04 செப்டம்பர் 2024

 எதிர் நீச்சல்  - நாவல்  -பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை  மதுரை புத்தகக் கண்காட்சி செப்.2024 வெளியீடு








 

சிறுகதை    


“  முடியாத கேள்விகள் ”   - பேசும் புதிய சக்தி -செப்.2024 பிரசுரம்






 

 ன்னய்யா பொண்ணு வளர்த்திருக்க நீ? – கோபத்தில், எரிச்சலில் தாங்கமாட்டாமல் கேட்டே விட்டார் திருஞானம். ஒரு கணம் அவர் உடம்பு ஆடி ஓய்ந்தது. சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம், முகம் பார்க்கும் கண்ணாடி, காலண்டர் எல்லாமும் சற்று நடுங்கி அடங்கியது போலிருந்தது. வீ்டே அதிர்ந்திருக்குமோ? என்றுகூடச் சந்தேகம் எழுந்தது. ஃபோனில் பேச எதற்கு இவ்வளவு கத்த வேண்டும் என்று அவரே நினைத்துக் கொண்டார். இன்று பொழுது இப்படி விடிந்ததே என்று வருத்தம் கொண்டது மனம்.

            எதிர்த்தரப்பில் சத்தமேயில்லை. லைனில் ஆள் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. ஒருவேளை கேட்கவில்லையோ? தொடர்பே கிடைக்கவில்லையோ? உறலோ என்ற பிறகுதானே பேசினோம்?

            அடுப்படியிலிருந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் திரிவேணி. கடுகு வெடிக்கும் சத்தம் காட்சிக்கு மிகப் பொருத்தம். என்ன பேசினோம் என்று கேட்கவில்லையோ? கேட்டிருந்தால் அருகில் வந்து நின்றிருப்பாளே?

தன்னை விட அவள்தான் வயிற்றெரிச்சலில் தாள மாட்டாமல் அலைகிறாள். நாம சரியாப் பார்க்கல…இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு கூட விட்டிருக்கலாம். அவன்பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பான். இப்போ அவன் நிம்மதியும் போச்சு….!! அவள் அடிக்கடி புலம்பும் வார்த்தைகள் இவை. அவன் காது கேட்கத்தான் சொல்லுகிறாள். அவனும் மறுப்புச் சொல்வதில்லையே?  அந்தப் பெண்ணும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை புரியவில்லையோ? அல்லது புரிந்தும் திமிரா? அதுதான் எடுத்தெறிந்து பேசுகிறதே…!இப்போது பேச வேண்டியதுதானே? நன்றாக வயிறு எரியட்டும் என்று மனதுக்குள் குதூகலிக்கிறதோ?நீங்க என்னமோ புலம்பிட்டுப் போங்க…நான் இருக்கிறபடிதான் இருப்பேன்…என்ன ஒரு திண்ணக்கம்?

இதுக்கெல்லாம் எதற்குக் கல்யாணம்? தனியே அலைய வேண்டிதானே? எவன்ட்டயாவது எக்குத் தப்பா மாட்டினா தெரியும் சேதி? இந்த மட்டும் ஒரு நல்ல எடமா அமைஞ்சிதேன்னு அடங்கிக் கிடக்கத் தெரியுதா? வீட்டுல இருக்கிற மற்றவங்க மாதிரி சாதாரணமா இருந்திட்டுப் போக வேண்டிதானே? அதென்ன…பொட்டக் கழுதைக்கு அத்தனை திமிர்? அது எங்கயாச்சும் கொண்டு விபரீதமா மாட்டில்ல விட்ரும்? ஒரு வேளை வீட்லதான் அப்டியோ? வெளில எலியோ? -கடுமையான அதிருப்தியில் மிதந்தார் திருஞானம்.

அந்தப் பெண் தன் வீட்டிற்கு மருமகளாய் வந்த நாள் முதல் யாருக்கும் மன நிம்மதியில்லை என்பதை உணர்ந்தார். அம்மா…அப்பா…என்று அன்பொழுகக் கூப்பிட்டுக் கொண்டு எத்தனை சந்தோஷமாய் இருக்கலாம்? சொல்ல முடியாமல் தவிக்கிறான் பையன் என்பது தெரிந்தது. அதை அடங்கிப் போவதாக அந்தப் பெண் தப்புக் கணக்குப் போடுகிறது. யாருக்கு யார் அடங்குவது? சகஜமாய் இருந்தால் எல்லோரும் சமம்தானே? இந்த சூட்சுமம் ஏன் அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை? சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தால்தானே எதுவும் படியும்? ஊர் சுற்றவும், ஓட்டலில் திங்கவும், சினிமா போகவும், கண்ட பொருட்களை வாங்கவும், வீட்டுக்கு வந்து மணிக் கணக்கில்லாமல் தூங்கி வழியவும்…எல்லாமும் வியாதிக்குத்தான் வழி வகுக்கும். பெற்றோரே அப்படியிருந்தால், பெற்ற பெண் எப்படி உருப்படும்? இதுவா வளர்ப்பு முறை? பெத்த வயித்துல பெரண்டையத்தான் வச்சுக் கட்டிக்கணும்…!

ன் அம்மாவின் பேச்சுக்கு என்றுதான் மறுப்புச் சொல்லியிருக்கிறான் அவன்? அம்மா சொல்வது சரியா, தவறா…என்னதான் நினைக்கிறான்? யாருக்கும் தெரியாது. அவனுக்கே தெரியாதோ என்று கூடச் சந்தேகம் வந்தது திருஞானத்திற்கு. இப்படிக் குழந்தை மனம் கொண்டவனாய் இருக்கிறானே? இவன் எப்படித் தேறப் போகிறான்? ஆண் என்றால் ஒரு ஆளுமை வேண்டாமா? அது இருந்தால்தான் இந்நேரம் சொல்லித் திருத்தியிருப்பானே? பார்த்துக்கொண்டு தவதாயப்பட்டவனாய் அல்லவா அமர்ந்திருக்கிறான்?அந்தப் பொண்ணு ஏதாச்சும் பேசினால் பதிலே சொல்ல மாட்டேனென்கிறானே? தக்க பதில் கொடுத்தால்தானே அடங்கும்? அடுத்தாற்போல் வாய் வராது? அமைதியாயிருந்தால் அது சொன்னதுதான் சரி என்று ஆகிப் போகுமே? சரியானதைச் சொன்னால் சரி. விபரீதமாகவே பேசும் பெண் ஏன் மௌனிக்கிறது?  எப்படி ஒத்துக் கொள்வது? அமைதியாயிருந்தால் ஒத்துக்கொண்டதாகிவிடாதா? மஷனையா?

 எதிலுமே திருந்தின பார்வையே இல்லையே? ஏதோ திண்டுக்கும் முண்டுக்கும் பேசுவதாகத்தானே இருக்கிறது. எதைச் சொன்னாலும் அதெப்படி? இதெப்படி? என்னால முடியாது. நீங்க மட்டும் ஒழுங்கா? நா செய்ய மாட்டேன்…நீங்க பேசுறது தப்பு…நா சொல்றத கேளுங்க…அதுதான் சரி…இதுதான் சரி…உறா…உறீ…என்று திகிடு முகிடாய்த்தானே பேசுகிறது? இப்படியெல்லாம் பேசினால்தான் சமத்து என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ? அல்லது அப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? எதையும் எதற்காக. ஏன். எப்படி என்று கேள்? என்று சினிமா வசனம் போல் புகட்டியிருப்பார்களோ?

 நல்லது சொன்னால் எடுத்துக் கொள்ள வேண்டாமா? இந்த மட்டும் நல்வழி காட்ட ஆள் இருக்கிறேதே என்றல்லவா நினைக்க வேண்டும்? எதைச் சொன்னாலும் எதிர்த்து எதிர்த்துப் பேசினால்? அவன் சொல்வதையும் கேட்பதில்லை. நாம் சொல்வதையும் கேட்பதில்லையே?சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இன்னொரு வீட்டிற்குப் போகும் பெண்ணை இப்படியா வளர்ப்பது? பாங்காய் எல்லாமும் சொல்லிக் கொடுத்துப் பழக்கி பக்குவமாய் அனுப்பினால்தானே பெருமை? கெட்ட பெயர் பெற்றோர்களுக்குத்தானே?

ஐ.டி. வேலைக்குப் போனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துக் கொள்வார்களோ? எதிர்த்துப் பேசுதல், எடுத்தெறிந்து பேசுதல், சட்டுச் சட்டென்று கோபப்படுதல், முகத்தை முறித்து வெடுக்கென்று வார்த்தையாடுதல், பெரியவர்களுக்கு ஒரு மரியாதையில்லை…அடக்கமான பேச்சில்லை…சுமுகமான நடப்பு இல்லை….இந்த வீட்டுக்கு என்று வந்தாயிற்று…இனி இதுதான் நம் வீடு…இவர்தான் என் கணவர்…இவர்கள்தான் என் தாய் தந்தையர்…இனி காலத்துக்கும் நான் வாழப் போகும் இடம் இதுதான் என்ற பொறுப்பான சிந்தனையே இல்லையே?

ஒவ்வொன்றுக்கும் மாமனார், மாமியாரா எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்? பிடுங்கி எடுக்கிறார்கள் என்கிற கெட்ட பெயர் வராதா? தாராளமாய் வந்து அமர்ந்து கொள்ளுமே? உலகம் பெண்ணைத்தானே கருணையோடு நோக்கும்! நியாயம் எந்தப் பக்கம் என்று யோசிக்காதே? இவன்தானே அவளுக்குப் பாந்தமாய். பரிவாய், பக்குவமாய் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லித் தெரிய வைக்க வேண்டும்? இவனே அது பேசும் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு வாய் மூடி மௌனியாய் இருந்தால், வாய் அதற்கு இன்னுமல்லவா நீளும்? தேவையானதைக் கருத்தாய், அக்கறையாய், பொறுப்பாய் எடுத்துச் சொன்னால் சரி என்றுதான் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். புத்திசாலிப் பொண்ணு என்று பெருமைப் படுவார்கள். அந்த அடையாளமே இல்லையே இந்தப் பெண்ணிடம். வெறும் அரைகுறையாய் இருந்து கொண்டு என்ன ஆட்டம் போடுகிறது.

போகுது போகுது என்று பார்த்தால் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் போலிருக்கிறதே? வேண்டாம் என்று பார்த்தால் விடாது கறுப்பு என்கிற கதையாயல்லவா இருக்கிறது. நறுக்கென்று குட்டு வைத்துத்தான் ஆக வேண்டுமோ?

பெண்ணுரிமை என்கிற பெயரில் இன்று பலதும் மாறிச் சிதைந்திருக்கின்றன என்று யாருக்குத் தெரியும். அந்தந்தக் குடும்பங்களில் அனுபவிப்பவர்களுக்கல்லவா அந்த வேதனை புரியும்? குடும்பங்கள் படும் பாடுகள் அவர்களுக்குத் தெரியவா போகிறது? எதையும் அனுபவித்துப் பார்த்தால்தானே புரியும்? என்னய்யா பெரிய கொடுமை? தாள வேண்டாமா?

                உறலோ….-குரல் கேட்டு உஷாரானார்.  அந்த உறலோவென்ற குரலைச் சட்டென்று புரிந்து கொண்டார்அவர்தான் என்று.

               சார்…எதோ கூப்டீங்க போல்ருக்கே…? – குரல் தணிந்து வந்ததை உணர்ந்த திருஞானத்திற்கு இன்னும் எகிறியது. மனதுக்குள் இருக்கும் நாடகம். உண்மையான வெளிப்பாடு இல்லை.

            ஏதோ கூப்பிடல….காரணமாத்தான் கூப்டேன்…ஏன்யா…கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு அனுப்புற பொண்ணை இப்டியா தத்தியா வளர்த்து வச்சிருப்பீங்க? உங்க வீட்டுல யாருக்குமே அறிவில்லையா? ஊரச் சுத்த, சினிமாப் பார்க்க, ஓட்டலுக்குப் போக, இஷ்டத்துக்குத் திங்க,  வீட்டுக்கு வந்து பொத்துன்னு படுக்கைல விழ இது மட்டும்தான் தெரியுமா? வீட்டு வேலையெல்லாம் ஜீரோவா? இதுதான் வாழ்க்கைன்னு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா? அ்ட…வேலை கூடச் செய்ய வேண்டாம்யா…பணிவா, அடக்க ஒடுக்கமா இருக்கலாமில்ல…உம்ம பொண்ணுக்கு மரியாதைங்கிறதே தெரியாதோ? மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கும் போல்ருக்கே?

            சார்…கொஞ்சம் மரியாதையாப் பேசினா நல்லாயிருக்கும். நான் வேணும்னா நேர்ல வரட்டுமா?

            என்னத்தைய்யா மரியாதையாப் பேசுறது? மதிச்சு மரியாதை குடுக்குற அளவுக்கா பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க…? உங்க பொண்ணு புகுந்த வீட்டுல எப்டியிருக்குங்கிறதப் பொருத்துத்தான்யா உங்களுக்கு மரியாத….! உங்க பேரைக் காப்பாத்தற மாதிரி இருக்க வேண்டாமா? உம்ம லட்சணம் உங்க பொண்ணு மூலமாத் தெரியுது!

            அதுக்காக வாய்யா, போய்யான்னு பேசுறது நல்லாவாயிருக்கு…சம்பந்திங்க ஒருத்தருக்கொருத்தர் அப்டியெல்லாம்  ஏசிக்கிறது கேட்கறவங்களுக்கு சரியாத் தோணுமா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…..-அங்கிருந்து குரல் தணிந்தே வந்தாலும் கோபம் தணியவில்லை திருஞானத்திற்கு. இன்று ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான் என்று உக்கிரமாய் நின்றார். இத்தனை நாள் பொறுத்ததே அதிகம் என்று தோன்றியது. தினசரி பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டுப் புழுங்கிக் கொண்டிருக்க முடியுமா? மனசுக்கு ஒரு ஆறுதல் என்பதே இல்லாமல் போனதே?

            சதா வீட்டில் கலகமென்றால்? சாதாரணமாய் இருந்து தொலைக்க வேண்டிதானே? எதுக்கு மனசுல இத்தனை கோபமும், தாபமும்?

            யோசிச்சுப் பார்த்துத்தான்யா மண்ட காய்ஞ்சு போய்க் கத்துறேன்…இன்னும் என்னத்த யோசிக்கிறதுக்கு இருக்கு? ஏன்யா…உங்க பொண்ணுக்கு என்னதான் சொல்லிக் கொடுத்திருக்கீங்க…முதல்ல அதச் சொல்லுங்க…அப்டி ஏதாச்சும் இருக்கான்னு நாங்க தெரிஞ்சிக்கிறோம்…

            எதிர்த் தரப்பில் அமைதி நிலவியது. பக்கத்தில் யாரோ பேசுவது மெல்லியதாகக் கேட்டது.

            யாரு? யாரோ பேசுற சத்தம் கேட்குதே…? அருகில் வந்த திரிவேணி கவனமாய்க் கேட்டாள். பெண் குரல் போல் இருக்கவே அவளுக்கு சந்தேகம். பெண்ணின் அம்மாவோ என்று…!

            என் பொண்ணைக் குத்தம் சொல்றவங்க…நல்லாவேயிருக்க மாட்டாங்க…! வௌங்கவே மாட்டாங்க….-அந்தம்மாவுக்கு இந்த ரெண்டைத் தவிர வேறேதும் தெரியாது.

            இந்தாள் ஒரு லூசு…அவர் பொண்ணு ஒரு அரை லூசு…அந்தம்மா ஒரு தத்தி.   இதான் இவங்க ஃபேமிலி…இங்க போய்ப் பொண்ணு எடுத்த மாதிரி ஒரு முட்டாத்தனம் வேறேதுமில்ல….சபிக்காத குறையாய்க் கத்தினார் திருஞானம்.

            அவுங்கம்மாவேதான்….வேறே யாராயிருக்கும்?அது ஒரு ஜடம். அந்த வீட்டுக்கு வேறே யார்தான் வர்றாங்க? இந்தாள் குணம் தெரிஞ்சிதான் அவனவன் அத்துக்கிட்டுப் போயிட்டானே? எதுக்கெடுத்தாலும் எல்லாமும் தனக்கே தெரிஞ்சமாதிரி பேசிக்கிட்டிருந்தா? அடுத்தவன் சொல்றதைக் காது கொடுத்தே கேட்காம மறிச்சு மறிச்சுப் பேசினா? நீங்க எல்லாரும் மடையனுங்க…நா ஒருத்தன்தான் புத்திசாலி…எனக்குத் தெரியாத விஷயமே கெடையாதுன்னு கரைஞ்சா?

            அது எப்படியோ இருந்திட்டுப் போறாரு…நமக்கென்ன வந்தது? நம்ப வீட்டுல அவுங்க பொண்ணு எப்படியிருக்கணும்…அத மட்டும் பேசுங்க…மத்ததெல்லாம் அநாவசியம்….

            அது அந்தாளுக்குப் புரிஞ்சாத்தானடீ…ஏதோ தேவதையைக் கொண்டாந்து  இறக்கி விட்டிருக்கிறாப்லல்ல நினைச்சிட்டிருக்கான்…! நம்ம அதிர்ஷ்டம்னுல்ல நினைக்கிறான்.  அது ஒரு ரெண்டுங்கெட்டானாக் கெடக்குன்னு அந்தக் கிறுக்கனுக்குத் தெரியுமா? பொண்ணப் பொண்ணா வளர்த்திருந்தால்ல…? எதுவும் பாந்தமாச் சொல்லிக் கொடுக்காம…காட்டுச் செடி மாதிரி வளர விட்டிருக்கான்…அத அங்கங்க வெட்டி வெட்டி ஷேப் பண்ணியிருந்தாத்தானே ஒரு வடிவமா வந்திருக்கும்…வளர்ந்திருக்கும்…-புலம்பித் தள்ளினார் திருஞானம். கோபத்தில்தான் தனக்கு நன்றாகப் பேச வருகிறது என்று தோன்றியது அவருக்கு. போனில் பேச்சைத் தொடர்ந்தார்.

            ஏன்யா…ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்குப் போனா அங்க எப்படியிருக்கணும், என்ன மாதிரி நடந்துக்கணும், பெரியவங்ககிட்ட எப்படிப் பேசணும். எந்த மாதிரி இயங்கணும்…இப்டி ஏதாச்சும் உங்க பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா இல்லையா?  சொல்லிக் குடுத்து வளர்த்தீங்களா இல்ல அதுபாட்டுக்குத் தன் போக்குல வளர்ந்திச்சா?  உம்ம வீட்ல என்னென்ன வேண்டாததையெல்லாம் பழக்கி விட்டிருக்கீங்களோ அதையே இங்க செய்யவா, அதுபோலவே இங்க வெறுமே வெட்டியா  வளைய வரவா அனுப்பி வச்சிருக்கீங்க…? எங்க புத்திய செருப்பால அடிக்கணும்யா…செருப்பால அடிக்கணும்…அட்டச் சோம்பேறி…ஆகாசச் சோம்பேறிய்யா உங்க பொண்ணு….கவைக்கு உதவாது போலிருக்கே…?-பொரிந்து தள்ளினார். ஆரம்பிச்சாச்சு…எங்க போய் முடியுமோ? அவருக்கே தெரியவில்லை. எப்படி வாழ்நாளெல்லாம் இந்தப்( பேயை) பெண்ணை வைத்துக் கொண்டு வாழப் போகிறான்? மயக்கம் வரும்போலிருந்தது அவருக்கு.  கட்டிலில் நிதானமாய் உட்கார்ந்து கொண்டார். எதிர் வரிசையில் கத்துவது காதில் கேட்டது.

            சார்…சார்…எதுக்கு அநாவசியமாப் பேசறீங்க…நீங்க ரொம்பக் கோபமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்…கொஞ்சம் பொறுமையா இருங்க…எல்லாமும் போகப் போகச் சரியாப் போகும்…பெரியவங்களான நாமளே பொறுமை காக்கலேன்னா எப்டி? எங்களுக்காகக் கொஞ்சம் பொறுத்துப் போகக் கூடாதா? யோசிங்க சார்…-குரல் தணிவாகவே வந்தது. லட்சணம் தெரியும்போல்தான் இருந்தது. வசமாய்த் தள்ளி விட்டுவிட்டார்களே? நாம்தான் புரிந்து கொள்ளாமல் சம்பந்தம் செய்தாயிற்று. மிகுந்த வருத்தமாய் இருந்தது திருஞானத்திற்கு. குமுறலையெல்லாம் கொட்டிக் கவிழ்த்தால்தான் ஆறும் போலிருக்கிறது.

            என்னத்தைய்யா பொறுமை காக்குறது? அதான் உம்ம பொண்ணு லட்சணம் பளீர்னு தெரியுதே…அப்புறம் எங்கேருந்து வரும் பொறுமை…? உமக்கென்ன வசதியாத் தள்ளி விட்டுட்டீரு…ஒரு பெரிய்ய்ய பொறுப்பு தீர்ந்திச்சு…நாங்கதான் எதுவும் விசாரிக்காம. நேர்ல இருந்து பார்க்காம ஏமாந்துட்டு நிக்கிறோம்…! உம்ம பொண்ணு நான் வந்தபோதெல்லாம் தூங்கிட்டே இருந்திச்சே…அப்பயே சந்தேகப்பட்டேன்யா நானு…இதென்ன பொழுது விடிஞ்சு மணி பதினொண்ணு தாண்டியாச்சே…இப்டித் தூங்கி வழியுதுன்னு…அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும்…என் கண்ணை எதுவோ மறைச்சிருச்சு…அதான் விதி….வச்சி அனுபவிக்கணும்னு இருக்கு…கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொண்ணை இப்படி ஒண்ணுந்தெரியாம வளர்த்திருக்கமேன்னு உமக்கு வெட்கமாயில்லையாய்யா? அசிங்கமாயில்ல? சோம்பேறிய்யா…உங்க பொண்ணு….அட்டச் சோம்பேறி…! களிமண்ணு….!! சண்டி மாடு…!!!

            சார்…இப்டிப் பொத்தாம் பொதுவாப் பேசிட்டே போனா எப்படி? நேர்ல உட்கார்ந்து பேசுவமே…! நான் வேண்டியதைச் சொல்றேன். பொறுமையாக் கேளுங்க….எனக்கும் எங்க பொண்ணைப் பத்தி கொஞ்சமாவது தெரியுமில்ல. அதை உங்ககிட்டே சொல்றேன்….எவ்வளவோ சொல்லித்தான் கொடுத்து அனுப்பிச்சோம்…பிறவிப் புத்தி…என்ன செய்யச் சொல்றீங்க…?

            நீரே ஒத்துக்கிறீரா? யாரோட பிறவிப் புத்தி? உங்களோடதா? அதுதானே உங்க பொண்ணுக்கும் இருக்கும்? இத உட்கார்ந்து வேறே பேசணுமாக்கும்? டைம் வேஸ்ட்…எனர்ஜி வேஸ்ட்…ஏன்யா…கல்யாணம் ஆன ஒரு பொண்ணு தினசரி காலைல பதினோரு மணிக்கா படுக்கைலர்ந்து எழுந்திருக்கும்? என்னய்யா இது ஒலகத்துல இல்லாத வழக்கமாயிருக்கு….? ஊரு ஒலகமே விழிச்சிக் கெடக்கு…பரபரன்னு அத்தனை உயிரும் வெளில கௌம்பிப் பறந்திட்டிருக்கு…உம்ம பொண்ணு என்னடான்னா படுக்கைய விட்டே எழலைய்யா….இந்த அசிங்கத்த எங்க போய்ச் சொல்ல….? எனக்கு மனசே ஆறலைய்யா….? மனசே ஆறலை….கண்ண மூடிட்டுக் கல்யாணத்தப்பண்ணி கூட்டிட்டு வந்திட்ட மாதிரி இருக்குய்யா…இருக்கு…எங்க பையன் வாழ்க்கை போச்சு…! அவன் கிடந்து அவஸ்தை அனுபவிக்கிறான் இப்போ…! எல்லாக் கஷ்டமும் இப்போ அவனுக்குத்தான்…எப்பப் பார்த்தாலும் சண்டையா போட முடியும்னு தளர்ந்திட்டான்யா…! உம்ம பொண்ணால வந்த வினை இது…! ஒரு நல்ல பையனோட வாழ்க்கை போச்சுய்யா…போச்சு…!!! உம்ம பொண்ணு இந்த வீட்டுல ஒரு துரும்பை நகர்த்துறதில்ல… வாயாடாமயாச்சும் இருக்கலாமில்லே…! பெரிய மகாராணின்னு நெனப்பு போல்ருக்கு…அசடு…சரியான அப்புண்டு…!

            இந்தாள்ட்டப் போய் தான் ஏன் இத்தனை புலம்பணும்…? என்று திடீரென்று தோன்றியது திருஞானத்திற்கு. ஆத்தமாட்டாமல்  அழுது புலம்பிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைத்தார். ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அந்தப் பொண்ணை, அவர் மருமகளைப் பார்க்க நேரும்போதெல்லாம் அநியாயத்துக்குக் கோபம் வந்தது. என்னமாவது தப்புத் தண்டாவாய்ப் பேசி விடுவோமோ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். இடம் அகன்றார். சரிக்குச் சமமாய் அசட்டுப் பிசட்டு என்று பேச இவருக்கு விருப்பமில்லை. காரியமாய்  ஒரு வார்த்தை பேச அந்தப் பெண்ணுக்கும் தெரியவில்லை. அது வாயைத் திறந்தாலே எதுவும் பொருத்தமாயில்லை. பாந்தமாயில்லை. சரி…போகப் போகச் சரியாகும் என்று பார்த்தால், எகிறி எகிறிப் பேசுவதும், அநாவசியமாய் வார்த்தையை விடுவதும், பெரியவர்களை மதிக்காத போக்கும், எதைச் சொன்னாலும் தப்பர்த்தம் பண்ணிக் கொள்வதும், தூக்கியெறிஞ்சு பேசுவதும், நா எங்க வீட்டுக்குப் போறேன் என்று சூட்கேஸை எடுத்துக் கொண்டு கிளம்புவதும், சொல்லாமல் கொள்ளாமல் படியிறங்குவதும்….அப்பப்பா….அது இந்த வீட்டில் காலடி வைத்த நாள் முதலாய் நிம்மதி என்பது அறவே இல்லாமல் போனது என்பதுதான் சத்தியம்.

            தொட்டதற்கெல்லாம் என்ன அப்பன்கூட ஃபோன்? அந்தாள்தான் இந்தப் பெண்ணைக் கெடுக்கிறான். அதுதான் நிஜம்.  நீ அப்டி செய்…இப்டி செய்….என்ன சாப்பிட்ட…எங்க உட்கார்ந்த…எப்ப எழுந்திரிச்ச…எப்ப வெளிக்குப் போன…என்பது முதற்கொண்டு கேட்கிறான் அந்த திராவை. இன்னொரு வீட்டுக்கு என்று அனுப்பியாயிற்றே…பொத்திக் கொண்டு கிடப்போம் என்கிற முதிர்ச்சி வேண்டாமா? தினசரி என்ன பேச்சு மணிக்கணக்காய்? -ஆத்திரம் தீரமாட்டேனென்கிறது இவருக்கு. இப்படித் தப்புப் பண்ணிட்டமேன்னு மனசு குமுறுகிறது.

            உம்ம பொண்ணு இன்னைவரைக்கும் எங்க வீட்டுப் பொண்ணா இல்லய்யா….உம்ம பொண்ணாத்தான் இங்க வளைய வந்திட்டிருக்கு. நீர்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை பேசுறீரே? கட்டிக் கொடுத்த பொண்ணுகிட்ட என்ன தெனமும் பேச்சு? அது எங்க வீட்ல கலக்க வேண்டாமா? எங்க வீட்டுக்குப் பொருந்தின பொண்ணா மாற வேண்டாமா? கோத்திரமே மாறிப் போச்சேய்யா…அப்புறம் நொய் நொய்னு தெனமும் பேசிட்டேயிருந்தீர்னா?  அது உம்ம பொண்ணுக்கு வேணும்னா ஆனந்தமா இருக்கலாம். எங்களுக்கு நொய் நொய்தான். நீர் உம்ம பொண்ணைக் கெடுக்கிறீர்…அத முதல்ல புரிஞ்சுக்கும்…சொல்லிப்புட்டேன்….- பொளந்து கட்டினார் திருஞானம்.  இத்தனையையும் நேரில் பேச முடியுமா? முகத்துக்கு முகம் பார்த்துப் பேசி ஆகுமா? பொழிந்து தள்ள ஃபோன்தான் எவ்வளவு வசதி?

            போதும் விடுங்க….இன்னொரு நாளைக்குப் பேசிக்கலாம். ஃபோனை வைங்க…. – திரிவேணி வந்து பிடுங்கினாள். அவளுக்கு பயம். ஏதேனும் தாறுமாறாய்ச் சண்டை வந்து விடுமோவென்று. பையன் வாழ்க்கை கெட்டுப் போகுமோ என்று அஞ்சுகிறாள். அந்தப் பெண் இதையெல்லாம் எதையும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.  தன் வாழ்க்கை போய்விடுமோ என்று அதுவல்லவோ பயம் கொள்ள வேண்டும்?

            அது சித்தம் போக்கு…சிவன் போக்கு என்று இருந்தது. ஆபீஸ் இருக்கும் நாட்களில் ஏழுவரை தூங்கி, பரபரவென்று அடித்துப் பிடித்து எழுந்து குளிக்காமலே ஆபீஸ் கிளம்பியது. சரி…சாயங்காலம் வந்தாவது குளிக்கிறதா என்று பார்த்தால்…ஊகும்….ஆடு, மாடு, காக்கா, குருவியெல்லாம் தெனமும் குளிச்சிட்டா இருக்கு? என்று சொல்லும் ஏதாச்சும் கேட்டால். அத்தனை புத்திசாலி. தினமும் சூரியோதயம் முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்துப் புதுத் துணி அணிந்து, தலைசீவிப் பொட்டிட்டு…பூ வைத்து…ஊகும்…ஒரு எழவும் கிடையாது. அழுக்கு மூட்டை…சண்டி மாடு…மண் குதிரை….இன்னும் என்னதான் சொல்வது? வீட்டுக்கு வந்த மருமகளை, பையன் பெண்டாட்டியை இப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று ஆதங்கமாய்த்தான் இருக்கிறது. சொல்லாமலும் முடியவில்லை. குறைந்தபட்சம் நானும் என் பொண்டாட்டியுமாவது இப்படிப் பறிமாறிக்கொள்ளாவிட்டால் எங்களுக்கே பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயப்படுகிறோம்.

            பையனுக்கு எங்கள் நிலைமை தெரியும். வேறு வழி? என்னை என்ன பண்ணச் சொல்றே? வச்சு ஓட்டித்தான் ஆகணும்…காலப் போக்குல சரியாகாதாங்கிற நம்பிக்கைதான்…. அவன் பொறுமை யாருக்கும் வராது. அவன் குணத்துக்கு நிச்சயம் எல்லாம் சரியாகும் என்றுதான் எங்களுக்குத் தோன்றியது. காலம் எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும் பதில் தருமே…! ஈஸ்வரா…அவனைக் காப்பாற்று….என்று மானசீகமாய் அழுதோம். ஆனாலும் ஆதங்கம் தீரவா செய்கிறது? அவ்வப்போது வெடிக்கிறதே…! அடக்க முடியவில்லையே…! அந்தப் பெண் என்ன திருந்தியா விட்டது? இன்னும் அதே லட்சணம்தானே? கொஞ்சமாச்சும் ஒரு மாற்றம்? ஊகும்….நாமதான் மாறணும்…இல்லன்னா மண்டையப் போடணும்…அப்பத்தான் இதுக்குத் தீர்வு…!

            எங்களுக்கும் உடம்பில் தெம்பில்லை. கோபப்படவும், வருத்தப்படவும் கூட மனுஷனுக்கு உடற்தெம்பு வேண்டும். அப்பொழுதுதான் படுக்கையில் விழாமல் நடமாடிக்கொண்டு அவ்வப்போது இப்படி வயிறெரிய முடியும். நாங்கள் நாளுக்கு நாள் நறுங்கிக் கொண்டிருந்தோம். எங்களுக்கே தெரியத்தான் செய்கிறது. காலம் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பார்த்தால் அது என்று வருவது? நாங்கள் என்று பார்ப்பது?

            சமா ஒரு கிறுக்கன் மாட்டினான்…இதுதான் சந்தர்ப்பம்னு ஒரே அமுத்தா அமுத்தி ஆளத் தள்ளி விட்டாச்சு…நல்ல எடமாவும் போச்சு…பிக்கல் பிடுங்கல் இல்ல…சொந்த வீடு…இங்க ஒண்ணு…ஊர்ல ஒண்ணு…அது போக வளமான சேமிப்பு….சொந்தத்துலர்ந்து இன்னும் ரெண்டு வீடுக வந்து சேரும்னு வேறே சொல்றாங்க…முடியுமானா நாம கூட நாளைக்கு அந்த வீடுகள்ல ஒண்ணப் பிடிச்சுப் போய் குடியிருந்துக்கலாம். வாடகை மிச்சம்…தட்சிணா….நீ அதிர்ஷ்டக்காரன்டா…கொடுத்து வச்சவன்டா…உன் பொண்ணை விட நீதான்டா அதிர்ஷ்டசாலி….-சம்பந்தி தட்சிணாமூர்த்தி நிச்சயம் இப்படியெல்லாம் நினைத்துத் தனக்குத்தானே மகிழ்ந்து கொள்வார்.அதிலொன்றும் சந்தேகமில்லைதான். அவர் பாடு கொண்டாட்டம்தான். தராதரம் அவ்வளவுதான். தரம் கெட்டவனின் சிந்தனை வேறு எப்படியிருக்கும்?

            தங்களுக்குத்தான் ஏமாற்றமாய்ப் போயிற்று. நாங்க வரதட்சிணைன்னு எதுவும் கேட்க மாட்டோம். நீங்க விருப்பப்பட்டதைச் செய்யுங்க…நீங்க உங்க பொண்ணுக்குச் செய்யப் போறீங்க…நாங்க என்ன சொல்றது…கேட்குறது…மத்தப்படி கல்யாணத்த மதிப்பா, மரியாதையா. கௌரவமா நடத்திக் கொடுங்க…அது போதும்….- இப்படி விட்டுக் கொடுத்துப் பேசியதுதான் அந்தாளுக்கு ஏத்தமாப் போச்சு போல்ருக்கு…எவர்சில்வர் பாத்திரமா செய்முறைகள அடுக்குவாங்கன்னு பார்த்தா, அத்தனையையும் பிளாஸ்டிக்குலல்ல அடுக்கிப்புட்டான்…எவனாச்சும் அப்டி செய்வானா? பிளாஸ்டிக்கையே ஒழிக்கணும்னு அரசாங்கம் சொல்லிட்டிருக்கிற இந்தக் காலத்துல, ஒழிக்க வேண்டாம்…எங்கிட்டக் கொடுங்கன்னு போய் அள்ளிட்டு வந்த மாதிரில்ல செய்துப்புட்டான்….இந்த லட்சணத்துல அட்வைஸ் வேறே…

            உங்க ஒய்ஃப்புக்கு நீங்க ஃபினான்சியல் ஃப்ரீடம் கொடுக்கணும்…இது அந்தக் காலமில்லே….ஐ.டி. பீரியட் இது….உலகமயமாக்கல்னு எல்லாமும் வளர்ந்து வளர்ந்து வானத்த எட்டிக் கிடக்கு…இப்போ பெண்களோட இயக்கம்கிறதே வேறெ லெவல்….அத நீங்கதான் புரிஞ்சிக்கணும்…..-ஏண்டா மடையா…எங்கிட்டப் பேசுடா…! என் பையனுக்கு நீ அட்வைஸ் பண்ற அளவுக்கு அவனை நான் வளர்க்கலே…! அவனுக்கு இருக்கிற பொறுப்பான சிந்தனைல பத்து பர்ஸன்ட் கூட உன்கிட்டே கிடையாது. அது புரியுமா உனக்கு? சம்பந்தியாரே…வாயை அடக்கும்…! – குமுறினார்.

            ஃபினான்சியல் ஃப்ரீடம்…மண்ணாங்கட்டி….அதான்யா உன் பொண்ணு இப்படித் திரியது…..பியூட்டி பார்லர் போயி மூவாயிரம், நாலாயிரம்னு செலவு பண்ணிட்டுத் தலையைக் குறைச்சு விரிச்சிப்போட்டுட்டு திரியுது…உதட்டுக்கு லிப்ஸ்டிக் இல்லாம அம்மா இருக்க மாட்டாக போல்ருக்கு…எந்தக் கலாச்சாரத்தய்யா வீட்டுக்குள்ள கொண்டு வந்து புகுத்துறது? அறிவு வேண்டாம்? இஷ்டத்துக்குப் டைட் பேன்ட், பனியன்னு போட்டுக்கிட்டு, பிதுக்கிட்டுத் திரியுதுங்க…ஏன்யா பின்னால வந்து ஆம்பள தட்ட மாட்டான்? நீ ஒழுங்காப் போனா அவனும் போவான்…வா…வந்து தட்டுன்னு நீயே கூப்பிட்டேன்னா…? டெம்ப்டேஷனக் கௌப்புறதே இவங்கதானே? யாராச்சும் ஒரு ஆம்பள இவங்களப் பார்த்து தெனமும் உறாய் சொல்லணும்…இளிச்சு…இளிச்சுப் பேசணும்….இவ பல்லக் காட்டுறதப் பார்த்து அவன் தவிக்கணும்…பின்னாடியே வாடை பிடிக்கிறவன் மாதிரி தொரத்தணும்…ஓட்டல்ல போயி அவன் கணக்குல கண்டதையும் திங்கணும்…அப்புறம் நெஞ்சு கரிக்குதேன்னு அப்பன் ஆத்தாட்ட வந்து பொலம்பணும்…தொண்ட சரியில்ல…வகுறு வலிக்குது…ன்னு படுத்து உருளணும்….வீடே தூங்குதேய்யா இந்த மாதிரிப் பொம்பளைங்கனால…இன்னைவரைக்கும் நீ என்ன சம்பாதிக்கிற? எவ்வளவு வாங்குற? ஏதாச்சும் சேமிக்கிறியா…? மாசங்கூடி உனக்கு என்ன செலவாகுது? ஏதாச்சும் ஒரு வார்த்தை கேட்டிருப்போமா …? மகனே உன் சமத்து, மகளே உன் சமத்து, தம்பதிகளே உங்கள் சமத்து…ன்னுதானே இருக்கோம். எங்களுக்குத்தான் எங்க பென்ஷனுக்கே செலவில்லையே…அதையும் உங்ககிட்டத்தானே கொடுத்துட்டுப் போகப் போறோம்…? வேறே எங்கயும்  தான தர்மம் பண்ண நிச்சயம் மனசு வராது. பிள்ளைகிட்டயே…இந்தா பிடின்னு கொடுக்கப் போறோம்…அதுக்காகவாச்சும் நாங்க சொல்ற நல்லதக் கேளுங்கடா..? உங்க எதிர்காலத்துக்காக எங்களோட வழி முறைகளைக் காது கொடுத்து வாங்குங்கடா…இல்லன்னா இப்ப நீங்க இருக்கிற நடைமுறைக்கு எதிர்காலத்துல பிச்சதான் எடுப்பீங்க…நிச்சயமாச் சொல்லிப்புட்டேன்….பாவிங்களா…என்னடா வாழ்க்கை வாழ்றீங்க…? நினைச்சபடியெல்லாம் வாழ்றதாடா வாழ்க்கை? கட்டுப்பாடுக் கோடுன்னு ஒண்ணு உங்க மத்தில கிடையவே கிடையாதா? வேண்டாத பொருளயெல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டியது…பிறகு அதுகளெல்லாம் பழசாப்போச்சுன்னு தூக்கி எறிய வேண்டியது….சமைக்க சங்கடப்பட்டுக்கிட்டு, சோம்பேறியா வெளில ஆர்டர் பண்ணித் திங்க வேண்டியது…பிறகு வயிறு சரியில்லன்னு சுருட்டி மடக்கிப் படுத்துக்க வேண்டிது…வீட்டுச் சமையல்ங்கிறதே உங்க வாழ்க்கைல கெடையவே கெடையாதா? எல்லா நாளும் வெளிலதானா? உடம்பு என்னத்துக்குடா ஆகும்? அடி முட்டாப் பசங்களா? பொம்பள  ஆம்பள வித்தியாசமில்லாம இப்படி தூமரதண்டியாத் திரியிறீங்களேடா…வயித்தெறிச்சல் தாளலடா…தாளல…..!!!

            மனது இன்னும் ஆறமாட்டேன் என்கிறது. அந்தப் பொண்ணு அடுப்படிப் பக்கம் எட்டியே பார்ப்பதில்லை. இவள்தான் மாங்கு மாங்கு என்றும் வேகு வேகுவென்றும் இன்னும் அடுப்பு வெக்கையில் வெந்து மாய்கிறாள். இருமிக்கொண்டே கொத்தடிமையாய்க் கிடக்கிறாள்.

            நான் பண்றேம்மா…இன்னைக்கு சமையல் நான் பார்த்துக்கிறேன்…கொஞ்சம் வித்தியாசமாச் சமைப்போம்…காலைல பூரி மசால் பண்ணுவோம். மத்தியானம் வெஜிடபிள் ரைஸ் வைக்கிறேன்…வற்றல் பொரிக்கிறேன். ஏதாச்சும் ஒரு காய் பண்றேன்….-சனி, ஞாயிறாவது அப்படி வந்து நிற்கும் என்று ஆன மட்டும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் திரிவேணி. ஊகும்…அது வாயே திறக்கவில்லை. எல்லாமும் கற்பனையில்தான் இருக்கிறது.  ஒரு பேச்சுக்கேனும் காய் நறுக்கிறேம்மா நானு..என்ன காய் வைக்கப் போறீங்க…சொல்லுங்க…எடுத்து நறுக்கிறேன்…என்று ஒரு வார்த்தை இல்லை. எங்கே வந்து நின்றால் ஒட்டிக் கொள்ளுமோ…அப்படியே தொடர்ந்து விடுமோ….என்று பயப்படுகிறதோ என்னவோ…? அலுங்காமல் குலுங்காமல்…அப்டியே உடம்பை அசைத்து அசைத்து (அசைக்கவாவது செய்கிறதே…அசைக்கிறதா அல்லது அதுவாக அசைகிறதா?) தேர் மாதிரி உருண்டால் போதுமா? என்ன திமிர்? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கிறதா? அல்லது தங்கத்தாரகையா? சாதாரண அறிவு கூட இல்லாத சராசரிக்கும் கீழான ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணுக்கு என்ன இவ்வளவு நிமிர்வு? சகஜமாய் இருந்துவிட்டுப் போக வேண்டிதானே? குடும்பத்தில் நிம்மதிதானே முக்கியம்? அது இது வந்த நாள் முதல் கெட்டுப் போனதே?

            என்னதான் முடிவு? இப்படியே போய்க்கொண்டிருந்தால்…இதற்கு முடிவுதான் என்ன? பெற்றோர் செய்த பாவம் பிள்ளையின் தலையில் என்பார்களே? என்ன பாவம் செய்தேன் நான் என் பையன் இப்படி அனுபவிப்பதற்கு? எந்த விதி இந்தச் சதியைச் செய்தது?என் பையன் சதீஷூக்கு நானே இந்தச் சதியைச் செய்து விட்டேனா? புத்தி பிரண்டு விட்டதா எனக்கு?  நெஞ்சம் விம்மியது திருஞானத்திற்கு.

            அப்பப்போ இப்படி வயித்தெரிச்சலக் கொட்டினா…அதுவும் நாளடைவுல அந்தாளுக்குப் பழகிப் போயிடும். வழுக்கு மரம் மாதிரி ஏற வேண்டியது…இறங்க வேண்டியது…இதான் பொழப்பா…? முடிவேயில்லையா? காலம் கருணை செய்யாதா? -ஃபோனைக் கட் பண்ணியவர் இதுகூட இன்று பேசியிருக்க வேண்டாமோ? என்று எண்ண ஆரம்பித்தார். தன் மீதே பரிதாபம் ஏற்பட்டது அவருக்கு. உலகம் அவரைப் பார்த்து எள்ளி நகையாடிச்  சிரிப்பது போலிருந்தது.  ஒரு நல்ல  சாதுவான பையனின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோம்…என்று மனம் குமுறியது. அவன் கூடவே இருந்த அவன் பாரத்தைக் குறைப்பதே இனி மீதி வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணலானார் திருஞானம்.

            மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வாசலில் வந்து தோள்துண்டால் தரையை ரெண்டு தட்டுத் தட்டி சாலையைப் பார்த்தவாறே அமர்ந்து கொண்டார்.  ஒரு தெரு நாய் அருகில் வந்து கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்று விட்டுக் கிளம்பிச் சென்றது. நிற்க நேரமில்லாத அந்த நாயையே வைத்த கண் வாங்காமல் பரிதாபமாய்ப்  பார்த்துக் கொண்டிருந்தார் திருஞானம்.    அதைவிடக் கேவலமானதாய்த் தன் பிழைப்பு ஆகிப் போனது என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

                                                ---------------------------------

                                                ----------------------------------          

           

           

 

              

 

02 செப்டம்பர் 2024

 

சிறுகதை           “பச்சை மை…!”    பிரசுரம்-“தாய்வீடு” மாத இதழ்

 செப்டம்பர் 2024





            நீங்கதான் சார் எனக்குச் செய்யணும்…வேறே யாரும் உதவ மாட்டாங்க இந்த வளாகத்துல…!….- இப்படிச் சொல்லிக் கொண்டுதான் என் முன்னே வந்து அமர்ந்தார் கோபாலகிருஷ்ணன். முகத்தில் அப்படியொரு கவலை. எதையோ நினைத்துப் பதறிக் கொண்டிருப்பவர் போலான தோற்றம். அப்படி நேருக்கு நேர் அமருவது அபூர்வம்…அப்படியே அமர்ந்தாலும்  கண்களை நேரடியாகப் பார்த்துப் பேச மாட்டார். அது ஏன் என்று எனக்குத் தெரியும். அவருக்கும் தெரியும்தான்….குற்றமுள்ள நெஞ்சு….

            என்னிடம் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் கண்களுக்குச் சேணம் பூட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவன். என் மேஜையில் என் முன்னே இருக்கும் ஃபைல்தான் என் பார்வைக்குத் தெரியும். மற்ற எதையும் நான் கண்டு கொள்வதில்லை.

பரந்து விரிந்த அந்த மாவட்ட அலுவலகங்களின் வளாகத்தில்  எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவருக்கு. எத்தனையோ வருடப் பழக்கம். மாடிக்கு மாடி, அலுவலகத்துக்கு அலுவலகம் எங்கு நுழைந்தாலும் அவருக்கு வரவேற்பு உண்டுதான். அதெல்லாம் உதட்டளவில் என்று இப்போது நிரூபணமாகி விட்டதோ? போயும் போயும் என்னிடம் வந்து நிற்கிறாரே! நானெல்லாம் ஒரு ஆளா அவருக்கு? என்னை லட்சியமே பண்ணாத அவருக்கு தன்னின் அலட்சியத்தை ஒதுக்கி என்னிடம் வந்து நிற்க வேண்டிய ஒரு தருணம் வந்திருக்கிறது பாருங்கள்…அதுதான் காலத்தின் கட்டாயம்.

            வருஷம் போன கடைசியில் அவர் இப்படி என்னைத் தேடிக்கொண்டு வருவானேன்? ஆளா இல்லை? இத்தனைக்கும் அவருக்கு அடுத்த கீழ் ராங்க்தான் நான். எனக்குச் சம்பளத்திற்குக் கையெழுத்திடுபவரே அவர்தான். அவர் நினைத்தால் ஏதேனும் ஒரு கிளார்க்கைக் கூட ஏற்பாடு செய்து கொள்ள முடியும்தான். முடியவில்லையோ? அல்லது நம்பிக்கையில்லையா?

            என்னையெல்லாம் அவர் மதித்ததேயில்லை. அதுபற்றி நான் கவலைப்பட்டதுமில்லை. இவர்களெல்லாம் மதித்தால் என்ன, மதிக்காவிட்டால்தான் என்ன? மதிப்பதனால் ஏதேனும் பெருமை கூடிவிடப் போகிறதா அல்லது மதிக்காததினால் ஏதேனும் குறைந்து விடப்போகிறதா? இரண்டும் இல்லை.  அவர் வேலை அவருக்கு. என் வேலை எனக்கு. என் மதிப்பு எனக்கு அவர் (அவ)மதிப்பு அவருக்கு.

            ஆனாலும் கூடுதல் பொறுப்பில் இருக்கும் அந்த எதிர் அலுவலகத்தில் என் முகம் பார்க்க அமர்ந்து கொண்டு, வேலையைக் கவனிக்கிறாரோ இல்லையோ…என்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் இருக்கையில் இருக்கிறேனா என்று பார்க்கிறார். வேலை செய்கிறேனா  இல்லை அரட்டை அடிக்கிறேனா என்று பார்க்கிறார். எங்கே போகப் போகிறேன். நான்தான் காலையில் வந்து அமர்ந்தால் அசையாமல் பேனாவும் கையுமாகக் குத்துக்கல் போலக் கிடக்கிறேனே? அவருக்கென்ன தெரியாதா?

 நான் என்ன செய்கிறேன் என்பதுதான் அவரது முக்கியமான வேலை. அவர் கவனிக்கிறார் என்பது எனக்குத் தெரியும்தான் என்றாலும், எத்தனை நேரத்துக்கு அதையே நினைத்துக் கொண்டிருப்பது அல்லது பார்ப்பது? நான் வேலை செய்ய வந்தவன். அவர் வேவு பார்க்க வந்தவர். இப்படித்தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. 

            அவருக்கு வேலை முக்கியமில்லை. எல்லாம் குருட்டுக் கையெழுத்துதான். அதுதான் பணியாளர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்து விடுகிறார்களே! பிறகென்ன நீட்டின இடத்தில் கையொப்பம் இட்டால் சரி. எதற்குக் கையொப்பமிட்டோம் என்று கூட மண்டையில் ஏறுமோ ஏறாதோ? சதா அந்த “இன்னொன்றிலேயே“ கவனமாயிருந்தால்? ஆபீஸ் வருவதே அதற்குத்தான் என்றிருந்தால்? பிறகு எதுதான் விளங்கும்? புத்தியை மழுங்கச் செய்யும் அந்த இன்னொன்று!

எனக்கு என் வேலைதான் கவனம். இன்று எதையெல்லாம் முடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தோடுதான் தினமும் அலுவலகத்திற்குள்ளேயே நுழைகிறேன் நான். இந்தந்தக் கோப்பையெல்லாம் புட் அப் பண்ணுங்க…என்று வந்ததும் சொல்லி விடுவேன். மதியம் வரை பார்ப்பேன். வரவில்லையெனில் நானே கோப்பினை வாங்கி அல்லது பீரோவைத் திறந்து நானே  எடுத்து எழுதி  விடுவேன். எவனை எதிர்பார்த்தும் நான் இல்லை. எனக்குத் தேவை என்னை எவரும் குறை கூறக் கூடாது. அவ்வளவே…! நினைத்த நேரம் நினைத்த வேலை முடியணும்…எது கேட்டாலும்…இதோ உங்க டேபிள்ல…என்று சொல்லணும். எதிராளி தலை குனியணும்.

 …கொஞ்சம் தாமதிச்சா அப்புறம் அவரே செய்துக்குவாரு…என்று இருந்து விட்டால்…? அதற்கு விடுவதில்லை.  புரிந்தவர்கள் என்னிடம் வேலை கற்றுக் கொள்ளலாம். புரியாதவர்கள் தடுமாறலாம்.

            அவருக்கு நேர் எதிர் அலுவலகத்தில் வாயிலுக்கு நேரே என் இருக்கை இருப்பது எனக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. எதிர்த்தாற்போல் இருந்து, சதா என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் இந்த மனுஷனின் பார்வையிலிருந்து முதலில் மறைய வேண்டும். அதென்ன அப்படி ஒரு பார்வை? தன்னைப் போலவே மற்றவரையும் நினைக்கும் சந்தேகப் பார்வை அது!

            பேசாமல் தன் வேலையைக் கவனிப்பாரா…நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனிப்பதா அவர் வேலை? இடம் மாற்ற எவ்வளவோ முயன்றேன்.. அமையவில்லை. காரணம் அந்தக் கட்டடங்கள் தனித் தனியாக  ரயில் கூபே போல ஒவ்வொரு திட்ட அலுவலகங்களுக்கும் பிரித்து விடப்பட்டிருந்தன. அதிகபட்சம் இரண்டு அறைகள். அதற்குள்தான் எல்லாமும். உறால் போல் ஒன்று. அலுவலரின் அறை இன்னொன்று. அந்த அலுவலரின் அறையிலும் கூட ஓரமாய்  டைப்ரைட்டர்,, கம்ப்யூட்டர்  பிரின்டர்..என்று இருந்தது. இடவசதி நெருக்கடி. அலுவலகம் எப்படி நெருக்கடியாயிருந்தால் என்ன? வரவுதான்  பிரதானம்!

            அப்படி அமைந்ததுதான் நான் வேலை பார்க்கும் அலுவலகமும். ஒரிஜினலாக நான் அதுநாள் வரை பணியாற்றிய துறையே வேறு. முப்பத்து மூன்று ஆண்டு காலம் சர்வீஸ் போட்டுவிட்டு, கடைசி ஒரு வருடத்திற்கு பதவி உயர்விற்கு ஆசைப்பட்டு இங்கே விருப்பம் தெரிவித்து வந்து சேர்ந்தவன் நான். அந்தத் தகுதி இங்குதான் கிடைத்தது. அதில் அலாதி சந்தோஷம் எனக்கு. பச்சை இங்க்கில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஆசை. சர்டிபிகேட்டுகளுக்கு அட்டெஸ்ட்டேஷன் போடும் தகுதி பெற வேண்டும். கெஜடட் ராங்க் அலுவலர்களுக்கே அது சாத்தியம்.. அந்த இடத்தை வேறு துறைக்கு மாறிக்கொள்வதன் மூலம் அடைய முடியுமானால் தவறென்ன? என்னுடைய மூலத் துறையிலேயே நீட்டித்து, பதவி உயர்வு வரும் வரும் என்று காத்திருப்பதை விட அல்லது காத்திருந்து ஏமாறுவதை விட, எனது கணக்கியல் கல்வித் தகுதியை வைத்துக் கணித்து, இந்தா பிடி…வந்து வேலையைப் பார்…என்று வரவேற்றுக் காத்திருக்கும் பரிச்சயமில்லாத இன்னொரு துறைக்குச் சென்று என் சர்வீசை அங்கே முடித்துக் கொள்வதில் என்ன தவறிருக்க முடியும்? பச்சை இங்கில் கையெழுத்துப் போடுபவரெல்லாம் யோக்கியர்களா? மனுஷனின் அடிப்படை குணத்தை இந்த இங்க் மாற்றிவிடுமா என்ன? அந்த இங்கிற்கான கௌரவம் அவரவர்  கையில்…செயலில். பச்சை மையில் கையெழுத்துப் போட்டே தீருவது…அதற்கான இந்த வாய்ப்பை எவ்வகையிலும் நழுவவிடுவதில்லை…எதற்காகவும் இழக்கத் தயாராக இல்லை..என் மனம் உறுதி செய்து கொண்டது. என் மூலமாக அந்தப் பச்சை மை கையெழுத்திற்கு ஒரு தனிப்பட்ட கௌரவத்தை அளிப்பது என்று உறுதி செய்து கொண்டேன். என்னைப் போலவேயான சிந்தனையிலும், செயல்பாட்டிலும் இன்னும் பலரும் இருந்திருக்கலாம் தானே?  நான் மட்டும் என்ன கொம்பா? ஆனாலும் அதில் அப்படி ஒரு மோகம்…!

            வேணாம் சார்…போகாதீங்க…கடைசி ஒரு வருஷத்துக்கு எதுக்கு முகம் தெரியாதவங்க நடுவுல போய் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறீங்க…? பேசாம இங்கயே இருந்து நிம்மதியா ரிடையர்ட் ஆகுங்க…அதான் நல்லது…அது பெரிய கடல் சார்…அங்கெல்லாம் உங்களால சமாளிக்க முடியாது. அகடித கடனா சாமர்த்தியம் வேணும் அதுக்கெல்லாம்….துட்டு இஷ்டத்துக்குப் புழங்குற இடம் சார்…சபலமில்லாத, திரும்பிக் கூடப் பார்க்காத நீங்கள்லாம் அதுக்கு லாயக்கில்ல…உங்களுக்குப் பொருந்தவே பொருந்தாதாக்கும்…-பெண் பணியாளர்கள் ரொம்பவும்தான் வருத்தப்பட்டார்கள்.

            ஏய்…சார் போயிருவார் போலிருக்குடி…அடுத்து எந்த கடுவம்பூனை வருதோ? எப்டிச் சமாளிக்கப் போறோமோ? நம்ம பாடு திண்டாட்டம்தான்.. - பேசிக் கொண்டார்கள்.

            சார்…நீங்கல்லாம் சுணங்கலாமா சார்…நம்ம டிபார்ட்மென்ட்ல பிரமோஷனுக்கு லேட் ஆகும் சார்…அடுத்த மார்ச்லதான் வரும். நீங்க டிசம்பரோட வெளில வந்துடறீங்க…எதிர்பார்த்து…எதிர்பார்த்து ஏமாந்து நிக்கப் போறீங்களா…? பேசாமப் போங்க சார்….அப்புறம் எதுக்காக அக்கௌன்டன்ஸி படிச்சீங்களாம்? ஒருவேளை இங்கே கிடைக்கலேன்னா அதையாவது பிடிப்போம்னுதானே…? இன்னும் கூட ஒரு வருஷம் உங்களுக்கு சர்வீஸ் இருந்திச்சுன்னா நானே உங்கள இங்கயே இருங்க சார்னுதான் சொல்லுவேன். ஒன் இயர்தானே இருக்கு…சம்பளத்துல ஒரு அப் கிடைக்கும்ல சார்…ஸ்கேல் ஆப் பே…யே மாறிடும் சார்….எப்டியும் ரெண்டாயிரத்துக்குக் குறையாது…சம்பளம் கூடிடும்…எங்கயோ போயிடுவீங்க…எதுக்காக சார் விடுறீங்க…அதுக்கேத்தாப்ல பென்ஷனும் கூடும்ல சார்…வேலை தெரியாதவங்கதான் பயப்படணும்…நீங்கள்லாம் எங்க போனாலும் சமாளிச்சிடுவீங்க…அப்புறம் ஏன் சார் தயங்குறீங்க…?

            பல்லக் கடிச்சிட்டு ஒரு வருஷம் ரயில்ல போயிட்டு வந்திட்டீங்கன்னா… ஃபினான்ஷியலா உங்களுக்குப் பெரிய லாபம்தானே சார்…வெளியூர்னு பார்க்காதீங்க….!  ஒரு ரூம்கூட எடுத்திட்டு அங்கயே தங்கிடுங்க…வெள்ளிக்கிழமை ராத்திரி வீட்டுக்கு வந்தாப் போதும்…லட்டு மாதிரிச் சான்ஸ் சார்….நம்ப சாரு ஆபீசர் ஆயிட்டாருன்னு எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கும்..வீட்டுக்கு வந்து மாமிட்ட சொல்லட்டுங்களா சார்…நாங்க வர்றோம்…மாமி சம்மதிப்பாங்க….புருஷனுக்கு பதவி உயர்வை எந்த மனைவிதான் சார் வேண்டாம்பாங்க…அது அவங்களுக்குப் பெருமையில்லையா? கண்ணை மூடிட்டுக் கிளம்புங்க சார்….

            அதையும் இதையும் இஷ்டத்துக்குச் சொல்லி ஆளைக் கிளப்பியே விட்டார்கள். இனி இங்கிருந்தா பழைய மதிப்பு இருக்காது போல்ருக்கே, பிரமோஷன வேண்டாம்னு சொன்ன லூசு…என்று திட்டுவார்களோ…என எனக்கே தோன்ற ஆரம்பித்து விட்டது.

            ஊக்கப்படுத்தியவர்களின் வார்த்தைகளே நின்றது. நானென்ன சொங்கியா? பயந்து நடுங்கறதுக்கு? ரெண்டுல ஒண்ணு பார்த்திடுவோம்…அப்டியென்ன மலைய முழுங்கற வேலை? அது நம்மள முழுங்கறதுக்குப் பதிலா…நாம அதை முழுங்கிட வேண்டிதான்…சரண்டராகி கால்ல விழ வச்சிட வேண்டிதான்…-முடிவு செய்து கொண்டுதான் வந்து அமர்ந்திருந்தேன். பச்சை மைப் பேனா என் சட்டைப் பையில்!

            கொஞ்ச நாளைக்கு ஒன்றுமே பிடிபடவில்லை என்பது என்னவோ உண்மைதான். திடீர் திடீரென்று மீட்டிங் நடந்தது. பொது மக்கள் சந்திப்பு, குறை கேட்டல், மனுப் பெறுதல்…துறை வாரியாகப் பிரித்தளித்தல்…அதில் இருபத்து நாலு மணி நேரத்தில் முடிக்க வேண்டியவை, மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டியவை…என்று ஒரே அமர்க்களமாய் இருந்தது. இங்கிட்டு அங்கிட்டு என்று அசைய முடியவில்லை என்பதுதான் உண்மை. எந்நேரமும் பரபரப்பா….இதென்னடா இது பெரிய வம்பாப் போச்சு….? தினமுமா ஆபீஸ் இப்படி மூச்சைப் பிடிக்கும்? ஒரு நாளாச்சும் ரிலாக்ஸ்டா இருந்தோம்ங்கிறது இல்லையே? தப்புப் பண்ணிட்டமோ? சிவனேன்னு நம்ப டிபார்ட்மென்ட்லயே பெஞ்சைத் தேய்ச்சிட்டு இருந்திருக்கலாமோ? இந்தப் பாடு படுத்துறாங்க…?

            சஞ்சலம் வந்து விட்டது மனதுக்கு. பச்சை மை கையெழுத்து பயப்பட வைத்தது.  அப்பொழுதுதான் முடிவு செய்தேன். இனி அஞ்சரை ஆனால் ரயிலுக்குக் கிளம்புவதில்லை என்று. ஆறு மணிக்கு டாண் என்று ஆடி அசைந்து அந்த மீட்டர் கேஜ் வண்டி வந்து நிற்கும். ரயிலுக்கு எங்காவது ஸ்டாப் உண்டா? அங்கு உண்டு. அது ஆட்சியர் தன் அதிகாரத்தில் பணியாளர்களுக்கென வாங்கிக் கொடுத்த சலுகை. இல்லையானால் டவுனுக்குள் ஸ்டேஷன் வரை போய்த் திரும்பி வர வேண்டும். சிட்டி பஸ் பிடிக்க பஸ் ஸ்டான்ட் நடக்க வேண்டும். ஆபீஸ் வந்து சேர பத்தரை ஆகி விடும். ஏன் பதினொண்ணு கூட ஆகும்தான்.  அதனால் உண்டான ஏற்பாடு அது. ரயில்வே நிர்வாகம் அதை ஏற்றுக் கொண்டு ஊருக்குள் நுழையும்முன் அந்த ஸ்டாப்பில் நின்று பணியாளர்களை இறக்கி விட்டுச் சென்றது.

            ஒருவருக்கொருவர் டாட்டா காண்பித்து விடைபெற்றுக் கொள்ளும் கண் கொள்ளாக் காட்சி மறக்க முடியாதது. டவுனுக்குள் சென்று இறங்கி அங்கேயுள்ள வங்கி, அலுவலகங்கள் என்று செல்லும் மீதிப் பணியாளர்களும் இருந்தார்களே…!  அவர்களுக்குத்தான் இந்த விடை கொடுத்தல்.

            மாலை அதுபோல் அவர்கள் முதலில் ஏறி வர, இங்கு வந்து நிற்கும் ரயிலில் நாங்கள் ஏறிக் கொள்வோம். எங்களுக்குள் புத்தகங்கள் பறிமாறிக் கொள்வதுண்டு. விஷய ஞானமுள்ள எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? ஒன்றுமே தெரியாத ஆளாய் இருந்திருக்கிறோமே என்று நான் என்னைப்பற்றி நினைத்ததுண்டு.

            இனி மாலை ரயிலுக்குக் கிளம்புவதில்லை என்று நான் முடிவெடுத்த வேளையில்தான்…பலரும் சொன்னார்கள்.

            எல்லா நாளும் இருக்கணும்ங்கிறதில்லை….கேம்ப் முடிச்சிட்டு சீஃப் சில நாளைக்கு சாயங்காலம் வருவாரு….உடனே மீட்டிங் போடுவாரு….டெண்டர் இருக்கும் சில நாளைக்கு….அது ஓப்பன் பண்ணி…கான்ட்ராக்டர்களுக்கு ஒதுக்கீடு ஆணை கொடுத்தாகணும்…அந்த மாதிரி முக்கியமான நாள்ல மட்டும் இருங்க…போதும்….எதுக்கு அநாவசியமா அலட்டிக்கிறீங்க…புதுசுதானே நீங்க…கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடும்…கடல் அலை என்னைக்கு ஓயறது…? எல்லாம் அப்டி அப்டித்தான்னு மைன்ட் பண்ணாமப் போயிட்டேயிருக்க வேண்டிதான்….பி…ரிலாக்ஸ்…நோ டென்ஷன்….நானும் அந்தக் குட்டையில் ஐக்கியமானேன். அதாவது நேரம் காலம் இல்லாமல் வேலை பார்ப்பது. கெதியாய்க் கிடப்பது.!. என் பேனாவிற்கு பங்கம் வராமல் பாதுகாப்பது. அதாவது என் கையெழுத்தை கௌரவப்படுத்துவது.!

            அவர் போட்டுட்டாருல்ல…அப்புறம் என்ன? கண்ணை மூடிட்டு அப்ரூவ் பண்ணலாம்… - அதுதான் நான்.

            சார்…உங்களுக்கு டயமாச்சு….கிளம்பலயா…? பெறவு ரயில் போயிடும்…-கருணாகரன் என்ற அந்த சீனியர் மோஸ்ட் அஸிஸ்டென்ட் என்னை உசுப்ப ஆரம்பித்தார். ஒருவேளை இதற்கு மேலும் நாம் இங்கிருப்பது இவர்களுக்கு ஏதேனும் இடைஞ்சலாய் இருக்குமோ…அதுதான் இப்படி விரட்டுகிறார்களோ என்றும் தோன்றியது எனக்கு.

            நானும் அந்தச் சூழ்நிலைக்குப் படிப்படியாகப் பழகிக் கொண்டேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன். இருக்கும் நேரத்தில் துளி நேரத்தையும் வீணாக்காமல், கருமமே கண்ணாக வேலை பார்க்க ஆரம்பித்தேன். என் வேகத்திற்கு ஆபீசில் இருப்பவர்களால் ஃபைல் போட முடியவில்லை என்றே சொல்லலாம். அரசுக்கு அனுப்ப வேண்டிய பிரேரணைகளை அத்தனை சுடிதமாகத் தயார் பண்ணினேன் நான்.

            என்னா சார்…இந்த டிபார்ட்மென்ட்லயே பழம் தின்னு கொட்டை போட்ட ஆள் மாதிரி….ஆனாலும் ஜெட் வேகம் சார் உங்க வேல…எங்களால ஈடு கொடுக்க முடில….. – என் மனம் மானசீகமாகப் பெருமைப் பட்டது.

தாமதங்கள் எதுவுமின்றி கோப்புகள் நகர்ந்து கொண்டிருந்தன. பழைய பென்டிங்கெல்லாம் கரைய ஆரம்பித்திருந்தன. எதுக்கு இப்படித் தோண்டித் தோண்டி எடுக்கிறாரு? நாமளா தூக்கி நட்டமா நிறுத்தப் போறோம் டிபார்ட்மென்ட்டை…? என்றும் முனகிக் கொண்டார்கள். மனிதர்கள் சராசரிகள்தானே என்பதையும் அவ்வப்போது நிரூபித்தார்கள்.

            இதனால்தான் அந்த மனுஷன் அந்த ஆபீசே கதின்னு கிடக்காரோ…? இங்க எட்டியே பார்க்க மாட்டேங்கிறாரே…? காலைல வந்து அட்டன்டென்சை சைன் பண்ணிட்டுப் போறதோடு சரி…டேபிள்ல ஏதாச்சும் இருந்தா கையெழுத்துப் போடுறாரு.மத்தப்படி எதிர்த்தாப்லதான் கதியாக் கிடக்காரு ?

            அங்கதான சார் இத விடப் பைசா…அடிஷனல் சார்ஜ்ல இருக்கைல அடிச்சாத்தான முடியும்…? இங்க வழக்கமா உள்ளது எப்டியும் கைக்கு வந்து சேர்ந்துரும்..அங்க கூடுதல் பொறுப்புல உள்ளது கைய விட்டுப் போயிடக் கூடாதுல்ல…? அதிலெல்லாம் சாரு ரொம்பக் கவனமா இருப்பாரு…நீங்க வேறே அவருக்கேத்தாப்லா அமைஞ்சிட்டீங்களா..எதுக்கு இந்த ஆபீசப் பத்திக் கவலப்படப்போறாரு? அதான் மூக்குல வேர்த்த மாதிரி உங்களயே பார்த்திட்டிருக்காருன்னு வேறே சொல்றீங்க….! அவருக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா…சார்…எம்டன் சார்….இதுலயே ஊறித் திளைச்சவரு சார்…எது…எது…எப்டி எப்டி…ன்னு கரைச்சுக் குடிச்சவரு சார்…..கில்லாடியாக்கும்….

            தங்கள் அலுவலகத் தலைமையைப்பற்றி அந்தப் பணியாளர்களே எவ்வளவு பெருமையாய்க் கூறுகிறார்கள்? இவர்களை அவர் கண்டு கொள்வதில்லை…அதனால் அவரை இவர்கள் கண்டு கொள்வதில்லை. அங்கங்கே கை மாற வேண்டியவைகள் முறையே கால நிர்ணயமாய் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன…பின் யார்தான் எதைப்பற்றித்தான் கவலைப்பட்டாக  வேண்டும்?பரஸ்பர மதிப்பற்றுப் போன இடம்.

            கவலையெல்லாம் வேலையை மட்டும் செய்து…வந்து போய்க் கொண்டிருப்பவனுக்குத்தான். பயப்படுபவன் பயந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். உதறிச் செல்பவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கடந்து போக வேண்டியதுதான்….அதற்கு மேல் சொல்வதற்கு அங்கு பெரிதாக ஒன்றுமில்லை.

            சார்..வேலையெல்லாம் முடிச்சிட்டீங்கல்ல…ஃப்ரீயாத்தான இருக்கீங்க…?-எதிரில் அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணனின் கேள்வியின் குரல் தணிந்து சோகமாய் வெளிவருவதை உணர்ந்தேன் நான்.

            ஏன் சார்…? என்ன பிரச்னை…? உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க…

            ஒண்ணுமில்லே…இந்தக் காம்ப்ளெக்ஸ் பூராவும் உங்களப்பத்தித்தான்   பேசிக்கிறாங்க…

            என்னன்னு சார்…? ஏதாச்சும் தப்பா…..!

            ஐயையோ…அதுக்குத்தான் நாங்க இருக்கமே…ரொம்பப் புகழ்ந்து பேசிக்கிறாங்க…அதைச் சொல்ல வந்தேன்….-லேசாய்ச் சிரித்துக் கொண்டார். அதில் கூட ஒரு சிறு வேதனை இருப்பதாய்த் தோன்றியது. …தன்னிரக்க நகைச்சுவை.

            இன்னும் என்னன்னே நீங்க சொல்லலை…புதிர் போட்டுட்டே இருக்கீங்க…? – 

என்ன இருந்தாலும் மேலதிகாரி…

.சொல்லியனுப்பினால் நானே வந்திருப்பனே சார்…நீங்க ஏன் வந்தீங்க…? கனிவோடு கேட்டேன்.

இதுவும் என் ஆபீஸ்தானே…ரெகுலர் போஸ்ட் இதுதானே…அதுதானே அடிஷனல் சார்ஜ்…அங்கல்லாம் நீங்க வர வேண்டாம்ன்னுட்டுத்தான் நானே புறப்பட்டு வந்தேன்….இப்ப என்னடான்னா நிலைமை திடீர்னு மாறிடுச்சு…! –

தன் ஆபீசர் இருக்கையில் உட்கார்ந்து என்னை அழைத்திருக்கலாம். பதிலாக எனக்கு எதிராக வந்து யதார்த்தமாய் அமர்ந்து வி்ட்டாரே!

 எதையோ சொல்லத் தயங்குகிறார் என்று புரிந்தது எனக்கு. அங்கெல்லாம் நான் வரக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? அதென்ன பாபப்பட்ட இடமா? எல்லாமும் ஆபீஸ்தானே? அங்கேயும் இதே பணியாளர்கள்தானே இருக்கிறார்கள். தலைமையாக இவர் இருக்கிறார். கூடுதல் பொறுப்பு…அவ்வளவுதானே?

ஏன் சார் நான் வந்தா என்ன? நீங்க கூப்டீங்கன்னா வந்துட்டுப் போறேன்.

வேண்டாம்ங்க….அங்க ஆளுக சரியில்லை…யாரும், எவனும் நம்பிக்கைக்குரிய ஆளுகளா தெரில….பயமா இருக்கு. எந்த நேரம் என்ன பண்ணுவாங்களோன்னு…தந்திரக்கார ஆசாமிங்க அங்க இருக்கிறவங்க…ஆனா பாருங்க…அத்தனை பேரும் சீனியர்ஸ்…அதுனாலதான் பயப்பட வேண்டியிருக்கு …!.நீங்க அங்க வந்தீங்கன்னா ஒருவேளை நீங்களும் மாறினாலும் போச்சு…! – சிரித்துக் கொண்டார்.

நீங்க எதுக்கு சார் பயப்படணும்… அவுங்களுக்கு பாஸ்… இதச் செய்…அதச் செய்ன்னா செய்துட்டுப் போறாங்க… …Do what I say..ன்னுட்டுப் போங்க…அவ்வளவுதானே…?

அப்டியெல்லாம் அவங்ககிட்ட கட்டன்ரைட்டாப் பேச முடியாதுங்க…-அது ஒரு மாதிரி ஆபீசாக்கும். ஏண்டா அடிஷனல் சார்ஜ்ன்னு நொந்து கிடக்கேன் நான். குரலில் அலுப்புத் தெரிந்தது.

எங்கள் பேச்சை எழுத்தர்கள் கவனியாததுபோல் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பார்த்தால் அவரவர் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் கவனம் முழுதும் இங்கே…!

ஆபீஸ் வேலைக்குத்தானே சார் சொல்றீங்க…சொந்த வேலைக்கா?-அப்புறம் என்ன தயக்கம்?

அதுக்கே அவுங்ககிட்டல்லாம் ஸ்டிரிக்டா பேச முடியாது சார்…இந்த பாருங்க ஆர்டர….நேத்தே சாயங்காலம் வந்திருச்சு… இங்க வந்திருக்கணுமே வரல்லையா…? …என் நேரத்தப் பாருங்க……? எல்லாம் என் தலைவிதி….!

அவரின் இயலாமையை, திறனற்ற தன்மையை நினைத்து எனக்குச் சிரிப்பும் வந்தது…அதே சமயம் பரிதாபமாயும் இருந்தது. என்னவோ ஆர்டர் என்கிறாரே…? வாங்கிப் பார்த்த எனக்கு ஆச்சரியம்…

என்ன சார் இப்டி…? திடீர்னு? என்று அதிர்ந்தேன் நான்.

திடீர் திடீர்னுதான் இங்கே எல்லாமும் நடக்குது….வேலை செய்றதை விட கோள் மூட்டி விடுறவனும், புறம் சொல்றவனும்தான் சார் இங்க கெட்டிக்காரங்க.. புரிஞ்சிக்குங்க…வேலை ரெண்டாம் பட்சம்தான்….யார் யாரு சீஃப்புக்கு நெருங்கியிருக்கான்ங்கிறதுதான் முக்கியம்…அரசியல்வாதி வந்தா நம்மள ஒதுங்குங்க…ஒதுங்குங்கன்னு விலக்குவாரு…கவனிச்சிருக்கீங்களா?

அப்ப இனிமே இங்கே நீங்க அடிஷனல் சார்ஜா…? அது ரெகுலரா….? – அதிர்ந்து போய்க் கேட்டேன்.

உங்களப்பத்தி சீஃப்கிட்டே யாரோ சொல்லியிருக்காங்க போல்ருக்கு…அப்போ இந்தாள அங்க ரெகுலராப் போட்டுட்டு இதை கூடுதல் பொறுப்பாக்கிடுங்க…ன்னுட்டாராம் பாஸ்…

ஆமா சார்…ஆர்டர் வந்திருக்கு….தபால்ல வச்சிருக்கனே…-என்றவாறே எழுந்து வந்தார் கருணாகரன் அசிஸ்டன்ட்.

முக்கியமான தபால்னா உடனே சொல்ல மாட்டீங்களா? டேபிள்ல வச்சாப் போதுமா? என்ன நீங்க? – கடிந்து கொண்டேன் அவரை.

நல்லாப் பைசாக் கிடைக்கும் என்று அங்கு கூடுதல் பொறுப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட ஆசாமி இப்பொழுது அதுவே ரெகுலர் என்றாகும்போது ஏன் சடைத்துக் கொள்கிறார்? எதற்காகப் பயப்படுகிறார்? இன்னும் உரிமையோடு அள்ளலாமே? பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்புக….என்கிற நன்னெறி தெரியவில்லையோ?

சரி..நீங்க இன்னும் தபாலே பார்க்கல போல்ருக்கு….பார்த்து வைங்க…நான் அப்புறமா வர்றேன்…இந்த ஆபீஸ் அடிஷனல் சார்ஜ் எனக்கு. சி..டி.சி. ரெடி பண்ணனும். நீங்கதான் முழுசாப் பார்த்துக்கணும். அந்த தைரியத்துலதான் நான் அங்க உட்கார்ந்திருக்கேன்…அப்புறம் பார்க்கலாம்….-சொல்லிக் கொண்டே எழுந்து கிளம்பினார் கோபால கிருஷ்ணன். வந்த விஷயம் முடிவதற்குள் மனதில் என்னவோ உறரிபரி வந்து விட்டது. ஆள் பதட்டமாகவே இருந்தார். அவருக்கு இன்னும் நான்கு மாதங்களோ ஆறு மாதங்களோதான்  இருந்தன ஓய்வு பெறுவதற்கு. வம்பு தும்பு எதுவுமில்லாமல் ஓய்வு பெற வேண்டுமே என்கிற பயம் வந்து விட்டது போலும். எல்லோருக்கும் உள்ளதுதான் அது. கடைசி  நேர டென்ஷன். எதிலும் மாட்டிக் கொள்ளாமல், எந்தக் கறையும் படாமல், கறையிருந்தாலும் வெளிப்படாமல்,  எந்த குற்றச்சாட்டு நடவடிக்கையும் இல்லாமல் வெளியேற வேண்டுமே!

எவன் பி.ஏ. சார்னு கூப்பிடுறான்…எல்லாப் பயலுகளும் கோபாலகிருஷ்ணன்…கோபாலகிருஷ்ணன்னுதான் ரகசியமாக் கூப்பிடுறாய்ஞ்ஞ… - இந்தக் குறை அவர் மனதில் ஆழமாய் வேறூன்றியிருந்தது.

ஓய்வு பெறும் நாளன்று மாலை ஐந்து மணிக்கு மேல்தான் “வயது மூப்பில் ஓய்வு பெற அனுமதியளிக்கப்படுகிறது“ என்கிற ஆணை வந்து சேரும். அதுவரை வயிற்றைக் கலக்கும். கெதம்…கெதம் என்றிருக்கும்…எவனாவது, என்னத்தையாவது மொட்டையைப் போட்டு நிறுத்தி விடுவானோ, நிறுத்தியிருப்பானோ என்கிற உதறல் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். இது தப்பு செய்தவனுக்கும் சரி, செய்யாதவனுக்கும் சரி…காரணம் மர்மமான நடவடிக்கைகள் பலவும் புழங்கும் இடம் அது.

ஓய்வு பெற அனுமதி என்று ஆணை கிடைத்து விட்டாலும் அதற்குப் பிறகும் ஏதேனும் பாதகம் நேரக் கூடுமோ என்றெல்லாம் மனம் பதைக்கும். இதற்கெல்லாவற்றிற்கும் நடுவிலேதான் “கெட் டுகெதர்” ஃபங்ஷனும் நடந்தேறும். மனது விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல், உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டே பார்ட்டியை அட்டென்ட் பண்ண வேண்டியிருக்கும். பகைத்துக் கொண்டவன், முறுக்கிக் கொண்டவன், முணுக்கென்றவன், மனதுக்குள் திட்டியவன், ஒத்துழைக்காதவன், விருப்பமில்லாமல் வந்தவன்,மரியாதையில்லாமல் முனகியவன், முதுகுக்குப்பின்னே கேலி செய்தவன் என எல்லாத் தரப்பினரும் வேறு வழியின்றி வந்து அமர்ந்து இனிப்பு, காரம், காப்பி என்று அருந்தி, புகழ்ந்து நாலு வார்த்தைகள் பொய்யாய்ப் பேசி , கைகுலுக்கி அசடு வழிந்து  மாலை போட்டு, துண்டு போர்த்தி மரியாதையோடு அனுப்பி வைத்துப் பிரிந்து செல்வார்கள்.

ஃபாக்ஸ் வந்திச்சா…ஃபாக்ஸ் வந்திச்சா…? என்பதற்குத் தகவல் சொல்ல அமர்த்திய ஆள் இன்னும் வரவில்லையே என்று துடிதுடித்துக் கொண்டிருக்கும் வேளையில்…கையில் அந்த ஜெராக்ஸ் நகலோடு ஆள் பரபரத்து வந்து கொண்டிருக்கையிலும் கூட அது ஓய்வு பெற அனுமதியளித்த ஆணைதானா இல்ல வேறேதாவதா? என்கிற சந்தேகம் உதித்து வயிற்றைக் கலக்க….சார் ஆர்டர் வந்திடுச்சு…என்று கொண்டு வந்தவன் குரலெடுத்து, சிரித்த முகத்தோடு கொடுத்த பின்னால்தான் உயிரே நிலைக்கும்.

யப்பாடா…இருங்க…முத்ல்ல பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்…என்று ஓடுவார் அந்த ஓய்வு பெறும் அலுவலர். ஓய்வு பெற்றவர்களின் நடவடிக்கைகளைக் கண்ணுற்றிருந்த எனக்கு இதையெல்லாம்  புரிய வைத்திருந்தது.

சார்….குட் மார்னிங் சார்…..மெல்ல அழைத்துக் கொண்டே அருகில் வந்து அமர்ந்தார் கருணாகரன். யாரானாலும் பக்கத்தில் வந்தால் நிற்கக் கூடாது என்று சொல்லியிருந்தேன் நான். அது பியூனானாலும், டிரைவரானாலும், நேற்றுப் பணியில் சேர்ந்த கிளார்க் ஆனாலும் அப்படித்தான் என்னைப் பொறுத்தவரை. கௌரவம், மரியாதை என்பதெல்லாம் நாம் இருப்பதைப் பொறுத்து…தானே அமையும் என்பது என் நம்பிக்கை.

சொல்லுங்க கருணா….என்றவாறே அவர் முகத்தைப் பார்த்தேன்.

கோபாலகிருஷ்ணன் நேத்து வந்தார் சார்…நீங்க போனப்புறம்….

எவ்வளவு சர்வ சாதாரணமாக தன் உயர் அதிகாரியைப் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? மூன்றாம் நபரிடம்தான் எனினும் பெயர் சொல்லலாமா? பி.ஏ.சார்…என்று சொல்ல வேண்டியதுதானே? இதைத்தான் சொல்லி நேற்று வருத்தப்பட்டாரோ?

எதுக்காக? – சற்று உன்னிப்பாய்க் கேட்டேன்.

அவருக்கு உங்களால காரியம் ஆக வேண்டியிருக்காம். அந்த ஆபீஸ்ல யாரும் செய்ய மாட்டேங்கிறாங்களாம்…!

ஏன்? அவர்தானே அவங்களுக்கு பாஸ்…அவர் சொன்னாச் செய்துதானே ஆகணும்…..?

அதெல்லாம் சின்னச் சின்னத் தனி ஆபீஸ்கள்ல நடக்கும் சார்…இந்த மாதிரிக் கடல்ல நடந்தேறுமா சார்….இது பெரிய கிடங்கு சார்….

என்ன சொல்ல வர்றீங்க…புரியல…? – உண்மையிலேயே அந்தப் பூடகம் எனக்குப் புரியவில்லைதான்….

வந்தவுடனே, சார் போயிட்டாரா…அதுக்குள்ளயுமா…டிரெயினுக்கு கரெக்டா கிளம்பிடுறாரு தவறாம….கொஞ்சம் இருக்கக் கூடாதான்னு சலிச்சிக்கிட்டார் சார்….

அப்புறம்? – மனதுக்குள் சிரித்துக் கொண்டே கேட்டேன் நான்.

அவுரு டெய்லி அப்படித்தான சார் போறாரு…அஞ்சரை ஆனா பையத் தூக்கிடுவாரு…டெண்டர் ஓப்பனிங், மீட்டிங்னு இருக்கிற அன்னைக்கு மட்டும்தான் இருப்பாருன்னேன் சார்.  அதுக்கு என்ன சொன்னார்ங்கிறீங்க…?

என்ன சொன்னாரு? – பதறாமல் கேட்டேன். முதல் முறையாக உதவியாளர் கருணாகரன் அப்பொழுதுதான் என்னிடம் மனம் விட்டுப் பேசுகிறார் என்று தோன்றியது எனக்கு.

ஏன்யா…பைசா வர்ற எடத்துல அப்டியெல்லாம் நேரத்துக்குக் கிளம்ப முடியுமா? ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் கூட இருந்திட்டுத்தான் போகணும்…ட்ரெயின் போனாப் போகுது…பஸ்ல போயிக்க வேண்டிதான்..அப்புறம் சாதாரண கிளார்க்குக்கும் இவருக்கும் என்னய்யா வித்தியாசமின்னுட்டார் சார்….

. அவுரு காசு வாங்க மாட்டாரு சார்…அதத் தெரிஞ்சிக்குங்க…ன்னேன் சட்னு…அதிர்ந்து போனாரு உடனே…!

என்னது? காசு வாங்க மாட்டாரா? காசு வாங்க மாட்டாரா? ன்னு திருப்பித் திருப்பிக் கேட்டுட்டேயிருந்தாரு சார்…அந்தச் செய்தியே அவருக்கு அதிர்ச்சியா இருந்திச்சு ….முகத்துல புது பயம் வந்த மாதிரி ஆயிட்டாரு…

வந்த புதுசுலயே அதக் காண்பிச்சிட்டாரு…கான்ட்ராக்டர் ஒருத்தரு  உள்ளே நுழையும் போது ரூபா நோட்ட இவர் சட்டைப் பையில எதிர்பாராமத் திணிச்சிட்டார் …அதுக்கே பழி சண்டைக்குப் போயிட்டாரு…வச்ச நீங்களே எடுத்திடுங்கன்னு அந்த ரூபாயக் கையாலக் கூடத் தொடலன்னு சொன்னேன் சார்…அவுரு என்ன கேட்டார் தெரியுமா சார்? அதான் சார் படு ஜோக்…?

என்ன கேட்டாரு…? முழுவதும் சொல்லுங்க…என்றேன். நான் கேட்பதை விட, இந்த மாதிரிச் செய்திகளைப் பிறரிடத்தில் வாய்விட்டுச் சொல்வதில் ஒரு தனி உற்சாகம் அவர்களுக்குள் பொங்குவதாய் உணர்ந்தேன் நான். வம்பு பேச யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் இது துட்டு பகிரும் விஷயம்…!

அப்போ அவருக்கு சேர வேண்டிய காசெல்லாம் என்னாச்சுன்னு கேட்டுட்டார் சார். கூடவே நீங்க பிரிச்சு எடுத்துக்கிட்டீங்களா?ன்னு எங்களக் கொக்கி போடுறார் சார்….கான்ட்ராக்டரே வச்சிக்கிட்டாரு…நாங்க ஒண்ணும் தொடலன்னு சொல்லிட்டோம்…அதுல நம்பிக்கையே வல்ல அந்தாளுக்கு. இப்போ எப்டி வந்து நிக்கிறாரு பார்த்தீங்களா சார்? காரியக்கார ஆளு சார்…தன் காரியக் கெட்டி…! இந்தாளுக்கு எதுவுமே செய்யக் கூடாது சார்…படு மோசமான ஆளு….அதான் சார் எல்லாரும் போட்டுப் பார்க்கிறாங்க…!

அது சரி…எதுக்கு வந்தாரு? சொல்லாமயே போயிட்டாரே…ஆளு பதட்டமாவே இருந்தாருங்கிறீங்க…? ஏன்னே புரியலையே…? – விடாமல் கேள்வி போட்டேன்.

அது வேறொண்ணுமில்ல சார்….அவருக்குப் பென்ஷன் ப்ரபோசலை அந்தாபீஸ்ல போடாம இழுக்கிறாங்க…ஏ.ஓ.கிட்ட எத்தனையோ வாட்டி சொல்லிப் பார்த்துட்டாராம்…செய்றேன்…செய்றேன்ங்கிறாரேயொழிய யாரும் செய்றாப்ல இல்ல….குறைஞ்சது மூணு மாசத்துக்கு முன்னாடியாவது பென்ஷன் ப்ரபோசல் ஏ.ஜி.க்குப் போயாகணுமில்லையா சார்….அங்க ஆளத் தவிக்க விடுறாங்க… ….இவரால ஆட்சியர்ட்டயும் போய் நிற்க முடியாது ஏன்னா இந்தாளு வண்டவாளம் பெரிசுக்கு நல்லாத் தெரியும்.  …மல முழுங்கின்னு…அதான் சமயம் வரற்போது வசம்மா…போட்டுப் பார்க்குறாங்க….

அதுக்காக…ஒருத்தர் ஓய்வு பெறுவதற்கு முன்னால ப்ரபோசல் போய்ச் சேர வேண்டாமா? அப்புறம் பென்ஷன் எப்டி வாங்குவாரு? ரெகுலர் சார்ஜ் அங்கதான ப்ரபோசல் போடணும்…கடைசி ஸ்டேஷன் அதுதானே?

அந்தாபீஸ்ல பயங்கர சில்ர சார்… கொழிக்கிற இடம்.….கேம்ப் போகுற இடமெல்லாம் வாரி வளைக்கிறாராம். லம்ப்பா அடிக்கிறாராம். ஒரு கான்ட்ராக்டர விட மாட்டார் சார்…தேடித் தேடிப் போவாரு…ஆபீஸ் ஸ்டாஃப் யாருக்கும் பங்கு கொடுக்கிறதில்லயாம். ஏ.ஓ.வே புலம்புறாரு. தனக்கானதையும்  சேர்த்து அவரே சுருட்டிர்றாருன்னு….அவுங்கவுங்களுக்குன்னு உள்ள பர்சன்டேஜ்ஜைக் கொடுத்திட்டாத்தான சார் பிரச்னையில்லாம இருக்கும்…இல்லன்னா சிக்கல்தான சார்…நீங்க இந்த வளாகத்துல இருக்கிற பியூன்கள், டிரைவர்கள், கிளார்க்குகள்னு எல்லாருக்கும் சம்பள நிர்ணயம், லீவ் சாங்ஷன், அரியர் பில்னு போட்டுக் கொடுத்தீங்கல்ல…அதனால் எல்லாரும் உங்களப் பத்திப்  பேச ஆரம்பிச்சிட்டாங்க…அது காதுல விழுந்து போச்சு போல்ருக்கு.…ஐயா வந்து நிக்கிறாரு….அநேகமா அதுக்காகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் சார்…

எதுக்கு? பென்ஷன் ப்ரபோசலுக்கா? என்று புரியாமல் கேட்டேன் நான். ஒரு அலுவலருக்கே இந்த நிலைமையா? அது சரி…அலுவலர் அலுவலராய் இருந்தால்தானே? – நினைத்துக் கொண்டேன்.

அது மட்டுமில்ல சார்….அவருக்கு இன்னும் பே கமிஷன் ஃபிக்கேஷனே போடலை சார்….சம்பளமே நிர்ணயிக்கலே…..அதப் போட்டுட்டுல்ல பென்ஷனுக்கு அனுப்பணும்….அது வந்தப் பிறகுதானே மத்த பெனிஃபிட்ஸ்….சிக்கல்தான் சார்….ஓய்வு பெற்று வெறுங்கையோட வீட்டுக்குப் போக வேண்டிதான்…

அய்யய்ய….அப்படீன்னா சம்பள நிர்ணயம் அப்ரூவ் ஆகி அப்புறம்தானே பென்ஷனுக்கு பிரேரணையே அனுப்ப முடியும்? இன்னும் எவ்வளவோ இருக்கே…! ஆள் வசமா மாட்டிக்கிட்டார் போலயே…!

அதான் சார்..மனுஷன் எதுவும் ஓடாம பதட்டமா உங்க கிட்ட வந்து நிக்கிறாரு…ஒண்ணு தெரியுமா சார்…முக்கியமானது சொல்றேன்…அவுரு ப்ளூ இங்க்லதான் சார் எப்பவும் கையெழுத்துப் போடுவாரு…பச்சை இங்க்கே தொட மாட்டாரு …அந்தப் பேனாவே நமக்கு ஆகாதும்பார்…பச்சை இங்கைப் பார்த்தாலே அவருக்கு அலர்ஜி சார்…

இதுக்கும் அதுக்கும் என்ன  சம்பந்தம்? எதுக்காக அப்டி?

 இனம் புரியாத பயம்தான்…வேறென்ன சார்? மனசாட்சி உறுத்துது. எல்லாரும் ப்ளூ இங்க் பேனாலதான் எழுதறோம். ஆனா ஆபீசர்ஸ் பச்சை இங்க் பேனாத்தான் யூஸ் பண்ணுவாங்க. பார்த்திருக்கோம்.இவரு அதத் தொடக்கூட மாட்டாரு சார்… கீழேயிருந்து படிப்படியா ப்ரமோஷன்ல வந்தவர் …அந்தத் தயக்கமாக் கூட இருக்கலாம்….கேட்டா வேணாம்யா…கலெக்டர் பர்ப்பிள்ல போடுறாரு…நாம சைடுல பச்சைன்னா சரிக்கு சமமாத் தெரியும்..…அது சரி வராதுன்னு சொல்லிடுவார் சார்…நீங்களும் படிப்படியா பிரமோஷன்ல வந்தவர்தான சார்? நான் பச்சைலதான் போடுவேன்னுல்ல நீங்க பிடிவாதம் பண்றீங்க….? அந்த தைரியம் அவருக்குக் கிடையாது சார்… அதுக்கு ஒரு தனி மரியாதை எப்பவும் உண்டு சார்…ரொம்பக் கவனமா இருப்பார் … இந்த வளாகத்துல இருக்கிற ஆபீஸ்கள்ல பலரும் அப்படித்தான்…எல்லாம் ப்ளூ இங்க்தான்…அவுங்கவுங்க செயலே அவுங்கவுங்க மனசு…அவ்வளவுதான்…அதுக்கு ஒரு கௌரவத்த ஏற்படுத்துறது அந்தந்த நபரோட பொறுப்பு…அப்டித்தான் சொல்லியாகணும்….மனசுதான சார் கோயில்? -நான் கருணாகரனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனசுதான் கோயிலென்றால் நூறு சதவிகிதம் இங்கே சுத்தமாகவல்லவா இருந்தாக வேண்டும்? அப்படியா இருக்கிறது? கீழிருந்து மேலே வரை மனிதர்கள் சராசரிகள்தான் என்பதையல்லவா உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்? அத்தி பூத்தாற்போல் ஓரிருவர் தங்களை நேர்கோட்டில் நிறுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதானே? பெரும்பாலோர் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று கைகோர்த்துத்தானே அலைகிறார்கள்?

தங்களுக்குப் பாஸாக இருந்த ஒரு அலுவலரைப் பற்றிப் பணியாளர்கள் என்னவெல்லாம், எப்படியெல்லாம் புகார்  சொல்ல வேண்டிய நிலை வந்து விடுகிறது? ஆற்றோடு போகும் நீர்…அய்யா குடி…அம்மா குடி….அதுதானே?

இந்த எல்லாவற்றிற்கும் எது காரணம்? நேர்மையற்ற செயல்பாடுகள். மனிதனின் ஆசை…! முரணான ஆசைகள். தெரிந்தே செய்யும் தவறுகள். அதுவே அவரவர்  துன்பத்திற்கான காரணங்கள்…!! நான் இப்படித்தான் எண்ணிக் கொண்டேன்.

றுநாள்  அலுவலகம் வந்து சேர்ந்த போது என் இருக்கைக்கு எதிரே முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார் கோபாலகிருஷ்ணன். முகம் மிகுந்த வாட்டமாயிருந்தது. இதென்ன…சோகமே உருவாய் இப்படி…?

வணக்கம்…சத்தியமூர்த்தி சார்….எனக்கு நீங்கதான் செய்யணும். என் பணி ஓய்வுப் பலன்களையெல்லாம் நீங்கதான் வாங்கித்தர ஏற்பாடு பண்ணனும். பிரபோஸல் அனுப்பணும்.  உங்களத்தான் நான் நம்பியிருக்கேன்.  உங்கள விட்டா இங்க வேறே யாரும் எனக்கு செய்து தர மாட்டாங்க…நான் பீஸ்ஃபுல்லா ரிடையர்ட் ஆவது உங்க கைலதான் இருக்கு…என்றவாறே என் இரு கரங்களையம் இறுகப் பற்றி இழுத்து முகம் புதைத்துக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். கை விரல்களில் ஈரம் படர்ந்த போது அவர் அழுகிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. அவர் உடம்பு குலுங்கியது. என் மனம் இரங்கியது. அவருக்கு உதவ வேண்டும் என்றுதான் இசைந்தது.

                                    -------------------------------

 

 

  எதிர் நீச்சல்  - நாவல்  -பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை  மதுரை புத்தகக் கண்காட்சி செப்.2024 வெளியீடு