29 டிசம்பர் 2018

அழகியசிங்கரின் நாவல்“ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்-வாசிப்பனுபவம்


                      





அழகியசிங்கரின் “ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்“-நாவல் வாசிப்பனுபவம்
                 (எளிய மனிதனின் அனுபவ சாரங்களின் அற்புதமான தொகுப்பு)
      இதைப் படித்தவர்கள் இது ஒரு நாவலா என்று கேள்வியை எழுப்புவார்கள். இந்தக் கருத்தை அழகியசிங்கரே முந்திக் கொண்டு சொல்லி விடுகிறார். நாவலில்லை என்றும் கொள்ளலாம்…ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இது என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் முன்னுதாரணமாக நகுலனின் “நினைவுப்பாதை” அனுபவங்களின் திரட்சியாக வந்த நாவல் என்று கூறி அந்தவகையில் இதை ஒரு தன்புனைவு நாவல் என்று கொள்ள வேண்டும் என்று தன் நாவலுக்கு முத்திரை வழங்குகிறார்.
      சோதனை ரீதியாக நாவல்கள் எழுதுவதில் நகுலனுக்கு ஒரு இடம் உண்டு. அதே சோதனை முயற்சியில்தான் இந்நாவலும் அரங்கேறியுள்ளது என்பது எழுத்தாளர் அழகியசிங்கரின் வாதம். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் இப்படியான பலவற்றிலும் அது அதற்கான லட்சணங்கள் முற்றிலும் பொருந்தித்தான் வெளிப்படுகின்றனவா என்ன?
      ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எழுதுகின்றனர். உருவம், உத்தி, உள்ளடக்கம் என்று சிறுகதைகளுக்கு இலக்கணம் சொல்லப்பட்டது ஒரு காலம். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று கட்டுரைகளுக்கும் இலக்கணம் சொல்லப்பட்டிருக்கிறதுதான். இலக்கணத்தை மீறுவதுதானே இப்பொழுது  வழக்கமாய் இருக்கிறது? மனித வாழ்க்கையின் அடிப்படை விழுமியங்கள் மீறப்படுவது இலக்கியத்தில் இல்லாமல் போகலாமா?  நவீனத் தமிழ் இலக்கியமாயிற்றே?
      அழகியசிங்கரின் நாவலில் அப்படியாக பண்பாட்டு மீறல் என்று எதுவும் கிடையாது. உருவம். உத்தி, உள்ளடக்கம் என்கிற வகை மாதிரியை மீறிய, (நாவலுக்கு இந்த வரைமுறை கிடையாது என்பதுதான் இன்றைய நியாயம்) மனித வாழ்க்கையின் நியாயங்களை உள்ளடக்கிய பண்பாட்டு வரையறைக்குட்பட்டுக் கதை சொல்லப்பட்ட நாவல்.
      லட்சியவாத எழுத்து என்பது காலாவதியான ஒன்று என்று சொல்லப்படுகிறது இப்போது. தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் எழுத்து லட்சியவாத எழுத்து. ஒழுக்கம், நேர்மை, பண்பாடு என்று தலை நிமிர்ந்து பறைசாற்றிய அழுத்தமான அடையாளங்களைக் கொண்ட  இலக்கியங்கள் அவை. இன்றைய காலகட்டத்தில் அவற்றின் தேவை மிக அதிகம் என்றுதான் நான் சொல்வேன். எல்லா ஒழுக்க சீலங்களும் மீறப்படும் காலம் இது. அதுதான் பெருமை என்று தம்பட்டம் போடும் நாட்கள் இவை. விஞ்ஞான உலகில் எத்தனையோ மாற்றங்கள் வரலாம். ஆனால் அடிப்படையான சில விஷயங்களுக்கு என்றென்றைக்குமே மாற்றமில்லை என்பதுதான் உண்மை. அந்த அடிப்படையான விஷயங்களை கனமாக, அழுத்தமாகத்  தாங்கி வந்தவைதான் நா.பா.வின் எழுத்துக்கள். அந்த லட்சிய வாதங்களுக்கு என்றைக்கும் அழிவில்லை
.      அவை நம்மிடம் அதிகபட்சமாய்ப் படிந்திருந்தால்தான் நம் வாழ்க்கை செம்மையாய் அமையும் என்று ஓங்காரமிட்டுச் சொல்லுவேன். ஆனால் இன்றைய தமிழ் இலக்கிய உலகம் அப்படியில்லை. புதுமை என்கிற பெயரில், நவீனம் என்கிற நாமகரணத்தில் எப்படியெப்படியோ எழுதப்படுகின்றன, எழுதிக் குவிக்கப்படுகின்றன. எத்தனை புதுமைகள்  வந்தாலும் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுபவை நான் மேற்சொன்ன விழுமியங்களை உள்ளடக்கிய படைப்புக்கள்தான். அதற்கு உதாரணம் திரு எஸ்.ரா. வின் “சஞ்சாரம்” நாவல். என்றைக்கும் நின்று நிலைப்பது ஒழுக்கமும், நேர்மையும், பண்பாடும் சார்ந்த  அடிப்படைக் கலாச்சாரச் சீரழிவில்லாத விஷயங்கள் மட்டுமேதான். அவற்றிற்கு என்றைக்கும் அழிவேயில்லை. அதுவே சத்தியம்.
      இந்நாவல்,  நாவலின் வடிவத்தில் கச்சிதமாய் அமைந்து, பல்வேறு விதமான கதாபாத்திரங்களை உள்ளடக்கி, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நிகழ்வுகளை, மனிதர்களின் வாழ்வியலை அழகுற ஆழமாக எடுத்துரைக்கிறது என்பதாகவெல்லாம் இலக்கண, இலக்கிய ரீதியாகப் பயணிக்க  முடியாமல், ஒரு தனி மனிதனின் அனுபவத் தொகுப்பாக, ஒரு சாதாரண மனிதனின் நிகழ்  உலகில் வளைய வரும் மனிதர்களை உள்ளடக்கி, அவர்களோடு யதார்த்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களையும், நெருங்கிய பழக்கத்தினால் உணர்ந்த மனோலயங்களையும், தொகுத்து ஒன்றுவிடாமல் பதிவு செய்துள்ள ஒரு படைப்பு என்று கூறலாம். இந்த அனுபவத் தொகுப்பில் இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது என்பது அவரின் முடிவுறாப் பயணமாக விரிகிறது. 2010 அக்டோபர் முதல் 2012 மே வரையில் அவர் எழுதிய அனுபவங்களின் பகிர்வே இவை  என்கிறார் ஆசிரியர்.
      அதனால் இந்த நாவலை எழுதிய ஆசிரியரே நாவலில் வருகிறார். இம்மாதிரி எழுதுவதற்கு ஆங்கிலத்தில் மெட்டா நாவல் என்று ஒரு பெயர் உண்டு என்பதையும் சொல்லி எவ்வகையிலும் இப் புத்தகத்தை  யாரும் புறக்கணித்து விட முடியாது என்று தன் அனுபவ சாரத்தின் மதிப்புமிக்க விழுமியங்களை மதித்துப் போற்றி வாசகர்களின் முன் மிகுந்த எதிர்பார்ப்போடு வைத்திருக்கிறார் திரு அழகியசிங்கர்.
      வெளிப்படையான மனசு, எதையும் மறைக்காமல் சொல்வது, யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவது என்பதெல்லாம் அவரின்  அனுபவ வெளியில்  பயணிக்கையில் நாம் மனதார உணர்வதாக அமைந்து, மெச்சத் தோன்றுகிறது.  
      என்ன தைரியம் பாருங்கள்…மனதில் தோன்றுவதையெல்லாம் அனுபவங்களினூடே எழுதிக் கட்டுரையாக்கிவிட்டு, அதற்கு “தன் புனைவு” என்று ஒரு புதிய பெயரிட்டு நாவல் என்கிறார் அழகியசிங்கர். நிகழ்வுகளை, சம்பவங்களை உள்ளடக்கி விரிந்து கிடக்கும் எழுத்தை எப்படி கட்டுரை என்று பெயரிட்டு அடைக்க முடியும்? மக்களின் அல்லது ஒரு குறிப்பிட்ட மனிதனின் அனுபவ வெளி என்பது கேட்பவர்களுக்குக் கதைதானே…? அந்த மாதிரிக் கதைகளின் தொகுப்பு என்பது ஒரு நாவலாகத்தானே இருக்க முடியும்? என்று சொல்லாமல் சொல்லி நிறுவுகிறார்.
      விற்கவில்லை…யாரும் வாங்கவில்லை என்று சொல்லிக் கொண்டே புத்தகங்கள் போடுகிறார். சிலரின் புத்தகங்களைக் கொண்டு வருகிறார் ஆர்வம் மிகுதியில். ஆனாலும் தைரியம் ஜாஸ்தி….தைரியமா, ஆர்வமா?
கவனிக்கப்படுகிறதா இல்லையா என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், எழுதிக்கொண்டே போகிறார். அப்படியாக எழுதிடவும் ஒரு அனுபவம் வேண்டும்தானே? எழுதுவது அவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எழுதிக்கொண்டேயிருக்கிறார். யார் தடுப்பது? எதற்காகத் தடுக்க வேண்டும்? அது அவரவர் விருப்பம்.
      டாய்லெட்டுக்காக ஒரு அத்தியாயம்…நடைப்பயிற்சி, சினிமாப்பாட்டு இவைகளுக்காக ஒரு அத்தியாயம்…புத்தகம் போடுதல், விற்காமல் கிடப்பது…பிரபல பத்திரிகைக்குஎழுதியது, கதைகள் போடாதது, சிறு பத்திரிகை கதை போடுவது, சீர்காழிக்கும் சென்னைக்கும் வங்கி வேலை நிமித்தம் மாறுதலில் அலைவது, பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டு, குடும்பத்தை விட்டுப் பிரிந்து துயருறுவது,  கூட்டம் நடத்துவது, வெறும் ஐந்து பேர் மட்டும் வருவது, க.நா.சு., சி.சு.செ., விமர்சகர்களாய் இருந்தது, இவர் பிரபல எழுத்தாளரை விமர்சித்து எழுதியது, அவருக்குப் பிடிக்காதது, டாக்டர் செல்வராஜின் மாரடைப்பு, ஆபீஸ் ஸ்டாஃப்பை அவரது திடீர் உடல் நலக் குறைவிலிருந்து காப்பாற்றுவது, விருட்சம் 75-76 இதழோடு சென்னை வந்து சேர்ந்தது, ஆக்ஸிடென்ட் நடந்தது, ஒரு பெண்ணின் சாவு, டிரைவர் அரெஸ்ட் ஆனது, வேறு பஸ் பிடித்து சென்னை வந்து சேர்ந்தது என்று வெவ்வேறு விதமான அவரது அனுபவங்கள் படிக்க மிக மிக ஸ்வாரஸ்யமாகவும், கீழே வைக்க முடியாததாயும் உள்ளன..  அதே சமயம் இந்த அனுபவத் தொகுப்பை நாவல் என்று பெயரிட்டு வெளியிட்டு விட்ட அவரது தைரியம், தன் புனைவு என்கிற அழுத்தமான பெயரினால் காப்பாற்றப்பட்டு விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
      ATM, Core banking பணம் திருட்டு, வங்கியில் பணியாற்றும் பெண் பணம் திருடுவது, சீர்காழியிலிருந்து வீடு வருவதை அப்பா 89 மாமி 85, உதவிப் பணியாளர் 75 என்று முதியோர் இல்லம் என வீட்டுக்கு நாமகரணம் இட்டு விவரிப்பது, ஆத்மாநாம், ஞாநி திருமண நிகழ்ச்சியில் ஏற்படும் சந்திப்புகள், முத்தம் கவிதை, ஸ்டெல்லாப்ரூஸ் மரணம், மோசமான கனவுகள் காண்பது, மெட்ராஸ் ஐ வந்து லீவு கிடைக்காமல் அவதியுறுவது, நாரணோ ஜெயராமின் “வேலி மீறிய கிளை”  கவிதை புக் எழுதியது, நிறுத்தியது, க.நா.சு. நூற்றாண்டுபற்றி பேசுதல், நீட்டு என்ற பெண் பற்றி, புத்தகத் தலைப்பு கவிதைபற்றி, கோயில் கடவுள் நம்பிக்கைபற்றி, க.நா.சு.நூற்றாண்டை ஒட்டி க.நா.சு கவிதைகளைக் கொண்டுவந்து ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்று அப்புத்தகத்தை எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தது, அரசியல் ஒரு பார்வை, அப்பாவுக்காக, கணையாழி கஸ்தூரிரங்கன், சு.ரா.வை வைத்து கூட்டம் நடத்தியது, அவருக்கு விருட்சம் அனுப்பியது, சு.ரா.விடம் சந்தா வாங்கியது…..என்று எதைச் சொல்வது, எதை விடுவது….? எண்ணற்ற அனுபவங்களின் சாரங்களை உள்ளடக்கி விறு விறுப்பாகப் பயணிக்கிறது அவரது “ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்”.   
      சென்னைக்கும் பணியாற்றிய சீர்காழிக்கும் இடையே வங்கிப் பணி நிமித்தம்  அலைகிறார். சனிக்கிழமை கிளம்பி வீடு வந்து, ஞாயிற்றுக் கிழமை மீண்டும் கிளம்பி சீர்காழிக்கு போய்ச் சேருகிறார். அதுதான் இநத நாவலின் தலைப்பு. நாவலின் தலைப்பில் ஒரு கவிதைதான் எழுதுகிறார் முதலில். இப்போது அது நாவலாக விரிந்திருக்கிறது. அந்தக் கவிதையை அவரே சொல்லவில்லை. சொன்னால் எங்கே அதுவே போதும் என்று நாவலைப் படிக்காமல் விட்டு விடும் அபாயம் உண்டு என்று நகைச்சுவை மிளிர வெளிப்படுத்துகிறார்.
      இந்த நாவலின் உச்சபட்ச சம்பவங்களாக நான் கருதுவது இரண்டு நிகழ்வுகள். ஒன்று 80 ஆண்டுகள் முடித்த மணிக்கொடி பத்திரிகைக்கு ஒரு கூட்டம் நடத்துவது. இன்னொன்று முக்கிய மூன்று இலக்கியக் கூட்டங்கள். அதில் ஒன்று அசோகமித்திரனை வாசித்தல்..
மணிக்கொடிக்கான விழா அரங்கில் மணிக்கொடி எழுத்தாளர்களின் வாரிசுகள் கலந்து கொள்ளல்…அதாவது சிதம்பர சுப்ரமணியத்தின் புதல்வர்கள், இராமையாவின் புதல்விகள், சிட்டியின் புதல்வர்கள், சி.சு.செல்லப்பாவின் புதல்வர் என்று பலரும் கலந்து கொள்கிறார்கள். கி.அ.சச்சிதானந்தன், ம.ராஜேந்திரன், மூத்த எழுத்தாளர் நரசய்யா, பேராசிரியை செந்தமிழ்ச்செல்வி என்று பலர் கலந்து கொண்டு மணிக்கொடி பத்திரிகையின் சிறப்பைப் பற்றிப் பேசியுள்ளதைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். பத்திரிகையை ஆரம்பிக்கக் காரணமாக இருந்த ஸ்டாலின் சீனிவாசன், பின்பு வ.ரா.ஆசிரியர் பொறுப்பை ஏற்றது, பத்திரிகையை நடத்திய டி.எஸ்.சொக்கலிங்கத்திற்கும் வ.ராவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதல், அதனால் வ.ரா. ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகியது,  பின் இலங்கையில் வந்து கொண்டிருந்த வீரகேசரி இதழுக்கு வ.ரா. ஆசிரியரானது, பி.எஸ்.ராமையா மணிக்கொடிக் காலம் எழுதியது…என்று பற்பல விபரங்கள் குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தின் மூலமாக நமக்குத் தெரிய வருகிறது.
அடுத்ததாக ஆசிரியர் கலந்து கொண்ட மூன்று முக்கிய இலக்கியக் கூட்டங்கள் பற்றியதானது. அசோகமித்திரனை வாசித்தல் கூட்டம் கவிஞர் மற்றும் கட்டுரையாளர் பெருந்தேவி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. ராமானுஜம் என்பவர் அ.மி.யின் 18-வது அட்சக்கோடு பற்றியும், அடுத்துப் பேசிய ராஜன் குறை அ.மி.யின் “இன்று” பற்றி வாசித்த கட்டுரை, மூன்றாவதாகப் பேசிய பெருந்தேவி அ.மி.யின் மானசரோவர் நாவல் பற்றி விரிவாக எடுத்துரைத்தது இக்கூட்டத்தின் சிறப்பு. இரண்டாவது கூட்டம் மலாய் கவிஞர்களுடன், தமிழ் கவிஞர்கள் கவிதை வாசிப்பது மற்றும் மூன்றாவதாக கவிஞர் பயணியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள்பற்றிய கூட்டம்.
இவ்வளவு பணிகளுக்கிடையே மகன் அழைத்தான் என்று மனைவியோடு அமெரிக்காவுக்கும் பயணம் சென்று வருகிறார் ஆசிரியர். அங்கே ப்ளோரிடா மாகாணத்தில் இருந்த நூலகம்’Broward country library’  என்றொரு நூலகத்தை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் பெரியளவில் கண்டு களித்ததுபற்றியும் வாஷிங்டன் சென்று வந்த அனுபவம் பற்றியும் விரித்துரைக்கிறார்.
கடைசியாக சீர்காழியிலிருந்து சென்னைக்கு மாறுதலில் வந்து சேர்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது. அற்புதமான அனுபவங்களின் தொகுப்பாக இந்த நாவல் மலர்ந்து விரிந்து மணம் பரப்பி “தன் புனைவு நாவல்” என்கின்ற பெயரினை கம்பீரமாகத் தன்னகத்தே தக்க வைத்துக் கொள்கிறது. ஸ்வாரஸ்யமான அனுபவ சாரங்களை உள்வாங்கி மகிழவும், எளிய மனிதனின் பாடுகள் இம்மாதிரி அன்பும், கருணையும், இரக்கமும், நெகிழ்வும்  நிறைந்ததாகத்தான் இருக்கும் என்பதற்கு அத்தாட்சியாக, மனிதாபிமானச் சிந்தனையின் சாட்சியாக  இந்நாவல் தன் பயணத்தை வெற்றிகரமாகக் நடத்திச் செல்கிறது என்பதை ஆழ்ந்து அனுபவித்துப் படிக்கும் வாசகனின் மனதில் நிலைக்க வைக்கும் என்பது உண்மை.
                  -----------------------------------------------


கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...