08 மார்ச் 2014

காட்சிப்பிழை மார்ச் 2014 இதழில் எனது எஸ்.வி.ரங்காராவ் பற்றிய கட்டுரை

clip_image001clip_image002
clip_image003

குரல்கள் பலவகைப் படும். ஆண்களுக்கு என்று ஒரு வகை. அதுபோல் பெண்களுக்கும். சமயங்களில் சில ஆண்களுக்குப் பெண் குரல் அமைந்து விடுவதுண்டு. அதுபோல் பெண்களில் சிலருக்கும் ஆண் குரல் அமைந்திருப்பதைப் பார்த்திருக்கின்றோம்.
     ஆனாலும் ஒரு மனிதனைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் நிகழ்வில் அவனது குரல் முக்கிய இடம் பெற்று விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. அது ஒரு ஆணுக்கு அமைந்த பெண் குரலாக இருந்தாலும் கூட, ஒரு முறை திரும்பி நோக்கி அறிந்த பின்புதான் அது ஏற்கப்படவோ, மறுக்கப்படவோ…! அபூர்வமாய்ப் பெண்ணுக்கு அமைந்திருக்கும் ஆண் குரலும் கூட அப்படித்தான்.
     குரலை வைத்து ஒரு மனிதனை ஏற்பது, மறுப்பது என்பது இல்லை. குணத்தை வைத்துத்தான் எனினும், குரல் எல்லாச் சமயங்களிலும் மனிதர்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அது ஒரு தனித்த அடையாளம்.
     அந்த அடையாளம் இவருக்கு நூறு சதவிகிதம் பொருத்தமாய் அமைந்து போனது. அந்தக் கண்ணியமான குரல் எல்லோராலும் ஏற்கப்பட்டதாய் இருந்தது. அது அவருக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்தது. குரலில் என்ன கௌரவம், அகௌரவம்? பார்ப்பவர், கேட்பவர் மனதைப் பொறுத்ததுதானே அது? குரலுக்காக ஒருவரை இகழ்வோர் உண்டா?  எங்கும் மனிதர்கள் அவ்வாறு செய்வதில்லையே? அது ஒரு வகை என்ற அளவில்தானே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது?
     ஆனால் இவர் குரல் அப்படியில்லை. அது எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  ஒருவர் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும், என்ன மனநிலையிலிருந்தாலும், அந்தக் குரல் அவரை ஈர்க்கத்தான் செய்தது. அந்தக் குரலைக் கேட்பதே கூட ஒரு கௌரவம் என்பதுபோல் தனது தெளிவற்ற மனநிலையிலிருந்து சமனமடையத்தான் செய்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் நல்லதைத்தான் சொல்லுவார், நன்மையைத்தான் பேசுவார், கட்டாயம் நல்லவராய்த்தான் இருப்பார் என்ற முடிவுக்கு இட்டுச் சென்றது. அவர் பேசிய போது அவர் சார்ந்த குடும்பம்  அடங்கியது, பணிந்தது. சுற்றம் அமைதி காத்தது. மரியாதை செய்தது. பயந்து ஒதுங்கியது.  அவர் செய்தால் சரியாய்த்தான் இருக்கும் என்று நம்பி, வாய்பொத்தி மௌனித்தது. 
     மதிக்கத்தக்க அந்தக் குரல்வளம். அன்பு, கருணை, பாசம், பந்தம், அரவணைப்பு இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய அபூர்வம்.. அது அவருக்கு மட்டுமே அமைந்த வரப்பிரசாதம். யாரேனும் ஒரு சிலர் தானே வெவ்வேறுவிதமாய், பலரும் நினைக்கும் வண்ணம் இருக்க முடியும். ஒரேவிதமாய்ப் பலரும் இருந்தால் அதனை அடையாளப்படுத்தி ரசிக்க முடியுமா?
     இங்கே இவரைத் தனித்துப் பார்த்து பெருமையுடன்   நாம் ரசித்துத்தான் ஆக வேண்டும். ரசித்தார்கள் பலரும், உருகினார்கள் மனமுவந்து. இன்றும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாகாவரம் பெற்ற குரலாய் அமைந்தது அது.
     அப்படியான வரம்பெற்ற, அபூர்வமான, எல்லோரையும் நெகிழச் செய்யும் கண்ணியமான, கௌரவமான குரலுக்குச் சொந்தக்காரர் திரு எஸ்.வி.ரங்காராவ் அவர்கள். அவருக்கு அமைந்த அதிர்ஷ்டக் குரலுக்கேற்ற ஆகிருதியும் பெற்றவர். எடுப்பான உயரம், வளமான கனம், அறிவுக் களை ததும்பும் பரந்த முகம், கம்பீரமான நடை, இந்த லட்சணங்கள் பிரதிபலிக்கும் தீர்க்கமான நடிப்பு,  இப்படி எல்லாமும் ராஜகளையாய் அமைந்த தோற்றம் அவர்.
     சொல்லும்பொழுதே திரு என்று உள்ளார்ந்த மரியாதையுடன் விளித்துத்தான், மதிப்பிட்டு முன்னே நிறுத்த வேண்டியிருக்கிறது. அப்படியான மெச்சத்தகுந்த  எல்லோரும் விரும்பும் அற்புத நடிகராய்த் திகழ்ந்த பெருமை அவருக்கு உண்டு.
     பொறுப்பு மிக்க குடும்பத் தலைவனாய், கடமையும், கண்ணியமும் மிக்க போலீஸ் அதிகாரியாய், சிறந்த தொழிலதிபராய், பெரிய செல்வந்தனாய், நீதிக்கு நியாயமாய் நிற்கும் வழக்கறிஞராய், வறுமையிற் செம்மையைப் பாதுகாக்கும் ஏழையாய், விவசாயியாய், இப்படி எத்தனையோ வகையில் இனம் பிரித்தாலும் எல்லாவற்றிலும் அந்தந்த கதா பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டி, தன்னை எவரும் மறக்க முடியாத நிலையான இடத்தில் நிறுத்திக் கொண்டவர் இவர்.
     அவரை நினைவு கூர்கையிலேயே கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் பிரமாதம்…அந்த கௌரவப் ப்ரசாதம்….இதுவே எனக்குப் போதும்….உற…உற்உற…உற்உற….உற்உறா…..என்று கடோத்கஜனாய்த்தான் நினைத்துப் பார்த்து ஆரம்பிப்பார்கள் எல்லோரும். எடுத்த எடுப்பில் அவரின் அந்த வேஷத்தைத்தான் முதலில் சொல்வார்கள். அத்தனை பொருத்தமான அந்தக் காட்சி இன்றும் கூட வயதான பெரியவர்களுக்கும், நேற்றுப் பிறந்த குழந்தைக்கும் உற்சாகமூட்டும், குதூகலமூட்டும் சிரஞ்சீவியாகவே இருந்து வருகிறது.
     நிறையப் புராணப்படங்கள், சரித்திரப்படங்கள், என்று இவர் நடித்திருந்தாலும் அவற்றிலெல்லாம் அவர் ஏற்றுக் கொண்ட வேஷமும், கதைகளும்தான் முன்னின்றன. ஆனால் இவரின் சமூகக் குடும்பக் கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாதவை. அனைத்துப் படங்களிலும்  தந்தையாகவே இவர் வந்திருந்தாலும், அந்தந்தத் திரைப்படத்திலான இவரது முத்திரை யாராலும் மறக்க முடியாதது.. அதே நடிகர்தான், அதே குரல்தான், என்றாலும் அத்திரைப்படத்தின் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு இவர் அப்படிப் பொருந்தி நின்றார் என்பது உறுதி.
     பாலா மூவிஸ் “படிக்காத மேதை” அனைவரும் அறிந்த படம். நடிகர்திலகத்தின் நடிப்பு, கதை, வசனம், காட்சிகள் என்று தமிழ் நாட்டுக் குடும்பங்கள் அனைத்தும் உருகி உருகி ரசித்த படம் இது. இப்படத்தில் கண்ணாம்பா, எஸ்.வி.ரங்காராவ் தம்பதியர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வசனங்களும், நடிப்பும் நம்மைப் பிழிந்து எடுத்துவிடும். வாழ்க்கையின் உயர்ந்த நெறிகளை உள்ளடக்கமாகக் கொண்ட ஆவணம் இது என்று சொல்லலாம்.
இப்படத்தின் ஒரு காட்சி. ஏழைக் குடும்பத்திலிருந்து வாழ வழியில்லாமல் கிடந்த ஒரு பெண் சௌகார்ஜானகி. அவரைக் கோயிலில் பார்த்து உருகும் தாயிடம் இரக்கம் கொண்டு, தன் வீட்டுக்கு மருமகளாக அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அழைத்து வருகிறார் கண்ணாம்பா.  மகன் டி.ஆர்.ராமசந்திரனுக்கு மணமுடிக்க நினைக்க,  அவர் வேறொரு பெண்ணோடு சுற்றி அலைவது தெரிந்தும், சௌகார் ஜானகியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது என்றும் சொல்லி மறுக்கிறார். , அய்யோ வழியறியாத ஒரு குடும்பத்திற்கு இப்படி வாக்குக் கொடுத்துக் கூட்டி வந்துவிட்டோமே  இப்போது என்ன செய்வது என்று தவித்து, கடைசியில் வளர்ப்புப் பிள்ளை ரங்கனுக்குத் (சிவாஜி கணேசன்) திருமணம் செய்து வைத்து மகிழ்கிறார்,
அந்த வீட்டில் ஏற்கனவே உள்ள ராவ்பகதூரின் இரண்டு மருமகள்கள் ஏழை வீட்டுப் பெண்ணான சௌகார்ஜானகியைக் கேலி செய்யவும், கடுஞ்சொல் சொல்லவும் என்று அலைக்கழிக்க,அழுது அழுது தன் குறையைக் கணவனிடம் சொல்லி தனிக்குடித்தனம் பற்றிப் பேச்செடுக்கிறார்  அவனோ புரியாது அவளைத் திட்டித் தீர்க்க, குடும்பம் நொடித்த நிலையில் தவிக்கும் ரங்காராவ் இதைக் கேட்டு விடுகிறார். அந்த அப்பாவிப் பெண் நிம்மதியாக வாழ வேண்டும் என்கிற ஆசையில் தனக்குப் பின் அந்த ஏழைப் பெண்ணின் பாடு திண்டாட்டமாகிவிடக்கூடாது என்ற முடிவில் ரங்கனை அழைத்து வீட்டை விட்டு வெளியே போ என்கிறார்…அந்தக் காட்சி…..
மாமா…கூப்டீங்களா…?
“………………………………..” – ரங்காராவ் அமைதியா இருப்பார். எப்படிச் சொல்வது என்று தயங்கியவராய்.
என்னா நான் கேட்குறேன்…நீங்கபாட்டுக்கு உலாத்திக்கிட்டு இருக்கீங்க…நான் வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன்னு  தெரியுமில்ல…ஆமா…அந்தச் சின்னப் பையன் நீங்க ஏதோ கோபமா இருக்கிறதாச் சொன்னானே…நீங்க ஏன் கோபமா இருக்கீங்க? யார் உங்கள என்னா சொன்னா?
டேய்….நா ஒண்ணு சொல்றேன்…செய்றியா….
உறாங்….இப்புடிங்கிறதுக்குள்ள செஞ்சுப்புடறேன்….சொல்லுங்க….
அப்போ….நீ உடனே வெளிய போ….
போய்ட்டு வந்திர்றேன்……. – சொல்லிவிட்டு நகர்கிறார் ரங்கன்.
டாய்….எங்கடா போற….?
வெளிய போயிட்டு வரச் சொன்னீங்களே……
நீ மட்டுமில்லடா….உன் சம்சாரம் லட்சுமியையும் அழைச்சிட்டுப் போ….
உறிஉறிஉற்உற்உற்உறி….அய்ய்ய்யோ……எனக்கு அவளத் தனியா கூட்டிட்டுப் போய் பழக்கமில்லே…வேண்டாம்…அத்தை கூட அனுப்புங்க…போகட்டும்…..
அத்தையா…..? நீயே அழைச்சிட்டுப் போடா…..டேய்…கொஞ்ச நாளைக்கு எங்கயாவது என் கண்ணுல படாம இருங்க…போங்க…..
அப்டீன்னா மாமா…என்னை வீட்டை விட்டே வெளிய போகச் சொல்றீங்களா…?
ஆமாண்டா…ஆமா….
ஆமா…நான் அவளக் கூட்டிட்டுப் போயி என்னா செய்றது, எங்க தங்கறது?
போய் கார் ஷெட்ல இரு. இல்ல ஒரு  குடிசைல இரு போ….
ஏன்,தலவிதியா? அரண்மன மாதிரி நமக்குச் சொந்தமா இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டிப்போட்டுட்டு குடிசைலயும் கார் ஷெட்லயும் போய் தங்கறதுக்கு அத்தைக்கொண்ணும் தலைல விதி எழுதியிருக்கான்னு கேக்குறேன்….
வாயை மூடுறா முட்டாள்….நான் என்ன சொல்றேன் புரியல? உன் சம்சாரத்த அழைச்சிட்டுப் போயி, நீ சம்பாரிச்சி, அவளுக்குச் சோறு போடு…போ…
ஏன், இங்க என்ன குறைச்சலு? இங்க என்ன சோத்துக்குப் பஞ்சமாஎன்ன?இங்கதான் ஒன்ணொண்ணும் மூணு வேளைக்கு ஆறு வேளை தின்னுப்புட்டு நல்லா இத்தத்தப் பெரிசுக்கு உட்கார்ந்துட்டிருக் குங்களே….அப்புறம் என்ன அப்புறம்….
அடடடா….நான் என்ன சொல்றேன்? எதுக்காகச் சொல்றேன், உன் மூளைல ஏறல?
ஏறுது…
உன் உடம்புல நல்ல ரத்தம் ஓடல….
ஓடுது……
நீ ஆம்பிளையாடா?
ஆமா, ஆம்பிளைதான்….
ஆம்பிளைதானே…..உன் சம்சாரத்த வச்சுக் காப்பாத்த முடியாது?
முடியாது……
முடியாதா? டேய்…..?
முடியாது மாமா….முடியாது மாமா…. மாமா…இப்போ நமக்குள்ள உண்மையப் பேசிக்கலாம்….நான் அவளக் கல்யாணம் பண்றப்ப, என்ன வச்சுக் காப்பாத்தற மாதிரி அவளையும் நீங்க வச்சுக் காப்பாத்தணும்னு நான் உங்ககிட்டச் சொல்லிட்டுத்தான தாலி கட்டினேன்…..நீங்களும் அதுக்குச் சம்மதிச்சீங்கல்ல….
டேய்…..டேய்…..!!!! – மேற்கொண்டு பேச முடியாமல் இறுமலில் தடுமாறுகிறார்.
மாமா….மாமா…சத்தம் போடாதீங்க….உங்களுக்கு ரத்தக் கொதிப்பு வந்துரும்…..மாமா….உங்களுக்கு விஷயம் தெரியாது மாமா….நான் வெளிய போனேன்னா எனக்கு உங்களத் தவிர யாரையும் தெரியாது மாமா…..
இனிமேலாவது தெரிஞ்சிக்கணும்னுதாண்டா வெளிய போகச் சொல்றேன்…..லட்சுமி கண்கலங்காம இருக்கணும்னுதாண்டா கத்தறேன்…போ…..போ வெளியே…….- பின்னணி இசை அதிர்ச்சியோடு ஸ்தம்பிக்கிறது.
ஒரு கணம் தியேட்டரே அமைதியாகிறது இந்தக் காட்சியில். மனம் பதறக் கிடக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரங்கன் தன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் திரும்ப வந்து கேட்கிறான்.
மாமா….நெஜம்மாத்தான் என்னை வெளிய போகச் சொல்றீங்களா…?
சத்தியமாச் சொல்றேண்டா….போடா வெளியே…போ..நிக்காதபோ…..
அதிர்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்குகிறான் ரங்கன். பிறகு சற்று நிதானித்துக் கேட்கிறான்.
ஏம்மாமா….நான் வெளிய போறது அத்தைக்கும் இஷ்டந்தானா?
டேய்…நீ இங்க இருக்கிறது யாருக்குமே இஷ்டமில்லடா…என் முகத்துல விழிக்காத…போடா…
மொகத்துலயே முழிக்கக் கூடாதா….அத்தைக்கும் இஷ்டமில்லையா…அப்ப நான் போயிட வேண்டிதான் மாமா…
மாமா….போயிட்டு வர்றே…....- அழுது கொண்டே புறப்படுகிறான் ரங்கன்.
இந்தக் காட்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தாதவர்கள் உண்டா? இன்று ஐம்பதைத்தாண்டிய பெரியவர்கள் அனைத்துப் பேரையும் நீங்கள் கேட்டுப் பாருங்கள். எவராவது இல்லை என்று சொல்லட்டும்….நான் அவரிடம் தனியாகப் பேசிக் கொள்கிறேன்….!!! அவரென்ன மனுஷனா அல்லது ஜடமா என்று…!!!
படிக்காத மேதை படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பா, கண்ணாம்பாவின் நடிப்பா, ரங்காராவின் நடிப்பா….? எது பெரிது என்று கேட்டால் நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னதுபோல நடிக்க வரும்போதே பல்கலைக்கழகமாக வந்த நடிகர்திலகத்தை விடுங்கள்…,எஸ்.வி. ரங்காராவின் நடிப்பைத்தான் இப்படத்தின் முதல் என்று சொல்வேன் நான்.
வீட்டை விட்டுப் பிரிந்து போன, ரங்கனை நினைத்து நினைத்து உருகி, அவனது தன்னலமற்ற சேவையையும், அன்பையும், ஆதரவையும் நினைந்து நினைந்து தான் பெறாமல் பெற்ற பிள்ளை அவன்,அவனை இழந்து நிற்கிறோமே  என்று தவித்து,  “எங்கிருந்தோ வந்தான்…இடைச்சாதி நான் என்றான்…ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்…..ரங்கன்……. என்ற பாடல் காட்சியோடு, மனஅவஸ்தையும் உடல் அவஸ்தையும்  விஞ்சிப் போய் அவனை நினைத்தே அவர் தன் மரணத்தை எய்தும் காட்சி கால காலத்துக்கும் மறக்க முடியாத ஒன்று.
இந்த ஒரு காட்சி மட்டுமல்ல அத் திரைப்படத்தில். பின்னர். தான் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப நேர்ந்த காரணத்தை தன் மனைவி கண்ணாம்பாவிடம் சொல்லி வருந்துவதும், சிக்கனம, சிக்கனம்னு சொல்றவங்க முதல்ல அவங்கல்ல அதைக் கடைப்பிடிச்சுக் காண்பிக்கணும் என்ற மருமகளின் குதர்க்கமான பேச்சைக் கேட்டு, தனது புகைப் பிடிக்கும் பழக்கத்தை அந்தக் கணமே விட்டுவிடுதலும், டப்பாவோடு இருந்த சிகரெட்டுகளை அப்படியே வெளியே கொட்டிவிட்டு டப்பாவைத் தூக்கி எறிவதும், கடைசி கடைசியாக கையில் புகையும் சிகரெட்டை ஆசை தீர வேதனையோடு ஒரு இழுப்பு இழுத்து வெளியே வீசி எறிவதும் முகம் முழுக்க சோகத்தையும் வேதனையையும் அவர் காண்பிக்கும் காட்சி நம்மையெல்லாம் கட்டிப் போட்டு அவர் காலடியில் விழ வைக்கும். அது என்ன நடிப்பா அல்லது உண்மையான வாழ்க்கையா? ஒரு கலைஞன் இந்த அளவுக்கா தன்னை அர்ப்பணிக்க  முடியும்?  சொந்த வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பான ஒரு மனிதன், தான் மேற்கொண்ட நடிப்புத் தொழிலில் ஒரு கதாபாத்திரத்தின் சாராம்சத்தை இந்த அளவுக்கா உள்வாங்கி தத்ரூபமாக வெளிப்படுத்த முடியும்? இந்த நடிப்புத் தொழிலின் மீதும், ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் மீதும் அவர்களுக்குத்தான் எந்த அளவுக்கு ஒரு பக்தி இருந்திருக்கிறது? எந்த அளவுக்கு ஒரு அர்ப்பணிப்பு உணர்வு…!!!
படிக்காத மேதை திரைப்படம் வெறும் படமல்ல…பாடம்…. இன்னும் நூறு ஆண்டுகள் போனாலும் நிற்கும் என்பதான அப்பழுக்கற்ற திரைப்படங்கள்தான் ஐம்பது, அறுபதுகளில் எத்தனை வந்திருக்கின்றன? காலத்தாலும் அழியாத காவியங்கள் அவை. இன்னும் எத்தனையோ திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் எஸ்.வி. ரங்காராவின் நடிப்புக்கு. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இவரைப் போன்ற நடிகர்களைப் பெற்றது தமிழ்த் திரையுலகின் பெறும் பேறு. ரசிகர்களாகிய நம்மின் பேரதிருஷ்டம் என்பதைத்தவிர வேறென்ன சொல்வது?
               --------------------------------------------------







     

22 பிப்ரவரி 2014

நெய்வேலி சந்தான கோபாலனின் தமிழ் இசைக் கச்சேரி


இன்று (22.02.2014) ராகப்ரியாவில் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் இசைக் கச்சேரி மனதை பக்தி லயத்தில் மூழ்க வைத்தது. நெய்வேலி சந்தானகோபாலன் ஆரம்ப காலங்களில் தன் தாயிடமும், பின்னர் சி.எஸ்.அனந்தராமபாகவதரிடமும், அதற்குப்பின் முழுமையாக மதுரை டி.என்.சேஷகோபாலனிடமும் இசையைக் கற்றுக் கொண்டவர். அவருக்கென்று ஒரு ஸ்டான்டர்டு உண்டு. மனத்திருப்தியோடு, அர்ப்பணிப்போடு பாடுகையில் பக்திப் பிரவாகம் ரசிகர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது என்பதும், அவர்களையும் பக்தி லயத்தில் மெய் மறக்கச் செய்து விடுகிறது என்பதுவும் இவரது கச்சேரியில் பலமுறை உணர்ந்த உண்மை.
இன்றைய கச்சேரி திரு.தேவேந்திரபூபதி, வணிக வரி அலுவலரின் தந்தையாரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டது. இசையில் ஈடுபாடு உள்ள நல்ல ரசிகர். வருடத்திற்கு மூன்று நான்கு முறைகள் அவரது ஏற்பாட்டில் நல்ல பாடகர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் அன்போடு முறையிட்டுக் கொண்டு, தமிழ்ப் பாடல்களாய் பாடச் செய்து கச்சேரியை சிறப்புச் செய்வது இவரது தொண்டு.
இன்றைய கச்சேரியின் சிறப்பே தமிழ்ப்பாடல்களாய்த் தேர்வு செய்து பாடியது என்பதுதான். ஒவ்வொரு பாடலின் சிறப்பையும் முன்னுரையாக விளக்கி பின்பு பாடலைப் பாடியது, ரசிக்க ஏதுவாகவும், அதன் மகிமையையும் உணரத்தக்கதாகச் செய்தது மறக்க முடியாத ஒன்று.

Photo

Photo

21 பிப்ரவரி 2014

“காட்சிப்பிழை” – தமி்ழ் சினிமா ஆய்விதழ் – பிப்ரவரி 2014 ல் எனது நடிகர் டி.எஸ்.துரைராஜ்பற்றிய கட்டுரை

1660895_607284856019751_1342333998_n

“அடே லேக்கா, போடாதே   
காக்கா…” ”சொல்லிப்புட்டேன் அம்புடுதேன்…”                          (மறக்க முடியாத  ஏ.கருணாநிதி)                                    --------------------------------------------------------------------                            
     மிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை என்பது எல்லாக் கால கட்டங்களிலும் முக்கிய இடம் வகித்திருக்கிறது. திரைக்கதையோடு ஒட்டிய நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தல், கதையோடு ஒட்டாமல் தனி வழியாக நகைச்சுவைக் காட்சிகளைச் சுவைபடப் பயணிக்க வைத்தல், ஏதேனும் ஒரு கட்டத்தில் கதையின் மையப்பகுதியில், அல்லது முக்கிய இறுதிக் கட்டத்தில் பொருத்தமாக இணைந்து கொள்ளச் செய்தல் என்பதாக வெவ்வேறு வகைமைகளில், கதையின் மைய ஓட்டம் சிதைந்து விடாமல் நகைச்சுவைக் காட்சிகள்,  அதன் முக்கிய நடிக, நடிகையர்கள், என்று தவிர்க்க முடியாத ஒன்றாகவே நம் தமிழ்த் திரைப்படங்களில் இருந்து வந்திருக்கின்றன. அந்தந்தக் கால கட்டத்திற்குத் தகுந்தாற்போல் வசன மொழியினாலும், உடல் மொழியினாலும் நின்று நிதானித்து யோசித்துப் புரிந்து, சிரித்து ரசிக்கும் வகையிலும், உடனுக்குடனே, காட்சிகளின் வழியே கூடவே பயணித்து விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்து தன்னை மறக்கும்  வகையிலும், மொத்தத் திரைப்படத்திலும் நகைச் சுவைக் காட்சிகளே விஞ்சி நிற்கும் ஆளுமையாகவும் கூட,   அவையே படத்தின் வெற்றி இலக்கிற்குக் காரணமாயும் ஆகிப் போன வழியிலும், திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகள்  என்பது முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.
     ஒட்டுமொத்தத் திரைக்கதையின் காட்சிரூபக் கதைசொல்லலின்  வேகமின்மையைச் சரிக்கட்டி, படத்தைத் தூக்கி நிறுத்தும்விதமாகவும், பிழியப் பிழிய வடித்தெடுக்கப்பட்ட சோகத்தின் உச்சத்தை வருடிக் கொடுத்துப் பார்வையாளர்களைப் பதப்படுத்தும் மாமருந்தாகவும், நகைச்சுவைக் காட்சிகள் ஒரு திரைப்படத்திற்கு ஆணிவேராக நின்று விளங்கியிருக்கின்றன.
     ஒரு நல்ல கதையை அழுத்தமான காட்சி அமைப்பின் வழி திறமையாகச் சொல்லிக் கொண்டே சென்று கடைசிவரை ரசிகர்களை அசையாமல் நெளியாமல் அமர வைத்து, சிறந்த முடிவைக் கடைசியில் சொல்லி, இதற்குமேல் ஒரு அற்புதமான முடிவை இக்கதைக்குத் தர முடியுமா? என்று சவால் விடுவது போல் படம் பார்த்தவர்களை அதே திருப்தியில் எழுப்பி அனுப்பும் திறமை எத்தனையோ திரைப்படங்களுக்கு இருந்திருக்கிறதுதான். அம்மாதிரியான கடுமையான உழைப்பைத் தாங்கி வந்த படங்களுக்குக் கூட நகைச்சுவைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது என்பதுதான் இன்றுவரையிலான உண்மை.
     தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயக, நாயகிகளைச் சுற்றித்தான் கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நாயகன்தான் பிரதானமாக இருந்திருக்கிறான். இதர கதாபாத்திரங்கள் அப்படிச் சொல்ல வந்த கதையைப் பலமாக நகர்த்த உதவும் சக பயணிகளாகவே கொள்ளப்பட்டிருக்கின்றன. அவைகளின் முக்கியத்துவம் அந்தந்த உப பாத்திரங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்ட சிறந்த பக்குவமிக்க, பழுத்த அனுபவமுள்ள நடிகர்களாலேயே மிளிர்ந்து நினைவில் நிற்கும்படி ஆகியிருக்கிறது. மிகத் திறமை வாய்ந்த அனுபவஸ்தர்களாக மதிப்பு மிக்கவர்களாகவே ரசிகர்களின் மனதில்  அவர்கள் இருந்திருக்கிறார்கள். பல்லாண்டு கால நாடக மேடை நடிப்பு அனுபவங்கள் அவர்களுக்குக் கை கொடுத்து உதவியிருக்கின்றன. ஒரு சிறு கதாபாத்திரமானாலும், ஓரிரு காட்சிகளேயாயினும், பெருமையோடும், சந்தோஷத்தோடும், அதை ஏற்று, நிறைவோடு செய்து தங்களை நிலை நிறுத்திக்  கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியில், இப்போ இவர் வருவாரு பாருங்க…என்ற அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனது இத்தனை ஆண்டு காலப் பழுத்த நாடக அனுபவத்திற்கு, இந்த மாதிரியான சின்னச் சின்ன வேஷமெல்லாம் ஏற்பதற்கில்லை, அது எனது கௌரவத்தைப் பெரிதும் பாதிக்கும் விஷயம் என்று யாரும் எப்போதும் ஒதுங்கியதேயில்லை. காரணம்  அவர்களின் நாடக மேடை அனுபவங்களில் பல பெரிய நடிகர்கள் வெவ்வேறு சமயங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று ஏற்று மேலே வந்திருப்பதும், தவிர்க்க முடியாத ஆள் பற்றாக் குறையும், அவசியமும் தோன்றிய நெருக்கடியான காலகட்டங்களில் ஒருவரே தன் நடிப்புத் திறமையைப் பகுத்துக் காட்டும் விதமாய், ஒரே நாடகத்தில், அடுத்தடுத்த காட்சிகளில், வெவ்வேறு கதாபாத்திரங்களில் சோபித்ததும் (பெண் வேடமிட்டு நடித்தது உட்பட) யாரும் எப்போதும் எதற்கும் தயாராய் இருக்க வேண்டும் என்கிற கடினமான பயிற்சியின் கீழ் தொழில் பக்தியின்பாலான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு  தங்களை மிகச் சிறந்த பழுத்த அனுபவசாலிகளாக எப்போதும், எந்நிலையிலும், நிலை நிறுத்திக் கொண்டதும்தான் நடிப்பை உயிர்மூச்சாகக் கொண்ட பலரின் நிகரில்லாத அடையாளங்கள்.
     மொத்தத் திரைப்படத்தின் உயிர்நாடியாக கதாநாயக, நாயகி நடிக நடிகையர்கள் மட்டும்தான் நினைவில் நின்றார்களா? தந்தையாகவும், தாயாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும், தங்கையாகவும், அத்தானாகவும், சித்தப்பனாகவும், பெரியப்பனாகவம், தாத்தாவாகவும், பாட்டியாகவும், திரைக்கதைக்கு ஏற்ற இன்னும் பல மாறுபட்ட வேடங்களிலும் இருந்த எவரும் சோபிக்கவில்லையா என்ன?   அவர்களையும், அவர்களின் மறக்க முடியாத நடிப்பினையும் மக்கள் ரசிக்காமலா இருந்தார்கள்? அவர்களுக்காகவே வந்து திரும்பப் பார்க்காமலா இருந்தார்கள்? அந்தந்தப் பாத்திரங்களைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவல்லவா கண்டார்கள்? தங்களின் சொந்தங்களாகவல்லவா கற்பனை செய்து கொண்டார்கள்? தங்கள் உறவுகளில் பலரிடம் அந்த நடிகர்களின் அடையாளங்களைக் கண்டு மகிழ்ந்தார்களே? அந்தப் பாத்திரங்கள் பேசிய வசனங்களை மனதில் நிறுத்திக் கொண்டு, அதன் பெருமைகளைத் தாங்களும் உணர்ந்து, வாழ்வில் அடிபெயர்த்துச் செல்லும்  ஒவ்வொரு கால கட்டங்களிலும் அந்த நல்லவைகளை நினைத்துப் பார்த்துப் பின்பற்றுபவர்களாகவல்லவா வாழ்ந்தார்கள்? ஒரு திரைப்படத்தின் ஒட்டு மொத்தக் கதா பாத்திரங்களின் நல்லவைகள் அனைத்தையும் மனதில் நிறுத்திக் கொண்டதனால்தானே மீண்டும் மீண்டும் வந்து வந்து பார்த்து ரசிக்கும், அதனை ஒப்புதல் செய்யும்  மனோபாவம் கொண்டார்கள்? மூத்த தலைமுறையினரின் இந்த வழி முறைகளை யாரேனும் மறுக்க முடியுமா?
     அப்படியான பங்களிப்பு நகைச்சுவைக் காட்சிகளுக்கும், நகைச்சுவை நடிகர்களுக்கும் தவிர்க்க முடியாத இருப்பாகவே இருந்ததுதானே. கிடைக்கும் எளிய சந்தர்ப்பங்களில் பார்வையாளர்களை, (இந்த இடத்தில் சினிமா ரசிகர்களை என்று சொல்வதே சாலப் பொருந்தும்) பலபடி சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களைச் சொல்லி, கேள்விகளை முன் வைத்து, உலக நிகழ்வுகளை, நடப்புக்களை நகைச்சுவையாய்ப் பகடி செய்யும் வித்தையைக் கற்றிருந்தார்கள்தானே…! தங்கள் உடல் மொழியினாலும், கொனஷ்டைகளினாலும், வெவ்வேறுவிதமான பாவங்களினாலும், சொந்தக் கற்பனை சார்ந்த வசனங்களினாலும், அவற்றைக் கொச்சையாகவும், நீட்டிச் சுருக்கிப் பேசும் ரசனையினாலும், அசட்டுப் பார்வை, அட்டகாசச் சிரிப்பு, கோணங்கித் தனத்தினாலும், விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள்தானே?      அப்பாடா…! என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு, கதையின் சோகத்திலிருந்து, அது எழுப்பிய மன பாரத்திலிருந்து, நெஞ்சத் தாக்கத்திலிருந்து  கொஞ்சம் மீள்வதற்காக அடுத்தடுத்த காட்சிகளில் இவர்களின் வருகையை ரசிகர்கள் எத்தனை உற்சாகமாய் எதிர்கொண்டார்கள்? அப்படி எத்தனையெத்தனை காமெடி நடிகர்களை இந்தத் தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கிறது? அப்படியான எல்லோரின் திறமைகளை, நம் இயக்குநர்கள் கூடியவரை (அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது) விடாமல் பயன்படுத்திக் கொண்டது எத்தனை முக்கியமான விஷயம்.
     காளி என்.ரத்தினம், ஃபிரன்ட் ராமசாமி,  கொட்டாப்புளி ஜெயராமன், சாய்ராம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காகா ராதாகிருஷ்ணன்,  டிஆர்.ராமச்சந்திரன், கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதி, புளிமூட்டை ராமசாமி, டி.எஸ்.துரைராஜ், சாரங்கபாணி, ராமாராவ், சந்திரபாபு, குலதெய்வம் ராஜகோபால், என்னத்தே கன்னையா, பாலையா, எம்.ஆர்..ராதா, வி.கே.ராமசாமி, நாகேஷ், சோ என்று அறுபதுகளின் இறுதிவரையிலான காலகட்ட நகைச்சுவை நடிகர்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? இதில் பலரும், குறிப்பாக பாலையா, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, நாகேஷ் போன்றவர்கள் ஆல்ரவுண்டர்களாக அல்லவா வலம் வந்தார்கள்.  
     இந்த நகைச்சுவை நடிகர்கள் நம் தமிழ்த் திரைப்படங்களில் நமக்கு அளித்த சந்தோஷங்கள்தான் எத்தனையெத்தனை? நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து, மகிழ்வித்த  காலங்கள்தான் எத்தனை? இவர்களின் கண்களும், காதுகளும், வாயும், மூக்கும், பல்லும், சிரிப்பும், கைகளும், கால்களும், நடையும் உடையும், எல்லாமும் நடித்து, நம்மை ரசிக்க வைத்து, விழுந்து விழுந்து சிரிக்க வைத்து எப்படியெல்லாம் நம்மைப் பரவசப்படுத்தியிருக்கின்றன.  அப்படிக் கிடைத்த சந்தோஷங்களில் ரசிகர்கள் தங்களின் சொந்தத் துயரங்களை, சோகங்களை கொஞ்சமேனும் மறந்தார்களே? இல்லையென மறுக்க முடியுமா?  வாழ்க்கையின் நெருக்கடிகளைத் தளர்த்திக் கொண்டார்களே…! கட்டுப்பாடுகளின் அடர்த்தியை நெகிழ்த்திக் கொண்டார்களே…! மனதை இலகுவாக்கிக் கொண்டு, உறவுகளோடு சகஜபாவம் கொண்டார்களே…! வாழ்க்கை என்பது எல்லாவிதமானதும்தான் என்கிற திரை வடிவங்களின் இதய நாதங்களை உள் வாங்கி, அவை தந்த தெளிர்ச்சியில், எதையும் யதார்த்தமாய் எதிர்கொள்ளும் மனோபாவங்களைப் போகிற போக்கில் அடைந்து, இருக்கும் காலங்களை எதற்காகக் கெடுபிடியாக்கிக்கொண்டு, நம்மையும், சுற்றத்தையும் பிணக்கிக் கொண்டு திரிய வேண்டும் என்கிற பக்குவ மனநிலையை வந்தடைந்தார்களே….இப்படியான பங்களிப்புக்கு  திரைப்படங்கள் செயல்படவேயில்லை, இதெல்லாம் நாமே கற்பனைத்துக் கொள்வது, வெறும் கதையாடல் இது என்று சற்றேனும் உண்மைதான் என்று இணங்கி வராமல் முற்றிலுமாக யாரேனும் மறுதலிக்க முடியுமா?
     தவிர்க்க இயலாத முக்கியத்துவம் வாய்ந்த  பங்களிப்பு என்பது நமது தமிழ்த் திரைப்படங்களின்  சிறந்த நகைச்சுவைக் காட்சிகள் என்கிற பரிமாணத்தின் வகைப்பாடுகள் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்திருக்கிறது என்பது உண்மைதானே…!
     ஆமாம்யா, ஆமாம்….ஒத்துக்கிறோம் …அதுக்கு இப்போ என்ன செய்யச் சொல்றீங்க? என்று ஓங்கிய குரல்கள் பலவும் காதுக்குள் வந்து ங்ங்ஙொய்ய்ய்ய்………. என்று ரீங்கரிக்கின்றனதான். காலம் போன போக்கில் நாமும் வேகமாய் புற வெளிகளுக்கு இழுக்கப்பட்டு, இவற்றையெல்லாம் மறந்துதான் போனோம். நம்மை ஆற்றிக் கொள்வதற்கு எதுவுமே துணையில்லாமல் போனதே என்று நொந்து கொள்ளும் நிலைக்கு ஆளாகினோம்.
     இன்று நகைச்சுவை என்பது அந்தளவில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம்தான் நம்முள்ளே ஜனிக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாய்க் கண்டு கொண்டிருப்பதே, பேசிக் கொண்டிருப்பதே, செய்து கொண்டிருப்பதே நகைச்சுவை என்பதாய்ப் படங்களில் ஏதோ சிறப்புப்போல் எடுத்துக்  காண்பிக்கப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. அதனால்தான் யோசித்து, யோசித்து, சரி போகட்டும், தொலைந்து போகிறது என்பதுபோல் கூட்டத்தோடு கூட்டமாய் சிரித்து வைக்கிறோம். எதற்காகச் சிரித்தோம் என்று சற்றே யோசித்துப் பார்த்தோமானால் அது புலப்படாமல் போய் ரகசியமாய் நிற்பதுவும், அப்படியே புலப்பட்டாலும் இதற்கா சிரித்துத் தொலைத்தோம் என்று நமக்கு நாமே வெட்கமுறுவதுபோல் சுயமாய் நாணிக் கொள்வதும் வழக்கமாய் போய்விட்டது.
     இருந்து சாதித்த நகைச்சுவை நடிகர்களையெல்லாம் பற்றிச் சொல்வதென்றால் அதற்கு ஒரு நீண்ட தொடர்தான் எழுதியாக வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் படத்துக்குப் படம் தங்கள் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருக்கிறார்கள். எங்களைத் தவிர்த்து விட்டு நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது என்று சவால் விட்டிருக்கிறார்கள். என்ன பெயருள்ள நடிகர்  என்பதாக ரசிகர்களின் மனதில் நின்றார்களோ அதே சுய உருவத்தில், வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு பெயர் கொண்ட கதாபாத்திரங்களில்  அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே மணமாய் சோபித்திருக்கிறார்கள்.
     இவர்களை, இவர்களின் திறமையை, உடல்மொழிகளை, வசனம் பேசும் தன்மையை, முகத்தில் சட்டுச் சட்டென்று மின்னல் வேகத்தில் பிரதிபலிக்கும் பாவங்களை, ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு உய்த்துணர்ந்த இயக்குநர்களை இங்கே பாராட்டாமல் இருக்கவே முடியாது.
     அப்படியான, திறமையான இயக்குநர்களால் தவறாமல், தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்பட்ட, ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர்தான் திரு ஏ.கருணாநிதி அவர்கள். அவரை, அவர் பெயரை நினைவு கூறும்போதே நமக்கு மனதில் வருவது அவரது கொனஷ்டை நிறைந்த பெருத்த முகம்தான். அந்த உப்பிய முகமும், அகன்ற கண்களும், சுருண்ட முடிகளும், விடைத்துப் பெருத்த மூக்கும், கோணிக் கோணித் திரும்பும் வாயும், அந்த ஜாலங்களுக்கேற்றாற்போல் அபிநயிக்கும் அவரது கைகளும் கால்களும்….தமிழ் சினிமா ரசிகனை எவ்வளவோ சந்தோஷப்படுத்தியிருக்கிறது.
     இங்கே இந்தளவுக்கு அவற்றைப் பகுத்துச் சொல்வதற்குக் காரணம், அதே பார்வையில், அதே ரசனையில்தான் பழம்பெரும் இயக்குநர்கள் அவரை ஆசையாய்த் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை வலியுறுத்தத்தான். ஒரு கதாபாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தம், இந்தக் கதையின், இந்தக் குறிப்பிட்ட நகைச்சுவைப் பாத்திரத்திற்கு இவரைப் போட்டால்தான் சோபிக்கும், தியேட்டர் கலகலக்கும்  என்று மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்த திறமையை நாம் எப்படி மறந்து விட முடியும்?
     ஒன்றிரண்டைச் சொல்லித்தான் பார்ப்போமே…பொருந்துகிறதா என்றுதான் பாருங்களேன்…சரியான தேர்வுதான் என்று நீங்கள் நிச்சயமாக அந்த இயக்குநரை நினைக்காமல் இருக்கவே முடியாது.
     தில்லானா மோகனாம்பாளில் ஒத்து ஊதுபவராக ஏ.கருணாநிதி வருவார். கட்டுக்குடுமியும், கைகளில் பட்டையாய்ப் பூசிய அரைத்த சந்தனமும், முகத்தின் இரு கன்னங்களிலும் அப்பிக் கொண்ட சந்தனக் கோடுகளும்,  நெற்றியில் பெரிய ஒரு ரூபாய் நாணயம் அளவுக்குப் பதித்த சந்தனக் குங்குமப் பொட்டும், காடாத்துணியிலான பனியன் போன்ற சட்டையும், கீழே கெண்டைக் காலுக்குக் கொஞ்சம் ஒரு பக்கம் ஏறியிருப்பது போன்று உயர்த்திக் கட்டிய வேட்டியுமாய் கையில் உறையிட்ட ஒத்து வாத்தியத்தோடு அவர் நிற்கும் காட்சியும், கச்சேரி நடக்கையில் துணியோடு போர்த்தி வாயில் அழுத்திய ஒத்து வாத்தியத்தோடு கன்னம் உப்பி அவர் வாசிக்கும் ரம்மியமும் அசல் ஒத்து வாத்தியக்காரன் தோற்றான் போங்கள்.இதென்ன பெரியஇதா? என்று தோன்றலாம். அப்படி நினைக்கையில் நீங்கள் உங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது வேறு நடிகர்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்…கருணாநிதிக்குக் கொஞ்சம் கீழேதான் என்று தோன்றவில்லையானால் கேளுங்கள்…!  அதென்ன சார், அந்த வேஷமிட்டவுடன் அப்படி அப்படியே இவர்களால் மறுஉருக் கொள்ள முடிகிறது? எங்கே வாங்கி வந்த வரம் இது? எந்த ஜென்மத்து ஆசையை இப்படிப் பூரணமாய் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்? என்ன தவம் செய்து இந்த அளவுக்கான ஒரு அர்ப்பணிப்பு இவர்களுக்குக் கை வந்தது?
     இத்தனைக்கும் பெருத்த வசதிகளற்ற, சுமாரான, மிதமான வாழ்க்கை வாழ்ந்த கலைஞர்கள்தான். ஆஉறா, ஓகோ, என்று சந்தோஷத்திலேயே மிதந்தவர்களும் அல்லவே…! பொருளாதாரத் தேக்க நிலையைக் கண்டவர்கள்தானே…! ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்தவர்கள்தானே…! எல்லா இக்கட்டுகளுக்கும் நடுவே எப்படி இவர்களால் இத்தனை தொழில் பக்தியோடு உண்மையாய் வாழ முடிகிறது? ஏற்றுக் கொண்ட தொழிலுக்கு நேர்மையாய் இருத்தல், சத்தியமாய் வாழ்தல் என்கிற ஸ்வரூபம் இத்தனை சக்தி வாய்ந்ததா?
     அதே தில்லானா மோகனாம்பாளில் சிவாஜியின் கச்சேரி கோஷ்டி ரயிலில் பயணம் செய்யும் காட்சி. எல்லோரும் கீழே அமர்ந்து, கச்சேரி முடித்த களைப்பில் கண்ணயர்வோம் என்று சோர்ந்திருக்க, மேலே அப்பர் பெர்த்தில் கருணாநிதி படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பார். கீழே இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இடையில் உறாங்ங்ங்ங்…..
ஊங்ங்ங்….ஓஓஓஓஓ……ஊஊஊஊஊ….மேஏஏஏஏஏஏஏஏஏ….என்று ராத்திரி வயிறு முட்டத் தின்ன அசதியிலும், கச்சேரி அலைச்சலூடான தாளமுடியாத உடல் சோர்விலும், காலையும், கையையும் உதைத்துக் கொண்டு வேகமாய்ப் புரண்டு சோம்பல் முறிப்பார். ஊளையிடுவதுபோலான அவர் குரலுக்கேயுரிய இயல்பான நடிப்பு அவ்வளவு அபாரமாய் இருக்கும். நான் இதைச் சொல்லும்போது, சற்றே கற்பனையை ஓடவிட்டு அந்தக் காட்சியை ஒரு முறை மனக்கண் முன்னால் கொண்டு வந்து பாருங்கள். நினைக்கும்போதே சிரிப்புப் பொத்துக் கொண்டு வரவில்லையானால் நீங்கள் எந்த ரசனைக்கும் லாயக்கற்றவர் என்றுதான் பொருள். உங்களிடம் ரசனை என்பது மருந்துக்குக் கூட இல்லை என்று சொல்வேன் நான். இத்தனை ஆழமான ரசனையை ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கிறானே என்று அந்த குணமுள்ளவர்கள் தங்களை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். அதுதான் உண்மை. இதை ஏன் இத்தனை வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் கருணாநிதியின் தனித்தன்மையை உணர்ந்த ரசிகனால்தான் இதை அனுபவித்து ரசிக்க முடியும் என்பதால்தான். பொத்தாம் பொதுவாக, கூட்டத்தோடு கூட்டமாகச் சிரித்து வைக்கும் சராசரி ரசிகனுக்கு இந்தத் தனித்துவமெல்லாம் புலப்படாது. இம்மாதிரி ஒவ்வொருவரையும் பகுத்து உணர்ந்திருந்ததனால்தான் அந்தக்கால இயக்குநர்களும் அவர்களுக்கேற்ற காட்சிகளை ரசித்துப் புகுத்தினார்கள். தங்களின் எதிர்பார்ப்புக்கும் மேலே செய்தபோது அகமகிழ்ந்தார்கள்.  
     படம் வந்த காலத்தில் கோஷ்டி கோஷ்டியாக வந்து அமர்ந்து கொண்டு, ஒருவரை ஒருவர் முதுகிலும் தொடையிலும் தட்டிக் கொண்டு சினிமா ரசிகர்கள் அமர்ந்தவாக்கில் எவ்வி எவ்விக் குதித்து நெளிந்து ரசித்த காட்சி இது. இதுபோல் இன்னும் பல காட்சிகள் உண்டு இப்படத்தில். உறை போட்ட மேளத்தை ஒரு பக்கமாய்த் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, இன்னொரு கையில் தன்னுடைய ஒத்து வாத்தியத்தோடு சற்றே முதுகு வளைத்து அவர் நடக்கும் காட்சியும், முன்னே நடிகர் திலகமும், பாலையா, சாரங்கபாணி செல்ல, இவர்கள் பின்தொடரும் காட்சிகள் அசல் நாகஸ்வரப் பார்ட்டி பிச்சை வாங்கணும் அத்தனை கனப் பொருத்தமாய் அமைந்திருக்கும் எல்லாருக்கும். வெறுமே கடுமையான உடல் அசதியில் புரளுவதான இந்தக் காட்சியில் பார்வையாளருக்கு இந்த அளவுக்கு ஒரு சிரிப்பை அள்ளிக் கொடுக்க  முடியுமா என்று யோசியுங்கள். இந்தக் காட்சிக்கு இதுவரை நீங்கள் சிரிக்காமல் இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை வீண். என்னடா இவன் மட்டையடியாய் அடிக்கிறானே என்றுகூட நீங்கள் நினைக்கலாம். அந்த அளவுக்கான புரிதலுடன் கூடிய ரசிகர்கள் இருந்த காலகட்டம் அது. அதை உணர்ந்து அனுபவப்பட்ட இயக்குநர்கள், தங்கள் திறமையை, ரசனையை, இந்தப் பிறவி நடிகர்களைக் கொண்டு பூர்த்தி செய்து கொண்டார்கள். அவர்களிடமிருந்த பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அவர்களும் மனமுவந்து அதற்கு உடன்பட்டார்கள்.
     சினிமா என்கிற கலைரூபத்தை எந்த அளவுக்குக் காட்சி ரூபமாய் மனதில் கணித்து வைத்திருந்தால் இப்படி ஒரு காட்சியை இங்கே வைக்க வேண்டும், அதுவும் கருணாநிதி மூலம்தான் இதைக் காட்சிப்படுத்தியாக வேண்டும் என்று அந்த இயக்குநருக்குத் தோன்றும்? திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள் கொத்தமங்கலம் சுப்புவின் நாவலைத் திரை வடிவமாக்கி, அணு அணுவாகச் செதுக்கி, சித்திரமாய் வடிவமைத்து, ஒரு கலை நயமிக்க, ஆழ்ந்த ரசனைக்குட்பட்ட முழுத் திரைப்படமாக்கி நமக்கு அள்ளி வழங்கிய தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை யாரேனும் அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா? அது வெளி வந்த காலத்தில் ஒரே ஒரு முறை மட்டும்தான் அதைப் பார்த்திருக்கிறேன்  என்று யாரேனும் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? குறைந்தது பத்துப் பன்னிரெண்டு முறையேனும் அதைப் பார்த்துப் பார்த்து  தன்னை மறந்து  ரசித்தவர்கள்தான் நம் தமிழ்நாட்டுத் திரைப்பட ரசிக சிகாமணிகள். காரணம் அந்தப் படத்தில் பாலையாவும், சாரங்கபாணியும், தங்கவேலுவும், டி.ஆர்.ராமச்சந்திரனும், சிவாஜியின் நாடக கோஷ்டியும், எல்லாவற்றிற்கும் தலையாயதாய் வைத்தி கதாபாத்திரத்தில் வெளுத்துக் கட்டிய நாகேஷ் அவர்களும், அவரவர் பாத்திரத்தில் எப்படி வாழ்ந்திருந்தார்கள்? யாரைத்தான்  ஒதுக்க முடியும், மறக்க முடியும்? ஏ.கருணாநிதியின் அந்த மிகச் சிறிய ஒத்து ஊதுபவன் கதாபாத்திரம் அத்தனை முக்கியமில்லையாயினும், கிடைத்த ஓரிரண்டு காட்சிகளில் தனது முத்திரையை அழுத்தமாய்ப் பதித்த அவரது நடிப்புத்திறனை நாம் எளிதாக மறந்து விட முடியுமா?
     சிறிய வயதில் தந்தையாகவும், பாட்டனாகவும், முதிர்ந்து கிழடுதட்டின வேடங்களையும், சர்வ சுலபமாய் இவர்கள் ஏற்றுக் கொண்டு ஜமாய்த்ததற்கு இவர்களின் நாடக அனுபவங்கள்தானே பெரிதும் கைகொடுத்திருக்கின்றன?
     இருவர் உள்ளம் படத்தில் சோடா சுப்பையாவாக வருவாரே, ஞாபகமிருக்கிறதா? சமீபத்தில் கூடக் கலைஞர் டி.வி.யில் இந்தப் படத்தை ஒளிபரப்பினார்கள்…! அட, ஓன் வீட்ல பொன்னா வெளைய….என்று காட்சிக்குள் வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டே நுழைந்து  சல்ல்ல்ல்……என்று சோடா பாட்டிலை உடைப்பார். எப்போதும் சோடா குடித்துக் கொண்டே சதா எதையாவது மொச்சு மொச்சென்று  வாயில் அரைத்துக் கொண்டேயிருக்கும்  தின்னிப் பண்டாரமாய்த் தோன்றுவார். இதுதான் இந்தப் படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்று சொன்னபோது, என்ன சார் இப்படிக் கேவலப்படுத்தறீங்க? என்றா சொன்னார்கள். அது ஒரு காரெக்டர். அப்படியும் ஒரு மனுஷன் எங்காவது இருக்கத்தானே செய்வான், அதை நான் செய்து காண்பிக்கிறேன் என்று களம் இறங்கினார்கள் பலர். தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
     எந்நேரமும், அரவமிஷின் மாதிரி எதையாவது அரைச்சுக்கிட்டேயிருக்க வேண்டிது…அது செமிக்கிறதுக்கு சோடாவக் குடிச்சிக்கிட்டேயிருக்க வேண்டிது… க்கும்….எல்லாம் என் தலையெழுத்து என்று ஐயா தெரியாதய்யா ராமாராவ் தலையிலடித்துக் கொள்வார். என்ன மாப்புள பெரிசா அலுத்துக்கிறே…இதுக்குத்தான் என் பொண்ணை உனக்கு ரெண்டாந்தாரமாக் கொடுத்தனா….என்று பதிலுக்கு கையில் சோடா புட்டியோடு இவர் எகிறுவார். ஆசையோடு மனைவியிடம் சென்ற ராமாராவ், செண்பகம், செண்பகம் என்று குழைவார். செண்பகத்துக்கு இப்ப என்ன வச்சிருக்கீங்க? என்று வெடுக்கென்று கழுத்தை ஒடித்துக் கொண்டு சிரிக்காதீங்க, போய்த் தூங்குங்க…என்று விலக்கி விடுவார்  அவர் மனைவி.
                தன் ஒருவனின் உழைப்பில் உட்கார்ந்து தின்றே கழிக்கும் தன் மனைவிக்கும், மாமனாருக்கும் சரியான  பாடம் புகட்ட வேண்டும் என்று, இரவல் வாங்கி வந்த வைர நெக்லஸ் தொலைந்து போய்விட்டதென்று பொய் சொல்லி, அந்தப் பழியைத் தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதி மேல் முகத்தோடு போர்வையைப் போட்டுக் கட்டிப் பிடித்து முதுகில் தொங்கி திருடன் திருடன் என்று கத்திக் குடியைக் கெடுத்து, அவரைக் கதறி அழவும், பயப்படவும் வைத்து, போலீசுக்குப் போக வேண்டிதான் என்று அலற  வைத்து, இந்தக் கடனத் தீர்க்க ஒரே வழி சொந்தமாத் தொழில் செய்றதுதான் என்று   மனைவியை அப்பளம் போடவும், கருணாநிதியை தேனீ வளர்க்கச்செய்து தேன் தயாரிக்கவுமான குடிசைத் தொழில் வேலையைச் சுமத்தி விடுவார் ராமாராவ். சேகரித்த தேனை வியாபாரத்துக்காகப் பாட்டில் பாட்டிலாய்ப் பெற்றுக் கொள்ளும் போது திருட்டுத் தனமாக ஒரு பாட்டிலை மறைத்திருப்பார் கருணாநிதி. விடாத தீனிப் பழக்கமுள்ள இந்த ஆள், நப்பாசையில், நிச்சயம் ஒன்றை மறைத்திருப்பான் என்கிற ஊகத்தில், மறைந்து நின்று பார்ப்பார் ராமாராவ். அவர் நினைத்ததுபோலவே ஆசையாய் கூட்டுக்குள் கை விட்டு தேன் நிரப்பிய மீதி ஒரு பாட்டிலை எடுத்துத் திறந்து, ரெண்டு விரலை உள்ளே விட்டு, கைநிறைய வழியும் தேனை எடுத்து வாய் நிறைய நக்குவார் கருணாநிதி. அப்படி அவர் ஆசையாய், திருட்டுத்தனமாய் எடுத்துத் தேனை நக்கும் அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டுமே….ஐயோ பாவம்தின்னா தின்னுட்டுப் போகட்டுமேஎன்று தோன்றும் நமக்கு. எம்புட்டு நப்பாசை இந்த மனுஷனுக்குவிடுங்கய்யாபோனாப் போகட்டும் என்று நம் மனசு பரிதாபப்படும்.  அத்தனை பரிதாபத்தையும், நமுட்டு ஆசையையும் மனதுக்குள் தேக்கி, அடக்கமுடியாத அந்த நப்பாசையை அவர் தீர்த்துக் கொள்ளும் அந்தக் காட்சியை லேசில் மறந்து விட முடியுமா நாம்…!
     அப்டியா சேதி…நா நினைச்சது சரியாப் போச்சு…இதோ வர்றேன்…என்று ஒரு கல்லைத் தூக்கிக் கரெக்டாக அந்தத் தேன் கூட்டை நோக்கி வீசுவார் ராமாராவ்.  கூடியிருந்த தேனீக்கள் அத்தனையும் சிதறிப் பறக்க ஆரம்பிக்க, தேனீக்கள் உடம்பை மொய்த்து, கருணாநிதியைக் கொட்டித் தீர்ப்பது போலான அந்தக் காட்சியில், கடி தாங்க முடியாமல் அவர் முன்னும், பின்னும், மேலும் கீழுமாக தத்தக்கா, பித்தக்கா என்று குதி குதியென்று குதித்து அலறிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்து தேனீக்கள் ஒன்று கூடிப் போர்க்களமாய்க் கடித்துக் குதறிவிட்ட வேதனையை முகத்தில் பரிதாபமாக வெளிப்படுத்துவார். உண்மையிலேயே தேனீக்கள் கொட்டியதுபோன்றதான அப்படி அவர் குதித்துத் துள்ளும் அந்த தத்ரூப நடிப்பை இன்று வேறு எவரையேனும் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்….நான் எழுதித் தருகிறேன்……
     கானகத்துல குரலெழுப்பிக் கதியக் கலக்காதடா…என்று போலீஸ் வேடத்தில் வந்து மன்னார்சாமியாகப் பட்டையைக் கிளப்புவார் கப்பலோட்டிய தமிழனில். மாடசாமியைப் பிடிக்கப் போன இடத்தில் ராவு நேரத்தில் சுடுகாட்டில் அவர் பயந்து நெளியும் காட்சிகள்… யாரும் எதுவும் பேசப்படாது…அம்புடுதேன்…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவுக அம்மாகிட்ட உட்கார்ந்து பேசிட்டிருந்தான் சார் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்…வர்றதுக்குள்ள தப்பிச்சிட்டான் சார்….இவுங்கள்லாம் பொய் சொல்றாங்க சார்…அம்புடுதேன்…என்று தடியைத் தரையில் தட்டிக் கொண்டு அவர் ஜபர்தஸ் செய்யும் காட்சிகளும், இடது கையில் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சட் பட் என்று சல்யூட் அடிக்கும் வேகமும், இயக்குநர்கள் தங்கள் நிலையை மறந்து விட்டு சிரித்து நின்ற காலங்கள் அவை.
     வீரபாண்டியக் கட்டபொம்மனில் பெண் வேடமிட்டு, சிவாஜியோடு மாட்டு வண்டி பூட்டிக் கிட்டுபாடல் காட்சியில் அவர் பின்னால் அமர்ந்து கொண்டு வாயில் வெற்றிலைக் குதப்பலோடு இவர் பண்ணும் சேட்டைகள்பின் திருடர்கள் எதிர்ப்பட, அவர்களோடு பொம்பளைக்கே உண்டான அஷ்ட கோணல்களோடு குலவிக் கொஞ்சி, நெளிந்து வளைந்து தடியால் அவர்களைப்  பதம் பார்க்கும் காட்சிகளும், உளவு பார்ப்பதற்காக யாரை அனுப்பலாம் என்று யோசிக்கும்போது…“ந்ந்நான் போகிறேன் அரசே…”என்று ஆர்வமாய் அவர் முன் வரும் காட்சியில் அவரின் நாட்டுப்பற்றுக் காட்சியும், கடமையுணர்ச்சியை வெளிப்படுத்தும் அந்த வசன உச்சரிப்புகளும், அதே வேகத்தில் கண்ணம்மா…கண்ணம்மா…என்று வீட்டுக்குள் புகுந்து மாவுப் பாத்திரத்தை உருட்டி,  உடம்பு முகமெல்லாம் மாவு பூசிக் கொண்டு பெண்டாட்டி முன் நிற்கும் பரிதாபமும், அதிலும் தனக்குக் கிடைத்திருக்கும் பொறுப்பான வேலையைப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளும் நடிப்பும் மறக்க முடியுமா இன்றும்…?
     ஏற்றுக் கொண்டவைகள் சின்னச் சின்ன வேடங்கள்தான் என்றாலும், அவற்றை மனமுவந்து செய்த விதமும், தன்னைத் தவிர வேறு யாரும் அந்தக் குறிப்பிட்ட வேடத்திற்குப் பொருந்தாது என்பது போன்றதான அழுத்தமான முத்திரையும், தன் நடிப்பிலேயே ரசிகன் நூறு சதவிகித திருப்தியை அடைந்து விட வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு உணர்வும் இந்தச் சினிமாத் தொழிலில் இப்படி எத்தனை அற்புதமான நடிகர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்கும் போது வியக்காமல் முடியாது. இத்தனைக்கும் ஏ.கருணாநிதி அவர்கள் அந்தக் காலத்தில் காளி என்.ரத்தினம், டி.எஸ்.துரைராஜ்,  வி.எம்.ஏழுமலை ஆகியோரோடு மாதச் சம்பளத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் வேலை பார்த்தவர் என்பதாக நாம் தகவல் அறிகிறோம். நடிகனாக வேண்டும் என்கிற அவாவும், வெறியும், அவர்களின் ரத்தத்தோடு ஊறிய ஒன்றாகப் பரிணமித்திருக்கிறது. அதற்காகவே பிறந்து, வாழ்ந்து, இருந்து, கழித்து உயிரை விட்டிருக்கிறார்கள் என்பதுதான் சத்தியம்.
     நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்றுக் கொண்ட இவர்கள் வேறு வேடங்களே செய்யவில்லையா என்ன? எதற்கும் தயார் என்கிற நிலையிலேதானே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தெய்வப்பிறவி படத்தின் அந்த சமையல்கார நாயர் வேடத்தை யாரேனும் மறக்க முடியுமா? கருணாநிதி எத்தனை சோகம் பிழிய அதற்கு வடிவம் கொடுத்திருப்பார்? அதீத சோகமும், வேதனையும், அமைதியும், தன்மையும் மிளிரும் காட்சிகளில் அவரின் விடைத்த மூக்கு அவருக்கு எத்தனை உதவியாய் இருந்து தக்க பாவங்களை அவருக்குப் பொருத்தமாய்  வழங்கியிருக்கிறது?
     பாலும் பழமும் படத்தில் சஞ்சீவி காரெக்டரில் பாலையாவோடு இருந்து, பின்பு எம்.ஆர்.ராதாவோடு  போய்ச் சேர்ந்து எத்தனை லூட்டி அடிப்பார். குரங்கு புத்தி போக்க தேவாங்கு ராக்கெட் லேகியம் தயாரிக்கிறேன் என்று சாய்ராமிடம் பணம் பிடுங்கிப் பிடுங்கி ஏமாற்றிப் பிழைப்பு ஒட்டும் எம்.ஆர்.ராதாவுக்கே மாமனார் வசிய லேகியத்தைக் கொடுத்து அவரை வழிக்குக் கொண்டு வருவாரே கருணாநிதி. அந்தக் காமெடி டிராக்கை யாரேனும் அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா? உறாலில் அமர்ந்திருக்கும் ராதாவுக்குத் தெரியாமல், அவருக்கு டிபன் எடுத்துவரச் செல்லும் கருணாநிதி ஒரு ஐடியா பண்ணுவார். இட்லியில் அந்த மாமனார் வசிய லேகியத்தை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பதமாய் அதில் தடவிக்கொண்டே, “மாமா, இனிமே நீ எனக்கு  ஆமா…”.என்று சொல்லிக் கொண்டே கழுத்தில் தொங்கும் வல்லவெட்டுத் துண்டு நுனியை அந்த லேகிய டப்பாவுக்குள் விட்டு, கொட கொடவென்று ஒரு சுழற்றுச் சுழற்றி ஒத்திக் கொண்டு, போதாக் குறைக்கு கையில் அங்கங்கே தீற்றியுள்ளதை உடம்பெல்லாம் தடவிக் கொண்டு, ஒரு நெளி நெளிந்து கொண்டே நயனமாய் வந்து ராதாவுக்கு அந்த லேகியத்தைப் பவ்யமாய் வழங்குவாரே. இந்த முழுக் காட்சியிலும் தியேட்டரில் என்னவொரு அதிரடிச் சிரிப்பு?   இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, உடனே கணப்போதில்  ஆளே மாறி கருணாநிதியை மாப்ளேய்ய்ய்ய்….என்று உரக்க சிநேகமாய் அழைத்து அசட்டுச் சிரிப்போடு  அப்படியே மண்டியிடுவார் ராதா. இந்தக் காட்சியை ரசிக்காதவர் உண்டா, குதித்துச் சிரிக்காதவர்தான் உண்டா? சாய்ராம் முழி முழி  என்று முழிக்க, அடே லேக்கா…போடாதே காக்கா…மாமா இனிமே எனக்கு அடிமை….பேசாதே…என்று விரலை நீட்டுவார் கருணாநிதி. ஏறக்குறைய குரங்கு போலவே ஒரு மேக்கப் செய்யப்பட்டிருக்கும் அவருக்கு. அத்தோடு அவர் பேசும் பேச்சுக்களும், இடையில் கையை மடித்து, மடித்து பக்கவாட்டு இடுப்பில் சரு சருவென்று அவர் சொறிந்து கொள்ளும்போது அசல் வானரம் போலவே இருக்கும். பார்ப்போர் அப்படி ரசிப்பார்கள். அர்த்தமில்லாததானாலும், பாலும் பழமும் படக் காமெடி காலத்திற்கும் மறக்காதது.
     எந்தப் படத்திலுமே, எந்த வேடத்திலுமே சோடை போனவரில்லை ஏ.கருணாநிதி. பார் மகளே பார் படத்தில் வேலைக்காரன் மாணிக்கமாக வருவார். விஜயகுமாரியும், புஷ்பலதாவும் நாட்டியம் ஆடுகையில் நட்டுவனாராக எம்.ஆர்..ராதா ஜதி சொல்லுவார். அவர்களோடு சேர்ந்து பின்னால் சற்றுத் தள்ளி நின்று கருணாநிதி பிடிக்கும் நாட்டிய பாவங்கள் இருக்கிறதே, படு காமெடியாக, அதே சமயம் சிரித்து ரசிக்கும்படியாக இருக்கும். நல்ல பாடலைக் கொண்ட இந்த நாட்டியக் காட்சியின் போது, இப்படி இவரை உள்ளே சேர்த்து ஆட விட வேண்டும் என்று எப்படி பீம்சிங் அவர்களுக்குத் தோன்றியது என்று வியந்து போகும் நமக்கு. அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இயக்குநர்கள் இவர்களின் திறமைகளை உணர்ந்து, காட்சிகளை வழங்கி, அதன் மூலம் அவர்களை ரசித்தார்கள், நம்மையும் ரசிக்க வைத்தார்கள் என்று. மதிப்புமிக்க இடத்தில்தான் வைத்திருந்தார்கள் என்பதற்கு இதற்கு மேல் என்ன அத்தாட்சி வேண்டும். சந்திரா, காந்தா என்ற இரு மகள்களில் சந்திரா (விஜயகுமாரி) காணாமல் போய்விட்ட வேதனையில் சிவாஜி அழுது துடிக்கும் அந்த சோகக் காட்சியில், “மாணிக்கம், சந்திரா ஃபோட்டோவ அன்னைக்குத் தூக்கி எறிஞ்சிடுன்னு  சொன்னேனே…எறிஞ்சிட்டியா? என்று வேதனையோடு சிவாஜி கேட்க, வேலைக்காரர் ஏ.கருணாநிதி, எஜமான், நீங்க சந்தோஷமாச் சொன்ன காரியத்ததான் நான் செய்திருக்கனே தவிர, கோபத்துல சொன்னது எதையும் இன்னைக்கு வரைக்கும் செய்ததுல்ல எஜமான்…” என்று அவரிடம் அழுது கொண்டே கூறும் காட்சி நம்மையெல்லாம் உலுக்கி  எடுத்து விடும்…நீங்கள் நன்றாக ஆழ்ந்து ரசிக்கக் கூடிய ரசனை உள்ளவராய் இருந்தால் ஒன்றை நீங்கள் துல்லியமாகக் கண்டு கொள்ள முடியும்.  நகைச்சுவை நடிகர்களோடு கூடிய பற்பல படங்களின் சோகக் காட்சிகள் கம்பீரமாகத் திரையில் மிளிர்ந்திருக்கின்றன என்பதுதான் அது. எந்த அளவுக்கு ரசிகர்களை சிரிப்பூட்டி மகிழ்விக்கிறார்களோ, அதே அளவுக்கும் மேலே பிழியப் பிழிய சோகத்தில் அழவும் வைத்திருக்கிறார்கள்.
     படித்தால் மட்டும் போதுமா படத்தில் ரங்காராவ் வீட்டு வேலைக்காரனாகத் தோன்றுவார். அவருடைய படத்திலெல்லாம் ஏ.கருணாநிதியைப் பெரும்பாலும் தவற விட்டதேயில்லை டைரக்டர் பீம்சிங் அவர்கள். அந்த அளவுக்கு அவரின் நடிப்பின் மீதும், அவரின் நகைச்சுவை விருந்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த இயக்குநர்கள் ஏராளம். மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் இவரும் நாகேசும் படம் முழுக்க அடிக்கும் கூத்தும் கும்மாளமும் மறக்க முடியுமா என்ன?
     ஆனால் இந்த இயக்குநர்களுக்குப் பிறகு காலம் அவர்களைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டதா? என்ற கேள்வி விழுகிறது நம்மிடையே. இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது.
     மாமியா ஓட்டல் என்கிற பெயரில் சென்னையில் உணவகம் நடத்தி வந்த ஏ. கருணாநிதி கடைசி காலத்தில் எலும்புறுக்கி நோயால் மரணமடைந்தார் என்பதாகத்தான் செய்தி தெரிய வருகிறது நமக்கு.
     காலப்போக்கில் இம்மாதிரி எத்தனையோ அற்புதமான நகைச்சுவை நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி, நம் தமிழ்த் திரையுலகம் மறந்துபோனது. காலம் அவர்களைப் பின்னுக்குத் தள்ளியதா, அல்லது தள்ளப்பட்டார்களா என்று நினைத்து வேதனை கொள்கிறது மனம். ஆனால் மூத்த தலைமுறை ரசிகர்கள் மனதில் அவர்கள் இன்றும் அழியாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஆழ்ந்த அர்த்தமுள்ள ரசனையை தங்களின் இளவல்களோடு, வாரிசுகளோடு பகிர்ந்து கொண்டு புரிந்து கொள்ள வைக்க யத்தனிக்கிறார்கள். அடிப்படையான, அர்த்தமுள்ள அந்த ரசனையை ஆழமாக வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். ஆனாலும் இன்றைய இளைய தலைமுறையின் சினிமா ரசனை என்பது புரிந்து கொள்ள முடியாத கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
                   
                                     


16 பிப்ரவரி 2014

“விடுதலை”-சிறுகதை-தினமணிகதிர் (16.02.2014) ல் வெளிவந்தது.

16kdr3

ந்தச் சத்தம் மீண்டும் இவனைச் சங்கடப் படுத்தியது. பெரும்பாலும் நினைவிலேயே இருந்து கொண்டிருக்கும் விஷயம். அனுதினமும் கண்கொண்டு பார்க்கும் விஷயம். மனதை இன்றுவரை விடாமல் தொந்தரவு செய்யும் விஷயம். வாழ்க்கையில் சிலவற்றை அப்படிச் சட்டென ஒதுக்கிவிட முடிவதில்லை. அலுவலகப் பயணம் முடித்து அப்பொழுதுதான் திரும்பியிருந்தான். வீட்டுக்கு வந்தவுடனேயே வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது.

இப்டிப் படிலெல்லாம் அசிங்கப்படுத்தி வச்சா என்ன செய்றது? உங்க அப்பாவக் கொண்டு ரோட்டுல விடுங்கோ….என்னால கூட்டி அள்ள முடியாது தோட்டி மாதிரி….வீட்டுக்குள்ளயேன்னு எல்லாமும் ஆயிப்போச்சு….

கக்கூஸ்ல விடுங்கோன்னு சொல்லு…ரோட்டுல விடுங்கிறியே? அப்டியா பேசுறது? அடக்க முடியாமப் “போயிருப்பார், பாவம்…

அதுக்காக? போய் முடியட்டும்னு பார்த்துண்டிருக்கச் சொல்றேளா? இங்க வச்சு ஏன் அசிங்கம் பண்றார்….ஒரேயடியா அங்க போய் இருக்க வேண்டிதானே….

அடக்க முடியாம வந்திருக்கும்டி…அதுக்கு அவர் என்ன பண்ணுவார்….தெரிஞ்சு செய்வாரா? முடிஞ்சாத்தான் நகர்ந்திடுவாரே…?

முடிலன்னா? இருக்கிற எடத்துலயேவா? வாய் திறந்து சொல்ல மாட்டாளோ?

நாந்தான் சொல்றேனே…வர்றதே தெரியாமப் போயிடும்டி. அதெல்லாம் நமக்கும் வயசானாத்தான் தெரியும்…முதுமை எல்லாருக்கும் பொது. அத மனசுல வச்சிக்கோ…

அப்ப நீங்க அள்ளிப் போடுங்கோ….

தினமும் நாந்தானே போட்டுண்டிருக்கேன். உன்னைச் சொல்ல முடியுமா? என்னவோ புதுசாச் சொல்றே? நீ எங்களுக்குப் பிண்டம் பண்ணிப் போடறதே பெரிசு…இதுல இத வேறே நான் சொல்லிட்டாலும்…..

இதற்கு என்ன பதில் வந்தது என்று காதைக் கூர் தீட்டிக் கொண்டான் ரமணன். எந்தச் சத்தமும் இல்லை. எதற்கும் ஒரு எல்லை உண்டுதானே…? இன்று காலைக் காட்சி அவ்வளவுதான் போலும்…ஆனாலும் வெறும் பொழுதுபோக்கு அல்ல இது…வேதனையான சமாச்சாரம்.

தினமும் இம்மாதிரி அந்தப் பெரியவரை முன் வைத்து எழும் வாய்ச் சண்டைகள். கை ஓங்குதல் என்பது இல்லை. அது அநாகரீகம் என்கிற உணர்வு இருக்கும் குடும்பம். மனிதப் பிரயத்தனங்கள் சோர்வுறும் போது எழும் புகைச்சல்கள். வெட்டிப் பேச்சுக்கள்.

வாசல் பக்கம் போய்ப் பார்க்க மனம் பரபரத்தது.

காபியைக் குடிச்சிட்டுப் போங்கோ…அதுக்குள்ளே அங்க என்ன அவசரம்? என்றவாறே வந்தாள் சுமதி. கொடுப்பதிலும் ஒரு அதிகாரம். உரிமை. வீட்டு வேலைகள் முழுமையாக அவர்கள் கையில் இருக்கும்போது, இந்த எடுப்பு கூட இல்லாமல் இருந்தால் எப்படி?

காபியை வாங்கிக் கொண்டு திண்ணையை நோக்கி நகர்ந்தேன். நமக்கு நம் அனுபவங்களை விட அடுத்தவன் பாடுகளைப் பார்ப்பதில் ஸ்வாரஸ்யம் அதிகம். ஒன்றுமில்லாததற்கெல்லாம் ரோட்டில் கூட்டம் கூடுவதைப் பார்த்ததில்லையா? மனித இயற்கையே இப்படித்தானோ? எதிர் வீட்டில் நடப்பவற்றை அத்தனை சுலபமாய்த் தவிர்த்து விட முடியுமா? வேண்டாம் என்றாலும், காதிலும், பார்வையிலும் வந்தும், பட்டும் தொலைக்கத்தானே செய்கிறது. ஆனால் ஒன்று. இது அப்படித் தொலைக்கும் விஷயமல்ல. மனசு இரங்கும் விஷயம். ஏதாவது செய்யணுமே…..! மனசு அரிக்கத்தான் செய்கிறது.

சற்றே இடப் பக்கமாக எதிரே திரும்பும் தெருவின் உயரமான அந்தக் காங்க்ரீட் பாலத்தின் நட்ட நடுவில் குத்திட்டு உட்கார்ந்திருந்தார் அந்தப் பெரியவர். தொண்ணூறு தொட்டிருப்பார், நிச்சயம். வேட்டியைச் சரியாக இழுத்துவிட்டுக் கொள்ளவில்லை. கீழ்ப்பகுதி உறுப்பு தொங்கிய நோக்கில் தரையில் இடித்துக் கொண்டிருந்தது. வாயிலிருந்து எச்சிலும், கோழையுமாக இழையாய் வழிந்து கொண்டிருந்தது. மார்புக் கூடு இழுபட்டுக் கொண்டிருந்தது. கலங்கி மங்கிப் போன கண்கள். அதற்குள் அங்கே எப்படி வந்தார்? பக்கத்து ஃப்ளாட்டின் மாடியை நோக்கினேன். ஃபஸ்ட் ஃப்ளோர்தானே அவர் வீடு? பையனே தூக்கிக் கொண்டு வந்து விட்டிருப்பானோ? கத்திக் குடியைக் கெடுப்பாரே…மனுஷன்… முடியாதே…மாடிப் படியில் வெளிக்கிருந்த ஆளுக்கு அலம்பி விட்டார்களா? இல்லை அப்படியே கொண்டு வந்து போட்டு விட்டார்களா? அவரே நகர்ந்து நகர்ந்து வந்து சேர்ந்து விட்டாரோ?

அன்றொரு நாள் வெளி வராண்டாவில் இருக்கும் குழாயைத் திருகி, தன்னைத் திருப்பிக்கொண்டு, கை விட்டு அவர் அலம்பிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து மாடிப் பெண்மணிகள் அங்கே வர, என்ன ஒரு அமர்க்களம்?

அநாச்சாரம்…அநாச்சாரம்….எப்டித்தான் இங்க குடியிருக்கிறதோ தெரில…என்ன கண்றாவி இது?

கொஞ்ச நேரத்தில் வாளியில் தண்ணீரைப் பிடித்து, பெருக்குமாரைக் கொண்டு அவர் பையன் கூட்டிச் சுத்தம் செய்வதைப் பார்த்தேன்.

வெறுமே அலம்பினாப் போறாது…குழந்தைகள் வெளையாடுற எடம்.. டெட்டால் விட்டுக் கழுவி சுத்தம் பண்ணுங்க… இன்ஃபெக் ஷன் ஆயிடும்...அந்த வெராண்டா மொத்தத்தையும், சொன்ன இடம், சொல்லாத இடம் என்று க்ளீன் பண்ணினார் அவர் பையன். அருமை, அருமை என்றிருந்தது. இது என் ட்யூட்டி. அதனால செய்றேன் என்ற மனப்பூர்வமான அர்ப்பணிப்பு.

உங்க ஒருத்தருக்காக நாங்க அத்தனை பேரும் இந்த ஃப்ளாட்டைக் காலி பண்ணிட்டு ஓட வேண்டிதான் போலிருக்கு….வாடகைக்குன்னாலும், இந்த விஷயம் தெரிஞ்சா எவனும் வரமாட்டான்….காசையும் கொடுத்திட்டு, கஷ்டத்தையும் ஏன் வாங்கிக்கணும்னு…? எதாவது சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க சார்…இல்லன்னா அடுத்த மீட்டிங்ல நாங்க ஒரு முடிவு எடுக்க வேண்டிர்க்கும்…பிறகு நீங்க வருத்தப்பட்டுப் புண்ணியமில்லை…

சொல்பவர்கள் எல்லாருடைய பேச்சையும் தலையைக் குனிந்து வாங்கிக் கொள்வார் கணபதி. ஒரு வார்த்தை பதில் பேச மாட்டார். ஒரு வேளை அவர் அப்படி மௌனியாய் இருந்து கழிப்பதே அவர்களுக்கு இவர் மேல் ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கலாம். பச்சாதாபமாய் உணரலாம். சொன்னார்களே ஒழிய இன்றுவரை ஒன்றும் செய்யவில்லை. அதுவே பெரிய மனித நேயம்தான். அந்தப் பாபம் நமக்கெதுக்கு என்று கூட….. பூனைக்கு யாராவது மணி கட்டட்டும் என்றும் இருக்கலாம். சொந்த வீட்டில் குடியிருக்கும் கணபதி சாரின் பாடு இப்படி. தனி வீடாய் இருந்தால் யார் கேட்கப் போகிறார்கள். மனதில் பரிதாபப்படுவார்கள். அத்தோடு சரி.

வீட்டுக்கு வீடு வாசல்படி. இப்போ எங்கே தனி வீடு? அசோசியேஷன் கூட்டங்கள் வழக்கம்போல் நடந்து கொண்டுதான் இருந்தன. கூட்டம் நடக்கும் அன்று கரெக்டாக ஆப்ஸென்ட் ஆகி விடுவார் கணபதி. அன்று பார்த்து நிச்சயம் லேட்டாகத்தான் வீடு வந்து சேருவார். அதற்கு முதல் நாளும் அப்படி ஆக்கிக் கொள்வார். இதற்கென்று லேட்டாய் வருவதாய் யாரும் சந்தேகப்பட்டு விடக் கூடாதே. இயல்பாய்த் தெரிய வேண்டுமே…! போய் உட்கார்ந்தால் நிச்சயம் பிரச்னை வெடிக்கும். ஆதரவாய் யாரும் பேச மாட்டார்கள். மனமிருந்தாலும் மார்க்கமிருக்காது. செக்ரட்ரி பஞ்சாபகேசன்தான் சற்றுக் கெடுபிடி. என்னவோவொரு விதத்தில் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது விஷயம். அவ்வளவுதான். ஏதாச்சும் செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் நாறிப் போகும். ஏற்கனவே நாறிக்கொண்டுதானே இருக்கிறது. தவியாய்த் தவித்தார் கணபதி. ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. மனசு கேட்டால்தானே…!

அவர் ஒய்ஃப்கிட்டயே என்ன வாங்கு வாங்குறார் தெரியுமா? பிள்ளப்பூச்சிய்யா… பாவப்பட்ட மனுஷன்….அப்பாவி….அது தெரிஞ்சிதான் அந்தாளும் அவரை இந்தப் பாடு படுத்துறார் போலிருக்கு….நல்லாச் சொல்றதுன்னா அப்பன் புள்ள பாசம் ரெண்டு பேருக்கும் ரொம்ப ஜாஸ்தி….ஆனா அது வெளில தெரியாது….அவ்வளவுதான்…எங்கப்பாவும் இப்டித்தான் இருந்தார். ஆனா அவுருக்கு கெத்து ஜாஸ்தி. இவ்வளவு நகர முடியாமப் போகாட்டாலும், தேய்ச்சு தேய்ச்சு நகர்ந்து டாய்லெட்டுக்குப் போயிடுவார். ரொம்பக் கூச்சம். ஏதோ ஜந்து மாதிரி இருக்கிறதா ஃபீல் பண்ணிட்டார்…அவரே ஃபோன் பண்ணி ஆட்களை வரவழைச்சு வேனைக் கொண்டு வரச் சொல்லி, தன் ஜாமான்களையெல்லாம் தானே எடுத்து வச்சிண்டு, தயாரா நின்னு கிளம்பிப் போயிட்டார். பக்கத்து ஆத்துலகூட யார்கிட்டயும் சொல்லலை…வீட்டைப் பூட்டி வெளில செக்யூரிட்டிகிட்டக் கொடுத்திட்டு, வந்தாச் சொல்லுன்னு ரெண்டே வார்த்தை… …அவர் ஒரு தனி காரெக்டர்…ராத்திரி அவரே ஃபோன் பண்றார்…இப்படியாக இங்க வந்து செட்டிலாயிட்டேன்னு….எல்லாருக்கும் அப்டி அமையுமா? இல்ல எல்லாருந்தான் அப்டி இருப்பாளா? அப்டி ஒருத்தர்னா இப்டி நாலு பேர்…என்ன பண்றது கஷ்டந்தான்….காசும், பணமும் தவழ்ற எடத்துல ஒரு மாதிரி, அது இல்லாத எடத்துல வேறேமாதிரி….தட்டுப்பாடா இருக்கிற எடத்துல இன்னொரு மாதிரி…ஆனா எல்லா எடத்துலயும் மனசுன்னு ஒண்ணு இருக்கே….அதுதான் மனுஷாளக் காப்பாத்துறதும், பொரட்டிப் போடுறதும்….அந்த மனசு மட்டும் எல்லாத்தையும் சகிச்சிண்டுதுன்னு வச்சிக்குங்கோ…அப்புறம் எதுவும் முன்னால நிக்க முடியாது…

போன மீட்டிங் நடந்த சமயம், முடிந்திருக்கும் என்ற நினைப்பில் சற்றுச் சீக்கிரம் வந்துவிட்டார் கணபதி. பைய இவர் வீட்டுக்குள் பூனையாய் நுழைந்து, சார்…என்றுகொண்டே உள்ளே வந்தவரை எப்படி வாயிலிலேயே நிறுத்துவது? இதற்குத்தான் என்று அவர் நோக்குப் புரியும்தான். வந்தவருக்குப் பேச ஒன்றும் இல்லாததே சொன்னது ஒளிந்து கொள்ளத்தான் என்று. காபியைக் கொண்டு வந்து நீட்ட,

ஆஉறா…அருமை…அற்புதம்….உங்காத்துக் காபியோட மஉறிமையே தனி…என்று புளகாங்கிதம் அடைந்தார். அரை மணியாவது போக்க வேண்டுமே…!

நாங்க பாலுக்குத் தண்ணியே விடறதில்லை மாமா என்றாள் என் பாரியாள்.

இப்போ அதை அவர் கேட்டாரா…? எதுக்கு இந்த வெட்டிப் பெருமை? என்றேன் நான்.

இருக்கட்டும் சார்…பொம்மனாட்டிகள்னா அப்படித்தான்…எங்காத்துலயும் ஒண்ணு இருக்கே….தலைல கொம்பு முளைக்காத குறைதான் ….தெனமும் தாடகை வதம்னா நடந்துண்டிருக்கு…அவ மத்தவாள துவம்சம் பண்ணின்டிருக்கா…அதச் சொல்றேன்….

எல்லா வீட்லயும் உள்ளதுதானே… என்றேன் நான் யதார்த்தமாக.

அப்டிச் சொல்லாதீங்கோ…எங்காத்துக்காரி இருக்காளே…அவளோட கீர்த்தி சொல்லி மாளாது. பிராப்தம், அனுபவிச்சிண்டிருக்கேன் நான். அவ்வளவுதான்…எங்கப்பாவைக் கரை சேர்க்கணும்…அதுக்காகப் பல்லைக் கடிச்சிண்டிருக்கேன்….பகவான் என்னைக்குக் கருணை வைக்கிறாரோ அன்னைக்குத்தான்….

ஆனாலும் உங்களுக்குப் பொறுமையும், பொறுப்புணர்வும் ஜாஸ்தி…என்னாலெல்லாம் இந்த அளவு இருக்க முடியாது….

வேறென்ன மாமா பண்ணச் சொல்றேள்….அவளை ஆத்த விட்டு வெரட்ட முடியுமா? எங்கப்பாதானே பண்ணி வச்சார்…சொந்தத்துல வேண்டாம் வேண்டாம்னு கதறினேன். காதுலயே வாங்கலையே…இன்னைக்கு அவரும் சேர்ந்து அனுபவிக்கிறார். காலத்துல விலைபோகாத தனக்கு வாழ்வு கொடுத்த தெய்வம்ங்கிற,தெய்வமென்ன மனுஷன்ங்கிற நெனப்பு வேண்டாம்? ஆனாலும் அவ பேசற பேச்சுக்களும், சொல்ற வார்த்தைகளும் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. பொறுத்துண்டிருக்கோம் ரெண்டு பேரும். அவ பொங்கிப் போடுறதைத்தானே அன்றாடம் கொட்டிக்க வேண்டிர்க்கு…ஒரு துளி விஷம் வச்சுக் கொடுத்துருடி…ரெண்டு பேரும் போய்ச் சேர்ந்திடுறோம்னு எத்தனையோதரம் சொல்லியாச்சு…அதுக்கும் வேளை வரும், செய்றேங்கிறா….என்ன திமிருங்கறேள்… அந்த நாக்குல நர்த்தனம் ஆடுற வார்த்தைகளப் பார்த்தேள்னா….பக்கத்து வீடெல்லாம் பொத்திண்டு சிரிக்கிறா…

கொட்டித் தீர்த்த திருப்தி அவருக்கு. மேலும் புலம்பிக் கொண்டேதான் போய்ச் சேர்ந்தார் அன்று.

உண்மையில் சொல்லப்போனால் நான் அங்கு குடி போயிருக்க வேண்டிய ஆள்தான். தற்போதைய இந்த வீட்டைக் கட்டும் முன்பு, ரெடியாகிவிட்ட அந்த ஃப்ளாட்டில்தான் முதலில் ஒரு இடம் வாங்க எண்ணினேன். அப்போது அது வெறும் ஏழு லட்சம்தான். இன்றைய அதன் மதிப்பு நாற்பது, ஐம்பது தேறும். எதிரே குடியிருந்தமேனிக்கு இங்கே கட்டட வேலைகளைக் கவனிக்கலாம் என்பது என் எண்ணம். எண்ணமெல்லாம் மணமாய்த்தான் இருந்தது. யாரிடம் இருக்கு ஐவேஜூ? வெளி லோனும், அரசுக் கடனும் வாங்கி ரெண்டையும் சமாளிக்க முடியாது என்று விட்டாயிற்று.

முதல் தளத்தில் ஒரு வீட்டை நான் வாங்கியிருந்தேனென்றால், இன்று நான் இங்குதான் குடியிருப்பேன் என்றாலும், கொஞ்ச காலத்திற்கேனும் கணபதி சாரின் அவஸ்தைகளை அன்றாடம் நானும் அனுபவித்திருப்பேனே…! குறைந்த பட்சம் பார்த்துப் பார்த்தேனும் மனம் புழுங்கியிருக்க மாட்டேனா? என்னவெல்லாம் சண்டை வந்திருக்குமோ? எப்படியெல்லாம் மனஸ்தாபம் கொண்டிருப்போமோ?,

திரே அவர் இருமும் சத்தம். உடம்பே நடுங்கிக் குலுங்க, அடைத்திருந்த கபம் வெளிறிப் பாய, மூக்கிலும், வாயிலுமாகச் சளி பீறிட்டுத் தெறித்தது. எல்லாச் சத்தத்தோடும் டர்ர்ர்….டர்ர்ர்ர்…டர்ர்ர்ர்…. என்று முக்கி இரும இருமக் கூடவே வரும் அடக்க முடியாத அபான வாயுவும் கிறீச்சிட்டு வெளியேறிக் கொண்டிருக்க, அந்தப் பகுதியே அலறித் தவித்துக் கொண்டிருந்தது.. அந்தந்தப் பக்கத்து வீடுகளின் ஜன்னல்களில் சுளிக்கும் முகங்கள். பட் பட் என்று அடைக்கப்படும் ஜன்னல்கள். பரிதாபப்படுவோரே ஏனிப்படிக் குறைந்து போனார்கள்?

இன்னும் கொஞ்சம் போனால் ஆட்டோவும், டூ வீலர்களும், மினி வேன்களும் அமர்க்களப்படும். இருக்கும் அவசரத்தில், களேபரத்தில், யாருய்யா இது சாவுக் கிராக்கி….என்று பதவாகமாய் வந்து, ஆளைத் தூக்கி மூலையிலா உட்கார்த்தப் போகிறார்கள்? ஒரே இடி….ஆள் சட்னிதான்….அந்த அளவுக்கான காலை நேர வேகமும், பரபரப்பும்தான்….காலை மட்டுமென்ன, எந்நேரமும் அங்கே அப்படித்தான். சந்து, பொந்து எங்கிருந்தும் வாகனங்கள் உதிக்கலாம்.

எல்லாக் காலங்களிலும் ரோடு போட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அல்லது போட்ட ரோடைப் பிளந்துகட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதாவது ஒன்று என்று சொல்லி அங்கங்கே தோண்டிப் போட்டு, மேடும் பள்ளமுமாக….யாராவது தவறி விழுந்து செத்தால் ஒழிய விடிவு பிறப்பதில்லை. அப்படிப்பட்ட இடத்தில் இந்த மனுஷன் இத்தனை அசால்ட்டாய் உட்கார்ந்திருக்கிறாரே…! நடு ரோடு என்பது தெரியவில்லையா என்ன? அல்லது எவனாவது இடிச்சித் தள்ளட்டும், செத்து ஒழிவோம் என்று வெறுத்து விட்டாரா?

மாமா…மாமா…கொஞ்சம் ஓரமாய் உட்கார்ந்துக்கோங்க…நான் இங்கிருந்து ஆதங்கமாய்க் கத்திய வேளைகளில், ஒரு கூரிய பார்வை…

பொத்திட்டுக் கெடடா… என்கிறாரோ?

உட்கார்த்திய இடத்திலிருந்து அவரால் நகரக் கூட முடியாது என்று தெரிகையில் எப்படி இதைச் சொல்கிறோம்…? அப்படியானால் உட்கார்த்தியவர்கள் நடு ரோட்டிலா கொண்டு வந்து போட்டார்கள்? கணபதியா அப்படி வந்து போட்டிருப்பார்? யார் செய்தது இதை…?

ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒதுக்கிக் கொண்டு போனார்கள் வண்டியை. சிலர் சடனாக ரூட்டை மாற்றிக் கொண்டார்கள். மூசு மூசுவென்று இழுத்துக் கொண்டிருந்தது அவருக்கு. அந்த ஜீவன் படும்பாடு சொல்லி மாளாது.

டேய்…என்னை விடுறா…என்னை விடுறா….நானாப் போய்ப்பேண்டா…. தூக்கி வெளில வீசறியா? நீ உருப்படாமப் போயிடுவ…வௌங்க மாட்டே….

பேசாம இருங்கோப்பா….காலம்பற நேரம்…எல்லா வீட்லயும் வேலை நடக்கணும்…எல்லாரும் ஆபீஸ் போகணும்…உங்க சத்தமும், நீங்க பண்ற அசிங்கமும் பெரிய ரோதனையாப் போச்சு….சகிக்கமுடில… பத்து பத்தரை வரைக்கும் இப்டி வெளில இருங்கோ…ஒண்ணும் குறைஞ்சு போயிடாது…மாடிப்படில ஒண்ணுக்குப் போயி வச்சிருக்கேள். அது வழிஞ்சி நடக்கிற எடமெல்லாம் ஓடறது…நார்றது…மேலே ரெண்டு மாடி இருக்கு…எத்தனை பேர் கடந்து போக வர இருக்கா? எதாச்சும் நினைச்சுப் பார்த்தேளா? ஒரு சத்தம் கொடுக்க மாட்டேளா? இப்டியா பண்ணுவேள்? எத்தனைவாட்டிதான் அலம்பித் துடைச்சு விடுவேன். நானும் ஆபீஸ் போக வேண்டாமா? இதப் பண்ணின்டிருந்தா போதுமா? உங்களோட பாடாப்பட்டு, வரவர எனக்கும் உடம்புல திராணியே இல்லாமப் போயிடுத்து…. ரொம்பக் கஷ்டப்படுத்தறேள்ப்பா….

கணபதி சாரின் பேச்சு என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தியது. இத்தனை செய்யும் மனிதனுக்கு. ரெண்டு வார்த்தை சொல்லிச் சலித்துக் கொள்ளக் கூட உரிமையில்லையா என்ன?

வெளில கொண்டு தள்றயா என்னை…? நாம்பாட்டுக்கு ஒரு ஓரமாக் கெடக்கேன்…உன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுண்டு என்னை ரோட்டுக்கு உருட்டி விடுறியா? நாசமாப் போறவனே…நீ ஆயுசுக்கும் நன்னாயிருக்கமாட்டே…

சரி, நன்னாயில்லாட்டாப் போறேன்…உங்க ஆசீர்வாதம்…இப்ப இங்க இருங்கோ நீங்க….

…கழிச்சல்ல போறவனே….சொல்லச் சொல்ல அம்புட்டு அலட்சியமாடா ஒனக்கு…..நா ஒருநாளைக்கு சாக்கடைக்குள்ள கெடக்கப் போறேன்டா…என்னை அள்ளித் தூக்கிப் போட்டுரு…செய்வையோல்லியோ…அந்தப் பாவம் பூரா ஒன்னையே சேரும்….சாபமிடறேன்…..உங்கம்மா இல்லாமப் போயிட்டா….பாவி, என்னை ஒத்தைல தவிக்க விட்டிட்டுக் கம்பி நீட்டிட்டா…அவ இருந்தா நா ராஜாடா…உன்னை இந்த வீட்டுக்குள்ள நுழைய விட்டிருப்பேனா….போடா நாயே…எங்கயாச்சும் போய்க் கெட….இது என் வீடுன்னு கெடந்திருப்பேன்…..எல்லாம் போச்சு…எல்லாம் போச்சு….

ஆம்மா…அம்மாவ விரட்டி விரட்டிப் பரத்தினது போதாதா? என்ன சந்தோஷப்பட்டா அவ….காலம் பூராவும் உங்களுக்குப் பீ மூத்திரம் எடுத்ததுதான் மிச்சம்…. மனசுக்குள்ள அழுதது உங்களுக்குத் தெரியுமா? ஆதங்கப்பட்டது அறிவேளா? அம்மா புண்ணியவதி, அதத் தெரிஞ்சிக்குங்கோ….இத்தனை முடியாம இருக்கறச்சே, இவ்வளவு பேசறேளே…இது நன்னாயிருக்கா…? பக்கத்துல எல்லாராத்துலயும் கேட்டுண்டிருக்கா…

குலுங்கிக் குலுங்கி கணபதி சார் என்னிடம் அழுத காட்சி என் கண் முன்னே இன்னும் அப்படியே நிற்கிறது.

சார்…எங்கப்பா என்னை என்ன திட்டினாலும் எனக்குக் கஷ்டமாயிருக்காது சார்….ஏன்னா அவர் எனக்கு அவ்வளவு செய்திருக்கார்…என்னைப் படிக்க வைக்கணும்னு அந்தப் பாடு பட்டிருக்கார்…எனக்கு ரொம்ப உடம்பு முடியாமப் போன சமயமெல்லாம் ராத்திரி பகலா அவர் கிடந்த கெடப்பெல்லாம், ஆயுசுக்கும் என் உடம்பைச் செருப்பாத் தைச்சுப் போடலாம் சார் அவருக்கு….காலம் பூராவும் என் படிப்புக் கடனை அடைக்கவே உழைச்சு உழைச்சு ஓடாப் போயிட்டார் சார்…வாழ்க்கைல எந்தச் சொகமும் அனுபவிக்காத மனுஷன்னா அது எங்கப்பாதான் சார்….மனசுல ஆசைங்கிறதே இல்லாத ஆளு சார். தனக்குன்னு எதுவும் செய்துக்காத புனித ஆத்மா….அவருக்குப் போய் இப்டி முடியாமப் போயிடுத்தே சார்…. …என்னை எல்லாமும் சொல்ல அவருக்கு அத்தனை உரிமையுமிருக்கு…இவ்வளவு பேசறாரே… மனசோட சொல்றாருன்னு நினைக்கிறீங்களா? கிடையாது சார்…சத்தியமாக் கிடையாது. ஒடம்பு முடியாம, இப்டி ஆயிட்டமேன்னு வயித்தெரிச்சல்ல, சாகமாட்டாமக் கெடக்கனேன்னு நொந்து வர்ற வார்த்தைகள் சார் அது….

என் பையன் .தாத்தா மடில, மடில போய் உட்கார்ந்துப்பான்….என் பொண்டாட்டி விரட்டுவா…எதாச்சும் வியாதி வந்துரும்பா…மாடில இருக்கிற அவன் ஃப்ரெண்டு வீட்டுக்கு அனுப்பிச்சிடுவா….இங்கிருந்தாத்தானே கூப்டுவார்…என்ன கொஞ்சல் வேண்டிக் கெடக்கு…இம்புட்டு வியாதியோடன்னுவா…அங்க கொண்டுபோய் அவனுக்குச் சாப்பாடு கொடுப்பா….என்னெல்லாம் கொடுமைங்கிறீங்க….

எதுவும் சொல்ல வாய் வராமல் நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு கேட்டேன்.

அது சரி கணபதி சார்…ஒரு நல்ல முதியோர் இல்லத்துல சேர்க்கலாமில்லியா? இப்பத்தான் வேண்டிய பணத்தைக் கட்டினா எல்லாம் நல்லாப் பார்த்துக்கிறாளே…? குளிப்பாட்டி விட்டு, உடம்பு துடைச்சு விட்டு, டிரஸ் மாத்தி, வேளா வேளைக்கு மாத்திரை கொடுத்து, ரெகுலர் செக்கப் பண்ணி, குழந்தை மாதிரிப் பார்த்துக்கிறாங்களே…அப்டிச் செய்ங்களேன்…இங்க உங்களுக்குப் பொழுது விடிஞ்சு பொழுது போனாப் பிரச்னையாத்தானே இருக்கு…

இல்ல சார்…அது மட்டும் என்னால முடியாது சார்…என் வாழ்க்கையே போனாலும் பரவாயில்லை. …எங்கம்மாட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன் சார்…கடைசி வரைக்கும் கொண்டு செலுத்தி அவரைக் கரையேத்துவேன்னு…அதைச் சொல்லித்தான் அவளையே கைபிடிச்சேன்.. - சொல்லிவிட்டுக் குழந்தை போல் விசித்து விசித்து அழுதார் அன்று.

சுமதி சொன்னாள். பாவந்தான்…என்னண்ணா…எப்டியெல்லாம் மனுஷா? என்று அவள் கலங்கியபோது எனக்குப் பெருமையாய்த்தான் இருந்தது.

தினமும் பார்க்கும் காட்சிதானே என்பதுபோல் நடந்து செல்வோரும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், பெரிய வாகனங்கள் சிலவும், அது பாட்டுக்கு நேர் பார்வையில் போய்க் கொண்டிருந்தன. சிலர் மூக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டு முகத்தைச் சுளித்தவாறே அவசரமாய் நகர்ந்தார்கள்.

இப்டியே வச்சிட்டிருந்தீங்கன்னா நாங்கள்லாம் இங்க குடியிருக்கிறதா, வெளில போறதா? எதாச்சும் செய்யுங்க…?

என்ன சார் செய்யச் சொல்றீங்க? வெளில விரட்டச் சொல்றீங்களா? உங்கப்பான்னா அப்டிச் செய்வீங்களா?

ஆஸ்பத்திரில கொண்டு அட்மிட் பண்ணுங்க சார்…இல்லன்னா முதியோர் இல்லம் எதுலயாச்சும் சேர்த்து விடுங்க….நீங்கபாட்டுக்குப் பேசாமா இருந்தீங்கன்னா? இந்த ஃப்ளாட்டுல மொத்தம் மூணு ஃப்ளோர் இருக்கு…பன்னெண்டு வீடு…….அத்தனை பேருக்கும் எவ்வளவு டிஸ்டர்ப்பா இருக்கு… தெரியுதுல்ல…எல்லாரும் எங்கிட்ட வந்து மோதறாங்க…என்னால பதில் சொல்ல முடில…

எல்லாரையும் சேர்த்து நீங்களா ஏன் சார் சொல்லிக்கிறீங்க? உங்களுக்குத் தொந்தரவுதான். அத நான் ஒத்துக்கிறேன். அனாவசியமா அம்புட்டுப்பேரையும் ஏன் இழுக்கிறீங்க?

யாராச்சும் ஒருத்தர்தான் சார் உங்ககிட்ட வந்து சொல்வாங்க… அம்புட்டுப் பேரும் வந்து கத்தினாத்தான் கௌப்புவீங்களா….? இன்னும் கொஞ்ச நாள் போச்சின்னா அதுவும் நடக்கும்…தெரிஞ்சிக்குங்க….அசிங்கப்படுறதுக்கு முன்னால வண்டிய விடுங்க….

சார்…கௌப்புறது, அது இதுன்னு அநாவசியமாப் பேசாதீங்க….எங்கப்பாவ எப்டிப் பார்த்துக்கணும், என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீங்க சொல்ல வேணாம்….

அப்ப சட்டுப் புட்டுன்னு உங்க இஷ்டப்படி எதாச்சும் செய்ங்க சார்….நீங்கபாட்டுக்குப் பேசாம இருந்தீங்கன்னா…

அவர் சொல்றதுல என்ன தப்பு… இங்க நம்மளாலயே இந்தப் பாடைத் தாங்க முடில….இதென்ன தனி வீடா? வச்சி, கட்டிண்டு அழுதிண்டிருக்கிறதுக்கு…அப்டியிருந்தா நாந்தான் ஓடணும் இந்த வீட்டை விட்டு….ஏன்னா நீங்க நிச்சயமா நா சொல்றதக் கேட்கப் போறதில்லை…எல்லாம் என் தலையெழுத்து….கர்மாந்திரம்…

ஏய்…என்ன ….ரொம்பப் பேசுற…?

ஆம்ம்மா…உங்களுக்கு எங்கிட்டதான் எல்லாம்….இப்டி அன்றாடம் கத்திக் கூட்டிட்டு எனக்கென்னன்னு நீங்க ஆபீஸ் போயிடுவேள்….யார் படறது? நீங்க போனப்புறம் அவர் என்னென்ன செய்றாருன்னு உங்களுக்குத் தெரியுமா? சொன்னா மலையாக் கோபம் வரும் உங்களுக்கு….என்னால முடில….என்னைக்கு என்ன ஆகப்போறதோ ஆகட்டும்…

எத்தனை நேரம்தான் நான் அங்கே நிற்பது? நானும் அன்று ஆபீஸ் போயாக வேண்டுமே…அவரவருக்கு இருக்கும் அரிபரியில் யாரும் அவரைக் கவனித்ததாகவே தெரியவில்லை. எனக்கோ கேம்ப் முடித்துத் திரும்பி ரிப்போர்ட் சப்மிட் பண்ண வேண்டுமே என்ற ஓரே எண்ணம். ரெண்டு நாளில் ரெவ்யூ. ஒரு பயணமுண்டு ஆபீசருடன்.

மதியம் மணி மூன்று இருக்கும். அலுவலகத் தொலைபேசியில் சுமதி என்னை அழைப்பதாகப் பியூன் வந்து சொல்ல,

எப்பப்பாரு, செல் நம்பருக்குப் பேசத் தெரியாது இவளுக்கு …ஆபீசுக்கேதான் கூப்பிடுவா….கேட்டா ஆறு நம்பர், வசதியாயிருக்கும்பா... .என்ன பழக்கமோ…? என்றவாறே போய் எடுத்தேன். அந்த உறாலில் அமர்ந்திருந்த எல்லோர் முகங்களும் என்னையே நோக்குவது போலிருந்தது.

நாந்தான் சுமதி பேசறேன்…எதுத்தாத்துத் தாத்தா மாடிப்படில உருண்டுட்டாராம்…தலைல பலத்த அடியாம்….ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கா…கணபதி சார் உங்களுக்குச் சொல்லச் சொன்னார். சார் பக்கத்துல இருந்தா கொஞ்சம் வசதியாயிருக்கும்னார்…..நீங்க உடனே கிளம்பி சாந்தீபனி மிஷன் போங்க….அங்கதான் கொண்டு போயிருக்கா….

இருந்த வேலைகளை அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பினேன். என்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாதவராய், “அநேகமா முடிஞ்சிரும் போலிருக்கு சார்….” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு விசிக்க ஆரம்பித்தார். தோளை அரவணைத்து ஆறுதல் படுத்தினேன். ஒருவகையில் விடுதலைதானே என்றுதான் எனக்குத் தோன்றியது. இப்படியே இன்னும் இருந்து என்னதான் செய்ய? என்றேனும் ஒரு முடிவு வந்துதானே ஆக வேண்டும்? அவருக்குக் கிடைக்கப்போகும் நிம்மதி குறித்து அப்போழுதே என் மனம் ஆறுதல்பட ஆரம்பித்தது. கணபதி சார் சொன்னார் –

எப்பயும் ஆபீசுக்குப் போறதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள தூக்கிக் கொண்டு விட்டிட்டுப் போவேன் சார்…இன்னைக்கு என்னாச்சுன்னு தெரில…எந்த மூலைல இருந்தாரோ, இல்ல நாந்தான் மறந்திட்டனோ…நாம்பாட்டுக்கு ஒரேபோக்கா ஆபீஸ் வந்து சேர்ந்துட்டேன்…எப்டி வந்தேன்னு எனக்கே தெரில…இத்தனை வருஷத்துல என்னைக்குமே நடக்காதது இது. வெளில கண்ணுல அவர் படாததுதான் காரணமோன்னு இப்போ தோணுது. .பிறகுதான் சார் ஞாபகம் வந்தது. வீட்டுல சொன்னேன். ….“ இங்கதான் இருக்குங்கிறா சார் அவ…எப்டிப் பேச்சு பார்த்தீங்களா?

ஒரு வேளை இந்த வார்த்தையே அவர் காதுல பட்டு அந்த வேதனைலயே பாதி செத்திருப்பாரோ என்னவோ, கொஞ்ச நேரத்துல இந்த நியூஸ் வந்திடுத்து….

அன்று முழுக்கவும், பிறகு அனைத்திற்கும் கூடவே துணையிருந்து வேண்டிய எல்லாமும் செய்து விடுவது என்கிற முடிவோடு அவரை அரவணைத்தவாறே ஆறுதலாய் யோசிக்கலானேன் நான்.

----------------------------------------

03 பிப்ரவரி 2014

வாஸந்தியின் “கடைசிவரை” நாவல் பதிவு

2014-02-04 08.16.47

 

இந்தியா டுடே-யில் தொடராக வந்த போது எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இத்தனை நாள் படிக்காமல் விட்டோமே என்றுதான் இருந்தது இந்த நாவலைப் படித்தபோது. இந்த நூலுக்காக முன்னுரையில் திருமதி ராஜம்கிருஷ்ணன் அவர்கள் சொல்லியுள்ளபடிமையக்கருவைச் சிறந்த பட்டைக் கண்ணாடிபோல் பயன்படுத்திப் பல்வேறு கோணங்களில் பெண்ணின் உரிமைகளைத் துல்லியமாகப் படம் பிடித்து அதன் முழுப் பரிமாணங்களுடன் ஸ்கேன் திரையில் பளிச்சிடுவது போலக் காட்டப்பட்டுள்ளது இந்த நாவலின் சுவாரஸ்யமான, அழுத்தமான, இறுக்கமான நடைப்போக்கும், சம்பவங்களும் நம்மால் மறக்க முடியாதது.
இந்த விஷயத்தை மையக் கருத்தாக எடுத்துக் கொண்டு இந்த நாவலை நான் படைக்கப் போகிறேன் என்று தீர்மானித்துக் கொண்ட அதே வேளையில், அந்த மையக் கருத்துக்கு ஏற்றாற்போன்ற கதாபாத்திரங்களையும், அவற்றின் குணாதிசயங்களையும் துல்லியமாக வரையறுத்து, அதற்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பாத்திரங்களையும் ஊடாடவிட்டு, அங்கே இந்த மையக்கருத்தைத் தாங்கிச் செல்லும் கதாநாயகியின் அழுத்தமான சிந்தனைகளை அப்படியே நாவல் முழுக்கத் தூக்கிச் செல்லும் பாங்கும், பொருத்தமான, புத்திசாலித்தனமான உரையாடல்களும் மறக்க முடியாதவை. நாவலைப் படிக்கும்போதே அதனில் நம்மையும் ஒரு கதாபாத்திரமாக நாம் வரித்துக் கொண்டு,நமது கேள்விகளை முன்னிறுத்த, இம்மாதிரிக் கேள்விகள் இதைப் படிக்கும் வாசகனுக்கு ஏற்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பில் அங்கங்கே அந்தச் சந்தேகங்களைத் தீர்ப்பதுபோல் விடை சொல்லிச் செல்லும்அழகு, முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பது என்ற தீர்மானத்தை நம்முள்ளே கொண்டு வருகிறது.
நாவல்கள் எழுதுவது என்பது வெறுமே வரிகளைச் சேர்த்துக் கொண்டு போவது அல்ல. மாத நாவல்கள் எழுதுவதுபோல. நிறையக் கதாபாத்திரங்களை உள்ளே நுழைத்துவிட்டாலே அது நல்ல நாவலாக வடிவம் பெற்றுவிடும் என்பதும் அல்ல. சுரத்தில்லாத சம்பவக் கோர்வைகள் என்றும் நாவலுக்கு சுவை சேர்ப்பதில்லை. எழுதி எழுதிப் பழக்கத்தினால், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளி நாவல் என்கின்ற பெயரில் யாரும் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்துவிட முடியும். அதனால் பயன் என்ன?
நாவல் காலத்தால் அழியாதது. வருடங்கள் கடந்தாலும் பேசப்படுவது. அதுதான் நின்று நிலைப்பது. பேசப்பட வேண்டிய நாவல்கள் பேசப்படாமல் போனதுதான் தமிழ் இலக்கிய உலகின் அபத்தமான துரதிருஷ்டம்.
இந்த நாவல் அந்த வரிசையில். அது வாஸந்தியின் “கடைசிவரை...” . தமிழ்ப்புத்தகாலயம் 1996 ல் வெளியிட்டது. தேடிக் கண்டெடுத்துப் படிக்க வேண்டிய நாவல்.

30 ஜனவரி 2014

“விவஸ்தை”-சிறுகதை (செம்மலர் மாதஇதழ்-பிப்ரவரி 2014)

2014-01-30 14.30.50 2014-01-30 14.31.52

”உள்ளே வாங்க, சட்னு…” – பல்லைக் கடித்தவாறேதான் திண்ணை வாயிலில் நின்று கூப்பிட்டாள் சௌம்யா.

கையில் எடுத்திருந்த உலர்ந்த துணிகளைப் பக்கத்து வீட்டு காம்பவுன்ட் உட்பகுதிக்குள் போட்டு விட்டு விருட்டென்று வீட்டுக்குள் நுழைந்தேன்.

என்ன? என்ன? எதுக்கு இப்டி அவசரமாக் கூப்பிட்டே?

ம்ம்ம்….பொங்கல் திங்கறதுக்கு…!

போச்சு, அதுக்குள்ளே கோபம் வந்திருச்சா…? விஷயத்தைச் சொல்லு…

நீங்க என்னா, பக்கத்து வீட்டுத் துணியையெல்லாம் தொட்டு எடுத்திட்டிருக்கீங்க…? அசடு மாதிரி…?

எடுத்திட்டிருக்கீங்க…என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அசடு, சற்று அதிகம்தான். போகட்டும், கட்டின பெண்டாட்டிதானே…ஒரு வார்த்தை சொல்ல உரிமையில்லையா? சொல்லப் போனால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமலேயே அசடான தருணங்கள் எத்தனையோ? இதிலென்ன பிரித்துப் பார்க்கக் கிடக்கிறது?

மாடில உலர்த்தப் போட்டிருக்காங்க…அது பறந்து நம்ம வீட்டுப் பக்கம் விழுந்திருக்கு…எடுத்துப் போட்டேன்…இதிலென்ன தப்பு?

மாடில அப்டி கல்லைப் பாரமா வச்சு உலர்த்தாதீங்க…இந்தப் பக்கம் பெருக்கி சுத்தம் செய்ய வர்றப்போ காத்தடிச்சு தலைல விழுந்திடுச்சின்னா சங்கடம்னு எத்தனையோவாட்டி அவுங்ககிட்டே சொல்லிட்டேன்… கேட்குறாப்புல இல்லை….கொடில உலர்த்துற துணிகளுக்குக் கிளிப்பும் போட மாட்டேங்குறாங்க…இதுல நீங்க வேறே வசதியா துணிகளை எடுத்துப் போடுறீங்க…ரொம்ப நல்லதாப் போச்சுன்னு விட்ருவாங்க….வேணும்னா வந்து எடுத்துக்கட்டுமே…

வந்து எடுக்கணும்னா, ரோட்டுப் பக்கமா வந்து, நம்ம வீட்டு கேட்டைத் திறந்து, பர்மிஷன் கேட்டு, உள்ளே வந்து எடுக்கணும்…எதுக்கு இவ்வளவு சிரமம்…போகுது விடு….

அப்போ தினமும் எடுத்துப் போடறேங்கிறீங்களா?

போட்டா போச்சு….ஒரு உதவிதானே…கல்லு வைக்காத துணிக காத்துல பறந்து விழுகுது…அப்டி விழுந்திருக்கோன்னு அவுங்க தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி நாம எடுத்துப் போட்டுட்டா பிரச்னை முடிஞ்சிது பாரு…

ரொம்ப சமத்து…உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்தையே கிடையாது…அவ்வளவுதான்…

இதிலென்ன விவஸ்தை கெட்டுப் போச்சு…? உதவி செய்றது தப்பா?

உதவிங்கிறது கேட்டு செய்றது…இது நல்லால்லியே….

உனக்கு நல்லால்லே…எனக்கு அப்டி ஒண்ணும் தோணலை…அவுங்கவுங்க மனசைப் பொறுத்த விஷயம்…

அந்தம்மா பாவாடை, ரவிக்கைன்னு வித்தியாசம் பார்க்காம எடுத்துப் போடுவீங்களாக்கும்….போதாக்குறைக்கு நம்ம வீட்டுக்கு வர்ற கேபிள் வயர்லயும் உலர்த்துறாங்க…மாடில கைக்கு வாகா எதெது தெரியுதோ அங்கெல்லாம் துணிகளைப் போட்டுடுவாங்க போலிருக்கு…உள்ளாடைகளெல்லாம் வீட்டுக்குள்ளே உலர்த்தணும்னு தெரிய வேண்டாம்? இப்டியா ஊர் பார்க்கிறமாதிரிப் போடுறது? அவுங்க மனசுக்கு அசிங்கமாத் தெரிலன்னு அர்த்தம்…

நீயே நா சமீபத்துல சொன்ன பின்னாடிதானே அப்டிச் செய்ய ஆரம்பிச்சே…? ராத்திரி பாரா போகுற போலீஸ் லட்டியால கேட்டுக்கு மேலே கொடியைத் தூக்கிப் பார்த்திட்டுப் போறான்னு அவன் சந்தேகத்தைச் சொன்ன பின்னாடிதானே உனக்கே பயம் வந்தது?

அவன் செய்திட்டா? அது சரியா? வீட்டுக்குள்ளதானே காம்பவுன்ட் உட்பக்கமா உலர்த்தப் போட்டிருக்கோம்? தெருவுலயா துணி உலருது சந்தேகப்படுறதுக்கு?

போலீஸ்காரங்களே அப்டித்தான். அவனுக்கு சந்தேகமாத் தோணினா நோண்டாம விடமாட்டான்….

போதும் அபத்தப் பேச்சு…இனிமே துணி எடுத்துப் போடுறதெல்லாம் நீங்க செய்யாதீங்க…பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு பார்த்தாங்கன்னா அசிங்கம்…என்னமாவது தப்பா தோணும்…இந்தாளுக்கு வேறே வேலையே இல்லையான்னு நினைப்பாங்க…சிவனேன்னு வீட்டுக்குள்ள கிடக்க மாட்டீங்களா?

சிவனேன்னு நான் எங்க கெடக்குறது…அந்த செவன்தான நம்மள இந்தப் பாடுபடுத்திறான்….

போச்சு…சினிமா வசனம் பேச ஆரம்பிச்சாச்சா….அதான் உங்களுக்கு எதுக்கும் விவஸ்தையே கிடையாதுன்னு முதல்லவே சொன்னேன்…யாரு என்ன நினைச்சா உங்களுக்கென்ன? பொழுது போகணும் உங்களுக்கு…அதுக்கு எதையாச்சும் செய்திட்டே இருக்கணும்…அவ்வளவுதான்…எதைச் செய்யணும், எதைச் செய்யக் கூடாதுங்கிறதெல்லாம்தான் கிடையாதே….

யாரு என்ன நினைச்சா என்ன? அடுத்தவன் இதை நினைப்பானோ, அதை நினைப்பானோன்னு எல்லாம் நாம தயங்கிட்டேயிருந்தா இந்த உலகத்துல எதையுமே செய்ய முடியாது…எதுத்தாப்ல அப்டி நினைக்கிறதா நீ சொல்றவங்களுக்குக் கூடத்தான் நான் உதவுறேன்…வித்தியாசமா பார்க்கிறேன்…எதோ என்னாலான உபகாரம்…அவ்வளவுதான்…

உபகாரம் செய்றதையும் சந்தேகப்படுறமாதிரி செய்யக் கூடாது….தெளிவாச் செய்யணுமாக்கும்…

நீ எதைச் சொல்றே? புரியல எனக்கு…

எதிர் வீட்டுல அவர் ஊர்லர்ந்து வந்தவுடனே தபால்களைக் கொண்டு கொடுத்தீங்களே….அப்போ நா சொன்ன மாதிரிச் செய்தீங்களா? செய்யலியே?

இதிலென்னடி இருக்கு…அவர் என்ன நம்மளைச் சந்தேகமா படப்போறார்? அதான் தபாலோட தபாலாக் கொடுத்திட்டு வந்திட்டனே…!

கொடுத்திட்டீங்க சரி, அதுல அந்த ஒரு கவரை அட்ரசைப் பார்க்காமக் கட் பண்ணிட்டேன்னு சொல்லி ஸாரி கேட்டீங்களா? இல்லியே…? நான் சொல்லித் தந்தேன்ல…ஏன் கேட்கலை?

ஸாரி சொல்லாட்டி என்ன? அவர்தான் ஒண்ணும் கேட்கலியே…அது சாதாத் தபால்தாண்டி….எங்கயோ ம்யூட்சுவல் ஃபன்ட் போட்டிருப்பார் போலிருக்கு…அதுக்கு அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் வந்திருக்கு…அவ்வளவுதான்…நமக்கு வந்த தபால்களோட அது இருந்ததுனால வரிசையா நுனியைக் கட் பண்ணும்போது, அதையும் சேர்த்துக் கட் பண்ணிட்டேன்…இதிலென்ன தப்பிருக்கு…

தப்புக்கு நா சொல்லலை…அந்த விபரத்தை அவர்ட்டச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே…வேணும்னே அவா தபாலைப் பிரிச்சுப் படிச்சதா ஆகாதா?

அம்மா தாயே…ஆள விடு….கொடுத்தாச்சு…முடிஞ்சு போச்சு….ஒரு மாசம் ஓடிப்போச்சு…இப்பப் போய் இத நீ நோண்டாத…அவரே ஒண்ணும் கேட்கலை…நீ இப்பப் பேசறதப் பார்த்தா, அவர் ஊர்லருந்து வந்தவுடனே போயி, அந்தப் பழைய விஷயத்தைச் சொல்லி ஸாரி கேட்டுட்டு வாங்கன்னுவ போலிருக்கு…நல்லாருக்கு உன் கத…

இதத்தான் நான் அப்பவே சொன்னேன்….எதுக்கும் உங்களுக்கு விவஸ்தையே கிடையாதுன்னு….விவஸ்தைன்னா என்னன்னு முதல்ல புரிஞ்சிக்குங்க…தோணினபடியெல்லாம் இருக்கிறதுங்கிறது அழகில்ல…

ஆரம்பிச்சிட்டியா பழையபடி….இல்லாட்டிப் போகட்டும்…நீ நிறைய விவஸ்தையோட இருக்கேல்ல…அது போதும்….

சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டார் நாராயணன்.

என்ன வாங்கு வாங்குகிறாள்? ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் கதையால்ல இருக்கு? அத்தனை நேரம் பேசியதில் ஏற்பட்ட அயர்ச்சி, கண்மூடி ஆசுவாசப்பட வைத்தது. கண்களை மூடினாரோ இல்லியோ அந்த இன்னொரு விஷயம் உடனே விழித்துக் கொண்டது. இப்படி தூபம் போட்டால்?

அவர் பார்வை மேஜையின் மேல் சென்றது. எதிர்வீட்டுக்காரருக்கு என்று வந்த தபால்கள். வாங்கிச் சேர்த்து ஒரு ரப்பர் பேன்ட் போட்டு பத்திரமாய் வைத்திருந்தார்.

ஸார்…நாராயணன் ஸார்….

யாரு, ஓ…ராஜாராமா…வாங்க…வாங்க…..உள்ளே வாங்க….

இல்ல இருக்கட்டும்…ஊருக்குப் போயிட்டிருக்கேன்…இப்ப ஆட்டோ வந்திடும்…கொஞ்சம் வீட்டைப் பார்த்துக்குங்க…சாயங்காலம் மட்டும் வாசல் லைட்டைப் போட்டு, பத்து மணிக்கு அணைச்சிடுங்க….

ஓயெஸ்…வழக்கமாச் செய்றதுதானே…நான் பார்த்துக்கிறேன்…நீங்க கவலைப்படாமப் போயிட்டு வாங்க….பாருங்க…இந்த டார்ச் லைட்டை…நாலு பேட்டரியாக்கும்…ராத்திரி உங்க வீட்டுப் பக்கம் மொட்டை மாடிக்குப் போயி ஒரு சுத்து சுத்திட்டுத்தான் வருவேன்…நீங்க கிளம்புங்க….

அப்டியே தபாலும்….

அதான் வாங்கி வச்சிடுவேனே…நா போஸ்ட்மேன்கிட்டயே சொல்லிடுவேன்….எதுத்த வீட்டுத் தபாலை எங்கிட்டக் கொடுத்திடுங்கன்னு…பத்திரமா வச்சிருக்கேன்….

அதுக்கில்லைசார்…பையனோட பாஸ்போர்ட் வரும் ரிஜிஸ்டர்ல…அத உங்ககிட்டே தரமாட்டேன்னுவான்…அதுக்காகத்தான் இந்த ஆதரிசேஷன் லெட்டர்…என் கையெழுத்துக்கு மேலே உங்க கையெழுத்தைக் கொஞ்சம் போட்டுக்கிடுங்க…அப்பத்தான் அட்டெஸ்ட் பண்ணினதா ஆகும்…இதப் போஸ்ட்மேன்கிட்டக் கொடுத்தீங்கன்னா பாஸ்போர்ட் ரிஜிஸ்டர் தபாலை உங்ககிட்டேக் கொடுத்திடுவான்…ஆளில்லாம ரிடர்ன் ஆயிடுச்சின்னா அப்புறம் சங்கடம்… திரும்ப வாங்குறது கஷ்டம்…அதுக்காகத்தான்…

ட்டென்று எழுந்து அந்தப் பாஸ்போர்ட் தபால் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார். கொஞ்சம் சங்கடப்பட்டுக்கொண்டே போஸ்ட்மேன் வாங்கிக் கொண்டதை நினைத்துக் கொண்டார்.

போஸ்ட் மாஸ்டர் என்ன சொல்லுவாரோ, தெரிலயே ஸார்…கொடுத்துப் பார்க்கிறேன்…..நாங்க பாஸ்போர்ட்டையெல்லாம் வேறே யார்ட்டயும் கொடுக்கிறதில்லை…ஆதரிசேஷன் இருந்தாலும்….எங்களுக்கு உத்தரவு அப்டி…!

சொல்லிக் கொண்டேதான் கொடுத்துப் போனார். நல்லவேளை…இன்றுவரை ஒன்றுமில்லை. ஏற்றுக்கொண்டது போல்தான் தோன்றுகிறது.

வந்திருந்த தபால்களை மீண்டும் ஒரு முறை அடுக்கி சரி பார்த்துக் கொண்டார். மேலே ஒரு ஒன்சைடு பேப்பரைச் செருகி, ”டூ, மிஸ்டர் ராஜாராம்” என்று எழுதி வைத்து விடுவார். மேஜையில் குவிந்துள்ள தன் தபால்களோடு கலந்து தொலைந்து போய்விடக் கூடாது. பயம். நாராயணனுக்கு எதுவும் துல்லியமாகத் தெரிய வேண்டும். எதிலும் குழப்பம் என்பது கூடாது.

உங்களை மாதிரி ஒருத்தர் அவருக்கு கிடைக்கணுமே? என்றாள் சௌம்யா.

உதவி செய்றதுன்னு ஏத்துண்டுட்டோம்னா பர்ஃபெக்டா செய்துடணும்…இல்லன்னா ஏத்துக்கப்படாது….

நல்லா செய்யுங்கோ…யார் வேண்டான்னா? அகஸ்மாத்தா ஏற்பட்ட அந்தத் தவறைச் சொல்லிட்டுக் கொடுத்துடலாமேன்னுதான் சொன்னேன்…

சௌம்யா அன்று சொன்னது உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது. இப்பொழுதும் அப்படியே ஒரு தவறு மீண்டும் நடந்து விட்டது. தபால்களைப் பிரிக்கும் பொழுதே எதிர் வீட்டுத் தபால்களையும் தன் தபால்களோடு சேர்த்து வைத்து விடுவான் போலிருக்கிறது. கத்தையாக அப்படியே நீட்டிவிட்டுப் போய்விடுகிறார் போஸ்ட்மேன். அதில் ஒன்று ஒட்டிக்கொண்டிருக்க, கத்தரி போடும் போது நுனி சேர்ந்து கட்டாக விட்டது. பிரிக்கும் போது இரண்டு தபால்கள் வாயைப் பிளக்கின்றன. என்னடாவென்று பார்த்தால் ஒன்று அவருடையது. என்ன செய்வார் நாராயணன். அடக் கடவுளே…! என்று அலுத்துக் கொள்ளத்தான் முடிந்தது. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தார். அதை மனைவியிடம் சொல்வதில்லையென்று. சர்வ ஜாக்கிரதையான முடிவுதான். ஆனால் ராஜாராமிடம் சொல்லியே கொடுத்துவிடுவதென்று. நல்ல முடிவு என்றுதான் தோன்றியது. அதனால் மனதுக்கு நிம்மதியாகிப் போனது.

குறிப்பாக அந்தத் தபாலை இப்போது கவனமாகப் பார்த்துக் கொண்டார். எதிர்வீட்டில் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தார். நல்ல இருட்டு. மணியைப் பார்த்தார். ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. வைகைல வந்திருப்பாரோ என்று நினைத்துக் கொண்டே வாசலுக்கு வந்தார்.

ராஜாராம்தான் கதவைத் திறந்து கொண்டிருந்தார். உடனேயே கொண்டு நீட்ட வேண்டாம். டூ மச் ஆஃப் சின்சியாரிட்டி லீட்ஸ் டு கேயாஸ்….தேவையில்லாமல் மனதில் இப்படித் தோன்றியது. மனிதனுக்கு சிந்தனையே கூடாது. சிந்திக்காத வாழ்க்கைதான் சுகம்.

உள்ளே போய் சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டும். பிறகு போகலாம். பத்து மணி நேரப் பயண அசதி இருக்கும்…எண்ணிக் கொண்டே மீண்டும் அறைக்குள் வந்தார். பேசாமல் காலையில் கொடுத்தால் என்ன என்று ஒரு எண்ணமும் வந்தது.

அவர் வந்துட்டார் போலிருக்கு. போங்கோ…போய் தபால்களைக் கொடுத்திட்டு வந்திடுங்கோ…. – மூக்கில் வியர்த்ததுபோல் வந்து நின்றாள் சௌம்யா.

பொறுப்புக்களிலிருந்து விலகுவதற்கு, விஸ்ராந்தியாய் இருப்பதற்குத்தான் எத்தனை மனித யத்தனம். கொடுத்தால்தான் அவளுக்கு நிம்மதி. இல்லையென்றால் ராத்திரி தூங்க மாட்டாள் போலும். கிளம்பினார் நாராயணன்.

கேட்டைத் திறக்கும்போதே தலையை நீட்டிவிட்டார் ராஜாராம். வாங்க…வாங்க….

இப்பத்தான் வந்தீங்க போலிருக்கு…இருங்க…இருங்க…டயர்டா இருப்பீங்க….- சொல்லிக்கொண்டே கையிலிருந்த தபால்களை நீட்டினார்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல…ஏ.ஸி.லதான் வந்தேன். இந்த வெயில்ல எங்க செகன்ட் ஸ்லீப்பர்ல வர்றது…? வெந்து போகும்…..

ஆமாமா…சரி…பாருங்க…நா வர்றேன்…. திரும்பினார் நாராயணன்.

ஒண்ணுமில்ல, சும்மா வாங்க ஸார்…நீங்க என்ன…? வந்தவுடனே கிளம்புறீங்க? உட்கார்ந்திட்டுப் போங்க…..

தவிர்க்கமுடியாமல் உள்ளே நுழைந்து அமர்ந்தார் இவர்.

என்ன, போன காரியமெல்லாம் முடிஞ்சிதா? ஏதாவது பேச வேண்டுமே என்று ஆரம்பித்தார்.

முடிஞ்ச மாதிரித்தான். அஸ்தினாபுரத்துல ஒரு அபார்ட்மென்ட்….அட்வான்ஸ் பண்ணியிருக்கு…..அவ்வளவுதான்….

அஸ்தினாபுரமா? பெயரே வித்தியாசமாயிருக்கு? புராணப் பெயர் போல… அது எங்க இருக்கு மெட்ராசுல?

குரோம்பேட்டைக்குப் பின்னால வருது ஸார்…எனக்கே இப்பத்தான் தெரியும்….என் பையன் அங்கதான் வாங்கணும்னுட்டான்….நமக்கென்ன…அவன்தான இருக்கப்போறான்னுட்டு நானும் ஓ.கே. ன்னுட்டேன். ஆபீசுக்கு வசதியா, கிட்டக்க இருக்கட்டும்ங்கிறதாச் சொல்றான்…

அது சரி….அவுனோட வசதிதானே முக்கியம். நாம இங்கே இருக்கப் போறோம். எப்பவாச்சும் போயிட்டு வரப் போறோம்…அவ்வளவுதானே…சரி…ரெஸ்ட் எடுங்கோ…நான் போயிட்டு வர்றேன்…. – கிளம்பினார் நாராயணன்.

இருங்க ஸார்…பால் காயுது…ஒரு வாய் காபி சாப்டுட்டுப் போங்க….எனக்கு வந்தவுடனே ஒரு காபி சாப்பிடணும்…அப்பத்தான் மத்த காரியமே ஓடும்….என் ஒய்ஃப் இன்னும் பத்து நாள் கழிச்சிதான் வருவா…பாருங்க டிபன் வாங்கிட்டு வந்திட்டேன்….பத்து மணிக்கு மேலேதான் சாப்பிடுவேன்…..

ஓ.கே…ஓ.கே….நா இப்பக் காபியெல்லாம் சாப்பிடுறதில்லே. சாயங்காலம் ஒரு காபி. அத்தோட சரி….வரட்டா…பார்க்கலாம்…

கிளம்பி வாசல் வரை வந்தவருக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது வந்த காரியம்.

அடடே….எதுக்கு வந்தனோ அதைச் சொல்ல மறந்திட்டேன் பாருங்கோ…அந்தத் தபால்ல ஒண்ணை, தெரியாம என் தபால்களோட சேர்த்துக் கட் பண்ணிட்டேன்….பிறகுதான் தெரிஞ்சிது…ஒட்டிண்டிருந்திருக்கு…கட் ஆனவுடனே பிரிஞ்சி விழறது….ஸாரி…கொஞ்சம் பார்த்துக்குங்கோ….

சொன்னார். பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினார். அப்படிக் கிளம்பியதே என்னவோ தவறு போல் இருந்தது. பதில் இல்லையே? கொஞ்சம் வந்தவர், திரும்பி நோக்கினார். ராஜாராம் அந்தக் குறிப்பிட்ட தபாலை உருவி எடுத்திருந்தார்.

அதான்…அதேதான்…கவனிக்கலை….பார்த்துக்கறேளா…..இவரையறியாமல் வாய் குழறுவது போல் பிரமை.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் திரும்பி நடந்தார். ஒன்றுமே சொல்லவில்லையே? தலை அவரையறியாமல் மீண்டும் திரும்பியது.

போனவாட்டி கூட இதே போல ஒரு தபால் திறந்துதான் இருந்திச்சி…..

ராஜாராம் சொன்னார்.

தலையைக் குனிந்தபடியே சொல்லிவிட்டார்.

கவனித்த இவருக்கு சுருக்கென்றது. யதார்த்தமாய், சகஜமாய் வந்த வார்த்தைகளா…இல்லை, எப்படி?

வீட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்தார். சௌம்யா சொல்லும் அந்த விவஸ்தை இருந்திருந்தால் ஒருவேளை புரிந்திருக்குமோ? சுருக்கென்று சற்று முன் எதுவோ தைத்ததே…ஒரு வேளை அதுதானோ இது? அவருக்கு அவர் மீதே கழிவிரக்கம் பிறந்தது இப்போது.

----------------------------------