கணையாழி மாத இதழ் - அக்டோபர் 2025 பிரசுரம்
“சஞ்சலங்கள்”
நான் வரலை – பளீரென்று பதில் சொன்னார் பரணீதரன்.
ஃபோனில் தன் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டிருக்கும். சந்தேகமில்லை. கேட்டிருப்பதென்ன…பொட்டிலறைந்தாற்போல்
அதிர்ந்திருக்கும்.
எதிர்த்தரப்பில் நிலவும் அமைதியே அதை உறுதி
செய்தது.
அப்டிச் சொல்லாதீங்க…நல்லாவா இருக்கு நீங்க
பேசுறது? என்றாள் யாமினி. ஒரு நிமிடம் கழித்து அவள் இப்படிப் பேசியதே தன்னை நிதானப்படுத்திக்கொண்டு
சொல்கிறாள் என்பதை உணர்த்தியது.
எப்படியானால் என்ன…என் முடிவு இதுதான்.
நான் வரலை….. – மீண்டும் தனக்குள்ளேயே ஒரு முறை அழுத்தமாய்ச் சொல்லிக் கொண்டார். அந்த
முனகலும் அவள் காதுக்கு விழுந்திருக்கும்தான். லைன் துண்டிக்கப்பட்டது.
ஜன்னலுக்கு வெளியே கிளையில் நின்ற அணில்
கூர்மையாய் இவரையே நோக்கிக் கொண்டிருந்தது. முகத்தின் இறுக்கத்தை அதுவும் உணர்ந்திருக்கலாம்.
கணத்துக்குக் கணம் விருட் விருட்டென்று ஓடித்
திரியும் அது அப்படி நின்றிருந்ததும் தன்னையே ஸ்திரமாய் நோக்கியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அணிலுக்குக் கூடக் கூர்மை உண்டு போலும்!. அடுத்தாற்போலான தன் அசைவை எதிர்நோக்கியிருக்கிறதோ?
அதுவாவது தன்னைப் பொருட்படுத்துகிறதே?
அவர்கள்? கூட இருக்கும்போது எதையுமே கண்டு
கொள்ளாதவர்கள், கிளம்பி வந்து ஊரில் தன் வீட்டில் தனியே தஞ்சம் புகுந்திருக்கும்பொழுது
எதற்குத் தொல்லைப் படுத்துகிறார்கள்? வீட்டிலுள்ள மூத்தவர்களின் தேவையறிந்து நடக்கத்
தெரியாதவர்கள், கண்காணாதபோது பரிந்து பேசி என்ன பயன்? அப்படியானால் விலகி இருந்தால்தான்
அருமை புரியுமா? சேர்ந்திருந்தால் ச்சீ…ச்சீ..என்று போகுமோ? தனக்கு மட்டும்தான் அந்தச்
ச்சீ…ச்சீ…அவளுக்கில்லை. காரணம் அவளின் தேவை அத்தியாவசியம்.
தான் இல்லாதபோதுதான் தன் தேவை சற்றேனும்
உணரப்படுகிறதா? அல்லது கையோடு காவல் என்கிற கணக்காய் ஒரு ஆம்பளை வீட்டில் கூட இருப்பது
எவ்வளவு பாதுகாப்பு என்று அழைத்து வைக்கிறார்களா…
வாசலில் கட்டிப் போட்டிருக்கும் நாயைப் போல…?
தக்க மதிப்பு மரியாதையில்லாமல் ஓரிடத்தில்
இருந்து விட முடியுமா? சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்? என்று மானமின்றிக் கை நனைக்க முடியுமா? என் துட்டு வேணும்…ஆனால்
நான் வேண்டாம். அதுதானே? பணத்தையும், சேமிப்பையும் பாதுகாத்திருப்பவன், அது அவன் வசம்
இருக்கும்போதே, கைமாறாத போதே, தனக்கான மரியாதையையும், மதிப்பையும் இழந்து விடுவானா?
தன் மதிப்போடு இருந்துதானே ஜீவிக்க விரும்புவான்?
என் தேவை என்று அவர்களுக்கு ஏதுமில்லை.
பணத்தைத் தவிர. எனக்குத்தான் தேவை. ஒராள் கூட
இருந்தால் அவனுக்கான டீ, காபி, டிபன், சாப்பாடு, தண்ணீர்த் தேவை என்று கழிந்தாகணுமே…?
நல்லவேளை…மருந்து மாத்திரை என்று எதுவும் இதுவரை வரவில்லை. தன் இருப்பின்மை அதற்கான
தேவைகளைக் குறைக்கிறதுதானே, அட…மின்சாரம்
எவ்வளவு மிச்சம்? கரன்ட் செலவு வள்ளிசாகக்
குறையுமே? எப்பொழுது வேண்டுமானாலும் சட்டுச் சட்டென்று கழிப்பிடம், பாத்ரூம் போய்க்
கொள்ளலாம்…தங்கு தடை ஏதுமில்லை. நேரத்தை மனதில் கொள்ளாமல் உள்ளே தவம் செய்து விட்டு
வரலாம்…யார் கேட்கப் போகிறார்கள்? வெளில இந்தாள் காத்திருப்பானே என்கிற எண்ணம் வேண்டாம்.
அதற்கான மனப்புழுக்கத்திற்கு ஆளாக வேண்டாம்..
பிறகென்ன…சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டியதுதானே?
எந்தச் சங்கடமும் தன்னால் வேண்டாம் என்றுதானே
கிளம்பி வந்தது? தன்னால் அவர்களுக்குச் சங்கடமா அல்லது அவர்களால் தனக்குச் சங்கடமா?
அவர்கள் தரும் சங்கடங்களை, அவர்களால் உணரப்படாத உபத்திரவங்களை விட்டு விலகுவதற்குத்தானே
இப்படி வந்து ஒற்றைப் பனை மரமாய் நிற்பது?
கக்கூஸ் போனா எவ்வளவு நேரம்டா? சட்டுன்னு
வர மாட்டீங்களா? -தாங்கமாட்டாமல்தான் கேட்டுவிட்டார் ஒருநாள். எங்கே வேட்டியோடு கழிந்து
விடுமோ என்கிற பயம். சமீபமாய் அடக்க முடியாமல் இந்த அச்சம் வேறு வந்து தொலைத்திருக்கிறது.
சிறுநீர் கசிகிறது என்கிற சந்தேகம் என்றோ வந்து விட்டது. அதைச் சொல்வதில்லை. பொறுத்து
அடக்கிக் கொள்கிறார். எதைத்தான் சொல்கிறார்
இவர். எல்லாவற்றையும் மனதிற்குள் போட்டு அமுக்கி இறுக்கிக் கொள்வதுதான். ஆனால் அடங்க
வேண்டிய இயற்கை முட்டிக் கொண்டு நிற்கிறதே…?
அதை உணர்ந்து இரக்கம் கொள்ள யாருமில்லையே?
என்னப்பா
இப்படிக் கேட்கிறே? முழுசாப் போயிட்டுத்தானே வரணும்…பாதில வர முடியுமா?-சந்துரு எரிச்சலுற்றான்
- இந்தக் கேள்விக்கு பரணியால் பதில் சொல்ல
முடியவில்லை. அவரவர்களுக்கு அவரவர் அவசரம்தான் முக்கியம். உலகமே அப்படித்தான். நன்றாக
உற்றுப் பார்த்தால் மனிதன் முற்றும் சுயநலமானவன் என்பதே புலப்படும்.
கக்கூசையும், குளிக்கிற பாத்ரூமையும் எவன்
ஒண்ணாக்கினான்? இந்த நடைமுறையைக் கொண்டு வந்தது எந்த அறிவாளி? அவன் தலைல மண்ண அள்ளிப்
போட…! – மனதிற்குள் திட்டிக் கொண்டதுதான் மிச்சம்.
இன்று எல்லா வீடுகளும் அப்படித்தான் கட்டப்படுகிறது.
அதுவே நடைமுறையாக ஆகிவிட்டது. என்னதான் ஃப்ளஷ் பண்ணினாலும்? சுற்றிலும் தண்ணீரை அடித்து
ஊற்றினாலும் குளிக்கும் இடத்தில் அந்தக் கக்கூஸ்
வாடை இல்லாமல் போகுமா? அதுக்கு ஒரு சென்ட்டை கொண்டு வந்து மாட்டித் தொங்கவிட வேண்டியிருக்கிறது.
அது ஐஸ்கட்டி மாதிரி சின்னச் சதுரமாய் ஜொலித்து மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
நாலு நாளைக்கு மணக்கும். அத்தோடு சரி…பிறகு? ஒரு மாசத்துக்கு எத்தனையை வாங்கித் தொங்க
விடுவது? என்ன வீண் செலவு இது?
அவரால் அடக்க முடியவில்லை. அவசரமாய் வந்து நிற்கும் வேளை கதவு உள்ளே சாத்திக்
கிடக்கிறது. குளிப்பதும் அங்கேயேதான் என்றாகிப் போனதுதான் தொல்லை. டபிள் பெட் ரூமில்
அந்த இன்னொரு கக்கூஸில் போனால் என்ன? அதை ஒட்டிய
அறையில் அவன் அருமைப் பொண்டாட்டி படுத்திருக்கிறாள். குழந்தையும் அருகே. அவர்களின்
தூக்கம் கெட்டு விடுமாம். மகராணி துயிலெழத்தான்
மணி பத்தாகுமே?
அத்தோடு வெஸ்டர்ன் டாய்லெட் என்பது இவர்
அறையின் பகுதியில்தான் இருக்கிறது. தனக்கு அதுதான் வசதி என்று அந்த அறையைத் தனக்கு
வைத்துக் கொண்டார் இவர். இப்போதோ எல்லோரும் அதையே பயன்படுத்துகிறார்கள். காலை மடக்கிக்
கீழே உட்கார எவருக்கும் முடிவதில்லை அல்லது விருப்பமில்லை. வசதி வாய்ப்புக்கள்தானே
வியாதியைக் கொண்டு வந்தன!
முப்பது வயசிலேயே இவர்கள் இப்படி முடங்கிப்
போனார்கள். தான் தனது ஐம்பதுக்குப்பிறகுதான்…அப்படிக் கூடச் சொல்லக் கூடாது…சர்வீசில்
இருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் இந்த வகைக் கக்கூசையே பயன்படுத்தியிருக்கிறோம். இதையெல்லாம்
யாரிடம் போய்ச் சொல்வது?இந்தாளென்ன கக்கூசப்பத்தியே பேசிட்டிருக்கிறான்? நினைப்பார்களோ?
கணினியின் முன்னால் வயிற்றைத் தள்ளிக்கொண்டு
பிள்ளையார் போல உட்கார்ந்து கிடப்பதைப்போல, கக்கூசிலும் நேரம் காலம் மறந்து அமர்ந்து
கிடக்கிறார்கள். சமயங்களில் கையில் ஒரு புத்தகம். மொபைலில் வீடியோ பார்க்கிறார்கள்.
தண்ணீர் இறங்கினால் முப்பதாயிரம், நாற்பதாயிரம்
மொபைல் பாழாகி விடுமே என்கிற பயம் ஏதுமில்லை. போனா இன்னொண்ணு வாங்கிக்கிறது….காசுதான்
மரத்துல காய்க்கிறதே! உலுப்பினாப் போச்சு…!
ஒருவன் குளிக்கப் போனால் அதிக பட்சம்
பத்து நிமிடம் ஆகுமா? அதற்கு மேல் ஒரு ராட்சசன் குளித்தாலும் அவனுக்கேற்றாற்போல் அது
தாமதம் ஆகாதே? இவன் என்னதான் செய்கிறான் உள்ளே?
அவ்வளவு பெரிய ஆகிருதியா இவனுக்கு? அரைமணி
நேரமா குளிக்க? ரெண்டு சொம்பு விட்டு உடம்பை நனைக்க, ரெண்டு சொம்பு விட்டுத் தலையை
நனைக்க…பிறகு சோப்புத் தேய்க்க…கையால் தேய்த்துக் கழுவ….தண்ணீர் விட்டு இறக்க.. …தலையோடு
காலாக மூணு சொம்புத் தண்ணீர் விட்டு உறரிஉறி…என்று சொல்லிக் குளியலை முடிக்க…இதுக்கு
மேல் என்ன இருக்கு அன்றாடக் குளியலில்? குளிக்கிறானா, தூங்கிட்டானா?
நல்லாக் குளிச்சிட்டுத்தானேப்பா வர முடியும்?
பாதில சோப்போட அப்டியே வெளியேற முடியுமா? காக்கா குளி குளிக்க முடியுமா?
உன்னை யாருப்பா பாதில வெளியேறச் சொன்னாங்க?
இவ்வளவு நேரமான்னுதானே கேட்டேன்…?
நா எப்டி வழக்கமாக் குளிப்பனோ அப்படிக்
குளிச்சிட்டுத்தான் வெளில வருவேன். …வெயிட் பண்ணித்தான் ஆகணும்….
என்னப்பா இப்படிச் சொல்ற? டாய்லெட்டுக்குத்தான்
இத யூஸ் பண்ற…குளிக்க அங்க போகப்படாதா…?
அங்க போய்க் குளிச்சா…குழந்தை எழுந்திரிச்சிடும்….அழ
ஆரம்பிக்கும். அவளுக்கும் தூக்கம் போயிடும்….அந்த பாத்ரூம யூஸ் பண்ண முடியாது….இங்கதான்
எல்லாமும்….ராத்திரி குழந்தை அடிக்கடி எழுந்திரிச்சிடுது. அவளுக்குத் தூக்கம் போயிடுது…அது
உனக்குத் தெரியுமா?
அதற்கு மேல் கேள்வி இல்லை என்பதுபோல்
அவன் பேசியது இவரைத் திடுக்கிட வைத்தது. யோசிக்கவும் வைத்தது. குழந்தை பெற்றால் தாயாரின்
தூக்கம் பாழ். தெரியாததா இவருக்கு? ஆனாலும் தன் வார்த்தைக்கு மதிப்பில்லை. அப்பாவின்
உடல் ரீதியான கஷ்டங்கள் அவனால் உணரப்பட்டிருக்கிறதோ என்னவோ தெரியாது…அதைக் காட்டிக்
கொள்ளாமல் இருப்பதுதான் சாமர்த்தியம். கண்டுக்காத…கண்டுக்காத…என்று அடிக்கடி தங்கள் பேச்சின் நடுவே உரைக்கிறார்களே…அதற்கு இதெல்லாம்தான்
அர்த்தமோ!
பொண்டாட்டிக்குப் பயந்த பய…..! கோழை…
- மனதுக்குள் வெட்கினார். வயசான அப்பனுக்கு இயற்கை இடர்பாடுகள் இருக்கும் என்கிற உணர்தல்
இல்லை. கருணை இல்லை. உறுத்தல் இல்லை. முதியவர்களின்
சங்கடங்களை உணராதவர்களுக்கு உறுத்தல் மட்டும் எப்படி வரும்? எங்கிருந்து இரக்கம் வரும்?
என்ன பிள்ளைகள்..? பாசமற்ற ஜந்துக்கள்….
யாமினியை நினைத்துக் கொண்டார் பரணீதரன்.
ஒரு வார்த்தை என்றாவது கண்டித்துப் பையனைப் பேசியிருக்கிறாளா? அவன் பேசுவது எதுவுமே
அவள் காதில் விழுவதில்லை. அது அப்பனுக்கும் பிள்ளைக்கும் இருக்கும் பஞ்சாயத்து. நாம்
தலையிடக் கூடாது என்று மௌனம் காக்கிறாளோ? அல்லது தான் சொன்னாலும் அவன் எங்கே கேட்கப்
போகிறான் என்று விலகி நிற்கிறாளா? அல்லது இந்த மனுஷனுக்கு வேற வேலை இல்ல என்று ஒதுக்கி
விட்டாளா? அப்படியெல்லாம் விட்டுக் கொடுத்து
விட மாட்டாள் பையனை. அவள் என்றுமே அவனின் பக்கம்தான். அவன் எது செய்தாலும் அதுவே நியாயம்…
என்ன சொன்னாலும் அதுதான் சரி.
பையன், மாடியிலிருந்து கீழே குதி என்றால் அடுத்த விநாடி அட்சர சுத்தமாய்க் குதித்து விடுவாள்.
மறு பேச்சில்லை.
அம்மா…உன் மருமக கால் வலிக்குதுங்கிறா…கொஞ்சம்
பிடிச்சு விடேன்…என்றாலும் சரி என்று போய் “வித்யா…கொஞ்சம் கால நீட்டும்மா…“ என்று
பதவாகமாய்ச் சொல்லி பாங்காய்க் கால்களை எடுத்து தன் மடியில் போட்டுக் கொண்டு அமுக்கி விடுவாள்.. அவள் ரெண்டு திட்டுத் திட்டினாலும்
இன்பமாய், சுரணையற்று வாங்கிக் கொள்வாள். கண்ணையும் கருத்தையும் மறைக்கும் பிள்ளைப்
பாசம்…தராதரங்கள் அங்கு விலையாவதில்லை.
அவன் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதற்கு மேல் அவள் கேட்பதில் என்ன வியப்பு இருக்கப் போகிறது? அவள்தான் வெள்ளைக்காக்கை
பறக்கிறது என்றால் ஆமாம்…ஆமாம்…அதோ…அதோ…என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறாளே? இம்மாதிரிப்
பிரகிருதிகளை என்னதான் செய்வது?
கொஞ்சம் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கக் கூடாதா?
அதான் அஞ்சு மணிக்கு ஒரு தரம் டாய்லெட் போயிட்டுத்தானே வர்றீங்க…? அதுக்குள்ளேயும்
இன்னொரு தரமா? ரெண்டாம் தரம் காபி குடிக்காதீங்க…! வாயை அடக்குங்க…அதனாலதான் உங்களுக்கு
வயித்தைக் கலக்குது…கரெக்டா அவன் குளிச்சிட்டிருக்கிறபோது உங்களுக்கு அவசரமாயிடுமா?
அதென்ன அப்படியொரு உறரிபரி? கொஞ்ச நேரம் அடக்கிட்டு உட்கார்ந்திருக்க முடியாதா? என்னமோ
யோகா பண்றேன்…அதப் பண்றேன்…இதப் பண்றேன்னு பீத்திக்கிறீங்களே…யோகால இதை அடக்குறதுக்கு
எதுவும் பயிற்சியில்லையா? என் உடம்பு என் கன்ட்ரோல்ல…ன்னு சொல்வீங்களே…இது மட்டும்
உங்களுக்கு அடங்க மாட்டேங்குது போல்ருக்கு…தினசரி இதுவா பிரச்னை…? தாங்க முடியாத அவசரம்னா
அபார்ட்மென்ட் கீழே பொது டாய்லெட் ஒண்ணு இருக்குல்ல அங்க போயிட்டு வாங்க…!
தன்னை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது.
போனவன் வந்தவன் எல்லாம் ஆளாளுக்குப் பயன்படுத்தி அந்த டாய்லெட் இப்போது பாழாகி உபயோகமற்றுக்
கிடக்கிறது. நான் அங்கு போக வேண்டுமாம். வியாதியை வாங்கிக் கொண்டு வர…! உரிமை இருக்கிறது
என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசி விடுவதா? அப்பா பாவம்டா….ரொம்ப அவசரம்னா கீழே போயிட்டு
வந்துடு…என்று ஒரு வார்த்தை அவனைப் பார்த்துச் சொல்ல முடியமா இவளால்?
பிள்ளைங்க வளர்ந்து ஆளாயிட்டா நாமதான் அவுங்களை அட்ஜஸ்ட்
பண்ணிக்கப் பழகிக்கணும்…இப்போ நான் இல்லியா….உங்களை மாதிரியா ஒவ்வொண்ணுக்கும் பறந்திட்டிருக்கேன்?
அடங்கிக் கிடக்கலை?
உண்மைலயே நீ ரொம்ப மெச்சூர்டுதான்…என்றார்
இவர். அதை அவள் எப்படிப் புரிந்து கொண்டாளோ? கண்மூடித்தனமாக இருப்பதுட் மெச்சூரிட்டியின்
இன்னொரு பகுதிதானே…!
மறுபடியும் இப்போது ஃபோன் பெல் அடித்தது. ஆளை விடுங்கடா சாமி
என்று கழன்று ஓடி வந்தாலும், அப்டி ஈஸியா நழுவிட
முடியுமா? என்று பிடித்துக் கொள்கிறார்கள். சேர்ந்து இருக்கையில் இருக்கும் தொல்லையை
விடத் தனியாய் ஓடி வந்த பிறகு உண்டாகும் இடர்கள்தான் அதிகம். அப்டியெல்லாம் தனியாப்
போயி நிம்மதியா இருந்திட முடியுமா? விட்ருவமா? என்பதைப் போல…
என்ன? அதான் காலைலயே சொல்லியாச்சுல்ல…சும்மா
என்ன ஃபோன் பண்ணிட்டு? – சற்றுக் கோபமாகவே கேட்டார். .போன் வந்தாலே எரிச்சல்தான் வந்தது
இவருக்கு.
டிக்கெட் போட்டுட்டீங்களான்னு கேட்கத்தான்….!-அடேயப்பா…என்ன
அக்கறை?
என்னது டிக்கெட்டா? வந்த வேலை பாதி கூட
முடியலை . அதுக்குள்ளயும் டிக்கெட் போடுன்னு
அவசரப்படுத்தினா என்ன அர்த்தம்?
என்ன பெரிய வேலை? பாங்க் ஒர்க்தானே? முடிச்சவரைக்கும்
போதும்…கிளம்பி வாங்க…கோர் பாங்கிங்தானே…மீதி இருக்கிறதை இங்கே இருக்கிற அதே பாங்குகளுக்குப்
போயி வேணுங்கிறதைச் செய்துக்கலாம்…
அங்கெல்லாம் என்னால டூ வீலர்ல அலைய முடியாது.
எங்கயாச்சும் மோதி, காலக் கைய ஒடைச்சிக்கிறதுக்கா? மெட்ராஸ் டிராஃபிக்ல என்னால வண்டி
ஓட்ட முடியாது…படுக்கைல விழுந்தேன்னா அப்பறம் எல்லாருக்கும் அவஸ்தை….
அதெல்லாம் ஒண்ணும் விழமாட்டீங்க…மெது
மெதுவாப் போயிட்டு வரலாம்…உங்களால முடியும்..!
நம்பிக்கையளிக்கிறாளாம்? அடேயப்பா எவ்வளவு
அக்கறை? அங்கிருந்தால் காய்கறி நறுக்குவேன், பால் காய்ச்சுவேன். வெந்நீர் போடுவேன்…தோசைக்கு
மாவு அரைத்துக் கொடுப்பேன்…அவசரத்துக்குப் பற்றுப் பாத்திரம் தேய்த்துக் கொடுப்பேன்…வேலைக்காரி
வராத நாட்களில் முழுப் பாத்திரங்களையம் தேய்த்து அடுக்கி விடுவேன்…உலர்ந்த துணிகளை
மடித்துக் கொடுப்பேன்…இப்பொழுது அத்தனையும் நின்று போனது அம்மாவுக்கு. இருக்கும் வேலை
போதாதென்று இந்தச் சில்லரை வேலைகளையும் தானே கட்டிச் சுமக்க வேண்டியிருக்கிறதே…? அந்தப்
பெண் துரும்பை நகர்த்த மாட்டேனென்கிறதே? உடம்பை அசைத்தால் துவண்டு விடுமோ என்று தேர்
மாதிரி நகர்கிறதே? மனசாட்சி என்று ஒரு வார்த்தை சொல்வார்களே…அந்தச் சொற்களையெல்லாம்
மொழியிலிருந்து தூக்கி எறிந்து மூலையில் கிடாசி விட்டார்களா? அது மனம் சம்பந்தப்பட்டதாயிற்றே…அது
உறுத்தாதா சாட்சியாய் நின்று?
அரை குறையாய்க் கிளம்பி
வந்தால் மீதி
வேலைக்கு உன் பையனைக் கூட்டிட்டுத்தான்
ஒவ்வொண்ணுக்கும் அலையணும்…பரவால்லியா? அதுலயும் டபிள்ஸ் போக என்னாலாகாது. காரைத்தான்
எடுத்தாகணும். அதான் புதுப் பெருமை வந்து ஒட்டிட்டிருக்கே….உன் பையன் ஒவ்வொரு
பேங்குக்கும் என்னோட கார்ல அலைவானா? அவன் ஸ்டேட்டஸ் என்னாகுறது?
வயசான தகப்பன்களைக் கூடக் கூட்டிட்டுப் போறதே அந்தஸ்துக் குறைவா நினைக்கிற காலமாச்சே
இது! கஷ்டப்பட்டு,
சீரழிஞ்சு, அக்கறையா காசைச் சேர்த்து வச்சு, லட்டு மாதிரித் தூக்கிக் கொடுத்தா….சரின்னு வாங்கிக்குவானுங்க…ஏன்னா காசு கசக்காதே… அதுக்காக அப்பன்காரன் கூட மெனக்கெடமுடியுமா? …சீரழியறதும், செருப்புக்கட்டுறதும்
பெத்தவங்களுக்குத்தான் விதிச்ச விதி….அவனுங்களுக்கில்ல…அவுகல்லாம் ராஜ பரம்பரை….உட்கார்ந்த
எடத்துல அதிகாரம் பண்ணித்தான் பழக்கம்…சுகவாசிகள்…! என்ன…நா சொல்றதெல்லாம் காதுல விழுகுதா
இல்லியா? லைன்லதான இருக்கே…?
இப்ப என்னதான் சொல்றீங்க…நீங்க வரப்போறீங்களா
இல்லையா? குரலில் அதிகாரம் தொனித்தது இவருக்குள் எரிச்சலை உண்டு பண்ணியது. அவள் தன்னைப்பற்றி
என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? வீட்டுக்கு
அடிமையா நான்? வயசானால் அடங்கிக் கிடக்கணும் என்று நினைக்கிறாளா? கால் கை முடமானால்
அப்போ அவ்வளவுதானா? கிள்ளுக்கீரையால்ல போச்சு?
வந்த வேலை முடியாம என்னால நகர முடியாது.
இங்க வீடு கிடக்குற கிடப்புக்கு அதை சுத்தம் பண்ணவே ஒரு வாரம் ஆகும். அதுக்குத்தான்
நீயும் கூட வரணும்னு சொல்றேன். அதுக்கு வாயே திறக்க மாட்டேங்கிறே…இப்போ என்னைப் புறப்பட்டு
வரச் சொல்ல மட்டும் என்ன துப்பு இருக்கு உனக்கு? போட்டது போட்டபடி கிளம்ப வேண்டிதானா?
வயசானவன் இப்படித் தனியாப் புறப்பட்டுப் போயிருக்கானேங்கிற கரிசனம் கொஞ்சமாச்சும் இருக்கா
உனக்கு? அதுவே இல்லேங்கிறப்போ…இந்தக் கேள்வியெல்லாம் உன்னால எப்படிக் கேட்க முடியுது?
வெட்கமாயில்லே…? ராத்திரி இங்கே தனியே தூங்குறப்போ அப்டியே போயிட்டேன்னா? விட்டது சனின்னு
இருப்பியா? சகதர்மிணின்னா என்ன அர்த்தம்? இன்பம், துன்பம் ரெண்டுலயும் சரிசமமாப் பங்கு
கொள்றவதான் அவ. நீ அப்டி இருக்கியா? வையி ஃபோனை…மேற்கொண்டு பேசினே….அப்புறம் நான் கிளம்பியே
வரமாட்டேன்…இங்கயே பர்மனென்டா டேராப் போட்டுடுவேன்…ஞாபகம் வச்சிக்கோ…..
ஃபோனை சட்டென்று கட் பண்ணினார் பரணீதரன்.
அவளைப் பேச விடாமல் கடகடவென்று தானே பொழிந்து தள்ளிவிட்டதை நினைத்து மகிழ்ந்து கொண்டார்.
நேரில் இயலாதது ஃபோனில் எவ்வளவு சாத்தியமாகிறது? இருக்கும் வயிற்றெரிச்சலையெல்லாம்
கொட்டித் தீர்த்து விட்டதுபோல் உணர்ந்தார். ஆனாலும் ஒரு பாதிதான் வெளியேறியிருக்கிறது…மீதி?
பாதிக்குப் பாதிதானே எப்போதும் பேச முடிகிறது. முழுசாய் அவிழ்த்து விட்டால் ஜென்மப்
பகையாகிப் போகும்…! அப்படிப் பழி சண்டை போட்டு யார் ஜெயிக்கணும்? யார் தோற்கணும்? பேச்சைக்
குறைத்தாலே பாதி நிம்மதி. ஓட்ட வாயா இருந்து என்ன பிரயோஜனம்?
கடந்த பத்து வருடமாய் இவர்தான் ஒருத்தராய்
இப்படிப் போகவும் வரவுமாய் இருந்து கொண்டிருக்கிறார். ஓரிரு முறை அவள் வந்ததோடு சரி…பிறகு நான் வரலை என்று
சொல்ல ஆரம்பித்து விட்டாள். நீங்க இருந்தா
இருங்க…போனாப் போங்க என்ற கணக்குத்தான். அந்த ஊர் வீட்டைப் பற்றித் துளிக் கூடக் கவலையில்லை. இப்படி அத்தனை சாமான் செட்டுகளோடு வெறுமே பூட்டிப்போட்டு
விட்டு வந்து கிடக்கிறோமே என்கிற கவலை இம்மியும் இல்லை. ரெண்டு மாசத்திற்கொருமுறையேனும்
ஒரு தடவை போய் நான்கைந்து நாட்கள் இருந்து கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணி வீட்டைப்
பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை துளிக்கூட இல்லை.
நீங்க மட்டும்தான் வந்தீங்களா? – எதிர்த்த
வீடு, பக்கத்து வீடு என்று கேட்கிறார்கள். இந்தாள் பேச்சை அந்தம்மா கேட்காது போல்ருக்கு…அதான்
இப்டித் தனியா அலையுறாரு….! கழட்டி விட்டுட்டாங்க போல்ருக்கு? – நினைத்துக் கொள்வார்களோ?
மாமியோடு வந்தால்தான் மதிப்பு…! உலகம் பூராவும் ஒரே மாதிரிதான் கிடக்கு…!!
நினைச்சா நினைச்சி்ட்டுப் போறாங்க….யாருக்கு
விளக்கம் கொடுத்து என்ன ஆகணும் இனிமே? அவனவன் பாடு அவனவனுக்கு…யாரை திருப்திப் படுத்தியாகணும்?
பெத்த பசங்களே அப்பனைத் திருப்திப்படுத்த நினைக்கலை…ஆத்தாளை மட்டும் திருப்திப்படுத்துறதா
அவ நினைச்சிட்டிருக்கா…ஒரு நாளைக்கு அவளையும் வெளில தள்ளப் போறான். கழட்டி விடப்போறான்.
தனிக் குடித்தனம்னு ஒத்தக்கால்ல நிக்கப் போறான். அப்பத்தான் புத்தி வரும். கால் கை
நல்லாயிருக்கிறவரைக்கும் ஓடும். ஏன்னா இப்போ வேலை செய்ய ஒரு ஆள் வேண்டியிருக்கு…அப்பத்தான
இவுங்க இஷ்டம்போல ஊர் சுத்தலாம்…ஓட்டலுக்குப் போகலாம். சினிமா பார்க்கலாம்…இஷ்டம் போல
காசைக் கரியாக்கி வேண்டாத பொருட்களையெல்லாம் வாங்கி வாங்கி அடுக்கலாம்…உடம்புல ரத்தச்
சூடு இருக்கிற வரைக்கும்தான் இந்த ஓட்டம் ஆட்டம்பாட்டமெல்லாம். ரத்தம் சுண்டிப் போச்சுன்னா?
அப்போ தெரியும் அப்பனோட அருமையும் பெருமையும்…! ஆஉறா…பெரியவங்க நம்ம கூட இருக்கிறது
எவ்வளவு பெரிய பாதுகாப்பு?
நமக்காக நம்ம சொல்ற சுடு சொல்லையெல்லாம்
பொறுத்துக்கிட்டு, நம்ம பேசுற அநாவசியமான பேச்சையெல்லாம் பொருட்படுத்தாம நம்மளோட இருந்து
காலம் கழிச்சாங்களே…சேர்த்து வச்ச சேமிப்பையெல்லாம் ஒண்ணு விடாம நமக்கே கொடுத்திட்டு,
மீதி வாழ்க்கைல பிடிப்பில்லாம காவி கட்டாத சந்நியாசியா கடைசி வரை நமக்குத் துணையிருந்து
இறுதி மூச்சை விட்டாங்களே…அவுங்களுக்கு முழு நன்றியுள்ளவங்களா, கடமையுணர்ந்து ஒரு நாளாச்சும்
நாம நடந்துக்கிட்டமான்னு ஒரு நாளைக்கு நெனப்பு வரும்ல…அன்னைக்குத் தெரியும் பெத்தவங்களோட
அருமை…
நினைத்து நினைத்து மனதுக்குள் அழுது கொண்டிருந்தார்
பரணீதரன். தனியாய்ப் புறப்பட்டு வந்தும் தன்னால் நிம்மதியாய் இருக்க முடியவில்லையே…மனிதன்
ஒரு கூட்டுப் புழு…நாலு பேரோடு ஒன்றாய் இருந்து பழக்கப்பட்டவன்…அவனால் தனித்து இயங்க
முடியாதோ? அதுவும் இவர் அப்பா, அம்மா, பாட்டி, அண்ணா, தம்பி, தங்கை, சித்தப்பா, சித்தி,
பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை என்று கூட்டுக்
குடும்பமாக இருந்து வளர்ந்து வாழ்ந்தவராயிற்றே? வீராப்போடு கிளம்பி வந்திருந்தாலும் அது எத்தனை நாளைக்கு
என்று எண்ணிக் கொண்டல்லவா நிற்க வேண்டியிருக்கிறது? அங்கிருக்கும்போது இங்க வரணும்னு
இருக்கு. இங்க வந்தபின்னாடி அங்க போகணும்னு தோணுது…என்ன மனசு இது? ஒரே ஊசலாட்டம்….?
ஒவ்வொரு முறையும் தான் தோற்றுப் போவதாகவே
உணர்ந்தார் பரணீதரன். திடீரென்று ஏற்பட்ட ஞானோதயத்தில் புத்துணர்வு பெற்றவராய் இன்னும்
என்னென்ன வேலைகள் மீதமுள்ளன என்று அலச ஆரம்பித்தார். அவைகளை முடிக்க எத்தனை நாளாகும்
என்று அவர் மனது கணக்குப் போட ஆரம்பித்தது. நாலு நாள் டயத்தை அவராகவே நிர்ணயித்துக்
கொண்டு ரயில் டிக்கெட் கிடைக்குமா என்று பார்க்க ஆரம்பித்தார். சிறப்பு ரயில் உள்ளீடாக
அலசு அலசென்று அலசினார். ஒரு வண்டி இல்லை. என்றுமே ரயில் டிக்கெட்டுக்குத் தாளம்தான்.
போகிறோமோ இல்லையோ டிக்கெட்டைப் போட்டு
வைப்போம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பேயே ரிசர்வ் பண்ணி எல்லோரும் இடத்தை நிரப்பி
விடுகிறார்கள். பிறகு அசால்ட்டாகக் கான்சலும் பண்ணிக் கொள்கிறார்கள். கழியும் தொகைபற்றி
எவனும் கவலைப்படுவதேயில்லை. எதை நம்பி காத்திருப்புப்
பட்டியலானாலும் பரவாயில்லை என்று பதிவு செய்வது?
ஆர்ஏசி என்று கிடைத்தால் கூட இரவு பூராவும் கொட்டுக் கொட்டு என்று உட்கார்ந்தல்லவா
போக வேண்டும்? சீனியர் சிட்டிசன்ஸ் என்று படுக்க இடம் கிடைத்து விடுகிறதா என்ன? இருந்த
மன இறுக்கமெல்லாம் சிதறிச் சின்னாபின்னமாகிப்
போனது பரணீதரனுக்கு. ஆனாலும் போயாக வேண்டும்.
ஃபோனை எடுத்தார். பையன் எண்ணுக்குத் தட்டினார்.
என்னாச்சுப்பா… திடீர்னு….? உடம்பு சரியில்லையா?
-பதறினான்.
அதெல்லாமில்லேடா….சந்துரு…அப்பாவுக்கு
ஒரு டிக்கெட் போட்ருப்பா ஏதாச்சும் ஒரு டிராவல்ஸ்ல…? பஸ் ஸ்டான்ட் வந்து கூட்டிட்டுப் போயிடு…பஸ்,ஆட்டோ
பிடிச்செல்லாம் என்னால வர முடியாதுப்பா…!
கண்டிப்பா வர்றேம்பா….அதுக்கு ஏன் ஒர்ரி
பண்றே? நம்ம கார்ல வந்து கூட்டிட்டு வர்றேன்…டிக்கெட் போட்டுட்டு வாட்ஸப் பண்றேன்…ஓ.கேயா…?
ரொம்ப தேங்க்ஸ்ப்பா…என்றபோது கண்கள் கலங்க
நா குழறியதை அவரால் தடுக்க முடியவில்லை. மனசு
மிகவும் லேசாகிப் பஞ்சாய்ப் பறந்து கொண்டிருந்தது.
என்னப்பா இது…தேங்க்ஸெல்லாம் சொல்லிட்டிருக்கே….
? – ஃபோனை அணைத்த அந்தக் கணம் சந்துருவின் அந்தக் கடைசி வார்த்தைகள் அவர் காதில் லேசாக
விழத்தான் செய்தன. பாசக்காரப் பயதான்…மனது நினைத்துக் கொண்டது.
தேங்க்ஸ்பா…தேங்க்ஸ்பா… - ஆனாலும் அவர்
வாய் அந்த வார்த்தைகளை முனகத்தான் செய்தது.
---------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக