“திசைகாட்டி” – எஸ்.வைத்தீஸ்வரன் – கட்டுரைகள்-
வாசிப்பனுபவம்
– உஷாதீபன் (வெளியீடு – நிவேதிதா புத்தகப் பூங்கா, இராயப்பேட்டை,
சென்னை-14)-
மூத்த எழுத்தாளர் திரு.எஸ்.வைத்தீஸ்வரன்
அவர்களைப் பிரபலமான, தரமான கவிஞராக அறிந்திருக்கிறோம்.
சிறுகதை ஆசிரியராக அவரது தொகுதியைப் படித்திருக்கிறோம். ஆனால் கட்டுரைகளிலும் தனது
முத்திரையைப் பதித்திருக்கிறார் என்பதை இப்புத்தகத்தைப் படித்தறிகையில் உணர முடிகிறது.
சிறிய பத்தி எழுத்துக்களாக அவரது கட்டுரைகளை முடிய விடாமல், அந்த விஷயம் தனக்கு ஏற்படுத்திய
தாக்கத்தைப் பொறுத்தமான அவரது கவிதைகளால் நிரப்பி அதன் மூலமும் நம் மனதில் ஒரு இறுக்கத்தை ஒரு சிறப்பான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறார்.
கதை, கவிதை மற்றும் கட்டுரை கலந்த ஒரு புத்தகமாகப் பல்சுவையோடு இந்த “திசைகாட்டி” வெளிவந்திருப்பது
தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு ஒரு புதிய இனிய
அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
Bonga நாடு என்பது Terra Incognitia / Blest தீவுகள் இவற்றின் இடையில்
உள்ள ஒரு சிறிய பிரதேசம். இங்குள்ள மக்களின் கலாச்சாரம் வியப்பானது. இறப்பிற்கு சடலத்தின் முன் அமைதி காப்பது என்பது நமது பண்பாடு.
ஆனால் போங்கா மக்களின் கலாச்சாரம் என்பதே கரகோஷங்கள்தான். இழவு வீட்டில் கூடி இதை அவர்கள்
வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இறந்தவனின் உடலைச்சுற்றி நின்று கை தட்டி ஆரவாரித்தல்
என்பதன் மூலம் அவனுக்கும் தங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை உறுதிப்படுத்திக்
கொள்ளுதல் என்பதை அடையாளமாகக் கொண்டு வருகிறார்கள்.
புகழ் பெற்ற இத்தாலிய எழுத்தாளர்
umberto eco என்பவரின் ஒரு கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட தகவல் பத்தி இது என்று ஆசிரியர்
சொல்கிறார். இந்தச் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக அதிக வித்தியாசமில்லாமல் ஆரவாரித்தல்
என்பதை அடையாளமாகக் கொண்டு நமது அரசியல் கூட்டங்களையும், மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின்
விளம்பர நிகழ்ச்சிகளையும் அதீதமாய் வரவேற்கும் நமது மக்களின் கலாச்சாரம், மிகுந்த கரகோஷ
ஒப்புமையுடையது, அதிக வேறுபாடு இல்லாதது என்று எடுத்துரைக்கிறார். நாம் அறியாத தகவலைகளை
உள்ளடக்கியது இந்தக் கட்டுரை.
சின்ன வயசிலே அம்மா கொல்லைப்புறம் இட்ட பயிரில் செழிப்புற, பளபளவென வளர்ந்து நிற்கும் பாகற்காயைப் பறித்து வந்து, தேங்காய்த் துறுவல் கலந்து நாவில் ஜலம் ஊறக் கறி வைத்துப் பறிமாறும் அம்மாவின் கைபாகம் அடங்கிய பகட்டான ருசி ஒரு பிள்ளைத்தாய்ச்சியின் மனதில் ஏக்கமாய்த் தோன்றினால் எப்படியிருக்கும்? வயிற்றில் குழந்தையைச் சுமந்திருக்கும் கர்ப்பிணிக்குத் தோன்றும் விபரீத ஆசைகள் நிறைவேறாமற் போகக் கூடாது என்பது நமது மரபு. அது நிறைவேற்றப்படுகிறது ஒரு தாய்மை கொண்ட பெண்மணிக்கு. பிரசவம் பார்க்க அந்தக் காலத்தில் என்ன செலவு? தட்டில் ஒரு நூல் புடவை. அஞ்சு ரூபாய்க் காசு. வெற்றிலை..பாக்கு...ரெண்டு பழம்....வசதியில்லாதவர்கள் வெறும் ரவிக்கைத் துணி கூட வைத்துக் கொடுத்த நிகழ்வுகள் உண்டு. அதுவும் இல்லாமல் வெற்றிலை பாக்கோடு இரண்டு ரூபாய்த் துட்டுப் பெற்றுக் கொண்டு மன நிறைவோடு வாழ்த்திவிட்டுப் போன
புண்ணியத் தாய்மார்கள் வாழ்ந்த காலம் அது. கிராமங்களின் மருத்துவச்சி முத்துப்
பேச்சி, சம்பங்கி அல்லது செவ்வந்தி. அவளுக்கு ஈடான ஒரு தெய்வம் உண்டா?
அம்மா
ஞாபகமாய் அந்தப் பாகற்காய்க் கறி தின்று ஆசையை நிவர்த்தி செய்து கொண்டு அழகான குழந்தை
ஒன்றைப் பெற்றெடுத்தாள் அந்தத் தாய். அந்த நாள் - அந்த வீட்டிற்கும், இந்த உலகிற்கும் முக்கியமான நாளாயிற்று.
அந்தக் குழந்தை பிற்காலத்தில் சீரும் சிறப்போடும் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாய்
வாழ்ந்ததோடு, ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும் மாறி இலக்கிய உலகிற்கு வளம் சேர்த்தது.
செய்தியை அறிய நமக்கு நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது. அவர் யாரென்று பெயரிட்டு இன்னமும்
சொல்லித்தான் ஆக வேண்டுமா? வாசக உள்ளம் இதற்குள்ளும் அதனை யூகித்தறிந்திருக்கத்தானே
வேண்டும்? வாழ்க வளமுடன்....
திசைகாட்டிகள் எப்போதுமே தனியாய்த்தான்
நிற்கின்றன. ஆனால் அவை எத்தனை ஆயிரம் பேருக்கு வழிகாட்டிக் கொண்டே தன்னை ஒற்றையாய்
நிலை நிறுத்திக் கொள்கிறது. வழி மாறிப் போகும் இடங்களில் வந்து உதவுவது இவைதான். வழி
தெரியாத இடங்களிலும் நம் கண்கள் தேடுவது இவைகளைத்தான். அவை என்றுமே தவறான வழிகளைக்
காட்டியதில்லை. ஆனால் அவைகளைத் தேடிக் கண்டடையும் முன் நம் மனம் கொள்ளும் பரிதவிப்பு?
திருமுல்லை வாயிலுக்கு மாறிக் குடி போன
ஆப்த நண்பனைச் சந்திக்கச் சென்று திரும்புகையில்
பெருத்த காற்றிலும் மழையிலும் வழி மாறிப் போய்த் தடுமாறுகையில் வழிகாட்டியாய் வந்தவனின்
உதவும் நோக்கில் ஊடாடியிருந்த லாப நோக்கம்தான் எத்தனை சாமர்த்தியமானது. இப்படியெல்லாமும்
செய்தால் அது அநாகரீகமாகாதா என்றால் அப்படியும் தங்கள் காரியத்தை சாதுர்யமாய் நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த லோகத்தில் சிலர் இருக்கத்தானே
கூடும்? உனக்கு உதவும் அதே வேளையில் என்னுடைய தேவையையும் உனக்குப் பாதகமில்லாமல் நிறைவேற்றிக்
கொண்டேன். இதில் என்ன தவறு? என்று இந்த திசைகாட்டி இந்தக் கட்டுரையில் கேட்கிறார்.
நாமும் சரி...விடுங்கள்...ஒரு வழியாய்ப் போய்ச் சேர்ந்தால் சரி என்று ஒதுங்கிக் கொள்கிறோம்.
எல்லாவிதமான மனிதர்களும்தானே இந்த உலகத்தில் இருப்பார்கள்? அத்தனை பேருக்குமான உலகம்தானே
இது? அப்படிச் சிலரைச் சந்திப்பதும் ஸ்வாரஸ்யமானதுதானே?
நாக்குத் தூண்டில்தான் எப்படி வேலை செய்கிறது?
அதன் சாமர்த்தியம், சாதுர்யம்தான் என்ன? அது எப்படியெல்லாம் பேசி, இந்த உலகத்தின் நிகழ்வுகளைப்
புரட்டிப் போட்டு விடுகிறது? உயிரினங்களின் இயல்பான வாழ்க்கையை அழித்து மனிதன் எப்படியெல்லாம்
தன்னை முன்னிறுத்தி வாழத் துடிக்கிறான்? குறியீட்டுக் கவிதையாய் அமைந்த “கால்-மனிதன்”
மிகவும் ஆழ்ந்து படித்து மனதில் வாங்கிக் கொள்ள வைக்கும் உன்னதமான கவிதை.
ஸஉறஸ்ரநாமம்...சபாஷ்...ரொம்ப நன்னாயிருந்தது.
இதோட பத்தாவது நாளா இந்த நாடகத்தைப் பார்க்கிறேன்.
நெகிழ்ச்சி குறையவேயில்லை....ஒரு நாடகம் சமூகத்துக்கு இப்படித்தான் செய்தி சொல்லணும்...இந்த
வகைலதான் நம்ம மக்களைத் தட்டி எழுப்பணும்...கலையும் இலக்கியமும் இப்படித்தான் சமுதாயத்துக்குப்
பயன்படணும்....ஆனாலும் ஒரு குறை...இதெல்லாமும் நம்ம மக்கள் மண்டைல உறைக்குமா? தெரில...ஆனா
முயற்சியை விடப்படாது.. தெரிஞ்சிதா?..-சொன்னவர் வ.ரா.
வ.ராமசாமி ஐயங்கார் என்னும் அந்த நாளின் தீவிர
லட்சிய எழுத்தாளர். காந்தீயவாதி, தேசீயவாதி....மணிக்கொடி இதழின் ஆசிரியராய் இருந்தவர்.
பொட்டு வைத்து, பூ வைத்து அலங்கரித்துக் கொண்டிருக்கும்
ஒரு குழந்தையைப் பார்த்து ஒரு பைத்தியக்காரன் கூறுகிறான்....“இப்படியெல்லாம் பண்ணிக்காதே...அப்புறம்
உங்க அப்பா, அம்மா உன்னை யாராச்சும் ஒரு கிழவனுக்குக் கட்டி வச்சிடுவாங்க...அப்புறம்
வாழ வேண்டிய வயசுல நீ விதவையா நிற்க வேண்டியிருக்கும். ஒன்னோட பூவை இப்படிப் புடிச்சு
இழுத்துக் கழட்டுவாங்க...பொட்டை இப்படி அழிச்சி விட்டுடுவாங்க...அப்புறம் உன்னோட பட்டுச்
சட்டையை இப்படிக் கிழிச்செறிவாங்க...உன்னைச் சுத்தி உட்கார்ந்து எல்லாரும் சந்தோஷப்படுவாங்க...அப்புறம்
நீ இந்தப் பார்க்குக்கு வரவே முடியாது...விளையாட முடியாது...சிரிக்க முடியாது...நீ
வாழவே முடியாது...முடிஞ்சிது...உன் வாழ்க்கை...அத்தோட....உன்னை மாதிரித்தான் என் தங்கை
இருந்து பாழாப்போனா....அவ வாழ்க்கை அஸ்தமிச்சுப் போச்சு...அதுல இந்தப் பெரியவங்க எல்லாருக்கும்
அத்தனை சந்தோஷம்....பூ, பொட்டு....ன்னு எந்த மங்கலப் பொருளும் சூட்டாம, நார்ப்பட்டுச்
சேலையோட அப்புறம் நீ மூலைல, இருட்டுல ஒடுங்க வேண்டிதான்......
குழந்தைகளைப் பாத்திரமாக்கி இந்த நோக்கில் விரியும்
அந்த விழிப்புணர்வு நாடகம்...அதைக் கண்ணுற்றுத்தான்
பாராட்டுகிறார் வ.ரா. பெண்களின் அவல நிலையை மையப்படுத்தி நாவல் எழுதியவர். மூட நம்பிக்கைகளின்
காரணமாய் தன் ஜாதியைப் புறக்கணித்தவர். அதன் அடையாளமாய் இலங்கையிலே இருந்தபோது ஒரு
பெண்ணை நேசித்துக் கலப்பு மணம் செய்து கொண்டவர்....அவரின் நினைவுகளைப் போற்றும் இந்த
வ.ரா. கட்டுரை இத்தொகுப்பின் மகுடம். என் தாய் மாமாவாக அமைந்த யதேச்சையான ஒரு குடும்ப
உறவு வ.ராவுடனான எனது இளமைக் காலங்கள் என்று நினைவு கூர்கிறார் சகஸ்ரநாமம்.
1644 ல் பிறந்த zen தத்துவ ஞானி பாஷோ இந்தத்
துறையின் சிறந்த செறிவான கவிஞர். சகஜமான உரைநடையின் நறுக்குகளாய் senriyu என்றொரு கிளை பிரிகிறது
பின்னால். Blyth என்ற ஆங்கில இலக்கிய ஆய்வாளர்
ஒரு புத்தகம் எழுதுகிறார். 1964 ல் அது உலகக் கவிதை ஆர்வலர்களுக்கு ஆவணமாக விளங்கத்
தொடங்குகிறது. நாளடைவில் மரபு சார்ந்தும் சாராமலும் HAIKKU POEMS பிறக்கின்றன. இயற்கையின்,
புற இயக்கங்களின் நுணுக்கமான அசைவுகளை, ஊடாட்டங்களை, சமிக்ஞைகளை, அர்த்தமுள்ள வாழ்வுக்
குறிப்புகளை மௌனமாக மென்மையாக, உணர்த்தும் Haikku கவிதைகள் வெளிச்சமான நெகிழ்ச்சியாகப் பரிணமிக்கின்றன.
பேரனுபவத்தை வெளிப்படுத்தும் ஆதார நோக்கம் கொண்ட சின்னஞ்சிறு, நறுக்குக் கவிதைகள் வினோதமான
ஸ்வாரஸ்யம்.
1) ஆற்றுப் பாலம் அடியில் / ஊதாப்பூ கொடிகள் / உயிர் வாழத் தொங்குகின்றன= BAASHO
2) மலரென்று
நினைத்தேன் / பறந்து போயிற்று = எஸ். வைத்தீஸ்வரன்
3) ஏரியின்
அந்தம ஒளி / கிளறிப் பார்க்கின்றன / வாத்துக் கால்கள் = Jeff Witkin
4) தூரிகையில்
/ பட்டுப் பூச்சிகளை / வரைந்து கொண்டிருந்தேன் / ஒன்று பறந்து போயிற்று=எஸ்.வைத்தீஸ்வரன்
மூன்று அடிகள்
– என்ற தலைப்பிலான இக் கட்டுரை HAIKKU கவிதைகளைப் பற்றி அழகாக முன் வைக்கிறது.
கல்லை எறிந்தவன் – என்றொரு கட்டுரை. நாடு சுதந்திரம்
அடைந்த அறிவிப்புக்குப் பின்னும் வெள்ளைக்காரர்கள் இன்னும் முற்றாக இந்தியாவை விட்டு
வெளியேறாத நேரம். அருகருகான பிரிட்டீஷார் குடும்பத்தாரின் வீடுகள். இந்தியர்களைக் கண்டால்
அவர்களுக்குள் படிந்து போன இளப்பம். அது குறித்து அந்தக் குடும்பத்தில் நிலவும் கருத்துகள்.
அவர்களின் குழந்தைகளுக்குக் கூட மனதில் படிந்து போயிருக்கும் கேலியான மனச் சித்திரங்கள்.
அந்த வெள்ளைக்காரச் சிறுவன் அம்பியின் மீது கல்லெறிந்து விட, அவனுக்குக் காயம்பட்டுப்
போகிறது. வில்லியம்ஸ் பிள்ளைதானே...துஷ்டனாச்சே.... பாட்டி திட்டுகிறாள். லீவுக்கு
வந்திருந்த சிறுவன் ஊர் திரும்புகிறான். காயம் பட்ட கட்டு அவிழ்க்கப்பட்டு ஆறியிருக்கிறது.
ஆனால் காலில் வேறொரு காயம் தெரிகிறது. அதென்ன என்று கேட்க, ஸ்கூலில் ஒரு பையன் தள்ளிவிட்டுத்
தடுக்கி விழுந்து ஏற்பட்ட பெரும் காயம்...ஆனால் இப்பொழுது ஆறி விட்டது என்கிறான். சிறுவன்...பேரென்ன
என்று மாமா கேட்க...கதிர்வேலு...என்கிறான்.
கதிர்வேலுவும் வெள்ளைக்காரப் பையனோ? என்று மாமியையும்,
பாட்டியையும் பார்த்து விஷமமாகக் கேட்கிறார் மாமா.
குழந்தைகள் என்பது எல்லாமும் ஒன்றுதான். ஆனால்
வெள்ளைக்காரனின் மேல் நமக்குப் படிந்து விட்ட வன்மம். துஷ்டன் என்று அந்தப் பிள்ளையையும்
கணிக்கத் தோன்றுகிறது. இம்மாதிரியான மனநிலை இருந்த காலம் அது.
மகாத்மா அதனால்தான் சொன்னார். நாட்டின் சுதந்திரம் என்பது வேறு. அவர்கள் மீது நமக்கு என்றும் வெறுப்பில்லை. என்றும்
அவர்கள் நம்மின் மதிப்பிற்குரியவர்கள். அன்பான நட்புக்குரியவர்கள். நண்பர்களே....! - அண்ணலின்-மனதைத் தூய்மையாக்கும் நிஷ்காம்ய கர்மம்
எத்தனை துல்லியமானது.
மரத்திலேயே சதா சர்வ காலமும் அமர்ந்திருக்கும்
பையன்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு பையன் இந்தப் புத்தகத்தின் கட்டுரை ஒன்றில்
வருகிறான். அது வேறு யாருமல்ல...சாட்சாத் நம் எழுத்தாளர் பெருமகன்தான். பையனுக்குப்
பதிமூண்றாவது வயதில் ஒரு கண்டம் என்று ஆயுஷ்உறாமம் செய்கிறார்கள் வீட்டில். அவனா வழக்கம்
போல் தன் சிம்மாசனமான மரத்தில் போய் ஏறி உட்கார்ந்து
கொண்டிருக்கிறான். அவனைத் தேடி வந்த பெரியப்பா அப்டியே அசையாமல் இரு என்று அவனைப் பார்த்துச்
சொல்லி, ஒரு நீண்ட கழியை எடுத்து பின்னால் நெளிந்து கொண்டிருந்த பாம்பை இழுத்து வெளியேற்றுகிறார்.
கண்டம் தப்பித்தது என்கிறார். உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை... செந்தணலும்
நீர் போல் குளிரும்...இதெல்லாம் அவரவர் நம்பிக்கையையும், கால காலமான சம்பிரதாயங்களையும்,
சடங்குகளையும் உள்ளடக்கிய விஷயங்கள் என்பதை மரத்தில் வாழ்ந்தவன் என்ற இக்கட்டுரை நமக்குத்
துல்லியமாய் உணர்த்துகிறது.
ஏறக்குறைய இப்புத்தகத்தின் அனைத்துப் பகுதிகளையும்
சொல்லி விட்டேன் என்றே கூறலாம். இன்னும் ஓரிரு கட்டுரைகள்தான் மீதம். ஆனாலும் நான்
அவற்றின் பிழிந்த சாற்றினை மட்டும் ருசி பார்க்கவென்று
எடுத்தியம்பியிருக்கிறேன்.
தன் வயப்பார்வையான எஸ்.வைத்தீஸ்வரன் அவர்களின்
இந்த விமர்சனக் கட்டுரைகளை அவரது வாழ்க்கைக் குறிப்புகளாக மட்டும் அடையாளம் கொள்ள முடியாது
என்றும் நிகழ் காலக் கண்ணோட்டத்தில் ஒரு சமுதாயத்தின் கரைந்து போன பொற் கணங்கள் பற்றிய
வரலாறு இவைகள் என்று வியந்தோதுகிறார் முதுபெரும் படைப்பாளி இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.
இலக்கிய வாசகர்கள் இந்த நூலை அவசியம் விலை கொடுத்து
வாங்கிப் படித்துப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.
-------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக