28 ஏப்ரல் 2019

“மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்”- கவிதைத் தொகுப்பு – வதிலை பிரபா- வாசிப்பனுபவம் - உஷாதீபன்


                     


“மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்”- கவிதைத் தொகுப்பு – வதிலை பிரபா- வாசிப்பனுபவம் - உஷாதீபன்
       வாசிப்பனுபவத்திற்காக ஒரு கவிதைப் புத்தகத்தை எடுப்போம் என்று நினைத்தபோது மனதில் தோன்றியது எங்கள் ஊர்க்காரரான கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் திரு வதிலை பிரபாவின் “மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்“ கவிதைத் தொகுப்புதான்.
      காடுகள் அழிந்து படுவதும், நாடு முழுவதும் அங்கங்கே மரங்கள் வெட்டப்படுவதும், ஆறுகள் வற்றிப் புற்றும் புதருமாக சிதைந்து கிடப்பதும் இப்படியான இயற்கையின் அழிவு இவர் மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது போலும். ஏன், நாமே அவற்றை மனதில் சதா நினைத்துக் கொண்டும் வருந்திக் கொண்டும்தானே செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். நம்மால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம்.
      வதிலை பிரபாவின் இந்தப் தொகுப்பு முழுவதுமான அவரது கவிதைகள் அவருக்கேற்பட்ட மன வலியை நமக்கு ஆழமாய் உணர்த்துகின்றன.
      மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல் அவருக்கும் நமக்குமாக  என்னென்னவோ அர்த்தங்களை உணர வைக்கின்றன. அந்த யானைகளின் பிளிறல் தாள முடியாத அந்தச் சுமையினாலா, அல்லது எங்கள் கண்ணெதிரே இப்படிப் படிப்படியாக எங்கள் இருப்பிடங்களை அழித்து நாசமாக்குகிறீர்களே, இது நியாயமா என்பதான கோப வெளிப்பாடா…அல்லது எங்கள் இடத்தை நீங்கள் அழித்தொழித்தால் நாங்கள் …உங்களை நோக்கித்தான் வருவோம், வந்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருப்போம் என்பதான ஆக்ரோஷ எச்சரிக்கையா என்று  எண்ணி மனம் புழுங்க வைக்கின்றது.
      மரத்தை வெட்டிச் சாய்த்தான்…இரண்டு பெரிய தந்தங்களோடு ஒரு யானை வீழ்ந்தது….என்ற அந்த வரிகள் நம் முன்னோர்களை நமக்கு நினைவு படுத்துகிறது. கால காலமாய் தன்னிச்சையாய் வளர்ந்து விரிந்து கிடக்கும் அந்த மரங்கள் நம் முன்னோர்கள்தானே…!…அடித்து வீழ்த்தப்படும்போது தந்தங்களை வெட்டிச் சாய்த்து வீழ்ந்த யானைகளை மனதில் கொள்ளுங்கள். சுயநலத்திற்காக, பணத்தாசையின் மிதமிஞ்சிய அதர்மமாய், இயற்கை அழி்ப்பு போதாதென்று வனாந்தரங்களில் எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கின்றன? எவ்வகையிலெல்லாம் திருடி விற்கப்பட்டிருக்கின்றன?
                தலை மீது தும்பிக்கை வைத்து  ஆசீர்வதித்த யானைகள் அவை….என்ற வரிகள் நம்மைக் கலக்கி விடுகின்றன.  மனதாபிமானமுள்ள, மனிதநேய உணர்வுள்ள ஒருவன் இந்த வரிகளுக்குள் அடங்கியிருக்கும் துயரத்தை உணராமல் நகர முடியாது. ஒவ்வொரு முறையும் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான் வெட்டி வீழ்த்துகிறான் என்று இந்த மனிதப் பதர்களின் கீழ்மைச் செயல்களைத் தன் கவித்துவ வரிகளால் வெட்டிச் சாய்க்கிறார் கவிஞர் பிரபா. காடுகளில் உள்ள வானளாவிய அந்த மரங்களை வெட்டுவதும், கடத்துவதும் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு யானையைக் கொல்வதற்குச் சமமானது என்பதைக் குறியீட்டு உணர்வாக வெளிப்படுத்தியிருக்கும் அழகு நம்மை அடுத்தடுத்துக் கடந்து கவனம் கொள்ள வைக்கிறது.

                பக்கத்திற்குப் பக்கம் யானைத் தந்தங்களின் படங்களை இட்டு  அந்த அதிர்வுகளோடேயே படிக்கும் வாசகர்களும் நகர வேண்டும் என்று விரும்பியிருப்பார் போலும்…..இவர் கவிதையென்னும் அழகுக்கு அழகு சேர்க்கும் பக்கங்கள் விடாது நம்மை நோக்கிக் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கின்றன.
      விறகுகளுக்காகக் காடுகள் தீ வைக்கப்படுகின்றன. வெப்பம் தாளாமல், தானே பற்றி எரிவதாக நாம் உணரத் தலைப்படுகிறோம். அல்லது உணர்த்தப்படுகிறோம்.
      பெரு வனத்தை விட்டு பறவைகள் வெளியேறுகின்றன. கூடுகளையும்,குஞ்சுகளையும் விட்டகலும் பெருந்துயரத்தைச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது பற்றி எரியும் பெரும் நெருப்பு….- இந்த வரிகள் ஒரு வனம் எரியும்போது, எரிக்கப்படும்போது அங்கிருந்து வெளியேறும் உயிரினங்கள் எத்தனையெத்தனை இழப்புகளை எதிர்கொள்கின்றன?

      ஊரில்  மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்பொழுது நில வெளிகளுக்கு அப்பால் வெகு தொலைவில்  வானுயர்ந்து வரிசையாக நிற்கும் பனை மரங்களைப் பார்த்து, வியந்து வாய்பிளந்து நின்றிருக்கிறோம். வாழும்  காலம் வயது என்பதை அறியாமல் இன்று அவை தங்களின் பொலிவினை இழந்து மொட்டையாக, மடங்கித் தொங்கும் அவலக் காட்சிகளைக் காணும்போது மனம் என்னமாய் அழுகிறது. காலத்தின் குறியீடாய் நின்ற அவைகள் இன்று தனித்து, ஒற்றைப் பனையாய்….!
      சாலையின் இரு மருங்கும் வரிசையாய் நின்ற மரங்களைக் கண்டு களித்த நாம், நம் காலத்திலேயே அவை வெட்டிச் சாய்க்கப்படும் அவலத்தையும் காணத்தான் செய்தோம். அது ஒரு கவிஞனின் மனதை என்னமாய் பாதிக்கிறது?
      “அந்தப் புளிய மரத்தின் அடியில்தான்  -  எனக்கான கனவுகளைப்  - புதைத்து வைத்திருந்தேன்  -  உதிர்வது புளியம்பழம் மட்டுமல்ல.  -   என் கனவுகளும்தான்.  வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்ட புளிய மரத்தின் அடியில் சில எலும்புகளும், ஒரு மண்டையோடும் இருந்ததாக – பார்த்தவர்கள் சொல்லிப் போனார்கள்“.

      இயற்கையை நாம் அழிக்க அழிக்க அவை இன்னொரு புறம் நம்மை அழித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு இலை உதிர்ந்தது்….கனம் குறையவில்லை மரத்துக்கு…ஒரு கனி உதிர்ந்தது – கனம் குறையவல்லை மரத்துக்கு – ஒரு மரம் உதிர்த்த இலை ஒரு மரம் உதிர்த்த பூ  ஒரு மரம் உதிர்த்த கனி, ஒரு காடு தரும் . உதிர்த்தது இலை இல்லை….உதிர்ந்தது பூ இல்லை…உதிர்ந்தது கனி இல்லை….உதிர்ந்தது பெருங் காடு…காடுதான் உயிர்….உயிர்ப்பது உதிர்வதற்கும்…உதிர்வது உயிர்ப்பதற்கும்…..
      இப்படி இன்னும் இன்னும் அற்புதமான கவிதைகளை இத்தொகுதியில் கொட்டிக் கொடுத்திருக்கிறார் வதிலை பிரபா அவர்கள்.   எழுத்தும் சிந்தனையும் இந்தச் சமுதாயத்திற்காக என்ற அர்ப்பணிப்பு உணர்வினை அவரது படைப்புக்களில் உய்த்துணர முடிகிறது.
      நண்பரும் திரைப்பட இயக்குநருமான அகத்தியன் அவர்களுக்கு இத்தொகுதியைச் சமர்ப்பித்துள்ளார்.
      ஒவ்வொரு கவிதைக்குள்ளும் மனிதகுல வரலாற்றின் ஒரு பகுதி ஒளிந்து கிடக்கிறது. நாம் வாழ்ந்த வாழும் வாழ்வின் ஒரு கதை வார்த்தைகளால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இந்தப் பிளிறல் யானைகளின் பிளிறல் அல்ல. இந்தக் கவிதைகள் படிம வார்ப்புகள்.
      இது அவரின் பாராட்டு வரிகள்.
      வதிலை பிரபாவின் இத்தொகுதி இயக்குநர் அகத்தியன்  சொல்வதுபோல்  பல்கலையில் பாடமாக வைக்கப்படும் தகுதியை உடையது என்பதை நம்மால் உணர முடிகிறது.. இக் கவிதைத் தொகுதி அதை நமக்கு உரத்துச்  சொல்கிறது. வாழ்க அவரின் கவித்துவம்…..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

       


“பெத்தவன்“ – இமையம் – நெடுங்கதை – க்ரியா வெளியீடு - வாசிப்பனுபவம் - உஷாதீபன்


                       
“பெத்தவன்“ – இமையம் – நெடுங்கதை – க்ரியா வெளியீடு -  வாசிப்பனுபவம் - உஷாதீபன்


மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நெடுங்கதை –
இதுதான் இக்கதையைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படும் கருத்து.
மனிதத்தை மறுக்க முயலும்போது – என்று சொல்கையில் அந்த மனிதம் எந்த இடத்திலேனும், யாராலேனும் உணரப்படுகிறதா என்றால் –ஒரேயொரு ஜீவனால் மட்டும். அந்த ஒரு ஜீவன் பெண்ணைப் பெற்ற தந்தை. தந்தையாலும் அது உணரப்படாவிட்டால் அப்புறம் இந்த உலகத்தில் மனிதம் என்கிற வார்த்தைக்கான அர்த்தம்தான் ஏது? “பெத்தவன்” என்ற வார்த்தைக்கான பொருள்தான் ஏது?
பழனியை செக்கில் போட்டு ஆட்டுவதுபோல் ஊர் கூடிக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது. பெற்றெடுத்தவன் முழுசாக நின்று கொண்டிருக்க……உன் பெண்ணை எப்படிக் கொல்லப் போற….? என்று ஊர் அவனிடமே கேள்வி கேட்கிறது. அந்த அளவுக்கு ஊர்க் கட்டுப்பாடும், சாதி வெறியும் அந்த மக்களை ஆட்டிப் படைக்கிறது. உன் பெண்ணை எப்படிச் சாகடிக்கப் போற என்று நீயே முடிவு பண்ணிக்கோ என்ற ஒரு சலுகை வேறு….உன்னால முடியாதுன்னா சொல்லு…நாங்க பார்த்துக்கிறோம்….என்கிற துல்லியமான பதில்.
என்னடா…ஆளாளுக்கு இஷ்டத்துக்குப்  பேசிக்கிட்டிருக்கீங்க….என் பொண்ணை என்ன செய்யணும்னு எனக்குத் தெரியாதா? அத ஊர்ப் பயல்களான நீங்களா முடிவு செய்வீங்க….? என்ன அநியாயமா இருக்கு….? என்று பழனியால் சொல்ல முடியவில்லை. எதிர்த்து நிற்க இயலவில்லை.
இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்குச் சேதி தெரிஞ்சிடும்…- என்று பழனி சொல்ல….
சரி…ஏத்துக்குறோம்…எப்படிக் செய்யப்போற….அதச் சொல்லு….? என்று மறுபடியும் வழி முறை உறுதி கேட்கிறது ஊர்.
பூச்சி மருந்த வாயில ஊத்தி…அறயில போட்டுப் பூட்டிப்புடணும்…செத்த நேரத்துல முடிஞ்சிரும்…
பாலிடால கொடுத்திடுறன்…அதுன்னா நேரமாவாது…..
மாமன் சொன்னது காதுல விழுந்திச்சா அத்த….?
செய்யப் போவது கொலை….யாரைக் கொலை செய்யச் சொல்கிறார்களோ அந்த வீட்டுப் பெரிய பெண்மணியிடம் கேட்டு ஒப்புதல் பெறுதல்  வேறு.
இப்படியெல்லாமுமா இன்னும் கிராமங்கள் இருக்கின்றன…? இந்த அளவுக்கா சாதி வெறி பரவிக் கிடக்கிறது? - மனசு அதிர்ந்து போகிறது நமக்கு.
செய்ய நினைப்பது, செய்யப்  போவதாகப் பேசுவது சட்டப்படி  குற்றம் என்று உணர்ந்தும் கிராமத்துக் கட்டுப்பாடு, ஊர்க் கட்டுப்பாடு, ஆயிரம் தலக்கட்டுக்காரர்கள் என்கிற பெருமை….இதெல்லாமும் சேர்ந்து அவர்களைப் பேச வைக்கிறது.
ஆனாலும் அந்தக் கூட்டத்திலும் நியாயம்தானா இது என்று கேட்க ஒரு ஜீவன் இல்லாமலா போகும்? ஒருவர் முன் வரத்தான் செய்கிறார்.
ஊருக்காரப் பயலுவோ எல்லாம் ஒண்ணாக் கூடிக்கிட்டு நம்ப ஊட்டுப் புள்ளய வெட்டணும் குத்தணும் கொல்லணுமின்னு சொல்றீங்களே…சாமிக்கு இது  அடுக்குமாடா….? என்று கேட்கிறான் மண்டையன் கிழவன்….  அந்தப் பயலக் கூப்பிட்டு ரெண்டு தட்டுத் தட்டி அனுப்புங்கடா என்கிறான்.
மொத்தக் கூட்டமும் கிழவனிடம் பாய்கிறது. அவனைப் பல வழிகளில் தண்டிச்சாச்சு…அடங்குறாப்புல இல்ல என்கிறார்கள். போதாக் குறைக்கு அவன் போலீசு வேற….
யாரா இருந்தா என்ன…போலீசா இருந்தா மேங்குலத்துப் பொண்ணு கேட்குதோ….? அவனுக்கும் சேத்துப் பாட கட்ட வேண்டிதான்…..
ஒங்க பொட்டப்பய பஞ்சாயத்து எனக்குப் புடிக்கல… -மண்டையன் கிழவன்  காறித் துப்புகிறான்.
ஒரு பொட்டச்சி ஊரயே தலகுனிய வச்சிருக்கா…ஆத்திரப்படாம என்ன பண்றது…?
நீ நாளக்கி காரியத்த முடிக்கிற….
பாலிடால யாரு வாங்குறது….?
ஊருக்குச் செலவு வேணாம்….பழனி சொல்கிறார்.
பொணத்த ஊருதான் எடுக்கும்….
கன்னி கழியாத பொண்ணு பொணத்த எப்பிடி எடுக்கிறது
செய்ய வேண்டிய மொறயெல்லாம் செஞ்சிதான் எடுக்கணும்….
பேச்சைப் பாருங்கள். இதற்கெல்லாம் முறையைத் தேடும் மக்கள் செய்யப்போவது தவறு என்பதை உணருகிறார்களா என்ன? அதற்கு மட்டும் ஊர்க் கட்டுப்பாடு என்கிறார்கள். ஆயிரம் தலக் கட்டு என்று பெருமைப் படுகிறார்கள். சட்ட விரோதம் என்பதை உணரத் தயாரில்லை. அந்தளவுக்கு அவர்களிடம் இந்தக் கசடு படிந்து போயிருக்கிறது. கதை இதைத்தான் வெளிக்காட்டுகிறது. கூட்டத்திற்குப் பின் –
      பழனியின் அம்மா துளசி…. “பழிகார ஊருடாப்பா…எரிஞ்சி சாம்பலாவ மாட்டங்குது…பொட்டச்சிவுளா சேந்து எம்புள்ளையத் தலகுனிய வச்சிட்டாளுவ……ஒரு விசயம் சொல்லணும் சாமி”  என்று மகனிடம் கெஞ்சுகிறாள்.
      பழனியின் கையைப் பிடித்துக் கொண்டு கற்பூரத்தை அணைத்து….“இது சத்தியம்.. நம்ப ஊட்டு வாய மரத்த வெட்டாத சாமி…ஒண்ணு நூறாவும்.. நூறு ஆயிரமாவும்…எம் பேச்சக் கேளு…நீ மகராசனா இருப்ப….நான் ஒங்கப்பனுக்கே முந்தாணி போட்டிருந்தா, நீ ஒங்கப்பன் ஒருத்தனுக்கே பொறந்திருந்தா அவமேல ஒங் கை படக்கூடாது….இது ஒங்கப்பன் மேல சத்தியம்…”
      தவியாய்த் தவிக்கிறார் பழனி.   துளசியோடு சேர்ந்து அவரும் அழ ஆரம்பிக்கிறார்.
      பாக்கியத்தின் முன் உட்காருகிறார். “அழுவாத…சோறு திங்கும்போது கண்ணுத் தண்ணி வுடாத….எல்லாம் நீயா தேடிக்கிட்டது. நான் ஒரு பாவத்தயும் அறியன். இதான் ஒனக்கு இந்த ஊட்டுல கடசிச் சோறு…..
      அந்தக் குடிசைக்குள் நகரும் காட்சிகள் நம் நெஞ்சை உருக்குகின்றன.
பழனி இரக்கமுள்ள தகப்பன்.  மாடுகள் கத்தும் சத்தம். தண்ணி காட்டுனீங்களா…? கூளம் போட்டீங்களா…?
துளசி, இல்லே என்கிறாள்.
      அது என்னப்பா பண்ணிச்சு….அது ஒழப்பிலதான நாம திங்கிறோம்…அதெப் புடிச்சாந்த நாள்லருந்து இன்னொருத்தன் வீட்டுக் கட்டுத்தறிக்குப் போனதில்ல….மனுசங்க மாறியா? நில்லுன்னா நிக்கும்…போன்னா போவும்…பசிக்குதுன்னு சொல்றதுக்கு அதுக்கு வாய் இருக்கா? – அவர் பின்னால் நாய் போய்க்கொண்டேயிருந்தது. அவருடைய முகத்தைச் செவலைக் காளை நக்கியது. குறுகுறுத்தது. ஆனாலும் முகத்தை வாகாகக் காட்டினார். மாடு நக்க நக்க…உடம்பில் இருந்த நடுக்கம் குறைந்தது பழனிக்கு. வெளியே வந்தார். குளித்துவிட்டு வந்தமாதிரி இருந்தது. பழனியின் இரக்கப்பட்ட மனசின் விஷூவல் காட்சிகள் இவை.
      வாக்குத் தவறாத சாமி….துளசி சொல்கிறாள். பெத்தவன் மனசு அல்லாடுகிறது. பாக்கியத்தையும், பெரியசாமியையும் சினிமாத் தியேட்டரில் பார்த்துவிட்டு வந்து, உள்ளூர் பையன் பழனியிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. பாக்கியம் மழுப்புகிறாள். அதுவே உண்மை என்று உணர வைக்கிறது. ஊனமுற்ற ரெண்டாவது பெண் செல்வராணியிடம் “நான் உசுரோட இருக்கணுமா வாணாமான்னு அவகிட்ட கேட்டுச் சொல்லு…
      இன்னியோட எல்லாச் சனியனும் முடிஞ்சிபோச்சி…இனிமேலாச்சும் ஊரு தூங்கட்டும். இந்த ஊரு கண்ண மூடி எம்மாம் காலமாச்சு….- பாக்கியத்தின் தாய் புலம்புகிறாள்.
      பழனி உள்வீட்டுக்குள் சென்று மரப்பெட்டியைத் திறக்கிறார். ஒரு பையில் வைத்திருந்த அறுபதாயிரம் பணத்தை எடுக்கிறார். பாக்கியத்தின் முன் வைக்கிறார். சேமித்து வைத்திருந்த நகைகளையும் எடுத்து வைக்கிறார். மனைவி சாமியம்மா பக்கம் திரும்பி ஒன் சங்கிலி மூக்குத்தி, தோடு வளைய எல்லாத்தையும் கழட்டிக் கொடு என்கிறார்.
      யாரும் எதுவும் பேசத் திறனின்றி அமைதி காக்கிறார்கள்.
அரி ஓம்னு நீ பொறந்த….. இருவது வருசமா நானும் ஒங்கம்மாவும் போவாத கோவிலில்லே…. கும்பிடாத சாமியில்ல….ஒங்கம்மாவ எங்கம்மாக்காரி பேசுன பேச்சுக்கு அளவில்ல… பாக்கியம்னு ஊருல இல்லாத பேரு வச்சன் ஒனக்கு….ஆனாலும் இந்த ஊரு பேசாத பேச்சில்ல இப்ப….மூணு வருசமா கேட்காத வார்த்தயில்ல….சோறத் தின்னு உசுரோட இருக்கல…பீயத் தின்னுதான் உசுரோட இருந்தன்….எல்லாம் முடிஞ்சி போச்சு….மூக்க அறுத்துப்புட்ட….
அந்த இரவுப் பொழுதில் அந்த வீடு மட்டும் உறக்கமின்றித் தவிக்கிறது. நீதாம்ப்பா வேணும் எனக்கு…வேறே யாரும் வேண்டாம்…எல்லாம் சரியாப் போச்சுப்பா…இப்ப என் மனசுல எதுவுமில்ல…இப்டியே வீட்டோட இருந்திடுறேன்… - கதறுகிறாள் பாக்கியம். நீ சொல்றபடி கேக்குறம்பா…நீ சொல்ற ஆளயே கட்டிக்கிறேன்…நம்ப ஆயாமேல சத்தியம். பாக்கியத்தின் அழுகை அவருக்குப் பொய் மாதிரித் தெரியவில்லை. ஜோசியக்காரன் சொன்னது உண்மையோ என்று சாமியம்மாவுக்குத் தோன்றுகிறது. கலங்கித் தெளியும்னானே….
நீ சொல்றது இனிமே நடக்காது தாயி….அஞ்சாறு வருசமா ஊரு ஒலகமே சிரிச்சுப் போச்சி. ஒருத்தனும் கட்ட மாட்டான். இது வீம்புக்குச் சூரிக்கத்திய முழுங்கிற சாதி. கட்டுறதுக்குக் கோமணம் இல்லன்னாலும் சாதிய வுட மாட்டானுக….இதிலியாச்சும் எம்பேச்சக் கேளு….விடிஞ்சா  ஊரு முகத்துல முழிக்கணும்…அந்தப் பயலுக்குத் தகவல் சொல்ல வழியிருக்கான்னு பாரு….
டே…அவ சொல்றதக் கேளு சாமி….இப்ப அவ பேசுறது நெசம்னு எம் மனசுல படுது. ஊரக் கூட்டிச் சொல்லிப்புடலாம். அபராதம் போட்டா கட்டிப்புடலாம். மூணு நாலு வருசம் போவட்டும். மத்தத அப்புறமா யோசிக்கலாம்….பிதற்றுகிறாள் தாய்.
நம்பப் பேச்சு ஊருல மேவாது… 
நீ உசுரோட இருக்கணுமின்னுதான் நான் நெருப்புல குதிக்கப் போறன். திரும்பியுமா நீ எனக்குப் புள்ளையா பொறக்கப்போற? நாளக்கி ஒனக்கொரு புள்ளே பொறந்தா அதெ நீ பத்தரமா வச்சிக்க. எங்கள மாதிரி நூறு ஆயிரம்பேர் மின்னாடி கையக் கட்டிட்டு நிக்கக் கூடாது….ஒரு சத்தியம்…நீயும் சாவக்கூடாது…நாங்களும் சாவ மாட்டோம்…இதான் சத்தியம்….
பழனியும் பாக்கியமும் ஒவ்வொரு அடியையும் நெருப்பிற்குள் வைத்து நடப்பதுபோல் பயத்துடனும், பதட்டத்துடனும் நடக்கிறார்கள். முந்திரிக்காட்டு வழியாகவே ஒரு மணிநேரத்துக்கும்மேல் அந்தக் குருட்டு இரவில் கடக்கிறார்கள். மங்கலம் பேட்டை ஏரிக்கரைக்கு வந்து மோட்டார் பைக்கோடு நின்ற பையனிடம் பழனி கேட்கிறார்.
பெரியசாமியோட பெரியப்பன் மவன் கனகராஜ். வவுத்தானோட அண்ணன் மவன். தொப்புளான்.
தொப்புளான் மவன் பெரிய பயகிட்ட புள்ளய ஒப்படைச்சிருக்கேன்.
இப்ப மணி நாலு. வண்டியிலியே நேராப் போயி விழுப்புரத்தில பஸ்ஸப் புடிச்சி ஏத்தி விட்டுடுவன்…அங்கயிருந்து மெட்ராசி  போவ மூணு மணி நேரம். ஏயி எட்டு மணிக்கெல்லாம் ஊட்டுக்குப போயிடலாம்….
சரிவண்டிய எடு…நீ ஏறு…பதனமா போவணும்… சட்டென்று இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண்  கொடியை அவிழ்த்துக் கொடுக்கிறார். பெத்தவன் மனசைப் பாருங்கள். அவருடைய மார்பில் சாய்ந்து குழந்தையாய் அழுகிறாள் பாக்கியம்.
வண்டியின் வெளிச்சம் மறையும்வரை அசையாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார் பழனி.
காலையில் காட்டுக்குப் போனவர்கள் அவரின் சாவுச் செய்தி அறிகிறார்கள். மகளுக்குச் சொன்ன பாலிடால் மருந்து அவரைக் காவு வாங்குகிறது. நாய் சுற்றிச் சுற்றி வந்து காடே அதிரும்படி குரைத்துக் கொண்டிருக்கிறது.
என் குடி முழுவிப் போச்சே…. – கத்திக்கொண்டே காட்டுப் பக்கம் ஓட ஆரம்பிக்கிறாள் துளசி.
கனத்த மனசோடு இதை ஏன் படித்தோம் என்று வேதனை கொள்கிறது நம் மனம். சாதி வெறி ஆட்டிப் படைக்கும் சமூகத்தில் இப்படி எத்தனை எத்தனை விதமான நிகழ்வுகள்…?
பெத்த மனம் பித்து.   பழனி கதாபாத்திரம் மனிதத்தை உயர்த்திப் பிடிக்கிறது.  நம் அனைவரையும் ஏற்க வைக்கிறது.. ஐம்பது பக்கங்களே கொண்ட எழுத்தாளர் இமையத்தின் இந் நெடுங்கதை அவரது எழுத்துப் பயணத்தில் இன்னொரு முக்கிய  மைல்கல்.
                  ------------------------------------------------------------

     

                         


  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...