13 நவம்பர் 2024

 

சிறுகதை               “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை





            வித்யாபதி அந்தத் தெருவழியே நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் அவனைத் தற்செயலாகப்  பார்த்தார். தலை குனிந்தமேனிக்கே நடப்பதுதான் அவரது இயல்பு. அந்த இடத்தில் அவர் தலை எதேச்சையாக நிமிர்ந்தது எதிரே வந்த ஒரு நாயிடமிருந்து விலக வேண்டும் என்றே. வாயில் எச்சில் வழிய வழிய இழைப்போடு வந்த அது வெறி நாயோ என்கிற சந்தேகம் சட்டென்று எழ, ஒரு பயம் இவரைப் பற்றிக் கொண்டது…அந்தக் கணமே அவனும் கண்ணில் பட கவனம் சிதறித்தான் போனது. அந்த இடத்தில் அவன் குறுக்கே வந்தது ஒருவகையில் நாயிடமிருந்து அவர் விலகிச் செல்ல ஏதுவாயிருந்தது.

            அவனும் இவரை ஒரு முறை பார்க்கத்தான் செய்தான். அவனுக்கு இவரைத் தெரியும். இவருக்கும் அவனைத் தெரியும். ஆனால் ஒரு முறை கூட ஒரு வார்த்தை பேசிக் கொண்டதில்லை. பேசுவதென்ன…ஒரு சிறு புன்னகை கூடச் செய்து கொண்டதில்லை. அவனிடம் என்ன புன்னகை வேண்டிக்கிடக்கிறது?  அதற்கான அவசியமுமில்லை. அது அவருக்குப் பிடிக்கவும் இல்லை.  பிடித்திருந்தால்தான் முன்பே நட்பு பாராட்டியிருப்பாரே? ஆனால் அவனைக் கண்ட அந்தக் கணம் அவர் முகம் கொஞ்சம் சுருங்கத்தான் செய்தது. அது தன்னியக்கமாக நிகழ்ந்த ஒன்று. தவிர்க்க முடியாதது. ஆழ்மன அவச வெளிப்பாடு.

            அதே சமயம் அவருக்கு இன்னொன்றும் தோன்றியது. இவன் எப்படி இங்கே வீட்டைப் பிடித்தான்? வாடகைக்கு விட்டவர்களுக்கு இவன் முன் கதை தெரியாதோ? அடுத்தடுத்த தெருவில் இருந்துமா தகவல் தெரியாமல் போயிற்று? -இரண்டு மூன்று கேள்விகள் அவர் மனதில் சட்டுச் சட்டென்று ஓடின. அதற்குள் அங்கே வீடு பிடித்துக் குடியேறி விட்டானே? நடந்த நிகழ்வுக்கு அந்தப் பகுதியையே விட்டல்லவா அவன் ஓடியிருக்க வேண்டும்? என்ன தைரியம்?

            தகவல் எப்படித் தெரியும்? அடுத்தடுத்த வீடுகளில் இருப்பவர்களுக்கே தெரிவதில்லையே…அப்புறம் எப்படி அடுத்த தெருவைப் பற்றி நினைப்பது?பாவம் எந்த அப்பாவிகளோ…!

            இது எதற்கு வேண்டாத சிந்தனை? எவன் எப்படிப் போனாலென்ன… நமக்கென்ன வந்தது?  -மனசு உதறியது.

            வன் விலகி எப்பொழுதும்போல் நடந்து கொண்டிருந்தான். அதாவது அவர் முன்பு அவனை எப்படிப் பார்த்துப் பழகியிருந்தாரோ அதே பாணியில் தொடர்ந்தது அவன் நடை. எந்தப் பதட்டமுமோ, பரபரப்போ அவனிடம் இல்லை.

கல்லுளி மங்கன் என்று இதற்குப் பெயர் சொல்லலாமா?  தோன்றியது வித்யாபதிக்கு. அவன் இயல்பே அப்படித்தானா அல்லது அப்படி இருப்பதற்குத் தன்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறானா? அநியாய அமைதியாக இருப்பது கூட ஒருவகை அதிகாரத்தின் அடையாளமோ? அல்லது நடத்தையை மறைப்பதற்கான வேஷமா? அல்லது எதிராளியைப் பயப்படுத்தும் தந்திரமா?

அந்த எதிர் வீட்டிலும் இப்படித்தான் மாடிப்படி இறங்கி வந்து வெளியேறுவான் அவன். பெயரைக் கூட இன்றுவரை கேட்டுக் கொண்டதில்லை. அதாவது தெரிந்து கொள்ளவில்லை. ஆர்வமுமில்லை. உங்க பேரென்ன? என்று அவனிடமா எதிரே சென்று கேட்க முடியும்? மாடியை அவனுக்கு வாடகைக்கு விட்ட அந்தக் கீழ் வீட்டுக் குடும்பத்திற்குச்  சொல்லியிருந்தால் சரி. அல்லது அகஸ்மாத்தாக அவன் பெயர் இவர் காதில் விழுந்திருந்தால் சரி.   எதுவுமில்லையே? ஒருவேளை அந்த வீட்டுச் சொந்தக்காரர்களுக்கே அவன் பெயர் தெரியுமோ என்னவோ? இப்படி இரும்புத் துண்டை முழுங்கியவன் போல் இறுக்கமாய் நின்றால்? பாவம்தான் அவர்கள். பயந்து பயந்தல்லவா இருந்தார்கள். நல்லவர்களால் பயப்பட மட்டும்தான் முடியும் போலிருக்கிறது. அந்த பயத்தினால் விழையும் நஷ்டங்களையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். சகித்து முழுங்குகிறார்கள்.

அடிக்கடி கீழேயிருந்தமேனிக்கே மாடியிலிருக்கும் அவனிடம் அவர்கள் ஏதோ கேட்பதும் அவனும் சளைக்காமல் சத்தமாய் பதில் சொல்வதுமாய் தெளிவின்றிக் காதில் விழுந்திருக்கின்றன. உருவ அமைதி இல்லாத  சப்தங்கள். வெற்றுக் கூச்சல்கள்.

வாசல் மணி ஓசை கேட்டது. யாரென்று எட்டிப் பார்த்தார் வித்யாபதி.  நாலைந்து  வீடு தள்ளிக் குடியிருக்கும் மாசிலாமணி நின்று கொண்டிருந்தார்.

வாங்க…வாங்க…என்று சொல்லிக்கொண்டே போய்க் கேட்டைத் திறந்தார். என்னாச்சு…புக்ஸ் வேணுமா? வேணுங்கிறத எடுத்துட்டுப் போங்க.உள்ளே வாங்க….என்றார்.

அதுக்கு வரலை…வேறொரு விஷயம்….வெளி கேட் வரைக்கும் பூட்டி வச்சிர்றது போல்ருக்கு….என்றார் அவர் சகஜமாக.

ஆமா சார்….கேட்டைத் திறந்துட்டு திண்ணை வரைக்கும் வந்து நின்னு பாட்டுப் பாட ஆரம்பிச்சிடுறாங்க…அதென்னவோ தெரில இந்த ஏரியாவுக்குன்னு வகை வகையாய்ப்  பிச்சைக்காரங்க இருக்காங்க…வெவ்வேறே ரூபத்துல…குடு குடுப்பை…சாமி வேஷம், …மாரியாத்தா…காளியாத்தா….கூழு ஊத்தறோம்…ஏன் பூம் பூம் மாட்டுக்காரன் கூடத் தயங்கறதில்ல….மாட்டோடக் கயித்தைப் பிடிச்சமேனிக்கு அவனும் உள்ளே வந்து நின்னுடுறான்…அது அங்கிருந்தமேனிக்கே இவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுது…..நம்ம வீட்டு வாசல் மட்டும் தணிவா…ரோட்டோட ரோடா இருக்குதுங்களா…சட்டுன்னு வசதியா நுழைஞ்சிடுறாங்க…அதோட மட்டுமில்ல…அரணை, ஓணானெல்லாம் கூட சமயங்கள்ல புகுந்திடுதுன்னா பார்த்துக்குங்களேன்….அதனால்தான் கதவுக்கடில கேப் இல்லாம இருக்க ஒரு கட்டையைக் குடுத்து அடைச்சிருக்கேன்…விஷ ஜந்துக்கள் உள்ளே வந்துடக் கூடாதுல்ல….!

நல்லதுதான்…பாம்பு கீம்பு நுழைஞ்சிடுச்சின்னா…? இன்னும் அப்பப்போ ஒண்ணு ரெண்டு கண்ணுல படத்தானே செய்யுது…பக்கத்துல சீண்ட்ரம் இருந்தாலே வந்து அடையத்தாங்க செய்யும்….ஏதாச்சும் ஒரு கட்டடம் கட்டிட்டுத்தானே இருக்காங்க இந்தத் தெருவுல…செங்கலு, மணல், ஜல்லின்னு கொண்டு கொட்டிட்டுத்தான இருக்காங்க…போதாக்குறைக்கு பழச இடிச்ச கப்பிக வேறே மலையாக் கெடக்குது….அடையத்தான செய்யும்….ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுதான்…ஆனா ஒண்ணு பாருங்க…உங்க எதிர்த்த வீட்டுக்காரங்கள நினைக்கிறபோது பாவமால்ல இருக்குது….சற்றுத் தணிந்த குரலில் சொல்லிக் கொண்டே நுழைந்தார்.

எதையோ கொண்டு வந்து எதிலோ நுழைப்பது போலிருந்தது அவர் பேச்சு.  நிறையத் தயார் நிலையில் வந்திருப்பதாய்த் தோன்றியது.

உள்ளே வாங்க…ரூம்ல உட்கார்ந்து பேசுவோம்…– சொல்லியவாறே அவரை அறைக்குள் அழைத்தார் வித்யாபதி.  எதைச் சொல்ல வருகிறார் என்பது லேசாக இவருக்குப் புரிந்தது.

தெரியுமா சேதி உங்களுக்கு? – என்றார் எடுத்த எடுப்பில் மொட்டையாக.

எதச் சொல்றீங்க…என்றவாறே வித்யா…சார் வந்திருக்கார்…காஃபி கொண்டா…என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார். வேறேதாவது…..என்றவாறே ஒரு தட்டில் ரெண்டு பிஸ்கட்டும்…முறுக்குமாக  வந்து வைத்தாள் வித்யா.

எதுக்குங்க…இப்பத்தானே காலை டிபன் சாப்டிட்டு வர்றேன்…காபி மட்டும் கொடுங்க போதும்…என்றார் மாசில். காபியின் மீதான ப்ரீதி அவர் முகத்தில் தெரிந்தது. உங்க வீட்டுக் காபிக்கு ஈடே இல்லைங்க…-எத்தனை பக்குவமாக் கலக்கறாங்க… - வித்யாவுக்கு உச்சி குளிர்ந்து போகும்.

இருக்கட்டும்…எடுத்துக்குங்க… - என்று கொண்டு வந்ததை எதிர் டீபாயில் வைத்து விட்டுப் போனாள் வித்யா.

ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கடித்தவாறே ஆரம்பித்தார் மாசிலாமணி. விண்டு சாப்பிடக்கூடாதா என்று தோன்றியது வித்யாபதிக்கு. பிஸ்கட், முறுக்கு, வடை இப்படியான பண்டங்களைக் கடித்து சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சொல்லவா முடியும்? அவரவர் பழக்கம்…..

அந்தாளு….ஆறு மாசமா  வாடகையே கொடுக்கலையாம்..அட்வான்சைக் கழிச்சது போக அப்டியே ஆள் வெளியேறினாப் போதும்னு விட்டுட்டாங்களாம்…போக மாட்டேன்…இருபதாயிரம் பகடி கொடுத்தாத்தான்  வெளியேறுவேன்னு அடம் பிடிச்சிருக்கான்…என்னா தைரியம் பார்த்தீங்களா? -என்றவாறே முறுக்கை நறுக்கென்று கடித்தார் மாசிலாமணி. கடித்த வேகத்தில் அது சிதறியது. அய்யய்ய…என்றவாறே சிதறியவற்றைப் பொறுக்கத் தலைப்பட்டார்.

அதச் சாப்பிட வேணாம்…இந்தக் குப்பைக் கூடைல போட்டுடுங்க…என்றார் வித்யாபதி. தொடர்ந்து சொன்னார்…

என் ஆபீஸ் மேட் ஒருத்தர்…அவர் வீட்டு சைடு போர்ஷன்..பத்துக்குப் பத்து அளவு… ரோட்டப் பார்த்து இருந்ததை ஒரு தையற்காரனுக்கு வாடகைக்கு விட்டார்.  வருஷக் கணக்கா வாடகையே உசத்தாமல் இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டார்.  எனக்குத் தெரிய பத்து வருஷத்துக்கும் மேல இருக்கும்னு வைங்களேன்…இப்போ அவருக்கு வீடு பத்தல….பையன் படிக்க ஒரு தனி அறை வேணும்னு கேட்கறான்…உள் சுவத்தை இடிச்சிட்டு வெளில அடைச்சுப் பூசி அதை வீட்டுக்குள்ளயே  அறையாக்கிடலாம்னு ஐடியா…காலி பண்ணுடான்னா மாட்டேங்கிறானாம்.  

பார்த்தீங்களா? காலம் எப்படிக் கெட்டுப் போச்சுன்னு? எவனுக்கும் இரக்கப்படக் கூடாது. இரக்கம் என்னத்த? வாடகைக்கே விடுறதுக்கு லாயக்கில்லே…நாமளே அனுபவிப்போம்னு வச்சிக்க வேண்டிதான்…இல்லன்னா வெறுமே கெடந்துட்டுப் போகுதுன்னு விட வேண்டிதான்…அப்பத்தான் தப்பிச்சோம்…-தன் கருத்தை அழுத்தமாக முன் வைத்தார் மாசிலாமணி.

அவருக்கு அவர் இருக்கும் வீடு ஒன்றுதான். அதனால் வேறு கவலையில்லை. இனிமேல் வலிய ஏதேனும் அவரே வரவழைத்துக் கொண்டால்தான் ஆயிற்று. அப்படி  இப்படி ஆசை இருந்தால்தானே? இருப்பது போதும் என்ற மனம் கொண்டவர். வீடு கட்டிக் குடி வந்து இருபது வருஷம் ஆன வீட்டை அவ்வப்போது பராமரிப்பு செய்து…சிவனே என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆசைகளே துன்பத்திற்குக் காரணம். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி என்று தன்னையும் அரசுத் தொழிலாளிதானே என்று நினைத்து திருப்திப் பட்டுக் கொள்வார். எளிமையா வாழ்றது மாதிரி ஒரு சுகம் எதிலயும் இல்லீங்க…என்பார். எங்கப்பா ரெண்டு சட்டை, வேட்டிதான் வச்சிருந்தாரு…என்று ஆரம்பித்தாரானால் கதை கோமணத்துணி மாதிரி நீண்டு போகும். ஏற்கனவே சொல்லியதைப் புதிதாய்ச் சொல்வதுபோல் ஆரம்பித்தலும் நீட்டலும், மழித்தலும் தாங்காது மனுஷனுக்கு.

 வித்யாபதி தொடர்ந்தார்.

ஏரியா கவுன்சிலரைக் கூட்டியாந்து சொல்ல வச்சிருக்காரு…அவன் அதுக்கெல்லாம் பயப்படுற ஆளா என்ன? முதல்ல இருபது கேட்டவன் இப்போ முப்பதுங்கிறானாம். தந்தா கம்னு போயிடுறேன். இல்லன்னா ஆளக் கூட்டியாறேங்கிறானாம். அந்தக் கவுன்சிலருக்குப் பங்கு கொடுக்க….என் நண்பர் எங்க டிபார்ட்மென்ட்ல அசோசியேஷன் தலைவர். தொகுதி எம்.எல்.ஏட்டப் போய்ச் சொல்ல…அவர்தான் கவுன்சிலரை அனுப்பிச்சதாம். காசு எப்டிப் பரவலா சுத்துது பார்த்தீங்களா?

இப்டித்தாங்க அடாவடியாப் பிழைக்கிறாங்க இன்னிக்கு. நல்லதுக்கே காலமில்லே….சாதாரண மக்கள் வாழ்றதையே கடினமாக்கிட்டாங்க…-அங்கலாய்த்துக் கொண்டார் மாசிலாமணி.

எல்லா விஷயத்துலயும் குறுக்கு வழி எதுன்னு யோசிச்சு…அதையே நடைமுறை ஆக்கிட்டாங்க…ஆனாலும் இவுங்க ரொம்பப் பாவமுங்க…போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு சொன்னாங்க எங்கிட்ட வந்து…அதுவரைக்கும் எதுக்குமே அவுங்க  வந்ததில்ல…பரிதாபமா இருந்திச்சு…சரின்னு போனேன்….கார்ல போய் இறங்கினாத்தான் மதிப்பா இருக்கும்…புகாரையாவது வாங்குவாங்கன்னு பக்கத்து வீட்டுக்காரரையும் கூப்டுக்கிட்டாங்க…அவர்தான் தன் காரை எடுத்தாந்தார்..வெறுமே கூடப் போறதுக்கு என்ன வந்தது? நானும் போனேன்னு வச்சிக்குங்க….ஆனா கதையாகல…! மனு வாங்கினதோட சரி…அதையும் வச்சிருக்காங்களோ இல்ல கிழிச்சிப் போட்டாங்களோ…? ஒரு போலீசும் எட்டிக்கூடப் பார்க்கலே…! போன்லயாவது மிரட்டிச் சொல்லலாம்தானே? அதுவுமில்லே….

அப்புறம் எப்டிக் காலி பண்ணினானாம்? அது விஷயம் தெரியாதா உங்களுக்கு? என்று வியப்போடு கேட்டார் மாசிலாமணி. சொல்வதற்கு மிகவும் ஆர்வமாய் இருப்பதாய்த் தோன்றியது.

எனக்குத் தெரியாதுங்க…காலி பண்ணிட்டான்னு தெரியும். ஒருநா கூடப் போனதோடு சரி. அப்புறம் அவுங்க எதுவும் சொல்லலை என்கிட்டே….! நானும் கண்டுக்கலை….அபூர்வமாத்தான் பேசுவாங்க…இருக்கிற எடமே தெரியாது.

நம்ப காலனி அசோசியேஷன் ரெப்ரசென்டேடிவ் இருக்காருல்ல….அவர்ட்டச் சொல்லி ராவோடு ராவா அடாவடியாத் தூக்கிப் போட்டதுதான்….அதுக்கு இவுங்க எப்படிச் சம்மதிச்சாங்கங்கிறதுதான் அதிசயம். ஆச்சரியம்.  பாவம்….மேற்கொண்டு எதுவும் அவுங்களுக்குச் சங்கடம் வராம இருக்கணும்…யாரைத் தொடுறோம்ங்கிறது முக்கியமில்லியா? அது தெரிஞ்சிதான் செய்தாங்களா தெரில…

என்ன சொல்றீங்க நீங்க….போன சனிக்கிழமை வரை நான்தான்   ஊர்ல இல்லையே….ஒரு கல்யாணத்துக்குக் கும்பகோணம் போயிட்டனே……அப்ப நடந்ததா இது…!

ஆமாங்க….உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னுல்ல நினைச்சேன்….மழை பேய்ஞ்சு ஓய்ஞ்ச பிறகு வந்திருக்கீங்க…. ….நம்ப ஏரியா கட்டட வாட்ச்மேன் இருக்கான்லங்க…திருப்பாப்புலி….அவன்ட்டச் சொல்லியிருக்காங்க போல….அவன் ஆளுகளோட வந்து…  ஒரே ராத்திரி…. சாமான் செட்டையெல்லாம் அள்ளி வெளில  தூக்கி எறிஞ்சு, ஆளைத் தர தரன்னு வாசல்ல இழுத்துப் போட்டு, பொம்பளையாளுகளைத் தடாலடியாக் கிளப்பி, கதவைப் பூட்டி, சாவியைக் கொடுத்துட்டுப் போயிட்டானாம்…! நானே ஏரியா  ரௌடி…எங்கிட்டக் காட்டுறியா உன் வேலையை..ன்னானாம்…!

இவங்களுக்குக் கொடுத்த காசை அவன்ட்டயே கொடுத்திருந்தா அவனே போயிருப்பானே..? – வியப்போடு கேட்டார் வித்யாபதி.

என்ன கொடுத்தாங்க…ஏது செஞ்சாங்க தெரியாது. என்ன நிச்சயம்? மறுபடியும் அடாவடி பண்ண மாட்டாங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்? ஆறு மாச வாடகைன்னு இவுங்க சொல்றாங்க…உண்மையா எத்தனை மாசமோ? இடம் மிஞ்சினாப் போதும்னுல்ல இது  நடந்திருக்கு…! மராமத்து வேலை நடக்குது…எவ்வளவு செலவோ…யார் கண்டது?

அந்தத் திருப்பாப்புலிக்கு இன்னொரு கதை உண்டு. அது இப்போது வித்யாபதியின் நினைவுக்கு வந்தது. இதே தெருவின் கடைசியில் நடந்து கொண்டிருந்த அநாச்சாரம் அது. என்னடா…ராத்திரியானா டர்ரு…புர்ர்ருன்னு ஆட்டோக்கள் வர்றதும் போறதுமா இருக்கே…என்ன விஷயமா இருக்கும் என்று விழித்துக் கொண்டபோதுதான் அந்த அபத்தம் புலப்பட்டது.  குடியிருப்போர் நலச் சங்கம் கொதித்து எழுந்தது. கண்ணியமும் கட்டுப்பாடுமாக் குடியிருக்கிறவங்க அமைதியா இருக்கிற இந்தத் தெருவுல இப்டியொரு நாராசமா? என்று திருப்பாப்புலியை ஏற்பாடு செய்தபோது, நாலு பேரோடு போய் தடாலடியாய் அவ்வளவு பேரையும் அள்ளித் தூக்கிப் போட்டுக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு நிறுத்தினான் அவன்.

ஏன்யா…உன் நீசத் தொழிலை நடத்துறதுக்கு உனக்கு இந்த ஏரியாதான் கிடைச்சிச்சா…? இந்த நகர்ப் பக்கமே இருக்கக் கூடாதுன்னு உன்னை ஏற்கனவே விரட்டி விட்டா…நீ அங்க போய் கொடி நாட்டுனியா? ஈத்தற நாயே…இனி நீ வெளிலயே தலை நீட்ட முடியாதபடி செய்யுறேன் பாரு…என்று  அந்தக் கோஷ்டியின் தலைவனையும் அவன் ஆட்களையும் போலீஸ் நிர்வாகம்  உள்ளே போட்டு நொங்கெடுத்தது.. பிறகு அவர்கள் வேற்றூருக்கு எங்கோ சென்று விட்டதாகத் தகவல் வந்து நிம்மதியாயிற்று.

திருப்பாப்புலி அந்தப் பகுதியின் காவல் தெய்வம்.

அமைதியாய் அமர்ந்திருந்தார் வித்யாபதி. நடந்தவைகள் அனைத்தும் செய்திகளாய்க் காதுக்கு வருகின்றன. யாருக்கோ நடந்தது வெறும் செய்திகள்தானே? உறவுகளுக்கென்றாலும் பெரிதாய் என்ன செய்து விடப் போகிறோம்? போய் ஆதரவாய் நிற்போம்…ஏதோ கொஞ்சம் உதவுவோம். பிறகு விலகுவோம். அதுதானே?  இப்படித்தானே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வெவ்வேறு விதமான நிகழ்வுகள் நமக்கு வெறும் செய்திகளாய் ஆகின்றன.அதன் தாக்கம் ஏன் நம் மனதை அரிப்பதில்லை. அதுதானே சமூகச் சிந்தனை.  …தீவிரவாதிகளை எதிர்த்து முறியடித்து குண்டடி பட்டு இறந்து போகும் ராணுவ ஜவான்கள்பற்றிய செய்திகள் கூடப் பல சமயங்களில் நமக்கு வெறும் செய்திகள்தான். அன்றாடம் என்னென்ன விதமாகவோ பாலியல் செய்திகளைப் படிக்க நேர்கிறது. அவை ஏன் வெறும் வரிகளாக மட்டும் நம்மைத் தாக்குகின்றன? வெவ்வேறு ஊர்களில் நடக்கும் இந்தக் கொடுமைகளைக் கண்டு மனம் கொதிக்க வேண்டாமா? அப்போதைக்கு மனதை நெருடும் இவைகள் பின்னர் மறைந்து போகின்றனவே?

அக்கா, தங்கை என்று சகோதரிகளோடுதானே நாமும் பிறந்திருக்கிறோம். அப்படிப் பார்த்தால் இந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் நம் சகோதரிகள்தானே? அவர்களுக்கு நடந்த கொடுமை எப்படி வெறும் செய்திகள் ஆகும்? அல்லது அந்தக் கணம் வருந்தி ஒதுங்கும் மனநிலையை எப்படிக் கொண்டு வரும்? கொதித்து எழ வேண்டாமா? வெறுமே வருந்துவதா எதிர்வினை?  அப்போதைக்கு அடடா…என்று மனசு துக்கப்படுகிறது! எங்கோ நடந்தவை.  யாருக்கோ நடந்தவை. அடுத்தடுத்த நாட்களில் வரும் வேறு விதமான புதிய செய்திகளில் இதற்கான சங்கடம்,  துக்கம் மற்றும் கேள்விகள்  எல்லாமும் கரைந்து காணாமல் போய்விடுகின்றன. நாட்டுக்கு நாடு போர்கள் நடக்கின்றன. மக்கள் கொத்துக் கொத்தாக மடிகிறார்கள். வாழ்விடங்களை இழந்து இடம் பெயர்கிறார்கள்.  கேள்விப்படுகையிலே மனசு நடுங்கும் இச்செய்திகள் பின் எப்படி மறைந்து போகின்றன மனதிலிருந்து? நமக்கு  பாதிப்பில்லாத இவை, நாட்கள் கடக்கையில் எப்படி நம் மனதில் நிற்கும்? இதுவும் கடந்து போகும் என்று எல்லாமும் நம்மைத் தாண்டித்தான் சென்று விடுகின்றன. ஒருவகையில் இது சுயநலம் சார்ந்ததுதானே? மனிதர்களே இப்படித்தானா? வாழ்க்கை அவசங்களில் மூழ்கிக் கிடக்கும் அவனால் இதற்கு மேல் உந்திச் செயல்பட முடியாதா?

பனியிலும், மழையிலும்,மலையிலும், காற்றிலும், குளிரிலும் சரியான உணவின்றி, உறக்கமின்றி, ஓய்வின்றி நமக்காகப் பல ஜீவன்கள் எல்கையில் நின்று, இந்த நாட்டு மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை, அவர்களை நாம் என்றென்றும் நினைப்பதேயில்லை. மனதில் நிறுத்துவதில்லை. ஆத்மார்த்தமாய் வணங்குவதில்லை.  கடந்து செல்லும் பல அன்றாடச் செய்திகளில் அதுவும் ஒன்று. அவ்வளவே…! அந்தக் குடும்பங்கள் எல்லாம் தலைவனை இழந்து என்ன பாடுபடும்? எவ்வளவு துயருற்று நிற்கும்? நினைத்துப் பார்த்திருக்கிறோமா? மனதுக்குள் கொஞ்சமேனும் அழுதிருக்கிறோமா? துயரப்பட்டிருக்கிறோமா?

எங்கு எது நடந்தாலும் அது மற்றவர்களுக்கு நடந்ததுதானே? நமக்கு இல்லையே என்கிற எண்ணம் வந்து விடுகிறது. அது மனித இயல்பா? இந்த மனதுக்குச் செய்யும் துரோகமில்லையா? நமக்கு நடந்தால்தானே அதன் பாதிப்பு,  தாக்கம் நம்மை வதைக்கும்? ஆழ யோசிக்க வைக்கும்? கவனம் கொள்ள வைக்கும்? அல்லாமல் கடந்து போகும் பலவும் வெறும் செய்திகளே அப்படித்தானே..! நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய சிந்தனைகள்…!

என்ன…ஒரேயடியா யோசனைல மூழ்கிட்டீங்க…? என்றார் மாசிலாமணி.  காபியை ஆற்ற ஆரம்பித்திருந்தார். ஆவி பறந்தது. டிகாக் ஷன் மணம் மூக்குக்கு இதம் தந்தது.

தலையை மேலே தூக்கிப் பார்த்துக் கொண்டே பெருமூச்சு விட்டார் வித்யாபதி. வாங்கின அட்வான்சை என்னவோ தெய்வாதீனமா மனசுக்குள் நெருட….மறுநாளே அந்த ஆளை வரச்சொல்லித் திருப்பிக் கொடுத்தவங்க நானு….இப்பத்தான் முதன்முதலா உங்ககிட்டே சொல்றேன் இந்தச் செய்தியை. .இந்தத் தெருவுலயே முதல்ல எங்கிட்டதாங்க வந்து நின்னு எங்க மாடியை வாடகைக்குக் கேட்டான் அந்த ஆளு…அப்புறம்தான்  அடுத்துன்னு விசாரிக்கப் போனான். .எதிர்த்த வீட்டு மாடியை யாரு சொல்லி, எப்போ எப்படிப் பிடிச்சான்னே தெரியாதுங்க…அவுங்க வாடகைக்கு விடுற எண்ணத்துல இருந்திருக்காங்கங்கிறதே புதிய செய்தியா இருந்திச்சு எங்களுக்கு. ஆச்சரியமாயிருந்திச்சு. சொல்லப்போனா அவங்களப் பார்த்துத்தான் நானும் சும்மாப் போட்டு வச்சிருந்தேன். எப்டியோ அங்க ஆள் புகுந்துட்டான்….இப்ப நினைச்சுப் பார்க்கிறேன் அதை….இன்னைவரைக்கும் மாடியை சும்மாத்தானே போட்டு வச்சிருக்கேன்….கிடக்கட்டும்னு…ஒட்டடை, தூசி சேர்ந்தாலும் பரவால்லன்னு…!  – சொல்லிவிட்டுப் பெருமூச்சோடு புன்னகைத்தார் வித்யாபதி. நல்லவேளை தப்பிச்சோம்…என்ற நிம்மதி தெரிந்தது அதில்.

பார்றா….புதுச் செய்தியால்ல இருக்கு? அப்போ அதிர்ஷ்டவசமாத் தப்பிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க…- காபியை சூடாய் உள்ளே ஊற்றியவாறே உற்சாகமாய்க் கேட்டார்  மாசிலாமணி. செய்தியின் சூடு குறையவில்லை அவருக்கு. புதிய தகவல் கிடைத்திருக்கிறதே…!

எதிரிலிருந்தும் எப்படியோ சேதி தெரியாமல் போயிற்றே என்று மனம் வருந்தினார் வித்யாபதி. யார் கூடவும் பேசுவதேயில்லையே அவர்கள். எதிர்வீட்டைத் தலை நிமிர்ந்து பார்த்தாலே பாவம் என்பது போலல்லவா இருக்கிறார்கள்? நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் ஒரு புன்னகை கூடவா கூடாது? வெறித்த பார்வையோடு முகத்தைத் திருப்பிக் கொண்டால்? யாருக்கு யார் உசத்தி, தாழ்த்தி?ஒரு முறை மட்டும் வந்ததோடு சரி.  அந்த வீட்டில் என்ன சோகமோ…யார் கண்டது? ஒரு வேளை அவர்களின் இயல்பே அப்படி ஒதுக்கலாய் இருக்கலாமே! ஆனாலும் இந்த மாதிரிச் சங்கடங்களெல்லாம் யாருக்கும் வரக் கூடாதுதான். அப்பாவிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

ஒரு தெரு தாண்டி அவனின் இந்த அடாவடியை அறியாமல் வீட்டை வாடகைக்கு விட்டவர்களை எந்த வகையிலாவது மறைமுகமாகவேனும், யார்மூலமாகவேனும் அல்லது குடியிருப்போர் நலச் சங்கத்தின் மூலமாகவேனும் எச்சரிக்க வேண்டும், மேலும் இவர்கள் அவனால் ஏமாறாமல் இருக்க வேண்டும்… என்று அவரின்  மனம் மானசீகமாய் அப்பொழுது முடிவு செய்து கொண்டது.

                                    ---------------------------------

 

 

 

 

கருத்துகள் இல்லை:

பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில்   “கடைநிலை“  நாவல் அறிமுகம்