02 ஜூன் 2024

 

”மதிப்பு”                  சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024



                                       ---------------  

துக்குக் கிடந்து இப்படித் துடிக்கிறே? என்று  கேட்டார் சுகவனம்.

இப்போதுதான் அறிவிப்பே வந்திருக்கிறது. விழா வைப்பதற்கு இன்னும் தேதி குறிக்க வேண்டும். இன்னும் சில போட்டிகளில் முடிவு அறிவித்தாக வேண்டும். எல்லாப் போட்டிகளுக்கும் முடிவு அறிவித்த பின்பே விழாவைப் பற்றி யோசிப்பார்கள். இப்பத்தானே முடிவே அறிவிச்சிருக்கோம் என்கிற அயர்ச்சி அவர்களுக்கும் நிச்சயம் இருக்கும். விழா என்பது பெரிய எடுப்பு.

இப்போதே பரிசுத் தொகை கைக்கு வந்துவிட்டதுபோல் இவள் ஏன் கிடந்து துடிக்கிறாள்? – மேகலாவைக் கூர்ந்து நோக்கினார் சுகவனம்.

அவளின் உற்சாகம் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தது இவருக்கு. இந்தப் பத்தாயிரம் ஒரு  பெரிய  தொகையா? என்று நினைத்தார். ஏதோ ஒரு லட்சம் கிடைத்ததுபோல் சந்தோஷிக்கிறாளே? இதைப் போல் எத்தனை பத்தாயிரங்களுக்குப் புத்தகங்களை வாங்கிக் குவித்திருப்பேன்? அது இவளுக்குத் தெரியுமா?

தெரிஞ்சதுனாலதானே பிரச்னையே? அது மனசுல கிடந்து அழுத்திட்டிருக்கிறதுனாலதானே இந்தப் பேச்சே வருது!-இப்படியும் நினைத்துக் கொள்ளத் தலைப்பட்டார். புத்தகமா வாங்கிக் குவிங்க…படிக்கிறீங்களோ? அடுக்கி வச்சு அழகு பார்க்கிறதுக்கா? - மனசுக்குள் கிடந்து புகைந்து கொண்டிருக்கும் ஆறா நெருப்பு.! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்….திக்கித் திணறி…! எதுடா சமயம் என்று காத்திருந்ததுபோல்…இப்போது.கணக்கில் வரவு வைக்கிறாள்.

இருந்திருந்தும் ஒரு பரிசு கிடைச்சிருக்கு….செக் கைக்குக் கிடைச்சவுடனே நேரா என்கிட்டே கொண்டு வந்து கொடுத்திடணும்…தெரிஞ்சிதா?  - புதிய அதிகாரம் இது.

அதென்ன இருந்திருந்தும்? இதற்கு முன்பு வாங்கிய நான்கைந்து பரிசுகளை வரவு வைக்கவில்லையோ? வருஷங்கள் ஆயிற்றே என்று மறந்து விட்டாளோ?

அதெல்லாம் ஆரம்பத்துல, நீங்க இவ்வளவு கணக்கில்லாமப் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கிறதுக்கு முன்னே வந்தது…அது இந்தக் கணக்கிலே வராது…!! – அவள் சொல்லாவிட்டாலும் ஓங்கிக் குரலெடுத்துச் சொல்வது போலவே இருந்தது சுகவனத்திற்கு.

காசோலையை பத்திரமா வச்சிக்காம, தொலைச்சிடுவேன் என்று நினைத்து விட்டாளோ? பொருத்தமில்லாமல் நினைப்பதில் பெண்களுக்கு நிகர் அவர்களேதான். நான் என்ன சின்னப் பையனா காத்துல பறக்க விட்டிட்டு வர்றதுக்கு? என்ன கேட்கிறாள் இவள்?

தங்கள் உத்தரவு…அடியேன் சித்தம்…..- பொறுமையோடு பதிலை இப்படித்தான் பகர்ந்தேன். அதிலிருந்த கேலியை உணர்ந்தாளோ என்னவோ? - சொன்னபோது திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.

அது சரி…செக் என் பெயருக்குத்தானே தருவாங்க…அதை உன்கிட்டே கொண்டு வந்து காண்பிக்கத்தானே முடியும்…உன் வங்கிக் கணக்குலயா போட முடியும்? திரும்ப எங்கிட்டேதானே தந்தாகணும்?  – என்னதான் சொல்கிறாள் பார்ப்போம் என்றுதான் இதைச் சொன்னார் சுகவனம்.

அது எனக்குத் தெரியாதா? நீங்க என்ன பெயர்ல செக் வாங்கியிருக்கீங்கன்னு பார்க்க வேண்டாமா? அதுக்குத்தான் சொல்றேன்…-முன் யோசனை இல்லாமல் நான் வாங்கி வருவேன் என்று என்னைப் பற்றி அவநம்பிக்கையாகவே நினைப்பதில் அவளுக்குத் தனி முனைப்பு. ஒரு குரூர சந்தோஷம்.

அது கூட எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டியா? புனை பெயர்லயா வாங்குவேன்? என்னுடைய ஒரிஜினல் நேம்லதான் செக் போடச் சொல்லுவேன். என்கிட்டயே கொடுங்கன்னு வாங்கி “பே-டூ” ங்கிற இடத்துல கே.ஆர்.சுகவனம்னு நானே எழுதிக் கொடுத்திடுவேனாக்கும்.அதெல்லாம்கவனமாயிருப்பேன்….கவலைப்படாதே…! சில பத்திரிகைகள்லேர்ந்து பணம் வருதே. வர்ற செக் பூராத்துலயும் என்னோட “யோகி“ங்கிற புனை பெயரா போட்டிருக்கு? என் சொந்தப் பெயர்தானே போட்டு வருது…பார்க்கிறேல்ல…செக் எழுதக் கையெடுக்கிறவனுக்கே எடுத்த எடுப்புல இந்த சந்தேகம் வந்திருமாக்கும். யோகின்னு எழுதினா சரியா வருமான்னு பாமரன் கூட யோசிப்பான்ல….! பிழை திருத்தி, கன கச்சிதமா எடிட் பண்ணி பிரசுரம் பண்ற  பத்திரிகைக்காரங்க…இத யோசிக்க மாட்டாங்களா? அவுங்களுக்கு நாம ஒண்ணும் சொல்லித் தர வேண்டாம். அவுங்க நமக்குச் சொல்லித் தருவாங்களாக்கும்…!

எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல விழா வச்சிடுவாங்க…அதுக்குள்ளே மறந்திடாதீங்க..எப்பயாச்சும் ஃபோன்ல கூப்டாங்கன்னா…? அதுக்குத்தான் முன்னமே உஷாராச் சொல்லி வைக்கிறேன்…கே.ஆர்.சுகவனம்ங்கிற பெயருக்குச் செக் போடுங்கன்னு கவனமாச் சொல்லிடுங்க…முடிஞ்சா ஸ்பெல்லிங் கூடச் சொல்லிடலாம். நீங்க sugavanam-னு கணக்கு வச்சிருக்கீங்க…அவுங்க sukavanam-னு செக்குல எழுதிடப் போறாங்க….ஏற்காது திரும்பி வந்திடும். போதாக் குறைக்கு பாங்குல ஃபைன் வேறே போட்டாங்கன்னா? நம்ப காரியத்துல நாமதான் கவனமாயிருக்கணும். ஊரானுக்கு என்ன வந்தது? என்ன….நான் சொல்றது புரிஞ்சிதா? -போடு போடென்று போட்டாள் மேகலா.

இப்டியே ஒவ்வொண்ணையும் பரிஞ்சு பரிஞ்சு இவ நினைச்சிட்டிருந்தான்னா…இவளுக்கு  B.P. ஏறாம என்ன செய்யும்? ஒருவகையில் எனக்கு அவள் மீது பரிதாபமாகவே இருந்தது. இப்படி ஒரு அசட்டு மனுஷனக் கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடு?-ன்னு நினைத்துக் கொண்டிருப்பாளோ? நாம படிக்கிறது, எழுதுறதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல போல்ருக்கு? அது மேல துளி மரியாதையில்லயே?

யார் சிந்தனையை யார்தான் தடுக்க முடியும்? தனக்குத்தானே உண்டாக்கிக் கொள்வதுதானே மனித மனம். அதை யாரால்தான் தடுக்க முடியும்? மனப் போராட்டம் என்பது அவரவரே ஏற்படுத்திக் கொண்டு அலைபாயும் செயல். தங்களின் ஈகோவைத் தானே பாராட்டிக் கொள்வதும், சீராட்டிக் கொள்வதுமாக.

என் மனது இப்போதே திட்டமிட ஆரம்பித்திருந்தது. அந்த விழாவில் எப்படியும் ஸ்டால்கள் போடுவார்கள். அப்போது அதுநாள்வரை வாங்காத புத்தகங்களையெல்லாம் வாங்கி விட வேண்டும்…வாங்கிவிடலாம்தான். அதை இவளுக்குத் தெரியாமல் வீடு கொண்டுவந்து  சேர்ப்பது எப்படி? இப்போதே யோசனை நீண்டது சுகவனத்திற்கு.

வீட்டுக்குத் தெரிந்து வாங்கியதைவிட,  தெரியாமல் வாங்கிச்  சேர்த்ததுதான் அதிகம். இருங்க…இருங்க…கீழேயே இருங்க…நான் வர்றேன்…என்று.போனில் சொல்லிவிட்டு, இரண்டாம் மாடியிலிருந்து தரை தளத்திற்கு ஓடுவார். அருகிலுள்ள ஒரு புத்தக விற்பனை நிறுவனம் இவருக்கு எக்காலத்திலும் பத்து சதவிகிதக் கழிவில் புத்தகங்களைத் தந்து கொண்டிருந்தது. அதன் மூலமாகத்தான விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார். சலுகைகளையும் கொஞ்சம் நீட்டிப் பார்த்தார். பலித்தது.

பக்கத்துலதானங்க இருக்கீங்க…ஒரு ஆள டூ வீலர்ல அனுப்பினீங்கன்னா, கொண்டு வந்து கொடுத்திட்டுப் போறான்…உங்களுக்கும் கூரியர் சார்ஜ் மிச்சம்தானே…? பலித்தது பஞ்சாங்கம்…!  ஆன் லைனில் தவறாமல் பணம் அனுப்பி, விடாமல் புத்தகங்கள் வாங்கும் ரெகுலர் கஸ்டமருக்கு இதுகூடச் செய்யவில்லையென்றால் எப்படி? ஓ.கே.சார்…ட்ரை பண்றேன் என்றார்கள். செய்தே விட்டார்கள். எழுபது, எண்பது. நூறு,நூற்றிருபது என்று பைசா மிச்சம்தானே? மனுஷன்…வகையா ஐடியாக் கொடுக்கிறான்யா…?

தரை தளம் போய் பையோடு வாங்கி வரும் புத்தகக் கட்டை முதுகுக்குப் பின்னால் மறைத்து விடுவிடுவென்று நுழைந்து தன் அறைக்குச் சென்றுவிடுவார் சுகவனம். அந்தச் சமயம் பார்த்து மேகலா அடுப்படியில் இருந்தால் (பெரும்பாலும் அங்கேதானே நிற்கிறாள்) பிரச்னையே இல்லை.

யாரு வந்தாங்க…? என்று கேட்டாளானால்….ஒரு நண்பர்…என்று பல சமயங்களில் பொய் சொல்லியிருக்கிறார். இல்லையெனில் ஏதாச்சும் தபால் வந்திருக்கான்னு பார்க்கப் போனேன் என்பார்.  புத்தகமா? என்றும் கேட்டு விடுவதுண்டு. சந்தேகம் இல்லாமல் இருக்குமா? புத்தகத்தோடு சேர்த்து என்னை நினைத்துப் பார்ப்பதே அவள் வேலையாயிற்றே? என் பிம்பம் அவளிடம் அப்படித்தான் பதிந்திருந்தது.

அவுங்களா அனுப்புறாங்க… நான் என்ன பண்றது? என்று சற்று குரலை உயர்த்தி விடுவார். விமர்சனம் எழுதச் சொல்றாங்க..மாட்டேன்னு சொல்ல முடியுமா? ஓசில கிடைக்கிற புத்தகத்தை வேணாம்னு சொல்லச் சொல்றியா? காசு போட்டு வாங்கினா நூத்தம்பது, இருநூறு, முன்னூறுன்னு எத்தனைக்குக் கொடுக்கிறது? வாங்கி மாளுமா இல்ல கொடுத்துதான் ஆகுமா? படிச்சிப்புட்டு அதப் பத்தி எழுதுங்கன்னு வற்புறுத்தினா  மறுக்க முடிலயே?  என் விமர்சனம் அவுங்களுக்குப் பிடிச்சிருக்கு….அதனால அவுங்க நாலு பேருக்குச் சொல்றாங்க…அவுங்களும் என் புத்தகத்துக்கும் விமர்சனம் எழுதுங்க சார்னுட்டு வலிய அனுப்புறாங்க….எனக்கு டைம் இல்லீங்க…என்னால அதெல்லாம் முடியாதுன்னு எப்படி முறிச்சு சொல்றது?  அது முடியாது. மத்தவங்க மனசு சங்கடப்படுற மாதிரிப் பேச என்னால ஆகாது, என் விமர்சனத்தையே நான் அப்படிக் கறாரா வச்சிக்கிறதில்லையே? சாஃப்ட்டாதானே  எழுதுவேன். வாழப் பழத்துல ஊசி இறக்குற மாதிரிக் கூடக் குத்த மாட்டனே? அவனவன் படிக்கிறான். ஒரு ஆர்வத்துல எழுதுறான்…சொந்த முயற்சில புத்தகம் கொண்டு வர்றான். செலவழிச்சு செய்றான். இல்லன்னா எதுவோ ஒரு பதிப்பகம் இலவசமாப்  போடுது…நமக்கென்ன வந்தது. நம்பளை மதிச்சுக் கேட்டாங்களா…ரெண்டு வார்த்தை புகழ்ந்து எழுதினமா…அதுல அவுங்களுக்கு ஒரு சந்தோஷம், திருப்தி..…நமக்கும் ஒரு வரவு….வரவுன்னா பைசா ஒண்ணும் வரப்போறதில்ல…புத்தகம் ஃப்ரீயாக் கிடைக்குதே…அதச் சொல்றேன்…அப்படிச் சேர்த்ததுதாண்டீ என் ரூம்ல இருக்கிற முக்கால் வாசிப் புத்தகம்….காசு போட்டு வாங்கினா உனக்குத் தெரியாம நடந்திடுமா? துணிந்து அடிப்பார் சுகவனம்.

 ஒரு துரும்பையாச்சும் இந்த வீட்டுக்குள்ள நீ அறியாமக் கொண்டாந்திட முடியுமா? உன்கிட்டேதானே ராஜ்ஜியமே இருக்கு?  -நான் சொன்ன நீண்ட யதார்த்த நடைமுறை நியாயங்களில் மயங்கிப்போய் திருப்திப்பட்டு விட்டது  அவள் வெள்ளை மனம்.

உண்மையில் பார்க்கப் போனால் பத்துக்கு மூணு நாலுதான் இலவசமாக வந்தவை. மற்றவையெல்லாம் அடியேன் காசு போட்டு வாங்கியதுதான். எனக்கே பல சமயங்களில் இம்புட்டுக் காசு செலவிக்கிறோமே…இது சரியா…? என்று வதக் வதக்கென்றுதான் இருக்கும்.  அவளிடம் ஓசி…ஓசியென்று ஓங்கி ஓங்கிச் சொல்லி நம்ப வைத்து விடுவேன். வாங்கும் வேகத்திற்குப் படிக்கிறேனா என்றால் இல்லை. “என்னிடம் உள்ள புத்தகங்கள்“ என்று பட்டியல் போடவா? படிக்கவல்லவா வேண்டும்? என்னிடம் இருக்கும் புத்தகங்களுக்கு விடிய விடிய…குறைந்தது தினசரி ராத்திரி ரெண்டு மணி வரை படித்தால்தான் கடைசி மூச்சுக்குள் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியும். அவ்வளவு சேர்ந்து போய் விட்டதுதான். அது சேர்ந்து விட்டது. நான் சோர்ந்து போனேனே? ஆனாலும் புதிய வரவுகளை நிறுத்த முடியவில்லை என்பதுதான் பைத்தியம் பிடித்த கதை.

ஓ…இவரா…போனவாரமே போன்ல சொல்லியிருந்தாரு…புக் அனுப்பறேன் சார்…கொஞ்சம் உங்க விமர்சனம் வேணும்னு கேட்டிருந்தாரு…ஓகேன்னேன். அனுப்பிச்சிருக்கார் போல்ருக்கு…மதிச்சுக் கேட்கிறவங்களுக்கு எப்படி மறுக்க முடியும்? .என்று சொல்லிக்கொண்டே காலிங் பெல் சத்தம் கேட்டவுடனே…நான் போறேன்…நான் போறேன்…நீ உட்கார்ந்திரு…எதுக்குப் பதட்டப்படுறே…என்று அவளை அடக்கிவிட்டு நானாகவே ஓடிப் போய் கையெழுத்திட்டு வாங்கிய கூரியர் தபால்கள்தான் அதிகம்.

என்னா சார்…புஸ்தகமா வந்திட்டிருக்கு..லைப்ரரி வச்சிருக்கீங்களா? லென்டிங் லைப்ரரியா? – என்ன மாதிரிப் புஸ்தகங்கள் சார்…? – கூரியர்காரனும், போஸ்ட்மேனும் தவறாமல் கேட்ட கேள்விகள் இவை. அவர்களிலும் நிறையப் படிப்பவர்கள் இருக்கிறார்களே? ஓரிரு முறை கொடுத்து வாங்கியும் இருக்கிறேனே? வரும் பார்சல் ஒழுங்கா டெலிவரி ஆனால் சரி…!

நாலைந்து நூல்களுக்கு விமர்சனம் எழுதத்தான் செய்தேன். இல்லையென்று சொல்லவில்லை. பிறகு ஒரு அலுப்பு வந்து விட்டது. ஓசி வேலைய எவ்வளவு நாள் தீவிரமாப் பார்க்குறது? இதுதான் எப்பவும் என் பொழப்பா?படிக்கிறதும் எழுதறதும்?  இருக்கும் நூல்களை முழுவதுமாக என்று படித்துத் தீர்ப்பது? அதில் இவ்வளவு தீவிரம் இல்லையே?

எதுக்கு இப்படி ஓசிப் புத்தகத்துக்கு அலையுறீங்க?   பிராணன விடறீங்க? இதென்ன இராமாயணமா, மகாபாரதமா? மாஞ்சு மடிஞ்சு படிக்கிறதுக்கு…? காலத்துக்கும் திரும்பத் திரும்பப் படிக்கவும், புதிசு புதிசாப் புரிஞ்சிக்கவும் உள்ள இதிகாசங்கள் அதுதான். ஒருவாட்டி படிச்சுத் தூக்கி எறியறதுதானே மத்ததெல்லாம். படிக்காட்டாலும் என்ன நஷ்டம்? இப்போ நீங்க வாங்கித் தொலைச்சிட்டமேன்னு படிக்கிறீங்களா…இல்ல விதியேன்னு, படிச்சுத் தொலைக்கணுமேன்னு படிக்கிறீங்களா?  இதுக்குப் போய் இப்டி உசிரை விடணுமா? நீங்க பண்றது ஒண்ணும் எனக்குப் பிடிக்கலே…!

விட்டுச் சொல்லிவிட்டாள் ஒரு நாள். அவள் கருத்தில் அவள் என்றும் ஸ்திரம். நான்தான் தடுமாற்றத்தில் உள்ளவன். புலிவாலைப் பிடித்தவன் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து இருக்கவும் பிடிக்காமல், விட்டு ஓடவும் ஏலாமல்…!  ஏண்டா இந்த உலகத்துல புகுந்தோம்?

இந்த புக் வந்திருக்கே…அந்த புக் வந்திருக்கே என்று தகவல்கள் எனக்கு விடாமல் வர இதென்னடா பெரிய வம்பாப் போச்சு…? என்று ஆகிவிட்டது எனக்கு. எது வந்தா எனக்கென்னய்யா? என்கிட்டே எதுக்கு சொல்லித் தொலையுறீங்க? நான் என்ன கேட்டனா? வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்க போலயே? என்று மனதுக்குள் புகைந்து தள்ளினேன். புதிய புத்தகங்களின் வரவு என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டேயிருந்தது. என்னதான் முடிவு?

ய்…! கேட்டியா சேதியை…பரிசுத் தொகையை புக்ஃபேர்ல வச்சே தந்துர்றாங்களாம்…அடுத்தவாரம் 5-ம் தேதி மாலை 3-4 ன்னு போட்டிருக்காங்க…வாட்ஸப் அனுப்பியிருக்காங்க பார்….- சொல்லிக் கொண்டே வந்த செய்தியை அவளிடம் காண்பித்தேன்.

நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஏன் மாதங்கள் என்றே சொல்லலாம். நான் அதை மறந்தே போன வேளையில்தான் அந்தச் செய்தி வந்திருந்தது. ஆம்மா…அத மறந்தே போனமே…!

அப்டியா…சுருக்க முடிச்சிட்டாங்க போல்ருக்கு….அது அவுங்க இஷ்டம்…நாம ஒண்ணும் சொல்றதுக்கில்லே….என்னிக்காம்…? -எனக்கேட்டுக்கொண்டே வந்து என் மொபைலை வாங்கிப் பார்த்தாள் மேகலா.

நல்லதாப் போச்சு….உள்ளூர்லயே காரியம் முடியப் போறது. போய் வாங்கிட்டு வந்திடுங்க…செலவு மிச்சம்..

நீயும் வர்றியா? -கேட்டேன். ஒரு வார்த்தை என்னைக் கேட்டீங்களா? என்று நாளைக்குக் கேட்டுவிடக் கூடாதே?

வேண்டாம்…எனக்குக் கூட்டத்தக் கண்டாலே அலர்ஜி. நா வரலை…இந்தப் பத்தாயிரத்த வாங்குறதுக்குப் படையோட போகணுமா? அடுத்த தெருவுல இருக்கிற உங்க அக்கா, அத்திம்பேர்னு கூப்பிட்டுடாதீங்க…சிரிக்கப் போறாங்க…ப்ராபகேன்டா பண்ணாம  நீங்க மட்டும் கமுக்கமாப் போயிட்டுவாங்க போறும்….என்றாள் மேகலா.

அவள் பதிலில் எனக்கு உடன்பாடில்லைதான். பத்தாயிரத்தைக் கவனமாகப் பிடுங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்வாளாம். ஆனால் சொல்லும்போது மட்டும் இந்தப் பிசாத்துத் துட்டை வாங்க நான் வேறே வரணுமாக்கும் என்று பிகு பண்ணுவாளாம்? எப்படியிருக்கிறது பாருங்கள்?

ன்னைப் பொறுத்தவரை எழுதுவதும், பரிசு பெறுவதும் என்றும்  மதிப்புடையதுதான். கதைகளை எழுதி முடித்து, திருத்தி வடிவமைத்து, ஒரு திருப்தி வந்த பிறகு பத்திரிகைக்கு அனுப்பி அது பிரசுரமாகும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சவால்தான். அது ஏற்கப்பட்டு பிரசுரமாகி விட்டால் அதுவே எனது முதல் வெற்றி. என் எழுத்து ஜெயிக்கிறது…!

அப்படியாகப் பத்துப் பதினைந்து கதைகள் சேர்ந்து அதைப் புத்தகம் போட வேண்டி ஒரு போட்டி அறிவித்த அமைப்பிற்கு அனுப்பி,  ஐவர் கொண்ட குழு அதனை மீண்டும் பரிசீலித்து, ஓகே… இதை ஏற்கலாம் என்று பரிந்துரைத்ததும், அது புத்தகமாக வந்ததும் எனது இரண்டாவது வெற்றி. அப்படித்தான் இப்போது பரிசு வாங்கியுள்ள எனது நூல் தேர்வு பெற்றுள்ளது.

புத்தகமான அந்த நூல், பரிசுப் போட்டி அறிவித்த வேறொரு நிறுவனத்தின் அல்லது பதிப்பகத்தின் தேர்வுக் குழுவால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, மறுபடியும் அங்கீகரிக்கப்பட்டு, பரிசுக்குரிய நூலாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுகிறதென்றால் அது எனது மூன்றாவது வெற்றி என்றே நான் கருதுகிறேன். ஒரு சிறந்த புத்தகத்திற்கான தொடர்ந்த அங்கீகாரம் என்றும் சொல்லலாம்தானே? அதன் மூலம் ஒரு எழுத்தாளன் அடையாளப்படுத்தப்படுவது நல்ல விஷயம்தானே?

பத்தாயிரம் என்பது ஒன்றும் குறைவான தொகையல்லவே? ஒரு லட்சத்தை ஒருவருக்கே கொடுப்பதற்குப் பதிலாக, பத்துப் பத்தாகப் பத்துப் பேருக்குப் பிரித்துக் கொடுக்கும்போது பரிசு கிடைத்தது என்று பத்துப் பேர் மகிழ்ச்சியடைந்து ஊக்கம் பெறுகிறார்களே? அவர்கள் இன்னும் நன்றாக எழுத வேண்டும், மேலும் பரி
சுகளைப் பெற வேண்டும், நல்ல ஆக்கங்களை எதிர்காலத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஊக்கம் பெறுவார்களே...? அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவரை மதிப்புறு நிலையில் நோக்குவார்களே? (மேகலா அப்படியில்லையே என்பது எனக்கு வருத்தம்தான்)

இதையெல்லாம் விலாவாரியாகச் சொல்லப் புகுந்தால் நிச்சயம் மேகலா ஏற்றுக் கொள்ளப் போவதில்லைதான். அவளுக்கு நான் வாங்கிக் குவித்திருக்கும் அறையடங்காத புத்தகங்கள்மேல் அப்படியொரு வெறுப்பு. வீட்டில் குறுக்கும் நெடுக்கும் போகையில் கண்ணில் படும்  அவைதான் அவள் மனதை விடாது உறுத்திக் கொண்டேயிருக்கிறது என்பதுதான் சத்தியமான நிஜம்.

வாசிப்பு ரசனை என்பது வேறு. அது எல்லோருக்குமா அமைந்து விடுகிறது. அந்த உலகில் பயணிப்பவர்கள் புதிது புதிதாக அல்லது திரும்பத் திரும்ப வெவ்வேறு நூல்களையும், ஒரே நூலையும்கூட படித்துப் படித்து உள்வாங்கிக் கொண்டு தங்களைப் பதப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கான பக்குவம் என்பதே தனி. அந்த உலகமே வேறு. அவர்கள் மிகப் பெரிய விவேகிகள்.

அந்தப் பழக்கம் அவளுக்கு  இல்லாதது என்பது ஒன்றும் பெரிய குற்றமில்லைதான் எனினும், சராசரி மக்கள்தான் இந்த உலகில் அதிகம் என்பதும் நாம் அறிந்ததே. வாழ்க்கை அனுபவங்கள் கைகூடி பக்குவப்பட்ட நபர்களாக குடும்பத்தில் ஒரு பாந்தமான அங்கமாக வளைய வருகிறார்களே அதுதான் மிக மிக  முக்கியம்.

அந்தவகையில் மேகலாவை ஒன்றும் நான் குறையுள்ளவளாக நோக்கவில்லைதான். ஆனாலும் கொஞ்சத்துக்குக் கொஞ்சமேனும் தன் கணவன் ஒரு படைப்பாளி என்கிற மதிப்பான-என்பது கூட வேண்டாம்…நல்லெண்ணம் இருந்தால் கூடப் போதும்தான். அதுகூட அவளிடம் இல்லையென்பதுதான் என் துரதிருஷ்டம். ஒருவேளை மனதின் அடியாழத்தில் இருக்குமோ என்னவோ?

ந்தா…நீ கேட்ட காசோலை. சரியா இருக்கா பார்த்துக்கோ…விழாவுக்குப் போயிட்டு வந்தாச்சு. செக்கை வாங்கிட்டு வந்தாச்சு…உங்கிட்டக் ஒப்படைச்சாச்சு…முதல்ல பிடி இதை….என்றவாறே நீட்டினேன் அவளிடம்.

ஓ.கே…ரொம்ப சந்தோஷம்…என்று சற்றே செயற்கையாகக் கூறியவாறே அதை பவ்யமாக  வாங்கிப் பார்த்தவள்  முகம் மலர உடனடியாக ஒன்றைக் கேட்டாள்.

அது சரி…“பெண்ணியம்“ -ங்கிற பத்திரிகைல உங்க கதை ஒண்ணு ஆறுதல் பரிசு வாங்கித்தே…அந்தக் கதை வந்திடுச்சா? அதுக்கான சன்மானம்  ரெண்டாயிரம் ரூபாய் எப்பக் கிடைக்கும்?

என்னோடு சேர்ந்து நீங்களும் மேகலாவையே கூர்ந்து நோக்குகிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது!!!

                                    -----------------------------------

 

சிறுகதை                            “நானுமா ஒரு காரணம்…?”  - பிரசுரம்-வாசகசாலை இணைய இதழ்


                        ப்படி ஒருவரை ஒதுக்க வேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. அப்படியெல்லாம் முரணாக நான் என்றுமே, எவரையும் நினைத்ததுமில்லை. ஆனால் இந்த முறை அந்த எண்ணம் தோன்றிவிட்டது. மனசு அந்த விஷயத்தில் தீர்மானமாய் இருந்தது.

                        எதற்கு வம்பு? இடம் மாற்றிக் கொண்டால் போயிற்று…ஊர் உலகத்தில் வேறு கடைகளே இல்லையா என்ன? ஏன் அது ஒன்றைப்பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? அங்கேயே  பழி கிடக்க வேண்டும்?

                        கையில காசு…வாயில தோசை…!  காலை வீசி நடந்தால் எத்தனையோ இடம்? – யோசிக்கவும் செய்தேன்.

                        மனிதன் ஒன்றுக்குப் பழகி விட்டான் என்று வையுங்கள். பிறகு அவனை இடம் மாற்றுவது என்பது அத்தனை சுலபமல்ல. மகா கஷ்டம்.  செக்குமாடு மாதிரி அதிலேயேதான் சுற்றிக் கொண்டிருப்பான். அதிலிருந்து அவனை வெளியேற்றுவது துர்லபம்.  கொட்டிலில் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துவிட்டால், அதுபாட்டுக்குத் தன்னிச்சையாக ஊர்க்கோடி வயற்காட்டிற்குச் சென்று  தீர மேய்ந்து விட்டு அதுவே மீளக் கொட்டிலுக்கு வந்து சேர்ந்துவிடும்தானே? ஏறக்குறைய மனிதனும் அந்தக் கதைதான். ஒரு சுற்று வட்டத்தில் அலைபவன்.

                        நானும் அப்படித்தான் பழகிப் போயிருந்தேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதில் எது பரவாயில்லை, நமக்கு ஏற்றது  என்று தேர்வு செய்து ஒவ்வொரு முறையும் அங்கேயே போய்த் தவம் கிடந்தேன். பழி கிடந்தேன். இருப்பதில் இதுதான் பரவாயில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

                        நல்லதோ கெட்டதோ…நம் தலை அவனுக்குத்தான் தெரியும். தலை கொடுத்தான் தம்பி என்று அவன் அழைக்கும்போது போய் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டால், வேலை அது பாட்டுக்கு நடக்கும். கண்களைத் திறந்தால் முடி கண்ணுக்குள் விழுந்து விடும் அபாயம் உண்டு என்று சமயங்களில் தூங்கிப் போனதும் உண்டுதான். அதென்னவோ தெரியாது, அந்த இருக்கையில் போய் அமர்ந்து விட்டால் எங்கிருந்துதான் துயிலிறைவன் வந்து அப்படி அணைத்துக் கொள்வானோ….கண்களும் சிந்தனையும் தானாகவே செருகி ஆளை இழுத்துக் கொள்ளும்.  கடுப்பில் தாடையைப் பிடித்து, மண்டையை அசைத்து அவன் நிமிர்த்தி விடுகையில் அது கூட ஒரு சுகம்தான். அந்தக் குறிப்பிட்ட நிமிடங்களில் எல்லாமும் அவன் கட்டுப்பாட்டில்தான். நல்ல கிரகம்டா சாமி…! என்று கூட அவன் நினைத்திருக்கலாம். வந்துட்டான்யா சாவுக்கிராக்கி…! என்றும் கூட.

                        முடி திருத்தல் என்பது அவனின் முழுக்கட்டுப்பாட்டில். என் தலை, என் வகிடு, என் வாரல் என்றெல்லாம் எதுவும் நான் வாய்விட்டதில்லை. கட்டளை கிடையாது. தொழில் அனுபவத்தில் ஒரு தலையைப் பார்த்ததும்தான் அவனுக்குள் ஒரு தீர்மானம் வந்து விடுகிறதே…! இதை மாதிரி எத்தனை தலைகளைப் பார்த்திருப்பான் அவன்? சக்குச் சக்கு என்று வெட்டித் தீர்த்து கால் மணி நேரத்தில் வேலையை முடித்து விடுகிறானே…? அதுக்குள்ளயுமா? முடிஞ்சிருச்சா? அடப்பாவி…இதுக்கா நூத்தி அம்பது? கொஞ்சம் பழகினா நமக்கு நாமளே செய்துக்கலாம் போல்ருக்கே? தோன்றத்தானே செய்கிறது!!

                        என் டிபார்ட்மென்ட் நண்பர் ஒருவர் அவர் பிள்ளைகளுக்கு அவரேதான் வெட்டி விடுவார். சலூனுக்கு என்று அனுப்பியதேயில்லை. தனக்குத்தானே முன்னாலும் பின்னாலும் என்று முடி வெட்டிக் கொண்டுவிடுவார்.  பின்னாடி கண்ணடியைப் பிடிறா….! என்று பையனை நிற்க வைத்து காரியத்தை முடித்து விடுவார். கூர்ந்து கவனித்தால்தான் அல்லது சந்தேகம் கொண்டு நாமே வாய்விட்டால்தான்…ஆமா…நானேதான் வெட்டிக்கிருவேன்…என்று சொல்லியிருக்கிறார். ஒன்றும் பெரிதாக அசிங்கமாய் இருக்காது.  ஒரு முறை சொன்னால் போதாதா? பிறகு நாமதான் பிரான்ட் போட்டு நிறுத்தி விடுவோமே…!  எவ்வளவு செலவு மிச்சம்? மூணு பசங்க வேறே அவருக்கு…! கேட்கணுமா? ரிடையர்ட்டமென்டுக்குப் பிறகு ஒரு தொழில் கைவசம்…!சொல்லிக் கேலி செய்வோம் அவரை….வச்சிட்டாப் போச்சு…நீங்கள்லாம் எங்கிட்டதான் வரணும்…இப்பவே சொல்லி வைக்கிறேன்….என்று பதிலுக்கு கான்ட்ராக்ட் போடுவார். அண்ணல் காந்திஜி அவரேதான் முடி வெட்டிக் கொண்டார் என்று படித்திருக்கிறோமே…! என்ன கேவலம்?

                        அடுத்து நீங்கதான்…என்று உள்ளே கல்லாவில் உட்கார்ந்திருக்கும் பொறுப்பாளர் சொல்லியும் ஆள் மாறியிருக்கிறதுதான். நேரம் ஆகிறதே…என்றும்…எப்பத்தான் கூப்பிடுவாரு…? என்றும் காத்துக் கொண்டிருந்த வேளைகளில் ஏமாற்றங்கள் மிஞ்சியிருக்கின்றனதான். ஆனாலும் வேறு இடம் சென்றதில்லை. சரி…பிறகு வர்றேன்…என்று எழுந்ததில்லை. இவன் இல்லாட்டி இன்னொருத்தன்…என்ன பெரிய்ய்ய கிராக்கி வேண்டிர்க்கு? என்று விருட்டென்று எழுந்து வெளியேறியதில்லை. மனிதன் பழக்கத்திற்கு ஆட்பட்டவன். செக்குமாட்டுப் புத்தி.

                        வாசலில் இருக்கையில் கிடக்கும் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டே, இதுதான் சாக்கென்று ஓசியில் படித்துத் தீர்ப்பதும் ஒருவகையில் இன்பம்தானே…? என்ன ஒரு சங்கடம் எனில், பழைய, நாள்பட்ட இதழ்களும், செய்திதாள்களும் அப்படி அப்படியே, போட்டது போட்டபடி கிடக்கும். சமயங்களில் அரை மணி ஒரு மணி என்று படித்துத் தீர்த்திருப்போம். பிறகுதான் தெரியும் அது முதல் நாள் பேப்பர் என்று. இந்த ஆழ்ந்த செய்தி வாசிப்பை மனதில் வைத்து உள்ளே ஆளை மாற்றி விடும் ஜாலமும் நடக்கும்தான். அதையும் கண்கள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரெண்டு பேர் அட்வான்ஸாய் எப்போதும் உள்ளே தயாராய் அமர்ந்திருப்பார்கள்.

                        ஒரு கல்யாணத்துக்குப் போறேன். கொஞ்சம் நல்லா, பார்வையா வெட்டி விடுங்க…என்று நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். வாய் விடாமல் இருந்திருந்தால் ஒரு வேளை சரியாய் அமைந்திருக்குமோ என்னவோ? என்று சரியாய் அமைந்தது? கொஞ்சம் முன்னப் பின்னேதான் இருக்கும். சரி…கெடந்துட்டுப் போகுது…என்ன ஆணழகன் கெட்டுப் போகுது? என்று கிளம்பி விடுவதுதான்.  சொன்னதுவே அவனைத் தடுமாற வைத்து விட்டதோ என்னவோ? அல்லது இத்தனை நாள் வெட்டினது திருப்தியில்லையோ என்கிற சந்தேகமும் வந்திருக்கலாம்.

                        நல்லா, நறுவிசா பண்ணிருவோம் சார்…உட்காருங்க…-

                        எத்தனை பணிவு? அதென்ன நறுவிசு?

                        முடியக் குறைச்சிறவா?  என்றான். சைடு பூரா மெஷின் போட்ருங்க…மேலே கொஞ்சமா குறைங்க…படிய வாருற மாதிரி….என்றேன்.

                        மேலேயும் குறைங்க என்றால் பிறகு எப்படிப் படியத் தலை வார முடியும்? கொஞ்சம் அப்படி இப்படி விரைத்துக் கொண்டுதான் நிற்கும். நாலு நாள் ஆகும்போது நல்லா உட்கார்ந்திரும்… - இதுதான் அவன் முடிவு. அவன் முடிவென்ன, முடி வெட்டுவோர் பலரும் சொல்லும், படியாத முடிவு.  முடி வெட்டி முடித்து, போதாக் குறைக்கு நம் கையில் சீப்பை வேறு தருவார்கள். வழக்கம்போல வாரி, அழகுபார்த்தால், அங்கங்கே அறுவடை செய்த நிலமாய்த்  தலை நீட்டும் வணங்கா முடிப் பிசிறுகளை அமுக்கி அமுக்கி விடுவார்கள். குளிச்சீங்கன்னா சரியாப் போகும் சார்….ரெண்டு நாள்ல உட்கார்ந்திரும்….இதுவே நல்லாயிருக்கு…இதுக்கு மேலே குறைக்கக் கூடாது….கிளம்புங்க….என்று விரட்டுவார்கள். தொழில் தெரிஞ்ச எனக்கே அட்வைஸா…? என்ற ஆக்ஞை. நாமும் இடத்தைக் காலி பண்ணினால் சரி என்று வெளியேறுவோம். பலருக்கு உள்ளே பரவியிருக்கும் சலூன் வாடை பிடிக்காது. முடிக் கற்றையும், வியர்வையும், மூச்சுக் காற்றும், லோஷன்களும்  சேர்ந்து….என்னவோ செய்யும்.

                        பின்னால் அடுத்த ஆள் எந்திரிச்சு தயாராய் நிற்பான். நாமும் தலையைக் குனிந்து கொண்டு கிளம்பி விடுவோம். மேற்கொண்டு அங்கிருக்கும் பெரிய கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றால் இன்னும் என்னென்ன குறைபாடு தெரியுமோ? திரும்பத் திரும்பப் பார்த்துத்தான் என்ன செய்ய? போனது போனதுதானே?

                        ஒவ்வொரு வாட்டியும் பார்த்திட்டேன். பின் தலைல இப்டித் தூக்கிட்டே நிற்குது. அந்த இடத்தப் படியுற மாதிரி வெட்ட மாட்டீங்களா…? சீப்புக்கு அடங்கவே மாட்டேங்குதே?

                        அது வேணாம் சார்…பெறவு அசிங்கமாப் போயிரும். குளிச்சி தலை சீவிட்டு அப்டியே லேசா அமுக்கி விட்ருங்க…உட்கார்ந்திக்கிரும்….இதுக்கு மேலே வெட்டக் கூடாது. வட்டச் சீப்பு வச்சிருக்கீங்களா? அத வச்சு சீவுங்க…சல்லுன்னு படிஞ்சிரும்…

                        இல்லீங்க…அந்த எடத்தை லேசா குறைங்க….துருத்திக்கிட்டு நிக்குது பாருங்க…அந்த ஸ்பாட்ல….லேசா டச்சப் பண்ணுங்க…சரியாயிடும்…இது எனக்குப் பிடிக்கல…ஒவ்வொரு வாட்டியும் இப்டித்தான் ஆகுது….அந்த எடம் மட்டும் சரியா வரல….மண்டைக்கு வெளில தலையைக் காட்டுது பாருங்க…

                        நீங்க என்ன சொல்றீங்களோ அப்டியே செய்றேன்.  உங்க திருப்திதான் என்னோட திருப்தி. அதுக்குத்தான நான் இருக்கேன். இருங்க…பாருங்க…போதுமா…போதுமா…சரியாயிடுச்சா…படியுதா? இப்போ படிஞ்சிருச்சா நல்லாப் பாருங்க…திருப்திதானா? ஓ.கே…..-சொல்லிவிட்டு அப்போதும் கையினால் அமுக்கித்தான் விட்டான். தொலையுது என்று படிந்தது போலிருந்தது அந்த இடம். திருப்தியில்லைதான். அவனுக்கும் சங்கடம். எனக்கும் சங்கடம். கல்லாவில் அமர்ந்திருக்கும் பொறுப்பாளர் கவனிக்கிறாரா என்றும் ஒரு பார்வை.

                        அமுக்கியபோது உட்கார்ந்த அது, நான் இருக்கையை விட்டு எழுந்தபோது அதுவும்  விசுக்கென்று எழுந்து நின்று கொண்டது. எதுடா சமயம் என்று காத்திருந்த அவன்…துடைப்பம் கொண்டு அந்தச் சுழல் நாற்காலியை ஒரு சுற்றுச் சுற்றிப் பெருக்கி, காலடியிலும், சுற்றிலும் என்று குவிந்திருந்த முடிக்கற்றைகளை ஒன்று சேர்த்து முரத்தில் தள்ளிப் போட்ட அந்தக் கணம், சடாரென்று ஒருவன் அதே இருக்கையில் பாய்ந்து உட்கார….அதற்கு மேலுமா அங்கு நிற்க முடியும்? இதுக்கு மேலேயும் என்னால் வெயிட் பண்ண முடியாது என்கிற அவசரம் உட்கார்ந்தவனுக்கு.

                        ஒரு கல்யாணத்துக்குப் போறேன். நல்லாப் பண்ணி விடுங்கன்னு சொன்னா….? முடி வெட்டுறாரா….களையெடுக்கிறாரா? -கல்லாவில் காசு கொடுக்கும்போது இப்படி முனகிக் கொண்டேதான் பணத்தை நீட்டினேன். பொறுப்பாளன் வாயே திறக்கவில்லை. அவனுக்கும் என் படுத்தலில் ஒப்புதல் இல்லையோ என்னவோ? இன்னும் கொஞ்சம் போச்சுன்னா….

                        ஒன்னையெல்லாம் யாருய்யா இங்க கூப்டாங்க….எங்கயாச்சும் மரத்தடிக்குப் போக வேண்டிதான…? என்று சொன்னாலும் போச்சு…! அவன் ஆளை விட்டுக் கொடுப்பார்களா?

                        ந்த ரணம் எனக்கு ஆறவேயில்லை. கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் என் தலையையேதான் பார்த்து வணக்கம் சொன்னார்கள். வரவேற்றார்கள். ஒருத்தரும் என் முகம் பார்த்துச் சிரிக்கவில்லை, பேசவில்லை. புன்னகை பூத்ததில் என் முடி வெட்டுக்கான கேலியும் கலந்திருந்ததாகத்தான் எனக்குத் தோன்றியது. மாரேஜ் ஸ்பெஷல் போல்ருக்கு…என்று எண்ணியிருப்பார்களோ? தலையைப்பற்றியே நினைப்பு மனதை விட்டு அகலவே இல்லை.

                        ஓ மண்டைக்கு இது பத்தாதா? என்று என் தலைமுடி எனக்கே வணங்காமல் தன் போக்கில் விரைத்துக் கொண்டு நின்றிருந்தது. இந்தக் காலத்தில் இளைஞர்கள் எப்படி எப்படியோ முடி வெட்டிக் கொள்கிறார்கள். முடி திருத்தகம் என்பதற்கே இப்போதுதான் முழு அர்த்தம் வாய்த்திருக்கிறதோ என்று தோன்றுகிறது அவைகளைப் பார்த்தால். ஒரு சின்னத் தலையில் இத்தனை விளையாட்டா? என்னென்னவோ மாதிரியெல்லாம் வளைத்து, நெளித்து, சுருட்டி, நீட்டி, முடிந்து தலையைக் கந்தர்கோலம் பண்ணிக் கொள்கிறார்களே…அவையெல்லாம் எந்த அழகில் சேர்த்தி? அவைகள் அழகுக்காகவா அல்லது ஸ்டைல் என்றும் மாடர்ன் என்றும் சொல்கிறார்களே அந்தக் கண்றாவியா? காலிப் பயல்கள் மாதிரித் திரியிறான்கள்…! அப்பன் ஆத்தா எப்படிச் சம்மதிக்கிறார்கள் இதற்கு? அல்லது தண்ணி தெளித்து விட்டு விட்டார்களா?

                        அப்படியெல்லாமா நான் அந்த ஆளைப் படுத்தினேன்? எனக்கு வழக்கம்போல எப்படி வெட்டுவாயோ அப்படியே வெட்டு என்றுதானே சொன்னேன்? பின் தலை, மேல் பகுதியில் துருத்தி நிமிர்ந்து நிற்கும் முடிக்கற்றையைப் படிய வை என்று சொன்னது ஒரு தப்பா? அங்கே மேலும் கை வைத்தால் இன்னும் அசிங்கமாகும் என்றால் அதை உறுதியாய்ச் சொல்லி போதும் சார்…என்று ஸ்திரமாய் நிற்க வேண்டியதுதானே? உன் தொழிலில் உனக்கே ஒரு தீர்மானம் இல்லையென்றால் எப்படி நீ அடுத்தடுத்து வரும் வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்துவாய்? ஒரு இளைஞனுக்கு இப்படிக் கோளாறு நடந்தால் சும்மா விடுவானா? தொலையுது என்று வெளியேறுவானா? கலகம் பண்ண மாட்டான்? வயசானவன் என்றால் இளக்காரமா? அப்படி என்னய்யா வயசு? நாற்பதுகளில் இருப்பவன்தானே நானும்?

                              எனக்கென்ன வந்தது? நீங்க சொல்றீங்க செய்றேன்எம்பேர்ல பெறவு குத்தம் சொல்லக் கூடாது என்று வெட்டிச் சாய்ப்பாயா? அந்த எடத்த மட்டும் மழுங்கச் செறச்சு விடு என்றால் செய்து விடுவாயா? இதுதான் உங்கள் தலைக்கு அழகுநான் சரியாத்தான் முடி வெட்டியிருக்கேன். இதுக்கு மேலே கை வச்சா கெட்டுடும்னு நின்ன எடத்துல நிற்க வேண்டாமா? தொழில் தீர்மானம் இல்லாத மடப்பய மவன்….!!! – கோபத்தில் வாய் கண்டமேனிக்கு முனகியது.

                        தோ அடுத்த கட்டிங்கிற்கு வந்து உட்கார்ந்தாயிற்று. அதே கடைக்குத்தான் வந்திருக்கிறேன். தூங்கி எந்திரிச்சா முடிதான் காடா வளர்ந்திடுதே?  வேறெங்கே போக…? தெரு நாய் சுத்திச்சுத்தி ஒரே தெருவுல விடாம அலையுமே…அந்தக் கதைதான். அதே தெரு.  அதே கடை. அதே சிந்தனை.

                        இந்த முறை யாரிடம் தலையைக் கொடுக்கப் போகிறேனோ? எவன் கையில் மாட்டப் போகிறேனோ? உள்ளே வழக்கம்போல் அஞ்சாறு நாற்காலிகளில் தொடர்ச்சியாக வேலை நடந்து கொண்டிருந்தது. தொழிலுக்கொன்றும் குறைவில்லை. அது செழிப்பாய்த்தான் நடக்குது. பூனை கண்ணை மூடிட்டா பூலோகம் இருண்டு போகுமா என்ன? இந்தப் பூனை தானாக உள்ளே நுழைந்ததுதானே?

                        சார்…நீங்க போகலாம்…. – உள்ளிருந்து  கண்ணாடிக் கதவு லேசாய்த் திறந்து குரல் வெளிப்பட்டது. நிர்வாகம் மிகக் கவனமாய் இருப்பது தெரிந்தது. வரிசை மாறினால் ஆள் மாறும். நான்தான் முன்னே வந்தேன் என்று  சண்டை உதிக்குமே…!  உட்கார்ந்து கண்காணிப்பவனுக்கு அது கூடக் கவனமில்லையென்றால் எப்படி?

காலியாய் இருந்த, காண்பித்த  இருக்கையில் போய் அமர்ந்தேன். எதிரிலிருந்த பெரிய கண்ணாடி பளீரென்று  முகத்தையும் தலையையும் வெளிச்சமாய்க் காண்பித்தது. சலூன்களுக்கென்று தனியாய்க் கண்ணாடிகள் விற்குமோ? அசடை சமர்த்தாய்க் காட்டுகிறதே?  என் முகம் கூடக் கொஞ்சம் அழகாய்த்தான் இருக்கிறது. அதனால்தான் பல இளைஞர்களும் வந்து வந்து அப்படி…இப்படி…என்று நெளிந்து வளைந்து குனிந்து அழகு பார்த்துச் செல்கிறார்களோ? எப்படிப் பார்த்தாலும் இருக்கும் அழகுதானே இருக்கும்…காண்பிக்கும்?

அடடே…மறந்துட்டனே…! அந்தாள்தானோ? நிராகரிக்க எண்ணியிருந்தேனே? இந்த முறை வேறு ஆளிடம்தான் தலையைக் கொடுக்க வேண்டும். என் மனம் உஷார் ஆனது.

துணி போர்த்த வந்த   ஆளை நிமிர்ந்து பார்த்தேன். நல்லவேளை. அந்தப் பழையவர் இல்லை. சார்…வாங்க…என்றவாறே வணக்கம் சொன்ன அவன்  விரித்த துணியிலிருந்து சலவை வாசனை என் மூக்கில் ஏறியது. நிமிண்டி விட்டுக் கொண்டேன். வரிசையாக இருந்த ஒவ்வொரு இருக்கையாய் நோக்கினேன். எல்லாவற்றிலும் வேலை நடந்து கொண்டிருந்தது. அந்தந்தத் தலையில் கவனமாய் இருக்கும் முடி திருத்தாளர்கள். கத்தரிக்கோலின் சத்தம் ஒரு மெல்லிய இசையைக் கூட்டுவது போல் உணர்ந்தேன்.

அந்தாளக் காணலியே? –  மனம் துணுக்குற்றது. நல்ல வேளை…தப்பிச்சேன்… சமாதானம் அடைந்த அதே பொழுதில் இந்தாள் எப்படியோ? என்று சற்று பயமும் தலைதூக்கியது. புதுசோ இல்ல சர்வீஸ் போட்ட ஆளோ? அரண்டவன் கண்ணுக்கு….?

என்ன சார் பார்க்குறீங்க…?  வழக்கமா வெட்டுறவரையா? சண்முகம் அண்ணாச்சியத்தான…? தெரிந்ததுபோல் கேட்கிறானே?

அவுரு பேரெல்லாம் தெரியாதுங்க எனக்கு….அவர் எங்க….லீவா….?-ஆளக் காணல…சாதாரணமாய்த்தான் கேட்டேன்.

இல்ல சார்….அவர அனுப்பியாச்சு….-மெஷினை என் பக்கவாட்டுத் தலையில் கவனமாய் ஓடவிட்டுக் கொண்டே சொன்னான் அவன்.

எனக்கு என்னவோ போலிருந்தது அந்தச் செய்தி. ஏங்க…?  உடம்பு முடியலையா? மனசுக்குள் இனம் புரியாத சங்கடம்.

அதெல்லாமில்லீங்க சார்…அதான் அனுப்பியாச்சிங்கிறேன்ல….! போன வாட்டி நீங்க வந்திட்டுப் போனீங்கல்ல….அந்நியோட அவரும் போயிட்டாரு…..!!

அடப் பாவமே…! என் நெஞ்சில் யாரோ பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டது போலிருந்தது எனக்கு. என்ன காரணம்? என்று விளக்கமாக அதற்கு மேல் கேட்க எனக்கும் வாய் வரவில்லை. அன்றுதான் கடைசிப் பரீட்சையோ? நான் அவரைப் படுத்தின பாடே இதற்குக் காரணமாயிருந்திருக்குமோ? அதைக் கவனித்துத்தான் தொழில் சுத்தம் இல்லை என்று அனுப்பி விட்டார்களோ?

நான் எனக்கு வேண்டாம் என்றுதான் ஒதுக்க நினைத்தேனேயொழிய கடைக்கே வேண்டாம் என்றா சொன்னேன். இப்படி ஏன் செய்தார்கள்? ஒருவன் பிழைப்புக் கெட்டுப் போனதே? எங்கு போனாரோ? என்ன ஆனாரோ? வேறு ஏதாச்சும் கடையில் இடம் கிடைக்குமா? இல்லை வருவாய்க்கு வழியில்லாமல் கஷ்டப்படுவாரா? – என்னென்னவோ நினைத்து மனசு மிகவும்  வேதனைப்பட்டது.

தெளிவாய் என் முகம் காட்டும் கண்ணாடியைத் தீர்க்கமாய் நோக்கியவாறிருந்தேன். வழக்கம்போல் உச்சந்தலைப் பகுதியில் படியாது துருத்திக் கொண்டிருக்கும் முடிக் கற்றைகளை மெல்ல மெல்லக் குறைத்து படிய வாரி வாரிச் சுருக்கிச் சரி பார்த்து  வடிவமைக்கும் பணியில் அவன் கவனமாயிருந்தான்.

வேலையைத் துவங்கும் முன் அவனும் எதுவும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. தலையில் தண்ணீர் அடித்து, ஆழமாய் விரல் விட்டுக் கலைத்து, சிக்கெடுத்து, சீப்பை விட்டு வகிடு ஒதுக்கி வேலையை ஆரம்பித்திருந்தான். இந்தத் தலைக்குக் கேட்குறதுக்கு என்ன இருக்கு? என்று அவன் அனுபவத்தில் தோன்றியிருக்கலாம்.

 இதே தொழில் சுத்தமும் நிதானமும் அந்தாளிடம் பார்க்கவில்லையே…! பாவம்…!! …ரொம்ப சுமார்தான். அவ்வளவு போறாது…!

இங்கிருந்தவர்களிலேயே சற்று வயசான ஆள் அவர்தான். மற்றெல்லோரும் இளைஞர்கள்…அவரை விடச் சிறியவர்கள்…! இந்த இடத்திற்குப் பொருத்தமில்லாமல்  அவரைச் சேர்ப்பானேன்? பின்  விலக்குவானேன்? அதுவும் ஒரு கருணையினால்தானோ? இருக்கலாம்.  ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உள்ள இவர்களின் கிளைகள் ஏதாவதொன்றிற்கு அனுப்பியிருக்கலாம். அதுகூடப் பரவாயில்லை. இங்கேயே கொஞ்சம் வயசானவர்களை அவரிடம் தள்ளலாமே? கூட்டத்தைச் சமாளிக்கலாமே? அதற்கும் அவருக்குப் போதாது என்று நினைத்து விட்டார்களோ?  ஆள்கள் வந்தமணியமாய்த்தானே இருக்கிறது? ஊர் உலகில் இருப்பவர்களெல்லாம் ஒரே சமயத்தில் முடி வெட்டக் கிளம்பி விட்டார்களோ என்பதைப் போல…! நகர்ப் புறங்களில் எத்தனை கடைகள் வந்தாலும் கூட்டமாய்த்தானே கிடக்கிறது? நாள், கிழமை எதுவுமே சேர்த்தியில்லைதான்.மக்கள் எல்லா நாளும்தான் முடிவெட்டிக் கொள்கிறார்கள். ஞாயிறு கூட்டம் எகிறுகிறது. அந்த நாளைத் தான் தேர்ந்தெடுத்ததுதான் தவறோ? அதுவே அவருக்கு வினையாக அமைந்து விட்டதோ?

சண்முகம் அண்ணாச்சி…! அந்தப் பெயர் பிடித்திருந்தது எனக்கு. எவ்வளவு ஒட்டுதலான அழைப்பு? ஆனால் கவைக்கு உதவவில்லை. அதுதான் கள யதார்த்தம்.  அண்ணாச்சி என்று விளிக்கும் அளவுக்கு அவர்களுக்கு மன நெருக்கமாய் இருந்திருக்கிறாரே! எப்படி உதறினார்கள்?  அந்தக் கணத்தில் அந்த நாமகரணம் என்னுள் நின்று நிலைத்துப் போனது.

நானுமா இதற்குக் காரணம்? என்ற உறுத்தலான கேள்வி மட்டும்  விடாது  தொக்கி நின்று கூடவே வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.                                                  

                                                  -------------------------------

 

 

                       

                                                                                                                                    

 படுகளம்...ஜெ...நாவல்

........................................வாசிப்பு


பேனர் வைத்தவுடன் வியாபாரம் படுத்துப் போகிறது.....
எழுத்தின் வேகத்தில் நிகழ்ந்த அவசரமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் அடுத்தடுத்த வியாபார வெற்றியை நாட்கணக்கில் சொல்ல முடியாதே...அப்படியானால் லாபப் பணத்தை சேர்த்து வட்டி கட்டியதாகச் சொல்ல வேண்டி வரும். ஒரு தவணை வட்டி கட்டும் முன் நிகழ்ந்து விடும் அவலம். ஒருவனின் திடீர் வெற்றி போட்டியாளர்களை உறுத்தும். தாங்கள் மட்டுமே நிலைக்க வேண்டும் எனும் அதிகார போதை. யார் மூலம் எது தூண்டப்பட்டு என்ன வழி நாச வேலை செய்யும் என்பது உயர் மட்ட மர்மம். வெவ்வேறு தொழில் செய்து உச்சமடைந்தவர்கள் அவரவருக்குப் பாதிக்காதபடி கூட்டுச் சதி செய்வார்கள். அந்த மாயவலை எளிய மனிதனால் கற்பனைக்குள் அடங்காது. எண்ணிப் பார்க்கும் முன் நிகழ்ந்து விடும் அபாயம் அது..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தோன்றும்.எனக்கு எங்களூர் ரஹீம் பாய் தையல்காரர் நினைவுக்கு வந்தார். இலவசமாக டியூஷன் நடத்திய கிருஷ்ணசாமி...மனிதர்களின் நாணயத்தில் நம்பிக்கை வைத்து மேலும் மேலும் கடன்தந்த பலசரக்குக் கடை நாராயணன்...அரிசிக்கடை செட்டியார்...மதிப்பு அகற்றி ஒரு வார்த்தை தாழ்ந்து பேசாது கொடுத்தபோது வாடகை வாங்கிக் கொண்ட ஜோஸ்யர் ராமண்ணா...ஒரு உண்மை ஊழியனை அடிமைபோல் எண்ணி...வயதும் பொருட்படுத்தாமல் நாலணா பேட்டாவுக்காக எதிரில் நிற்க வைத்த ஓட்டல் முதலாளி கணபதி அய்யர்...கூட்டுத் தொழிலில் நம்பிக்கை துரோகம் செய்த திக்குவாய் சங்கரய்யர்...சகோதரர்களின் ஓட்டலில் சகோதரனுக்குத் தெரியாமல் பணம் திருடிய சகோதரர்கள்...என்று என் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. வெவ்வேறு காலகட்டத்து மனிதர்களில் பலர் தெய்வத்திற்கீடாக இருந்துள்ளனர். மனிதன் அவர்களை அடைய...நெருங்க...ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது.அதுதான் நேரம்....
செந்தில்ராஜ் தன் வியாபாரத்தைப் பெருக்குவதை இன்னும் கொஞ்சம் விரிவாய்ச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. சொந்தமாய் சொந்தக்காசில்கூட எவனும் வியாபாரம் துவக்கி நடத்த முடியாதோ? அந்த மாய வட்டி வலையில் விழுந்துதான் அதிர்ஷடமிருந்தால் மீள வேண்டுமோ? என்று பயமுறுத்துகிறது. வெறும் நுகர்வோராக இருப்பதே நிம்மதி....ஒரு விளம்பர பேனருக்குள் எவ்வளவு சதி வேலைகள்? எத்தனை அரசியல்? இன்றைய சூழலே...இதுதான்....அதைத்தானே சொல்கிறார். இப்படியான விஷயத்தை எழுதவும் ஒரு தைரியம் வேண்டும்தான். காலம் அப்படி...!
வக்கீல் கிருஷ்ண கோபாலுக்கு வேலையே இல்லை.கூட அலைவதோடு சரி...நாமும் அலைகிறோம்.என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று. போர்டு வைத்து மறைத்து வியாபாரத்தைக் கெடுத்ததில் பகுதி வியாபாரிகளுக்கும் பங்கு உண்டா இல்லையா? அல்லது ஒன் டு ஒன் போட்டி மட்டும்தானா? எது பலவீனமான பகுதி என்று கண்டுபிடித்து அடிப்பதுதான் கதை. அதற்குத் துணிய...உதிரும் கொலைகள்...இரு பக்கப் பழிவாங்கல்கள். இவர்களால் வளர்த்துவிடப்படும் ரௌடிக் கும்பல். அஞ்சாமல் காசை அள்ளி வீசி கிரிமினல்களை அடிமையாக்குதல்.ஆட்டிப் படைத்தல்...அவர்களே எதிராகப் பாய்வர் எனும் விழிப்புணர்வு. ஒட்டு மொத்த சமுதாயச் சீர்கேடு.மக்களின் அமைதியான வாழ்க்கையைக் கெடுக்கும் படு பாதகச் செயல்பாடுகள். எல்லாவற்றிற்கும் ஆதாரம் பணம். அது வந்து சேரும் அடாவடியான வழிமுறை.. எதை வெற்றி வெற்றி என்று ரசாயனக் கொதிப்பில் களிக்கிறார்களோ அதுவேதான் தன் தோல்வி என்ற அறியாத் தன்மை. சராசரி மனிதனின் வாழ்வில் கிடைக்கும் நிம்மதியும்.. சந்தோஷமும்...அற்ற இந்த வாழ்வு ஒரு சூன்யம்...படுகளம் இப்படிப் பலதையும் உணர்த்துக
படுகளம் நாவல் ஒரு புதிய வாசிப்பனுபவம். முற்றிலும் புதிய களத்தில் அநாயாசமாய் விளையாடியிருக்கிறார் ஜெ.. மனசு பதறிப் பதறியே தொடர்ந்து படிக்க வேண்டியிருந்தது. போதும்...என்றும் வழியில் விட முடியவில்லை. கடைசியில் நாயகன் எப்படி ஜெயிக்கிறான்..எதில் போய் இது முடியும் என்ற ஆவலே உந்தித் தள்ளியது.
எங்கள் மதுரையைத்தான் வெட்டுக்குத்துக்கு அஞ்சாத ஊர் என்பதாக ஒரு பொது அபிப்பிராயம் உண்டு. அது பொய். நெல்லைதான் இதில் முதல்...என்பதாக உணர வேண்டியிருக்கிறது. செய்திகளும் அதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும் நெல்லையின் பழமையில் ஒரு பிடிப்பினைத் தவிர்க்க முடிவதில்லை. எல்லாத் தொழிலிலும் போட்டிகள் உண்டுதான். ஆனால் அது வெட்டுப்பழி...குத்துப்பழி...என்று விரிவதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. என்ன அறியாமை இது என்றும்...என்ன அவலம் என்றும் தோன்றி .சராசரி..மக்களின் அன்றாட நிம்மதி வாழ்க்கையைக் குலைக்கும் இந்த நாசகாரச் செயல்களுக்கு என்றுதான் முடிவு...அரசாங்கம் இதையெல்லாம் என்றுமே சரி செய்ய முடியாதா...? சம்பிரதாயமாய்த்தான் இயங்க முடியுமா? என்று பலவாறு எண்ணி வேதனை கொள்ள வைக்கிறது.
நாவல் உருவேற்றிய பொதுக் கருத்து இது. எழுத்தில் புதுமை சேர்க்கும் வெறும் பயணமாகக் கருதி இதைக் கடக்க முடியவில்லை. யாரோ கொஞ்சப்பேர் அடித்துக் கொள்கிறார்கள் என்றால் அது ஏன் பொதுவெளிக்குத் தொந்தரவு செய்ய வேண்டும்? அப்போது எளிய மக்களின் அன்றாட வாழ்வு அச்சத்திற்குள்ளாகிறதுதானே? அதை எப்படி அனுமதிப்பது? அதை எப்படி ஒரு க்ரூப்பின் சண்டை என்று வெறும் செய்தியாகப் பார்ப்பது? சமுதாய அமைதி என்பது அரசாங்கத்தின் கவனத்தில்..கட்டுப்பாட்டில் இருப்பதுதானே? அதை நாசகாரச் சக்திகள் விட்டேற்றியாகக் குலைத்தெறிய முடியுமா? இதற்கெல்லாம் என்னதான் முடிவு? என்றுதான் முடிவு?
படிக்கும்போது இப்படியாக எனக்குத் தோன்றிய பல எண்ணங்களின் தொகுப்பு இவை.
உஷாதீபன்
May be a doodle of text that says 'படுகளம் ஜெயமோகன்'
All reactions:
Manthiramoorthi Alagu, Nagarajan Kb and 33 others

  எதிர் நீச்சல்  - நாவல்  -பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை  மதுரை புத்தகக் கண்காட்சி செப்.2024 வெளியீடு