய்யா தெரியாதைய்யா ராமாராவ் நடிப்பார். இருவரும் அந்தக் கதையின் முக்கியத் தூண்களாக இருந்து படத்தை நகர்த்துவதில் தங்கள் நடிப்பை வெற்றிகரமாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.                                       1931ல் தூத்துக்குடியில் தந்தை பொன்னையா பாண்டியனுக்கும் தாயார் சண்முகத்தம்மாளுக்கும்  மகளாய்ப் பிறந்து தமிழ்த் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய நகைச்சுவை, குணச்சித்திர நடிகை  டி.பி.முத்துலட்சுமி. அவர்கள் கலைமாமணி விருது பெற்றவர். கணவர் பி.கே.முத்துராமலிங்கம்.  இவரது வளர்ப்பு மகன்தான் தற்போது இயக்குநராக இருக்கும் டி.பி.கஜேந்திரன் அவர்கள் என்று அறியப்படுகிறார். விசுவின் உதவியாளராக இருந்து சில வெற்றிப் படங்களைத் தந்தவர் அவர் என்பதை நாம் அறிவோம். கலைவாணர் விருதும் பெற்றவர் என்கிற பெருமைக்குரிய நடிகை  டி.பி.முத்துலெட்சுமி அவர்கள் 29.05.2008 ல் சென்னையில் தனது 77-வது வயதில் காலமானார் என்பதும், கடைசிக் காலத்தில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில்தான் இருந்து கழித்தார் என்பதுமே இம்மாதிரி சிறந்த கலைஞர்களைப் பற்றி நாம் அறியும் அபூர்வச் செய்திகளில் சோகத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.

                          ------------------------------------------------