06 அக்டோபர் 2022

தூண் (சிறுகதை) தினமணிகதிர் பிரசுரம்

 

                     தூண்  (சிறுகதை)         தினமணிகதிர் பிரசுரம்                 



 பிரகதீஸ்வரன் இறந்து விட்டதாக  அவர் பையன் சொல்லிப் போனான்.       எப்போ? என்று கேட்கும் முன் நகர்ந்து விட்டான். எப்பொழுதுமே ஓரிரு வார்த்தைகள் பேசக் கூடியவன்தான். அதையும் தலையைக் குனிந்து கொண்டு மெல்லிய குரலில்தான் வெளிப்படுத்துவான். என்ன? என்று நாம் திரும்பக் கேட்க வேண்டி வரும். அது போலேவேதான் இப்போதும். தோன்றுவதும் மறைவதும்...!

       நேற்றுக் கூட இந்த வாசல் வழியாகப் போனார் அவர். யாரிடமேனும் காசு கேட்கப் போய்க் கொண்டிருப்பார். அவரின செயல் அதுவாகத்தான் இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.சில்லரை சில்லரையாக நானும் அவருக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறேன். கணக்கு வைத்துக் கொண்டதில்லை. காரணம் திரும்பி வராது என்பதல்ல. தர வேண்டாம் என்பதே.  நீதித் துறையில் கணக்காளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றிருந்தார். வரும் பென்ஷன் போதுமானதாக இல்லை. மூன்று பெண்கள். இரண்டு பையன்கள். எதுவும் உருப்படியில்லை. எல்லாம் வீட்டில் ஒவ்வொரு தூணாக நின்று கொண்டிருந்தன. அதனால் பணத்தின் தேவை அவருக்கு இருந்துகொண்டேயிருந்தது. எப்பொழுது அதுகளுக்குக் கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்து. கண்ணால் பார்த்து, .பசங்கள் தேறி, வேலைக்குப் போயி...அவர்களுக்குக் கல்யாணம் பண்ணி....? நாமே உதட்டைப் பிதுக்குவோம். முழி பிதுங்கிக் கொண்டிருந்தது அவருக்கு. கணக்காளராய் வேலை பார்த்தவர் வாழ்க்கையைக் கணக்குப் பண்ணவில்லை .

       நான்கு மாடுகள் வேறு. அது பரம்பரைப் பழக்கமாம். விட முடியாது என்றார். அவைதான் எனக்குத் துணை என்று சொன்னதுதான் மிகுதியாக யோசிக்க வைத்தது.  எங்கிருந்து தீனி போட்டுப் பராமரிக்கிறார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். பல சமயங்களில் என் வீட்டு வாசலில் இருக்கும் முருங்கைக் கீரையைப் பறித்துக் கொண்டிருப்பார். என் வீடு,எதிர் வீடு என்று கொல்லைப்புறம் சென்று புற்களைப் பிடுங்கி சேகரித்துக் கொண்டு செல்வார். காய்கறித் துகள்கள் எதையும் குப்பைக்குப் போட்டு விட வேண்டாம் என்றும் ஒரு பையில் போட்டு வையுங்கள், வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றும் சொல்வார். பழகிய சில வீடுகளில் இப்படிச் சொல்லி வைத்து ரெகுலராக வாங்கிக் கொண்டுமிருந்தார். ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொண்டு வாசலில் நிற்க வேண்டாம் என்று அவர்களாகவே பையில் போட்டதைக் கட்டி எடுத்து வாசலில் வைத்து விடுகிறார்கள். அமைதியாய் வந்து எடுத்துக் கொண்டு போவது அவர் வேலையாயிருந்தது. வாடகை வீடுதான். சர்வீசில் இருந்த காலங்களில் ஒரு சொந்த வீடு கூடக் கட்டிக் கொள்ளவில்லை. ஐந்து பேரையும் கொஞ்சமாவது படிக்க வைக்க வேண்டுமே என்ற எண்ணம் இருந்திருக்கலாம். அதற்கே சரியாய்ப் போயிருக்கும் இவர் ஒருவரின் வருமானம். மூச்சு விடுவதே குடும்பத்திற்காகத்தான்.

       பக்கத்துக் காலி மனையில்தான் கொட்டகை போட்டிருப்பார். யார் ஓனர் என்று தெரியாது. கேள்வியுமில்லை.   அங்கே மாடுகள் கட்டப்பட்டிருக்கும். எப்பொழுது அந்தப் பக்கம் போனாலும் கொட்டடியைச் சுத்தம் செய்வதோ, சாணி அள்ளுவதோ, மாடுகளைக் குளிப்பாட்டுவதோ என்று ஏதேனும் செய்து கொண்டேயிருப்பார். வீட்டுக்குள் இருப்பதற்கு இதுவே மேல் என்பதுபோல் அந்த மாடுகளோடுதான் பொழுதைக் கழித்தார். அங்கேதான் குடியிருக்கிறார் என்றே சொல்லலாம். சில சமயங்களில் அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு பட்டப் பகலில் வாயைத் திறந்து கொண்டு ஆவென்று தூங்குவதைக் கண்டிருக்கிறேன். அது உடல் மீறிய அசதி. அந்தக் காட்சி மனதை மிகவும் சங்கடப்படுத்தும். மாடுகளைக் குளிப்பாட்டுகையில், ஒரு முறை ஒரு நீண்ட நாகம் வந்து சாணிக் கூடைக்குள் சுருண்டு கிடந்தது. பதற்றமே இல்லை. தெருக்காரர்கள் அடிக்கக் கிளம்பிய போது, எதுக்கு...அதுவே போயிடும் என்று சொல்லித் தடுத்து விட்டார். நான் அடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அது இடத்துல நாம வந்து குடியிருக்கோம். அது வராம என்ன செய்யும்? என்று கேட்டார். நாம தொந்தரவு செய்யாதவரைக்கும் அதுவும் நம்மை ஏதும் செய்யாது என்றார்.

       இத்தனைக்கும் பக்கத்தில் ஒரு கண்மாய் இருக்கிறதுதான். அருகிலுள்ள ஒட்டுக் கிராமத்தில்  இருந்து மாடு வைத்திருப்பவர்கள் குளிப்பாட்ட தினமும் எங்கள் தெரு வழியாகத்தான் ஓட்டிக் கொண்டு போவார்கள். ஒன்று ரெண்டு என்று கிடையாது. நாலு அஞ்சு என்று படையாய்ப் போய்க் கொண்டிருக்கும். அந்தக் கண்மாயில் தண்ணீர் தேங்கி நிற்கும்வரையில்தான் எங்களுக்கு ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர். அங்கு வற்றினால் இங்கும் கீழே போய்விடும்.

என்றுமே சாணிக்குப் பஞ்சம் வந்ததில்லை. அது என்ன கணக்கோ...கண்மாய்க்குச் செல்லும் மாடுகள் சரியாக எங்கள் வீட்டு வாசல் வரும்போதுதான் பொத்தென்று சாணி போடும். சாணி கலக்கி யார் இன்று வாசல் தெளிக்கிறார்கள்? என்று கேட்காதீர்கள். என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள் என்று ஒரு கேள்வி வந்து விழும். மைதிலி இருக்கிறாளே? வீதியில் கேட்பாரின்றிக் கிடக்கும் அதை வீணாக்க அவளுக்கு மனசே வராது. ஆனால் அதை அள்ள வேண்டியவன் நானாயிற்றே? அதுபற்றி அவளுக்கு என்ன கவலை? எல்லாம் Do what I say...தான். அந்தத் தெரு முழுவதும் சாணி அள்ளியிருக்கிறேன் நான். என்ன சார்...எதுக்கு சார்...? என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள். சாணியின் உபயோகமே அறியாத தலைமுறை கடந்த சமூகம்.  சப்புச் சப்பென்று வட்டமாய்த் தட்டிக் கையில் லாவகமாய் எடுத்து சுவற்றை நோக்கி எறிந்தால், வரிசை மாறாமல் போய் பச்சென்று ஒட்டிக் கொள்ளுமே...அந்த எருவாட்டியை அறிவார்களா இவர்கள்?

சாணியை மாட்டின் கழிவு என்று நினைத்து அருவறுக்கும் தலைமுறை. அதை மருந்தாய் நாம் பார்த்தோம். இறைவனுக்கான ஓமகுண்டப் பூஜா வஸ்து. கடைசிக் காரியங்களுக்கு கண்யமாய்ப் பயன்படும் அதி முக்கியப் பொருள். அதை வைத்துத்தான் ஒரு முறை முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கடைசி எருவை முகத்தின் மேல் வைப்பார்கள்.  எதைச் சொன்னாலும் பெரிதாய் எடுத்துக் கொள்ளாத இளைய தலைமுறை. காசு கொடுத்தாக் கிடைக்கப் போவுது அதானே...என்ன பெரிய்ய்ய.....? முடிஞ்சு போச்சு...!! காசால் உலகத்தையே வாங்க முடியும் அவர்களால்...!.

இதைச் சொல்லும்போது கிராமத்தில் தினசரி அக்ரஉறாரத்தையும், பிற தெருக்களையும் தவறாது சுற்றி வந்து கூடையில் சாணி பொறுக்கிப் போகும் செவ்வந்தி ஞாபகம் வருகிறது எனக்கு. அவள் மாட்டுக் கொட்டகையில் கிடைக்காத சாணியா, எருவா? அதுதான் அவள் பிழைப்பே எனும்போது அந்த மூலப் பொருள் எங்கு கிடைத்தாலும், வீணாகாமல் காப்பதுதானே முறை. அது அவளுக்கு வயிற்றுப் பாடு சம்பந்தப்பட்டது.

 பத்துப் பன்னெண்டு மாடுகளை வைத்து மேய்த்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி. எந்நேரமும் மாட்டோடுதான் அவள் வாசம். அந்தப் பக்கம் போனாலே அந்த மாட்டுக் கொட்டகை வாடை நம் மூக்கைத் துளைக்கும். உள்ளே தலையைக் காட்டினால் ஏதேனும் மாடு சாணி போட்டுக் கொண்டிருக்கும்...ஏதேனும் ரெண்டு சொட சொடவென்று மூத்திரம் பெய்து கொண்டிருக்கும். கன்றுக் குட்டிகள் துள்ளித் துள்ளி உள்ளுக்குள்ளேயே அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும். ம்மா...ஆஆஆ.....ம்மா...ஆஆஆ என்று சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் ஏய்...ஏய்...என்று சும்மா அதட்டிக் கொண்டே ஒரே ஒரு அறையும், திண்ணையும் அமைந்த ரொம்ப சுமாரான இடத்தில் நேர்த்தியாய் ஒரு பழைய பாயை விரித்து அமர்ந்து, சுவாரஸ்யமாய் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பாள் செவ்வந்தி. அல்லது படுத்து உறங்கிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மாடுகள் காவலா அல்லது மாடுகளுக்கு அவள் காவலா? கொட்டகை வாசல் கதவு எந்நேரமும் திறந்துதானே கிடக்கிறது! என்ன பயம்...? நம்ம ஊரு...! எல்லாம் நம் சனம்...!

ரெண்டே ரெண்டு வெற்றிலை, பாக்கு, ரெண்டு பழம்...அத்தோடு ரெண்டு ரூபாய்...இதுதான் அவள் பிரசவக் கூலி. எல்லாம் ரெண்டு ரெண்டுதான் கணக்கு. எங்கள் வீட்டில் நாங்கள் அறுவரும் அவள் பிரசவம் பார்த்துத்தான் பிறந்தோம். சொல்லிவிட்டவுடன் ஓடோடி வந்து விடுவாள் செவ்வந்தி. தான் பெற்றெடுத்த பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதுபோல் கண்ணும் கருத்துமாய்ப் பார்ப்பாள். நாங்கள் அவள் கைகளில்தான் முதலில் தவழ்ந்தோம். குழந்தையைக் குளிப்பாட்டி தாயின் கையில் ஒப்புவித்து விட்டுக் கிளம்புவாள். அப்போது கண் மூடி தன் குலதெய்வத்தை வேண்டிக் கொள்வாள். அந்த மனமுவந்த வேண்டுதலுக்கு உலகத்தில் வேறு ஈடு இணையே இல்லை. எங்கள் பெரியம்மா செவ்வந்திதான். என் ராசா....இங்க வாடே...என்று அவள் தன் கைகளை விரித்து எங்களை வாரி அணைத்துக் கொஞ்சிய நாட்கள் எங்கள் நெஞ்சில் பதிந்த சுவடுகள். மனித்தப் பிறவிகள் தெய்வமாய் வலம் வந்த நாட்கள் அவை.

தினமும் காலையில் நடைப் பயிற்சிக்குக் கிளம்பி விடுவார் பிரகதீஸ்வரன். என் வீட்டு வழியாகத்தான் போவார். போகும்போது விட்டு விடுவேன். திரும்புகையில் கண்டிப்பாகக் கண்ணில் பட்டுவிடுவார். அந்த நேரம் தற்செயலாய் நான் அறையிலிருந்து வெளியே வருவதும், அவர் திரும்பிப் பார்ப்பதும் நிகழ்ந்து விடும். வாய்  திறந்து எதுவும் கேட்டதில்லை. ஆனால் பார்வை கேட்கும். அந்தப் புன்னகை அர்த்தப்படுத்தும். அதற்கு மேலும் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது தன்மை ஆகாது என்று தலையை ஆட்டி வாங்க...என்று சொல்லி விடுவேன். அந்த வார்த்தையை அவர் மனம் எதிர்பார்க்கும்.

ரொம்பவும் உரிமை எடுத்துக் கொண்டு அவராகவே உள்ளே நுழைந்து விடுபவர் அல்ல. அதுதானே கௌரவமும் கூட. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை அவர் தயங்க வேண்டியதில்லை என்பது என் எண்ணம். மைதிலிக்காக ஏதேனும் ஒரு தயக்கம் அவர் மனதில் இருக்குமோ என்னவோ?. எனக்குமே அந்தத் தயக்கம் உண்டுதான்.

பல சமயங்களில் பேசத் தெரியாமல் பேசி விடுவாள். ஒன்றைச் சொல்வதற்கு முன் ஒரு நிமிஷம் சொல்லப்போறதை நினைச்சுப் பாரு...சொல்லலாமா வேண்டாமான்னு அப்பத் தோணும்...அப்டி கட் ஷார்ட் பண்ணினா நிறைய மனத் தாங்கல்களைத் தவிர்க்கலாம் என்று எத்தனையோ முறை அவளிடம்  சொல்லியிருக்கிறேன். காதில் வாங்கினால்தானே?

ஆமாம்...ரொம்ப அனுபவப்பட்ட மாதிரிதான்...என்று மோவாயில் இடித்துக் கொள்வாள். நீயும் சராசரிதான் என்று சொல்லிவிட்டால் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். பேப்பரை தினசரி வரி விடாமப் படிச்சிட்டா எல்லாம் தெரிஞ்சவன்னு அர்த்தமாயிடுமா? உலக அனுபவம்ங்கிறது வேறே...மனிதர்களைப் படிக்கிறதுங்கிறது ஒரு தனி பயிற்சியாக்கும் என்பேன். நீங்க படிச்சிருக்கேளோல்லியோ...அது போறும்...என்று அப்போதும் கிண்டலடிப்பாள்.

சிலரை சிலவற்றில், சிலவற்றால் எப்போதும்  எக்காலத்தும் மாற்றவே முடியாது. சாகும்வரை அப்படியேதான் இருப்பார்கள். அதைத்தான் காரெக்டர் என்கிறார்கள்..

மிஞ்சிப் போனால் ஒரு வாய் காப்பி சாப்பிடுவார். உங்காத்துக் காப்பி ரொம்ப நன்னாயிருக்கும்...என்று தன்னை மறந்து சொல்லியிருக்கிறார். வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த எண்ணம் முட்டத்தானே செய்யும்? அன்று மைதிலிக்காக எனது செகன்ட் காஃபியைக் கட் பண்ணிக் கொள்வேன்.

இப்டி ஆளாளுக்கு போட்டு நீட்டிண்டிருந்தா உறை குத்தறதுக்குப் பால் வேண்டாமா? என்று ஒரு முறை சொல்லியிருக்கிறாள். அவ ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...!

நீங்க...! என்று கேட்டுக் கொண்டே காப்பியை ருசிப்பார். எனக்கு வராது என்று அவருக்குத் தெரியும். கண்டு கொள்ள மாட்டார். அது அவா பிரச்னை....!

மனுஷன் சாகும்வரை இந்த நாக்கு ருசி போகாது. உப்பு, புளிப்பு, இனிப்பு, காரம்- கூடுதல் குறைச்சல் இவைகளைத் துல்லியமாய்க் கண்டு பிடித்து விடும். தின்னு தின்னு தீர்க்கிறார்கள் மனிதர்கள். வாழ்நாள் பூராவும் ஒரு மனிதன் சாப்பிட்டது மொத்தம் எவ்வளவு இருக்கும்? என்று அகலக் கையை விரித்து  மலைபோல் காண்பிப்பேன். எழுபது எண்பது வயதுவரை தின்ன வேண்டுமே...! உலகமே ஒரு உணவுக் கூடம். எங்கு பார்த்தாலும் உணவு தயாராகிக் கொண்டேயிருக்கிறது. இராப் பகலாய். வித விதமான உணவுகள். மனிதர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்து ஆளாளுக்கு, மாறி மாறி  வேண்டும் அளவுக்குச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அப்போதைக்கு திருப்தி கொள்கிறார்கள்.  அவ்வளவே...! போதும் என்று சொல்லக் கூடிய ஒன்று உணவு மட்டும்தான். வேறு எதையும் இந்த உலகில் மனிதர்கள் போதும் என்றே சொல்வதில்லை.

ஒரு அக்கௌன்டண்ட் போன்றே இருக்க மாட்டார். ரிடையர்ட் ஆயாச்சு...அப்புறம் என்ன வேண்டிக்கிடக்கு? என்பதே அவர் சித்தாந்தம். சர்வீஸ்ல இருந்த காலத்துலயே அதுக்குப் பொருந்தாமத்தான் நான் உட்கார்ந்திருந்தேன்...வயித்துப் பாட்டுக்காக..! இப்பயும் அப்டியே விறைப்பா இருன்னா எவனால முடியும்...என்பார். பென்ஷனர்னா ரிடையர்ட் ஆன ஆபீசரும், பியூனும், ஏன் வாட்ச்மேனுமே ஒண்ணுதான்...இதிலே மேலென்ன கீழென்ன....? அம்புட்டுப் பேரும் ஓய்வூதியதாரர்தானே? பியூனுக்கும் பென்ஷன் எனக்கும் பென்ஷனா? ன்னு எவனாச்சும் கௌரவமா முறுக்கிக்க முடியுமா? எனக்குக் கொடுக்கிற பென்ஷனுக்கு வேறே பெயர் வையுங்க என்று கேட்க முடியுமா?  எங்க வேண்டாம்னு சொல்லச் சொல்லு பார்ப்போம் யாரையாச்சும்...!..சர்வீஸ்ல இருக்கிற போது என்னா ஆட்டம் ஆடுறாங்க...? இப்பச் சொல்லட்டுமே...? என்று தன் எளிமைக்கு விரிவான விளக்கம் கொடுப்பார்.

.பஸ்-ஸ்டான்டில் உள்ள டீக்கடையில் அவரைப் பார்க்கலாம். ஓரமாய் இருக்கும் குத்துக்கல்லில் அமர்ந்திருப்பார். அது அவருக்கென்றே அமைந்த கல். அதில் வேறு யாரும் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. யாராச்சும் டீ வாங்கித் தர மாட்டார்களா? என்பது போன்று இருக்கும் அவர் பார்வை.  காலையும் மாலையும் பேப்பர் படித்தாக வேண்டுமே...! ஓசில பேப்பர் மட்டும் படிக்க வந்திடுறாரு அய்யரு....ஒரு நாளைக்காச்சும் துட்டு கொடுத்து டீ வாங்கி சாப்டிருக்காரா...? சிலர் சொல்வதுண்டுதான். அதெல்லாம் அவர் காதில் விழுந்திருக்கலாம். விழாமலும் போயிருக்கலாம். ஆனால் யாரேனும் அவருக்கு டீ வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அது அவர் அதிர்ஷ்டம். அவ்வளவு நேரம் அவர் படிக்கும் படிப்பைப் பார்த்தால் கடைக்காரனுக்கே இரக்கம் மேலிட்டு, இந்தாங்க...எம்புட்டு நேரம் வறட்டு வறட்டுன்னு இந்தப் பாழாப்போன பேப்பரப் படிப்பீங்க. நீங்க படிச்சு முடிக்கிறதுக்குள்ள ஆயிரம் விஷயம் மாறிப் போயிடும்...பிடிங்க...தொண்டையை நனைச்சிக்கிங்க....என்று ஒரு கிளாஸ் தேநீரை நீட்டி அவரை ஆற்றி விட்டாலும் போச்சு...! அதெல்லாம் மனுசனோட ராசி....! பிரகதீஸ்வரனைத் தெரியாத ஆள் கிடையாது அந்த வட்டாரத்தில். சாமீ...! என்று குரல் கொடுத்துக்கொண்டே ஆட்கள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இன்னும் அந்தப் பழமை மாறாத தன்மைதான் அந்த மக்களின் பெருமை...!

வீட்டில் இருந்தால் தாங்க முடியாத பிக்கல் பிடுங்கல்...அதற்கு வெளியே மேல்..(நானும் மேல்...நீயும் மேல்...!) ..நாலு மனுஷாளைப் பார்த்த திருப்தியாவது மிஞ்சும்....என்றுதான் மனுஷன் டேக்கா கொடுத்து விடுகிறாரோ என்று தோன்றும்.மாடுகளுக்கு வேண்டியவைகளை எல்லாம் செய்து விட்டுத்தான் புறப்படுவார். அவைபாட்டுக்கு அசைபோட்டுக் கொண்டு படுத்திருக்கும். வீட்டுக்குள் இருந்து எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். அவர் பசங்கள் ஒரு நாளும் அந்த மாடுகளுக்குப் பக்கத்தில் நின்று நான் பார்த்ததில்லை. அந்த மாமி சாணி எடுக்க மட்டும் தலையைக் காட்டுவார்கள். மாடுகள் இருக்கும் வீட்டில் வீட்டுப் பெண்மணிகள் தங்கள் பசுக்களை அக்கறையாய்ப் பராமரிப்பதையும், தெய்வமாய் வணங்குவதையும், தீனி வைப்பதையும், மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்ய வைத்து கார்வார் பண்ணுவதையும் பார்த்திருக்கலாம். அப்படியான எந்த அடையாளமும் பிரகதீஸ்வரனின் மனைவியிடம் பார்த்ததில்லை.

உடம்பு முடியாதவராகவே அவர் மனைவியை நினைக்கத் தோன்றும். அதுபோல் முகமலர்ந்து பேசியும் காண முடியாது. என்றாவது வீட்டுக்குள் தலை நுழைக்கும் சமயம் வாய்த்தால், உறாலின் இருட்டான பகுதியில் உட்கார்ந்திருப்பது தெரியும். நிழலாய்த்தான் தோன்றுவார்கள். அந்தப் பெண்களும் ஆளுக்கொரு மூலையில் தென்படுவார்கள். ஏனிப்படி வீடு சூமடைந்து கிடக்கிறது என்ற எண்ணம் வரும். ஒரு சுமுக நிலையிருந்து என்றும் அவர் வீட்டைக் காண முடிந்ததில்லை. இயல்பான இருப்பே அப்படித்தானோ என்று நினைக்க வேண்டி வரும். ஒருவருக்கொருவர் பேசப் பிடிக்காமல் உம்மணாம்மூஞ்சியாய் இருந்து கழிக்கிறார்களோ?

எங்கள் பகுதி குட்டி பஸ்-ஸ்டான்டில்  புதிதாகத் தனியார் பால் டெப்போ ஒன்று வந்திருந்தது. அதில் எப்படி இடம் பிடித்தாரோ தெரியாது. அங்கு உட்கார்ந்து பால் விற்க ஆரம்பித்திருந்தார் பிரகதீஸ்வரன். அந்தக் கடைப் பையன் அவரை வைத்து விட்டு அங்கே இங்கே என்று வெளியே பால் போடப் போய் விடுவான். ஏஜென்ஸி எடுத்திருந்தவனுக்கு இப்படி ஒருத்தர் உபகாரமாய் அமைவார் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டான். அவனுக்குப் பல ஜோலி. இவரை உபயோகப்படுத்தி, தன் வியாபாரத்தின் கிளைகளை விரித்துக் கொண்டிருந்தான் அவன். ஒரு வேளை அதிலேயே அவர் திருப்தியடைந்தாரோ என்னவோ...! தன் பசங்களின் உபயோகமின்மை குறித்த தாக்கம் இருக்கலாம். பொறுப்பாய் செயல்படுபவனைக் கண்ட திருப்தி.

மூணு பாக்கெட்டுக்கு மேலதான் பை கொடுக்க முடியும். ஒரு பாக்கெட்டுக்கெல்லாம் கிடையாது...என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அப்படிச் சொல்லி சொல்லி நிறையப் பைகளை மிச்சம் பண்ணிக் கொடுத்திருந்தார் கடைக்கு. அதுபோல் கரெக்டாகச் சில்லரை கொண்டு வரணும்...என்றும் கண்டிஷன் போட்டிருந்தார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவருக்கு ஒத்துழைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த அளவுடைய பால் பாக்கெட் அதிகமாகப் போகிறது என்று கணித்து அதை எண்ணிக்கையைக் கூட்டி இறக்குமதி செய்ய வைத்தார். மற்றதை அதனதன் அளவுப்படி குறைத்தார். பையனும் அவரிஷ்டப்படி விட்டு விட்டதாகத்தான் தோன்றியது. மதிய இடைவேளை உண்டு...அதைக் கூட அந்தப் பையனின் முன்னேற்றத்திற்காகத் தத்தம் செய்திருந்தார் பிரகதீஸ்வரன். உழைப்பே உயர்வு என்று போட்டு,  பக்கத்தில் கடன் இல்லை என்றும் சுவற்றில் எழுதி வைத்தார்.

டிபன் பாக்ஸில் கொண்டு வந்து அங்கேயே சாப்பிட்டுக் கொண்டார். அந்த நேரம் ஷட்டரைப் பாதி இறக்கி விட்டிருப்பார்.  உட்காருவதும் தெரியாது....கை கழுவுவதும் தெரியாது.....அப்டிங்கிறதுக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு எழுந்து விடுவார். வெறும் தயிர் சாதம்தான். ஒரு பச்ச மிளகாய். மதியத்திற்கு மேல் மறுநாளுக்கான தேதி போட்டு பால் டப்புகள் வந்து இறங்க ஆரம்பிக்கும். அத்தனையையும் பொறுமையாய் வாங்கி  எண்ணி, ஒழுகும் பாக்கெட்டுகளைத் திருப்பி, பதிலுக்கு வேறு வாங்கி கணக்கைத் துல்லியமாய் வைத்து விடுவார். அந்தப் பையன் வந்ததும் இந்தா பிடி என ஒப்புவித்துவிட்டு வீடு திரும்புவார். போகும்போது ஒரு பால் பாக்கெட் எப்போதும் அவர் கையில் இருக்கும். அது ஓசியோ பாஸியோ தெரியாது. அது விலையில்லா பால்...!

சும்மாத் தருவானா..நல்லாத் தந்தானே....! .துட்டு சார்...துட்டு....-என்று  யாரிடமோ வீச்சும் விறைப்புமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவானால் நமக்கென்ன? என்று நினைப்பதற்குள் பிரகதீஸ்வரனின் பிழைப்பு மாறிப் போயிருந்தது.

இந்த மனுஷன் எதுக்கு இப்டி நாயா பேயா அலையறார்? ஒரு எடத்துல அமுந்து இருக்க மாட்டார் போல்ருக்கே? என்று நினைத்தேன் நான். மாடுகளைக் கவனிப்பது குறைஞ்சு போச்சா? என்றும் தோன்றியது. வீட்டு வரி கட்டுவதற்கு பஞ்சாயத்து ஆபீஸ் போயிருந்தபோது அங்கே இவரைக் கண்டேன். கையில் ஏதோ பில்டிங் வரைபடத்தை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார். கூடவே ஒருவர் இருந்தார். தவறு தவறு...அவர் கூடத்தான் இவர் இருந்தார். அதுதான் சரி. என்னென்ன நடைமுறைகள் என்பதைத் துல்லியமாய்த் தெரிந்து கொண்டு விட வேணும் என்கிற துடிப்பில் இருந்தது போலிருந்தது அவரது சுறுசுறுப்பு. கேட்பவர்களுக்கு விளக்கிச் சொன்னவர் இவர்தான். அதற்காகத்தான் அவர் இவரை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.

ஆர்வ மிகுதியில், என்ன சார் இந்தப் பக்கம்? என்றபோது....சொல்றேன்...சொல்றேன்...என்று கையமர்த்தினார். சாருக்கு ப்ளாட் எதுவும் வேணுமான்னு கேளுங்க சாமி....ஆளுகளப் பிடிங்க...என்றார் அந்த இன்னொருவர்.

அவரு சொந்த வீடு கட்டில்ல நம்ம ஏரியாவுல குடியிருக்காரு....அவருக்கு எதுக்கு...? என்றார் இவர்.

அவருக்கில்லாட்டி என்ன...அண்ணன் தங்கச்சி யாருக்காச்சும் வாங்கிக் கொடுப்பாருல்ல....கேட்டாத்தான தெரியும்...விடப்படாது....யார்ட்ட என்ன யோசனை இருக்கும்னு நமக்குத் தெரியாதுல்ல....கேன்வாஸ்ங்கிறது பிறகு எப்டி? என்று அவர் சொல்லவும்....சாயங்காலமா வீட்டுக்கு வர்றேன். என்றார் பிரகதீஸ்வரன். அது அவரின் வாயை அடைப்பதற்காக என்று புரிந்தது எனக்கு.

சொல்லப்போனால் ஏதேனும் இடம் வாங்கும் யோசனையில்தான் நானும் இருந்தேன். தங்கச்சி மாப்பிள்ளை வேறு எனக்கும் வேணும் என்று சொல்லியிருந்தார். நான் குடியிருக்கும் பகுதியில் இப்போதெல்லாம் வாங்க முடியாது. விலை தாறுமாறாய் ஏறியாகி விட்டது. பக்கத்தில் கலை நகர் என்று ஒரு பகுதி உருவாகிக் கொண்டிருந்தது. விறு விறு என்று அங்கு ப்ளாட்டுகள் விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில்தான் இவர்களும் ப்ளாட்டுகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதற்குத்தான் பிளானை வைத்துக் கொண்டு அலைகிறார்கள் என்றும் பிறகுதான் தெரிய வந்தது.

நானாய்ப் போய்ப் பார்த்தபோது  சீட்டுக் கட்டுபோல் வெறும் மூணு மூணு சென்ட்களாகத்தான் இருந்தன. வெறுமே வாங்கிப்போட்டு நாளை விலை ஏறிய பின்னால் விற்கத்தான் உதவும் அது. வீடு கட்டுவதென்றால் சுற்றிலும் செடி கொடி மரங்களுக்கு இடம் விட்டு, முன் பக்கம் கார் பார்க்கிங் இடம் செய்து, கொஞ்சம் பார்வையாய்க் கட்ட வேண்டும் என்கிற எண்ணமிருந்தது என்னிடம். இந்த வீட்டில் செய்யாது விட்டவற்றை, நிறைவேறாத கனவுகளை, புதிய வீட்டில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. யாருமே தான் நினைத்தபடிக்கு, தன் ஆசைக்கு  வீடு கட்டியிருக்க முடியாதுதான். எப்படியும் கட்ட ஆரம்பித்த பின்பு சில மாற்றங்கள் வந்து போகும். பில்டரோடு சண்டை போட முடியாது. வேலை நின்று போகும். மனத் தாங்கல் வந்து விடும். அது என் கனவு வீட்டில் நிகழக் கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தேன்.

நாம் ஒன்று நினைக்கிறோம். தெய்வம் ஒன்று நினைக்கிறது. எடம் கிடைக்காது உங்களுக்கு. முதல்ல இடத்தைக் கேட்ச் பண்ணப் பாருங்க...அப்புறம் இந்தச் சுற்று வட்டாரத்துல எங்கயுமே இன்னை தேதிக்கு ப்ளாட் கிடையாதாக்கும் என்று நெருக்கினார் பிரகதீஸ்வரன். அந்த முயற்சியின்போதுதான் மைதிலி அவரோடு கொஞ்சம் பேச ஆரம்பித்தாள்.

மும்மூணு சென்ட் டோக் டோக்கா இருக்கு...நமக்கு ஏத்தாப்ல....அஞ்சரை சென்டா தேடினா பைசாவுக்கு எங்க போறது? என்னாலெல்லாம் லோன் போட முடியாது....இருக்கிற சேவிங்ஸ்ல வாங்கப் பாருங்கோ...பாங்க்ல டெபாசிட்டுக்கு வட்டி கம்மியாப் போச்சு. அதுக்கு இடத்தையாச்சும் வாங்கிப் போடலாம். இன்னும் எத்தனை வீடு கட்டியாகணும்? இந்த ஒண்ணு போறாதா? நம்மகிட்டே இருக்கிற சேமிப்புக்கு மூணு சென்ட்தான் சரி வரும். அகலக்கால் வச்சு எதிலயாச்சும் மாட்டிக்காதீங்கோ... உங்க தங்கை மாப்பிள்ளையும் அப்டித்தான் விரும்புவார். வேணும்னா பாருங்கோ...சரின்னு சொல்றாரா இல்லையான்னு.....! என்று பொழிந்து தள்ளினாள். என் வார்த்தையை மீறினா அப்புறம் நான் நானில்லை....அதுதான்...!

அதற்கு மேல் அப்பீல் ஏது? பிரகதீஸ்வரனும், அவரது ஏஜென்டும் வந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள். சத்தமில்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை ஊரைக் கூட்டித் தேர் இழுத்தாற்போல் ஆக்கியாச்சு. என்ன விஷயம் சார்...? என்று எதிர்வீட்டு சாம்பசிவம் வேறு முகத்தை நீட்டினார். விஷயம் அவருக்கும் தெரியவர, உடனே கிளம்பிப் போனவர் அவர்தான். போய்விட்டு வந்து, அதென்ன சார்...ரோட்டுலேர்ந்து உள்ளே போய்க்கிட்டேயிருக்கு...!  ரெண்டு மூணு பர்லாங் போகுது சார்..டூ வீலர் இல்லாமப் போறது வர்றது ஆகாது....எனக்குத்தான் வண்டியே ஓட்டத் தெரியாதே...! பஸ்லேர்ந்து இறங்கி எம்புட்டுத் தூரம் நடக்குறது? நமக்காகாது......ஆனா ஒண்ணு பின் பக்கமா மெயின்ரோடு  வந்தீங்கன்னா அப்டியே நம்ம வீட்டுக்கு வந்திடலாம். அது ஒண்ணுதான் இன்னைக்குத் தேதிக்கு வசதி என்றார்.

தங்கை மாப்பிள்ளை வந்தார்...போய்ப்  பார்த்தார்...சரி என்று ஒப்புக் கொடுத்து விட்டார். எதிரெதிர் ப்ளாட்டுகள் மூன்று சென்டுகளாக அமைந்தன. வாங்கிப் பணம் கொடுத்து பத்திரம் பதிந்து எல்லாம் ஆயிற்று. அதை மைதிலி பேருக்குத்தான் நான் பதிந்தேன். அதில் அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒரு இடத்தின் அதிபதி அவள்.

மனிதனுக்குத் தேவை ஆறடி. இந்த மண்ணிலிருந்து எடுத்ததெல்லாம் இந்த மண்ணுக்கே...இன்று உனது நாளை வேறொருவருடையது. நாளை மறுநாள் இன்னொருவருடையது.....மனதுக்குள்  இந்த நினைப்பு வந்தவனுக்கு எதுவுமே பெரிசில்லை..

தோ பிரகதீஸ்வரன் போய் விட்டார். நாளை என்பது நமக்கு ஏது? இன்றிருப்பார் நாளையில்லை. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு....! தலைமாட்டில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. நிச்சலனமாய் இருந்தது அவர் முகம். தப்பித்து விட்டேன் பார்த்தீர்களா? என்று கண்களை மூடிக் கொண்டிருக்கிறாரோ? சுற்றிலும் மூன்று பெண்கள் மூலைக்கு ஒருவராய்.   அருகிலே சோகமே உருவாய் அவரின் இரண்டு மகன்கள். இனி அந்தக் குடும்பம் எப்படி நிமிரப் போகிறது? –

மூத்த பையனை வெளியே அழைத்து வந்து அவன் கையில் அந்தப் பணத்தை திணித்தேன். இது உங்க அப்பாவுக்கு நான் கொடுக்க வேண்டிய கமிஷன் தொகை. ரெண்டு ப்ளாட் வாங்கினதுக்கு.தெரிஞ்சிதா?  அதோட ஒரு மூவாயிரம் சேர்த்து வச்சிருக்கேன்....கடைசிக் காரியங்களைச் சுருக்கமா முடிக்கப் பார்...பெரிய எடுப்பு வேண்டாம்...தெரிஞ்சிதா?  நான் ஒருத்தரைச் சொல்லி வரச் சொல்றேன்...அவர் கொஞ்சமாத்தான் கேட்பார். குறைச்சு முடிச்சுக் கொடுப்பார்....சரியா?

சரி என்று தலையாட்டியது போல்தான் இருந்தது. அதுநாள் வரை நான் அவர்களோடு  அதிகம் பேசியதில்லை. ஆதலால் அவர்களின் போக்கு எப்படி என்பதையும் அறிவதற்கில்லை. ஆனாலும் கடைசிக் காரியங்களுக்கு காசு பஞ்சாய்ப் பறக்கும். அதனால்தான் எச்சரித்தேன்.

வெளியே வந்தேன். துக்க வீட்டில் சொல்லிக் கொள்ளக் கூடாது. செருப்பை மாட்டிக் கொண்டு சாலையில் இறங்கியபோது, மாட்டுக் கொட்டகையில் இருந்த பசுக்கள் மிகுந்த சோர்வாய்த் தென்பட்டன என் கண்களுக்கு. அடங்கிப் படுத்திருந்தன. மனிதர்களை விட அவை மிகுந்த வாஞ்சை மிக்கவை என்று தோன்றியது..

வீட்டுக்கு வந்தபோது மைதிலி கேட்டாள்......எப்போ எடுக்கப் போறாளாம்....?

அவரோட ப்ரதர்ஸ் ரெண்டு பேர் பெங்களூர்ல....அவா வந்தாகணுமே...! மத்தியானம் ரெண்டுக்கு மேலே ஆயிடும்....

பாவந்தான் ஆனாலும்...திடீர்னு இப்டிப் போயிட்டாரே...! அந்தக் குடும்பம் என்ன செய்யும் இனிமே? கலங்கித்தான் நின்றாள் மைதிலி. அவளைப் பார்த்து எனக்கும் மனசு ஆடிப் போனது.

 அந்தக் கமிஷன் தொகையைக் குடுத்தாச்சுதானே?  அவங்க துட்டு நமக்கெதுக்கு? கேட்காட்டாலும் கொடுத்துடுறதுதானே நியாயம்...!  என்றவள்...சற்று நிறுத்தி என்னைத் தீர்க்கமாய்ப் பார்த்துக் கேட்டாள்.

கொஞ்சம் சேர்த்தே கொடுக்கலாம் .இந்த நேரத்துலே..என்னண்ணா...நான் சொல்றது...? என்றாள். கல்மிஷமில்லாத அவள் மனசை அந்தக் கணம் துல்லியமாய் உணர்ந்தேன்.

கொடுத்தாச்சு....! என்றேன் நிதானமாக...!

                                        ---------------------------------

 

 

      

    

      

      

 

      

       

 

      

 

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...