10 டிசம்பர் 2019

தினமணி-சிறுவர் மணி-அரங்க நாடகம்-7.12.19 இதழ் -வாசிப்பும் நேசிப்பும்




அரங்கம்                                                                            காட்சி – 1                                                                                                                -                                                                                                                                    
“வாசிப்பும் நேசிப்பும்”
தேவகி – (அடுப்படியிலிருந்து அந்த அறையை நோக்கி வந்து கொண்டே) இதுக்குத்தான் சொன்னேன்…அவனுக்கு லீவு நாளைன்னிக்கு தூசியத் தட்டாதீங்கன்னு….பாருங்க…வந்து நின்னுட்டு தும்முறான்…
தியாகராஜன் – எனக்கு இன்னிக்குத்தானே டைம்..என் லீவன்னிக்குதானே நானும் செய்ய முடியும்….
 தேவகி –…போய் படி…இல்ல விளையாடு.. …இங்க தூசி முன்னால நிற்கக் கூடாது….
தியாகராஜன் – அவனுக்கு இந்த ஜாதிக்காய்ப் பெட்டி மேலே ரொம்ப நாளா ஒரு கண். …எங்கப்பா சேர்த்து வச்ச புத்தகங்களைக் காண்பிக்கப் போறேன்… ….
தேவகி –…அதுல பார்க்கிறதுக்கு என்ன இருக்கு…அப்டியே மொத்தமாத் தூக்கி …திண்ணைல கொண்டு கொட்டினா…பேப்பர்காரன் தூக்கிட்டுப் போறான்…
சதீஷ் – என்னம்மா நீ இப்டிச் சொல்றே…தாத்தா அருமையான புக்ஸையெல்லாம் வச்சிட்டுப் போயிருக்கிறதா அப்பா சொல்றாங்க…நீ தூக்கி எறிங்கிறியே…?
தேவகி –அத்தனையும் இத்துக் கிடக்கு…இத இன்னம் வேறே பாதுகாக்கணுமாக்கும்….? ஒரே பிசுக்கு நாத்தம்…மூக்கப் பொத்திக்கோ….
தியாகராஜன் – நீ சொல்றது உண்மைதான்…எல்லாப் புத்தகங்களையும் படிக்க முடிலதான்…ஆனா நல்லாயிருக்கிறவைகளை  இவனுக்காவது கொடுக்கலாம்தான்…
சதீஷ் – கண்டிப்பா படிப்பேன்ப்பா….எங்க ஸ்கூல் லைப்ரரில உட்கார்ந்து படிக்கைல எந்தப் புத்தகம் கேட்டாலும் டக்கு டக்குன்னு எடுத்துத் தருவாங்க… …படிக்கிற புத்தகங்கள ஓரத்துல மடிக்கக் கூடாது….அன்டர்லைன் பண்ணக் கூடாது… …எந்த வரிசைல எடுத்தமோ அதே இடத்துல ஞாபகமாக் கொண்டு … வைக்கணும்…அடுக்கு குலையக் கூடாதுன்னு…சொல்வாங்க…
தியாகராஜன் – கேட்டியா அவன் சொல்றதை…? படிக்க ஆசைப்படுற குழந்தைகளைத் தடுக்கக் கூடாது…அது நல்ல பழக்கம்தானே…
தேவகி – என்னவோ பண்ணுங்க…. இதுதான் மிச்சம் இந்த வீட்ல…..
தியாகராஜன் –படிக்கப் படிக்க அறிவு வளரும்…விசாலமடையும்…விரும்பி வந்து நிற்கிற பையன்ட்ட தடை போடலாமா?
காட்சி – 2   இடம் – வீடு    மாந்தர் – சதீஷ் மற்றும் அப்பா தியாகராஜன் (அறைக் கதவை அடைக்கிறார்)
தியாகராஜன் – இந்தா…இதப் பாரு…இது ராஜாஜி   எழுதின “சக்ரவர்த்தித் திருமகன்” பழைய புத்தகம். இது இப்போ இராமாயணம்ங்கிற பேர்ல வந்திருக்கு. இது வியாசர் விருந்து…அதாவது மகாபாரதம். இது ….உ.வே.சா.வோட  “என் சரித்திரம்” .  இது பார்…முக்கியமான புத்தகம்…வள்ளலாரோட திருஅருட்பா…. …எல்லாமே ரொம்ப முக்கியமான புத்தகங்கள். இந்தா…இது ஒண்ணு….திருக்குறள் உரை…மு.வரதராசனார்னு ஒரு பேராசிரியர், தமிழறிஞர் இருந்தார்…அவர் எழுதினது… முக்கியமான புத்தகம்…கொஞ்சம் கொஞ்சமா படிக்க ட்ரைப் பண்ணு…
சதீஷ் – கண்டிப்பாப்பா…தாத்தா எவ்வளவு புக்ஸ் சேர்த்து வச்சிருக்கார்? அப்போ எவ்வளவு படிச்சிருப்பார்? 
தியாகராஜன் – நல்ல புத்தகங்களை தேடி எடுத்துப் படிக்கிறதும், சேர்த்து வைக்கிறதும் முக்கியம்.  … வீட்டுக்கு வீடு லைப்ரரி  இருக்கணும்…புது வீடு கட்டிக் குடி போறாங்களே…அப்போ…புத்தகங்களுக்குன்னு அலமாரியா வச்சு, ஒரு அறையவே தனியா கட்டணும்…புத்தகங்கள் பொக்கிஷங்கள்….அறிவுச் செல்வமில்லையா…? நல்லா கவனம் வச்சிக்கோ….பாடங்களுக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ்…அப்புறம்தான் இதெல்லாம்..ஓ.கே…..?
சதீஷ் – ஓ.கே.ப்பா….நான் எப்பயுமே க்ளாஸ் ஃபர்ஸ்ட்தாம்ப்பா…
தியாகராஜன் – குட் பாய்…குட் பாய்….ஓடு….அம்மா கூப்பிடுறா….சாப்பிடப்போ….. (சதீஷ் டைனிங் டேபிளை நோக்கி ஓடுகிறான்)
காட்சி 3 -    நேரம் – இளம் காலைப் பொழுது. சூரியன் உதித்து மெல்லத் தன் கிரணங்களை விரிக்கும்  காட்சி. மாந்தர் – சதீஷின் அம்மா தேவகி, சதீஷ்….. மற்றும் அப்பா தியாகராஜன்
மொட்டை மாடிக்குப் போக படியில் ஏறுகிறாள்.
சதீஷ் – படித்துக் கொண்டிருந்த பாடப் புத்தகத்தைக்  கீழே வைத்து விட்டு ஓடுகிறான்…அம்மா…அம்மா…நானும் வர்றேன்…நானும் வர்றேன்…..
தேவகி –வேண்டாம்…பேசாம உட்கார்ந்து பாடத்தைப் படி…
சதீஷ் – வரத்தான் செய்வேன்….நீ என்ன செய்றேன்னு பார்க்கணும் ….
தியாகராஜன் – வந்தா வந்துட்டுப் போறான்… …குழந்தைகளுக்கு மாடில ஓடியாடுறதுல ஒரு சந்தோஷம்…
தேவகி – சரி….வந்து தொலை…..உங்கப்பாவே சொல்லியாச்சு… அதுக்கு மேலே நீ கேட்கவா போறே….
சதீஷ் – ஏம்மா இப்டிச் சொல்றே…தொலைன்னு….போம்மா…..
தேவகி –சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டா கண்ணு  உன்னைப் போய் திட்டுவேனா….என் தங்கமாச்சே நீ…வா…வா….
சதீஷ் – என்னம்மா செய்யப்போறே…..     ?
தேவகி – வந்துதான் பாரேன்…அதுக்குள்ளேயும் என்ன அவசரம்? – சொல்லிக் கொண்டே மாடிக் கதவைத் திறக்கிறாள்.
ஒரு புதிய உலகத்திற்குள் நுழைவது போல் உற்சாகமாய் முகம் மலர அடியெடுத்து வைக்கிறான் சதீஷ். பரந்த வானத்தைப் பார்க்கிறான். தொலைவில் தன் கதிர்களை விரிக்கும் இளஞ்சூரியனை நோக்குகிறான். கூட்டம் கூட்டமாய்ப் உயரத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கிறான். அவனறியாமல் ஒண்ணு…ரெண்டு என எண்ணுகிறது மனம்.   சே….சே…அப்டி எண்ணக் கூடாது…பார்த்த ஜோர்ல…மொத்தம் எத்தனைன்னு டக்குனு சொல்லணும்….–எதிர்ப்புறத்தில் பறக்கும் இன்னொரு பறவைக் கூட்டத்தைப் பார்த்து  அப்படி சட்டென்று கணிக்கிறது மனம். ஒன்பது…..சரியா….? கூர்ந்து நோக்குகிறான். ஒன்று கூட….பத்து…..இட்ஸ் ஓ,கே….திரும்பவும் ட்ரை பண்ணலாம்…சிரித்துக் கொள்கிறான்.
தேவகி – சதீஷ்…அங்க என்ன பண்ற? இங்க வா…..
சதீஷ் – இதோ வந்திட்டேம்மா…..ஆவலோடு ஓடுகிறான்.
மாடித் திட்டுக்குக் கீழே இருந்த இரண்டு மூன்று மண் சட்டிகளைச் சுத்தம் செய்து  தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள் தேவகி.
சதீஷ் – எதுக்கும்மா இது…? புதுசா இருக்கு…..இத்தன நாள் சொல்லவே இல்ல எங்கிட்ட….?
தேவகி – இது சம்மர் டைம் இல்லயா….பறவைகளெல்லாம் தண்ணி கிடைக்காமத் தவிக்கும்…அதுகள் தாகம் தீர்க்கத்தான் இந்த ஏற்பாடு…….எப்டி…..? எங்க பார்த்தாலும் தண்ணிக் கஷ்டமாத்தானே இருக்கு…நம்மள மாதிரிதானே அதுகளும்….
சதீஷ் – அப்டியா….? இங்க பேர்ட்ஸ் வருமாம்மா…? எப்டிச் சொல்றே….எல்லாம் பறந்தில்ல போயிட்டிருக்கு…..?
தேவகி -  சொல்றேல்ல… அதுக கூட்டமா எங்க போயிட்டு வருது சொல்லு பார்ப்போம்….?
சதீஷ் – தெர்லயேம்மா……எங்க போகுதுங்க…?
தேவகி – நீர் நிலைகளைத் தேடிப் போகும்….தண்ணீர் அருந்த…. ….இங்க நாம பழக்கம் ஏற்படுத்தினா எல்லாம் தானா வருமாக்கும்…
சதீஷ் – சூப்பர்ம்மா….என்னது அது….? இது எங்கே வாங்கினே…..?
தேவகி – நெல்லு மணி….அரிசிக் கடைக்குப் போகைல வாங்கினது
சதீஷ் – சரி…இத என்ன செய்வே….?
தேவகி – பாரேன்  என்ன செய்றேன்னு……(சொல்லிக் கொண்டே மாடித் திட்டுச் சுவர்களில் அந்த நெல்மணிகளை இறைக்கிறாள் தேவகி – அப்படியே தண்ணீர் சட்டிகளின் அருகிலும் கொஞ்சம் சிதற விடுகிறாள்.
சதீஷ் – எதுக்கும்மா இப்டி….இதுக்கு அரிசியாவே போடலாமே…..!
தேவகி – இந்தப் பகுதில புறாக்கள்தான் அதிகம்….சுற்றிவரப் பாரு….எத்தனை வீட்டு மாடிகள்ல உட்கார்ந்திருக்குதுன்னு…அதுகளுக்கு நெல்மணிதான் இஷ்டம்…அரிசியும் போடலாம்தான்…..பறவைகள் மேலே கருணை வச்சு எத்தனை வீடுகள்ல அதைப் போஷிக்கிறாங்க பார்த்தியா…? நாமளும் அப்படி இருக்கப் பழகணும்….
சதீஷ் – கண்டிப்பாம்மா…இனிமே இந்த வேலையை நானே செய்றேன்….சரியா…?.
 தேவகி –…இப்பப்பாரு…..-சொன்னவள் சதீஷின் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்து அந்த நிழலில் சற்று மறைவாக நின்று கொண்டாள். அடுத்த கணம்….புறாக் கூட்டமொன்று எங்கிருந்துதான் வந்ததோ….ஒன்றன் பின் ஒன்றாக  அப்படிச் சூழ்ந்து கொண்டன…..பக்….பக்….பக்…..ம்ம்…ம்ம்…ம்ம்…என்ற அவைகளின் படிந்த ஓசை  சதீஷை குஷிப்படுத்தியது.
. அன்றைய கைவினை வகுப்பில் அம்மாவின் அந்த தண்ணீர் வைக்கும்  வழிமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் சதீஷ்.
                                         ---------------------------------------------------



      

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...