28 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “கோபுர விளக்கு” - சிறுகதை - வாசிப்பனுபவம் -

 

தி.ஜா.நூற்றாண்டு - “கோபுர விளக்கு” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்



     ந்தக் கோயிலும், ஒளிவீசும் அந்தக் கோபுரமும் அதைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மேன்மையான குணங்களின் அடையாளமாகத் திகழ்வதாக  நம்பிக்கை. மனிதர்கள் எல்லோரும் சராசரிகள்தான் என்றாலும் அடிப்படை நியாய உணர்வு, தர்ம சிந்தனை, சராசரிகளுக்கு இருக்க வேண்டிய நேயம், கருணை இப்படிப் பலவற்றின் உதாரணங்களாய்த் திகழ்ந்தால்தான் அந்த ஊருக்கும் பெருமை, அதன் முக்கிய அடையாளங்களுக்கும் பெருமை.  

     வறுமையின்பாற்பட்டு ஏற்பட்ட இழி நிலைக்கும், அதன் தொடர்ச்சியான ஒரு பெண்ணின் சாவுக்கும் காரணங்களை அசை போடும் ஊர், அந்தக் காரணங்களையே காரியமாக வைத்துப் பொழுதைக் கழித்து நிற்கும் அவலம். பாவப்பட்ட மனிதர்கள்,  இப்படியான கேலிப் பேச்சுக்கள், புறஞ்சொல்லல்,  ஏச்சுக்கள் மூலம்  மேலும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாது காலம் கழிக்கும் கேடு....அதை ஒரு குற்றமாகக் கருதாத மனநிலையில், இதுவே நியாயம் என்று ஊர் கூடிப் பேசி, கருணை இழந்து, மனித நேயம் தவறி தங்களை நியாயவான்களாய் விலக்கிக் கொண்டு நிற்கும் கொடுமை...

     கோவிலுக்கு வருமே அந்தப் பொண்ணுதான்...சிரிச்சுப் போன குடும்பம்தான்...ஒப்புத்துக்கறேன்...ஆனால், செத்துப் போனதுக்கப்புறமும் தூக்கறதுக்கு ஒரு ஆள் கூட இல்லைன்னா இது என்ன மனுஷன் குடியிருக்கிற தெருவா? காக்கா கூட ஒரு காக்கா செத்துப் போச்சுன்னா, கூட்டம் கூட்டமா அலறித் தீர்த்துப்புடும்...கூட்டத்தக் கூட்டிடும்...மத்தியானம் மூணு மணிக்குப் போன உசிரு....ஒரு பய எட்டிப் பார்க்கல....வீட்டில இருக்கிறது அத்தனையும் பொம்பளைங்க...சின்னஞ் சிறுசுகள்....அப்படி என்ன குடி முழுகிப் போச்சு இப்போ...? அவங்க கெட்டுப் போயிட்டாங்கதான்...நாதன் இல்லாமச் சீரழிஞ்ச குடும்பம்தான்....பசிக்குப் பலியான குடும்பம்....அதுக்காக இப்படியா? என்ன அக்கிரமம் இது? இந்த மாதிரி மிருகங்களை எங்கயும் நான் பார்த்ததில்லை....நானும் நாலு ஊர்ல இருந்திட்டு வந்தவன்தான்....

     கோயில் கோபுர விளக்கு எரியவில்லையே...தெருவே இருட்டாக் கெடக்கு...திருட்டு பயம்வேறே என்று சொல்லப்போன இவர் மானேஜரின் கோபத்தின் முன்னால் வாயைத் திறக்கத்தான் முடியவில்லை.

     கௌரிதான் சொன்னாளே....தெரியும் என்று.   தெரியுறது என்ன? குளம், சந்தி, கடைத்தெரு, எங்கே பார்த்தாலும் நிற்கிறதே...காலமே கிடையாது, மத்தியானம் கிடையாது ராத்திரி கிடையாதுன்னு எடுபட்ட குடும்பம்....

     அதுதான் யாருன்னு கேட்கறேன்....? அதைச் சொல்ல மாட்டேங்கிறியே...?

     முருங்கைக்காய்னா முருங்கைக்காய்தான்....எந்த ஊரு? எந்தக் கொல்லை? இதெல்லாமா கேட்கணும்? மந்திரச் சாமாவின் அந்தப் பஞ்சாங்கக்காரனின் பொண்டாட்டிதான் இந்த விடோ...அவ பொண்ணுதான் திரியறதே....சமாசாரம் தெரிஞ்சவுடனே அந்த விடோவோட மகளை அந்தச் சின்னப் பொண்ணை,  புருஷனும் கையக் கழுவிட்டான்.....இதான் கதை.....எல்லாம் ஒரு தினுசாத் திரிஞ்சதுகள் இன்னிக்கு இப்டி சீரழிஞ்சு நிக்கிறதுகள்....

     மூணு மாசமாம்...டாக்டர்ட்டப் போயிருக்கா...அவன் அம்பது ரூபா கேட்டானாம்...இவளே கண்ணாடியத் தூள் பண்ணி தண்ணில கலந்து குடிக்க வச்சிட்டா....கத்தினா ஊர் கூடும்னு வாயில வைக்கோலையும், துணியையும் அடைச்சிருக்கா...துடி துடின்னு துடிச்சு செத்திடுத்து....

     கௌரி விசித்து விசித்து அழுகிறாள். அந்தப் பொண்ணு ஊத்தின எண்ணெய்க்காவது அந்த பகவான் மனசு இறங்க வேண்டாமா? பொம்மனாட்டி கண்ணுல ஜலம் விட்டா அந்த தெய்வம் உருப்படுமா?

     கோபுர விளக்கு எரியவில்லை என்று வந்து நின்றவருக்கு...மானேஜரின் பேச்சும் கோபமும் வாயை அடைத்து விடுகிறது.

     பத்து மணி வரையில் பார்க்கப் போறேன்...அப்புறமும் நாதியில்லேன்னா, நாயனக்காரர் ரெண்டு பேரைக் கூட்டிண்டு வர்றேன்னிருக்கார்...நாலு பேருமாத் தூக்கிண்டு போயிடலாம்னு இருக்கோம்...வேறே என்ன செய்றது? கோயிலைத் திறந்தாகணும்.....

     ஆனா ஒண்ணு தெருவுக்கு மட்டும் விளக்குக் கிடையாது. நாளை ராத்திரி வரையிலும் நிச்சயமாக் கிடையாது. அந்தத் துர்க்கை அம்மனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் அவ்வளவு  ராசி....விளக்கு கிடையாது...உறுதியாச் சொல்லிட்டேன்...

     கதை முடிந்து போகிறது. ஊரில் கோயிலிருந்தென்ன...? அந்த ஊரில் மனிதர்கள் இருக்கிறார்களா? அதுதான் முக்கியம். அவர்கள் மனங்களில் இருள் இருக்கிறது. அதன் அடையாளம் அந்தக் கோபுர விளக்கு. இருண்டு கிடக்கும் கோபுர விளக்கு அதன் குறியீடு.

     தி.ஜா.வின் இந்தக் கோபுர விளக்கு நம்மை நம் கிராமத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறது. கோவில் மூடப்பட்டதற்குரிய காரணங்களை நாம் அறிவோம். கோபுர விளக்கு அணைக்கப்பட்டதற்கான காரணம் அந்த மனிதர்களின் குணக் கேட்டின் அடையாளமாக, இருண்ட மனதின் உருவகமாக தி.ஜா.வால்  முன்னிறுத்தப்படுகிறது. கதையின் மையக்கருவை நிலை நிறுத்தும் விரிவும், ஆழமும் படைப்பு முழுவதும் பரவி நிற்கிறது. ------------------------------------------

                          

27 அக்டோபர் 2020

தி.ஜா. நூற்றாண்டு - “குழந்தைக்கு ஜூரம்”- சிறுகதை - வாசிப்பனுபவம்-உஷாதீபன்

 

தி.ஜா. நூற்றாண்டு - “குழந்தைக்கு ஜூரம்”- சிறுகதை - வாசிப்பனுபவம்-உஷாதீபன்


       நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும். ஆண்டவன் கணக்கு தனிக்கணக்கு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இப்படி எதை வேண்டுமானாலும் இக்கதைக்குப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.                            

       துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்த்ததுபோல் என்னென்னவோ நடந்து போகிறது. அது நாம் எதிர்பாராததாகவும் இருந்து விடுகிறது. பொய்க் கணக்கு எங்கேனும் வெற்றியடைந்திருக்கிறதா? அப்போதைக்கு அதுதான் ஜெயித்ததுபோல் ஒரு தோற்றம் தரும். ஆனால் இறுதி வெற்றி உண்மைக்குத்தான்.                      

       எந்த வீட்டின் குத்துச் செங்கல்லை இனி மிதிக்க மாட்டேன் என்று சரவண வாத்தியார் சொல்லி வந்தாரோ அங்கே மனைவி சொன்னாளே என்று போய் நிற்க, என்னவெல்லாம் நடந்து போகிறது?

       மனிதனுக்குத் துன்பம் அதிகமாகுகையில் அதுவே பழகிப் போய் சிரிப்பாக மாறி விடுகிறது. நடந்தவைகளையெல்லாம் நினைத்து சிரிப்பதா அழுவதா....? மனிதன், தன் சாமர்த்தியம் என்று நினைப்பவைகளெல்லாம்  கணத்தில் எப்படிப் பொடிப் பொடியாகி விடுகிறது? ஒழுங்காய்ச் சம்பாதிக்கும் காசே நிற்காதபோது, பொய்யாய்ச் சேர்த்த பணம் எங்கிருந்து தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும்? செல்வம்...செல்வம்...செல்வோமென்று அது வந்த வழியே தன் வழியைப் பார்த்துக் கொண்டு போய் விடுகிறதுதானே?

       இருபது புத்தகம் போட்டு இருபத்தோராவது புத்தகம் நிலுவையில் இருக்கும்போது,  பண பாக்கிக்காகப் போங்கள் என்ற மனைவி சொல்லின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு பஞ்சுவின் வீட்டு முன்னால் போய் நின்ற சரவண வாத்தியாருக்கு...என்ன வகையில் ஒரு அவமானம் ஏற்பட்டுப் போகிறது?

       நல்லா யோசிச்சுச் சொல்லுங்க...மீதி நானூறு.....

       நானூறா...இதென்ன அநியாயமா இருக்கு...முன்னூறுதான்யா...ரெண்டு வாட்டி வந்து அம்பது, அம்பதா நூறு வாங்கியிருக்கீரே....அப்புறம் நானூறு எங்கேயிருந்து மீதி வரும்...

       நான் வந்தேன்...கேட்டேன்...இல்லைங்கலே....ஆனா பணம் வாங்கிண்டு போகலை....அதனாலதான் ஆயிரத்துல பாக்கி நானூறுன்னு சொல்றேன்.....அறுநூறுதான் வாங்கியிருக்கேன்...

       எழுநூறு காட்டுதேய்யா பதிவு....அப்போ நான் எழுதி வச்சிருக்கிறது பொய்ங்கிறீரா...? என்னய்யா இது அநியாயமாயிருக்கு....?

       நீங்க எழுதினதுக்கு நானா பொறுப்பு?  என் முன்னாடியா எழுதினேள்? நான் பார்த்தேனா அதை...? நீங்களா எழுதிண்டதை நான் நம்பணுமா...?

       அப்போ வாங்கலீங்கிறீரா? என்னமாய்யா துணிஞ்சு பொய் வருது உம்ம நாக்குல...நான் அயோக்யன்...அப்படித்தானே...உம்ம சகவாசமே வேணாம்...உம்ம பாக்கிப் பணம் வீடு வந்து சேரும்...நீர் கிளம்பும்...

       அந்தப் பணம் எனக்கு வேண்டாம்....நான் பொய் சொல்லலை...நானூறுதான் என் பாக்கி....-கிளம்பி விட்டார்....இந்த வீட்டுக் குத்துச் செங்கலைக் கூட இனி மிதிக்க மாட்டேன்....புயலடித்தது சரவண வாத்தியார் மனதில். என்னமாய் ஏமாற்றுகிறான்? என்ன ஒரு கள்ளத்தனம்? மனம் வேகிறது.

       ரவால்லே....அந்த இருபத்தோராவது புதுப் புத்தகத்தைத் திருப்பி வாங்குறாப்லே போய்ட்டு வாங்களேன்....அவராத் துவக்கமாட்டாரா என்ன? - அந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டு மறுபடியும் வந்து நின்ற இடத்தில் கண்ட காட்சி? அதன் பிறகு எதெதெல்லாம் நடந்து போகிறது?

       பணத்தை ஏமாற்றின மனுஷனுக்கு உதவ எப்படி மனது வந்தது தனக்கு?அதெல்லாம் யோசித்து யோசித்தா செய்வது? அது மனிதத் தன்மையாகுமா?  அவர் மனைவி ஏன் அப்படி  திடீரென்று ரத்த வாந்தி எடுத்துப் படுக்கையாகணும்? அழைத்த மருத்துவர் வராமலிருக்க, தான் ஏன் அந்தக் காட்சி பொறுக்க மாட்டாமல் டாக்டரை அழைக்க ஓடணும்? யாரும் வராத நிலையில், தன் டாக்டர் நண்பனை அழைத்து வந்து, நிலைமையை அறிந்து, அட்மிட் பண்ணி, பிழைக்க வைத்தாயிற்றே...? அப்பாடா...இப்போதுதான் மனசுக்கு நிம்மதி.  டாக்சிக்கு கொடுத்து, ரிக் ஷாவுக்குக் கொடுத்து, நடையாய் நடந்து, ராத்திரி நகர்ந்ததே தெரியலையே...கைல இருந்த பைசா காலி....என் குழந்தையை, அது படுத்த படுக்கையாய் ஜூரமாய் இருந்ததை மறந்தே போனேனே?

       பயப்பட வேண்டாம்...இந்த மாத்திரையைக் கொடுங்க...சரியாயிடும்....காலமே அந்தப் பக்கம் வரும்போது வீட்டுக்கு வரேன்.......ஓரிரவில் நடந்த இந்த  நாடகத்தை என்னென்று சொல்வது?

       சரவணத்திற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது. எப்படி? அந்தக் சிரிப்புக் கேட்டு....அதென்ன சிரிப்பு?   

       உறி....உறி....உறி......புல் தின்கிற சவடாலில் ஜட்கா ஸ்டான்ட் குதிரையின் கனைப்பு....அது எதை உணர்த்துகிறது? மனிதர்களைக் கேலி செய்கிறதா? அவர்களின் அலைக்கழிப்புகளைப் பார்த்து ஏளனமா? பாவம்யா நீர்...என்று கெக்கலிக்கிறதோ? பகைவனுக்கருள்வாய்...! .வீடு சேர்கிறவரை சிரித்துக் கொண்டே போகிறார். நம்மை மீறி, நம் சக்திக்கு மீறி என்னவெல்லாம் நடந்து விடுகின்றன?

       மனுஷன் போடுறது ஒரு கணக்கு...ஆண்டவன்  போடுறது வேறொரு கணக்கு...-கெட்டவனுக்கு கடவுள் நிறையக் கொடுப்பான். ஆனா சமயத்துல கைவிட்டிடுவான்....எங்கேயோ கேட்டதுபோலிருக்கிறதோ...!

       ஆபத்தில் உதவாதவன் மனுஷ ஜாதியில் சேர்த்தியா? என்னை ஏமாற்றிய அவனை நான் ஏமாற்ற இதுவா தருணம்?  காசா பெரிது அங்கே...? கணக்கா பெரிது அப்போது? ஒரு உயிர் முக்கியமில்லையா?  நிமிஷ நேரத்தில், ஒரு நாள் பொழுதில் என்ன நடக்கும், எது நடக்கும் யார் அறிவார்? நடந்திருப்பதே அப்படித்தானே? காசே குறியாய் கள்ளத்தனம் செய்தவனை, காலம்...காலன் போட்டுப் பார்க்கிறான்....கதி கலங்க அடிக்கிறான்....! அதுதான் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறதோ...! கைக்குள்ளா பிரபஞ்சம் அடங்கியிருக்கிறது?

       குழந்தைக்கு ஜூரம் என்று போய் நிற்க, ஏற்பட்ட அனுபவங்கள்-சரவண வாத்தியாரின் மனித நேயச் செயல்பாடு-வாழ்க்கையை, அதன் ஏற்ற இறக்கங்களை, எதிர்பாரா நிகழ்வுகளை, உண்மை என்றும் பொய்க்காது என்கிற தத்துவத்தை நமக்கு எப்படி ஆழமாக உணர்த்தி விடுகிறது?

                                         -------------------------------------------------------

26 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன்

தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன்


       தை எழுதப்பட்டது 1958-ல். மதமாச்சர்யங்கள் அற்ற காலம். ஒழுக்கமும், பண்பாடும் நிறைந்திருந்த காலம். கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் விழுந்து வணங்கத் தக்க ஸ்தானத்தில் இருந்த காலம். அப்பொழுது எழுதப்பட்ட இந்தக் கதை செவ்வியல் படைப்பு என்று இன்றும் விளங்குகிறது. அதாவது classic  வரிசை. அதாவது காலத்தால் அழியாதது.                             

       கதை ஒரு நல்லாசிரியரைப் பற்றியது. கல்வி கற்றுக் கொடுப்பதைத் தன் லட்சியமாக, கடவுள் தனக்களித்த வரமாகக் கொண்டவர். அது ஒரு சேவை என்கிற பெருமிதத்தில் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். சிறந்த மாணவர்களை உருவாக்குவதுதான் இந்த தேசத்திற்கான தன் கடமை என்பதைப் பரிபூர்ணமாக உணர்ந்தவர். இதை அந்தக் கதாபாத்திரம் நமக்கு உணர்த்துகிறது.

       அவர் அனுகூலசாமி. அன்பே வடிவானவர். முப்பத்தாறு வருஷம் ஆசிரியப் பணியில் தொண்டாற்றியவர். மாணவர்களை அன்பினால் கட்டுப்படுத்தியவர். அதிர்ந்து ஒரு வார்த்தை கூட அவர்களைத் தன் வாழ்நாளில் சொல்லாதவர்.

       ஆசிரியர் என்கிற பிம்பமே கையில் ஒரு பிரம்போடு தோன்றும் உருவமாய் மனக் கண்ணில் நிற்க, அந்தப் பிரம்பை அது காலம் வரை மனத்தினால் நினையாத,  கையினால் தொடாத பெருந்தகை.

       தன் பணி ஓய்வைப் பெரிதாக நினையாத, சக ஆசிரியர்களில் சிலரைப் போல உண்டி வசூல்,  பண முடிப்பு, கொண்டாட்டம் என்று எதுவுமில்லாமல் எளிய ஒரு சிறு விடைபெறுதலோடு வீடு வந்து சேர்ந்தவர். அவரின் ஆசிரியத் தொண்டு போற்றப்படும் விதமாய், மாணவச் செல்வங்கள் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து ஆசி பெறுகிறார்கள்...

       இதெல்லாம் எதுக்கு? வேண்டாமே...என்று கூசி காலைத் தொட்டு வணங்கி விழும் மாணவர்களைப் பார்த்து சற்றுப் பின்னொதுங்கித் தயங்கி நிற்கிறார். பண்புள்ள சீலர்களின் இயல்பு அப்படித்தான் என்பதற்கு உதாரணமாய் அனுகூலசாமி. கருணையே வடிவான ஏசுபிரானின் முள்முடி சுமந்த படம் அந்த சுவற்றில். குட்டி ஆடு ஒன்றை அரவணைத்து அன்பு செய்யும் அமைதி தவழும் இன்னொரு காட்சி. இலக்கணமாய் ஆசான் அனுகூலசாமி.

       எல்லோரும் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். சூன்யம். தனிமை. இனி பள்ளி செல்ல வேண்டியதில்லை. அது நமக்குச் சொந்தமில்லை என்ற ஏக்கம். ஒரே மகளான லூயிசாவை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்து நின்ற போது வீட்டில் சூழ்ந்த தனிமை. அதே ஏக்கம்....அவரின் துக்கத்தைக் கண்ணுற்று அமைதியாக அருகில் நிற்கும் மனைவி மகிமை. அவரையே பார்த்துப் பருகிக்கொண்டு நிற்கிறாள்.

       என்னைக் கூடத்தான் நீங்க அடிச்சதில்லை. அதிர்ந்து எதுவும் சொன்னதில்லை. என்றவாறே ஆதுரத்துடன் அவர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்.

       உலகத்துல இருக்கிறது கொஞ்ச காலம். ஈசல் மழைக்கு ஒதுங்கி மடியறாப்ல...அந்தப் பொழுதை அடிக்கவும், கோவிக்கவும்னு விரயம் பண்ணனுமா? அடிச்சு யாரைத்தான் திருத்த முடியும்?

       மனிதன் தன் மனதுக்குள் எவ்வளவு பக்குவப்பட்டவனாய் இருந்தால் இந்த வார்த்தைகள் வந்து விழும்? ஆறு வயதில் லூயிசா ஏதோ விஷமம் பண்ண, வாத்தியார் அவரை அடிக்க, அடி விழுந்த இடம் சட்டைக்குள் பகுதியில் முளைத்திருந்த கோடைக் கட்டி உடைய, அப்பப்பா...! அவள் துடித்த துடி...அழுத அழுகை....எல்லோரும் செய்த பாவங்களுக்கு தன் உயிரை விலை கொடுத்தானே...அவன் எல்லாத் தலைமுறைக்கும் சேர்த்துத்தானே கொடுத்தான்...?

       இன்னும் யாரு வாசல்ல? என்ற பார்க்க...அவரது வகுப்பு மாணவர்கள்...பாராட்டுப் பத்திரம் வாசித்தல், மாலை போடுதல்...என்று மரியாதை செய்கிறார்கள். காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்.

       உங்களுக்குச் செய்யாம வேறே யாருக்கு சார் நாங்க செய்றது?-நீங்கள் நிதி திரட்டச் சொன்னதில்லை. போலி நகையை அடகு வைத்து பணம் பெற்று ஏமாற்றியதில்லை....ஊரெல்லாம் கடன் வாங்கி பெயரைக் கெடுத்துக் கொண்டதில்லை...எந்த அவச் சொல்லுக்கும் ஆளாகியதில்லை..இப்டி வாத்தியார் பெயரைக் கெடுத்துட்டு ஊர்ல சில பேர். .உங்களின் பெருமை அறியலேன்னா எப்படி? - உங்களுக்கென்ன சார்....நீங்க தெய்வம்..இவங்களுக்கு நடுவுல பூரணமா மதிக்கப்பட வேண்டியவர் நீங்கதான்....உங்களை வணங்காமல் வேறு யார் காலில்தான் போய் விழுவது?

       பெருமைப் பட்டுக் கொள்ளலாம்தான். ஆசிரியப் பணியை, அதன் மேன்மையை உயர்த்தியிருக்கிறோம்தான். அனுகூலசாமியின் மனது கொஞ்சம் பூரித்துப் போகிறது. கதையின் மையமே இங்கேதான் ஸ்தம்பிக்கிறது.

       நல்லொழுக்கம் உள்ளவரின், மதிப்பு மிக்கவரின், தன்னலமில்லாதவரின், தியாக மனப்பான்மை கொண்டவரின் தற்செயலான ஒரு செயல்,  அறியாச் சில வார்த்தைகள் கூட தன்னையறியாத நிலையில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது? சொல்லும்போது இப்படி ஆகக்கூடும் என்பதை ஊகிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறதே...! சாதாரண மனித ஜென்மத்திற்கு அப்படி எல்லா நிலையிலுமான எதிர்வினைகளை ஊகித்து அறிய முடிந்து விடுகிறதா என்ன? பக்குவப்பட்டவனுக்கும் சமயங்களில் வழுக்கித்தான் விடும்போல....

       காயாரோகணத்தோட இங்கிலீஷ் புஸ்தகத்தைத் திருடி, வேறே பேர் ஒட்டி, பாதி விலைக்குக் கடைல வித்துப்புட்டான் சார்- என்று சொல்லி ஆறுமுகம் காட்டிய அந்தப் பையன். மனதில் அவன்பால் தோன்றிய கோபம்....

       அது என் மேல் எனக்கே ஏற்பட்ட பெருமிதமோ...?அதனால் நான் செய்த குற்றமோ...?

       நம்ப வகுப்புல இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லே...இனிமே யாரும் இவனோட பேசாதீங்கடா....

       நாங்க எல்லாரும் இவனை அன்னைலேர்ந்து ஒதுக்கிப்புட்டோம் சார்...யாரும் இவனோட பேசறதில்ல...எதுக்கும் கூப்பிட்டும் போறதில்ல.....

       தற்செயலாக என்னவோ சொன்னதற்கு, வாய் தவறிச் சொல்லி விட்டதற்கு இத்தனை பெரிய தண்டனையா...? நானா சொன்னேன் அப்படி? -மனதை வதைக்கிறதே!.

       நல்லோர் வாக்குக்கு அத்தனை சக்தி...அது நிற்கும். அவரே அறிந்தோ, அறியாமலோ...!

       இந்தப் பசங்களோட எம்பையனச் சேர்த்துக்கச் சொல்லுங்கய்யா....என்று வேண்டி கண்ணீர் மல்க நிற்கும் அந்தத் தாய். கையில் வாத்தியாருக்குக் கொடுக்க வந்த ருபாயை வாங்கிக்கொள்ள மறுத்த அந்தப் பையன்கள்.

        நீங்க வாங்கிக்குங்க ஐயா...கூட இருக்கிறதுக பேசாம இருந்தா...பிஞ்சு மனசு என்ன பாடுபடும்? சிறிசுதானுங்களே....

       சின்னையா...அழாதடா...ஏய்....அழாத.... - மனசு உருகி அவனைப் பார்த்துச் சொல்கிறார்.

       இந்தப் பசங்க இப்படிப் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சே...-வேதனையுறுகிறார்.

        ஆற்றொணாத் துயரம். அத்தனை ஆண்டுகாலம் கையில் பிரம்பெடுக்காத, தடித்த வார்த்தை ஒன்று சொல்லாத, அன்பே பிரதானம் என்று பிரதிக்ஞையாய் வாழ்ந்து கழித்த....நான்

       இப்படி ஒரு தப்பு செய்திருக்கிறேனே....அறியாமல் சொல்லியிருந்தாலும், என் அறியாமையால் ஒரு குழந்தை, சிறுவன் எவ்வளவு மன பாதிப்புக்குள்ளாகியிருக்கிறான்?

       சின்னையன் நீட்டிய காசை பேசாமல் வாங்கிக் கொள்கிறார். அதுதான் நான் அவனுக்குச் சொல்லும் சமாதானம்....

       ரொம்ப நல்ல பையன் சார்...அன்னைக்கு என்னவோ புத்தி பெசகி. அப்டிச் செஞ்சுப்புட்டான்....அப்புறம் ஒரு புகார் கிடையாது....

       மனசு அழுகிறது அனுகூலசாமிக்கு. அறிந்து, அறியாமல் செய்த தவறு. ஒரு சிறுவன் மனதை எத்தனை பாதித்திருக்கிறது? அவனை எவ்வளவு ஒதுக்கியிருக்கிறது? அந்த மனது எவ்வளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது?

       நீங்க சொன்னதுதானே...- மகிமையின் வார்த்தைகள். சொல்லிக் காண்பிக்கிறாளோ?

       சிரிப்பதா, அழுவதா? அழுகைதான் சிரிப்பாக வெளிப்படுகிறதோ? தேவனின் தலையில் இருந்த முள்முடி இவர் தலையை  அழுத்துகிறது.

       நல்லவர்கள் தப்பித் தவறிக் கூட ஒரு தவறு செய்துவிடக் கூடாது. மனசாட்சியே அவர்களைக் கொன்று விடும். கதை முடிகையில் அந்த முள்முடி நம் தலையிலேயே இறங்கியது போலிருக்கிறது.

       நுணுக்கமான ஒரு சிந்தனை. ஒரு குழந்தையின் பிஞ்சு மனசு அந்த இளம் பிராயத்தில் எப்படித் தவிக்கும் என்பதை நுணுகி உணர்ந்து தோன்றிய படைப்பு. அதை எந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தி, எப்படிச் சொன்னால் அழுத்தம் பெறும் என்பதை ஆராய்ந்து வரி வரியாய் வடித்தெடுத்த சித்திரம்.

                                   -------------------------------------------------

      

      

 

      

 

 

தி.ஜா.நூற்றாண்டு - “பரதேசி வந்தான்“ - சிறுகதை - வாசிப்பனுபவம்

 

தி.ஜா.நூற்றாண்டு - பரதேசி வந்தான்“ - சிறுகதை - வாசிப்பனுபவம் -உஷாதீபன்

     எங்கும் இருக்கிறது நாதம். கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, வேறு ஏதாவது செய்தோதானே அதை உணர முடிகிறது? அது போலத்தான் இதுவும்....-                                                     அந்தப் பரதேசியில் வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை?

     வெறும் பரதேசியா அவன்? அப்படி என்றாலும் வயிறு பசிக்காமல் இருக்குமா? அந்தத் தணலை ஆற்றாமல் பரிதவித்து நிற்கிற அந்தத் தருணம், அவன் வாயிலிருந்து வரும் வயிரெறியும் அந்த வார்த்தைகளுக்கு சக்தியில்லாமலா போகும்? சாதாரண மனித ஜென்மம் அப்படியான ஒரு தருணத்தில் தன்னை மறந்து சொல்லும், சொல்லி விடும் அல்லது தவறி விழுந்து விடும் வார்த்தைகளுக்கு அத்தனை சக்தி கூடுமா? கூடிவிடுகிறதே...! கூடிவிட்டதே...! நான் சாபமிடலை ஐயா...என் பசி சாபமிட்டது....

       “அண்ணா“ அப்படித்தானே நம்ப வேண்டி வந்து விட்டது? சாதாரண ஆளா அண்ணா? கோர்ட்டில் வக்கீல். வாழ்க்கையில் நீதிபதி. அந்த நீதிபதியே இப்படி ஒரு காரியம் செய்யப்போய், அது அச்சான்யமாய் முடிந்து போகிறதே...! சாணக்கிய சாகசம் செய்து ஏற்றுக் கொண்ட வழக்கில் வெற்றி காணும் அவர், வாழ்க்கையில் அந்த நீதியை நிலைநாட்ட முடியவில்லையே...!

       நீர் எவ்வளவு பெரிய மனுஷனா இருந்து என்னய்யா பயன்? கொஞ்சூண்டு அன்பு இல்லையேயா உம்மிடம்? உம்முடைய அகங்காரம் அத்தனை பஞ்சையாக, லேசாகத்தானே இருக்கிறது? துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது எத்தனை கம்பீரமாய் நின்றிருக்கும்? பரதேசி எத்தனை ஆணித்தரமாய் சொல்லிவிட்டான்? பரதேசிக்கு முன் வந்த பிச்சைக்காரன் என்னமாய்ப் பேசினான்? நான் சொல்றேன்...கேட்க மாட்டேன்னுட்டானே...?

       தெருவில் போகும் ஒரு சாதாரணப் பிச்சைக்காரன். அவனிடம் உமக்கென்ன வம்பு? என்னவோ அவனுக்கு வருவதை, தோன்றியதை (அப்படியா அவன் பாடுகிறான்? அட்சரம் பிசகாமல் குரு பக்தியை மனதை இருத்தியல்லவா பாடுகிறான்) இவனுக்கெல்லாம் என்ன பாட்டு வேண்டிக்கிடக்கு? தப்புத் தப்பாய்.... நினைக்கும் அண்ணாவின் அகந்தை....

     காஞ்சிமா புரியில்....வாங்க்ஷையுடன் வந்தெனக்கு....                                               வாஞ்சையா.....வாங்சைஷயா....?                                                               வாங்சைஷதானுங்க...எங்க குருநாதர் அப்டித்தான் சொல்லிக் கொடுத்திருக்காரு....-என்ன ஒரு உறுதி அவனுக்கு? -சாதாரணப் பிச்சை எடுப்பவன், தன் சொல்லைத் தட்டுவதா?                                                                                    அப்ப உனக்கு அரிசி கிடையாது....                                                                 வேணாங்க...                                                                                     அண்ணா...என்னண்ணா...பிச்சைக்காரன்டப் போயி வாயாடிண்டு? நீங்க எங்கே...அவனெங்கே..?           குருநாதன் சொல்லிட்டானாம்...இவன் சொல்ல மாட்டானாம்....                                    ஆமாய்யா...சொல்லத்தான் மாட்டேன்...நீர் பிச்சை போடணும்ங்கிறதுக்காக என் குருநாதர் பாடத்தை மாத்திப் பாட மாட்டேன்....காக்காய்க்குக் கிளின்னு பேர் வச்சு...நானூறு பேர் அழைச்சா...அது கிளிதான்....                                                                                    அங்கேயே அடிபட்டுப் போகிறது அண்ணாவின் நீதி பரிபாலனம்...பிச்சைக்காரனுக்கு என்ன ஒரு அகந்தை? ...தோன்றுகிறது. தான் சொன்னதை அவன் கேட்டாக வேண்டும் என்கிற மமதை இவருக்கு இல்லையா? அதை உணரவில்லையே? பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்து, கிரஉறப்பிரவேச வைபவத்தின்போதா அடுத்தது நடக்க வேண்டும்?

       இருநூறு இலைகள்...சாப்பாட்டிற்குப் போட்டாயிற்று. கொல்லைக்கட்டு, அடுக்களை, கொல்லை நடை, வாசல் நடை...என்று எங்கே பார்த்தாலும். பந்தியைச் சாரி சாரியாய் நோட்டம் விடுகிறார் அண்ணா. ஜூனியர்களின் கவனிப்பும், காரியமும் ஏதாவது ஒரு இடத்தில் பிசகினாலும் போச்சு. எங்கும், எதிலும் அபஸ்வரம் தட்டக் கூடாது....இசையறிஞர் அவர். அதன் நுணுக்கம் தெரிந்தவர். அதே நுணுக்கமும், தீர்க்கமும் அவரின் எல்லாச் செயல்களிலும் வெளிப்பட்டாக வேண்டும். அவரின் கௌரவமே அதுதான்.

       அப்படியிருந்தும் எப்படி இது நடந்தது? ஏ...பஞ்சாமி...யார்ரா இது அங்கே...? காட்டிய இடத்தில் இலைக்கு முன் அமர்ந்திருக்கும் ஒரு பரதேசி.....எலும்பும் தோலுமாய்...அழுக்குப் படிந்த உருவம்....எப்படிறா வந்தான்? என்னடா நிர்வாகம் பண்றேள்? கிளப்புடா அந்தக் கழுதையை.....

       உட்கார்ந்து விட்டானே அண்ணா....... கையை நனைத்து விட்டானே...

       வேண்டாம்...போகட்டும் பாவம்.... - அறிவு கேட்டதா என்ன? என்ன படித்து என்ன பயன்? என்ன செல்வமிருந்து என்ன பயன்? அந்த மனத்தில் துளி அன்பில்லையே...? இதை யார் அவருக்குச் சொல்வது? சொல்லி உணர்த்த வைப்பது?                                                                             ஓஉறா....அப்டியா....நானே போறேன்.... -ஏய்... எழுந்திருடா....?                                       


வாய் பேசாமல் நிமிர்கிறான் அந்தப் பரதேசி.  வாயில் போட்ட கறி...எச்சிலான கை.....பசிக்கிறது.....எச்சில் பண்ணி விட்டேன்.....வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்...!..               எழுந்திர்றாங்கிறேன்...பதிலா சொல்லிண்டிருக்கே....?-தரதரவென்று இழுத்து வெளியில் கொண்டு தள்ளுகிறார்...நிலைகுலைந்து விழுகிறான்.....கபகபவென்று பசிக்கும் வயிறு. தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்குத் துளி எட்டி நின்று போயிற்று. பசியைக் கிளப்பி விட்டு விட்டது.  உள்ளே அனல்......பசி அனல்.....பற்றி எரிகிறது...

       எப்படிப்பட்ட ஒரு காட்சி...? பசித்தவனை, சாப்பிட அமர்ந்தவனை, சாப்பிட ஆரம்பித்துவி்ட்டவனை, கையை நனைச்சிட்டானேண்ணா....? என்று சொல்லியும்...கேட்காமல் முடியைப் பிடித்து இழுத்து வெளியில் கொண்டு தள்ளினால்....? - அந்தக் கடவுளுக்குத்தான் அடுக்குமா?           அவ்வளவு படித்த, செல்வந்தரான, அவ்வளவு புத்திசாலியான, செல்வாக்கு மிகுந்த...அண்ணா அதைச் செய்து விட்டாரே...?                                                                          ஒருவன் பெரிய செல்வந்தனாயும், மிகப்பெரிய தொழிலதிபராயும் இருந்து என்ன பயன்? அவனின் நற்செயல்கள், தான தருமங்கள், இவைகள்தானே அவனை வெளிக்கொண்டு வருகின்றன? உலகறியச் செய்கின்றன? அது போல்-

       அண்ணா சாணக்கிய அறிவு ஜீவியாய் இருந்து வக்கீல் தொழில் செய்து, நீதி பரிபாலனம் பண்ணி தன் கௌரதையைக் காப்பாற்றிய போதும், அவரிடம் ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டிய அன்பு, கருணை, நேயம்...இல்லாமல் போனதே...?

       வன் சபித்தால் பலிக்காமல் போகுமா? அப்படி ஒரு நிலையில் எவன் சபித்தாலும்....நடந்து விடுமோ?

       ஓய் வக்கீலே....நீர் நன்னா இருப்பீரா? இலையில் உட்கார்ந்து எச்சில் பண்ணினவனை இப்டி எழுப்பி விடுறீரே...இது தகுமா?...ஆகாது...ஆகவே ஆகாது...நா போறேன்...ஆனா இதே தேதிக்கு அடுத்த மாதம் நான் வருவேன்...உம்ம வீட்லயே உட்கார்ந்து சாப்பிடுவேன்...நடக்கிறதா இல்லியா பாரும்.....

       என்ன சொல்கிறான் இவன்? இவன் மனிதனா அல்லது வேறு யார்? சாபமிடுவதுபோல் சொல்லிவிட்டுப் போகிறானே? பதறிப்போகிறது அவர் மனம். நடந்து விடுகிறதே...சொன்னதுபோல்...

       கல்யாணப் பையன் பிரக்ஞையின்றி மயங்கி, டாக்டர் வந்து பார்த்து (அதுவும் கல்கத்தாவிலிருந்து) நாற்பத்தெட்டு மணி நேரம் கெடு விதித்து, கதை முடிந்து போகிறது. அண்ணாவின் இன்பக் கனவு...ஒரே பிள்ளை...ஜெகமே அவன்தான்....அது அழிந்து விடுகிறது. அவரின் ஆணவமும், அகந்தையும் அத்தோடு கருகிச் சாம்பலாகிறது.

       அந்தப் பரதேசியைக் கண்டதும் தேம்பித் தேம்பி அழுகிறார் அண்ணா.                               என் வார்த்தையால் ஆகலை....வருத்தப்படாதீர்கள்...சொன்னது போல் வந்தது வார்த்தை தவறக் கூடாது என்று...நான் சாபமிடவில்லை ஐயா... என் பசி சாபமிட்டது. இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்.... எங்கும் இருக்கிறது நாதம்...கை தட்டியோ, வேறு ஏதாவது செய்தோதானே உணர முடிகிறது? அது போலத்தான் இதுவும்..!  -   ஆஉறா...என்ன ஒரு ஆத்ம சிந்தனை...எப்படியான ஒரு ஆத்மப் பரிசோதனை?

       அண்ணா சூன்யத்தைப் பார்த்து வெறித்திருக்கிறார். இவன் மனிதனா அல்லது கடவுளா? துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது எத்தனை கம்பீரமாய் நிமிர்ந்து நின்றிருக்கும்...? அவன் சொன்னதை இந்த அறிவு உணர்த்தவில்லையே....மனம் உணரவில்லையே....! என்ன படித்து என்ன பயன்? எவ்வளவு சொத்தும் பத்தும், தோட்டம் துரவும் இருந்தும் என்ன பயன்?

       ஓய்...கால தேவரே....உட்கார்ந்து பேசுமேன்...கால் வலிக்கவில்லையா? - கருணை பிறக்கிறது மனதில். பேச்சு மாறுகிறது அண்ணாவுக்கு. சோற்றுக்கு நின்ற பரதேசி காலதேவனாகி விடுகிறான்.

       வயிறு குழைய, விலா எலும்புகளின் தோல் விரிய...ஈஸ்வரா...!- பசியின் வடிவாக அமர்கிறான் அந்தப் பரதேசி.

       நம் வாழ்க்கையிலும் நாம் இப்படிக் கேள்விப் பட்டிருக்கிறோம்...இதற்கொப்ப வடிவான நிகழ்வுகளையும் கண் கொண்டு பார்த்திருக்கிறோம்தானே...! பரதேசி வந்தான்...வந்து போனவன் குரு ஸ்தானத்திற்கு உயர்கிறான். வாழ்க்கையை உணர்த்துகிறான். அவனுக்கிருக்கும் மனப் பக்குவம் அடேயப்பா...! சில வாரத்ததைகளில் எவ்வளவு உணர்த்தி விட்டான்?                                    அவ்வளவு பேர் உட்கார்ந்து சாப்பிடும் அந்தப் பந்தியில் நூற்றில் ஒருவனாய் அந்தப் பரதேசியும் அமர்ந்து சாப்பிடுவதில் அவர் என்ன குறைந்து போகப் போகிறார்...? அப்படி என்னதான் நஷ்டம் ஆகிவிடப் போகிறது. ஆனால் அந்த எளிய உண்மை அவருக்குத் தெரியவில்லை. அதற்கு மனசில் அன்பில்லாமல் போகிறது அண்ணாவுக்கு. செல்வாக்கும் அகந்தையும் கண்ணை மறைத்து விடுகிறது.

       காலம் காட்டிக் கொடுத்து விடுகிறது அந்த உண்மையை. அதன் அடையாளமாய் அந்தப் பரதேசி பிரசன்னமாகிறான். கால தேவனாய்... நின்று உணர்த்துகிறான்....

        தி.ஜா.வின் இந்தச் சிறுகதை க்ளாசிக் வரிசையில் இன்னும் நூறாண்டு காலத்திற்கு நிற்கும் என்பது சத்தியம்.

                                  -------------------------------------------------------------