06 ஏப்ரல் 2024

 

                             

தாய் வீடு - இணைய இதழ் - ஏப்ரல் 2024 பிரசுரம் 

காவலன் காவான் எனின்.....?                                                       

------------------------------------------------------




        ரசர் அப்படித் தன்னைக் காவலுக்கு அனுப்புவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை சம்புகன். மனம் அதிர்ச்சியடைந்தது. அதே சமயம் குதூகலமுமடைந்தது.. அரச கட்டளையின் அடையாளமாய் உடம்பில் அப்போதே  அசுர பலம் கூடிவிட்டதாய் உணர்ந்தான். தன்னையும் தகுதிப்படுத்தி விட்டார் அரசர். தன் மீதும் நம்பிக்கை கொண்டு பொறுப்பை அளித்திருக்கிறார். ஆஉறா.எனக்குமா இந்த ஏற்றம்? மெய் சிலிர்த்தது.

       கண்களை  அழுத்தமாய் ஓடவிட்டான் சம்புகன். அவனுக்கான கௌரவத்தை எண்ணி சுற்றிலுமிருந்த செடிகொடிகளும், காலங் காலமாய் நின்று நிழல் பொழியும் மரங்களும் தங்களைச் சிலிர்த்துக் கொண்டு தயாராகி, அவனுக்குத் தங்களின் ஒப்புதலையும், மகிழ்ச்சியையும்  தெரிவித்தன.

       என்னடாது...! தரையில் உட்கார்ந்தாலே ஐந்தடி உயரம் இருக்கிறோமே...! இந்த எழுச்சி எப்படி நிகழ்ந்தது? பாதம் முதல் கழுத்து வரை இந்தப் புஜ பல பராக்கிரமம் வியப்பாயிருக்கிறதே? ஒரு போர் வீரனுக்கான அடையாளங்கள்? வீரம் விளைந்த லட்சணங்கள். ஊர்க்காவல் உத்தரவு... எப்படி சாத்தியமானது? எந்த சக்தி எனை ஆட்கொண்டது? எந்த முன்செய் நல்வினை எனைப் பரிந்துரைத்தது? இந்தத் தாய்த்திரு நாட்டுக்கென்று பிறந்தவனா நான்? என் கடமையுணர்வும், கட்டுப்பாடும், வீரம் செறிந்த பராக்கிரமும் இந்த தேசத்திற்கே அர்ப்பணிப்பிற்கானதா? மாறுவேடத்தில் அலையும் ஊர்க்காவல் பணி என்னிடம் நம்பிக்கையாக அளிக்கப்பட்டிருக்கிறதா? ஆஉறாஎன்ன தவம் செய்தேன்? என் பாதம் பணிந்த சம்ஸ்காரங்களை பாதாதிகேச பரியந்தம் வழியவிட்டு இதோ புறப்பட்டு விட்டேன்!

       கட்டுக் குடுமியை சிலிர்ப்பி அவிழ்த்து விட்டு எழுந்து நின்றான் சம்புகன்.. வானம் தொட்டது போலிருந்தது. இந்த தேஜஸை வழங்கிய மாய சக்திக்கு என் பாதம் பணிந்த நமஸ்காரங்கள். புட்டம் வரை சாரைப் பாம்பாய் அவிழ்ந்து தொங்கும் அடர்த்தியான கட்டாத  குடுமியை அள்ளியெடுத்து  முடிந்து தலைப்பாகையை இறுக்கினான். ஈஸ்வரோ ரக்க்ஷது....

       திப்பு மிகு பைரவரே...நீ்ர் எமக்குத் துணையா அல்லது நான் உமக்கா? அருகில் பணிவோடு தயார் நிலையில் நின்றிருந்த புலிக்கு நிகரான தன் தோழனை இடக் கையில் அணைத்து கேள்விக்கான பதிலை எதிர்நோக்கி  அதனை முத்தமிட்டான் சம்புகன். அந்த அரவணைப்பில் குளிர்ந்து மெய் சிலிர்த்த பைவரத் தண்டகன் அடக்கத்தோடு பதிலுரைத்தான்.

       அரசர் ஆணை..மறுக்க முடியாது.  அதனால் வந்திருக்கிறேன். உங்கள் ஆணைப்படியே என் இயக்கம். நான் நன்றியுள்ளவன்…தங்கள் சித்தம் என்னவோ அதன்படியே என் பயணம்….அது என் பாக்கியம்.

       நல்லது. நாம் இப்போது எதன் பொருட்டு இரவு நேரத்தில் இந்த நகர்வலத்தை மேற்கொண்டிருக்கிறோம்...அறிவீர்களா?

       அறிவேன் ஐயா....எளிய மக்கள் மிகுந்த உடல் போதைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அதனால் குடும்பங்கள் சீரழிகின்றன. உழைக்கும் வர்க்கத்தினரின் ஊதியம் ஒழுங்காக வீடு போய்ச் சேருவதில்லை.பலரும் வேலைக்குப் போகத் திறனின்றி உடல் நலிந்து முடங்கிக் கிடக்கிறார்கள். புத்தியைப் பலி கொடுத்து இப்படிப் பூஞ்சையாகிப் போனோமே என்று மனதுக்குள் நொந்து போயிருக்கிறார்கள். வந்த வருமானத்தில் வலிய உடம்பைக் கெடுத்துக் கொண்டு மேற்கொண்டு உழைக்கும் திறனின்றி இப்படி ஆடிப்போனோமேகுடும்பம் பராரியாய் கெதியின்றி நிற்கின்றதே என்று புழுங்கிக் கிடக்கிறார்கள். மருத்துவச் செலவுக்கான வசதி வாய்ப்பின்றி மண்ணுக்குள் போகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.   மந்திரிப் பிரதானிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அரசர்  எடுத்த முடிவாக ஒழுக்கக் கேடுகளை அழித்து ஒழிப்பதற்காக நாம் புறப்பட்டிருக்கிறோம்.

       ஆம்...மிகச் சரி. பகலில் உழைக்கச் செல்பவர்கள் இரவானதும் அவரவர் வீடு திரும்பி உறங்கி ஓய்வெடுக்காமல், பல இடங்களில் போதைக்கு அடிமையாகி  மயங்கி மண்ணடித்துப் போகிறார்கள். உழைக்கச் செல்பவர்களின் எண்ணிக்கையும் பெருவாரியாகக் குறைந்திருப்பதாக அறியப்படுகிறது. கேளிக்கை விடுதிகள் அதிகமாகி விட்டன. நகருக்கு உள்ளேயும், வெளியேயும் கால் பதிக்கும் இடமெல்லாம் போதை மண்டலங்கள். எங்கிருந்து தப்பிப்பது? எதிலிருந்து விலகுவது?  குதூகலமும், கும்மாளமும் கொக்கரிக்கின்றன. இன்று இந்த வேதபுரி நகரின் பகுதிக்கு மட்டுமே நாம் காவலை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும். குடும்பத்திற்குப் பயனுள்ளதாக வாழாதவர்களை இருந்தென்ன போயென்ன என்று சுற்றி வளைக்க வேண்டும். சொல்லிப் பார்த்து, எச்சரித்து எந்தப் பயனும் விழையவில்லை. என்ன கேடு வரினும் குடும்ப அமைப்புகள் சிதறி விடக் கூடாது என்பது நம் தாத்பர்யம். வீடு சிதறினால் நாடு சிதறும். வீட்டுக்குள் நாலு பேருக்குள் ஒற்றுமையும் அன்பும், அரவணைப்பும் இல்லையெனில் அந்தக் குடும்பம் தேறவே தேறாது. அங்கு மங்கல காரியங்கள் எழுச்சி பெறவே பெறாது. வாரிசு உற்பத்தி அறவே நின்று போகும் அபாயம். தேச முன்னேற்றத்திற்கான எதிர்காலத் தலைமுறை எண்ணிக்கையற்று நசிந்து போகும் மிகு அபாயம். இந்த மக்கள்தான் நம் தேசம். அவர்களின் நல்வாழ்வுதான் நம் சந்தோஷம்.   வேதபுரி சேதபுரியாகிவிடாமல் காப்பாற்ற வேண்டியது நம் தலையாய கடமை.

       நமக்கு அரசர் தந்த முதன்மைப்   பணி. செவ்வனே நிறைவேற்றுவது நம் கடமை. முக்கியமான ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் இங்கே. சொல்லலாமா?

       தாராளமாக...உடன் நின்று நிறைவேற்றுவது என் சித்தம். உங்கள் சொல் செயலாக என் உயிரையும் கொடுப்பேன். என் உதிரம் இந்த நாட்டுக்கானது.

       இந்தக் காவல் கண்காணிப்பை அமைதியாக, தடமின்றிப் பயன்படுத்த வேண்டும். நான் சொல்வதை உணர முடிகிறதா?

       சற்று விளக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாகும்...!-எளிமையாக ஒன்றை அறிந்து கொள்வதே இறைவன் எனக்கு அளித்த வரம். -பைரவர் கூர்ந்து கவனித்தது.

       அதாவது எந்தவொரு தடயமும் எந்த இடத்திலும்  நம்மிடமிருந்து வெளிப்பட்டு விடக் கூடாது. குறிப்பாக- ஆங்காங்கே  நடக்கும் தவறுகளைக் காணும்போது சட்டென்று நீர் குரல் கொடுத்து உலகறியச் செய்து விடக் கூடாது. என்னைப் பார்த்து, அமைதியாகச் சைகை செய்து, அருகே வந்து   என் கைகளைப் பற்றி இழுத்துப் பதுங்கி அழைத்து, மறைந்து, குறிப்பிட்ட இலக்கினை ரகசியமாய்ச்  சுட்ட வேண்டும்.....உமது இயல்பான பிறவிக் குணம் உம்மையறியாமல் உம்மையும் மீறி வெளிப்படாமல் நீர் உம்மை அடக்கி இருத்திக் கொள்ளுதல்  மிக மிக அவசியம். கருமமே கண்ணாகக் கடமையை ஆற்ற ஆயத்தமாக, சித்தம் தெளியத் துடிப்பாய் நிற்றல் வேண்டும். எம்மின் கருத்தும் கவனமும் இந்த தேசத்திற்கானது. அதன் சீரிய பாதுகாப்பிற்கானது என்பதை நீவிர் தெளிய அறிவீர்தானே?

       ஆகட்டும் ஐயா.....தங்கள் சித்தம் என் பாக்கியம்...! கை கோர்த்து தீமையை ஒழிக்க முன்னிற்பதே கருத்தான பணி. கடமையைச் செவ்வனே நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு நல்குவேன்.

       நல்லது.... பிரிந்து செல்லுங்கள். முதலில் நாம் அரண்மனைக்கு விலகிய தூரத்திலான   இந்த  வேதபுரியின் ஒதுங்கிய  பகுதியில் நமது சோதனையைத் துவக்குவோம். படிப்படியாக நகருக்குள் முன்னேறுவோம். அப்படியானால்தான் யாருக்கும் சந்தேகங்கள் வர வாய்ப்பில்லை. ஊர்சுற்றிப் பிரதானிகள் என்று கருதி விலகிவிடும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.  இரகசியங்கள் அடங்கிய பகுதி என்று நாம் கணிக்கும் பகுதியில் நமது நகர்தல் வெகு ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.  எங்கு சென்றாலும் நீர் எம் பார்வையிலிருந்து விலகி விடக் கூடாது. அதை மனதில் கொள்ளுங்கள்....நீர் எங்கிருக்கிறீர் என்று எனக்கும் நான் எங்கு பதுங்கியிருக்கிறேன் என்று உமக்கும் புரிந்திருத்தல் மிக மிக அவசியம். நல்லது நாம் விலகலாம்.

                                        ( 2 )

        ம்புகன் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, பாதங்களைப் பதவாகமாக வைத்து சத்தமின்றி மறைவாக முன்னேறினான். ஓரிடத்தில் சற்றுத் துல்லியமான ஒலியில் நிலை பெற்றான். கண்ணுக்கெட்டிய தூரத்தில் பைரவரின் பார்வை எதிலோ நிலைகொண்டிருந்தது. மனிதனைவிடத் துல்லியமான அவதானிப்பு. ஆனால் மனிதன் உதவியோடுதான் எதையும் நிறைவேற்றியாக வேண்டும். அடையாளம் மட்டுமே காட்ட இயலும். ஆனாலும் அந்த அடையாளம், குறிவைத்த கணிப்பு என்றுமே தோற்றதில்லை. பைரவரின் ஒத்துழைப்பு நாட்டுக்கே இன்றியமையாதது. நினைத்துக்கொண்டான் சம்புகன்.

       பிட்சாடனைத் துணைக்கு அழைத்துச் செல் என்று உத்தரவிட்ட போது உடனடியாகத் தான் மறுத்திருந்ததும், அவனும் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியதும் எத்தனை நல்லதாய்ப் போயிற்று? அவனுக்கும் தனக்கும் ஒத்துவராது. எதிரணியிலிருந்து வந்தவன் அவன். அவனின் உண்மைத் தன்மை சந்தேகத்திற்குரியது. செல்லும் இடங்களில் குற்றங்களை வேரறுத்தல் தன் கடன். அவனோ அதில் தனக்கான பங்கு எந்த அளவுக்கு விஞ்சி நிற்கும் என்பதிலேயே குறியாய் இருப்பவன். தன்னையும் அந்தப் புதைகுழிக்குள் தள்ள யத்தனிப்பான். தான் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் வேறு. அவனின் வளர்ப்பு அப்படியல்ல். சந்தேகத்திற்குரியது. அவன் வராமல் போனதே நல்லதாய்ப் போயிற்று. பிடித்தும் பிடிக்காமலும் தன்னோடு புறப்பட்டுப் பயணித்திருந்தால் உடன் இருந்தே கழுத்தறுத்திருப்பான். அதற்கு இந்த பைரவர் எவ்வளவோ மேல். வாயில்லா நன்றியுள்ள ஜீவன். அதன் உண்மைத்தன்மை தெய்வீகம் தழுவியது. நெருப்புக்கு நிகரானது. சொல்லுக்கும் செயலுக்கும் அடிபணிந்து செவ்வனே கடமையாற்றுபவனே சிறந்த வீரனாகிறான். அவன் வைத்த குறி என்றுமே தப்பியதில்லை.

       ந்தப் பேச்சுச் சத்தம் நிதானிக்க வைத்தது. அதிகாரிகள் அதிகமாகக் குடியிருக்கும் பகுதி. திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றுவது, அதன் முன்னேற்றங்களை எவ்வாறு மேலிடத்திற்குத் தெரிவிப்பது, பணியாளர்களை எவ்வாறு சாமர்த்தியமாய் வேலை வாங்குவது, சுணக்கமின்றி எப்படிப் பயன்படுத்திக் காரியத்தை சாதித்துக் கொள்வது என்பதான பேச்சின் போக்கு காதில் விழுந்த அளவு சம்புகனுக்குப் புரிய ஆரம்பித்தது. ஒரு வீட்டுக்கானதும், ஒரு நாட்டுக்கானதும் பல விஷயங்களில் பொருந்தி வருவதாய் பல சமயங்களில் நினைத்து நினைத்து உணர்ந்திடத் தலைப்பட்டிருக்கிறான் சம்புகன். இங்கே நடக்கும் பேச்சும் அதே ரீதியில் வளைய வருவதாய் உணர நேரும் அரிய சந்தர்ப்பம்.

       கேட்கக் கேட்க ஒன்று புரிகிறது. முழுப் பேச்சையும் கேட்டால்தான் துல்லியமாய் உணர முடியும். போதையில் விழுந்து கிடக்கும் மக்களைத் தேடி வந்தால், இங்கு வேறு ஒரு வகையான போதை பரவிக்கிடக்கிறதே! அதிகார போதை....! நிர்வாகம் நிச்சலனமற்று, குறிப்பிட்ட புள்ளியை நோக்கியல்லவா நகர வேண்டும். இங்கே நீ பெரியவன், நான் பெரியவன்  என்கிற கேள்விகள் எழுமானால் அது சீர்கேட்டை அல்லவா விளைவிக்கும்?

       அதிகாரம் எளிய மக்களை நசுக்குகிறது. ஏமாற்றுகிறது. நம்பிக்கையின்மையை வலுக்கச் செய்கிறது. அறிந்தும் அறியாமலும் அவர்களை அடிமையாக்குகிறது. வார்த்தை மயக்கங்களுக்குப் படிகிறது.. மேலிடத்தோடு நெருக்கத்தை போலி என்றறியாமல் உணர்ந்து எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கடுமையாக உழைத்து தங்களை நசித்துக் கொள்கிறது உழைக்கும் வர்க்கம்.

       “இங்க பாருங்க பி.ஏ., நமக்கு யாரு வந்திருக்கா, வரலைங்கிறது முக்கியமில்லை...காரியம் ஆகுதா, இல்லையாங்கிறதைத்தான் கவனிக்கணும். செக்ரட்டரி மீட்டிங்குக்காக அன்யூவல் ஸ்டேட்மென்டை ஊர் போனதும் அனுப்பி வெச்சுடறேன்னு டைரக்டர் கிட்டச் சொல்லிட்டு வந்தேன். நேத்து சிகாமணிகிட்டச் சொல்லிப் போடச் சொன்னேன். அவரே தயார் பண்ணி, கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி, பிரின்ட் அவுட் எடுத்து எங்கிட்ட ஒப்புதல் வாங்கி இ..மெயில்ல அனுப்பியும் வச்சிட்டாரு....யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்ங்கிறதைக் கவனிக்கணும். இத்தனைக்கும் நேத்து மாநில பந்த். ஊரே மூடிக் கிடக்கு. அங்கங்க கூட்டம் கூட்டமா போலீஸ்...பல இடங்கள்ல கலகம், கலாட்டா...கல்லெறி...அத்தனையையும் மீறி எப்படித்தான் ஆபீஸ் வந்தாரோ....கடமையுணர்ச்ச்சி அதீதமா உள்ளவன், புறச் சங்கடங்களையெல்லாம் பொருட்படுத்துறதில்லை. கொக்குக்கு ஒண்ணே மதி, வேலைகள் பென்டிங் இருக்கக் கூடாதுன்னு மைன்ட்ல வச்சிட்டு, வந்து உட்கார்ந்திருக்கான் பாருங்க அந்த ஆளு...சிகாமணி நிச்சயம் வந்திருப்பாருங்கிற எண்ணத்துல ஃபோன் போட்டேன். அந்தாளே எடுக்கிறான்னா பார்த்துக்குங்களேன். நினைச்ச மாதிரி வலைய வீசினேன். அவனுக்கு எதிர்த்துப் பேசத் தெரியாது....சரி...சரின்னு மட்டும்தான் தலையாட்டத் தெரியும். பாஸ் சொல்லிட்டாரு செய்துடணும்ங்கிற முனைப்புதான் அந்தாளுக்கு மூக்குக்கு முன்னால நிக்கும்...ரொம்ப தெய்வ பக்தி உள்ள ஆளு...ஆட்டத் தூக்கி மாட்டுல போட்டு, மாட்டத் தூக்கி ஆட்டுல போட்டு எவ்வளவு தகிடு தத்தம் பண்றோம் நாம....இது எதுலயும் தலையைக் கொடுக்காத, தூக்கத்துல கூடக் கை நீட்டாத சுத்தபந்தன் அவன். எந்த ஒரு சின்ன விஷயமும் அவனைச் சலனப்படுத்திட முடியாது. யாரு என்ன செய்றாங்கங்கிறதையும், கவனத்துலயோ, கருத்துலயோ வாங்கிக்க மாட்டான் அவன். அவனுக்குத் தெரிஞ்சது வேலை. ஆபீசுக்குள்ள நுழைஞ்சா, தனக்குக் கொடுத்திருக்கிற வேலையைச் சரியாய்ச் செய்தாகணும். அது மட்டும்தான் அவன் புத்தில நிக்கும். அவ்வளவு பயபக்தியோட வேலை செய்வான்.

       யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்னு கவனிக்கணும். அப்படியாப்பட்டவனை நம்மளோட அடிமையா வச்சிக்கிறது நம்பளோட சாமர்த்தியம். ஆனா தான் அடிமையா நடத்தப்படுறோம், நம்பளை அப்படித்தான் இங்க நினைக்கிறாங்கங்கிறதை அவன் உணரவே கூடாது. இந்த இடம் ரொம்ப முக்கியம். அவனைப் போன்ற விசுவாசிகள்தான் நம்ம முன்னேற்றத்துக்குக் காலத்துக்கும் துணையா இருப்பாங்க. கேள்வி எதுவும் கேட்க மாட்டாங்கதங்களுக்காகவும் எதுவும் கேட்கத் தெரியாதவங்களா இருப்பாங்கஇத்தனை விகல்பமற்ற மனிதர்களா? ன்னு நாமளே வியந்து போவோம்! அதான் யதார்த்தம்.! அந்த யதார்த்தம் காலத்துக்கும் நிலைச்சிருக்கும். அப்பப்போ அப்படியான சிலர் நம்மளச் சுத்தி வலம் வந்துகிட்டே இருப்பாங்கஅவங்களைக் கேட்ச் பண்ணனும். அதான் நம்ப சாமர்த்தியம்.

இந்த மாதிரி இடர்பாடான கால கட்டங்களில்  வராதவங்களைப் பத்திக் கேட்டு, பேசி, நேரத்தை வீணடிக்கிறதை விட இது பெட்டர் இல்லையா? இதைத்தான் சுருக்கமாச் சொல்லியிருக்காங்க.பெரியவங்கமுன் அனுபவப்பட்டவங்க..வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு...அல்லாதவனுக்கு சம்பளத்தைக் கொடுன்னு....என்ன நான் சொல்றது புரியுதா? இப்டித்தான் நீங்க நம்ம ஆபீஸ் ஸ்டாஃப்கிட்ட வேலை வாங்கக் கத்துக்கணும்....அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு...எம்.பி.ஏ.வுல என்ன சொல்லித் தர்றாங்க...? இதைத்தானே? நிர்வாகம்ங்கிறது இந்த மாதிரிப் பல்வேறு கூறுகளைக் கொண்டது. அதை கரெக்டாக் கடைப்பிடிக்கிறவன்தான் சிறந்த நிர்வாகியாக் கணிக்கப்படுறான்.....அதுதான் மாஸ்டர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன்! அனுபவத்தில் சம்பாதிக்கிறதை அங்கே பாடமாக்கியிருக்கான்அவ்வளவுதான்

       சம்புகனுக்கு மனசே நடுங்கிப் போனது. அப்போ வேலை செய்றவங்க, செய்யாதவங்க, டபாய்க்கிறவங்க, டிராமாப் போடுறவங்க..சுருட்டுறவங்கசுருட்டாதவங்க .இப்படி எல்லாரும் கலந்து பயணம் பண்றதுக்குப் பேருதான் நிர்வாகமா? கஷ்டப்படுறவன், உண்மையா இருக்கிறவன், உழைப்பையே தெய்வமா மதிக்கிறவன் என்னைக்கும் உழைச்சிக்கிட்டே இருக்க வேண்டிதானா? ஏமாத்தித் திரியறவன் அதையே தன்னோட ஆயுதமா வச்சிக்கிட்டு தப்பிச்சிக்கிட்டே இருப்பானா? இதென்ன அநியாயமா இருக்கு?

       இங்க பாருங்க பி.ஏ., உங்கள இப்டிக் கூப்டே எனக்குப் பழக்கமாயிடுச்சி. இப்போ நீங்க என் பிள்ளைங்களை அன்றாடம் ஸ்கூல்ல விட்டுட்டு, திரும்பக் கூட்டிக் கொண்டாந்து வீட்டுல விட்டுர்றீங்கஎன்னைக்காச்சும் சாப்பாடு மறந்திடுச்சின்னா சங்கடப் படாமமறுபடி வீட்டுக்கு அலைஞ்சு கொண்டு கொடுத்திட்டு வர்றீங்கஎன்னைக்காச்சும் அந்த டிபார்ட்மென்டைப்பத்தி நான் ஏதாச்சும் கேள்வி கேட்டிருக்கனா உங்ககிட்டே? ஏன்னா நீங்க அதைக் கரெக்டா செய்திடுறீங்கஅப்போ அங்கே கேள்விக்கு இடம் ஏது? என் பிள்ளைங்களை உங்க பிள்ளைங்க மாதிரி நினைச்சு எவ்வளவு பொறுப்பா செயல்படுறீங்கவீட்டம்மா என்னைக்காச்சும் நொண்டு நொடை சொல்லியிருக்காங்களா? அப்படியெதுவும் என் காதுக்கு வந்திடப்படாதுன்னு நீங்க எத்தனை சின்சியரா செயல்படுறீங்க?

அதே மாதிரிதான் இதுவும்.. ஒவ்வொரு ஆபீஸ்லயும் இப்படி உண்மையா உழைக்கிறதுக்குன்னே ஒத்தன் ரெண்டு பேர் கண்டிப்பா இருப்பான்அவனை அடையாளம் காணனும். அதுதான் நம்ப திறமை. அப்படி ஆளைக் கப்புன்னு பிடிச்சிட்டுக்கிட்டோம்னு வச்சிக்குங்க.மொத்த ஆபீசைப் பத்தியுமே நாம கவலைப்பட வேண்டியதில்லைங்கிறேன்.தூக்கிச் சுமந்திடுவான் அந்த ஒத்த ஆளு!! அந்தாளுக்குஅவனுக்குத் தேவை நம்பளோட பாராட்டு.உன்னமாதிரி முடியுமாப்பாங்கிற புகழ்ச்சி. அதுல குளிர்ந்து போயிடுவான். மேலும் பணிஞ்சு வணங்குவான். அவனுக்குத் தெரிஞ்சது அந்த அநியாயப் பணிவு ஒண்ணுதான்.  வேலை வேலைன்னு தன் உயிரையே கொடுப்பான்.குடும்பம் குட்டிகளைக் கூட மறந்திடுவான்னா பார்த்துக்குங்களேன்அங்க நம்பளை எவ்வளவு உயர்ந்த பீடத்துல வச்சிருப்பான்னு நினைக்கிறீங்க? அப்படி மனுஷங்கதான் நமக்கு வேணும்!

       பி.ஏ. தன்னை மறந்து கடகடவெனச் சிரித்தார். அவரது அடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டி அதிகாரி பேசியிருந்ததைப் பற்றி அவர் இம்மியும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. நீ இப்டியே நினைச்சிட்டிருஅதான் எனக்கு வேணும்என்று அவர் மனதுக்குள் வேறு என்ன எண்ணம் வைத்திருக்கிறாரோ என்று சந்தேகம் கொள்ள வைக்கும் சிரிப்பாய் இருந்தது அது. கள்ளனுக்குக் கள்ளன் பெருங்கள்ளன் என்கிற பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது சம்புகனுக்கு. இருட்டில் நிகழும் வஞ்சகம். ஆம்அவர்கள் மனங்கள் இருண்டு கிடக்கின்றன.இவர்களால் வெளிச்சத்திற்கு வரவே முடியாது. வெளிச்சம் என்றாலே அவர்களுக்குள் இனம் புரியாத பயம்!

தனிப்பட்ட உதவியாளராய் இருப்பவர்களெல்லாம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்களா? அடகடவுளே!! யாரை யார் நம்புவது? யாரை யார் சந்தேகப்படுவது? எதையாவது  நினைத்துப்பார்ப்பதற்கு இவர்களுக்கு நேரம் இருக்கிறதா என்ன? ஒன்றே குறிஒருவனே தேவன்! அதைக் கொள்ளை கொள்ளையாய்ச் சேர்த்து வைத்திருந்தால் அது என்ன ஆயுசை நீட்டிக்கப்  போகிறதா? அல்லது காட்டிக் கொடுக்காமல் இருக்கத்தான் போகிறதா? காணாமல் போய் தானே மண்ணுக்குள் புதைந்து கொள்ளும் மாயத் திறன் படைத்த பௌருஷம் அது! திக்குத் திசை தெரியாமல்  பயணித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மற்ற எதைப்பற்றித்தான் நினைப்பதற்கு நேரம்?

       சம்புகன் மனம் மிகுந்த வேதனைக் குள்ளாகியது. எல்லோருமே ஒரு பொறுப்பற்ற , விட்டேற்றியான மன நிலைக்குப் போய் விட்டார்கள். இன்னமும் கடமையுணர்ச்சியோடும், கஷ்டப்பட்டும் செயலாற்றுபவர்களை இது பாதிக்கக் கூடும். நம்ம கடமையை நாம செய்தோம்...அதுக்கு மேலே இதுல ஒண்ணும் இல்லை என்ற முதிர்ந்த நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்? அவர்கள் தங்களின் உண்மையான இருப்பைக் கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போலிருக்கிறதே!

       எனக்குச் சம்பளம் வருது நான் பார்க்கிற வேலைக்கு. என் குடும்பம் ஓடுது அதில். நிறைவாயோ பற்றாக்குறையாவோஏற்றமும் இறக்கமுமாய் நிற்காத வண்டிஎங்கும் தடம் புரளாமல் செல்கிறதேஅதுவே எவ்வளவு பெரிய விஷயம்? .  அப்புறம் மற்றதைப்பற்றி, மற்றவர்களைப்பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்? ஒரு சராசரி மனிதனின் எண்ண ஓட்டங்கள் இந்த அளவில் இருந்தால் போதாதா? இந்த அளவுக்கு விஞ்சாமல் அவன் செயல்பாடுகள் இயங்கினால் பற்றாதா? அதற்கு மேல் ஏன் அகலக்கால் வைக்க வேண்டும்? அதற்கு மேல் ஏன் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்? முன்னிறுத்திக்கொள்கிறேன் பேர்வழி என்று ஏதாவது சிக்கலில் போய் மாட்டிக் கொள்ளவா? என் கெடுமதியினால்தான் இந்தக் கேடு விளைந்தது என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகவா? தங்களை மறைத்துக் கொள்ள என்னைச் சுட்டிக்காட்டி இவனால்தான் வந்தது இந்த வினைஎன்று தங்களை உத்தமர்களாகக் காட்டிக் கொண்டு விலகிச் செல்லவா?

       ஆசைகளினால்தான் கேடுகள் விளைகின்றன. தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்விடும் அபாயம் உண்டு. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி. எனக்கு இருப்பதே எனக்குப் போதும். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. எந்த நேரமும் கைகளைத் தலைக்கடியில் வைத்து உறங்கச் சித்தமாய் இருக்க வேண்டும். தரையில் ஒரு துண்டு விரித்து நீட்டி நிமிரும் மனோபாவம் வேண்டும். வயிற்றுக்குச் சோறிட வேண்டும். அதற்கு வேண்டிய அளவு கடவுள் கொடுத்திருக்கிறான் என்பதிலே அவனுக்கு நன்றி செலுத்தி அடங்கிக் கிடந்தால்தானே அவன் கருணை என்றும் நம்மீது நிலைக்கும்? அதை விடுத்து வேறு வழிகளில் செல்ல முனைந்து, ஆட்டம் போட்டால்? இந்த மண்ணில் விளைந்தது எல்லாமும் இந்த மண்ணுக்கே! எவனும் எதையும் கொண்டு செல்ல முடியாது. ஒரு நகத்தளவு பொருளைக் கூட நகட்டி மறைக்க முடியாது.

       உடல் ரீதியான ஒழுக்கக் கேடுகளை ஆய்வு செய்வதற்குப் புறப்பட்டு வந்தால் இங்கு மன ரீதியான ஒழுக்கக் கேடுகள் பரவலாக விரிந்து கிடக்கிறது. அதுவே செயல்பாடுகளாய் பரிணமித்துக் கிடக்கிறது.  அதிகார போதை சீரான நிர்வாகத்திற்கு வழி வகுக்காது சீர்கேட்டை ஏற்படுத்துவதும், நல்லவர்களை அடிமைப்படுத்துவதும் கூட தேசத்தின் நலனுக்கு உகந்ததாகாதே....! தர்மத்தை ஒடுக்குதல் தகுமா?

       என்னுடைய கடமையுணர்வும் இந்தப் பாதையில்தானே இத்தனை ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது? அன்றைக்கு  பந்த்தின் போது சிகாமணி மட்டும் ஆபீஸ் வரலேன்னா என் பில்லைக் கேஷ் பண்ணியிருக்க முடியாதே...! என் பெண்டாட்டி ஆபரேஷனுக்குப் பணம் கட்டியிருக்க முடியாதே...! என் வேலைதான் முதல்லன்னு எடுத்து செய்தாரே....அவரையா நம்ப அதிகாரி இப்படி ஏமாத்துறாரு...? இது அடுக்குமா? அதிகாரத்தைக் கைல வச்சிருக்கிறவங்க இப்படிச் செய்யலாமா? எல்லாப் பணியாளர்களையும் ஒரே மாதிரித்தானே ட்ரீட் பண்ணனும்? காலம் பூராவும் டபாய்க்கிறவனை கண்டுக்காம விடுறதா நிர்வாகம்? அவங்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்து விலக்கிட்டு நல்ல நிர்வாகத்தை நிர்மாணிக்கிறதுதானே ராசாவா இருக்கிறவருக்கு அழகு...!

                                 ( 3 )

        திரே பைரவர் சத்தமின்றிப் பாய்ந்து வருவது தெரிந்தது. சம்புகனின் கையைப் பிடித்துக் கவ்வி இழுத்து அது இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றது. மறைந்து நின்று காட்டிய திசையில் பார்வையை ஓட விட்ட போது அந்த அதிசயம்...தன் கண்களையே தன்னால் நம்ப முடியாத பேரதிசயம் ...சம்புகனை நிலை குலைய வைத்தது.

       அரசர் பிரதானமாய் மெத்தையில் வீற்றிருக்க.... சுற்றியிருந்த அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சூட்கேஸ்களைத் திறந்து கட்டுக் கட்டுகளாக அவர் முன்னே பரப்பிக் கொண்டிருந்தனர். இவ்வளவுதானா...மதிப்பீட்டிற்கு- அளவீடு குறைகிறதே? பங்கீடு பாதிக்குமே?இப்படிப் பற்றாக்குறையாகவே ஒவ்வொரு முறையும் பிரவேசம் செய்தீர்களென்றால் அதிருப்தி நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். பிறகு அவரவர் பொறுப்புக்களை இரண்டிரண்டாய்ப் பிரிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். சர்க்கிள், டிவிஷன், சப்டிவிஷன் என்று ஏற்கனவே பிரித்திருப்பது இந்தப் பங்கீட்டில் குறைபாடுகள் நிகழ்க் கூடாது என்பதற்காகத்தான். நிர்வாக வசதிகளுக்காகச் செய்யப்பட்ட அவைகள் இந்தப் பங்கீடு வசதிகளின் படி நிலைகளை இதுகாறும்  செவ்வனே நடத்திச் சென்று கொண்டிருக்கையில் இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது இந்த இடர்பாடு? அவரவர் அதிகாரத்திற்குட்பட்ட நிலைகளில் மேய்க்கும் திறன் குறைந்து போனதா? அல்லது கீழ்நிலை இயங்குதளமே கண்கட்டி வித்தை நடத்துகிறதா? உங்களின் அடக்கி ஆளும் நிர்வாகத்திறன் சோம்பிப் போய்விட்டதா? -  அரசர் கொதித்தார். அவ நம்பிக்கை அதிகரித்துள்ளதாய் அறிந்து கொள்ள முடிந்தது.

       பைரவரே...வாருங்கள் போவோம்...நாம் வந்த சுவடு கூட இங்கே தெரியக் கூடாது...ஆபத்து..... மிகுந்த வேதனை...அரசுத் தலைமை ஆட்டம் கண்டிருக்கிறது. அதை அவர்களேதான் சரிசெய்து கொள்ள வேண்டும். அந்த அனுபவம் பெற்றவர்தான் மாமன்னர். .புறப்படுவோம்...காவலன் காவான் எனின்..!    இந்நிலை அவ்வப்போது ஏற்படுவது சகஜம் என்றுதான் தோன்றுகிறது. அல்லது அப்படி நினைத்துக் கொள்ள வேண்டுமா? என்பதுமே இப்போதைய சிந்தனை தர்மம்! காவலன் காவான் எனின்.எத்தனை அருமையான சொற்றொடர்?

       அறம் குன்றும்...நாட்டிலுள்ள பசுக்களின் மடியில் பால் குன்றும்...வானம் பெயல் ஒல்லாது....வேதம் ஓதப்படுதல் நின்று போகும்.....இப்படி இன்னும்...இன்னும்.....!!!

       ய்...சோமாறிப் பியூனு.......என்னா இன்னைக்கு இவ்வளவு தூக்கம்..அடிச்சிப்போட்ட மாதிரிக் கெடக்க? இன்னா ஆச்சு? ஒடம்பு கிடம்பு சரியில்லையா? ..ஆபீஸ்  லீவு விட்டுட்டாகளா...? - சத்தமாகக் கேட்டவாறே அருகே வந்து அவன் முகத்தில் சல்லென்று தண்ணீரை ஓங்கி அடித்தாள் அஞ்சலை....அலறிப் புடைத்து எழுந்த சம்புகன்....ஒன்றும் புரியாமல் பே...பே...என்று விழித்தவாறு மிரண்டு,  குன்றிப்போன தன் மெலிந்த திரேகத்தையே அதிசயமாயும் திடீர்த் துக்கமாயும் மிரண்டு பார்க்கலானான்.

                           ---------------------------------------------------.


கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...