21 ஜூன் 2025
17 ஜூன் 2025
கண்மணி
கமலாவுக்கு..புதுமைப்பித்தன்..நூல்…வாசிப்பு ரசனை…
வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம்.
வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம் என்றார்
புதுமைப்பித்தன்.
அந்த
அளவுக்கான ஆழ்ந்த ரசனையோடுதான் தனது ஒவ்வொரு படைப்பினையும்
வடித்தெடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதனால்தான் இலக்கியம் என்பதன் முழு
அர்த்தத்தை உள்ளடக்கியதாக நம்மை பிரமிக்க வைக்கிறது அவரது ஒவ்வொரு படைப்புக்களும்.
இல்லையென்றால் தனது மனைவிக்கு எழுதும்
கடிதங்களைக் கூட இத்தனை ரசனையோடும், பிடிப்போடும், உள்ளார்ந்த அனுபவச் செறிவோடும்
அன்பையும், பாசத்தையும், பொறுப்புணர்ச்சியையும், கடமையுணர்ச்சியையும் நுணுகி
நுணுகி உணர்ந்து, அனுபவித்து அதன் ஆழமான உட்பரிமாணங்களில் மனமுவந்து பயணித்து,
தனக்கு ஊனாகவும், உடலாகவும் இருந்து பரிமளித்திடும் தன் மனையாளிடம் அதன் மொத்த
சாரத்தையும் வடித்துக் கொடுத்துக் கடிதங்கள் எழுதியிருப்பாரா?
கண்மணி
கமலாவுக்கு – புதுமைப்பித்தன்
இதுதான் புத்தகம். இத்தனை கடிதங்களைத் தொகுக்கும்
பணி என்ன சாதாரணமா? என்ன விலையோ அதைத் தயங்காமல் கொடுத்து, ஆர்வமாகப் படித்து
முடித்து விடுகிறோம். ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர்
என்ன ஒரு உழைப்பையும், முனைப்பையும் காட்டியிருப்பார்? திரு இளையபாரதி அவர்கள்
நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான்.
நாமெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்றுதான்
தோன்றுகிறது நமக்கு. முணுக்கென்றால் முன்னூறு முறை கோபித்துக் கொள்ளும், முகத்தைத்
திருப்பிக் கொள்ளும், சண்டைக்கு சதிராய்ப் பறக்கும் சாதாரண மானிடப் பிறவியாய்
அன்றாட வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
இத்தனைக்கும் பொருளாதாரத் தேவை என்பது
நிறைவடைந்திருக்கும் நிலையில், எதடா சாக்கு என்று ஒன்றுமில்லாததற்கெல்லாம்
முறுக்கிக் கொண்டு அலைகிறோம். என்னதான் புத்தகங்கள் படித்தாலும், உணர்ந்தாலும்,
மனிதனின் இயல்பான கோணல் புத்தி என்ன அத்தனை சீக்கிரமாகவா தன்னை மூடி மறைத்துக்கொள்கின்றன?
அல்லது எல்லா முரண்களிலிருந்தும் விலகிக் கொள்கின்றனவா?
அன்றாட வாழ்க்கையே பிரச்னையாக இருந்த நிலையில்,
பொருள் ஆதாரத்தை முற்றிலுமாக நம்பி நின்ற பொழுதில், ஒருவருக்கொருவர் பரஸ்பரம்
அவரவருக்கான மனச் சங்கடங்களைக் கூட நேரில் பகிர்ந்து கொள்ள முடியாது வெகு தூரம்
பிரிந்து நின்ற வேளையில், எத்தனை கரிசனத்தோடும், அன்போடும், கருணையோடும்,
பாசத்தோடும், பரஸ்பரம் எப்படியெல்லாம் உறவாடியிருக்கிறார்கள்? மனதுக்குள்ளே எப்படி
ஆரத் தழுவியிருக்கிறார்கள்? இதுதான் உண்மையான அன்பு என்பதோ?
மூத்த தலைமுறையினரின் அடிப்படையான விழுமியங்கள்
அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் செழுமைப் படுத்தியிருக்கின்றன! ஒழுக்கமும்,
பண்பாடும், கடமையுணர்ச்சியும், கட்டுப்பாடும், இந்த வாழ்க்கையை இப்படித்தான்
வாழ்ந்து காட்ட வேண்டும் என்றல்லவா நமக்குப் பாடம் கற்பிக்கின்றன! சொல்லும்
ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும் என்கிற உண்மை இங்கே எப்படியெல்லாம்
பரிணமிக்கின்றன!
பொருளீட்டுவதற்கான நமது உழைப்பு என்பது எங்ஙனம்
இருக்க வேண்டும், ஈட்டிய பொருள் எத்தனை அர்த்தபூர்வமாய்ப் பயன்படுத்தப்பட
வேண்டும், பொருள் ஆதாரம் என்பது அதற்கான தேவைகளை நீட்டித்துக் கொண்டே போகாமல்
அவசரம், அவசியம் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தவிர்க்க முடியாதவைகளாயும்,
தவிர்க்கக் கூடியவைகளாகவும் எப்படிப் பொறுப்போடு உணரப்பட வேண்டும், என்பதாக
வாழ்க்கையின் நிகழ்வுகளை எத்தனை அக்கறையோடு போதிப்பதாக உள்ளன!.
வாழ்க்கையில் மனிதனுக்கு எல்லாவிதமான
அனுபவங்களும் கிட்டி க்ஷவவிடுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் ஒருவனுடைய வாழ்க்கை
எல்கை மிகக் குறுகிய அளவிலானதாக இருப்பதுதான். வீடு, அங்கிருந்து பொருளீட்டும்
நிறுவனம் வரையிலான தூரம். வீடு, அங்கிருந்து பணியாற்றும் அலுவலகம் வரையிலான தூரம்.
இடைப்பட்ட மற்றும் பணியாற்றும் இடங்களில் பழகும் மனிதர்கள், அவர்களின்
குணாதிசயங்கள், அவர்களின் நடத்தைகள், பழக்க வழக்கங்கள், அனுபவங்கள் என்று மிகக்
குறிப்பிட்ட அளவிலான மனிதர்களின் சந்திப்புகளோடு பெரும்பாலும் முடிந்து
போகின்றனவாய் அமைந்து விடுகின்றன.
அப்படியானால் ஒரு மனிதன் முழுமையான அனுபவம்
வாய்ந்தவனாக, இந்த சமூகத்தை, அதன் நிகழ்வுகளை முற்றிலுமாகப் புரிந்து
நடந்துகொள்பவனாக ஒரு முழு மனிதனாக எப்பொழுது, எப்படி உலா வருவது?
அதற்குத்தான் வாசிப்பு அனுபவம் என்பது பெரிதும்
உதவுகிறது எனலாம். வாசிப்பு ஒரு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. அவனது சளசளப்பைப்
போக்கி அவனை அமைதியானவனாக்குகிறது. வாசிப்பனுபவத்தினால் மிகப்பெரிய
விவேகியானவர்கள் பலர் என்று கூறுகிறார் திரு சுந்தரராமசாமி அவர்கள். இதுதான்
சத்தியமான உண்மை.
மேற்கண்ட
புத்தகத்தின்பால் ஏற்பட்ட வாசிப்பனுபவம்தான் இந்த அளவுக்கான தொகையறாவை முன்னே
வைக்கும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டது.
திரு இளையபாரதி அவர்கள் தொகுத்து புதுமைப்பித்தன்
அவர்கள் தனது துணைவியாருக்கு எழுதிய கடிதங்கள்தான் கண்மணி கமலாவுக்கு என்கிற
பெயரில் அற்புதமான ஒரு இலக்கியப் பெட்டகமாக இங்கே மிளிர்கிறது.
வாழ்வதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மையில்
வாழ்கிறோமா? என்று கேட்ட கலைஞனின் வாழ முடியாமல் போன வாழ்வு அவன் வாக்கு மூலமாய்
இங்கே ஒலிக்கிறது என்று தனது முன்னுரையில் முன் வைக்கிறார் திரு இளையபாரதி
அவர்கள்.
புதுமைப்பித்தன்
என்கிற மகாகலைஞனின் இன்னொரு பரிமாணம் இந்தக் கற்பூர ஆரத்தியில் தரிசனமாகிறது
என்கிறார்.
ஆம்! அவர் சொன்னது போல் தன் இருதயத்தை, அதன்
தவிப்பை, தணலைக்கொட்டி முழக்கியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
வாழ்க்கை
எப்படியெல்லாம் நீண்ட காலத்திற்குப் பிரிந்து நின்றது, எப்படியெல்லாம் சிதைந்து
போனது, தேவைகள் எங்ஙனமெல்லாம் குன்றிப் போயின, சுயபூர்த்தியில்லாமலே நாட்கள்
எத்தனை வேதனையாய்க் கழிந்தன, அவற்றினூடே மனம் தன்னை, தன் எண்ணங்களை அகல விரித்து
எப்படியெல்லாம் ஆறுதல் தேடிக் கொண்டன என்பனவாக விரிந்து செல்லும் கண்மணி
கமலாவுக்கு என்னும் இந்த இலக்கியப் பெட்டகம் நம் மனதைப் பிழிந்து எடுத்து
விடுகிறது என்பது சத்தியமான உண்மை.
இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்ட ஒருவனின் வாழ்க்கை
எப்படித்தான் சிதைந்தாலும், அந்தக் கனவின்பால் ஏற்பட்ட பிடிப்பு ஒருவனை எங்ஙனம்
ஆட்டிப் படைக்கிறது என்பதைத் தன் மனைவிக்கான ஒவ்வொரு கடிதம் மூலமாக அப்படியே
வடித்தெடுத்திருக்கிறார் பு.பி. அவர்கள்.
பழைய திரைப்படங்களிலும், நாவல்களிலும், கடிதம்
எழுதும் முறைமையில் கண்டவற்றை தன் மனைவிக்கான முதல் அழைப்பின் வாயிலாக பு.பி.
அவர்கள் முன் வைக்கும்போது இம்மாதிரியெல்லாம் விளித்து நாம் எழுதியதேயில்லையே
என்று தோன்றத்தான் செய்கிறது. அப்படி எழுதியிருந்தால் அது ஒரு செயற்கையான
விஷயமாகத்தானே பட்டிருக்கும். எல்லோராலும் விரும்பப் பட்டிருக்குமா, மனைவியால் கூட
விரும்பத் தக்கதாக இருந்திருக்குமா என்றெல்லாம் கூடத் தோன்றினாலும், பு.பி.
அவர்கள் கடிதத்திற்குக் கடிதம் அப்படியே தன் மனைவியை விளித்து, தன் ஆழமான அன்பை,
பாசத்தை, தன் குடும்பத்தின்பாலான தன் நேசத்தை நிலைநிறுத்தும்போது ஒரு மனிதன்
முதலில் தன்னை நேசித்தால்தான் தன் நெருக்கமான சொந்தத்தை, சுற்றத்தை இப்படி
நேசித்து, அரவணைக்க முடியும் என்கிற மன நியாயம் நம்மைக் கட்டுப்படுத்தி நிலை
நிறுத்தி விடுகிறது.
கண்மணி கமலாவுக்கு…. எனதாருயிர்க் கண்ணாளுக்கு…
எனதாருயிருக்கு… கமலாளுக்கு… எனது கட்டிக் கரும்பான ஆருயிர்க் கண்ணாளுக்கு, என்
கண்ணம்மா… கண்ணா… கண்ணாளுக்கு… எனது கண்ணாளுக்கு… கண்ணான எனது உயிருக்கு… எனது
கண்ணுக்குக் கண்ணான கட்டிக் கரும்புக்கு… எனது உயிருக்கு உயிரான கட்டிக்
கரும்புக்கு… எனது கண்ணான கட்டிக் கரும்புக்கு… எனது அருமைக் கண்ணாளுக்கு….
கடிதத்தின்
முதல் அழைப்பே எவ்வளவு அன்பைப் பொழிந்து நிற்கிறது?
….
பொருளை மட்டுமே ஆதாரமாக வைத்து வாழும் தற்போதைய வாழ்க்கையில் விழுமியங்களான
விஷயங்கள் எங்கிருந்து எடுபடும்?
பழைய மதிப்பு மிக்க விஷயங்கள் இன்றும் அந்த மூத்த
தலைமுறையினரால் மட்டுமே உணரப்படுகிறது என்றால் அதுதான் உண்மை. இவற்றையெல்லாம் நாம்
நம் வாரிசுகளுக்குச் சொன்னோமா? அப்படியே சொல்லப் புறப்பட்டால்தான் யார் காதைத்
தீட்டிக் கொண்டு கேட்கத் தயாராயிருக்கிறார்கள்?
. 1938 களிலிருந்து 1948 வரையிலான சுமார்
பத்தாண்டு கால கடிதப் போக்குவரத்துகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இக்குறிப்பிட்ட பத்தாண்டு கால இடைவெளியில் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில்
வெவ்வேறு முகவரிகளில் மாறி மாறி இருந்திருக்கிறார். மதுரை, புனே, பெங்களுர், என்று
பல இடங்களுக்கும் சென்றிருக்கிறார். அதுவே அவரின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஆரம்ப
அடையாளங்களாக, காரண காரியங்களை முன்னிறுத்தியதானதாய் நமக்குத் தோன்றி மனதை மிகவும்
கஷ்டப்படுத்தி விடுகிறது.
மனிதன் வறுமையோடு போராடுவது என்பது மிகக் கொடுமை.
பொருளாதாரக் கஷ்டத்தினால் ஒருவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளே சீர்குலைந்துதான்
விடுகிறது. கையில் கிடைக்கும் பணத்தைக் கண்ணும் கருத்துமாகக் கணக்கிட்டு, கவனமாகச்
செலவு செய்து, விரயங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து, குடும்பத்திற்கு என்று
கரிசனத்தோடு அனுப்பி வைத்து மன நிறைவு கொள்ளுதலும், கடிதத்திற்குக் கடிதம்
அன்பையும், ஆறுதலையும், அரவணைப்பையும் தந்து பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க
முயலுதலும், அருகில் இல்லாவிட்டாலும் என் கடிதங்கள் கட்டாயம் உன்னை
ஆறுதல்படுத்தும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு கடிதத்தையும் அவர் வடித்திருக்கும்
பாங்கு….பின்னால் இது இலக்கியமாகப் பேசப்பட வேண்டும் அல்லது பேசப்படும் என்கிற
எதிர்பார்ப்பிலா எழுதப்பட்டது?
மன ஆழத்திலிருந்து உண்மையான அன்பின், பாசத்தின்
வெளிப்பாடல்லவா அவைகள்! அதிலும் குழந்தை குஞ்சு இறந்து போய்விட அவர் அந்தத்
துயரத்தை மறக்க தன் மனைவிக்கு எழுதும் வரிகள் நம் நெஞ்சத்தை அறுத்து எடுக்கின்றன.
தொலைபேசி
வசதி கூட இல்லாத அந்தக் காலத்தில் வெறும் கடிதங்கள் மட்டுமே தொடர்பு படுத்துபவை
என்கிற அளவில், கடுமையான வேலைகளுக்கு இடையில் அடுத்தடுத்து விடாமல் அவர் தன்
மனைவிக்கு எழுதியுள்ள கடிதங்கள், வீட்டின் தொடர்ந்த நடவடிக்கைகளை சென்னையிலிருந்தே
எவ்வளவு பொறுப்பாக இயக்க முடியுமோ அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டோடு இயக்கி,
மனைவியையும் ஆறுதல்படுத்தி, தான் இல்லாத குறையைப் போக்க அவர் எடுத்திருக்கும்
முயற்சிகள், மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சீர்பட நடத்திச் செல்ல
முயற்சித்திருக்கிறார்கள் என்பதற்கான அற்புதமான அடையாளங்களாகப் பரிணமிக்கின்றன.
எப்படியும் வாழலாம் என்பது எந்தக் காலத்திலும்
எவருக்கும் பொருந்தியதாக இருந்ததில்லை. நமது குடும்ப அமைப்பு கற்றுக் கொடுத்த
பாடங்கள் அவை. இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும், அதுதான் ஒரு மனிதனின், அவன்
சார்ந்த குடும்பத்தின் நன்னடத்தைகளின் அடையாளங்களாகக் காலத்திற்கும் நிலைத்து
நிற்கும் என்பதுதான் சத்தியமான உண்மை.
அம்மாதிரியான விழுமியங்களை அவற்றின் அடையாளங்களை
வறுமையும், பொருளாதாரப் பற்றாக்குறையும் குலைக்க முயலும்போது மனிதன் முரண்படாமல்,
அந்தப் பேரலையில் அடித்துச் செல்லப்படாமல், அவற்றை எப்படிச் சமாளித்து
முன்னேறுகிறான் என்பதுதான் வறுமையிற் செம்மை என்ற தத்துவ நிகழ்வாகக் காலத்துக்கும்
இகருந்து வந்திருக்கின்றன. இந்த அடையாளங்களின் பிரதிநிதியாய் பு.பி. அவர்கள்
இந்தப் புத்தகத்தில் தான் வரைந்த கடிதங்களின் மூலம் நம் மனக் கண்ணில் திகழ்கிறார்.
கமலா கண்ணே! கட்டிக் கரும்பே! மறந்து விடாதே.
உனக்கு ஏற்படும் துன்பம் எனக்கும்தான். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிக்கிறோம்.
அதனால் உனக்கென்று ஒரு வழி என்னும் அசட்டு யோசனைகளை விட்டுவிடு. மனசை மாத்திரம்
தளர விடாதே! அது எனக்கு எவ்வளவு கவலை கொடுக்கிறது தெரியுமா? உன்னுடன் தவிக்கும்.
உனது சொ..வி.
விடாமல்
கடிதத்திற்குக் கடிதம் அவர் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் விதம், அடக் கடவுளே,
ஒரு அற்புதமான படைப்பாளிக்கு வாழ்க்கைப் போராட்டம் எத்தனை கொடுமையாக அமைந்து
விட்டது என்று நம்மைப் பிழிந்து எடுத்து விடுகிறது.
மனைவியை ஊக்கப்படுத்தும் நிமித்தம், அவர் எழுதும்
கதைகளைத் தனக்கு அனுப்பிவைக்கச் சொல்கிறார். அடுத்தடுத்து விடாமல் எழுது என்று
உற்சாகப்படுத்துகிறார். உன் கதைகள் நன்றாகவே உள்ளன, ஓரிரு வார்த்தைகளை மாற்றிப்
போட்டால் போதும். அவற்றை நான் சரி பண்ணி, பிரசுரத்திற்குக் கொடுத்து விடுகிறேன்
என்று கூறி, இன்னும் ஏதாவது எழுதியிருந்தாயானால் உடன் எனக்கு அனுப்பிக் கொடு என்று
கேட்கிறார்.
1947 ஆரம்ப வரையிலான காலங்கள் சென்னையிலேயே
கழிந்து விடுகின்றன. பிறகுதான பட விஷயமாக என்று மதுரைக்குப் பயணிக்கிறார்.
சூழ்ந்திருந்த இருள் விலக ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ச்சியை மனைவியோடு
பகிர்ந்து கொள்கிறார்.
மதுரை
சித்திரகலா ஸ்டுடியோவில் பட வேலைகளைக் கவனிக்க என்று கிளம்புகையில் அவர் மனம்
பெரிதும் உவகை கொள்கிறது. அப்பொழுது கூட அங்கிருந்து உன் மனக் கவலை தீர்க்கும்
தகவலை உனக்கு அனுப்ப முடியும் என்று நினைக்கிறேன் என்று மனைவிக்குத்
தெரிவிக்கிறார்.
மதுரையில் மேலமாசி வீதியில் இருந்த உடுப்பி
Nஉறாட்டலில்தான் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் வந்தால் தங்குவார்கள் என்று
கேள்விப் பட்டதுண்டு. அங்கு அறை எண் 13ல் பு.பி. வந்து தங்கியிருக்கிறார் என்கிற
தகவல் இன்று பெரிய ஜவுளி நிறுவனமாயும் வேறு பல கடைகளாயும் இருக்கும் அவ்விடத்தைப்
பார்க்கும்போது நம் மனதை கனக்க வைக்கிறது.
எல்லாவிதமான பழைய அடையாளங்களும்தான் பணம் என்கிற
புள்ளியில் இங்கே படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டனவே! காலத்தின் வேக ஓட்டத்தில்
விரட்டியடிக்கப்பட்டுவிட்டனவே!
1948 களில் புனாவிற்கும் பிறகு பெங்களுருக்கும்
செல்லும் வாய்ப்புக் கிட்டிய பு.பி. அவர்கள் பெங்களுரிலிருந்து எழுதும் ஒரு கனமான
கடிதத்தோடு இப்புத்தகம் நிறைவு பெறுகிறது. நம் மனதையும் அது நிறைத்து கனக்க வைத்து
விடுகிறது.
அங்கே
நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப் பையிலும் துவாரம் விழுந்து
விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டுக் கிழித்து விட்டார்கள். இனி
அவர்களைப் பொறுத்தவரை மரணம்தான் முடிவு. என்பதாக அந்தக் கடிதத்தின் வரிகள்
விரிகின்றன.
முக்கியமான செய்தி ஒன்றைத் தரும் ஒரு
கடிதத்தையும் நாம் இங்கே கவனித்தாக வேண்டும். அது புனேயிலிருந்து எழுதப்படுகிறது.
5.2.48 என்று தேதியிட்ட அந்தக் கடிதத்தில்
மகாத்மாவைச் சுட்டுக் கொன்றுவிட்ட செய்தியைப் பெரும் அதிர்ச்சியோடு தெரிவித்து,
அதன் தொடர்பான கலகங்களைச் சுருக்கமாக விவரிக்கிறார்.
கொன்றது
உறிந்து, புனா நகரத்து ஆள் என்று சொன்னார்கள். புனாவில் உறிந்து மகாசபை பத்திரிகை
நடத்தியவன் என்று தெரிந்ததும், நகரம் கொந்தளித்துப் போயிற்று. உறிந்து மகா
சபைக்காரர்களைக் குத்தி அவர்கள் வீடுகளை எரித்தார்கள். காந்தியைச் சுட்டவன்
பத்திரிகாலயத்தை ஜனங்கள் எரிக்கும்போது நெருப்பு அணைக்கும் யந்திரம் வந்தது.
அணைக்கக் கூடாது என்று ஜனங்கள் தடுக்க, ராணுவம் துப்பாக்கி பிரயோகித்து எட்டுப்
பேர் மரணம். எங்கு பார்த்தாலும் பிராமணர்களை அடித்துக் கொல்லுவது அவர்கள்
வீடுகளைக் கொளுத்துவது என்ற காரியம் நாலு நாட்களாக நடந்து வருகிறது. காந்தி
மாண்டதற்காகச் சர்க்கரை கொடுத்த ஒருவன்ய கடை தீ. வெளியில் எங்கும் செல்ல முடியாத
நிலை. நான்கு நாட்கள் எனக்கு வெற்றிலை இல்லை என்றால் நிலை எப்படி என்று யோசித்துக்
கொள் என்று முடிக்கிறார். இருக்கும் அதிரடியைச் சொல்லி அவருக்கான வெற்றிலையோடு
முடிக்கும் பாங்கு எத்தனை சரளமும் யதார்த்தமும் நிறைந்தது. நல்லிலக்கியம் என்பது
தானே கூடி வருவதாய்த்தானே இருக்க வேண்டும். காலம் பின்னால் உணரும் என்று அவர்
நினைத்திருப்பாரா? அவரது உள்ளக் கிடக்கை அத்தனை தத்ரூபமாய்ப் பரிணமித்திருக்கிறது
என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரு
முயற்சி செய்து இந்தக் கடிதங்களைத் தொகுத்தளித்த திரு இளையபாரதி மிகவும்
பாராட்டுக்குரியவர்.
இந்தக் கடிதங்களில் காணக் கிடைக்கும் புதுமைப்
பித்தன் நமக்கு முற்றிலும் புதியவர். ரொம்பவும் நெகிழ்ச்சியானவர். தமிழ்
இலக்கியத்தின் எல்லாவிதமான பரிசோதனைகளுக்கும் என்னிடம் வாருங்கள் என்று களம்
அமைத்துக் கொடுத்த பெருமை பு. பி. அவர்களைச் சாரும். அவரைத் தொடாமல் இந்த இலக்கிய
வானுக்குள் எவரும் சஞ்சாரம் செய்ய இயலாது. தன் மனைவிக்கு அவர் எழுதிய இக்கடிதங்கள்
காலத்தால் இலக்கியமாகப் பரிணமிக்கும் என்ற நினைத்தெல்லம் அன்று அவர் எழுதவில்லை.
ஆனால் இன்று அவையும் அந்தத் தகுதியைப் பெற்று தலை நிமிர்ந்து நிற்கின்றன. நாம்தான்
அவற்றை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியத்தை விரும்பும் ஒவ்வொருவர்
நூலகத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இது!
வ.வு.சி. நூலகம், ஜி-1, லாயிட்ஸ் காலனி,
இராயப்பேட்டை,சென்னை-14 ன் அற்புதமான வெளியீடு இது. இந்தப் பதிப்பகம் எத்தனையோ
நல்ல நூல்களைத் தேடித் தேடி வெளியிட்டு வருகிறது. அதில் இது அதி முக்கியமானது.
-------------------------------------------
,
01 ஜூன் 2025
*-சிறுகதை “தனித்திருப்பவன்“ - தாய்வீடு இதழ் ஜூன் 2025 - பிரசுரம்
எனக்கு வயது எழுபது நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் என் மகனோடு
இருப்பது எனக்குப் பொருந்தி வரவில்லை. நீயா
எதாச்சும் நினைச்சுக்கிறே...என்கிறான் அவன். மகனின் மருமகளின் வாழ்க்கை முறை என்னுடைய
இளம் பிராய வாழ்க்கை முறையிலிருந்து எவ்வளவோ மாறுபட்டிக்கிறது. என்னால் சகிக்க முடியவில்லை.
எதையும் கண்டு கொள்ளாமல் இருங்கள் என்கிறாள் என் மனைவி. அவளோடு இருந்தபோதே அவளின் பல
செய்கைகள் எனக்குப் பிடிக்காததால் தனிமை காத்தவன் நான். இதுதான் முடியும், இதெல்லாம்
முடியாது என்று கட்டுப்பாடுகள் விதித்தவன். அதைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தியவன்.
பொறுத்துக் கொண்டாள். என்னை சகித்துக் கொண்டாள். இவனிடம் என்ன பேசினாலும் கதையாகாது
என்று தோன்றிவிட்டது அவளுக்கு. வேறு கதி? என்று இருந்துவிட்டாள். என் வீட்டில் நான்
நடைமுறைப் படுத்திய சட்டதிட்டங்களை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவனாக இருந்தேன். முதலில்
என்னை ஆட்படுத்திக்கொண்டு, பிறகுதான் அவள் மேல் திணித்தேன். முதலில் அதைச் சொல்பவனே
முன்னுதாரணமாய் விளங்க வேண்டும் என்பதில் நான் தீர்மானமாய் இருந்தேன். காய்கறி, மளிகை,
பால், பழம், துணிமணி, தண்ணீர், மின்சாரம், சுத்தம், சுகாதாரம் என்று அனைத்துமே என்
கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பொறுப்பை எடுத்துச் சுமப்பதற்கு ஒருவன் தயாராய் இருக்கும்போது,
எதிராளி அதற்கு மடங்கிப் போய்த்தானே ஆக வேண்டும். அல்லது பொறுப்பு விட்டது.......என்று
எனக்கு ஒத்துழைத்தாக வேண்டும். அதுதான் நடந்தது.. என்னை மீறி ஒரு துரும்பு கூட நகர்ந்ததில்லை...வெளியேறியதில்லை,
உள்ளே வந்ததில்லை. அளவான குடும்பம் அழகான குடும்பம், சிக்கனம்,
சேமிப்பு இதுவே தாரக மந்திரம்.. என் பையன் பிறந்து, வளர்ந்து, படித்து பட்டம் பெற்று
ஒரு நல்ல இடத்தில் (எங்களுக்குப் பொருத்தமான இடத்தில்) அவனுக்கு பெண்ணையும் பார்த்துக்
கட்டி வைத்து, இன்று ஒரு குழந்தைக்கும் தகப்பனாகி விட்டான். அத்தனையும் என்னுடைய சாதனை
என்றுதான் சொல்வேன். கடமையைச் சாதனை என்று சொல்லிக் கொள்ளலாமா? என்னுடைய அத்தனை செயல்பாடுகளுக்கும்
அவளும் ஒத்துழைத்தாள். இவனிடம் வேறு மாதிரி எதுவும் சொல்லிப் பயனில்லை என்கிற அவளின்
முடிவே அந்த ஒத்துழைப்பிற்கு முழுக் காரணமாய் இருக்கும். மிலிட்டரி ரூல் என்று அடிக்கடி
ஒரு பதப் பிரயோகம் புறப்படும். அப்டித்தான்....என்று பதிலளித்திருக்கிறேன். உண்மை வேகமாத்தான்
வரும்...நேர்மை கடினமாத்தான் இருக்கும் என்று சொல்வேன். இன்றுவரை எல்லாமும் சரியாகத்தானே
நடந்தேறியிருக்கிறது? அதை அவள் மறுக்க முடியுமா? ஆனால் இப்பொழுதுதான் காற்று திசை மாறி
அடிக்கிறது. அவள் தன்னை அந்த வீட்டிற்குக் கொடுத்துவிட்டாள் என்று புரிந்தது. தன்னை
என்றால் தன் மீதிக் காலத்தை. ஏதோ ஓட்டிட்டுப் போகணும்....என்று அவள் எப்பொழுதேனும்
முனகிக் கொள்வதன் முழுப் பொருள் இதுதான் என்று நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி குடித்தனம் வைத்துவிட்டு ஊருக்குத்
திரும்பி வந்துவிட வேண்டுமென்றுதான் திட்டம். எல்லாமும் திட்டமிட்டபடி நடந்தன ஒன்றைத்
தவிர...அதுதான் நாங்கள் ஊர் திரும்புவது.... எனக்கு எங்கம்மாதான்..எல்லாம். - இது என் பையன் யாரிடமோ கூறிய
வார்த்தைகள். அப்போது நானும் அருகிலேதான் இருந்தேன். என்னை வைத்துக் கொண்டேதான் கூறினான்
இந்த வார்த்தைகளை. அப்பாவை வைத்துக் கொண்டு இப்படிக் கூறினால் அப்பா மனசு சங்கடப்படும்
என்று அவனுக்குத் தெரியவில்லை. கேட்பவர் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும்
தெரியவில்லை அவனுக்கு. எந்தப் பசங்களுக்குமே
அவன் அப்பா ஒரு முன்னுதாரணமாய் இருப்பதில்லை...இருந்ததில்லை...அது இந்தத் தலைமுறையின்
தலையெழுத்து. அப்பன்காரன் எப்போதும் சண்டைக்காரன்தான். எதனால் இப்படி ஆயிற்று என்று
எனக்கும் இன்றுவரை தெரியவில்லை. நான் பின்பற்றத் தகாதவன் என்றால் அவன் வாழ்க்கையில்
உருப்படவே முடியாது என்பது என் துணிபு. நான் இல்லாதபோதுதான் அந்த அருமை தெரியப்போகிறது.
அவனுக்கு வேண்டியதெல்லாவற்றையும் ஓடி ஓடி, பார்த்துப்
பார்த்துச் செய்தவன் நான். விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் காலங்களில் வேண்டிய
உணவு வகைகளை வித விதமாய்ச் சமைத்துப் போட்ட
வேலை மட்டும் அவளுக்கு. மறுப்பதற்கில்லை. அது ஒரு தாயாருக்கே உள்ள அக்கறை. மற்றப்படியான
அவனது கல்வி, சுகாதாரம், இதர வெளிவிவகாரம் அனைத்தையும் விழுந்து விழுந்து கவனித்தவன்
அடியேனே...ஆனாலும் பையன்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அது தந்தையர்களின் துரதிருஷ்டம்.
இந்தப் பசங்கள்தான் நாளை பெண்டாட்டி வந்ததும் அவள் பின்னால் ஒடுங்கி விடுகிறார்கள்.
அப்போது இந்த அம்மாவின் பாடு? அது இனிமேல்தானே தெரியும்...! அவளென்னவோ அவன் அம்மா கோண்டு என்று நினைத்திருக்கிறாள்.
பாருங்கள்...இப்போது அவன் பெயருக்கே ஒரு வீடு
வாங்கி, குடி வைத்து அவனைப் பாதுகாப்பாய் உட்கார்த்தி வைத்து.....! அனைத்து முயற்சிகளும்
என்னுடையதே...இதை யார் உணர்கிறார்கள்? என் பணிக் காலத்திலிருந்து நான் சும்மா வெறுங் கையில் மொழம் போட்டிருந்தால் இதெல்லாம் இன்று
சாத்தியமாகியிருக்குமா? எத்தனை செலவுகளைச் சுருக்கியிருப்பேன். எதை எதையெல்லாம் வேண்டாம்
என்று சொல்லியிருப்பேன். இல்லையென்றால் பைசா சேருமா? என்றாவது உணருவார்களா இந்த உண்மையை?
அவளுக்கே சரியாகத் தெரியாதே...! அப்படிச் சொல்லாதே...உங்கப்பா
உனக்கு எம்புட்டு செய்திருக்கா....அவரில்லைன்னா ஊர்லேர்ந்து கிளம்பி வந்து, இங்க வீடு
வாங்கி செட்டிலாகி, மேட்ரிமோனியல் விடாமப் பார்த்து தேர்வு செய்து...எத்தனை தடவை ஓடு
ஓடுன்னு ஓடியிருக்கா...உன் ஜாதகத்தத் தூக்கிண்டு....உனக்குப் பொருத்தமா ஒரு இடத்தைப்
பார்த்து, உன் விருப்பம் போலக் கல்யாணத்த முடிச்சு, இன்னிக்கு நீ ஒரு சரியான பொசிஷன்ல
இருக்கேன்னா அதுக்கு அவர்தானே மெயின் காரணம்.உன்னையே நினைச்சு எத்தனை நாள் தூங்காம
இருந்திருப்பார் தெரியுமா? அவரில்லேன்னா இம்புட்டும்
நடந்திருக்குமா...என்னால மட்டும் இதெல்லாம் முடிஞ்சிருக்குமா...கொஞ்சம் நினைச்சுப்பாரு....ஆகையினால
இனிமே அப்படிச் சொல்லாதே...உங்கப்பா மனசு கஷ்டப்படுமாக்கும்.... - ஒரு நாள் கூட இப்படி
எடுத்துச் சொல்லவில்லையே..! பெண்கள் எப்போதுமே குறுகிய மனம் படைத்தவர்கள்.
எல்லாம்
அம்மாதான் என்கிற அந்த வார்த்தைகளில் அப்படியே திளைத்துப் போய்க் கிடக்கிறாளே...! போகட்டும்....அதுபற்றி
ஒன்றும் பாதகமில்லை...நான் என் கடமையைச் செய்தேன்...அவ்வளவுதான்...அதற்கு மேல் இதில்
ஒன்றுமில்லை....பெத்த கடன்....செய்தால்தான் மனசு திருப்தி அடையும். நாளைக்கு திடீரென்று
மண்டையைப் போட்டாலும் ஆத்மா சாந்தி கொள்ளும்....ஊர் தூற்றாதே...! உறவு வையாதே...!
ஆனாலும்
இப்பொழுது என் மனது தனித்தே கிடக்கிறது. இங்கே ஒன்ற மாட்டேனென்கிறது. ஒரு விலகலை மனம்
உணர்ந்து கொண்டேயிருக்கிறது. பேரக் குழந்தையோடு கொஞ்சி மகிழும்போது மட்டும் மனசு இளகிப் போகிறது. இவனை விட்டு விட்டு இருக்க முடியுமா என்று
அஞ்சுகிறது. அது பாபமில்லையா என்று தோன்றுகிறது. இப்படியும் ஒரு தாத்தன் இருப்பானோ
என நினைப்பார்களோ, திட்டுவார்களோ என்று எண்ணமிடுகிறது. இன்னும் ஒரு வயசானால் பள்ளிக்குப்
போகப் போகிறான். பிறகு படிப்பு, விளையாட்டு, அவன் அம்மா அப்பா என்று கவனம் போய்விடும்.
எங்கே தாத்தாவை நினைக்கப் போகிறான்...முதலில் அப்படித்தான் தோன்றும்....போகப்போக எல்லாமும்
சரியாகிவிடும்...இங்கிருந்து நகர்ந்தால் போதும்....தப்பித்தால் போதும்....பிறகு தனிமையிலே
இனிமை காணுவது ஒன்றும் அப்படிச் சிரமமில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.
என்
வாழ்க்கை முறைதான் என்னை இப்படியெல்லாம் நினைக்க வைக்கிறது. அதிகமான சந்தோஷத்தை அனுபவித்தலோ,
அதிகமான வசதி வாய்ப்பில் புரளுதலையோ என் மனம் எப்பொழுதுமே ஏற்றதில்லை. இனிமேலா? இங்கு ஒரு குறையும் எனக்கு இல்லைதான். எல்லாமும்
பார்த்துப் பார்த்துத்தான் செய்கிறான் என் பையன். ஆனாலும் என்னவோ உதைக்கிறது எனக்கு.
எதுவோ குறை இருந்து கொண்டேயிருக்கிறது. மனது ஒன்ற மாட்டாது தவிக்கிறது. எனக்கு சுதந்திரம் வேண்டும். கட்டுப்பாடற்ற சுதந்திரம்.
அதைத் தருவது -
தனிமை...தனிமை...தனிமை....அதைத்தான்
நாடுகிறது என் மனம். சிறுவயதிலிருந்தே அப்படிப் பழக்கப்பட்டவன் நான். கையில் புத்தகத்தை
எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடி விடுவேன். அந்த மாடியிலும் யாரும் கண்டு பிடிக்க முடியாத
ஓரிடத்தில் சென்று ஒண்டிக் கொள்வேன். வீட்டுக்குள் இருந்தேனென்றால் நான் எங்கிருக்கிறேன்
என்று யாரும் என்னை அத்தனை லேசில் கண்டு பிடித்துவிட முடியாது. பாடப் புத்தகமா கையில்
வைத்திருப்பேன். அதுதான் இல்லை. சதா அப்படி அலைவதில் எனக்கு எப்போதுமே ஆர்வமிருந்ததில்லை.
நான் விரும்பியதெல்லாம் கதைப் புத்தகங்கள். அந்தச் சின்ன வயதிலேயே வயதிற்குப் பொருந்தாத
புத்தகங்களையெல்லாம் எடுத்துப் படித்திருக்கிறேன். அசிங்கமான புத்தகங்களில்லை. அது
மட்டும் உறுதி. புரிந்ததா என்று கேட்காதீர்கள்.
முழுப் புத்தகத்தையும் படித்துவிட்டுத்தான் ஓய்வேன். எப்பப் பார்த்தாலும் என்ன கதைப்
புத்தகம்? பாடத்தப் படிடான்னா...? என்று பிடுங்கியெறிவாள் அம்மா. கூடவே ரெண்டு மொத்தும்
கிடைக்கும் முதுகில். அந்தத் தனிமைதான் இன்றும் என்னைப் பேயாய்ப் பிடித்துக் கொண்டு
ஆட்டி வைக்கிறது.
தனிமை என்றால் என் மனைவியோடு இருக்கும் தனிமையல்ல...நான்
மட்டும் இருக்கும் தனிமை. எப்பொழுது என்னை விடுத்து அவனோடு இருக்க வேண்டும் என்று அவள்
பிரியப்பட்டாளோ அப்போது அவளும் எனக்கு வேண்டாம். இதுதான் என் துணிபு. நீ என்ன என்னை
ஒதுக்குவது...நான் ஒதுக்குகிறேன் உன்னை...உனக்கு நான் வேண்டாமென்றால், எனக்கு நீ வேண்டாம்.அவ்வளவுதான்...என்னால்
தனிமையில் இருக்க முடியும். இருந்து கழிக்க முடியும்...வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில்
அதையும்தான் செய்து பார்த்து விடுவோமே...! என்ன குடியா முழுகி விடும்? அப்படியா சாவு
வந்து பற்றிக் கொள்ளும். அப்படித்தான் பற்றுமென்றால் பற்றட்டுமே...! கதவை உடைத்து வந்து
என்னைத் தூக்கிச் செல்லுங்கள்....நான் உறுதியாகத்தான் இருக்கிறேன். அந்தளவுக்கு தனிமை
என்னை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
தனிமையிலே இனிமை காண முடியாது என்று
எவன் சொன்னான்? முடியும். என்னிடம் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன...இசை இருக்கிறது....என்னோடு
படிந்த யோகப் பயிற்சி இருக்கிறது...சமையல் கலை இருக்கிறது....உள்ளூர் நண்பர்கள் இருக்கிறார்கள்...நூலகம்
இருக்கிறது...சொந்த ஊர், தெரிந்த மக்கள் என்கின்ற நெருக்கம் இருக்கிறது....பரபரப்பில்லாத
அமைதியான, எளிமையான வாழ்க்கை முறை இருக்கிறது....ஏன் மீதி நாட்களைக் கழிக்க முடியாது?
தனிமை என்ன அத்தனை கொடுமையான விஷயமா? அதென்ன பேயா, பிசாசா? பயந்து சாக...?
என் வீடே என் கோயில். அதோடு நான்
அனுதினமும் பேசுவேன்...என் தாய் தந்தையரின் காலடி பட்ட ஸ்தலம் அது. நான் விரும்பி,
ஆசை ஆசையாய் அமைத்துக் கொண்ட பூஜை அறை....என் விருப்பத்திற்குக் கட்டிக் குடி வந்த
இல்லம்...என் கனவுகளை, நினைவுகளை, என் ஆசைகளை, என் ஏக்கங்களை, என் வருத்தங்களை, ஏன்
என் தவறுகளை இப்படி எல்லாவற்றையும் தன்னகத்தே சுமக்கும் அகம் அது. தெரிந்த மக்களை, முகம் அறிந்தவர்களைத்
தினமும் சந்திப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர்களோடு இரண்டு வார்த்தை பேசி நகர்வதில்
ஒரு திருப்தி. ஐயா...ஊரிலிருந்து வந்திருக்கீகளா? அம்மா நல்லாயிருக்காகளா? என்று யாரேனும்
வலிய வந்து வாசல் கதவைத் தட்டி விசாரிக்கும்போது கிடைக்கும் திருப்தியே அலாதி. நம்மைப் பற்றி நினைக்கவும் ஒராள் இருக்கிறதே என்கிற
ஆறுதல். அதிலும் அந்தக் கீரைக்காரர் தவறாமல்
இப்பக்கம் திரும்பாமல் போகமாட்டார். கதவு திறந்திருக்கிறது என்று தெரிந்தால், திரை
விலக்கியிருப்பது பார்த்தால், இறங்கி விசாரிக்காமல் நகர மாட்டார். அம்மா...எப்ப
வந்தீக...? ஊர்ல பையன், மருமக, பேரன் எல்லாரும் சௌக்கியங்களா? என்று அவர் அவளைப் பார்த்து
விசாரிப்பதே ஒரு தனி அக்கறையின், அன்பின் அடையாளம். பாருங்கள்...அவருக்குக் கூட அவள்தான்
முதல். அம்மாவுக்குப் பிறகுதான் அய்யா. பெண் தெய்வங்களைத்தானே நாம் விழுந்து விழுந்து
வணங்குகிறோம். அதுபோல் வீட்டுப் பெண்மணிகள்தான் உலகத்தாரால் முதலில் மதிக்கப்படுகிறார்கள். அவர்களை வைத்துத்தான்
இவர்கள். மாமியை வைத்துத்தான் மாமா. இந்த உலகம் இந்தக் கணம்வரை அப்படித்தான் இயங்கிக்
கொண்டிருக்கிறது. நன்றி கெட்ட உலகம். உழைப்புக்கேற்ற கூலி கிடைப்பதில்லை. அது எந்த
வகையானால்தான் என்ன?
ஆண்களுக்கு
வாய்த்ததெல்லாம் வெறும் உழைப்புதான். உழைத்து உழைத்து ஓடாய்ப் போனதுதான் மிச்சம். கடைசி
காலத்தில் கவனிக்கக் கூட ஆளில்லாமல் எத்தனை பேர் சீரழிகிறார்கள்? அதுவும் மனைவியை இழந்த
பொழுதுகளில் நாளும் அவர்களுக்கு நரகம்தான். தனக்கு யாரும் இல்லை என்பதாக உணரத் தலைப்படுகிறார்கள்.
இப்படியிருக்கும் என் மனைவியைப்பற்றி நான் என்ன சொல்ல? அவள் பின்னால் தொடுப்பாக நான்
இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். நானென்ன முடமாகியா கிடக்கிறேன்.... தொடுப்பாக நிற்க?
நான் என்றுமே நான்தான். அதில் எந்தச் சலனமோ,
மாற்றமோ இல்லை. நீதான் என்னைச் சார்ந்து இருக்க வேண்டும். நான்தான் வேண்டியது செய்வேனே?
பிறகென்ன? அப்படியும் அவன்தான் மேல் என்றால் இருந்துகொள்...கவலையில்லை...!
என்னோடு வந்து இருங்கள் என்று பையன் முழு மனதாய்ச்
சொன்னாலும், அரை மனதாய் நடித்தாலும் தந்தையர்களுக்கு மனசு ஒப்புவதில்லை. தான் பார்த்து
வளர்ந்த மகன், தூக்கி வளர்த்த மகன், தோளுக்கு மேல் நின்று தோழனாய் மாறியவன்...ஆனாலும்
அவனுக்கென்று இன்று ஒரு துணை வந்து விட்டபிறகு இவருக்கு விலக்கம் வந்து விடுகிறது.
அவன் வாழ்க்கை அவனுக்கு. தன் வாழ்க்கை தனக்கு.
தனக்கென்று இன்னும் இந்த வாழ்க்கை மீதமிருக்கிறதா என்ன?
என்னவோ தெரியவில்லை...எனக்கு இங்கே
இருக்க உறுத்திக் கொண்டேயிருக்கிறது. நான் அங்கு சென்று இருப்பதில்தான் ஏதோ கௌரவம்
மிஞ்சியிருப்பதாய்த் தோன்றுகிறது. சதா அந்த நினைப்பாகவே இருப்பதால்தான், இங்கு பார்ப்பதிலெல்லாம்
ஏதாவது குறை தென்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வேலை செய்வது என்பது வேறு. திருத்தமாக
வேலை செய்வது என்பது வேறு. அந்த வீட்டில் நடக்கும் வேலைகளில் இப்படியெல்லாம் எனக்குத்
தோன்றிக்கொண்டேயிருக்கிறது. திருந்த வேலை செய்வது
என் மனைவிக்கே படியவில்லையே...பிறகு இவர்களைச் சொல்லி என்ன செய்ய? அவளிடமே ஆயிரம் குறைகள்
கண்டு பிடிப்பேன்.
குடத்தத்
திறந்து தண்ணி எடுத்தேன்னா, உடனே அதைத் திரும்ப ஏன் மூட மாட்டேங்கிறே? திறந்தே கிடந்தா,
அதுல தூசி விழாதா? ஏதாச்சும் பூச்சி விழுந்தா? அப்புறம்
அந்தத் தண்ணியப் பூராவும் தூக்கி மடைல கொட்ட வேண்டியது? செடிகளுக்கு ஊத்துவோம்னா இங்க மரம் மட்டையா இருக்கு? எங்க பார்த்தாலும்
காங்கிரீட் காடுகள்... பாத்ரூம் போயி்ட்டு வந்தீன்னா லைட்டை அணைக்க மாட்டியா? குழாயச்
சரியா மூட மாட்டியா? இந்த உறால் ஃபேன் எப்பவும் சுத்திட்டே இருக்குமா? ட்வென்டிஃபோர்
உறவர்ஸ் ஃபேனா அது? ஆளிருந்தாலும் இல்லாட்டாலும் சுத்தணுமா? விரயம் பண்றதுக்கு ஒரு
அளவே இல்லையா? எலெக்ட்ரிசிட்டி என்ன ஓசிலயா வருது? தேவையில்லாம எதாச்சும் ரூம்ல லைட் எரிஞ்சிட்டே இருக்கே...அணைக்கவே தோணாதா?
விரிச்ச படுக்கை விரிச்சமேனிக்கே கிடக்குமா?
அதை மடிச்சு வைக்கிற ஜோலியே கிடையாதா? வீடு பூராவும் இப்டி அங்கங்க முடி பறந்திட்டே
இருக்கே...இதென்ன பார்பர் ஷாப்பா? இப்டிச் சொல்றதுக்கு எங்கிட்ட ஏராளமா இருக்கு...வீடு
முழுக்க துணி இறைஞ்சு கிடக்கிறதைப் பார்த்தாலே எனக்கு எரிச்சல் வருது. எது துவைச்ச
துணி, எது விழுப்பு? யாருக்குத் தெரியும்?குடு குடுப்பைக்காரன் தொங்கவிட்டிட்டு வர்ற
மாதிரி அந்தல சந்தலயாக் கிடந்தா? அங்கங்க சாமான்கள்
இறைஞ்சு கிடக்கு..யாராவது கண்டுக்கிறாங்களா? .எதையும் எடுத்து உரிய இடத்துல வைக்கிறதில்ல....நானும்
கீழே விழுந்து கிடக்கிற பொருட்களை எத்தனை தடவைதான் எடுத்து எடுத்து வைக்கிறது? அதான்
ஒராள் இருக்கேன்னு விட்டுட்டாங்களோ? எந்தப் பொருள் எங்க இருக்கும்னு வீட்டுக்கு ஒரு
அடையாளம் வேண்டாமா? எதுவும் எங்க வேணாலும் கெடக்கும்னு இருந்தா? அது வீடா? டி.வி.க்கு
கீழே பர்ஸ், வாட்ச், பணம், வண்டிச்சாவி, இப்படி இறைஞ்சு கிடந்தா? வர்றவங்க, போறவங்க
கண்ணுல பட்டு, இந்த வீட்ல எல்லாம் இப்டித்தான் கண்டமேனிக்குக் கிடக்கும்போல்ருக்கு...ன்னு
ஒரு பரிகாச எண்ணத்தைத் உண்டாக்காதா? கைய வைக்க
நாமளே தூண்டினா? பொருட்களை பாங்கா வச்சிருக்கிறது
வேறே...அங்கங்கே கெடக்கிறது வேறே...! பார்க்கிறவனுக்குத் திருடத் தூண்டுற மாதிரிப்
போட்டு வச்சிருந்தா, எடுக்கத்தானே தோணும்? ஒரு இன்ட்யூஷன் ஏற்படுமாயில்லியா? வீடு இருக்கிற
நிலைமையைப் பார்த்து நம்மள ஒருத்தன் கணிச்சிடுவான்...அது நம்ம கௌரவத்தின் அடையாளம்...!
இது யாருக்குத் தெரியுது? நம்ம வீட்டுக்கு எதுக்கு சோபா? அது மேலே இம்புட்டு சாமான்கள்
கெடந்தா, வர்றவங்க எதுல உட்காருவாங்க...? அது மேலயா? சோம்பேறி மடமா இந்த வீடு? பார்வைக்கு
ஒரு ஒழுங்கில்லைன்னா வர்றவன் என்ன நினைப்பான்?
வீடுன்னா
அப்டித்தான் கெடக்கும். இதென்ன மியூசியமா...வெச்ச பொருள் வச்ச எடத்துல இருக்கிறதுக்கு?
- இவளே இப்படிச் சொல்கிறாள். மருமகளுக்கு சப்போர்ட்டாகப் பேசுகிறாளாம். பையன் எதுவும்
கோவித்துக் கொண்டுவிடக் கூடாதே....என்று எனக்குத் தப்பைக்கட்டுப் போடுகிறாள். நானென்ன
இவள் ஆதாரத்திலா நிற்கிறேன்? மனசில் தோன்றுவதைச் சொல்ல முடியாதென்றால் அப்புறம் அங்கு
இருந்துதான் என்ன பயன்? பிறகு நமக்கு என்னதான் மதிப்பு? பெரியவர்களை வழிகாட்டிகளாக நினைக்காத சமூகத்தில் இருந்தால்
என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?
போடுறதத் தின்னுட்டுக் குத்துக்கல்
மாதிரி உட்கார்ந்து கிடக்கிறதுக்கா இந்த ஜீவன்? அப்படி
வார்த்தை வந்தாலும் வருமோ? அது நம் தள்ளாத வயதில், படுக்கையில் விழுந்தால் வர வாய்ப்பிருக்கிறதுதான்.
அதற்குள் இங்கிருந்து கழண்டு கொண்டுவிட வேண்டும். அல்லது அதற்குள் போய்ச் சேர்ந்து
விட வேண்டும். அதென்ன நம் கையிலா இருக்கிறது? விதி எப்படிப் போட்டிருக்கிறதோ? எவன்
கண்டது? கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர்....
மியூசியம்
மாதிரி அந்தந்தப் பொருட்களை அந்தந்த இடங்களில் அடுக்கி, உபயோகத்திற்கு எடுத்து, பின்
திரும்ப அதே இடத்தில் வைத்து, எடுக்க-வைக்க என்று இருந்தால்தான் வீடு விளங்கும்...என்று
நான் தீர்மானமாய்ச் சொல்வதை யார் கேட்கிறார்கள்? உங்கப்பா என்ன...நச்சு நச்சுன்னு ஏதாச்சும்
சொல்லிட்டேயிருக்காரு....? அன்றொரு நாள் அந்தப் பெண் என் பையனிடம் இப்படிச் சொல்லிக்
கொண்டிருந்தது என் காதில் விழத்தான் செய்தது. நம் நன்மைக்காகத்தான் சொல்கிறார்கள் பெரியவர்கள்
என்று ஏன் அவர்களுக்குத் தோன்றமாட்டேனென்கிறது? இருக்கும்போது அருமை தெரியாது. போன
பின்னால், பல நஷ்டங்களுக்குப் பிறகு தெளிவார்கள். இதுதான் யதார்த்தம். அந்தப் பெண்
என்று எனக்குத் தோன்றுகிறதே...அது சரியா? மருமகப் பெண் என் பெண்ணல்லவா? இந்த வீட்டின்
வம்சம் வளர வந்தடைந்த பெண்ணல்லவா? இப்படி ஆழ உணர்பவர்கள் பெரியவர்கள் என்பதெல்லாம்
அவர்களுக்குத் தெரியப் போகிறதா என்ன? தேவையான
பொருட்கள், தேவையற்ற பொருட்கள் என்று ஒரு வரைமுறையே கிடையாதா? கண்ணில் பட்டதையெல்லாமா
வாங்கிக் குவிப்பது? முன்னாலெல்லாம் சீட்டில் எழுதிக் கொண்டு போய்க் கொடுப்பதை மட்டும்
தருவான் கடைக்காரன். இப்பொழுதுதான் எத வேணாலும் எடுத்துக்கோ...என்று திறந்து விட்டு
விட்டார்களே? தேவையான பொருட்களைத் தேடும் போது, தேவையற்ற பொருட்களும் என்னையும் எடு...எடு...என்று
நம் ஆசையைத் தூண்டுகிறதே...! ஒரு தரம் வாங்கித்தான் பார்ப்பமே என்று வாங்கும் பொருட்களுக்கு
முடிவு என்று ஒன்று இருக்கிறதா என்ன?அதுதானே இன்று பெருமை! கடையை Show Room ஆக மாற்றியதே அதற்காகத்தானே!
departmental store, super market என்று பெத்தப் பேரு வேறு அதற்கு. சும்மாவா இருக்கு?
உனக்கு வெறுமே வேடிக்கை காண்பிப்பதற்கா? மறைமுகமாக
உன் ஆசையைத் தூண்டி உனக்குச் செலவு இழுத்து விடுவதற்குத்தானே? உன் கைப்பணத்தைக் கரைப்பதற்குத்தானே?
காசைக் கரியாக்குவதற்குத்தானே...! காசைக் கண்ணும் கருத்துமாய் இன்று
நாம் காப்பாற்றினால்தானே...நாளை அது நம்மைக்
காப்பாற்றும்? எங்களைப் போல் என்ன உங்களுக்குப் பென்ஷனா வரப்போகிறது? அட... வேலை நிரந்தரமாவது
உங்களுக்கு உண்டா? எல்லோருமே ஒப்பந்தக்காரர்கள்தானே? அப்படித்தானே ஒப்பமிட்டு வேலைக்குள்
நுழைகிறீர்கள்? கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து,
நாகரீகமாய், ஸ்டைலாய், படிவங்களைப் பூர்த்தி
செய்து, விண்ணப்பித்து வேலை வாங்கியிருந்தால் பெரிய மதிப்பா என்ன? உங்களை வைக்க வேண்டிய
இடத்தில்தானே அவன் வைத்திருக்கிறான்? அந்தச் சூடு உங்களுக்கு உறைக்கிறதா? வானத்தில்
சிறகடித்துப் பறப்பது போலல்லவா பறக்கிறீர்கள்?
அதையாவது உயரம் தெரிந்து பறக்கிறீர்களா? இனியது இனியது உலகம்....என்று பாடிக்கொண்டு
திரிகிறீர்கள். வயதும், இளமையும், உடம்பி்ல் வீரியக் கட்டும், ரத்தத்தில் சூடும் இருக்கும்போதே
கட்டு செட்டாகப் பணம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிய வேண்டாமா? எங்களுக்கெல்லாம்
வழிகாட்டுதலே இல்லை. நாங்களாகவேதான் பொறுப்புணர்ந்து நடந்து கொண்டு முன்னேறினோம். உங்களுக்கு
எடுத்துச் சொன்னாலும் புரியமாட்டேன் என்கிறதே? முந்திக் கொண்டு முணுக்கென்று கோபமல்லவா
வருகிறது? என்ன ஒழுங்கு முறையைத்தான் நீங்கள்
பின்பற்றுகிறீர்கள்? திங்க...தூங்க...பேள....என்ற இந்த மூன்றைத் தவிர நீங்கள் வேறு
ஏதாவது செய்ததுண்டா? இருக்கும் கோபத்தில் அல்லது ஆதங்கத்தில் இப்படித்தான் சொல்ல வருகிறது.
என்ன செய்ய?
ராத்திரி ஒன்றுக்கும் ரெண்டுக்கும்
வேலை முடிந்து திரும்பும் எங்களால் வேறு எப்படி இருக்க முடியும்? என்று கேள்வி வேறு.
அதற்காக குளிக்காமல் திங்கச் சொல்லியிருக்கிறதா? அது எத்தனை ஆரோக்கியக் கேடு? யாருக்கானும்
தெரிகிறதா? வயிற்றெரிச்சலை எங்கு போய்க் கொட்டுவது? சொல்லவும் முடியவில்லை...மெல்லவும்
முடியவில்லை. கண்ட நேரத்தில் தூங்க...கண்ட நேரத்தில் குளிக்க, கண்ட நேரத்தில் திங்க...எதில்தான்
ஒரு ஒழுங்கு? காலைக் கடன்களை முறையே முடிக்க வேண்டும் என்பது சிறு பிராயம் முதலான பாடமில்லையா?
இப்படி ஏராளமாய் இன்னும் எத்தனையோ
என் மனதில்...! எதையும் வாய்விட்டுச் சொல்ல முடிவதில்லை. மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்கிக்
கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதற்காக? இவற்றையெல்லாம் கண்ணால் பார்ப்பதால்தானே?
காதால் கேட்பதால்தானே? மழுங்குண்ணி மாங்கொட்டையாய் நாட்களைக் கடத்த முடியுமா? என் வாழ்க்கையை நான் வாழ்ந்தாயிற்று. உன் வாழ்க்கையை
நீ வாழ்ந்து கொள். அவ்வளவுதான். உன் வயசுல எனக்கெல்லாம் யாருமே துணைக்கு இல்லை...உதவிக்கு
இல்லை...நானேதான் எல்லாத்துக்கும் ஓடி ஓடிக் கஷ்டப்பட்டேன். அது மாதிரி நீயும் கஷ்டப்படு..அனுபவங்களை
சேகரித்துக் கொள். சின்ன வயசுதானே...ஓடி ஓடி
உழைக்க உழைக்க உடம்பு உரம்பெறத்தான் செய்யும். நசிந்து போகாது. அம்பது வயசு வரைக்கும்
நல்லா சாப்பிடலாம்....கடுமையா உழைக்கலாம். அதுக்கு கியாரண்டி உண்டு... பிறகுதான் இறங்கு
தசை. அதனால உங்கபாட்டை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். என்னை விட்டு விடுங்கள். அதுதானே
நியாயம்....! வாழ்ந்து காட்டுங்கள்.
எவ்வளவோ
மனதில் தோன்றித் தோன்றித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் நான். எனக்குத் தனிமை
பிடிக்கும், அமைதி பிடிக்கும். இருந்து பார்க்கிறேனே...இதுதான் இன்று நான் இவர்களிடம்
வேண்டிக் கொள்வது. அதில் ஒரே ஒரு புதுமை. அது நான் மட்டும் செல்வது. அவள்தான் பையனோடு
இருக்க வேண்டுமென்கிறாளே...! தாராளமாய் இருந்து கொள்....நீ வந்தால்தான் எனக்குத் தனிமை
என்பது போய்விடுகிறதே...! தனிமை என்பதே தனித்து இருப்பதுதானே...! நீ இல்லாமல் இருந்து காட்ட வேண்டும்...! அந்தப் பயிற்சியையும்
செய்து பார்த்து விடுகிறேன்... தனிமையில் இருக்கத் தெரியாதவன், தனிமையை விரும்பாதவன்
ஒரு மனிதனா? தக்க சமயத்திற்காகக் காத்திருக்கிறேன்.
-----------------------------------------------------
குமுதம் மாலைமதி நாவல் இதழில் என் நெடுங்கதை 13-ம் நம்பர் பார்சல்

-
“விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...
-
தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன் க தை எழுதப்பட்டது 1958-ல். மதமாச்சர்யங்கள் அற்ற காலம். ஒழுக்கமும்...
-
அசோகமித்திரனின் “விமோசனம்” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். ...