25 மே 2025

 

சிறுகதை      “ஒரு சொல் கொல்லும்”    தினமணி கதிர்-25.05.2025  பிரசுரம்





சிவநேசன் தன் அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல்வழி  வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். குறிப்பிட்டு ஒன்றைப் பார்க்கிறோம் என்றில்லாமல் அங்கும் இங்குமாக அவர் பார்வை அலைந்து கொண்டிருந்தது. அது தன் நிலையற்ற மனதைக் குறிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு தண்ணீர் லாரி வர, எதிரே ஒரு பள்ளி வாகனம் கடக்க முயன்று தயங்கியது. அதற்குள் இரண்டு மூன்று ஆட்டோக்கள், டூ வீலர்கள், ஒரு வேன் என்று சேர்ந்து விட்டன.  உள் ஒடுங்கிய இந்தப் பகுதியிலேயே இவ்வளவு நெரிசல் என்றால் மெயின் ரோடில் எப்படியிருக்கும் இந்நேரத்தில் என்று நினைத்துக் கொண்டார்.

இத்தனை டிராஃபிக்கையும் கடந்துதான் நேற்று அங்கு சென்றது என்பதை நினைத்தபோது, எதற்காக அப்படித் திடீரென்று சென்றோம் என்று நினைக்கத் தலைப்பட்டார். எத்தனையோ விஷயங்களை யோசித்துச் செய்தாலும், சில சமயங்களில் சில விஷயங்களில் வழுக்கி விடுகிறோம். ஏதோவொரு உற்சாகத்தில் அல்லது எதையுமே யோசிக்காமல், தன் நிலை மீறி ஒன்று நடந்து விடுகிறது.

அது அப்போதைக்கு அசட்டு உற்சாகத்தை அளித்து திருப்தி கொள்ளச் செய்கிறது. பிறகுதான் அதை ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கிறது. மறுக வைக்கிறது.  ஒரு அல்ப சந்தோஷத்திற்குப் பலியாவதைப் போல, மூளையை அடகு வைப்பதைப் போல அபத்தம் வேறு எதுவுமில்லை.

அவரவர் இயல்புக்குப் பொருந்தாத ஒரு விஷயத்தில் தலையைக் கொடுப்பதுபோல் ஒரு முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக அதன் தாக்கத்தில் நாமும் அறிந்தோ அறியாமலோ அதற்குப் பலியாகிவிடுகிறோம்.

போயும் போயும் ஒரு காப்பி சாப்பிடுவதற்காக அங்கு செல்வார்களா? அப்படி என்ன நாக்கு ருசி இழுக்கிறது அடக்க மாட்டாமல்? காரில்தானே செல்கிறோம் என்கிற குஷியா? அல்லது பையன் அழைத்துவிட்டானே என்கிற உள்ளூரத் தோன்றிய சந்தோஷமா?

அவன் எங்கே அழைத்தான்..தான் அல்லவா வாயிழந்து சொன்னோம்? புறப்படும்போது “கிளம்புப்பா…” என்றானே…அது விரும்பிச் சொன்னதா அல்லது தொலையுது என்று சொல்லி வைத்தானா?

நான் போய் லாகின் பண்ணிட்டு சைன் போட்டுட்டு வந்திடறேன். இந்தா…என்று அவன் காப்பி டோக்கனை நீட்டிய போது…இந்த வயதில் இது தேவையா? என்று ஒரு கணம் மனதில் தோன்றியதே…அதுதான் சரியோ? தேவையில்லாமல் தனக்குத்தானே மனதுக்குள் மகிழ்ந்துகொண்டு விச்ராந்தியாகக் கிளம்பி வந்துவிட்டேனோ? அவனுக்குப் பிடிக்கவில்லையோ? அத்தனை சுதந்திரமாகக் கேட்டிருக்கக் கூடாதோ? அந்த உரிமை எடுத்தது தவறோ?

ஏனோ அன்றைய காஃபி அவருக்கு ருசிக்கவில்லை. எப்பொழுதும் அவருடன் உட்கார்ந்து அவனும் காப்பி குடித்துவிட்டுத்தான் சேம்பருக்குள் செல்வான். நேற்று ஏன் தனக்கு மட்டும் டோக்கனைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டான். அதுவே அவருக்கு உணர்த்தியதோ?

எந்தக் கணமும் நிதானம் தவறக் கூடாது என்று நினைத்துக் கொள்பவர்தான். ஆனால் சமயங்களில் பிசகிப் போகிறது.

ப்பா….! 

என்ன இது இத்தனை சத்தமாக வருகிறது குரல்….? -சந்துருவா இப்படி அழைக்கிறான்? சற்றே ஆச்சரியமாகத்தான் இருந்தது சிவநேசனுக்கு.

அறைக்குள்ளிருந்து அவன் காதல் மனைவி மல்லிகாவும் திரும்பிப் பார்க்கிறாள். யாரை?…அவரை….! அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதை அவளும் அறிவாளோ? ராத்திரி என்ன பூஜை நடந்ததோ?

அப்படியானால் அவளும் எதிர்பார்த்துத்தான் இருக்கிறாள் – என்ன இது புதுவித நாடகம்?

தன் அப்பாவிடம் வாழ்நாளில் ஒரு முறை கூட… தான் இப்படிக் குரலெடுத்துப் பேசியதில்லை என்பதை நினைத்துக் கொண்டார் சிவநேசன். பேசுவதென்ன…எதிரே நின்றதேயில்லைதான். அந்த மரியாதையும் மதிப்புமே வேறு ரகம்.இப்போது அவர் பிள்ளை அந்த எல்லையைத் தாண்டியிருக்கிறான்.

என்னப்பா…? என்றார் அவனைத் திரும்பிப் பார்க்காமலே….

நேத்து நீ ஏன்ப்பா எங்க செக் ஷன் மானேஜர்ட்ட அப்படிச் சொன்னே?

இதென்ன புதுக் கேள்வியாய் இருக்கிறது? எதிர்பாராத கேள்வி. அவனுக்காய்த் தோன்றிய கேள்வி. இவர் நினைத்தே பார்க்காத கேள்வி.  ஒரு யதார்த்தத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறான்.

எப்படிச் சொன்னேன்? – புரியாமல் கேட்டார் சிவநேசன்.

அதாம்ப்பா….கலெக்டர் ஆபீஸ்ல கிளார்க்கா இருந்து ரிடையர்ட் ஆனேன்னு சொன்னியே…? அந்தக் கண்றாவியைத்தான் கேட்கிறேன்…

ஒரு கணம் ஆடிப் போனார் சிவநேசன். கண்றாவியாமே? என்ன பேச்சு இது?

ஆமாம்…சொன்னேன்…அதுக்கென்ன இப்போ….?

அது ஏம்ப்பா அப்படிச் சொன்னே? கவர்ன்மென்ட் சர்வீஸ்லருந்து ரிடையர்ட் ஆனேன்னு பொதுவாச் சொல்ல வேண்டிதானே? இதுகூடவா தெரியாது?

                  இப்படிச் சொல்ல வேண்டிதானே என்று அவன் கேட்டது கூடப் பரவாயில்லை. ஆனால் அடுத்தாற்போல் சொன்னானே? இது கூடவா உனக்குத் தெரியாது என்று. அதைத்தான் இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

                   திரும்பி அவனை ஒரு முறை முறைத்தார் சிவநேசன். என்னடா வார்த்தையெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? – என்றார்.

                    இதிலென்னப்பா தப்பு இருக்கு? பொத்தாம் பொதுவாச் சொல்லிட்டுப் போக வேண்டிதானேன்னு சொல்றேன். நீ கிளார்க்கா இருந்தியா, அக்கௌன்டன்டா இருந்தியான்னா அவுங்க கேட்டாங்க…? கவர்ன்மென்ட் சர்வீஸ்னா முடிஞ்சி போச்சு….!

                 கிளார்க் என்று சொன்னது தப்பாய்ப் போயிற்றா? கௌரவக் குறைச்சல் ஆகிப் போனதோ அய்யாவுக்கு?

                     எழுபது வயது எட்டப் போகும் தனக்கு  இவன் சொல்லித் தருகிறான். என் புத்தியை செருப்பால அடிக்கணும். எல்லாம் அந்தக் காப்பி ஆசையினால் வந்தது. நினைத்துக் கொண்டார்.

அவர்கள் ஐ.டி. கம்பெனி கான்டீனில் காப்பி இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று இவர் எதிர்பார்க்கவேயில்லை. பிரம்மாண்டமாய் இருந்தது அந்த வளாகம். ஊரே உள்ளுக்குள் இருந்தது. ஒரு பில்டிங்கிலிருந்து இன்னொன்றுக்குப் போகப் பாலம் கட்டியிருந்தார்கள். லட்சம் பேருக்கு மேலே வேலை பார்ப்பாங்க போல்ருக்கு என்று பிரமித்தார் இவர்.  புறப்பட்டு வந்ததே தப்போ என்று கூட ஒரு கணம் தோன்றியது. அந்த இளைஞர்கள், இளைஞிகள் கூட்டத்தின் நடுவே முதிர்ந்த கிழமாய்த் தான் போவதே கூச்சத்தை அளித்தது இவருக்கு. தெரியாத்தனமா வந்துட்டமோ?

அந்த மாதிரிக் காப்பி குடித்து வருஷங்களே ஆயிற்று. சில லீவு நாட்களில் அவன் தன் மனைவியையும்   அம்மாவையும் கூட்டிக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பும்போது இவர் உடன் சென்றிருக்கிறார். கோயிலின் நீண்ட க்யூவில் நிற்க இவருக்குப் பொறுமை இருந்ததில்லை. இப்டி உட்கார்றேன்…நீங்க போய் தரிசனம் பண்ணிட்டு வாங்கோ…என்று ஒரு மூலையில் அமர்ந்து விடுவார். இருக்குமிடத்திலிருந்தே கோபுரத்தைப் பார்த்து ஒரு கும்பிடு…அத்தோடு சரி…அவர் பக்தி.

            இதுக்கு வந்தே இருக்க வேண்டாமே? – என்றான் ஒரு நாள் சந்துரு.

            நா நீங்க போயிட்டு வாங்கோன்னுதானே சொன்னேன். உங்கம்மாதானே வம்படியா என்னை இழுத்தா? எனக்கு இந்தக் கூட்டத்துல புகுந்து வெளில வரவெல்லாம் பொறுமை கிடையாது. அப்டியெல்லாம் கும்பிட்டாகணும்னு ஆசையும் இல்லை.  அதுக்குள்ளயும் ஒண்ணுக்கு நெருக்கும். உன்னைக் கூப்பிட முடியாது பாதில…எல்லா சந்நிதியும் நீங்க கும்பிட்டு முடிச்சு…வெளில கிளம்பற வரைக்கும் நான் அடக்கிண்டு அடில பிடிச்சிண்டு உட்கார்ந்திருக்க முடியுமா? அப்புறம் ஏதாச்சும் ஒரு ஓட்டலத் தேடிப் போகணும்…அவன்ட்ட வெறுமே டாய்லெட்டை யூஸ் பண்ண முடியுமா? ஒரு காப்பியைச் சாப்பிடணும்….எதுக்கு இந்தச் சங்கடமெல்லாம்? அதான் நான் வர்றதில்லை….நம்மால ஒருத்தருக்குச் சங்கடம் வேண்டாம்ங்கிறதுதான் இதோட தாத்பர்யம்….!

            அதற்குப் பிறகு அவன் அவரை அழைப்பதேயில்லை. சகதர்மிணி அழைத்தாலும் மறுத்து விடுகிறார் இவர்.  இந்த பாரு…என்னை வம்புல மாட்டி விடுறதே நீதான். உன்னைக் கூப்பிட்டா நீ கிளம்பிப் போ…நான் தடுத்தனா, இல்லேல்ல? …நான் தடுத்தாத்தான் நீ நிற்கப் போறியா?  என்னை ஏன் கூப்பிடுறே? எந்த எடத்துலயும், யாருக்கும் பாரமா இருக்க நான் விரும்பல…புரிஞ்சிதா?

            எல்லாச் சாமியையும் கும்பிட்டாச்சு…கும்பிட்டவரைக்கும் போதும்…இப்போ எனக்கு மனசுதான் சாமி. இதுதான் இவர் பதில். ஆனாலும் வெளியே கிடைக்கும் அந்தக் கள்ளிச்சொட்டான காப்பிக்காக ஏங்கியிருக்கிறார். மாதத்தில் சில நாட்கள் கிடைக்கும் அந்தக் காப்பி ருசி அவரைக் கலைத்துப் போட்டிருந்தது என்பதே சரி.

            அதே காப்பி ருசியில்தான் இப்பொழுதும் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். சிவனே என்று வீட்டில் இருந்திருந்தால் இப்பொழுது இந்தக் கேள்வி உண்டா? எல்லாப் பயலுகளுக்கும் பொண்டாட்டி முன்னே தைரியம் வந்து விடுகிறது. அது அவள் மீது பாய்கிறதா என்றால் இல்லை. அவளுக்குக் காண்பித்துக் கொள்ளும் விதத்தில் மற்றவர்கள் மீது பாய்வதுதான் விசேஷம். பஞ்சணை மந்திரம் என்பது அங்கங்கே பலிக்கத்தான் செய்கிறது.. ஆனால் அதற்கும் ஒரு தராதரம் வேண்டாமா? லிமிட் என்பது இல்லையா? புதிதாக வந்த அந்தப் பெண்ணிடம் இத்தனை ஆண்டுகளாய் உடனிருக்கும் அப்பன் இளப்பமாய்ப் போனேனா?

            நேற்றுப் பிறந்த இந்தப் பயல் எனக்குச் சொல்லித் தருகிறான்? ஏம்ப்பா கிளார்க்குன்னு சொன்னே என்று!  கிளார்க் என்று சொல்வது என்ன கேவலமா? கௌரவக் குறைச்சலா? எதைத்தான் கேவலம் என்று இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்?இவனாய்ச் சொல்கிறானா அல்லது அந்தப் பெண் சொல்லிக் கொடுத்ததா?  பிச்சையெடுப்பது, திருடுவது…இதுதானே உலகத்தில் கேவலம்.  குமாஸ்தா உத்தியோகம் எப்படி இவர்களுக்குக் கேவலமாய்த் தெரிகிறது?

            கவர்ன்மென்ட் ஆபீஸ்ல குமாஸ்தான்னா அது கேவலமாப் போயிடுச்சா…உனக்கு?அதுதாண்டா இத்தனை வருஷம் நமக்குச் சோறு போட்டிருக்கு…!

            அவன் சொல்றதுல என்ன தப்பு? அறுபது வயசுவரைக்கும் குமாஸ்தாவாவே இருந்து ரிடையர்ட் ஆனேள்னு அவங்களுக்குத் தெரியணுமா? அதான் பிரமோஷனே வேண்டாம், வெளியூர் போட்டுடுவான்னு  உள்ளூர்லயே கிடந்து குப்பை கொட்டியாச்சு. அந்தப் பெருமை நமக்கு மட்டும் தெரிஞ்சாப் போறாதா?  ஊருக்கே தெரிஞ்சாகணுமான்னு கேட்கிறான்…இதிலே தப்பென்ன இருக்கு சொல்லுங்கோ…? –

            தான் கேட்க வேண்டியதை அம்மாவே கேட்டு விட்டாள் என்று சந்துரு அவ்விடத்தை விட்டு அகன்றான்.  அவன் கேள்வி அவள் பதிலில் உறுதிப்பட்டு விட்டது போலும்…!

            கவர்ன்மென்ட் சர்வீஸ்னு சொன்னாப் போதுமேன்னு சொல்றாருப்பா…வேறொண்ணுமில்லே…! – அந்தப் பெண் மல்லிகாவும் தன் பங்குக்கு. இப்படிச் சொல்லிவிட்டு கொல்லைப் பக்கம் போய் விட்டது. அவனுக்கு சப்போர்ட் போலிருக்கு…நினைத்துக் கொண்டார் இவர்.

ருக்மணி பையனோடு சேர்ந்து கொண்டு கும்மியடிப்பது ஒன்றும் அவருக்குப் புதிதல்லதான். இதைச் சொல்லியிருக்காவிட்டாலும் அவள் அபிப்பிராயம் அதுவாய்த்தான் இருக்கும் என்று இவரால் ஊகிக்க முடியும்.

இந்தக் கிளார்க் சம்பளத்துலதாண்டி அவனை வளர்த்து ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணி, இந்த வீட்டைக் கட்டி…

போதும் போதும் ஆரம்பிச்சிடாதீங்க…உங்களை யாரும் பொறுப்பில்லாதவர்னு சொல்ல வரலை….போற எடமெல்லாம் அதைச் சொல்லிக்க வேண்டாமேன்னு சொல்றான். நம்ம பையன்தானே…சொன்னாக் கேட்கப்படாதா?

நம்ம பையனாச் சொல்லியிருந்தாப் பரவால்லடி…அப்டித் தெரிலயே…. – இதைச் சொல்லத்தான் நினைத்தார். வாய் வரவில்லை. அதுக்கு இன்னொரு ஸ்பெஷல் யுத்தம் ஆரம்பிக்கும்.. ஆனாலும் ருக்மணி உணர்வாள் அவர் எண்ணங்களை. நம்ம பையனே ஆனாலும் அப்படிச் சொல்லலாமா? சொல்ல நினைக்கலாமா? அப்டியானா நாம அவனை சரியா வளர்க்கலேன்னு அர்த்தம்….! -இப்படித்தான் நினைக்க முடிந்தது அவரால்.

கல்யாணத்துக்கு சம்மதிக்கும்போது தெரிலயாமா கிளார்க் பையன்னு…? அவுங்க அப்பா வெறும் ஜோஸ்யர்தான். உட்கார்ந்து சாப்பிட்டவர்தான். கிராமங்களுக்குப் போய் காரியம் பண்ணி வச்சிட்டு, அரிசி,  பருப்பு, வாழைக்காய், தட்சிணைன்னு வாங்கிண்டு வந்தவர்தான்.  அவரென்ன உத்தியோகத்துக்கா போனார்? நல்ல ஃபேமிலியான்னுதானே பார்த்தோம்? வெறுமே ஜோஸ்யம் பார்த்துப் பிழைச்ச குடும்பம்னு நாமளா அந்தஸ்து குறைவாவா நினைச்சோம்? முடிச்சு வைக்கலை? இப்போ நான் கிளார்க்கா இருந்தது கௌரவக் குறைச்சலாப் போச்சாக்கும் அவங்களுக்கு?  என் முப்பத்தஞ்சு வருஷ சர்வீஸ்ல ஒத்தப் பைசா நான் லஞ்சம் வாங்கினதில்லை…மிஸ்டர் கிளீன்ம்பாங்க என்னை…அது கௌரவமா தெரிலயோ நம்ம பயலுக்கு? எல்லாம் போலிகளைக் கண்டு ஏமாறுகிற உலகம்….!

               மெதுவாப் பேசுங்கோ…அந்தப் பொண்ணு காதுல விழப் போறது…அப்புறம் தலைய விரிச்சுப் போட்டுண்டு ஆட ஆரம்பிச்சிடும்…சின்னஞ் சிறுசுங்க…ஏதோ பேசித்து…விடுங்க…!

இந்தப் பேச்செல்லாம் அவனாப் பேசலடி…அது சொல்லித்தரதாக்கும்…அப்டியும் இருக்கலாமே?  இவனா அப்படிக் கேட்கிற பையனில்லை…புதுப் பொண்டாட்டி மோகத்துல  புத்தி பிரண்டு கிடக்கு அவனுக்கு…!

            அனுபவமில்லாமே…என்னவோ உளர்றதுகள்.. விட்டுத் தள்ளுங்கோ…நாமளே ஈரப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்க வேண்டாம்…- வீட்டுல எப்பப் பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமா இருந்தா அண்டை அசல்ல என்ன நினைப்பாங்க…? விடுங்க…விட்டு ஒழிங்க….!  நாலு சுவத்துலர்ந்து சத்தம் வெளில போகப்படாது…

            விட்டு எங்க ஒழிக்கிறது? அப்டி ஒழிக்கணுமானா நாம தனியாத்தான் போகணும்…இது என் வீடு…நான் கவர்ன்மென்ட் லோன் போட்டுக் கட்டின வீடு…போகணுமானா அவுங்கதான் வெளில  போகணும்…சொல்லிடுவமா…நான் ரெடி…… - ஒத்தைக்கு நின்றார் சிவநேசன்.

ஆரம்பிச்சுட்டீங்களா? என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள் ருக்மணி.

            தன்மானத்தை உசுப்பி விட்டதாய் உணர்ந்தார் இவர்.. தன் தகப்பனார் காலம் பூராவும் ஓட்டலில் வேலை பார்த்துத்தான் தன் ஆறு பிள்ளைகளையும் காப்பாற்றினார் என்பதை ஊர் உலகம் பூராவும் பெருமையாய்ச் சொல்லியிருக்கிறார் இவர். எந்தவொரு இடத்திலும் அவர் ஓட்டல் தொழிலாளி என்பதைச் சொல்லக் கிஞ்சித்தும் இவர் தயங்கியதில்லை. பெருமையாய்த் தலை நிமிர்ந்துதான் சொன்னார். அதுபற்றிக் குறைவாய் நினைத்ததுமில்லை. அதைக் கேட்ட பலருமே பெருமையாய்த்தான் பேசியிருக்கிறார்கள். அப்பாவை உழைப்பாளி என்றும் வறுமையிற் செம்மையாகக் குடும்பம் நடத்தியவர் என்றும்தான் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். மனிதனை மனிதன் மதித்த காலம் அது. ஏழை பணக்காரன் என்ற ஏற்ற இறக்கமெல்லாம் இல்லாமல் கௌரவமானவனா, ஒழுக்கமானவனா, ஒழுங்காய்க் குடும்பத்திற்காக உழைத்துப் பாடுபட்டவனா, பெற்ற பிள்ளைகளைக் கரையேற்றியவனா என்று பார்த்துத்தான் மரியாதை செய்து பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.  

இவன் என்னடாவென்றால்…நேற்று முளைத்தவன்…இன்று என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கிறான்.  சொந்த புத்தி வேண்டாம்? சொல் புத்தியிலா ஆடுவது? சீர் தூக்கிப் பார்க்க வேண்டாமா? அவளே சொன்னாலும் இவன் யோசிக்க வேண்டாமா? சொல்லக் கூடாதது நாக்கு நுனிக்கு வந்தாலும் நிறுத்தத் தெரிந்தவன்தான் மனுஷன்.

            அடங்காமல் கொதித்துப் போய் அமர்ந்திருந்தார் சிவநேசன். அறைக்குள் போய் ஒடுங்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. இன்னும் இன்றைய விளையாட்டில் மீதம் இருக்கிறது என்பதாக அவர் மனம் எதையோ எதிர்நோக்கியது. தன் தந்தையின் கௌரவத்தில் மதிப்பில்லாதவன் என்ன பிள்ளை? அணிப்பிள்ளை, தென்னம்பிள்ளை?

            இருந்தாலும் நீ அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம்ப்பா …மொட்டையா, பொதுவாச் சொல்லிட்டுப் போலாமே…ஐ.ஸீ.ன்னு தலையாட்டிட்டு விடப் போறாங்க…அதுக்கு மேலே தோண்டவா போறாங்க?  -இப்படி அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனிடமிருந்து மறுபடியும் பதில் வரும் என்று இவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பெண்டாட்டி சொன்னதைச் சரிக்கட்டுகிறானோ?  திரும்பி அவன் முகத்தை இப்போதுதான் தீர்க்கமாய்ப் நோக்க முற்பட்டார் சிவநேசன். இதற்கு இவ்வளவு விளக்கம் தருபவனுக்கு, ஏதோ சொன்னார்…என்னவோ சொல்லிட்டார்…போகட்டும் என்று விட்டுவிடத் தெரியாதோ? அதை இப்படி எடுத்துப் பிடித்துச் சொன்னால்தான் மனசு ஆறுமோ? நல்ல பிள்ளைகளடா?

            ஆபீசுக்குக் கிளம்பும்போது ஷூவை மாட்டிக்கொண்டே சத்தமாகச் சொன்ன சந்துருவை நோக்கினார் இவர்.! இப்போது இது அவனாகப் பேசுவது என்றுதான் தோன்றியது. சற்று முன் சொன்னதை அதைப் பேசும் முன் யோசித்திருக்க வேண்டாமா? வாய் புளிச்சிதோ, மாங்கா புளிச்சிதோன்னு அவன் புதுப் பொண்டாட்டி கேட்டான்னா… கேட்டிருந்தா, காதுல வாங்கிட்டு கிளிப்பிள்ளை மாதிரியா என்கிட்டே வந்து அப்படியே பகருவான்? அறிவில்ல? அவளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவன் கடமையில்லையா? பதிலாக அப்படியே டிட்டோவாகத் தன்னிடமா வந்து ஒப்பிப்பது? முட்டாள்…! பொண்டாட்டிக்கு சின்சியரா இருக்காம் போல்ருக்கு…!!

            எஸ்.சந்துரு  B.E.(EEE) என்ற பளபளக்கும் நாமகரணத்தோடு கழுத்தில் அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் “பெத்தப் பெயரோடு“ ஐ.டி.கார்டு தொங்க  வாசலில் இறங்கப் போன அவனை நிறுத்தி சிவநேசன் கேட்டார் இதை.  மனதில் வெகு நாளாக நெருடிக் கொண்டிருந்த குறை. இதுவே தக்க சமயம்….

            படிச்சது இராமாயணம்…இடிக்கிறது பெருமா கோயில்னா  நீ ஒத்துக்குவியா? – உன் படிப்பையும் நீ பார்க்கிற கம்ப்யூட்டர் உத்தியோகத்தையும் சம்பந்தப்படுத்தித்தான்  கேட்கிறேன்…படிப்புக்கேத்த, அது சார்ந்த, கௌரவமான, தகுதியான வேலதானா? குறைவான கல்வித் தகுதியோட கம்ப்யூட்டரப் படிச்சுட்டு வந்த லட்சக்கணக்கான பேருக்கு நடுவுல ஒருத்தனாத்தான் நீயும் வேலை பார்க்கிறே…இது சரியா? இது போதுமா?  யோசிச்சிக்கிட்டே போ. தாத்பர்யம் புரியுதா பாரு…  ராத்திரி வந்து பதில் சொல்லு…அப்புறம் அதிலுள்ள ஓட்டையையெல்லாம் நான் சொல்றேன் - என்று விட்டுத் தன் அறையை நோக்கிப் போனார் சிவநேசன். அவரது மனம் சமனத்திற்கு வந்திருந்தது இப்போது.  பையன் சார்பாக தன் மனதிலிருந்த தாளாத குறையை சரியான சந்தர்ப்பத்தில் தக்க சமயத்தில் வெளிப்படுத்தி விட்டதாகவே அவர் உணர்ந்தார். வயசிருக்கே…இன்னும் எவ்வளவோ மேலே போகலாமே!  என்று அவர் மனம் ஆதங்கமாய்ச் சொல்லிக் கொண்டது.

            முகத்தில் கலவரத்தோடு ஸ்தம்பித்து நின்றான் சந்துரு. மற்ற இருவரின் முகங்களும் அவனையே வெறித்தவாறு  நோக்கியிருந்தன.

                                                ----------------------------------------------

           

 

 

           

 

             

 

             

22 மே 2025

 

சிறுகதை                  “மோகத் தீ…!“      தாய் வீடு மாத இதழ் மே 2025           




                                                                                                                                                                                                                                                             

இவனுக்கு இவன் மீதே வெறுப்பாய் இருந்தது.  ஒரு கீற்றளவு கூட வெளிச்சமின்றி இருண்டு கிடந்த அந்த அறையில் இருளின் கதிர்கள் அம்புகளாய் மாறி இவனை நோக்கிப் பாய்ந்து வருவதாய் உணர்ந்தான்.                                                                                                                                                   

சுற்றிலும் கொம்பு முளைத்த பைசாசங்கள் நீண்ட பற்கள் தெரிய கை கொட்டிக் கெக்கலித்தன.                                                                                                     

ஜன்னலை ஒட்டியிருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த பொம்மை இவனை நோக்கித் தலையாட்டிக் கேலி செய்தது, அந்த இருட்டுக்கு ஊடே இவனைத் துல்லியமாய் உணர வைத்து இவன் சிந்தனையைப் புரட்டிப் போட்டது.                                                                                                                                                                                                           படுக்கையை விட்டு எழுந்து மூலையில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தான். மனம் ரொம்பவும் ஆயாசப் பட்டது. உடம்பு பூராவும் வியர்வை கொப்பளித்து மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்தது. அந்த வியர்வை வாடையே இவனுக்கு மிகவும் அறுவறுப்பாயிருந்தது. எண்ண அலைகளின் ஊற்றாக  அது பரிணமிப்பதுபோல்.......அந்தக் கேடு கெட்ட எண்ண அலைகளின்பாற்பட்டு முகிழ்த்த வியர்வைத் துளிகள்...அவற்றின் பிரதிபலிப்பாய் நின்று கேலி செய்கின்றனவோ?                                                                                                                                                                                                                                                    

இந்த மாய உடம்பிற்கு இப்படி அடங்காத வெப்பமும் குளிர்ச்சியும் காற்றும் நீரும் ஏன்? பொங்கிப் பொங்கி அடங்குவதற்கா? இந்தத் தோலுக்கு ஏன் இத்தனை உணர்ச்சிகள்? கணுக்கால்களில் தகிக்கும் வெப்பம், அது கொடுக்கும் தீவிரம் மனிதனின் செயலூக்கத்தையே தகர்த்தெறிந்து விடுகிறதே?                                                                                                                                        

பொங்கிப் பொங்கித் தணிந்து தளர்ந்து நசிந்து போவதற்கா இந்த உடம்பு?                                                                                                                                                                      

மனதை லகான் போட்டு இழுத்து நிறுத்தி ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதில் எத்தனை முறைதான் தோல்வியைத் தழுவுவது? பொழுதே விடியாமல் இருந்துவிட்டால் தேவலாம் போல் இருக்கிறது.                                                                                                                                                                                      

நீண்ட கைகளுக்கு இடையே தேவகியின் கால்கள் தட்டுப்படுகின்றன. இப்போது கூட அவள் லேசாகக் கால்களை இழுத்துக் கொண்டது போல்தான் இருக்கிறது. மனது தேடத்தானே செய்கிறது? கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவள் உதறி எறிந்தாளே? அதற்குள்ளாகவா சுரணை போய்விட்டது? மனது கேவலப்படவில்லை. நோகவில்லை. வெட்கப்படவில்லை. மாறாக மீண்டும் கைகள் அவற்றைப் பற்றப் பார்க்கின்றன.                                                                                                

தன் ஆண்மை சுக்கு நூறாக நொறுங்கியதே? அதுபற்றி மனம் குறுகவில்லையா? அது தனக்குத் தேவைதான். மிதி! மிதி!! ஓங்கி மிதி!!! உதறி மிதி!!! நான் விலக வேண்டும். இதை விட்டு ஓட வேண்டும். இந்தச் சாக்கடையில் இருந்து மீள வேண்டும். புனிதம் பெற வேண்டும். என்னை நான் வெல்ல வேண்டும். வென்று தலை நிமிர வேண்டும். இதில் நான் அமிழ்ந்து விடக் கூடாது. அழிந்து விடக் கூடாது. மூழ்கி முக்குளித்தது போதும். அறிந்தேன். எல்லாம் அறிந்தேன்.  நான் எழ வேண்டும். எழுந்து விஸ்வரூபம் எடுக்க வேண்டும்..                                                                                                                                                                                                   

மனம் நினைக்கிறது. வெறி கொள்கிறது. வெளியேறத் துடிக்கிறது. ஆனால் முடியவில்லையே? இறைவா! நான் அழிந்துபட வேண்டியர்தானா? இப்படியே நான் காணாமல் போக வேண்டியதுதானா? அறியப்படாமல் போக வேண்டியவனா நான்? என்னே கொடுமை?                                                                                                                                                                                                                                                  

என் தேவி! என் நளாயினி!! என் பர்வதவர்த்தினி!!! என் மகா சக்தி!!! என்னைக் காப்பாற்று! என்னை ஆட்கொள்!! அது உன் கையில்தான் இருக்கிறது. நீ மனது வைத்தால்தான் சாத்தியம்.                                                                                                                                                                                                    

அடித்து நொறுக்கு. தூள் தூளாக்கு. என் மாசு அழிய வேண்டும். என் வெப்பம் தணிய வேண்டும். என் இச்சைகள் எறிந்து பஸ்பமாக வேண்டும். நான் புனிதம் பெற வேண்டும். நான் புதியவனாக உயிர்த்தெழ வேண்டும். அதற்கு இதுதான் வழி. ஒரே வழி. உத்தமமான வழி. உதறு! கேவலப்படுத்து!! காறி உமிழ்!!!                                                                                                                                 

எல்லாம் நடக்கட்டும். எல்லாம் அழியட்டும். புது மெருகோடு நான் புதிதாக ஜனிக்க வேண்டும்.                                                                                                                                                                                     

ஊரும் உலகும் என்னை, என் பலவீனத்தை அறியாமையை, லோலத்தை உணர்ந்து அறியும் முன்  நீயே என்னைக் காப்பாற்றிவிடு.  உனக்கு அந்த உரிமம்  உண்டு. உனக்கு அந்தப் பெருமை உண்டு. பேராற்றல் உண்டு. திண்மை, மகாசக்தி எல்லாமும் உண்டு.                                           

எனக்காக நீ உன்னைத் தந்தவள். உன்னை அழித்தவள். அழித்துக் கொண்டிருப்பவள். நீ எதுவும் செய்யலாம்.  என்னமும் பேசலாம். எல்லாவற்றுக்கும் ஆதார ஸ்ருதி நீ!! என்னை மாற்று... செம்மையாக்குமனிதனாக்கு!!                                                                                                                                                                                                                                                                                                                                                                             தேவகி! தேவகி!!  மெதுவாக அழைத்துக்கொண்டே அவள் காலடியில் சரணாகதி ஆகிறான் இவன். முகம் புதைத்து அழுகிறான்.  அவள் பாதார விந்தங்களைக் கண்ணீரால் கழுவுகிறான்.                                                                                                                                                                                                                       

இன்னும் நீங்க தூங்கலியா?” - உறக்கக் கலக்கத்தில் புரண்டவாறே கேட்கிறாள் அவள்.                                                                                                            

'ஆம். தூங்கவில்லை. எப்படித் தூக்கம் வரும்? என்னைக் கொல்லும்  இச்சை!  அந்தப் மாயப் பிசாசு, வந்து என்னைத் தொற்றிக் கொண்டுள்ளதே? அதை எப்படி விரட்டுவது? தெரியவில்லையே எனக்கு.                                                                                                                                                                                               

ஆஉறா! என்ன ஒரு மென்மை? என்ன ஒரு குளிர்ச்சி? என்ன ஒரு மணம்? மெல்ல மெல்ல முன்னேறி மெத்தென்ற அந்தப் பகுதிக்குள் நெஞ்சை ஆழப் புதைத்துக் கொள்கிறான். படபடக்கும் இதயத்துக்கு மாமருந்து. ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு எல்லாமும் சீராகும் ஸ்தலம்.  போதும்;, போதும், வேறு ஒன்றுமே வேண்டாம் இந்த வாழ்வில்!                                                                                                                                                                 

அய்யோ, கடவுளே! பேசாமப் படுத்துத் தூங்க மாட்டீங்களா? ரொம்பத் தொந்தரவு பண்றீங்களே? இத விட்டா வேறே ஒண்ணுமே உங்களுக்குத் தெரியாதா? சீ!! என்ன ஜென்மமோ?                                                                                                                                                                                                                                                                  

உதறி வீசியெறிந்ததில் இரண்டடி தள்ளிப்போய் விழுகிறான்.                                                                                                                                                              ஸ்தோத்ரம் சொல்லுங்க..தூக்கம் வரும்...”                                                                                                                                                                                                       ஸ்தோத்ரம்? என்ன ஸ்தோத்ரம்? அதுதான் உன்னை ஜபித்துக்கொண்டிருக்கிறேனே? என்னை மறந்து, என் நிலையை மறந்து...என் அறிவை மறந்து, என் சக்தியை மறந்து, என் உறவுகளை மறந்து, என் நட்புகளை மறந்து... இன்னும் என்ன செய்ய வேண்டும்? எதை இழக்க வேண்டும்?                                                                                                                                                                                                                                                                                                      

நீ சொல்லும் அந்த மந்திரங்களை வேறு சொல்லி அவற்றையும் இன்னும் களங்கப் படுத்த வேண்டுமா என்ன? மனதில் ஏற்கனவே படிந்திருக்கும் அழுக்குகள் போதாதா? இந்த அழுக்கு, கறைகள் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து விட்டு நீ சொல்லும் ஸ்தோத்ரம் சொல்ல முயற்சிக்கலாம். ஒரு வேளை நான் புனிதப் படலாம். இல்லையென்றால் அவையும் களங்கப்பட்டுப் போகுமே? அந்தப் பாவம் வேறு சுமக்க வேண்டுமா?                                                                                                                                                         

தேவகி! என் தெய்வத் திருத்தலமே!! முதலில் என்னை விடுவி! இந்தக் கடும்புனலிலிருந்து  என்னை வெளியே கொண்டுவந்து கொள்கிறேன்.  பிறகு நீ சொல்வதையெல்லாம் கேட்கிறேன். சிரமேற்கொண்டு செய்கிறேன். உன் பாதம் பணிந்து நிறைவேற்றுகிறேன். உன் ஆக்ஞைகளின்படி நடந்து கழிக்கிறேன். என்னை ஆசவாசப் படுத்து. என்னை அடங்கச் செய்து விடு. என் அறிவு வேலை செய்ய மறுக்கிறது. என் செயல்கள் ஊனமுற்றுக் கிடக்கின்றன. என் சிந்தனை ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இவற்றிலிருந்து நான் வெளியே வரவேண்டும். உயிர்த்தெழ வேண்டும்.                                                                                                                                                                                                                                                               

பக்கத்து அறையில் உடல் அயற்சியில் புலம்பும் சகோதரனின் தீனக் குரல்.                                                                                                                                     

சே! என்ன கேவலம்? இதையும் மறந்து விட்டேனே இத்தனை நேரம்? நான் மனிதனா? அல்லது மிருகமா?                                                                                             

குடும்ப சுகமே காணாத புனிதன். தாம்பத்ய இன்பம் அறியாதவன். பிற எல்லோரும் இன்புற்றிருக்கத்  தன்னைத் தியாகம் செய்த பேராளன்!!!                                                                                                                                                                                                                                                                                 

அவ்வப்போது வந்திருந்து நலமறிந்து செல்பவன். கேவலம், அவனிருக்கும்போது கூட இதைத் தவிர்க்க முடியவில்லையா உன்னால்? என்ன ஜென்மம் நீ?                                                                                                                                                                                                                                                                                                       

சுந்தர், நீ எங்கே படுத்துப்பே?”                                                                                                  :”உறால்ல...”                                                                                                             அப்படியா? நானும் உங்கூடப் படுத்துக்கட்டுமா?”                                                               “................”                                                                                                                                                  இல்லண்ணா, நீ இந்த ரூம்ல படுத்துக்கோ...உனக்கு அதுதான் சரியா இருக்கும்...”                                                                                                             

அதுதான் சரியா இருக்கும் என்றால் என்ன அர்த்தப்படுத்திச் சொல்கிறாய் இந்த வார்த்தைகளை? மனம் அத்தனை கெக்கலி கொட்டுகிறதோ உனக்கு?                                                                                                             

என் மனதை உணர்ந்து கொண்டிருப்பானோ? வாய்விட்டுச் சொல்லவில்லையாயினும் மனதில் நினைத்திருப்பானோ?                                                                                                                                                                                                                            

சீ! வெட்கங்கெட்டவனே!! மனசாட்சிக்கு துரோகம் இழைப்பவனே?                                                                                                                                                                                                             

இது ஒன்றுதானா உலகம்? நீ அறிந்தது அப்படித்தான் போலிருக்கிறது?                                                                                                                                                                                            

எத்தனை அரிய பொக்கிஷங்கள் நீ அறியக் காத்திருக்கின்றன? எத்தனை அழியாப்  பெட்டகங்கள் தன் வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கின்றன? அங்கெல்லாம் என்று நீ நுழையப் போகிறாய்? உன் கண்கள் என்று திறக்கப் போகின்றன? என்று நீ ஒளி பெறப் போகிறாய்? என்று நீ உயரப் போகிறாய்? என்று நீ விஸ்வரூப மெடுக்கப் போகிறாய்?                                                                                                                                                                                                        எல்லாம் மறந்து, எல்லாவற்றையும் இழந்து, இந்தக் காமக் கடும்புனலில் வீழ்ந்து மடியப் போகிறாயா?                                                                                        

இவன் பார்வை கூர்மைப் படுகிறது. இருட்டுக்குள் தேடுகிறது. பாதி சாத்தியிருக்கும் அறையின் கதவு. உள்ளே  எதிர்ப்புறம் சுவற்றைப் பார்த்துப் படுத்திருக்கும் சகோதரன்.                                                                                                                                                                                                                        

உனக்கு உன் சுகம்தான் முக்கியம்.  உன் சந்தோஷந்தான் பெரிது. உன் பொழுதுகள், உன் நேரங்கள். உன் கனவுகள். எல்லாம் உன், உன்...உன்!!! அப்படித்தானே?                                                                                                                                                                                                                                                                                                       

அவனும் அப்படி நினைத்திருந்தால்? எதுவோ எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தன் வழியை, திசையை மாற்றியிருந்தால்?                                                                                                                                                                                                                                                                                                                                                                              

ஒரு இங்கிதம் இல்லையா உங்ககிட்டே? உங்க அண்ணா வந்திருக்காரே...ஒரு ஒதுக்கம் வேணாம்? இப்படியா பறப்பாங்க? அவர் நம்மைப் பத்தி என்ன நினைப்பார்? சீ! வெட்கக்கேடு!! கேவலம், கேவலம்.  ஏனிப்படி அசிங்கப்படுத்தறீங்க? வீடுங்கிறது ஒரு கோவில் மாதிரி. அந்த இடத்தையே உங்க காரியங்களினால  அசுத்தப் படுத்தறீங்க நீங்க. பெரியவங்க, உறவுக்காரங்கன்னு வந்திருக்கிற போது ஒரு நாகரீகம் வேணாமா? என்ன படிச்சிருக்கீங்க நீங்க?”                                                                                                                                                                                                                                                                        

இருட்டிலே அவனுக்கு மட்டும் கேட்பதுபோல் கிசுகிசுக்கிறாள். இல்லை, இல்லை கையில் சவுக்கெடுத்துச் சொடுக்குகிறாள். தேவைதான் இவனுக்கு. கழுதை வயசாகிறது. ஆனால் அறிவு வேலை செய்ய மறுக்கிறது. இவையெல்லாமும் அவள் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமா? உனக்கே மனதில் உதிக்காதா? உன் சிந்தனை உன் கட்டுக்குள் இல்லையா? அதைப் பிறர் பிறாண்டி விட்டால்தான் உனக்குச் சுரணை வருமா? உன் அறிவுக்கு எட்டவில்லையா? அல்லது  எட்டியும் தட்டிவிட்டதா?                                                                                                                                                                                                  

இத்தனை நேர்த்தியாக உனக்கு இந்த உடல் கிடைத்திருக்கிறதே? அது யாரால்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த உன் பெற்றோர்களால்தானே? அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டாமா நீ? உன் சீரான இந்த உடல் அதை ஒன்றுக்கும் பலனில்லாமல் கொன்று சீரழிப்பதற்கா? திமிர்ந்து திரிவதில் என்ன பெருமை இருக்கிறது? அது ஒரு சாதனையா? ;காலத்தால் பேசப்படக் கூடிய ஒன்றா அது? நல்ல அடையாளங்களே அழிந்து, மறந்து அழிந்து போகக்கூடிய இந்நாளில், நீ உன் உடம்பை அழித்து, உன்னையும் அழித்துக் கொள்கிறாயே? இந்த உடலின் மீதான மதிப்பு உனக்கு இவ்வளவுதானா? மயிர்க்கால்களும் அதனுள் படிந்திருக்கும் வெப்பமும், உன்னை கேவலம் இதற்குத்தான் இழுத்துச் செல்கிறதா? உழைப்பவனுக்கு அந்தப் பணியின்பாற்பட்டு உடல் வெப்பமாகிறது. உனக்கு? இதுதான் உன் உழைப்பா? உன் உடலின் வெப்பம் வீணே அதைத் தணிப்பதற்கா? இந்தக் காயம் பொய்யில்லையா? அந்தப் பொய்யை மெய்யாக்க என்ன வழி? அதைப் பேணுவதா? அல்லது அழிப்பதா? உன் உடலை, அதன் உணர்ச்சிகளை நீ வெல்ல வேண்டாமா? அந்த மேன்மையை உணரும் தன்மை இதுதானா? இழுக்கும் பக்கமெல்லாம் சென்று ஆட்படுவாயா நீ? எடுப்பார் கைப்பிள்ளையாய் எண்ணங்கள் கை பிடித்துக் கூட்டிச் செல்லும் இடமெல்லாம் பயணிப்பாயோ? காமாந்தகனே! நீ அழிவுப்பாதை நோக்கிச் செல்கிறாய். அதை உணர்! மனதை லகான் இட்டுக் கட்டுப்படுத்த இழுத்து நிறுத்து. உன் கட்டுக்குள் கொண்டுவா.அது செல்லும் பக்கமெல்லாம் நீ போகாதே. எண்ண ஓட்டங்களைத் தடை செய்யவில்லையென்றால் பின் அது தறி கெட்டுப் பறக்கும். தீய விஷயங்களைத் தீயெனப் பிடித்துக் கொள்ளும்.  பற்றிக் கொள்ளும். இனி புதிதாய்ப் பற்றுவதற்கென்ன இருக்கிறது? அதுதான் பற்றி எரிந்து கொண்டிருக்கிறதே?                                                                                                                                                                                                                          

விட்டு ஒழி. உதறித் தள்ளு. இந்த உடலைப் பூஜி. இத்தனை நல்ல சரீரத்தை முழுமையோடு நிறைவாய்க் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்து. அவன் கொடுத்த காயத்தைப் பாதகமின்றி பாதுகாக்க முயல். அதைப் பொசுக்காமல் இறை மணக்கச் செய்.                                                                                                                                                                                                       

அறிவுக்கு வேலை கொடு. அதை மிஞ்சிய விஷயம் வேறு இல்லை இந்த உலகத்தில்.மீண்டு வெளியே வா! உலகத்தில் முடியாதது ஒன்றுமில்லை. முனைப்புதான் முன்னின்று வழி நடத்த வேண்டும். போ! விலகிப் போ!! எல்கையைக் கடந்து போ!!!.                                                                                                                                                                                                                       

 சட்டென்று எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறான் இவன். மெல்லிய குளிர் காற்று உடம்பைத் தழுவிக் கொண்டபோது சிந்தனை தெளிவு பெறுகிறது.                                                                                                                                                                                                                                     

சுந்தா,; நான் கிளம்பறேன்....”                                                                                                                                                                                                                                                                                                                                                                   ஓடிவந்து அண்ணனின் கைகளைப் பற்றிக் கொள்கிறான்.            ..                                                                                                                                                                                                                                                                                                          குற்றவுணர்வு பீறிட்டு நெஞ்சை அழுத்துகிறது.                                                                                                                                                                                      என்னண்ணா, ஏன்? ரெண்டு நாளைக்கு இருக்கேன்னு சொன்னியே?”                                                                                                                                                                                                                                                                                 

இல்ல...இருக்கட்டும்...செல்லல...நான் போகணும்...மனசு தங்கல...”                                                                                                                                                       சொல்லிவிட்டுப் போய்க்கொண்டிருக்கும் சகோதரனையே பார்த்து நிற்கிறான். என்ன ஒரு நிதானமும் தெளிவும் நிறைந்த அழுத்தமான நடை. இவன் கண்கள் அவன் பாதங்களையே பின்பற்றுகின்றன.                            

                                                                                                                                     மனசு தங்கலை...மனசு தங்கலை...” - வார்த்தைகள் கீறிக் கிழிக்கின்றன இவனை.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     “”””””””””””””””””””””””””””””””””                                                                                                 

குமுதம் மாலைமதி நாவல் இதழில் என் நெடுங்கதை 13-ம் நம்பர் பார்சல்