11 செப்டம்பர் 2012

“சொல்லாதே யாரும் கேட்டால்” - குறுநாவல்–2 ம் பகுதி

 
 


சென்ற வார தொடர்ச்சி ... (உயிரோசை இணைய இதழ் - 10.09.2012 வெளியீடு)
------------------------------------------------------------------------------------------------------------

"என்னங்க இது அநியாயமா இருக்கு? நா இங்க வந்து ஒரு வருஷந்தான் ஆகுது…அதுக்குள்ள என்னை மாத்தினா என்னங்க அர்த்தம்? பொதுவான அவன் புலம்பலை எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் யாரும் பதில்தான் சொல்லவில்லை. யாரும் சாதகமாக வரமாட்டார்கள் என்பதை இவனும் அறிவான். ஆனாலும் இந்த அளவுக்கா பயந்தோளிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் வெட்கப்பட்டான் இவன். அந்த முறை தப்பித்தது இவனின் கடுமையான எதிர்ப்பினால்தான். ஆணையை எடுத்துக் கொண்டு நேரே அலுவலரின் அறைக்கே போனான். தன் மீது என்ன குறை இருக்கிறது என்று வினவினான். தன் பிரிவுப் பணியில் தான் என்ன குற்றம் செய்தேன் என்று கேள்வி எழுப்பினான். அலுவலக நேரத்திலோ, விடுப்பு எடுப்பதிலோ, கூடுதல் வேலைகளைத் தாமதமின்றி முடிப்பதிலோ என்ன குறையைக் காண முடிந்தது என்றும், காரணமில்லாமல் அநாவசியமாக ஒருவனை மாற்றம் செய்வது அவனது கடமை உணர்வையே தாழ்த்தி எடை போடுவதற்கு சமம் என்று வெறி கொண்டவனைப் போல் அலுவலரிடம் வாதாடினான். தானா அப்படிப் பேசினோம் என்றும், எங்கிருந்து தனக்கு அம்மாதிரி ஒரு தைரியம் வந்தது என்றும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். அன்று ராகவன் கொடுத்த அதிர்வு சூரியமூர்த்தியையே சற்றுக் கலங்கத்தான் வைத்து விட்டது. இந்த அளவுக்குப் பேசுபவன் என்னமும் செய்யத் துணிந்து விடுவான் என்பதாக நினைத்து பயந்து விட்டாரோ என்னவோ, அவரே சொல்லி அந்த மாறுதல் ஆணையைக் கான்ஸல் செய்து விட்டார் அன்றே! அதிலும் கூட தானே அவனுக்கு உதவியதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுதான் அவார்செய்த பெரிய அரசியல்.
(6)
தனது மாறுதல் ஆணையை ரத்து செய்ததிலிருந்து அலுவலகத்தில் ராகவனுக்கு ஒரு மாpயாதை ஏற்பட்டிருந்தது என்னவோ உண்மைதான்.ஆனால் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவன் தன்னை ஒன்றும் அந்த அலுவலகத்தின் உறீரோவாக நினைத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போலவே தன்னடக்கத்தோடு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவனை வைத்து அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ஒரு தைரியம் வந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சும்மா ஒன்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் ஒன்றும் தூக்கி அடிக்க முடியாது என்றெல்லாம் பேச்சு கிளம்பியிருந்தது. மனிதர்களில் அநேகமாக எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது இவனுக்கு. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் மூலமாகவாவது பாதுகாப்புக் கிடைக்காதா என்று நினைக்கிறார்களேயொழிய இது தவறு என்று நியாயமான விஷயங்களுக்குக் கூட நிமிர்ந்து நிற்பதில்லை. ஆனாலும் ராகவனுக்கு அவர்கள் மேல் எந்தக் கோபமும் எழவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கைப் பிரச்னையும் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடும். இந்த வாழ்க்கை என்னும் ஓடம் பெரும்பாலும் மனிதர்களை அமிழ்த்தத்தானே பார்க்கிறது? அதில் அநாயாசமாக படகு விட்டுக் கொண்டு சுகமாகப் பயணிப்பவார் எத்தனை பேர்?ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள். எல்லாமும் உணர்ந்துதான் இருந்தான் ராகவன். அவனின் அந்த நல்ல குணமே அலுவலகத்தில் எல்லோரையும் அவனிடம் நெருங்கி வரச் செய்தது.வேதாசலம் ராகவனிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவன் தன் வேலைகளில் கன கச்சிதமாக இருப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.அவன் வெளியூரில் இருந்த பொழுதே அவனை அறிவார். அவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக இவனைப் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்தது. அவனேயறியாமல் திருச்சிக்குச் சென்று அலுவலகப் பணியாக வந்தது போல் இருந்து, அவனைப் பார்த்து எடை போட்டு விட்டுத்தான் வந்தார். ஆனால் அவன் அமையாமல் போனது அவருக்குப் பெருத்த வருத்தமாகத்தான் போய்விட்டது. அதிகப் பொருத்தமில்லாததில் அவர் மனைவியின் கேள்விகளுக்கு அவரால் தக்க பதில் சொல்லி சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனாலும் இன்றுவரை ராகவன் தனக்கு மாப்பிள்ளையாக வராதது அவருக்கு வருத்தம்தான்.அதனாலேயே அவருக்கு அவன் மேல் என்றும் ஒரு கருணையான பார்வை இருந்து கொண்டேயிருந்தது.
இப்படித் திடீரென்று தன்னிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் லீவைப் போட்டு விட்டுப் போய்விட்டானே என்று நினைத்தாரேயொழிய, அதனால் அவனுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் அவருக்கு அவரையறியாமலேயே ஒரு அக்கறை இருக்கத்தான் செய்தது. மனைவியுடன் பிணக்கிக் கொண்டுதான் பெற்றோரைத் தேடிப் போயிருக்கிறான் என்ற செய்தி அரசல் புரசலாக அவர் காதுக்கு எட்டிய போது அவர் மனம் சங்கடப்பட்டது.
இளம் தம்பதிகளிடையே திருமணமான புதிதில் முதல் ஓராண்டில் இம்மாதிரிப் பிரச்சினைகள் ஏற்படுவதும், பிணக்கிக்கொண்டு போவதும் வருவதுமாக இருப்பதும், பின்னர் ஒரு நிதானத்துக்கு வருவதும் சகஜம்தான் என்று நினைத்துக் கொண்டார். அவர் பெண்ணுக்கும் இம்மாதிரி அனுபவம் உண்டு என்பதையும் நினைக்கையில் இதுவும் அந்த வகையிலானதாகத்தான் இருக்கும் என்று எண்ணம் போனது அவருக்கு. ஆனாலும் ராகவனின் நேர்மையும், ஒழுக்கமும், கடமையுணர்வும், தன்னடக்கமும், பெரியோர்களை மதிக்கும் பாங்கும், எதையும் அவன் எப்படியும் நேர்வழியில் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையைத்தான் இவருக்குக் கொடுத்தது. திரும்பவும் அவன் தன் விடுப்பினை நீட்டித்தால்கூட தான் இருந்து அவன் பிரிவினையும் சேர்த்து சமாளித்துக் கொள்வது என்றும் அவன் நற்பெயருக்கு எவ்வகையிலும் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் சற்று கவனமாகவேதான் இருந்தார். அப்படி இருப்பதில் அவருக்கு என்னவோ ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தான் அலுவலகப் பணிகளில,ர்சொந்த வாழ்க்கையில் எப்படி எப்படியோ இருந்து கொண்டாலும் ஒரு நல்லவன் சார்ந்து தன் நிலைகளைத் தளர்த்திக் கொள்வதில் ஏனோ அவருக்கு ஒரு ஆறுதல் இருந்தது.
( 7 )
ராகவனின் தந்தை கேசவமூர்த்தியும், மாலினியின் சித்தப்பா சாம்பசிவமும் அப்படி நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேரிடும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. இருவருமே பஸ்ஸை விட்டு இறங்கியபோதுதான் அது நிகழ்ந்தது. "அடா, அடா, அடா…! என்ன ஒரு தற்செயல் பாருங்க…இப்படியுமா நிகழும்?"- மகிழ்ச்சி பொங்கச் சொல்லிக் கொண்டே வந்து கட்டிக் கொண்டார்சாம்பசிவம். பொது இடத்தில் அப்படியான ஒரு தழுவலை கேசவமூர்த்தி எதிர்பார்க்கவில்லை. நிதானத்துக்கு வர அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.
"நீங்க என்ன நினைக்கிறீங்க…இந்தப் பிரச்னையை அவுங்களேதான் தீர்த்துக்கணும்…நாம எடுத்துச் சொல்றது அவ்வளவு நல்லாயிருக்குமா?" இவர் எதைச் சொல்கிறார் என்று தெரியாமல் முழித்தார் கேசவமூர்த்தி. எடுத்த எடுப்பில் ஒருத்தார்எப்படி இப்படி ஆரம்பிக்கலாம். எதிராளிக்கும் தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில் இவரே முடிவு செய்து கொண்டு துவங்கி விடுவதா? அப்படியானால் தனக்குத் தெரியாது என்று காட்டிக் கொள்வதில் எதிராளிக்கும் ஒரு தயக்கம் வராதா?
"எல்லாம் சின்னஞ்சிறுசுகதானே, அப்டித்தான் இருக்கும்…" என்று பொதுவாக ஒன்றை சொல்லி வைத்தார் பதிலுக்கு. அதன் மூலமாக ஏதேனும் புரிந்து கொள்ள அடுத்த தகவல் வரும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது."எதுவும் நானும் கேட்டுக்கல… இப்படியிருக்குமோங்கிற ஊகம்தான்…அப்படி ஒண்ணும் அவசரப் பட வேண்டியதில்லைன்னு வைங்க…ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர் வெளிப்படையாச் சொல்லிக்க முடியாம, பரஸ்பரம் ஒருத்தர்மேல ஒருத்தருக்கு இருக்கிற அன்பினாலயும் மரியாதையினாலயும் இது நிகழ்ந்திருக்கலாமில்லியா?" "சத்யம்…சத்யம்…." அப்படியே ஆமோதித்தார்கேசவமூர்த்தி. எதற்கு இப்படியெல்லாம் பேசிக் கொண்டு. நேரடியாக,வெளிப்படையாக என்ன என்பதைத் தெரிவித்து விட வேண்டியதுதானே?அவருக்குப் பெரிய அவஸ்தையாக இருந்தது. தன் சம்சாரம் கூட இருந்தால் தேவலாம் போலிருந்தது. பேசாமல் அவளைக் கையைக் காண்பித்து விட்டு விலகிக் கொள்ளலாமில்லையா? அவள் பார்த்துக் கொள்வாள்.எல்லாவற்றையும், எல்லாரையும், ரட்சிப்பவள் அவள்தான்.
"நீங்க கிளம்புங்க, நான் எல்லாம் பாங்கா சொல்லி அனுப்பறேன். ஒண்ணும் நினைச்சுக்க வேண்டாம். எல்லாம் சரியாயிடும்…." - சொல்லிவிட்டு எதிர்பார்த்த வண்டி வந்தவுடன் தாவி ஏறி அமர்ந்து டாடா காண்பித்து விட்டார்சாம்பசிவம். வந்ததிலிருந்து பூடகமாகவே பேசி, பூடகமாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டாரே என்று இருந்தது இவருக்கு. அப்படியென்றால் ராகவனுக்கும் அவன் மனைவிக்கும் என்ன பிரச்சினை? வெறுமே ஓய்விற்காக அவன் வரவில்லையா? ஓய்விற்காக வந்தவன் தன் மனையாளோடு வராமல் தனியாக வந்தது இப்படித்தானா? இப்பொழுதுதான் ஏதோ உரைப்பதுபோல் இருந்தது இவருக்கு. ஆனாலும் எல்லாம் தன் சகி பார்த்துக் கொள்வாள் என்கிற நம்பிக்கை அவரைப் பதட்டம் அடையச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தன் பணிக்காலம் சார்ந்த சில பிரச்சினைகளுக்காக வந்த இடத்தில் இப்படியொரு செய்தி தன்னை எட்டியது தெய்வாதீனம்தான் என்று நினைத்து உடனே இதைத் தன் மனைவியிடம் சென்று சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவருக்கு. ஒரு வேளை அவளுக்கும் இப்படியான ஒன்று தெரியாமல் இருந்திருந்தால்? என்ற எண்ணம் அவரிடம் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது.
( 8 )
"எல்லாம் வேணுங்கிற அளவுக்கு நான் அவன்டச் சொல்லியிருக்கேன்…நீங்க கவலைப்படாம இருங்க…"எடுத்த எடுப்பில் தன் பாரியாள் இப்படிச் சொன்னதே பெருத்த ஆறுதலாய் இருந்தது கேசவமூர்த்திக்கு. மேற்கொண்டு கேட்க எதுவுமில்லை என்று நினைத்தார் அவர். படிக்கும் காலத்திலிருந்தே அவன் அம்மா பையன். எல்லாவற்றையும் அவளிடம்தான் பகிர்ந்து கொள்வான்.நியூஸ் பேப்பர் உண்டு தான் உண்டு என்று அமிழ்ந்து கிடப்பார் இவர்.பொதுவாகப் பையன்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.அவர்களுக்கு அப்பன்களைக் கண்டாலே ஏனோ பிடிப்பதில்லை. எதிரி போலப் பாவிக்கிறார்கள். சிவனே என்றுதான் இருக்கிறார்கள் என்றாலும் ஐயோ பாவம் என்றுகூட நினைப்பதில்லை. இத்தனைக்கும் தன் சம்பாத்தியத்தில்தான் தான் படித்து வருகிறோம் அதில்தான் இந்தக் குடும்பமே நடந்தேறுகிறது என்றாலும் அதெல்லாம் வாழ்வியல் கடமைகள் என்று நினைக்கிறார்கள் போலும்? ஏன் பெத்த? உன்ன எவன் பெத்துப் போடச் சொன்னான்? என்று கொச்சையாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். காலம் அப்படித்தான் மலிந்து கிடக்கிறது. எதை நினைத்து என்ன ஆகப் போகிறது? காலத்தால் எல்லாமும் மறக்கப்படும். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர இந்த உலகத்தில் எல்லாமும் மாறுதலுக்கு உட்பட்டதுதானே? இப்படியாக ஆறுதல் படுத்திக் கொள்வதும் ஒரு வகையிலான முதிர்ச்சியின் அடையாளம்தான் என்று நினைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு கண்டு தனக்குத் தன்னையறியாமல் அந்த முதிர்ச்சி வந்து விட்டதோ என்று தோன்றியது.ராகவன் கிளம்பிப் போய் ஒரு நாள் கழிந்து விட்டது. எதற்கு வந்தான் என்ன செய்தான் என்றுதான் நினைத்துக் கொண்டார் இவர். வந்து இருந்த நாட்களில் அம்மா அம்மா என்று அவள் மடியில்தான் கிடந்திருக்கிறான். இன்னமும் அவன் அவளுக்குக் குழந்தைதான். தனக்கும்தான். என்றாலும் அம்மாவிடம் இருக்கும் பிரியமும் பாசமும் தனிதான். கொடுத்து வைத்தவள்.
தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார் அவர். அவருக்கொன்றும் அவன் இப்படி இருப்பதில் பொறாமையெல்லாம் இல்லை. கண்காண நன்றாக இருந்தால் சரி என்பது ஒன்றே அவரது விருப்பமாக இருந்தது. அதற்கு பங்கம் வந்து விட்டதோ என்பதாக ஒரு மெல்லிய சோகம். அந்த நெருடலில்தான் இந்தச் சிறு பதட்டம். இருந்தாலும் மனைவியின் ஆதுரமான பதிலில் சமாதானமடைந்து விட்டார் கேசவமூர்த்தி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! இதுவே அவர் எப்போதும் வேண்டுவதாக இருந்தது. வாசலில் சிந்தனா வயப்பட்டு அமர்ந்திருந்தவாpன் பார்வை தெருவில் திரும்பிற்று. மனையாள் லட்சுமி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். கோயிலுக்குச் சென்று வருகிறாள்.கையில் அர்ச்சனைக் கூடை. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை கடவுள் நம்பிக்கை? பிரார்த்தனையின் பலன்களை இவர்கள் எத்தனை தீர்க்கமாய் உணர்ந்திருக்கிறார்கள்? அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லை என்ற அசைக்க முடியாத இவர்களின் தீர்மானம் பக்தியின் மேல் இவர்களை எத்தனை ஆணித்தரமாய் அமர்த்தியிருக்கிறது? நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கேசவமூர்த்தி.
ராகவனின் மடியில் மாலினி கிடந்தாள். மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது அவளிடமிருந்து. "என்ன," என்றான் ராகவன். "உங்களுக்குக் கிளம்பணும்னு தோணியிருக்கிற அதே நேரத்தில எனக்கும் …அதை நினைச்சேன்…" "ஒண்ணு சொல்லட்டுமா…எங்கிட்டச் சொல்லாம நீ உங்க வீட்டுக்குக் கிளம்பிப் போகலாமா?" எடுத்த எடுப்பில் இதைக் கேட்டிருக்க வேண்டாமோ என்றுதான் தோன்றியது.
"நீங்க மட்டும் உங்க ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டு, "எங்க ஊருக்கு வந்திருக்கேன்…"னு போன்ல சொல்றீங்களே அது மட்டும் சரியா?" ";…ஆனாலும் இப்படி யாருக்கும் சொல்லாம வீட்டைப் பூட்டிட்டு போறது தப்புதானே…"மாலினியிடமிருந்து பதிலில்லை. "இப்டி ஒருத்தருக்கொருத்தர் பதிலுக்குப் பதில் செய்திட்டுப் போனா நல்லாவா இருக்கும்…சுத்தியிருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சா…சிரிக்க மாட்டாங்களா…அசிங்கமா நினைக்க மாட்டாங்க…?"
நீங்க நினைக்காம இருந்தா சரி…""தப்புன்னு தோணினதுனாலதானே உடனே புறப்பட்டு வந்தேன்…"
"எது? பிரிஞ்சிரிக்கிறதா? சொல்லாமப் போனதா?"
"ரெண்டுமேதான்…பெரியவங்களுக்கு இந்தப் பிரச்சினை போயிடுச்சின்னா பெரிசாயிடும்னு திடீர்னு மனசுல ஒரு பயம்….நாமளே தீர்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம்னு தோணிச்சு…அதனால கிளம்பி வந்துட்டேன்…"
"நானும் அப்டித்தான்…" சுருக்கமாகச் சொன்னாள் மாலினி. எத்தனையோ எடத்துல கேள்விப் பட்டிருக்கோம்…கடைசில அது நமக்கே வந்திடுச்சு…நம்மள அறியாமலே நடந்து போச்சு…நல்லவேளை இதோட முடிஞ்சிச்சேன்னு தோணுது…" "இனிமே இந்தத் தற்காலிக ரகசியப் பிரிவுகூட நமக்கு நடுவுல இருக்கக் கூடாது…சரிதானா?"
"சரி…""நாம இன்னைக்கு சாயந்திரமே டாக்டர்ட்ட போறோம்…" "ஆரம்பிச்சிட்டீங்களா பழையபடியும்? உடனே வேதாளம் முருங்கை ஏறியாச்சாக்கும்…?" "நா என்னைச் சொல்லிக்கிறேன்…நீ சொல்றபடி நானும் செக்கப் பண்ணிக்கிறேன்…எங்கிட்டயும் ஏதாச்சும் குறை இருக்கலாமில்லியா?இருந்தா இம்ப்ரூவ் பண்ணிட்டுப் போறது?"
"அடேயப்பா…எவ்வளவு தாராளம்? இதத்தானே நான் முதல்லயே சொன்னேன்…? அத ஏன் உங்களால ஆக்டிவ்வா எடுத்துக்க முடியல? ஒரு வாரமாப் பேசாம இருந்து, பிறகு சொல்லிக்காம ஊருக்குப் போயி, திரும்பி வந்து, தேவையா?" "என்ன இருந்தாலும் நா ஆம்பிளை இல்லையா?" ‘ "அதக் கன்ஃபாம் பண்ணத்தானே போவோம்ன்னேன்…" "கழுத…கிண்டலா பண்றே…உன்ன பத்துப் பிள்ளை பெக்க வைக்கிறேன் பாரு…எங்கிட்டப் பட்டுட்டு போதும் போதும்னு அலறப் போற நீ…!"
---------------------------------நிறைவுற்றது-----------------------------------

























கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...