அட்டை மாறலாம்....
உஷாதீபன்
22 ஜனவரி 2026
19 ஜனவரி 2026
17 ஜனவரி 2026
சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 2026 -நன்னூல் பதிப்பகம், ஸ்டால் 696
குறுநாவல்கள் தொகுப்பு
09 ஜனவரி 2026
03 ஜனவரி 2026
Pustaka.co.in - சமீபத்திய எனது புஸ்தகா.கோ.இன் - பதிப்பக வெளியீடுகள். இ.புக்
1. தேன் மழை - புஸ்தகா வெளியீடு - இ.புக் (2026 ஜனவரி)
03 நவம்பர் 2025
“மனத் தொற்று”- சிறுகதைத் தொகுப்பு - பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-17 வெளியீடு - தினமணி நூல் அரங்கம் பகுதியில் “வரப்பெற்றோம்” பதிவு (03.11.2025)
-------------------------------------------------------------------------------------------------------------------------------ஒரு பிரதி அனுப்பினால் “வரப்பெற்றோம்” - அத்தோடு சரி
இரண்டு பிரதிகள் அனுப்பினால் நூல்பற்றிய ஒரு சிறு குறிப்பு வரும். இது முதல் ரகம்.
சிறுகதை
“காலம்…கலிகாலம்…!” தாய்வீடு பிரசுரம்-நவம்பர் 2025 இதழ்
நீ சாதாரணமா இருக்க வேண்டியதுதானே? – என்று
கேட்டார் நாராயணன். தான் கேட்டது அந்தப் பெண்ணுக்கு…அதாவது தன் மருமகளுக்குப் புரிந்திருக்கும்
என்று தோன்றவில்லை இவருக்கு. சாதாரணமா என்றால் எப்படிச் சொல்வது? யதார்த்தமாய் என்று
சொல்லலாமா? அப்படிச் சொன்னால் பிறகு அந்த வார்த்தையை விளக்கியாக வேண்டி வரும். எளிமையாய்
என்று சொல்லலாமா? அப்படிச் சொன்னால் நான் ஒண்ணும் படாடோபமா ரிச்..சா இல்லையே? என்று சொல்ல வாய்ப்பிருக்கு.
சாதாரணமா என்று சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு இப்போது இவர் தடுமாறிக் கொண்டிருந்தார்.
அப்டீன்னா….? – நினைத்ததுபோலவே கேட்டது
அது. கொஞ்சம் யோசித்தவர் பிறகு இப்படிச் சொன்னார்.
உன் வீடு போல….உன்னோட வீட்டுல நீ எப்டி இருப்பியோ …அது போல இங்கயும் இருக்கலாமேன்னு சொல்ல வந்தேன்….என்றார்.
எங்க வீட்டுல நான் இருந்தது போல எங்கயும்
வராது. அந்த சந்தோஷம் வேறே எங்கயும் கிடைக்காது, அதுக்கு ஈடே கிடையாதுப்பா – சொல்லும்போதே
முகம் மலர்ந்தது மாலாவுக்கு. நல்லவேளை…அப்பா என்றாவது சொல்ல வந்திருக்கிறதே? நினைத்து
சந்தோஷப்பட்டுக் கொண்டார் நாராயணன்.
இப்படிச் சொல்கிறோமே என்கிற எண்ணம் இல்லை.
சொல்வது சரியா? என்ற நிதானமும் இல்லை. இதைச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையும் இல்லை.
சொல்லியாகி விட்டது.
அதற்காக, தான் நிதானத்தை இழக்கலாமா? அப்புறம்
அந்தப் பெண்ணுக்கும் வயசாகி முதிர்ந்த தனக்கும் என்னதான் வித்தியாசம்? சூழலை இறுக்கமாக்கிக் கொள்ள நாராயணன்
விரும்பவில்லை. பிறகு அடுத்தடுத்த பேச்சு, சண்டை என்று வளர்ந்து விடும் வாய்ப்புண்டு.
நிதானித்தார்.
கண்டிப்பா….உங்க வீட்டுல நீ இருந்த மாதிரி
நிச்சயமா வேறே எங்கயும் இருக்க முடியாது. அது யாருக்குமே சாத்தியமில்லை. அவுங்கவுங்க
பிறந்த வீடுன்னா அதுதானே பெரிசு எல்லாருக்கும்? – அரவணைத்தே பேசுவதாக எண்ணி இப்படிக்
கூறினார்.
எல்லாருக்கும் பெரிசோ இல்லையோ…எனக்குப்
பெரிசு….!
இதென்ன சமத்தான பேச்சா என்ன? என்று தோன்றியது
நாராயணனுக்கு.
உணரப்பட வேண்டியவைகளை வார்த்தைகளில் வடிக்கும்போது
அதில்தான் எத்தனை செயற்கைத் தன்மை வந்து ஒட்டிக்
கொள்கிறது?
(அதான்
தெரியுதே…அடிக்கடி அங்க ஓடுறது….)-சொல்லவில்லை…நினைத்துக் கொண்டார்.
நான் சொல்ல வந்தது அது இல்லடா கண்ணு…உங்க
வீட்டுல நீ இருந்த மாதிரியே இந்தப் புகுந்த
வீட்டுலயும் சுதந்திரமா, சந்தோஷமா இருக்கலாம்…இயங்கலாம்…உன்னை யாரும் எதுவும் சொல்லப்
போறதில்லைன்னு சொல்ல வந்தேன்…இனிமே இதுதானே உன் வீடு….நீதான் எங்களுக்கு…நாங்கதான்
உனக்கு…எல்லாம் நிறைவா இருக்கு …எதுக்கும் குறைப்பட்டுக்க எதுவுமில்லை… சந்தோஷமா இருந்திட்டுப்
போவமே….எதுக்கு அநாவசியமா நேரத்தையும் பொழுதையும் கெடுத்துக்கணும்…அதத்தான் சொல்ல வந்தேன்….
–பூடகமாக, சுருக்கமாகச் சொல்லித் தீர்த்து விட்டோமோ என்றே தோன்றியது நாராயணனுக்கு.
இதையெல்லாம் அவன் சொல்ல வேண்டியது.
தன் பிள்ளை குணசீலன். அவன் அவளிடம் பயப்படுகிறானோ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. எதற்காகப்
பயப்பட வேண்டும். சாதாரண, நடுநிலையான வீட்டுப் பெண்தானே? பணக்காரக் குடும்பமில்லயே?
நடுத்தரக் குடும்பத்துப் பெண் நடுத்தரமாய் இல்லாமல் குதிக்கிறாள் என்று நினைத்து விட்டானோ?
பயப்படுகிறான் என்பதை விட பேசுவதையே தவிர்க்கிறான் என்பதே சரி.
அவ அவ்வளவுதாம்ப்பா… அவளுக்குத் தெரிஞ்சதெல்லாம்
வெளில போகணும், சந்தோஷமா ஊர் சுத்தணும், ஓட்டல்ல திங்கணும், இஷ்டப்பட்ட பொருட்களை வாங்கணும்…ஜாலியா
இருக்கணும்…மொபைல்ல சினிமாப் பார்க்கணும்..ரிலீஸ் படங்களைத் தியேட்டர்ல போய்ப் பார்த்தாகணும்…இப்டியே
பொழுதைக் கழிக்கணும்…அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும். வேறே ஒண்ணும் பெரிய நாலெட்ஜ் எல்லாம் இருக்கிறதாத்
தெரில. அவள் ஐ.டி. ஆபீஸ்ல அவளோட பிராஜக்ட் ஒர்க்கப் பத்தியே டீப் நாலெட்ஜ் இல்ல…நிறையத்
திட்டு வாங்குவா போல்ருக்கு…வேறே ஜெனரல் நாலெட்ஜ், உலக நடப்பு, ஆட்சி, அரசியல்னு எதுவும்
தெரியாது அவளுக்கு. நியூஸ் பேப்பரைப் பேருக்காவது புரட்டினாத்தானே? அதெல்லாம் சின்ன
வயசிலேயிருந்து பழக்கப்படுத்தியிருக்கணும். அப்பத்தான் வரும்…
இருக்கட்டுமேப்பா…அதனாலென்ன… அவ ஐ.டி.
ஆபீஸ் வேலைகளை சமாளிக்க வேண்டியது அவ பொறுப்பு…அதப்பத்தி நாம ஏன் கவலைப்படணும்?-.
அப்படியில்லப்பா…அவ என்னைப் போட்டு அனத்தறா. ஒர்க் ஃப்ரம் உறாம் இருக்கச்சே…என்னை சதா சந்தேகம்
கேட்டான்னா…நான் என் வேலையைப் பார்க்க வேண்டாமா? இனிமே அவ வீட்டுல இருந்து வேலை செய்கைல…நான்
ஆபீஸ் தப்பிச்சுப் போயிடணும்னு இருக்கேன். என் தலவலியே பெரிய தலைவலி. பாதி இவ டியூட்டிய
நானே பார்க்க வேண்டிர்க்கும் போல்ருக்கு? அப்புறம் நான் பைத்தியம் பிடிச்சு அலைய வேண்டிதான்….இது
இப்டியே போச்சுன்னா கூடிய சீக்கிரம் படுக்கைல விழுந்திடுவேம்ப்பா…அது மட்டும் நிச்சயம்….!
எல்லாம் போகப் போகச் சரியாப் போகும்ப்பா…கொஞ்சம்
பொறுத்துக்கோ…கன்னா பின்னான்னு கற்பனை பண்ணிக்காதே…! -பையனைச் சமனப்படுத்த ஆறுதலாய்ச்
சொன்னார் நாராயணன். ஒரு பக்கம் அவன் பழியாய் ஆபீஸ் வேலையே கெதியாய்க் கிடப்பதைப் பார்க்கும்போது
அவருக்கே வயிற்றைக் கலக்கியது. இத்தனை மணி நேர வேலை என்று கணக்கே கிடையாதா? நாள் பூராவுமா
பார்த்திட்டே இருக்கணும்? ஆபீஸ் போய் பார்த்தாச்சு. அப்புறம் என்ன வீட்டுக்கு வந்த
பின்னும்? அந்தக் கம்ப்யூட்டரை மூடித் தொலையாம சதா அதை நோண்டிக்கிட்டே இருக்கணுமா?
எவனாவது எதாவது கேட்டுக்கிட்டே இருப்பான்…பதில் சொல்லிட்டே இருக்கணுமா? இந்தியாவுல
இது தூங்குற நேரம்னு அவிங்களுக்குத் தெரியாதா? அதான் பன்னெண்டு மணி வரை பார்த்தாச்சே…இன்னும்
என்ன ஒண்ணு ரெண்டுன்னு? மரவட்டையாய் மகன் சுருண்டு கிடப்பதைப் பார்க்கையில் இவருக்கு
வயிறெரிந்தது.
எவ்வளவோ சொன்னார் குணசீலனுக்கு. சென்ட்ரல்
கவர்ன்மென்ட் ஜாப், பாங்க்…..குருப்-2 சர்வீஸ், குருப் 3 சர்வீஸ் என்று முயற்சி செய்து
போய்விடு..இந்த ஐ.டி. ஃபீல்டுக்குள்ள நுழையாதே…நாளைக்கு
இது என்னவாகும்னு யாராலயும் சொல்ல முடியாது…என்று ஞானதிருஷ்டியாய் எடுத்துரைத்தார்.
காதிலேயே வாங்கவில்லையே பயல்? இதோ…இன்று ஏ.ஐ. வந்து பயமுறுத்துகிறது. பத்துப் பேர் வேலை பார்த்த
இடத்தில் மூன்று பேர் போதும் என்கிறார்கள். என்ன கதி ஆகுமோ? வெளியே சொல்ல முடியாமல்
மனசுக்குள் கலங்கிக் கொண்டுதான் இருந்தார் நாராயணன். இவன் என்னடாவென்றால் வீட்டிலேயே
நிம்மதியில்லாமல் கிடக்கிறானே? மத்தளத்துக்கு எல்லாப் பக்கமும் இடி என்றால்? இறைவா…இதையெல்லாம் பார்க்கிறதுக்கா நான் உசிரோட இருக்கணும்…என்னைக்
கொண்டு போயிடேன்…-மானசீகமாய்க் கடவுளிடம் அவர் வேண்டாத நேரமில்லை. வயசான காலத்தில்
என்ன மனச் சுமை இது?
அதாச்சும் பரவால்லப்பா…ஒவ்வொரு
சனி ஞாயிறும் ஊர் சுத்தணும்னா என்ன அர்த்தம்? அம்மாதான் பக்குவமா சமைக்கிறால்ல… வீட்டு
வேலைகள்ல உதவி செய்ய வேண்டாம்… செய்து போடுறத
கமுக்கமா சாப்பிடலாம்ல…மாட்டாளாம்…ஃபோன் பண்ணி சாப்பாடும், டிபனும் வரவழை ச்சித்தான்
சாப்பிடுவாளாம்…அதுதான் பிடிக்குமாம்..அவன் எந்த எண்ணெய்ல பண்ணினானோ, எப்பப் பண்ணினானோ,
பழசச் சுட வச்சுக் கொண்டாந்தானோ இல்ல புதுசோ? …எதுவுமே தெரியாதே? வயித்துக்கு ஒத்துக்காததை
யெல்லாம் வாங்கி நிரப்புவேன்னா? குப்பைத் தொட்டியா வயிறு? பணமும் அதிகம்…உடம்புக்கும்
கெடுதி…எதுக்கு அநாவசியமா காச விரயம் பண்ணனும்…தேவைக்கு .செலவு பண்ணலாம்..விரயம் பண்ணலாமா?
-எது சொன்னாலும் கேட்கிறதில்லப்பா. தீவிரமா முடியாது அது இதுன்னு சொன்னோம்னா உடனே முகத்தைத்
தூக்கி வச்சிட்டு மூலைல போய் முடங்கிக்கிறா! அழ ஆரம்பிக்கிறா! அவ சொல்றதுக்கு மறுப்பு
சொன்னாலே பிடிக்கலப்பா? உறிஸ்டீரியா பேஷன்டா? நாள் பூராவும் உம்மணாம் மூஞ்சியா வெறி
பிடிச்சவ மாதிரி உட்கார்ந்திருக்கிறதுக்கு? சகிக்க முடிலப்பா….கல்யாணமே பண்ணியிருக்க
வேண்டாம் போல்ருக்கு….நீதான் சொன்னே…இன்னும் சிலது பார்ப்போம்…அப்புறம் முடிவு பண்ணுவோம்னு…நான்தான்
உன்னை அவசரப்படுத்திட்டேன்…இப்பயே போய் சம்மதம் சொல்லிட்டுவான்னு…இப்பத்தான் என் புத்திக்கே
உரைக்குது…..
மனசுக்குள் அழ ஆரம்பித்திருந்தார் நாராயணன்.
வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார். பையனைச் சமாதானப்படுத்துவதா அல்லது அந்தப் பெண்ணுக்கு
அறிவுரை கூறுவதா?
காலையில் பதினோரு மணிக்குப் படுக்கையை
விட்டு எழுந்தால்? அதுவே இவருக்குப் பிடிக்கவில்லை. கண்கொண்டு எதையும் பார்க்க வேண்டாம்
என்று அறையே கதியாகக் கிடந்தார்.
ரெண்டாம் வகுப்புப் படிக்கும் பையனை
ஆறு மணிக்கே எழுப்பி பல்தேய்த்து. குளிப்பாட்டி, யூனிபார்ம் போட்டு ஷூ மாட்டி
சாப்பாடு கொடுத்து எட்டு மணிக்கு வந்து நிற்கும் ஆட்டோவில் ஏற்றி அனுப்புவது வரை எத்தனை
டென்ஷன்?
பாதி வேலையை
இவர் வாங்கிக் கொண்டார். நான் கொடுக்கிறேன் டிபன்…எங்கிட்ட விட்டிடு….யூனிஃபார்ம் போட்டு
விடுறேன் என்று பகிர்ந்து கொண்டார். தலைக்கு எண்ணெய் தேய்த்து, சீவி, பொட்டிட்டு தயார்
பண்ணி கீழே கொண்டு போய் நிறுத்தி ஆட்டோவில் ஏற்றி விடுவது வரை தனது வேலை என்று சிரமேற்கொண்டு
செய்யலானார்.
அந்தந்த நாளின்
விடியல் என்பதே பிரம்மப் பிரயத்தனமாய் இருந்தால்? தான் பெற்ற பிள்ளைக்கே எதுவும் செய்யாமல்
இப்படி அடிச்சிப் போட்டது போல் அயர்ந்து தூங்கினால்? வீட்டில் நடக்கும் வேலைகளின் சத்தம்
கூடவா ஆளை எழுப்பாது? ஒரு பிள்ளை பிறந்த பின்னும் பழையபடியே இருந்தால்?
இறைவா ஏனிந்த
சோதனை? இது என்று சரியாகும்? சரியாகுமா அல்லது இப்படியேதான் தொடருமா?
யோசித்து யோசித்து
ஒன்றும் தோன்றாமல் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் நாராயணன். அநாவசியத்திற்கு வீட்டில்
ஏன் சண்டை. அது அவருக்குப் பிடிக்கவில்லை. மீனாட்சியைப் போல் தானும் இயன்றவரை வீட்டு
வேலைகளை இன்னும் அதிகமாகக் கையிலெடுத்துக் கொண்டு செய்து சமாளிப்பது என்கிற இறுதியை
எட்டினார். அந்தப் பெண்ணாய் உணர்ந்து என்று களத்திற்குள் வருகிறதோ அதுவரை பொறுத்திருப்பது
என்று முடிவு செய்து கொண்டார். காலம் எல்லாவற்றையும் மாற்றிப் போடாமலா போகும் என்று
மனதை சமாதானப்படுத்திக் கொண்டார். எதையும் பொருட்படுத்தாமல் மீனாட்சி மட்டும் தன் வேலையே
கதியாகக் கிடக்கிறாளே…அர்ப்பணிப்பு..அவளை மாதிரியே தானும் இருந்துவிட வேண்டியதுதான்.
எதற்கு பொறுமிக்கொண்டே கிடக்க வேண்டும்? தீர்வு என்று கிடைக்கிறதோ கிடைக்கட்டும். காலம் கனியாமலா போகும்?.
அப்போது அந்த ஃபோன் மணி ஒலித்தது. போய்
எடுத்தார். எதிர் வரிசையில் மணிவாசகன்தான் பேசினார். சம்பந்தி. என்ன சொல்லப் போகிறாரோ,
ஏது நடக்கப் போகிறதோ என்றிருந்தது இவருக்கு. இந்தப் பெண் ஏதேனும் புகார் கொடுத்திருக்குமோ?
எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை, புறப்பட்டு வர்றேன் என்று அப்பாம்மாவை விரட்டியிருக்குமோ?
சம்பந்தி…நல்லாயிருக்கீங்களா…பேசவேயில்லையே?
– அழுத்தமாய் வந்தது வார்த்தைகள்.
எங்க பேசுறதுக்கு
நேரம்? அதான் கால்ல சக்கரத்தக் கட்டிட்ட மாதிரி வீட்டு வேலைகள் மென்னியைப் பிடிக்குதே….!
மூச்சு விட முடியலை…. – நேரடியாக எதையும் சொல்ல வாய் வராமல் யதார்த்தமான பதிலைச் சொன்னார்
நாராயணன்.
ஒண்ணும் கவலைப்பட
வேண்டாம். எல்லாம் பக்குவமாச் சொல்லியனுப்பறேன்…பொறுப்பா நடந்துக்குவா எம் பொண்ணு …நீங்க
எதுக்கும் கவலைப்படாதீங்க….எனக்கு எல்லாம் தெரியும்….
என்ன சொல்றீங்க….புரியலை….-
புரியாதமாதிரியே கேட்டார் நாராயணன்.
ஒரு வாரத்துக்கு
மாலாவை எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க…எல்லாம் சரியாப் போயிடும்….திரும்பி வர்றபோது
பாருங்க…
அப்டியா…சரி….சொல்றேன்….-தயங்கியவாறே
கூறினார் நாராயணன்.
எதிர்த் திசையில்
ஃபோன் வைக்கப்பட்டது.
அறையை விட்டு
வெளியே வந்தார் நாராயணன்.
வாசலில் ஆட்டோ
சத்தம்.
அதுக்குள்ளயும்
புக் பண்ணியாச்சா…? - நினைப்பதற்குள்
அப்பா…அம்மா….நான்
போயிட்டு வர்றேன். ஒரு வாரத்துக்கு அங்க வரச் சொல்லியிருக்கா அப்பா…அவர்ட்ட ஃபோன்லயே
சொல்லிட்டேன்…. -கூறியவாறே கையில் பேக்குடன் மாலா கிளம்பியதை வாயடைத்துப் பார்த்துக்
கொண்டு நின்றனர் நாராயணனும் மீனாட்சியும். இருவருக்கும் மனசு விச்ராந்தியாய் உணர்ந்தது.
-------------------------------------
யானை டாக்டர்
- ஜெயமோகன் - வாசிப்பனுபவம் -உஷாதீபன் வெளியீடு
- தன்னறம், குக்கூ காட்டுப்பள்ளி, புளியனூர் அஞ்சல், சிங்காரப்பேட்டை-635307, கிருஷ்ணகிரி
மாவட்டம். (தொடர்புக்கு-98438 70059).
யானைகளின் உடல் நிலையைப் பேணுவதற்காக இவர் உருவாக்கிய
விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. அவர் டாக்டர் கே./ டாக்டர் திரு.கிருஷ்ணமூர்த்தி.
தன் வாழ்க்கையையே யானைகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர். அவைகளின் ஒவ்வொரு அசைவையும்,
நகர்தலையும், பார்வையின் பொருளையும் உணர்ந்தவர். சமிக்ஞைகளைப் புரிந்தவர். அவரின் அன்பார்ந்த
நேசத்தை அவைகளும் உணர்ந்திருந்தன. இவர் நமக்கு ஆபத்தில்லாதவர். பாதுகாப்பானவர், நம்மைப்
பாதுகாக்கவென்றே தன்னை அர்ப்பணித்தவர். தன் வாழ்வில் எந்த சுயநலத்தையும் கருதாமல்,
தனக்கென்று ஒரு குடும்பம் என்று கூடக் கொள்ளாமல் நம்மைப் பாதுகாக்க, பராமரிக்க என்று
இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்று உணர்ந்து இவர் மீது அளவிலா அன்பு செலுத்தின.
உடலில் ஒரு சிறு நோவு என்றாலும் இவர் இருப்பிடம் தேடி வந்தன. இரவானாலும்,
பகலானாலும், பனி பெய்யும் பொழுதானாலும், மழையும் புயலும் என எது நிகழ்ந்தாலும், எத்தனை
மைல் தூரமானாலும், நமக்காக இவர் உண்டு என்று
அவர் இருப்பிடம் நோக்கி வந்து தஞ்சம் புகுந்தன. தன் உறவுக்கு, தன் குட்டிக்கு, தன்
இனத்தில் உள்ள எவருக்கும் எனினும் இவரிடம் சென்றால் நமக்கு நலம் உண்டு என்று அன்பு
செலுத்தின. நம்பி வந்து நின்றன. அந்த நம்பிக்கையை அளித்தவர் அவர். டாக்டர் கே. அதற்காக
அவர் பெரும்பாடு பட்டிருக்கிறார். நிறைய உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். தன்னலம் கருதாது
செயல்பட்டிருக்கிறார். தன் சந்தோஷங்களை இழந்திருக்கிறார். விரும்பித் துறந்திருக்கிறார்.
யானைகளின் நலனே தன் நலன் என்று வாழ்ந்திருக்கிறார். தன் பொழுதுகளை, நாட்களை, மாதங்களை,
வருடங்களை தன் மொத்தக் காலங்களை, எனக் கணக்கில்
கொள்ளாது தியாகம் செய்திருக்கிறார்.
அன்பின் சின்னமாய் அவர் விளங்கினார். அரவணைப்பின் ஆதாரமாய் நின்றார்.
மனிதன் தன்னை, இந்த இயற்கையை, பிற ஜீவராசிகளை தன் மேன்மையான குணத்தை ஆதாரமாய்க் கொண்டு
ஆழமாய் நேசிக்க முடியும், அவற்றை அரவணைத்து நலம் காக்க முடியும். தன் பார்வையாலும்,
புன்னகையாலும், கையசைவினாலும்,உடல் மொழியினாலும் அவைகளை ஈர்க்க முடியும். நேசத்தைப்
புரிய வைக்க முடியும். தன் அன்பை வெளிப்படுத்த முடியும். அதன் ஆழத்தை, உண்மையை உணர
வைக்க முடியும் என்று செய்து காட்டினார். அந்தச் செயலில் எந்தச் சுயநலமும் இல்லை. எந்த
விளம்பரமும் இல்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. தூய அன்பின்
வெளிப்பாடு அது. நான் நினைத்தேன். செய்கிறேன். இதைச் செய்வதில் நான் மன நிம்மதி அடைகிறேன்.
என் ஆத்மா சாந்தி பெறுகிறது. என் இதயம் பெருமிதமடைகிறது. மனம் பொங்கி வழிகிறது. இது
எனக்கு இறைவன் வகுத்த விதி. அவன் போட்டுக் கொடுத்த பாதை. என் ஆழ் மன உணர்வினையே நான்
பிரதிபலிக்கிறேன். அதுவே எனக்கு இறைப்பாதையை வகுத்துக் கொடுத்தது. இது நான் மனமுவந்து
செல்லும் பாதை. முனைப்போடு மேற்கொண்ட புனிதப் பயணம். என் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை
இது தொடரும்.
இந்த யானைகளே என் நண்பர்கள். என் உடன் பிறப்புக்கள். இதுவே என் வாழ்க்கை....இவையன்றி
என்னால் தனித்து வாழ இயலாது. தனித்து இயங்க இயலாது. தனித்து என்னை உணரவே இயலாது.
இந்தக் காட்டைப் புரிஞ்சிக்கிட்டாதான்
இங்க எதையாவது செய்ய முடியும். காட்டைப் புரிஞ்சிக்கணும்னா காட்டிலே வாழணும். இங்க
வாழணும்னா,அந்த உலகத்துலே இருக்கிற பணம், புகழ், அதிகாரம், லொட்டு லொசுக்கு எல்லாத்தையும்
உதறிட்டு வரணும். இவங்களை விட்டா நமக்கு வேறே சொந்தம் எதுவுமி்ல்லேன்னு இருக்கணும்.
போய்யா...போய்ப் பாரு...அந்தா இருக்கானே செல்வா...அவனை மாதிரி வேறு ஒரு சொந்தக்காரன்
உனக்கு இருக்க முடியமா? அந்த நிமிர்வும், அந்தக் கருணையும், அற்பத்தனமே இல்லாத கடல்
போல மனசும், அதை அறிஞ்சா மனுஷன் ஒரு பொருட்டா? -டாக்டர் கே.யின் கேள்விகள்.
மனிதனின் கீழ்மைகள் எண்ணிலடங்காதவை. இந்தக் காட்டுக்கு வரும் சிலரின்
கீழான செயல்பாடுகள் - ஒவ்வொரு நாளும் முகத்திலறைந்ததுபோலக் காணக் கிடைக்கும் கொடுமை
- வழி தோறும் குடித்துக் கும்மாளமிடுவதும், வாந்தி எடுப்பதும், மலைச்சரிவுகளின் மௌன
வெளியில் காரின் உறாரனை அடித்துக் கிழிப்பதும், முடிந்தவரை உச்சமாக காரின் ஸ்டீரியோவை
அலறவிட்டுக் குதித்து நடனமாடி, ஓங்கிக் குரலெடுத்துக் கெட்டவார்த்தைகளைக் கூவுவதும்....பாட்டில்களை
உடைத்து எறிவதும், - கீழ்த்தரமான பச்சை சுயநலம் தெறிக்கும் - மனிதப் புழுக்கள். உடைந்த
பாட்டில்களின் சிதறல்களால் எத்தனை யானைகள் எவ்வளவு துயரத்துக்கும்,துன்பத்துக்கும்
ஆளாகியிருக்கின்றன. உயிரிழந்திருக்கின்றன. எவ்வளவு உடல் வேதனைக்கு ஆளாகி மீள முடியாமல்
தவித்திருக்கின்றன? எந்த மிருகத்தை விடவும் யானைக்கு அந்த கண்ணாடிச் சிதறல்கள் மிகவும்
அபாயகரமானது என்பதை யாரேனும் உணர்ந்திருக்கிறார்களா?
இதுபோன்ற எண்ணிலடங்கா வேதனைகளைத் தாளாமல்தான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன்
என்று சொல்லாமல் சொல்லி கருணை மழை பொழிகிறார் டாக்டர் கே. அவருக்கு பத்மஸ்ரீ விருதிற்காக
முயல, அது கடைசி நிமிடத்தில் நழுவிப் போன தகவல் மிகவும் வேதனையாய் உணரப்பட்டபோது, துளியும்
அதனைப் பொருட்படுத்தாத ஒரு புன்னகையே அதற்கு பதிலாகிறது. அந்தோ நிற்குதே, அந்த யானைக்கு
உன்னைத் தெரியும்ங்கிறதை நீ பெரிசா நினைச்சேன்னா, டெல்லியிலே யாரோ ஒரு காகிதத்துலே
எழுதிக் கையிலே கொடுக்கிறதைப் பெரிசா நினைக்கத் தோணுமா?
நான் உங்கள வெளியே கொண்டு போகணும்னு நெனச்சேன் டாக்டர். இங்கே இப்படியொரு
ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை இருக்கும்னு எனக்குத் தெரியாது. இப்படிப் புத்தம் புதுசா
ஒரு உலகத்தைப் பார்க்கப் போறோம்னு நான் நினைக்கலை.....-அவன் சொல்கிறான்.
இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானை காலுக்கு
போட்டுட்டு போறானே அவனும் நம்ம சமூகத்திலேதான் டாக்டர் வளர்ந்து வர்றான். அவன்தான்
ஐ.டி.கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேலை பார்க்கிறான். மாசம் லட்ச
ரூபா சம்பளம் வாங்கறான். கொழ கொழன்னு இங்லீஷ் பேசறான். அதனால பிறவி மேதைன்னு நினைச்சிக்கிறான்.
தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதான் இந்த நாடும் இந்தக் காடும் எல்லாமும் இருக்கு.
அவங்களிலே ஒரு பத்து பர்சன்ட் ஆட்களுக்கு இப்டி ஒரு மகத்தான வாழ்க்கை, இப்டி ஒரு தெய்வீக
உலகம் இருக்குன்னு தெரியட்டும்னுதான் முயன்றேன். இப்டி ஒரு ஐடியலிஸத்துக்கும் இன்னும்
நம்ம சமூகத்திலே இடம் இருக்குன்னு காட்ட முற்பட்டேன். இன்னும் இங்கே காந்தி வாழறதுக்கு
ஒரு காலடி மண்ணிருக்குன்னு சொல்ல நினைச்சேன்...ஒரு பத்துப் பேரு கவனிச்சாப் போருமே
டாக்டர்....-என்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான்.
பெரும் லட்சியவாதம் மனிதர்களின் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்புகளைச்
சென்று தீண்டும்...காந்தியின் வலிமை அங்குதான். அந்த ஊற்றின் ஈரம் எங்கேனும் ஓரிடத்தில்
இன்னும் இருக்கும்தான்....டாக்டர் கே. க்கான பத்மஸ்ரீ விருதுக்குரிய முயற்சிகளில் அவன்
சிந்தனை இந்த ரீதியில்தான் பயணித்தது.
அந்த நன்னெறியினை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது ஜெயமோகனின் இந்த
“யானை டாக்டர்“. வெறும் கதையல்ல இது. வாழ்க்கை
நெறி. ஒரு புனிதமான வாழ்வியல். ஒவ்வொரு மனிதனின்
கவனத்திலும் சென்று ஆழப் பதிய வேண்டிய அறநெறிச்
சாரம். படித்துமுடிக்கும்போது கண்ணீர் முட்டி
நிற்கிறது. எப்படியொரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் டாக்டர் கே. என்று வியக்க வைக்கிறது. காடும்,காடு சூழ்ந்த இடமுமாக
கதை நகர்த்தப்பட்டிருக்கும் விதத்தில் நாமும் கூடவே அர்த்தமோடு பயணிக்கிறோம். ஒரு நல்ல,
சுயநலமற்ற, சேவை மனம் கொண்ட மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டதில் மிகுந்த திருப்தி
கொள்கிறோம்.
-----------------------------------------------------
18 அக்டோபர் 2025
சிறுகதை வாசகசாலை 118 வது இதழ் பிரசுரம் 18.10.2025
“மனக் கிலேசங்கள்”
சொன்னாக் குத்தமா எடுத்துக்கப்டாது.
அப்டீன்னா சொல்றேன்….கேள்வி கொஞ்சம் சூடாத்தான் இருக்கும்…பரவால்லியா? -என்றவாறே மந்தாகினியின்
முகத்தைப் பார்த்தார் ஜம்புகேஸ்வரன்.
அந்த முகத்தில் தெரிவது கோபமா, அமைதியா
அல்லது அழுத்தமா என்று புரியவில்லை. எதையும் வெளிக்காட்டாது அடக்கும் திறமையான பாவம்
கொண்ட பெண்ணோ என்றும் நினைக்கத் தலைப்பட்டார்.
நான் எதைக் கேட்டாலும், குத்தமா எடுத்துக்கப்
படாதுன்னு சொல்லிட்டே ஆரம்பிக்கிறேங்களேப்பா…? என்றது அந்தப் பெண்.
மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என்று யோசனை
வந்தது ஜம்புவுக்கு. பொழுது விடிந்ததும் விடியாததுமாக இந்தப் பெண்ணிடம் பொருத முடியுமா
என்று நினைக்க ஆரம்பித்தார். எதைத் தொட்டாலும் அதில் ஒரு குறுக்குக் கேள்வி கேட்கிறது
இந்தப் பிசாசு என்று எரிச்சல் தலையெடுத்தது இவருக்கு. மருமகளைப் பிசாசு என்று நினைக்கலாமா?
பிசாசு போல ஆட்டம் போட்டால் வேறு எப்படி நினைப்பது? வீடே ஆடிப்போய்த்தான் கிடக்கிறது
இந்தப் பெண் வந்த பிறகு.
ஜம்புகேஸ்வரனும் அக்கினியம்மாளும் ஒடுங்கிப்
போய்த்தான் கிடக்கிறார்கள். பேயைக் கொண்டு வந்து நடு வீட்டுக்குள் வைத்ததுபோல் ஆயிற்றே?
என்று பலத்த யோசனையில் இருந்தார்கள் இருவரும்.
உனக்குப் பேரு அக்கினி. ஆனா நம்ம வீட்டுல
பெர்மனன்டா வேறொரு அக்கினி அணையாத குண்டமா எரிஞ்சிட்டேயிருக்கு…என்றார் மனைவியிடம்.
அதுக்கு முன்னாடி நீ குளிர்ந்து போயிட்டே….- என்று கிண்டல் செய்தார். அதாவது உன் பாச்சா
எதுவும் பலிக்கலை என்பதை அப்படிச் சொன்னார்.
மாமியார் அதிகாரம் வீடுகள்ல தூள் பறக்கும்னு
சொல்வாங்க. பரந்த இந்த வீட்டுல எந்தப் பொந்துக்குள்ள நீ ஒடுங்கியிருக்கேங்கிறதே தெரியலை…உன்
வீராவேசம்லாம் எங்கிட்டதான். அங்க எடுபடலை…-என்று சாடினார்.
புத்திசாலித்தனமாகக் கேட்பதாய் நினைத்துக்
கொள்ளுமோ என்னவோ? பேச்சு முறையே இதனிடம் இப்படித்தான் இருக்கிறது. பெரியவர்கள் சிறியவர்கள்
என்கிற வித்தியாசமேயில்லை. ஏழு வயதுச் சிறுவனான தன் மகனிடம் கூட இப்படித்தான் பேசுகிறது.
அந்தச் சிறுவனின் மனதில் என்ன சீண்டுதல் சிந்தனை இருக்கும். அப்படி வன்மமாய் நினைத்துக்
கொண்டு அவனே தன்னைக் கிண்டல் செய்கிறானோ என்று எண்ணிக் கேட்கும் போல…! மனதுக்குள் தாழ்வு
மனப்பான்மை இருக்குமோ என்னவோ? அல்லது அவர்களைப் போல் சுறுசுறுப்பாகத் தான் இயங்க முடியவில்லையே
என்கிற ஆதங்கமாயும் இருக்கலாம். தன்னை யாரும்
மட்டமாக நினைத்து விடக் கூடாது என்ற எண்ணம் மேலிடவே எல்லாவற்றையும் எதிர்கொள்ளுமாய்
இருக்கும்.
ஏம்மா இந்தக் கலர் கம்மீஸ் போட்டுக்கிற?
இது உனக்கு ச்யூட்டாகவே இல்லை…!
எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒண்ணும்
சொல்ல வேண்டாம். சின்னப்புள்ளயா லட்சணமா இரு…..! ஒரு பொடியனிடம் கூடவா இப்படிப் பேச்சு?
இதென்ன மெச்சூரிட்டி? அது தன் வயசுக்கான லட்சணத்தோடு இருக்கிறதா?
இது வயசுப் பிள்ளையா அடக்க ஒடுக்கமாய்
இருக்கிறதா என்கிற எண்ணம் போனது இவருக்கு. எடுத்தெறிந்து பேசுதலயே வழக்கமாய்க் கொண்டுள்ளதே?
பிறர் எதைச் சொன்னாலும் ஏதேனும் பொடி வைத்தே பேசுவார்கள் என்று குதர்க்கமாய் ஏன் நினைத்துக்
கொள்கிறது? அதுதான் க்ளெவர்னெஸ் என்று எண்ணிக்கொண்டிருக்கிறதோ? எதையும் எதற்காக, ஏன்,
எப்படி என்று கேள்…! என்கிற கதை விபரீதமாகவும்
பரிணமிப்பதுண்டு போலும்?
முகத்தில் எப்போது பார்த்தாலும் ஒரு அதிருப்தி.
அலட்சியம். என்ன வந்தது அப்படி? வசதி வாய்ப்பில்லையா? இடமில்லையா? காசு பணமில்லையா?
எதுதான் இல்லை? போதிய மனசுதான் இல்லை. இதையெல்லாம் கண்கொண்டு பார்க்க வேண்டி வந்து
விட்டதே என்று நொந்தது ஜம்புகேஸ்வரனுக்கு. லட்சணமாய், இனிமையாய் முகத்தை வைத்துக் கொண்டு
என்றுதான் இந்தப் பெண் தங்களிடம் பேசும்? அந்த குண விசேஷமேயில்லையோ? கண்ணால் பார்க்கக் கண்டுதானே எல்லாமும் தெரிகிறது.
மனசு சங்கடப் படுகிறது. எதையும் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டு இருந்து விட்டால்?
எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டால்? அப்படியும் விடவா முடிகிறது?
பேசும் பேச்சுக்கள் ஏதாவது காதில் வந்து விழுந்து தொலைக்கிறதே?
ஆபீஸ் கிளம்புறபோது மட்டும் பையன்கிட்ட
வந்து சொப்புச் சொப்புன்னு முத்தம் கொடுத்துட்டுப் போறியே…அதுவரைக்கும் அவனை ஸ்கூலுக்குத்
தயார் பண்ணின உறரிபரிபத்தி ஒரு நிமிஷமாவது யோசிச்சியா? அந்தப் பொறுப்பு உனக்கில்லையா?
உன் பிள்ளைக்கு நீ செய்யாம யார் செய்வாங்க? அது ஏன் உனக்குத் தோண மாட்டேங்குது? வயசான
எங்களுக்குச் செய்யணும்னு என்ன தலைவிதியா?
நீங்க விலகிக்குங்கோ…நான் செய்துக்கிறேன்.
இம்புட்டு ராங்கி இருக்கிறவ, தள்ளுங்க…எம்
பிள்ளைக்குச் செய்றதுக்கு எனக்குத் தெரியும்னு வந்து பிடுங்கியில்ல செய்யணும்? உன்னால
முடியாது…ஏன்னா நீ அட்டச் சோம்பேறி. உங்கப்பன்
உன்னை அப்படித்தான் வளர்த்திருக்கான். அதுக்காக ரொம்பப் பெருமைப் பட்டுக்கணும்….
முடிந்தது கதை. அத்தோடு அழுக உட்கார்ந்ததுதான்.
அன்று ஆபீஸ் கட். கோபித்துக் கொண்டு வெளியேறியிருந்தாலும் இனி சாயங்காலம்தானே சண்டை
தொடரும் என்று நிம்மதியாய் இருந்திருக்கலாம். லீவைப் போட்டால்?
அறைக் கதவு டமால் என்று சாத்தப்படுகிறது.
அதற்கு வாயிருந்தால் அழும். எத்தனை இடியைத்தான் தாங்கும் அது? இதென்ன மரியாதையற்ற செயல்?
வீட்டில் வயதில் பெரியவர்கள் இருக்கிறார்களே என்கிற மட்டு மரியாதை துளிக்கூடக் கிடையாதா?
என்னப்பா…பேசவே மாட்டேங்கிறீங்க?
-மந்தாகினியின் தொடர்ந்த கேள்வி இவரை
உசுப்பியது. அடிக்கடி இப்படி நினைவுகளில் பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறார். மனதின்
தாபம் அவரை அப்படி இழுத்துச் சென்று விடுகிறது. ஒரு நல்ல பையனுக்கு இப்படித் தப்பாக்
கல்யாணம் பண்ணி வச்சிட்டமே என்கிற அளவுக்குத் துயறுருகிறார். இந்த வேதனை தன்னை சாகுற
வரை விடாதோ என்று பயப்படுகிறார். அவன் நிம்மதியாகத்தான் இருக்கிறானா அல்லது மனதுக்குள்
அழுகிறானா?
அதான் சொன்னேனே…நேர் கோணத்துல எடுத்துக்கிறதுன்னா
உங்கூடப் பேசலாம். இல்லன்னா அது சாத்தியமில்லை… - என்றார் மறுபடியும்.
சும்மா சொல்லுங்கப்பா…எதுவும் நினைச்சிக்க
மாட்டேன்….
ஜம்புகேஸ்வரனுக்கு அப்போதும் தைரியம்
வரவில்லை. தைரியமென்றால் பயம் என்றில்லை. தயக்கம். எதற்கு அநாவசியமாய் ஒரு சண்டை? என்று
தோன்றியது. எல்லாம் காலப் போக்கில் சரியாகும். சிலது உடனே சரியாகி விடும். அது அபூர்வம்.
பலது காலப் போக்கில்தான்…வீட்டுப் பெரிசுகள் மண்டையைப் போட்ட பின்னால்தான் நடந்தேறும்.
அப்போது அவர்களுக்கு ரத்தச் சூடு குறைந்திருக்கும. உடம்பு தளர ஆரம்பித்திருக்கும்.
படிப்படியாகப் புத்தி வரும். ஒரே மாதிரி வாழ்க்கையில் இருந்து மடிந்தவர் என்று எவருமில்லை
இந்த உலகத்தில். கடைசிக் காலத்திலாவது மாறித்தான் இருக்கிறார்கள். என்ன ஒன்று என்றால்
அதை வெளியே சொல்லாமல், காட்டிக் கொள்ளாமல் இருந்து மறைந்திருப்பார்கள். நாத்திகர்கள்
ஆத்திகர்களாகிய கதைகள் எத்தனையோ உண்டு இவ்வுலகத்தில். இந்த லௌகீக விஷயம் என்ன பெரிய
பிரமாதம்?
அப்பா…அப்பா…ன்னு நீ வந்து நிக்கிறதாலே
சொல்றேன். சொல்லத் துணியறேன்னுதான் சொல்லணும். நம்ம அப்பாதானேன்னு நீ கோவிச்சிக்கக்
கூடாது. முதல்லயே சொல்லிடுறேன். அதுக்கு சம்மதம்னா சொல்றேன்…..
இந்த வீட்லயே நீங்க ஒருத்தர்தான் என்
கூட ஃப்ரீயாப் பேசுறவங்க. அம்மா கூடத் தேவைக்குதான்
பேசுவாங்க. மோகனோ ஆபீஸ், ஆபீஸ்னு கதியாக் கிடக்கிறவர். சரி…ஓ.கே…போகலாம்…வரலாம்…னு
துண்டு துண்டா சில வார்த்தைகள் பேசுவார் அவர். இப்போ நீங்களும் என்னடான்னா இவ்வளவு
தயங்குறீங்க….?
கணவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்
கொள்கிறார்கள் இந்தக் காலத்தில். நீ, வா…போ….என்று சர்வ சகஜமாய். அது எப்படியோ இருந்து
தொலைத்துவிட்டுப் போகட்டும்…என்று விட்டு விட்டார். சின்னஞ் சிறிசுகள்…எப்படியிருந்தால்
நமக்கென்ன? அவனே ஒன்றும் சொல்லவில்லையே? ஒருவேளை அதைப் பெருமையாக நினைக்கிறானோ? அல்லது எதிர்க்கத் துணிவில்லையா?
அதுக்கில்லம்மா….நீ உன்னை ரொம்ப மாத்திக்கணும்…நிறைய
விஷயங்கள்ல …கல்யாணம் ஆனப் பிறகும், இன்னொரு வீட்டுக்கு மருமகளா வந்த பின்னும் உங்க பிறந்த வீட்டுலயே இருந்த மாதிரி
இங்கயும் இருக்கக் கூடாது.
மந்தாகினியின் முகம் சட்டென்று மாறிற்று.
உன் வீடு மாதிரி நினைச்சு நீ சுதந்திரமா
இயங்கணும்…முதல்ல காலைல படுக்கையை விட்டுப் பத்து மணிக்கு மேலே எழுந்திரிக்கிறதை நிறுத்தணும். அதுவரைக்கும் ஒரு பொம்பளைக்கு தூக்கம் ஆகாது. உடம்பு
சரியில்லாதவங்க கூட ஆறு ஆறரைக்கெல்லாம் எழுந்திரிச்சிடுவாங்க…நீ இப்படி கஜகர்ணத் தூக்கம்
போட்டேன்னா எப்படி? வயசுப் பொண்ணு, அதுவும் வேலைக்குப் போறவ…இப்படித் தூங்கலாமா? அதிகமாத்
தூங்கத் தூங்க உடம்புக்கு வியாதிதான். அதத் தெரிஞ்சிக்கோ. இந்த வயசுல உடம்பு வளைய வேலை
செய்யணும். வேலை செய்யச் செய்ய அசதி வராது. உடம்பு உரம் பெறும். அம்பதுக்கு மேலதான்
இறங்குதசை…தெரியுதா? சும்மாக் கிடந்தா துருப்பிடிச்சுத்தான் போகும்…
அப்டியே பழகிட்டேம்ப்பா…ஆபீஸ் வேலை ஆளை
அமுக்குது…-கொஞ்சம் சீரியஸாகவேதான் சொன்னாள். கொஞ்சம் கொஞ்சமாகக் கோபத்துக்கு ஆளாகிறாள்
என்பதற்கான அடையாளம் அது. தூக்கத்துக்குப் பழகிட்டேன் என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு வெட்கமாயில்லை.
இவர் நினைப்பு இந்த ரீதியில்.
உன் வீட்டுல கல்யாணத்துக்கு முன்னாடி
நீ அப்படி இருந்திருக்கலாம்மா. புகுந்த வீட்டுல அப்படி இருக்கக் கூடாது. திருமணத்துக்குப்
பிறகு தன்னை மாத்திக்கிறதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு…இதை உங்கப்பாவே சொல்லியிருப்பாரே…!
இன்னைவரைக்கும் எங்கப்பா இதைப்பத்திப்
பேசினதேயில்லை. அதுதான் அவர்ட்ட எனக்குப் பிடிச்சது….பெருமையாய்ச் சொல்லிக் கொண்டாள்
மந்தாகினி.
அவருக்கே அது தெரியவில்லையா…அல்லது அங்கு
என்ன வழக்கமோ அப்படியே ஆகட்டும் என்று விட்டு விட்டாரா? திருமணத்திற்கு முன்பே ஒரு
பெண்ணுக்கு நல்லதெல்லாம் சொல்லிக் கொடுத்துப் பழக்கியிருக்க வேண்டாமா?
சமயங்களில் டம்ளரில் தண்ணீர் கொண்டு போய்க்
கொடுத்தான் மோகன். அவிழ்த்துப் போட்ட துணிகளை வாஷிங்மெஷினில் போடுங்க என்றது அது. அதைச்
செய்தான். வாங்க மாடிக்குப் போய் உலர்த்திட்டு வருவோம்…என்ற போது சரி என்று பின்னாடியே
போனான். படுக்கையைப் போட்டான். மடக்கினான். துணிகளை மடித்து அலமாரியில் அடுக்கினான்.
அறையை வேலைக்காரி கூட்டினது போதாதென்று அவ்வப்போது இவனும் கூட்டிக் குப்பை அள்ளினான்.
இதில் எதையும் ஒரு நாளும் செய்யவில்லை மந்தாகினி. இருந்த இடத்திலிருந்து நகராமல் உரல்
மாதிரி உட்கார்ந்திருந்தால்?
மொந்து மொந்து என்று மெத்தையில் ஆடாது
அசையாது உட்கார்ந்து கொண்டு கையில் மொபைலை வைத்துக் கொண்டு என்னத்தையோ பார்த்துக் கெக்கே…பிக்கே..என்று
சிரித்துக் கொண்டிருந்தது. வளைச்சு வளைச்சு சினிமாப் பார்த்தது. எல்லா ஓடிடி.க்களுக்கும்
தடங்கலில்லாமல் பணம் கட்டியிருந்தது. செலவு செய்யலாம்…விரயம் பண்ணலாமா? இவருக்கு இப்படித்தான்
தோன்றியது. விழித்திருக்கும் நேரமெல்லாம் மொபைல் பார்த்தால் அந்தக் கண் என்னத்துக்காகும்?காதில்
இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு கைதட்டிக் கூப்பிட்டால் கூட நிமிருவதில்லை. பின்னால் ஒரு
பாம்பு வந்து படமெடுத்தால் கூடத் தெரியாது.விரைவில் காது மந்தமாகும். அதில் சந்தேகமேயில்லை.
அந்த அளவுக்கு சினிமா மோகம். மொபைல் சேவை. என்ன பிள்ளையை வளர்த்திருக்காங்க..? மனதுக்குள்
புழுங்கினார் ஜம்புகேஸ்வரன்.
பெண் எப்படி என்று கணித்து முடிவு செய்ய
வேண்டுமானால் அவர்கள் வீட்டில் ஆறு மாதம் உடன் இருந்து அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்து
உள்வாங்கினால்தான் வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய முடியும். நடைமுறை சாத்தியமா?
அட ஆறு மாசம் வேண்டாம்…ஒரு மாசம்…அட அது கூட வேண்டாம்…நாலு நாள்…பெண் பார்க்கப் போன
இடத்தில் நிச்சயிக்கும் முன்னாலேயே உட்கார்ந்து கை நனைக்க முடியுமா? உலக வழக்கமில்லையே?
மந்தாகினி….டிபன் வச்சிருக்கேன் டேபிள்ல…ஆபீசுக்கு எடுத்து
வச்சிக்கோ…-அடுப்படியிலிருந்து குரல் தெளிவாய் வந்தது. அக்கினியம்மாள் எத்தனை மணி நேரம்தான்
அக்கினி முன் நின்று காய்வாள்? அவள் வேலை அவளுக்கு
முடிந்தாக வேண்டும். பாவம் இந்த வயசிலும் அயராது உழைக்கிறாள். பையனை விட்டுப் போக மனசில்லை.
உடன் பிசினாய் ஒட்டிக் கொண்டிருக்கிறாள். அதனால் அவரும் கூட இருந்தாக வேண்டிய கட்டாயம்.
தனிக் குடித்தனம் வைத்து விட்டு என்னத்தவோ கூட்டிக் கழிக்கட்டும் என்று இருக்கத் தெரியவில்லை.
இதோ வந்திட்டேம்மா…என்று பதில் சொல்லியிருக்கலாம்.
பதிலாக அங்கிருந்து நகர்ந்தாள் மந்தாகினி. டிபன் பாக்சில் இட்டிலிகளை எடுத்து வைத்து,
சட்டினியைச் சின்னக் கிண்ணத்தில் போட்டு, அதையும் அதில் திணித்துக் கொண்டு, பாக்சை
சடாரென்று சத்தமாக மூடியது இவருக்கு என்னவோ போலிருந்தது. இவருக்கே இப்படியென்றால் செய்தவளுக்கு
எப்படியிருக்கும்? முகத்திலடித்தாற்போல் இப்படியா மூடுவது? ஒரு இங்கிதம் வேண்டாம்?
என்னதான் தெரியும் இந்தப் பெண்ணுக்கு?
ரெடி ரெடியா வச்சாலும் அம்மாவுக்கு வலிக்குதாக்கும்?
பாவம் அவள் தலைவிதி. ஒராள் சமையல் அதிகமானதுதான் மிச்சம். இன்றுவரை அடுப்படியில் மருமகளின்
உதவி என்று துரும்பைக் கூட நகர்த்தியது கிடையாது. காய் நறுக்கட்டுமாம்மா….தோசை வார்க்கட்டுமாம்மா…ஊறீம்….வாய்
திறந்தால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுமோ என்று படு ஜாக்கிரதையாய்த்தான் இருக்கிறது.
ஆளை விடுங்க…என்று ஆபீஸ் கிளம்பி விடுகிறது.
அந்தக் குழந்தைக்கும் சேர்த்து இவள்தான் கவனித்தாள். நேரத்துக்குக் கஞ்சி காய்ச்சி,
குளிப்பாட்டி விட்டு, வயிற்றுக்குக் கொடுத்து, டையஃபர் மாற்றி – குழந்தை பராமரிப்பு
என்பது என்ன அத்தனை சுலபமானதா? இருந்து செய்து பார்த்தால்தானே தெரியும்?
ஆபீஸ் முடிந்து வரும்போது ஒரு குழந்தை
அம்மா என்றுதானே ஆசையாய்ப் போய் நிற்கும்? போய் அங்க இரு….நான் டிரஸ் மாத்தணும்…என்று
படாரென்று கதவைச் சாத்தினால்? அது வீச்சு வீச்சென்று அழுது தீர்க்கிறது. பச்சிளம் குழந்தை
அழுவது ஒரு தாய்க்குப் பதறாதா? பதறவில்லையே? என்ன பிறவியோ? என்ன ஜென்மமோ? அழுது அழுதே அதுவும் பெரிதாகிவிட்டது.
இப்போது அதைப் பள்ளியில் கொண்டு விடும்,
கூட்டி வரும் வேலையும் மோகனுக்குச் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளேனும் எதற்கேனும்
மெனக்கெட வேண்டுமே? ம்உறீம்…அந்த ஜோலியே இல்லை. பெத்துப் போட்டதோடு சரி…அத்தனை பாரங்களும்
இவர்களுக்குத்தான். எண்ணி எண்ணி மறுகினார்
ஜம்புகேஸ்வரன். மனசாட்சி என்று ஒன்று அதற்கு இருக்கிறதா? தெரியுமா அல்லது கிலோ என்ன
விலை என்று கேட்குமா?
டிபன் கைக்கு வந்ததோ இல்லையோ ஆபீசுக்குக்
கிளம்பியாயிற்று. அத்தோடு பேச்சு முடிந்தது. ஏதாவது எடுத்துச் சொல்லி படிய வைப்போமென்றால்
நின்று கேட்டால்தானே? பொறுப்பாய் வளர்த்திருந்தால்தானே…பெரியவர்கள் ஏதோ சொல்கிறார்கள்…நின்று
கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதை மதிக்க வேண்டும்…என்கிற உணர்வாவது இருக்கும். எதுவுமே
இல்லையே இந்தப் பெண்ணிடம்? வீட்டோடு ஒட்டவேயில்லை.
கையில் தினசரியோடு உட்கார்ந்திருந்தார்
ஜம்புகேஸ்வரன். பக்கங்கள்தான் புரண்டனவேயொழிய மனதில் செய்திகள் நிற்கவேயில்லை. அதுதான்
சொந்தச் செய்திகள் படம்போல் சதா சர்வகாலமும் ஓடிக் கொண்டேயிருக்கின்றனவே? என்ன உலக
நடப்பு வேண்டிக் கிடக்கிறது? ஒவ்வொரு வீடும் நன்றாய் இருந்தால் நாடு நன்றாய் இருக்கும்.
பலரும் தன்னைப் போல் இப்படித்தான் அல்லல்பட்டு அழுது அ ரற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பலரும் வெளியே சொல்வதில்லை. சகித்துக் கொண்டு மனதுக்குள் அழுது கொண்டிருக்கிறார்கள்.
முதியோர் இல்லம் சென்று தனித்துக் கிடப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்கிற எண்ணம் வருகிறது.
என்ன ஒன்று. படுக்கையில் விழுந்து விடக் கூடாது. மற்றவர்க்கு சிரமம் கொடுத்து விடக்
கூடாது. ச்சீச் சீ…என்று போகும் பிறகு. அதற்குள் கண் மூடி விட வேணும்…
இதை நினைத்த போது அது நம் கையிலா இருக்கிறது
என்கிற எண்ணம் வந்தது ஜம்புகேஸ்வரனுக்கு. அவ முந்தியோ…நான் முந்தியோ…? எல்லாம் இறைவன்
சித்தம்…குடிக்கத் தண்ணி கொடு…என்று கேட்கணும்…வந்து நீட்டுவதற்குள் போயிருக்கணும்…தலை
சாய்ந்து விடணும்…!கிடைக்குமா அந்த பாக்கியம்? – கேள்வி பிறந்த போது நீண்ட பெருமூச்சு
வெளிப்பட்டது ஜம்புகேஸ்வரனிடமிருந்து.
எப்படியோ இருந்து தொலைச்சிட்டுப் போகட்டும்…எதுக்கு
அந்தப் பொண்ணைப் பக்கத்துல கூப்பிட்டு வச்சு…அட்வைசக் குடுக்குறீங்க…இந்தக் காலத்துப்
பிள்ளைகளுக்கு அட்வைஸ்னாலே பிடிக்காது. அது தெரியாதா உங்களுக்கு? முதல்ல நீங்க விவஸ்தையோட இருக்கக் கத்துக்குங்க…-
படபடவென்று அருகில் வந்து பொரிந்து கொட்டினாள் அக்கினியம்மாள். நெருப்பு சூடுதானே…!
நீ சொல்றது ஒருவகைல சரிதான். இம்புட்டு
வயசுக்கு மேலே இனிமேதான் நான் விவஸ்தையோட இருக்கக் கத்துக்கணும்…! -சமயத்துல ஒரு நப்பாசை
வருது பாரு…கோணல்லாம் நிமிர்ந்துடாதான்னு…அதைத் தவிர்க்கணும்…தலைமுறை இடைவெளி நம்மள
மாதிரி வயசானவங்களை அதல பாதாளத்துல தள்ளிடுத்து…அதுதான் யதார்த்தம்…சத்தியமான உண்மை….!
அவரின் புலம்பல்களைக் கேட்டுக் கொண்டு புரிந்தும் புரியாதவளாய் குழப்பமாய்ப் பார்த்தவாறே
தேமேனென்று நின்றாள் அக்கினியம்மாள்.
----------------------------------------------
01 அக்டோபர் 2025
வெள்ளோட்டம் - சிறுகதை - தாய் வீடு மாத இதழ் - அக்டோபர் 2025 பிரசுரம்
---------------------------------------------------------------------------------------------------
அப்பாவின் அனத்தல் பொறுக்க
மாட்டாமல் ஒரு நாள் பிரபு கோபமாய்ச் சொன்னான்.
என்ன இப்படிக் கொதிச்சுட்டான் என்றிருந்தது கருணாகரனுக்கு. அவன் மறுத்துச் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.
மிகுந்த வருத்தமாயிருந்தது.
இங்கிருந்து
கிளம்பினால் இடம் வாங்கி, லோன் போட்டு, வீடு கட்டித்தான் நகருவேம்ப்பா….அப்போ இதை வாடகைக்கு
விட்டாப் போதும்…வேறே வாடகை வீடு பார்த்து நாம போய் இருக்கிறாப்ல எல்லாம் ஐடியா இல்ல….-முடிவாய்ச்
சொல்லி விட்டான்.
அப்போதுதான்
யோசித்தார் கருணாகரன் தன் தவறை. பெரிய மனதோடு அவன் பெயருக்கு இந்த டபிள் பெட்ரூம் ஃப்ளாட்டை
வாங்கினது தப்பு என்று. வாங்கினது கூடத் தப்பில்லைதான் அதைத் தன் பெயரிலேயே பதிவு செய்யாமல்
விட்டதுதான் மாபெரும் தவறு என்று நினைத்தார். அதைச் செய்திருந்தால் இப்போதான தன் விருப்பத்தை சுதந்திரமாய் நிறைவேற்றியிருக்கலாம்.
யாரும் தடுக்க முடியாது. அநாவசியக் கஷ்டங்களுக்கு
இடமில்லாமல் போயிருந்திருக்கும். அவன் பெயருக்கு
வீடு இருப்பதை மனதில் வைத்து, மாற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறான். தன் வார்த்தைக்கு
மதிப்பில்லை. நல்லது சொன்னால் கேட்க வேண்டாமா? அதென்ன அத்தனை பிடிவாதம்? நான்தான் இருக்கேன்லப்பா…எல்லா
உதவியும் செய்றதுக்கு? பிறகென்ன உனக்கு வீடு மாத்தறதுல கஷ்டம்? என்று சொல்லிப் பார்த்தார்.
அவன் அசைவதாய் இல்லை.
சென்னைக்கு
வந்த பிறகு, அதிலும் அவனுக்குத் திருமணம் ஆனபிறகு அதிகாரம் தன் கையிலிருந்து போய் விட்டாற்போல்
உணர்ந்தார் கருணாகரன். இனிமே அவனை “டா“ போட்டுக் கூப்பிடாதீங்க…என்று புதிதாய் ஒருநாள்
சொன்னாள் காயத்ரி. அதிசயமாய் இருந்தது இது.
என் பையனுக்கு என்றும் நான் தகப்பன்தானே?அவன நான் எப்படிக் கூப்டா என்ன? இதிலென்ன தப்பு? இது என் அன்பான உரிமையில்லையா?
இதைப் போய்த் தடுக்கிறாளே? என்று எண்ணினார். ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனும்
ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தபோதுதான் “டா“ வை நிறுத்த வேண்டும் என்று தோன்றியது
அவருக்கு. கல்யாணம் ஆகிவிட்டதால் மனைவி முன்,
தான் “டா” போட்டு அழைக்கப்படுவதை ஒருவேளை அவனே விரும்பவில்லையோ? அல்லது அந்தப் பெண்
விரும்பவில்லையா? சரி…விட்டு விடுவோம் என்று நிறுத்திக் கொண்டார் கருணாகரன். ஆனால்
அந்த “டா“வில் இருந்த நெருக்கம் சற்றே விலகியது போல்தான் அவரால் உணர முடிந்தது.
இப்படித்தான்
சின்னச் சின்ன விஷயங்களாய் விலகல் ஏற்படும் போலிருக்கிறது. வெளியில் சொல்ல முடியாமல்
அமைதி காப்பதும் கூட ஒருவித மறுப்பின் அடையாளம்தான் என்று உணர்ந்து கொண்டார். அதிகம்
பேசாமல் இருப்பதே கூட ஒருவித அதிகாரம்தானே? நிறையப் பேசி அதிகாரத்தை வெளிப்படுத்துவது..பேசாமலே
இருந்து கழுத்தறுப்பது…என்று இரண்டு வகை இருக்கிறதே என்று அவர் மனசு சொல்லியது.
ஏன்
அவன் பெயருக்கு வீட்டை எழுதினீங்க…? யாராச்சும் இப்படி செய்வாங்களா? மடத்தனமால்ல இருக்கு….காலம்
எதை எப்படி மாற்றும்னு சொல்ல முடியாதுங்க…உங்களையே வெளியேத்தினாலும் போச்சு….ப்ராப்பர்ட்டிலாம்
கடைசி வரை நம்ம பெயரில்தான் இருக்கணும். அப்பத்தான் சிதைல போய் அடங்குறவரைக்கும் மதிப்பு
மரியாதையா இருக்க முடியும். உலகம் போற போக்குத் தெரியாமச் செய்திட்டீங்களே? -பலரும்
இப்படித்தான் சொன்னார்கள். யோசிக்க ஆரம்பித்திருந்தார் கருணாகரன். இனி கைவசம் இருப்பதையும்
கைவிட்டுவிடக் கூடாது என்கிற தீர்மானம் வந்தது
அவருக்கு. ஆனால் தன் பையன் அப்படியெல்லாம் இருக்க மாட்டான் என்கிற நம்பிக்கையும் ஒரு
பக்கமாய் இருக்கத்தான் செய்தது. ஆனால் கைபேசியில்
பார்க்கும் பலவிதமான வீடியோக்கள் அந்த நம்பிக்கையைத் தகர்த்தன. மருமகள் தன் மாமியாரைப் பிடித்துத் தள்ளிவிடும்
ஒரு காட்சி. போ…போய்த்தொலை…என்ற சுடுசொற்களோடு. அந்தக் கிழவி தடால் என்று கட்டிலிலிருந்து
கீழே விழும் காட்சி மனதைப் பதை பதைக்கச் செய்தது. உனக்கு எல்லா வசதியும் இங்க இருக்குப்பா…தனி
ரூம், டி.வி., நல்ல சாப்பாடு, தண்ணி வசதி, டாய்லெட் வசதி…பிரச்னையில்லாம இருக்கலாம்…என்று
சொல்லி தந்தையின் சம்மதம் எதிர்பார்க்காமலேயே பணத்தைக் கட்டி விட்டு விட்டுப் போகும்
பலரும் படத்தில் வந்தார்கள். வாய்மூடி மௌனியாய் இருக்கும் வயசான, ஆட்டம் கண்ட பெற்றோர்கள். மனதில் உள்ளதைச் சொல்ல முடியாமல் கண்ணீர் கசிகிறார்கள்.
இப்டியெல்லாம் இருக்கிறதுக்குச் செத்துடலாம்…என்கிறார் ஒருவர். நன்றி கெட்டவனுக…இவன்க
மூஞ்சியவே பார்க்க நான் விரும்பலை…என்று வெறுத்து உமிழ்கிறார் ஒரு பெரியவர். எவனும்
என்னை வந்து பார்க்கணும்ங்கிற அவசியமில்ல….என்று தன் பென்ஷன் காசை நம்பி நிமிர்கிறார்
இன்னொருவர்.
அப்பாவின்
நினைவு தினத்திற்கு ஒரு முதியோர் இல்லம் சென்று பணம் கட்டியிருந்தார் கருணாகரன். அன்றைய
தினம் அங்கிருக்கும் அனைவருக்கும் பாயாசம், வடை. நாலுவகைக் காய்கறிகள், பச்சடி, கிச்சடி,
இனிப்பு, பழம், இவைகளோடு விருந்து. சாப்பாட்டு இலையின் முன் அமர்ந்து அவர்கள் தன் தந்தைக்காகத்
தியானித்ததும், தனக்கு நன்றி தெரிவித்ததும், ஆசீர்வதித்ததும் அவர்களை ஒவ்வொருவராக இலை
முன் நின்று தான் கவனித்ததும். பின் அவர்களோடு அமர்ந்து உண்டதும் மறக்க முடியாத நிகழ்வாயிருந்தது.
மாலையில் அங்கு போய் காற்றாட அமர்ந்திருந்த பொழுது அவர்களில் பலர் வாசலையே நோக்கிக்
கொண்டிருந்ததும், சாலையில் யார் வருகிறார்கள் என்று கவனித்துப் பார்த்ததும்.. மாதம்
ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் செல்லும் மகனைக் காணவில்லையே என்று ஏங்கிக் கிடந்ததும்
இவரை மிகவும் வருத்தியது. அந்த நிலை தனக்கும் வந்து விடக் கூடாது என்று அப்போதைக்கு
மனதைத் திடப் படுத்திக் கொண்டார் கருணாகரன். ஆனால் காலம் யாரை எவ்வாறு. எங்கு கொணடு நிறுத்துமோ என்கிற பயமும் அவருள் இருக்கத்தான்
செய்தது.
சிந்தனை அறுபட்டது. பல
சமயங்களில் பின்னோக்கிப் போய்விடுவதாக உணர்ந்தார். எதிர்காலம் எப்படியிருக்குமோ என்கிற
பயம் கூடவே வந்து கொண்டிருந்தது. சென்னைக்கு வரும் முன்பான தனக்கும் தன் மனைவிக்குமான
பேச்சை நினைத்துப் பார்த்தார்.
சென்னைல ஒரு வீடு வாங்குவோம்…நாம
அங்க போயிடுவோம்.. அவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணுவோம். தனிக்குடித்தனம் வைப்போம்…பிறகு
நாம இந்த மதுரைக்குத் திரும்ப வந்திடுவோம்…-இதுதான் கிளம்பும் முன் உண்டான சுருக்கமான
பேச்சு, ஒப்பந்தம். அக்ரிமென்டா எழுதிக் கொடுக்க முடியும்? புருஷன் பெண்டாட்டிக்குள்
என்ன அக்ரிமென்ட்? வாய் வார்த்தைதான் ஒப்பந்தம். அதற்கு மதிப்பில்லை என்றால்? அவள் இப்போது வர மறுக்கிறாள். பையனும் அமைதி காக்கிறான்.
நீ வேணா போய் இருந்துக்கோ…என்று சொல்லி விடுவானோ? என்ற சந்தேகம் வந்தது இவருக்கு. நான்
வராப்ல இல்லை. பையனோடுதான் இருப்பேன். அவன் போயிடுங்கன்னு சொல்லட்டும். கிளம்பறேன்…அல்லாமல்
நான் நகர்றாப்ல இல்லை என்றாள். அவன் அப்படிச் சொல்ல மாட்டான் என்கிற திடமிருந்தது அவளிடம்.
ஆனால் நீயும் இருப்பா…அங்க ஏன் போறே? என்று ஒரு வார்த்தை வரவில்லை. போனாப் போய்க்கோ…ரோட்டுல
விழுந்து செத்தா சாவு..! இதுதான் தன் கதியா?தன் கடமைகளை நூறு சதவிகிதம் முற்றாய் நிறைவேற்றியவனுக்கு
இதுதான் நன்றியா? இதுதான் பலனா? பெற்ற பிள்ளைகள் அம்மாவிடம் ஒரு மாதிரியாயும், அப்பாவிடம்
வேறு மாதிரியாயும் ஏன் இருக்கிறார்கள்? தான் தன் தந்தையிடம் அப்படியில்லையே? எனக்கு
ஏன் நிகழ்கிறது இப்படி? கேள்விகள் கேள்விகளாகவே
நிற்கின்றன. தனக்கு மட்டுமா? இந்த உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான தந்தையர்க்கும்
இதே நிலைதான். தாயாரை ஒதுக்கிய தனயன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது தாய் தனியே
மகனிடம் மாட்டிக் கொண்டால் பெரும்பாலும் நிகழ்ந்து போகிறது. அவர்களும் ஒரு நாள் கிழமாவார்கள்
என்று ஏன் உரைப்பதில்லை, உணருவதில்லை?
ஆரம்பம் முதலே. அதாவது படிக்கிற காலம் முதலே அவன்
அம்மா கோண்டுதான். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒன்றாய் கோயில் போவார்கள். கடைக்குப் போவார்கள்.
அவன் ஊரில் இருந்தால் இவருக்கு வண்டி கிடைக்காது. அம்மாவைப் பின்னால் உட்கார்த்திக்
கொண்டு ஊர்வலம் வருவான். சரி…நாலு நாளைக்குத்தானே என்று விட்டுவிடுவார். காலேஜ் படிக்கும்போதும்,
பிறகு வேலைக்குப் போனபோதும் அப்படித்தான்.
ஏதாவது முக்கிய வீட்டுக் காரியமாய் வேண்டுமென்றால் மட்டும் அவர்களால் செய்ய
முடியாததற்கு இவரை அணுகுவார்கள். மற்றப்படி
பேச்சு…பேச்சு…பேச்சு…அப்படி என்னதான் பேசுவார்களோ என்று நினைத்துக் கொள்வார் இவர். தனக்கு எதிராகவா பேசிவிடப் போகிறார்கள்? இதை ஏன்
இத்தனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்? பையனுக்கு அம்மாமேல் பிரியம் ஜாஸ்தி. இருந்துவிட்டுப்
போகட்டுமே! அதனால் தனக்கென்ன பாதகம்? என்று விட்டு விட்டார் இவர். தன்னிடம் கொஞ்சம்
அதிக நேரம் பேசிவிட்டால் கூட…போதும்…போதும் இன்னைக்கு..அப்புறம் உங்கம்மா கோவிச்சிக்கப்
போறா…! என்று கிண்டலடிப்பார் சமயங்களில். ஒட்டுதல் இல்லாத சேவையாற்றல். அதாவது கடமையைச்
செய்தல். பலனை எதிர்பாராமல். எது எப்படி நடக்கும். எங்ஙனம் மாறும் என்று யாரால்தான்
நிர்ணயிக்க முடியும்? காலமும் நேரமும் எப்படி இழுத்துக்கொண்டு போகிறதோ அதனூடே பயணம்
செய்வோம். விதி விட்ட வழி.
மனைவியுடனான அந்த எழுதப்படாத
ஒப்பந்தம் இப்போது காலாவதியாகி விட்டது. அவருக்கும் சேர்த்துத்தான். ஆனால் இவருக்குத்தான்
இந்தச் சென்னையில் இருப்புக் கொள்ள மாட்டேனென்கிறது. ரெண்டு மாதத்திற்கொருமுறை ஊர்
சென்று வருகிறார். அங்கு போய் அவர் ஜனங்களைப் பார்த்தால்தான் திருப்தி. ஆரோக்கியம்.
அவர்கள் பேசுகிறார்களோ இல்லையோ, ஒரு சிறு புன்னகை, நல்லாயிருக்கீங்களா? என்ற ஒற்றை
வார்த்தைக் கேள்வி…வேண்டாமே…அவர்களையெல்லாம் கண் கொண்டு பார்த்தாலே போதுமே..மனதிற்குப்
புதிய உற்சாகமும், ஆரோக்கியமும் வந்துவிடுகிறதுதான். அப்படித்தான் இவரது மீதி வாழ்க்கை
ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கே வாழ்க்கை துவங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான்
வாழ்க்கை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது…..!! பாதையெல்லாம் மாறி வரும்…பயணம்
முடிந்து விடும்… - பாடலின் கடைசி வரி…அவரை ஈர்த்தது. என்று முடியுமோ இந்தப் பயணம்
என்று அவர் மனது ஏங்கியது. கடந்து போன காலங்களின் ஈரத்தில்தான் இப்போது தான் மீதி வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டார் கருணாகரன். நடப்பு வாழ்க்கை அவருக்கு
அத்தனை ஸ்வாரஸ்யம் தருவதாயில்லை. சொல்லப்போனால்
பையனின் திருமணத்திற்குப் பின்பே அந்த ஸ்வாரஸ்யம் போய்விட்டது என்று துல்லியமாயத் தோன்றியது
அவருக்கு. தனிக் குடித்தனம் வைத்து விட்டு
நாம் நம் இடம் பெயர்ந்து விடுவோம் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அவருள் பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உலகம் பூராவும் தன் எண்ணம்போல் இயங்கிக் கொண்டிருக்கும்போது,
இவள் மட்டும் ஏனிப்படித் தனித்து நிற்கிறாள்? இதென்ன பெருமைக்குரியதா? நாளைக்கு மருமகளினால்
கேவலப்படுத்தப்பட்டால் அப்போது என்ன செய்வாள்? முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வாள்.
இந்த உலகத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் எங்காவது ஒத்துப் போயிருக்கிறதா? ஒரு
இடம் சொல்ல முடியுமா? இப்போதென்ன அவ்வளவு இஷ்டமாகவா இருந்து கொண்டிருக்கிறார்கள்? தலைமுறையே
வேறு…பிறகு எப்படி ஒத்துப் போகும்? கேவலப்பட்டு வெளியேற வேண்டுமென்பது அவள் தலைவிதியோ
என்னவோ? அதை யார்தான் தடுக்க முடியும்? முடியும்னா கூட்டிட்டுப் போப்பா…என்று சவால்
விடுவதுபோல் சொல்கிறான். அவன் ஆதரவு இருக்கிறது என்கிற நினைப்பிலிருக்கிறாள். அது தடம்
மாற எவ்வளவு நாழி ஆகும்? சிலருக்கு வயசாகிறதேயொழிய அதற்கான மனப் பக்குவம் வருவதில்லை. காலமும், அனுபவங்களும் என்று இவர்களுக்கு ஆதரவாய்
இருந்திருக்கிறது? இப்பூவுலகில் ஒரு உதாரணம் காண்பிக்க முடியுமா? காயத்ரியை நினைக்க,
பரிதாபமாய்த்தான் இருந்தது கருணாகரனுக்கு.
































