31 மே 2014

01.06.2014 தினமணிகதிரில் வெளிவந்த எனது “வாழ்க்கை வாழ்வதற்கே…!” சிறுகதை

2014-06-01 07.25.49 2014-06-01 07.26.19

எப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ? என்று தோன்றியது. வெறுமே ஓரமாய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு, வச்சுக்கோங்க என்று பணம் கொடுத்துத் திரும்பியதுதான். பெயர் மட்டும் சொன்னதாக ஞாபகம்.

என் பேரனின் பேரும் சுந்தர்தான்… பாட்டியின் முகத்தில் பூரிப்பு. அதே பெயர் கொண்ட எவனோ ஒருவனைப் பார்த்ததற்கா இவ்வளவு மகிழ்ச்சி? கன்னத்தை வழித்துச் சொடுக்கிக் கொண்டாள். உடனேவா ஒருத்தரோடு இப்படி ஈஷ முடியும்?

ஒரு வேளை அந்தப் பெயரே அவளை ஈர்த்து, இங்கு அழைத்து வந்து விட்டதோ என்னவோ? ஏதோவோர் சக்தி என்று சொல்வார்களே, அப்படியிருக்கலாம்.

அந்தப் பாட்டியைப் பார்த்தபோது இவனுக்கு அப்பாவைப் பெற்ற மரகதம் பாட்டியைத்தான் ஞாபகம் வந்தது. அச்சு அசலாக அப்படியேவா…? ஆனால் இந்தப் பாட்டி சற்றுக் கறுப்பு. வயசு கூடக் காரணமாய் இருக்கலாம். அந்த முகத்தின் வாட்டத்தைக் கண்டு மனசே அதிர்ந்து போனது. வெளியே கூட்டிப் போய் டிபன் வாங்கிச் சாப்பிட வைத்து, மீண்டும் கோயிலுக்குள் வந்து அந்த மண்டப நிழலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. விட்டு வரவே மனசில்லை. அய்யோ, அந்தப் பாட்டி இனிமேல் எங்கு போவாள்? எங்கு படுப்பாள்? எது அவள் இடம்? ஒரு இடம் என்று இல்லையென்றாளே? கடவுளே…! எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, பிறகு எப்படிப் புறப்பட்டு வந்தோம்? இந்த நிமிஷம் வரை அதே நினைவுதான். ஆனால் இதோ பாட்டி தன் முன்னால்…! எந்த சக்தி இழுத்து வந்தது அவளை? என்னவொரு ஆச்சரியம்…?

எங்கெங்கிருந்தோ புறப்பட்டு, நாலைந்து பேராகச் சேர்ந்து, ஏற்கனவே பழகிய இடம் போல் வீடு வீடாக ஏறி இறங்கி கோயில் கொடை பெற்றுச் செல்லும் தீட்சிதர்களை அடிக்கடி எங்கள் தெருவில் நான் சமீபமாய்ப் பார்க்கிறேன். அதுபோலவே இந்தப் பாட்டியும் அறிந்த, பழகிய வீதி போல, வீடு போல வந்துவிட்டாளே?

சீதா, பாட்டிக்குக் கொஞ்சம் சாம்பார் விடேன்….வெறும் தோசையைச் சாப்பிடுறா பாரு.. – தயங்கியவாறே சொன்னான் சுந்தர்.

இருக்கட்டும், போறும்…… - அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே மறுத்தாள் பாட்டி.

கையைத் தள்ளிக்கிங்கோ…. –படக்கென்று பாத்திரத்தினை அப்படியே கவிழ்த்தாள். இவ்வளவுதான்…இதுக்கு மேலே இல்லை….என்பதான அடையாளம் அது. அப்பொழுதுதான் கவனித்தேன் நான்.

ச்சே….! என்ன சீத்தா இது….? –கைப் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்.

ஏன்? என்ன? ஃபிரிட்ஜ்ல வச்ச நேத்திக்கு சாம்பாரை நாம சுட வச்சு விட்டுக்கிறதில்லையா? தூரவா கொட்டறோம்…? பருப்பு சாம்பாராக்கும்….கிலோ தொண்ணூத்தெட்டு ரூபா…..ஞாபகமிருக்கட்டும்……

புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அனைத்துமறிவோம் என்பதுபோல் கேட்டது, கேட்காதது எல்லாவற்றுக்கும் சேர்த்து பதில் சொல்லி விடுவாள். சுருக்கமாய்ச் சொன்னால் சற்று வாய் ஜாஸ்தி.

சரி, அதை நாம விட்டுக்கலாமே…..ஒரு வயசான பாட்டி….வீடு தேடி வந்திருக்கா….இருக்கிற இருப்புக்கு ஆச்சார அனுஷ்டானமெல்லாம் கிடையாதுன்னாலும், வயசை மதிச்சாவது புதுசா வச்சதை விடலாம்தானே…பழசைக் கொட்டணுமா? புண்ணியமுண்டு….. –

சீதா என்று பெயர் கொண்டவர்களெல்லாம் கருணைக் கடலாய் இருக்க வேண்டுமென்று கட்டாயமா என்ன…? என்னவள் நல்லவள்தான்…ஆனால் மனக் கோணல். காலத்தின் கோலம் இது…!

புதுசுதான்….இப்பத்தானே உங்க முன்னாடி தோசை வார்த்தேன். ….நீங்க பார்க்கலியா? மத்தியானம் நீங்க சாப்பிடுற போது அந்தப் பழைய குழம்பை சுட வச்சு விட்டுக்கத்தானே செய்வேள்…. அதை விட்டதுல என்ன தப்பு? என்னமோ கேட்டுண்டு வறேளே…..

நாம, ஆறின கஞ்சி, பழங்கஞ்சி…நம்மள விடு…நமக்குள்ளே எப்டியோ செய்துக்கலாம், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…!.வந்தவாளுக்கு……? - சொல்லிக் கொண்டே இழுத்தேன்….

வந்தவாளுக்கென்ன, நொந்தவாளுக்கு? பாட்டி என்ன விருந்தாளியா? இப்டீ போறவா வர்றவாளெல்லாம் நீங்க இழுத்துண்டு வந்து நில்லுங்கோ….நான் வடிச்சுக் கொட்டிண்டிருக்கேன்…..ச்சே….என்ன வீடுறா இது….? – கையிலிருந்த பாத்திரத்தை ணங்கென்று கீழே வைத்து விட்டு வாசலை நோக்கி நகர்ந்து விட்டாள். என் தலையிலேயே நறுக்கியதுபோலிருந்தது எனக்கு.

அவள் சொன்னதற்கும் அர்த்தம் உண்டு என்று வையுங்கள். போன வாரம் என் கூடப் படித்தவன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் திடீரென்று வந்துவிட்டான். எனக்கா ஞாபகமே வரவில்லை என்ன சொல்லியும். ஆனால் அவன் அப்பா, அம்மாவைத் தெரிந்திருந்தது. அவன் இருந்து பேசிய குறிப்பிட்ட நேரத்தில் சகஜ நிலை என்பது எழவேயில்லை. கூடப் படித்தேன் என்பது பொய்யென்றே தோன்றியது. ஊரும் பேரும் ஒத்திருந்தால் போதுமா? சோத்தைப் போட்டு ஆளைக் கிளப்பப் பெரும்பாடாகி விட்டது. அந்த பாதிப்பு இன்னும் நீங்கவில்லை. எனக்கென்று எப்படித்தான் ஆட்கள் அமையுமோ? ஆனால் பாட்டியை அப்படி நினைக்க முடியவில்லை. மனதுக்குள் அவ்வளவு இரக்கம் சுரந்தது. ஒரே ஒரு முறை பார்த்ததுதான். இப்படித் தேடி வந்து விட்டாளே? படு பாவமாயிருந்தது.

முதலில் அந்த இடத்தில் உட்கார்த்தி வைத்துப் போட்டதிலேயே எனக்கு உடன்பாடில்லை. கொல்லைப் புறம் துணி துவைக்கும் சிமின்ட் தளம் அது. நிழலான இடம்தான்…ஆனாலும்…? .வீட்டு வேலை செய்பவர்களுக்குக் கூட இன்று இப்படியெல்லாம் செய்துவிட முடியாது. கவனமாய் இருந்தாக வேண்டும். இவ்வளவு ஏன்? வேலைக்காரி என்று சொல்லிப் பாருங்கள் தெரியும் சேதி…!

அதுக்காக நடுவூட்டுக்குள்ள கொண்டு அமர்த்த முடியுமா? உங்களுக்குத்தான் எதுக்கும் விவஸ்தையே இல்லைன்னா, எனக்குமா? – நிச்சயம் கேட்பாள். கேட்காமலேயே செவியில் அறைவது போலிருந்தது. பல சமயங்களில் அவள் பேச்சுக்குக் காது செவிடானாலும் பரவாயில்லை.. அத்தனை நாராசம்.

சதா சர்வகாலமும் மனதில் என்னவோ ஒரு எரிச்சல் அவளுக்கு. எதைப் பார்த்தாலும், எதைக் கண்டாலும் தீராத அலுப்பு, கோபம்….. எந்தவகையிலும் அவளை சமாதானம் பண்ண முடியவில்லைதான். எனக்குச் சொல்லத் தெரியவில்லையா, அல்லது அவளுக்குக் கேட்கப் பிடிக்கவில்லையா? என்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. இதெல்லாம் முன் ஜென்ம வினை….இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. வேறென்ன சொல்வது? தெளிந்த நீரோடையாய் இருக்க வேண்டிய வாழ்க்கையை நாமே கலக்கிக் கசடாக்கினால் எப்படி?

வருஷங்கள் பத்து தாண்டியாயிற்று. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் இல்லையா? அதுபோல் ஒரு குழந்தை வந்துவிட வாய்ப்பில்லாமலா போகும்? எத்தனையோ பேருக்கு தாமத ஜனனம் இருந்திருக்கிறதே? ஏன் நம்பிக்கையை இழக்க வேண்டும்? இன்றும் அவளிடம் நான் இதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். எதையும் நேர் கோணத்தில் பார்த்தே பழக்கப்பட்டவன் நான். அது என் சுபாவமா என்ன என்பதெல்லாம் தெரியாது. யாரிடமிருந்து அது எனக்குப் படிந்தது என்பதும் தெரியாதுதான். வலிய நினைப்பதுதான் என்றாலும் கோணித் திரிவதற்கு இது பரவாயில்லையல்லவா?

ஓட்டை ரெக்கார்டு மாதிரி இதை இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் சொல்வீங்க…..கேட்கவே எரிச்சலா இருக்கு…என் கூட நீங்க பேச வேண்டாம்… உங்க மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலே- எதிர்பாராத பலதையும் சொல்லி, முறித்துக் கொண்டு போய் தலைகுப்புறப் படுத்துக் கொள்வாள். அவ்வளவுதான். அத்தோடு கதை முடிந்தது அன்று.

பிறகு சமையல், பெருக்கல், கூட்டல் கழித்தல் எல்லாமும் அன்று நான்தான். நானேதான் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். எடுத்துக் கழுவி வைத்தாக வேண்டும். அதே போல் அவளும்…சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டதாய் சரித்திரமில்லை. எல்லாமும் தனியாகவே. அவளாகவே…தனித் தனியாகவே. நெருங்க விட மாட்டாள். என்னே விநோதம் என்கிறீர்கள்? இந்த மாதிரிக் கொடுமையெல்லாம் யாரும் அனுபவிக்கவே கூடாது. நம் எதிரிக்குக் கூட இதுபோல் வந்துவிடக் கூடாது என்பேன் நான்.

தனிமை அவளுக்கு ரொம்பவும் பிடித்துத்தான் இருக்கிறது. மொத்தமே நாங்கள் ரெண்டு பேர்தான் வீட்டில். அதிலும் அவள் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். எங்கள் வீட்டில் உள்ள அறைகளெல்லாம் தனிமையில்தான் இருக்கின்றன. அவை எல்லாமும் தங்களைத் தனிமையாய்த்தான் உணர்கின்றன. ஒவ்வொரு அறையிலும் ஓடியாடிப் போய் இருந்து, பேசிக் கழித்தால்தானே அவை தங்களையும் மகிழ்ச்சியாய் உணரும்? நமக்கும் ஆள் இருக்கிறது என்று நினைக்கும்?

தனிமையில் இருக்கத் தெரியாதவன், தனிமையை விரும்பாதவன் ஒரு எழுத்தாளனாக முடியாது என்று நகுலன் என்ற திருவனந்தபுரம் பெரியவர் சொல்லப் படித்திருக்கிறேன் நான். அப்படிப்பட்டவர்கள் இவளிடம் வந்துதான் அல்லது இவளைப் பார்த்துத்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அத்தனை தனிமை விரும்பி இவள். அனுதினமும் எப்பொழுதடா நான் அலுவலகம் கிளம்புவேன் என்று காத்துக் கொண்டிருப்பாள். வண்டியோடு அப்படி நகர்ந்திருக்க மாட்டேன். பட்டாரென்று கதவைச் சாத்துவாள். ரோஷமுள்ள ஆம்பிளை மறுபடி வீடு திரும்ப மாட்டான். நான் ஒரு மழுமட்டை. என்னைக் கணக்கிலெடுக்காதீர்கள். என்னை மாதிரிச் சிலபேர் அபூர்வமாய்த்தான் இருப்பார்கள்.

. தன்னந் தனிமையில் என்னதான் செய்வாளோ? டி.வி. சீரியலாய்ப் பார்த்துத் தள்ளுவாளோ? சினிமாப் பார்ப்பாளோ? வாய்விட்டுப் பாடிக் கொண்டிருப்பாளோ? புத்தகமாய்ப் படித்துத் தள்ளுவாளோ? வீடு துடைப்பாளோ? ஒட்டடை, தூசி, தும்பு அகற்றுவாளோ? அல்லது ஒன்றும் வேண்டாம் என்று அக்கடா எனச் சாய்ந்து கிடப்பாளோ?

நான் போன பிறகு என்னதான் செய்வே…? சகஜமாய்க் கேட்கவா முடிகிறது அவளிடம்? எதைக் கேட்டாலும் சண்டைதான். எகனைக்கு முகனை…குண்டக்க மண்டக்க இதெல்லாம் அவள் பதிலுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும். ….எதற்கு எப்படி பதில் வரும் என்று எவனாலும் சொல்ல முடியாது. ஏண்டா கேட்டோம் என்று ஆகிப் போகும்…. பேசாமல் இருப்பதே மேல்…! அவரவர் அமைதி அவரவருக்கு…அத்தோடு போனது பொழுது. எதாச்சும் மனோ வியாதியிருக்குமோ? தைரியமாய் அதையும் ஒரு நாள் கேட்டுப் பார்த்து விட்டேன். தலைவிரி கோலம்….

என்னை என்ன கிறுக்குன்னு நினைச்சீங்களா? என்றாள். இப்படிச் சொல்லி எங்காச்சும் தள்ளிவிடப் பார்க்கிறீங்களா? பைத்தியம்னு நினைச்சீங்களா? என்னை நீங்க எப்டி நினைக்கிறீங்களோ அப்டித்தான் உங்களைப் பார்த்தா எனக்கு இருக்கு…போதுமா? நீங்கதான் பைத்தியம்….உங்க அம்மா பைத்தியம்…அப்பா பைத்தியம்…அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லாரும் பைத்தியம். உங்க குடும்பமே பைத்தியம்….போங்க அந்தப்பக்கம்…. – என்னைக் கை நீட்டி அடிக்காத குறைதான். அவ்வளவு பேசி விட்டாள். என்ன கேரக்டர் இவள்? இன்றுவரை புரியாத புதிர்தான். தனிமை, தனிமை என்கிறாளே பாவி, ஏதாச்சும் தனிமையில் செய்து கொண்டு விடுவாளோ என்றெல்லாம் பயந்து செத்திருக்கிறேன் நான். ஆபீசில் வேலையே ஓடாமல் குழம்பித் தவித்திருக்கிறேன். திடீர் திடீரென்று ஓடி வந்திருக்கிறேன். நல்ல காலம் இன்றுவரை அப்படி எதுவுமில்லை.

மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் வீடே வெறிச்சோடிக் கிடக்கும் பல சமயங்களில். நடு உறாலில் ஒரு விளக்குக் கூட எரியாது. நமக்கே நம் வீட்டின் இடங்கள் தெரியாது.எங்கே அவள் என்று கொல்லைப்புறம் வரை தேடிப் போனால் யாரும் எதிர்பாராத ஒரு ஈசான மூலையில் முடங்கி, எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது பிழியப் பிழிய அழுது கொண்டிருப்பாள்.

என்ன சீதா….என்னாச்சு? ஏன் இப்படி? என்று அவள் அருகில் போய் அமர்ந்து சமாதானப்படுத்துவோம் என்றால் கேட்டால்தானே? ஆரம்பத்தில் எனது இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் குழந்தையாய் மடிந்தவள், போகப் போக வெறுக்க ஆரம்பித்து விட்டாள். நெருங்கவே விடுவதில்லை.

“பக்கத்துல வராதீங்க…உங்ககிட்டே என்னவோ ஸ்மெல் அடிக்குது…அது எனக்குப் பிடிக்கலே…போய்க் குளிங்க..நீங்க தொட்டாலே பிடிக்கலை எனக்கு…என்ன சொல்கிறாள் இவள்? -

நீங்க ஒண்ணும் என்னைச் சமாதானப் படுத்த வேண்டாம்…போங்க உங்க ஜோலியப் பார்த்துட்டு…உங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கல்லே… எங்கயாவது கண்காணாமப் போங்க….உங்களை யாரு அதுக்குள்ளேயும் வீட்டுக்கு வரச்சொன்னா? – நெஞ்சில் ஆணியை நேரடியாய் வைத்து இறக்குவது போலிருக்கும் எனக்கு.

தேடி எடுத்தேனே திருவாழி மோதிரத்தை….பாடி எடுத்தேனே……. – என்னவோ வரும் வரிகள்….அம்மா பாடக் கேட்டது சிறுவயதில். அது இன்று எனக்கு வந்து வாய்த்திருக்கிறது.

எதுக்காக இப்டி உன்னையே நீ வருத்திக்கிறே…? நமக்குக் குழந்தையில்லேன்னு நான் இப்போ ஏதாச்சும் சொன்னேனா? என்னைக்காவது உன்னைக் கோபமாப் பேசியிருக்கேனா? அப்புறம் ஏன்? இந்த பார் சீதா, நம்ம வாழ்க்கை நம்மளோட கையில்தான்…எனக்கு நீ குழந்தை…உனக்கு நான் குழந்தை….காசு பணம் இருக்கு…வா கோயிலுக்குப் போவோம்…வெளியே சுற்றுலா போவோம்….ஜாலியா இருப்போம்…சந்தோஷமாச் சுத்துவோம்…எத்தனை நாள் லீவு போடணும் சொல்லு…உனக்காகப் போட்டுட்டு வரத் தயாராயிருக்கேன்…இந்த ஊரை விட்டு மாத்தினாலும் பரவாயில்லை…போடுற ஊருக்குப் போயிட்டுப் போறோம்…நமக்கென்ன வீடா, சொத்தா? ஒரு புண்ணாக்கும் கிடையாது….கடவுளாப் பார்த்துக் குழந்தையைக் என்னைக்குக் கொடுக்கிறானோ கொடுக்கட்டும். கிடைக்கிற அன்னைக்கு ஏத்துப்போம்…இல்லையா இப்டியே இருந்திட்டுப் போவோம்..என்ன குறைஞ்சு போச்சு? எல்லாம் மனசுதான். நாம சந்தோஷமாயிருக்கோம்னா சந்தோஷம்தான். .எதுக்கு அநாவசியமா நம்ம பொழுதை நாமளே கெடுத்துக்கணும்….? நான் சொல்றதைத் தயவுசெய்து யோசி….நீ படிச்ச பொண்ணு….., எனக்கு ஒரு மாற்றம் வேணும் அப்டீன்னு நினைச்சீன்னா எங்கயாவது வேலைக்குப் போறியா சொல்லு…முயற்சி பண்ணுவோம்…பொழுது போறதுக்காகவாவது ஒரு சேஞ்சா இருக்கட்டும்….எத்தனையோ மெட்ரிகுலேஷன் ஸ்கூல் இருக்கு….கிடைக்காமயா போயிடும்…சம்பளத்த விடு…உன் வயதொத்த டீச்சர்களோட இருக்கைல, அந்தக் குழந்தைகளோடப் பொழுதைக் கழிக்கைல எவ்வளவு மாறுதலா இருக்கும்…சந்தோஷமாயிருக்கும்…நான் சொல்றதை யோசியேன்…..

ஆம்மா…என்னத்தை யோசிக்கிறது….? அவுங்க எல்லாருக்கும் குழந்தை குட்டிங்க இருக்கும்….நம்மளை அனுதாபத்தோட விசாரிப்பாங்க… நாலு பேருக்கு பதிலா, இன்னும் நாப்பது பேருக்குத் தெரிஞ்சா மாதிரி ஆகும்..தேவையா இது? எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலே….நான் இப்டியே இருக்கேன்……ஒத்தக் கல்லு மோதிரம் மாதிரி….

என்ன உதாரணமோ? சொன்னாள். அதனாலென்ன…ஒற்றைக்கல் மோதிரம் விரலுக்கு அழகாத்தானே இருக்கு…! எந்த விரல்ல அது இருக்குங்கிறதைப் பொறுத்து அந்தக் கைக்கே ஒரு அழகு வருது… உன் விரலுக்கு வந்த பின்னாடிதான் இந்த மோதிரத்துக்கே பெருமை….! – சற்று அதிகம்தான். ஆனாலும் சொன்னேன். படக்கென்று விரல்களை மடித்து ஒரு குத்து விட்டுவிடுவாளோ என்று பயமும் இருந்தது. என் சுபாவம் அப்படி….! சொல்லிச் சொல்லிப் பாருங்கள்…பிறகு பாசிட்டிவ்வாகவே பேச ஆரம்பித்து விடுவீர்கள். இந்த வாய் நாலு நல்ல வார்த்தைகளைப் பேசுவதற்காகத்தானே இருக்கிறது? நாற வார்த்தைகளை ஏன் உதிர்க்க வேண்டும்? நம்மையும் கெடுத்துக் கொண்டு, எதிராளியையும் சங்கடப்படுத்தி……

இருந்து கொண்டிருக்கிறாள் சீதா. சதா சர்வ காலமும் என்னிடம் எரிந்து எரிந்து விழுந்து கொண்டு. அவளுக்கும் குறையில்லை. எனக்கும் எந்தக் குறையுமில்லை. பிறகு ஏன் குழந்தை வரவில்லை? ஏன் அந்த ஜனன பாக்யம் இல்லை. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். எங்களைப் போல் நிறைய தம்பதிகள் இருக்கிறார்கள் இந்த உலகத்தில். காரணம் தெரியவில்லைதான். ஆனால் அவர்களெல்லாம் எங்களைமாதிரி இப்படிப் பொழுதை நரகமாக்கிக் கொண்டா திரிகிறார்கள்? ஏன் இது தெரியமாட்டேன் என்கிறது சீதாவுக்கு?

பாட்டி சாப்பிட்டு முடித்துவிட்டாள். தட்டைக் கழுவி ஓரமாய் வைத்தாள். அதிலேயே அவள் வேலை சுத்தம் தெரிந்தது. ஒரு நல்ல இடத்தில் வாழ்ந்தவள் என்பதை உணர முடிந்தது. தண்ணீர் குடித்தாள். முகத்தில் தெளிர்ச்சி வந்திருந்தது. ஆசுவாசமாய் அமர்ந்து எதிரே இருக்கும் மரங்களை நோட்டமிட்டாள் பாட்டி. காப்பி சாப்பிடச் சொன்னேன். நானே போட்டுக் கொண்டு வைத்தேன். ஆற்றிக்கொண்டே, கள்ளிச் சொட்டா இருக்கே…! என்று சொல்லிக் கொண்டாள். பழைய வார்த்தை. ஆனாலும் கச்சிதமான சொல்.

எனக்கு என் பாட்டி ஞாபகம் பிடுங்கித் தின்றது. எத்தனை நாட்கள் பாட்டியின் மடியிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறேன்? நான் தூங்குவதற்காகவே தன்னை அமர்ந்தமேனிக்கு சுவற்றில் சாய்த்துக் கொண்டிருக்கிறாள் பாட்டி. தலையை மெல்ல வருடிக் கொடுப்பாளே…அந்த ஆசுவாசத்தில் எப்படியொரு தூக்கம் கண்ணைச் சுழற்றும்? அந்த மென்மையான அவள் மடியின் வெதுவெதுப்பு எழுந்திரிக்கவே விடாதே…! விரல் தலையில் அலையும். நிமிண்டி, நிமிண்டி பொடுகு, பேனைத் தேடும் சுகமே தனி.

மொட்ட…ஏ மொட்ட…என்ன பண்ணி விட்டிருக்கே எம் பேரனுக்கு? நன்னா முடிய ஒட்ட வெட்டி விடுன்னுதானே சொன்னேன் …துளிக் கூட குறைக்காம அப்டியே அனுப்பிச்சிருக்கியே….?

பாட்டீ…போதும் பாட்டி…நிறைய வெட்டியாச்சு…வா போலாம்…

சும்மா இரு…உனக்குத் தெரியாது…நாலணா சுளையா கொடுக்கறோம் அவனுக்கு…என்ன வேல பண்ணியிருக்கான் …..போ…போய் அவன்ட்ட உட்காரு….ஒட்ட வெட்டி கிராப்பு வையி… புரிஞ்சிதா…? அப்பத்தான் காசு தருவேன்….

நீங்க கவலப்படாமப் போங்க பாட்டி…நா அனுப்பிச்சு வைக்கிறேன்…

ஐயோ பாட்டீ…உன்னோட பெரிய தொல்லை….இன்னமே எனக்கு மொட்டைதான் அடிக்கணும்….

அடிச்சிக்கோ…பரவாயில்ல…பொடுகு வராது…

அந்தக் கல் பாவிய இடத்தில் மொட்டை என்று பெயர் கொண்ட நாவிதர் (அப்போதைய பெயர்) முன்னே சம்மணமிட்டு நான். எதிரே சலசலத்து ஓடும் ஆறு. காலைக் கதிரவனின் ஒளி வீச்சு அரச மர இலைகளுக்கு நடுவே பளபளக்கிறது. கதிரவனின் ஒளிக்கதிர்களால் புத்துணர்ச்சியடைந்து குளிருக்கு விதிர்ப்பு அடைந்ததுபோல் தன்னைச் சிலிர்த்துக் கொள்கின்றன.

அந்தக் கண்ணாடியத் தாங்களேன்…. பெட்டியில் இருக்கும் முகம் பார்க்கும் கையகலக் கண்ணாடியே என் கவனமாய் இருக்கிறது. முடி வெட்டும்போது அது வழியாப் பார்க்கணும்னு ஆசை.

அதெல்லாம் பெரியவங்களுக்குத்தான்….சொல்லியவாறே தலையைப் பிடித்து அவன் பக்கமாக வெடுக்கென்று சாய்த்துக் கொள்கிறான்.

நாலணாவுக்கு இம்புட்டு வேல வாங்குறாகளே…என்ற ஆதங்கமோ என்னவோ. அன்று என் கதை அவ்வளவுதான்.

என்னடா இப்டி வெட்டியிருக்கே….? படு அசிங்கமா இருக்கு…

பையன்களோடு விளையாடுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு நான்கைந்து நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்.

வட்ருபி அடிச்சு விட்டிட்டாங்கடா இவனுக்கு….சிரிக்கிறார்கள் பசங்கள்.

பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு சொல்லவொண்ணாத் துயரத்துடன். அவளின் கைகள் என் தலையை அளைகின்றன. இவ்வளவு குறைத்தும், பாட்டிக்கு திருப்தியில்லைதான்.

அவா சொன்னா சொல்லிட்டுப் போறா…இதுதான் கோந்தே ஆரோக்யம்…

குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றால் விபூதி எடுத்து, கண்களை மூடி, என்னவோ ஒரு மந்திரத்தை முனகி நெற்றியில் இட்டு, உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை நீளக்க அந்த விபூதியைத் தேய்த்துத் தரையில் அந்த வியாதியை இறக்கும் பாட்டி. மூன்று தட்டுத் தட்டுவாள். அவளின் கை வைத்தியத்திற்கு எந்த டாக்டரை ஈடு சொல்ல முடியும்? என்னவொரு நம்பிக்கை அந்த மனிதர்களுக்குத்தான்?

பாட்டி, கொழந்தை ரெண்டு நாளா கண்ணே முழிக்கலை…என்னாச்சோ ஏதாச்சோ தெரிலயே… - அழுது அரற்றிக்கொண்டு வந்து நிற்போருக்கு ஆறுதல் சொல்லியனுப்பும் பாட்டி.

ஒண்ணும் கவலைப்படாதே…நா இருக்கேன்…நாளைக்குக் காலைல உன் பிள்ளை எழுந்திருச்சி ஓடறானா இல்லையா பார்…போ…பின்னாடியே வர்றேன்….

என்னவொரு தன்னம்பிக்கை? எந்த நோயையும் கண்டு பயப்படாத பாட்டி அப்படி என்ன கை வைத்தியம் வைத்திருந்தாள்? எனக்குத் தெரிய எல்லா வியாதிக்கும் ஒரே மந்திரம்தான். ஆனால் அந்த உச்சாடனத்திற்கு சக்தி அதிகம்.

பாட்டி…பாட்டி…உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்…காய்ச்சல்னு வந்தா அதுக்கும், காமாலைன்னு வந்தா அதுக்கும்னு எல்லாத்துக்கும் ஒரே மந்திரத்தைத்தான் சொல்றே…அப்டித்தானே? விபூதியத் தேய்ச்சு விடறே? இல்லன்னா வேப்பெண்ணையைக் பாதத்துல தேய்க்கிற…நெத்திக்குப் பத்துப் போடறே…இல்லன்னா தொப்புள்ள வௌக்கெண்ணையைத் தடவுறே…வேறென்ன செய்திருக்கே…நீ…? எல்லா வியாதியும் எப்டி பாட்டீ பறந்தோடிப் போறது? உன்னக் கண்டா ஏம்பாட்டீ இந்த வியாதிக்கெல்லாம் இம்புட்டு பயம்?

போடா கோட்டிப் பயலே…நீ கண்டியா? நா என்ன பண்றேன்னு? அப்டியெல்லாம் பேசப்படாது..போ…போ…

அதெல்லாம் கேட்கப்படாது…பாட்டி ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கிறால்ல…அப்புறம் சாமி கோவிச்சுக்கும்…ஏற்கனவே பாட்டிக்கு உடம்பை எவ்வளவு படுத்தறது பார்த்தியோ? காமாலைக்கு மந்திரிச்சு, மந்திரிச்சு, அம்புட்டும் அவா உடம்புல இறங்கியிருக்காக்கும்….அது யாருக்காச்சும் தெரியுமா…? பேசாமப் போ…போய் விளையாடு….- அம்மா சொல்வது எதுவுமே புரியாது. தன் வைத்தியம் மூலம் பாட்டி ஏதோவோர் உபாதையைத் தனக்குள் வாங்கிக் கொள்கிறாள் என்று அம்மா சொல்கிறாளா?

இதுதான் அமானுஷ்ய விஞ்ஞானமோ? ஏதோ ஒரு கோயிலின் புற்று மண் வியாதியைப் போக்குமாமே! …அதுபோல்தானோ இது?

பாட்டீ…பாட்டீ…ஊருக்கெல்லாம் வியாதியைப் போக்கி அத்தனையையும் உன் உடம்பில் வாங்கிக் கொண்டாயே நீ…! உன்னைப் போல் இனி யார் கிடைப்பார்?

அந்த நன்றி அந்த மக்களிடம் பரிணமித்ததே…

ஆம்பூர் பாட்டி பேரன்தானடா நீ….உங்கப்பாம்மால்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியுமோ? உங்களுக்காக உசிரயே பணயம் வச்சு உழைச்சா…..அவாளை சந்தோஷமா வச்சிக்குங்கோடா……அதுதான் புண்ணியம்….

மூன்று மாதம் ஒருமுறை பேதிக்கு விளக்கெண்ணெய் கொடுக்கும்போது என்ன பாடு…என்ன ஆர்ப்பாட்டம்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ராத்திரி ரெண்டு மணிக்கு அடித்து எழுப்பி….மடியில் கிடத்திக் கொண்டு ஒருவர் காலை அழுத்திப் பிடித்துக் கொள்ள கோவர்ணத்தில் இருக்கும் சுட்ட விளக்கெண்ணெயை மூக்கை அழுத்தி இடக் கையால் பிடித்துக் கொண்டு, வாயை கோவர்ணத்தின் நுனியால் அழுத்தித் திறக்க வைத்து உள்ளே விளுக்கென்று விடும் பாட்டி. ஒரே குமட்டலாகக் குமட்டி அப்படியே வெளியே பீச்சியடித்த நாட்கள் எத்தனை?

சனியன்…சனியன்…வானரம்…வானரம்….என்ன பாடு படுத்தறதுகள்….கொஞ்சம் சக்கரையைக் கொண்டா…வாயில திணிப்போம்….

மேற்கொண்டு குமட்டாமல் இருக்க நாட்டுச் சர்க்கரை கொஞ்சம் வாயில் போடப்படும் அந்தக் கணம் அப்பாடா….!

முடிஞ்சிதுடி…இனிமே உன் பிள்ளேள் பாடு…உன் பாடு…பாட்டி எழுந்து போய்விடுவாள். மறுநாள்….

கேட்க வேண்டுமா? கக்கூஸே கதிதான். அன்று பூராவும் சுட்ட அப்பளமும், நார்த்தங்காயும், ரசமும்தான் சாப்பாடு. அடித்துக் கலக்கி அந்த வயிறுதான் என்னமாய் சுத்தமாகிப் போகும்? அதற்கு ஈடு உண்டா இன்று? வயிற்றுக் கோளாறுகளினால் எத்தனை வியாதிகளைச் சந்திக்கிறோம்?

பிரதி வாரமும் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் விட்டாளா பாட்டி? உருவி உருவி அந்த உடம்பைத் தேய்த்த விதமும், வெந்நீரில் குளித்த சுகமும் இன்று எங்கே போயிற்று?

இன்று யார் வாரம்தோறும் எண்ணெய்க்குளி குளிக்கிறார்கள்? அத்தனை பேரும் மறந்தாயிற்றே? அனைத்தையும் மறந்தோம். அத்தனை கேடுகளையும் வரித்துக்கொண்டோம். அதுதானே உண்மை?

பாட்டீ…பாட்டீ….நீ ஏன் தலையை மொட்டை போட்டுக்கிறே? – ரொம்ப நாளாய் மனதில் வைத்து, புரியாமல் கேட்ட கேள்விக்கு அப்பாதான் தடுத்தார் ஒரு நாள்.

அது, தாத்தா உங்க பாட்டிக்குத் தந்த பரிசு…..

குழந்தே….நீ சும்மாயிருக்க மாட்டியா? அதுகள்ட்டப் போய் இதெல்லாம் சொல்லிண்டு…?

நான் ஒண்ணும் சொல்லிடலியே….. பரிசுன்னுதானே சொன்னேன்…..நாங்கள்லாம் வேண்டாம்னோம்….அப்பா கேட்கலியே…? சத்தியம் வாங்கின்னா வச்சார்….நீ எங்க பேச்சைக் கேட்காமே சரின்னுதானே போய் மழிச்சிக்க உட்கார்ந்தே….?

….ஊர்ல இருந்தவாளோட ஒத்துத்தானே போக முடியும்? விட்டுத்தள்ளு, அதுனால இப்ப என்ன குறைஞ்சு போச்சு?

உனக்கு ஒண்ணுமில்லைன்னே வச்சுப்போம் …லட்சுமிகடாட்சமான எங்கம்மா முகத்தை நாங்க நாலு பிள்ளேள் இப்டிப் பார்க்கணும்னு என்ன தலையெழுத்து? அதான் இருக்கிறபோதே அந்த மனுஷனைப் பக்கவாதம் பிடுங்கித் தின்னுது…அதுக்கும் நீதான் பீ மூத்திரம் அள்ளினே…..?

அத்தனை சோகங்களும் அச்சடித்த புத்தகமாய் நினைவுகளில்… ஐந்தில் பதிந்தது, ஐம்பதில் மறையுமா?

பாட்டி போய்விட்டாள். இந்தாம்மா…மீனாட்சி புஷ்பம்…காலம்பற பூஜை….தலைல வச்சிக்கோ….சீக்கிரம் நல்லது நடக்கும்….. – என்ன ஆச்சரியம்….நமஸ்கரித்து வாங்கிக் கொண்டாளே சீதா…..இந்த நிமிடம்வரை என்னால் நம்ப முடியவில்லை. சீதாவா செய்தாள் அப்படி?

அலுவலக வேலைக்கிடையில் திடீரென்று ஒன்று ஞாபகம் வந்தது எனக்கு.

உறலோ…கேட்டரிங் ஸ்ரீதர் இருக்காரா?

ஆம்மா…நாந்தான் பேசறேன்….

சார், நான் காந்தி நகர், சுந்தர் பேசறேன்…ஒரு சமையல் மாமி வேணும்னு சொல்லியிருந்தீங்களே…. கிடைச்சுட்டாங்களா…?

இல்ல சார்….அது கிடைக்காமத்தான் அவஸ்தைப் பட்டுண்டிருக்கேன்….என்னால சமாளிக்க முடியலை…..

நான் ஒரு பாட்டியைக் கூட்டிண்டு வர்றேன்….பாட்டின்னு சொல்றேனேன்னு நினைச்சுக்காதீங்கோ….பேருதான் பாட்டி…..மாமி மாதிரிதான். நன்னா வேலை செய்வா…..ஆதரவில்லாம இருக்கா…..உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்…வச்சுக்குங்கோ…..சரியா…?

சார், நீங்க சொன்னா அதுக்கு ஆட்சேபணை உண்டா? எனக்கு உடனடியா ஒருத்தர் கண்டிப்பா வேணும்….இன்னைக்கே அழைச்சிண்டு வாங்கோ…..எனக்குப் பூரண சம்மதம்…..வர்ற ஆஃபர் என்னால மீட் அவுட் பண்ண முடிலை….திணறின்டிருக்கேன்…

நீங்க கவலையே படாதீங்கோ….பம்பரமா சுழலுவா….. – மதியம் லீவு போட்டுவிட்டு பிரதோஷத்திற்குக் காத்திருக்கும் பாட்டியைக் குறி வைத்துச் சந்தித்து, கேட்டரிங் ஸ்ரீதரிடம் கொண்டு நிறுத்தி விட்டேன்.

இன்று ஞாயிற்றுக் கிழமை. நான் இப்போது எங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்கள்? கிருஷ்ணா கேட்டரிங்கிற்குத்தான்.

ரொம்ப நன்னாயிருக்கு சாப்பாடு. பேசாம அங்கயே சொல்லிடுங்கோ….என்னால முடிஞ்ச அன்னைக்குத்தான் சமைப்பேன்….தெரிஞ்சிதா…என்னைப் போட்டுப் பிராணனை வாங்கப்பிடாது…பாட்டி சமையல் படு ஜோர்….!

ஃபோனிலேயே சொல்லிவிடலாம்தான். இருந்தாலும் ஒரு நடை அப்படிப் போய் வருவதில் ஒரு திருப்தி. பாட்டியைப் பார்க்கலாம்…நலம் விசாரிக்கலாம்….ஏதானும் செலவுக்குக் கொடுத்து வரலாம்…..

இனிமே பாட்டி என் பொறுப்பு….நீங்க கவலையை விடுங்கோ…. ஸ்ரீதர் சொல்லத்தான் செய்கிறார். ஆனாலும் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி.

சீத்தா குளிக்கிறாளா? சீக்கிரமே நல்ல சேதி வரும்பார்…..என் சாப்பாட்டைச் சாப்பிடுறாளோல்லியோ? கிடைக்கும்….கிடைக்கும்……முழுகாம இருக்காளோன்னோ…?ன்னு கேட்கத்தான் போறேன்….ஆமாம்ன்னு நீயும் சொல்லத்தான் போறே…..! பாரேன்….!!!– எழுபது தாண்டியவளின் எவ்வளவு அழுத்தமான வார்த்தைகள்? வாழ்க்கையை பிறர்பால் எத்தனை ஆழப்படுத்துகிறார்கள் இவர்கள்?

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்…!

கண்களில் நீர் பனிக்க நம்பிக்கையோடு திரும்பிக் கொண்டிருக்கிறேன் நான்.

(ushaadeepan@gmail.com)

------------------------------------------------------------------------

22 மே 2014

“காட்சிப்பிழை”- ஏப்ரல் 2014 சினிமா ஆய்விதழில் எனது எம்.ஆா்.ராதாபற்றிய “அவருக்கு நிகர் அவரே…!” என்ற கட்டுரை

10151191_10200874286298045_1188220222_n 5344917129_99e426f246_t 5597115002_08eaa12f71_t sg005 downloadmrradha-175x250 

ந்தந்தத் திரைப்படத்தின் கதாநாயகர்களுக்குரிய சம அந்தஸ்தோடு தன்னுடைய வில்லன் பாத்திரத்தையோ, தந்தை கதாபாத்திரத்தையோ அல்லது வேறு எதையுமோ மதிப்போடும், கௌரவத்தோடும் செய்து வந்தவர். தனக்கான அந்தஸ்தை இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். தன்னிலிருந்து மாணவர்களாகக் கிளைத்தவர்கள்தானே என்ற தன்மையில் அவர்களையும் மதித்து, உடன் கைகோர்த்து, தன் திறமையைத் தடம் மாறாது தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டவர்.

குரலுக்கான மாடுலேஷன், அதாவது சட்டுச் சட்டென்று ஏற்ற இறக்கங்களோடு, கேலியும், கிண்டலுமாக, சந்தோஷமும், கோபமுமாக, முறைப்பும் வெறுப்புமாக என அந்தந்த வேஷங்களின் வசனத்திற்கேற்ற அர்த்த பாவங்களோடு பேசி, அநாயாசமாய் தன்னுடைய நடிப்பை சகஜமாக வெளிப்படுத்தியவர். மற்றவர்களெல்லாம் பிரயத்தனப்பட்டபோது, இந்தக் குரல் வளம் இவருக்கு மட்டுமே இஷ்டத்துக்குக் கை கொடுத்தது எனலாம்.

கஷ்டப்பட்டு ஒரு பாத்திரத்தைச் செய்தார், கடுமையான உழைப்பு, என்றெல்லாம் சொல்லவே முடியாது.. எந்த வேஷத்தையும் சுலபமாய்ச் செய்துவிட இவரால் முடியும் என்ற பிரமிப்பை ஊட்டியவர். அவர் செய்தது அந்தந்தப் பாத்திரங்களாக அமைந்தது என்பதுதான் சரி. வேறு யார் செய்திருந்தாலும்….என்ற கேள்விக்கே இடமில்லை. . நடிப்பு என்பது இயல்பாக, உடம்போடு ஒட்டிப் பிறந்ததாய், ரத்தத்தோடு ஊறியதாய் வந்து நின்றது. அந்தந்தக் கதாபாத்திரமாகவே ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.

படத்துக்குப் படம் கேட்ட அதே குரல்தான், வெளியே எங்கு கேட்டாலும் ஒரு கணம் நின்று உன்னிப்பாய்க் கவனிக்க வைத்து, ரசிக்கத் தோன்றும். இறுதிவரை யாருக்கும் அது அலுக்கவில்லை. அவர் திரையில் தோன்றினாலே ஆரவாரம் எழுந்தது. நாயகனை ரசிக்கும் உள்ளங்கள் தன் ஆப்த நடிகருக்கு வில்லனானாலும், அதையும் ரசித்தது.

சிவாஜி ரசிகனாகட்டும், எம்.ஜி.ஆர். ரசிகனாகட்டும் அல்லது ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். இப்படி யாராக இருந்தாலும் அவர்களையெல்லாம் விழுந்து விழுந்து பார்க்கக் கூடிய ரசிக சிகாமணிகள் அந்தக் குறிப்பிட்ட திரைப்படத்தில் கூடவே இருந்து கழுத்தறுக்கும், கடைசிவரை கெடுதல் செய்யும் வில்லனாக இவரைப் பார்த்தபோதும், இவரின் வருகையைத் திரையில் ஆவலோடு எதிர்நோக்கினார்கள். வரவேற்றார்கள். அவரின் கலாட்டாவை தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆரவாரமாய்த் தட்டி ரசித்து மகிழ்ந்தார்கள்.

செய்த வேஷங்கள் இவராலேயே நின்றன. வேறு யாரையும் நினைக்க முடியாததாய் பேறு பெற்றன. ஒரு முழுப்படத்தின் நாயகனின் ஒட்டு மொத்த இருப்பை விட, சில காட்சிகளில் மட்டும் தோன்றி மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் நின்றார். அந்தக் காட்சிகள் மீண்டும் வராதா என்று ஏங்க வைத்தார். இயக்குநர் எதிர்பார்த்த வடிவத்தை விட ஒரு படி மேலே போய் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து முடித்தார். திருப்தியோடு செய்து கொடுத்தார். அந்தக் குறிப்பிட்ட படத்தை நினைக்கும்போதெல்லாம் அவரின் வேஷத்துடன் கூடிய உருவம்தான், அதாவது அந்தக் காரெக்டர்தான் சட்டென்று மனதில் தோன்றியது ரசிகர்களுக்கு..

இவன் ஒழிய மாட்டானா என்றும், ஏன் வந்தான் என்றும் தாய்மார்கள் மனதிற்குள் சபிக்கும்முகமாக அந்தத் திரைப்படத்தோடு ஒன்றிப் போய் பார்த்து வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு, , தனக்கான இடத்தை எந்தவித சிரமமுமில்லாமல், தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வெற்றிப்படிகளிலேயே நிலைத்து நின்றவர் இவர்.

நடித்த படங்கள் அநேகம். வேஷங்களும் அநேகம். அத்தனையையும் சொல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒன்றைச் சொன்னாலே மற்றவற்றையெல்லாம் தேடத் தோன்றும். சே…! இப்டி ஒருத்தரை இத்தனைநாள் தவற விட்டுட்டமே…? என்று இளம் தலைமுறை வருந்தக் கூடும். நல்ல ரசிப்புத் தன்மை இருக்குமேயானால்…!

சொல்லப் போவது ஒரே ஒரு திரைப்படத்தின் உயிர்நாடியான முக்கிய கதாபாத்திரத்தின் சிரஞ்சீவித் தன்மையைப்பற்றி.. அதை அப்படி ஆக்கியவர்பற்றி. வேறு யார் செய்திருந்தாலும் அந்த அளவுக்கு சோபிக்காது. வேறு யார் ஏற்று நடித்திருந்தாலும், பிரத்தியேகப் பயிற்சியில்லாமல் அல்லது இயக்குநரின் பாடம் இல்லாமல், தனக்குத்தானே கற்பனை வளம் இல்லாமல் அத்தனை பொருத்தமாக அந்தக் கதாபாத்திரத்தைச் செய்வது கடினம். அப்படியே செய்தாலும், செய்த நடிகர் நினைவில் வந்துகொண்டேயிருப்பார். அந்தக் கதாபாத்திரம் மட்டுமே நினைவில் வராது. எனவே இவர் ஒருவர்தான் இத்தனை கனகச்சிதமாக, அநாயாசமாக, அசால்ட்டாக இந்த வேஷத்தைச் செய்ய முடியும் என்று நான் உறுதியாகக் கூறுவேன்.

படத்தின் தலைப்பே இவர் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் தாங்க முடியாத, கொடூரச் செயல்பாடுகளின் தீவிரத்தைத் தாங்கியதுதான். கதையே இவரின் கெடுதல்களை வைத்துத்தான் நகரும். கண்ணி பிரியப் பிரிய சிக்கல் விழுந்துகொண்டேயிருக்கும். அதைப் பார்த்துப் பார்த்து இவர் ஆனந்தப்பட. இவரின் பாவங்கள் இவரையறியாமல் கூடிக் கொண்டேயிருக்கும். இவரது மனைவி அதைச் சுட்டிக் காட்டியிருந்தும், அவரையும் அடக்கி, அவரது பேச்சுக்களைப் புறந்தள்ளிவிட்டு, தான் நினைப்பதைத் தொடர்ந்து செய்து கொண்டே போவார். செய்த பாவங்கள். அதை மனதார உணர்ந்து வருந்தும்போது, தான் கொடுமை இழைத்த தன் மகனைக் கூடக் கண்கொண்டு பார்க்க முடியாத அவலம், அதற்காக அவருக்குக் கடைசியில் கிடைக்கும் மன்னிப்பு. இதுதான் அந்தத் திரைப்படத்தின் தலைப்பு. அந்த நடிக மேதை நடிகவேள் எம்.ஆர்.ராதா. அந்தப் படம் புத்தா பிக்சர்ஸ் பாவமன்னிப்பு.

தன் மேடை நாடகங்களிலே நாத்திக வாதங்களை உரக்கச் சொல்லிப் பெயர் பெற்றவர் நடிகவேள். எதிர்ப்புக்களைப் பொருட்படுத்தாது தொடர்ந்து முன்னேறியவர். மேடையில் செருப்பு வந்து விழுந்தபோது, அது தன் நடிப்புக்குக் கிடைத்த பரிசு என்று பெருமைப்பட்டவர்.

அப்படிப்பட்டவர் ஏற்றுக் கொண்ட, பக்திபூர்வமான, நெற்றியில் பட்டையும். கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையும் அணிந்து, குடுமியாய்த் தலையை முடிந்து கொண்டு வலம் வந்த கதாபாத்திரத்தில் தன் அனுபவம் வாய்ந்த திறமையான நடிப்பாற்றலால் படத்தை உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தினார்.

நடிகர்திலகம், ஜெமினிகணேசன், எஸ்.வி.சுப்பையா, பாலையா, நாகையா சாவித்திரி, தேவிகா, எம்.வி.ராஜம்மா என்று திறமையான, லட்சணமான பல நடிக நடிகையர்கள் அந்தந்தப் பாத்திரங்களுக்கு என்று பொறுக்கி எடுத்துத் தேர்வு செய்யப்பட்டவர்களாய் கருத்தாய் பவனி வந்து அழகு சேர்த்தாலும், இப்படத்தைப் பொறுத்தவரை சிறந்த நடிகருக்கான விருதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் நான் நடிகவேளுக்குத்தான் என்று உறுதியாய்ச் சொல்வேன்.

நடிகர்திலகமே முறைத்தாலும் கேட்கமாட்டேன். அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார். ஏனெனில் அடுத்தவரின் திறமையை உணர்ந்த தன்னம்பிக்கை கொண்ட இமயம் அவர். நடிகவேளின் கல்லூரியில் பயின்றவர்.

நான் இத்தனை அழுத்தமாகச் சொல்வதற்குக் காரணம், பாவ மன்னிப்பு படத்தில் எம்.ஆா்.ராதாவின் பாத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும், அந்த அவசியத்தை உணர்ந்து, இயக்குநரின் எதிர்பார்ப்புக்கும் விஞ்சி, நடிகவேள் அதைத் திறமையாய் நிறைவேற்றியிருந்தார் என்பதும்தான்.

ஆளவந்தார் என்ற அந்தக் கொடூரமான கதாபாத்திரம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது எல்லோர் மனதிலும். பஞ்ச கட்சமும், தொள தொளா பைஜாமாவும் அணிந்து கொண்டு உடலைத் துவளவிட்டு நின்று, திறமையான உடல் மொழியோடும், அர்த்தபூர்வமான பாவனைகளோடும், ஏற்ற இறக்கமான குரல் வளத்தோடு தன் கிண்டலையும், நையாண்டியையும், கோபத்தையும் சரளமாய் வெளிப்படுத்தி, திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு உற்சாகத்தையும், சிலிர்ப்பையும் ஏற்படுத்தும். அவரது கண்கள் நடிக்கும் நடிப்பு நம்மைப் பயப்படுத்தும். உன்னிப்பாய்க் கவனித்தால் இது தெரியும்.

இந்தப் பாவி எப்டியெல்லாம் பேசுறாம்பாருய்யா….என்னெல்லாம் கெடுதல் பண்ணுறான்….? விளங்குவானா? என்று வாய்விட்டு சபித்து, ரசித்தார்கள் ரசிகர்கள். அதுதான் அவருக்கான பாராட்டு. அந்தக் காரெக்டராகவே அவரைக் கண்டு இறுதியில் சினிமா என்கிற உணர்வுக்கு வந்து, அபாரம்யா…அபாரம் என்று கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

எவ்வளவுதான் இப்படிச் சொன்னாலும், அவர் நடிப்பை அவரின் அற்புதக் குரலோடு, நெளிவு சுளிவு கலந்த உடல்மொழியோடு ஆழமான ரசனையோடு கண்ணாரக் கண்டால்தான் திருப்தியாகும். அதாவது வெளியே எங்கேனும் ஒலிச்சித்திரமாய் அவர் குரலைக் கேட்கும்போது, மனதிற்குள் அந்தக் காட்சி படமாய் ஓட வேண்டும். அதுதான் ஆழமான ரசனை என்பேன். இதே பாத்திரத்தை வேறு நடிகர் என்றால் எப்படிச் செய்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியாது. தோன்றாது.

பாவ மன்னிப்பு திரைப்படத்தின் வசனம் எம்.எஸ்.சோலைமலை. தொழிலாளி வர்க்கச் சிந்தனையுள்ள திரைப்படங்களுக்கு அற்புதமாகக் கதை வசனம் எழுதுவதில் வல்லவர் இவர். பதிபக்தி படத்திற்கு இவர்தான் வசனம். அந்தப் படத்தில் இவரின் திறமை படம் முழுக்க நன்கு வெளிப்பட்டிருக்கும்.

பாட்டாளிச் சிந்தனையில் கூர்தீட்டி வசனம் எழுதும் இவர், தீமையே உருக்கொண்ட ஒரு முதலாளியாயிருப்பவன் எப்படியெல்லாம் வன்மத்தோடு சிந்திப்பான், செயல்படுவான் என்று நினைத்துப் பார்த்து, அதற்கு எம்.ஆர்.ராதா அவர்கள் இருந்தால் அங்கே எப்படி வசனம் மிளிர வேண்டும் என்று கச்சிதமாக வார்த்தைகளை வடித்திருப்பார்.. அப்படியும் பல இடங்களில் இது ராதா அவர்களே அந்தந்த இடத்தில் சொந்தமாகப் பேசிய இடைச் செருகல்களாகத்தான் இருக்கும் என்று பார்வையாளர்களுக்குத் தோன்றும்.

பாவ மன்னிப்பு படத்தில் ஸ்ரீமான் ஆளவந்தார் என்ற பிள்ளேவாள் கேரக்டரில் நடித்திருப்பார் எம்.ஆர்.ராதா. நாயகனுக்கு சரிக்குச் சமமாகப் பெரும்பாலான காட்சிகள் இவரதுதான். காரணம் கதை அப்படி. இயக்குநர் ஏ. பீம்சிங் படக்குழுவினர் வடிவமைத்த அற்புதமான கதையமைப்பும், காட்சிகளும் கொண்ட திரைக்காவியம் இது.

முதல் காட்சியிலேயே இருக்கும் கிண்டலையும் கேலியையும் கவனித்தால் தெரியும். ஆத்திகனாய் தன்னைச் சமூகத்துக்குக் காண்பித்துக் கொண்டிருக்கும் வேடதாரி ஒருவனின் மன வெளிப்பாடு எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் வாசலில்….ஒரு காட்சி…..

அம்மாாாாாா….மதுரை மீனாட்சி….கஞ்சி காமாட்சி….காசி விசாலாட்சி….

அய்யா…..

யார்றா…..?.

ரெண்டு கண்ணில்லாதவன்யா…

என்னா பாவம் செய்தியோ….ரெண்டு கண்ணும் இல்ல……ப்ப்போடா……!!!.

சற்றுத் தள்ளி, பொறு…பொறு…இதோ வந்திட்டேன்…உங்களுக்கெல்லாம் மிட்டாய்…பிஸ்கட்டு….எல்லாம்…. – ஃபாதர் ஜேம்ஸ் (எஸ்.வி.சுப்பையா) குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குகிறார்.

இந்தாப்பா….. – எம்.வி.ராஜம்மா கையில் அர்ச்சனைக் கூடையோடு வெளிப்படுகையில் அந்தப் பிச்சைக்காரனுக்குக் காசு போடுகிறார்.

வா…மரகெதம்……வா…. என்று சொல்லிக்கொண்டே .ஃபாதர் ஜேம்ஸைப் பார்த்து விடுகிறார் ஆளவந்தார்.

அட…ஜேம்ஸூவா….

ஆளவந்தாரா?

வாய்யா….வாய்யா….அப்பா யப்பா யப்பா….ரொம்ப நாளாச்சுய்யா….நாற்பத்தி அஞ்சு வருஷத்து ஃபிரண்டுல்ல…..

சௌக்கியமா ?…. ஜேம்ஸ். கேட்கிறார்…

சவுக்கியமா இருக்கிறேன்…ஏதோ மீனாட்சி தயவால….ஆமா… என்ன அங்க ஜனங்களோட மோதிக்கிட்டிருக்கே…….?

வெள்ளத்துனால பாதிக்கப்பட்ட ஏழை ஜனங்களுக்கு கொஞ்சம் துணிகள்லாம் வாங்கிக் கொடுத்திட்டிருக்கேன்….

சுச்சுச்ச்சுச்ச்…….பொதுத் தொண்டு….உனக்குச் சின்ன வயசிலேயிருந்து இதே கொணம்…அது சரி….உனக்கென்ன பொண்டாட்டியா பிள்ளையா….ஒண்ணும் இல்ல….. பத்து லட்ச ரூபா இருக்கு…அத வச்சு ஏதோ செஞ்சுக்கிட்டிருக்கே…நமக்கு அப்டி முடியுமா…பொதுத் தொண்டு செய்றதுக்கு….நமக்குப் பின்னால பாரு….பொண்டாட்டி, ரெண்டு பிள்ள….டிரைவரு…..இதுக்கெல்லாம் சோறு போடோணுமே…..

வாங்கண்ணா….

ம்…..என்ன கோயிலுக்குப் போய் ஆண்டவனைத் தரிசனம் பண்ணிட்டு வர்றீங்களா?

ஆமா,பின்ன என்ன? ஞானபண்டிதன் கோயிலுக்கு வெள்ளிக் கெழமையானா நான் போறேன்…நீ ஞாயித்துக் கெழமையானா மாதா கோயிலுக்குப் போறே…..வாரம் பூரா செய்ற பாவத்த, ஒரு நாளாவது சாமிகிட்டப் போயி சரிப்படுத்தணுமில்ல…

ஆமா ஆளவந்தார்…வாரத்துல ஒரு நாள் ஆண்டவனுக்கு….அவரால படைக்கப்பட்ட ஏழை எளியவங்களுக்கு உதவி செய்ய பாக்கி ஆறு நாள்….

உனக்கு ஆறு நாள் போதாது…அறுபது நாள் வேணும்ய்யா….

ஜேம்ஸ் அண்ணாவுக்கு எப்பவும், யாருக்காவது ஏதாவது உதவி செய்துக்கிட்டேயிருக்கணும்…அப்பதான் அவருக்குத் திருப்தி…..

அப்போ, பொன்னகரத்து நன்கொடை சம்பந்தமா நாளைக்கு வரட்டுமா ஆளவந்தார்?

ச்சே…ச்சே….நன்கொடை விஷயமா நம்பகிட்ட வர்ற வேலை வேணா…..அது கெட்ட வியாதியப்பா…எவனாவது இளிச்சவாயனப் போய்ப் பாரு…..

என்னாங்க இது…?

நீ சும்மாயிரு மரகெதம்…உனக்கென்ன தெரியும்? ஒரு நாளைக்கு நன்கொடை கொடுத்தா, வருஷம் பூரா வந்து நிப்பான்…அப்புறம் கொடுக்கலேன்னா ஒழிக….ஒழிக….ஒழிகன்னு கத்துவான்…..

எஜமான், பொன்னகரம் நமக்குச் சொந்தமான எடம்…நம்ம எதுவும் பணம் கொடுக்கலேன்னா, ஜனங்கள்லாம் சேர்ந்து நம்மளத் திட்டுவாங்க…. – வேலைக்காரர் ராமாராவ்….

போடா….நம்ப எடத்துலதானடா இருக்குறானுங்க அவுனுக….

அதான் வாடகை வாங்குறோமில்ல….

உறாங்… வாடகை….குடிசைக்கு நாலணாத் தர்றான்…பெரிய்ய்ய வாடகை….

அப்போ ஜேம்சு…நீ போயிட்டு வா….நீ அந்த வேலைக்குத்தான் லாயக்கு…..எனக்கு ஒரு வைர வியாபாரி வந்திருக்கிறான்…அவன் விஷயமா இன்னைக்கு முடிக்கோணும்….நா போயிட்டு வர்றேன்….. மாணிக்கம்பிள்ள….எடு காரை……

வர்றேண்ணா….. – ஆளவந்தாரின் மனைவி மரகதமும் விடைபெற்றுக் கொள்கிறார்.

இந்தக் காட்சியைக் கவனித்தீர்களா ? ஆளவந்தார் எத்தனை வஞ்சக உள்ளம் படைத்தவர் என்பதை அவர் சம்பந்தப்பட்ட முதல் காட்சியிலேயே அங்கங்கே அழுத்தமாகத் தொட்டு அவரது கீழ்மைக் குணத்தைப் பறைசாற்றுவதுபோல் வசனம் எழுதப் பட்டிருக்கிறது பாருங்கள்.

பால்ய கால நண்பனானாலும், தற்செயலாய்ச் சந்தித்த அந்த நண்பரை, எதிர் கொள்ளும் விதமும், அவரது இருப்பையும் ஃபாதர் என்கிற அந்தஸ்தையும் மதிக்காமல், கேலியாக, நையாண்டியோடு பேசும் தன்மையும், இறை பக்தியின்பாற்பட்டு வெளிப்படுத்தும் போலித்தனத்தையும் கொண்டே இந்தக் கதாபாத்திரம் எவ்வாறு இனி வரும் காட்சிகளில் எடுத்துச் செல்லப்படும் என்பதை நடிகவேளின் அனுபவமான நடிப்பாற்றலினால் ஆரம்பத்திலேயே நமக்கு உணர்த்துவதைப் பார்த்தீர்களா?

சற்று யோசித்துக் பாருங்கள்….இந்தக் காரெக்டருக்கு ராதாண்ணன்தான் லாயக்கு என்று முடிவு செய்த பின்னால்தான் வசனங்கள் சரளமாக அவருக்கேற்றாற்போல் கற்பனை வளத்தோடு வந்து விழுந்திருக்கும் என்கிறேன் நான். திரைக்கதையையும், காட்சிகளையும் பொருத்தமான நடிகர்களாலும், அவர்களின் அபரிமிதமான நடிப்பாற்றலினாலும்தானே செதுக்கிச் செதுக்கிச் சித்திரமாக்க முடியும்? நல்ல காய்கறிகளான வசனங்களை, சுவையாகச் சமைத்துப் போட வேண்டுமே? என் கூர்மையான வசனங்கள் கணேசனின் அற்புதமான நடிப்பினால்தான் பெருமைபெற்றது என்று கலைஞர் சொல்லவில்லையா?

ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொருவகையான நடிப்பாற்றல் இருந்தது அப்போது. ஆனால் எந்தவகையானாலும் அந்தவகைப்பாட்டில் தன்னைக் கொண்டு கச்சிதமாய்ப் பொருத்திக் கொண்டு களைகட்ட முடியும் என்று நிரூபித்தார்கள் அவர்கள். அந்த மாதிரி இடத்தில், தன்னைத் திருத்தமாக ஸ்தாபித்துக் கொண்டவர் நடிகவேள் அவர்கள்.

இன்னும் ஒரு காட்சி. இதுவும் சொல்லப்பட்டால்தான் நிறைவாய் இருக்கும். படிப்பவர்களுக்கு, ச்சே…! நாம இப்டிப் புகுந்து புகுந்து பார்க்காமப் போயிட்டமே என்ற வருத்தம் வரும். வரி வரியாப் படிக்கிற போதுதான் அருமை தெரியுது என்று உணர முடியும்.

ஆளவந்தாருக்குச் சொந்தமான இடம் பொன்னகரம். அங்கு நிறைய ஏழை எளியவர்கள் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறார்கள். அங்கு ஒரு இலவச வைத்தியசாலையும் இருக்கிறது. அதை நடத்துபவர் இஸ்மாயில் என்ற பெரியவரும் (நாகையா), சுப்புசாஸ்திரி (கொத்தமங்கலம் சுப்பு) என்ற அவரது உடன்பிறவா சகோதரரும். அவர்களால் வளர்க்கப்பட்டவன்தான் ரஉறீம். அந்தக் குப்பத்து ஜனங்களுக்குப் பேருதவியாய்ச் சேவை செய்வதைத் தன் கடனாகக் கொண்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன்.

அந்த இடத்தை ஆலை கட்டும் நிமித்தம் ஒரு துரைக்கு விற்பதாகப் பேசி, அவரை அழைத்துக் கொண்டு அந்தக் குப்பத்துக்கு வருகிறார் ஆளவந்தார்.

அதோ தெரியுது பாருங்கோ மதில் சுவரு….கடேசில….அதுவரைக்கும் மை ப்ளேஸ்…மொத்தம் நாப்பது ஏக்கரா…..இவ்வளவு எடம் இந்த நாட்டுல ஒரு பயலுக்கும் கெடையாது….

எல்லாம் கோயில் சொத்து…… - வேலைக்காரர் ராமாராவ்.

டே….

ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கீங்கன்னு…..

பொன்னகரம்னு பேரு….யப்பா….ரொம்பத் திமிருடா……..

யார் துரையா?

ச்சே….ச்சே…இந்தப் பொன்னகரத்துப் பசங்களுக்குத்தான்….நான் மொதலாளி வர்றேன்…ஒருத்தனாவது கும்பிடலடா….

ம்ம்….ஒண்ணுக்கு ரெண்டா வாடகை குடுக்கிறாங்கல்ல…எப்டிப் கும்பிடுவாங்க….

பெரிய்ய்ய்ய வாடக….குடுக்குறாங்க…போடா….இவங்க நூறு வருஷம் வாடகை கொடுக்கிறதும் சரி, துரை இப்போ விலைக்கு வாங்கப் போறாரே இந்த எடத்தை….அதுக்கு ஈடாகாது?

கமின்…கமின்…..

வெல் மிஸ்டர் ஆளவந்தார்….ஐ வில் பே வாட் எவர் யூ டிமான்ட்….பட்…உறவ் யூ எவிக்ட் ஆல் த திங்ஸ்…..?

வாட்…வாட்….தொரை என்னா சொல்றாரு…புரியலியே…?

இந்த எடத்தை சர்க்கரை ஆலை கட்டறதுன்னு முடிவு செய்துதான் பல லட்சம் போட்டு விலைக்கு வாங்குறேன்….ஆனா இந்தக் குடிசைகளெல்லாம் எப்படிக் காலிபண்ணிக் கொடுக்கப் போறீங்கன்னு….கேட்குறாரு….

என்னா கேள்வி இதப்போய்க் கேட்டுக்கிட்டு….ஏழைங்க பாவம்…..என்னா காங்கிரீட் கட்டடமா? ஒரு தீக்குச்சில காலி பண்ணிடுவேன்…..

சொல்லிக் கொண்டே ஒரு குடிசை முன்னால் போய் நிற்கிறார். அங்கே ஒரு ஓரமாக ரஉறீம் (நடிகர்திலகம்) ஒருவருக்கு சகிச்சை செய்து, தலையில் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

யார்ரா வீட்டுக்குள்ள….?

அப்பா வெளிய போயிருக்காருங்க…..

உங்கப்பனக் கேட்கலடா நா…..பெரிய மனுஷன் வந்திருக்கேன்….கட்டில இழுத்துப் போடு…கடைல போயி ரெண்டு கலர் வாங்கினு வா…..

துரை…சிகரெட்டா, சுருட்டா…?

நோ…தாங்க்ஸ்…..

பழக்கமில்ல போலிருக்கு…ஏண்டா நிக்கிறே…கலர் வாங்கிட்டு வாடா…. – ரஉறீமைப் பார்த்துக் கத்துகிறார்.

வேலையிருக்குங்க……

மிஸ்டர்ஆளவந்தார்….டேஸ் ஆர் சேஞ்ச்டு…நவ் இட் ஈஸ் நாட் ஆன் ஈஸி ஜாப் டு எவிக்ட்…..

யேஸ்…யேஸ்….என்னா சொல்றாரு….?

இந்தக் காலத்துல குடிசைகளக் காலி பண்றது அவ்வளவு சாதாரண விஷயமில்லேன்னு சொல்றாரு….

நீங்க ஒரு நல்ல துரை….உறாங்……கை நீட்டி அட்வான்ஸ் வாங்கிட்டனேன்னு பயப்படுறார் போலிருக்கு….டாக்குமென்ட்ல டைம் போட்டு எழுதித் தர்றேன்….நான் காலி பண்ணித் தர்றேன்….உங்களுக்கென்ன? டாய் பெருமாளு….

அய்யா…..

தொரையக் கார்ல ஏத்து……- சொல்லிவிட்டு ரஉறீமின் முன் வந்து நிற்கிறார்.

ஏண்டா டாய்…வேலையிருக்கா? பெரிய்ய்ய ஆஃபீசர் மவன்….வேலையிருக்காம் வேலை…….தலவலித் தைலம் விக்கிற பசங்களெல்லாம் பல லட்சம் பெறக் கூடிய இந்த எடத்துல உங்கள வாடகைக்கு விட்டேம்பா.ர்றா…என்னச் சொல்லணும்….உங்கொப்பன் வீட்டுச் சொத்தா? இல்ல உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா? இல்ல உன் முப்பாட்டன் வீட்டுச் சொத்தா?

பெரியவரே, மரியாதைக் குறைவாகப் பேச வேண்டாம். ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு….நீங்கள் கேட்ட அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன். இந்த இடம் யாருடையது? உங்களுடையதா? அல்லது உங்கள் அப்பனுடையதா? அல்லது உங்கள் முப்பாட்டனுடையதா? யாருக்குச் சொந்தம்?

டாய்ய்ய்…பெருமாளு….என்னா ஸ்பீடாப் பேசறான் பார்த்தியா?

ஒரே கேள்விதான்….நல்லா நாக்கப் பிடுங்கிக்கிறமாதிரிக் கேட்டுப்புட்டான்….ஒருவேளை இந்த எடத்தினுடைய பூர்வீகமே அவனுக்குத் தெரியுமோ?

இவன் யார்றா பூர்வீகத்தப்பத்திக் கேக்குறவன்…..? இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா பன்னெண்டு வருஷம் ஆயிடுச்சி…இந்த எடமே எனக்குச் சொந்தம்னு சொன்னாலும் சொல்லுவான்…..

சொல்லப் போறான்…..

பெரியவரே எதுவும் யாருக்கும் இங்கு சொந்தமில்லை….இந்த மண்ணையெல்லாம் வளைத்துக் கொள்ளும் மன்னாதி மன்னனாக நீர் இருந்தாலும், , முடிவில் இந்த மண்ணில்தான் போய் புதைய வேண்டும்….

யாரு…நானா மண்ணுல புதையறேன்….என்னையா மண்ணுல புதைக்கிற…..டாய்….என்னடா பேசுற….என்னையா மண்ணுல புதைக்கிற….டாய்…..இரு பார்த்துக்கிறேன்….டாய் ….- பெரிய அளவில் கத்திக் குடியைக் கெடுத்து கலாட்டா பண்ணி தையாத் தக்கா என்று குதிக்க, தற்செயலாய் ரஉறீமின் கை அவர் தலைப்பாகையில் பட்டு அது கீழே விழுந்து விடுகிறது. . ரஉறீம் செய்வதறியாது அமைதியாகிறான்.

இதற்குள் என்ன கலாட்டா என்று இஸ்மாயில் அவர்கள் நாலு பேர் பின் தொடர அங்கு வந்து விடுகிறார்.

ரஉறீம்…என்னப்பா அவர்ட்டப் போயி தகராறு வச்சிக்கிறியேப்பா…அவர் யாருன்னு தெரியுமா? இந்தாங்க… இதல்லாம் மனசுல வச்சிக்காதீங்க….

அப்பா…நா ஒண்ணுமே செய்ல……அவர்தான் என் கையப்பிடிச்சிக்கிட்டு இப்டிக் கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காரு…..இவர் என்ன தெரியுமா சொன்னாரு…இந்தக் குப்பத்தை யாருக்கோ வித்துட்டாராம்…இங்க உள்ளவங்களையெல்லாம் காலி பண்ணப் போறாராம்….

ஆமாண்டா…இப்பவும்தாண்டா சொல்றேன்….இது என் சொந்த எடம்டா….நான் விப்பேன்…இடிப்பேன்…கொளுத்துவேன்….அதக் கேட்க நீ யார்றா?

ஏ, குப்புசாஸ்திரி, பெரியுமன்ஷன்னு குடிவக்கச் சொன்னே…நீ சொல்லு நியாயம்?

பிள்ளேவாள்…இந்தக் குப்பத்துலே எங்களுக்கெல்லாம் இஸ்மாயில் அண்ணன்தான் தெய்வம் மாதிரி….

அண்ணனா?

ஆமா…எதுவாயிருந்தாலும் அவர்ட்டயே சொல்லுங்க….

என்னாய்யா….நீர் அய்யரு…சாயபுவப்போயி அண்ணன்றே….நம்ம ஜாதி என்ன ஆச்சாரம் என்ன?

மன்னிக்கணும்…இந்தக் குப்பத்துல நான் என்ன ஜாதி. அவரென்ன ஜாதி, இந்த மக்களெல்லாம் என்ன ஜாதி,அப்டீன்னெல்லாம் யோசிக்கிறதுக்கே நேரமில்லாமப் பழகிட்டோம்…..

நேரமில்லயா….அதவிட வேறென்ன வேலைய்யா உனக்கு? ஏளனமாய்க் கேட்கிறார்.

எங்க வேலயெல்லாம் எல்லார் வீட்லயும் அடுப்புப் புகையணும்…பக்கத்துல இருக்கிறவங்க நோய் நொடி இல்லாம இருக்கணும்…அநாவசியமா ஜாதி மதம்னு பேசிக்கிட்டு அலையக் கூடாது…அதுதான் எங்க வேலை….

வேலை மட்டுமில்லே…அதுதான் எங்களுக்கு வேதமும் கூட – சாஸ்திரி சொல்கிறார்.

அய்யய்ய….என்னாய்யா அய்யரே…வேதத்தையே மாத்துறீரே….?

நான் மாத்தல பிள்ளேவாள்…காலம் அதை மாத்திடுது…..

ஏன்யா….நீ இங்க தலைவனா இருக்கிறதா, தொண்டனா இருக்கிறதா?

அய்யா, அவர் இருந்தா என்ன, நான் இருந்தா என்ன….இந்த பாருங்க….எந்தக் காரியத்தையும் யாரு செய்றாங்கங்கிறது முக்கியமில்லே…செய்ற காரியந்தான் முக்கியம்….

ரஉறீம்ண்ணே…நம்ப நரிமேடு சின்னச்சாமிக்கு ஒடம்புக்கு ரொம்ப முடில…

அப்டியா? – வைத்தியப் பெட்டியொடு கிளம்புகிறான் ரஉறீம்.

பார்த்துக் கொண்டே இருந்த ஆளவந்தார் கிண்டலடிக்கிறார்…

டாக்டர்…..போறாரு இப்பத்தான்……ஒன் மகன்ட்டச் சொல்லி வை…அவன் நடக்கிறது ஒண்ணும் எனக்குப் புடிக்கல…..உறாங்….பொழைக்கிறதுக்கு வழி பார்க்கச் சொல்லு….அடியாளாயிடுவாம் போலிருக்கு….தொப்பியத் தட்டறான் அவன்…அதோட இந்தக் குப்பத்தையும் காலி பண்றதுக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணுங்க…நம்மகிட்டத் தகராறு வச்சிக்காதிங்க…..அய்யரே…சாயந்திரமா வந்து பாரு….பெருமாளு பின்னாடியே வா…ரெண்டாளக் கூட்டிக்கிட்டு……...

இதைப் படிப்பவர்கள், ஆழ்ந்து ரசித்தவர்கள், அப்படியே ராதாவின் பாஷையிலே நீங்களே சொல்லிப் பாருங்கள். அவர் நடிப்பைக் கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அப்பொழுதுதான் பாவமன்னிப்புப் படத்தில் அவரின் ஸ்பெஷாலிட்டி தெரியும். இந்த வசனங்களையும், அவரது நடிப்பையும். வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதுதான் சத்தியம்.

இதே ராதாதான் இருவர் உள்ளம் படத்தில் பத்துக் குழந்தைகளுக்கு அப்பனாய், பயந்த சுபாவம் உடைய வக்கீலாய், ரங்காராவின் பிள்ளையாய், நமக்கே பாவமாய் அற்புதமாய் நடித்தார். படித்தால் மட்டும் போதுமாவில் கல்யாணத் தரகராய் வருவார். பார் மகளே பார் படத்தில் நட்டுவனார் நடராஜனாக வருவார். பாத காணிக்கை படத்தில் மிலிட்டரி ரிடையர்டாக டக்கு டக்கு என்று உறிட்லர் மீசையோடு வந்து அமர்ந்து அவர் பேசும் அழகே அழகு.. பச்சை விளக்கில் வெட்டி ஆபீசராய் வருவார். பாலும் பழமும் படத்தில் தேவாங்கு ராக்கெட் லேகியம் தயாரிப்பார். கர்லாக்கட்டை சுற்றுவார். சாய்ராமையும், கருணாநிதியையும் ஏமாற்றி அமர்க்களப்படுத்துவார். பாகப்பிரிவினையில் சிங்கப்பூர் சிங்காரமாய் வந்து வெளுத்து வாங்குவார். ரத்தக்கண்ணீர் படந்தான் அவரது மாஸ்டர் பீஸ். அதையே ஒத்த, அதே வீச்சும் விறைப்போடுமான வேஷத்தில் நல்ல இடத்து சம்பந்தம் படத்தில் சௌகாரின் கணவராக வந்து பிரமாதப் படுத்துவார். எம்.ஜி.ஆர். படங்களிலெல்லாம் வில்லன்தான்.ஆனாலும் யாருக்கு அலுத்தது? நடிகவேளின் நடிப்புத்திறன் எவருடனும் ஒப்பிட முடியாதது. அவருக்கு நிகர் அவரே…!

-----------------------------------

 

.

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...