குறுங்கதைகள்
- 3
“ வருடாந்திரப் புதிர் ”
--------------------------------------------
கச்சேரி
மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்வையாளர்கள் அந்தக் குரலில் லயித்திருந்தார்கள். அவர் மட்டும்
தினசரியில் ஆழ்ந்திருந்தார். இவன் கவனித்துக்
கொண்டிருந்தான். ஒவ்வொரு
ஆண்டும் அவரை அந்தக் கச்சேரி நாட்களில் பார்க்கிறான். வந்து உட்கார்ந்ததும் செய்தித்தாளைப் பிரித்தார்
என்றால் கச்சேரி முடியும் வரை தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதை வீட்டிலிருந்தே செய்ய வேண்டியதுதானே...இங்கே
வந்து ஏன் இப்படிப் பாடகரை இழிவு படுத்துகிறார்?
என்றிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதைத் தடுக்கவில்லை. எந்தப் பாடகரும், பாடகியும்
அவர் பக்கம் திரும்பியதேயில்லை. காரணம் அது அத்தனை ஓரம். அவர் பக்கம் திரும்பினால்
பாடுபவருக்கே கழுத்துச் சுளுக்கிக் கொண்டு விடும். வேண்டுமென்றே அப்படி ஒதுங்கிவிட்டாரோ என்று தோன்றியது.
அவர் அமரும் இருக்கையில் எந்த வருடமும் யாரும் அமர்ந்து இவன் பார்த்ததில்லை. பெயர்
எழுதப்பட்டது போலான அந்த இருக்கை அவருடையதாயிருந்தது. நாற்காலி மட்டும் மாறியிருக்கும்.
மனசாட்சி உறுத்த செய்யும் செயலை விடமுடியாத
நிலையில் இப்படி ஒரு சின்ன சூட்சுமத்தைக் கையாள்கிறாரோ? என்று தோன்றியது. ஆனாலும் இது
தகுமா?
பாடுபவரைத்தான் கண்டு கொள்ளவில்லை என்றால் பார்வையாளர்
எவரையும் அவர் என்றும் லட்சியம் செய்ததேயில்லை.
அவரிடம் போய் பேசி, யாரையும் இவன் பார்த்ததில்லை. அவரும் யாருடனும் ஒரு வார்த்தை பேசியதில்லை.
அவருக்கென்று ஒரு தனி உலகம் .
பவமான சுதுடுபட்டு...பாதார விந்தமுலகு...நீ நாம
ரூபமுலகு. நித்ய ஜய...மங்களம்..- கச்சேரி முடிந்தது. பாதியில் எழக்கூடாது என்று காத்திருந்தார்கள்
எல்லோரும். அவர் கிளம்பினார். பேப்பரைப் மடித்து,
கேஸ் கட்டு போல் ஆக்கி, அக்குளில் இடுக்கிக் கொண்டு வெளியேறினார். சார்...கிளம்பிட்டீங்களா....?
கேட்டுக் கொண்டே எதிரே போய் நின்றான் இவன். ஆமாம்....ஃபுல்லா படிச்சாச்சில்ல....இனிமே
நாளைக்குத்தான் என்றார் அவர். பேப்பர் தீர்ந்து போச்சா அல்லது கச்சேரி முடிஞ்சிட்ட
ஏக்கமா?
ராகம்...தானம். கடந்த ..பல்லவியின்...ஒரு வரியை
விஸ்தாரமாய் அவர் முனகிக் கொண்டே நகர்ந்த இனிமை இவனை ஆச்சரியப்படுத்தியது. -------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக