11 ஏப்ரல் 2021

ஆச்சரியம் என்னும் கிரகம்” - 5 சிறுகதைகள் - ஜப்பானிய மூலம்-ஷிஞ்ஜி தாஜிமா-தமிழாக்கம்-வெங்கட் சாமிநாதன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

 

“ஆச்சரியம் என்னும் கிரகம்” - 5 சிறுகதைகள் - ஜப்பானிய மூலம்-ஷிஞ்ஜி தாஜிமா-தமிழாக்கம்-வெங்கட் சாமிநாதன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன் (வெளியீடு - சாகித்ய அகாடமி,குணா காம்ப்ளெக்ஸ், அண்ணசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18)                                                           ---------------------------------------------------     



                                        

 சிறார் இலக்கியப் படைப்புக்கள் என்று இன்று எத்தனையோ புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல படைப்புக்கள் குழந்தைகளுக்கு எளிமையாகக் கதை சொல்ல வேண்டும் என்கிற நோக்கில் வலியக் கதை செய்யப்பட்டதாகவே தோன்றுகின்றன எனலாம். மிருகங்களுக்கு, வீட்டுப் பிராணிகளுக்கு என்று மனிதர்களின் பெயர்களை வைத்து உலவவிட்டு கதை பின்னினால் எளிமையானதாகத் தோன்றும் என்றும் அதன் மூலமே குழந்தைகளின் மனதில் சின்னஞ் சிறு  கதைகளை இருத்த முடியும் என்கிற எண்ணத்திலேயும் படைப்புக்களைக் காண முடிகிறது. அதுவே சிறுவர்களுக்கான இலக்கியம் என்றும் பேசப்பட்டு தொடர்ந்து படைப்புக்கள்  வலம் வந்து கொண்டிருக்கின்றன.

       ஆனால் சமூக நிகழ்வுகளை, மனிதர்களின் செயல்களை, ஆசைகளை, வஞ்சக எண்ணங்களை, எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கான வளர்ச்சிகளை விரட்டிக் கொண்டு ஓடும் மனித சமுதாயத்தை, தேய்ந்து கொண்டிருக்கும் மனித நேய உணர்வுகளை, சுயநலத்தை குழந்தைகளுக்கு நன்றாகப் புரியுமாறு கதையைப் பின்னியிருப்பதும், மிருகங்களின் நடவடிக்கைகள் மேற்கண்ட மனிதச் செயல்களைத் தோலுரித்துக் காட்டுவிதமாகவும் கதைகளை அமைத்திருப்பதும், சிறார் இலக்கியம் என்பது இவ்வகையிலேயே இருத்தல் வேண்டும் என்கிற  அவசியத்தை உணர்த்தும் விதமாக எளிமையாக திரு வெங்கட் சாமிநாதன் அவர்கள் மொழி பெயர்த்து அவசியம் படிக்க வேண்டிய முக்கியப் புத்தகங்களில் ஒன்றாக இதனை நிறுவியிருப்பது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.

       கோன் இச்சி என்கிற நரி கென்-போன்-டான் என்ற மந்திரத்தைப் பயன்படுத்தி மனித உருவம் கொள்கிறது. இந்த மந்திரம் என்ன உருவத்தை அடைய அந்த நரி விரும்புகிறதோ அந்தக் குறிப்பிட்ட உருவத்தை அடைய முடியும் என்கிற நிலையில் மனித உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது.

       இப்படி மனிதனாக மாறிய பல நரிகள் இன்று இருக்கும் இடமே தெரியாமல் எங்கெங்கோ சென்று விட்டார்கள். ஆகையினால் மகனே தயவுசெய்து நான் சொல்வதைக் கேள், இந்த விஷப் பரீட்சை  வேண்டாம் என்று  தாய் நரி சொல்ல, கோன் இச்சி அதைக் கேட்காமல் மனித உரு எடுத்து, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கண்ட ஒரு கம்பெனிக்குள் வேலை தேடிப் போகிறது. அதற்கு வணிக அதிகாரியாக வேண்டும் என்கிற ஆவல். நிறைய சம்பாதித்து உனக்கு சாப்பிடுவதற்கு ருசியான முயல்களை வாங்கி வருவேன் என்று தாய் நரியிடம் சொல்லிவிட்டு நேர்முகத் தேர்விற்குச் சென்று வணிக வரி அதிகாரியாகச் சேர்ந்து விடுகிறது. முயல் கோழி, எலி எல்லாம் வளர்க்கத் தெரியும் எனக்கு. ஒரு மிருகப் பூங்காவைப் பொறுப்பேற்று நடத்தத் தெரிந்தவன் என்று கூறுகிறது கோன் இச்சி.

       வீடுமலை (கோன் இச்சி இருக்கும் மலை) மிருகங்கள் பற்றியெல்லாம் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தேன்...என்று கூறி நிறுவனர் கோன் இச்சி பொறுத்தமான ஆள் என்று வேலை கொடுத்துவிடுகிறார். மாதங்கள் கழிகின்றன. வேனிற்காலம் கழிந்து, கோடை காலம் கடந்து பனிக் காலம் வருகிறது. விற்பனைக்கு நிறைய மயிர்த்தோல் ஆடைகள் வேண்டுமே என்று நிறுவனர் சொல்ல உற்பத்தியைப் பெருக்கும் வேலைகளில் கோன் இச்சி ஈடுபடுகிறான்.ஆடைகள் சேமித்து வைத்திருக்கும் பண்டகசாலைக்குச் செல்கிறான்...அங்கு அவனுக்கு பெரும் அதிர்ச்சி.

       அவன் தோழமைகள்...சக மிருக நண்பர்கள்...அவைகளின் பதப்படுத்தப் படுவதற்காக தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட தோல்கள்....அணில், முயல், கரடி, மரநாய், கீரி, வளைக்கரடி என்று எண்ண மிருகங்களின் கொத்துக் கொத்தான  தோல்கள் தலைகீழாக....மனம் கொதிக்கிறது. தேம்புகிறது. அழுகிறான் கோன் இச்சி. என் இனத்தையே அழிக்கும் இந்த உத்தியோகத்திலா நான் இருக்கிறேன். இதிலா இருந்து இத்தனை நாள் என் பசியைப் போக்கினேன்...இதென்ன பரிதாகம்?கடவுளே...! உனக்கு இரக்கமேயில்லையா...? இவற்றைக் கொள்ளை கொள்ளையாய் விற்றா இந்த நிறுவனர் லாபம் சம்பாதித்துக் கொழிக்கிறார்?  என்று குமுறுகிறது.

       அதே சமயம் இன்னொரு மனசு நான் மனிதன், இப்போது மிருகமில்லை...இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை...இப்படியாய் நினைத்துப் பார்ப்பதும் நியாயமில்லை என்று கூறுகிறது.

       மறுநாள் காலை ஒரு பெரிய வேட்டைக்காரக் கூட்டம் மலை நோக்கிச்  செல்கிறது. கூடச் செல்கிறான் கோன் இச்சி. துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சத்தத்திலிருந்து ஒதுங்கி விடு என்று நரியாய் இருந்தபோது அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது.

       நான் இப்போது மனிதன். ஒரு நிறுவனத்தின் பணியாளன். என்னை மதித்து அனுப்பியுள்ள நிறுவனருக்கு நான் செய்ய வேண்டிய கடமை இது என்று சொல்லிக் கொள்கிறர். பதுங்கும் நரிக்கூட்டங்களை, முயல் கூட்டங்களை, இன்ன பிற மிருகங்களை நோக்கி துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. ஒருநிலையில் தன்னை மறைத்துக் கொண்டு சரியான நேரத்துக்குக் காத்திருந்து, குறி பார்த்துப் பாயும் அந்த வெள்ளை உருவத்தை நோக்கித் தன் துப்பாக்கிக் குண்டை குறிப்பாகச் செலுத்துகிறது கோன் இச்சி.

       அலறி விழுகிறது அந்த வெள்ளை நரி.   ஆஉறா....இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு மிருகத்தை நம் நிறுவனம் கண்டதேயில்லை. என்ன அபாரமான திறமை உனக்கு. உன்னுடைய தொழில் பக்தி, கடமையுணர்ச்சி கண்டு நான் பெருமைப்படுகிறேன்...என்று நிறுவனர் அகமகிழ்ந்து பாராட்ட, அந்த வெள்ளித்தோல் நரி கோன்இச்சி சுட்டு வீழ்த்திய அவன் தாய் என்பதை அறியும்போது மனம் பதைத்துப் போகிறது நமக்கு.

       ஐயோ...என்ன பாவம் செய்துவிட்டேன்...எனக்கு இந்த வேலை வேண்டாம். வசதி வாய்ப்புக்கள் வேண்டாம், வருமானம் வேண்டாம்...எனக்கு என் அம்மாதான் வேண்டும்...அம்மாதான் வேண்டும் என்று கதறுகிறான் கோன் இச்சி.  மலையை நோக்கி ஓடுகிறான். யார் கண்ணிலும் படாமல் எங்கோ சென்று மறைந்து விடுகிறான். கோன்...கோன்...கோன்...என்ற ஒலி மட்டும் ஏங்கும் குரலாக அந்த மலைப்பிரசேத்தில் விடாது இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

       மனிதனாக மாறிவிட்ட ஒரு மிருகம் எப்படி இயந்திரத்தனமாக இயங்கி, தன் சுற்றங்களை அழிக்கிறது, இழக்கிறது என்கிற வேதனையாக உண்மையை இந்தச் சிறுகதையில் உணர்கிறோம் நாம். தாயை விட்டுப் பிரிந்து சென்று மனிதனாக மாறி நகர்ப்புறத்துள் புகுந்து, தன் சுற்றத்தையும், தாயையும் மறந்து, கடைசியில் தன் இனத்தின் அழிவையே தன் பணியில் காணுவதும், தானே அதற்குக் காரணமாய் அமைந்து விடுவதும், பெற்றெடுத்த தாயையே இழந்து நிற்பதும், இன்றைய ஐ.டி.. நிறுவனக் கலாச்சாரங்களோடும், வெளிநாட்டு மோகங்களோடும் பொருத்திப் பாருங்கள். கோன் இச்சி வீடுமலை என்ற தலைப்பிலான இந்தக் கதையின் உள்ளார்ந்த நோக்கமும், நியாயமும் நமக்குப் புரிபடும்.

       மனித இனம் தன்னுடைய வளர்ச்சிக்காக எப்படியெல்லாம் அசுரத்தனமாக இயற்கை வளங்களைச் சுரண்டுகின்றன என்பதை விளக்கும் சிறப்பான படைப்பாக ஆச்சரியம் என்னும் கிரகம் கதை விளங்குகிறது. தொகுதியின் ஐந்து கதைகளும் அன்பு கலவாத பேராசை மனித ஆத்மாவையே கொன்று விடும் என்கிற தத்துவத்தை உள்ளடக்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

       இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் இயற்கை வளங்களை எப்படியெல்லாம் சீரழித்து, வறட்சியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும், மனிதர்களின் பேராசைகள் எல்கையற்று விரிந்து பரந்து பற்பலவிதமாக அழிவுகளுக்கு எந்தெந்த வகையில் காரணமாய் அமைந்து விடுகிறது என்பதையும், பிற உயிரினங்களை அழித்து தன்னை வளப்படுத்திக் கொள்வதில் மனிதர்களின் முனைப்பும், இரக்கமற்ற தன்மையும், சுயநலத்தையும், பேராசையையும் முடிவற்ற நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருப்பதை குழந்தைகள் மட்டுமல்லாது வயது முதிர்ந்தோராகிய நம்மின் உணர்தலுக்கும் முக்கிய காரணமாய் நின்று இளைய தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி நம்மை பயப்படுத்தி விரக்தி கொள்ள வைக்கிறது.

       திரு வெங்கட்சாமிநாதன் அவர்களின் தமிழாக்கம் படிப்பதற்கு நெருடலின்றி, குழந்தைகளுக்குப் புரிவதுபோல் எளிய மொழியில் சரளமாகச் சொல்லப்பட்டிருப்பதே இப்புத்தகத்தின் சிறப்பாகும். சாகித்ய அகாடமியின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இந்த ஆச்சரியம் என்னும் கிரஉறம் விளங்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...