03 நவம்பர் 2025

 


“மனத் தொற்று”- சிறுகதைத் தொகுப்பு - பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-17  வெளியீடு - தினமணி நூல் அரங்கம் பகுதியில் “வரப்பெற்றோம்”  பதிவு (03.11.2025)

-------------------------------------------------------------------------------------------------------------------------------ஒரு பிரதி அனுப்பினால் “வரப்பெற்றோம்” - அத்தோடு சரி

இரண்டு பிரதிகள் அனுப்பினால் நூல்பற்றிய ஒரு சிறு குறிப்பு வரும். இது முதல் ரகம்.





 

                                   

சிறுகதை    

“காலம்…கலிகாலம்…!”       தாய்வீடு பிரசுரம்-நவம்பர் 2025 இதழ்





நீ சாதாரணமா இருக்க வேண்டியதுதானே? – என்று கேட்டார் நாராயணன். தான் கேட்டது அந்தப் பெண்ணுக்கு…அதாவது தன் மருமகளுக்குப் புரிந்திருக்கும் என்று தோன்றவில்லை இவருக்கு. சாதாரணமா என்றால் எப்படிச் சொல்வது? யதார்த்தமாய் என்று சொல்லலாமா? அப்படிச் சொன்னால் பிறகு அந்த வார்த்தையை விளக்கியாக வேண்டி வரும். எளிமையாய் என்று சொல்லலாமா? அப்படிச் சொன்னால் நான் ஒண்ணும் படாடோபமா  ரிச்..சா இல்லையே? என்று சொல்ல வாய்ப்பிருக்கு. சாதாரணமா என்று சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு இப்போது இவர் தடுமாறிக் கொண்டிருந்தார்.

            அப்டீன்னா….? – நினைத்ததுபோலவே கேட்டது அது. கொஞ்சம் யோசித்தவர் பிறகு இப்படிச் சொன்னார்.

            உன் வீடு போல….உன்னோட வீட்டுல  நீ எப்டி இருப்பியோ …அது  போல இங்கயும் இருக்கலாமேன்னு சொல்ல வந்தேன்….என்றார்.

            எங்க வீட்டுல நான் இருந்தது போல எங்கயும் வராது. அந்த சந்தோஷம் வேறே எங்கயும் கிடைக்காது, அதுக்கு ஈடே கிடையாதுப்பா – சொல்லும்போதே முகம் மலர்ந்தது மாலாவுக்கு. நல்லவேளை…அப்பா என்றாவது சொல்ல வந்திருக்கிறதே? நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார் நாராயணன்.

            இப்படிச் சொல்கிறோமே என்கிற எண்ணம் இல்லை. சொல்வது சரியா? என்ற நிதானமும் இல்லை. இதைச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையும் இல்லை. சொல்லியாகி விட்டது.

            அதற்காக, தான் நிதானத்தை இழக்கலாமா? அப்புறம் அந்தப் பெண்ணுக்கும் வயசாகி முதிர்ந்த தனக்கும் என்னதான்  வித்தியாசம்? சூழலை இறுக்கமாக்கிக் கொள்ள நாராயணன் விரும்பவில்லை. பிறகு அடுத்தடுத்த பேச்சு, சண்டை என்று வளர்ந்து விடும் வாய்ப்புண்டு. நிதானித்தார்.

            கண்டிப்பா….உங்க வீட்டுல நீ இருந்த மாதிரி நிச்சயமா வேறே எங்கயும் இருக்க முடியாது. அது யாருக்குமே சாத்தியமில்லை. அவுங்கவுங்க பிறந்த வீடுன்னா அதுதானே பெரிசு எல்லாருக்கும்? – அரவணைத்தே பேசுவதாக எண்ணி இப்படிக் கூறினார்.

            எல்லாருக்கும் பெரிசோ இல்லையோ…எனக்குப் பெரிசு….!

            இதென்ன சமத்தான பேச்சா என்ன? என்று தோன்றியது நாராயணனுக்கு.

உணரப்பட வேண்டியவைகளை வார்த்தைகளில் வடிக்கும்போது அதில்தான் எத்தனை செயற்கைத் தன்மை  வந்து ஒட்டிக் கொள்கிறது?

(அதான் தெரியுதே…அடிக்கடி அங்க ஓடுறது….)-சொல்லவில்லை…நினைத்துக் கொண்டார்.            

            நான் சொல்ல வந்தது அது இல்லடா கண்ணு…உங்க வீட்டுல நீ இருந்த  மாதிரியே இந்தப் புகுந்த வீட்டுலயும் சுதந்திரமா, சந்தோஷமா இருக்கலாம்…இயங்கலாம்…உன்னை யாரும் எதுவும் சொல்லப் போறதில்லைன்னு சொல்ல வந்தேன்…இனிமே இதுதானே உன் வீடு….நீதான் எங்களுக்கு…நாங்கதான் உனக்கு…எல்லாம் நிறைவா இருக்கு …எதுக்கும் குறைப்பட்டுக்க எதுவுமில்லை… சந்தோஷமா இருந்திட்டுப் போவமே….எதுக்கு அநாவசியமா நேரத்தையும் பொழுதையும் கெடுத்துக்கணும்…அதத்தான் சொல்ல வந்தேன்…. –பூடகமாக, சுருக்கமாகச் சொல்லித் தீர்த்து விட்டோமோ என்றே தோன்றியது நாராயணனுக்கு.

            தையெல்லாம் அவன் சொல்ல வேண்டியது. தன் பிள்ளை குணசீலன். அவன் அவளிடம் பயப்படுகிறானோ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. எதற்காகப் பயப்பட வேண்டும். சாதாரண, நடுநிலையான வீட்டுப் பெண்தானே? பணக்காரக் குடும்பமில்லயே? நடுத்தரக் குடும்பத்துப் பெண் நடுத்தரமாய் இல்லாமல் குதிக்கிறாள் என்று நினைத்து விட்டானோ? பயப்படுகிறான் என்பதை விட பேசுவதையே தவிர்க்கிறான் என்பதே சரி.

            அவ அவ்வளவுதாம்ப்பா… அவளுக்குத் தெரிஞ்சதெல்லாம் வெளில போகணும், சந்தோஷமா ஊர் சுத்தணும், ஓட்டல்ல திங்கணும், இஷ்டப்பட்ட பொருட்களை வாங்கணும்…ஜாலியா இருக்கணும்…மொபைல்ல சினிமாப் பார்க்கணும்..ரிலீஸ் படங்களைத் தியேட்டர்ல போய்ப் பார்த்தாகணும்…இப்டியே பொழுதைக் கழிக்கணும்…அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும்.  வேறே ஒண்ணும் பெரிய நாலெட்ஜ் எல்லாம் இருக்கிறதாத் தெரில. அவள் ஐ.டி. ஆபீஸ்ல அவளோட பிராஜக்ட் ஒர்க்கப் பத்தியே டீப் நாலெட்ஜ் இல்ல…நிறையத் திட்டு வாங்குவா போல்ருக்கு…வேறே ஜெனரல் நாலெட்ஜ், உலக நடப்பு, ஆட்சி, அரசியல்னு எதுவும் தெரியாது அவளுக்கு. நியூஸ் பேப்பரைப் பேருக்காவது புரட்டினாத்தானே? அதெல்லாம் சின்ன வயசிலேயிருந்து பழக்கப்படுத்தியிருக்கணும். அப்பத்தான் வரும்…

            இருக்கட்டுமேப்பா…அதனாலென்ன… அவ ஐ.டி. ஆபீஸ் வேலைகளை சமாளிக்க வேண்டியது அவ பொறுப்பு…அதப்பத்தி நாம ஏன் கவலைப்படணும்?-.

            அப்படியில்லப்பா…அவ என்னைப் போட்டு அனத்தறா.  ஒர்க் ஃப்ரம் உறாம் இருக்கச்சே…என்னை சதா சந்தேகம் கேட்டான்னா…நான் என் வேலையைப் பார்க்க வேண்டாமா? இனிமே அவ வீட்டுல இருந்து வேலை செய்கைல…நான் ஆபீஸ் தப்பிச்சுப் போயிடணும்னு இருக்கேன். என் தலவலியே பெரிய தலைவலி. பாதி இவ டியூட்டிய நானே பார்க்க வேண்டிர்க்கும் போல்ருக்கு? அப்புறம் நான் பைத்தியம் பிடிச்சு அலைய வேண்டிதான்….இது இப்டியே போச்சுன்னா கூடிய சீக்கிரம் படுக்கைல விழுந்திடுவேம்ப்பா…அது மட்டும் நிச்சயம்….!

            எல்லாம் போகப் போகச் சரியாப் போகும்ப்பா…கொஞ்சம் பொறுத்துக்கோ…கன்னா பின்னான்னு கற்பனை பண்ணிக்காதே…! -பையனைச் சமனப்படுத்த ஆறுதலாய்ச் சொன்னார் நாராயணன். ஒரு பக்கம் அவன் பழியாய் ஆபீஸ் வேலையே கெதியாய்க் கிடப்பதைப் பார்க்கும்போது அவருக்கே வயிற்றைக் கலக்கியது. இத்தனை மணி நேர வேலை என்று கணக்கே கிடையாதா? நாள் பூராவுமா பார்த்திட்டே இருக்கணும்? ஆபீஸ் போய் பார்த்தாச்சு. அப்புறம் என்ன வீட்டுக்கு வந்த பின்னும்? அந்தக் கம்ப்யூட்டரை மூடித் தொலையாம சதா அதை நோண்டிக்கிட்டே இருக்கணுமா? எவனாவது எதாவது கேட்டுக்கிட்டே இருப்பான்…பதில் சொல்லிட்டே இருக்கணுமா? இந்தியாவுல இது தூங்குற நேரம்னு அவிங்களுக்குத் தெரியாதா? அதான் பன்னெண்டு மணி வரை பார்த்தாச்சே…இன்னும் என்ன ஒண்ணு ரெண்டுன்னு? மரவட்டையாய் மகன் சுருண்டு கிடப்பதைப் பார்க்கையில் இவருக்கு வயிறெரிந்தது.

            எவ்வளவோ சொன்னார் குணசீலனுக்கு. சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப், பாங்க்…..குருப்-2 சர்வீஸ், குருப் 3 சர்வீஸ் என்று முயற்சி செய்து போய்விடு..இந்த ஐ.டி. ஃபீல்டுக்குள்ள  நுழையாதே…நாளைக்கு இது என்னவாகும்னு யாராலயும் சொல்ல முடியாது…என்று ஞானதிருஷ்டியாய் எடுத்துரைத்தார். காதிலேயே வாங்கவில்லையே பயல்? இதோ…இன்று ஏ.ஐ.  வந்து பயமுறுத்துகிறது. பத்துப் பேர் வேலை பார்த்த இடத்தில் மூன்று பேர் போதும் என்கிறார்கள். என்ன கதி ஆகுமோ? வெளியே சொல்ல முடியாமல் மனசுக்குள் கலங்கிக் கொண்டுதான் இருந்தார் நாராயணன். இவன் என்னடாவென்றால் வீட்டிலேயே நிம்மதியில்லாமல் கிடக்கிறானே? மத்தளத்துக்கு எல்லாப் பக்கமும் இடி என்றால்?  இறைவா…இதையெல்லாம் பார்க்கிறதுக்கா நான் உசிரோட இருக்கணும்…என்னைக் கொண்டு போயிடேன்…-மானசீகமாய்க் கடவுளிடம் அவர் வேண்டாத நேரமில்லை. வயசான காலத்தில் என்ன மனச் சுமை இது?

            தாச்சும் பரவால்லப்பா…ஒவ்வொரு சனி ஞாயிறும் ஊர் சுத்தணும்னா என்ன அர்த்தம்? அம்மாதான் பக்குவமா சமைக்கிறால்ல… வீட்டு வேலைகள்ல  உதவி செய்ய வேண்டாம்… செய்து போடுறத கமுக்கமா சாப்பிடலாம்ல…மாட்டாளாம்…ஃபோன் பண்ணி சாப்பாடும், டிபனும் வரவழை ச்சித்தான் சாப்பிடுவாளாம்…அதுதான் பிடிக்குமாம்..அவன் எந்த எண்ணெய்ல பண்ணினானோ, எப்பப் பண்ணினானோ, பழசச் சுட வச்சுக் கொண்டாந்தானோ இல்ல புதுசோ? …எதுவுமே தெரியாதே? வயித்துக்கு ஒத்துக்காததை யெல்லாம் வாங்கி நிரப்புவேன்னா? குப்பைத் தொட்டியா வயிறு?   பணமும் அதிகம்…உடம்புக்கும் கெடுதி…எதுக்கு அநாவசியமா காச விரயம் பண்ணனும்…தேவைக்கு .செலவு பண்ணலாம்..விரயம் பண்ணலாமா? -எது சொன்னாலும் கேட்கிறதில்லப்பா. தீவிரமா முடியாது அது இதுன்னு சொன்னோம்னா உடனே முகத்தைத் தூக்கி வச்சிட்டு மூலைல போய் முடங்கிக்கிறா! அழ ஆரம்பிக்கிறா! அவ சொல்றதுக்கு மறுப்பு சொன்னாலே பிடிக்கலப்பா? உறிஸ்டீரியா பேஷன்டா? நாள் பூராவும் உம்மணாம் மூஞ்சியா வெறி பிடிச்சவ மாதிரி உட்கார்ந்திருக்கிறதுக்கு? சகிக்க முடிலப்பா….கல்யாணமே பண்ணியிருக்க வேண்டாம் போல்ருக்கு….நீதான் சொன்னே…இன்னும் சிலது பார்ப்போம்…அப்புறம் முடிவு பண்ணுவோம்னு…நான்தான் உன்னை அவசரப்படுத்திட்டேன்…இப்பயே போய் சம்மதம் சொல்லிட்டுவான்னு…இப்பத்தான் என் புத்திக்கே உரைக்குது…..

            மனசுக்குள் அழ ஆரம்பித்திருந்தார் நாராயணன். வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார். பையனைச் சமாதானப்படுத்துவதா அல்லது அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறுவதா?

            காலையில் பதினோரு மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்தால்? அதுவே இவருக்குப் பிடிக்கவில்லை. கண்கொண்டு எதையும் பார்க்க வேண்டாம் என்று அறையே கதியாகக் கிடந்தார்.

ரெண்டாம் வகுப்புப் படிக்கும் பையனை ஆறு மணிக்கே எழுப்பி பல்தேய்த்து. குளிப்பாட்டி, யூனிபார்ம் போட்டு ஷூ மாட்டி சாப்பாடு கொடுத்து எட்டு மணிக்கு வந்து நிற்கும் ஆட்டோவில் ஏற்றி அனுப்புவது வரை எத்தனை டென்ஷன்?

பாதி வேலையை இவர் வாங்கிக் கொண்டார். நான் கொடுக்கிறேன் டிபன்…எங்கிட்ட விட்டிடு….யூனிஃபார்ம் போட்டு விடுறேன் என்று பகிர்ந்து கொண்டார். தலைக்கு எண்ணெய் தேய்த்து, சீவி, பொட்டிட்டு தயார் பண்ணி கீழே கொண்டு போய் நிறுத்தி ஆட்டோவில் ஏற்றி விடுவது வரை தனது வேலை என்று சிரமேற்கொண்டு செய்யலானார்.

அந்தந்த நாளின் விடியல் என்பதே பிரம்மப் பிரயத்தனமாய் இருந்தால்? தான் பெற்ற பிள்ளைக்கே எதுவும் செய்யாமல் இப்படி அடிச்சிப் போட்டது போல் அயர்ந்து தூங்கினால்? வீட்டில் நடக்கும் வேலைகளின் சத்தம் கூடவா ஆளை எழுப்பாது? ஒரு பிள்ளை பிறந்த பின்னும் பழையபடியே இருந்தால்?

இறைவா ஏனிந்த சோதனை? இது என்று சரியாகும்? சரியாகுமா அல்லது இப்படியேதான் தொடருமா?

யோசித்து யோசித்து ஒன்றும் தோன்றாமல் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் நாராயணன். அநாவசியத்திற்கு வீட்டில் ஏன் சண்டை. அது அவருக்குப் பிடிக்கவில்லை. மீனாட்சியைப் போல் தானும் இயன்றவரை வீட்டு வேலைகளை இன்னும் அதிகமாகக் கையிலெடுத்துக் கொண்டு செய்து சமாளிப்பது என்கிற இறுதியை எட்டினார். அந்தப் பெண்ணாய் உணர்ந்து என்று களத்திற்குள் வருகிறதோ அதுவரை பொறுத்திருப்பது என்று முடிவு செய்து கொண்டார். காலம் எல்லாவற்றையும் மாற்றிப் போடாமலா போகும் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டார். எதையும் பொருட்படுத்தாமல் மீனாட்சி மட்டும் தன் வேலையே கதியாகக் கிடக்கிறாளே…அர்ப்பணிப்பு..அவளை மாதிரியே தானும் இருந்துவிட வேண்டியதுதான். எதற்கு பொறுமிக்கொண்டே கிடக்க வேண்டும்? தீர்வு என்று கிடைக்கிறதோ கிடைக்கட்டும்.  காலம் கனியாமலா போகும்?.

ப்போது அந்த ஃபோன் மணி ஒலித்தது. போய் எடுத்தார். எதிர் வரிசையில் மணிவாசகன்தான் பேசினார். சம்பந்தி. என்ன சொல்லப் போகிறாரோ, ஏது நடக்கப் போகிறதோ என்றிருந்தது இவருக்கு. இந்தப் பெண் ஏதேனும் புகார் கொடுத்திருக்குமோ? எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை, புறப்பட்டு வர்றேன் என்று அப்பாம்மாவை விரட்டியிருக்குமோ?

 

சம்பந்தி…நல்லாயிருக்கீங்களா…பேசவேயில்லையே? – அழுத்தமாய் வந்தது வார்த்தைகள்.

எங்க பேசுறதுக்கு நேரம்? அதான் கால்ல சக்கரத்தக் கட்டிட்ட மாதிரி வீட்டு வேலைகள் மென்னியைப் பிடிக்குதே….! மூச்சு விட முடியலை…. – நேரடியாக எதையும் சொல்ல வாய் வராமல் யதார்த்தமான பதிலைச் சொன்னார் நாராயணன்.

ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் பக்குவமாச் சொல்லியனுப்பறேன்…பொறுப்பா நடந்துக்குவா எம் பொண்ணு …நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க….எனக்கு எல்லாம் தெரியும்….

என்ன சொல்றீங்க….புரியலை….- புரியாதமாதிரியே கேட்டார் நாராயணன்.

ஒரு வாரத்துக்கு மாலாவை எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க…எல்லாம் சரியாப் போயிடும்….திரும்பி வர்றபோது பாருங்க…

அப்டியா…சரி….சொல்றேன்….-தயங்கியவாறே கூறினார் நாராயணன்.

எதிர்த் திசையில் ஃபோன் வைக்கப்பட்டது.

அறையை விட்டு வெளியே வந்தார் நாராயணன்.

வாசலில் ஆட்டோ சத்தம்.

அதுக்குள்ளயும் புக் பண்ணியாச்சா…? - நினைப்பதற்குள்

அப்பா…அம்மா….நான் போயிட்டு வர்றேன். ஒரு வாரத்துக்கு அங்க வரச் சொல்லியிருக்கா அப்பா…அவர்ட்ட ஃபோன்லயே சொல்லிட்டேன்…. -கூறியவாறே கையில் பேக்குடன் மாலா கிளம்பியதை வாயடைத்துப் பார்த்துக் கொண்டு நின்றனர் நாராயணனும் மீனாட்சியும். இருவருக்கும் மனசு விச்ராந்தியாய் உணர்ந்தது.

                                    -------------------------------------

 

           

 

           

 

 

யானை டாக்டர் - ஜெயமோகன் - வாசிப்பனுபவம் -உஷாதீபன்                          வெளியீடு - தன்னறம், குக்கூ காட்டுப்பள்ளி, புளியனூர் அஞ்சல், சிங்காரப்பேட்டை-635307, கிருஷ்ணகிரி மாவட்டம். (தொடர்புக்கு-98438 70059).




       யானைகளின் உடல் நிலையைப் பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. அவர் டாக்டர் கே./ டாக்டர் திரு.கிருஷ்ணமூர்த்தி. தன் வாழ்க்கையையே யானைகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர். அவைகளின் ஒவ்வொரு அசைவையும், நகர்தலையும், பார்வையின் பொருளையும் உணர்ந்தவர். சமிக்ஞைகளைப் புரிந்தவர். அவரின் அன்பார்ந்த நேசத்தை அவைகளும் உணர்ந்திருந்தன. இவர் நமக்கு ஆபத்தில்லாதவர். பாதுகாப்பானவர், நம்மைப் பாதுகாக்கவென்றே தன்னை அர்ப்பணித்தவர். தன் வாழ்வில் எந்த சுயநலத்தையும் கருதாமல், தனக்கென்று ஒரு குடும்பம் என்று கூடக் கொள்ளாமல் நம்மைப் பாதுகாக்க, பராமரிக்க என்று இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்று உணர்ந்து இவர் மீது அளவிலா அன்பு செலுத்தின.

      உடலில் ஒரு சிறு நோவு என்றாலும் இவர் இருப்பிடம் தேடி வந்தன. இரவானாலும், பகலானாலும், பனி பெய்யும் பொழுதானாலும், மழையும் புயலும் என எது நிகழ்ந்தாலும், எத்தனை மைல் தூரமானாலும்,  நமக்காக இவர் உண்டு என்று அவர் இருப்பிடம் நோக்கி வந்து தஞ்சம் புகுந்தன. தன் உறவுக்கு, தன் குட்டிக்கு, தன் இனத்தில் உள்ள எவருக்கும் எனினும் இவரிடம் சென்றால் நமக்கு நலம் உண்டு என்று அன்பு செலுத்தின. நம்பி வந்து நின்றன. அந்த நம்பிக்கையை அளித்தவர் அவர். டாக்டர் கே. அதற்காக அவர் பெரும்பாடு பட்டிருக்கிறார். நிறைய உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். தன்னலம் கருதாது செயல்பட்டிருக்கிறார். தன் சந்தோஷங்களை இழந்திருக்கிறார். விரும்பித் துறந்திருக்கிறார். யானைகளின் நலனே தன் நலன் என்று வாழ்ந்திருக்கிறார். தன் பொழுதுகளை, நாட்களை, மாதங்களை, வருடங்களை  தன் மொத்தக் காலங்களை, எனக் கணக்கில் கொள்ளாது தியாகம் செய்திருக்கிறார்.

      அன்பின் சின்னமாய் அவர் விளங்கினார். அரவணைப்பின் ஆதாரமாய் நின்றார். மனிதன் தன்னை, இந்த இயற்கையை, பிற ஜீவராசிகளை தன் மேன்மையான குணத்தை ஆதாரமாய்க் கொண்டு ஆழமாய் நேசிக்க முடியும், அவற்றை அரவணைத்து நலம் காக்க முடியும். தன் பார்வையாலும், புன்னகையாலும், கையசைவினாலும்,உடல் மொழியினாலும் அவைகளை ஈர்க்க முடியும். நேசத்தைப் புரிய வைக்க முடியும். தன் அன்பை வெளிப்படுத்த முடியும். அதன் ஆழத்தை, உண்மையை உணர வைக்க முடியும் என்று செய்து காட்டினார். அந்தச் செயலில் எந்தச் சுயநலமும் இல்லை. எந்த விளம்பரமும் இல்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. தூய அன்பின் வெளிப்பாடு அது. நான் நினைத்தேன். செய்கிறேன். இதைச் செய்வதில் நான் மன நிம்மதி அடைகிறேன். என் ஆத்மா சாந்தி பெறுகிறது. என் இதயம் பெருமிதமடைகிறது. மனம் பொங்கி வழிகிறது. இது எனக்கு இறைவன் வகுத்த விதி. அவன் போட்டுக் கொடுத்த பாதை. என் ஆழ் மன உணர்வினையே நான் பிரதிபலிக்கிறேன். அதுவே எனக்கு இறைப்பாதையை வகுத்துக் கொடுத்தது. இது நான் மனமுவந்து செல்லும் பாதை. முனைப்போடு மேற்கொண்ட புனிதப் பயணம். என் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை இது தொடரும்.

      இந்த யானைகளே என் நண்பர்கள். என் உடன் பிறப்புக்கள். இதுவே என் வாழ்க்கை....இவையன்றி என்னால் தனித்து வாழ இயலாது. தனித்து இயங்க இயலாது. தனித்து என்னை உணரவே இயலாது.

      ந்தக் காட்டைப் புரிஞ்சிக்கிட்டாதான் இங்க எதையாவது செய்ய முடியும். காட்டைப் புரிஞ்சிக்கணும்னா காட்டிலே வாழணும். இங்க வாழணும்னா,அந்த உலகத்துலே இருக்கிற பணம், புகழ், அதிகாரம், லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் உதறிட்டு வரணும். இவங்களை விட்டா நமக்கு வேறே சொந்தம் எதுவுமி்ல்லேன்னு இருக்கணும். போய்யா...போய்ப் பாரு...அந்தா இருக்கானே செல்வா...அவனை மாதிரி வேறு ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியமா? அந்த நிமிர்வும், அந்தக் கருணையும், அற்பத்தனமே இல்லாத கடல் போல மனசும், அதை அறிஞ்சா மனுஷன் ஒரு பொருட்டா? -டாக்டர் கே.யின் கேள்விகள்.

      மனிதனின் கீழ்மைகள் எண்ணிலடங்காதவை. இந்தக் காட்டுக்கு வரும் சிலரின் கீழான செயல்பாடுகள் - ஒவ்வொரு நாளும் முகத்திலறைந்ததுபோலக் காணக் கிடைக்கும் கொடுமை - வழி தோறும் குடித்துக் கும்மாளமிடுவதும், வாந்தி எடுப்பதும், மலைச்சரிவுகளின் மௌன வெளியில் காரின் உறாரனை அடித்துக் கிழிப்பதும், முடிந்தவரை உச்சமாக காரின் ஸ்டீரியோவை அலறவிட்டுக் குதித்து நடனமாடி, ஓங்கிக் குரலெடுத்துக் கெட்டவார்த்தைகளைக் கூவுவதும்....பாட்டில்களை உடைத்து எறிவதும், - கீழ்த்தரமான பச்சை சுயநலம் தெறிக்கும் - மனிதப் புழுக்கள். உடைந்த பாட்டில்களின் சிதறல்களால் எத்தனை யானைகள் எவ்வளவு துயரத்துக்கும்,துன்பத்துக்கும் ஆளாகியிருக்கின்றன. உயிரிழந்திருக்கின்றன. எவ்வளவு உடல் வேதனைக்கு ஆளாகி மீள முடியாமல் தவித்திருக்கின்றன? எந்த மிருகத்தை விடவும் யானைக்கு அந்த கண்ணாடிச் சிதறல்கள் மிகவும் அபாயகரமானது என்பதை யாரேனும் உணர்ந்திருக்கிறார்களா?

      இதுபோன்ற எண்ணிலடங்கா வேதனைகளைத் தாளாமல்தான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று சொல்லாமல் சொல்லி கருணை மழை பொழிகிறார் டாக்டர் கே. அவருக்கு பத்மஸ்ரீ விருதிற்காக முயல, அது கடைசி நிமிடத்தில் நழுவிப் போன தகவல் மிகவும் வேதனையாய் உணரப்பட்டபோது, துளியும் அதனைப் பொருட்படுத்தாத ஒரு புன்னகையே அதற்கு பதிலாகிறது. அந்தோ நிற்குதே, அந்த யானைக்கு உன்னைத் தெரியும்ங்கிறதை நீ பெரிசா நினைச்சேன்னா, டெல்லியிலே யாரோ ஒரு காகிதத்துலே எழுதிக் கையிலே கொடுக்கிறதைப் பெரிசா நினைக்கத் தோணுமா?

      நான் உங்கள வெளியே கொண்டு போகணும்னு நெனச்சேன் டாக்டர். இங்கே இப்படியொரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை இருக்கும்னு எனக்குத் தெரியாது. இப்படிப் புத்தம் புதுசா ஒரு உலகத்தைப் பார்க்கப் போறோம்னு நான் நினைக்கலை.....-அவன் சொல்கிறான்.

      இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானை காலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்ம சமூகத்திலேதான் டாக்டர் வளர்ந்து வர்றான். அவன்தான் ஐ.டி.கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேலை பார்க்கிறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழ கொழன்னு இங்லீஷ் பேசறான். அதனால பிறவி மேதைன்னு நினைச்சிக்கிறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதான் இந்த நாடும் இந்தக் காடும் எல்லாமும் இருக்கு. அவங்களிலே ஒரு பத்து பர்சன்ட் ஆட்களுக்கு இப்டி ஒரு மகத்தான வாழ்க்கை, இப்டி ஒரு தெய்வீக உலகம் இருக்குன்னு தெரியட்டும்னுதான் முயன்றேன். இப்டி ஒரு ஐடியலிஸத்துக்கும் இன்னும் நம்ம சமூகத்திலே இடம் இருக்குன்னு காட்ட முற்பட்டேன். இன்னும் இங்கே காந்தி வாழறதுக்கு ஒரு காலடி மண்ணிருக்குன்னு சொல்ல நினைச்சேன்...ஒரு பத்துப் பேரு கவனிச்சாப் போருமே டாக்டர்....-என்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான்.

      பெரும் லட்சியவாதம் மனிதர்களின் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்புகளைச் சென்று தீண்டும்...காந்தியின் வலிமை அங்குதான். அந்த ஊற்றின் ஈரம் எங்கேனும் ஓரிடத்தில் இன்னும் இருக்கும்தான்....டாக்டர் கே. க்கான பத்மஸ்ரீ விருதுக்குரிய முயற்சிகளில் அவன் சிந்தனை இந்த ரீதியில்தான் பயணித்தது.

      அந்த நன்னெறியினை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது ஜெயமோகனின் இந்த “யானை டாக்டர்“.  வெறும் கதையல்ல இது. வாழ்க்கை நெறி. ஒரு புனிதமான வாழ்வியல்.  ஒவ்வொரு மனிதனின் கவனத்திலும் சென்று ஆழப் பதிய வேண்டிய  அறநெறிச் சாரம். படித்துமுடிக்கும்போது கண்ணீர் முட்டி  நிற்கிறது. எப்படியொரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் டாக்டர் கே.  என்று வியக்க வைக்கிறது. காடும்,காடு சூழ்ந்த இடமுமாக கதை நகர்த்தப்பட்டிருக்கும் விதத்தில் நாமும் கூடவே அர்த்தமோடு பயணிக்கிறோம். ஒரு நல்ல, சுயநலமற்ற, சேவை மனம் கொண்ட மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டதில் மிகுந்த திருப்தி கொள்கிறோம்.

                              -----------------------------------------------------