28 மே 2019

தி.ஜா.ரா.வின் “ஸ்ரீராமஜெயம்” – சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன்


தி.ஜா.ரா.வின் “ஸ்ரீராமஜெயம்” – சிறுகதை – வாசிப்பனுபவம் – உஷாதீபன்                   வெளியீடு:- “தி.ஜானகிராமன் சிறுகதைகள்” - காலச்சுவடு பதிப்பகம்-நாகர்கோயில்.


     ரு கதையில் கதா பாத்திரங்கள் மௌனமாக-குறைவாக-மிகச் குறைவாகப் பேசி நகரும்போது – எதற்காக இப்படியொரு காரெக்டர் என்கிற புதிரோடேயே நாமும் நகர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது-என்ன சூட்சுமம் அதில் என்று தேட ஆரம்பிக்கிறோம். அந்த எழுத்தாளரை நினைத்து வியந்து போகிறோம். அவரை நோக்கி மேலும் நம் வாசிப்பை விரிவு செய்கிறோம்.
       ஒரு படைப்பில் தன் செயல்களை வெகு அமைதியாக, நிதானமாக மேற்கொள்ளும் ஒருவர், எதை எதிர்நோக்கி, எதை நிறைவேற்ற இப்படி செயல்படுகிறார் என்று யோசனையோடேயே வாசிப்பைத் தொடர்கிறோம். அதன் விளைவு என்னவாகப் போகிறது என்பதில் நமக்கொரு ஆர்வம் பிறக்கிறது. அது நன்மையோ-தீமையோ அல்லது அந்தப் பாத்திரத்தின் நியாயமோ அதை உணர்கையில் ஆஉறா என்று பாராட்டவோ, அடடா…! என்று பரிதாபம் கொள்ளவோ வைக்கிறது.
       தி.ஜா.ரா.வின் “ஸ்ரீராமஜெயம்“ கதையைப் படித்தபோது எனக்கு இப்படிப் பலவும் தோன்றின. இப்படியொரு தலைப்பை வைத்து, அந்தக் காரெக்டரையும், அதன் மன உணர்வுகளையும், ஒழுக்க சீலத்தையும், மறைபொருளாக-பாத்திர அமைதியாக உணர்த்திக்கொண்டே வாசகனை ஊடுருவி அறியச்செய்து கொண்டே செல்லும் ஆழமான பயணம் இக்கதையில் சீராக அமைந்துள்ளது.
       போயும் போயும் இதற்காகவா செய்தார் என்று தோன்றும் அதே வேளையில் எத்தனை தூரம் அவரின் கஷ்டங்கள் அவரை நோக வைத்திருந்தால், எவ்வளவு வேதனைகளை அவர் தன் வாழ்வில் சுமந்திருந்தால்-அப்படியாவது ஒரு தீர்வு வராதா என்றும் – துன்பமும் துயரமும் விலகாதா என்றும் நினைத்திருப்பார் என எண்ண வைக்கிறது நம்மை.
       தனது சர்வீசும், முதுநிலையும், அனுபவமும் மதிப்பாய் உணரப்படாத ஓரிடத்தில் தொடர்ந்து அயராத உழைப்பை நல்கி என்னதான் பயன்? என்கிற சராசரி மனிதனின் நோக்கு-அதை வெளிச்சமிட்டுக் காட்ட வகையில்லாமல் ஒடுங்கி-ஒடுங்கியே கழியும் நாட்கள்-இப்படியான வேதனைகளூடேயே கழிக்கும் ஒரு சாதாரண – சராசரி மனிதனின் அதிகபட்ச செயல் என்பது விலையில்லாத தன்மையாய் அமைந்து போவதும், அது அவரைத் தவறு செய்தவர் என்ற இடத்தில் கொண்டு அமர்த்தி விடுவதும்-அந்தோ பாவம் என்று நம்மை இரக்கம் கொள்ள வைப்பதும் – இப்படியான பல்வேறு உணர்ச்சி நிலைகளுக்கு நாம் ஆளாகிறோம்.
       வரிக்கு வரி ரசனையை மிதக்க விடும் அழகு தி.ஜா.ரா.வினுடையது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் ரசனையை, அழகியலைத் தொட்டுச் சென்று கதையை ஓட்டுவதில்லை.  ரசனையும் ரொம்ப நுணுக்கமாய் இருக்கணும். ஒரு மனிதனின் இயல்புகள், செயல்கள், அதன் தனித்தன்மை என்று உணரப்பட வேண்டும். அதை எழுத்தில் வாசகன் ரசிப்பது போல் சுருங்க, பொருத்தமான வார்த்தைகளில் வழங்கும் திறன் வேண்டும்.
       அந்த அச்சாபீஸில் காவல்காரராக இருக்கும் வேலுமாரார் இருபது வருஷம் சர்வீஸ் போட்டவர். இவர் பார்வையிலேயே முழுக்கதையும் சொல்லப்படுகிறது. அவருக்கு மூத்த மூதாதை ராகவாச்சாரி இருபத்தாறு வருஷம் சர்வீஸ் போட்ட ப்ரூப் ரீடர். அத்தனை வருஷ சர்வீசுக்கு ராகவாச்சாரிக்கு என்ன பக்குவம் என்பதை வேலுமாரார் நன்கு உணர்ந்து அவர் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர்.
       வேலுமாரார் ராகவாச்சாரிக்கென்று இதயத்தில் ஒரு இடம் ஒதுக்கியிருந்தார். இருபத்தாறு வருஷமாய் ஒரே மேஜையில் அமர்ந்து கோடானு கோடி அச்சுப் பிழைகளைத் திருத்திய புண்ணியவான், மன்னித்து ஒதுக்குகிற காருண்யன் அவர் என்கிற மதிப்பு இவருக்கு அதீதம்.
       அதே சமயத்தில் தன் கடமையின் மீதான கருத்தில், கவனமாய்க் இருந்து மனதில் பதிய வைத்துக் கொண்டவையும் சில உண்டுதான். தினமும் எட்டரை மணிக்கு ஆரம்பிக்கிற ஆபீசுக்கு ஒரு நாள் கூட சரியான நேரத்துக்கு வராதவர் ராகவாச்சாரி. எட்டு முப்பத்தைந்திலிருந்து ஒன்பதே காலுக்குள் ஏதாவது ஒரு நிமிஷத்தில் ஆபீசுக்குள் நுழைந்து விடுகிறவர். மதியச் சாப்பாட்டிற்கென்று வெறும் ஐந்து நிமிடத்திற்கு மேல் செலவழிக்காத பெருந்தகை. ஆபீசுக்குள் இம்மியும் நேரம் வீணாக்காதவர். கருமமே கண்ணாயினார். ஏன் லேட்? என்று அவரை யாரும் கேட்டதுமில்லை. வெறும் கண்ணாடியைக் கொண்ட வலது கண்ணும், பூதக் கண்ணாடியாய் விழிக்கும் இடது கண்ணுமாக அதன் பின்னால் மறைந்திருக்கும் அவருக்கான நாலு பெண்டுகள், மூன்று ஆண் குழந்தைகளுடனான அவரது  ஏழ்மை பிம்பம், முதலாளியைக் கூடக்  கேள்வி கேட்கவிட்டதில்லை.
       அவருக்கு ஆசை கிடையாது. அந்த ஆபீசில் நடந்த எத்தனையோ வேலை நிறுத்தங்களில் எதிலும் அவர் கலந்து கொண்டதுமில்லை. கலந்து கொள்ளவில்லையே என்று யாரும் அவருடைய வெள்ளி விளிம்பு மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கியதில்லை. அவர் காக்கிச் சட்டையைக் கழற்றியதுமில்லை. முதலாளிக்குத் தெரிந்த வறுமைப் பிம்பம் தொழிலாளிகளுக்குத் தெரியாதா என்ன?
       ராகவாச்சாரி வேலை செய்யும்போது இந்தண்டை அந்தண்டை பார்ப்பதில்லை. அவ்வளவு கவனம், கடமையுணர்வு. அவர் மேஜைக்குப் பின்னால் எப்போதாவது நேரம் ஒழிந்தால் அமைதியாக வந்து நிற்பார் வேலுமாரார். சாமி பேனாப் பிடித்து திருத்தும் அழகே தனி. கழுத்துப் பகுதியில் பிடிக்காமல், உடம்புப் பகுதியில் அதாவது வயிற்றுப் பகுதியில்  பேனாப் பிடித்து எழுதுபவர்கள் விசேஷமானவர்கள் என்று அவருக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. அதன் மீதான மதிப்பு அவர் மீது.
என்னவோ அவர் மீது ஒரு தனிப் பரிவு. தனி அநுதாபம். வறுமை-இப்படிப் பெருமையும் பொறுமையுமாக நடமாடுகிற விந்தையை ராகவாச்சாரி மூலம் கண்டார் அவர். 
ராகவாச்சாரி அந்த ஆபீசில் எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம். அவ்வளவு உரிமையும் உண்டு அவருக்கு. வீட்டைச் சுற்றி வரும் பூனைக் குட்டியை அடுக்களைக்குள் வராதே, இங்கு வராதே, அங்கு வராதே என்று கூற முடியுமா?
அவர் இந்த நாலு நாட்களாகத்தான் சற்று முன்னதாக வேலைக்கு வந்து விடுகிறார். அதாவது எட்டு மணிக்கே.
என்னா சாமி இவ்வளவு சீக்கிரம்? வேலுமாராரின் கேள்வி.
ஒரு நாளைக்கு ஒழுங்காயிருப்பமே…? என்ற அவரின் பதில் இவரைச் சந்தோஷப்படுத்துகிறது. இந்த மனிதனையும் இறைவன் சந்தோஷப்படுத்திப் பார்க்கிறானே என்று ஆச்சரியமுறுகிறார். அடுத்தடுத்து நாலு நாளைக்கு அதே நேரத்துக்கு வருகிறார் ராகவாச்சாரி.
அட்சய திரிதியைக்கு வருடா வருடம் காஞ்சிபுரம்  கருட சேவை பார்க்க மூன்று நாட்கள் லீவு எடுத்துப் போகும் அதிசயத்தை விட, இந்த எட்டு மணி வரவு மிகுந்த ஆச்சரியப்படுத்துகிறது வேலுமாராரை.
நாலு நாளைக்குப்பின்,  நாளைக்கு நான் லீவு போட்டிருக்கேன்…வரமாட்டேன் என்கிறார்
என்னா சாமி அதிசயம் என்று வேலுமாரார் கேட்க….ஊரிலிருந்து அண்ணா வந்திருப்பதாகவும் அவரோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
ஆனால் சொல்லியதற்கு மாறாக,மறுநாள் காலையில் ஏழே முக்காலுக்கு ஆபீஸ் வந்து நின்ற போது வேலுமாராருக்கு சற்றுத் திகைப்பாகத்தான் இருக்கிறது.
மனதில் அசைபோடும் எண்ணங்கள், மனிதனைத் தடுமாற வைக்கின்றன. வாழ்க்கையில் தப்பே செய்யாதவன், காலம் பூராவும் நேர்மையாய் நின்றே கழித்தவன், எந்த முறைகேடான வரவுக்கும் ஆசைப்படாத மனது கொண்டவன், ஒரு அல்ப சந்தோஷத்திற்காக ஒரு அல்ப ஆசையின் நிமித்தம் கொள்ளும் மனத் தடுமாற்றத்தின் அடையாளங்களாய் ராகவாச்சாரியின் செய்கைகள் அமைகின்றன. அது அவர் மனதிற்கு மட்டும் தெரிந்த உண்மை.
அவரை கடந்த இருபதாண்டுகளாய்க் கவனித்து வரும், அவர் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருக்கும், வேலுமாராருக்கு அவரின் இந்தச் செய்கைகள், கடந்த நான்கைந்து நாட்களாய் அவர் நடந்து கொள்ளும் விதங்கள் எல்லாமும் சங்கடத்தோடு கூடிய சந்தேகத்தை அவர் மீது எழுப்புகின்றன. எதுக்காக சாமி இப்டி அல்லாடுறாரு….?
கொத்தவால் சாவடிக்கு வந்தேன்…கறிகாய் வாங்கணும்…அண்ணா வந்திருக்காரு….முதலாளிட்டப் பணம் வாங்கணும்…
நேத்தே வாங்கியிருக்கலாமே….?
என்னவோ அப்பத்  தோணலை…..!
சரி…சரி..இருங்க.. – என்கிறார் மாரார்.
ராகவாச்சாரி வெளியே ஒரு நாற்காலியில் உட்காருகிறார். பிறகு உள்ளே சென்று உதவி மானேஜர் இருக்கையில் போய் அமர்கிறார். அங்கும் இருப்புக் கொள்ளாமல் எழுந்து டெலிபோன் ஆபரேட்டர் மேரி டேபிளில் சென்று சற்று நேரம் அமர்கிறார். அதுவும் பிடிக்காமல் கடைசியில் முதலாளியின் கண்ணாடி அறைக்குள்ளே சென்று விசிட்டர்ஸ் உட்காரும் எதிர் இருக்கையிலேயே அமர்ந்து விடுகிறார்.
அவரின் செய்கைகளை வேலுமாரார் கவனித்துக் கொண்டேயிருக்கிறார். ஏன் இப்டியிருக்கார் இன்னிக்கு?
ராகவாச்சாரியின் அலைபாயும் மனதை வெளிப்படுத்துகிறது அவரது செய்கைகள். எல்லா நல்ல மனிதர்களும் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அல்லது சில கட்டங்களில் தடுமாறித்தான் போயிருக்கிறார்கள். வாழ்க்கைச் சூழல்கள் அவர்களை அப்படிக் கொண்டு நிறுத்தி விடுகின்றன…. ஆனாலும் நல்லவனாய் இருப்பவன் என்றும் தடுமாறிவிடக் கூடாது என்பதுதான் சத்தியம். வாழ்க்கை பூராவும் தரித்திரமும், ஏழ்மையும், நோயும் நொடியும் துரத்தினாலும் எதற்கும் ஆசைப் படாத தூய  மனது கொண்டவன்தான் மிகுந்த செல்வம் படைத்தவன். இறைவன் விதித்த வழி என் பயணம் என்று தொடர்ந்து சாவை வெல்பவன் அவன்.
ஏதோ ஒரு கட்டத்தில் அல்ப ஆசைகளுக்கு மனம் விழைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்….அது அதுகாலம் வரையிலான ஒருவனது அப்பழுக்கற்ற தூய்மையை பங்கம் பண்ண வைத்து விடும் பெருத்த அபாயம் உண்டு.
அப்படியான பெரிய்ய்ய்ய்ய ஆசைக்கு உட்பட்டு ஒன்றும் ராகவாச்சாரி தவறிழைக்கவில்லை. ஆனாலும் ஒரு  அல்ப விஷயத்திற்காக அவர் இதைச் செய்திருக்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. அப்போதும் கூட வேலுமாரார் அவர் சார்ந்து வைத்திருக்கும் மதிப்புக்குக் கொடுக்கும் மரியாதை நம்மை வியக்க வைக்கிறது. அவர் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
மனிதர்கள் எப்போதாவது தட்டுத் தடுமாறி, நிலை கொள்ளாமல் அல்லது தன் நிலை மயங்கி தவறிழைத்து விடுவது உண்டுதான். அதைப் பெரிசு படுத்தாமல் ஒதுக்கி விடுவதே சாலச் சிறந்தது…ஏதோ…தெரியாம நடந்து போச்சு….அவ்வளவுதான். அதுதான் அந்த மனிதனின் அது நாளைய வரையிலான நேர்மையையும், ஒழுக்கத்தையும் உழைப்பையும் மதித்ததாகும் என்கிற நீதி இக்கதையில் நின்று நிறைவேறுகிறது. அது வேலுமாரார் மூலமாகவும், ஏன் அந்த நிறுவனத்தின் முதலாளி மூலமாகவும் கூட நிலை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் அதை வேலுமாரார் கவனித்து அவரைத் தடுக்கும் அந்த நிகழ்வு….? நம் மனசை என்ன பாடு படுத்துகிறது?
சந்தேகப்படுவதற்காகத்தானே அவருக்கு சம்பளம்? அதுதானே அவருக்கு வேலையே…!
இப்படி வாங்க சாமி…ஒரு விஷயம்…..
எனக்கு நிக்க நேரமில்லை…..
உங்க பையைப் பார்க்கணும்…..
என் பையையா…அதில எட்டணாத்தான் இருக்கு…
சட்டைப்பையை இல்ல…கைப்பையை….-என்று வாங்கிப் பார்த்தே விடுகிறான்.
என்னடாது அதிகப்பிரசங்கித்தனம்….?
இந்த இடத்தில்தான் வேலுமாராரின் பண்பாடு வெளிப்படுகிறது.
கத்தாதீங்க…நீங்க கத்தினீங்கன்னா மத்தவங்களுக்குத் தெரிஞ்சி போயிடும்… அப்படி அசிங்கம் பண்ண வேண்டாம்னு பார்க்கிறேன்…முதலாளி வரட்டும். உங்களை கண்ணாடி ரூம்ல கொண்டு நிறுத்தறேன்.கதவைச் சாத்திக்கிட்டு இதைச் சொல்றேன். அப்புறம் அவர் சொல்றபடி கேட்கிறேன். ஒருத்தருக்கும் காதிலே விழாது…..
நீ சொல்றதை அவர் நம்பிடுவாரா?
நான் எனக்குத் தோணறைதை அவர்ட்டச் சொல்லணும். அது என் கடமை.இல்லாட்டி முதலாளிக்கு செய்ற துரோகமாயிடும்…
நம்பி….என்னை வேலையை விட்டுத் தூக்கிட்டார்னா? ஏழு குழந்தைகள் பட்டினி கிடக்குமே…யோசிச்சியா?
நம்மள் சிரசிலே எப்படி லிகிதமோ?-இது சுருக்கமாக சொல்லியிருக்கும் நிகழ்வு. ஆனால் கதையின் உயிரே இந்த நிகழ்வும், இதற்கான வேலுமாராரின் விசாரணையுமாக ஊசலாடும் இடமாய் அமைந்து விடுகிறது.
ஐந்நூறு பக்கம் நோட்டு…ஒன்றுமே எழுதாத புதிய நோட்டு….முதலாளி மேஜை மீது இருந்த நோட்டு….
என்னய்யா இது…?.முதலாளியின் கேள்வி.
தினப்படி கணக்கு எழுதன்னா இதமாதிரி செய்யச் சொன்னேன்…….
       எனக்கு வேணாம்…ஏதோ பார்த்துண்டேயிருந்தேன். அசதி மறதியா பைக்குள்ள போட்டுண்டேன் போல்ருக்கு….
       அப்போ மேலாக இல்ல பைல இருந்திருக்கணும்….துண்டு எப்டி மேலே வந்திச்சு…. –பையைச் சோதனை செய்திருந்த மாராரின் பதில்.
       என்னைக் கேட்கப்படாதா…இத மாதிரி பத்து நோட்டுப் பண்ணித் தரமாட்டனா…?சரி…சரி…போம்…! ஏய் மாரார்…பைண்டர்ட்டச் சொல்லி பத்து நோட்டு ரெடி பண்ணச் சொல்லு…..
       சரி…போமய்யா…போம்..போய் வேலையைப் பாரும்…இனிமே எதாச்சும் வேணும்னா எங்கிட்ட கேளும்..எதுக்கு இந்த அசட்டுத்தனம் இந்த வயசிலே…..எழுந்திரும்…! –விஷயம் முடிந்தது. முதலாளியின் விசாரணை அவருக்கும், அவர் வயசுக்கும்,  அவர் சர்வீசுக்கும்,ஏன் அவரின் குடும்ப நிலைமைக்குமே கொடுத்த அதி மரியாதை என்று கொள்ளலாமா?
       வெளியேறும் ராகவாச்சாரிக்கு அன்று அவர் லீவு எடுத்தது அறவே மறந்து போகிறது. பாவம்…அவரின் தடுமாற்றம் நமக்கு வேதனையளிக்கிறது. இந்த மனுஷனுக்கு ஏன் புத்தி இப்டிப் போகணும்? எல்லாம் கெட்ட நேரம்…! ஒரு சராசரி மனிதனின் வேதனை இதுவாகத்தான் இருக்கும்….மாராரைப் போல், அவர் முதலாளியைப்  போல் நாமும் ராகவாச்சாரியின் சார்பாகவே நிற்கத் தலைப்படுகிறோம். அதுவே மனிதாபிமானம்.
ராகவாச்சாரி எதற்காக அந்த ஐநூறு பக்க பைன்ட் நோட்டை எடுத்தார்….? புரிகிறதா உங்களுக்கு….? கதையின் தலைப்பைப் பாருங்களேன்….!!!
                           --------------------------------------------------------------





24 மே 2019

‘விகாசம்“ சுந்தர ராமசாமி-சிறுகதை வாசிப்பனுபவம்


‘விகாசம்“                         உஷாதீபன்,                                             சுந்தர ராமசாமி-சிறுகதை   வாசிப்பனுபவம்-உஷாதீபன்                                -----------------------------------------------------                                       .“அன்புடன்…” தொகுப்பு                   

                (தமிழின் சிறந்த படைப்பாளிகளின கதைகள்) சுப்ரமண்ய ராஜூ நினைவு வெளியீடு                                      நர்மதா பதிப்பகம், தி.நகர்., சென்னை-600 017.
              வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேரோடு பழக நேரிடுகிறது. அப்படிப் பழகுபவரோடெல்லாம் நெருக்கம் ஏற்பட்டு விடுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே மனதுக்கு மிகவும் நெருக்கமாகி,  நம் வாழ்க்கையோடும் நெருங்கி விடுகிறார்கள். அப்படி நெருங்கி விட்ட பின்னால் நமது குற்றங் குறைகள் அவர்களுக்கும், அவர்களது குற்றங் குறைகள் நமக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதைப் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. சகித்துக் கொண்டு செல்லப் பழகிக் கொள்கிறோம். குறைகளைச் சரி செய்ய உதவிக் கொள்கிறோம். கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுக்கத் தயாராகி விடுகிறோம்.
மனதோடு ஒன்றி விட்ட சிலர் நம் வாழ்க்கையோடும் ஒன்றிவிட்டவர்களாகிவிடுகிறா்கள். அவர்களுடனான பயணம் தவிர்க்க முடியாததாய் கடைசிவரை தொடர்ந்து செல்கிறது. இருவரில் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டாலும் பரஸ்பரம் அதைப் பெரிதுபடுத்தாமல், சமன் செய்து கொண்டு போகப் பழகிக் கொள்கிறோம். சந்தோஷ காலங்களில் கூடிக் குலாவிக் கொள்கிறோம். அவர்களோடு ஏதேனும் பிணக்கு ஏற்பட்டாலும் அது தற்காலிகமானதாகி, உரிமையோடு மீண்டும் கூடிக் குலாவப் பழகிக் கொள்கிறோம்.
அம்பிக்கு நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது ராவுத்தருக்கும் அப்பாவுக்குமான தற்காலிக மன வருத்தங்கள். இது அடிக்கடி நிகழ்வதுதான்…பிறகு சரியாவதுதான்….என்று. அம்மாவுக்கும் இது தெரிந்த கதைதான். கேட்பதற்கு உரிமை உண்டுதான்.
அவர் இல்லாம உங்களுக்கு முடியுமா, முடியாதா? எத்தனை வருஷமா இந்தக் கூத்து? விலகறதும் சேர்த்துக்கறதும்…. – அப்பாவின் முகம் சிவப்பதை அம்பி பார்க்கிறான்.
குளிச்சு சாப்டு, ஆனைப்பாலம் போய் ராவுத்தரைக் கையோட கடைக்குக் கூட்டிட்டு வந்திடு….நான் போய் வண்டி அனுப்பறேன் என்று மகனிடம் சொல்ல…அது பொறுக்கமாட்டாமல்தான் அம்மா கேட்கிறாள்.
ஓணம் வர்றது…நீ கடைக்கு வந்து பில் போடு…. – என்று கோபமாய் இரைகிறார். உதடுகள் கோணி,வலித்துக் காட்டுவதுபோல் அப்படியொரு கோபம். ராவுத்தரை இருக்கச் சொல்வதும், போகச் சொல்வதும், திரும்ப அழைத்து வரச் சொல்வதும் என் உரிமை சார்ந்த விஷயம். அதில் யாரும் தலையிடக் கூடாது…என்பதன் அடையாளமான கோபம் அது. அதை மனைவி கேட்டது பிடிக்கவில்லை.
இந்த லோகத்துல ராவுத்தர் ஒருத்தர்தான் பில் போடத் தெரிஞ்சவரா? – மறுபடியும் அம்மாவின் கேள்வி.
வாயை மூடு….நீ எழுந்திருடா….போ…நான் சொன்ன மாதிரி செய்….. – என்ன கேள்வி வேண்டிக் கிடக்கு என்கிற வேகம். வீடு வாயடைத்துப் போகிறது.
பையன் அப்பாவுக்குக் கேட்காமல் மெதுவாய் அம்மாவிடம்….ஏம்மா…முன் கோபின்னா பரவால்ல….முன்கோபமே அப்பான்னா எப்டி…? என்று சொல்ல சிரிக்கிறாள் அம்மா. ஆனாலும் கருணை சுரக்கும் உள்ளம். தெரிஞ்சவாளையும், கூடவே வந்துண்டிருக்கிறவாளையும் அவ்வளவு சாதாரணமா உதறிட முடியுமா? அது மனுஷத் தன்மையா என்ன?
ரொம்ப லட்சணந்தான்…புத்தியுள்ள பிள்ளைன்னா ராவுத்தரைக் கூட்டிண்டு கடைக்குப் போ….என்று விட்டு, தன் நெஞ்சின் மீது வலது கையை வைத்து….“அவர் என்ன பேசியிருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படறேன்னு அவர்ட்டச் சொல்லு…” என்கிறாள்.
வீட்டு ஐயாவை விட வீட்டு அம்மாவின் வார்த்தைகளுக்கு அதிக மதிப்பிருக்கும், அந்தக் கருணையை எதிராளி உணர வாய்ப்புண்டு என்கிற நம்பிக்கை. பண்பாடு செறிந்த சமூகம் நிலவிய காலம். மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் பேணப்படாத அன்பு மட்டுமே பிரதானமாய் கோலோச்சிய நாட்கள்.
ப்படி என்னதான் சண்டை அப்பாவுக்கும்…ராவுத்தருக்கும்….? மின்னல் பொறியாய் மனக்கணக்கிடும் ராவுத்தரை அத்தனை சீக்கிரத்தில் ஒதுக்கிவிட முடியுமா? அவரும் சரி, வரிசையாக ஐந்து பேர் உட்கார்ந்து காகிதத்தில் எழுதி கூட்டிக் கழிப்பதும் சரி….சாதாரண மனித மூளையா அது? வாடிக்கையாளர்களே பார்த்து வியக்கும் அமானுஷ்யமல்லவா அது?
சாதாரண மனுஷ ஜென்மந்தானா இவர்….? காதால் கேட்டே இப்படி போடுறாரே….கண்ணால பார்க்க முடிஞ்சா…? இத்தனைக்கும் ஸ்கூல் படிப்பு வெறும் மூணாங்கிளாஸ். கடையைக் கூட்டிச் சுத்தம் பண்ணித் தண்ணி எடுத்து வைக்கும் கோமதியை விட ரெண்டு கிளாஸ் கம்மி…..ஆனா அவரது அனுபவத்துக்கு வயசுண்டா? அவரில்லாமல் ஓணம் விற்பனையை எப்டிச் சமாளிக்கிறது?
ஆனாலும் இப்படிச் சண்டை வந்து விட்டதே….!
தனக்கு வேண்டிய துணிகளை எல்லாம் பொறுக்கித் தன் பக்கத்தில் குவித்து வைத்துக் கொண்டு, பிறகு ராவுத்தர்  கடன் கேட்டதுதான் தப்பாய்ப் போயிற்று. கடனை இப்படி ஏத்திட்டே போனா எப்படி, தொகை ஏறிப் போச்சே…? என்ற அப்பாவின் பேச்சுக்குப் பிறகும்….கோலப்பா…பில் போட்டுக் கொடுத்திடு…என்கிறார். தான் சம்மதம் தரும்முன் பில் போடச் சொன்னால் எப்படி? அவ்வளவு இளக்காரமா? மட்டுப் படுத்தறேன்….அவர் கறுவிக் கொள்கிறார். என்ன பண்ணச் சொல்றீக…வீடு முழுக்கப் பொட்டைக…மகன் கூறில்ல…மாப்பிள்ளை கூறில்லே….மருமக நாலு, பேத்திக எட்டு, பேரன்க எட்டு…ஆளுக்கொண்ணு எடுத்தாலும் தொகை ஏறிப் போகுதே….-வார்த்தைகள் காதில் விழவில்லை இவருக்கு.
இந்தத் தவா கடன் தரச் சந்தர்ப்பம் இல்லை…..குரலில் கடுமை.
அப்டீன்னா நம்ம உறவு வேண்டாம்னுதானே ஐயா சொல்றீங்க…குட்டீ….என்னைக் கொண்டு வீட்ல விட்டுரு….-கோமதியிடம் சொல்லிக்கொண்டே எழுந்து விடுகிறார் ராவுத்தர். வழக்கமான வரேன் ஐயா கூட இன்று இல்லை. போகட்டும்…..விட்டு விடுகிறார். அவர் கோபப்படுவதும், இவர் உடனே எழுந்து நடையைக் கட்டி விடுவதும் எல்லாமும் சட்டுச் சட்டென்று நடந்து விடுகின்றன. மனதுக்குள் ஆழமான அன்பு உள்ளவர்களின்-இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வெளிப்பட்டு விடுகிறது.
இன்று…வியாபாரத்துக்கு ராவுத்தர் இல்லாமல் முடியாது. என்ன செய்ய…?
அம்பி வந்திருக்கேன்…..ராவுத்தர் வீட்டு வாசலில், “ நான்தான் அம்பி…“
வா…வா…. –உற்சாகம் கொப்பளிக்கும் குரல். சாணி மெழுகிய தரையில் சப்பணம் கட்டி கம்பீரமாய்  ராவுத்தர். துழாவும் கரங்கள். கண்கள் மலங்க மலங்க….இழந்துவிட்ட ஜீவ ஒளியை மீண்டும் வரவழைக்க நினைக்கும் துடிப்பு….உணர்ச்சி வசப்பட்டதில் அதிக நெகிழ்ச்சி.
இன்னிக்கு என்ன வேட்டி…கட்டிக்கிட்டாப்ல…?
தோணிச்சி….
என்ன கரை…?
குண்டஞ்சி….
ஐயர் மாதிரியே….பார்க்கவும் ஐயர் மாதிரியே…..இருக்கேன்னு கடைப்பையன்க சொல்வானுக….இப்படிச்  சொல்லிவிட்டு அம்பியின் கன்னம், கழுத்து, நாடி, வாய், மூக்கு, கண், நெற்றி, காதுகள் என்று தடவிப் பார்க்கிறார்…எல்லாம் கணக்கா வச்சிருக்கான்….என்றுவிட்டுச் சிரிக்கிறார்.
அம்மா….. – ஆரம்பிக்கிறான் அம்பி.
எப்படியிருக்காங்க…உடம்பு சௌரியமா…?
அப்டியேதான்…
நம்மகிட்ட தூதுவளை, கண்டங்கத்திரி லேகியம் இருக்கு. இழுப்புக்கு அதுக்கு மேலே மருந்தில்லே…
வந்த விஷயத்தைச் சொல்ல இதுவே நல்ல தருணம். “அம்மா உங்களை கடைக்குக் கூட்டிண்டு போகச் சொன்னாங்க…ஏதாவது முன் பின்னாப் பேசியிருந்தாலும் அம்மா வருத்தப்படுறதா சொல்லச் சொன்னாங்க….தட்டப் படாதுன்னும் சொன்னா…..
ராவுத்தர் முகத்தில் பரவசம்.  தாயே…நீ பெரிய மனுஷி….இரு கரங்களையும் மேலே உயர்த்தி வணங்குகிறார்.   எழுந்திரு…இப்பவே போறோம்…..
-முடிந்தது விஷயம். அந்த வருடம் ஓணம் விற்பனை நன்றாக இருக்கிறது.  படு உற்சாகமாக ராவுத்தர் சமாளித்து விடுகிறார். துணியின் அளவும், விலையும் காதில் விழுந்த மறு கணம் விடை. பதினாறு அயிட்டங்களுக்குப் பெருக்கி விடை சொல்லிவிட்டு, அயிட்டம் பதினாறு, கூட்டுத் தொகை ரூபா.1414, பைசா 25…அந்தப் பொறியை மனித மூளை என்று எப்படிச் சொல்ல முடியும்?
துள்ளல் கொஞ்சம் கூடிப் போச்சு அந்த மனுஷனுக்கு…ரெண்டு தட்டுத் தட்டி வைக்கணும்… - அப்பா. இரவில் கண் விழித்ததுதான் மிச்சம். ஒரு தவறைக்கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை.
ராவுத்தரின் வீடு ஏலத்திற்கு வந்து விடுகிறது. சாமான்களைத் தூக்கி வீசுகிறானாம் அமீனா. தகவல்.  குழந்தை மாதிரி அழுகிறார். அழும்போதே கடைச் சிப்பந்தி கோலப்பன் பில்லுடன் வந்து நிற்கிறான். 13 ரூபா. 45 பைசா…45 மீட்டர்…70 சென்டிமீட்டர்…. – எழுதிக்கோ…616 ரூபா…66 பைசா…
ஐயா…வட்டியும் முதலுமா  ஐயாயிரத்துக்கு மேலே கோர்ட்டுல கட்டணும்…. அடுத்த நாள் கடைக்கு வரவில்லை ராவுத்தர்.
என்ன அநியாயம்…இப்பத்தான் அவருக்காக கோர்ட்ல பணம் கட்டிட்டு வர்றேன்…காலை வாரி விட்டாரே…நன்றி கெட்ட மனுஷன்…
கோலப்பனுக்கோ மித மிஞ்சிய கோபம்.“கணக்குப் போடத் தெரியுமே தவிர…அறிவு கெட்ட ஜென்மமில்ல அது…இதோ போய் தர தரன்னு இழுத்திட்டு வர்றேன்…”
ரொம்பப் பொல்லாத உலகம் இது…பெத்த தாயை நம்ப முடியாத காலம்… - சோர்ந்து போகிறார்.
சிறிது நேரத்தில் கோலப்பன்…சைக்கிள் கேரியரில் ராவுத்தர்.
ஐயா…புத்தி மோசம் போயிட்டேன் ஐயா…. – இரு கையையும் கூப்பிய நிலையில் ராவுத்தர்.
உம்ம கொட்டம் அடங்கிற காலம் வரும்…. - 
அப்டிச் சொல்லாதீங்கய்யா…வேலைக்கு வா…பணம் கட்டுறேன்னார் செட்டியார்…புத்தி மோசம் போயிட்டேன்…
உம்ம கொட்டம் அடங்குற காலம் வரும்… - மீண்டும் சொன்னார் அப்பா.
என்ன ஒரு அன்பின் இறுக்கம்..? ரத்தமும் சதையுமாய் உள்ளவர்களிடம்தான் சண்டை வரும்….சமரசங்கள் ஆகும்….படிக்கும் நாமோ இந்தச் சின்னச் சின்ன வரிகளை….நெருங்கி அடங்கிய சம்பாஷனைகளை….வரி வரியாய்…வார்த்தை வார்த்தையாய் உணர்ந்து நெஞ்சுருகிப் போகிறோம்..
ஆச்சரியம் நிகழ்கிறது  அடுத்தாற்போல்…உம்ம கொட்டம் அடங்கும் காலம் வரும்….வந்து விட்டதோ அந்தக் காலம்….
அந்தத் தடவை கொள்முதலுக்கு பம்பாய் சென்று வந்த அப்பா…ஒரு சிறு மிஷினை அம்மாவிடம் காட்டுகிறார். இது கணக்குப் போடுமாக்கும்…
மிஷி்னா…?
போடும்…
அம்மா கணக்குச் சொன்னாள். அப்பா பித்தான்களை அழுத்தினார். மிஷின் விடை சொல்லிற்று.
ராவுத்தர் மூளைய, மிஷினாப் பண்ணிட்டானா? – அம்மாவின் கேள்வி.
மூளையில மூணு நரம்பு அதிகப்படியா இருக்கு என்று சொன்ன ராவுத்தருக்கே அதிசயம்.
தாத்தாவை விட இது பொல்லாது… - கோமதியின் அதிசயம் இது. வெளிறிப் போகிறது ராவுத்தரின் முகம். ஆண்டனே…இதென்ன சூட்சுமம்….? விளங்கலியே….!!!-வாய் கெட்டித்துப் போகிறது ராவுத்தருக்கு.  நடைப்பிணம் போல் கடைக்கு வந்து போய்க் கொண்டிருக்கும் நாட்கள். சிரிப்பு, சந்தோஷம், கிண்டல், கேலி, குத்தல்  எல்லாமும் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போயின. குரல் கம்மிப் போயிற்று. உடம்பு கூட சற்று இளைத்தாற்போல்….அப்பா அவரைப் பில் போடச் சொல்லவேயில்லையே…!
அடடா…இதென்ன சோதனை….?-ஆனால் ஒன்று…அன்று பிற்பகல் அது நடந்தது. முருகன் வெட்டியிருந்த துணிகளுக்கு நான் கணக்குச் சொல்ல…நடுவில் “இந்தாப்பா நில்லு…” – குறுக்கிட்டார் ராவுத்தர்.
பாப்ளின் என்ன விலை சொன்னே…?
மீட்டர் 15 ரூபா…10- பைசா…
தப்பு….பீஸை எடுத்துப் பாரு….16 ரூபா 10 பைசா…. – பீஸைப் பார்த்த முருகனின் முகம் தொங்கிவிட்டது.
கிழித்த துணிகளுக்கு மிஷின் கணக்குப் போடும்தான். ஆனால் எழுதிய விலையை தப்பாய்ச் சொன்னால்….? அந்தக் காசை எவன் கொடுக்கிறது….? ஐயர் நஷ்டப்படுறதா? துணில எழுதினதக் கரெக்டாச் சொல்றதுக்கும் ஒரு மூளை வேண்டாமா? என்ன ஒரு அபார ஞாபக சக்தி….?
பத்து மீட்டர் கொடுத்திருக்கே….பத்து ரூபா போயிருக்குமே….ஐயர் முதல அள்ளித் தெருவுல கொட்டவா…வந்தே…? – அதட்டுகிறார் அவனை.
உங்களுக்கு விலை தெரியுமா…? -  அப்பாவின் கேள்வி ராவுத்தரை நோக்கி….அதிசயம் அவருக்கு விலகியபாடில்லை. ஆஉறா…இப்படி ஒண்ணு இருக்கு போல்ருக்கே…இதுக்கு ராவுத்தர் இல்லாம முடியாதோ? மனுஷன் கடையவே கணக்குல வச்சிருப்பார் போலிருக்கே…!
ஒரு ஞாபகம்தான் ஐயா…. -   என்ன ஒரு அடக்கமான பதில்…. என்ன ஒரு முதலாளி பக்தி….என்ன ஒரு மரியாதை…..
எல்லாத்துக்குமா….? அப்பா திரும்பவும் கேட்கிறார்.
ஆண்டவன் சித்தம்…. – ராவுத்தரின் பதில்.
சின்ன டவல்…?
4 ரூபா. 10 பைசா….
ஆகப் பெரிசு…?
36 ரூபா…40 பைசா……   - அப்பா கேட்கக் கேட்க, விடை உடனுக்குடன்…. ஆச்சரியத்தில் விரிந்தார் அப்பா. சாதாரண மனுஷ மூளையா இது? இப்டியா எல்லாத்தையும் ஒருத்தம் மண்டைக்குள்ள ஏத்தி வச்சிருப்பான்…?
இனி பில் போடறச்சே…விலை சரியா இருக்கான்னும் பார்த்துக்கும்….சரியா….?
முடிஞ்ச வரையிலும்…. ஐயா, இன்னிக்கு மின்சாரக் கட்டணம் கட்டியாகணும்…கடைசி நாள்….
ஐயோ…கட்டலியே….கோலப்பா…..!
அவன் வரலியே…இன்னிக்கு….
உமக்கு எப்படித் தெரியும்…வரலேன்னு…?
ஒவ்வொருத்தருக்கும் ஒரு குரல் இருக்குய்யா…ஒரு மணம் இருக்கு…ரெண்டும் இல்லே இன்னிக்கு…முருகா…..!
நேத்து ஒரு வாடிக்கைக்கு ரெட்டை வேட்டி இல்லேன்னான் இவன்…கண்டியுங்க ஐயா…
என்ன சொல்றீர்…?
பத்து வேட்டிக்கு விலை  போட்டு வச்சீங்கல்ல…ஏழுதானே வித்திருக்கு…மூணு இருக்கணுமே…
தேடினால் மூணு சரியாக இருக்கிறது.
இருக்கிறத இல்லேன்னு சொல்றதுக்கா உட்கார்ந்திருக்கோம் – ராவுத்தரின் கோணல் குரல்….
இதுதான் ராவுத்தர்….கடையே அதிசயித்து வாயடைத்துப் போகிறது. அன்று மாலை அப்பா அருகில் பில் போடும் பகுதியில் ராவுத்தர். நெருங்கி விடுகிறார்.
உங்க பக்கத்துல இருந்தா இன்னும் கொஞ்சம் உபயோகமா இருப்பேன்….மின் விசிறியக் கொஞ்சம் கூட்டி வைக்கலாமே….அடியேனுக்கும் கொஞ்சம் காத்து வரும்…. – கடமை சீராக நிறைவேறும் இடத்தில் தானே கிடைக்கும் உரிமை….அந்த உரிமையின் உள்ளே பொதிந்திருக்கும் ஆழமான அன்பும் கௌரவமும்…மதிப்பும், மரியாதையும்….பண்பாட்டின் எல்கை தாண்டாத பக்குவம்…
கடை சாத்தும் நேரம்.
ஐயா…அம்மாவுக்கு மருந்து வாங்கணும்னு சொன்னீங்களே…வாங்கிட்டீங்களா….?
வாங்கறேன்….
ஐயா, தாயாருக்குத் திதி வருதுன்னு சொன்னீங்களே…முருகன் கிட்ட சொன்னா…போகுற பாதையிலே புரோகிதர்ட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாமில்ல….
சொல்றேன்….
கடைச்சிப்பந்திகள் ஒவ்வொருவராக நகர… கோமதி ராவுத்தரின் கைகளை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு நடக்கையில்…“தாத்தா…இனிமே கணக்குப் போட வரவே மாட்டீங்களா…?
ராவுத்தரின் நிலை உயர்ந்து போகிறது.
இப்ராகீம் உறசன் ராவுத்தர் இப்போது வெறும் கணக்கு மிஷின் இல்லை…மானேஜராக்கும்….
ஆண்டவன் சித்தம்…
 சபாஷ்….!!! – சொல்லத் தோன்றுகிறதா…. உங்களுக்கு….தோன்றினால்தான் நீங்கள் சிறந்த வாசகர். கலை இலக்கியங்களை ரசிப்பது என்பது என்ன சாதாரண நிகழ்வா? அதற்கு ஒரு தனிப் பயிற்சி வேண்டுமய்யா…! பழகப் பழகத்தான் அது கைகூடும்….அந்த உலகமே தனி…!
எந்தப் பணியிலுமே முழுமையான ஈடுபாடு கொண்டவனுக்கு என்றுமே எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது…அது ஆண்டவனால் எழுதப்படும் கணக்கு… ராவுத்தரின் கணக்கு…“ஆண்டவன் சித்தம்”
கதையா இது….காவியமய்யா…காவியம்…!!!! எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் பாதங்களுக்கு அன்பும் மரியாதையும் நிமித்தம் அனந்தகோடி நமஸ்காரங்கள்….!!!
                     ----------------------------------------------------------------------------------------------------.











22 மே 2019


“மனச் சாய்வு“                                                    ஜெயந்தன் சிறுகதை வாசிப்பனுபவம்                                 -                                  “ஜெயந்தன்-தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)          
வெளியீடு-டிஸ்கவரி புக் பேலஸ்,              
     ல சமயங்களில் கதைகள் எழுதுவதைவிட பலராலும் எழுதப்பட்டதைப் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு எல்லோரும் எழுதித் தீர்த்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. எல்லாவகையிலும் எழுதியிருக்கிறார்கள். ஒருவர் தவற விட்டதை இன்னொருவர், இன்னொருவர் தவற விட்டதை வேறொருவர் என்று எழுதாதவைகளே இல்லை  என்றுதான் தோன்றுகிறது. அதே சமயம் நாம் இதுவரை எழுதியது என்ன என்று நினைத்துப் பார்க்க முற்படுகையில் மனது வெட்கமுறுவதாகவும் இருக்கிறது.
மனசாட்சி உள்ளவனாகப் படைப்பாளி இருக்க வேண்டும். உள்ளொன்றும் புறமொன்றுமாக இருத்தல் நல்லதல்ல. தன் உண்மையைத் தானே அறிந்திருத்தல் அவசியம். தான் எங்கே நிற்கிறோம் என்பது புரிந்திருக்க வேண்டும்.
அதை நியாயமாய் எவன் உணர்கிறானோ அவனே தன் பயணத்தை திடமாய்த் தொடர முடியும். புற வாழ்க்கைச் சிக்கல்கள் அவனைக் கட்டிப் போடாமல் இருந்தால். அம்மாதிரித் தன் எழுத்து வன்மையை உணர்ந்து நகர்ந்த படைப்பாளிகள் மிகச் சிலர்தான். அவர்கள் அவர்களிடத்தில் ஆணித்தரமாய் நின்றார்கள். அவர்களைத் தேடி வருபவர்கள் வந்தார்கள்.
இப்படி ஒருவர் வீர்யமாய்த் தொடர்ந்து எழுதுகிறாரே…அவரைப் பார்க்க வேண்டுமே….என்று அறிந்து பாராட்டி…நீங்கள் நம் இதழில் தொடர்ந்து எழுத  வேண்டும் என்று சொன்னார் அந்தப் பிரபல வார இதழின் ஆசிரியர். அந்த மாதிரி ஒரு கௌரவம் கிடைக்க வேண்டும் படைப்பாளிக்கு.
அப்படியொரு ஆணித்தரமான எழுத்து வன்மை அமைய  வேண்டும். எடுத்துக் கொண்ட கருவை முதலில் தான் உள்வாங்கி, அசை போட்டு, தெளிவு பெற்று –கையில் பேனாவை எடுத்தால்தான், சொல்ல வந்ததை, சொல்ல நினைத்ததை  பிறத்தியாருக்கும் தெளிவாகச் சொல்ல முடியும். தனக்கே புரியாமல் எழுதப் புகுந்தால், என்ன சொல்றான் இந்தாளு? என்று சுலபமாய் நகர்ந்து விடும்-ஒதுக்கி விடும் அபாயம் நிறைய உண்டு.
இவர் ஒரு போதும் அப்படியிருந்ததில்லை. ஆணித்தரமாய் சொல்கிறேன்-கேட்டுக்கோ – என்று எழுதியவர். பொட்டில்  அறைந்ததுபோல் படீர் படீரென்று முன் வைத்தவர். அவனவன் பக்கம் அவனவன் நியாயம் என்பது உண்மையானால், அதை அவரவர் நிலையில் வாதிட்டு வெற்றி கண்டவர்.
அழுத்தம் திருத்தமான எழுத்து என்று சொல்வது வெறும் வாய் வார்த்தையல்ல. இவரின் படைப்பில் கல்வெட்டுப் போல் பதிந்து ,  அதுதான். இவர மாதிரி  இவர்தான். இவர் மட்டும்தான்.அதுதான் வித்தியாசமான, தனித்துவமான எழுத்து. மிகக் குறைவாக இருந்தாலும் காலத்துக்கும் பேசப்படும் எழுத்து.
“மனச் சாய்வு” என்ற கதையாடலுக்கு இவ்வளவு முகமன் சொல்லி ஆரம்பித்தால்தான் அந்தப் படைப்பாளிக்குப் பெருமை. திறமை மிகுந்தவர்களைக் கொண்டாடும் மனம்  வேண்டும். நாம் செய்யாததை, செய்ய நினைத்து ஆகாததை, இவர் செய்து விட்டார்…எப்படியோ பதிவாகிவிட்டது எழுத்துலகில்.  அந்தவகையில் திருப்தியோடு நிறைவு கொள்ள வேண்டும். அந்த மேம்பட்ட மனநிலையில் இந்தக் கதையாடல்:-
ஒரு கதையைப் படிப்பதும், ஆழ்ந்து ரசிப்பதும் பெரிதல்ல. அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது எவ்வாறு முன் வைக்கிறோம் என்பதே முக்கியம். படைப்பாளி எழுதியதுபோலவே சொல்லி விடுவது சரியா? எதை மையப்படுத்தி அந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார்  என்பதை உணர்ந்து அந்தக் குறிப்பிட்ட கருத்தை அங்கங்கே எப்படியெப்படித் தொட்டுச் செல்கிறார் என்பதை ஊன்றிக் கவனித்து, அப்படியான நகர்த்தல் மூலம் சொல்ல வந்த கருத்து எவ்வாறு பலம் பெறுகிறது எப்படித் தன்னை முகிழ்த்துக் கொள்கிறது என்பதை வாசக மனத்தில் ஆழப் பதியும்படி நிலை நிறுத்துவதுதான் கதை சொல்லியின் தலையாய பணி.
சிதம்பரநாதன் அந்தப் பெண்ணைக் கூர்ந்து கவனித்தார். பெண் மூக்கும் முழியுமாக இருக்கிறாளே தவிர குறிப்பிட்ட ஜாதியாக எந்த முத்திரையும் இல்லை.
கோவிச்சுக்காதேம்மா. இவன் அப்பாவோட பேசுறதுக்காக ஒரு புள்ளி விவரம் தேவைப்படுது. உங்க ஜாதி பெயர் என்ன?
அந்தப் பெண் பட்டென்று அழுத்தம் திருத்தமாக பொட்டில் அடித்தாற்போல் சொன்னாள்:-“பறையர்”
அப்பா தங்கள் காதல் கல்யாணத்துக்கு தடை சொல்றார் என்று ராஜசேகரன் சொல்ல, என்ன பிரச்னை என்று இவர் கேட்க ஜாதி என்று ஒரே வார்த்தையில் அவன் சொன்னது இப்போது சுரீரென்றது இவருக்கு.
ஒரு கணம் திகைக்கிறார். மறுகணம் சபாஷ் என்கிறது மனம். எத்தனையோ தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பதவியினால், பொருளாதார மேம்பாட்டினால் மேலே வந்த பிறகு தங்கள் ஜாதியைப் பற்றிச் சொல்லக் கூச்சப்படுகிறார்கள். அல்லது மெதுவாய்ச் சொல்கிறார்கள். மறைக்கிறார்கள். மெல்லிய தொனியில் உறரிஜன் அல்லது எஸ்.ஸி., என்று சொல்லக் கேட்டிருக்கிறார். இவள் பரவாயில்லையே…பட்டென்று சொல்கிறாளே….இந்த அமைப்பை உடைத்து நொறுக்குகிறவரை எங்கள் கோபாக்னி தணியாது என்று இப்படி உரத்துச் சொல்கிறாளோ…? ஒருவகையில் இது சவாலும் கூட….
சரி…சேகர்…உங்கப்பாட்டப் பேசறேன்…..
தாங்க்யூ பெரியப்பா…..
நீ போய் நீபாட்டுக்கு உன் வேலைகளைப் பார்த்திட்டு இரு…பிரச்னையை ஆரம்பிக்காதே…அவுங்க ஆரம்பிச்சாலும்…பெரியப்பா வர்றாருன்னு சொல்லிடு….
ஒரு பிரச்னைக்கு எத்தனையோ கோணங்கள் உண்டே…! எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோணங்கள்.ரேகை சாஸ்திரம் சொல்வது போல் ஒருவனுடைய கைரேகை போல் வேறொரு கைரேகை இருக்கவே இருக்காது. ஒரு கோடாவது மாறியிருக்கும். கூட இருக்கும்….குறைய இருக்கும்…இருந்தே தீரும்….பிரச்னை மனிதர்கள் இடையேயும் இப்படித்தான்.
தன் வீட்டுக்குப் போன ராஜசேகரன் பெரியப்பா சொல்படியே அமைதி காக்கிறான். ஆனால் வீட்டில் பாட்டி என்று ஒருத்தி இருக்கிறாளே…பெரியப்பா வரும்முன் காரியம் மிஞ்சி விடுகிறது. பாட்டிகள் பிரச்னைகளின் மேல் விவாதங்களை வைப்பவர்கள். தாங்கள் இதுகாறும் தலையில் சுமந்தவைகளை, பிறர்பால் ஏற்றி வைக்க நினைப்பவர்கள். தங்களது சென்ற காலத்தை நியாயப்படுத்திப் பேசுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே சந்தோஷம்.
நான் சொல்றனேன்னு கோவிச்சுக்காதடா ராஜா….உலகத்துல படிச்சவன்தாண்டா  முட்டாள்….
ஆமாம் பாட்டி…..
என்ன ஓமாம்….இல்லாட்டி உன் புத்தி ஏன் இப்டிப் போகுது?
இருமல் எப்டியிருக்கு பாட்டி…?
ஒரு மட்டா தூக்கிட்டுப் போகாமக் கெடக்கு….இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்காமப் போய்ச் சேரலாமே…?
மணப்பாற முறுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன் பாட்டி…அம்மாட்ட கேட்டு ஒரு பத்து வாங்கிக்க…..
தங்கை சாந்தா சிரிக்க… அம்மா பிரவேசிக்கிறாள்.
வாயை மூடுடி…அவன் திமிர்தண்டமாப் பேசுறான்…இவ சிரிக்கிறா…..அவன் செய்ற வேலைனால நாளைக்கு உனக்கு என்ன ஆவும்னு தெரியுமா? தெரிஞ்சா சிரிப்பு வருமா….? ஒனக்காகத்தாண்டி எங்க அடி வயிறு கலங்குது….ஒரு கீழ் ஜாதியக் கட்டினவன் வீட்டுல எவன்டி வந்து பொண்ணு கேப்பான்….
ஏன் அவளுக்கும் அந்த ஜாதியிலேயே மாப்ள தேடுவான்… - இது பாட்டி.
பாத்தா போச்சு பாட்டி…..
விளக்கமாத்தால அடிப்பேன் நாயி…வாயை மூடுடா…..
சரி…இவர்கள் கிடக்கட்டும். அசலான பிரச்னை அப்பாதான். அவர்  என்ன சொல்லப் போகிறார்?
அப்பா வந்தாச்சு…. – தங்கை சாந்தா.
அப்பாவோடு இந்த விவாதம் எப்படிப் போகும் என்பதை எவராலும் யூகிக்க முடியாது. யூகித்தாலும் எழுதியவர் எவரும் கிடையாது. எந்த இடத்தில் நெருடல் என்பதை எவரும் தெளிவுறப் பகன்றது கிடையாது. எப்படியானாலும் ஏற்றுக் கொள்வது கடினம் என்றுதான் பிரச்னைகள் பயணித்திருக்கின்றன.ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுண்டு….அதுதான் ஜாதிப்புத்தி…..அது எல்லோருக்கும் உண்டு. அங்கும் உண்டு…இங்கும் உண்டு. எங்கும் உண்டு என்பதனால்தானே பிரச்னையே…!
எப்போ வந்தே…?
கொஞ்சம் முன்னாடிதாம்ப்பா…….
நீ மட்டும்தான் வந்தியா…?
ராஜசேகரன் அப்பாவை அமைதியாய்ப்  பார்க்கிறான்.
இல்ல…உன் வருங்கால மனைவியையும் கூட்டிட்டுத்தான் வந்திருக்கியான்னு கேட்டேன்…
கோபத்தை அடக்கி வாசிக்கிறாரோ…தாக்குதலை ஆரம்பத்திலேயே கடுமையாக்கும் யுக்தி.
நீங்க இப்டி வரவேற்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா கூட்டியாந்திருப்பேன்….
ஒரு விஷயம் ஒரு குடும்பத்தில் எப்படி வெடிக்கும்….பெரியோர்கள் மத்தியில் அது எப்படி விகசிக்கும்…படிப்படியாக எப்படி வளரும்….? காட்சிப்படுத்தல் என்பது என்ன அத்தனை சுலபமா? இயல்பான தன்மையிலே பிரச்னையை மையமாக வைத்து படிப்படியாக அது தன் முதிர்ச்சியை நோக்கி நகர்தல் அல்லது நகர்த்துதல்-இதில்தான் படைப்பாளியின் எழுத்துத்திறனே அடங்கியிருக்கிறது.
என்னடா சொன்னே…? என்று மகனைப் பார்த்துத் திரும்பி முறைக்கிறார் நாகசுந்தரம்.
என்னங்க இது…வந்ததும் வராததுமா? – அம்மா இடையே பாய்கிறாள். எல்லாம் நீங்க செஞ்ச வேலைதான். நீங்க சீர்திருத்தம்…சீர்திருத்தம்னு பேசினீங்க…அவன் செஞ்சுட்டான்….இப்ப மொறச்சு என்ன பண்ண? – அம்மா பேசுவதை மகன் பிடித்துக் கொள்கிறான்.
நீங்க ஒரு போலின்னா எங்களுக்கும் அதையே சொல்லிக் கொடுத்திருக்கணும்…
என்னடா போலி?
ஜாதி இல்லே…மதம் இல்லேன்னு நாள் பூரா பேசுறது….கலப்புக் கல்யாணம்தான் அசல்னு சொல்றது. தனக்குன்னு வந்தா மட்டும் சீறுறது…..
காலம் பூராவும் புதிய சித்தாந்தம் பேசியவர் விட்டுக் கொடுப்பாரா என்ன…? நாகசுந்தரம் ஒன்றும் அத்தனை மசிந்தவரில்லை.
இப்பவும் அதையேதாண்டா சொல்றேன். கலப்புக் கல்யாணம் செய்யலாம்தான். ஆனா கலாச்சார மோதல் இல்லாம செய்யணும்…
ராஜசேகரன் யோசிக்கறான். இதென்ன புதுசா ஒண்ணு சொல்றாரு…இதுநாள்வரை இதச் சொன்னதில்லையே….! புது சிந்தனையா…? அல்லது  புது சாக்கா….?
வெங்காயம்….ஒரு ஜாதி சைவமா இருக்கு.  இன்னொண்ணு அசைவமாயிருக்கு. ஒருத்தன் சாராயத்த சொர்க்கம்ங்கிறான். இன்னொருத்தன் அதைப் பாவம்ங்கிறான். நியாய அநியாயம் ஒரு பக்கம் கெடக்கட்டும்….ஒரு ஜாதி அன் கல்ச்சர்டா இருக்கு…இன்னொன்ணு பெரும்பாலும் எல்லாரும் படிச்ச கல்ச்சர்டா இருக்கு…நாம் அவங்களுக்கு என்ன சாம்பார் வைக்கிறது? அவுங்க நமக்கு என்ன கொழம்பு வைப்பாங்க…? அவுங்க சொந்தக்காரங்க நாலு பேரு நாளைக்கி கன்னங்கரேல்னு மேல் சட்டடையில்லாம> நம்ம நடு வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்தா பொருத்தமாயிருககுமா? சோபாவுல கால் வச்சி குந்திக்கி்ட்டு வெத்தில எச்சியை எங்க துப்புறதுன்னு தெரியாம முழிச்சா எப்படியிருக்கும்? அட அதுதான் போகட்டும்…சமயல் கட்டுல சம்பந்தி அம்மாக்கள் என்னா பேசிக்கிறது? கலப்புத் திருமணம் நடக்கட்டும்…முதல்ல அது ஒரே கலாச்சார எல்லைக்குள்ள இருக்க ஜாதிக்குள்ள நடக்கட்டும்…..
ராஜசேகரன் நினைக்கிறான். இந்தியாவில் ஜாதிப் பகைமை பெருமளவு மறைந்து விட்டாலும், திருமணக் கலப்பில் இன்னும் பிரிந்துதான் கிடக்கிறது.
கலாச்சாரம் ஒண்ணுதான் உங்க பிரச்னைன்னா இந்த விஷயம் சுலபமா முடிஞ்சி போகும்ப்பா….அவுங்க நம்மள விட மேம்பட்டவங்க…அவங்க தாத்தா ஸ்சூல்  தலைமையாசிரியர். அப்பா தாசில்தார். அண்ணன்  ஆர்மில கேப்டன்…அக்காவும் ஒரு டாக்டர்…அமெரிக்காவுல…அவுங்க யாரும் நம்ம வீட்டு சோபாவுல உட்கார்ந்துக்கிட்டு வெத்தல எச்சிய எங்க துப்புறதுன்னு முழிக்க மாட்டாங்க….
நாகசுந்தரம் விதிர்த்துப் போகிறார். குடும்பமே அவரைப் பார்க்கிறது. என்ன சொல்லப் போகிறார்?
ஆடிப் போகிறார் நாகசுந்தரம். தோற்றுப் போய்விட்டோமோ?
சட்டென எழுந்து வேகமாகவும் வெறுப்பாகவும் சொல்கிறார்.
அதெல்லாம் சும்மாடா….என்னதான் ஆனாலும் ஜாதிப்புத்தின்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யும்…- விருட்டென்று இடத்தைக் காலி பண்ணுகிறார்.
ராஜசேகரன் எழுந்து குளியலறைக்குப் போகிறான். பெரியப்பாவுக்குத் தந்தி கொடுக்கணும். நினைத்துக் கொள்கிறான். வரவேண்டாம்…திருமணம் நிச்சயமாகிவிட்டதென்று.
அகரமுதல்வன் சொல்கிறார்….மானுட இருட்டிலிருந்து சம்பவங்களைப் பொறுக்கியெடுத்து எல்லைகளற்ற மேன்மையான வெளிச்சத் தோற்றத்துக்கு  அழைத்துப்போகும் சிறப்பம்சம்தோடு எண்ண எழுச்சி மிக்க படைப்பாளி  ஜெயந்தன்.
கதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடிய ஒரு தனி உலகம். இது ஓரான் பாமுக். ஜெயந்தனின் தேர்ந்தெடுத்த இந்தச் சிறுகதைத் தொகுப்பு….இந்தத் தனிச் சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.
                     ---------------------------------------------------------------



             



  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...