30 செப்டம்பர் 2024

 

சிறுகதை                    தாய் வீடு மாத இதழ் (அக்டோபர் 2024)  பிரசுரம்

“மாற்றம் ஒன்றே மாறாதது …!”






ந்த மாதிரி ஒரு கேள்வியை எதிர்பார்த்துத்தான் இருந்தார் ஈஸ்வரன். அப்படியெல்லாம் கேள்வியும், பேச்சும் வரும் என்று தெரிந்துதானே அங்கே போனார். வேறு வழியும் இல்லை. அன்றாடம் ரயிலேறிப் போய்விட்டு இரவாவது வீடு திரும்ப முடிகிறதே என்கிற சமாதானம்தான். மனதை சமன் செய்து கொண்டு தயாராய்த்தான் இருந்தார்.

அந்த ரயிலின் எட்டுப் பெட்டிகளிலும் நிறைந்து வழிந்து ஊழியர்கள் பயணம் செய்கிறார்கள். அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என்று பல்வேறு தரப்பினரும் அன்றாடம் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆளோடு ஆளாகச் சேர்ந்து  தானும் போய் வருவதில் என்ன சிரமம்? தனக்கு மட்டும் அப்படியென்ன கஷ்டம் வந்தது? அவர்களெல்லாம் மனிதர்களில்லையா? அறிந்தோ அறியாமலோ உள்ளூரே அவருக்கு வாய்த்து விட்டது. காலமும் ஓடி விட்டது. அவரென்ன செய்வார்? யாரையும் தொந்தரவு செய்துவிட்டு, தூக்கி விட்டு விட்டு வந்து குந்தவில்லையே? ஆனாலும் பழி அவருக்குத்தான்.

அவரு உள்ளூர விட்டு நகர மாட்டாருங்க…இந்தக் காம்பவுன்ட்லயே நாலு ஆபீஸ் இருக்கு…இதுக்குள்ளயேதான் சுத்துவாரு…இல்லன்னா டவுனுக்குள்ள… ….சிட்டி பஸ் ஏறி போய்த் திரும்புறாங்களே…அதுபோலக் கூடப் போக மாட்டாரு…பத்திருபது கி.மீ.கூடப் போய் வரமாட்டாரு அய்யா…இங்கயே குப்ப கொட்டணும் அவருக்கு….மத்தவுகதான் அலையணும்…அவரு டிபார்ட்மென்டுக்கு செல்லப் பிள்ளை….அப்டித்தான சில பேரை வச்சிருக்காங்க…? அவுருதான் திறமையான வேலைக்காரராம்…நாமெல்லாம் சொங்கியாம்…

எவ்வளவோ வார்த்தைகளைக் கேட்டாயிற்று. நேரடியாகவும், மறைமுகமாகவும்….அந்த எல்லோருக்கும் இப்போது நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருக்கும். மனம் ஆறுதல் கொள்ளும். யப்பாடீ…தொலைஞ்சான்யா….!! இனி எப்டி உள்ளூருக்குள்ள நுழையறான் பார்ப்போம்…எங்கடா இந்தப் ப்ரமோஷன்லயும் உள்ளூர்லயே வந்து உட்கார்ந்துடுவானோன்னு நினைச்சது…நல்லவேளை…சாமர்த்தியம் பலிக்கலை…எல்லாக் காலத்துலயும் எல்லாமும் பலிதமாகிடுமா? ஒருவாட்டிதான் வெளியூர் போய்ப் பார்க்கட்டுமே?

எல்லோருடைய ஆசீர்வாதத்தோடும் உள்ளூரை விட்டுக் கிளம்பியாயிற்று. சந்தோஷமாப் போயிட்டு வாங்க…நீங்களும் வெளியூர் பார்க்கணும்ல…!!

கவனமாப் போயிட்டு வாங்க சார்…ரயில் ஏறி…இறங்கி…உடம்பப் பார்த்துக்குங்க…முடிலன்னா அங்கயே ஒரு ரூம் போட்டுத் தங்கிடுங்க…வாரா வாரம் வெள்ளிக் கிழமை ராத்திரி வீடு வந்தாப் போதும்…எதுக்கு வெட்டிக்கு அலையுறீங்க…

ரொம்பவும் வருத்தமான பாவத்தோடுதான் சொன்னார்கள். உள்ளூர எத்தனை மகிழ்ச்சி என்பது இவருக்குத்தானே தெரியும்! அங்கயே ரூம் போட்டுத் தங்கணுமாம்….காசு எவன் கொடுப்பான்…இவங்கப்பனா…? ரூம் போடணும்…அப்புறம் ஓட்டல்ல சாப்பிடணும்…அது உடம்புக்கு ஒத்துக்கணும்…

அங்க உங்களுக்கு நல்லா பைசா பார்க்கலாம் சார்…செழிப்பா இருக்கும்.. நீங்க வேணாம்னாலும் வந்து திணிப்பாங்க…நீங்க வாங்க மாட்டீங்க…அது வேறே…ஆனாலும் விட மாட்டாங்க…தெம்பாத் திரியலாம்….அங்க ஆபீஸ் குப்பையாக் கிடக்குன்னுதானே உங்களைப் போட்டது…நீங்க போய்த்தான் சரி பண்ணனும்…சரியான ஆளாப் பார்த்துத்தான் தள்ளி விடுறாங்க….இனி உங்க ராஜ்யம்தான்…குப்பையைக் கூட்டலாம். அள்ளவும் செய்யலாம்….

இருவேறு அர்த்தங்களில் புகழ்ந்தார்கள். வஞ்சப் புகழ்ச்சி. அடேங்கப்பா….இவர்களின் சிலேடைகளுக்குத் தனிப் புத்தகமே போடலாம். என்னவோ சொல்லி விட்டுப் போகட்டும். இந்த மட்டுக்கும் போய் வருவதுபோலான தூரத்தில் கிடைத்ததே என்று இவருக்கு சமாதானமாய் இருந்தது.

மனிதர்கள் என்றுமே சராசரியானவர்கள்தான். சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல்தான் பேசுவார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்றுதான் பேசுவார்கள். எல்லோருக்கும் இரண்டு முகங்கள் உண்டுதான். அதில் ஒன்று வெளியில் சொல்ல முடியாதது. பழகும்போது நண்பர்கள்தான். ஆனால் பேசும்போது? அதாவது ஆளில்லாமல் பேசுகையில்!

என்னவோ இவர்களாய் முயற்சி செய்து அங்கே மாறுதல் வாங்கிக் கொடுத்ததுபோல் அளந்து கொள்கிறார்கள். இவரல்லவோ போய்ச் சொன்னார். கேட்டுக் கொண்டார். போயிட்டு வர்ற மாதிரியாவது போட்டுக் கொடுங்க…ரொம்ப தூரத்துக்குப் போட்டுடாதீங்க…ஒய்ஃப் தனியா இருக்காங்க…துணைக்கு யாருமில்லே…! இவ்வளவுதான் சொன்னார். அதுநாள் வரையிலான அவரது அடையாளம் அவரைக் காப்பாற்றியது என்று நினைத்துக் கொண்டார். மறுபேச்சிலாமல் ஆர்டர் கைக்குக் கிடைத்தது.

நேர்ல போயும் உள்ளூர் கிடைக்கலியா சார்…? யாரையாவது தூக்கி விட்டுட்டு வந்து உட்காருவீங்கன்னு எதிர்பார்த்தோம்…! அது வேணாம்னு நினைச்சிட்டீங்கபோல….! ரிடையர்ட்மென்ட் நெருங்கையில் எதுக்கு இந்தப் பாவத்தச் சுமந்திட்டுன்னு விட்டுட்டீங்களோ?  -  என்ன குரூரம்…?

முப்பது வருட சர்வீசில் முதல் ஏழு ஆண்டுகள் வெளியூரில் இருந்தாயிற்று. அது பேச்சலர் காலம்.  பிறகு உள்ளூர் வந்து மீதி இருபது ஆண்டுகள். இப்போது ஒரு பதவி உயர்வு இன்னும் ஆறரை ஆண்டுகள் மீதமுள்ளது. அதற்குள் இன்னும்  ஒரு பதவி உயர்வு வராதா? வரலாம்…

வெளியூர் வந்தாலும் வந்தார். பிறகு உள்ளூர் ஆபீசை எட்டியே பார்க்கவில்லை. எதற்கு? என்கிற விலகல் வந்து விட்டது. இப்பத்தான போனாரு? அதுக்குள்ளயும் எதுக்கு வந்து நிக்கிறாரு? டிரான்ஸ்பர் வேணுமாமா? போகச் சொல்லுங்க அந்தாளை…குத்துக்கல் மாதிரி இத்தன வருஷம் கிடந்தது பத்தாதா? பழைய வாசனை இன்னும் விடலையோ?

அவர்கள் சொல்வதை இவரே நினைத்துக் கொண்டார். மலிவான சிந்தனைகளில்தான் மனிதர்கள் வலம் வருவார்கள். அதனால்தான் அரசியல்வாதிகளின் பொய்கள் இங்கே எடுபடுகின்றன. திரித்து மறைத்துச் சொல்வதெல்லாம் இங்கே நன்றாய் விலைபோகும். நல்லவைகள் காற்றோடு போய் விடும். அறிவுக்கு எட்டாது. நிலைக்காது.

திரே அமர்ந்திருந்த மயில்வாகனத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கு சங்கடப்பட்டு ஏதோ யோசனையில் தலை குனிந்திருந்தார் ஈஸ்வரன்.

என்னா சார்…உடம்பு சரியில்லையா?.....ரொம்ப அமைதியாயிட்டீங்க…?

அதெல்லாம் ஒண்ணுமில்லே…ஏதோ யோசனை….என்றார் இவர்.

பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன் சார்…பத்திரிகை கொடுத்து உங்களை அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தேன்….-சொல்லியவாறே அழைப்பிதழை நீட்டினார் மயில்வாகனம். தேடி வந்து கொடுக்கும் விஸ்வாசம். வேலை கற்றுக் கொடுத்ததே அவர்தானே…அந்த நன்றி…!

கட்டாயம் வந்திருங்க சார்….ஞாயிற்றுக்கிழமை பார்த்துத்தான் வச்சிருக்கேன்…அன்னைக்கு ரிசப்ஷன்…மறுநாள் முகூர்த்தம்….ரெண்டு நாளுக்கும் நீங்க வரணும்…வந்து பொண்ணை ஆசீர்வாதம் பண்ணனும்…

அவசியம் வர்றேன்….ஆனா திங்கட்கிழமை வர முடியாது. ரிசப்ஷனுக்குக் கண்டிப்பா வந்திடுறேன்…திங்கள் லீவு போட முடியாது. ஆபீசே நான்தான் அங்கே. இல்லன்னா நாறிப் போகும்…அதனால…

தெரியும் சார்…கேள்விப்பட்டேன் எல்லாமும்…நீங்க ஆளே ரொம்ப மாறிட்டீங்களாமே…! அவரா இப்படிங்கிறாங்க… இங்க? நான்லாம் நம்பல சார்…நீங்களாவது மாறுவதாவது? ஆனா பாருங்க உங்களப்பத்திதான் ஒரே பேச்சு….நானே ஆடிப் போனேன்…விடாமச் சொல்லச் சொல்ல நம்பும்படியா ஆயிடிச்சு….நீங்களா சார் இப்டி…?-கையை ஆதுரமாய்ப் பிடித்துக் கொண்டார்.

சட்டென்று விடுவித்துக் கொண்ட இவர்…கேட்டார்.

என்ன சொல்றீங்க…? அப்டீன்னா…? – சற்றுக் கோபமாகவே குரல். எதுவோ சொல்ல எதையோ இழுக்கிறாரே இவர்? பத்திரிகை வச்சமா  போனமான்னு இல்லாம…?

காசுப் பொழக்கம் ரொம்ப அதிகம்னு சொன்னாங்க….நீங்கள்லாம் இப்டி ஆவீங்கன்னு நாங்கள்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கல சார்…குட்டைல விழுந்த மட்டை நாறித்தான் போகும்ங்கிற மாதிரி உங்களக் கொண்டு அங்க போட…போகைலயே நானெல்லாம் நினைச்சேன்…சாரு அங்க போறாரே…என்ன கதியாகப் போறாரோன்னு…!அது சரியாத்தான் போச்சு…!

என்ன தைரியம்? வீடு தேடி வந்து தன் கண் முன்னே…!  இதைக் கேட்டு விடுவதில் அப்படியொரு குரூர ஆறுதல்…அதுதானே?

நீங்க என்ன சொல்றீங்க மயில்வாகனம்…? வெளிப்படையாச் சொல்லுங்க…இப்டி மழுப்பிப் பேசாதீங்க…கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்த இடத்துல…எதுக்கு இதெல்லாம்…?

கரெக்ட் சார்…நீங்க சொல்றது சரிதான்.   அழைச்சமா…கிளம்பினமான்னு இல்லாம…ஸாரி சார்….எப்டியோ பேச்சு வந்திடுச்சி… மன்னிச்சிடுங்க….எல்லாரும் பேசிக்கிறாங்களேன்னு வயித்தெறிச்சல்ல சொல்லிப்புட்டேன்…நம்ப சாரா இப்டின்னு நினைச்சு அந்த வருத்தம்தான்…நான் வர்றேன் சார்…..

கேள்விப்படுறதெல்லாம் உண்மையாயிடாது…புரியுதா? கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்யுன்னு உங்களுக்குத் தெரியாது? தெரியாதவங்களுக்கு நீங்கதான் சொல்லணும்…சாரு இப்படிச் சொன்னாருன்னு…புரியுதா? போய்ட்டு வாங்க…

நா வர்றன் சார்….விசேடத்துக்குக் கட்டாயம் வந்திடுங்க…எதுவும் மனசுல வச்சுக்க வாணாம்…மாமியையும் கூட்டிட்டு வந்திருங்க…

மயில்வாகனம் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். தெருத் திரும்புகையில் திரும்பிப் பார்த்துக் கையசைத்தார் அவர். பதிலுக்கு அசைக்க இவருக்குக் கையெழவில்லை. இவன்லாம் ஒரு ஆளு?

யிலிலிருந்து இறங்கி ஆபீஸ் வந்தடைந்தபோது இவருக்கு வியர்த்திருந்தது. காற்றாடியைச் சுற்றவிட்டு  கண்ணை மூடி அமர்ந்திருந்தார். முதல் நாள் மயில்வாகனத்தோடு நடந்த பேச்சு இன்னும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் மாவட்டம் பூராவுமா பரவி விட்டது? வதந்தி…தந்தியை விட வேகம்தான்…மக்களுக்கு அதில் ஒரு கொண்டாட்டம்…

ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். மணியைப் பார்த்தார். வெளியூரான இவர் சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார். உள்ளூர்காரர்களான பணியாளர்கள் தாமதமாக வருகிறார்கள். ஆடி அசைந்து பத்தரை மணியைப் போலத்தான் ஆபீஸ் நிறைகிறது. தான் வந்து அமர்ந்திருப்பதுபற்றி ஒரு பதட்டமேயில்லை. தனக்குப் பயப்பட வேண்டாம். நேரத்துக்கு பயம் வேண்டாமா?

இவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டா்ா. சத்தம் போட்டும், கோபப்பட்டுப் பேசியும், இணக்கமாய்ச் சொல்லியும்…..ஊகும்….யாரும் அசைவதாய் இல்லை. இங்கெல்லாம் அப்டித்தான் சார்…நீங்க பெரியாபீசையே மனசுல வச்சிட்டுப் பேசறீங்க…

பணியாளர்கள் நேரத்துக்கு வருவதையே தன்னால் சரி செய்ய முடியவில்லை. மற்றவற்றையெல்லாம் என்னென்பது? எதையும் மாற்றுவது போலவா அங்கு நிலைமை இருக்கிறது? எல்லாம் ஊறித் திளைத்த கடல் நண்டுகள்! குப்பையைக் கூட்டுவதா, குப்பையில் மூழ்குவதா?

சார்…ஒரு வருஷத்துக்கு என்னை எதுவும் கேட்கக் கூடாது. பிறகு பாருங்க…மேலதிகாரியிடம் உரிமையோடு சவால் விட்டதுபோல்தான் சொல்லி வந்தார்.  ஆனால் இங்கு வந்து பார்த்தால்? எந்த எம்டனும் ஜெயிக்க முடியாது போலிருக்கிறதே…?

சார்…உங்ககிட்டே நாங்கள்லாம் ஒரு விஷயம் பேசணும்…

காலை ஆபீஸ் வந்ததும் வராததுமாக அத்தனை பேரும் தன்னைச் சுற்றி வந்து நிற்பதைப் பார்த்து என்னவோ ஏதோ என்று சற்றே கலவரமடைந்தார் ஈஸ்வரன்.

தான் கண்டிப்பாக இருப்பதை ஒன்றுகூடி எதிர்க்கிறார்களோ? புதிதாக வந்திருப்பவரிடம் முதலிலேயே சொல்லி விடுவது நல்லது என்று  முடிவு செய்து வந்து ஆஜராகியிருக்கிறார்களோ?

கண்டிப்பான ஆள் என்பதுதான் அடையாளமாகியிருக்கிறதேயொழிய எதுவும் மாறவில்லையே? மாற்றவும் இல்லையே?  கடலில் கரைந்த பெருங்காயமா நான்? இங்கு வந்து ஜோதியில் ஐக்கியமாகிவிட்டேனா? தன்னால் எந்த மாற்றம்தான் நிகழ்ந்திருக்கிறது இங்கே? இன்னும் முழு நடப்பியலையும் ஸ்டடி பண்ணவேயில்லையே? பலதும் பூடகமாகவே இருக்கிறதே? தப்பு நடக்கும் இடங்களெல்லாம் அப்படித்தான் ரகசியமாகச் செயல்படுமோ? எவனும் மனம்விட்டுப் பேசமாட்டேனென்கிறானே?

பியூன் கூட நேரத்துக்கு வருவதில்லை. சாயங்காலம் ஸ்டாஃப் எல்லாரும் போன பிறகு வாட்ச்மேனுக்குக் காத்திருந்து அவன் வந்த பிறகல்லவா, தான் கிளம்பிப் போக வேண்டியிருக்கிறது? சொல்லிச் சொல்லி  அலுத்ததுதான் மிச்சம்.  நாலு நாளைக்குப் புலம்புவாரு…பிறகு புரிஞ்சிக்கிடுவாரு…!

மார்ச் பொறந்திடுச்சு சார்…இந்த மாதம் பூராவும் டைட்டா இருக்கும் வேலை. ராத்திரி கூட உட்கார்ந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும்…அது எங்களுக்குப் பழகிப் போனதுதான். ஃபுல் நைட்டும் உட்கார்ந்திடுவோம். நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் செய்து அன்யூவல் டார்கெட்டை அச்சீவ் பண்ணிடுவோம். பாஸ்கிட்டே சொல்லிடுங்க…பில்லு போடுறது…டிரஷரிக்கு அனுப்புறது…பாஸ் பண்றது…செக் வாங்குறது…எல்லாமும் எங்க பொறுப்பு…எதுவும் மிஸ் ஆகாது…டிலேயும் ஆகாது…ஆனா…..

ஆனா…? என்ன ஆனா…சொல்லுங்க…ஏன் நிறுத்திட்டீங்க…? எதைச் சொல்ல வருகிறார்கள்? மொத்தமாய் வந்து கெரோ பண்ணுகிறார்களோ?

எங்களுக்கு வர்ற கமிஷன்  பர்சன்டேஜ் கண்டிப்பா வந்திரணும்…அதுக்கு நீங்கதான் பொறுப்பு…

அப்டீன்னா…?

என்ன சார்…தெரியாதமாதிரிக் கேட்கறீங்க…? வருஷம் பொறந்ததும் இங்க வந்து ஜாய்ன் பண்ணினீங்க…நீங்க வந்து ரெண்டு மாசத்துல மார்ச் வந்திடுச்சு…இயர் என்டிங் திருவிழாதான் உங்களுக்குத் தெரியுமில்ல சார்…சொல்லி அனுப்பியிருப்பாங்களே…சப்-டிவிஷன் பூராவும் வழக்கமா உள்ள கத தானசார்….புதுசா என்ன?

அதுதான் தானா உங்களுக்கு வந்து சேர்ந்திடும்ல…? நானென்ன அதுக்கு ஜவாப்தாரி…? புரியல….? நீங்க வேலை செய்றீங்க…வாங்கிக்கிறீங்க…அதானே?

சார் இப்பத்தான் முதல் முறையா சப் டிவிஷன் வர்றீங்க போல….இத்தன வருஷமா பெரிய ஆபீஸ்லயே இருந்து பழகிட்டீங்க…அங்க இதெல்லம் பார்த்திருக்க மாட்டீங்க…நீங்க உண்டு  உங்க வேலை உண்டுன்னு…இருந்திருப்பீங்க…

சரி…அதுக்கென்ன இப்ப…? அதுக்கும் நீங்க கேட்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நான் எதுக்கு நீங்க சொல்ற வட்டத்துக்குள்ள வரணும்னு யோசிக்கிறேன்…?

என்ன சார்….இந்த ஆபீஸ் சூப்பிரன்ட் நீங்க…உங்ககிட்டதான் ஒவ்வொரு ஸ்கீமுக்குமான பாஸ் பண்ணின பில்களோட செக் வந்து சேரும். அந்தந்தக் கான்ட்ராக்டர்களுக்கு நீங்கதான் டிஸ்டிரிபியூட் பண்ணப் போறீங்க…அவ்வளவு பெரிய பொறுப்புல இருக்கிற நீங்க…எங்க சம்பந்தப்பட்ட சின்ன விஷயத்தை தெரியாத மாதிரிக் கேட்டா என்ன சார் அர்த்தம்? உண்மைலயே உங்களுக்குத் தெரியாதா? இல்ல நமக்கெதுக்கடா வம்புன்னு ஒதுங்கப் பார்க்கிறீங்களா? – அவர்களுக்குத் தலைமை போல் அறியப்பட்ட துரைராசன் இப்படிக் கேட்டதும்…துணுக்குற்றார் ஈஸ்வரன்.

சீனியர் மோஸ்ட் அசிஸ்டன்ட்….தைரியமாய்க் கேட்கிறார்…நாளைக்கே நான் உங்க சீட்டுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல சார்…! சொல்லாமல் சொல்கிறாரோ? யார் கண்டது? வந்தாலும் வரலாம். காலியிடத்தைப் பிடிப்பதை விட இருக்கும் ஒருவனைத் தூக்கி எறிவதுதான் இங்கே கைவந்த கலை. அதில் பெருமையும் கூட. அப்பத்தானே அடுத்தவன் தன்னைத் தொடமாட்டான் என்கிற திண்ணக்கம். தான் வந்தது காலியிடம் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறாரோ?

சர்க்கிள் ஆபீஸ்ல இருந்திருக்கீங்க…சப்டிவிஷன் நடைமுறையெல்லாம் தெரியாதுன்னா எப்டி சார்…? அங்கேயிருந்து நீங்க வர்றதை சந்தோஷமா நாங்க எதிர்நோக்கினோம்…நீங்க நழுவப் பார்க்கறீங்க…! நீங்கதான் எங்களுக்குப் பாதுகாப்பு…! உங்கள வச்சுத்தான் நாங்க…

அடேயப்பா…கொக்கியைப் பலமாய்த்தான் போடுகிறார்கள். நாளைக்கு ஏதேனும் வில்லங்கம் என்றால் எல்லாம் உங்கள் தலையில்தான் என்று மறைபொருளாய் உணர்த்துகிறார்கள். மீதிக் காலத்தைக் கழிப்பதுதான் இனி பிரம்மப் பிரயத்தனம் போலும்…!

வெறுமே அன்றாட வேலைகளைப் பார்ப்போம், கிளம்புவோம்…எதிலும் தலையைக் கொடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பார்த்தால் விட மாட்டார்கள் போலிருக்கிறதே…? எங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்றல்லவா வந்து நிற்கிறார்கள்? தரகு வேலை பார்க்கச் சொல்கிறார்களோ? மாமா?

இதுநாள் வரை வண்டியை ஓட்டியது பெரிதில்லை. இனி மீதிக் காலத்தைக் கவனமாகக் கழிப்பதுதான் துர்லபம் …! உஷாரானார் ஈஸ்வரன்.

இங்க என்ன வழக்கமோ அது,  தானா நடக்குமுல்லங்க…அதுக்கு நான் என்ன பொறுப்பு? அதெல்லாம் கூடாதுன்னு நான் நிறுத்தக் கிளம்பினேன்னா நீங்க என்கிட்டே வந்து நிற்கணும்…உங்களுக்கு வழக்கமா உள்ளது வரத்தான போகுது…என்னை விட்ருங்க…அவ்வளவுதானே?

கொஞ்ச நேரம் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதி தவழுவதைக் கண்ணுற்றார் ஈஸ்வரன். அவருக்கு அந்த நடைமுறைகளே பிடிக்காமலிருந்தது. சரியாக வந்து சிக்கிக் கொண்டோம் என்று நினைக்க ஆரம்பித்திருந்தார். வசமாக எதிலேனும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதிலேயே அவர் கவனம் பதிந்திருந்தது.

சார்…மன்னிக்கணும்….கொஞ்சம் உட்கார்ந்து பேசலா மா….?

என்ன துரைராசன்…இப்டியெல்லாம் கேட்கறீங்க…? உங்க யாரையும் என்னைக்கும் நான் நிற்க வச்சுப் பேசினதில்லையே? என் எதிரே வந்ததும் முதல்ல உட்காருங்கன்னுதானே சொல்லுவேன்…

துரைராசன் உட்கார்ந்தார். மற்றவர்கள் அவரைச் சுற்றி நெருங்கி வந்தார்கள்.  இது ஒரு தனிக் கும்பல். தொழில் நுட்பம் என்பது தனி. ஆபீஸர் குழு என்பது சிறப்புத் தனி. அது மாவட்டம் வளைத்தது. பெரிய இடம்…

சார்…தப்பா நினைச்சிக்கிடாதீங்க…கொஞ்சம் இந்த லிஸ்டை நீங்க பார்க்கணும்….இதான் இங்க உள்ள நடைமுறை. இத நீங்க ஓகே பண்ணிட்டீங்கன்னா நாங்கபாட்டுக்கு வேலையைப் பார்க்கப் போயிடுவோம். நீங்க எதுவும் சொல்லணும்னோ, கேட்கணும்னோ வச்சிக்க மாட்டோம். எல்லாம் தானா, பம்பரமா நடக்கும். எங்கள நம்பி நீங்க தைரியமா வலம் வரலாம்….என்றவாறே ஒரு சின்னத் தாளை நீட்டினார் துரைராசன்.

அதைக் கையில் வாங்கிய ஈஸ்வரன் ஒன்றின் கீழ் ஒன்றாக வரிசையாக எழுதியிருந்ததைக் கண்ணுற்றார். நிரந்தர ஆவணக் குறிப்பு போல ஒவ்வொருவர் பையிலும் இருக்குமோ? என்று நினைத்துக் கொண்டார்.

அதில் அவர் பெயரும் இருந்தது அவரை ஆச்சரியப்படுத்தியது.  அவரில் ஆரம்பித்து காவலர் வரை சென்று முடிந்திருந்தது. அந்த ஆண்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகை என்ன என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு தனித் தனிப் பணிக்குமான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் குறித்து, அந்தந்தப் பணிகள் முடிந்த பிறகு அப்பணிகளை வெற்றிகரமாக முடித்த நிலையில், அதில் பங்கு பெற்ற பணியாளர்களுக்குச் சேர வேண்டிய அவரவர் பணி அளவிலான சதவீதக் கமிஷன் தொகை கணக்கிடப்பட்டு மொத்தமிடப்பட்டிருந்தது.

கில்லாடிகள்தான். மாதா மாதம் ஆய்வுக் கூட்டத்திற்கு அட்டவணை போடும் இவர்களுக்கு இதுவா தெரியாது? வெறும் பிசாத்து…!

மொத்தம் இவ்வளவா? தருவாங்களா? தர மனசு வருமா? இதென்ன அநியாயமாயிருக்கு? இத எப்படிக் கேட்கறது? என்ன பேர் சொல்லி?

இதுதான் இங்க வழக்கமா? என்று அதிராததுபோல் கேட்டார் ஈஸ்வரன்.

இந்த சப் டிவிஷன் ஆரம்பிச்சதிலிருந்து இதான் சார் வழக்கம். ஆனா பதினஞ்சு இருபது வருஷத்துக்கு முன்னாடி திட்ட ஒதுக்கீடுத் தொகை எவ்வளவு இன்னைக்கு எவ்வளவுங்கிறதை நீங்க கொஞ்சம் நினைச்சுப் பார்க்கணும்…அதப்போல் பத்து மடங்கு இருபது மடங்கு இன்னைக்கு வரவு உயர்ந்திருக்கு. நிதி ஒதுக்கீடு அதிகமாயிருக்கு.  ஆனா எங்க பாக்கெட் வரவு அதே இடத்துலதான் நிக்குது….இதுக்கெல்லாம் போராட முடியுமா சார்…மனமுவந்து செய்றது…பிரியப்பட்டுக் கொடுக்கிறது…அன்னைப்போல பல மடங்கு வேலை கூடியிருக்கு…ஆனா யாரும் கண்டுக்கிறதில்லை….இப்ப நீங்க வந்திருக்கீங்க…நீங்களாவது இந்த வேறுபாட்டை எடுத்துச் சொல்லி எங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வாங்கித் தரணும்…சர்க்கிளாபீஸ்லருந்து வந்திருக்கிறதால உங்க வார்த்தைதான் எடுபடும்…ராப்பகலா வேலை பார்த்து நாங்கள்லாம் ரொம்பக் கஷ்டப்படுறோம் சார்…அலுங்காமக் குலுங்காம பெரிசுக தட்டிட்டுப் போயிடுதுங்க…பிள்ளைங்களுக்கு ஒரு டேர்ம் ஃபீசுக்கு ஆகாது சார் இந்தத் துட்டு…!

இந்தப் பாவக் காசுலயா பையன்களைப் படிக்க வைக்கிறீங்க…? கேட்கத் தோன்றியது ஈஸ்வரனுக்கு. நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டார் வறுமையில் வாடுவதுபோல் பேசுகிறா்ாகள். ஊமை அழுகை அழுகிறார்கள்.

நானே ஏண்டா இங்க வந்தோம்னு நினைச்சு இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கேன்…நீங்க என்னடான்னா? எதெதுலயோ கொண்டு என்னை மாட்டிவிடப் பார்க்கிறீங்க?

நீங்கதான சார் மானேஜர்…சூப்பிரண்ட்…எல்லாமும்…உங்ககிட்டதான நாங்க சொல்ல முடியும்.சார் அப்டிச் சொல்லக் கூடாது….பல வருஷமா இருக்கிற வழக்கத்த மாத்தறதுக்கு நாம யாரு? ஊரோட ஒத்து வாழ்…அதான் நம்ம பாலிசி…எல்லாருக்கும் உள்ளது நமக்கும்….இந்த சர்க்கிள்ல மத்த சப்-டிவிஷன்லெல்லாம் என்னைக்கோ நிலமை மாறிடிச்சி…ஆனா இங்கதான் எதுவும் நடக்கலை…..பழசுலயே இழுத்திட்டிருக்கு…எங்களுக்கு சப்போர்ட் பண்ண இப்ப நீங்க இல்லேன்னா, பின்ன எப்பவும் இல்ல சார்…

கிணறு தோண்ட பூதம் கிளம்பிய நிலையாய் உணர்ந்தார் ஈஸ்வரன். எதையும் தன்னால் நிச்சயம் மாற்ற முடியப் போவதில்லை. ஆபீஸ் நிர்வாகத்தைச் சீரமைக்கலாம் என்று வந்தால் இங்கே கதை கந்தலாய்க் கிடக்கிறதே! ஒரே வழி…வேண்டுமானால் இந்த இடத்தை விட்டு அகலலாம். அதுவும் இப்போதைக்கு முடியாது. குறைந்தது ஒரு வருஷமாவது ஆக வேண்டும். மெடிக்கல் லீவு போடலாமென்றால் அடுத்து ப்ரமோஷன் எதிர்நோக்கும் நிலையில் வீட்டில் உட்கார்ந்திருந்தால் துறை நடப்பியல் எதுவும் தெரியாது போய்விடும் அபாயம் உண்டு. என்ன செய்யலாம்? ஈஸ்வரனின் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்த போது சட்டென்று அவருக்கு யோசனை தோன்றியது. சொன்னால் சந்தோஷப் படுவார்களா?

ஒண்ணு செய்யுங்களேன்….இந்த லிஸ்ட்ல எனக்குன்னு…அதாவது மானேஜருக்குன்னு ஒரு பங்குத் தொகை வருதுல்ல…அதை நீங்க எல்லாரும் பிரிச்சு எடுத்துக்கங்களேன்.    என்னை ஆள விட்ருங்க….எப்டி யோசனை….?-உற்சாகமாய்த்தான் கூறினார் ஈஸ்வரன். அந்தப் பாபக் காசு தனக்கு வேண்டாம்…என்பதே அவர் எண்ணமாயிருந்தது. இந்தக் கடைசி மூணு வருஷத்தில் இந்தச் சாக்கடையில் வீழ வேண்டுமா என்பதே அவர் எண்ணமாயிருந்தது. இத்தனை ஆண்டுகள் கஜகர்ண வித்தை பயின்றாயிற்று. இனிமேலா தடம் புரள வேண்டும்?

சொன்ன மறு நிமிடம் ஒருசேரக் குரல் உயர்ந்தது.

ஐயையோ…அதெல்லாம் வேண்டாம் சார்…உங்க காசு எங்களுக்கு வேண்டாம்…இன்னும் அந்தப் பாவம் வேறே சேரணுமா? என்றனர் எல்லோரும். எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான வார்த்தைகளில் கோரஸாய் மறுப்பைத் தெரிவிக்கிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது ஈஸ்வரனுக்கு.

அப்போதைக்கு என்ன தீர்வு என்கிற ரீதியில் யோசிக்க ஆரம்பித்திருந்தார். அப்போ பாவக் காசு என்று ஒப்புக் கொள்கிறார்கள்! அப்படித்தானே? ஆனால் விட முடியவில்லை. மனசில்லை. பழகிப் போச்சு…அதுதானே? கோபப்படுவதா? பரிதாபப்படுவதா? எங்கிருந்து மாற்றத்தை நிகழ்த்துவது? எவ்வழி அவ்வழி?

சரி….முயற்சி செய்றேன். நீங்க சொல்றதை பாஸ்கிட்டப் பேசிப் பார்க்கிறேன். …சந்தோஷம்தானே? சீட்ல போய் அவுங்கவுங்க வேலையைப் பாருங்க…ஆபீஸ் வேலைல எந்தத் தாமதமும் கூடாது…அதுதான் எனக்கு வேணும்…

வாங்கிக் கொடுக்கிறேன்னு சொல்லுங்க சார்…நாங்க எல்லாரும் எப்பவும் உங்க பக்கம்தான் நிற்போம்…அதுல உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்….கன் மாதிரி வச்சிருப்போம் அவுங்கவுங்க சீட் வேலயை…யாரும் எப்பவும் வந்து இன்ஸ்பெக்ட் பண்ணிக்கலாம்…எந்த நிமிஷமும் ஆடிட் வரலாம்….அரைநாள்ல தயாராயிடுவோம்….உங்க பேருக்கு எந்த பங்கமும் வராது…அதுக்கு நாங்க கியாரண்டி…..

அப்படீன்னா நான் சொல்றதை நீங்களும் கேட்டுத்தான் ஆகணும்…! என் பங்குத் துட்டை நீங்க எல்லாரும் பிரிச்சு எடுத்துக்குங்க…எனக்கு வேண்டாம்…அதுக்கு சம்மதம்னாத்தான் என்னால நீங்க சொல்றதைச் செய்ய முடியும்…என்ன சொல்றீங்க…? என் பேரே இந்தப் பேச்சுல அடிபடக் கூடாது…ஓகேயா…?

பதில் சொல்லாமல் அகன்றனர் எல்லோரும்.  நகரும் அவர்களையே ஒவ்வொருவராய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன்.

பாவம் இவர்கள்…பரிதாபத்துக்குரியவர்கள். அவர் மனதுக்கு             என்னவோ இப்படித்தான் தோன்றியது.

நிதியாண்டு வெற்றிகரமாக முடிந்த முதல் வாரத்தின் கடைசி நாள்…. வளாகத்தினுள்ளே உள்ள கோயிலில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். ஒரு வரிசையில் ஆண்களும்…எதிர் வரிசையில் பெண் பணியாளர்களுமாய்…

ஒலி பெருக்கி பக்திப் பாடல்களை அலற விட்டுக் கொண்டிருந்தது. வண்ணக் காகிதங்கள் தோரணங்களாய்க் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. சீரியல் பல்புகள் விதவிதமான வண்ணங்களை உமிழ்ந்து கொண்டிருந்தன. குப்பையும் கூளமுமாய் இருக்கும் அலுவலகத்திற்கு, அந்த வளாகத்திற்கு  இப்படியொரு அழகு எங்கிருந்து வந்தது. கொண்டாட்ட மனநிலையில் அனைத்து ஊழியர்களும்….

அழைத்து வரப்பட்டிருந்த அர்ச்சகர் மந்திரங்களைப் பக்தி பூர்வமாய் உரக்கச் சொல்லி,  ராகமாய் உச்சரித்து, கற்பூரம் காண்பித்துப் பூஜையை ஜோதி மயமாய் நிறைவேற்றிய அந்தத் தருணம்…..

எல்லோரும் பார்க்க வரிசையிலிருந்து நிதானமாய்  அகன்ற ஈஸ்வரன் இரு பக்கம் நின்றிருந்தவர்களையும்  கைகளால் சைகை காண்பித்து நடுவே வழி உண்டாக்கி விலக்கிக் கொண்டு நடந்து, எல்லோரும் திடுக்கிட்டுப் நோக்க, தன் இடக் கையிலிருந்த அந்தக் காகித உறையிலிருந்து பணத்தை அப்படியே உருவி எடுத்து, எல்லோரும் ஆச்சர்யமாய்ப் பார்க்க  சந்நிதி வாயிலுக்கு முன்பு தரையில் பதிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய உண்டியலில் அதைச் சேர்ப்பித்தார்.  நன்றாய் உள்ளே போய் விட்டதா என்று அங்கு கிடந்த ஒரு சிறு குச்சியை எடுத்து உண்டியலின் குறுகிய நீண்ட வாய்ப் பகுதியைக் குத்தி விட்டார்.  பிறகு ஒரு திருப்தி வந்த நிறைவோடு….திரும்பி….வரிசையின் கடைசியில் வந்து அமைதியாய் நின்று கொண்ட போது, எதிர்கொண்ட கற்பூர ஆரத்தியை  இருகரம் குவித்து அப்படியே அணைத்து வாங்கி முகத்தில் கண்மூடி ஒத்திக் கொண்டார். அந்தக் கணம் மனதில் ஏதோவொரு நிறைவு வந்திருப்பது போல் அவரால் உணர முடிந்தது.

பூஜை முடிந்த கையோடு எல்லோரும் அவரவர் இருப்பிடம் நோக்கி கலைந்து செல்ல….சார்…சார்…என்று பின்னால் எழுந்த குரல்களைப் பொருட்படுத்தாது வேகமாய் நடந்தார் ஈஸ்வரன்.

என்ன சார் இப்டிச் செய்திட்டீங்க….? எங்களுக்கு வேண்டாம்னு நாங்க சொன்னதுக்கா இந்த தண்டனை…! நீங்க இப்டிச் செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா சரின்னு வாங்கிட்டிருப்போமே சார்…உங்க மனசைப் புண்படுத்திட்டமா சார்…? எங்களை மன்னிச்சிடுங்க...சார்…கொஞ்சம் முன்னாடியாவது நீங்க எங்ககிட்டே சொல்லியிருக்கலாமில்ல சார்…! உங்களை மாதிரி எங்களாலெல்லாம் இருக்க முடியாது சார்… நாங்க அப்பாவிங்க…சராசரிங்க…-புலம்பிக்கொண்டே நெருக்கமாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

எதுவுமே பதில் பேசாமல் தன் இருக்கையை நோக்கி நடந்து கொண்டிருந்தார் ஈஸ்வரன். கோயிலிலிருந்து தன் அலுவலக இருக்கை கொஞ்சம் அதிக தூரம்போல் தோன்றியது அன்று..!

காசுப் பொழக்கம் ரொம்ப அதிகம்னு சொன்னாங்க…நீங்கள்லாம் இப்டி மாறுவீங்கன்னு நாங்கள்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கல சார்…எல்லாரும் உங்களப் பத்திதான் பேசிக்கிறாங்க…-அன்று மயில்வாகனம் சொன்ன வார்த்தைகள் ஈஸ்வரனின் காதுகளில் அறைந்து கொண்டிருந்தன.

வதந்தியான, வம்பு நிறைந்த மனிதாத்மாக்களின் தங்கு தடையற்ற  விட்டேற்றியான எண்ணங்களை, பேச்சை எதைக் கொண்டுதான் தடை போடுவது? எதைச் சொல்லிப் புரிய வைப்பது? எப்படிச் சொல்லி விளங்க வைப்பது?

இப்டின்னு தெரிஞ்சிருந்தா சரி கொடுங்கன்னு வாங்கிட்டிருப்பமே சார்….அவ்வளவு வேதனையிலும் அவர்களின் இந்த வார்த்தைகளை நினைத்து வேதனையோடு சிரித்துக் கொண்டார் ஈஸ்வரன். அவர்களைப் பொறுத்தவரை  அந்த விஷயத்தில் திடமாய்த்தான் நிற்கிறார்கள். திண்டாட்டமும் தவிப்புமெல்லாம, சரியாயிருக்கணும் என்று உறுதியாய் நின்று  செயல்படுபவனுக்குத்தான். உலகம் இன்றுவரை இந்த ரீதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நினைத்துக் கொண்டார்.  

மாற்றம் என்ற சொல் ஒன்றே மாறாதது. மற்ற அனைத்தும் மாறக்கூடியதுதான்.  ஏற்கனவே மாறி, ஊறித் திளைத்துக் கிடப்பவர்கள் மத்தியில் எந்தப் புதிய  மாற்றத்தையும் கொண்டு வர வாய்ப்பேயில்லை என்பதுவே நிதர்சனம்.

                                                ----------------------------

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

சிறுகதை “உரசல்கள்” தினமணி கதிர் 13.10.2024

                                                                                                        ---------------------------------   ...