11 மார்ச் 2021

ஏழாம்கடல் - ஜெயமோகன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் -----------------------------------------------------------

ஏழாம்கடல் - ஜெயமோகன் சிறுகதை - வாசிப்பனுபவம்  -  உஷாதீபன்                          -----------------------------------------------------------


     “எனக்குத் தெரியும்...அருமுத்து...அப்படி ஒரு முத்து ஆழத்திலே காத்து இருக்குன்னுட்டு...நான் சிப்பி கொண்டுபோயி குடுக்குறது அதனாலேதான்...பிள்ளைவாள் அந்தக் கறிய திங்கிறப்ப அவருக்க வாயிலே ஒருநாள் அது தட்டுப்படும்...கையிலே எடுத்துப் பாப்பாரு...முத்துன்னு தெரிஞ்சிரும்...“

     எத்தனை களங்கமற்ற, விகல்பமில்லாத மனசு வியாகப்பனுக்கு? நான்காம் வகுப்புவரைதான் படித்தவர். அவரோ மெட்ரிகுலேஷன் முடித்தவர். கல்வியா மனி தனை உருவாக்குகிறது? அதுவா ஒருவனை செப்பனிடுகிறது? அதுவா இந்த உலகத்தைக் காட்டுகிறது?  அது களங்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது. இல்லையென்றால் வியாகப்பனே அறியாத, ஏழாம் கடலின் ஆழமான நட்புக்கொண்ட அவருக்கு ஏன் அந்த உண்மை தெரியாமல் போனது?  அது ஏன் மறைக்கப்பட்டது? -ஜெயமோகனின் ஏழாம்கடல் இப்படிப் பல கேள்விகளை எழுப்புகிறது நமக்கு.

     எப்படிப்பட்ட மனிதனையும், எந்த நேர்மையாளனையும் புரட்டிப்போட்டு விடும் அந்தச் சூழல். இருந்து பார்த்தவருக்குத்தான் தெரியும். மனிதன் நேர்மை, நாணயம் என்று வாய் கிழியப் பேசித் திரிவதில் அர்த்தமில்லை. அப்படியான சூழலில் இம்மியும் பிசகாமல் இருந்து காட்டணும்! பிள்ளைவாள் பொதுப்பணித்துறைக்கு போய்ச் சேர்ந்ததும் இதற்கு ஒரு காரணமாய் இருக்குமோ? அதற்குத்தான் ஒரு கோடி காட்டுகிறாரோ?   இல்லையெனில் அந்த முத்து ஏன் மறைக்கப்பட வேண்டும்? பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியும்.....!

     கறி திங்கிறப்ப வாயிலே ஏற்கனவே தட்டுப்பட்டு விட்ட அந்த முத்து...அது வியாகப்பன் அறியாது பிள்ளைவாளுக்கு அளித்த  முத்து. அவருக்குச் சொல்லப்படாத அருமுத்து. ஒரு நாள் பிள்ளைவாளுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த வியாகப்பனின் ஆத்மார்த்த விருப்ப அடையாள முத்து. அவரறியாமல் பிள்ளேவாளிடம் வந்து சேர்ந்த முத்து.

     பாவம் மாதாவுக்கும் தெரியாது....சிக்கினது ஒரு துளி வெசமாக்கும்....மேலே சொர்க்கம்னு இருக்கும்லா? அங்க இருந்து பிள்ளைவாள் நினைப்பாரு... வியாகப்பன் நல்லவனாக்கும்னு...அவரு என்னைய வெறுக்க மாட்டாரு...பிள்ளே அப்படி வெறுத்துப்போட்டா...பின்ன மனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா?

     என்ன ஒரு வரிகள்? இதற்கு மேல் ஒரு மனிதனின் அன்பை, நட்பின் ஆழத்தை, உறவுப் பாலத்தை எப்படி நினைக்க வைத்து உணரச் செய்ய முடியும்? மாதாவுக்கே தெரியாது அது என்று நினைக்கும் மனது வியாகப்பனுடையது. அவரின் பக்தி, அந்த நம்பிக்கை, அதில் பொதிந்திருக்கும் உண்மை, நேர்மை, சத்தியம் அத்தனையும் அந்த ஒரு வரியில் வெளிப்பட்டு விடுகிறதே...! அந்த இக்கட்டிலும் இறையருளை சந்தேகிக்கத் தயாரில்லை அவர். அது அவருக்கு, அந்த வெள்ளை மனதுக்குத் தெரியாத ஒன்று.

     வியாகப்பன் சத்தியவந்தன்...அவரது நேர்மையை, அன்பை, அப்பாவின் மீது உள்ள பாசத்தை சந்தேகிப்பதற்கில்லை...-பர்னபாஸின் அந்த மனசு. ஒருவருக்கு மிஞ்சி ஒருவர் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான நம்பிக்கை...அதன் ஆழம்.....நேர்மை உள்ளம்....

     என் அப்பா இப்ப நீங்களாக்கும்..என் அப்பா வேற...நீங்க வேற இல்லை...என்னை அனுக்கிரஉறிக்கணும்....-பர்னபாஸின் இந்த வரிகள் அந்த இருவரின் ஆழமான நட்பை,  அவர்கள் இளம் பிராயம் முதல் கொண்டிருந்த பாசமிக்க உறவை எத்தனை உயரமாய்த் தூக்கி நிறுத்துகிறது?

     நல்லா இருக்கணும்...நிறைஞ்சு வாழணும்.....-கண்களைக் கலங்கடித்த வரிகள். நிறைஞ்சு வாழணும்....வியாகப்பனின் ஆசி...விண்ணுலகுக்குப் போய்விட்ட பிள்ளைவாளையும் உடன் நிறுத்தி வழங்கப்பட்ட உளமார்ந்த, பரிபூர்ண வாழ்த்துகள்.

     ஏழாம் கடலின் ஆழம் இறைவனே அறியாதது. பரமபிதாவுக்கும் மனுசகுமாரனுக்கும், மாதாவுக்கும்கூடத் தெரியாது...தெரிஞ்சுக்கிடவே முடியாது...நான் அறிஞ்சு கொண்டு வரலை...விசம்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சாலும், இல்லேன்னாலும் அது நான் கொடுத்த விசம்....நான் கடலு கண்டவனாக்கும் பிள்ளே....

     அடுத்த நாளே வியாகப்பன் மறைகிறார்....ஏன்...அது அப்படி நடக்கிறது? சொர்க்கம் போய் பிள்ளேவாளிடம் அந்த சத்தியத்தைச் சொல்லியாக வேண்டும். அந்த அவசரம்தான் வியாகப்பனுக்கு. அவர்களின் அத்தனை வருடப் பாசத்தின், நேசத்தின் அடையாளம் அது. மனசாட்சி வியாகப்பனைக் கொண்டு சென்று விடுகிறது. அந்த நேர்மையான, இறைத்தன்மை வாய்ந்த மனசாட்சி பிள்ளேவாளுக்கு ஏன் வாய்க்கவில்லை? வாய்த்திருந்தால் அந்த முத்து ஏன் மறைக்கப்பட வேண்டும்? அது ஏன் வியாகப்பனுக்குத் தெரிவிக்கப்படாமல் போக வேண்டும்?

     ஏழாம் கடலின் வானும் நிலமும் என்னுடன் விளையாடும்.... என்று விளையாடிப் பார்த்திருக்கிறார் ஜெ. நெஞ்சை உருக்கிய அற்புதமான படைப்பை இன்று படித்த நிறைவு.  நன்றி

 

உஷாதீபன்

(94426 84188)

 

    

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...