25 ஜனவரி 2023

சிறுகதை “அகம்” -'சுவாசம்” இணைய இதழ் - ஜனவரி 2023

  

       சிறுகதை                          “அகம்”                                                                                                                                                                                                                          




        வனுக்கு இவன் மீதே வெறுப்பாய் இருந்தது.  ஒரு கீற்றளவு கூட வெளிச்சமின்றி இருண்டு கிடந்த அந்த அறையில் இருளின் கதிர்கள் அம்புகளாய் மாறி இவனை நோக்கிப் பாய்ந்து வருவதாய் உணர்ந்தான்.    

                                                                                                                                             சுற்றிலும் கொம்பு முளைத்த பைசாசங்கள் நீண்ட பற்கள் தெரிய கை கொட்டிக் கெக்கலித்தன.                                                                                                                                                                          

ஜன்னலை ஒட்டியிருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த பொம்மை இவனை நோக்கித் தலையாட்டிக் கேலி செய்தது, அந்த இருட்டுக்கு ஊடே இவனைத் துல்லியமாய் உணர வைத்து இவன் சிந்தனையைப் புரட்டிப் போட்டது.   

                                                                                      படுக்கையை விட்டு எழுந்து மூலையில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தான். மனம் ரொம்பவும் ஆயாசப் பட்டது. உடம்பு பூராவும் வியர்வை கொப்பளித்து மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்தது. அந்த வியர்வை வாடையே இவனுக்கு மிகவும் அறுவறுப்பாயிருந்தது. எண்ண அலைகளின் ஊற்றாக  அது பரிணமிப்பதுபோல்.......அந்தக் கேடு கெட்ட எண்ண அலைகளின்பாற்பட்டு முகிழ்த்த வியர்வைத் துளிகள்...அவற்றின் பிரதிபலிப்பாய் நின்று கேலி செய்கின்றனவோ?                                                                                                            

இந்த மாய உடம்பிற்கு இப்படி அடங்காத வெப்பமும் குளிர்ச்சியும் காற்றும் நீரும் ஏன்? பொங்கிப் பொங்கி அடங்குவதற்கா? இந்தத் தோலுக்கு ஏன் இத்தனை உணர்ச்சிகள்? கணுக்கால்களில் தகிக்கும் வெப்பம், அது கொடுக்கும் தீவிரம் மனிதனின் செயலூக்கத்தையே தகர்த்தெறிந்து விடுகிறதே?                                                                                             

  பொங்கிப் பொங்கித் தணிந்து தளர்ந்து நசிந்து போவதற்கா இந்த உடம்பு?                                 மனதை லகான் போட்டு இழுத்து நிறுத்தி ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதில் எத்தனை முறைதான் தோல்வியைத் தழுவுவது? பொழுதே விடியாமல் இருந்துவிட்டால் தேவலாம் போல் இருக்கிறது.                                                                                                                                         

  நீண்ட கைகளுக்கு இடையே சுமதியின் கால்கள் தட்டுப்படுகின்றன. இப்போது கூட அவள் லேசாகக் கால்களை இழுத்துக் கொண்டது போல்தான் இருக்கிறது. மனது தேடத்தானே செய்கிறது? கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவள் உதறி எறிந்தாளே? அதற்குள்ளாகவா சுரணை போய்விட்டது? மனது கேவலப்படவில்லை. நோகவில்லை. வெட்கப்படவில்லை. மாறாக மீண்டும் கைகள் அவற்றைப் பற்றப் பார்க்கின்றன.                              

  தன் ஆண்மை சுக்கு நூறாக நொறுங்கியதே? அதுபற்றி மனம் குறுகவில்லையா? அது தனக்குத் தேவைதான். மிதி! மிதி!! ஓங்கி மிதி!!! உதறி மிதி!!! நான் விலக வேண்டும். இதை விட்டு ஓட வேண்டும். இந்தச் சாக்கடையில் இருந்து மீள வேண்டும். புனிதம் பெற வேண்டும். என்னை நான் வெல்ல வேண்டும். வென்று தலை நிமிர வேண்டும். இதில் நான் அமிழ்ந்து விடக் கூடாது. அழிந்து விடக் கூடாது. மூழ்கி முக்குளித்தது போதும். அறிந்தேன். எல்லாம் அறிந்தேன்.  நான் எழ வேண்டும். எழுந்து விஸ்வரூபம் எடுக்க வேண்டும்..                                                                                                                                                                                   

   மனம் நினைக்கிறது. வெறி கொள்கிறது. வெளியேறத் துடிக்கிறது. ஆனால் முடியவில்லையே? இறைவா! நான் அழிந்துபட வேண்டியதுதானா? இப்படியே நான் காணாமல் போக வேண்டியதுதானா? அறியப்படாமல் போக வேண்டியவனா நான்? என்னே கொடுமை?                                                                                                                                                                          

என் தேவி! என் நளாயினி!! என் பர்வதவர்த்தினி!!! என் மகா சக்தி!!! என்னைக் காப்பாற்று! என்னை ஆட்கொள்!! அது உன் கையில்தான் இருக்கிறது. நீ மனது வைத்தால்தான் சாத்தியம்.                                                                                                                                                                   

அடித்து நொறுக்கு. தூள் தூளாக்கு. என் மாசு அழிய வேண்டும். என் வெப்பம் தணிய வேண்டும். என் இச்சைகள் எறிந்து பஸ்பமாக வேண்டும். நான் புனிதம் பெற வேண்டும். நான் புதியவனாக உயிர்த்தெழ வேண்டும். அதற்கு இதுதான் வழி. ஒரே வழி. உத்தமமான வழி. உதறு! கேவலப்படுத்து!! காறி உமிழ்!!!                                                                                                                 எல்லாம் நடக்கட்டும். எல்லாம் அழியட்டும். புது மெருகோடு நான் புதிதாக ஜனிக்க வேண்டும்.                                                                                                                                                                      

ஊரும் உலகும் என்னை, என் பலவீனத்தை அறியாமையை, லோலத்தை உணர்ந்து அறியும் முன்  நீயே என்னைக் காப்பாற்றிவிடு.  உனக்கு அந்த உரிமம்  உண்டு. உனக்கு அந்தப் பெருமை உண்டு. பேராற்றல் உண்டு. திண்மை, மகாசக்தி எல்லாமும் உண்டு.                      எனக்காக நீ உன்னைத் தந்தவள். உன்னை அழித்தவள். அழித்துக் கொண்டிருப்பவள். நீ எதுவும் செய்யலாம்.  என்னமும் பேசலாம். எல்லாவற்றுக்கும் ஆதார ஸ்ருதி நீ!! என்னை மாற்று... செம்மையாக்கு மனிதனாக்கு!!                                                                                                                                                                                                                                                                                               சுமதி! சுமதி!!  மெதுவாக அழைத்துக்கொண்டே அவள் காலடியில் சரணாகதி ஆகிறான். முகம் புதைத்து அழுகிறான்.  அவள் பாதார விந்தங்களைக் கண்ணீரால் கழுவுகிறான்.                                                                                                                                                   

  இன்னும் நீங்க தூங்கலியா?” - உறக்கக் கலக்கத்தில் புரண்டவாறே கேட்கிறாள் அவள்.                                                                                                                                                                                

     'ஆம். தூங்கவில்லை. எப்படித் தூக்கம் வரும்? என்னைக் கொல்லும்  இச்சை!  அந்தப் மாயப் பிசாசு, வந்து என்னைத் தொற்றிக் கொண்டுள்ளதே? அதை எப்படி விரட்டுவது? தெரியவில்லையே எனக்கு.                                                                                                                      

   ஆஉறா! என்ன ஒரு மென்மை? என்ன ஒரு குளிர்ச்சி? என்ன ஒரு மணம்? மெல்ல மெல்ல முன்னேறி மெத்தென்ற அந்தப் பகுதிக்குள் நெஞ்சை ஆழப் புதைத்துக் கொள்கிறான். படபடக்கும் இதயத்துக்கு மாமருந்து. ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு எல்லாமும் சீராகும் ஸ்தலம்.  போதும் போதும், வேறு ஒன்றுமே வேண்டாம் இந்த வாழ்வில்!                                                                                                                                                                                          

அய்யோ, கடவுளே! பேசாமப் படுத்துத் தூங்க மாட்டீங்களா? ரொம்பத் தொந்தரவு பண்றீங்களே? இத விட்டா வேறே ஒண்ணுமே உங்களுக்குத் தெரியாதா? சீ!! என்ன ஜென்மமோ?               உதறி வீசியெறிந்ததில் இரண்டடி தள்ளிப்போய் விழுகிறான்.                                                

ஸ்தோத்ரம் சொல்லுங்க..தூக்கம் வரும்...”                                                                                                     

ஸ்தோத்ரம்? என்ன ஸ்தோத்ரம்? அதுதான் உன்னை ஜபித்துக்கொண்டிருக்கிறேனே? என்னை மறந்து, என் நிலையை மறந்து...என் அறிவை மறந்து, என் சக்தியை மறந்து, என் உறவுகளை மறந்து, என் நட்புகளை மறந்து... இன்னும் என்ன செய்ய வேண்டும்? எதை இழக்க வேண்டும்?                                                                                                      

   நீ சொல்லும் அந்த மந்திரங்களை வேறு சொல்லி அவற்றையும் இன்னும் களங்கப் படுத்த வேண்டுமா என்ன? மனதில் ஏற்கனவே படிந்திருக்கும் அழுக்குகள் போதாதா? இந்த அழுக்கு, கறைகள் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து விட்டு நீ சொல்லும் ஸ்தோத்ரம் சொல்ல முயற்சிக்கலாம். ஒரு வேளை நான் புனிதப் படலாம். இல்லையென்றால் அவையும் களங்கப்பட்டுப் போகுமே? அந்தப் பாவம் வேறு சுமக்க வேண்டுமா?                              

   சுமதி! என் தெய்வத் திருத்தலமே!! முதலில் என்னை விடுவி! இந்தக் கடும்புனலிலிருந்து  என்னை வெளியே கொண்டுவந்து கொள்கிறேன்.  பிறகு நீ சொல்வதையெல்லாம் கேட்கிறேன். சிரமேற்கொண்டு செய்கிறேன். உன் பாதம் பணிந்து நிறைவேற்றுகிறேன். உன் ஆக்ஞைகளின்படி நடந்து கழிக்கிறேன். என்னை ஆசவாசப் படுத்து. என்னை அடங்கச் செய்து விடு. என் அறிவு வேலை செய்ய மறுக்கிறது. என் செயல்கள் ஊனமுற்றுக் கிடக்கின்றன. என் சிந்தனை ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இவற்றிலிருந்து நான் வெளியே வரவேண்டும். உயிர்த்தெழ வேண்டும்.                                                           

பக்கத்து அறையில் உடல் அயற்சியில் புலம்பும் சகோதரனின் தீனக் குரல்.                                           

   சே! என்ன கேவலம்? இதையும் மறந்து விட்டேனே இத்தனை நேரம்? நான் மனிதனா? அல்லது மிருகமா?                                                                                                                                      

       குடும்ப சுகமே காணாத புனிதன். தாம்பத்ய இன்பம் அறியாதவன். பிற எல்லோரும் இன்புற்றிருக்கத்  தன்னைத் தியாகம் செய்த பேராளன்!!!                                                                                          

அவ்வப்போது வந்திருந்து நலமறிந்து செல்பவன். கேவலம், அவனிருக்கும்போது கூட இதைத் தவிர்க்க முடியவில்லையா உன்னால்? என்ன ஜென்மம் நீ?

               கிருஷ்ணா, நீ எங்கே படுத்துப்பே?”                                                                                                                    

  உறால்ல...”                                                                                                                                                                      

  அப்படியா? நானும் உங்கூடப் படுத்துக்கட்டுமா?”                                                                               “................”                                                                                                                                                                                இல்லண்ணா, நீ இந்த ரூம்ல படுத்துக்கோ...உனக்கு அதுதான் சரியா இருக்கும்...”                   அதுதான் சரியா இருக்கும் என்றால் என்ன அர்த்தப்படுத்திச் சொல்கிறாய் இந்த வார்த்தைகளை? மனம் அத்தனை கெக்கலி கொட்டுகிறதோ உனக்கு?                                                       

என் மனதை உணர்ந்து கொண்டிருப்பானோ? வாய்விட்டுச் சொல்லவில்லையாயினும் மனதில் நினைத்திருப்பானோ?                                                               

    சீ! வெட்கங்கெட்டவனே!! மனசாட்சிக்கு துரோகம் இழைப்பவனே?                                                       இது ஒன்றுதானா உலகம்? நீ அறிந்தது அப்படித்தான் போலிருக்கிறது?  

                                    எத்தனை அரிய பொக்கிஷங்கள் நீ அறியக் காத்திருக்கின்றன? எத்தனை அழியாப்  பெட்டகங்கள் தன் வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கின்றன? அங்கெல்லாம் என்று நீ நுழையப் போகிறாய்? உன் கண்கள் என்று திறக்கப் போகின்றன? என்று நீ ஒளி பெறப் போகிறாய்? என்று நீ உயரப் போகிறாய்? என்று நீ விஸ்வரூப மெடுக்கப் போகிறாய்?                 

   எல்லாம் மறந்து, எல்லாவற்றையும் இழந்து, இந்தக் காமக் கடும்புனலில் வீழ்ந்து மடியப் போகிறாயா?                                                                                                                                                

    இவன் பார்வை கூர்மைப் படுகிறது. இருட்டுக்குள் தேடுகிறது. பாதி சாத்தியிருக்கும் அறையின் கதவு. உள்ளே  எதிர்ப்புறம் சுவற்றைப் பார்த்துப் படுத்திருக்கும் சகோதரன்.                     

  உனக்கு உன் சுகம்தான் முக்கியம்.  உன் சந்தோஷந்தான் பெரிது. உன் பொழுதுகள், உன் நேரங்கள். உன் கனவுகள். எல்லாம் உன், உன்...உன்!!! அப்படித்தானே?                                              

அவனும் அப்படி நினைத்திருந்தால்? எதுவோ எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தன் வழியை, திசையை மாற்றியிருந்தால்?  

                                                                                                         ஒரு இங்கிதம் இல்லையா உங்ககிட்டே? உங்க அண்ணா வந்திருக்காரே...ஒரு ஒதுக்கம் வேணாம்? இப்படியா பறப்பாங்க? அவர் நம்மைப் பத்தி என்ன நினைப்பார்? சீ! வெட்கக்கேடு!! கேவலம், கேவலம்.  ஏனிப்படி அசிங்கப்படுத்தறீங்க? வீடுங்கிறது ஒரு கோவில் மாதிரி. அந்த இடத்தையே உங்க காரியங்களினால்  அசுத்தப் படுத்தறீங்க நீங்க. பெரியவங்க, உறவுக்காரங்கன்னு வந்திருக்கிற போது ஒரு நாகரீகம் வேணாமா? என்ன படிச்சிருக்கீங்க நீங்க?”                                                                                                                                                           

      இருட்டிலே அவனுக்கு மட்டும் கேட்பதுபோல் கிசுகிசுக்கிறாள். இல்லை, இல்லை கையில் சவுக்கெடுத்துச் சொடுக்குகிறாள். தேவைதான் இவனுக்கு. கழுதை வயசாகிறது. ஆனால் அறிவு வேலை செய்ய மறுக்கிறது. இவையெல்லாமும் அவள் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமா? உனக்கே மனதில் உதிக்காதா? உன் சிந்தனை உன் கட்டுக்குள் இல்லையா? அதைப் பிறர் பிறாண்டி விட்டால்தான் உனக்குச் சுரணை வருமா? உன் அறிவுக்கு எட்டவில்லையா? அல்லது  எட்டியும் தட்டிவிட்டதா?                                                        

      இத்தனை நேர்த்தியாக உனக்கு இந்த உடல் கிடைத்திருக்கிறதே? அது யாரால்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த உன் பெற்றோர்களால்தானே? அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டாமா நீ? உன் சீரான இந்த உடல் அதை ஒன்றுக்கும் பலனில்லாமல் கொன்று சீரழிப்பதற்கா? திமிர்ந்து திரிவதில் என்ன பெருமை இருக்கிறது? அது ஒரு சாதனையா? காலத்தால் பேசப்படக் கூடிய ஒன்றா அது? நல்ல அடையாளங்களே அழிந்து, மறந்து அழிந்து போகக்கூடிய இந்நாளில், நீ உன் உடம்பை அழித்து, உன்னையும் அழித்துக் கொள்கிறாயே? இந்த உடலின் மீதான மதிப்பு உனக்கு இவ்வளவுதானா? மயிர்க்கால்களும் அதனுள் படிந்திருக்கும் வெப்பமும், உன்னை கேவலம் இதற்குத்தான் இழுத்துச் செல்கிறதா? உழைப்பவனுக்கு அந்தப் பணியின்பாற்பட்டு உடல் வெப்பமாகிறது. உனக்கு? இதுதான் உன் உழைப்பா? உன் உடலின் வெப்பம் வீணே அதைத் தணிப்பதற்கா? இந்தக் காயம் பொய்யில்லையா? அந்தப் பொய்யை மெய்யாக்க என்ன வழி? அதைப் பேணுவதா? அல்லது அழிப்பதா? உன் உடலை, அதன் உணர்ச்சிகளை நீ வெல்ல வேண்டாமா? அந்த மேன்மையை உணரும் தன்மை இதுதானா? இழுக்கும் பக்கமெல்லாம் சென்று ஆட்படுவாயா நீ? எடுப்பார் கைப்பிள்ளையாய் எண்ணங்கள் கை பிடித்துக் கூட்டிச் செல்லும் இடமெல்லாம் பயணிப்பாயோ? காமாந்தகனே! நீ அழிவுப்பாதை நோக்கிச் செல்கிறாய். அதை உணர்! மனதை லகான் இட்டுக் கட்டுப்படுத்தி இழுத்து நிறுத்து. உன் கட்டுக்குள் கொண்டுவா. அது செல்லும் பக்கமெல்லாம் நீ போகாதே. எண்ண ஓட்டங்களைத் தடை செய்யவில்லையென்றால் பின் அது தறி கெட்டுப் பறக்கும். தீய விஷயங்களைத் தீயெனப் பிடித்துக் கொள்ளும்.  பற்றிக் கொள்ளும். இனி புதிதாய்ப் பற்றுவதற்கென்ன இருக்கிறது? அதுதான் பற்றி எரிந்து கொண்டிருக்கிறதே?                                            

  விட்டு ஒழி. உதறித் தள்ளு. இந்த உடலைப் பூஜி. இத்தனை நல்ல சரீரத்தை முழுமையோடு நிறைவாய்க் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்து. அவன் கொடுத்த காயத்தைப் பாதகமின்றி பாதுகாக்க முயல். அதைப் பொசுக்காமல் இறை மணக்கச் செய்.   

                       அறிவுக்கு வேலை கொடு. அதை மிஞ்சிய விஷயம் வேறு இல்லை இந்த உலகத்தில்.மீண்டு வெளியே வா! முடியாதது என்று  ஒன்றுமில்லை. முனைப்புதான் முன்னின்று வழி நடத்த வேண்டும். போ! விலகிப் போ!! எல்கையைக் கடந்து போ!!!.   

                     சட்டென்று எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறான் இவன். மெல்லிய குளிர் காற்று உடம்பைத் தழுவிக் கொண்டபோது சிந்தனை தெளிவு பெறுகிறது.                   

கிருஷ்ணா,நான் கிளம்பறேன்....”                                                                                                                           

ஓடிவந்து அண்ணனின் கைகளைப் பற்றிக் கொள்கிறான். நேருக்கு நேர் பார்க்கக் கூசும் கண்கள்.                                                                                                                      

   குற்றவுணர்வு பீறிட்டு நெஞ்சை அழுத்துகிறது.                                                                                                     

   என்னண்ணா, ஏன்? ரெண்டு நாளைக்கு இருக்கேன்னு சொன்னியே? திடீர்னு.....!

               இல்ல...இருக்கட்டும்...செல்லல...நான் போகணும்...மனசு தங்கல...”                                             

    சொல்லிவிட்டுப் போய்க்கொண்டிருக்கும் சகோதரனையே பார்த்து நிற்கிறான். என்ன ஒரு நிதானமும் தெளிவும் நிறைந்த அழுத்தமான நடை. இவன் கண்கள் அவன் பாதங்களையே  பின்பற்றுகின்றன.                                                                                                                                  

செல்லலைமனசு தங்கலை...மனசு தங்கலை...”-வார்த்தைகள் கீறிக் கிழிக்கின்றன இவனை.      

               ச்சே…! நானும் ஒரு மனுஷனா…?  -                                             

---------------------------------                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...