08 டிசம்பர் 2018

புத்தனாவது சுலபம், (எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை வாசிப்பனுபவம்) உஷாதீபன் ----------------------------------------------------------------- ஒரே ஒரு சிறுகதையைப் படித்து விட்டு அதன் வாசிப்பனுபவத்தை மன நிறைவோடு, சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலோடு, பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் திருப்தியும், நிறைவும், ஒரு பெரிய நாவலைப் படித்து முழுமையாக உள்வாங்கி மொத்த நாவலின் காலகட்டத்தையும், நிகழ்வுகளையும் அடுக்கடுக்காக மனதில் வைத்து, ஒரு புத்தக விமர்சனமாக முன் வைக்கும் நிகழ்வில் கிடைப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. சிறுகதைகள் அதன் முழு உள் கட்டமைப்போடு உருவம், உத்தி, உள்ளடக்கம் என்கிற இலக்கணங்களோடு அமைந்து மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்பதான அனுபவம் அந்தப் படைப்பினைப் படிக்கும்போதே ஒரு தேர்ந்த வாசகனுக்கு ஏற்பட்டுப் போகிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணமெல்லாம் சிறுகதைக்கு இல்லை என்கிற கருத்தும் உண்டு. இலக்கணமெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயம் என்ன? அதை எழுதிய முறை என்ன? அது தந்த நிறைவென்ன? என்பதை மட்டுமே பார்ப்பது என்று கொண்டோமானால் ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு, படைப்பினில் சொல்லப்படும் விஷயத்தின்பாற்பட்டு நம்மின் அனுபவச் செறிவு நமக்கு உணா்த்தும் அர்த்தங்கள் அநேகம். பெரும்பாலும் படைப்பாளிகளுக்கிடையே ஏதோ ஒரு ஒற்றுமை எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அது வெவ்வேறு மொழிகளில் ஆன வாசிப்பனுபவத்தின்பாலான பாதிப்போ, அல்லது வாழ்நிலைகளில் ஏற்பட்டுவிட்ட ஒற்றுமையோ, அல்லது படைப்பனுபவத்தில் ஏற்பட்டுவிட்ட தவிர்க்க முடியாத எண்ணச் சுழல்களோ, ஒருவர் முந்தி ஒருவர் பிந்தி எனப் பல சமயங்களில் பின் தங்கும் நிலை வந்து விடுகிறது. மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம் ஒரு உருவகமாகி கதையாக உருப்பெறும் காலகட்டம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விதமான அவகாசத்தைக் கொடுக்கிறது. இந்தக் கால அவகாசத்தில்தான் ஒரு தேர்ந்த அனுபவப் படைப்பாளி ஒரு இன்றைய படைப்பாளியைவிட ஓட்டத்தில் முந்திக் கொள்கிறார். வாழ்வனுபவங்களும், மனக் குமுறல்களும், மனப் புழுக்கங்களும், ஏற்படுத்தும் தாக்கங்கள், உந்துதல்கள் ஒரு சரியான வடிவத்தில் உறுப்பெற்றால்தான் படைப்பாளி தன் எண்ணங்களுக்கான துல்லியமான உருவம் கிடைத்துவிட்டதாக திருப்தி கொள்ள முடியும். இல்லையென்றால் இதை எப்படிச் சொல்வது என்பதிலேயே காலம் கழிந்து போகும் வாய்ப்புண்டு. அந்த மாதிரிச் சமயங்களில்தான் ஒரு முதிர்ந்த, மூத்த படைப்பாளி முந்திக் கொள்கிறார். சே! நாம நினைச்சதை இந்த மனுஷன் எவ்வளவு அழகா சொல்லிட்டான் பார்யா? நாம எழுதியிருந்தாக் கூட நிச்சயமா இவ்வளவு அழகாக் கொடுத்திருக்க முடியாதே...என்று எண்ணி ஏங்க வைத்து விடுகிறது அநேகப் படைப்புக்கள். இதில் என்ன ஒரு சந்தோஷம் என்றால் நம் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு சரியான வடிவம் கிடைத்துவிட்டதில் ஒரு திருப்தி. என்னே அற்புதம்... இதை இவர் எழுதினதுதான் சரி, நம்மால இந்தளவுக்கு நிச்சயமா முடியாது என்று தோன்றுவதில் கிடைக்கும் ஒரு நிறைவு. ஆமாம்....ஒரு தேர்ந்த வாசகன் அப்படித்தான் நினைக்க முடியும்... அப்படித்தான் நினைக்க வேண்டும் என்பேன் நான். அதுதான் நல்ல வாசகனாய் இருக்கும் ஒரு படைப்பாளியை வளர்க்கும் லட்சணம் என்றும் சொல்வேன். நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வதா என்று நினைப்பதில் பொருளல்ல. ஒரு நல்ல படைப்பினை மனம் விட்டுப் பாராட்டும் பாங்கு அது. நிறையப் பேரிடம் அது இல்லைதான். அதனால்தான் ஒளிவு மறைவாய் குறைத்து மதிப்பிடுவது, அது இது என்றெல்லாம் மனதுக்குத் தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பாளி பிறிதொரு நல்ல படைப்பினை மனம்விட்டுப் பாராட்ட வேண்டும். அது அவனின் தன்னம்பிக்கையின் அடையாளம். அப்படியெல்லாம் நாமும் தேடினால்தான் சிறந்த படைப்புக்களைக் கண்டடைய முடியும். சிறந்த படைப்புக்களைத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அப்படியான ஒரு அனுபவம்தான் சமீபத்தில் எனக்குக் கிட்டியது. அந்தப் படைப்பு இரண்டு மூன்று மாதங்களாகவே மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. திரும்பத் திரும்பப் படிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று பிரமிக்கத்தான் வைக்கிறது. இப்படியே பிரமித்துக் கொண்டேயிருப்பதிலேயே காலம் கழிந்து விடுமோ என்றும் தோன்றுகிறது. என்று அம்மாதிரி ஒரு படைப்பினை நாம் எழுதுவது, மற்றவர் பாராட்டுவது? அந்த மட்டும் அம்மாதிரி எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனாவது இருக்கிறதே என்று ஒரு சமாதானம். ஆனால் அப்படியான அந்த நல்ல படைப்பை அந்த மதிப்பிற்குரிய படைப்பாளி ரொம்பவும் அநாயாசமாக எழுதி, இந்தா பிடி என்று எறிந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. நிச்சயம் அந்தக் குறிப்பிட்ட படைப்பிற்கு அவர் சிரமப்பட்டிருக்கப் போவதில்லை. எழுதுகோல் ஓடுகிற போக்கில் எழுதி முடித்த ஒன்றாகத்தான் அது இருக்கும். அவரின் வாசிப்பு அனுபவமும் எழுத்து அனுபவமும் அப்படி! ஆனாலும் அது நமக்கு அதிசயம். நமக்கு என்பதைவிட எனக்கு. அதுதான் சரி. இன்னமும் புதிரை விடுவிக்காமல் இழுத்தால் பொறுமையைச் சோதித்ததாகிவிடும். சொல்லி விடுகிறேன். திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கணையாழி ஏப்ரல் 2011 இதழில் எழுதியுள்ள புத்தனாவது சுலபம் என்கிற சிறுகதைப் படைப்புதான் அது. அறிவியல் தொழில்நுட்பம் பெருகியுள்ள இக் காலகட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள் நாடுகளிலும், வெளி நாடுகளிலும,; சுறு சுறுப்பாகவும், வேகமாகவும், பரபரப்பாகவும், நிற்க நேரமின்றியும், ஓட்டமெடுத்த போக்கிலும், காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதுபோல மென்பொருள் பொறியாளர்களாகவும், வேறு பல தொழில்நுட்ப அறிவியல் பணிகளிலும், ஓயாது ஒழியாது பணியாற்றிக் கொண்டு லட்ச லட்சமாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கையிலடங்கா இவர்களுக்கு நடுவே உள்ளூரிலேயே படிப்பை முடித்து விட்டும், படிப்பைப் பாதியில் விட்டு விட்டும், படிக்க வசதியில்லாமலும், அடுத்து என்ன செய்வது என்கிற லட்சிய நோக்கு எதுவுமில்லாமல, எந்தவிதமான தீர்மானங்களும் இல்லாமலும், ஒரு பெருங்கூட்டம் வெறுமே அலைந்து காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது என்பதும் இங்கே ஒரு தவிர்க்க முடியாத உண்மையாய் இருக்கிறது. படித்து முடித்து வேலை தேடும் ஒரு இளைஞன், படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெறுமே திரியும் இளைஞன், இப்படி எல்லோருமே பெற்றோர்கள் சம்பாதித்து அக்கறையாய் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பின் மகிமை அறியாமல் அதனை மனம் போன போக்கில் அன்றாடம் சும்மா இருந்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். குருவி சோ்ப்பது போல் வியா்வை சிந்தி சோ்த்த சேமிப்புப் பணம் இது என்கிற மகிமை அவா்களுக்குத் தெரிவதில்லை. மகிமையா அப்படீன்னா என்ன? கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள் நம்மிடம். ஏதாவது சொல்லப் புகுந்தால் ஏம்ப்பா இப்டி மொக்க போடற? என்று புதிய பாஷை பேசுவார்கள். வழக்கில் இல்லாத எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட ஒழுக்கமில்லாத வார்த்தைகள் இவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருக்கும். கேட்டால் உங்களுக்கு உங்கள் பையன்மேல் சந்தேகம் வரும். இவன் தடம் புரண்டு கொண்டிருக்கிறானோ என்று பயம் எழும். இவர்கள் தற்காலத்தில் பேசும் வார்த்தைகள் அம்மாதிரி ஒழுக்கப் பிறழ்வின் அடையாளங்கள்தான். வெட்டியாய்த் திரிபவனுக்குப் பெற்ற தாயின் முழு ஆதரவு. அவனின் பிறழ்தல்களைக் கண்டு கொள்ளாத, அதனை ஒழுங்குபடுத்தும் கடமையை மறந்த, எல்லாம் சரியாப் போகும் என்கிற மெத்தனமான மனப்போக்குக் கொண்ட விட்டேற்றியான கண்மூடித்தனமான ஆதரவு. அப்படியான ஒரு இளைஞனின் மனப்போக்கும், தான்தோன்றிச் செயல்களும், அதனைக் கண்டிக்காத தாயாரின் அரவணைப்பும், அதனைக் கண்டு அருகிலிருந்தும் அவனை நல்வழிப்படுத்த முடியாத தந்தையின் மனக்குமுறல்களும் மனப் புகைச்சல்களும் ஒருங்கே அமைந்த கட்டு செட்டான படைப்புதான் திரு எஸ்.ரா. வின் புத்தனாவது சுலபம். இந்தக் கதையைப் போல் இதற்கு முன் எத்தனையோ சாதனையைச் செய்திருக்கிறார் எஸ்.ரா. அவர்கள். அவரது நடந்து செல்லும் நீரூற்றும் குதிரைகள் பேச மறுக்கின்றன என்கிற படைப்பும், தரமணியில் கரப்பான் பூச்சிகள் என்கிற சிறுகதையும், ஒரு நகரம், சில பகல் கனவுகள் மற்றும் பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள் என்ற சிறுகதைகளும் என்றும் மறக்கமுடியாத படைப்புக்களாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் படித்து விட்டு, எழுதினால் இப்படி எழுத வேண்டும் இல்லையென்றால் வெறும் வாசகனாக மட்டும் இருந்தால் போதும் என்றே நான் நினைத்திருக்கிறேன். பல்வேறு மொழிகளிலான தொடர்ந்த வாசிப்பனுபவமும், சிறு பிராயம் முதலான படிப்பனுபவமும், விடாத எழுத்தனுபவமும்தான் இப்படியெல்லாம் அதிசயிக்கத்தக்க படைப்பினை ஒரு படைப்பாளியிடம் உருவாக்குகின்றன. எத்தனை பேருக்கு நடைமுறை வாழ்க்கையில் இவை சாத்தியமாகின்றன. குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் கண்டடையும் திறனாவது இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். புத்தனாவது சுலபம். ஆம். இன்றைய குடும்பச் சூழ்நிலைகள் ஒரு தந்தையை அந்த அளவுக்கான நிலைக்குத்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. மிகவும் பண்பட்ட, சாத்வீகமான, விவேகமிக்க ஒரு மனநிலை இந்தக் கதையில் சொல்லப்படும் நிகழ்வுகளால் ஒரு குடும்பத்தின் பொறுப்பு மிக்க தந்தைக்கு அநாயாசமாக நிச்சயம் ஏற்பட்டுப் போகும். தலைமுறை இடைவெளி, மாறிவிட்ட உலகமயமாக்கலின் தாக்கம் வீட்டுக்குள்ளும் தவிர்க்க முடியாமல் பரவிவிட்ட பரபரப்பு நிலை, கலாச்சாரச் சீரழிவுகளின் மாயைகளில் அமிழ்ந்து போகும் இளைய தலைமுறை, அவற்றினைக் கண்கொண்டு பார்த்துக்கொண்டே அந்த நசிவினை உணர்ந்து கொண்டே தடுக்க இயலாக் கையறு நிலை, வயதும் அனுபவமும் கற்றுத் தந்த மேன்மைகளை எடுத்து முன் வைத்து தன் வாரிசுகளைப் பண்படுத்த இயலாத, அதே சமயம் கண்முன்னே எல்லாமும் சீரழிந்து கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கத்தில் ஏற்படும் அர்த்தமுள்ள, ஆனால் அர்த்தமற்றதாகக் கருதப்படும் கோபதாபங்கள், குடும்பமே தீவாக மாறிப்போனதும், மொழியே மறந்து போகுமோ என்கிற அளவுக்கான அன்றாடப் பரஸ்பர உரையாடல்கள் நின்று போய் வீட்டில் ஒருவரை மற்றவர் ஒரு மூன்றாம் மனிதனைப் போல் பார்த்தும் பார்க்காமலும் கடந்து, வார்த்தைகளும், பேச்சுக்களும் தானாகவே குறைந்து போன மயான அமைதி, இவை இவையெல்லாம் உனக்கு நல்லது, இவற்றையெல்லாம் என் வழிதான் நீ தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு மூன்றாமவன் மூலம் நிச்சயமாக நீ இவற்றையெல்லாம் அறிந்து தெளிய முடியாது, வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களும் உனக்குக் கிடைத்துவிடப் போவதில்லை, பிறர் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும்தான் நீ எல்லாவற்றையும் அறிந்து பண்பட வேண்டியிருக்கும் என்று பெற்ற மகனையே இழுத்து உட்கார வைத்து உய்த்துணர வைக்க முடியாத நிலை, இப்படியெல்லாம் இருக்கும் தன் மகனைக் கண்மூடித்தனமாக எதையும் கண்டு கொள்ளாமல் ஆதரிக்கும் தாய், எல்லாம் போகப் போகத் தானே சரியாகும் என்று பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றையும் மன்னித்து ஒதுக்கி விடும் மனநிலை, இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்தான் இந்தப் படைப்பைப் பற்றி. வார்த்தைகளைச் சின்னச் சின்னதாக அடுக்கிச் சடசடவென்று கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு கூடவே நம்மையும் இதமாகக் கை பிடித்து அழைத்துச் செல்கிறது. அருண் என்ற அந்தப் பையனின் செயல்களும், அவற்றைக் கண்டும், கேட்க நினைத்துக் கேட்க முடியாமலும், மூன்றே மூன்று பேர் இருக்கும் ஒரு குடும்பத்தில் தனித்து விடப்பட்டு ஏங்கி நிற்கும் ஒரு தந்தை. அய்யோ, இப்படியெல்லாம் நடக்கிறதே, இவற்றைத் தடுக்க முடியவில்லையே, இது எங்கு போய் நிற்குமோ என்று நினைத்து நினைத்துப் பொறுமி தனக்குத் தானே பேசிக் கொள்ளும் ஒரு தந்தையின் மன ஆதங்கங்கள் இந்தச் சிறுகதையில் மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்ஜினியரிங் படிப்பை கடைசி வருடம் டிஸ்கன்டினியூ செய்த தன் மகனை இனி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, பார்க்கலாம் என்கிறான் அவன். எவ்வளவு பொறுப்பற்ற வார்த்தை அந்தப் பார்க்கலாம். ஒரு தந்தையின் மனது இந்த வார்த்தையில் நிச்சயம் நொறுங்கிப் போகும்தான். கடைசி வருடம் ஒரு படிப்பை ஒரு பையன் விட்டுவிடுவது என்பதே அவனிஷ்டத்திற்குச் செய்யும் செயல்தானே? அதையே தடுக்க முடியாத நிலைதான் இன்றைய குடும்பங்களில் உள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த இடம். பெற்றோர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளும் இளைய தலைமுறை. வயதானவர்களைக் கண்டால் உண்டாகும் வெறுப்பு. முதுமை எல்லாருக்கும் பொது என்பதை உணராத மனநிலை. அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு என்கிற வார்த்தைகள் இதை நமக்கு உணர்த்தி வேதனைப் பட வைக்கிறது. யாரோ ஒருவரிடம் மணிக்கணக்காகப் பேசும் உனக்கு எங்களோடு ஏன் சில வார்த்தைகள் பேச முடியவில்லை. அந்த அளவுக்கா நாங்கள் வெறுத்துப் போய்விட்டோம். நன்றி கெட்ட உலகம் இது. அதற்கு இன்றைய இளைஞர்கள் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான மன ஆதங்கங்களையும், ஏமாற்றங்களையும் பெற்றோர்களுக்கு உண்டாக்கி அவர்கள் மகிழ்--------------------------------------------


புத்தனாவது சுலபம், (வாசிப்பனுபவம்)   எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை                      -----------------------------------------------------------------                                           

ரே ஒரு சிறுகதையைப் படித்து விட்டு அதன் வாசிப்பனுபவத்தை மன நிறைவோடு, சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலோடு, பகிர்ந்து கொள்வதில்  கிடைக்கும் திருப்தியும், நிறைவும், ஒரு பெரிய நாவலைப் படித்து முழுமையாக உள்வாங்கி      மொத்த நாவலின் காலகட்டத்தையும், நிகழ்வுகளையும் அடுக்கடுக்காக மனதில் வைத்து, ஒரு புத்தக விமர்சனமாக முன் வைக்கும் நிகழ்வில் கிடைப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. 
சிறுகதைகள் அதன் முழு உள் கட்டமைப்போடு உருவம், உத்தி, உள்ளடக்கம் என்கிற இலக்கணங்களோடு அமைந்து மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்பதான அனுபவம் அந்தப் படைப்பினைப் படிக்கும்போதே ஒரு தேர்ந்த வாசகனுக்கு ஏற்பட்டுப் போகிறது. 
இப்படித்தான் இருக்க வேண்டும்   என்கிற இலக்கணமெல்லாம் சிறுகதைக்கு இல்லை என்கிற கருத்தும் உண்டு.      இலக்கணமெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயம் என்ன? அதை எழுதிய முறை என்ன? அது தந்த நிறைவென்ன? என்பதை மட்டுமே பார்ப்பது என்று கொண்டோமானால் ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு, படைப்பினில் சொல்லப்படும் விஷயத்தின்பாற்பட்டு நம்மின் அனுபவச் செறிவு நமக்கு உணா்த்தும் அர்த்தங்கள் அநேகம்.
பெரும்பாலும் படைப்பாளிகளுக்கிடையே ஏதோ ஒரு ஒற்றுமை எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அது வெவ்வேறு மொழிகளில் ஆன வாசிப்பனுபவத்தின்பாலான பாதிப்போ, அல்லது வாழ்நிலைகளில் ஏற்பட்டுவிட்ட ஒற்றுமையோ, அல்லது படைப்பனுபவத்தில் ஏற்பட்டுவிட்ட தவிர்க்க முடியாத எண்ணச் சுழல்களோ, ஒருவர் முந்தி ஒருவர் பிந்தி எனப்  பல சமயங்களில் பின் தங்கும் நிலை வந்து விடுகிறது.
மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம் ஒரு உருவகமாகி கதையாக உருப்பெறும் காலகட்டம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விதமான அவகாசத்தைக் கொடுக்கிறது. இந்தக் கால அவகாசத்தில்தான் ஒரு தேர்ந்த அனுபவப் படைப்பாளி ஒரு இன்றைய படைப்பாளியைவிட ஓட்டத்தில் முந்திக் கொள்கிறார்.
வாழ்வனுபவங்களும், மனக் குமுறல்களும், மனப் புழுக்கங்களும், ஏற்படுத்தும் தாக்கங்கள்,  உந்துதல்கள் ஒரு சரியான வடிவத்தில் உறுப்பெற்றால்தான் படைப்பாளி தன் எண்ணங்களுக்கான துல்லியமான உருவம் கிடைத்துவிட்டதாக திருப்தி கொள்ள முடியும். இல்லையென்றால் இதை எப்படிச் சொல்வது என்பதிலேயே காலம் கழிந்து போகும் வாய்ப்புண்டு. அந்த மாதிரிச் சமயங்களில்தான் ஒரு முதிர்ந்த, மூத்த படைப்பாளி முந்திக் கொள்கிறார். சே! நாம நினைச்சதை இந்த மனுஷன் எவ்வளவு அழகா சொல்லிட்டான் பார்யா? நாம எழுதியிருந்தாக் கூட நிச்சயமா இவ்வளவு அழகாக் கொடுத்திருக்க முடியாதே...என்று எண்ணி ஏங்க வைத்து விடுகிறது அநேகப் படைப்புக்கள். 
இதில் என்ன ஒரு சந்தோஷம் என்றால் நம் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு சரியான வடிவம் கிடைத்துவிட்டதில் ஒரு திருப்தி. என்னே அற்புதம்... இதை இவர் எழுதினதுதான் சரி, நம்மால இந்தளவுக்கு நிச்சயமா முடியாது என்று தோன்றுவதில் கிடைக்கும் ஒரு நிறைவு. ஆமாம்....ஒரு தேர்ந்த வாசகன் அப்படித்தான் நினைக்க முடியும்... அப்படித்தான் நினைக்க வேண்டும் என்பேன் நான். அதுதான் நல்ல வாசகனாய் இருக்கும் ஒரு படைப்பாளியை வளர்க்கும் லட்சணம் என்றும் சொல்வேன்.
நம்மை  நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வதா என்று நினைப்பதில் பொருளல்ல. ஒரு நல்ல படைப்பினை மனம் விட்டுப் பாராட்டும் பாங்கு அது. நிறையப் பேரிடம் அது இல்லைதான். அதனால்தான் ஒளிவு மறைவாய் குறைத்து மதிப்பிடுவது, அது  இது என்றெல்லாம் மனதுக்குத் தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பாளி பிறிதொரு நல்ல படைப்பினை மனம்விட்டுப் பாராட்ட வேண்டும். அது அவனின் தன்னம்பிக்கையின் அடையாளம். அப்படியெல்லாம் நாமும் தேடினால்தான் சிறந்த படைப்புக்களைக் கண்டடைய முடியும். சிறந்த படைப்புக்களைத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
அப்படியான ஒரு அனுபவம்தான் சமீபத்தில் எனக்குக் கிட்டியது. அந்தப் படைப்பு இரண்டு மூன்று மாதங்களாகவே மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. திரும்பத் திரும்பப் படிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று பிரமிக்கத்தான் வைக்கிறது. இப்படியே பிரமித்துக் கொண்டேயிருப்பதிலேயே காலம் கழிந்து விடுமோ என்றும் தோன்றுகிறது. என்று அம்மாதிரி ஒரு படைப்பினை நாம் எழுதுவது, மற்றவர் பாராட்டுவது?
அந்த மட்டும் அம்மாதிரி எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனாவது இருக்கிறதே என்று ஒரு சமாதானம். ஆனால் அப்படியான அந்த நல்ல படைப்பை அந்த மதிப்பிற்குரிய படைப்பாளி ரொம்பவும் அநாயாசமாக எழுதி, இந்தா பிடி என்று  எறிந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. நிச்சயம் அந்தக் குறிப்பிட்ட படைப்பிற்கு அவர் சிரமப்பட்டிருக்கப் போவதில்லை. எழுதுகோல் ஓடுகிற போக்கில் எழுதி முடித்த ஒன்றாகத்தான் அது இருக்கும். அவரின் வாசிப்பு அனுபவமும் எழுத்து அனுபவமும் அப்படி! ஆனாலும் அது நமக்கு அதிசயம். நமக்கு என்பதைவிட எனக்கு. அதுதான் சரி. இன்னமும் புதிரை விடுவிக்காமல் இழுத்தால் பொறுமையைச் சோதித்ததாகிவிடும். சொல்லி விடுகிறேன்.
திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கணையாழி ஏப்ரல் 2011 இதழில் எழுதியுள்ள புத்தனாவது சுலபம் என்கிற சிறுகதைப் படைப்புதான் அது.
அறிவியல் தொழில்நுட்பம் பெருகியுள்ள இக் காலகட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள் நாடுகளிலும், வெளி நாடுகளிலும,; சுறு சுறுப்பாகவும், வேகமாகவும், பரபரப்பாகவும், நிற்க நேரமின்றியும், ஓட்டமெடுத்த போக்கிலும், காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதுபோல மென்பொருள் பொறியாளர்களாகவும், வேறு பல தொழில்நுட்ப அறிவியல் பணிகளிலும், ஓயாது ஒழியாது பணியாற்றிக் கொண்டு லட்ச லட்சமாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கையிலடங்கா இவர்களுக்கு நடுவே உள்ளூரிலேயே படிப்பை முடித்து விட்டும், படிப்பைப் பாதியில் விட்டு விட்டும், படிக்க வசதியில்லாமலும், அடுத்து என்ன செய்வது என்கிற லட்சிய நோக்கு எதுவுமில்லாமல, எந்தவிதமான தீர்மானங்களும் இல்லாமலும், ஒரு பெருங்கூட்டம் வெறுமே அலைந்து காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது என்பதும் இங்கே ஒரு தவிர்க்க முடியாத உண்மையாய் இருக்கிறது.
படித்து முடித்து வேலை தேடும் ஒரு இளைஞன், படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெறுமே திரியும் இளைஞன், இப்படி எல்லோருமே பெற்றோர்கள் சம்பாதித்து அக்கறையாய் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பின் மகிமை அறியாமல் அதனை மனம் போன போக்கில் அன்றாடம் சும்மா இருந்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். குருவி சோ்ப்பது போல் வியா்வை சிந்தி சோ்த்த சேமிப்புப் பணம் இது என்கிற மகிமை அவா்களுக்குத் தெரிவதில்லை. மகிமையா அப்படீன்னா என்ன? கிலோ என்ன விலை?  என்று கேட்பார்கள் நம்மிடம். ஏதாவது சொல்லப் புகுந்தால் ஏம்ப்பா இப்டி மொக்க போடற? என்று புதிய பாஷை பேசுவார்கள். வழக்கில் இல்லாத எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட ஒழுக்கமில்லாத வார்த்தைகள் இவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருக்கும். கேட்டால் உங்களுக்கு உங்கள் பையன்மேல் சந்தேகம் வரும். இவன் தடம் புரண்டு கொண்டிருக்கிறானோ என்று பயம் எழும். இவர்கள் தற்காலத்தில் பேசும் வார்த்தைகள் அம்மாதிரி ஒழுக்கப் பிறழ்வின் அடையாளங்கள்தான்.
வெட்டியாய்த் திரிபவனுக்குப் பெற்ற தாயின் முழு ஆதரவு. அவனின் பிறழ்தல்களைக் கண்டு கொள்ளாத, அதனை ஒழுங்குபடுத்தும் கடமையை மறந்த, எல்லாம் சரியாப் போகும் என்கிற மெத்தனமான மனப்போக்குக் கொண்ட விட்டேற்றியான கண்மூடித்தனமான ஆதரவு. அப்படியான ஒரு இளைஞனின் மனப்போக்கும், தான்தோன்றிச் செயல்களும், அதனைக் கண்டிக்காத தாயாரின் அரவணைப்பும், அதனைக் கண்டு அருகிலிருந்தும் அவனை நல்வழிப்படுத்த முடியாத தந்தையின் மனக்குமுறல்களும் மனப் புகைச்சல்களும் ஒருங்கே அமைந்த கட்டு செட்டான படைப்புதான் திரு எஸ்.ரா. வின் புத்தனாவது சுலபம்.
இந்தக் கதையைப் போல் இதற்கு முன் எத்தனையோ சாதனையைச் செய்திருக்கிறார் எஸ்.ரா. அவர்கள். அவரது நடந்து செல்லும் நீரூற்றும் குதிரைகள் பேச மறுக்கின்றன என்கிற படைப்பும், தரமணியில் கரப்பான் பூச்சிகள் என்கிற சிறுகதையும், ஒரு நகரம், சில பகல் கனவுகள் மற்றும் பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள் என்ற சிறுகதைகளும் என்றும் மறக்கமுடியாத படைப்புக்களாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றன. 
இவைகளையெல்லாம் படித்து விட்டு, எழுதினால் இப்படி எழுத வேண்டும் இல்லையென்றால் வெறும் வாசகனாக மட்டும் இருந்தால் போதும் என்றே நான் நினைத்திருக்கிறேன். பல்வேறு மொழிகளிலான தொடர்ந்த வாசிப்பனுபவமும், சிறு பிராயம் முதலான படிப்பனுபவமும், விடாத எழுத்தனுபவமும்தான் இப்படியெல்லாம் அதிசயிக்கத்தக்க படைப்பினை ஒரு படைப்பாளியிடம் உருவாக்குகின்றன. எத்தனை பேருக்கு நடைமுறை வாழ்க்கையில் இவை சாத்தியமாகின்றன. குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் கண்டடையும் திறனாவது இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
புத்தனாவது சுலபம். ஆம். இன்றைய குடும்பச் சூழ்நிலைகள் ஒரு தந்தையை அந்த அளவுக்கான நிலைக்குத்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. மிகவும் பண்பட்ட, சாத்வீகமான, விவேகமிக்க ஒரு மனநிலை இந்தக் கதையில் சொல்லப்படும் நிகழ்வுகளால் ஒரு குடும்பத்தின் பொறுப்பு மிக்க தந்தைக்கு அநாயாசமாக நிச்சயம் ஏற்பட்டுப் போகும். தலைமுறை இடைவெளி, மாறிவிட்ட உலகமயமாக்கலின் தாக்கம் வீட்டுக்குள்ளும் தவிர்க்க முடியாமல் பரவிவிட்ட பரபரப்பு நிலை, கலாச்சாரச் சீரழிவுகளின் மாயைகளில் அமிழ்ந்து போகும் இளைய தலைமுறை, அவற்றினைக் கண்கொண்டு பார்த்துக்கொண்டே அந்த நசிவினை உணர்ந்து கொண்டே தடுக்க இயலாக் கையறு நிலை, வயதும் அனுபவமும் கற்றுத் தந்த மேன்மைகளை எடுத்து முன் வைத்து தன் வாரிசுகளைப் பண்படுத்த இயலாத, அதே சமயம் கண்முன்னே எல்லாமும் சீரழிந்து கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கத்தில் ஏற்படும் அர்த்தமுள்ள, ஆனால் அர்த்தமற்றதாகக் கருதப்படும் கோபதாபங்கள், குடும்பமே தீவாக மாறிப்போனதும், மொழியே மறந்து போகுமோ என்கிற அளவுக்கான அன்றாடப்  பரஸ்பர உரையாடல்கள் நின்று போய் வீட்டில் ஒருவரை மற்றவர் ஒரு மூன்றாம் மனிதனைப் போல் பார்த்தும் பார்க்காமலும் கடந்து, வார்த்தைகளும், பேச்சுக்களும் தானாகவே குறைந்து போன மயான அமைதி, இவை இவையெல்லாம் உனக்கு நல்லது, இவற்றையெல்லாம் என் வழிதான் நீ தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு மூன்றாமவன் மூலம் நிச்சயமாக நீ இவற்றையெல்லாம் அறிந்து தெளிய முடியாது, வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களும் உனக்குக் கிடைத்துவிடப் போவதில்லை, பிறர் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும்தான் நீ எல்லாவற்றையும் அறிந்து பண்பட வேண்டியிருக்கும் என்று பெற்ற மகனையே இழுத்து உட்கார வைத்து உய்த்துணர வைக்க முடியாத நிலை, இப்படியெல்லாம் இருக்கும் தன் மகனைக் கண்மூடித்தனமாக எதையும் கண்டு கொள்ளாமல் ஆதரிக்கும் தாய், எல்லாம் போகப் போகத் தானே சரியாகும் என்று பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றையும் மன்னித்து ஒதுக்கி விடும் மனநிலை, இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்தான் இந்தப் படைப்பைப் பற்றி.
வார்த்தைகளைச் சின்னச் சின்னதாக அடுக்கிச் சடசடவென்று கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு கூடவே நம்மையும் இதமாகக் கை பிடித்து அழைத்துச் செல்கிறது. அருண் என்ற அந்தப் பையனின் செயல்களும், அவற்றைக் கண்டும், கேட்க நினைத்துக் கேட்க முடியாமலும், மூன்றே மூன்று பேர் இருக்கும் ஒரு குடும்பத்தில் தனித்து விடப்பட்டு ஏங்கி நிற்கும் ஒரு தந்தை.  அய்யோ, இப்படியெல்லாம் நடக்கிறதே, இவற்றைத் தடுக்க முடியவில்லையே, இது எங்கு போய் நிற்குமோ என்று நினைத்து நினைத்துப் பொறுமி தனக்குத் தானே பேசிக் கொள்ளும் ஒரு தந்தையின் மன ஆதங்கங்கள் இந்தச் சிறுகதையில் மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இன்ஜினியரிங் படிப்பை கடைசி வருடம் டிஸ்கன்டினியூ செய்த தன் மகனை இனி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, பார்க்கலாம் என்கிறான் அவன். எவ்வளவு பொறுப்பற்ற வார்த்தை அந்தப் பார்க்கலாம். ஒரு தந்தையின் மனது இந்த வார்த்தையில் நிச்சயம் நொறுங்கிப் போகும்தான். கடைசி வருடம் ஒரு படிப்பை ஒரு பையன் விட்டுவிடுவது என்பதே அவனிஷ்டத்திற்குச் செய்யும் செயல்தானே? அதையே தடுக்க முடியாத நிலைதான் இன்றைய குடும்பங்களில் உள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த இடம்.
பெற்றோர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளும் இளைய தலைமுறை. வயதானவர்களைக் கண்டால் உண்டாகும் வெறுப்பு. முதுமை எல்லாருக்கும் பொது என்பதை உணராத மனநிலை. அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு என்கிற வார்த்தைகள் இதை நமக்கு உணர்த்தி வேதனைப் பட வைக்கிறது. யாரோ ஒருவரிடம் மணிக்கணக்காகப் பேசும் உனக்கு எங்களோடு ஏன் சில  வார்த்தைகள் பேச முடியவில்லை. அந்த அளவுக்கா நாங்கள் வெறுத்துப் போய்விட்டோம். நன்றி கெட்ட உலகம் இது. அதற்கு இன்றைய இளைஞர்கள் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான மன ஆதங்கங்களையும், ஏமாற்றங்களையும் பெற்றோர்களுக்கு உண்டாக்கி அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது அவருக்கு. சத்தியமான உண்மை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.
அவன் மாமா வாங்கித் தந்த பைக்கில் அவன் பறந்து கொண்டிருக்கும் காட்சி ஒரு கழுகு அவனுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது போல எண்ணவைத்து இவரைப் பயம் கொள்ள வைக்கிறது. அவன் சிகரெட் பிடிப்பதும், பியர் குடிப்பதும், கடன் வாங்குவதும், லாலியும் பீலியுமாக அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொள்வதும், முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதும், ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுவதாக அறிய நேர்வதும், தன் வீட்டில் தான் பார்க்க வளர்ந்த ஒருவன், இப்பொழுது தான் பார்க்காத ஒரு ஆளாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்து வேதனை கொள்கிறார் தந்தை. என்னே இழிநிலை. இன்றைய பல இளைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். தான் அனுமதிக்கக் கூடாது என்று தடுத்து வைத்திருந்த அத்தனையையும் இந்த உலகம் அவனுக்குப் புசிக்க கொடுக்கிறதே என்று குமுறுகிறார். அற்புதமான வரிகள். கதையைச் சொல்லும் விதத்தில் அது எத்தனை மெருகேறுகிறது என்பதற்கு இந்த இடம் சரியான உதாரணம். 
படிப்பைப் பாதியில் விட்ட அவனைப்பற்றி அவன் பெற்றோர்களுக்கு எத்தனை வருத்தம் இருக்கும் என்பதை எந்த இளைஞனும் உணருவதில்லை. அதுவரை செலவழித்த பணம் பற்றியும், அந்தப் பணத்தின் சேமிப்பு அருமை பற்றியும், இப்போதைய கால விரயம் பற்றியும், அநேகப் பெற்றோர்கள் புழுங்கிச் சாகிறார்கள். ஆனால் அதுபற்றி இந்த இளைஞர் கூட்டத்திற்குக் கிஞ்சித்தும் கவலையில்லை. அப்படின்னா அப்படித்தான். அதுக்கு இப்ப என்ன பண்ணச் சொல்ற? இதுதான் அவர்களின் கேள்வி. ஒழுக்கமற்றுப் போன இளைஞர்கள். அதுபற்றிக் கவலைகொள்ளாத மனங்கள். தான் இளைஞனாய் வாழ்ந்த காலத்துக்கும், இப்பொழுதுக்கும் எத்தனை வித்தியாசம்? இது கதையில் வரும் அந்தத் தந்தை ஒருவரின் பிரச்னை மட்டுமல்ல. இந்த சமுதாயத்தின் பிரச்னை. ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் படிப்படியான சீரழிவுப் பிரச்னை.
இப்படியான எண்ணங்களோடு சிக்கித் தவிக்கும் ஒரு தந்தை. ஒரு வேளை தன் நினைப்பெல்லாம் தவறோ என்று கூடத் தடுமாறுகிறார். இன்றைய எல்லாத் தந்தைகளுக்கும் இருக்கும் தடுமாற்றம்தான் அது. அதனால்தான் பலரும் ஆவது ஆகட்டும் என்று விலகி நிற்கிறார்கள். நம் கையில் என்ன இருக்கிறது, நடப்பது நடந்தே தீரும்...என்று பொருமிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் தூக்கமில்லாமல் பையனைப் பற்றியும், அவனின் முன்னேற்றம் பற்றியும், எதி்ர்காலம் பற்றியும் அலமந்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் புத்தனாவது சுலபம் என்கிற பொருத்தமான தலைப்பின் மூலம் அந்த விலகல் மன நிலையை, ஸ்திரமாக ஸ்தாபிக்கிறாh; எஸ்.ரா. அவர்கள்.
அம்மாவோடு அவனுக்கு இருக்கும் நெருக்கம், சகஜ நிலை, தன்னிடம் இல்லாமல் போனதிலான ஆதங்கம், அவரும் அவனும் ஒன்றாக வெளியில் போனதும், சிரித்துப் பேசிக் கொண்டதும், ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதுமான கடந்த காலங்களை நினைத்து ஏக்கம் கொள்ள வைக்கிறது.
தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து அவன் தனக்கான தகவல்களைப்; பகிர்ந்து கொள்ளாததையும், தன் மனைவியிடம் மட்டும் சொல்லிப் போவதும், சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் கூடச் சென்று வருவதும், ஒரு வாரம் பத்து நாட்கள் என்று வராமலிருப்பதும், அவைகுறித்து விசாரிக்கும்போது மகனின் சார்பாக ஒரு தாய் தயங்காமல் பொய்களைச் சொல்வதும், இவரை வெறுப்பான மனநிலைக்குத் தள்ளுகிறது. அம்மாக்கள் மகன்களுக்காக நிறையப் பொய் சொல்கிறார்கள். பிள்ளைகளின் பொருட்டு அடிக்கடி சண்டையிட்டு மனக் கசப்பு கொள்கிறார்கள். இதுதான் இன்றைய நிதர்சனம்.
இன்றைய அநேகப் பெற்றோர்களின் நிலை இதுதான். ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு இருக்கும் அற்புதமான எழுத்துத் திறமை நம்மை பிரமிக்க வைக்கிறது. நான் நிறையக் குழம்பிப் போயிருக்கிறேன் என்று முடிக்கிறார். பல பெற்றோர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். தலைமுறை இடைவெளி அவர்களை அப்படி நகர்த்தி ஒரு வனாந்திரத்தில் தன்னந்தனியே  நிறுத்தி வைத்திருக்கிறது. வயதானவர்கள் முகத்திற்குப் பின்னே கேலி செய்யப்படுகிறார்கள். பெற்ற மகனோடு சேர்ந்து கொண்டு கட்டிய மனைவியாலும் ஒதுக்கப்படுகிறார்கள். கடைசிவரை அவர்தான் நமக்குத்துணை என்கிற ஆழமான புரிதல்கூட நடுத்தர வயதிலான பெண்மணிகளுக்கு இருப்பதில்லை. இதனால் மூன்று பேர், நான்கு பேர் உள்ள குடும்பம் தனித் தனி தீவுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் உறக்கமின்றித் தவிக்கும் தகப்பன். படுக்கையில் புரண்டு கொண்டே பல எண்ணச் சிதறல்களில் வாழ்க்கையின் மீதிப் பொழுதுகளை எப்படிக் கழிக்கப்போகிறோம் என்கிற மிரட்சி. போதிய பணம் இருந்தும் ஆதரவற்ற நிலை. சொந்தங்களின் கருணையைத் தேடும் மனம். நீங்கள் தகப்பனாகும் நாளில் என்னைமாதிரிப் பலவற்றையும் உணர நேரிடும் என்கிற பொருள்பட ஒரு சித்தாந்த நிலைக்குப் போகிறார் இக்கதையின் தந்தை. காலம் இப்படிப் பல தந்தைகளைத் தனிமைப் படுத்தி, மிரட்டி, கூனிக் குறுக வைத்திருக்கிறது என்பதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை.
புத்தனாவது சுலபம் சிறுகதையைப் படித்ததன் மூலம் ஒரு சிறந்த, மென்மையான, இலக்கிய நயம் வாய்ந்த, நீரோடை போன்ற தெளிந்த நடைகொண்ட, ஒரு உயர்தரமான படைப்பைப் படித்து முடித்த அனுபவமும், படைப்பாளியான திரு எஸ்.ரா. அ்வர்களின் மீது மதிப்பும் நம் மனதில் பெருக்கெடுக்கிறது. இந்த மனம் லேசாகி உலக பந்தங்களிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்று நின்று விடுகிறது. எல்லாமும் மாயை என்கிற வெற்று வெளிதான் மிஞ்சுகிறது. ஏற்கனவே புத்தனாகி விட்டவர்கள் இந்த லௌகீக வாழ்க்கையில் ஏராளம். புத்தனாகிக் கொண்டிருப்பவர்கள் அநேகம். இந்தப் படைப்பைப் படிப்போர் அந்த மனநிலைக்குத் தள்ளப்படுவது நிச்சயம். வாழ்க்கையில்  இம்மாதிரியான எழுத்துக்களும், கூடவே கிடைக்கும் செழுமையான அனுபவங்களும்தான் மனிதர்களை இப்படி எங்கோ இட்டுச் சென்று நிறுத்தி விடுகிறது. அது ஞான நிலை. மோன நிலை. மனிதர்கள் தன்னிலிருந்து தன்னை விலக்கிப் பார்த்துக் கொள்ளும் பக்குவத்தை எய்த வேண்டும். அங்கேதான் ஞான நிலை கைகூடுகிறது. புத்தனாவது சுலபம் அந்த ஏகாந்த நிலைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. 
இதைப் போல் இன்னும் நிறைய ஆகச் சிறந்த படைப்புக்களை அவர் தந்துகொண்டே இருக்க வேண்டும். அதையெல்லாம் ஆழ்ந்து அனுபவித்துப் படித்து ரசிப்பதற்கு என்னைப் போல் பல்லாயிரம் வாசகர்கள் எப்போதும், எந்நேரமும், ஆவலாய் தயாராய்க்  காத்திருக்கிறார்கள்.
                     ----------------------------------------------


கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...