04 ஜூலை 2025

 

இந்திரா பார்த்தசாரதி   - படைப்பு வாசிப்பனுபவம் - பேசும் புதிய சக்தி - ஜூலை 2025  பிரசுரம்




        மிழ் இலக்கியச் சூழலில் பல பழம் பெரும் படைப்பாளிகளின் மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு வந்து விட்டது. புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், ஆதவன், கு.பா.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, கந்தர்வன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், கோபி கிருஷ்ணன், வண்ண நிலவன், ந.பிச்சமூர்த்தி, லா.ச.ராமாமிர்தம் என்று ஏறக்குறைய பலரது படைப்புக்களும் உள்ளன.  அந்த மொத்தத் தொகுப்புகளில் அவரவரது இடம் பெறாத சிறுகதைகளும் உள்ளன. தொகுப்புகள் வந்த பிற்பாடு அவர்களால் தொடர்ந்து எழுதப்பட்டவையும் உள்ளன.

      இந்த மொத்தத் தொகுப்புகளில் அடங்கிய அத்தனை சிறுகதைகளும் அபாரம் என்றில்லாவிட்டாலும், அந்தந்த எழுத்தாளரது க்ளாசிக்கான படைப்புக்கள் பல ஒரே புத்தகத்தில் அடங்குவதும், அவற்றை அவ்வப்போது உடனுக்குடன் எடுத்துப் படிக்க ஏதுவாக இருப்பதும், அதன் மூலமாய் நம்மின் ரசனையை வளர்த்துக் கொள்வதும், எழுத்துப் பயிற்சி உண்டாயின் அதனை மேம்படச் செய்து கொள்ள உதவுவதும், நமது வாசிப்பு அனுபவத்தின்பாற்பட்ட ஆழ்ந்த ரசனை அழியாமல், பசுமையாய்ப் பாதுகாப்பதும் இவற்றினால் விழைந்த  முக்கியப் பயனாகின்றன.  

      இம்மாதிரியான ஒவ்வொரு தலை சிறந்த படைப்பாளியின் மொத்தச் சிறுகதைத் தொகுப்புகளும் வந்த பின்பு, விலையைப் பொருட்படுத்தாது பலராலும் வாங்கப்பட்டு தொடர்ந்து வாசிக்கப்படுகின்றனவா என்கின்ற ஒரு கேள்வி மனதிலே தொக்கித்தான் நிற்கிறது. படைப்பு சார்ந்து, விடாது  இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் இது அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம்…மற்றவர்களுக்கு? வெறும் ஆவணமாகப் போய்விடக் கூடிய அபாயம் உண்டோ என்றும் தோன்றத்தான் செய்கிறது.

       வெறும் ஆவணமல்ல. நம்மைப் புடம் போட்டுக் கொள்ளக் கிடைத்த பொக்கிஷங்கள் இவை என்று பொறுப்புமிக்க ஒரு தேர்ந்த நவீனத் தமிழ் இலக்கிய வாசகனுக்கு, படைப்பாளிக்கு, சமூகப் பிரக்ஞையுள்ள இலக்கிய ரசனையுள்ள ஒரு மனிதனுக்கு நிச்சயம் தோன்றும்.

      அப்படியான இடைவிடாத வாசிப்பில் இப்போது என் கையில் தவழ்ந்து கொண்டிருப்பது இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இரண்டு தொகுதிகளைக் கொண்ட மொத்தச் சிறுகதைகள். இவற்றிலுள்ள படைப்புக்களை வரிசைக் கிரமமாகப் படித்து  விமர்சிப்பது என்கின்ற பாட நூல் வழிமுறை என்பது வேண்டாமென்கிற முடிவில் நான் முதலில் கையில் எடுத்துள்ளது அவரது மொத்தச் சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பு.

      ஒரு படைப்பாளியின் படைப்புக்களை ஆண்டு வாரியாகத், தேதி வாரியாக ஏறு வரிசையில் தொடரும் பொழுது அவரது எழுத்து எவ்வாறு படிப்படியாக மேம்பட்டு வளர்ந்திருக்கிறது, எப்படி அவரது படைப்புக்கள், அதற்கான களங்கள் முதிர்ச்சியடைந்திருக்கின்றன, மாறுபட்டிருக்கின்றன என்பதை நாம் கணிக்க முடியும். இது வளர்ந்து வரும் படைப்பாளிக்குப் பொருத்தமான ஒன்றாக அமையும் வாய்ப்பு உண்டு.

      இ.பா. போன்ற முதிர்ந்த படைப்பாளிகளை எதிர்கொள்ளும்பொழுது அவர்களது ஒவ்வொரு படைப்புமே நம்மை வியக்க வைக்கும்விதமாக அமைந்து பிரமிக்க வைக்கையில் அவற்றை நாம் அணுகும் முறையில் ரொம்பவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

      சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள் மனத் தோற்றத்துக்கேற்ப உருக்கொள்கிறது என்கின்ற இவரின் கருத்து மிகவும் ஏற்புடையது. கற்பனை, நேர்கோட்டுத் தர்க்க விதிகளின்படி இயங்க வேண்டியதில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் இவர், இது ஓர் உத்திதானே தவிர இதுவே கருவாகி விடாது என்று சொல்லி விட்டு, மகாபாரதத்தைப் படித்து முடித்த பிறகு “மீனுக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” “கங்கை நதி கருவுற்றாள் என்பது எவ்வளவு அபத்தம்?” என்றெல்லாம் நாம் விவாதிப்பதில்லை என்று விளக்குகிறார்.

      படைப்பாளியின் உள் மனத் தோற்றத்துக்கேற்ப உருக்கொள்ளும்  இவரது படைப்புக்கள், இப்படியான கதைகளை இவர் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்று நினைக்க வைத்து, வேறு எந்தப் படைப்பாளியிடமும் இவற்றின் அடையாளங்கள் இல்லை என்பதாகத்தான் முடிவு கொள்ளச் செய்கிறது. இதுவே இ.பா.வின் தனித்துவம் மற்றும் படைப்பாற்றலின் பலம் என்று கொள்ளலாம்.

      “தவம்“ என்ற தலைப்பிலான சிறுகதையை அவர் கையாண்டிருக்கும் விதம் அவரின் எழுத்தாற்றலை இந்த விதத்திலேயே பறைசாற்றுகிறது. என்ன கதையைச் சொல்லப் போகிறோம், அதை எப்படி வடிவமைக்கப் போகிறோம் என்கிற முழுத் தீா்மானத்தில் ஆரம்பிக்கும் இக்கதை ஆரம்ப வரிகளிலேயே நம்மை உற்சாகப்படுத்தி விடுகிறது. இந்த விவாதத்தை இப்படித்தான் துவக்க வேண்டும், அப்படியானால்தான் கதைக்கான கரு பலம் பெரும், அழுத்தமாய் வாசகனால் உணர முடியும் என்கிற அவரின் முடிவு நம்மைப் பிரமிக்க வைக்கிறது். மனதில் தோன்றும் ஒரு விஷயத்தின் நியாய அநியாயங்களை புத்திசாலித்தனமாய் விவாதிப்பது என்பது, அதிலும் அதனை விவாதிக்கும் பெருமக்கள் கீழ்த்தட்டு மக்களா, நடுத்தர வர்க்கத்தினரா அல்லது மேல்தட்டு வர்க்கத்தினரா என்பதை முடிவு செய்து அதற்கேற்றாற்போல் வாதினை முன் வைப்பது என்பதற்கு ஒரு அறிவு ஜீவியால்தான் இது சாத்தியம் என்று நினைத்து வியக்கும் அளவுக்கு இந்தக் கதையைப் படிப்படியாக நகர்த்திச் செல்கிறார் இ.பா. அம்மாதிரி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட நேர்கையில் மேல்தட்டு வர்க்கத்தினரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வரிக்கு வரி கதாபாத்திரங்களின் விவாதங்களின் மூலம் சாமர்த்தியமாய் அடுக்கியவாறே கடந்து செல்கிறார்.  என் வாசிப்பு அனுபவத்தில் இம்மாதிரியான அறிவுபூர்வமான விவாதங்கள் அடங்கிய கதைகளை ஆதவனின் படைப்புக்களில்தான் நான் கண்டு வியந்திருக்கிறேன். அதற்குப்பின் இ.பா.தான்.

      ஆஸ்பத்திரியிலிருந்து மீனாட்சி வந்ததும் அவளை அக்னிப் பிரவேசம் செய்யச்  சொல்லப் போகிறேன் என்று பயப்படுகிறாயா? என்று மகள் ராதிகாவிடம் கேட்கிறார் சபேசன்.  இந்தக் கேள்விக்கான தகவலும் அது குறித்த விவாதங்களும்தான் கதையாகப் பரிணமிக்கிறது. சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்டு அப்பா கொதித்தெழுவார் என்று வீட்டிலுள்ளோர் நினைக்கையில், அவர்கள் எண்ணங்களில் மண் விழுகிறது. எனக்கும் அவளுக்குமான உறவு அத்தனை சராசரியானது அல்ல…உங்களின் புரிதல் வேறு…எனது உணர்தல் என்பது வேறு….அதில் ஆழப் புதைந்து கிடக்கும் எங்களுக்கிடையிலான இந்த வாழ்க்கையின் அர்த்தங்கள் அத்தனை எளிதில் யாரும் விமர்சிப்பதற்கில்லை என்று தன் அனுபவம் செறிந்த நிதானத்தின் மூலம் தன் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கிறார்.

 மூன்று  நாட்களுக்கு முன்பு ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து ஃபோன் வந்தது. மரணத் தறுவாயிலிருந்த நடேசன் என்பவர் அம்மாவிடம் பேச விரும்புவதாக. அம்மா புறப்பட்டுச் செல்வதற்குமுன் அவருக்கு நினைவு தப்பி விட்டது. அம்மா மூன்று நாட்களாக ஆஸ்பத்திரியில் காத்துக் கொண்டிருக்கிறார். செத்துக் கொண்டிருக்கும் எவரோ ஒருவருக்காக அம்மா கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். மருமகள் ராதிகா அப்பா சபேசனிடம்  கூறுகிறாள்.

யார் அந்த நடேசன்…? அம்மாவுக்கும் அவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாகவும், ஆனால் நடேசனுடைய விதவைச் சகோதரி காணாமல் போனதால் நின்று விட்டதாகவும், மாந்தோப்பில் அம்மாவின் படத்தை அவர் போட்டுக் கொண்டிருந்தபோது பார்த்து விட்ட அம்மாவின் தந்தை அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவமானப்படுத்தியதாகவும், பெரிய பண்ணையார் என்பதால் அவர் செய்வதே நியாயம்,  சட்டம் என்று சொல்லப்பட, நடேசன் போகும்போது சொன்னாராம். “நான் எப்பொழுதாவது மீண்டும் உன்னைச் சந்திக்க நேரிட்டால் அப்பொழுது தடை இருக்காது என்று நம்புகிறேன்” என்று. அந்த சந்திப்பு மருத்துவமனையில் நிகழ்கிறது. சந்திப்பு என்று கூடச் சொல்ல முடியாது. சென்றடைவதற்குள் அவர் நினைவு தப்பி விடுகிறார்…

இந்த நிகழ்வு சபேசன் வீட்டலுள்ளோருக்குக் கௌரவப் பிரச்னையாக இருக்கிறது. ஒரு விபத்தின் காரணமாக கால்களின் செயலிழந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்தவாறு வாழ்க்கையை நடத்தும் பிரபல தொழிலதிபர் சபேசன் வீட்டின் மாடியிலேயே தன் பொழுதுகளைக் கழிக்க, அவரிடம் இந்தச் செய்தியைக் கொண்டு செல்லும்பொழுது அது விவாதத்துக்குள்ளாகிறது. எதை அவர்கள் அவமானம் என்று நினைத்துக் கொண்டு தீர்ப்புக்காகத் தந்தையிடம் போய் நிற்கிறார்களோ அந்த விஷயம் வெகு நிதானத்துடன் எதிர்கொள்ளப்படுகிறது. உங்களைப் போல் நானும் உடனே உணர்ச்சி வசப்பட்டால் பிறக அவளோடு நான் இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கைக்குத்தான் என்ன அர்த்தம் உண்டு என்று அவர் நினைத்துக் கொள்கிறார்.

அம்மா ஏதோ கொலை செய்துவிட்ட மாதிரி, அப்பாவிடம் சொல்லத் தயங்குகிறார்களே? அம்மா ஒரு குற்றமும் செய்யவில்லை. நம் மனம்தான் இன்னும் வளர்ச்சியுறவில்லை. அம்மாவைப் புரிந்து கொள்ள. பிறகு நமக்கும் அந்தப் பத்திரிகைக்கும் என்ன வித்தியாசம்? – கேள்வி விழுகிறது இப்படி.

காரணம் தொழிலதிபரின் மனைவி இன்னொரு ஆடவனைச் சென்று சந்தித்தது மஞ்சள் பத்திரிகைச் செய்தியாகிவிடுகிறது. மூன்று பிள்ளைகள், மருமகள்கள் உள்ள அந்தப் பெரிய வீட்டில் இந்த விஷயம் வலம் வந்து குடும்பத்தில் கொதிநிலையை ஏற்படுத்துகிறது.

அம்மாவின் உணர்ச்சிகள்தான் முக்கியமே தவிர, அவற்றின் உண்மைக்கு முன்னால் அவ்வுண்மை கற்பிக்கும் புனிதத் தன்மைக்கு முன்னால் அந்தஸ்து, செல்வாக்கு எல்லாம் அர்த்தமற்றவை….

காலம் என்ற கணக்கு உடம்புக்குத்தான். நினைவுகளோ உணர்ச்சிகளோ அக்கணக்குக்கு உட்படாதவை…..

தியாகத்தையே வாழ்க்கை நெறியாகக் கொண்ட சிலர் வாழ்நாள் முழுவதும் பிறருக்காக வாழ்ந்த பிறகு எப்பொழுதாவது ஒரு சமயம் தமக்காக வாழ விரும்புவா்கள் அல்லவா? அது போல அம்மா இப்பொழுது….

குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்….சபேசன் சொல்கிறார்… நான் வியாபாரி….மென்மை உணர்ச்சிகளைப் பற்றி எனக்கென்ன தெரியும்….தொழில் துறையில் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக இருந்தால்தான் முன்னேற முடியும்….

அவர் வியாபாரிதான். சந்தேகமில்லை. ஆனால் உணர்ச்சிகளை எப்படி இயல்பாக அவரால் கட்டுப்படுத்த முடிகிறது?

சொல்கிறார்…. “மரத்தில் கட்டி வைத்து அடித்த அந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் பெண்ணின் உள்ளத்திலிருந்துதான் அந்த வடுவை அகற்றி விட முடியுமா? நடேசன் அடிபடுவதற்குத் தான்தான்  காரணம் என்று மீனாட்சிக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

விவாதம் ஏறக்குறைய முற்றுப் பெற்ற நிலையில் மீனாட்சி வீடு வந்து சேருகிறாள். நேரே கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு பூஜை அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள்.

அம்மாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. இந்த நிலைமையைச் சமாளிக்க நாம் இப்படிச் சொன்னால்தான் நல்லது. இல்லா விட்டால் நம் அந்தஸ்து…?

அமைதி காக்கிறார் சபேசன். நீங்கள் சுகமாக இந்த மாடியில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். உலகத்தை நான்தானே  ஏறிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது? என்கிறான் மகன் ரவி.

உன் குடும்பத்துக்கு எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ அதைச் செய்…என்கிறார். நீங்கள் இந்தக் குடும்பமில்லையா? என்கிறான் அவன். அவரின் பதில்-

நானும் இந்தக் குடும்பம் என்று நீ நினைத்திருந்தால் இந்த மாதிரி யோசனையை என்னிடத்திலேயே நீ சொல்லுவாயா? என்று கேட்கிறார். தாய்க்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று ஊராரிடம் போய்ச் சொல்லி அவர்களைத் திருப்தி செய்…போ…என்று கொதிக்கிறார். எங்கள் இருவரையும் இந்த அறையில் வைத்துப் பூட்டி விடு…பூஜை முடிந்ததும் அம்மாவை இங்கு வரச்சொல்…நான் அவளுக்காகக் காத்திருக்கிறேன்…என்று கூறிவிட்டு…இந்தா…போகும்போது இந்த சிகரெட் சாம்பலைத் தொட்டிலில் கொட்டிவிடு. ஒரே குப்பையாகி விட்டது….என்று கூறி முடிக்கிறார்.

அவர்கள் இருவருக்கிடையிலான புரிதல் தவமாய்ப் பரிணமிக்கிறது. வாழ்க்கையைத் தவமாய் மேற்கொண்டவர்களுக்கிடையிலான பந்தம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை இச்சிறுகதை மனோலயங்களின் தாலாட்டாக ஆழமாய் முன் வைக்கிறது என்பதான புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறது

தன்னால்தானே அந்த நடேசனுக்கு இந்த அவமானம் ஏற்பட்டது என்பதில் மனம் புழுங்கி பரிகாரத்திற்கான ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காகத் தவம் கிடந்து காத்திருக்கும் மீனாட்சிக்கு தன்னைச் சுற்றியிருக்கும் அந்தஸ்து, கௌரவம் என்கிற போலி வாழ்க்கைத் தடைகளைப் பொருட்படுத்தாமல் நடேசனால் சொல்லப்பட்ட அந்த இன்னொரு முக்கிய தருணத்தை நழுவ விட்டு  விடாமல் பயன்படுத்திக் கொண்டு ஆறுதல் அடைகிறாள் மீனாட்சி. அவளின் அந்த உள்ளக்கிடக்கை அவரால், அதாவது சபேசனால் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இச் சிறுகதை அந்தஸ்து, கௌரவம் என்கிற புள்ளிகளில் அந்தக் கருவை முன்னிறுத்தி விவாதக் களமாக்கி, நியாயமான, புத்திசாலித்தனமான, கௌரவமான இருவேறு தீர்வுகளை உணரும் வண்ணம் ஒரு தீவிர வாசகனின் ஆழமான நுகர்வுத் தன்மைக்குப் பெருமை சேர்த்து  வாசக மனதில் பெரும் நிறைவை ஏற்படுத்துகிறது.

                  ---------------------------------------------------

 

உஷாதீபன், (ushaadeepan@gmail.com) ( செல்-94426 84188)                                            எஸ்2- இரண்டாம் தளம், ப்ளாட் எண்.171,172                                                மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக்  Nஉறாம்ஸ்)                                                  ராம் நகர் (தெற்கு) 12-வது பிரதான சாலை,                                          சிருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில், மடிப்பாக்கம், சென்னை-600 091.

 

03 ஜூலை 2025

 


தாய் வீடு ஜூலை 2025 இதழ் சிறுகதை யூ.ட்யூபில்





 நாவல் “நிழல் யுத்தம் “ குமுதம் மாலைமதி ஜூலை 2025 அட்டைப்படம்




 

சிறுகதை     கணையாழி ஜூலை 2025  பிரசுரம்

“எ(கொ) டுப்பினை”




                                   வெட்கமாயில்லயா உனக்கு? – கொதித்துப் போய்க் கேட்டே விட்டார் சதீஷ்வரன். தப்பு என்று தோன்றவில்லை அவருக்கு. மனசிலிருந்து பெரும் பாரம் இறங்கியது போலிருந்தது. கேட்ட வேகத்தில் உடம்பு லேசாக ஆடியது.

                        கீழே கேட்டைத் திறந்து பாஸ்கரன் வெளியேறும் சத்தம். மாடியிலிருந்து பார்த்தார். குழந்தை மனோஜ் முன்னால் உட்கார்ந்திருக்க அவன் வண்டியைக் கிளப்பிச் செல்வது தெரிந்தது. தினமும் காலையில் டென்ஷன்தான். எட்டரை மணி பிரேயருக்குள் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு விட்டு விட வேண்டும். இல்லையெனில் செக்யூரிட்டியே உள்ளே அனுமதிக்க மாட்டான். இரண்டொரு முறை கெஞ்சிக் கூத்தாடி உள்ளே அனுப்பியிருக்கிறான். அவ்வளவு கண்டிஷனான பள்ளி.

                        இவ்வளவு தள்ளியிருக்கிற ஸ்கூல்ல சேர்க்கிறியே…தினமும் கரெக்ட் டயத்துக்கு உன்னால கொண்டு விட முடியுமா? ஓவர் டிராஃபிக்கா இருக்கு. இடைல ரெண்டு மெயின் ரோடு வேறே குறுக்கிடுது. நடுவுல கடந்து யு.டர்ன் போட்டு வளைஞ்சு போகணும்…முடியுமா? யோசிச்சிக்கோ….!

                        சொல்லத்தான் செய்தார்.  அவர் பயம் அவருக்கு. ஆனால் அவன் வயதிற்கு அதே பயம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. சென்னையில் பழகியவனுக்கு இதெல்லாம் சாதாரணம் போலும்…! தன்னால் உதவ முடியவில்லையே என்ற வருத்தம் இவருக்கு.

                        அதெல்லாம் பார்த்தா நடக்காதுப்பா…நல்ல ஸ்கூல். இடம் கிடைச்சதே பெரிய விஷயம். பணம் கட்டுங்கன்னு அவுங்க சொன்னதையே என்னால இன்னும் நம்ப முடில….அதிர்ஷ்டவசமாக் கிடைச்சுப் போச்சுன்னுதான் சொல்லணும்….அப்படிப்பட்ட ஸ்கூல்ல மற்ற அசௌகரியங்களையெல்லாம் பொருட்படுத்தக் கூடாதாக்கும்…இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்கூல் பஸ் விட்ருவாங்க….அதுல சேர்த்து விட்ருவோம்…அதுவரைக்கும் கொஞ்சம் சிரமம்தான்….

                        இப்படிச் சொல்லித் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு தினமும் கருமமே கண்ணாய்ச் செய்து கொண்டிருக்கிறான். மாலை மூணே காலுக்குப் பள்ளி விடும். போய்க் கூட்டி வர வேண்டும்.. இதற்கிடையில் ஆபீஸ் வேலையையும் நேரம் தவறாமல் குறைவின்றிப் பார்த்தாக வேண்டும்.

                        ஸ்கூல்ல அவனை விட்டுட்டு அப்டியே ஆபீஸ் போய் ஸ்வைப் பண்ணி, லாகின் பண்ணிட்டு மதியம்  ரெண்டு ரெண்டரைக்குக் கிளம்பி நேரடியா போயி மனோஜைக் கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிட்டு திரும்பவும் ஆபீஸ் போயிடுவேன்….என்றான். பம்பரமாய்ச் சுழலுவது என்பார்களே…அப்படித்தான். சின்ன வயசுதான் என்றாலும் எந்த அலைச்சலுக்கும் ஒரு அளவில்லையா?

பெரு நகரமான சென்னையில் ஒவ்வொரு காரியத்திற்குமென்று தூர தூரமாய்ப் போக வேண்டியிருக்கிறது. அருகில் போனோம், வந்தோம் என்று இல்லை. பள்ளி அருகில் இருந்தால் கூட கொண்டு விட, கூட்டி வர என்று, தானே செய்யலாமே, இதில் அவனுக்கு உதவ முடியாமல் போய்விட்டதே என்று மனதுக்குள் வருந்திக் கொண்டிருந்தார் சதீஷ்வரன்.

                        சரி அதுதான் அப்படியென்றால் வீட்டில் இருந்து செய்யும் காரியங்களுக்குமா அவதி? அவர் மனது தாளவேயில்லை.  ஒரு பெண் வந்து சேர்ந்தும் மனையாளுக்கு எந்த உதவியும் இல்லை. அவள் எப்பொழுதும்போல் மாடாய் உழைத்தாள்.

                        மனசுக்குள்ளயே பொறுமிக்கொண்டிருந்தவர் பொறுக்க முடியாமல்தான் அப்படிக் கேட்டார். யாராவது ஒருத்தர் கேட்க வேண்டாமா? அப்படியா இருப்பது புகுந்த வீட்டில்? எதையும் கண்டு கொள்ளாமல், யாருக்கோ வந்த விருந்து என்பதைப் போல….? ஒரு சகஜபாவமே இல்லையே?

                        இப்டிப் பத்து வரைக்கும் தூங்கிட்டு சாவகாசமா எழுந்து வர்றியே…உனக்கு வெட்கமாயில்லே? குழந்தையை ரெடி பண்ணி ஸ்கூல் அனுப்புற வேலைகளச் செய்ய வேண்டாமா நீ?  உனக்குப் பங்கில்லையா? எதுவுமே கண்டுக்காம இருந்தா எப்படி? தினமும் பாடாப் படுறான் அவன்…நீபாட்டுக்கு இருப்பியா?

                        பிரவீணா இந்தக் கேள்விகளில் அசந்துதான் போனாள். பதிலாகக் கோபம்தான் கனன்றது. கேட்டது மாமனார். தன் புருஷன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும் பரவாயில்லை. அவனே வாயடைத்துக் கிடக்கும்போது இந்தக் கிழத்துக்கு என்ன வந்தது ஆத்திரம்? என்றுதான் தோன்றியது அவளுக்கு.  எங்கப்பா கேட்டாலே நான் செய்ய மாட்டேன். இவரென்ன கேட்கறது? கோணல் புத்தி.

                        காலைல எழுந்ததுலேர்ந்து அவனுக்குப் பல் தேய்ச்சுவிட, பால் கொடுக்க, பாத்ரூம் அலம்பி விட, குளிப்பாட்ட….ன்னு உறரிபரியா அவன் அல்லல்படுறானே…இத்தனையையும் காதுல வாங்கிட்டே சுருட்டி மடக்கிப் படுத்துக் கிடக்கியே…உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லியா? –தொடர்ச்சியாக அவர் வாயிலிருந்து அருவியாய்க் கொட்டியது ஆதங்கம்.

                        இது அத்தனையும் சற்று நேரத்தில் அவள் அப்பனுக்குப் போய்விடும். போகட்டும் என்றுதான் சொன்னார். அந்தாளாவது பொண்ணுக்குப் புத்தி சொல்லட்டும் என்று எதிர்பார்த்தார். அல்லது சண்டைக்கு வரட்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்…!

                        குளிப்பாட்டி முடிந்ததும் மனோஜூக்குத் துடைத்து விட்டு யூனிபார்ம் போட்டு, ஷூ மாட்டி, தலை வாரிப் பொட்டிட்டு ரெடி பண்ணி, காலை டிபன் ஊட்டிவிட்டு மற்றதையெல்லாம் முடித்து விடுகிறார் இவர். அதில் அவன் பங்கு சிரமங்களைக் கொஞ்சம் தான் வாங்கிக்கொண்ட திருப்தி அவருக்கு.

                        தன் வயதுக்கு இதெல்லாம் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லைதான். அந்தப் பெண் உருப்படியில்லையே? இவன் கிடந்து அல்லல்படுகிறானே என்கிற வயிற்றெரிச்சல்.  நீதான் சொல்லணும்…என்றும் சொல்லிப் பார்த்துவிட்டார். சொன்னால்தானே? தயங்குகிறான்.  பயப்படுகிறானோ? என்றும் சந்தேகம் இருந்தது. நல்லதைச் சொல்ல ஏன் பயப்பட வேண்டும்? ஏன் தயங்க வேண்டும்? அப்புறம் என்ன ஆம்பிளை இவன்?

                        பிரவீணாவின் முகம் அனலாய்த்தான் உப்பி நின்றது. குழந்தையைப் பள்ளியில் விட அவன் போயிருந்த நேரம்.  மிருணாளினி அடுப்படியில் கவனமாய் இருந்தாள். உரைக்கிற மாதிரி நல்லாக் கேட்கட்டும்…என்று வாளாவிருந்தாளோ என்னவோ? சொல்வதைத் தடுப்பதில்லையே? இவர் எதுக்குத் தலையைக் கொடுக்கிறார் என்கிற எண்ணமாகவும் இருக்கலாம்…!

                        கைக்குழந்தையோடு ராத்திரித் தூக்கமில்லாம நான் அவதிப்படுறேன்…அது தெரியுமா உங்களுக்கு? காலைல ஒரு மணி நேரம் தள்ளி எழுந்திரிச்சது உங்களுக்குக் குத்தமாப் போயிடுத்தாக்கும்? – சொல்லிவிட்டு அழும் என்று எதிர்பார்த்தார் சதீஷ்வரன். குத்துக் கல்லாய் நின்றது அது. மனசுக்குள் அவ்வளவவு ஆத்திரம்.  சரியான அமுக்குணி…இருக்கும் லட்சணத்தில் ரெண்டாவது வேறு. எது நடக்கிறதோ இல்லையோ இந்தக் காரியம் ஒழுங்காக ஆகிறது. அதுக்கேத்த பொறுப்பு வேண்டாமா? கைக் குழந்தை இருந்தா மத்த காரியங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறதா? முதல் பிள்ளையை யார் கவனிப்பது? இவர்கள் இருவரும் சேர்ந்துதானே கவனித்தாக வேண்டும்? வயசான எங்களுக்கென்ன வந்தது? ஏதோ அவ்வப்போது குழந்தையைக் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த வயசுக்கு அவ்வளவுதானே முடியும்? குழந்தையைப் பார்த்துக் கொள்ள, பராமரிக்கப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் எதற்காக ரெண்டாவது பெற்றுக் கொள்ள வேண்டும்? அந்தந்த வயதில் அதற்கான பொறுப்பும் கடமையுணர்ச்சியும் வேண்டாமா? முடிலன்னா ஆளைப் போட்டுக்குங்க…!

                        பிள்ளை பெத்தா தாயாருக்குத் தூக்கம் போயிடும்னுதான் சொல்வாங்க…அதோட அதாத்தான் எல்லாமும் செய்தாகணும்…அதுதானே சுகமான சுமை? எல்லாத் தாய்மார்களும் அப்படித்தானே? நீ மட்டும் என்ன சொகுசா?  அதுக்காக காலைல பெரியவனை ஸ்கூல் அனுப்புறதுக்கு ரெடி பண்றது உன் வேலையில்லைன்னு சொல்றியா? அவனா எல்லாம் செய்துக்கிறதுக்குப் பழகற வரைக்கும் நாம செய்து விட வேண்டாமா? நானே செய்றேன்னு சந்தோஷமால்ல நீ வரணும்… குறைஞ்சபட்சம் அவன் பாத்ரூம் போனா அலம்பி விட, பல் தேய்ச்சுவிட, பால் கொடுக்கன்னு ஏதாச்சும் ரெண்டு வேலையையாச்சும் பகிர்ந்துக்கிட்டாத்தானே மத்தவங்களுக்கும் சிரமமில்லாம இருக்கும்? குளிப்பாட்ட, சாப்பிட வைக்க,  யூனிபார்ம் போட, ரெடி பண்ணன்னு மீதியை அவன் செஞ்சிப்பான்….ஸ்கூலுக்கு ஒரு நாள் விடாம மதியம் டிபனுக்கும், லெவன் ஓ கிளாக் ஸ்நேக்சுக்கும் உங்கம்மா  காலைல அஞ்சுக்கே எழுந்து ரெடி பண்றாளே…இந்த வயசான காலத்துல…அது உன் கண்ணுக்குத் தெரியுதா இல்லையா? நான் பண்றேன்னு ஒரு நாளைக்காச்சும் வந்து நின்னுருக்கியா?  எதையுமே கண்டுக்காம இழுத்துப் பொத்தித் தூங்குறதுக்கு உனக்கு எப்டி மனசு வருது? அட்டச் சோம்பேறியா நீ? கல்யாணம் ஆகுறதுக்கு முந்தி உங்க வீட்ல எப்டி இருந்தியோ அப்டியேவா புகுந்த வீட்லயும் இருப்பே? ரெண்டு குழந்தை வேறே பெத்துட்டே? அது ஒண்ணுதான் உன்னோட பிராக்ரஸ்….! அத நினைச்சுப் பெருமைப்பட்டுண்டு நாங்கள்லாம் கம்முன்னு கிடக்கணும்னு எதிர்பார்க்கிறியா? உனக்குன்னு அன்றாடக் கடமைகள் இருக்கா, இல்லையா? என்ன நினைச்சிக்கிட்டிருக்கே நீ?

                        கொட்டித் தீர்த்து விட்டார் சதீஷ்வரன். எப்படி இவ்வளவு கோர்வையாய்க் கேட்க முடிந்தது என்று அவருக்கே ஆச்சர்யம்…! பிரவீணாவுக்கு இவர்தான் மாமியார்!

                        தேர் மாதிரி ஆடி அசஞ்சு சாவகாசமா எழுந்து வருவே….உன் போக்குப் போல உன் காரியங்களை மட்டும் பார்த்துப்பே…வீட்டுல நடக்குற மத்த எதையும் கண்டுக்க மாட்டே…..கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச ஒரு பொண்ணு இப்டியா இருக்கிறது? உறுத்தலே? இதத்தான் உங்கப்பன் உனக்குச் சொல்லித் தந்தானா? நல்லது எதுவுமே உன் மண்டைல ஏத்தலியா? இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணை இப்டியா வளர்க்கிறது? அசிங்கமாயில்லே? வெட்கப்படணும் இதுக்காக…!

                        கொதித்துப் போய் வெடித்துக் கொண்டேயிருந்தார் சதீஷ்வரன். அவர் மனது தாளவேயில்லை. வயிறு எறிந்தது அவருக்கு. தன் மகனுக்கு இன்னும் சரியாய்ப் பார்க்காமல் அவசரத்தில் இந்தக் கல்யாணத்தைப் பண்ணி விட்டோம் என்று நினைத்தார். மிருணாளினியிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்.  அந்த வேதனையிலேயே உயிரை விட்டு விடுவார் போலிருந்தது.  அநியாயமா அவசரப்பட்டுட்டனே…? என்று மனதுக்குள் புழுங்கினார். தனியாய் அழுதார்.

                        ருபத்தஞ்சுதான் ஆகுது அவனுக்கு. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகலாம். நிதானமாப் பார்த்திருக்கலாம். அவசரப்பட்டுட்டோம்.  அவுங்க வீட்டுல சம்பந்தியோட அப்பா அம்மாவைப் பார்த்து, அவுங்க பொறுப்பான பேச்சைக் கேட்டு, அவுங்க இருப்பைக் கவனிச்சு நாம ஏமாந்துட்டோம்…அதே போலதான் இந்தாளும்னு நினைச்சிட்டோம். தலைமுறை இடைவெளில எவ்வளவெல்லாம் மாறியிருக்குன்னு சிந்தனை போகலை நமக்கு. அதுதான் நம்மளோட தலைவிதிங்கணும். ஆனா இந்த மனுஷன் தன் பொண்ணை இப்டி விட்டேத்தியா வளர்த்திருப்பான்னு நினைக்கவேயில்லை….ஆளைக் கண்டு மயங்காதே…ஊதுகாமாலைன்னான்…ஏதோ கொஞ்சம் பார்வையா இருக்கேன்னு சம்மதிச்சிட்டோம்…வெறுமே மினுக்கிட்டுத் திரியவா கல்யாணம் பண்ணி வைக்கிறது? பொறுப்பா இயங்க வேண்டாம்? எல்லாத்தையும் நம்ம பையன்ல இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கு? அவன் தலை எழுத்தை நாம எழுதிட்ட மாதிரியில்ல ஆயிப்போச்சு? கிடந்து மாய்டா…ங்கிற மாதிரி?

                        இந்த பாருங்க…இதெல்லாம் வெட்டிப் புலம்பல். நான்தான் உங்ககிட்டே சொன்னேன்ல…தனிக் குடித்தனம் வச்சிடுவம்னு…கூட இருந்தாத்தானே இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு? அவுங்க குடும்பத்தை அவுங்க பார்த்திட்டுப் போறாங்க…தனியா விட்டாத்தான் பொறுப்பு வரும் அவுங்களுக்கும்…எல்லாமும் நாமதான் செய்தாகணும்ங்கிற நிலைமைலதான் பொறுப்பு வரும்….

                        தனியா எங்கடி விடுறது? அந்த மனுஷன் வந்து உட்கார்ந்திடுவானாக்கும்…எப்படான்னு காத்திட்டிருக்கான்? நான் சமைக்கிறேன்னு வந்து நின்னுடுவான்…நல்லதாப்போச்சுன்னு இது வழக்கம்போல படுத்துத் தூங்க ஆரம்பிச்சிடும்.  தோசை வார்க்கிறேன்…இட்லி பண்றேன்…இன்னிக்கு இடியாப்பம் பண்ணுவோம்…தெருக்கோடில ஒரு கடைஇருக்கு…அங்க மசாலா நல்லாயிருக்கும். வாங்கிட்டு வந்திடுவோம்…மதியம் பிரியாணி பண்றேன்….அங்க நம்ம வீட்ல  பண்ணி எடுத்திட்டு வந்திடுறேன். இங்க நீங்க சமைக்க வேண்டாம்…எல்லாருக்கும் அங்க சமைச்சிடுறேன்..-ன்னு அலப்பரை பண்ணுவான் அந்தாளு…அவன் பொண்ணை வேலை செய்ய அனுமதிக்க மாட்டான். வேலைக்குப் பழக விட மாட்டான். மேலும் சோம்பேறி ஆக்கிடுவான்…சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாமத் தவிப்பான் நம்ம பையன். எங்களுக்கும் எல்லாமும் பழகணுமா வேண்டாமா…நீங்க வரக் கூடாதுன்னு அதுவும் சொல்லாது. அவனுக்கும் வாய் வராது….அந்தாள் ராஜ்யம்தான் இங்க நடக்குமாக்கும்…!

                        என்னவோ பண்ணிட்டுப் போறார்…உங்களுக்கென்ன…? எப்டியோ காரியம் ஆனாச் சரின்னு அவுங்க இருக்க வேண்டிதானே? யார் சமைச்சா என்ன சாப்டா என்ன? நம்ம வயிறு நிறைஞ்சா சரின்னு உங்க பையன் இருந்துக்கணும்…பிடிக்காத அன்னிக்கு ஆபீஸ் கேன்டீன்ல வயித்தை ரொப்பிக்கணும். அப்டியிப்படி சமாளிச்சு வண்டிய ஓட்டிக்க வேண்டிதான்….காலப்போக்குல எல்லாம் சரியாப் போகுமாக்கும்…இதுக்கு நாம ஏன் கிடந்து பாடாப் படணும்? – நன்றாய்த்தான் சொன்னாள்….ஆனால் இவருக்கு ஏற்கவில்லையே?

                        நீ என்னடீ ஒரு அம்மாவா இருந்திட்டு இப்டிப் பேசிட்டிருக்கே…? உன் பையனுக்கு கான்டீன்ல்லாம் பிடிக்காதாக்கும்…வயித்துக் கோளாறு வரும்னு சொல்லுவான். எண்ணெயும், மசாலாவும் அவனுக்கு ஆகவே ஆகாதாக்கும். இதெல்லாம் நானில்ல உனக்குச் சொல்ல வேண்டியிருக்கு? அம்மாவான உனக்கே தெரிய வேண்டாமா? உன் பிள்ளைக்கு உன் சமையல்தான் பிடிக்கும். அதுதான் வயித்துக்கு ஒத்துக்குமாக்கும்….அந்த மனுஷன் மாடர்ன் சமையல் சமைக்கிறேன்னு என்னென்னவோ பண்ணிட்டிருப்பான்…புஸ்தகத்தக் கையில் வச்சிட்டு அது இதுன்னு செய்ய ஆரம்பிச்சிடுவான். இந்தப் பொண்ணோட அம்மாவ எப்படி எதுக்கும் ஆகாம ஆக்கி வச்சிருக்கான் பார்த்தியா? ஒரு காப்பி கலக்கணுமானாக்கூட அந்தம்மாவுக்கு அரை மணி நேரம் ஆகும். அந்தளவுக்கு இடத்தை விட்டு அசையாத சோம்பேறி ஆக்கி வச்சிட்டான் அந்தாளு. இந்த அபத்தங்களையெல்லாம் நமக்கு யாரும் சொல்லலை. நாமும் கவனிக்கலை. அதனால இப்போ அனுபவிக்கிறோம். எல்லாமும் சேர்ந்து நம்ம பையன் தலைல விடிஞ்சிது….அவன் பாவம் அப்பாவி….மெல்லவும் முடியாம, முழுங்கவும் ஏலாமக் கிடந்து  தவிக்கிறான்…..

                         அந்தப் பொண்ணை அப்டியே ஏத்துக்க வேண்டிதான்னு சொல்றியே அது நடவாது…! இந்த வீட்டுக்கு ஏற்ற மாதிரி அந்தப் பெண் மாறித்தான் ஆகணும். அதுதான் சரி. மரு…மகள்னு இங்க வந்து சேர்ந்தாச்சில்ல…அப்புறம் இனி ஆயுசுக்கும்  இங்கதானே? பிறகென்ன…தன்னை மாத்திக்க வேண்டிதானே? பிறந்த வீட்டு சோம்பேறித்தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு புதுப் பெண்ணா வளைய வரணுமாக்கும்…சண்டித்தனமெல்லாம் பிறந்த வீட்டோட போச்சு….இங்க ஆகாது….!இன்னமும் சொல்லப்போனா சமத்தா இருந்து…நம்மள அது வழி நடத்தணும்…அதுதான் அதுக்கும் அழகு, இந்த வீட்டுக்கும் அம்சம்….!

                        கனவு காணாதீங்க…அதெல்லாம் நடக்கப் போறதில்லை…நீங்க சொல்றதெல்லாம் அந்தக் காலம்…! சண்டை போட்டுட்டே இருங்க…அதுதான் நடக்கப் போவுது…வீடு எப்பவும் போர்க்களமாவே இருக்கட்டும்….அவனே சும்மாக் கிடக்கான்…உங்களுக்கென்ன வந்தது? என்னத்தையோ சமைச்சமா சாப்டமான்னு மீதி நாட்களை ஓட்டாமே எதேதோ பேசிட்டிருக்கீங்களே…? – மிருணாளினி  ஒத்தைக்கு நிற்கத் தயாரில்லை என்று தெரிந்தது.  அவள் சப்போர்ட் இல்லாமல், தான் மட்டும் ஒற்றைத் தெரு நாய் போலக் குரைத்து என்ன பயன்? வீணாய்க் கெட்ட பெயர்….நல்லது சொன்னால் இந்தக் காலத்தில் அதுதானே பரிசாகக் கிடைக்கிறது…! தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்திருந்தார் சதீஷ்வரன். மனசு சமாதானமாகவே மாட்டேனென்கிறது.  தன்னுடைய புத்திகெட்ட தனத்தால் வந்த விளைவு என்று எண்ணி எண்ணிக் குமுறுகிறார்.

                        இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணை இப்டியா வளர்க்கிறது? என்று கேட்டு வெட்கமாயில்லே? என்று வேறு தான் சொன்னதை அந்தப் பெண் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. உரைக்கவேயில்லையோ? அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டு விட்டது. ஒருவேளை அழ ஆரம்பித்திருக்குமோ? அழட்டும்…நன்றாய் அழட்டும்…அப்டியாவது புத்தி வரட்டும்…நாம நம்மை மாத்திக்கணும் என்று உணரட்டும்…கோத்திரமே மாறி இந்த வீட்டுப் பொண்ணுன்னு வந்து சேர்ந்தாச்சு…பிறகென்ன? எல்லாத்தையும் மாத்திக்க வேண்டிதானே? அவனுக்குத்தான் வாயில்லேன்னா நானுமா சொல்லாம இருக்க முடியும்? பிள்ளைப் பூச்சி மாதிரி இவன் இருப்பான்னு நினைக்கவேயில்லை. பயந்தோளிப் பய…! பொண்டாட்டிக்குப் பயப்படுறவன்…கோழையாத்தான் இருப்பான்…நல்லது சொல்ல…தைரியம் இல்லாதவன் என்ன ஆம்பளை? பையனையும் நினைத்து நினைத்து கோபம் கொப்பளித்தது அவருக்கு.  தன் பையன் இப்படி அமுக்குளியாய் இருப்பான் என்று எதிர்பார்க்கவேயில்லை இவர்.. இதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க வேண்டும். காமத்தின் வயப்பட்டிருப்பான். அதிலிருந்து மீள முடியாதவனாய்க் கிடந்து உழலுபவனாயிருக்கும். அதுவும் அவனை அதில் வீழ்த்தியிருக்கும். இரவில் காலைப் பிடித்து விடுகிறானோ என்னவோ?

  ஊர் உலகத்தில் இருப்பவனெல்லாம் ரெண்டு வருஷம் போகட்டும் மூணு கூட ஆகட்டும்…அப்புறம் பிள்ளை பெத்துக்குவோம் என்று தள்ளிப் போடுகையில்  சரியாக ஓராண்டில் ஒன்றை வெளியே தள்ளி விட்டானே இவன்? பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்த மாதிரி? ஒரு பேரப்பிள்ளை பிறந்ததில் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு பக்கம் இவன் இப்படி அவள் அடிவருடியாய் இருப்பான் என்று இவர் நினைக்கவேயில்லை. போதாக் குறைக்கு இப்போது ரெண்டாவது வேறு…! புளுக்…என்று பிதுக்கி எறிந்தாற்போல….!!

                        அம்மா இப்படி அடுப்படியில் கிடந்து சாகிறாளே என்று துளியாவது ஒரு சங்கடம் வேண்டாம்? வருத்தம் வேண்டாம்? இரக்கம் வேண்டாம்? சமையலுக்கு ஒரு ஆள் போடுறா என்று நூறு முறை சொல்லியாயிற்று. அதுபற்றி நினைப்பதேயில்லை. அந்தப் பெண்ணோ எதற்குமே வாய் திறப்பதில்லை. கலகலவென்ற பேச்சுமில்லை. மாமனார், மாமியார் என்கிற மரியாதையுமில்லை. இன்னொரு வீட்டு ஆள் என்கிற மாதிரி அந்த ரூமே கதியென்று கிடக்கிறது. இந்த வீட்டோடு இன்னும் எதுவும் ஒட்டவில்லை. மனதுக்குள் அன்பு எழவில்லை. தினமும் தவறாமல் தன் அப்பாவோடு ஒரு மணி நேரம்  போனில் பேசுகிறது. அந்தாள் என்னெல்லாம் அட்வைஸ் பண்ணுகிறானோ? அவன்தான் இந்தப் பெண்ணைக் கெடுக்கிறான். நல்லது சொல்லித் தந்தால் அது இப்படியிருக்குமா? அந்தாளுக்கே நல்லது தெரிந்திருந்தால்தானே சொல்லித் தர முடியும்? ஜாலிப் பேர்வழி…அர்த்தம் பொருத்தம் இல்லாமல் பணத்தை விரயமாக்கிக்கொண்டு, தேவையில்லாததையெல்லாம் வாங்கிச் சேர்த்துக் கொண்டு, அதுதான் நாகரீகம் என்கிற மயக்கத்தில் திரிபவன்….காலத்திற்கேற்றாற்போல் அப்டேட் ஆகுறாராம் ஐயா…! கிழிஞ்சது போ…! – சரியான  தத்தாரிக் கிறுக்கன்…!!

                        இந்த பார்…நீ அந்த வீட்டு மருமகள். அங்கே நடக்கிறதையெல்லாம் இங்க சொல்லக் கூடாது…என்ன செய்ய? என்று யோசனை கேட்கக் கூடாது. உன் புருஷன்ட்ட வேணும்னா கேட்டுக்கோ…இல்லையா…உன் மாமனார் மாமியார்ட்டக் கேட்டுக்கோ…அவங்கதான் இப்போ உன்னோட அப்பா, அம்மா…புரிஞ்சிதா? இனிமே இந்த மாதிரி என் கூடப் பேசுறதை விட்டிடு. அவுங்க கண்காணிச்சாங்கன்னா தப்பாப் போயிடும். அப்புறம் சண்டை வரும். பரஸ்பரம் நல்லுறவு இல்லாமப் போயிடும். உன் பேர்ல நம்பிக்கையில்லாமப் போயிடும்…தெரியுதா? அந்த வீட்டுக்குப் பொறுப்பான பொண்ணா வளைய வர்றதுதான் இனி உன் வேலையா, கடமையா இருக்கணும்…..மனசுல வச்சிக்கோ…உன் மீதி வாழ்க்கை அங்கேதான்…அவுங்களோடதான்…அந்த வம்சம் உன்னால தழைக்கணும்…

                        சொல்வானா அந்த ஆள்? அவனே ஒரு விட்டேற்றியான ஆளாயிற்றே…? பல விஷயங்களில் அந்த மனுஷனுக்கே நாம சொல்லிக் கொடுக்கணும் போலல்ல நடந்துக்கிறான்…அவனுக்கு எப்படி இப்படிப் பொறுப்பாப் பேச வரும்? அப்படிப் பொறுப்பாப் பேசற ஆளாயிருந்தாத்தான்…இந்தப் பொண்ணு இப்படி இருக்காதே இங்க…? அந்த மாதிரி நல்ல அடையாளம்தான் எதுவுமேயில்லையே? – எண்ணி எண்ணிப் பொறுமினார் சதீஷ்வரன். இதிலேயே தான் படுக்கையில் விழுந்து விடுவோமோ என்று அஞ்சினார்.  இருக்கும் மீதிக் காலத்திற்குத் தன் பையனுக்கு உதவியாய் இருந்து விட்டுக் கடைசி மூச்சை விடுவோம் என்று ஆண்டவனை வேண்டினார்.

கூடவே பெற்றோரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இவன், வயசான தாய் தந்தையரை வசதியாய், பொறுப்புகளற்ற சுதந்திரமாய், சுகசௌகரியமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாமா? அந்தப் பெண்தான் ஜாலியாய் இருக்கிறது ஆடி அசைந்து கொண்டு…துரும்பைக் கூட நகர்த்தாமல் சோம்பிக் கிடக்கிறது. அட்டச் சோம்பேறி…அரதச் சோம்பெறி…!! சண்டி மாடு. .இவளானால் அடுப்படியில் கிடந்து மாய்கிறாள் நாள் முழுதும். இவரோ அவளுக்கு இயன்றவரை உதவியாய் இருந்து கழிக்கிறார். கடை கண்ணிகளுக்குப் போக என்று அலைகிறார். வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்கிறார். அவள் சொல்வதைப் பணிக்கிறார்.  இருவரும் என்றுதான் ஓய்வது? கிருஷ்ணா ராமா என்று எந்த நாளில்தான் தியானித்துக் கிடப்பது?

                        ள்ளேயிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. போச்சு…மொபைல் வீடியோ பார்க்க ஆரம்பிச்சாச்சு….-நினைக்க நினைக்க எரிச்சல் அதிகமாகியது இவருக்கு. இந்தப் பாழாய்ப் போன செல்போன் வந்தாலும் வந்தது. குஞ்சு குளுவான் விடாம அத்தனை பேர் கைகளிலும் ஒரு ஃபோன். எப்பப் பார்த்தாலும் ஏதாவது படங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பது. சினிமா, வீடியோ, கிளிப்பிங்ஸ், விளையாட்டு…அரட்டை என்று ஏதாச்சும் ஒன்று…..இந்த வீட்டில் சதா கையில் அதோடு அலைவது அந்தப் பெண் மட்டும்தான். அது ஒன்றுதான் அதன் சொந்தம். மற்றதெல்லாம் தண்டம். யாரோடு அப்படி என்னதான் பேசுமோ? என்னவோ அறிவாளி போன்று ஒரு சிரிப்பு. கெக்கே…பிக்கே…என்று கனைப்பு….சராசரிப் பெண்ணுக்குரிய தன்மையே இல்லை. பெரிய லார்டு லபக்குதாஸ் என்ற நினைப்போ என்னவோ?

பி.இ. படித்த பெண்ணை வேலைக்குப் போக வேண்டாம் என்று வேறு சொல்லி விட்டான் இவன். அந்த வருவாயும் நின்றது. அதுகளுக்குத்தான். நாமளா வாங்கிக் கொள்ளப் போகிறோம். இருக்கும் பென்ஷனுக்கே செலவில்லை.  நிம்மதியாப் போச்சு என்று உட்கார்ந்து விட்டது அது. திங்க…தூங்க…சினிமாப் பார்க்க…பாட்டுக் கேட்க…வெளியில் போகலாம் என்று அவனை அனத்தி எடுத்துக் கிளப்ப, பெரிய பெரிய மால்கள் என்று அலைய, கண்டதையும் பர்சேஸ் பண்ண, ஓட்டலில் மூக்குப் பிடிக்கத் திங்க…பிறகு வயிற்று வலி என்று அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு சோம்பிக் கிடக்க…காசைக் கரியாக்க…சேமிப்பு என்பதே இவர்களுக்குத் தெரியுமா தெரியாதா? மாதத்தின் முதல் செலவு சேமிப்பு என்று இவர் தந்தையார் சொல்லிக் கொடுத்துப் பழக்கியதை நினைத்துக் கொள்வார் இவர். அதை இப்போது தன் மகனிடம் அமுல்படுத்த முடியவில்லையே? பென்ஷன் இல்லாத…அட…வேலையே நிரந்தரமில்லாத இவர்களின் ஜாப்பில் உடம்பில் தெம்பு இருக்கும்போதே ஏதாச்சும் கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொண்டால்தானே பிற்காலத்துக்கு உதவும்?  அந்தச் சிந்தனையே இல்லாமல் இருந்தால்? எவனாவது கொண்டு வந்து இந்தா வச்சிக்கோ என்று இனாமாய் நீட்டுவானா?

ஆசைகளே துன்பத்திற்குக் காரணம். ஆசைகள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் இளமையில் வறுமையில் அடிபட்டிருக்க வேண்டும். கஷ்டங்களை அனுபவித்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் காசின் அருமை தெரியும். சிக்கனத்தின் அவசியம் புரியும். எதுவுமே இல்லையே இவர்களிடம். ஏதோ மரத்திலிருந்து உலுப்புவது போலல்லவா காசை உலுப்பி சூரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

எதை எதை நினைத்துத்தான் வருத்தப்படுவது? உடம்பே தெம்பற்றுப் போனதாக உணர்ந்தார் சதீஷ்வரன். இறைவா…என்னைச் சீக்கிரம் எடுத்துக்கோ…! அவர் மனது இப்படித்தான் இறைஞ்சியது.

ம்மா…எப்பப் பார்த்தாலும் மொபைல்ல ஏதாச்சும் பார்த்திட்டேயிருப்பியா? எங்கூடப் பேசவே மாட்டியா? ரெண்டாம் கிளாஸ் படிக்கும் அவள் பையன் மனோஜூம் இதைக் கேட்டே விட்டான்.  கண்ணு கெட்டுப் போகும்மா…காது கேட்காது சதா இயர் ஃபோன் மாட்டிட்டிருந்தீன்னா…? – சின்னக் குழந்தைக்குத் தெரிவது கூட அந்தப் பெரிசுக்குத் தெரியவில்லை. அம்மா என்ன இப்படி இருக்கா? என்று அந்தக் குழந்தையும் அவளிடம் ஒட்டுவதேயில்லை. அதற்கு இவன் சொல்லிச் சொல்லி அந்த நல்ல பழக்கம் வந்திருக்கிறது. ஆனால் அவன் மனையாளிடம் இதை இம்ப்ளிமென்ட் பண்ண முடியவில்லை. வீட்டில் டி.வி.யை நிறுத்தி விட்டான். ஐம்பதாயிரம் ரூபாய் டி.வி…நாற்பத்திஎட்டு இஞ்ச்….வெறும் கறுப்பு போர்டு போல் தண்டத்திற்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

தாத்தா…தாத்தா..என்று இவரிடம் ஓடி வந்து விடும்தான்.  எங்கே…தியான ஸ்லோகம் சொல்லு…என்று கேட்கிறார் இவர். ஓரிரு முறை கேட்டதுதான்.  குழந்தைகளுக்குத்தான் எவ்வளவு ஞாபக சக்தி? பதினைந்து மணித் துளிகள் கொண்ட அந்த ஸ்லோகத்தை வரி விடாமல் எப்படித் துல்லியமாய் ஸ்பஷ்டமாய் ஒப்பிக்கிறான்? ஏற்ற இறக்கங்களோடு அவன் உச்சரிக்கும் அந்த ஸ்லோகம் காதுகளில் தேனாய்ப் பாய்கிறது இவருக்கு. இதைவிடவா ஒரு இறைத் தியானம் வேண்டும்? மனது உருகிப் போகிறதுதான்.

யோகா வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த காலங்களில் காந்தி மியூசியத்தை ஊரில் விடிகாலையில் சுற்றிச் சுற்றி வந்த போது குறைந்தது நூறு முறையாவது கேட்ட பின்னால்தான் அவருக்கே மனப்பாடமாகியது. குழந்தை சில முறைகள் கேட்டதோடு சரி…பிறகு அங்கங்கே திருத்தங்கள் கொஞ்சம் சொன்னார். பிடித்துக் கொண்டு விளாசுகிறதே இப்போது? ருத்ரம் கத்துக்கோ…அந்த ராகத்தோடு கேட்டு மனசுல ஏத்தணும்…மொத்த உடம்பும் சுத்தமாயிடும்…உடம்புல, நரம்புல மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி ஒரு ஸ்வர ரீங்காரம் தெய்வீகமா எப்பவும் ஓடிட்டேயிருக்கும்…ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி….அது ஒன்றுதான் அவர் மனதுக்கு நிம்மதி. அந்தக் குழந்தையுடன் கழிக்கும் பொழுதுகளில் தன் மன அவஸ்தைகளை அறவே  மறக்கிறார் சதீஷ்வரன். அது ஒன்றுதான் அவரது தற்போதைய சந்தோஷம்.

                        பாஸ்கரன் வண்டியேற்றும் சத்தம் கேட்டது. குழந்தையைப் பள்ளியில் விட்டுத் திரும்பியாயிற்று.

மக்கும் குப்பை….மக்கா குப்பை….பிரித்துப் போட்டா நலமாகும்…-பாட்டுச்சத்தம் கேட்க…விடுவிடுவென்று மாடி ஏறி வந்தவன்…குப்பை எடு…குப்பை எடு…என்று பதறினான் அவளைப் பார்த்து. சாவகாசமாய்த் தூக்கி வந்து அவனிடம் நீட்டினாள் பிரவீணா…!

நல்லவேளை…எடுத்து வந்தாவது கொடுக்கத் தெரிகிறதே…என்று நினைத்துக் கொண்டார் சதீஷ்வரன்.  ஒரு நாள் கூட கீழே இறங்கி அந்தக் குப்பை வண்டியில் கொண்டு சேர்த்ததில்லை. அம்மா…நீங்க குப்பை போடப் போனா இதையும் சேர்த்திடுங்க…என்று சொல்லி அது சேர்த்து வைத்த குப்பைப் பையையும் நீட்டி விடுகிறது. வாய் பேசாமல் வாங்கிப் போகிறாள் மிருணாளினி. அவள் ஒரு பயந்தாங்கொள்ளி.அதனால்தான் பையனும் அப்படியிருக்கிறான். தாயைப் போல பிள்ளை……அவள் அதைப் பொருட்படுத்துவதேயில்லை. பண்ணிப் பிரயோஜனமில்லை என்று உதறிவிட்டாளோ என்னவோ? அப்படி ஒரு ஜீவன் தன் வீட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறது என்றே அவள் கண்டு கொள்ளாதது போல்தான் இருந்தது. இவர்தான் பார்த்துப் பார்த்து, நினைத்து நினைத்துப்  பொறுமுகிறார். பாஸ்கரனும் கூட மனையாளோடு அட்ஜஸ்ட் ஆகிவிட்டானோ? அவ மாறாட்டா என்ன…நான் மாறிட்டுப் போறேன்….!! கழுதையோடு சேர்ந்த கட்டெறும்பு!

குறைந்த பட்சம் அவன் தேவைகளையாவது பூர்த்தி செய்து கொடுக்கிறதா அது? அதெல்லாம் தெரிந்தால்தானே? சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தால்தானே வரும்?

உங்க துணிமணியெல்லாம் போட்டுட்டுப் போங்க…வாஷிங் மெஷின்ல போட்டு எடுத்து வைக்கிறேன்…. – ஒரு நாள் சொன்னதில்லை. எல்லாமும் மிருணாளினிதான் செய்கிறாள். அட…அந்த ரெண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கென்று இருக்கும் யூனிபார்ம் துணிகளையாவது சேகரித்து, துவைத்து, மடித்து, அடுக்கி எடுத்து வைத்து…ஊறீம்…எதுவும் கிடையாது.

பாட்டி…எனக்கு நாளைக்கு மன்டே…ஒயிட் யூனிபார்ம்…ஒயிட் ஷூ…என்று மிருணாளினியிடம்தான் போய்ச் சொல்கிறது அது. சரிடா கண்ணு…பாட்டி எடுத்து வைக்கிறேம்ப்பா…ஷூவைக் கிளீன் பண்ணி வைக்கத் தாத்தாட்டச் சொல்லு…என்றாள். இவர் அழுக்கான ஷூவை சர்ஃப் போட்டு வாஷ் பண்ணி பளீரென்று வைத்தார். குழந்தைக்கு ஏக சந்தோஷம்….

எப்டி தாத்தா? புத்தம் புது ஷூவாட்டம் ஆயிடுச்சு? சூப்பர் தாத்தா…என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்து கட்டிக் கொண்டு முகத்தில் சப்புச் சப்பு என்று முத்தம் கொடுத்த போது அந்த ஜென்மமே ஈடேறி விட்டதாக உணர்ந்தார் சதீஷ்வரன்.

நல்ல வேளை இந்தக் குழந்தை பாக்கியமாவது கிட்டியிருக்கிறதே…அந்த மட்டும் புண்ணியம் செய்தோம்….எல்லாம் போகப் போகச் சரியாகும்…நாமென்ன காலம் பூராவும் இருந்தா பார்க்கப் போகிறோம்? இன்னைக்கோ…நாளைக்கோ…. என்று தேற்றிக் கொள்ள முயன்றார் சதீஷ்வரன்.  ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை…!

குப்பையைப் போட்டு விட்டு மேலே வந்த பாஸ்கரனை சரட்டென்று அறைக்குள் இழுத்துக் கொண்டது அந்தக் கை.  டப்பென்று கதவை உள்புறம் தாழ்ப்பாள் போடும்  சத்தமும் தொடர்ந்து கேட்டது.

உங்கம்மா அப்பாவோட இனியும் என்னால ஒண்ணா இருக்க முடியாது. ஒண்ணு அவுங்களக் கிளப்புங்க…இல்லன்னா நாம இந்த வீட்டை விட்டுப் போயிடுவோம்….பெங்களூர் போட்டுடுவாங்க போலிருக்குன்னு சொன்னீங்கல்ல…போயிடலாம்……உங்க அம்மா அப்பா இங்கே இருந்திட்டுப் போகட்டும். இந்த வீடு ஒண்ணும் நமக்கு வேண்டாம்….ஆனா நாம தனியாப் போயாகணும்…அதுவும் ஒரு மாசத்துக்குள்ள…நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது…இன்னைலர்ந்து முப்பது நாள்ல நாம பெங்களூர் போறோம்…தனியா இருக்கோம்…பையன் படிப்பு ஒரு வருஷம் போனாப் பரவாயில்ல…!  பார்த்துக்கலாம்…என்ன…நான் சொல்றது புரியுதா? மண்டைல ஏறிச்சா?

பிரவீணா…என்ன இது திடீர்னு? திடுதிப்னு இப்படிச் சொன்னா எப்டி?

அப்டித்தான்… நான் சொல்றபடி செய்றீங்களா இல்ல…நான் எங்க அப்பா வீட்டுக்குக் கிளம்பிப் போகட்டுமா? இனியும் என்னால பொறுக்க முடியாது…!  எனக்கு இந்த வீட்ல சுதந்திரமேயில்லை….வெறி பிடிச்சிரும் போலிருக்கு எனக்கு…!

-கதவுக்கு வெளியே காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார் சதீஷ்வரன். என்ன…என்ன…? என்று சைகையால் வினவினாள் மிருணாளினி. அவள் முகமும் மாறித்தான் இருந்தது.  சற்றுப் பொறுத்து மெல்லப் பல்லைக் கடித்துக் கொண்டே அவரை அருகில் அழைத்து அவருக்கு மட்டும் கேட்பதுபோல் பாதி வார்த்தையும், பாவமுமாய் முனகினாள்…

இதுக்குத்தான் சொன்னேன்…உங்க திருவாயை மூடிட்டுப் பேசாமக் கிடங்கன்னு… கேட்டாத்தானே?…..வினையை மடில கட்டிட்டு யாராவது சகுனம் பார்ப்பாங்களா?

உண்மையில் தன் மருமகளுக்குத்தான் சதீஷ்வரன் என்று பெயர் வைத்திருக்க வேண்டுமென்று அந்தக் கணத்தில் நினைக்கத் தலைப்பட்டார் இவர்.   சதீஷ்வரி….சதீஷ்வரி…என்று அவர் வாய் பதற்றத்துடன்  முனக ஆரம்பித்திருந்தது.

 

                                               ----------------------------------

                       

             

 

             

01 ஜூலை 2025

 

சிறுகதை  தாய்வீடு ஜூலை 2026 பிரசுரம்                                                                                                                                                       

தவறு என்பது தவறிச் செய்வது…!”







திர்த்தாற்போல் நாற்காலியைப் போட்டுக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார் நாகசாமி. கலைந்து கிடந்த செய்தித் தினசரிகளைப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தான் அவன். அடுக்க அடுக்க அந்த வரிசை தந்த அழகு இவருக்குப் பிடித்திருந்தது.                                                                                                                                                                                                                                     எதையுமே ஒழுங்காகச் செய்தால் அது எத்தனை அழகு பெறுகிறது? ஒரு விஷயம் சீராக இருப்பதில்தான் என்ன ஒரு கம்பீரம்?                                                                                                                                                                                                                                                        "உங்க கடைல பார்த்திருக்கேன் அமாவாச...சைடு ரேக்குல பேப்பர்களக் கட்டிக் கட்டி நீங்க அடுக்கியிருக்கிற ஒழுங்கிருக்கே அந்த அழகே தனி. கோடு போட்டமாதிரி ஓரமெல்லாம் கரெக்டா நிக்க, கட்டி ஏத்தியிருக்கீங்களே...அத எவனும் கவனிக்காம இருக்க முடியாது! படு சுத்தமால்ல இருக்கு உங்க கடை வேலை...?"                                                                                                                                                                                                                                                                                                                           "சுத்தம்ங்கிறதவிடங்கய்யா அப்டி வச்சாத்தான் அந்தப் பத்துக்குப் பத்து ரூம்ல நிறைய வைக்க முடியுமுங்க...கடைக்குள்ளார வந்து பார்த்தீங்கன்னா தொியும். மேலே உத்திரத்துல இடிக்கிறவரைக்கும் அடுக்கியிருப்போம். மூட்ட மூட்டயா இப்டி வாங்கிட்டுப் போறோம்ல, அதக்கொண்டு எறக்கினவுடனே காசக் கொடுத்திறமாட்டாரு மொதலாளி...எடையப்போட்டு அடுக்கிட்டுப் போடாம்பாரு...இல்லன்னா ஒரு ஒழுங்குக்கு வராதுங்க...கம்பனிக்கு அனுப்பறவரைக்கும் நாங்கதாங்க பொறுப்பு. எங்க எல்லாரையும் கட்டி மேய்க்கிறதே பெறும்பாடுங்க அவுருக்கு..."                                                                                                                                                                                                                                                                                "ஏன் அப்டிச் சொல்றே?"- நாகசாமிக்கு ஆர்வம் மேலிட்டது. நாம் சம்பந்தப்படாத பலவற்றில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று தோன்றியது.                                                                                                                                               "நாங்க ஏழெட்டுப் பேர் இருக்கமுங்க அவுருக்கு. எங்க பிடிய விட்ரக் கூடாது முதல்ல. அத விட ஏரியாதாங்க ரொம்ப முக்கியம். வருமானவாி ஆபீசுக்கு இந்தப் பக்கம் இருக்கிற பகுதி பூராவும் நம்முளுதுதானுங்க...எங்களத் தவிர யாரும் நுழைஞ்சிட முடியாது. நுழைஞ்சிடக் கூடாதுங்கிறதுல ரொம்பக் கவனமா இருப்பாருங்க. நாங்களெல்லாரும் எல்லா ஏரியாவுக்கும் போயிட்டு வருவோமுங்க...நீங்க நல்லாக் கவனிச்சிருந்தீங்கன்னா தொிஞ்சிருப்பீங்க...தெனந்தெனம் இந்தத் தெருவுல என்னமாதிரிப் பலரும் போறதப் பார்த்திருப்பீங்க...அவுக பூராவும் நம்ம ஆளுகதானுங்க...பின்னாடி சாக்கக்கட்டிக்கிட்டு அவுக பாட்டுக்கு ராகம் போட்டுக்கிட்டுப் போய்க்கிட்டேயிருப்பாங்க...யார் போனாலும் வந்தாலும் நீங்க எங்கிட்டத்தான் போடுவீங்கன்னு ஒண்ணு இருக்கு...அது வேற விசயம்...அதுதான சார் பழக்கமுங்கிறது?"                                                                                                                                                                                                                                                                    "அப்றம் எப்டி அமாவாச...வேறே ஆள்ட்டயா போடுறது? எனக்கு நீங்கதான் வரணும்...வீட்டுல கூட அவசரப்படுத்துவாங்க..யார்ட்ட போட்டா என்னன்னு? எடம் ஒழிஞ்சாச் சாிங்கிறது அவுக சொல்றது...ஆனாலும் .நான் மாட்டனே...நீங்க வரட்டும்னுதான் சொல்லுவேன்..."                                                                                                                                                                                                                                                         அமாவாசையின் முகத்தில் ஒரு பெருமிதமும், சந்தோஷமும் படர்வதைப் பார்த்தார் நாகசாமி.  வெறும் பெருமைக்காகவோ, மெப்பனை யாகவோ வந்த வார்த்தை அல்ல அது. ஆத்மார்த்தமாய் வந்தது.                                                                                                                                                                                                                              அதே போலத்தான் மற்றவர்களுக்கும் வாடிக்கை வீடுகள்  இருக்கும் என்பது அவனுக்குமோ அல்லது தனக்கோ தொியாததல்ல. ஆனாலும் அந்தப் பகுதிக்கு வீடு கட்டிக் குடி வந்தது முதல் அமாவாசையிடம்தான் போடுகிறார் அவர். அவரை ஈர்த்தது அவன் கொடுக்கும்              குரல். ஒவ்வோரு தொழில் செய்பவாிடத்திலும் ஒவ்வொரு வகையிலான தன்மை என்பது இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கிறார்கள். அதுதானே?                                                                                                                                                                                                                                                                                                                                                                                         அந்த வீதியில் காய்கறி விற்பவாிலிருந்து பால், பேப்பர், பிளாஸ்டிக் சாமான்கள், உப்பு, கோலப் பொடி, வெங்காயம், தேங்காய், ஐஸ்கிரீம்,என்று பலதையும் விற்றுக் கொண்டு வரும் ஒவ்வொருவாிடமிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி அழைப்பினைக் கண்ணுற்றிருக்கிறார் இவர்.       தங்களை, தங்கள் வரவினை அடையாளப்படுத்துவதற்காக. அத்தனையும் ரசனைக்குரியவைதான். எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ராகத்தின்,சங்கீதத்தின் இழை தொற்றிக் கொண்டு மிதப்பதாகவே தோன்றும் இவருக்கு.                                                                                                                                                                                                                                                       "மீனு,,,மீனோய்...மீனு...மீனோய்...கெண்ட...கெளுத்தி...இரா...அயிர மீனோய்...."                                                                                                                                                                       "அய்யய்ய...என்னங்க இது? இதெல்லாம் வருது இங்கே? உவ்வே..."                                                                                                                                                                                                          அந்த வார்த்தைகளுக்கே வாயிலெடுத்து விடுவாள் போலிருந்தது.                                                                                                                                                                                                    முன்பிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் இந்த மாதிரிச் சத்தமெல்லாம் கேட்டதில்லை அவள்.                                                                                                                                                                                                                                                                       "கெளசல்யா, சுப்ரஜா, ராம பூர்வா, சந்யா.. ப்ரபப்ததே....உச்சிஷ்ட நரசாம்...".என்பதோடு சாி. பக்கத்து வீட்டுச் சத்தம் கூட காதில் விழ வழியில்லை. அதுதான் தனித் தனிப் புறாக் கூண்டுகள் ஆயிற்றே?                                                                                                                                                                                                          "வீதின்னா எல்லாமும் வரத்தான் செய்யும்...எல்லாரும் கலந்துதானே குடியிருக்கோம்..."                                                                                                                                                                                                                                                                                                                                                      பட்டுப் பட்டென்று சன்னல் கதவுகளைச் சாத்துவாள் நாகலட்சுமி.                                                                                                                                                                                                                 "என்ன...என்னாச்சு?" என்பார் இவர் பதறிக்கொண்டு.                                                                                                                                                                                                                                         "உங்களுக்கு மூக்குப்பொடி போட்டுப் போட்டு மூக்கே அடச்சுப் போயாச்சு...எந்த வாசனையும் தொியறதில்லே...வீடம்புட்டும் ஒரே பொடி நாத்தம்...முதல்ல அத நிறுத்தப் பாருங்க...இந்தக் காலத்துல யார்தான் இப்டிப் பொடி போடுறாங்க…நேஸ்டி உறாபிட்….                                                                                                                                                                                                                                                                                         "சாி..சாி...முயற்சி பண்றேன்...அதுக்கு ஜன்னல எதுக்கு சாத்துவானேன்?     "பக்கத்து வீட்ல ஏதோ என்.வி. சமைப்பாங்க போலிருக்கு...ஒரே நாத்தம் தாங்க முடியலை...ஜன்னல்கிட்டப் போய் மூக்கை வச்சுப் பாருங்க...அப்பவாவது வாடை தொியுதா பார்ப்பம்..."                                                                                                                                                                                                                                                               "அதுக்கென்ன பண்றது? எல்லாந்தான் இருக்கும்...அப்டிப் பார்த்தா உன் பேர்லயும் என் பேர்லயும் இருக்கே நாகம்...அதையே உரிச்சு சமைச்சு சாப்பிடறவா இருக்கா தொியுமோல்லியோ...உணவே கிடைக்கலேன்னு வச்சிக்கோ...மனுஷன மனுஷனே அடிச்சிக் கூடத் தின்னுடுவான்...நடந்த கதையெல்லாம் இருக்கு...உட்கார்ந்து கேட்கறியா...சொல்றேன்..."                                                                                                                                                                                                                                                                                                                                              "போதும்...இப்டித்தான் எதுக்கோ எதையோ சொல்ல ஆரம்பிச்சிடுவீங்க...உங்க ஜெனரல் நாலெட்ஜ் எல்லாம் உங்களோடவே வச்சிக்குங்க...எனக்கு வேண்டாம்..."                                                                                                                                                                                                                                    

நாகசாமிக்கு             நாகலெட்சுமி என்ற பெயரேபிடித்துப்போய்த்தான் கல்யாணம் கட்ட சம்மதித்தார். "நீ பார்த்திட்டீல்ல...நீ பார்த்திட்டீல்லம்மா...முடி...கல்யாணத்த முடிங்கிறேன்..." என்று படிக்காத  மேதை ரங்கன் பாணியில்தான் அவர் சம்மதம் தொிவித்தார்.    அதை நினைவு கூறும் தன் தந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்வார் இப்போது.                              "அது எப்படிரா...சம்மதிச்சே? நாங்கூட ஒங்கம்மாவ அவளுக்கே தொியாம அடிக்கடி கோயிலுக்குப் போயிப் பார்த்துத்தான் உறுதி செஞ்சேன்...எம் பிள்ள நீ இப்படியிருக்கியே?"                                                                                   "நா உங்களப் போலல்லப்பா...எங்க அம்மாவப் போல...அவுங்க உங்களையே சம்மதிச்சிருக்காங்களே...அதுக்கு மேலயா?"                                                                                                                                                                                                                                               "அடி செருப்பால...திமிரெடுத்த பயலே...'"                                                                                                                                                                                                                                                                      "விடுங்க...அவனென்ன உண்மையைத்தானே சொல்றான்...அதுக்கேன் உங்களுக்கு இம்புட்டுக் கோவம் வருது..."                                                                                                                                                                                                                                                                                     "கோபமில்லடி கோபமில்ல...எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்...அவன் என்னைக் கேலி பண்றதுனால நானென்ன குறைஞ்சா போயிடப்போறேன்? அது ஒண்ணுமில்லே...என் கோபமெல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணின அன்னியோட போயிடுச்சு...பையன் தோளுக்கு மேலே என்னிக்கு வளர்ந்தானோ அன்னைக்கு சுத்தமா வடிஞ்சு போச்சு..."                                                                                                                                                                                                                                                      "பரவால்ல...அப்படியாச்சும் ஒரு நல்லது நடந்திருக்கே..."                                                                                                                                                                                                                         நாகலெட்சுமியோடு பேசும்போதெல்லாம் சுவாரஸ்யம் பிய்த்துக்கொண்டு போகும் இவருக்கு. பொதுவாக ஒரு வீட்டில் உள்ள ஆம்பிளைகளுக்குத்தான் நகைச்சுவை உணர்வு உண்டுன்னு பார்த்திருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன்...இங்க நீயே இந்தப் போடு போடுறியே..." என்று மனைவியின் வாத்சல்யத்தை வாய்விட்டு அடிக்கடி புகழ்ந்திருக்கிறார் இவர். ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக் கொள்வதைப் பார்த்து                பையனே விழுந்து விழுந்து சிரித்திருக்கிறான்.                                                                                                                                                                                                                                         'சர்தான், ரொம்பக் கேலிக்கூத்தான குடும்பம் போலிருக்கு...' என்று அதையும் ஒரு மூன்றாம் நபர் சொல்வதைப் போலவே சொல்லிச் சிரித்துக் கொள்வார் இவர்.                                                                                                                                                           'எனக்கு மட்டும் நகைச்சுவையுணர்வு இல்லையென்றால் என்றோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்' - சொன்னார் மகாத்மாகாந்தி. அந்த உணர்வு மனசை எவ்வளவு லேசாக்கி விடுகிறது?                                                                                                                                                                                                                                                                        வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். எவ்வளவு அழகாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இந்தச் சிரிப்பு என்கிற மா மருந்துதான் தன்னை இதுநாள்வரை நோய் அற்றவனாக நிறுத்தி வைத்திருக்கிறதோ என்னவோ?                                                                                                                                                                   "அப்பா, நீங்க சிரிச்சா பழைய புராணப்படங்கள்ல வர்ற ராட்ச்சசன் மாதிரியே இருக்குப்பா..." - ஒரு நாள் சொல்லியே விட்டான் பையன். அதுநாள் வரை சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே வைத்திருந்தான் போலிருக்கிறது.                                                                                                                                               கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றியது இவருக்கு. ஆனாலும் சமாளித்துக் கொண்டார் உடனே.                                                                                                                                                                                                                                                                                              "நீ உங்க தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா சிரிப்பெல்லாம் பார்த்ததில்லையே...காண்பிக்கிறேன் பாரு..." என்றார். சொன்ன கையோடு உள்ளே டிரங்குப் பெட்டிக்குள் பாட்டி கையால் பத்திரப்படுத்தி வைத்திருந்த இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்துக் காண்பித்தார்.                                               காண்பிக்கும் முன் ஒரு கண்டிஷன் போட்டார். போட்டோவைப் பார்த்துப் பயந்து கொண்டால்,தான் பொறுப்பில்லை என்று.                                                                                                                                                                                                                      "என்னப்பா இது! அனிமல்ஸ் மாதிரியே இருக்காங்க எல்லாரும்..." என்றான் எடுத்த எடுப்பில். என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும் என்று அமைதி காத்தார் அவர்.                                                                                                                                        "எவ்வளவு பொிய மூக்கு, எவ்வளவு பொிய மண்டை, எவ்வளவு பொிய காது, எவ்வளவு பொிய கண்ணு, அடேங்கப்பா...என்னப்பா இது பல்லெல்லாம் இம்புட்டுப் பொிசா இருக்கு? அப்பாடீ...!!"                                                                                                                                                                                                                                                                                       "வாய் விட்டுச் சிரிக்கிறார் பாரு, அதான் உங்க தாத்தாவாக்கும்...என் கல்யாணம் முடிஞ்சு உறாய்யா உட்கார்ந்து தாம்பூலம் தாிக்கிற நேரம் அது...வெத்தலைச் செல்லத்துல எம்புட்டு வெத்தல இருக்கு பார்த்தியா? அதுகூட கனக் கரெக்டா விழுந்திருக்கு பாரு..."                                                                         "ஆடு கொழை தின்ன மாதிரி வச்சுத் திணிப்பாங்க  போலிருக்கு..."                                                                                                                                                                                      "கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அப்பா சிரிச்சிருந்தார்னு வச்சிக்கோ...நிச்சயம் நானும் இங்க இருந்திருக்க மாட்டேன்...நீயும் வந்திருக்க மாட்டே...என்ன பண்றது? எல்லாம் தலவிதி...லிபி...நெத்தில அழுத்தமாத்தான் எழுதியிருக்கு...இப்படிக் குப்பை கொட்டணும்னு..."                                                                                                                                                                                                                                                             மூவரும் அன்று வாய்விட்டுக் கைகொட்டிச் சிரித்தனர். எப்பொழுதும் அப்படிச் சிரித்துக்கொண்டேயிருந்தால் போதுமா? ஆக வேண்டிய காரியங்கள்?                                                                                                                                                                "ப்டீ சேர்த்து வச்சிட்டேயிருந்தா என்னைக்குத்தான் இந்தக் குப்பைகளையெல்லாம் ஒழிக்கிறது? எவ்வளவு தூசி அடையறது? இதையெல்லாம் ஒழிக்கப்படாதா? " - ரொம்பவும் சங்கடப்பட்டு நச்சு நச்சென்று தும்மித் தீர்த்தாள் நாகலெட்சுமி.                                                                                                                                                                                                                                                                          அவளின் கோரிக்கையை நிறைவேற்றும் முகத்தான் காரியம் ஆகிக் கொண்டிருக்கிறது இப்போது!                                                                                                                                                                                                                                                                                 "சாிங்கையா...சொல்லுங்க...நிறுக்கட்டுமா...இல்லே இப்டியே ஒரு ரேட் போட்டு எடுத்துக்கவா...?"                                                                                                                                                                                                                                                                                                              "நிறுக்கறதுக்கு என்ன குவிஞ்சா கெடக்கு? என்ன ஒரு ஆரேழு மாசம்தானே ஆகும்? "                                                                                                                                          "இல்லீங்கய்யா...ரெண்டு மூணு மாசம் கூட ஆகலைன்னு நினைக்கிறேன்...பேப்பர் அளவைப் பார்த்தா எனக்குத் தொியும்ல...அஞ்சு கிலோ கூடத் தேர்றது கஷ்டம்ங்க..."                                                                                                                                                                                                                                      "சாி...எடுத்துக்குங்க..." - சொல்லியவாறே அடுப்படியில் ஒரு பையில் சேர்த்து வைத்திருந்த பால் பைகளையும் கொண்டு வந்து போட்டார்.                                                                                                                                                                                                       இப்படி அவன் வரும்போது ஒழித்தால்தான். வேறு என்னவெல்லாம் கழிக்க வேண்டும் என்று நாகுவுக்குத்தான் தொியும்.                                                                                                                                                                                                                                        "கொஞ்சம் இரு வந்திர்றேன்..." என்று விட்டு மாடியைப் பார்த்து ஓடினார். சற்று மிரண்டு பார்க்க ஆரம்பித்தான் அமாவாசை.                                                                                                                                                                                                                                         "இருங்க...இருங்க...வேட்டை...ஸ்லாப்பைமூடிடாதீங்க...நா பார்க்கணும்..."                                                                                                                                                               அங்கே தண்ணீர் தொட்டியைக் கழுவிக் கொண்டிருந்த  வேட்டையனைத் தடுத்தார் நாகசாமி.                                                                                                                                                                                                                                                                                            "நீங்க                பார்க்காம மூட மாட்டேங்கய்யா..."                                                                                                                                                                                                                                                      "மதியம் மூணு மணி வரைக்கும் தொட்டி திறந்தே இருக்கட்டும்...சூரிய ஒளில அப்பதான் அந்த மக்கு வாடையெல்லாம் போகும்...சுண்டக் காயட்டும்..."                                                                                                                                                                                      "அப்போ இப்பத் தண்ணி ஏத்தலீங்களா...?"                                                                                                                                                                                                                                                                         "ஊஉறீம்...நல்லாக் காய்ஞ்ச பின்னாடிதான்..."                                                                                                                                                                                                                                                          "நீ வேணா ஏத்திக்கோ...காசு தர்றேன்..." வாய் நுனிவரை வந்ததை அடக்கிக் கொண்டார். இந்த அதீத நகைச்சுவையுணர்வு பல சமயங்களில் அதிகப் பிரசங்கித்தனமாகப் போய் விடுகிறது. தண்ணி போடும் பழக்கம் அவனுக்கு இருக்கும் என்றாலும் அதைத் தான் சொல்வது எப்படிச் சரியாகும்? தன் வீட்டுக்கு வேலைக்கு வரும்போது அப்படி வந்து நின்றால் 'இப்டியெல்லாம் வரக்கூடாது' எனலாம். உடம்பை ஏன் கெடுத்துக்கிறே? என்று அட்வைஸ் பண்ணலாம். ஆனால் வேட்டையன் அப்படியில்லையே? தன்னிடம் எத்தனை மாியாதை அவனுக்கு?                                                                                                                                                                                                                                                                                                                        "அய்யா, நீங்களெல்லாம் இருந்தபோது கிடைச்ச மாியாதயெல்லாம் இப்ப சுத்தமா இல்லைங்க...ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுறாங்கய்யா...எல்லாமே தலை கீழா மாறிக் கெடக்குதுங்கய்யா..."                                                                                                                                                                                                         "ஏன் அப்டிச் சொல்றே?" - அக்கறையோடு கேட்டார் இவர்.                                                                                                                                                                                                                               "என்னத்தங்கய்யா சொல்றது? டூட்டி நேரத்துல ஆபீசரே தண்ணியப் போட்டுட்டு வந்து உட்கார்ந்தா வெளங்குமாங்கய்யா...? பொம்பளைங்கல்லாம் ரொம்பப் பயப்படுறாங்கய்யா...அவர் ரூமுக்குள்ள போமாட்டேங்கிறாங்க...நீங்க இருக்கைல எல்லாத்தையும் வெளக்கிச் சொல்லி நீங்களே அம்புட்டையும் வாங்கிப்புடுவீங்க...இப்பல்லாம் அதில்ல...கொண்டு வையுய்யாங்கிறதோட சாி...கையெழுத்தாகி வந்த அன்னிக்குத்தான் நிச்சயம்..என் ஜி.பி.எப். போட்டு இருபது நாளாச்சுங்கய்யா...இன்னும் காசு கைக்கு வந்தபாடில்ல...என் மவளுக்கு ஒரு மாப்ள பார்த்திருக்கேன்யா...பாிசம் போட்டுடலாம்னு பார்த்தா பைசா கைக்கு வரமாட்டேங்குது...நாள் குறிக்க முடிலங்கய்யா...அதுக்குத்தான் சொன்னேன்...நீங்க வெளியேறைல என்னையும் தயவுசெஞ்சு வெளியேத்திடுங்கன்னு...நீங்க செய்யாமப் போயிட்டீங்க..."

                                                                                                                                                                                    வேட்டையனுக்கு ஒரு மாறுதல் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்பதில் நாகசாமிக்கும் வருத்தம் உண்டு. ஆள் இல்லாமல்    அவன் குடும்பம் பாிதவிக்குமே என்ற எண்ணம்தான் இவருக்கு. தனக்கு அவ்வப்போது வந்து வீட்டு வேலை செய்வது தடை படுமே என்ற              எண்ணமிருக்குமோ என்று அவனாகவே நினைத்துக்கொண்டு அதையும் வாய்விட்டுச் சொல்லி விட்டான்.                                                                                                                                                                                             "லீவுல வந்து செய்து கொடுக்கிறேன்யா...அதப்பத்தியெல்லாம் நீங்க ஒண்ணும் நினைக்க வேண்டாம்...அதுக்கு நா பொறுப்பு..." என்று வேறு சொல்லிக் கொண்டான். தனக்கு வந்து செய்வதைவிட வேறு ஆம்பிளை இல்லாத அவன் குடும்பம் கஷ்டப்படுமே என்ற ஆதங்கம்தான் இவாிடம் பெருகி நின்றது. வாழ்க்கையில் கஷ்டத்தை உணர்ந்தவனுக்குத்தானே மற்றவர்கள் கஷ்டத்தையும் உள்வாங்க முடியும்?                                                                                                                                                                                                                                                         "சாி, வாங்க...கீழே போகலாம்..." சொல்லிவிட்டு இறங்கினார் இவர்.                                                                                                                                                                                                        சுற்றிலும் கூட்டி சுத்தம் செய்து செடி கொடிகளை முறைப்படுத்தி தண்ணீர் இறங்கப் பாத்தி கட்டி, சலிக்காமல் ஒவ்வொன்றுக்கும் ரெண்டு வாளித் தண்ணீராவது ஊற்றி அழகு பார்த்திருந்தார்  வேட்டை.                அப்பப்பா! வேட்டையன் ஒரு முறை வந்து போனால் வீடு எவ்வளவு திருத்தமாகி விடுகிறது?                                                                                                                                                                                                                                                                                               கொல்லைப்புறம் சென்று வாளியில் கிடந்த தண்ணீரில் கை, கால் கழுவ ஆரம்பித்தார் வேட்டையன்.  வாசலில் அமாவாசையை அனாவசியமாய் காக்க வைத்து விட்டோமே என்கிற ஆதங்கத்தில் -                                                                                              "நேரமாயிடுச்சா...நீங்க பல எடத்துக்குப் போறவரு...உங்களக் காக்க வச்சிட்டனே..." என்றார்.                                                                                                                                                                                                                                                                                                                                    "இருக்கட்டுங்கய்யா..."சொல்லியவாறே நிறுக்க ஆரம்பித்தான் அமாவாசை.                                                                                                                                                     "எதுக்கு? நாந்தான் வேணாம்னல்ல...!" தூக்கிப் போடுங்க சாக்குல..." என்றார் இவர்.                                                                                                                                                                    அமாவாசையின் முகத்தில் மெல்லிய புன்னகை. இதற்குள் நாகு எதை எதையோ கொண்டுவந்து போட்டிருந்தாள் அங்கே.                                                                                                                                                                                                                                                 காலி அட்டைப் பெட்டிகள், பாட்டில்கள், டப்பாக்கள், உடைந்த பைப்கள், இரும்புகள், பழைய செருப்புகள்...என்று என்னென்னவோ இருந்தன.                                                                                                                                                                                                                                  "இதுக்கு, இந்தப் பால் பாக்கெட்டுகளுக்கு, எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு ரேட் போட்டுக்கிறேன்யா...பேப்பர் ஆறு கிலோ வருதுங்கய்யா          வேறே ஏதாச்சும் இருக்குங்களா...?"                                                                                                                               "அவ்வளவுதான் அமாவாச...ஒரு நாளைக்கு பரண் மேல இருக்கிறதெல்லாம் ஒழிக்கணும்...என்னால ஒத்தையா முடியாது...எனக்கு தூசியும் ஆகாது..."                                                                                                                                                          "உங்களுக்கு என்னைக்குத் தோதுப் படும்னு சொல்லுங்கய்யா,...அன்னைக்கு சாி பண்ணிடுவோம்..." - சொல்லியவாறே அவன் நீட்டிய காசை வாங்கிக் கொண்டார் நாகசாமி.                                                                  "நீங்க வந்து எடுத்துக்கிட்டதே பொிய விஷயம்...ரெகுலரா வர்றீங்க பாருங்க...அதான் வேணும்...காசு பொிசில்லை...இந்தாங்க பிடிங்க...-ஒரு இருபது ரூபாயை எடுத்து நீட்டினார் நாகசாமி. டீ சாப்பிடுங்க…என்றார்.                                                                                                                                                                                                           "இருக்கட்டுங்கய்யா..." என்றவாறே மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான் அமாவாசை.                                                                                                                                    வெளியே நின்ற சைக்கிளில் சாக்கு மூட்டையை வைத்துக் கட்டும் சத்தம். அதைத் தொடர்ந்து "போயிட்டு வர்றேங்கய்யா..."                                                                                                                                                                                                                                           "இந்தா பிடி..." கையிலிருந்த காசை நாகுவிடம் நீட்டினார் நாகசாமி.                          "என்னாச்சு...இவ்வளவுதானா?"                                                                                                                                                                                                                                                                                             "ஆம்மா...வேறே எம்புட்டு வரும்...இது ஒரு காசா...இதையும் அவன்ட்ட வாங்கணுமான்னு இருக்கு எனக்கு...எத்தனையோ வீடுகள்ல பழைய பேன்ட், சட்டைன்னெல்லாம் அப்டியே தூக்கிக் கொடுத்திடுறாங்க...எடம் காலியானாச் சாின்னு...நாமதான் கணக்குப் பண்ணிகிட்டிருக்கோம்..."                                                                                                                                                                                                

"எல்லாரும் அப்டி இருப்பாங்களா...ஒருத்தர் அப்டீன்னா, ஒருத்தர் இப்டித்தான்...நீங்களும் கணக்குப் பார்க்காம அவனாக் கொடுக்கிறதத்தானே வாங்கிக்கிறீங்க...? எதுவும் கட்டாயப் படுத்திறதில்லையே...?"                                                                                                                                                                                                                                     "இன்னும் அதுவும் வேறே வேணுமா? அப்புறம் இந்தப் பக்கம் தல வச்சுக் கூடப் படுக்கமாட்டானாக்கும்...கட்டாயப்படுத்தி அப்டி என்ன கோட்டையா கட்டப் போறோம்? சும்மாத் தூக்கிக் கொடுத்தாலும் நாம ஒண்ணும் குறைஞ்சு போகப் போறதில்லையே..."                                                                                                                                      வாசலில் திரும்ப கேட் திறக்கும் சத்தம்.                                                                                      "அய்யா...நா வர்றேனுங்க..." -மாடித் தண்ணீர்த் தொட்டி  சுத்தம் செய்து வேலை முடித்த வேட்டையனின் விடை பெறும் குரல்.                                                                        "கிளம்பியாச்சா...இதோ வந்துட்டேன்..".என்றவாறே பர்சை எடுத்துக்கொண்டு ஓடினார் நாகசாமி. அதிலிருந்து உருவி நூறு ரூபாயை எடுத்து நீட்டினார் அவனிடம்.                                                                                                                                                                                                        "வேண்டாங்கய்யா...இருக்கட்டும்...இதுக்கெல்லாம் காசு வாங்கினா எப்டீ...அம்மா தோச சுட்டுக் கொடுத்தாங்க...நிறையச் சாப்டுட்டேன் அதுவே போதும்..." - சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனை மீறி ஒரு பொிய ஏப்பம் வந்தது வேட்டையனுக்கு. அடுத்த நிமிடம் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார்.                                                                                                                                                                                                                                                                                                           நாகசாமி அப்படியே திண்ணையில் நின்றிருந்தார்.                                                                                                                                                                                                                                   "மனுஷாள்தான் பொிசு...காசா முக்கியம்...? ரெண்டு மணி நேரமா சாியான வேல அவருக்கு...வீட்டைச் சுத்தி எவ்வளவு நீட்டாயிடுச்சிபாருங்க...யார் செய்வாங்க நமக்கு...? காசத் திணிச்சிருக்கப் படாதா? இப்படியா வெறுமே அனுப்புவீங்க...?" -நாகுவின் பளீர் கேள்வி.                                                                                                                                                                                                       குற்ற உணர்ச்சி மேலிட பார்க்கவே பாவமாய் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் நாகசாமி.         சாப்டதே போதும் என்று திருப்தியோடு கிளம்பிப்  போன வேட்டையனின் பெருந்தன்மையும் மனசும் அவரை வியக்க வைத்திருந்தது..               --------------------------------------                                                                                                                                                                                                                                                                                                                               ---------------                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

  இந்திரா பார்த்தசாரதி   - படைப்பு வாசிப்பனுபவம் - பேசும் புதிய சக்தி - ஜூலை 2025  பிரசுரம்         த மிழ் இலக்கியச் சூழலில் பல பழம் பெரும...