28 ஜனவரி 2017

“கை கொடுக்கும் கை…!”

 

27.11.2016 y தினமணி கதிரில் வெளிவந்த சிறுகதை

 

15170883_10205913015063115_3425716333671627912_n

நாயுடு காம்பவுன்டைக்“ கடக்கையில் தற்செயலாய்ப் பார்வை போனது. மனுஷன் இருந்தால் பிடித்துக் கொள்வார். நிச்சயம் தப்பிக்க முடியாது.

ஏய்….! நாகு….அம்பி வந்திர்க்கு பாரு….என்று உள் நோக்கிக் குரல் கொடுப்பார். கையில் டீயோடு ஓடிவரும் அந்தம்மா. அந்த அளவிலான மதிப்பிற்கு, தான் என்ன பண்ணினோம் என்று தோன்றி இவனைக் கூச வைக்கும். இதைத் தவிர்ப்பதற்காகவே அந்த வழியைத் தவிர்ப்பான்.

ரெண்டு மூணு மாதங்கள்தான் இருக்கும் இப்படி ஆரம்பித்து. உட்காரும்போதெல்லாம் டீ கொடுத்து உபசரித்து….அது தனக்காக இல்லையோ…அம்மாவுக்காக…அப்பாவுக்காக…சாமி அண்ணாவுக்காக என்று கூடச் சொல்லலாம்….தான் சின்னப் பையன் என்பதாகத்தான் நாயுடு நினைப்பு இருக்கும். அம்பி…அம்பி….என்று அவர் வாய்விட்டு அழைப்பதில்தான் பிரியம் சொட்டும்….

அம்மா நல்லாயிருக்காகளா…!...அய்யா? சாமி வந்திருச்சா……? கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகும் நாயுடம்மா. பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு கொள்ளை கொள்ளையாய் மூட்டை கட்டி வைத்திருப்பார்களோ என்று தோன்றும்.

மில் மேம்பாலத்தில் ஏதோ விபத்து என்று இரு பக்கமும் நெடுந்தொலைவிற்கு வாகனங்கள் நின்று போயிருந்தன. அதுதான் அவனது வழக்கமான வழி. இரண்டாவது கேட்டின் எதிர்ப்புறச் சாலையில் நுழைந்து, சற்று தூரத்திலான இடது சந்தில் வளைந்தால் தங்கும் விடுதி.

ஆரம்பத்தில், சந்தில் திரிந்த ரெண்டு மூன்று நாய்கள் கூடி நின்று குலைக்க ஆரம்பித்தன. கொஞ்ச நாளைக்குப் பெரிய தலைவலியாய்த்தான் இருந்தது. தினமும் உள்ளுக்கும் வெளிக்குமாகப் போய் வந்தும் கூட இன்னுமா தன்னை அடையாளம் தெரியவில்லை. என்று இவைகளிடமிருந்து மீள்வது? கடித்து வைத்தால்?

தாங்க முடியாமல்தான் வார்டனிடம் சொன்னான். அப்டியா? என்று கேட்டுவிட்டு இவன் கிளம்பும்போது கூடவே வந்தார். வழக்கம்போல் அவை குரைக்க ஆரம்பிக்க…யேய்…யேய்….போ…போ…என்றவாறே ஆளுக்கொன்றாக பிஸ்கட் துண்டுகளை ஒடித்து ஒடித்து வீசியெறிந்தார். அன்றிலிருந்து இவனும் அதை வழக்கமாய்க் கொண்டான். சில நாட்கள் போடுவதில்லையாயினும் வாலை வாலைக் குழைத்துக் கொண்டு என்னமாய் பம்முகின்றன? பிஸ்கட் போடாமல் இருக்க மனசு வருகிறதா? என்ன ஒரு தீர்க்கமான பார்வை, மனுஷாள் பார்ப்பதுபோல்? உலகமே அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது என்பது எத்தனை உண்மை?

பொன்னகரம் மெயின்ரோட்டில் புகுந்து கிராஸ் ரோடு தாண்டி படித்துறைப் பக்கமாய் வந்து வளைந்தான். வளைந்த பின்னால்தான் மனதுக்குள் சுருக்கென்றது. போச்சுறா…மாட்டிக்கிட்டமா?

ஏய்…அம்பி…! எங்கப்பா ஓடுற….? – குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் ஆளைக் காணோம். அடுத்த நிமிடம் வாசலில் எட்டிப் பார்ப்பது தெரிந்தது. வீட்டுக்குள்ளிருந்து கொடுத்த சப்தம் வீதியில் கலகலக்கிறது. அத்தனை கனமான சாரீரம்…சரீரமும் அப்படித்தான். பாட்டுக் கேட்கும் பரம ரசிகன். அதிலும் பழைய பாடல்கள் என்றால் தித்திக்கும் தேன்.

பொன்னே புது மலரே….பொங்கி வரும் காவிரியே….

மின்னும் தாமைரையே…வெண்மதியே….!

ரசனையாய் வரிகளை முனகிக் கொண்டு கைகளை நீட்டிச் செய்யும் ஆக் ஷன், பழம் பெரும் நடிகர்களை நினைவு படுத்தும் நமக்கு. ஐம்பதில் வெளிவந்த நல்லதங்காள் படத்தின் பாட்டு அது என்று இவனுக்குச் சொன்னார். பலருக்கும் நினைவில் இல்லாத, யாராலும் ஞாபகத்தில் நிறுத்த முடியாத வரிகளை மறக்காது வைத்திருந்து பாடுவது அதிசயமாய்த் தோன்றும்….

நல்ல கருத்த உருட்டுக் கல்போல் பரந்த தேகம். அதற்கேற்ற விரிந்த மனசு. அந்த அம்மாளுக்கும்தான். எப்படித்தான் ஒன்று சேர்ந்தார்கள் இத்தனை ஒற்றுமையாய்? இல்லையென்றால் அங்கு வாடகைக்கு வீடு கிடைக்குமா?

அம்மா சொன்ன கதையைக் கேட்டுக் கண்ணீர் சிந்தி அன்று மாலையே சட்டி பானையை எடுத்துக் கொண்டு இங்கு வந்து சேருங்கள் என்று சொல்லும் மனசுதான் வருமா? ஆனாலும் அம்மாவின் உருக்கம், மற்றவரையும் கரையத்தான் செய்து விடுகிறது. சொல்லும்போதே கண்களில் நீர் முட்டும் அம்மாவுக்கு. அதிலேயே எதிராளி பாதி விழுந்து விடுவான். மீதிக்குக் கேட்க வேண்டுமா? அந்தக் கணமே காரியம் பலிதம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்.

நீங்க ஏன் கவலைப்படுறீங்க மாமி…? நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்… பார்த்துக்கிட மாட்டமா? அப்டி என்ன பெரிஸ்ஸா ஆர்ப்பாட்டம் பண்ணிடப் போறாரு…? நான் பேசுறேம் பாருங்க அவர்ட்ட….அப்புறம் கேளுங்க….சொன்ன பேச்சுக் கேட்டு அடங்கியிருக்காரா இல்லையான்னு…பிறகு சொல்வீங்க….? – எந்த மூன்றாமவர்கள் இப்படி தைரியம் கொடுப்பார்கள்? சுற்றமும், நட்பும் என்கிறோமே…அது மட்டும் ஒருவனுக்கு வசமாய் அமைந்து விட்டால் பிறகு வாழ்க்கையில் அவன்தான் ராஜா….அம்மாவின் கருணை பொங்கும் மனசும், இதமான பேச்சும், பணிவும் அன்பும் மிளிரும் நடப்பியல்புகளும் யாரைத்தான் ஒதுக்கும்?

கேசுத் தம்பி…..நல்லாயிருக்கீகளா…? – கேட்டவாறே மாணிக்கமும் வந்து நிற்க…நீ போய் வேலையைப் பார்றா….காலைலயே வண்டி என்னாச்சுன்னு வந்து கேட்குது ஆளுக….பேச்சுக்கு நிக்காத….என்று சொல்லிக் கொண்டே நாயுடு வர, வர்றன் தம்பி…என்றவாறே அப்பாவை முறைக்காத குறையாய் அகன்றான் மாணிக்கம்.

வாங்க…உக்கார்ந்து பேசுவோம்….என்ன ஆளையே பார்க்க முடில….? அப்டியே வந்து அப்டியே போயிடுறீங்களாக்கும்…என்று மில் ரோடுப் பக்கம் கையைக் காண்பித்தார்.

இல்ல நாயுடு….ஆபீஸ்ல வேல ஜாஸ்தி….அந்த வழி கொஞ்சம் சுருக்கு…அதான்….

இருக்கட்டும்…எங்களயும் கொஞ்சம் ஞாபகத்துல வச்சிக்கிடுங்க…என்றவாறே அருகிலுள்ள இரும்பு முக்காலியை இழுத்துப் போட்டார்.

அமர்ந்தமேனிக்கே அந்தப் பகுதியை அப்படியே கொஞ்சம் நோட்டம் விட்டான் கேசவன். சற்றுத் தள்ளியிருக்கும் மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவிற்கு அந்தத் தெருவே அல்லோல கல்லோலப் படும். அங்கிருந்து நூறடி தள்ளித்தான் திரை கட்டுவார்கள். பொழுது இருட்டும் ஆறரை மணி போல் ஆரம்பித்தால் விடிகாலை நாலரை, அஞ்சுக்குத்தான் முடியும். குறைந்தது மூன்று சினிமாக்கள்….…காம்பவுன்டுக்கு வெளியே நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு விடிய விடியப் படம் பார்ப்பது அத்தனை ஷோக்கு. கடைசியாகக் கர்ணன் படமும், படகோட்டியும் போன வருஷம் பார்த்தது. மூன்றாவது சினிமாவுக்கு நேரமில்லாமல் போயிற்று. போதும்…இதுவே…என்ற திருப்தியோடு சனம் எழுந்து கலைந்தது. மறுநாள் தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. வீட்டுக்குள் சுருண்டு விழுந்த ஆட்கள் ஒன்றுகூட எழுந்திரிக்கவில்லை. சாயந்தரம் போல்தான் அங்கங்கே தலைகள் தெரிந்தன.

இந்த வருடம் அந்தச் சந்தோசம் இல்லாமல் போகும் என்று இவன் கனவிலும் நினைக்கவில்லை.

எதுக்கு அம்பி…உங்கள விட்டிட்டு மெட்ராசுக்குப் போறாக….? உங்க அண்ணாச்சி அப்பப்ப வந்திட்டுப் போக வேண்டிதான…? ரெண்டு தங்கச்சிகளும் இங்கதான வேல பார்க்குது…அந்த வருமானமும் இல்லாமப் போகும்தான…? சின்ன வேலையானாலும் அங்க மெட்ராசுக்குப் போயி…வேலை தேடி…..செரமம்தான…? ஏன் நீங்க சொல்லலியா…?

சொன்னேன் நாயுடு…..அவுக என்னவோ பெரியவன்ட்டத்தான் இருக்கணும்ங்கிற ஒரே எண்ணத்துல இருக்காங்க….மூத்த பிள்ளைட்டத்தானே பெத்தவங்களுக்கு நோங்குது… இவனத் தனியா விட்டிட்டுப் போறமேன்னு நினைக்கல….என்னை என்ன பண்ணச் சொல்றீங்க…? மூத்ததுன்னா ஒரு கரிசனதான்….

அதுக்கில்லய்யா…நீங்க என்னவோ அடிக்கடி கோபப்படுறதாவும், சண்டை போடுறதாவும் சொல்லிச்சு அம்மா…..நாகுட்டச் சொல்லி மாமிதான் அழுதிட்டிருந்தாங்க… அப்டி என்னா சொன்னீக….? தாயார அழ வைக்கலாமா சாமீ….?

எங்கம்மா தொட்டதுக்கெல்லாம் அழத்தான் செய்வாங்க…நாயுடு….நானும் கோபப்பட்டிருப்பேன்தான். இல்லைன்னு மறுக்கல….அதுக்காக அவுகளப் பிடிக்காமப் போயிருச்சின்னு நெனச்சாங்கன்னா…..எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்…அதுக்காகத்தான் மறைமுகமா நா இப்டியெல்லாம் கத்துறேனாம்…சண்டை பிடிக்கிறேனாம்…வெறுத்துப் பேசுறேனாம்…

அப்டீன்னா அதத்தான செய்யணும்…ஊரை விட்டுப் போனா….?

அது ஏன்னு நீங்க அவுங்ககிட்டத்தான் கேட்கணும்….அப்பாவை எதிர்த்து என்னால எதுவும் கேட்க முடியாது…நாங்க சின்னப்புள்ளைலேர்ந்து அவுங்க நேரா நின்னு பேசினதே கிடையாது…தங்கச்சிகளுக்குக் கல்யாணம் முடிச்சித்தான் நான் பண்ணுவேன்னு எத்தினியோ வாட்டி சொல்லியிருக்கேன்…அப்டியும் இப்டி நினைச்சாங்கன்னா…? போகட்டும்னு விட்டிட்டேன்…

வீட்டுச் சாமான்கள் அத்தனையையும் பேக் பண்ணி லாரியில் ஏற்றி சென்னைக்குக் கொண்டு சேர்த்தது இவன்தான். சின்னக் குழந்தைபோல் நானும் வர்றேன் அம்பி என்று கிளம்பி விட்டார் நாயுடு.

பத்துப் பன்னெண்டு மணி நேரம் ஆகும்..நாயுடு…தாங்குவீங்களா? உட்கார்ந்தே வரணுமே….வயசான காலத்துல எதுக்கு ரிஸ்க்கு? லாரிப் பயணம் தேவையா?

என்னா நீங்க நம்மள அப்டி நெனச்சுப்புட்டீங்க…அதல்லாம் வருவேன்…அங்க உங்க அண்ணாச்சி எப்டி வீடு பார்த்திருக்காரு…உங்க அப்பாம்மாவுக்கு சவுரியமா இருக்குதான்னு நான் பார்க்க வேணாமா? வாடகைக்கு இருந்தவுகதானன்னு விட்டிட முடியுமா? நாம அப்டியா இத்தன நாள் இருந்தோம்? – கேட்டுவிட்டு லாரியில் தொற்றிக் கொண்டதும் அங்கு வந்து…சாமீ…நானும் வந்திட்டேன்….என்று ஒங்கிக் குரல் கொடுத்தவாறே வீட்டுக்குள் நுழைந்ததும், அவரும் அப்பாவும் அருகருகில் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியதும் மறக்கக் கூடிய காட்சிகளா?

ராத்திரி வந்ததும்….நான் அப்டிப் படுக்கையப் போடுறேன்…என்று நாயுடு திண்ணைக்கு ஓட…அப்பா அதிர்ந்து போய், என்ன நீங்க? நீங்க நம்ப குடும்பத்துல ஒருத்தராக்கும்னு நான் நெனச்சிண்டிருக்கேன்…வாசல்ல படுக்கறேன்ங்கிறீங்.க…அதெல்லாம் முடியாது…இங்க எங்க கூடத்தான் படுக்கணும்…என்று சொல்லி அருகருகே படுத்துக் கொள்ள…அன்று நாயுடு விட்ட ஜெட் வேகக் குறட்டைச் சத்தத்தில் கூடத்தில் படுத்த ஒருவரும் தூங்கவில்லை என்பது தனிக்கதை. அவர் ஊர் போன பிறகு தங்கைமார்கள் சொல்லிச் சொல்லிச் சிரிக்க…அப்பாவும்..பொறுக்க மாட்டாமல்… …அன்னைக்கு ராத்திரி நானும் பொட்டுக் கூடத் தூங்கலதான்….என்றார்.

கிளம்பும்போதுதான் நாயுடு அப்பா கையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

சாமி வந்திடுவாருல்ல…….? – எத்தனை முக்கியமான கேள்வி.

அப்பாவின் கண்கள் கலங்கி வார்த்தைகள் வர மறுத்தன. “உங்கள மாதிரிப் பிரியம் உள்ளவா இருக்கச்சே…அவன் எங்க போயிடப் போறான்…வந்துருவான்…” என்றார்.

வரட்டும் சாமி…அங்க வந்தாலும் நா வச்சுப் பார்த்திட்டுப் போறேன்…எம் பிள்ளமாதிரி இருந்துட்டுப் போறாரு….உங்களுக்காச்சும் கொஞ்சம் பாரம் குறையுமில்ல…. – அவரின் கைகளை ஏந்தி முகத்தில் பொத்திக் கொண்டார் அப்பா. ஆத்மார்த்தமான அன்பு இதுதானோ என்று தோன்றியது.

காம்பவுன்ட் நுழையும் இடத்தின் இடது புறமிருந்த ஒர்க் ஷாப் திறந்து கிடந்தது. நாயுடு பையன் மாணிக்கம் ஆளைக் காணோம். மூன்று வண்டிகள் வேலைக்காய்க் கழற்றிப் போடப்பட்டிருந்தன. அங்கங்கே நட்டுக்களும், ஸ்குரூகளும், செயின்களும், ஸ்பேனர்களும் இரைந்து கிடந்தன. அழுக்குத் துணிகள் பிசிர் பிசிராய்க் சிதறிக் கிடந்தன. எண்ணெய்க் கசடு விசிறி ஊற்றப்பட்ட பிசு பிசுப்பு அங்கங்கே…!

இப்டிப் போட்டுட்டுப் போனான்னா என்ன பண்றது இவனை….ஒரே சமயத்துல ரெண்டு மூணு வண்டியப் பார்க்கிறேன்னு கிளம்பிடுறான். ஒண்ணு முடிச்சவுடனே இன்னொண்ணைத் தொடுடான்னு ஆயிரம் வாட்டி சொல்லிட்டேன்…கேட்டாத்தானே…! எதுக்கு எத முடிச்சோம்னு தெரியாமப் போயிடும்டா…வேலைக்கு ஆளா வச்சிருக்கே…ஒவ்வொருத்தனை ஒண்ணொண்ணைச் செய்யச் சொல்றதுக்குன்னு சொல்லிப் பார்த்துட்டேன்…அவன் மண்டைல ஏற மாட்டேங்குது….இவனப் பார்க்கைல நம்ம சாமி எம்புட்டோ பரவால்ல போலிருக்கு….சொன்னாக் கேட்டுக்கிடுவாரு…இவன எவனும் அசைச்சிக்க முடியாது…எல்லாம் அவன் இஷ்டந்தான்….

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாச் சரியாயிடும் நாயுடு…புலம்பாதீங்க….என்றான் இவன்.

சாமி அண்ணா ஊர் உலகமெல்லாம் சுற்றி விட்டு ராத்திரி ஒன்றுக்கும் ரெண்டு மணிக்கும் என்று வருகையில் உறங்கிக் கொண்டிருக்கும் அம்மாவையோ, அப்பாவையோ எழுப்பாமல் தன் மனைவியை எழுப்பி அவருக்குச் சாப்பாடு போட்டிருக்கிறார் நாயுடு….படுக்கை கொடுத்துப் படுக்கச் செய்திருக்கிறார்.

புத்தி சரியில்லாத இந்தப் பிள்ளையை வச்சிக்கிட்டு எவ்வளவு வேதனை உங்களுக்கு….அதுல ஒரு பொண்ணை வேறே கல்யாணம் பண்ணி, அதுக்குப் பிறகு இவருக்கு இப்படி ஆகி, அந்தப் பொண்ணு வாழ்க்கையும் போயி….என்னா கொடுமை….? உங்க சங்கடத்துல துளியாச்சும் பங்கெடுத்துக்கிருவோமேன்னுதான்….

சாமி அண்ணா நடு ராத்திரிக்கு மேல் வீடு வந்த விபரத்தை நாயுடு அம்மாவிடம் இப்படிச் சொன்ன போது….உங்களுக்கு ரொம்பக் கடமைப் பட்டிருக்கோம் நாங்க…..தெய்வம் மாதிரி….இத்தனை பேர் குடியிருக்கிற, மேலுக்கும் கீழுக்கும் பத்துப் பன்னெண்டு வீடு இருக்கிற இந்தக் காம்பவுன்ட்ல யாராச்சும் இப்டி ஒருத்தனை வச்சிருக்கிற எங்கள மாதிரி மனுஷாளுக்கு எடம் விடுவாங்களா…குழந்தேள் பயந்துக்கும்…யாரும் சம்மதிக்க மாட்டாங்கன்னு மழுப்பி அனுப்பிடுவாங்கதான்….உங்க மனசு யாருக்கும் வராது…. – அம்மா கண்கலங்கி நின்ற காட்சி மறக்க முடியாதது.

ஏன் அம்பி…எங்க போயிருப்பாரு சாமி….? – பழையபடி அடியப்பிடிறா என்று அவர் ஆரம்பிப்பதாய்த் தோன்றியது கேசவனுக்கு.

என்னன்னு சொல்வீங்க நாயுடு…இருந்திருந்தாப்ல இப்டித்தான் கிளம்பிப் போயிடுவாரு….நாங்க தேடப் போவோம்…ஆரம்பத்துல இப்டித்தான் தொட்டதுக்கெல்லாம் ஓடிட்டிருந்தோம்…அப்புறம் எங்களுக்கும் பழகிடுச்சி…போன மாதிரித் தானே வருவாருன்னு விட்டிட்டோம்…

எப்டி அவருக்கு இப்டி ஆச்சு…அதச் சொல்லுங்களேன்….? ரொம்ப நாளாக் கேட்கணும்னு ஆசை….மாமிட்ட…உங்கப்பாருட்டக் கேட்கத் தயக்கம்…தெரிஞ்சிக்காமயே அவுகளும் ஊரக் காலி பண்ணிட்டுப் போயிட்டாக…இப்ப இருக்கிறது நீங்கதான்…சொல்லுங்களேன்….

நாயுடுக்கு மொத்தப் புராணமும் சொல்லி விடுவது என்று ஆரம்பித்தான் இவன். கேட்கக் கேட்க…சிலையாய் அசையாது இவனையே உறுத்துப் பார்த்தவாறு அவர் அமர்ந்திருந்தது இவனை ஆச்சரியப்படுத்தியது. இந்தக் கதையெல்லாம் எங்களுக்கெதுக்கு என்று ஒதுங்கிப் போனவர்கள்தான் அதிகம். சுற்றமும் நட்பும் கூட அப்படித்தான் விலகியிருந்தன. பால்யகால சிநேகிதம்…கட்டினால் என் பெண்ணை உன் பிள்ளை சாமிநாதனுக்குத்தான் தருவேன் என்று ஒற்றைக் காலில் நின்ற அண்ணியின் தந்தை….மனதுக்குப் பிடிக்காமலேயே நடந்த கல்யாணம் என்பதற்கடையாளமாய் மணக்கோலத்தில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அண்ணி…இப்டிப் பாழுங்கிணற்றில் பிடித்துத் தள்ளுகிறீர்களே என்று கலங்கி நின்ற எதிர்த்தரப்பு உறவுகள்….எது எப்படியானால் என்ன…எனக்கு அழகான மனைவி என்று அகமகிழ்ந்திருந்த சாமிநாதன்….கல்யாணம் பண்ணி ஒரே மாதத்தில் நான் தனிக்குடித்தனம் போகிறேன் என்று கிளம்பி நின்ற வேகம்….போன வேகத்திலேயே திரும்பி வந்த கதையாய்…வாடகைக்குப் பிடித்த வீட்டில் நாண்டு கொண்டு செத்திருந்த பெண்ணின் ஆவி அடித்துவிட்டதென்று புத்தி கலங்கிப் போன அண்ணா….சாமி நாதன் வெறுமையான சாமியாகிப் போன அந்த அவல நாட்கள்….மனைவியும் பிரிந்தால்? .யாருக்குத்தான் மறக்கும்? எப்படி அந்த வேதனையைப் புறந்தள்ள முடியும்?

சரி அம்பி…அவருக்கு எங்கெல்லாம் வைத்தியம் பார்த்தீங்க…? அதக் கொஞ்சம் சொல்லுங்க….என்ற நாயுடுவை பரிதாபத்தோடு நோக்கினான் கேசவன்.

எங்கெல்லாம் பார்க்கலன்னு கேளுங்க நாயுடு…..ஒரு மலையாள வைத்தியரக் கூட்டிட்டு வந்து…மாசக் கணக்குல உக்காத்தி வச்சு….பூஜை புனஸ்காரமெல்லாம் பண்ணி, என்னென்னவோ யாகமெல்லாம் நடத்தி….எதுவுமே எடுபடல நாயுடு….எங்க வீட்டுல இருந்த பண்ட பாத்திரமெல்லாம் அத்தனையும் ஒண்ணொண்ணா வெளில போயி நாங்க ஓட்டாண்டியா நின்னதுதான் மிச்சம்….பார்க்காத வைத்தியம்னு எதுவுமில்லே…இத்தன வயசுக்கு மேலே அவர் இப்படித்தான் இருப்பாருன்னு ஜாதகத்துல இருக்குன்னு கடைசியாச் சொல்றாரு அவுரு…அம்புட்டுச் செலவையும் பண்ணிப்புட்டு…வாழ்க்கைல கஷ்டம்ங்கிறது எல்லாருக்கும் இருக்கும்தான்…ஆனா அதுவே வாழ்க்கையாரதுங்கிறது எங்க வீட்டுலதான்….அத்தனை வறுமை….அவ்வளவு துயரம்…..என் தங்கச்சிக…நானுன்னு ஆளுக்கு ஒரு சின்னச் சின்ன வேலைன்னு வெளில கிளம்பி…ஏதோ கொஞ்சம் மூச்சு விட்டிட்டிருந்தோம்….இப்பத்தான் பெரியண்ணனுக்கு வேலை கிடைச்சு…கொஞ்சம் நிமிர்ந்திருக்கோம்…ஆனாலும் பார்த்து அனுபவிக்க ஒரு கொடுமை கண் முன்னாடி ஆடிட்டிருக்கே…அந்த வினையை என்னன்னு சொல்றது….? நியாயமாப் பார்த்தா இந்த வேதனைலயே எங்கம்மா என்னைக்கோ செத்திருக்கணும்…என்னவோ கடவுள் புண்ணியம்…ஓடிட்டிருக்கு……!

மேல் துண்டை எடுத்து முகத்தோடு பொத்திக் கொண்டிருந்தார் நாயுடு. உள்ளுக்குள் அழுகிறாரோ? விசும்புகிறாரோ? – கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான் கேசவன்.

அடுத்து அவர் ஏதாவது சொன்னால்தான்…இல்லையென்றால் பேசுவதில்லை என்பது அவன் எண்ணமாயிருந்தது.

சரி…அம்பி….நீங்க புறப்படுங்க….உங்கள ரொம்பக் காக்க வச்சிட்டேன்… என்றவாறே எழுந்தார். முகம் உப்பிப் போனது போலிருந்தது. சொந்த வாழ்க்கையில் அதுபோல் நிறையத் துயரங்களைச் சந்தித்திருப்பாரோ, இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு இத்தனை பொறுமையிருக்குமா என்று தோன்றியது.

எல்லாத்துக்கும் கடவுள் இருக்கார் அம்பி….ரொம்பக் கஷ்டப்பட்டோம்னா…அப்புறம் சொகப்படணும்னும் இருக்கும்ல….சக்கரம் சுத்திக்கிட்டேதான இருக்கும்….ஒரே எடத்துல நின்னுடப் போறதில்லையே…? நீங்க கௌம்புங்க….பெறவு சந்திப்போம்…..என்று எழுந்து விடையளித்தார்….

கலங்கிச் சிவந்திருந்த அவரது விழிகளைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தான் இவன்.

வண்டியைக் கிளப்பிய போது…அது எழுப்பிய சத்தத்தைக் கண்டு….ரொம்ப எரைச்சலா இருக்குதே….மாணிக்கத்துக்கிட்டே சர்வீசுக்கு விட்டு வாங்கிக்குங்க….என்றவாறே விடை கொடுத்தார் நாயுடு. தனித்து விடப்பட்டோமோ என்று நினைத்திருந்தவனுக்கு சற்றே ஆறுதல் பிறந்தது.

அவர் சொன்ன பிறகு அந்தச் சத்தம் தாங்க முடியாததாய் உணர, அந்த வீதியே அலறுவது போல் தான் செல்வதை எண்ணியவாறே கடந்து சந்துக்குள் திரும்பி, விடுதியை நெருங்கியபோது….பின்னாலேயே ஓடி வந்தன நாய்கள். மாடிப்படிக்குக் கீழே வண்டியை நிறுத்தி விட்டுப் பூட்டித் திரும்பி, பாக்கெட்டில் தயாராய் வைத்திருந்த பிஸ்கட்டுகளைப் பிரித்து ஒவ்வொன்றாய் வீசினான். பாய்ந்து பாய்ந்து அவை கவ்விக் கொண்டதும், நின்று நிதானமாய் சவைத்ததும்….பார்ப்பதற்கு அனுசரணையாய்த் தோன்றியது கேசவனுக்கு. மனம் சற்று நிதானப்பட்டது.

போ..போ…ஓடு…ஓடு..இனிமே நாளைக்குத்தான்….என்றவாறே மாடிப்படிகளைத் தாவி ஏறியபோது…..கேசு….யாரோ உன் ரூம் வாசல்ல வந்து படுத்திருக்காகய்யா …பதிலே பேசல…யாருன்னு பாருங்க ……என்றவாறே ஆபீஸ் அறைக்குள்ளிருந்து வெளிப்போந்த வார்டனைப் பார்த்தவாறே பதட்டமாய் ஏறினான் இவன்.

கட்டியிருந்த வேட்டியைத் தலையோடு சேர்த்து இழுத்துப் போர்த்தியவாறு ஒரு மூட்டை போல் அறை வாசலில் எலும்புக் கூடாய்ச் சுருண்டு கிடந்தார் சாமிநாதன் என்கிற சாமி…அண்ணா…!!

-------------------------------------------------------

27 ஜனவரி 2017

திருநீர்சாமி–இமையம்–சிறுகதை-உயிர்மை-ஜனவரி2017

இமையத்தின் எந்தவொரு கதையும் சோடை போனதில்லை. அவரின் இந்தத் திருநீர்சாமி...ஜனவரி 2017 மாதத்தில் நான் படித்த பல கதைகளில் மிகச் சிறந்த கதை என்று சொல்வேன். குலசாமியைக் கும்பிடுதல், கொண்டாடுதல் என்கிற பழக்கம் நம் கிராமத்து மக்களின் காலம் காலமான ஒழுக்க நடைமுறை. அந்த நம்பிக்கையை யாராலும் குலைக்க இயலாது. கிராமத்து மக்களின் என்று மட்டுமில்லை. நம் குடும்ப அமைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் என்று ஒன்று உண்டு. அந்த தெய்வத்திற்கு வருடாந்திர வழிபாடும், குலம் தழைக்கவென்று குடும்பத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் அவர்களின் குலதெய்வத்தை முன்னிறுத்தலும், வழிபடுதலும், அதன் மூலம்தான் சந்ததி செழித்தோங்கும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையின்பாற்பட்ட செயல்பாடும் வழி வழியாக வந்த பெரியோர் வகுத்த வழிமுறை. அதில் ஆழமாய் ஊன்றிப்போன அண்ணாமலை தன் குழந்தைகளுக்கு முடி எடுக்கவும், காது குத்தவும் என்று சென்றுதான் ஆக வேண்டும் என்று மனைவியோடு பொருதுவதும், இதுக்காக டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் போகணுமா என்று அவள் வாதிப்பதும்...அதனால் சண்டை மூளுவதும்....ஒவ்வொரு வாக்கியமும்...ஆழமாகவும்...அழுத்தமாகவும் சொல்லப்பட்டு படிக்கும் வாசகனை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்கிறது. தமிழ்நாட்டிலேயே பெண் எடுத்து....குலதெய்வ வழிபாட்டிற்குச் சென்றாக வேண்டும் என்று சொல்லி...அதற்கு அவள் மறுத்து...என்று கதை சொல்லப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு வீரியம் இருந்திருக்காது...இருக்காது என்றுதான் இன்னொரு மாநிலப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதாய்ச் சொல்லி...அதன் மூலம் கிராமத்து நம்பிக்கைகளை அழுத்தமாய் நிலை நிறுத்தியிருக்கிறார் இமையம். தமிழ்நாட்டுப் பெண்ணே அப்படி மறுதலிக்க வாய்ப்பில்லை என்பதும், இதற்காக வெகுதூரம் அலைதல் என்ற கருத்து பொருந்தி வராது என்பதும் உணர்ந்து, டெல்லிப் பெண்ணாய் வகுத்து, அந்த மனைவி மறுதலிப்பதாய்க் கதை சொல்லியிருப்பது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. மனைவியும், அவளின் தாயாரும் ஒத்த கருத்தினராய் நிற்பதும், மனைவியைத் தன் முன்னேயே கைநீட்டியதில் கோபம் கொண்டவளாய் தாயார் மருமகனை இழித்துரைப்பதும், மனைவியி்ன் அண்ணன், அண்ணாமலையிடம் பொறுமையாக விஷயங்களைக் கேட்டு குலசாமியின் மகிமைகளை உணர்ந்து கொள்வதும்.....அவர்களுக்கு எடுத்துச் சொல்ல முயல்வதும், அப்படியும் கடைசிவரை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும்...எப்படியானாலும் என் குழந்தைகளுக்கு முடி இறக்குறதும், காது குத்துறதும் என் குல சாமி முன்னாடிதான் நடக்கும் என்று அண்ணாமலை இறுதிவரை உறுதியாக நிற்பதோடு கதை முடிந்து போகிறது. கதை வெறுமே முடிவதில்லை. படிக்கும் வாசகர்களின் மனதிலும் அவரவர்களின் குலதெய்வ நம்பிக்கைகளை மேலும் உறுதிப்படுத்திவிட்டு நகர்கிறது. தான் சொல்ல நினைத்ததை மனதுக்குள்ளேயே இத்தனை அழுத்தமாய் வடித்துக் கொள்ளவில்லையென்றால் அதை எழுத்தில் கொண்டு வருவது மெத்தக் கடினம். எழுதிக் கொண்டே போவோம்...அது தானாய் ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும், விதி போல இருக்கு.... என்பது போன்றதான வெறும் வாசிப்பு ரசனைக்கான படைப்பல்ல இது.அழுத்தம்...அழுத்தம்...அப்படியொரு அழுத்தம்...திருத்தம்....ஒவ்வொரு வரியும் கடைந்தெடுத்து எழுதியது போன்று. காலத்தால் நிற்பது. அழுந்தி, ஊன்றி, நிமிர்ந்து, தன்னை நிலை நிறுத்திக் கொள்வது. இமையத்தின் இந்தத் திருநீர்சாமி அப்படித்தான் தன்னை ஆழப் பதிய வைத்து விடுகிறது. உயிர்மை ஜனவரி 2017 இதழில் வாசித்த இந்தக் கதை 'the best" for Jan.2017.

Image may contain: 1 person, selfie and closeup

Image may contain: 1 person, closeup

LikeShow more reactions

CommentShare

8Pena Manoharan, எழுத்தாளர் கே ஜி ஜவஹர் and 6 others

2 shares

Comments

Saran Gopi

Saran Gopi Wo

18 ஜனவரி 2017

“கையறு நிலை…!” - சிறுகதை

 

“நீங்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திருக்கலாம்…. –

எதிர்வீட்டில் அவர்கள் வந்து இறங்குவதைப் பார்த்துவிட்டு, சடாரென்று தன்னை மறைத்துக் கொள்வதுபோல் உள்ளே வந்த சந்திரா என்னிடம் சொன்னாள்.

மனசுக்குள் இரக்கம். முகத்தில் தெரிந்தது. நான் அமைதியாயிருந்தேன்.

இப்டியே ரூமுக்குள்ளயே அடைஞ்சிக்கிட்டு புஸ்தகமே படிச்சிட்டிருங்க…..எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்…..என்றாள் மீண்டும்.

என்னைச் சீண்டுகிறாள். நன்றாகவே தெரிகிறது.

கறிக்கு உதவாதுங்கிறதில்லை…..எப்டி உபயோகப்படுத்தறோம்ங்கிறதைப் பொறுத்தது… ஏன்னா இந்த உலகத்துலே எல்லாவிதமான அனுபவங்களும் ஒரு மனுஷனுக்குக் கிடைச்சிடுறதில்லை…வாழ்க்கைல அடிபட்டு, அனுபவப்பட்டு, வாழ்ந்து முடிச்சவங்க எழுதிவச்சிருக்கிறதைப் படிச்சும் நாம புதிய அனுபவங்களைப் பெறலாம்…நம்மை முதிர்ச்சி ஆக்கிக்கலாம்….

அதான் தெரியுதே…ஜாக்கிரதையா உட்கார்ந்திருக்கிறது…..

இப்டி நினைச்சேன்னா உனக்கு அனுபவமில்லைன்னு பொருள்….இது, அதாவது நான் உட்கார்ந்திருக்கிறது, உலக அனுபவம் சார்ந்தது….சமூக நிலை சார்ந்தது…..வேறென்ன செய்யலாம்ங்கிற யோசனைக்குரியது…ஏதாச்சும் செய்ய முடியாதாங்கிற சிந்தனை. அதை வாய்விட்டுச் சொன்னாத்தான் ஆச்சா…?

அதாங்கிறனே, உங்களை மாதிரி கண்ட புஸ்தகத்தையும் படிச்சிட்டுத் திறியறவங்க, தேவைப்படுறப்போ இப்டி, தங்களுக்குப் பாதுகாப்பா வியாக்கியானம் பேசிட்டு, தப்பிச்சிக்கிடுவீங்க…… கன்ஸ்ட்ரக்டிவ்வா எதுவும் செய்ய மாட்டீங்க…..படிக்கிறதெல்லாம் இதுக்குத்தான் உதவுது….அதாவது உங்களை சேஃப்டியா பாதுகாத்துக்கிறதுக்கு…..காரியத்துல இறங்கி உதவினோம்ங்கிறதில்லே….செயல்…செயல்…அது ஒன்றே நமது வெற்றி…அப்டீன்னு நீட்டி முழக்கி வசனம் பேசுவீங்க….தனக்குன்னு வரும்போது யாருக்கும் தெரியாம, அல்லது எதுவும் சம்பந்தமில்லாததுபோல பம்மிக்கிடுவீங்க…அவ்வளவுதான்……!!

இப்போ எதுக்கு நீ இதைச் சொல்றே?…கண்ட புஸ்தகத்தைன்னு சொன்னபாரு…அது தப்பு..அதுக்கு அர்த்தம் வேறே…கண்ட கண்ட புஸ்தகம்னு சொல்லணும்…கண்டது கற்க பண்டிதனாவான்னு பழமொழி கேள்விப்பட்டதில்லை? நான் அந்த ரகம். நான்பாட்டுக்கு தேமேன்னு இருந்திட்டிருக்கேன்….நான் உண்டு என்பாடுண்டுன்னு….வம்புக்கிழுக்கிறமாதிரித் தெரியுதே…? நீயா எதாச்சும் எதிர்மறையா நினைச்சிட்டுப் பேசினா என்ன பண்றது?

வம்புக்கிழுக்கிறதாத்தான் வச்சிக்குங்களேன்…என்ன இப்போ? ஒரு நடை அவங்களோட போயிட்டு வந்திருக்கலாமில்ல….,?

எங்கே?

ம்ம்ம்…..! எங்கேயா? திர்ர்ருவிழாவுக்கு…!! போய் புகார் கொடுக்கிறதுக்குத்தான் சொன்னேன்….

போய் புகார், பொய்ப்புகார் ஆயிடும்…அதான் நீ சொல்லிட்டீல்ல…சாருக்கு வேலையிருக்குன்னு…அப்புறமென்ன?

சொன்னா என்ன? நீங்க விரும்பமாட்டீங்கன்னு அப்டிச் சொன்னேன்…..அதுதான் சாக்குன்னு பிடிச்சுவச்ச பிள்ளையாரா உட்காரணுமா? எல்லாம் ஒரு உதவிதானே…போகக் கூடாதா?

இதென்னடீ வம்பா இருக்கு? நீதான் அவங்க ஃபோன் பண்ணினபோது சாருக்கு வேறே வேலையிருக்குன்னு சொல்லி நிறுத்தினவ…நானா உன்னை அப்படிச் சொல்லச் சொன்னேன்? எங்கிட்ட நீ கேட்டிருக்கணும்ல? .அவங்களும் சரின்னு கிளம்பிப் போயிட்டாங்க…. விஷயம் முடிஞ்சு போச்சு….இப்போ திரும்ப எதுக்கு அடியப் பிடிக்கிறே! விடுவியா? என் தேவை அவசியம்னிருந்தா அவங்க வற்புறுத்திக் கூப்டிருக்க மாட்டாங்களா? அவங்களும் என்னை அத்தனை அவசியமா உணரலேன்னுதானே தெரியுது…? நானெல்லாம் வெறும் ஆளுடீ….!! இவனெல்லாம் ஒரு ஆளான்னு தோணியிருக்கும்…..அதான் கிளம்பிப் போயிட்டாங்க…..!

அதுதானே உங்க சாமர்த்தியம்……

அப்டீன்னா….? புரியல்லே எனக்கு…..

அப்டி வற்புறுத்திக் கூப்பிடாத இடத்துலதானே நீங்க உங்களை வச்சிக்கிறீங்க…? அதைச் சொன்னேன்……

பார்த்தியா? இது குசும்புல்ல…? கூடப் போங்கிறே….போகலைன்னா அது என் சாமர்த்தியம்ங்கிறே…? எதையாவது சொல்லி இப்போ என்னைக் கடுப்பேத்தணும் உனக்கு. குற்றவாளிக் கூண்டுல நிறுத்தணும் …அதானே…? நீயா தனி கேம் ஆடிட்டு இப்போ என்னைச் சொல்றியே…இது சரியா?

பக்கத்துவீட்டு மனோகரன் அவங்க கூடப் போயிட்டு வந்திருக்காரு

போகட்டும்….

அவர் சுமோலயே கூட்டிட்டுப் போய், திரும்பக் கூட்டிட்டு வந்திருக்காரு…..

சரி, இருக்கட்டும்…..

என்ன நொறுக்கட்டும்? உங்களுக்குக் கொஞ்சங்கூடச் சொரணையே கிடையாதா? எதையுமே மேலே போட்டுக்காம, துடைச்சிவிட்ட மாதிரி, இப்டியா எனக்கென்னன்னு இருப்பீங்க….?

இந்த பார்…உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரில…? இதுவரைக்கும் நீ பேசினது சரி…இப்பத்தான் தடம் மாறுற….! இந்த விஷயத்தை நீயும் நானும் கலந்து பேசினோம்…..ரெண்டு பேரும் சேர்ந்துதானே ஒரு முடிவுக்கு வந்தோம்…..இப்போ நீ மட்டும் விலகி நின்னுட்டு, உனக்கு மட்டும்தான் உதவி செய்ற மனசுங்கிறமாதிரி, என்னைக் குத்தம் சொல்றது சரியா? அவுங்களே அலட்டிக்கலே…நீ என்னமோ துள்றியே…? எல்லாம் எனக்குத் தெரியும்…சோலியப் பாத்துட்டுப் பேசாமப் போ…..!!!

பெரும்பாலான வாதங்கள் கடைசியில் இப்படித்தான் முடிந்து போகின்றன. புருஷன் பொண்டாட்டி ராசியோ என்னவோ…?

என் முகத்தைச் சந்திரா கூர்ந்து பார்ப்பது தெரிந்தது. புரிந்திருக்கும்.

என்னவோ பண்ணுங்க….எல்லாம் உங்க இஷ்டந்தானே…யார் சொல்லிக் கேட்கப் போறீங்க? .எனக்கென்ன வந்தது…? –கொல்லைப்புறம் நோக்கிச் சென்று விட்டாள். அவள் லிமிட் அது.

நான் மெல்ல அறையைவிட்டு வெளியே வந்து உறாலின் திரையை உயர்த்தினேன். நேர் எதிர்வீட்டின் திரை தொங்கிக் கொண்டிருந்தது. பரந்த, கனமான திரை. உள் பக்கம் ஒன்றும் தெரியாது. அது எப்போதும் அவர்களின் வழக்கம். அவர்களின் உரிமை அது. சொல்லப்போனால் அவர்களைப் பார்த்துத்தான் நான் கற்றுக் கொண்டேன். வீட்டுக்கு வீடு திரை. மனுஷனுக்கு மனுஷன் திரை. மனசுக்குள்ளேயே திரை. எல்லாரும் ரெண்டு மனிதர்கள் இந்த உலகத்தில். அல்லது ரெண்டு முகங்கள்….!

நாம் மட்டும் திரையைத் தூக்கிவிட்டு, பப்பரப்பா…….என்று ஏன் வீட்டை வெட்ட வெளியாக்க வேண்டும்? வீதியில் செல்பவரின் பார்வை சர்வ சாதாரணமாய் உள்ளே பாய்கிறது. வீடு முழுக்க திறந்து போட்டமாதிரி அப்பட்டமாய்த் தெரிகிறது. காலம் அப்படியா ஒழுங்கு மரியாதையாய், நேர்மையாய்க் கிடக்கிறது? நாலு தரம் பார்த்து, ஐந்தாம் முறை நுழைந்து விட்டால்? எது நடக்கும் என்று யார் கண்டது? எதாச்சும் நடந்தால், சினிமாவைப் போல் பறந்து பறந்தா அடிக்க முடியும்?

அத்தோடு, திரையைத் தூக்கிப்போட்டு, எப்பொழுது பார்த்தாலும் எதிர் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதுபோல் ஆகிறதல்லவா? தற்செயலாய்ப் படும் யதேச்சையான, யதார்த்தமான, வெறும் பார்வைதான் என்றாலும், அவர்கள் பார்வையும் அடிக்கடி மோத சும்மாச் சும்மா என்ன வேவு பார்க்கிற மாதிரி? என்று பரஸ்பரம் நினைக்க வாய்ப்பிருக்கிறதே? குரங்கு மனசுதானே…! என்னவேணா நினைக்கலாமே…!

நான் அப்படியெல்லாம் நினைப்பதில்லை. என்னத்தை நினைச்சு, என்னத்தைக் கட்டிக் கொண்டு போகப் போகிறோம் என்ற எண்ணம் உண்டு எனக்கு. அதென்னவோ அப்படியே வளர்ந்தாயிற்று. இளம் பிராயம் முதல் வளர்ந்த சூழல் அப்படி.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு…இன்றிருப்பார் நாளையில்லை.,நாளை என்பது நமக்கு ஏது? இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்…இப்படி ஏதாவது ஒன்று மனதில் தோன்றித் தோன்றி நின்று நிலைத்தே போனது. எல்லாமும் மாயை…!!!

அவர்களைப்பற்றி எனக்குத் தெரியாதே? அவ்வப்போதைய எதிர் பார்வையில் வெறும் உதட்டோரப் புன்னகையை வைத்து எல்லா நல்லது கெட்டதுகளையும் நிர்ணயம் செய்து விட முடியுமா?

ஒருவரையொருவர் ஓரளவு புரிந்து கொண்டவர்கள்தான் எனினும், கூடப் படித்த பால்ய காலப் பள்ளி நண்பன் மாதிரி அப்படி ஒன்றும் நெருக்கமில்லையே? யார்தான் அவ்வாறு இன்று கூடிக் குலாவிக் கொள்கிறார்கள்? சொந்தச் சகோதரர்களிடமே அது அற்றுப் போய்த்தானே கிடக்கிறது? அதுவாவது காலகாலமாய் பொதுவாய் உள்ள நோய் என்று சொல்லலாம். உறவுகளில் பரவிக் கிடக்கும் தீர்க்க முடியாத வியாதி. இந்தக் குடும்ப அமைப்பில் உள்ள பெண்கள்தான் ஆண்களுக்கிடையேயான அந்த வெப்பத்தைக் குறைக்கிறார்கள்.

வெளி ஆட்களிடம்? இந்த மாதிரியான ஒதுங்கலும், பதுங்கலும் சமீப காலங்களில்தானே அதிகரித்திருக்கிறது? ஒரே தெருவில் பல பிரிவினர்தான் எனினும், இந்த சுயநலம் எங்கிருந்து முளைத்தது? எப்படிக் கிளைத்தது? தாயா பிள்ளையா, மாமன் மச்சானா, அண்ணன் தம்பியா, அக்கா தங்கச்சியா….என்பதெல்லாம் பொய்யாகிப் போனதா? ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கிறதே சரியில்லையேய்யா…!!!

அவரவர் பாடு அவரவருக்கு என்றுதான் இருக்கிறார்கள்? கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஏதேனும் காரியத்துக்கு என்று வந்து ஒட்டிக் கொள்வார்களோ? உதவிக்கு வந்து நின்று விடுவார்களோ என அஞ்சுகிறார்கள்…! அப்படியிருக்கையில் ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் தலையிடுவது என்பது எந்த அளவுக்கு சாத்தியம்? வற்புறுத்திக் கூப்பிட்டால் சரி…! இதுதான் லிமிட் என்று நான் இருந்து கொண்டிருக்கிறேன். நாமாய் நெருங்கிப் போனால்தான் விலகிப் போகிறதே? அதை இப்போது தவறு என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறாள் சந்திரா.

கொல்லைப் புறம் பார்த்தேன். அவளைக் காணவில்லை.

இப்டித்தானே வந்தா, என்னாச்சு? – என்றவாறே சுற்று முற்றும் நோக்கினேன்.

வாசல்பக்கம் பார்வை போனபோது எதிரே அடர்த்தியாய் நின்ற நெட்டுலிங்க மரக் கிளைகளுக்கு நடுவே மனோகரன் வீட்டு வாசலில் சந்திராவும், அவரது மனைவி மல்லிகாவும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிக்கும். எப்படி? கேட்கக் கூடாது. ஏதோவொருவகையில் ஒட்டிக் கொண்டதுதான். ரெண்டு பேரும் வேலை பார்க்கிறவர்கள். எம்பிளாய்டு லேடீஸ்……அதனால் கூட ஒன்றிப் போயிருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் மனசு புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிப் பேசிப் பேசியே நெருங்கியிருக்கலாம். ஒருவரின் தீவிரக் கருத்துக்கு இன்னொருவர் எதிர்வினை புரியாமலிருக்கலாம். அதுவே பிடித்துப்போய், எந்தக் கருத்தானாலும் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கலாம். அம்மாதிரியான வெறும் பரஸ்பர வம்பு தும்பற்ற பகிர்தலே இருவருக்குமிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.ஒருத்தர வச்சு ஒருத்தருக்கு ஆபத்தில்லையே…! பொதுவாக நட்புகளே இன்று அப்படித்தானே கிளைக்கின்றன. இதில் ஏதோ ஒன்று. அவங்க மாநில அரசு ஊழியர். இவ மத்திய அரசு ஊழியர். அவ்வளவுதான். போதுமா?

சரி, இது இப்போதைக்கு ஓயாது…..நாம சாப்பிடுவோம்…..என்று சாதம் குழம்பு, காய் என எல்லாவற்றையும் தரையில் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடக் கிளம்பினேன். சுட்ட அப்பளம் இருக்கிறதா பார்த்துக் கொண்டேன்.சின்ன வயதில் அது மட்டும்தானே கிடைத்தது. இப்பத்தானே இந்தக் காய், கறி எல்லாம். ஒண்ணைச் சொன்னா ஒண்ணு நினைவுக்கு வரத்தான் செய்கிறது. அதுக்குப் பேர்தான் விழுமியங்களோ…?

இருந்து போடுவதெல்லாம் உறவுஸ் ஒய்ஃப்தான். வேலை பார்ப்பவள் என்றால் நாமே எடுத்துப் போட்டுக் கொண்டு, முடியுமானால் அவளுக்கும் போட்டு, எல்லாம் திரும்ப எடுத்து வைத்து, பற்று இட்டுத் துடைத்து, காரியத்தை முடிக்க வேண்டிதான்.

எனக்கு இந்த டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவது என்பதெல்லாம் பிடிப்பதில்லை. நான் கொஞ்சம் பழமையானவன். அழுத்தமான பிடிப்புள்ளவன். தரையில் அமர்ந்து சம்மணமிட்டு உண்டால்தான் எனக்கு உள்ளே இறங்கும்.

இந்தக் காலத்துல டைனிங் டேபிள் இல்லாத வீடு உண்டா? அது வாங்க மனசு வரல்லை உங்களுக்கு…. என்று எத்தனையோ முறை காய்ச்சியிருக்கிறாள் என்னை. நன்றாகக் கவனியுங்கள். அவளும் வேலைபார்த்தாலும், என்னை மீறி ஒன்று வாங்கிப் புழங்கி விட முடியாது. தேவைகளை நீட்டிக்கொண்டே போனால், வளர்ந்துகொண்டேதானே போகும்? முடிவேது? என்ன கட்டுப்பாடு பார்த்தீர்களா? அதுதாங்க குடும்பக் கட்டுப்பாடு…!!! ஆணாதிக்கம்ங்கிறாங்களே…அதுவும்தானோ?

என்னோட பிசினாறித்தனம் அவளுக்கும் கொஞ்சம் இருக்கும்போல…இல்லைன்னாத்தான் வாங்கியாகணும்னு ஒத்தக் கால்ல நின்னிருப்பாளே…!

என்னோட முதல் மாசச் சம்பளத்துலர்ந்து படிப்படியா நம்ப வீட்டை மார்டனைஸ் பண்ணப் போறேன்….முதல்ல ஒரு அழகான டைனிங் டேபிள்…..

ஐ.டி. சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் கூறுகிறார் இவ்வாறு. வேற யாரு? எல்லாம் நான் பெத்த பயதான்….எடுத்த எடுப்பில நாற்பதாயிரம், அம்பதாயிரம் சம்பளம் கொடுத்தா பேச மாட்டானா அவன்? முப்பத்து மூணு வருஷம் சர்வீஸ் போட்டு நான் கடைசியா வாங்கின சம்பளம் முப்பதாயிரம்…இவனுங்களுக்கு ஆரம்பமே இப்டீன்னா…? அவன் எப்படி என்னை மதிப்பான்? வாங்கப் போறேன்னு சுயேட்சையாச் சொல்றதுக்கு அப்புறம் என்ன அர்த்தமாம்?

என்னென்ன நடக்கப் போகுதுன்னு நம்மளாலயே ஒண்ணும் சொல்ல முடிலீங்கோ……

சாப்பிட்டு முடித்து கை கழுவியபோது சந்திரா வந்தாள்.

ஆட்டோல போவமேன்னாங்களாம் அவுங்க….இவர்தான் அசடுமாதிரிப் பெட்ரோலைச் செலவழிச்சிட்டு கார்ல கூட்டிப் போய் வந்திருக்காருன்னு சொல்றாங்க…

இவர் எதுவும் கையெழுத்து காலெழுத்துப் போட்டாராமா? – நான் கவனமாய்க் கேட்டேன்.

அதெல்லாம் தெரியாது…..புகார் எழுதிக் கொடுத்திட்டு வந்திருக்காங்க போலிருக்கு….இவர் கூடப் போயிட்டு வந்திருக்காரு அவ்வளவுதான்….

போலீஸ்ல என்ன சொன்னாங்களாம்….?

என்னத்தைச் சொல்வாங்க…..நீங்க சொன்னதைத்தான் சொல்லியிருக்கான் அவனும்…..

என்னன்னு? – காதைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.

முள்ளுல சேலை விழுந்திடுச்சி…மெதுவாத்தான் எடுக்கணும்னு……

பார்த்தியா….நான் சொன்னது சரியாப் போச்சா? நீ என்னமோ பேசினியே,? அவன் அப்டித்தான் சொல்லுவான்….அதுக்கு வேறே அர்த்தம்…..

என்னது வேறே அர்த்தமா? அப்டீன்னா…?

அப்டீன்னா…அப்டித்தான்…….

புரியறமாதிரிச் சொல்லுங்க…..உங்க பாஷையெல்லாம் எனக்குத் தெரியாது…

அடி இவளே…..அப்டீன்னா…….. போயிட்டு வாங்க….பார்ப்போம்னு அர்த்தம்…..அதை வெளிப்படையாவா சொல்லுவான்….நாமதான் புரிஞ்சிக்கணும்…..?

என்ன சொல்றீங்க…சுத்த அநியாயமா இருக்கு…..ஒருத்தர் வந்து புகார் கொடுத்தா, ஸ்பாட்டுக்கு வந்து பார்த்து என்ன ஏதுன்னு விசாரிக்க வேண்டாமா? ஜனங்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை காவலும், நீதியும்தானே?

இதுக்கு வர மாட்டாண்டீ…..வந்தா அவன் மாட்டிக்குவான்…..வீட்டுக்கு வந்து டார்ச்சர் கொடுத்தாங்கன்னு குடியிருக்கிறவன் கேசு போட்டான்னா அவனைப் பாதிக்கும் அது…..

அதுக்காக….? அப்புறம் இவனை எப்படித்தான் விசாரிக்கிறதாம்,? வெளியேத்தறதாம்?

அப்டிக் கேளு……ஃபோன் நம்பர் வாங்கி வச்சிட்டிருப்பான்ல…அதுல விரட்டுவான்…….அவ்வளவுதான்…..அதுதான் போலீஸ் ஆக் ஷன்……ஃபைவ் உறன்ட்ரட்….

கேட்கலைன்னா…..?

கேட்கலைன்னா கேட்கலைதான்…..அவனாக் காலி பண்ற போதுதான்….வாடகைச் சட்டம், குடியிருக்கிறவனுக்குத்தாண்டீ சாதகமாயிருக்கு…..

நாலு ஆளைக் கூட்டியாந்து சாமான்களையெல்லாம் எடுத்து வெளில வீசிப்புட்டு, வீட்டு ஆளுகளையும் வெளியேத்தி, பூட்டி சாவியைத் தூக்க எவ்வளவு நேரம் ஆகும்?

என்னடீ இப்டியெல்லாம் பேசறே? யார் சொல்லிக் கொடுத்தா உனக்கு இதெல்லாம்….வேலை பார்க்கிற இடத்துல கத்துக்கிட்டியா?

நாலு பேர் சொல்றதில்லையா? அது கிடக்கட்டும்.பதில் சொல்லுங்க….அப்டிச் செய்தா என்னாகும்?

ஒண்ணும் ஆகாது….கலகம் வெடிக்கும்…. அதல்லாம் பாபுராவ் மாதிரி ஆளுங்களுக்கு லாயக்கில்லை. அதுக்கு ரொம்ப தைரியம் வேணும்…பிரச்னை வெடிச்சா சரிக்கட்டுற திறமை வேணும்….…யாரும் செய்ய மாட்டாங்க… பாபுராவுனால எதுவும் முடியாதுன்னு தெரிஞ்சிதானே குடி வந்திருக்கான் அந்தாளு… நாப்பது, அம்பது வாங்காம நகர மாட்டாண்டீ…..

என்னங்க சொல்றீங்க…? – அதிர்ச்சியடைந்தவளாய்ப் பதறினாள் சந்திரா.

நீ ஏண்டீ பதர்றே? அதுதான் உண்மை…..இதுக்கு ரெண்டே வழி…அதத்தான் நான் அந்தம்மாகிட்டச் சொன்னேன்…..

என்னன்னு?

என்ன நொன்னண்ணு? முதல்ல வந்து நம்மகிட்டதான சொன்னாங்க…அப்ப சொல்லலை? நீயுந்தானே பக்கத்துல இருந்தே? என்ன கவனிச்சே?

சரியாக் கேட்கலை…திரும்பத்தான் சொல்லுங்களேன்…..

பேசாம ஒரு வக்கீலைப் புடிச்சி கோர்ட்ல கேசைப் போட்டுட்டு கம்முனு உட்கார்ந்துக்கணும்….அது எப்படியும் ஒரு வருஷம் ஆயிப் போகும்…. இது ஒரு வழி…இன்னொண்ணு….குடியிருக்கிற அந்த ஆளையே புடிச்சி, உட்கார்த்தி வச்சுப் பேசி….சமாதானம் பண்ணியோ..கெஞ்சியோ…எதோஒண்ணு செஞ்சு, அவனுக்கு ஒரு தொகையைக் கொடுத்து குடும்பத்தையும், சாமான்களையும் வெளியேத்தி, வீட்டைப் பூட்டி சாவியைக் கைப்பத்தணும்….

என்ன சொல்றீங்க…நீங்க…? அவனே ரெண்டு மாச வாடகை தர்லயாமே…? அட்வான்சுல கழிச்சாச்சுங்கிறாங்க….?

என்ன ஆதாரம்? அட்வான்சு வாங்கினதுக்கு எழுதிக் கொடுத்திருக்காங்களா? வெறுமே எழுதிக் கொடுத்திருக்காங்கன்னே வச்சிக்குவோம்….மாதா மாதம் வாடகைக்கு ரசீது கொடுத்திருப்பாங்களா? யார்தான் செய்றாங்க?….அதுதானே அங்க வீக்னஸே…? நல்லபடியா ஓடுற மட்டும் ஒண்ணுமில்லே…பிரச்னைன்னு வந்திட்டா…சிக்கல்தான்….!! இந்த மாச வாடகைவரை கொடுத்துட்டேம்பான்…துணிஞ்சு சொல்லுவான்..எனக்கு அட்வான்சைத் திருப்பித்தாங்கன்னு டிமான்ட் பண்ணுவான்…கோர்ட் கேசுல இதெல்லாம் அவனுக்குத்தான் சாதகம்… இந்த டாக்குமென்ட்டெல்லாம் சரியா இருந்தாத்தான் வீட்டுச் சொந்தக்காரனே ஜெயிக்க முடியுமாக்கும்….இத்தனை வில்லங்கம் இருக்கு இதுல….நீ என்னடான்னா கூடப் போகல….தேடப் போகலைங்கிற……நான் ஒண்ணு கேட்கிறேன்…தப்பா நினைக்கப் படாது…..சொல்லட்டுமா….?

சொல்லுங்க…?

வீட்டை வாடகைக்கு விடுற போது நம்மளக் கேட்டுட்டா விட்டாங்க….? இப்டியும் ஒரு கேள்வி வருதில்ல? என்னமோ பேசுறீயே….?

இது ரொம்ப அநியாயங்க? நீங்களா இருந்தா அப்டி செய்வீங்களா? நம்ப வீட்டை வாடகைக்கு விட நாம யார்ட்டக் கேட்கணும்? நல்லாயிருக்கு கதை?

நான் கேட்கலைடி…எனக்கு இதுக்கெல்லாம் வாய் வராது. சவரணையாப் பேசத் தெரியணும்…அதுக்கு ஒரு சாமர்த்தியம் வேணும் மனுஷனுக்கு. அதனாலதான் வாடகைக்கே வேண்டாம்னுட்டு, சைடு போர்ஷன்ல கதவை எடுத்துட்டு சுவர் எழுப்பி அடைச்சிட்டேன்….நம்ப சக்தி அவ்வளவுதான்…ரொம்ப நெருக்கினா போலீசே இதத்தான் கேட்பான்…போய்ச் சோலியப்பாரும்பான்….

ஏங்க, என்னங்க சொல்றீங்க…? போலீஸ் ஸ்டேஷன்லயும் இதத்தான் கேட்டானாம்ங்க…..? – வாயடைத்துப் போய், ஆவென்று திறந்தமேனிக்கு, என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரா. இவனென்ன அப்படியே சொல்கிறான் என்று நினைத்திருக்கலாம்.

உலக அனுபவத்த புத்தகங்களும் நிறையக் கத்துக் கொடுக்குதுல்ல…!!! புத்தகப் புழுன்னு ஏளனமாப் பேசுறாளே…சரியா?

வாய்க்குள்ள ஈ போயிடப் போகுது…மூடு….என்றேன்.

இதப் பொது விஷயமாக் கொண்டு போக முடியாதா? நம்ப சங்கத்துல சொல்லி ஏதாச்சும் செய்தா என்ன?

அதெல்லாம் முடியாது….விஷயம் பொதுவாகணும்னா அவன் ஏதாச்சும் கலாட்டா கிலாட்டா பண்ணனும்…தெருவுல இறங்கிக் கண்டமேனிக்குக் கத்தறது, கெட்ட வார்த்தை பேசுறது, கல்லை விட்டு எறியறது, க்ளாஸ் உடைக்கிறது…..இப்டி…பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தணும்..அதுக்கு, தெரு சாட்சியா நிக்கணும்… குடியிருப்புப் பகுதில நியூசன்ஸ்னு சொல்லி புக் பண்ணிப்புடலாம். அவன்தான் பூனை மாதிரி வர்றான், போறானே…? சகலமும் அறிஞ்சவன் போலிருக்கு…பெரிய ஞானிதான்….நல்ல பொழப்பு….

அதத்தான் அந்தம்மா செய்யச் சொல்றாங்க……!

அதெப்படீடி முடியும்…? எப்டியாவது அவனைக் காலி பண்ண வைக்கணும்ங்கிற ஆதங்கத்துல அப்டிச் சொல்றாங்க… அவங்க நம்ம இடத்துல இருந்தா செய்வாங்களா? யோசிக்கணும்ல….அப்டியெல்லாம் தடாலடியா யாரும் இறங்கிட முடியாது…..

பாவந்தான்…இல்லே…!!! - சந்திராவின் முகம் சூம்பிப் போயிருந்தது.

எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தது.

எதிர் வீட்டில், மாடியில் குடி வந்திருந்த அந்த ஆள் படு சமத்தாகப் படியிறங்கி, நல்ல பிள்ளையாய், பதவாகமாய் ரோட்டுக்கு வந்து, வெளியே நிறுத்தியிருந்த தன் டூ வீலரை எடுத்துக் கொண்டு சாவகாசமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனுக்கும் நிறைய வேலையிருக்குதான்….!!! உலகம் எல்லோருக்குமாய்த்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படித்தான் எந்த அதிர்ச்சியும் இல்லாமல், எந்தச் சலனமும் இல்லாமல், தானாக் கனிஞ்சு வரட்டும் என்று, தினசரி காரியார்த்தமாய் அவன் போய் வந்து கொண்டிருக்கிறான். அந்த வீட்டில் பெண்மணிகளும் இருக்கிறார்கள், அவனுக்கு உகப்பாய் இருக்கும் இடம் தெரியாமல்..

சத்தியமாய்ச் சொல்கிறேன். அந்தக் குடியிருப்புக்காரன் இன்றுவரை என்னை ஒரு முறை கூடத் தலை நிமிர்ந்து பார்த்ததில்லை. அம்புட்டு மரியாதையோ என்னவோ…! அத்தனை பணிவு, அடக்கம். அவன் மூஞ்சியும்கூட எனக்குத் தெரியாது…நிமிர்ந்தால்தானே…?

நான் மாட்டியிருந்தாலும் அம்பேல்தான்…! கதை கந்தல்தான். அவனின் இருப்பில் எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது இதுதான்…!!

அடக்கம் அமரருள் உய்க்கும் …எங்கும் பயன்படுத்தலாம். அடேயப்பா…! அது இதுதானோ…!!

பாவம், பாபுராவும் அவர் மனைவி பத்மாவதியும்…,

நாம ஏன் அவனுக்குத் துட்டுக் குடுக்கணும்? எவன் காசை எவனுக்கு வாரி விடறது? நல்லாயிருக்கே கதை…அந்த இன்ஸ்பெக்டர்ட்ட நான் எல்லாம் சொல்லியிருக்கேன்….நல்ல மனுஷனாத்தான் தெரியறார்…எல்லாம் பொறுமையாக் கேட்டுக்கிறார்…நிச்சயம் ஏதாவது செய்வார்….நான் இவனை வெளியேத்தறேனா இல்லையா பாருங்க…?..பத்மாவதியின் பக்காவான வார்த்தைகள் இவை. பெண்மையின் உறுதி பல இடங்களில் வென்றிருக்கிறதையா…!

அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருக்கும், எனக்கும், பாதிக்காத ஏதாச்சும் வேறு நல்வழியுண்டா உதவ? இதுதான் என் வேண்டுகோள்…! யாராச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்….!! மனசு கிடந்து அரிக்கிறதைய்யா…!!!

---------------------------------

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...