06 செப்டம்பர் 2012

க.நா.சு. வின் "வாழ்ந்தவர் கெட்டால்" (நாவல்)

நேற்று ஒரே மூச்சில் க.நா.சு.வின் ”வாழ்ந்தவர் கெட்டால்” என்கிற நாவலைப் படித்துமுடித்து விட்டேன். 
மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கி வந்தது. நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே 
இந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “அசுரகணம்” நாவலை (அதுவும் க.நா.சு எழுதியதுதான்) ப் படித்து 
உயிரோசை இணைய இதழில் ஒரு விமர்சனமும் எழுதியுள்ளேன். இப்போது இது. வெவ்வேறு விதமாக 
எழுதிப் பார்ப்பது க.நா.சு. வுக்குப் பிடித்த விஷயமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. அதிலும் நூறு 
பக்கத்திற்குள், அல்லது நூற்றி ஐம்பது என்று வைத்துக் கொள்ளலாம். இதை ஒரு சந்தர்ப்பத்தில் அவர் 
தி.ஜா.ரா.வுடன் அவர் பேசும்போதே சொல்லியிருக்கிறார். ஆனால் ஒன்று. என்ன எழுதப் போகிறோம் 
என்பதில் அதீதமான ஒரு தீர்மானம். அப்படித் தீர்மானம் இருப்பதனாலேயே அழுத்தமாக வந்து விழும் 
வார்த்தைகள், அநாவசியமாய் என்று ஒரு இடத்தில் கூடச் சொல்ல முடியாத அளவுக்கு மிக மிக 
அவசியமான உரையாடல்கள், இப்படியாக அவர் கதை சொல்லிக் கொண்டு செல்வதும், மிகச் சரியான 
இடங்களில் அத்தியாயங்களைப் பிரித்திருப்பதும், கதையில் வாசகன் படித்துச் செல்கையில் அதில் வரும் 
ஒரு கதாபாத்திரத்திற்கு ஏற்படும் ஐயம் எப்பொழுதுதான் தீரும் என்கிற எதிர்பார்ப்பில் கடைசிவரை நாம் 
சென்று விடுவதும், எல்லாஞ்சரிதான், இன்னும் அதுக்கு விடை கிடைக்கலியே...என்பதாக கதாபாத்திரம் 
நினைக்கும் கேள்வி வாசகன் மனதில் எழுந்து நிற்பதுவும், இந்த நாவலை ஒரு பொறுப்புமிக்க 
படைப்பாளியின் அடையாளமாகக் கொண்டு நிறுத்துகிறது. இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிற 
மிகச் சரியான இடத்தில் நாவல் முடிந்து போகிறது. இப்படியான ஒரு பலமான தீர்மானத்தில் எழுத 
உட்கார்ந்தோமானால் ஒரே மூச்சில் நாலு நாள் தொடர்ந்து உட்கார்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு 
நூறு நூற்றைம்பது பக்க நாவலை எழுதி முடித்து விடலாம். அந்த நம்பிக்கை இந்த நாவலைப் படித்த 
போது எனக்கு எழுந்தது. படித்து அனுபவியுங்கள். அன்பன், உஷாதீபன்

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...