26 நவம்பர் 2019

“ஒரு கொத்துப் புல்“- எழுத்தாளர் திரு எஸ்.வைத்தீஸ்வன் சிறுகதைத் தொகுப்பு - “முத்தம்மா“-சிறுகதை வாசிப்பனுபவம் - உஷாதீபன்


“ஒரு கொத்துப் புல்“- எழுத்தாளர் திரு எஸ்.வைத்தீஸ்வன் சிறுகதைத் தொகுப்பு -                   “முத்தம்மா“-சிறுகதை வாசிப்பனுபவம் - உஷாதீபன்
வெளியீடு:- வித்யுத் பப்ளிகேஷன்ஸ், குரோம்பேட்டை, சென்னை-44 (போன்-9003107654)
       டன்கட்டை ஏறும் வழக்கம் ஒழியாத ஒரு காலகட்டக் கதை முத்தம்மா. அந்தக் காலத்தில் இளம் பிராயத் திருமணம் நடைமுறையிலிருந்தது. பெண்கள் வீட்டில் இருக்குமிடம் தெரியாமல் வாழ்ந்த காலம். ஆண்கள் வெளியே சென்றிருக்கும் நேரம்தான் அவர்களுக்கு சுதந்திரம். குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்குள் நுழையும் ஆண்களைக் கண்டதும் அது அப்பாவோ, கணவனோ யாராயினும் ஓடிப்போய் மறைவில் தங்களை ஒளித்துக் கொள்வார்கள். வீட்டு ஆம்பளைகள் அழைத்தால் வெளித் தோன்றுவார்கள். சுருக்கமாய், அமுத்தலாய் பதில் சொல்வார்கள். இருக்கச் சொன்னால் தூ’ண் மறைவில் மறைத்துக் கொண்டு நிற்பார்கள். தேவையில்லையெனில் சடக்கென்று உள்ளே போய் விடுவார்கள். பெண்கள் ஒடுங்கிக் கிடந்த காலம் அது. ஆண்களின் அன்பு, பிரியம், பாசம் என்பதெல்லாம் தனிமையில்தான் வெளிப்படும். வீட்டின் பொது வெளியில் மருந்துககும் தென்படாது. அப்படித் தென்பட்டால் அது தனி காரெக்டர்.
       மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவன், மருமகளைக் கொடுமைப்படுத்திய மாமனார், மாமியார் என்று பலவகை உண்டு. தான் அனுபவித்த கொடுமைகளை நினைத்து நினைத்துப் புழுங்கி, அந்தக் குரோத மனப்பான்மையில், இவள் மட்டும் சந்தோஷமாக இருப்பதாவது? என்று தன் மருமகளைக் கொடுமைப்படுத்திய மாமியார்கள் அநேகம்.
       ராஜபேட்டையாய் நீண்டு கிடக்கும் வீட்டினை சாணி போட்டு மெழுகி, பூச்சி பொட்டு வராமல் வைப்பது அந்தக் கால வழக்கம். அந்த மாதிரி மொத்த வீட்டையும் ஒரே ஜீவனை குனிந்து அமர்ந்து, நகர்ந்து மெழுக வைத்து, குத்தம் குறை சொல்லி, பார்த்து ரசித்த ஜீவன்கள் எத்தனையோ. இரவில் வலது கையில் தடியோடு, இடது கையில் லாந்தரோடு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வலம் வரும்  மாயக் கிழவிகள் போல் ஆண்டு கொண்டிருந்தவர் பலர். கடைசியாகச் சாகக் கிடந்த நாட்களில் நீதான் எனக்கு செய்வே, உன்னை விட்டா எனக்கு வேறே யாருமில்லே...என்று கண்களில் நீர் மல்க உருகி, தாங்கள் பண்ணிய கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோரி பாவங்களைக் கழுவிக் கொள்ள முயன்றவர்களும் அவர்களே...!
       ரெண்டே ரெண்டு மண் ஆலச்சட்டி விளக்கு கைதவறி உடைந்து விட்டது என்பதற்காக நாள்பூராவும் அம்மாவை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த (சோறு தண்ணியின்றி) தாத்தாவைத் தெரியும் எனக்கு. முட்டாப்பயலுங்க...!என்று அந்தச் சின்ன வயதில்  உடனுக்குடன் எதிர்வினையாற்றியிருக்கிறேன் நான்.
       இப்படியாகப் பெண்ணடிமைத் தனம் விஞ்சித் தலை தூக்கியிருந்த அந்தக் காலத்தில் யாரும் எதிர்பாராத மிதமிஞ்சிய அந்நியோன்யத்துடன் வாழ்ந்த தம்பதியர் ரொம்பவும் அபூர்வம். என் பெண்டாட்டியக் கொஞ்சுறதுக்கு நான் யார்ட்டப் பர்மிஷன் கேட்கணும் என்று வெளிப்படையாகவே கொஞ்சி, கெஞ்சி மகிழ்ந்த ஆதர்ஸ  தம்பதியரும் உண்டுதான்.
       அப்படி ஒரு தம்பதியரின் கதைதான்  இந்த “முத்தம்மா“.    அந்தக் காலத்தில் வீதிவரைதான் மனைவி. இப்பொழுதும் அதே நிலைதான். ஆனால் சில இடங்களில் மனைவியும் மயானம் வரை செல்வதை, சென்றதைக் கேள்விப்படுகிறோம். வாரிசு உறவு என்று யாரும் இல்லாதபோது மனைவியே கொள்ளி வைத்த நிகழ்வு கூடத் தெரிய வருகிறது.
       இந்த முத்தம்மா அப்படியில்லை. ஆசைக் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் யார் தடுத்தாலும் கேளேன் என்று கணவனின் சிதையில் சென்று படுத்துக் கொண்டு எரிந்து போகிறாள். எம்பேரைச் சொல்லுங்கள், யாருக்கும் நெருப்பு சுடாது என்று கத்திக் குரல்கொடுத்துக் கொண்டே இறக்கிறாள்.
       தீபாவளிப் பண்டிகையின்போது தீக்காயம் பட்டுக் கொண்ட பேரனுக்கு கதை சொல்லும் பாட்டி முத்தம்மா முத்தம்மா என்று சொல்லிக் கொண்டே பேரனுக்கு வெண்ணையையும், விளக்கெண்ணெயையும் மாறி மாறித் தடவி காயத்தின் வேதனை போக்குகிறாள். சில நாளில் அந்தப் புண்ணும் ஆறிப்போகிறது.
       குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள்,முதியோர், மூதாதையர் மீது நம்பிக்கையும், மரியாதையும் எழுவதற்கும், அவர்கள் இழைத்த தவறுகள் தொடரக் கூடாது என்று உணர்த்துவதற்கும், எப்படிப்பட்ட காலங்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்து உணர்ந்து திருந்துவதற்கும், பக்குவப்படுவதற்கும் இந்த அனுபவப் பகிர்வுகள் பெரிதும் உதவுகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
       கொடுமைப் படுத்திய கணவன் மிகக் குறுகிய காலத்தில் மரித்தபோது பெண்கள் அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றார்கள் என்றே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. மனதுக்குள் எழுந்த வருத்தத்தை விட, சோகத்தைவிட அவர்களின் ஆழ்மனது அந்த விடுதலையை எண்ணி சந்தோஷமே கொண்டிருக்கும் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.  ஆனால் மறுமணமின்றி உடனுக்குடன் வெள்ளைச் சேலை தரிக்கச் செய்து, தலையை மழிக்கப் பண்ணி அழகு சிதைக்கப்பட்ட அந்தக் கொடுமை எவராலுமே பொறுத்துக் கொள்ள முடியாத கொடுமைகள்.
       கொள்ளுப்பாட்டி முத்தம்மா வாழ்ந்து மறைந்த காலம் 1800க்குப் பக்கமாக இருக்கலாம் என்று ஆசிரியர் குறிப்பிடுவதும், பின்னர்தான் சதிவழக்கை எதிர்த்து 1825 கால கட்டத்தில்தான் சட்டம் அமுலாக்கப்படுகிறது.
       ஆனாலும் தீக்காயம் பட்டால் “முத்தம்மா...முத்தம்மா” என்று சொல் எனப் பாட்டி சொல்லிக் கொடுத்த பிற்காலம் இன்றைய மூத்த தலைமுறையினரின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் படமாக விரிந்து நம் பேரக் குழந்தைகளுக்கு நாமும் ஏதோவொரு வகையில் புனைவு வெளியில்  அவர்களைத் தைரியப்படுத்தும் ஒன்றை கற்பனைத்து உருவாக்கத்தான் வேண்டும் என்கிற ஆர்வத்தை, அவசியத்தை  இக்கதை நமக்கு ஏற்படுத்துகிறது.
       எழுத்தாளர் திரு எஸ்..வைத்தீஸ்வரனின் இந்தத் தொகுதியிலான இக்கதையை நாம் படித்து முடிக்கையில் நாற்பது, ஐம்பது, அறுபதுகளைத் தாண்டிய வாசகர்கள் நிச்சயம் தங்கள் இளமைக் காலத்து அனுபவங்களை அசைபோட்டுத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள நிச்சயம் முயல்வாரகள் என்பது திண்ணம். ஒரு கொத்துப்புல் சிறுகதைத் தொகுதிக்கு பெருமை சேர்க்கும் கதைகளில் இதுவும் ஒன்று என்பது நிச்சயம்.
                                  ----------------------------------------------------------                                         

24 நவம்பர் 2019

“ஒரு கொத்துப் புல்“-எழுத்தாளர் திரு. எஸ்.வைதீஸ்வரன் சிறுகதைத் தொகுப்பு.-வாசிப்பனுபவம்


“ஒரு கொத்துப் புல்“-எழுத்தாளர் திரு. எஸ்.வைதீஸ்வரன் சிறுகதைத் தொகுப்பு.-வாசிப்பனுபவம்
வெளியீடு:- வித்யுத் பப்ளிகேஷன்ஸ், நெமிலிச்சேரி, குரோம்பேட்டை, சென்னை-44.                                                             --------------------------------------
       படைப்பாளி இயற்கையை, மனிதர்களை, பிற ஜீவ ராசிகளை, மரம் செடி கொடிகளை என்று காணுகின்ற எல்லாவற்றையும் ரசிக்கக் கூடிய ஒருவனாக இருத்தல் வேண்டும். கருணை உள்ளம் கொண்டவனாக, நேச மனம் படைத்தவனாக, இரக்கச் சிந்தை கொண்டவனாக இருந்தால், எந்தவொரு சிறு நிகழ்வும் அவனுக்குள் பாதிப்பை ஏற்படுத்த முடியும். அந்த பாதிப்பின் தாக்கம் அவன் மனதினில் அதீத நெருடலை ஏற்படுத்தி, சதா அவனைத் துன்புறுத்தி, அதற்கு வடிகாலாக  சிறந்த படைப்பை அவன் வழங்குவதற்கு வழி வகுக்கும்.
       செல்லுமிடமெல்லாம் அவனுக்குக் கதைகள் இருந்து கொண்டேயிருக்கிறது.  பார்க்கும், பேசும் மனிதர்களிடமெல்லாம் அவனுக்கு ஏதேனும் ஒன்று கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. காணும் காட்சிகளிலெல்லாம் ஏதோவொன்றை அவன் வித்தியாசமாக உணர்கிறான். தன் வாழ்க்கையோடு  அதனைப் பொ

ருத்திப் பார்த்துக் கொள்ளவும், இரக்கச் சிந்தையைப் படர விடவும், தன்னால் இயன்ற அளவிலான உதவிகளைச் செய்யவும் முயல்கிறான்.
       இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையாக அவன் சொந்த வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் அவனுக்குத் துணை நிற்கின்றன. பிறந்த இடம், பெற்றோர், சுற்றம், வளர்ந்த விதம் இப்படிப் பலவும் அவனை உருவாக்கி நிற்கும் அடிப்படை நிலைகளாக அமைகின்றன.
       எழுத்து, தீபம், கணையாழி போன்ற பழம்பெரும் சிற்றிதழ் காலம் முதல் தரம் மிக்க படைப்புக்களைத் தந்து வருபவரான மதிப்பிற்குரிய  படைப்பாளி  திரு எஸ். வைத்தீஸ்வரன் அவர்களின் “ஒரு கொத்துப்புல்” என்ற இச்சிறுகதைத் தொகுப்பைப் படிக்கப் படிக்க மேற்கண்டவாறான எண்ணங்கள் தொடர்ந்து கிளைத்துக் கொண்டேயிருந்தன.
       கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் என்றே அடையாளம் காணப்பட்டிருக்கும் அவர், புனைகதை வெளியிலும் அர்த்தமுள்ள, அழுத்தமான சிறுகதைகளை அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார் என்பதற்கு இத்தொகுப்பு ஒரு சான்று. படிக்க ஆரம்பிக்கும்போதே ஒரு வரி கூட வீணாகக் கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டதுபோல் அத்தனை சமூகப் பொறுப்போடு, படைப்புக்குச் செய்யும் மரியாதை உணர்வோடு வரி வரியாக நகர்ந்திருப்பது நமக்கு அவர்மேல் மிகுந்த மதிப்பை ஏற்படுத்துகிறது.
       சொல்ல வந்த கதை பத்துப் பன்னிரெண்டு பக்கங்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்கிற அநாவசியத் திட்டமில்லாமல், சொல்லப் போகும் கருத்து எந்த இடத்தில் முதிர்ச்சி அடைந்து தன்னை நிறுத்திக் கொள்கிறதோ அங்கே அந்தப் படைப்பு முடிந்து போகிறது என்பதை வாசகர்கள் நியாயமாய் உணர்ந்து திருப்தி கொள்ளும் வண்ணம் கருத்துக்கும், எடுத்துக் கொண்ட கருவுக்கும் முதலிடம் கொடுத்து ஒவ்வொரு படைப்பையும் பொறுப்போடு முன் வைக்கிறார் எழுத்தாளர்.
       தொகுதியின் தலைப்பான “ஒரு கொத்துப் புல்” முதல் கதையாய் அமைந்து படிக்கும் மனதுக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒரு படைப்பை மட்டுமே இங்கு சொல்ல வருவதன் மூலம் அடுத்தடுத்த வாசிப்பனுபவங்களை வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் அவசியம் தானே எழும் என்பது சர்வ நிச்சயம். இந்தத் தொகுதிக்கான மேன்மை தலைப்புக் கதை மூலம் உயர்ந்து நிற்கிறது.
       கௌரிகுண்ட் என்ற ஸ்தலத்திலிருந்து கேதார்நாத்தின் உச்சிக்கு குட்டைக் குதிரையின் மேல் ஏறி சுமார் இரண்டு மணி நேரம் சவாரி செய்து வந்த அனுபவத்தை அசைபோடும் அதே  வேளையில் கேதாரநாதரான சிவனைத் தரிசித்து விட்டு மனைவியோடும், மகளோடும் மீண்டும் அதே குதிரையில் ஏறிக் கீழிறங்கும் அனுபவமும் சேர அந்தச் சோக நிகழ்வு கண்ணுக்குப் பட்டு மனதை வேதனைப் படுத்துகிறது. அங்கங்கே நிலச் சரிவு  என்கிற செய்தியைக் கேள்விப்பட்டுக் கொண்டே பாதுகாப்பாய்த் தடம் பதித்து எச்சரிக்கையாய்  இறங்கும் குதிரையின் அனுபவத்தை  மனதில் வாங்கிக் கொண்டு பயணிக்கும் அதே வேளையில் பாதி மலை இறங்குகையில் கீழேயிருந்து வரும் தகவல்கள் மனதைச் சங்கடப்படுத்துகின்றன.
       இவர்கள் ஏறிய குதிரை பத்திரமாய்க் கொண்டு சேர்த்திருந்தாலும் எதிர்பாராவண்ணம் நடந்திருக்கும் ஒரு விபத்து இவர்களைக் கலக்கமடையச் செய்ய பரபரப்புடன் நெருங்கிப் போய்ப் பார்க்கையில் மனது அதிர்ச்சியுறுகிறது. நிலச்சரிவில் பாறை உருண்டு வந்து இளைப்பாறிக்கொண்டிருந்த குதிரையின் பின்னங்கால்களின்  மேல் விழுந்து அதன் நுரையீரல் புடைத்துப்போய் நோவில் அது கிடக்கும் காட்சி இவர்களை வேதனைப்படுத்துகிறது. சற்று நேரத்தில் அந்தக் குதிரை இறந்தும் போகிறது.
       சுற்றுலா வந்த இடத்தில், புண்ணிய தரிசனம் கிடைத்த அந்த நாளில் இப்படி வேதனையான நிகழ்வினைக் காண நேர்கையில் ஒரு படைப்பாளியின் மனம் சாதாரணமாகவா விலகிச் சென்று விடும்? மனித நேயம் மிக்க ஒரு படைப்பாளிக்கு இருக்கும் இரக்கச் சிந்தையும் கருணையும் காணும் அவரையும்  மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாக்குகிறது.
       அது என்ன அந்தக் குதிரைக்கான விடுதலையா?                                                          அது இந்த மாதிரிக் கோர விபத்தாகவா இருந்திருக்க வேண்டும்? என்று கேட்டுவிட்டு, இந்த வாழ்க்கையை அது சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழவில்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? என்றும் கேட்கிறார்.
       வாழ்க்கையே சமரசங்களின் திரட்டுதான். எத்தனையோவிதமான சமரசங்கள். அன்றாட வாழ்க்கைக்கான போராட்டங்கள் அதற்குள் அடங்கிய உணவுக்கான போராட்டங்கள்  என்று அமிழ்ந்து போனவை.  மனிதனைப்போல்தான் அந்தக் குதிரைக்கும் அதன் வாழ்க்கை சமரசங்களின் அடையாளமாய்த்தான் அமைந்திருக்க வாய்ப்பு உண்டு.. அமைந்த அந்த வாழ்க்கையை அது சந்தோஷப்படுத்திக் கொண்டதா? என்பதே கேள்வி என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.
              படைப்பாளியின் பார்வை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதேனும் திட்டமுண்டா என்ன? அவன் காணும் காட்சி ஒரு கோணத்தை வெளிப்படுத்துகிறதென்றால் அதைப் படிக்கும் வாசகனின் மனநிலை அவனை வெவ்வேறுவிதமான தளங்களுக்கும் கொண்டு செல்லும்தானே? அவரவர் அனுபவம் சார்ந்த மனநிலையின் வெளிப்பாடாக அது இருக்கும், இருந்துவிடும் வாய்ப்பு உண்டுதானே?
       இந்தக் கதையில் ஆசிரியரின் மனநிலை அவரை வெவ்வேறு எண்ணங்களுக்கு இட்டுச் செல்லும் அழகு நம்மை மிகவும் ரசிக்க வைக்கத்தான் செய்கிறது. புனைவு என்பது இல்லாமல் காணும் காட்சிகளின் தட்டையான விவரிப்பாய் இருக்குமானால் படைப்பு எந்தவிதமான எழுச்சி மனநிலையையும் கிளர்த்தாது, அடுத்தது என்று தாண்டிப் போக வைத்துவிடும். அப்படியல்லாமல் கண் காணும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு அர்த்தபூர்வமான விவரிப்பை படைப்பாளி நிகழ்த்தும்போது படிக்கும் வாசகனின் மனநிலை துள்ளிப் பாய்கிறது.
       சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து கொண்டு மலையேறும் காட்சியைக் காணுகையில் குதிரைகளுக்குக் கூட, ஏன் எல்லா ஜீவராசிகளுக்குமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்குன்னு நினைக்கிறேன் என்கிறார் மகளிடம். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரின் வாழ்க்கை முறையும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்கிற தத்துவார்த்த ரீதியிலான அந்த வரிகள் நம்மையும் யோசிக்க வைக்கின்றனதான்.
       “பொறக்கிற இடத்தைப் பொறுத்துத்தான் வாழ்க்கை சுகமாகவோ துக்ககரமாகவோ அமைகிறது“-சத்தியமான உண்மைகள்தானே இவைகளும்.
       குதிரைப் பயணம் செய்யும்போது சுற்றிலுமான இயற்கையை ரசிப்பதே பெரும்பாலான மனிதர்களின் இயல்பான வழக்கமாய் இருக்கும். ஆனால் இவர் யோசிக்கிறார்.
       பார்ப்பதற்குக் குட்டையாய் பெரிய ஆகிருதி இல்லாமல் இருக்கிற குதிரை, நம்ம பாரத்தை அநாயாசமாய்த் தூக்கிக் கொண்டு கல்லும் கரடும் வழுக்கலுமாய் இருக்கிற மேட்டுப் பாதையில் ஒரு இடத்தில் கூடக் கால் இடறாமல் ஒரு பொறுப்புள்ள சிநேகிதன் போல் உச்சிவரை ஏற்றிவந்து பத்திரமாக இறக்கி விடுகிறதே...என்று வியப்புறுகிறார். அத்தோடு மட்டுமின்றி அதன் மீது இரக்கம் கொண்டு அந்த ஜீவனுக்கு நாம் எத்தனை நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்? என்று கேள்வி எழுப்புகிறார்.
       மலை மீது ஆக்ஸிஜன் குறைவாய் இருக்கும் என்று மருத்துவரி்டம் தன்னைச் சோதித்துக் கொள்ளும் அவர், அந்தக் குதிரைகளைப் பற்றிச் சிந்திக்கிறார்.
       “பெரிய ஆத்மாக்கள்தான் இவை. எந்த பாரத்திற்கு எந்தளவு பலத்தையும் வேகத்தையும் பிரயோகப்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.  மனிதன் என்கிற பாவ மூட்டைகளை ஓயாமல் உச்சியிலிருக்கும் சிவனடிக்கு ஏற்றி விடுவதையே தன் ஜீவனமாகக் கொண்டு மடிகின்ற இவைகள் மிருக வடிவில் மறைந்திருக்கும் ஞானிகள்”. இவற்றின் செயல்பாட்டை உற்று நோக்குகையில் நமக்கு நம் வாழ்க்கையை, எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சமாளிக்க ஏதோவொருவிதத்திலான தெளிவு கிடைக்க இவை உதவுகின்றனதானே...!“
       இறுதிக் காட்சியாக மல்லாந்து விழுந்து கிடக்கும் அந்த குதிரையின் வாயில் இன்னும் தின்னப்படாமல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கொத்துப் புல்      அதன் போராட்டமான வாழ்க்கையை, அதுநாள் வரையிலான  அதன் கஷ்டங்களை, அந்த எல்லாவற்றிலிருந்தும் அதற்குக் கிடைத்த விடுதலையை நமக்குச் சொல்கையில், இந்த வாழ்க்கையின்மீதான தீராத பற்றை அது  தனக்குச் சொல்வதாக வாசகர்களாகிய நமக்குச் சொல்கிறார் ஆசிரியர்.
       ஒரு சிறுகதையின் மூலம் பல்வேறு நற்சிந்தனைகளை நம் மனதில் விதைக்கும் “ஒரு கொத்துப் புல்” என்ற இந்தப் படைப்பு நம் மனதில் நீங்கா இடத்தைப் பெறுகிறது. ஒரு தொகுதியை விறு விறுவென்று படித்து முடித்து விடுதல் என்பது வெறும் வாசிப்பின்பாற்பட்டது. ஆனால் படைப்பின் ஊடாகப் பயணம் செய்கையில் அது ஏற்படுத்தும் தாக்கம், அடுத்து அடுத்து என்று பக்கங்களைப் புரட்ட விடுவதில்லை நம்மை. ஒரு தேர்ந்த வாசகனால், ஆழ்ந்த ரசிகனால் அவ்வாறு இயந்திரத்தனமாய் நகர்ந்து விட முடியாது. மனதுக்குள் பெரிய பாரத்தை ஏற்றிவிடும் ஒரு படைப்பு குறைந்தது சில தினங்களுக்காவது அவனைப் படுத்திக் கொண்டேதான் இருக்கும். தொடர்புடைய சிந்தனைகளை அவனுக்குக் கிளர்த்தி விடும். மேன்மையான எண்ணங்களை உள்ளடக்கிய படைப்புக்களின் தார்மீக பலம் அது. அதற்கு படைப்பாளி சுத்தமானவனாகத் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமான உண்மை.
       இந்த ஒரு சிறுகதை இப்படிப் பலவாறு என்னை அலைக்கழித்து என் வாசிப்பை நிறுத்தி யோசிக்க வைத்து மனதில் பெரும் பாரத்தை ஏற்றிவிட்டிருக்கிறது. இதன் பிற படைப்புக்களும் அடுத்தடுத்துத் தொடரும் இப்புத்தகத்தின் மேலும் சில படைப்புக்கள் பற்றியும் சொல்லியாக வேண்டிய கடமை இருப்பதாக நான் உணர்கிறேன். மொத்தம் 26 கதைகளைக் கொண்ட இத்தொகுதிக்கு முதன்மையாய் இந்த வாசிப்பனுபவத்தை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
                                  ---------------------------------------------------

09 நவம்பர் 2019

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...