29 மார்ச் 2023

“துணை“ - சிறுகதை - பிரசுரம்-தினமணிகதிர் - 26.03.2023

 

சிறுகதை           

துணை





ன்ன தப்பு நான் சொல்றதுல...? - அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அன்று காலையிலேயே அவர்களின் விவாதம் துவங்கி விட்டது.  விவாதம்தான். பேச்சாக ஆரம்பித்து எப்போதும் விவாதமாகத்தானே முடிகிறது இதுநாள்வரை? விவகாரமாக ஆகாமல் இருந்தால் சரி.  அடக்கி வாசிக்கிறாள். தான் ஒரு கருத்தில் ஊன்றிவிட்டதைப் போல, அவளும் ஒன்றில்  நிலைத்து நிற்பவள்.

      யாராவது அப்படி இருப்பாங்களா? எதுக்கு அனாவசியத்துக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு...?  உங்களை இப்போ இங்க யாரு என்ன பண்றாங்க...? - ஒரே கேள்வியில் தன்னைத் தட்டி உட்கார்த்தி விட வேண்டும். அந்தப் பேச்சை எடுப்பதோ, தொடருவதோ அவளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அவருக்கு வேண்டியது அதுதானே...!

      இந்த எடத்துலதான் உனக்கும் எனக்கும் வேறுபடுது...வெறுமே சோற்றுப் பிண்டமா இருக்கச் சொல்றே நீ...! உயிர் வாழறதுக்காக சோறு திங்கிறது வேறே...சோத்துக்காகவே வாழறது வேறே... பேசறதுக்கே ஒண்ணும் இல்லே..... –

      வாசலில் கீரைக்காரியின் விடாத சத்தம்.   அவளுக்கு அவள் வியாபாரம் குறி. இவளுக்கு சமையல்கட்டு குறி.  எனக்கு?-.

      அடுப்பில் வைத்திருந்த சட்டியில் படபடவென்று வெடித்துக் கொண்டிருந்தது. கடுகு கருகிடப் போகுது...முதல்ல அதை அணை....நீதான் உன் நியமங்கள்லேர்ந்து தடுமார்றே...நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன்....

      நீங்க பேசுற பேச்சுலதான் எல்லாமும் மறந்து போறது. கல்யாணி அடுப்படியை நோக்கி நகர்ந்தாள்.

      இப்பல்லாம் நான் பேசுறது உனக்கு எரிச்சலா இருக்குல்ல?... முன்னாடி என்ன ரசிக்கவா செஞ்சிது? அந்தக் காலத்துலயே நீ என் பேச்சை எப்பவும் காது கொடுத்துக் கேட்க மாட்டே! என்னை விட்ருங்கிறேன்...அவ்வளவுதான்....

      உங்களை யாரு இப்ப பிடிச்சு வச்சிட்டிருக்கா....அதான் மாசா மாசம் போய்ட்டு வந்துட்டுத்தானே இருக்கீங்க...

      இப்பப் போக முடிலயே....! மூணு மாசம் ஓடிப் போச்சே...? - ஊர் போகவும் வரவும்னு இருந்தாத்தான் எனக்கு மூடே சரியா இருக்கும்..என்னுடைய ஸ்தலம் அதுதான்.  இல்லன்னா பைத்தியம் பிடிச்சது போல ஆயிடுது.

      இப்போ குழந்தை...குழந்தைன்னு காரணம் வச்சு ஆள நிப்பாட்டினா...? அங்கயே இருந்திட்டா என்னங்கிற முடிவுக்கு வந்துட்டேன். அலைய முடில என்னால.!

      அதுக்கென்ன பண்றது? நான் ஒருத்தியா எப்டிப் பார்த்துக்க முடியும்? அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க...இன்னொரு ஆள் வேணுமே...?  பேரனக் கொஞ்சிட்டிருங்க...

      அப்போ ஊர் போயி நான் பாடாப் படுவேனே ஒத்தையாஅது பரவால்லியா?

      இங்க பேரக் குழந்தையைப் பார்த்துக்கிறது முக்கியமாஊர் போறது முக்கியமா? என்னால வர முடியாது.அவ்வளவுதான்

      பார்த்தியா?...இதச் சொல்லிச் சொல்லியே என்னை மடக்குறே.!..... பேரன் என்ன நம்ம கூடயேவா இருக்கப்போறான்...விவரம் தெரிஞ்சா அப்பா அம்மாவ விட்டு நகர மாட்டான்......நமக்கே எப்பவோ எவனுக்குத் தெரியும்?  நாளைங்கிறதே நிச்சயமில்லையே.!

      நீங்க பேசுறது உங்களுக்கே நல்லாயிருக்கா யோசியுங்க...எழுபது தாண்டி உங்களமாதிரி யாராவது இப்டிப் பேசிட்டிருக்காங்களான்னு  கொஞ்சம் நினைச்சுப் பாருங்க...?- எதுக்கு இப்டித் துள்றாரும்பாங்க.அவளும் விடுவதாயில்லை.

      யாரும் என்னை மாதிரிப்  பேசறதில்லைன்னு எப்டிச் சொல்றே...? வீடு வீடாப் போய் நீ பார்த்தியா? ரொம்ப அனுபவப்பட்ட மாதிரிப் பேசுற? வந்தாச்சு...வீடு வாங்கியாச்சு...கல்யாணம் பண்ணியாச்சு...குழந்தை பெத்தாச்சு...இருந்து பார்த்துக்கிறதுக்கு உன்னையும் அர்ப்பணமாக் கொடுத்தாச்சு...அப்புறமும் நான் எதுக்கு? என்னை விட்ற வேண்டிதானே...? நான் தனியா இருந்துக்கிறேன்னுதானே புலம்பறேன்....நீ எனக்கு  வேண்டாம்னுதானே கத்தறேன்...-மறுபடி என் பழைய இடத்திற்கே போய் நின்றேன். என் ஆழ் மன விருப்பமே அதுதானே?

      என் வாழ்நாள்ல பாதில வந்தவதானே நீ? இருந்துக்கோ.உனக்கு நான் முக்கியமில்லேன்னா.எனக்கு நீயும் முக்கியமில்லே.! அவ்வளவுதான். போட்டு உடைத்தார்.  

      துடைச்சுப் பேசுறதுதானே உங்க வழக்கம். வேண்டாம்தான்யாருக்குதான் யார்தான் வேணும்? எல்லாரும் வேணும்னு நினைக்கிறவாளுக்குத்தான் எல்லாரும் வேணும்.வெட்டி வெட்டிப் பேசினா யாரும் வேண்டாம்தான் - சொல்லிக் கொண்டே வந்து நறுக்கென்று காபியை வைத்தாள் கல்யாணி.

      இது மூணாவது காபி ஞாபகம் இருக்கட்டும்.என்றாள். வயசாச்சுகன்ட்ரோல் வேணும் எல்லாத்துலயும்.

      ஒவ்வொரு முறையும் வாதம்-பிரதிவாதம் வரும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட  இடத்தில் அமைதியாகிவிடுகிறாள். அந்த ஒரு பிடிதான் இன்றுவரை பலமாயிருக்கிறது. அதைப் புரிந்து கொண்டார் இவர்.                 

உங்களுக்குத்தான் யாருமே வேண்டாமே...? தனிக்காட்டு ராஜாதனிமைதனிமைஅசாத்தியத் தனிமைதவிச்ச வாய்க்குத் தண்ணி கிடைக்காமப் போயிடப் போறது.ஆள் பலம் வேணும் மனுஷாளுக்குஅத மனசுல வச்சிக்குங்கோ-குரலில் ஒரு சின்ன நடுக்கம்..!

               மனுஷன் கொஞ்சகாலமேனும் வாழ்க்கைல சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு? ஒரு கட்டத்துல விலகின மனநிலை அமையலேன்னா அவன் என்ன மனுஷன்? என்னை விட்டிட்டு நீ உன் பையனோடவே இருக்கத் தயாராயிருக்கும்போது, நான் மட்டும் ஏன் அப்டி இருக்கக் கூடாது? நான் வேண்டாம்னு சொல்ற நீ எனக்கு வேண்டாம்ங்கிறேன். அவ்வளவுதான்.

      யாரு வேண்டாம்னு சொன்னாங்க? பேசாம இங்கயே கிடங்கன்னுதானே சொல்றது? முப்பது நாற்பது வருஷம் வாழ்ந்தவங்க பேசுற பேச்சா இது?

      எனக்கு நான் கிளம்பினா, பின்னாடியே சரின்னு வந்திடணும்அதான் பிடிக்கும்எதிர்வாதம் பண்றது பிடிக்காது. அங்க போய்த் தனியாக் கிடந்து கஷ்டப்படுவானேன்னு கொஞ்சமாவது உனக்குத் தோணுதா? இத்தனை வயசுக்கு மேலே ஒத்தை ஆளா இருந்து, சமைச்சு,..சாப்பிட்டுஓட்டல்ல தின்னுவயித்தையும் உடம்பையும் கெடுத்துக்கணும்னு.எனக்குத் தேவையா? எனக்கு அது ஒத்துக்குமா? இந்தக் கரிசனம் வேண்டாமா உனக்கு?

       அப்போதைக்கு அந்தப்  பேச்சு முடிந்தது.

முன்பு நடந்த ஒரு விவாதம் வரி பிறழாமல் சந்திரசேகரனுக்கு நினைவு வந்தது. தான் எப்படியும் கிளம்பி விடுவோமோ என்கிற ஆதங்கம் அவள் மனதைப் போட்டு அரிக்கிறதோ? அதைக் கிளறிக் கிளறிப் பார்ப்பதில் தனக்கு ஒரு குரூர திருப்தி இருக்கிறதோ? டிபனைச் சாப்பிட்டு விட்டு டி.வி.பார்த்துக் கொண்டிருந்த தன்னை அவள்தானே வலியப் பிடுங்கினாள்?

      யோசிச்சுப் பாருங்க...இங்கேயிருந்து அமெரிக்கா போறவங்ககூட சேர்ந்துதான் போறாங்க...அம்மாவ மட்டும் எந்தப் பிள்ளையும் அழைக்கிறதில்ல...அவ மட்டும் தனியாவும் போறதில்ல...! அப்பாவோட சேர்ந்து ரெண்டு கெழடுகளும்தான் ஏறிப் பறக்கறதுகள்...!

     

நாள் பூராவும் விழுந்து விழுந்து வேலை செய்யும்சமையல் அறையிலேயே கிடையாய்க் கிடக்கும் அவளையும்தான் எப்படிக் கிழடு என்று சொல்வது? நாலு பேருக்குச் சமைத்தாக வேண்டும். காலை டிபன், இரவு டிபன் குழந்தைக்கு என்று தனி. ஓய்வென்பதே இல்லைதான். ஆனாலும் மனதளவில் ஏற்றுக் கொண்டு விட்டாள். இருக்கும்வரை செய்து விட்டு, கண்ணை மூடுவோம் என்று! அதில்தான் அவள் மனம் நிறைவு காண்கிறதென்றால் பிறகு எதற்கு வேறு சிந்தனை? ஸ்திர புத்தி! தனக்குத்தான் ஓயாத தடுமாற்றம்! நினைப்பதைச் செய்ய விட்டால்தானே? எதைக் கொண்டு வந்தோம்கொண்டு செல்ல?

      யார் சொன்னா சேர்ந்து பறக்கறான்னு? நீ கண்டியா? பேச்சைத் தொடர்ந்தார் இவர். விட மனசில்லை. அவள் சொன்னதை ஒத்துக் கொண்டதாக ஆகி விடுமே? ஈகோ என்னாவது? கிழட்டுப் புத்திக்கு என்ன ஈகோ வேண்டிக்கெடக்கு? தடுக்கி விழுந்தால் படுக்கைதான்.இந்த லட்சணத்தில் கெத்து மட்டும் குறைந்தபாடில்லை.

      உங்ககிட்டே வந்து ஸ்பெஷலா சொல்லிட்டுப் போனாளாக்கும்? இஷ்டத்துக்குக் கதையளக்கிறதுஊரையே விலைக்கு வாங்கின மாதிரி!.

      கதையில்லடிஅத்தனையும் யதார்த்தமாக்கும்.நாலு வீட்டுக்கு சமைச்சுப் போடன்னு எத்தனை பேர் போறா தெரியுமா நோக்கு? கோயில்ல குருக்களா இருந்தா அங்க வருமானம் ஜாஸ்தின்னு ஏற்கனவே நிறையப் போயிட்டா? காரியம் பண்ணி வைக்கிறதுக்கு ஆள் பஞ்சம். அங்க போனாத்தான் ஆளுக்கும் துட்டுக்கும்  மதிப்புன்னு பல பேர் போய் வருஷமாச்சு...!  .துணைப்பொட்டலமா எந்த மாமியும் எந்த மாமாவையும் இன்னைக்கெல்லாம்  அழைச்சிண்டு போறதில்லே...அதத் தெரிஞ்சிக்கோ....மாமாக்கள் பூராவும் ஆள விட்டாச் சரின்னு சொந்த ஊர்லயே அக்கடான்னு இருக்கப் பழகிண்டுட்டா....விருப்பப்பட்ட ஸ்வீட், காரம், வடை பஜ்ஜின்னு சுதந்திரமா போய் மொசுக்கலாமோல்லியோ...! நாக்கை அடக்க முடியாமே... பொண்டாட்டியோட பிக்கல் பிடுங்கல் இல்லன்னா அந்த விசேஷமே தனி.....

      அப்போ நீங்களும் அதுக்காகத்தான் அலையறேளா...? எப்படா சான்ஸ் கிடைக்கும்னு...!      தனியாப் போய் இருந்தா, இஷ்டத்துக்குத் திங்கலாமோல்லியோ?

      நா என்னைக்கோ நாக்கை அடக்கிட்டவன்என் சாப்பாட்டு அளவைத்தான் நீ தினமும் பார்க்கிறியே!அப்டியுமா சந்தேகம்? எந்த ஒடம்பு நமக்கு இன்பமா இருக்கோஅதுவே ஒரு கட்டத்துல பாரமாயிடும்மனுஷன் தன் வயித்தை உணரணும். இல்லன்னா உணவே வியாதியாயிடுமாக்கும்

      நன்னாயிருக்குஜீவனில்லாமப் போகப் போறதுஅசந்து படுத்துக்கப் போறேள் ஒரேயடியா இன்டேக்கைக் குறைக்கிறதும் தப்பாயிடுமாக்கும். யோசியுங்கோ.

      இந்த பார்...உனக்கு  உன் லெவல்....அதுக்கு மேலே உன்னாலெல்லாம் சிந்திக்க முடியாது. நான்.எனக்குன்னு சில நியமங்கள் உள்ளவன். அதுல பிடிவாதமா இருக்கிறவன்

      ஆமாமாமத்தவாளெல்லாம் நியமமில்லாமத்தான் அலையறாளாக்கும்எல்லாருக்கும் ஒரு திட்டமுண்டு

தாராளமா இருந்துக்கோயார் வேண்டாம்னா? எனக்கு என் ஊர்ல என் ஜனங்களோட இருக்கணும்அதுதான் என் ஆரோக்யம்என் ஆயுசுகூட அதுனால கூடும்னா பார்த்துக்கோயேன்

      கல்யாணிக்கு ஆதங்கம் தீர்ந்தபாடில்லை. இந்த மனுஷனென்ன இப்டி பிடிச்ச பிடியாஒத்தக் கால்ல நிக்கிறது? நினைச்சதை நிறைவேத்திட்டுத்தான் விடும் போல்ருக்கு?

     

      இப்போ என்ன பண்ணனும்ங்கிறேள்? பேரக் குழந்தையக் கொஞ்சிண்டு, அதோட இருக்கிறதுக்கு உங்களுக்கு விருப்பம் இல்லே...அதானே...? யாராவது இப்டி இருப்பாளா? கொஞ்சம் கூடப் பாசமே இல்லையா உங்களுக்கு...! அவா அவா குழந்தை வரம் கிடைக்கலியேன்னு தவமிருந்திண்டிருக்கா...! ரெண்டு வருஷம் கழிச்சிப் பெத்துக்கிறோம்னு ஊதாரியாத் திரிஞ்சிண்டு சம்பாதிக்கிற காசக் கரியாக்கிண்டிருக்கா......நமக்கு ஆண்டவன் டக்குன்னு கொடுத்திட்டான்...உங்க பிள்ளை அதுல ரொம்ப சமத்தாக்கும்...ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னு தள்ளிப்போட்டு அதுக்குள்ளே ரெண்டு பேருக்கும் சண்டை வந்து, நிறையப் பேர்  கோர்ட்டுல போய் நின்னுண்டிருக்காளாக்கும்...அந்தக் கதை பிள்ளையப் பெத்துட்டா நடக்குமா? அடங்கி ஒடுங்கித்தானே  ஆகணும் கட்டித் தங்கமா கடவுள் ஒரு பேரக் கொழந்தையைக் கொடுத்திருக்கான்...கிருஷ்ணா ராமான்னு பேரனைக் கையிலெடுத்துக் கொஞ்சிண்டு பேசாமக் கெடப்பேளா...அது இதுன்னு கெடந்து துள்றேளே....? –

நான் என்ன சொன்னாலும் அவள் மசிவதாய் இல்லை. வேலை வேலைன்னு கெடந்து மாஞ்சாலும் பரவால்லன்னு முடிவு பண்ணிட்டா போல்ருக்குமருமகளையும் தன் பெண்ணாய் நினைத்து வரித்துக் கொண்டு விட்டாள். அவளும் தனக்கு ஒத்தாசையாய் நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இல்லை. போட்டி இல்லை. பொறாமை இல்லை. நிறைஞ்ச மனசாய் நின்று செயல்படுகிறாள். எத்தனை பேருக்கு  வரும் இந்த விசால மனசு? ஒரு துரும்பை நகர்த்துவதில்லை வந்த பெண். இவளுக்கு அது புரிந்ததோ இல்லையோ? செக்கு மாடு போல் சுற்றிக் கொண்டிருந்தால்?

      ஒவ்வொரு முறை பேச்சு வரும்போதும் அது இப்படித்தான், இங்கு போய்த்தான் முடிகிறது. அந்தக் குறிப்பிட்ட புள்ளியில்தான் சங்கமமாகிறது.  ஆனாலும் இவருக்கு மனசு ஆறமாட்டேனென்கிறது. அது என்னவோ தனியாய் இருப்பதில் அப்படி ஒரு சுகம். ஒரு சாமியார்த்தனம். பிக்கல் பிடுங்கல் என்று எதுவும் இல்லை. பிடித்தது பிடிக்காதது என்று எதையும் கண்கொண்டு பார்க்கத் தேவையில்லை. அது இது என்று எது ஒன்றையும் பார்த்துப் பார்த்துத் திருத்த வேண்டியதில்லை. தப்பு சொல்ல வேண்டியதில்லை. எதுக்கெடுத்தாலும் குறை சொல்றார் என்கிற கெட்ட பெயரில்லை.   நச்சு நச்சு என்று பிடுங்குவதாக பிறர் நினைக்க வேண்டியதில்லை. சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்க வேண்டியதில்லை.ஒதுங்கியிருப்பதாகப் பிறருக்கு தோன்ற வேண்டியதில்லை. உம்மணாமூஞ்சி என்று நினைக்க வேண்டியதில்லை.சொல்லப் போனால் மருமகளுக்கு இவர்தான் மாமியார். கல்யாணி இல்லை. அவள் அவன் பையனைப்போல் அந்தப் பெண்ணுக்கும் ஒரு தாய்.  தன்பாடுதான் திண்டாட்டம். ஆனால் அதைப் பொருட்படுத்த இங்கு ஆளில்லை. பேசாமக் கிட என்பதுதான் அதிகபட்சப் பொருட்படுத்தல். கடவுளேஇவளும் இல்லாமல், தான் படுக்கையில் விழுந்தால் தன் கதி? இதுவே தான் ஊரில் தனியாய்ப் போய் இருக்கையில் நடந்தால்? நடக்காது என்பது என்ன நிச்சயம்?

 வயதானவர்களின் எந்த அசௌகரியங்களையும் இவர்கள் உணருவதில்லை.  உடல் உபாதைகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. எதற்கும் கூச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் தனிமையின் இனிமை சிறப்புதான்.

      திறந்த உடம்போடு, ஒரு வேட்டியைக் கட்டினமா, துண்டைத் தோளில் போட்டமா, அதையே நீள நெடுகத் தரையில் விரித்து நெடுஞ்சாண்கிடையாய் சாய்ந்தோமா என்று எளிமையாக இருந்து  கழிக்கலாம். ரொம்பவும் வயிற்றுப் பாட்டுக்காக யோசிக்க வேண்டியதில்லை. சாதம், ரசம், ஒரு காய் அல்லது சாதம், சாம்பார், ஒரு காய், சுட்ட அப்பளம்... என்று போதும்.சில நாள் வெறும் மோர் சாதத்தோடேயே கூடக் கழித்து விடலாம். ஒரு நார்த்தங்காய் ஊறுகாய் இருந்தால் சரி.  இட்லி, தோசைக்கு தெருக்கோடியில் விற்கும் மாவு. மிளகாய்ப்பொடி... அல்லது இருக்கவோ இருக்கு...கொஞ்சம் மோர் விட்டுப் புரட்டி சாப்பிட்டால் ஆச்சு...நொறுக்குத் தீனி கிடையாது. ஏதேனும் ஒரு பழம் போதும் மறுநாள் காலையில் வயிறு சுத்தமாக....ஓட்டி விடலாமே...! எளிமையாய் ஆர்ப்பாட்டமின்றி பிறருக்கு எந்தவிதத் துன்பமுமின்றி இருக்குமிடம் தெரியாமல் இருப்பது கூட ஒருவகை ஆன்மீக தர்மம்தானே...! தனிமையிலே இனிமை காண முடியாது என்று எவன் சொன்னான்?

      சாகும்வரை கூட இருந்து தொண்டாற்றியே ஆக வேண்டுமா? என் ஆசைக்குக் கொஞ்ச நாள் நான் தனியாக வாழக்கூடாதா?  கடமையிலிருந்து வழுவியிருந்தால் சரி...எல்லாம்தான் பார்த்துப் பார்த்து ஓடி ஓடிச் செய்தாயிற்றே..எதில் குறை வைத்தது? யாரேனும் விரல்விட்டு சொல்ல முடியுமா? கைநீட்டி ஒரு கேள்வி கேட்க முடியுமா? எதுக்கு செய்தது? பின்னாளில் வச்சுக் காப்பாத்தணுமேன்னா? நெவர் உன் விருப்பத்துக்கு நீ உன் பையனோட இங்கயே இருக்கணும்னு விரும்பற மாதிரி...நான் என் விருப்பத்துக்கு தனியாப் போய் இருக்கிறது மட்டும் எப்படித் தப்பாகும்?

      சரி...விடுங்கோ... அநாவசியப் பேச்சு வேண்டாம்....உங்க பையன்ட்டக் கேட்டுக்குங்கோ...புறப்படுங்கோ...நா எப்டியோ இருந்துக்கிறேன். எனக்குக் குழந்தைதான் முக்கியம்......நாங்க இங்கே என்னமோ செய்துக்கிறோம்...நீங்க சந்தோஷமா இருந்தாச் சரி...சுருக்கமாய் முடித்துக் கொண்டாள்.

எதுவும் பலிக்காது என்று நினைத்திருப்பாளோ? நாங்க என்று சொல்லி தனியாய்ச் சட்டென்று தன்னைப் பிரித்துக் கொண்டு பேசுகிறாளே? என்னைப் பிரித்து விட்டாளே...! ஆனாலும் இது இவளுக்கு ஆகாது இந்த மனுஷனுக்குக் கூடப்போய்த் துணையா இருந்து மீதி நாட்களைப் கழிப்போம்னு ஒரு இரக்கச் சித்தம் இல்லையே?அவங்க குடும்பத்த அவங்களே கவனிச்சிக்க மாட்டாங்களா? இவ எதுக்கு தூக்கிப் பிடிக்கணும். அப்புறம் அவங்களுக்குன்னு எப்படி அனுபவம் சேகரம் ஆகும்? வளர்ற மரங்கள்தானே? வேலை செய்தா உடம்பு உரமாகப்போகுதுதளர்ந்தா போகும்? ஓடி ஓடிச் செய்யட்டுமே? தன் பிள்ளை, தன் மனைவி, தன் கணவன், தன் வீடுன்னு? ஒரு குடும்பம்ங்கிறது எப்படி ரன் பண்றதுங்கிறதை அப்புறம் அவுங்க எப்படித்தான், எங்கதான் கத்துக்கிறது? இது இவளுக்கு ஏன் தெரிய மாட்டேங்கது? படிச்சுப் படிச்சு சொன்னாலும் மண்டைல ஏறலேன்னா பிறகு என்னதான் பண்றதாம்?  

பையன் ஆதரவு இருந்தால் நான் கூட தூசுதானா அவளுக்கு?  வீடு வரை உறவுவீதி வரை மனைவி எவ்வளவு சரி?

      இது ஏதோ வயித்தெரிச்சல்ல சாபமிடுற மாதிரில்ல இருக்கு....உங்ககிட்டேயெல்லாம் பர்மிஷன் வாங்கிண்டுதான் கிளம்பணும்னு எனக்கொண்ணும் அவசியமில்லே...யாரும் எனக்கு அனுமதியும் தர வேண்டியதில்லை....நெனச்சா வண்டியைக் கௌப்பிடுவேன். என்னை ஒருத்தரும் தடுக்க முடியாதாக்கும்...ஏதோ சொல்லணுமேன்னு ஒரு கடமைக்காகச் சொன்னேன்..அவ்வளவுதான்...-புறப்படலாம்னு நினைச்சிட்டா என்னை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. அது அதுபாட்டுக்கு நடக்குமாக்கும். என் ஸ்டான்ட் கரெக்ட் என்னைப் பொறுத்தவரை! -  சொல்லிக் கொண்டே ஐ.ஆர்.சி.டி.சி.யில் சென்னை டூ நெல்லை டிக்கெட் அவெய்லபிளா என்று தேட ஆரம்பித்தார் சந்திரசேகரன். வைத்த கண் வாங்காமல் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல்யாணி கடைசியாகச் சொன்னாள்....

      நீங்க,  துணையா இங்கே இருக்கேளேங்கிற தைரியத்துலதான் நானே கொஞ்சம் தைரியமா இயங்கிண்டிருக்கேன்... முடிஞ்சும் முடியாமலும்...அதப் புரிஞ்சிக்காம கொக்குக்கு ஒண்ணே மதின்னு  பேசறேள். எனக்கு நீங்கதான் துணைன்னு உங்களுக்குத் தோணலை பாருங்கோஅது என்னோட துரதிருஷ்டம். நீங்க இல்லைன்னா நான் அநாதைன்னு உங்களுக்குத் தோணலையா? இப்டிப் பிடியா நின்னு கிளம்பிப் போறேங்கிறேளே? இது சரியா?  சந்தோஷமாப் .போயிட்டு வாங்கோ...விதி போல இருக்கு...! யார வச்சு யாரு? எல்லாரும் இந்த உலகத்துல தனித் தனியாத்தான் வந்தோம்..தனித் தனியாத்தானே போயாகணும்...எதுதான் கூட வரப்போறது? அவாவாளுக்கு விதிச்சிருக்கிறதுதானே நடக்கும்?

      சந்திரசேகரனை என்னவோ செய்தது கல்யாணியின் இந்தக் கடைசி வார்த்தைகள்...! சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவள் இப்படி முற்றிலுமாக இறங்கிச் சொன்னது அவரைச் சிலையாய் ஸ்தம்பித்து நிற்கச் செய்து விட்டது.

                              ----------------------------------------------------------

 

     

     

 

 

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...