எனக்கு எதுவும் விலக்கல்ல. எழுத்துப் பயிற்சிக்காக நான் மாத நாவல்களும் எழுதுவதுண்டு. விறுவிறுவென்று கதை சொல்ல முடிகிறதா என்கிற பரீட்சார்த்தம். எதிர்பாராத (நானே எதிர்பாராத) முடிச்சுகளை நானே போட்டுவிட்டு அதிர்ந்து கிடப்பேன். பின்பு எந்தவொரு அத்தியாயத்திலாவது அதை அவிழ்க்க முனைவேன். சாமர்த்தியமாக, கதைக்கு முற்றிலும் பொருத்தமாக, இயல்பு மாறாமல், சிடுக்கு அவிழ்ந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வேன். புதிய புதிய கதா பாத்திரங்களை அங்கங்கே பொருத்தி, உறவு முறைகளை நீட்டித்து, கதை கச்சிதமாய் வளர்ந்து செல்வதை நானே ரசிப்பேன். நான் ரசிப்பதை மற்றவர்களாலும் ரசிக்க முடியுமா என்பதை அவர்கள் நிலையில் நின்று கவனமாய்ப் பார்ப்பேன். இப்படியே பதின்மூன்று அத்தியாயங்கள் கடந்து செல்ல, ஒரு நூறு பக்கங்கள் தாண்டும் போது கதை தானே தன் முடிவைத் தேடிக் கொண்டு நிற்கும். அங்கே தன்னையறியாமல் அதுவே நின்று போதும் என்று சொல்லும்.
இப்படி என் எழுத்துப் பயிற்சியில் வளர்ந்ததுதான் இந்த நாவல்…குறுநாவல்….சொல்லாதே யாரும் கேட்டால்…
மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் இன்றும் நம்மிடையே உண்டு. அவர்களில் முக்கியமானவர் திரு கர்ணன். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், 4 நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுதிகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு “நினைவின் திரைக்குள்ளே (க(ரு)விதைகள்)“ . கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரது “அவர்கள் எங்கே போகிறார்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பு முக்கியமானது.தமிழக அரசு பரிசு பெற்றது.
பழம் பெரும் எழுத்தாளர்களைப் பற்றிய மற்றும் அவரறிந்த மேன்மைமிக்க மனிதர்கள்பற்றிய ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இவரது புத்தகங்கள் அனைத்தையும் கவிதாவும், நர்மதா பதிப்பகங்களும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஐம்பதுகள், அறுபதுகளில் ஜெயகாந்தனுக்குப் போட்டியாக விகடனில், தாமரையில் என்று கதைகளைக் கொடுத்தவர் இவர். ஜெயகாந்தனின் பத்துக்கதைகள் பெஸ்ட் ஸ்டோரீஸ் என்றால் கர்ணனின் ஐந்து கதைகளாவது கண்டிப்பாய் அதற்குச் சமமாய், சவாலாய் நிற்கும்.
காலத்தால் அறியப்படாத எழுத்தாளர்கள் நம்மிடையே பலர். அறிந்தும் சொல்லப்படாதவர் என்று வேண்டுமானால் இவரைச் சொல்லலாம். எழுத்தாளர்களுக்கான குறுகிய மனப்பான்மையில் இது முதன்மை பெறுகிறது
ஏற்கனவே உயிர்மையில் படித்ததுதான் என்றாலும், கையில் புத்தகமாய் வைத்துப் படிப்பதில் ஒரு சுகம், சந்தோஷம். மறு வாசிப்புக்கும், மறுபடி, மறுபடி வாசிப்புக்கும் தகுதியானவற்றைத்தானே தேடித் தேடிப் படிக்கிறோம். அப்படித்தான் படித்தேன் இன்று. முதல் கதையைப் படித்ததுமே மனசு நடுங்கிப் போனது. இதயம் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் பல கிராமங்களில் சாதி வெறி எப்படித் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது? என்று நினைக்க வைத்தது. முதல் கதையைப் படித்து முடித்து, அதன் பாதிப்பு அடங்கவே ரெண்டு நாள் ஆகும்போல்தான் தெரிகிறது. மனசு உள்ளுக்குள் அழுது கொண்டே இருக்கிறது. எண்ணி எண்ணிப் புழுங்குகிறது. எல்லா மக்களும் சந்தோஷமாயும், ஒற்றுமையாயும், சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளையும், செய்திகளையும் அறிய நேரிடும்போது தங்களுக்குள் நொறுங்கித்தான் போவார்கள்.
“சாவு சோறு - அதுதான் நான் படித்த முதல் கதை. அது வெறும் கதையல்ல. அந்த மக்களின் அவல வாழ்க்கை. புத்தகத்தின் பெயரும் அதுதான். க்ரியா வெளியீடு. இன்று கைக்குக் கிடைத்தது. இமையத்தின் ஆழமான எழுத்து மனசைப் பிழிய வைக்கிறது. அற்புதமான படைப்பாளி. அவரின் எந்தப் படைப்பையும் சோடை சொல்லவே முடியாது. நான் அதிகம் விரும்பிப் படிக்கும் படைப்பாளிகளுள் அவரும் ஒருவர்.
மீதமுள்ள ஒன்பது கதைகள் இன்னும் என்னெல்லாம் பாடுபடுத்தப் போகிறதோ என்னை...! கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு ”சாவு சோறு”
படித்ததில் பிடித்தது -
----------------------------------------
படித்தது - “கிராம ஊழியன்” என்ற இதழில் தொடராக வந்து பேசப்பட்ட தி.ஜா.ரா.வின் “அமிர்தம்“ என்ற முதல் நாவல்தான் நான் இன்று படித்து முடித்தது. அவரது முதல் நாவல் என்றே என்னால் இதை எண்ண முடியவில்லை. அத்தனை அனுபவச் செழுமையோடு கூடிய எழுத்து. தாசி குலப் பெண்ணான அமிர்தம் சேற்றிலே மலர்ந்த செந்தாமரையாக காதல், அன்பு இவற்றின் பொக்கிஷமாகத் திகழ்கிறாள். பல நாவல்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே...சரி..கடைசில என்னவாகுது பார்ப்போம் என்று கடக்க வைத்து விடும். அல்லது எதற்கு நேரத்தை வீண் பண்ணிக் கொண்டு என்று மூடி வைக்க உதவும். இது அப்படியில்லாமல் கடைசிவரை நம்மைக் கை கோர்த்து அழைத்துச் செல்கிறது. அழகிய சொற்பிரயோகங்கள் மிகுந்த கலையழகோடு ஆழ்ந்து நம்மை ரசிக்க வைக்கின்றன. நாவலுக்கு ஒரு அற்புதமான முடிவைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். உள்ளார்ந்த மனசாட்சியின் வெளிப்பாடு அது. கடைசிப் பக்கங்களை எட்டும்போது இந்த நாவல் இப்படித்தான் முடியும் என்று யாரேனும் அவரிஷ்டத்திற்கு எதிர்பார்த்தார்களென்றால் நிச்சயமாக அது அப்படி இருக்காது. அப்படியான சற்றும் கணிக்க முடியாத , மகுடம் சூட்டினாற்போன்ற முடிவாக அமைவது பெரும் சிறப்பு. அது தி.ஜா.ரா.வின் பெருமை.
கருத்தைக் குலைக்கும் அமிர்தத்தின் சௌந்தர்யம். அவிழ்ந்து புரண்ட அந்தக் கேசபாரம், அங்க புஷ்டி. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் கொடியுடல். கலங்கிய கண்கள். நனைத்து விட்டாற்போல் மின்னிய இமை மயிர்கள். நகரத்தில் எங்கு சென்றாலும் காட்சியளிக்கும் உன்னத கோபுரம்போல், அமிர்தத்தின் அலட்சியத்தைப் பற்றிய நினைவுகளுக்கு நடுவே, அவளுடைய சௌந்தர்யம் அவர் நெஞ்சில் ஆடிக் கொண்டிருந்தது. பரீட்சை முடிவை எதிர்பார்ப்பவன் போல தோல்வியை நினைக்கக் கூசித் தன்னையே நம்பிக்கையுடன் தேற்றிக் கொண்டார். காரணம் அவர் பரம்பரையில் இதுவரை ஒருவரும் குடும்ப பாசத்திற்கு வெளியே வேறு பிரேம பாசங்களில் கட்டுண்டதில்லை....
இப்படி வரிக்குவரி சொல்லிக் கொண்டே போகலாம் இந்த நாவலின் தேனாய் இனிக்கும் எழுத்து வன்மையின் ஸ்வாரஸ்யத்தை அனுபவித்து மகிழுங்கள். ஒரு அற்புதமான நாவலைப் படித்த திருப்தி, நிறைவு எனக்கு.
படித்ததில் பிடித்தது என்ற வரிசையில் சக்தி ஜோதியின்”சொல் எனும் தானியம்“ கவிதைத் தொகுப்பு முக்கியமாகப் படுகிறது. இந்தத் தொகுதியின் கவிதைகளை ஆழப் புரிந்து அற்புதமாக ஒரு அணிந்துரை வழங்கியுள்ளவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்.கவிதைகளைப் படிக்கும் முன்பும், படித்து முடித்த பின்பும் மீளவும் படித்து ரசிக்க வேண்டிய அணிந்துரை இது.
தொகுப்பில் பல கவிதைகள் மனதை நெருடின என்பது நிஜம். இவர்கள் நன்றாகவே எழுதுகிறார்கள். அணிந்துரையின் அழகில் சொல்லப்படுவதுபோல், பாடுபொருளைக் கவிஞன் தீர்மானிக்கலாம். ஆனால் கவிஞனை மொழிதான் நிர்ணயிக்கின்றது என்பதும், ஒரு ரோஜாவைப் பாட வேண்டிய அவசியமில்லை, கவிதையில் ரோஜா மலர்ந்தால் போதும் என்பதும், ஒரு மரத்தின் இலைகள் இயற்கையாக அரும்புவதுபோல் கவிதை துளிர்க்க வேண்டும் என்றும் அணிந்துரை மாலையாகப் பிரவகிக்கின்றது. ஒரு கவிதை இன்னும் என்னைச் சங்கடத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
எனக்கு முன்பாக உறங்காதிருந்த
பெண்கள் பலரின்
தசையிழைகளினாலும்
நரம்புகளினாலும்
என் உடல் கட்டப்பட்டுள்ளது
பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட
தானியங்களையே நாம் உண்ணுகிறோம்
பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட நூல் கொண்டே நாம் உடுத்துகிறோம்
அந்த மண் கொண்டே நாம் நட்டுகிறோம்
கட்டப்பட்ட வீடு முழுக்க
ஆணின் குறட்டை ஒலி நிறைந்திருக்கிறது்
உண்மையில் நான் எனக்கென்று உறங்கவே விரும்புகின்றேன்
இத்தனை காலம், இத்தனை பெண்கள்
உறங்காதிருந்த அத்தனை உறக்கமும்
நான் உறங்கவே விரும்புகின்றேன்
சவம் போலொரு யுகாந்திர உறக்கம்என்னைத் தழுவட்டும்
கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது பாராட்டுக் கேடயமும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கியது. அருமையான கவிஞர். வலியக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டவர் என்று சொல்ல வேண்டும். எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. எழுத்து, அது என்ன சொல்கிறது என்பது மட்டும்தானே கணக்கு. இங்கே அப்படி அல்லாமல் பலவும் புகுந்து கொண்டன. அதுபற்றி அவருக்கு எந்த இழிவுமில்லை. அவர் கவிதைகள் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. “அன்று வேறு கிழமை” என்ற ஒரு கவிதைத் தொகுப்பு போதும் அவரது பெயர் சொல்ல...! ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். கவிஞருக்கு மனமார்ந்த, அன்பான. இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
சாம்பிளுக்கு ஒரு கவிதை
----------------------------------------------------------
அம்மாவின் பொய்கள்
----------------------------------------------------
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்
— with Ayyanpettai Dhanasekaran.
படியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பதுபோலவோ, நாவல் படிப்பது போ லவோ விறுவிறுவென்று நகர்ந்து பலனில்லை. உங்களை நீங்கள் அறிவதற்கான ஆத்மநிலையில் முழுமையான சுயச் சார்போடு படித்து உள்வாங்க வேண்டும்.
பாலுறவை நான் எதிர்க்க வில்லை. ஆனால் அதில் என்ன சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காண வேண்டும். தன்னை இழந்த நிலையை ஒரு கணம் பாலுறவு அளிக்கிறது. மறுபடியும் மனம் பழைய கொந்தளிப்பு நிலைக்கே வந்துவிடும். அந்தக் கணத்தில் துயரம், பிரச்னை, “தான்“ என்ற இவை இல்லையாதலால் பாலுறவைத் திரும்பத் திரும்ப வேண்டுமென்கிறோம். உங்கள் மனைவியை அன்புடன் நேசிப்பதாகக் கூறுகிறீர்கள். அந்த அன்பில் பாலுறவு இன்பம், உங்கள் குழந்தைகளை அவள் பராமரித்தல், உங்களுக்குச் சமையல் செய்து உணவு பரிமாறுதல் போன்றவை எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கும்.நீங்கள் அவளைச் சார்ந்திருக்கிறீர்கள். அவள் தன்னுடைய உடலை உங்களுக்குத் தந்திருக்கிறாள். உங்களுடன் அவள் உணர்ச்சிகளை பங்கு கொண்டிருக்கிறாள். உங்கள் செய்கைகளுக்கு ஊக்கமளிக்கிறாள்.உங்கள் நலனுக்கும், பாதுகாப்புக்கும், தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள். என்றேனும் ஒரு நாள் அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டு உங்களை விட்டு விலகி விட்டால் உங்கள் மனம் தடுமாறுகிறது. உங்களுக்குப் பிடிக்காத அந்தத் தடுமாற்றம்தான் பொறாமை, மனவலி, கவலை, வெறுப்பு, வன்முறை இப்படிப் பலவும். அதாவது நீ எனக்கே சொந்தமானவளாக இருக்கும்வரை நான் உன்னை அன்புடன் நேசிப்பேன். என்னை விட்டு விலகினால் உன்னை நான் வெறுப்பேன் பாலுறவு மற்றும் என்னுடைய தேவைகளை நீ பூர்த்தி செய்யும்வரை நான் உன்னை நேசிப்பேன். இவைகளை நீ தராவிட்டால் உன்னை நான் வெறுப்பேன் என்று கூறியதாக ஆகும்.
இதைப் படிக்கும் நீங்கள் உங்களுக்குள் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்படி இல்லை என்று யாரேனும் ஒருவர் சொல்ல முடியுமா?
அட போங்க சார்...படத்தப் பார்த்ததும் இந்தியன் தாத்தாதான் ஞாபகத்துக்கு வருது.....!! அதையும் நினையுங்கள். இதையும் படியுங்கள். எது ஜெயிக்கிறது என்று பாருங்கள்.
வாசிப்புப் பயணத்தில்
--------------------------------------------
மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.
ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும்.
1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்.
2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள்.
3. மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது.
4. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது.
5. மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது.
6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது.
7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.
12.11.2014 அன்று வைகையில் சென்னைக்குப் பயணித்தபோது ஆசையாய் எடுத்துப் படித்த மொழி பெயர்ப்பு நாவல். நாவலின் ஒட்டு மொத்த நோக்கத்தையும் மனதிற்குள் ஆழமாய் வாங்கி, வரிக்கு வரி அதன் தன்மை பிசகாது, ஒரு மொழி பெயர்ப்பைப் படிப்பது போன்ற உணர்வே இல்லாது, அழுத்தமாகக் கதை சொல்லிச் செல்லும் அழகு. ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு நடை படிவதுண்டு. ஆனால் மொழி பெயர்ப்புக்கு என்ன நடை? படைத்த ஆசிரியன் எந்த நடையில் கதைசொன்னானோ, அதே நடையில், அதே உணர்வின் ஆழத்தில் பயணித்து, , தடங்கலில்லாத தெளிந்த மொழியில், நெருடலின்றி, அந்தந்த மொழியாளர்கள் சுலபமாக உள்வாங்குவதுபோல் பக்கங்களை நகர்த்திய இந்த நாவலைப் படித்து முடித்த அனுபவம் நிறைவானது.
நேற்று (02.10.2014) திரு கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருது விழா நாமக்கல்லில் சிறப்புற நடந்தேறியது. திரு ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் சி.பி.எம்.(எம்) அவர்கள் பேராசிரியர் திரு அருணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் முதன்மை விருது மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் விழங்கிச் சிறப்புரை வழங்கினார். வரவேற்புரையை திரு கு.பாரதிமோகன், உறுப்பினர், கு.சி.பா. அறக்கட்டளை நிகழ்த்தினார். துவக்கவுரையை திரு ச.தமிழ்ச்செல்வன் அரங்கேற்றினார்.திரு கா.பழனிச்சாமி, கு.சி.பா.அறக்கட்டளைச் செயலர் முன்னிலை வகித்து விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. தனக்கு வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் தொகையை அப்படியே கட்சி நிதியாக திரு ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார் திரு அருணன் அவர்கள். அருமையான ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியதும் மறக்க முடியாதது. இம்மாதிரி நாம் என்று பேசப் போகிறோம் என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தியது.
பல விருதுகள் பெற்ற, திறமையான, அற்புதமான படைப்பாளி திரு சுப்ரபாரதிமணியன் அவர்களுடன் காலை பத்து மணி முதல் மாலை மூன்று மணி விழா துவங்கும்வரை உடன் இருந்து உரையாடியது மறக்க முடியாத நிகழ்வாக எனக்கு அமைந்தது. அன்பும், அரவணைப்பும் உள்ள அவருடனான மன நெருக்கம் என்றும் என் நினைவில் நிற்பது.
இந்த பிரம்மாண்டமான விழாவில் எனது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்ட சிறப்பு விருது மற்றும் ரூ.10000 எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை. நிறைவாய்க் கிடைத்த விருதும் புத்தகங்களும், சான்றிதழும் அன்பு நண்பர்களின் பார்வைகாக... - உஷாதீபன்