30 நவம்பர் 2020

“ஒரு ஊழியனின் மனசாட்சி” பதாகை டிசம்பர் 2020

                “ஒரு ஊழியனின் மனசாட்சி”      பதாகை டிசம்பர் 2020                                                      ------------------------------------------


      மாறுதலில் உள்ளூருக்கு வந்த பின்புதான் தெரிந்தது, அந்த சங்கத்தின் முயற்சியினால்தான் இது நடந்திருக்கிறது என்று. இருந்த ஊரில் எந்த சங்கத்தைச் சார்ந்தவனாகவும் நான் இருந்ததில்லை. ஏதேனும் ஒன்றில் என்னைச் சேர்த்து விட வேண்டும் என்று முயன்றார்கள். நான் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டே வந்தேன். அது ஏதோ தப்பு செய்வதுபோலான உணர்வையே எனக்கு ஏற்படுத்திக் கொண்டிருந்தது.  சங்கத்திற்கு சந்தா கொடுங்கள் என்று மாறி மாறி வந்து நிற்பார்கள். எதற்கு இத்தனை சங்கங்கள், மொத்தம் எத்தனை சங்கங்கள்தான் இருக்கின்றன என்பதே அப்போது எனது கேள்வியாக இருந்தது.                                                     

முதலில் கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வரன்முறைக்கு ஒரு வருடம் முடிய வேண்டும். பிறகு தகுதிகாண் பருவம் நிறைவு செய்ய வேண்டும். அந்த இரண்டு ஆண்டுகளில் என் மேல் எந்தக் குற்றச் சாட்டும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். எல்லாரும் அப்படித்தானே இருந்தாக வேண்டும்?                                          

 பத்து மணிக்கான அலுவலகத்தில் ஒன்பதரைக்கே போனேன். மாலை ஐந்தே முக்காலுக்கு முடிந்த பின்பும் அரை மணி, ஒரு மணி  கூட இருந்து வேலை செய்துவிட்டுத்தான் கிளம்பினேன். அலுவலக நேரத்தில் டீ குடிக்க என்று  வளாகத்தை விட்டு வெளியே செல்வது எனக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது. ஆபீஸ் பியூன் பாட்சா ஃபிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்ததை என் இருக்கையில் இருந்தமேனிக்கே குடித்துக் கொண்டேன். இன்னொரு பியூன் ரங்கசாமியும் போவது உண்டு. அவன் எட்டு டீக்கு ஆறுதான் வாங்குவான்...நிரவி எல்லோருக்கும் ஊற்றிக் கொடுத்து, தானும் குடித்து, அடுத்த ஒரு வேளைக்கும் அவனுக்கு டீ மிச்சம் வைத்துக் கொள்வான் என்று சொன்னார்கள். பாட்சாவிடம் அந்த வேலை இல்லை என்பது அவர் கொண்டு வந்து நீட்டிய டீயைப் பருகிய போதே தெரிந்தது. சமயத்தில் தண்ணீர் கலப்பதுண்டாம் ரங்கசாமி...பலே ஆள்தான் போலிருக்கிறது.!

      இப்படி  சின்னச் சின்னத் தப்புகளாய் பரவலாய், என் சிந்தைக்குப்  பலவும் பட்டுக் கொண்டேயிருந்தன. எல்லோரும் ஆபீசுக்குத் தாமதமாகவே வந்தார்கள். பத்து மணி டயத்துக்கு பத்து நிமிஷம் கிரேஸ் டைம் இருந்தும் அதையும் தாண்டித்தான் நுழைந்தார்கள். பயங்கர டிராஃபிக் என்றும், ஒன்பதே காலுக்கே கிளம்பிட்டேன்...இப்பத்தான் வர முடிஞ்சிது என்றும், பஸ்ஸே கிடைக்கல என்றும், வழில டயர் பஞ்சராயிடுச்சி என்றும், ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருந்திச்சு என்றும் தாமதத்திற்கு என்னென்னவோ காரணத்தைச் சொன்னார்கள். இவர் மட்டும் எப்டி வர்றாரு...என்று மேலாளர் என்னைக் காட்டி ஏன் கேட்கவில்லை என்று தோன்றியது. பலரும் அடிக்கடி பர்மிஷன் போட்டார்கள். ஒரு மணி நேரம் தாமதமாக பதினோரு மணிக்கு  வருவதற்குப் பதிலாக பன்னிரெண்டுக்கும், ஒன்றுக்கும், ஏன் மதியச் சாப்பாட்டை வீட்டிலேயே முடித்துக் கொண்டு கையை வீசியவாறே ஃப்ரீயாக ரெண்டு மணிக்கு மேலும் கூட வந்தார்கள். மேலாளர் சில நாட்கள் அவர்களிடம் பர்மிஷன் எழுதிக் கொடுங்க என்று கேட்டு வாங்கிக் கொண்டார். சில நாட்கள் முடிவு செய்யாது வைத்திருந்த வருகைப் பதிவேட்டை  எடுத்து நீட்டி, போடுங்க....என்று கருணை செய்தார். அலுவலர் தலைமையகத்தில் இருக்கும் நாட்களில் ஒழுங்காய் பத்தடித்துப் பத்து நிமிஷத்திற்கு அவர் பார்வைக்குப் போனது வருகைப் பதிவேடு. மற்ற நாட்களில் திறந்த வாய் மூடாமல் கிடந்தது. மாதத்திற்கு மூன்று அனுமதி தாண்டினால் அரை நாள் விடுப்பு கட் என்பது வெறும் விதியாக மட்டுமே இருந்தது.                                           

     இதுதான் இப்படி என்றால் கருவூலத்திற்குப் பட்டியல் சமர்ப்பிக்கப் போய்விட்டு வருவேன் என்று சொல்லிவிட்டுப் போன பியூன் மதியம் ரெண்டு மணிக்கு சாப்பாட்டு நேரத்திற்கு வருவதை யாரும் கேட்பதாய் இல்லை. பில் பிரசன்ட் பண்ணி, டோக்கன் வாங்குறதுக்கு எப்டியும் மணி ஒண்ணு, ஒன்றரை ஆயிடுது சார்...ரிஜிஸ்டர எடுத்துக் கொடுத்து நீயே பதிஞ்சிட்டு, டோக்கன் போட்டுக்கோங்கிறார் சார் அந்த அசிஸ்டென்ட்...பில் பாஸ் பண்ணத் தேடி வர்ற ஆளுகளப் பார்க்கிறதுக்கே அவருக்கு நேரம் சரியாயிருக்கு என்று மறுக்க முடியாத ஒரு  வரவு உண்மையைச்  சொல்லி, எல்லோர் வாயையும் அடைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது.                 அது கிடக்கட்டும், காலையில் அலுவலகம் வந்துதானே பட்டியலைக் கருவூலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், ஏன் முதல் நாளே கொண்டு போய் வீட்டில் வைத்துக்கொள்கிறார்? பட்டியலும் பதிவேடும் ஏதேனும் டேமேஜ்  ஆனால் அல்லது தொலைந்தால்...யார் பொறுப்பாவது? இந்தக் கேள்விக்கும் அங்கு பதில் இல்லாமல்தான் இருந்தது. பியூன் மேலாளருக்குப் பயப்படுகிறாரா என்பதே சந்தேகமாயிருந்தது. யாருக்கு யார் பயப்பட வேண்டும் அவரவர் வேலைகளை ஒழுங்காய், முறைப்படி செய்தால்? ஒருவேளை மேலாளர் இந்த பியூனுக்குப் பயப்படுகிறாரோ? அப்படியும் இருப்பதற்கான காரணங்கள் அங்கே கொட்டிக் கிடப்பதாய்த் தோன்றியது. அவருக்கும் அலுவலருக்குமான ரகசியங்கள் அங்கே நிறைய இருந்தன. அதற்காக அவர் எல்லாவற்றையும் சற்று அடக்கி வாசிப்பதாகவே எனக்குத் தோன்றியது.                   

     பாஸ் ஸ்டேட் லெவல் மீட்டிங்  போறாருல்ல சார்...அதுக்கு டிக்கெட் போடப் போனேன் சார்...என்று சாவகாசமாய் வந்தவரை என்ன சொல்லிக் கண்டிப்பது? டிக்கெட் போட்டுட்டீங்களா? என்று சகஜமாய்த்தான் அவரால் கேட்க முடிந்தது. இம்மாதிரிப் பல வேடிக்கைகள் அங்கு உண்டு.

      பொதுவாய்ச் சொன்னால் கடமை என்பது ரெண்டாம்பட்சமாய்த்தான். அந்த ரீதியில் அதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே அமைதி காக்க வேண்டியிருந்தது. ஆனால் மன ஒப்புதல் இல்லாமலேயே நாட்கள் இப்படி நகர்ந்து கொண்டேயிருக்கிறதே என்று தோன்றிக் கொண்டேயிருந்தது.

      அலுவலக மேலாளரின் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகத்தான் நான் என் கடமையைச் செய்தேன். காரணம் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக நான்கு முறை தற்காலிகமாய் ஆறு மாதம், ஒரு வருடம் என்று நான் பணியில் அனுபவமடைந்திருந்தேன். என்னை விடக் கூடாது என்று அலுவலகத்தில் ஒவ்வொருவராய் லீவு போடச் சொல்லி அந்த இடத்தில் என்னைப் போட்டு என் பணியை நீட்டித்துக் கொண்டேயிருந்தார் அந்த போர்டின் சேர்மன். காரணம் எழுத்தர் பணியோடு, சுருக்கெழுத்தும் தெரிந்தவனாக நான் இருந்ததே அதற்குக் காரணம். அந்தத் தற்காலிகப் பணியிலேயே பலரின் பொறாமைக்கும், கோபத்திற்கும் ஆளானவன் நான். என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? வீட்டுக்குப் போகச் சொன்னா போறேன்...என்று சொல்லியே அங்கு ஓட்டிக் கொண்டிருந்தேன். என் அதீதமான கடமையுணர்ச்சி என்னைக் காலத்துக்கும் காப்பாற்றியது என்றுதான் சொல்லியாக வேண்டும். அது என் தந்தையிடமிருந்து நான் கற்றுக் கொண்டது.                  கக்கூஸ் கழுவுறதானாலும் கூட அதுக்கு முன்னாடிவரைக்கும் செய்தவங்கள விட நான் நல்லாச் செய்வேன்னு செய்து காட்டணும்...என்பார் என் தந்தை. அந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்னிடமும் அப்படியே படிந்திருந்தது.       எந்தவேலையையும் நான் கேவலமாக, கௌரவக் குறைவாக நினைத்ததில்லை. என் வேலையை மட்டும் சரியாய்ச் செய்தால் போதும் என்றும் இருந்ததில்லை. அலுவலகத்தில் எனக்குத் தெரியாத வேலை என்று எதுவும் இருக்கக் கூடாது என்றே இயங்கினேன்.                                                                

     என்னைப் பொறுத்தவரை வேலைதான் எனக்கு முதல். மற்றவை பிறகுதான் என்பதில் நான் பிடிவாதமாய் இருந்தேன். ஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருப்போம்...என்பதுபோல் விடாமல் என்னிடம் வந்து சந்தாவுக்கு நின்று கொண்டேயிருந்தார்கள் சங்கத்தார். கொஞ்சம் கோபமாகவும், சத்தமாகவும் ஊதினார்கள் என்னிடம்.                                                     

 

 முதல்ல சந்தா கொடுத்து, மெம்பர் ஆகுங்க தோழர்...பிறகு கூட்டத்துக்கெல்லாம் வரலாம் என்றார்கள். அந்தத் தோழர் என்ற வார்த்தை என்னவோ செய்தது என்னை.  அவர்கள் என்னதான் பேசுகிறார்கள், செய்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருந்தேன். அது மனதுக்கு ஒப்புதலாய் இருந்தால்தான் சந்தா கொடுப்பது என்பது என் எண்ணமாய் இருந்தது.                                சந்தாவக் கட்டி மெம்பர் ஆகிக்குங்க...அப்புறம் உங்களத் தொந்தரவு செய்ய மாட்டோம்...மாதாந்திரக் கூட்டங்களுக்கு நீங்க இஷ்டப்பட்டா வந்தாப் போதும் - இப்படி ஒரு சங்க நண்பர்கள் வந்து சொன்னார்கள். அவர்களுக்குத் தேவை போதுமான எண்ணிக்கையும், பணமும்.          நிர்வாகத்துக்கு எதிராகவே இரண்டு மூன்று சங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது. ஆதரவாய் ஒன்று கூடக் கிடையாதா? என்கிற கேள்வியும் தோன்றியது. ஏன் இல்ல என்று ஒரு சங்கம் இயங்குவதையும் (அப்படித்தான் சொன்னார்கள்) தெரிவித்தார்கள். அரசாங்கம் தன் வழக்கமாய்ப் போட்ட உத்தரவுகளையெல்லாம் இவர்கள் சாதித்தது போல் சொல்லிக் கொண்டார்கள். ஏதோ இங்கிருந்தே விரலசைத்தால் அங்கு நடந்துவிடும் என்று காட்டிக் கொண்டார்கள். பொய்மைக்கு அஞ்சாத சமூகமாய் இருந்தது.                                 இவர்களுக்குச் சரி என்று தோன்றும் சில அவர்களுக்கு ஏன் தப்பாய்த் தோன்றியது. அவர்களுக்குத் தப்பாய்த் தோன்றும் சில இவர்களுக்கு ஏன் சரி என்று தோன்றுகிறது? பணியாளர் நலன் என்று பொதுவாய் எதிர் கொண்டால் எதிர்த்துத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன? தேவையைக் கேட்டு, தொடர்ந்து வற்புறுத்தி படிப்படியாகப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? எதற்காக நிர்வாகத்தை எதிர்க்க வேண்டும்? பணியாளராய் இருந்து கொண்டு, அது தரும் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு, அதையே எதிர்ப்பது என்பது சரியா? நிர்வாகம் திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவர்களெல்லாம் தங்கள் கடமையைச் செவ்வனே விடாது செய்து கொண்டிருப்பதுதானே நன்று? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? வெகு காலமாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா? அரசு ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருப்பதுபோல், இவையும் தொடர்ந்து இவ்வழியில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவா? வேலை செய்ய வந்தோமா, போராட வந்தோமா? - எத்தனையோ கேள்விகள் வட்டமிட்டுக் கொண்டேதான் இருந்தன. சிலவற்றிற்கு நேரடியாகவும், சிலவற்றிற்கு மழுப்பியும் சிலர் பதிலளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எனக்குத்தான் சமாதானம் ஆகவில்லை. நோக்கம் ஒன்றாய் இருக்குமானால் எதற்கு இத்தனை பிரிவு? ஒன்றுமில்லாத ஓட்டைப் பதவிகளுக்கு எதற்கு இத்தனை போட்டி?                                                                     வேலைக்கு வருவதற்கு முன் வேலை...வேலை என்று நாயாய் அலைகிறோம். கிடைத்த பின்னால் மெத்தனமா? பொத்திக் கொண்டு வேலை பார்க்க வேண்டாமா?  இப்படியெல்லாம் இருக்கும் என்று நினைக்கவேயில்லை. தெரியவே தெரியாதே...? தற்காலிகப் பணியில் இருந்தபோது இதிலெல்லாம் கவனம் செலுத்தியதேயில்லை...யாரும் தொந்தரவும் செய்ததில்லை. வேலை...வேலை...வேலை....! அப்படியாகவே இப்போதும் ஏன் இருக்க முடியவில்லை? நிரந்தர வேலை கிடைத்திருக்கையில், குடியும் குடித்தனமுமாய் இருப்பதுபோல் பொறுப்பாய், நல்ல பிள்ளையாய் இயங்க வேண்டாமா? என்னெல்லாம் தொல்லை? எனக்குச் சள்ளையாய்த்தான் இருந்தது. சிவனே என்று வேலையைப் பார்த்தமா,போனமா என்று இல்லையே?                        அறுபது வயதுவரை இருக்கப் போகிறோம். இன்னும் என்னெல்லாம் விதிமுறைகளையும், வேலைகளையும் கற்க வேண்டும்...எந்தெந்தத் தேர்வு பாஸ் பண்ண வேண்டும்...அடுத்தடுத்து என்னென்ன பணி உயர்வு கிடைக்கும்...இவைகளில்தானே கவனமாய் இருத்தல் வேண்டும். இவர்கள் ஏன் இப்படி எதையெதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டு அலைகிறார்கள்? அதெல்லாம் தானே கிடைத்து விடும்...இவையெல்லாம்தான் போராடிப் பெற வேண்டியவை...கேட்கத் தவறினால் கை நழுவிப் போகக் கூடியவை என்று நினைக்கிறார்களோ? அதற்கும் போதிய முயற்சி இல்லையென்றால் இருக்குமிடத்தில் பசை ஒட்டியதுபோல் இருந்தாக வேண்டுமே...!                         எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் தொலைகிறது என்று எல்லாச் சங்கத்துக்கும் அவர்கள் கேட்கும் காசைக் கொடுத்துத் தொலைத்தேன் நான். நீங்க அதுல மெம்பரா இருக்கீங்களா? என்று கேட்டபோது ஆமாம் என்று தலையாட்ட அப்ப நன்கொடைன்னு போட்டுக்கிறோம் என்று சொன்னார்கள் ஒவ்வொருவரும். கடைசியில் பார்த்தால் அத்தனை ரசீதுகளிலும் நன்கொடை என்றே குறிப்பிட்டிருந்ததுதான் தமாஷ். பரவாயில்லை...ரசீதாவது கொடுக்கிறார்களே என்றிருந்தது. அடுத்தாற்போல் வந்து நின்றால்...இப்பத்தானே கொடுத்தேன் என்று சொல்லி எடுத்து நீட்டலாமே...!   அது மெம்பர்ஷிப்புங்க...இது நடக்கப்போற மாநாட்டுக்கான நன்கொடைங்க...என்றார்கள். அதுலயும் நன்கொடைன்னுதானே டிக் பண்ணினீங்க...என்றேன். ஒரு கோடு போட்டு சந்தான்னு இருக்கும் பாருங்க...என்று எனக்கு விளக்கம் சொன்னார்கள். இவர்கள் காரியம் இவர்களுக்குத்தான் புரியும் என்றிருந்தது எனக்கு.                                                                ஆபீஸ் நேரத்தில் இப்படி வந்து நிற்பதற்கு யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தது?. அவரவர் இருக்கை வேலைகளைச் செய்யாமல், சங்கம், வசூல் என்று கிளம்பி நகரத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கும் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள் இவர்கள்.                         என்னங்க...இப்ப வந்திருக்கீங்க...இன்னிக்கு ஒர்க்கிங் டேல்ல...?                                    எங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் உண்டுங்க தம்பி...அதெல்லாம் எதுக்குக் கேட்குறீங்க? சந்தாவ எடுங்க....என்றார்கள். அந்த பதிலே அது தப்பு என்று உணர்த்தியது எனக்கு. ஒன்றுமில்லாத, இவர்களாகவே அமைத்துக் கொண்ட, சங்கம் என்கிற அமைப்பிலுள்ள இவர்களுக்கே       இவ்வளவு எடுத்தெறிந்த பேச்சு இருக்குமேயானால், அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அலுவலர்களுக்கு எவ்வளவு இருக்கும்? ஆனால் அவர்கள் இவர்களை எதுவுமே கண்டு கொள்வதில்லையே, ஏன்? அங்கேதானே இருக்கிறது கோளாறு? அவர்களும் ஏதோவொரு விதத்தில் இவர்களுக்குப் பயப்படுகிறார்கள், அப்படித்தானே?                                                                 சங்க வேலை பார்க்கன்னா லீவு போட்டுட்டுப் போங்க...பர்மிஷன்லாம் தர முடியாது... - ஒரு அதிகாரியும் சொல்லவில்லையே...!                                                                 கோரிக்கைகளையும், போராட்டத்தையும் உங்களுக்கும் சேர்த்துத்தானே சார் செய்றோம்...பணபலன் கிடைச்சா எங்களுக்கு மட்டுமா? எங்களவிட டபுள் ட்ரிபுளா உங்களுக்குத்தானே உயருது....                                                                      சரி...சரி...காலா காலத்துல முடிச்சிட்டு வந்து சீட் வேலையைப் பாருங்க...                     என்னவோ இவர் சொன்னபடி அவர்கள் சீக்கிரம் வந்து ஆபீஸ் வேலையைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துவிடுவதைப் போல...அது அவருக்கும் தெரியாதா என்ன? அந்த அளவுக்குச் சொல்லி, தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வது அவர் வேலை.                         அட...போய்யா... என்று இவர்கள்  தங்கள் இஷ்டத்துக்கு ஊர் சுற்றிவிட்டு மறுநாளைக்கு ஆபீஸ் வருவது இவர்கள் வேலை...இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தபோது வயிற்றெரிச்சலாய் இருந்தது எனக்கு. இவங்களையெல்லாம் யார்தான் கேட்பது?       உனக்கேன்யா வயிற்றெரிச்சல்...நீதான் எல்லாத்தையும் தூக்கி நட்டமா நிறுத்தப் போறியா?-இந்தக் குரல் ஏதோவோர் மூலையிலிருந்து எனக்குக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.              ஆனாலும் எல்லோரும் தங்கள் கடமையைச் சரியாய்ச் செய்த நேரம் போக இதையெல்லாம் பார்க்கலாமே...! என்றும் தோன்றிக் கொண்டேதானே இருக்கிறது?                                          மதியம் இடைவேளை நேரத்தில் ஊழியர்களை அழைத்து, காம்பவுன்ட் வாசலுக்குக் கூட்டிச்   சென்று கூடி நின்று கோஷம் போட்டார்கள். சாப்பாட்டுக்கான நேரம் அது. அவர்களை வலிய அப்படி அழைப்பது பலருக்கும் பிடிக்கவில்லைதான் எனினும், மறுக்க முடியாமல், வேறு வழியில்லையே என்று கடனுக்கு வந்து நின்றார்கள். பெண் பணியாளர்கள் எவருக்குமே இந்த நடவடிக்கை பிடிக்கவில்லைதான். ஆண் பணியாளர்கள் சிலரும் எதுக்கு வம்பு? என்று முனகிக் கொண்டேதான் வந்தார்கள். நகருக்கே பத்துப் பேர் இருந்து கொண்டு அத்தனை அலுவலகங்களையும் ஆட்டுவித்தார்கள்.                                                                                இப்படியாக ஒரு வாயில் கோஷத்தை நிறைவேற்றித்தான் ஆக  வேண்டுமா? உங்களுக்காகத்தானே செய்றோம்...வாங்க...வாங்க...என்ற அதிகாரம் வேறு. விருப்பமில்லாமல் இப்படிப் பலரையும் வம்புக்கு அழைத்து நிறுத்தி, மனசில்லாமல் கோஷம் போட வைத்து, ஏதோ அவர்களுக்குப் பாடம் நடத்துவது போலவும், தங்கள் தியாகங்களைப் பறைசாற்றுவதுபோலவும், பணியாளர்களின் பசியறியாமல், மனசறியாமல், சுய விருப்பத்திற்கு மாறாக ஒருவகை மறைமுகமான  வன்முறையைப் பிரயோகித்து அப்படி அழைத்து வந்து வேளை கெட்ட வேளையில் நிற்க வைப்பது கொஞ்சங்கூட நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை.               என் மாறுதல் விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டிருப்பதும், முதுநிலை வரிசைப்படி அடுத்தடுத்து வருவதற்காக, உரிய பதிவேட்டில் பதிவு செய்யப்படாமல் போனதிலேயும் மனசு உறுத்திக் கொண்டேயிருந்தது எனக்கு. இங்குள்ளோருக்கும் சென்னைத் தலைமையக அலுவலகத்தில் உள்ளோருக்கும் மிகவும் நெருக்கமான நடைமுறைகள் இருப்பதும், இவர்கள் சொல்வதை அவர்கள் அப்படியே நம்பி விடுவதும், அலுவலக நடைமுறைகளில் அதன் பாதிப்பு நிகழ்வதும்...தொடர்ந்து நடந்து கொண்டே வந்திருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ளவே எனக்கு நான்கு வருடம் பிடித்தது.                                                                                           எனக்கு வேகம் பிறந்ததே ஐந்தாவது ஆண்டில்தான் என்பதை இங்கு நான் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதும் நான் எந்த சங்கத்தையும் சேராதவனாகவே இருந்தேன். அதுவே ஒரு பெரிய சாதனை என்றும் கொள்ளலாம். ஆனால் இதிலும் ஒரு தப்பு இருக்கத்தானே செய்கிறது என்பதை இங்கே நீங்கள் உணரக் கூடும். இருக்கும் சங்கமெல்லாம் வந்து வந்து காசு கேட்கும்போது, உறுப்பினர் என்ற பெயரிலல்லாமல், நன்கொடை என்கிற பெயரில் நானும் பணம் கொடுத்துக் கொண்டுதானே இருந்தேன். அவர்கள் யாரிடமிருந்தும் எந்த வம்பும் எனக்கு வேண்டாம் என்கிற சுயநலம்தானே அதுவும்?                                                                                   என் மனநிலைக்கும், நடவடிக்கைகளுக்கும்...நான் யாருக்கும் எந்தப் பைசாவும் தரணும்ங்கிற அவசியமில்லை...இந்த சங்கம் கிங்கம் என்பதெல்லாம் வெறும் அசிங்கம்.....என்றுதானே நான் கூறியிருக்க வேண்டும்? என்னால் முடியவில்லையே...! அப்படியிருந்தும் இந்த மாறுதல் விஷயத்தில் இவ்வளவு விளையாடியிருக்கிறார்களே...! பணிப்பொறுப்பு ஏற்று இரண்டாண்டுகளுக்குப் பின் மாறுதல் விண்ணப்பம் கொடுக்கலாம் என்று விதிமுறை இருக்கையில் (இதையும் மீறி வந்த ஆறு மாதத்திலேயே விண்ணப்பம் அளித்து, தங்கள் அரசியல் செல்வாக்கால் சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டுபோன பிரகிருதிகள் அநேகம்) அதை முறைப்படி செய்திருந்த என் கேட்பு விண்ணப்பம் தக்க பதிவேட்டில் வரிசைக்கிரம முதுநிலை கருதிப் பதியப்படாமல், காணாமல் போக்கடிக்கப்பட்டிருக்கிறதே...! இந்த உள்குத்து வேலைகள் ஒரு வேளை தலைமைக்குத் தெரியாமலே போயிருந்தால்? மாநிலம் தழுவிய அவருக்கிருக்கும் தலைபோகும் பொறுப்பில் இப்படி சின்னச் சின்ன விஷயங்களையெல்லாமுமா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? பின் எதற்காக இத்தனை அதிகாரிகள், பணியாளர்கள்?  அரசின் திட்டப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றுவதில் அவர் கவனமாய் இருப்பாரா...அல்லது இந்தச் சாதாரண விஷயத்திற்குப் போய் அலைக்கழிவாரா?                                                                                                ஆனாலும் இது சரியில்லை....நேரில் புறப்பட்டுப் போய் அவரைப் பார்த்து என் நிலையை எடுத்துச் சொன்னபிறகுதானே இது நடந்திருக்கிறது? என் அடுத்தடுத்த விண்ணப்பங்கள் வந்திருப்பதும், அலுவலக முத்திரை அதில் பதிக்கப்பட்டிருப்பதும், எண்ணிடப்பட்டிருப்பதும் எல்லாவற்றிற்கும் மீறி எந்த நடவடிக்கையும் இல்லாமல் முறையே  பதிவேட்டில் பதியப்படாமல் விடுபட்டிருப்பதும், அவர் ஆய்வில்  விரியும் என்று துளியும் நான் எதிர்பார்க்கவில்லைதான். மறைக்கத் தெரிந்த அவர்களுக்கு, அதிகாரம் கேட்டவுடன் டக்கென்று எடுத்துக் கொடுக்கவும் தெரிந்திருக்கிறதே...! கில்லாடிகள்தான்...!!!                                                                அப்பாடி...! அந்த ஒருவருக்காவது மனசாட்சி இருந்திருக்கிறதே...?                                 நீ போங்க...இன்னும் ஒரு மாசத்துல உங்களுக்கு டிரான்ஸ்பர் வந்திடும்.... - இதுதான் அவர் என்னிடம் கடைசியாகச் சொன்னது. நிர்வாக நடைமுறைகள் எல்லாம் துல்லியமாகத்தான் வகுக்கப் பட்டிருக்கின்றன. இடையில் உள்ள எலிகளும், பெருச்சாளிகளும்தான் அதைக் கடித்துக் குதறி விடுகின்றன என்று புரிந்து கொண்டேன்.                                                                              இதோ..சொந்த ஊர் வந்துவிட்டேன்...ஆனால் இது என்ன? புதுத் தகவல்...!? வியப்பும் கேள்வியும்                                                                             என்னைச் சுற்றி...!                                                                     உங்களுக்கு முன்னாடி இருந்த நாகரத்தினம்ங்கிறவருக்குக் கொடுக்கப் போனபோதுதான், உங்க அப்ளிகேஷன் சென்னைலருந்து ரெக்கமன்ட் ஆகி வந்திச்சு...சீஃப் இன்ஜினியரே தன் கைப்பட எழுதிப் பரிந்துரை பண்ணியிருந்தாரு....அலாட்மென்ட் வந்த பெறவு என்ன செய்றது? அதுவும் பெரிசு கையெழுத்துப் போட்டிருக்கு? சிரித்துக் கொண்டே தொடர்ந்தார் அவர்.                       

அதனால எங்க சங்கத்தச் சேர்ந்த அவரை சமாதானம் பண்ணி நிறுத்தி வச்சிட்டு உங்களுக்குப் போட்டிருக்கோம். இந்த தடவை...! ..நாங்க நினைச்சிருந்தா அடுத்த லிஸ்ட்லதான் உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கும். எங்க தோழர் பொறுத்துக்கிட்டாரு...உங்களுக்காக இப்பவும் அவர் தினமும் பஸ்ல இருநூறு கிலோமீட்டர் வெளியூர்  போயிட்டு வந்திட்டிருக்காரு....அத மனசுல நினைங்க....அது போதும்....                                     ஆபீஸ் வேறு...சங்கம் வேறில்லையா? இவர், சங்கம்தான் ஆபீஸ் என்பதுபோல் பேசுகிறாரே...! தலைமைப் பொறியாளரின் உத்தரவையும் மீறி, உங்கள் டிரான்ஸ்பரை எங்களால் நிறுத்தியிருக்க முடியும் என்று மறைமுகமாய் மிரட்டுகிறாரோ? அவரின் பேச்சு அப்படித்தானே நினைக்க வைக்கும்?  ஆழ வேரோடிப் போயிருக்கிறதே இந்த ஊடுருவல்?   மூன்று வருடமாய்க் காணாமல் போயிருந்த என் விண்ணப்பத்தைப் பற்றிச் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா? அதிலும் ஒரு நியாயம் உண்டுதானே?  இவரென்ன ஏற்றுக் கொள்வது, துறைத் தலைமையே ஒத்துக் கொண்டுதானே இது நடந்தேறியிருக்கிறது? பிறகென்ன அதை மீறிய நியாயம்?                                            ஷ

 நினைத்துக் கொண்டே உள்ளூரில் என் அலுவலகப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் நான். ஒரு வித்தியாசம் மட்டும் அங்கு என்னால் சமீபமாக கண்டுபிடிக்க முடிந்தது. அதுதான் அங்கு எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.                                       

 அந்த அலுவலகம் எண்ணிக்கையில் அதிகமான பணியாளர்களுடன்,  மிகுந்த கட்டுப்பாட்டோடு நாள்தோறும் இயங்கியது. அமைதியாக இயங்கும் நூலகம் போல் இருந்தது. குனிந்த தலை நிமிராமல் வேலையில் கண்ணாய் இருந்தார்கள் எல்லோரும். அருகிருக்கையுடன் கூடப் பேச்சுக் கிடையாது. ராணுவக் கன்ட்ரோல் போல் உணர்ந்தேன்.  இத்தனை கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் நான் முன்பிருந்த வெளியூர் அலுவலகத்தில் கண்டதில்லை. என்னிடம் பேசிய அந்த சங்கத் தலைவர்தான் அந்த அத்தனை பெரிய அலுவலகத்திற்கும் மேலாளராக இயங்கினார். இருக்கையை விட்டு எழாமல் ஆணியடித்தாற்போல் எல்லோரும் இயங்கினார்கள். பத்து மணிக்கு முன்பாக அலுவலகமே நிரம்பி வழிந்தது. இரவிலும் கூடப் பலர் கணி விழித்து வேலை செய்தார்கள். கன்னியாகுமரி வரை ஜூரிக்ஸ்டிக் ஷன் அதற்கு இருந்தது.  ஒரு நாள் கூட அலுவலக நேரத்தில் அங்கு யாரும் சங்கப் பணியை மேற்கொள்ளவில்லை. பணி என்ன, அந்தப் பேச்சே எழவில்லை.  மாலை அலுவலக நேரத்திற்குப் பின்பே அருகிலுள்ள பூங்கா ஒன்றில் அந்தப் பணியாளர்கள் கூடினார்கள். பேசினார்கள். அலுவலக நிர்வாகம் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய்    துறைத் தலைமையின் நற்சான்றிதழ் அந்த அலுவலகத்திற்கு வருடந் தவறாமல் வழங்கப்பட்டிருந்ததும், மாநிலத்திற்கே எடுத்துக்காட்டாய் அந்த அலுவலகம் திறம்பட இயங்கி வந்தது என்பதையும்  கேள்விப்பட்டபோது, அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது.                                                                    



 சர்வீசுக்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தும், முதன் முதலாக முழுக்க முழுக்கக் கடமையும், கட்டுப்பாடும் உள்ள ஒரு அலுவலகத்தில் மன நிறைவோடு பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்ற உணர்வினை  இப்பொழுதுதான் உணர ஆரம்பித்திருந்தேன் நான்.      

                              ------------------------------------------------------                                 -

 

                                               

 

 

 

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...