19 அக்டோபர் 2024

ஊருண்டு காணி இல்லேன் - நாஞ்சில் நாடன்

 நாஞ்சிலாரின் நூல்களைத் தொடர்ந்து வாங்கிப் படித்து விடுபவன் நான். சற்று முன் விஜயா பதிப்பகத்திலிருந்து இது கைக்கு வந்து சேர்ந்தது. மொழியைப் புதிய பொருள் நிறைந்த ஆயிரம் அர்த்தங்களோடு புதுப்பித்துப் பொலிவூட்டும் நாஞ்சில் நாடன் என்று புகழ்ந்துரைக்கிறது பின் அட்டை வரிகள்.படிக்கத் துவங்கியிருக்கிறேன்




 

------------------------------------------------------------                                      

 கடைநிலை“

                                        (நாவல்)

 

 

 

 

 

 

         உஷாதீபன்

 

 

 

 

விரைவில்…

                    2025 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு

 

----------------------------------------------------------------------------------------------

13 அக்டோபர் 2024

சிறுகதை “உரசல்கள்” தினமணி கதிர் 13.10.2024


 

                                                                                                      ---------------------------------




                                                             -

            திகபட்சம் அஞ்சு நிமிஷத்துக்கு மேலே உன்னோட பேச முடியாது….என்றான் அரவிந்தன்.

            தலையை வாரியவாறே கண்ணாடி வழி அவளை நோக்கிய  அவன், பதிலில்லாமல் போகவே,  நான் கிளம்பறேன்….என்றான். ஆபீஸ் போகும் நேரத்தில் ஒன்றைக் கிளப்பிவிட்டுப் போகிறான்.  

            நான் என்ன உங்களோட பேசக் காத்திட்டிருக்கனா? எனக்கு நிறைய வேலையிருக்காக்கும்…

            ஏதோ ஆரம்பிச்சே…அதான்….போற நேரத்துல எதுக்குப் பிரச்னைன்னு….

            என்ன பிரச்னை? பேச ஆரம்பிச்சாலே பிரச்னையா? என் வேலையை நான் பார்த்திட்டிருக்கன்…உங்களோட ஜாலியா யார்தான் பேச முடியும்…? –

            சட்டையை இன் பண்ணி, பெல்ட்டை இறுக்கிய வேகம் தன் பேச்சு பிடிக்கவில்லை என்பதை உணர்த்தியது. கிளம்பும்போது எதுக்கு சண்டை என்று நினைக்கிறானோ?

            அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். பிறகு சொன்னான்.

.பொழுது விடிஞ்சவுடனே ராத்திரி நீ வெட்டியாத் தூக்கம் முழிச்சுப் பார்த்த சினிமாவப் பத்தி பேச ஆரம்பிச்சேன்னா எப்டி? அடிதடி…வெட்டு…குத்து…ரத்தம்…இதுவா சினிமா…? ரெண்டு கோஷ்டிக அடிச்சிட்டுச் சாகுறது ஒரு படமா? இன்னும் எத்தன படம்தான் எடுப்பாங்க இப்டி? அபத்தம்….!

            சொல்லிவிட்டு தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினான் அரவிந்தன். காலில் மாட்டிய ஷூவை பிரஷ்ஷால் துடைத்து விட்டுக் கொண்டான்.

            குப்பையையும் தூசியையும் ஒதுக்கிறதுக்கு இந்த எடம்தானா கிடைச்சது? வீட்டைப் பெருக்கினா, அந்த வேலை எதோட முடியும்? குப்பையை அள்ளி வெளியே கொண்டு போடுறதோடதானே? அதை ஓரமாக் குமிச்சு வச்சு அழகு பார்த்தா? ஒரு வேலையை எடுத்தா அதை முழுமையாச் செய்யணும். பாதியோட நிறுத்தக் கூடாது. இதெல்லாம் கூட உனக்குச் சொல்லித் தர வேண்டிர்க்கு….வேலைகளைத் திருத்தமாச் செய்யுறதுக்குப் பழகிக்கோ….அதுதான் அழகு…!

            எந்த வகையிலேனும் அவன் தன்னை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பதாய்த் தோன்றியது நந்தினிக்கு. அப்படித்தான் அவளால் எடுத்துக் கொள்ள முடிந்தது. அதில் அவனுக்கு ஒரு குரூர திருப்தி. ஆபீசில் இவனை மற்றவர்கள் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?  

            நான் வழக்கமாச் செய்ற வேலைதானே…அதை என் இஷ்டத்துக்கு எப்டியோ செய்துக்கிறேன். இதிலெல்லாம் நீங்க ஏன் மூக்கை நுழைக்கிறீங்க…? என்றாள்.

            பார்த்தியா…உன் வார்த்தைலயே நீ மாட்டிக்கிறே…காரணம் நீ எதையும் முழுசா செய்து பழகலை….உங்க வீட்டுல உன்னை அப்படிப் பழக்கலை…எப்டியோ செய்துக்கிறேன்னா என்ன அர்த்தம்? இப்டித்தான் செய்யணும்னு சொல்லித் தரலையா உனக்கு? எவ்வளவு நேரம் மிச்சப்படும்? உடல் நோவும் குறையும்…

            இங்க பாருங்க…அநாவசியமா எங்க அப்பாம்மாவ இழுக்காதீங்க…எதானாலும் என்னைச் சொல்லுங்க…கேட்டுக்கிறேன்…உங்க குறைகளை  கவனிச்சு கவனிச்சு நான் சொல்ல ஆரம்பிச்சேன்னா நீங்க தாங்க மாட்டீங்க…என்னவோ எல்லாத்துலயும்  ரொம்ப கரெக்டா இருக்கிறதா நினைப்பு உங்களுக்கு…! யாருமே பர்ஃபெக்ட் இல்ல இந்த உலகத்துல…தெரிஞ்சிக்குங்க…

            …அதுக்கு அப்புறம் வருவோம். இப்ப இதச் சொல்லு…உங்க அப்பா அம்மாவோட அடையாளம்தானே நீ…இன்னொரு வீட்டுக்குப் போகுற பெண்ணை எப்படிப் பொறுப்பா வளர்க்கணும்னு ஒரு முறை இருக்கில்லையா?  நீ இங்க எப்டி இருக்கேங்கிறதைப் பொறுத்துத்தான் உங்க அப்பா அம்மாவுக்குப் பெருமை. அவுங்க பேரைச் சொல்ற மாதிரி இருக்கணும் உன் செயல்பாடுகள். அதுதானே அழகு….

            கோர்வையாக அவன் சொல்வதில் தான் லயித்துப் போகிறோமோ? எதிர்த்துப் பேசும் திறனில்லையா தனக்கு? அல்லது அவன் சொல்வது நியாயம்தானே என்கிற எண்ணம் தன் மனதில் படிந்திருக்கிறதா? பல சமயங்களில் மௌனமே அவளது மொழியாயிருந்திருக்கிறது. ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியுமா?

            அப்போ என்னை பொறுப்பா வளர்க்கலைங்கிறீங்க…பொறுப்பில்லாதவளை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாம்?

            ஒரு பெண்ணோட செயல்பாடுகளைக் கணக்கிடணும்னா குறைஞ்சது ஆறு மாசமாவது அவளோட நடவடிக்கைகளைக் கவனிக்கணும்…அது சாத்தியமா? தினமும் உங்க வீட்டுக்கு வந்து குந்தி, உன்னை விடாமக் கவனிச்சு, அதுக்கப்புறம் ஓ.கே.சொல்றேன்னு சொல்ல முடியுமா? யாராச்சும் அலவ் பண்ணுவாங்களா? நடைமுறை சாத்தியமா? இப்படித்தான் பலபேர் மாட்டிக்கிட்டு முழிக்கிறான்…

            அதேதானே எங்களுக்கும்…ஆம்பளை ஒழுங்கானவனான்னு பார்க்கிறதுக்கு எங்களுக்கும் உரிமை உண்டுதானே?

            நல்லாப் பார்த்திருக்க வேண்டிதானே? நானா வேணாம்னேன்….ஒரு தரம் கோயில்ல வச்சுப் பார்த்தவுடனே சரின்னு யார் சம்மதம் சொல்லச் சொன்னாங்க?

            அந்த ஈர்ப்பு ரெண்டு பேருக்கும் பொது. அதனாலதான் அனுபவப்பட்ட பெரியவங்க வேணும், வேண்டாம்ங்கிறதை முடிவு பண்றாங்க…அவுங்க கண்களுக்குத்தான் சரி, தப்புங்கிறது தெரியும்…அதப் புரிஞ்சிக்குங்க…நீங்களும்தான் தலையாட்டினீங்க…!

சுளீர் என்று கொடுத்ததனால் வாயடைத்துப் போனானோ?

            பைக்கை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது. பதறிப்போய் ஓடினாள் நந்தினி.

            என்ன திடீர்னு கிளம்பிட்டீங்க…? குழந்தையை பஸ் ஏத்துறதுக்கு வருவீங்கல்ல…என்றாள் அவனைப் பார்த்து.

            ஆபீசே அஞ்சு கி.மீ. இருக்கு. எப்டி வர்றது…? இப்பத்தான் இது உனக்குத் தோணிச்சா? இன்னிக்கு நீயே கொண்டு விடு….-என்றான் சற்று எரிச்சலுடன். வண்டி ஸ்டார்ட் ஆகாமல் படுத்தியது.

இத சர்வீசுக்கு விடக்கூட எனக்கு நேரமில்ல…-அலுத்துக் கொண்டான்.

            மாடி வீட்டில் இருப்பவர்கள் கவனிக்கிறார்கள் என்பது தெரிந்தது. வாசலில் செல்லும் காய்கறி வண்டியைக் குரல் கொடுத்து அழைத்தார் மேலே நிற்பவர். அந்த வீட்டுப் பெண்மணியும் வந்து தலை நீட்டியது தன் சத்தத்தைக் கேட்டுத்தான் என்று இவன் நினைத்துக் கொண்டான். காலைக் காட்சி பார்க்க அவ்வளவு ஆர்வம். அவர்களுக்கு அந்தத் தொல்லை இல்லை. மகனும் மருமகளும் வெளி நாட்டில். நிம்மதியான பாடு.

            என் மொபெட்டும் ரிப்பேருங்க…நான் எப்டிக் கொண்டு விடுறது? நடந்துதான் போகணும்….இப்டி திடீர்னு கிளம்பினீங்கன்னா எப்படி? – நந்தினி அழுதுவிடுவாள் போலிருந்தது.

            கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி, கொண்டு விட்டுட்டு வா…வேறென்ன செய்றது? இல்லன்னா ஆட்டோல போ. என்னால இன்னிக்கு முடியாது. மீட்டிங் இருக்கு….- சொல்லியபோது அவன் பரபரப்பை உணர்ந்ததுபோல் வண்டி அலறியது.

            ணியைப் பார்த்தாள். எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நெஞ்சு படபடத்தது. பிரஷரும் ஷூகரும் இதனால்தான் ஏறுகிறது. எட்டரைக்கு பஸ் வரும். அதற்குள் குழந்தை விக்கியைத் தயார் செய்தாக வேண்டும். இப்பொழுதெல்லாம் அவனே குளித்துக் கொள்கிறான். எப்படிக் குளிக்கிறானோ…சோப்பு சரியாய்த் தேய்த்து, அழுந்தக் கழுவி, நீர் போகத்  துவட்டி…எதுவுமே பார்த்து நாளாகிவிட்டது. எல்லாம் அவன்தான் செய்வான். குழந்தைக்கும் பழக்கிவிட்டிருக்கிறான்.

            தேர்டு  ஸ்டான்டர்டு படிக்கிறான்…அவனா செய்துக்க வேண்டாமா? இன்னமுமா கூட நிக்கணும்…பழகட்டும் என்று விட்டு விடுவான். விக்கியின் மேல் பற்களில் கரை இருந்தது. என்ன தேய்த்தாலும் அது போவதில்லை.

            கவனிக்கலையா நீங்க? என்றாள் எரிச்சலுடன். குழந்தையின் பல்வரிசை பிறழ்வதுபோல் தோன்றி வருத்தியது அவளை.

            அதுக்கு நான் என்னடீ பண்றது? அதுவா வந்திருக்கு அப்படி? அதெல்லாம் பால் பற்கள். கீழே விழுந்து புதுசா முளைக்கும்னு டாக்டர் சொல்லியிருக்கார்…ஒண்ணும் கேவலமில்லை.  நீயா ஏதாச்சும் நினைச்சுக்குவியா…குழந்தையை யாராச்சும் கேலி பண்ணுவாங்கன்னு…? நிறையக் குழந்தைகளுக்கு இப்படித்தான். சாக்லெட் தின்னு தின்னு கரை போட்டிருக்கு…இது குழந்தைகளுக்கான இயற்கை…எல்லாம் சரியாப் போகும்…

            ஒரு நீண்ட லெக்சரே கொடுத்தான்.  அவன் செய்வதெல்லாம் சரி. சொல்வதெல்லாம் சரி. யாரும் குறை சொல்லிவிடக் கூடாது. டாக்டர்ட்ட நான்தானே ரெகுலரா அழைச்சிட்டுப் போறேன்…நீயா அலையுறே….எனக்கில்லாத அக்கறை உனக்கு வந்திடுச்சா…? சமையல் வேலையை மட்டும் பாரு….போதும்…என்பான்.

            ஒரு நாளைக்கு சமைச்சுப் பாரு…ன்னு அய்யாவத் தவிக்க விடணும்…அப்பத் தெரியும்… என்று நினைத்துக் கொள்வாள்.

            எந்தப் பேச்சு எடுத்தாலும்  மட்டம் தட்டுவதிலேயே  கொண்டு போய் முடிப்பான்.  . சுமுகமான பேச்சு என்பதே கிடையாது. இது அவளுக்குப் பழகிவிட்டது. அதனால் அவளும் அவ்வப்போது அவனைச் சீண்ட ஆரம்பித்திருந்தாள்.

தன்னைப்பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவனுடைய பெற்றோர்களைக் கூட வைத்துக் கொண்டு கும்மியடிக்கிறேனே…அது ஒன்று போதாதா? அதை உணர்கிறானா? எந்த வீட்டிலாவது இது உண்டா? எல்லாரும் தனியாய்த்தான் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும்தான் கூட்டில் அடைந்த பறவையாய்க் கிடக்கிறேன். அதை அவன் ஏன் உணர மாட்டேனென்கிறான்? உங்க அம்மா அப்பாவ விட்டுட்டு வாங்க…பிறகு பார்ப்போம்…என்று கிளம்பத் தெரியாதா? தனிக்குடித்தனம்தான்னு ஒத்தக் கால்ல நிக்கத் தெரியாதா? என்னை என்ன கேனச்சி…க்கின்னு நினைச்சிட்டானா?

ஆக்ரோஷமான சிந்தனை நந்தினியின் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அதோடுதான்  பொழுதுகளும் நகர்கின்றன. மாமனார் மாமியார் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த வாரக் கடைசியில் திரும்பிவிடக் கூடும். அவர்கள் இல்லாத இந்தச் சமயத்தில் தன்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. ரெண்டு நாள் லீவு போட்டு விட்டு எங்கேனும் அழைத்துக் கொண்டு செல்வோம் என்று தோன்றவில்லையே…! இந்தக் குண்டுச் சட்டிக்குள்ளேயேதான் குதிரை ஓட்டுவானா?  காசைக் கை வீசிச் செலவு பண்ணி ரெண்டு நாள் அடுப்படிப் பக்கமே போகாமல் இருந்தால்தான் என்ன? குடியா முழுகிடும்? சேமிப்பு கரைஞ்சு போகுமா? சரியான சுக்காஞ்சட்டி….!

மாதத்தோட முதல் செலவு என்ன தெரியுமா? சேமிப்பு…என்பான். மண் உண்டியல் ஒன்று வாங்கி சாமி படத்தின் முன்னால் வைத்திருக்கிறான். எவ்வளவு என்று கணக்கில்லாமல் அதில் சேருமாம். அப்படியொரு சந்தோஷம். உடைக்கையில் கோயில் காரியமாம். அப்படியாவது ஒரு பயணத் திட்டம் வைத்திருக்கிறானே?

விக்கி…என் தங்கம்…குளிச்சிட்டு வந்திட்டியா…செல்லம்….சமத்துடா நீ….கண்களில் நீர் பொங்க…டவலை எடுத்து அழுந்தத் துடைத்து விட்டாள் நந்தினி.

நான் பார்த்துக்கிறேன்ம்மா….ஸ்கூல் பேக்கெல்லாம் ரெடி பண்ணிட்டேன். டிபன் மட்டும் கொடு…வாட்டர் பாட்டில்ல நானே தண்ணி ஊத்திக்கிறேன்…என்றவாறே யூனிபாரத்தை அவன் மாட்டிக் கொண்ட வேகம்…இவளைச் சிலிர்க்க வைத்தது. ஐ.டி.கார்டு…ஐ.டி.கார்டு என்று அவன் பறந்தது இவளுக்குள் சிரிப்பை வரவழைத்தது.

தினமும் எல்லாம் தயார் நிலையில் எடுத்து வைத்து, ஒவ்வொன்றாகப் போட்டுவிட்டு இவள்தான் ரெடி பண்ணுவாள். தலையை வாரி, நெற்றியில் விபூதி இட்டு, சாமி படத்தின் முன்னால் நின்று அவன் ஸ்லோகம் சொல்லும் அழகு  அவள் கண்களில் நீரை வரவழைக்கும். குழந்தைதான் தன்னை ஆசுவாசப்படுத்தும் பிரத்யட்ச தெய்வம் என்று நினைத்துக் கொள்வாள்.

நான் ஒண்ணு செஞ்சா நீ ஒண்ணு செய்ய வேண்டாமா? எல்லாத்தையும் நானே செய்ய முடியுமா? யூனிபாரத்தை போட்டு விடுறதாவது செய்….பாரு…இன்னிக்கு மண்டே…ஒயிட் ஷூ எவ்வளவு அழுக்கா இருக்கு…அதைக் கொஞ்சம் சோப்பு போட்டு வாஷ் பண்ணி  உலர வச்சா என்ன? எல்லாம் நான்தான் பார்க்கணுமா? எதைத் தொட்டாலும் அவனின் சுடுசொற்கள். எல்லாவற்றிலும் அவன் ஞாபகங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஆபீசில் இவனிடம் மாட்டிக் கொண்டு  குழுப் பணியாளர்கள் எப்படித் தவிக்கிறார்களோ? எவனும் இவனின் டார்ச்சர் தாங்காமல் கையை நீட்டி விடக் கூடாது. இப்படியெல்லாம் நினைத்து பயப்படத்தான் செய்தாள் நந்தினி.

அவன் தந்தை அவனை எதுவுமே சொல்வதில்லை. அவருண்டு, புத்தகங்கள் உண்டு என்று இருந்து விடுகிறார். அவன் அம்மாதான் ஓரிரு முறை இவனைக் கண்டித்திருக்கிறாள். அது இவள் காதில் விழுந்ததும் உண்டு. அதில் கொஞ்சம் மனசு ஆறும்.

எல்லாத்துக்கும் அவளையே சொல்றியே…நீயும்தான் செய்றது….ஒருத்தியே கிடந்து கஷ்டப்பட முடியுமா? பாதி வேலையை நீ வாங்கிக்கணும்…வீட்டுக்கு உதவியா இருக்கிறதுல தப்பு எதுவுமில்லே. …அவளுக்கு நீ செய்யாம வேறே யார் செய்வாங்க…? காலம் பூராவும் உன்னோட பயணம் பண்ணப் போறவ அவதானே? நாங்களா? இன்னைக்கோ நாளைக்கோ…எங்க கதை முடிஞ்சு போயிடும்…நாள் கணக்குதான். முதல்ல அவளைக் குறை சொல்றதை விடு…நீயும் சேர்ந்து செய்…உன் வீட்டுக்கு நீதான் செய்யணும். கணக்குப் பார்க்காதே…! கடிஞ்சு மாயாதே…! எல்லாம் சரியாகும்…

அவன் தன்னைப் பொறுத்தவரை கண்டிப்பாகத்தான் இருக்கிறான். குழந்தை விக்கியைக் கூட இவ்வளவு கண்டித்து அவள் பார்த்ததில்லை.

விஸ்வநாதன்ங்கிறது பழைய பேரு…கொஞ்சம் மாடர்னா வைக்கலாமே…என்றாள். அதைக் கூட அவன் காதில் வாங்கவில்லை. எங்க தாத்தா பெயர் அது. அப்பா அதைத்தான் வைக்கணும்னு முன்னமே சொல்லிட்டார். அதைத் தட்ட முடியாது…என்று விட்டான்.

நீங்க அடிக்கடி சொல்வீங்களே…ஏதோ டைரக்டர் பெயர்னு…ரித்விக் உறட்டக்னு…அந்த முதல் பாதி பேர் கூட நன்னாத்தான் இருக்கு….ரித்விக்….அதுக்கு என்ன அர்த்தம்னு கூகுள்ல தேடிப் பாருங்க…ஏதாச்சும் சாமி பேரா இருந்தாக் கூடப் போதுமே…வைக்கலாமே…முன்னோர்கள் பெயருக்கான சாமிக்கு இப்போ மாடர்ன் பெயர் என்னன்னு தேடி வையுங்க…அதுபோல கொஞ்சம் பொறுமையாத் தேடி, செலக்ட் பண்ணிச் …செய்றது….நம்ம குழந்தைக்கு பெயர் வைக்கிறதுல நம்ம விருப்பம் தானே முதல்.  தப்பில்லையே…! -  நிதானமாய்த்தான் சொன்னாள் நந்தினி.

 அவன் எதைக்  காதில் வாங்கினான். கேட்டால் மட்டை அடியாய் அடிப்பான். என்ன பேர்ங்கிறது முக்கியமில்ல…எப்படி வளர்க்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்…இந்த நாட்டுக்கு ஒரு நல்ல பிரஜையை உருவாக்கணும்…அதான் முக்கியம்….கூப்பிட கண்ணியமா இருக்கணும். தஸ்ஸூ புஸ்ஸூ…கர்ரு…புர்ருன்னு இருக்கக் கூடாது…தெரிஞ்சிதா? குறிப்பா “க்” குல முடியுற பெயரா இருக்கக் கூடாது. கார்த்திக்..ரித்விக்…இதெல்லாம் சுத்த உறம்பக்….நாராயணன்ங்கிறதை நாராயண் – னு சுருக்கிக்கிறான். அதுதான் ஃபேஷனாம்…லேட்டஸ்டாம்…கிறுக்குப் பசங்க….! பெயருக்குப் போய் எதுக்கு இவ்வளவு மெனக்கிடணும்…? முன்னோர்கள் இருக்கவே இருக்காங்க…குலம் தழைக்கணும்னு வாய் கிழியப் பேசறோம்…!

உங்க கணக்குப்படி சிறந்த பிரஜையாக்க மிலிட்டரிலதான் சேர்க்கணும்….என்றாள் இவள் வெடுக்கென்று. அதற்குப் பிறகு இரண்டு நாள் பேசவில்லை அவன். பேசவில்லை என்றால் அப்படி ஒரு கர்ண கடூரமாய் யாருமே  இருக்க மாட்டார்கள். ஏதோ தீண்டத்தகாதவள் போல நடந்து கொள்வான். பக்கத்திலேயே அண்டக் கூடாது என்பான். எதுவுமே அவளிடம் வாய் விட்டுக் கேட்க மாட்டான். காபியைக் கொண்டு வைத்தால், வைத்தமேனிக்கே இருக்கும். தொடமாட்டான். திடீரென்று அடுப்படிக்குள் நுழைந்து, தனக்கான டிபனைப் பண்ண ஆரம்பித்து விடுவான். தோசையை வார்த்து வார்த்து எண்ணிக்கையில்லாமல் அடுக்குவான். வீம்புக்கு, தானே இரவு அதைச் சுடப்பண்ணிச் சாப்பிடுவான்.  அவனே சட்னி செய்து கொள்வான். மணக்க மணக்க எள்ளு மிளகாய்ப்பொடி இருக்கு என்று முன்னால் தூக்கி கண்காண வைத்தால் அலட்சியமாய் ஒதுக்குவான். அவனே காபி கலந்து கொண்டு பெஸ்ட் காஃபி என்று சத்தமாய்ப் புகழ்ந்து கொள்வான்.

பண்ணிக்கட்டுமே…என்ன இப்ப…? என்று விட்டு விடுவாள். ஒரு நாள் செய்துண்டா சுருங்கியா போகப் போறாங்க…? கம்மென்று கிடப்பாள்.

நான் வார்க்கட்டுமாப்பா….என்று வந்து நிற்கும் அம்மாவைக் கூடத் தவிர்த்து விடுவான். என் தலையெழுத்து…நான் பண்ணிக்கிறேன்…உனக்கென்ன வந்தது? போய் உட்காரு…என்று அம்மாவை விரட்டுவான்.

பல நாட்கள் இப்படித்தான் கழிகின்றன. டீச்சர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இவளை, வேலையை விடு என்று விட்டான். அங்கு போய்க் கொண்டிருந்தாலாவது ஏதோ கொஞ்சம் மனம் நிம்மதியாயிருக்குமோ என்று இப்போதெல்லாம் இவளுக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டேயிருக்கிறது.

அந்தப் பத்தாயிரம் வந்து இங்க நாம ஒண்ணும் கோட்டை கட்டப் போறதில்ல…பேசாம வீட்டிலயே கிட….என்றான்.

நல்லதாப் போச்சு…இந்த மட்டுக்கும் சொன்னானே.. என்று அப்போது இவளுக்கும் சந்தோஷமாய்த்தான் இருந்தது. போகப் போகத்தான் வீடு நரகமாகியது.

தன்னிடம் தனிமையில் சந்தோஷமாய்ப் பேச வேண்டும் என்றே இவனுக்குத் தோன்றாதா? எங்கு வெளியில் சென்றாலும்  எல்லாரும் போவோம் என்கிறானே? என்றோ ஒரு நாள் வெளியில் சாப்பிட்டால் என்ன? அது ஒரு தப்பா? அநாவசியத்துக்கு எதுக்கு ரெண்டாயிரம், மூவாயிரம்? அப்புறம் மணி பத்து, பத்தரைக்கு மேல ஆயிடும். ஒரு டாக்சிக்காரனும் வரமாட்டான். அப்டியே வந்தாலும் லேட் அவர்ஸ் சார்ஜ் போடுவான்.  புக் பண்றபோது ஒண்ணு, இறங்குறபோது இன்னொன்ணுன்னு வாடகை கேட்பான்…எதுக்கு இதெல்லாம்…? நாம என்ன பணக்காரங்களா? அள்ளி விடுறதுக்கு? இஷ்டத்துக்குச் செலவு பண்ண முடியமா? எண்ணிச் சுட்டது விண்ணப்பம்…அவ்வளவுதான். விரயம் பண்ண முடியாது. வீட்டுக்கு வந்து சாப்பிடுவோம்…வயித்துக்கும் ஒண்ணும் பண்ணாது. காசும் மிச்சம்…

தனக்கான ஆசைகள் எல்லாமும் மெல்ல மெல்ல ஒடுங்கிக் கொண்டு வருகின்றனவோ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது நந்தினிக்கு. ஒரு பிள்ளை இருக்கும்போதே இத்தனை சிக்கனம் பேசுகிறவன், இன்னொன்று வந்து விட்டால்? கேட்கவே வேண்டாம்…!!அவள் மனதுக்குள் அச்சம் நிலவியது எப்போதும்.

எதுக்கு இன்னொன்ணு? அதெல்லாம் வேண்டாம்…இந்த ஒருத்தன நல்லா வளர்த்து, படிக்க வச்சு, ஆளாக்கினாப் போதும்…அதுவே மாபெரும் சாதனைதான்….இன்னொன்ணுன்னா படு கஷ்டம்…அதுலயும் பொண்ணாப் பொறந்திச்சு, கேட்கவே வேண்டாம்….அதுக்கு என்னென்ன பாடெல்லாம் இருக்கு…சும்மாவா? வாழ்க்கை பூராவும் டென்ஷனாவே இருக்க முடியுமா? ஒண்ணைப் பெத்து அப்பாம்மா ஸ்தானம் கிடைச்சாச்சில்ல…அத்தோட திருப்திப் படு….என்றான்.

இல்லீங்க…அவனுக்கு ஒரு தங்கை, தம்பின்னு ஒரு சொந்தம் வேண்டாமா…? நமக்கப்புறம் அநாதையால்ல நிப்பான்…குலம் தழைக்கணும்னா ஒண்ணோட நிறுத்தக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க….

உங்கம்மா எதத்தான் சொல்லலை…? சொல்றவங்க எல்லாத்தையும் சொல்லிட்டுப் போயிடுவாங்க…நாளைக்கு அனுபவிக்கிறது நாமதானே? அங்கென்ன ஐவேஜா வச்சிருக்காங்க…தூக்கிக் கொடுக்கிறதுக்கு? ரெண்டு சட்டியும், பானையும்தான் இருக்கு உங்க வீட்டுல…ஒரு வீடு கிடக்கு…அதென்ன பெரிய சொத்தா? அதிக பட்சம் போனா முப்பது லட்சம் தேறும்…அதுக்கும் உங்கண்ணன் சம்பந்தம்தான் வந்து நிப்பான். உனக்கா கிடைக்கப் போவுது…? அவனா பார்த்து ஏதாச்சும்  கொடுத்தா ஆச்சு…! மூணு பிள்ளைங்கள வச்சிருக்கான் . அதுகளக் கரையேத்த வேண்டாமா? எவனுக்கு மனசு வரும்? நான் அவன் இடத்துல இருந்தன்னா கொடுப்பனா? நிச்சயமா மாட்டேன். .அந்த ரீதில நினைச்சுப் பார்க்கணும்..ஒண்ணையாவது கொடுத்து நம்மள அப்பாம்மா ஆக்கினானே அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லு….இந்த ஒண்ணும் இல்லாமத் தவிக்கிறவங்க ஏராளமா இருக்காங்க உலகத்துல…புரிஞ்சிதா?

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி… - எதைச் சொன்னாலும் அது தொடர்புடைய பாட்டு ஒன்றைப் பாடி விடுவான் உடனே. அது எப்படித்தான் ஞாபகம் வருமோ?

என்னைச் சொல்றீங்க நீங்க…சினிமாவாப் பார்த்துத் தள்ளினது நீங்கதான்…இல்லன்னா டக்கு டக்குன்னு இப்டிப் பழைய பாட்டு வருமா? இன்னைக்கும் ப்ளாக் அன்ட் ஒயிட் பழைய படம்னா விடாம உட்கார்ந்துர்றீங்கல்ல…அப்போ என்னை மட்டும் குறை சொன்னா? அவுங்கவுங்களுக்குப் பிடிச்சதை அவுங்கவங்க பார்க்கிறோம்..இதிலென்ன தப்பு? – ஒவ்வொரு முறை அவனுக்குச் சரியாக பதிலடி கொடுத்து விட்டதாய்த் திருப்திப் பட்டுக் கொள்வாள் நந்தினி.

ஆனாலும் அவள் ஆசைகள் மிகவும் சுருங்கிவிட்டனதான். திருமணம் ஆன பின்னால் வாழ்க்கையின் போக்கே மாறித்தான் விட்டது. வாழ்ந்துதான் கழிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டு விட்டதோ? ஏற்றம் இறக்கம், மேடு பள்ளம் என்றுதான் போய்க் கொண்டிருக்கிறது நாட்கள். சம தரையில் பதவாகமாய் நடந்தோம் என்பதே  இல்லை. இப்படித்தான் மொத்த நாட்களும் கழியுமோ? காலமும் கரையுமோ?

பெண்ணாய்ப் பிறந்தவள், பிறந்த வீட்டோடு தன் எல்லா ஆசைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வந்துவிட வேண்டுமா? அதற்குப் பின் அவளுக்கு ஆசைகள் என்பதே அவன் கணவன் சார்ந்ததாய், அவன் விருப்பத்திற்குட்பட்டதாய் இருப்பதுதான் தர்மமோ?

வேகு வேகென்று நடந்தும் ஓடியும் பஸ் ஸ்டாப்பை அடைந்தாள் நந்தினி. வண்டியில் வந்தால் இது தூரமாகவே தெரியாது. இன்று கிளம்பியதும் தாமதம். வரும் வழியெல்லாம் தோண்டிப் போட்டிருக்கிறார்கள். பாதாளச் சாக்கடை வேலை நடக்கிறது என்றார்கள். மழை நீர் வடிகால் என்கிறார்கள். எல்லாக் கஷ்டமும் சாதாரண எளிய மக்களுக்குத்தான்.  ஸ்கூல் பஸ்ஸை விட்டு விடக் கூடாதே என்கிற பயம்.   அது போய் விட்டால்…பிறகு ஒன்றிரண்டு தெருக்களைக் கடந்து அது பிறகு வந்து நிற்கும் இன்னொரு ஸ்டாப்பைப் பிடித்தாக வேண்டும். அதுவும் தவறினால் ஆட்டோவைப் பிடித்து பள்ளியிலேயே கொண்டு நிறுத்த வேண்டியதுதான்.  நீரிலும் சகதியிலும் கால் வைத்து, தடுமாறி விழாமல் ஸ்டாப்பை அடைந்ததே பெரிய்ய்ய சாதனை. பின் பக்கம் புடவை நுனியை இழுத்து விட்டுக் கொண்டாள். சகதி அடித்திருப்பது தெரிந்தது. ரப்பர் செருப்பைப் போட்டு வந்ததில் வழுக்கிக் கீழே விழாமல் இருந்தோமே…அதுவே பெரிது என்று நினைத்துக் கொண்டாள்.

இடுப்பில் பர்ஸ் செருகி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். கல்யாணத்துக்கு முன்பிருந்தே இப்படியொரு பழக்கம் அவளுக்கு. அதென்ன இடுப்புல சொருகிறது? புதுப் பழக்கமா இருக்கு? எங்கியாவது விழுந்திச்சின்னா? எவனாவது இடுப்பைப் பிடிச்சு உருவினான்னா? சுத்த அசட்டுத்தனமால்ல இருக்கு….இனிமே என் கண் காண அங்க வைக்காதே பர்ஸை….புரிஞ்சிதா?

அவள் பர்ஸ் இப்போது கைக்கு வந்திருந்தது. நினைத்தது போல் வழக்கமான ஸ்டாப்பில் பள்ளி வாகனம் வந்து போயிருந்தது.

இப்பத்தான தாயி கிளம்பிப் போச்சு…அச்சச்சோ…விட்டுட்டியே..-அருகிலிருந்த பூக்கடைக்காரம்மாள் அங்கலாய்த்தாள்.

அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸைக் கேட்ச் பண்ணுவதற்கு விக்கியோடு விடுவிடுவென்று அந்தக் குறுக்குச் சந்துகளில் நடந்து கடந்து கொண்டிருந்தாள் நந்தினி. நாய்கள் குரைத்தன. அந்தச் சத்தம் அவள் செவிகளில் ஏறவேயில்லை. குழந்தை கூடவே ஓடி வருவதைக் கண்டு அவள் மனம் இரங்கியது. ஐயோ…என் தங்கமே…!!

மாலை அரவிந்தன் வீடு வந்த போது கேட்டான்.

நாளை சனி ஞாயிறு ரெண்டு நாள்  லீவுதானே…கிளம்பு…உனக்குப் பிடிச்ச அஜீத் படம் இன்னிக்குக் கடைசியாம்…போயிட்டு வந்துடுவோம்…அப்டியே ஓட்டல்ல சாப்டுப்போம்….! அடுப்படியைப் பூட்டு…! லைட்டை அணை -சற்றும்எதிர்பாராமல் அவன் இப்படிச் சொன்னதை இவளால் இம்மியும் நம்ப முடியவில்லை.

நந்தினியின் மனம் துள்ளிக் குதித்தது. அவளால் அவன் வார்த்தைகளை அந்தக் கணத்திலும் ஏற்க முடியாமல் அவன் சொல்வது உறுதிதானா என்பதைப் போல் அவனையே கூர்ந்து நோக்கினாள். உண்மைலயேவா….? என்றாள் அடித் தொண்டையில்.

 ம்…கிளம்பு…நேரமாச்சு…டிக்கெட் புக் பண்ணிட்டேன் …இதோ பாரு…என்று அவன் மொபைல் புக்கிங்கைக் காட்டி விரைவு படுத்தினான் அவளை.                                                                                        ----------------------------------------

                                   

 

 

06 அக்டோபர் 2024

“காலச் சுமைதாங்கி“ - சிறுகதை - வாசகசாலை 100 வது இதழ் (06.10.2024)

 

                        


                                        “காலச் சுமைதாங்கி“

றையின் மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலருகே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார் காமேஸ்வரன். இது போதுமே..! என்றிருந்தது மனசுக்கு.

            ஏம்ப்பா…ஃபேனைப் போட்டுக்க வேண்டிதானே…? என்றவாறே சுவிட்சைத் தட்டப் போனான் சிவா.

            ம்ம்ம்….போடாதே….உடம்பெல்லாம் எரியறது ஃபேனுக்கடிலயே உட்கார்ந்திருந்தா…! மாடி உறீட்டை அப்டியே இறக்குது….இந்த ஜன்னல் வழியா  நல்லா காத்து வருது…இது போதும்…..-குரலில் உறுதியோடு சொன்னார்.

            போய் விட்டான். உறாலில் இருபத்து நாலு மணி நேரமும் ஒரு ஃபேன் சுற்றிக்கொண்டேயிருக்கிறது. அங்கு கணினியின் முன் உட்கார்ந்து தன் வேலையை அவன் கவனிக்கிறான். இன்னொரு அறையில் மருமகள் மீனா என்கிற மீனாட்சி அதுவும் கணினியின் முன் அமர்ந்த நிலையில் தன் வேலையைப் பார்க்கிறது.

            இவர் மனைவி விசாலாட்சியோ உறாலில் பையனுக்குத் துணையாக அமர்ந்து ஸ்லோகம் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆக ஒரே சமயத்தில் மூன்று மின் விசிறிகள் விடாது ஓடிக் கொண்டிருக்கின்றன. பகலிலும் விளக்குகள் எரிகின்றன. திரையை விலக்கினால் ஜன்னல் வழி சூரிய வெளிச்சம் பளீர் என்று உள்ளே அடிக்கிறது. நல்ல காற்றும் வருகிறது.  அதை யாரும் செய்வதில்லை. சொல்லிச் சொல்லி, செய்து செய்து இவரும் அலுத்து விட்டார். முணுக் முணுக்கென்று எழுந்து போய், விடாது செய்வதற்கு சின்ன வயசா? அல்லது  இதென்ன இவர் வீடா? அவன் வீடு, அவன் சுதந்திரம், அவன் பாத்யதை…! சொல்லலாம், செய்து காண்பிக்கலாம்…கடைப்பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வது? நம் மதிப்பை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது.

நேரத்தைக் கடத்தவென்று எதையாவது செய்ய முடியுமா? அதுவே அவர்களுக்குத் தொந்தரவாய்ப் போனால்?

கரன்ட் சார்ஜ் எட்டாயிரம், பத்தாயிரம் என்று வருகிறது. வயிற்றெரிச்சலாய் இருக்கிறது இவருக்கு. என்னடா இது கொள்ளையா இருக்கு? அதிகமா எரிச்சாலும் இவ்வளவா பில் வரும்? சம்பாதிக்கிறீங்கல்ல…கட்டுங்க…என்று பிடுங்கிக் கொள்கிறார்களோ…! எனத் தோன்றியது.

            வயிற்றுச் சோற்றுக்குச் செலவிடுவதை விட சுற்று வட்டச் செலவுகள்தான் பிய்த்துக் கொண்டு போகிறது.  வண்டிக்குப் பெட்ரோல், லாரித் தண்ணீர், அடுக்கக மெயின்டனன்ஸ் பங்குத் தொகை, அவ்வப்போது ஆட்டோ, டாக்ஸி….காசை அள்ளி விட்ட கதைதான். -அதுக்கு ஒரு மதிப்போ மரியாதையோ இல்லவேயில்லை. வெறும் பேப்பர்தானே அது? அதுகூட இப்போது இல்லை. கார்டை எடுத்து நீட்டினால் ஆச்சு.

            அவங்கதான் இளைய தலைமுறை…நீயுமா இப்படி இருக்கிறது? அவன் இல்லாதபோதாவது லைட்டை அணைக்க மாட்டியா? உன் தலைக்கு மேலே இருக்கிற ஒரு ஃபேன் சுத்தினாப் போதாதா? அந்தக் கடைசில இருக்கிற ஃபேனும் எதுக்கு ஓடணும்? அணைச்சா அந்தக் கரன்ட் செலவு மிச்சம்தானே?

இவளே இப்படி இருந்தால்? அவர்களைச் சொல்லி என்ன பயன்? ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே விதியே என்று அமர்ந்திருக்கிறார். எவ்வளவுதான் படிப்பது? வரிகள் நகர மறுக்கின்றன. அதிக பட்சம் ஒரு நாளைக்கு இருபது பக்கங்களுக்கு மேல் செல்ல மாட்டேனென்கிறது. படிக்கப் படிக்க மறந்து போகிறது இப்போதெல்லாம். படிக்கும் அந்தக் கணம் ஏற்படும் சுவாரஸ்யமும் ரசனையும் மட்டும்தான்.

யாரிடமும் எதுவும் பேசவும் முடியவில்லையே! அதுதான் மொபைலோடு பேசிக் கொண்டிருக்கிறார்களே! இடையில் நாம் போய்ப் பேசினால் தொந்தரவாய் அல்லவோ கருதுகிறார்கள்!

தான் சும்மா இருத்தலே அவர்களுக்கு சுகம் என்று நினைக்கிறார்களோ? வயதானவர்களுடன் இன்றைய இளைஞர்கள் பேச விரும்புவதில்லை என்று தோன்றியது. பையனோடு வெளியே செல்கையில் எங்குமே அவன் முகத்தைப் பார்த்துத்தான் பேசுகிறார்கள். கூட அருகில் ஒருவர் நிற்கிறார் என்று யாரும் கண்டு கொள்வதேயில்லை. ஒரு தடவை கூட முகத்தைப் பார்ப்பதில்லை. இது ஏன் இப்படி? வயதானவர்கள் என்றால் இளப்பமா?

யாரையும் எதையும் சொல்லித் திருத்த முடியாது. அவர்களாகவே உணர்ந்து செய்தால்தான் ஆச்சு. இந்த முடிவுக்கு அவர் எப்போதோ வந்திருந்தார். பையன் வளரும்போது நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவில்லையா? அல்லது தலைமுறை இடைவெளியினால்  அப்படியாகிப் போனதா? அல்லது இந்தப் புதிய உலகம் அவனுக்குக் கற்றுக் கொடுத்து தன்னை விலக்க வைத்துவிட்டதா? வயதானவர்களே சுமைகளாகிப் போன காலமா இது? சுகமான சுமைகள் என்று ஒரு பயலும் நினைக்க மாட்டான் போலிருக்கிறதே? சமுதாயம் ஏன் இப்படிக் கெட்டுப் போனது?

ன் அளவிலாவது கொஞ்சம் சிக்கனப்படுத்துவோம் என்று முனைந்திருந்தார் காமேஸ்வரன். உண்மையில் ஃபேன் போடாதது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது அவருக்கு. ஆனாலும் இருக்கும் அறையின் ஜன்னல் வழி சுமாராகக் காற்று வந்தது. அருகே வந்து அமர்ந்து கொண்டால் அந்தக் காற்றுப் போதுமே…! எதற்கு அநாவசியத்திற்கு ஃபேன்?

இருக்கிற இடத்தை விட்டு அசையுறதில்ல. நாள் பூராவும் அந்த ஃபேன் ஓடிட்டேயிருக்கு. இதுல நமக்குச் சொல்ல வந்துட்டாரு? நினைப்பார்களோ?

தன்னால் வெட்டிச் செலவு என்று ஆகிவிடக் கூடாது. நாளைக்கு ஒரு பேச்சு என்று வந்துவிட்டால் அவரால் தாங்க முடியாது. இப்டிச் சொல்லிட்டானே? என்று மன வேதனைப்பட்டு நொந்து போவார். பிறகு என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. அவளோ பையன் சொல்வதற்குத்தான் தலையாட்டுவாள்.  என்னடா இப்டிக் கேட்கிறே? என்று தலை நிமிர்ந்து ஒரு வார்த்தை அவனைக் கேட்டுவிட மாட்டாள்!  ஆகையால் மிகவும் கவனமாய்த்தான் இருந்தார் காமேஸ்வரன். அறையில் அப்பா இருக்கிறாரா என்று அவர்களுக்கே சந்தேகம் வரும் அளவுக்கு அமைதி காத்தார். இந்த உடம்பும் மனமும் மிகவும் பாரமாகிக் கிடந்தது அவருக்கு. கடமைகளெல்லாம் முடித்து ஓய்ந்த காலத்தில், நிர்மலமாய், நிர்ச்சிந்தனையாய் இருப்போமென்று பார்த்தால் அலை ஓயாது போலிருக்கிறதே? என்னமாவது ஒன்றை மனசு போட்டு உழட்டிக் கொண்டேயிருக்கிறதே?

மிகச் சரியாய்ச் சொல்லப்போனால் அங்கு பையனோடு இருப்பது ஏதோ தண்டச் சோறாக இருந்து கழிப்பதாய்த்தான் தோன்றி அவரை வதைத்தது. அவரும் ஏதாவது வேலையை ஏற்படுத்திக் கொண்டு செய்யத்தான் செய்கிறார். சும்மாவே உட்கார்ந்திருந்தால் எப்படி? சோம்பேறித்தனம்தான் வளர்கிறது. சின்னச் சின்ன வேலைகள்தான் செய்ய முடிகிறது. பெரிய எடுப்பு என்பதில்லை. முன்பெல்லாம் என்றால் நோக்காலியைக் கொண்டு போட்டுக் கொண்டு, அதில் ஏறி ஃபேனைத் துடைத்து சுத்தம் செய்து விடுவார். இப்போது மேலே ஏறினால் தலைசுற்றல் வருகிறதோ இல்லையோ அந்த பயம் வந்து விட்டது. வெட்டிக்கு உட்கார்ந்திருக்கான்யா இந்த ஆளு… என்று நினைத்து விட்டால்?

நீ கொஞ்சம் இதெல்லாம் பார்க்கலாமில்லப்பா? என்று ஏதேனும் அவனிடமிருந்து வார்த்தை வந்து விடுமோ என்று பயந்தார். அதற்காக வலியச் சில வேலைகளை அவரே எடுத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தார்.

இன்னிக்கு என்ன பண்ணப் போறே.? காய்களை எடுத்து வை…நறுக்கித் தர்றேன்….என்று போய் உட்கார்ந்து விடுகிறார்.

டிரம்ல தண்ணி இருக்கா…கேன் தண்ணி கவுக்கணுமா? என்று சொல்லிக் கொண்டே போய்ப் பார்த்து, மினரல் வாட்டர் கேனை இழுத்துக் கொண்டு வந்து, கஷ்டப்பட்டுத் தூக்கி தண்ணீர் டிரம்மை நிறைக்கிறார். வலது தோள் பட்டையில் கொஞ்ச நாளாய் ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அவர் யாரிடமும் சொல்வதில்லை. சொல்லி என்ன பயன்? வயசாச்சு…இதெல்லாம் சகஜம்…என்பதான பார்வையிருக்கிறது அவர்களிடம்.

காலை நாலரைக்கெல்லாம் எழுந்து விடுகிறார். எங்கே தூக்கம் வருகிறது. ஒரு ஸ்ட்ரோக்…அஞ்சு மணி நேரம்…தூங்கி எழுந்தால் ஆச்சு. அத்தோடு தூக்கம் தொலைந்து போகும். எழுந்து பால் காய்ச்சி, காப்பிக்கு டிகாக் ஷன் போட்டு, குடிக்க வெந்நீர் சுட வைத்து…மடையில் கிடக்கும் பாத்திரங்களில் முக்கியமானதைத் தேய்த்து அலம்பி….அன்றாடம் வீட்டை அவர்தான் துவக்கி வைக்கிறார். காப்பியை குடித்த கையோடு மாடிக்கு நடக்கச் சென்று விடுவார். பிறகு ஏழரை போல் கீழே வருவார். கார் பார்க்கிங்கில் எறிந்து விட்டுச் சென்றிருக்கும் தினசரியைப் போய் எடுத்து வருவார்.  …..

அவராக உண்டாக்கி உண்டாக்கிச் சின்ன சின்ன வேலைகளாகச் செய்து கொண்டுதானிருக்கிறார். சும்மா உட்கார்ந்திருக்கிறோம் என்று யாரும் நினைத்து விடக் கூடாது.. அது வீட்டுக்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

உட்கார்ந்து கிடந்தா அது மனுஷனச் சோம்பேறி ஆக்கிடும்…வியாதி வெக்கைல கொண்டு விட்டுடும். மனுஷன் முடங்கவே கூடாது. முடிஞ்ச அளவு இயங்கிட்டேயிருக்கணும்…அதுதான் அழகு…! உட்கார்ந்து துருப்பிடிக்கிறதை விட வேலை செய்து அயரட்டும் உடம்பு..

ஓய்வூதியம் வருகிறதுதான். அதில் மாதம் ஒரு ஐயாயிரம்…வேண்டாம் ஒரு ரெண்டாயிரம் கூட அவர் தனக்கெனச் செலவழிப்பதில்லை. அப்படியே சேவிங்ஸ்தான். தபாலாபீஸ் சேமிப்பில் அவருக்கும், மனைவிக்கும் போட்டு வைக்கிறார். திடீரென்று மரணம் சம்பவித்தால் அப்படியே பையனுக்குத்தான் போகப் போகிறது அந்தத் தொகை. கவனமாய் நாமினிப் பெயராக அவனைக் குறிப்பிட்டிருக்கிறார் எல்லாவற்றிலும்.

விசாலாட்சிக்காவது மாத்திரை மருந்து செலவிருக்கிறது. அதுபோக வீட்டுக்கான காய்கறிகளை அவளே ஃபோன் செய்து வரவழைத்து விடுகிறாள். உறலோ…மாமி பேசறேன்…என்று கூறிவிட்டு தனித்தனியாகக் காய்கறிகளின் பெயரையோ அளவையோ அவள் சொல்வதில்லை..  ரொம்ப நாள் வாடிக்கை என்பதால் அவனுக்கும் அது பழகித்தான் போயிற்று. எல்லாக் காயும் கொடுத்துவிட்ரு…என்று சொல்லி வைத்து விடுகிறாள். பால் பாக்கெட்டும் வேணும் என்றுதான் சொல்வாள். பத்துப் பாக்கெட்டைக் கொண்டு இறக்கி விடுகிறான் அவன்.

அந்த ஃபிரிட்ஜ்க்கு மூச்சு முட்டும். அவ்வளவு காய்கறிகளைத் திணித்திருப்பாள். அவ்வப்போது குப்பைக் கூடையிலும் பையோடு கொண்டு எறிந்த அழுகிய காய்களைப் பார்க்கத்தான் செய்கிறார். கிலோ எழுபது நூறுன்னு விக்கிறது…எப்படி இவள் சர்வ சாதாரணமாக விரயமாக்குகிறாள்?. இப்படிக் கவனித்துச் சொல்கிறானே என்கிற கோபம்தான் வரும் பேசினால்.

ஒரு பொருளை வீணாக்குவது என்பது அறவே இவருக்குப் பிடிக்காது. சின்ன வயசில் ஒவ்வொன்றும் கிடைக்காமல் ஏங்கியதும், வறுமை பிட்டுத் தின்றதும்தான் அவரை இப்படியாக்கியிருந்தது. மேலுக்குத் துடைக்கும் துண்டைக் கூட கடைசித் தரை துடைக்க, தூசி தட்ட என்பது வரை பயன்படுத்தித்தான் தூக்கி எறிவார். அவரிடம் பழசுகள் நிறைய உண்டு. வரிசைப் படி எடுத்துப் பயன்படுத்தத்தான் செய்வார். துவைத்து, மடித்து எடுத்து அடுக்கும் பழக்கம் இன்றும் அவரிடம் உள்ளதுதான்.

இன்று பசங்கள் அப்படியா இருக்கிறார்கள்? மூவாயிரம் கொடுத்து எடுத்த சட்டையை ஆறே மாதத்தில் ஃபேடாகிப் போச்சு என்று ஒதுக்கி விடுகிறார்கள். யூஸ் அன்ட் த்ரோ… கலாச்சாரம்.

காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டுதான் பறக்கிறார்கள். ஆபீஸ் வேலை அவர்களை விழுங்கி விடுகிறது. வந்து பொணமாய்ப் படுத்து எழுந்திரிக்கிறார்கள். பிறகு மறுபடியும் ஓட்டம். என்ன வேலையோ…என்ன சம்பாத்தியமோ? என்று வேதனையோடு இருந்த இடத்திலிருந்து அசையாமல்  எல்லாவற்றையும் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார் இவர்.

ஆரம்பத்திலிருந்து இவர்தான் கடைக்குப் போய் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். கொரோனா வந்ததோ இல்லையோ…வெளியே போவது நின்றது. ரெண்டு வருஷம் ஓடிப் போனது. அதற்குப் பிறகு  இவர் வெளியே செல்வதும் அறவே  நின்று விட்டது.  

சாயங்காலம் இப்படியே கிளம்பி ஏழாவது தெரு வழியா நடந்து மெயின் ரோடு வழியே வட்டம் போட்டு 12-வது தெரு வழியா ஒரு ரௌன்ட் வர வேண்டிதானே…எதுக்காக தேமேன்னு  உட்கார்ந்திருக்கீங்க? ஒரு நடை கொடுத்தாத்தானே காலுக்கும் பலமிருக்கும்….? உங்களுக்கும் உற்சாகம் இருக்கும்?

அவள் சொல்வதுபோல் செய்யத்தான் செய்தார். ஆனால் தொடர முடியவில்லை. பாதி வழியிலேயே ஒன் பாத்ரூம் வந்து நெருக்கி விடுகிறது. அடக்க முடியவில்லை. சாலை ஓரத்தில் மறைவாய் ஒதுங்க எங்கும் இடமில்லை. தப்பிச்சேன் பொழச்சேன் என்று வீடு வந்து சேர வேண்டியிருக்கிறது. அதிலிருந்து மாடியிலேயே நடக்கிறார்.  எட்டு வீடுகள் கொண்ட பெரிய நீள மாடிதான். குறைந்தது ஒரு மணிநேரம் நடந்தால் ஓரளவு திருப்தியாய்த்தான் இருக்கிறது. அந்த நேரம் கீழே அமர்ந்து கொண்டு மின் விசிறியைச் சுற்ற விட்டுக் கொண்டு…அநாவசியக் கரன்ட் செலவுதானே?. ரெண்டு மாசத்துக்கொருதரம் எட்டாயிரம் வருகிறது என்றால், அதில் தன் செலவே நாலாயிரம் இருக்கும் போலிருக்கிறதே என்கிற உறுத்தலில்தான் தன் சார்பான மின் செலவைக் குறைக்க யத்தனிக்கிறார்.

ராத்திரி ஏ.சி. போட்டால் கூட அரை மணியில் அணைத்து விடுவார். அவளுக்கும் அந்தக் குளிர்ச்சி ஆகாது.. தூக்கக் கலக்கத்தில் எழுந்து முதல் வேலையாக ஏ.சி.யை அணைத்து விட்டு, பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்துக் கொள்வார். அந்த இன்னொரு அறையில் விடிய விடிய ஓடும். அவர்கள் சம்பாத்தியம்…அவர்கள் செலவு…!

சிக்கனம் என்பதே இல்லையே இன்றைய இளைய தலைமுறையினரிடம்? எடுத்தேன் கவிழ்த்தேன் என்றல்லவா  விட்டடிக்கிறார்கள். எவ்வளவு வந்தது, எவ்வளவு போச்சு என்பதற்கு ஏதேனும் கணக்கு உண்டா என்ன? ஒவ்வொரு அணாவுக்கும் அப்பா கணக்கு எழுதி வைத்திருந்ததெல்லாம் இவருக்கு நினைவுக்கு வந்தது. இதை எழுதி என்ன செய்யப் போறார்? என்று தோன்றியதில்லை அந்த இளம் பருவத்தில். அது அவர்களது ஒழுக்கத்தின் அடையாளம். கட்டுக்கோப்பான குடும்ப நடைமுறைக்கு ஆதாரம். எந்தச் செலவு அநாவசியம் என்று பார்த்து அடுத்தபடி அது நடக்காமல் தடுக்கும் லாவகம். தான் சம்பாதிக்கும் துட்டு நியாயமாய்த்தான், இந்தக் குடும்பத்திற்காகத்தான் முற்றிலும் செலவு செய்யப்படுகிறது என்பதற்கான ஆதாரம். அந்த ஆவணத்தை இன்றும் தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறார் காமேஸ்வரன். அவ்வப்போது அதை எடுத்து எடுத்துப் பார்க்கிறார்.

இவ்வளவுதான் இருக்கு என்கிட்ட. எப்டியாவது மூணுபேருக்கும் துணி எடுத்துக் கொடுத்து தைச்சுக் கொடுத்திடுங்க…என்று அப்பா கொடுத்த அந்தச் சிறு தொகையை வைத்து தன் பிள்ளைகளாய் ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று பிடித்த துணிகளைக் குறைந்த விலையில் கையில் இருக்கும் காசுக்கேற்றாற்போல் வாங்கி, அதில் தன் தையல் கூலியையும் பாதியாவது மிச்சப்படுத்தி, மீதியை அப்பாவாய்த் தரும்போது வாங்கிக் கொண்டு தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாட உறுதி செய்த ரஉறீம் பாய் என்னும் அந்தத் தையல்காரரை சாகும்வரை மறக்க முடியாது. வெறும் தையல்காரரா அவர்? குடும்பத்தில் ஒருத்தர்.

வாங்க…நல்லாயிருக்கீங்களா? ….உட்காருங்க…என்று சொல்லி பாயைக் கொண்டு வந்து விரிக்கும் அம்மாவின் வரவேற்பும்...அம்மணீ நமஸ்காரம்…என்னும் அவரின் அன்பார்ந்த இருத்தலும்….காட்சிகள் கண் முன் ஓடுகின்றன இவருக்கு. மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வின்றி மதித்த காலம் அது. பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசமில்லாமல் குடும்பத்தைப் பொறுப்பாய் நடத்துபவனானால் அவன் சம அந்தஸ்து உள்ளவன் என்பதாய்க் கருதப்பட்ட காலம்.

ஒன்றை நினைக்க ஒவ்வொன்றாய்க் கிளைத்து அவர் நினைவுகளில் வட்டமிடுகின்றன. பழசுலயே மூழ்கிக் கிடக்கான்…என்றுதான் இன்றுள்ளவர்கள் நினைப்பார்கள். ஆனால் அந்த விழுமியங்கள்தான் இன்றும் அவரை உயிர்ப்போடு இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

ட்டென்று ஒன்று தோன்ற எழுந்தார். ச்சே…நினைச்சிட்டேயிருந்தது மறந்து போச்சே…என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு  அடுப்படி நோக்கிச் சென்றார்.

என்ன…டீ…வேணுமா…? என்றாள் விசாலாட்சி.

ம்ம்…அதுக்கில்லே…இப்போ நான் ஒரு வேலை செய்யப் போறேன்….என்றவாறே அடுப்படி ஜன்னலின் கொசுவலை ஃபிரேமைக் கழற்றினார். அதிலானால் அவ்வளவு அழுக்குப் படிந்திருக்கிறது. அவ்வப்போது அதைச் சுத்தம் செய்தால்தானே ஆச்சு??

எடுத்து வந்து பாத்ரூமில் வைத்து தூசி தட்டி, துடைத்து, பிறகு தண்ணீர் விட்டுக் கழுவ ஆரம்பித்தார். சோப்புத் தண்ணீரை ஊற்றி, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவினார்.

ஒரு நாளைக்கு ஒரு கதவு. ஒரேயடியாய் ஒரே நாளில் அடுப்படியில். உறாலில், தன் ரூமில், அவர்கள் ரூமில் இருக்கும் எல்லா வலைகளையம் கழற்றிச் சுத்தம் செய்து விட முடியாது. தண்ணீர் பஞ்சம். குளிப்பதற்கும், பாத்ரூம் போவதற்கும், காலை மாலை முகம் கைகால் கழுவுவதற்கும் யதேஷ்டமாக இருந்தாலே பெரிது. திடீரென்று கீழே சம்ப்பில் தண்ணீர் காலி என்பார்கள்.

. தண்ணி ஏறலேன்னா ஏர் லாக்குன்னு தெரிஞ்சா,  பம்ப்ல தண்ணி ஊத்தி சரி பண்ண வேண்டாமா? அதை யாரும் செய்றதில்லை. யாராவது செய்துப்பாங்க…ன்னு விட்டிர்றாங்க…ஏர் லாக் மட்டும் பண்ணத் தெரியுது. அவுங்களே அதைச் சரி செய்யறதும் தங்களோட பொறுப்புன்னு செய்ய மாட்டேங்கிறாங்க.  …எந்த வம்பும் வேண்டாம்…என்று இவரே மெனக்கிட்டார்.

மாலை கீழே இறங்கிப் போய் கார் பார்க்கிங்கில் அனைத்து லைட்டுகளையும் போடுவது, விடிகாலையில் ஆறு மணிக்கு வெளிச்சம் வந்தவுடன் கன கச்சிதமாய்க் கீழே இறங்கிப் போய் அத்தனையையும் அணைப்பது…என்று செய்து கொண்டிக்கிறார் இவர் அதற்கு கமர்ஷியல் ரேட். நானூறு வந்து கொண்டிருந்த இடத்தில் இப்போது நாலாயிரம். அந்த நாலாயிரத்தைக் கூடிய மட்டும் குறைக்கப் பார்க்கிறார் இவர். குறைந்திருக்கிறதுதான். ஆனால் அதற்குக் காரணம் அவர்தான் என்பதை அவர்கள் உணர்ந்தார்களா தெரியவில்லை. அதொன்றும் லட்சியமில்லை இவருக்கு.

 தன் மனதுக்குப் பிடித்த நல்லவைகளைச் செய்கிறார். அதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? அது வீடாய் இருந்தாலும் சரி…வெளியாய் இருந்தாலும் சரி…பொருட்படுத்தியதில்லை. கீழே இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றுகிறார்.  பூச்செடிகள் மலர்ந்து சிரிக்கும்போது மனதுக்கு ரம்மியமாய் இருக்கிறது. வெளியேறுபவர்கள் கேட்டை அப்படியே திறந்து போட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள். இவர்தான் வாட்ச்மேன் போல் ஓடி ஓடிப் போய் கேட்டை அடைத்து கொண்டி போடுகிறார். கேவலமாய் நினைப்பதில்லை.

ஒரு பெரிசு இருக்குல்ல…அது பார்த்துக்கும் எல்லாத்தையும்….என்று நினைப்பார்களோ? சிரிப்புத்தான் வருகிறது.

ழுவிய கொசு வலை ஃபிரேமைக் கொண்டு அடுப்படி ஜன்னலில் மாட்டினார். பளீர்னு ஆயிடுச்சே….என்று சந்தோஷப்பட்டுக்கொண்டாள் விசாலாட்சி.

இதைச் செய்யுங்க…அதைச் செய்யுங்க…என்று அவள் எதுவும் சொல்வதில்லைதான். தானாகச் செய்யும்போதும் மறுப்பதில்லை. ஓட்டமாய் ஓடி ஓடி எல்லாம் செய்து ஓய்ந்தவர்தானே என்ற எண்ணமாய்க் கூட இருக்கலாம். அக்கறையா இவ்வளவு சேமிப்புப் பண்ணி, அதைக் கண்ணும் கருத்துமாப் பாதுகாக்குற இந்த மனுஷனையா குறை சொல்றது? என்றும் நினைக்கலாம். ஏன் சொல்லித்தான் பார்க்கட்டுமே? என்று சமயங்களில் முறுக்கிக் கொள்வார் இவர்.

யப்பா…உன்னை யாரும் இங்க ஏதுவும்  குறை சொல்லல…எதுக்கு நீயா ஏதாச்சும் முரணா நினைச்சிட்டுத் தவிக்கிற? – என்பான் பையன். சத்துவ குணம் படைத்த தன் மகனை நினைத்து அவருக்கு என்றும் பெருமைதான். இந்தச் சின்ன வயதிலேயே அவனுக்கிருக்கும் விவேகம் இவரை ஆச்சரியப்படுத்தியது. தான் அவன் வயதில் அப்படியிருந்தோமா என்று யோசித்திருக்கிறார் இவர்.

காமேஸ்வரனால் யாருக்கும் எந்தச் சங்கடமும் இருந்ததில்லை. சர்வீசில் இருக்கும்போது கூட அப்படித்தான் இருந்தார். ஓய்வு பெற்று விடை பெறும் வழியனுப்பு நாளில் எல்லோரும் அவரின் அந்த குணத்தைத்தான் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். பாராட்டினார்கள். கீழேயிருந்து மேலேவரைக்கும் ….தன் சர்வீஸை அப்பழுக்கில்லாமப் போட்ட ஒரே மனுஷன் இவர்தான் என்று புகழ்ந்தார்கள்.

ரொம்ப சந்தோஷம்… ஆள விடுங்க…என்று வந்து விட்டார் இவர். சுற்றிலும் தப்பாய் நடக்கும் கூட்டத்தின் நடுவே இத்தனை வருடங்களைத் தான் எப்படி ஓட்டினோம் என்று இவருக்கே ஆச்சரியமாய் இருந்தது. கறை படியாத கையோடு வெளியே வந்ததே மிகப் பெரிய சாதனைதான்.

அதற்குப் பின் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை அவர். அந்த திசையிலேயே திரும்பவில்லை.  ராத்திரி படுக்கும்போது கூட அந்தப் பக்கத்தை உணர்ந்து  கால் நீட்டிப் படுத்தார். தனக்கு வர வேண்டிய பணப் பலன்களையெல்லாம் கடைசிப் பதினைந்து நாளில் அவரே பட்டியல் தயாரித்து அனுப்பி, தன் வேலைகளைக் கச்சிதமாய் முடித்துக் கொண்டார். அவர் வெளியே வந்த அடுத்த ஒரு வாரத்தில் அத்தனையும் அவர் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டன.

எல்லாம் படிப்படியா நடக்கும் என்று விட்டு விட்டு பிறகு ஏன் அவர்களிடம் போய்த் தொங்க வேண்டும். என்னானாலும் ஓய்வு பெற்று விட்டால் ஒரு மாத்து கம்மிதான். அதற்குப் பிறகு அங்கு போய் முகம் காண்பித்தால் மதிப்பிருக்காது. தான் அதட்டி, உருட்டி வேலை வாங்கியவர்களிடமே போய் தன் கோரிக்கைக்காக நிற்க வேண்டும். இந்த மனுஷன் என்ன பாடு படுத்தினான் நம்மளை? என்றுதான் நினைப்பார்கள். மனித இயல்பு அது . மனிதர்கள் என்றுமே சராசரிகள்தான்.

இன்னிக்கு இது போதும்…ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு செய்ங்க …டீ தரட்டுமா? என்று கேட்டாள் விசாலாட்சி.

அரை டம்ளர் கொடு…ஜீனி கம்மியா…. – என்றார். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கம்மியாய்த்தான் போடுவாள். இன்னும் கொஞ்சம் போடு என்றால் கூட, எல்லாம் போதும்…இப்டியே குடிச்சுப் பழகுங்க…என்று சொல்லி விடுவாள். அவள் உரிமைக்கும் இடமுண்டு என்று விட்டு விடுகிறார்.

இணக்கமாய்த்தான் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. சுணக்கம் கொள்வது என்பது நாமளாய் கோணலாக்கிக் கொண்டால்தான். மனித வாழ்வின் சங்கடங்களுக்கெல்லாம் காரணகர்த்தா இந்த மனசுதானே!

இப்படித் தன் மதிப்போடு இருக்கையிலேயே போய்ச் சேர்ந்து விட வேண்டும்.

கொஞ்சம் தண்ணி கொண்டாயேன்….என்று கேட்டு, அவள் கொண்டு வந்து நீட்டும்போது தலை சாய்ந்திருக்க வேண்டும்.  அந்த பாக்கியம் கிடைக்குமா தனக்கு? இதுதான் சமீபமாய் இவர் கடவுளிடம் வேண்டிக் கொள்வது. ஆழ் மனது அதை ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

சாப்பிட வர்றீங்களா…? சாப்டுட்டுத் தூங்குங்க…!!– விசாலாட்சியின் கனிவான குரல் இவரை உசுப்புகிறது. மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் கருமமே கண்ணாயிருக்கும் அவள்தான் முந்திக் கொள்வாளோ…? அதற்குத்தான் இறையருள் கிடைக்குமோ? இதிலும் வெற்றி அவளுக்குத்தானா? இந்த எண்ணம் இவரை சஞ்சலத்துக்குள்ளாக்குகிறது. அவளில்லாத இந்த மீதி வாழ்க்கை? நினைக்கவே பயமாக…உடம்பு நடுங்க…கண் கலங்குகிறார்.

அவள் மடியில் தன் உயிர் போகும் பாக்கியம் தனக்குக் கிட்டாதோ?  என்று தோன்ற…. அழைத்ததை மறந்து சிலையாய் அமர்ந்திருக்கிறார் காமேஸ்வரன்.

என்ன வரலயா…தட்டு வச்சாச்சு….வாங்கோ…-! – என்ற சத்தம் அவர் காதில் விழுந்ததா தெரியவில்லை.

                                                ---------------------------

 

 

 

02 அக்டோபர் 2024

 மதுரை மாநகர் மாவட்ட மேனாள் செயலாளரும் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் ந.ஸ்ரீதர் உடல்நலக் குறைவால் சற்று முன் (30.09.2024 இரவு ) காலமானார்.

கொடும் துயரமான செய்தி...கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமுஎகச மதுரை மாநகர் மாவட்டத்தில் தலைமைப் பொறுப்பேற்றுப் பயணம் செய்த சிறந்த தோழர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். தோழர் ஸ்ரீதருக்கு மதுரை மாநகர் மாவட்டக்குழுவின் செவ்வணக்கம்...ஶ்ரீரசா
-------------------------------
மிகுந்த மன வருத்தம் அளிக்கும் செய்தி.அன்பானவர். அமுந்து பேசக்கூடியவர். இவர் தலைமையிலான மதுரை மாவட்டக் கூட்டங்களில் விடாது கலந்து கொண்டிருக்கிறேன். சிறு சிறு உரையும் உண்டு. இவர் போழ்தில்தான் மதுரை மாவட்ட செயலக உறுப்பினராகவும் இருந்தேன். சங்கப் பணிகள் அநேகம். சிறப்பாய் செயலாற்றும் பண்பாளர்.அவரின் மாறாத புன்னகை பூத்த முகம் என் நெஞ்சில் அழியாமல் அப்படியே பதிந்திருக்கிறது. என் ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தாருக்கு என் ஆறுதல்கள். மாவட்ட மையத்திற்கு இது பேரிழப்பே.. ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
உஷாதீபன்

30 செப்டம்பர் 2024

 

சிறுகதை                    தாய் வீடு மாத இதழ் (அக்டோபர் 2024)  பிரசுரம்

“மாற்றம் ஒன்றே மாறாதது …!”






ந்த மாதிரி ஒரு கேள்வியை எதிர்பார்த்துத்தான் இருந்தார் ஈஸ்வரன். அப்படியெல்லாம் கேள்வியும், பேச்சும் வரும் என்று தெரிந்துதானே அங்கே போனார். வேறு வழியும் இல்லை. அன்றாடம் ரயிலேறிப் போய்விட்டு இரவாவது வீடு திரும்ப முடிகிறதே என்கிற சமாதானம்தான். மனதை சமன் செய்து கொண்டு தயாராய்த்தான் இருந்தார்.

அந்த ரயிலின் எட்டுப் பெட்டிகளிலும் நிறைந்து வழிந்து ஊழியர்கள் பயணம் செய்கிறார்கள். அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என்று பல்வேறு தரப்பினரும் அன்றாடம் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆளோடு ஆளாகச் சேர்ந்து  தானும் போய் வருவதில் என்ன சிரமம்? தனக்கு மட்டும் அப்படியென்ன கஷ்டம் வந்தது? அவர்களெல்லாம் மனிதர்களில்லையா? அறிந்தோ அறியாமலோ உள்ளூரே அவருக்கு வாய்த்து விட்டது. காலமும் ஓடி விட்டது. அவரென்ன செய்வார்? யாரையும் தொந்தரவு செய்துவிட்டு, தூக்கி விட்டு விட்டு வந்து குந்தவில்லையே? ஆனாலும் பழி அவருக்குத்தான்.

அவரு உள்ளூர விட்டு நகர மாட்டாருங்க…இந்தக் காம்பவுன்ட்லயே நாலு ஆபீஸ் இருக்கு…இதுக்குள்ளயேதான் சுத்துவாரு…இல்லன்னா டவுனுக்குள்ள… ….சிட்டி பஸ் ஏறி போய்த் திரும்புறாங்களே…அதுபோலக் கூடப் போக மாட்டாரு…பத்திருபது கி.மீ.கூடப் போய் வரமாட்டாரு அய்யா…இங்கயே குப்ப கொட்டணும் அவருக்கு….மத்தவுகதான் அலையணும்…அவரு டிபார்ட்மென்டுக்கு செல்லப் பிள்ளை….அப்டித்தான சில பேரை வச்சிருக்காங்க…? அவுருதான் திறமையான வேலைக்காரராம்…நாமெல்லாம் சொங்கியாம்…

எவ்வளவோ வார்த்தைகளைக் கேட்டாயிற்று. நேரடியாகவும், மறைமுகமாகவும்….அந்த எல்லோருக்கும் இப்போது நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருக்கும். மனம் ஆறுதல் கொள்ளும். யப்பாடீ…தொலைஞ்சான்யா….!! இனி எப்டி உள்ளூருக்குள்ள நுழையறான் பார்ப்போம்…எங்கடா இந்தப் ப்ரமோஷன்லயும் உள்ளூர்லயே வந்து உட்கார்ந்துடுவானோன்னு நினைச்சது…நல்லவேளை…சாமர்த்தியம் பலிக்கலை…எல்லாக் காலத்துலயும் எல்லாமும் பலிதமாகிடுமா? ஒருவாட்டிதான் வெளியூர் போய்ப் பார்க்கட்டுமே?

எல்லோருடைய ஆசீர்வாதத்தோடும் உள்ளூரை விட்டுக் கிளம்பியாயிற்று. சந்தோஷமாப் போயிட்டு வாங்க…நீங்களும் வெளியூர் பார்க்கணும்ல…!!

கவனமாப் போயிட்டு வாங்க சார்…ரயில் ஏறி…இறங்கி…உடம்பப் பார்த்துக்குங்க…முடிலன்னா அங்கயே ஒரு ரூம் போட்டுத் தங்கிடுங்க…வாரா வாரம் வெள்ளிக் கிழமை ராத்திரி வீடு வந்தாப் போதும்…எதுக்கு வெட்டிக்கு அலையுறீங்க…

ரொம்பவும் வருத்தமான பாவத்தோடுதான் சொன்னார்கள். உள்ளூர எத்தனை மகிழ்ச்சி என்பது இவருக்குத்தானே தெரியும்! அங்கயே ரூம் போட்டுத் தங்கணுமாம்….காசு எவன் கொடுப்பான்…இவங்கப்பனா…? ரூம் போடணும்…அப்புறம் ஓட்டல்ல சாப்பிடணும்…அது உடம்புக்கு ஒத்துக்கணும்…

அங்க உங்களுக்கு நல்லா பைசா பார்க்கலாம் சார்…செழிப்பா இருக்கும்.. நீங்க வேணாம்னாலும் வந்து திணிப்பாங்க…நீங்க வாங்க மாட்டீங்க…அது வேறே…ஆனாலும் விட மாட்டாங்க…தெம்பாத் திரியலாம்….அங்க ஆபீஸ் குப்பையாக் கிடக்குன்னுதானே உங்களைப் போட்டது…நீங்க போய்த்தான் சரி பண்ணனும்…சரியான ஆளாப் பார்த்துத்தான் தள்ளி விடுறாங்க….இனி உங்க ராஜ்யம்தான்…குப்பையைக் கூட்டலாம். அள்ளவும் செய்யலாம்….

இருவேறு அர்த்தங்களில் புகழ்ந்தார்கள். வஞ்சப் புகழ்ச்சி. அடேங்கப்பா….இவர்களின் சிலேடைகளுக்குத் தனிப் புத்தகமே போடலாம். என்னவோ சொல்லி விட்டுப் போகட்டும். இந்த மட்டுக்கும் போய் வருவதுபோலான தூரத்தில் கிடைத்ததே என்று இவருக்கு சமாதானமாய் இருந்தது.

மனிதர்கள் என்றுமே சராசரியானவர்கள்தான். சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல்தான் பேசுவார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்றுதான் பேசுவார்கள். எல்லோருக்கும் இரண்டு முகங்கள் உண்டுதான். அதில் ஒன்று வெளியில் சொல்ல முடியாதது. பழகும்போது நண்பர்கள்தான். ஆனால் பேசும்போது? அதாவது ஆளில்லாமல் பேசுகையில்!

என்னவோ இவர்களாய் முயற்சி செய்து அங்கே மாறுதல் வாங்கிக் கொடுத்ததுபோல் அளந்து கொள்கிறார்கள். இவரல்லவோ போய்ச் சொன்னார். கேட்டுக் கொண்டார். போயிட்டு வர்ற மாதிரியாவது போட்டுக் கொடுங்க…ரொம்ப தூரத்துக்குப் போட்டுடாதீங்க…ஒய்ஃப் தனியா இருக்காங்க…துணைக்கு யாருமில்லே…! இவ்வளவுதான் சொன்னார். அதுநாள் வரையிலான அவரது அடையாளம் அவரைக் காப்பாற்றியது என்று நினைத்துக் கொண்டார். மறுபேச்சிலாமல் ஆர்டர் கைக்குக் கிடைத்தது.

நேர்ல போயும் உள்ளூர் கிடைக்கலியா சார்…? யாரையாவது தூக்கி விட்டுட்டு வந்து உட்காருவீங்கன்னு எதிர்பார்த்தோம்…! அது வேணாம்னு நினைச்சிட்டீங்கபோல….! ரிடையர்ட்மென்ட் நெருங்கையில் எதுக்கு இந்தப் பாவத்தச் சுமந்திட்டுன்னு விட்டுட்டீங்களோ?  -  என்ன குரூரம்…?

முப்பது வருட சர்வீசில் முதல் ஏழு ஆண்டுகள் வெளியூரில் இருந்தாயிற்று. அது பேச்சலர் காலம்.  பிறகு உள்ளூர் வந்து மீதி இருபது ஆண்டுகள். இப்போது ஒரு பதவி உயர்வு இன்னும் ஆறரை ஆண்டுகள் மீதமுள்ளது. அதற்குள் இன்னும்  ஒரு பதவி உயர்வு வராதா? வரலாம்…

வெளியூர் வந்தாலும் வந்தார். பிறகு உள்ளூர் ஆபீசை எட்டியே பார்க்கவில்லை. எதற்கு? என்கிற விலகல் வந்து விட்டது. இப்பத்தான போனாரு? அதுக்குள்ளயும் எதுக்கு வந்து நிக்கிறாரு? டிரான்ஸ்பர் வேணுமாமா? போகச் சொல்லுங்க அந்தாளை…குத்துக்கல் மாதிரி இத்தன வருஷம் கிடந்தது பத்தாதா? பழைய வாசனை இன்னும் விடலையோ?

அவர்கள் சொல்வதை இவரே நினைத்துக் கொண்டார். மலிவான சிந்தனைகளில்தான் மனிதர்கள் வலம் வருவார்கள். அதனால்தான் அரசியல்வாதிகளின் பொய்கள் இங்கே எடுபடுகின்றன. திரித்து மறைத்துச் சொல்வதெல்லாம் இங்கே நன்றாய் விலைபோகும். நல்லவைகள் காற்றோடு போய் விடும். அறிவுக்கு எட்டாது. நிலைக்காது.

திரே அமர்ந்திருந்த மயில்வாகனத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கு சங்கடப்பட்டு ஏதோ யோசனையில் தலை குனிந்திருந்தார் ஈஸ்வரன்.

என்னா சார்…உடம்பு சரியில்லையா?.....ரொம்ப அமைதியாயிட்டீங்க…?

அதெல்லாம் ஒண்ணுமில்லே…ஏதோ யோசனை….என்றார் இவர்.

பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன் சார்…பத்திரிகை கொடுத்து உங்களை அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தேன்….-சொல்லியவாறே அழைப்பிதழை நீட்டினார் மயில்வாகனம். தேடி வந்து கொடுக்கும் விஸ்வாசம். வேலை கற்றுக் கொடுத்ததே அவர்தானே…அந்த நன்றி…!

கட்டாயம் வந்திருங்க சார்….ஞாயிற்றுக்கிழமை பார்த்துத்தான் வச்சிருக்கேன்…அன்னைக்கு ரிசப்ஷன்…மறுநாள் முகூர்த்தம்….ரெண்டு நாளுக்கும் நீங்க வரணும்…வந்து பொண்ணை ஆசீர்வாதம் பண்ணனும்…

அவசியம் வர்றேன்….ஆனா திங்கட்கிழமை வர முடியாது. ரிசப்ஷனுக்குக் கண்டிப்பா வந்திடுறேன்…திங்கள் லீவு போட முடியாது. ஆபீசே நான்தான் அங்கே. இல்லன்னா நாறிப் போகும்…அதனால…

தெரியும் சார்…கேள்விப்பட்டேன் எல்லாமும்…நீங்க ஆளே ரொம்ப மாறிட்டீங்களாமே…! அவரா இப்படிங்கிறாங்க… இங்க? நான்லாம் நம்பல சார்…நீங்களாவது மாறுவதாவது? ஆனா பாருங்க உங்களப்பத்திதான் ஒரே பேச்சு….நானே ஆடிப் போனேன்…விடாமச் சொல்லச் சொல்ல நம்பும்படியா ஆயிடிச்சு….நீங்களா சார் இப்டி…?-கையை ஆதுரமாய்ப் பிடித்துக் கொண்டார்.

சட்டென்று விடுவித்துக் கொண்ட இவர்…கேட்டார்.

என்ன சொல்றீங்க…? அப்டீன்னா…? – சற்றுக் கோபமாகவே குரல். எதுவோ சொல்ல எதையோ இழுக்கிறாரே இவர்? பத்திரிகை வச்சமா  போனமான்னு இல்லாம…?

காசுப் பொழக்கம் ரொம்ப அதிகம்னு சொன்னாங்க….நீங்கள்லாம் இப்டி ஆவீங்கன்னு நாங்கள்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கல சார்…குட்டைல விழுந்த மட்டை நாறித்தான் போகும்ங்கிற மாதிரி உங்களக் கொண்டு அங்க போட…போகைலயே நானெல்லாம் நினைச்சேன்…சாரு அங்க போறாரே…என்ன கதியாகப் போறாரோன்னு…!அது சரியாத்தான் போச்சு…!

என்ன தைரியம்? வீடு தேடி வந்து தன் கண் முன்னே…!  இதைக் கேட்டு விடுவதில் அப்படியொரு குரூர ஆறுதல்…அதுதானே?

நீங்க என்ன சொல்றீங்க மயில்வாகனம்…? வெளிப்படையாச் சொல்லுங்க…இப்டி மழுப்பிப் பேசாதீங்க…கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்த இடத்துல…எதுக்கு இதெல்லாம்…?

கரெக்ட் சார்…நீங்க சொல்றது சரிதான்.   அழைச்சமா…கிளம்பினமான்னு இல்லாம…ஸாரி சார்….எப்டியோ பேச்சு வந்திடுச்சி… மன்னிச்சிடுங்க….எல்லாரும் பேசிக்கிறாங்களேன்னு வயித்தெறிச்சல்ல சொல்லிப்புட்டேன்…நம்ப சாரா இப்டின்னு நினைச்சு அந்த வருத்தம்தான்…நான் வர்றேன் சார்…..

கேள்விப்படுறதெல்லாம் உண்மையாயிடாது…புரியுதா? கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்யுன்னு உங்களுக்குத் தெரியாது? தெரியாதவங்களுக்கு நீங்கதான் சொல்லணும்…சாரு இப்படிச் சொன்னாருன்னு…புரியுதா? போய்ட்டு வாங்க…

நா வர்றன் சார்….விசேடத்துக்குக் கட்டாயம் வந்திடுங்க…எதுவும் மனசுல வச்சுக்க வாணாம்…மாமியையும் கூட்டிட்டு வந்திருங்க…

மயில்வாகனம் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். தெருத் திரும்புகையில் திரும்பிப் பார்த்துக் கையசைத்தார் அவர். பதிலுக்கு அசைக்க இவருக்குக் கையெழவில்லை. இவன்லாம் ஒரு ஆளு?

யிலிலிருந்து இறங்கி ஆபீஸ் வந்தடைந்தபோது இவருக்கு வியர்த்திருந்தது. காற்றாடியைச் சுற்றவிட்டு  கண்ணை மூடி அமர்ந்திருந்தார். முதல் நாள் மயில்வாகனத்தோடு நடந்த பேச்சு இன்னும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் மாவட்டம் பூராவுமா பரவி விட்டது? வதந்தி…தந்தியை விட வேகம்தான்…மக்களுக்கு அதில் ஒரு கொண்டாட்டம்…

ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். மணியைப் பார்த்தார். வெளியூரான இவர் சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார். உள்ளூர்காரர்களான பணியாளர்கள் தாமதமாக வருகிறார்கள். ஆடி அசைந்து பத்தரை மணியைப் போலத்தான் ஆபீஸ் நிறைகிறது. தான் வந்து அமர்ந்திருப்பதுபற்றி ஒரு பதட்டமேயில்லை. தனக்குப் பயப்பட வேண்டாம். நேரத்துக்கு பயம் வேண்டாமா?

இவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டா்ா. சத்தம் போட்டும், கோபப்பட்டுப் பேசியும், இணக்கமாய்ச் சொல்லியும்…..ஊகும்….யாரும் அசைவதாய் இல்லை. இங்கெல்லாம் அப்டித்தான் சார்…நீங்க பெரியாபீசையே மனசுல வச்சிட்டுப் பேசறீங்க…

பணியாளர்கள் நேரத்துக்கு வருவதையே தன்னால் சரி செய்ய முடியவில்லை. மற்றவற்றையெல்லாம் என்னென்பது? எதையும் மாற்றுவது போலவா அங்கு நிலைமை இருக்கிறது? எல்லாம் ஊறித் திளைத்த கடல் நண்டுகள்! குப்பையைக் கூட்டுவதா, குப்பையில் மூழ்குவதா?

சார்…ஒரு வருஷத்துக்கு என்னை எதுவும் கேட்கக் கூடாது. பிறகு பாருங்க…மேலதிகாரியிடம் உரிமையோடு சவால் விட்டதுபோல்தான் சொல்லி வந்தார்.  ஆனால் இங்கு வந்து பார்த்தால்? எந்த எம்டனும் ஜெயிக்க முடியாது போலிருக்கிறதே…?

சார்…உங்ககிட்டே நாங்கள்லாம் ஒரு விஷயம் பேசணும்…

காலை ஆபீஸ் வந்ததும் வராததுமாக அத்தனை பேரும் தன்னைச் சுற்றி வந்து நிற்பதைப் பார்த்து என்னவோ ஏதோ என்று சற்றே கலவரமடைந்தார் ஈஸ்வரன்.

தான் கண்டிப்பாக இருப்பதை ஒன்றுகூடி எதிர்க்கிறார்களோ? புதிதாக வந்திருப்பவரிடம் முதலிலேயே சொல்லி விடுவது நல்லது என்று  முடிவு செய்து வந்து ஆஜராகியிருக்கிறார்களோ?

கண்டிப்பான ஆள் என்பதுதான் அடையாளமாகியிருக்கிறதேயொழிய எதுவும் மாறவில்லையே? மாற்றவும் இல்லையே?  கடலில் கரைந்த பெருங்காயமா நான்? இங்கு வந்து ஜோதியில் ஐக்கியமாகிவிட்டேனா? தன்னால் எந்த மாற்றம்தான் நிகழ்ந்திருக்கிறது இங்கே? இன்னும் முழு நடப்பியலையும் ஸ்டடி பண்ணவேயில்லையே? பலதும் பூடகமாகவே இருக்கிறதே? தப்பு நடக்கும் இடங்களெல்லாம் அப்படித்தான் ரகசியமாகச் செயல்படுமோ? எவனும் மனம்விட்டுப் பேசமாட்டேனென்கிறானே?

பியூன் கூட நேரத்துக்கு வருவதில்லை. சாயங்காலம் ஸ்டாஃப் எல்லாரும் போன பிறகு வாட்ச்மேனுக்குக் காத்திருந்து அவன் வந்த பிறகல்லவா, தான் கிளம்பிப் போக வேண்டியிருக்கிறது? சொல்லிச் சொல்லி  அலுத்ததுதான் மிச்சம்.  நாலு நாளைக்குப் புலம்புவாரு…பிறகு புரிஞ்சிக்கிடுவாரு…!

மார்ச் பொறந்திடுச்சு சார்…இந்த மாதம் பூராவும் டைட்டா இருக்கும் வேலை. ராத்திரி கூட உட்கார்ந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும்…அது எங்களுக்குப் பழகிப் போனதுதான். ஃபுல் நைட்டும் உட்கார்ந்திடுவோம். நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் செய்து அன்யூவல் டார்கெட்டை அச்சீவ் பண்ணிடுவோம். பாஸ்கிட்டே சொல்லிடுங்க…பில்லு போடுறது…டிரஷரிக்கு அனுப்புறது…பாஸ் பண்றது…செக் வாங்குறது…எல்லாமும் எங்க பொறுப்பு…எதுவும் மிஸ் ஆகாது…டிலேயும் ஆகாது…ஆனா…..

ஆனா…? என்ன ஆனா…சொல்லுங்க…ஏன் நிறுத்திட்டீங்க…? எதைச் சொல்ல வருகிறார்கள்? மொத்தமாய் வந்து கெரோ பண்ணுகிறார்களோ?

எங்களுக்கு வர்ற கமிஷன்  பர்சன்டேஜ் கண்டிப்பா வந்திரணும்…அதுக்கு நீங்கதான் பொறுப்பு…

அப்டீன்னா…?

என்ன சார்…தெரியாதமாதிரிக் கேட்கறீங்க…? வருஷம் பொறந்ததும் இங்க வந்து ஜாய்ன் பண்ணினீங்க…நீங்க வந்து ரெண்டு மாசத்துல மார்ச் வந்திடுச்சு…இயர் என்டிங் திருவிழாதான் உங்களுக்குத் தெரியுமில்ல சார்…சொல்லி அனுப்பியிருப்பாங்களே…சப்-டிவிஷன் பூராவும் வழக்கமா உள்ள கத தானசார்….புதுசா என்ன?

அதுதான் தானா உங்களுக்கு வந்து சேர்ந்திடும்ல…? நானென்ன அதுக்கு ஜவாப்தாரி…? புரியல….? நீங்க வேலை செய்றீங்க…வாங்கிக்கிறீங்க…அதானே?

சார் இப்பத்தான் முதல் முறையா சப் டிவிஷன் வர்றீங்க போல….இத்தன வருஷமா பெரிய ஆபீஸ்லயே இருந்து பழகிட்டீங்க…அங்க இதெல்லம் பார்த்திருக்க மாட்டீங்க…நீங்க உண்டு  உங்க வேலை உண்டுன்னு…இருந்திருப்பீங்க…

சரி…அதுக்கென்ன இப்ப…? அதுக்கும் நீங்க கேட்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நான் எதுக்கு நீங்க சொல்ற வட்டத்துக்குள்ள வரணும்னு யோசிக்கிறேன்…?

என்ன சார்….இந்த ஆபீஸ் சூப்பிரன்ட் நீங்க…உங்ககிட்டதான் ஒவ்வொரு ஸ்கீமுக்குமான பாஸ் பண்ணின பில்களோட செக் வந்து சேரும். அந்தந்தக் கான்ட்ராக்டர்களுக்கு நீங்கதான் டிஸ்டிரிபியூட் பண்ணப் போறீங்க…அவ்வளவு பெரிய பொறுப்புல இருக்கிற நீங்க…எங்க சம்பந்தப்பட்ட சின்ன விஷயத்தை தெரியாத மாதிரிக் கேட்டா என்ன சார் அர்த்தம்? உண்மைலயே உங்களுக்குத் தெரியாதா? இல்ல நமக்கெதுக்கடா வம்புன்னு ஒதுங்கப் பார்க்கிறீங்களா? – அவர்களுக்குத் தலைமை போல் அறியப்பட்ட துரைராசன் இப்படிக் கேட்டதும்…துணுக்குற்றார் ஈஸ்வரன்.

சீனியர் மோஸ்ட் அசிஸ்டன்ட்….தைரியமாய்க் கேட்கிறார்…நாளைக்கே நான் உங்க சீட்டுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல சார்…! சொல்லாமல் சொல்கிறாரோ? யார் கண்டது? வந்தாலும் வரலாம். காலியிடத்தைப் பிடிப்பதை விட இருக்கும் ஒருவனைத் தூக்கி எறிவதுதான் இங்கே கைவந்த கலை. அதில் பெருமையும் கூட. அப்பத்தானே அடுத்தவன் தன்னைத் தொடமாட்டான் என்கிற திண்ணக்கம். தான் வந்தது காலியிடம் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறாரோ?

சர்க்கிள் ஆபீஸ்ல இருந்திருக்கீங்க…சப்டிவிஷன் நடைமுறையெல்லாம் தெரியாதுன்னா எப்டி சார்…? அங்கேயிருந்து நீங்க வர்றதை சந்தோஷமா நாங்க எதிர்நோக்கினோம்…நீங்க நழுவப் பார்க்கறீங்க…! நீங்கதான் எங்களுக்குப் பாதுகாப்பு…! உங்கள வச்சுத்தான் நாங்க…

அடேயப்பா…கொக்கியைப் பலமாய்த்தான் போடுகிறார்கள். நாளைக்கு ஏதேனும் வில்லங்கம் என்றால் எல்லாம் உங்கள் தலையில்தான் என்று மறைபொருளாய் உணர்த்துகிறார்கள். மீதிக் காலத்தைக் கழிப்பதுதான் இனி பிரம்மப் பிரயத்தனம் போலும்…!

வெறுமே அன்றாட வேலைகளைப் பார்ப்போம், கிளம்புவோம்…எதிலும் தலையைக் கொடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பார்த்தால் விட மாட்டார்கள் போலிருக்கிறதே…? எங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்றல்லவா வந்து நிற்கிறார்கள்? தரகு வேலை பார்க்கச் சொல்கிறார்களோ? மாமா?

இதுநாள் வரை வண்டியை ஓட்டியது பெரிதில்லை. இனி மீதிக் காலத்தைக் கவனமாகக் கழிப்பதுதான் துர்லபம் …! உஷாரானார் ஈஸ்வரன்.

இங்க என்ன வழக்கமோ அது,  தானா நடக்குமுல்லங்க…அதுக்கு நான் என்ன பொறுப்பு? அதெல்லாம் கூடாதுன்னு நான் நிறுத்தக் கிளம்பினேன்னா நீங்க என்கிட்டே வந்து நிற்கணும்…உங்களுக்கு வழக்கமா உள்ளது வரத்தான போகுது…என்னை விட்ருங்க…அவ்வளவுதானே?

கொஞ்ச நேரம் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதி தவழுவதைக் கண்ணுற்றார் ஈஸ்வரன். அவருக்கு அந்த நடைமுறைகளே பிடிக்காமலிருந்தது. சரியாக வந்து சிக்கிக் கொண்டோம் என்று நினைக்க ஆரம்பித்திருந்தார். வசமாக எதிலேனும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதிலேயே அவர் கவனம் பதிந்திருந்தது.

சார்…மன்னிக்கணும்….கொஞ்சம் உட்கார்ந்து பேசலா மா….?

என்ன துரைராசன்…இப்டியெல்லாம் கேட்கறீங்க…? உங்க யாரையும் என்னைக்கும் நான் நிற்க வச்சுப் பேசினதில்லையே? என் எதிரே வந்ததும் முதல்ல உட்காருங்கன்னுதானே சொல்லுவேன்…

துரைராசன் உட்கார்ந்தார். மற்றவர்கள் அவரைச் சுற்றி நெருங்கி வந்தார்கள்.  இது ஒரு தனிக் கும்பல். தொழில் நுட்பம் என்பது தனி. ஆபீஸர் குழு என்பது சிறப்புத் தனி. அது மாவட்டம் வளைத்தது. பெரிய இடம்…

சார்…தப்பா நினைச்சிக்கிடாதீங்க…கொஞ்சம் இந்த லிஸ்டை நீங்க பார்க்கணும்….இதான் இங்க உள்ள நடைமுறை. இத நீங்க ஓகே பண்ணிட்டீங்கன்னா நாங்கபாட்டுக்கு வேலையைப் பார்க்கப் போயிடுவோம். நீங்க எதுவும் சொல்லணும்னோ, கேட்கணும்னோ வச்சிக்க மாட்டோம். எல்லாம் தானா, பம்பரமா நடக்கும். எங்கள நம்பி நீங்க தைரியமா வலம் வரலாம்….என்றவாறே ஒரு சின்னத் தாளை நீட்டினார் துரைராசன்.

அதைக் கையில் வாங்கிய ஈஸ்வரன் ஒன்றின் கீழ் ஒன்றாக வரிசையாக எழுதியிருந்ததைக் கண்ணுற்றார். நிரந்தர ஆவணக் குறிப்பு போல ஒவ்வொருவர் பையிலும் இருக்குமோ? என்று நினைத்துக் கொண்டார்.

அதில் அவர் பெயரும் இருந்தது அவரை ஆச்சரியப்படுத்தியது.  அவரில் ஆரம்பித்து காவலர் வரை சென்று முடிந்திருந்தது. அந்த ஆண்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகை என்ன என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு தனித் தனிப் பணிக்குமான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் குறித்து, அந்தந்தப் பணிகள் முடிந்த பிறகு அப்பணிகளை வெற்றிகரமாக முடித்த நிலையில், அதில் பங்கு பெற்ற பணியாளர்களுக்குச் சேர வேண்டிய அவரவர் பணி அளவிலான சதவீதக் கமிஷன் தொகை கணக்கிடப்பட்டு மொத்தமிடப்பட்டிருந்தது.

கில்லாடிகள்தான். மாதா மாதம் ஆய்வுக் கூட்டத்திற்கு அட்டவணை போடும் இவர்களுக்கு இதுவா தெரியாது? வெறும் பிசாத்து…!

மொத்தம் இவ்வளவா? தருவாங்களா? தர மனசு வருமா? இதென்ன அநியாயமாயிருக்கு? இத எப்படிக் கேட்கறது? என்ன பேர் சொல்லி?

இதுதான் இங்க வழக்கமா? என்று அதிராததுபோல் கேட்டார் ஈஸ்வரன்.

இந்த சப் டிவிஷன் ஆரம்பிச்சதிலிருந்து இதான் சார் வழக்கம். ஆனா பதினஞ்சு இருபது வருஷத்துக்கு முன்னாடி திட்ட ஒதுக்கீடுத் தொகை எவ்வளவு இன்னைக்கு எவ்வளவுங்கிறதை நீங்க கொஞ்சம் நினைச்சுப் பார்க்கணும்…அதப்போல் பத்து மடங்கு இருபது மடங்கு இன்னைக்கு வரவு உயர்ந்திருக்கு. நிதி ஒதுக்கீடு அதிகமாயிருக்கு.  ஆனா எங்க பாக்கெட் வரவு அதே இடத்துலதான் நிக்குது….இதுக்கெல்லாம் போராட முடியுமா சார்…மனமுவந்து செய்றது…பிரியப்பட்டுக் கொடுக்கிறது…அன்னைப்போல பல மடங்கு வேலை கூடியிருக்கு…ஆனா யாரும் கண்டுக்கிறதில்லை….இப்ப நீங்க வந்திருக்கீங்க…நீங்களாவது இந்த வேறுபாட்டை எடுத்துச் சொல்லி எங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வாங்கித் தரணும்…சர்க்கிளாபீஸ்லருந்து வந்திருக்கிறதால உங்க வார்த்தைதான் எடுபடும்…ராப்பகலா வேலை பார்த்து நாங்கள்லாம் ரொம்பக் கஷ்டப்படுறோம் சார்…அலுங்காமக் குலுங்காம பெரிசுக தட்டிட்டுப் போயிடுதுங்க…பிள்ளைங்களுக்கு ஒரு டேர்ம் ஃபீசுக்கு ஆகாது சார் இந்தத் துட்டு…!

இந்தப் பாவக் காசுலயா பையன்களைப் படிக்க வைக்கிறீங்க…? கேட்கத் தோன்றியது ஈஸ்வரனுக்கு. நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டார் வறுமையில் வாடுவதுபோல் பேசுகிறா்ாகள். ஊமை அழுகை அழுகிறார்கள்.

நானே ஏண்டா இங்க வந்தோம்னு நினைச்சு இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கேன்…நீங்க என்னடான்னா? எதெதுலயோ கொண்டு என்னை மாட்டிவிடப் பார்க்கிறீங்க?

நீங்கதான சார் மானேஜர்…சூப்பிரண்ட்…எல்லாமும்…உங்ககிட்டதான நாங்க சொல்ல முடியும்.சார் அப்டிச் சொல்லக் கூடாது….பல வருஷமா இருக்கிற வழக்கத்த மாத்தறதுக்கு நாம யாரு? ஊரோட ஒத்து வாழ்…அதான் நம்ம பாலிசி…எல்லாருக்கும் உள்ளது நமக்கும்….இந்த சர்க்கிள்ல மத்த சப்-டிவிஷன்லெல்லாம் என்னைக்கோ நிலமை மாறிடிச்சி…ஆனா இங்கதான் எதுவும் நடக்கலை…..பழசுலயே இழுத்திட்டிருக்கு…எங்களுக்கு சப்போர்ட் பண்ண இப்ப நீங்க இல்லேன்னா, பின்ன எப்பவும் இல்ல சார்…

கிணறு தோண்ட பூதம் கிளம்பிய நிலையாய் உணர்ந்தார் ஈஸ்வரன். எதையும் தன்னால் நிச்சயம் மாற்ற முடியப் போவதில்லை. ஆபீஸ் நிர்வாகத்தைச் சீரமைக்கலாம் என்று வந்தால் இங்கே கதை கந்தலாய்க் கிடக்கிறதே! ஒரே வழி…வேண்டுமானால் இந்த இடத்தை விட்டு அகலலாம். அதுவும் இப்போதைக்கு முடியாது. குறைந்தது ஒரு வருஷமாவது ஆக வேண்டும். மெடிக்கல் லீவு போடலாமென்றால் அடுத்து ப்ரமோஷன் எதிர்நோக்கும் நிலையில் வீட்டில் உட்கார்ந்திருந்தால் துறை நடப்பியல் எதுவும் தெரியாது போய்விடும் அபாயம் உண்டு. என்ன செய்யலாம்? ஈஸ்வரனின் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்த போது சட்டென்று அவருக்கு யோசனை தோன்றியது. சொன்னால் சந்தோஷப் படுவார்களா?

ஒண்ணு செய்யுங்களேன்….இந்த லிஸ்ட்ல எனக்குன்னு…அதாவது மானேஜருக்குன்னு ஒரு பங்குத் தொகை வருதுல்ல…அதை நீங்க எல்லாரும் பிரிச்சு எடுத்துக்கங்களேன்.    என்னை ஆள விட்ருங்க….எப்டி யோசனை….?-உற்சாகமாய்த்தான் கூறினார் ஈஸ்வரன். அந்தப் பாபக் காசு தனக்கு வேண்டாம்…என்பதே அவர் எண்ணமாயிருந்தது. இந்தக் கடைசி மூணு வருஷத்தில் இந்தச் சாக்கடையில் வீழ வேண்டுமா என்பதே அவர் எண்ணமாயிருந்தது. இத்தனை ஆண்டுகள் கஜகர்ண வித்தை பயின்றாயிற்று. இனிமேலா தடம் புரள வேண்டும்?

சொன்ன மறு நிமிடம் ஒருசேரக் குரல் உயர்ந்தது.

ஐயையோ…அதெல்லாம் வேண்டாம் சார்…உங்க காசு எங்களுக்கு வேண்டாம்…இன்னும் அந்தப் பாவம் வேறே சேரணுமா? என்றனர் எல்லோரும். எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான வார்த்தைகளில் கோரஸாய் மறுப்பைத் தெரிவிக்கிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது ஈஸ்வரனுக்கு.

அப்போதைக்கு என்ன தீர்வு என்கிற ரீதியில் யோசிக்க ஆரம்பித்திருந்தார். அப்போ பாவக் காசு என்று ஒப்புக் கொள்கிறார்கள்! அப்படித்தானே? ஆனால் விட முடியவில்லை. மனசில்லை. பழகிப் போச்சு…அதுதானே? கோபப்படுவதா? பரிதாபப்படுவதா? எங்கிருந்து மாற்றத்தை நிகழ்த்துவது? எவ்வழி அவ்வழி?

சரி….முயற்சி செய்றேன். நீங்க சொல்றதை பாஸ்கிட்டப் பேசிப் பார்க்கிறேன். …சந்தோஷம்தானே? சீட்ல போய் அவுங்கவுங்க வேலையைப் பாருங்க…ஆபீஸ் வேலைல எந்தத் தாமதமும் கூடாது…அதுதான் எனக்கு வேணும்…

வாங்கிக் கொடுக்கிறேன்னு சொல்லுங்க சார்…நாங்க எல்லாரும் எப்பவும் உங்க பக்கம்தான் நிற்போம்…அதுல உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்….கன் மாதிரி வச்சிருப்போம் அவுங்கவுங்க சீட் வேலயை…யாரும் எப்பவும் வந்து இன்ஸ்பெக்ட் பண்ணிக்கலாம்…எந்த நிமிஷமும் ஆடிட் வரலாம்….அரைநாள்ல தயாராயிடுவோம்….உங்க பேருக்கு எந்த பங்கமும் வராது…அதுக்கு நாங்க கியாரண்டி…..

அப்படீன்னா நான் சொல்றதை நீங்களும் கேட்டுத்தான் ஆகணும்…! என் பங்குத் துட்டை நீங்க எல்லாரும் பிரிச்சு எடுத்துக்குங்க…எனக்கு வேண்டாம்…அதுக்கு சம்மதம்னாத்தான் என்னால நீங்க சொல்றதைச் செய்ய முடியும்…என்ன சொல்றீங்க…? என் பேரே இந்தப் பேச்சுல அடிபடக் கூடாது…ஓகேயா…?

பதில் சொல்லாமல் அகன்றனர் எல்லோரும்.  நகரும் அவர்களையே ஒவ்வொருவராய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன்.

பாவம் இவர்கள்…பரிதாபத்துக்குரியவர்கள். அவர் மனதுக்கு             என்னவோ இப்படித்தான் தோன்றியது.

நிதியாண்டு வெற்றிகரமாக முடிந்த முதல் வாரத்தின் கடைசி நாள்…. வளாகத்தினுள்ளே உள்ள கோயிலில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். ஒரு வரிசையில் ஆண்களும்…எதிர் வரிசையில் பெண் பணியாளர்களுமாய்…

ஒலி பெருக்கி பக்திப் பாடல்களை அலற விட்டுக் கொண்டிருந்தது. வண்ணக் காகிதங்கள் தோரணங்களாய்க் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. சீரியல் பல்புகள் விதவிதமான வண்ணங்களை உமிழ்ந்து கொண்டிருந்தன. குப்பையும் கூளமுமாய் இருக்கும் அலுவலகத்திற்கு, அந்த வளாகத்திற்கு  இப்படியொரு அழகு எங்கிருந்து வந்தது. கொண்டாட்ட மனநிலையில் அனைத்து ஊழியர்களும்….

அழைத்து வரப்பட்டிருந்த அர்ச்சகர் மந்திரங்களைப் பக்தி பூர்வமாய் உரக்கச் சொல்லி,  ராகமாய் உச்சரித்து, கற்பூரம் காண்பித்துப் பூஜையை ஜோதி மயமாய் நிறைவேற்றிய அந்தத் தருணம்…..

எல்லோரும் பார்க்க வரிசையிலிருந்து நிதானமாய்  அகன்ற ஈஸ்வரன் இரு பக்கம் நின்றிருந்தவர்களையும்  கைகளால் சைகை காண்பித்து நடுவே வழி உண்டாக்கி விலக்கிக் கொண்டு நடந்து, எல்லோரும் திடுக்கிட்டுப் நோக்க, தன் இடக் கையிலிருந்த அந்தக் காகித உறையிலிருந்து பணத்தை அப்படியே உருவி எடுத்து, எல்லோரும் ஆச்சர்யமாய்ப் பார்க்க  சந்நிதி வாயிலுக்கு முன்பு தரையில் பதிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய உண்டியலில் அதைச் சேர்ப்பித்தார்.  நன்றாய் உள்ளே போய் விட்டதா என்று அங்கு கிடந்த ஒரு சிறு குச்சியை எடுத்து உண்டியலின் குறுகிய நீண்ட வாய்ப் பகுதியைக் குத்தி விட்டார்.  பிறகு ஒரு திருப்தி வந்த நிறைவோடு….திரும்பி….வரிசையின் கடைசியில் வந்து அமைதியாய் நின்று கொண்ட போது, எதிர்கொண்ட கற்பூர ஆரத்தியை  இருகரம் குவித்து அப்படியே அணைத்து வாங்கி முகத்தில் கண்மூடி ஒத்திக் கொண்டார். அந்தக் கணம் மனதில் ஏதோவொரு நிறைவு வந்திருப்பது போல் அவரால் உணர முடிந்தது.

பூஜை முடிந்த கையோடு எல்லோரும் அவரவர் இருப்பிடம் நோக்கி கலைந்து செல்ல….சார்…சார்…என்று பின்னால் எழுந்த குரல்களைப் பொருட்படுத்தாது வேகமாய் நடந்தார் ஈஸ்வரன்.

என்ன சார் இப்டிச் செய்திட்டீங்க….? எங்களுக்கு வேண்டாம்னு நாங்க சொன்னதுக்கா இந்த தண்டனை…! நீங்க இப்டிச் செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா சரின்னு வாங்கிட்டிருப்போமே சார்…உங்க மனசைப் புண்படுத்திட்டமா சார்…? எங்களை மன்னிச்சிடுங்க...சார்…கொஞ்சம் முன்னாடியாவது நீங்க எங்ககிட்டே சொல்லியிருக்கலாமில்ல சார்…! உங்களை மாதிரி எங்களாலெல்லாம் இருக்க முடியாது சார்… நாங்க அப்பாவிங்க…சராசரிங்க…-புலம்பிக்கொண்டே நெருக்கமாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

எதுவுமே பதில் பேசாமல் தன் இருக்கையை நோக்கி நடந்து கொண்டிருந்தார் ஈஸ்வரன். கோயிலிலிருந்து தன் அலுவலக இருக்கை கொஞ்சம் அதிக தூரம்போல் தோன்றியது அன்று..!

காசுப் பொழக்கம் ரொம்ப அதிகம்னு சொன்னாங்க…நீங்கள்லாம் இப்டி மாறுவீங்கன்னு நாங்கள்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கல சார்…எல்லாரும் உங்களப் பத்திதான் பேசிக்கிறாங்க…-அன்று மயில்வாகனம் சொன்ன வார்த்தைகள் ஈஸ்வரனின் காதுகளில் அறைந்து கொண்டிருந்தன.

வதந்தியான, வம்பு நிறைந்த மனிதாத்மாக்களின் தங்கு தடையற்ற  விட்டேற்றியான எண்ணங்களை, பேச்சை எதைக் கொண்டுதான் தடை போடுவது? எதைச் சொல்லிப் புரிய வைப்பது? எப்படிச் சொல்லி விளங்க வைப்பது?

இப்டின்னு தெரிஞ்சிருந்தா சரி கொடுங்கன்னு வாங்கிட்டிருப்பமே சார்….அவ்வளவு வேதனையிலும் அவர்களின் இந்த வார்த்தைகளை நினைத்து வேதனையோடு சிரித்துக் கொண்டார் ஈஸ்வரன். அவர்களைப் பொறுத்தவரை  அந்த விஷயத்தில் திடமாய்த்தான் நிற்கிறார்கள். திண்டாட்டமும் தவிப்புமெல்லாம, சரியாயிருக்கணும் என்று உறுதியாய் நின்று  செயல்படுபவனுக்குத்தான். உலகம் இன்றுவரை இந்த ரீதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நினைத்துக் கொண்டார்.  

மாற்றம் என்ற சொல் ஒன்றே மாறாதது. மற்ற அனைத்தும் மாறக்கூடியதுதான்.  ஏற்கனவே மாறி, ஊறித் திளைத்துக் கிடப்பவர்கள் மத்தியில் எந்தப் புதிய  மாற்றத்தையும் கொண்டு வர வாய்ப்பேயில்லை என்பதுவே நிதர்சனம்.

                                                ----------------------------

 

 

 

 

 

ஊருண்டு காணி இல்லேன் - நாஞ்சில் நாடன்

  நாஞ்சிலாரின் நூல்களைத் தொடர்ந்து வாங்கிப் படித்து விடுபவன் நான். சற்று முன் விஜயா பதிப்பகத்திலிருந்து இது கைக்கு வந்து சேர்ந்தது. மொழியைப்...