29 ஆகஸ்ட் 2023

 

                                          

“கடவுளைக் கொன்றவன்“ – சிறுகதைத் தொகுப்பு – ஆசிரியர்-சித்ரூபன் – வாசிப்பு ரசனை அனுபவக் கட்டுரை-உஷாதீபன் (சுவாசம் பதிப்பகம், சென்னை-தொ.பே.எண்.8148066645 (10 சதவிகித தள்ளுபடி விலையில்)விலை ரூ.300

----------------------------------------------------------------------------------




-                 சிறுகதை என்கின்ற அமைப்பிலே சொல்ல வந்த கருத்துதான் முக்கியமேயொழிய பக்க அளவுகள் ஒரு பொருட்டல்ல என்றே நான் நினைக்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு அவனது படைப்புக்கள் எல்லாம் சமமான அந்தஸ்து உடையதுதான். அதாவது சமூகச் சிந்தனையுள்ள, மனித நேயத்தை முன்னிருத்துகின்ற வாழ்க்கைச் சிக்கல்களில் தவறிப் போகும் பண்பாட்டு நெறிமுறைகளை அவிழ்க்க முனைகின்ற ஆதார நோக்கமுள்ள படைப்பாளிக்கு இது முற்றிலும் பொருந்தும். தமிழ்ப் படைப்பாளிகள் சிறுகதைகளில் அவரவர் அனுபவத்திற்கும் திறமைக்கும் ஏற்றவாறு பலவகைச் சோதனைகளையும் செய்து பார்த்திருக்கின்றனர். இந்த முயற்சிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டு வார, மாத இதழ்கள் களமாக அமைந்திருக்கின்றன.

                நான் எப்படி தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும்  முயற்சியே எனது கதைகள் என்று திரு ஜெயகாந்தன் பகர்ந்துள்ளதுபோல சித்ரூபனின் கதைகளும் அவரது தரிசனமாகவே நமக்குக் கிட்டுகின்றன.

                   ஒரு எழுத்தாளனுக்கு கதை எப்போது எங்கிருந்து தோன்றும் என்பதை யாரும் ஊகிக்க முடியாது. வீட்டினுள், வெளியே. காணும் காட்சிகளில், இயற்கையிலிருந்து, பிற ஜீவன்களிடமிருந்து, பெறும் அனுபவத்திலிருந்து, பேசும் தன்மையிலிருந்து, உபயோகிக்கும் வார்த்தைகளிலிருந்து, நடந்து கொள்ளும் முறைகளிலிருந்து என்று பற்பல திசைகளிலிருந்து அவன் சிந்தனை கிளைக்கிறது. கற்பனை விரிவடைகிறது. முழுக்க முழுக்கத் தன் அனுபவத்தை மட்டுமே வைத்து கதை புனைந்தால் அது தட்டையாகத்தான் அமையும். அதோடு கற்பனைகளும் கலக்கும்போது, அழகியலும் சேர்ந்து கொள்ளும்போது அது இலக்கியத் தன்மையை அடைகிறது. மனித நேயமும், அன்பும், கருணையும் ஒருவனை எழுதத் தூண்டுகின்றன. ஒவ்வொரு மனிதரிடத்திலிருந்தும் அவர்கள் பேசும் முறையினின்றும், நடந்து கொள்ளும் தன்மையிலிருந்தும், ஒருவரின் முரணிலிருந்தும், கோபத்திலிருந்தும், அதன் உண்மைத் தன்மையிலிருந்தும், நியாயத்திலிருந்தும் இவ்வாறு பல்வேறு நிலைகளில் கதைகள் பிறக்கின்றன.

                    வெவ்வேறு களங்களில், வெவ்வேறு விதமான கதைக் கருவினில் சிறப்புற உருப்பெற்றிருக்கிறது சித்ரூபனின் கதைகள். ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது அடுத்தடுத்த கதைகள் எல்லாவற்றையும் படித்து முடித்து முறையே பயணிக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறதே தவிர தாண்டிச் சென்று தொகுதியை முடித்து விடுவோம் என்கிற உணர்வே ஏற்படவில்லை.

                   தையின் தலைப்பு “பெண்குரல் பெரியசாமி“ என்றுள்ளதேயென்று கதைக்குள் பெரியசாமியைத் தேடினீர்கள் என்றால் நீங்கள் ஏமாறுவீர்கள். தலைப்பே நகைச்சுவையை உணர்த்துகையில் உள்ளே அது இல்லாமல் போகுமா?  வரிக்கு வரி கிண்டலும் கேலியும்தான். உரையாடுபவர்கள் அப்படி நினைத்துப் பேசுவதில்லை. உணருபவர்கள்தான் அந்தச் சுவையை அறிய முடியும். வலியத் திணித்த நகைச்சுவையல்ல. இயல்பாக நனையும் நகைச்சுவை.

                   பெண் பெயர்களைக் கொண்டவர்கள் திண்டாடுவது உண்டு. ரமணி, ராஜாமணி என்று. மீனாட்சிசுந்தரத்தை “ஏ…மீனாட்சி…” என்று நண்பர்கள் அழைக்கையில் தெரியும் வலி. ரமணி என்று ஒரே அலுவலகத்தில் ஆணும் பெண்ணும் இருந்தால் புரியும் அவஸ்தை. சின்ன ரமணி, பெரிய ரமணி என்று அப்போதும் வித்தியாசம் தெரியாமல் தொடரும் துன்பம்.  ஜனரஞ்சகமாக இந்தக் கதை சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

                   நாம் தமிழ்நாட்டுல இருந்துட்டு இந்தி மேலே வெறுப்பை உமிழ்கிறோம். அரசியல்வாதிகள் மூலம் தொற்றிக்கொண்ட இந்த நெருப்பு அணையாமல் இருக்க அவர்கள் தூபம் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற வேற்று மொழிக்காரர்கள், குறிப்பாகக் இந்தி பேசுபவர்கள் அழகாக, சமர்த்தாக தமிழ் கற்றுக் கொண்டு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த அறிவு நமக்கேன் இல்லை? இதுதான் மெல்லத் தமிழ் இனி வாழும்….ஒரு விஷயத்தைக் கொள்கை கோட்பாடு என்று வாய்கிழியக் கத்துவதைவிட, இம்மாதிரிச் சுலபமாய் உணர்த்த முடியும் என்பதை இக்கதை நமக்கு உணர்த்துகிறது.  ஒரு புது மொழியைக் கற்றுக் கொள்ளுதல் என்பது அவரவர் விருப்பம். அறிவுள்ளவர்கள் அதை உணர்கிறார்கள். இந்தக் கருத்து நேரிடையாகச் சொல்லப்படாமல், அழகாக, நாசூக்காக இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு ஒரு சபாஷ்…!

                   மேற்படிப்பை இந்தியாவிலேயே பண்ணு…என்கிற தந்தை சொல்  மந்திரமாய்ப் பலிக்கிறது இக்கதையில். மந்திர உச்சாடனத்துக்கு ஒரு மறை சக்தி உண்டு. அது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ருசுப்படுத்துகிறது. எளிமையான வாசிப்புக்கதைதான் ஆனாலும் ஸ்வாரஸ்யம் குன்றாமல் சொல்லத் தெரிய வேண்டுமே…! எழுத்து கைவந்தால்தான் அது சாத்தியம்.

                   முதல் மூன்று கதைகள் வணிக ரீதியிலான இதழ்களுக்குள்ள ஜனரஞ்சக வாசிப்பிலான கதைகள். ஆனால் விறுவிறுப்பானவை என்பதை மறுப்பதற்கில்லை.நினைத்து வைத்துக் கொண்டு பேனாவை ஓட்டுவதில்லை எழுதும்போதே பேனா சரசரக்கிறது. நகர்ந்து நகர்ந்து தன் முடிவைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. சரளமான நடையும். சென்று சேரும் இடமும் கச்சிதமான வடிவில் அமைந்து வாசகனைப் பரவசப் படுத்துகிறது.

                   னவு நிறைவேறும் என்று நினைத்து காசோலையில் காதலைத் தெ ரிவித்த அந்தத் தருணம் கனவாகவே நின்று விடுமோ என்பதுபோல் அவள் வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற நிலை வருகிறது. வேலை பார்க்கும் பெண்தான் வேண்டும் என்கிற முடிவில் உள்ள விகாசுக்கு பிரகதியின் காதல் கைகூடும் வேளையில்  வேலை போய்விடும் அபாயம். கதை கூடி வந்திருக்கிறது.  வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்து விடுமோ என்கிற நிலை. ஸ்ட்ரெஸ் எல்லா மனிதர்களிடத்தும், எல்லா நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் இருக்கிறதுதான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் இந்த ஸ்ட்ரெஸ் வங்கிப் பணியாளர்களிடத்தே இருக்கும் வகை வேதனைக்குரியது. பல பணியிடங்கள் ஒரே கிளையில் காலியாய்க் கிடக்க ஒருவரே மூன்று நான்கு பேரின் பணியைச் சுமந்தால், எவன் மாய்கிறானோ அவன் தலையில் மிளகாய் அரைக்கும் இழி  நிலை. அதனை நடைமுறை யதார்த்தங்களோடு அழுத்தமாய்ச் சொல்லியிருக்கும் கதைதான் “கனவும் காசோலையும்…“

                   தையின் முடிவுக்கு வரும்போது அது சொல்லப்படும் விதத்தில் இதுதான் முடிவு என்பதை ஊகித்து விட முடிகிறதுதான். தொடர்ந்த வாசிப்புப் பழக்கத்தில் உள்ளவர்களுக்கு இது சுலபம்தான்.  ஆனாலும் ஒன்று. இறைவன் நல்ல ஜீவன்களை தன்னுள் சீக்கிரமே அழைத்துக் கொள்கிறான். அவனால் விரும்பப் படாதவர்களை வெகுகாலம் விட்டு வைக்கிறான். அப்படியானால் மாதங்கியின் மாமனார், சதா இறைத்துதியில் இருந்தவர்க்கு ஏன் இத்தனை அவஸ்தை? அதைக் கர்மவினை என்று கூறலாமா? வாழ்க்கையில் அனுபவ யோகம் என்று ஒன்று உண்டு. அது நன்மைக்கும் தீமைக்கும் பொது. பட்டுச் சீரழிந்துதான் ஒரு ஜீவன் போகும் என்றால் அது ச்சீ…ச்ச்சீ…என்றுதான் போகும். அது லிபி. உயிர்ப்பிடிப்பு அந்த ஜீவனுள்ளே துடிக்குமாயின் அது எப்படி மாயும்?  உருக்கமான கதை. சரளமான நடை. அனுபவபூர்வமான எழுத்து. சொல்ல வந்ததை முழுமையாகத் தகவலறிந்து, உண்மையறிந்து விளம்பும் எழுத்து வன்மை. இவர் ஏன் இத்தனை காலம் தொடர்ந்து எழுதாமல்  இருந்தார்?

                   ன்னிருவர் உற்சவம்“ நடைபெறுவதாக ஆத்மார்த்த  பக்தியில் திளைக்கும் காட்சிகளை விவரிக்கும் கதை. பயபக்தியோடு சொல்லப்பட்டிருப்பதே புண்ணியம் என்று நினைக்க வைக்கிறது.

                   ங்கவினை“ சிறுகதை தங்கத்தால் வந்த வினை. ஒரு புதிய தகவல் கிடைக்கிறது. வங்கியில் நகைகள் அடகு வைப்பதுபற்றியும், ஏலம் போவது பற்றியும், அதனால் எழும் பிரச்னைகள்பற்றியும்…

                   னிதம் வெளிப்படும் இடம் கொஞ்சம் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகத்தான் தோன்றுகிறது. ஆனாலும் ஒரு எளிய மனிதனிடமிருந்து அது வெளிப்படும்போது அதற்கான நியாயம் பிறக்கிறது.  தன்னை வலிய ஒரு கேஸில் மாட்டிவிடத் துடிக்கும் போலீசுக்கே உதவும் மனப்பான்மை கொஞ்சம் அதீதம்தான். இன்னொருவனுக்கு இக்கட்டான காலகட்டத்தில் தன்னை மீறி வெளிப்படுவது மனிதம். இங்கே தனக்கு இக்கட்டான காலகட்டத்தில், அதுவும் அநியாயக் கொலைப்பழி தலையில் விழும் அபாயக் காலகட்டத்தில் வெளிப்படும் உதவும் நோக்கு – கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்கிறது. அது எதிராளிக்குக் கூடத் தெரியாத நிலையில் ஆசிரியருக்குத் தோன்றியிருக்கிறது இப்படி. மனிதம் புனிதமாகட்டும்…

                   கேங்ரேப் – ஒரு விளையாட்டு என்று சின்னப் பையன்கள் சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. இது இப்படி எங்கோ நடந்ததா அல்லது படைப்பாளியே உருவாக்கியதா என்று ஐயுறுகிறது மனம். எவ்வளவு நேரம் அவ தாங்காறான்னு பார்க்கிறோம் என்று தீர்வு சொல்வது வியப்பளிக்கிறது. இன்னும் என்னவெல்லாம்தான் மூத்த தலைமுறைக்குத் தெரியாமல் இங்கே விபரீதமாய் உருவாக்கப்பட்டிருக்கிறது? என்று மனம் அச்சம் கொள்கிறது.  பலாத்காரமே ஒரு விளையாட்டு என்றால் அதைச் செய்திகளும் சானல்களும், வயசும் காட்டிக் கொடுக்காதா? இதைக் கதையாய்ச் சொல்லவும் மனம் எப்படித் துணிந்தது? விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இருந்திருக்கலாம்.

                   கோயில்ல இருந்தா விக்ரகம்ங்கிறோம். திருடு போனா சிலைங்கிறோம் என்று நடிகர் கமலஉறாசன் ஒரு முறை கூறினார். வராஉறமூர்த்தி சந்நிதியானாலும் அசல் பன்றி நுழைஞ்சா – அட…வேறே எதுவோ ஒண்ணுன்னு கூட வச்சிக்குங்களேன்…சந்நிதியை…கர்ப்பகிரஉறத்தைச் சுத்தம் பண்ணுவது இயல்புதானே? எல்லா ஜீவனாயும் நான் இருக்கிறேன்…படைக்கப்பட்ட எல்லாமும் மதிப்புக்குரியதே….இறைவனே வாகனமாய், அவ்வுருவாய் நின்று ஒளிர்கையில் வணங்கிக் சேவை செய் என்பதே தத்துவம். குறைகள் காண்பது எளிது. நல்லதை உணர்வதே கடினம்.

                   ப்படியும் நடக்கும், அந்த நாளும் வந்தது….என்று மறைமுகமாகப் பெயர் வைப்பார்கள் கதைக்கு. அதுபோல் வாங்காத வீட்டிற்கு, வாங்கப் போகும் வீட்டிற்கு “மிதிலா“ என்று பெயர் வைத்து மனதிற்குள் இருத்திக் கொண்ட அடுக்கக வீடு இல்லாமல் போகிறது.  சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட அடுக்ககம் மாநகராட்சியால் தடைசெய்யப்பட, கனவு கலைந்து போகிறது.  பதிவுச் செலவு வீண். மன உளைச்சல்.  தவணை முறையில் எப்படியோ தப்பிக் கிடைத்த மீதிப் பணம்.இதெல்லாம் பணம் பறிக்கங்க…எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம்….என்ற வார்த்தைகளை நம்பாததுதான் தவறாகப் போயிற்று. கைவிட்டுப் போன அடுக்ககம் ஒளிமயமாய் ஜொலிப்பதை எட்டிப் பார்த்தால், வாங்க நினைத்த அதே வீடு, மனதில் நினைத்த அதே பெயரில்…என்னே துரதிருஷ்டம்?

                   நடுத்தர மக்களின் கனவுகள் கடனிலும், அடகிலும், ஆசையிலும், உருவாகி எதிர்பாராமல் கலைந்து போனால்? இதெல்லாம் சகஜம் என்கிறார் ஆசிரியர். எது? விதியை மீறுவதும், பின் அதைப் பணத்தால் சரி செய்வதுமா? என்று மறையும் இந்தத் தவறுகள்? விதிகளும் சட்டங்களும் புத்தகத்தில் இருக்கின்றன. நடைமுறை வேறாயிருக்கிறது. தப்பித்தால் தம்புரான் புண்ணியம். ஆசையே துன்பத்திற்குக் காரணம். அறிவையும், கண்களையும் மறைப்பது எது?

                   தாயின் பாசத்தை உருக்கமாக விவரிக்கும் கதை. சில தாய்மார்கள் உணவுப் பற்றாளர்களாக இருப்பார்கள். அறுபத்தைந்து வயதிலும் அளவு குறையாது விதவிதமாய்ச் சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்தக் கதையில் வரும் தாயும் அப்படியே! மனிதர்கள் தூங்கும்போதும், சாப்பிடும்போதும் பார்க்கக் கூடாது என்பது ஐதீகம் போல். ஒருவரை வெறுக்க ஆரம்பித்தால் அவரி்டமுள்ள தப்புகளாய்த்தான் கண்ணுக்குத் தெரியும். அவைகளை ஒதுக்கிவிட்டு, நல்லதை மட்டும் நினைக்க முற்பட்டால் நல்லதாகவே கண்ணுக்குப் படும். நம்மிடம் உள்ள தவறுகளை நாமே உணருவதைவிட மற்றவர் சுட்டிக்காட்டினால் உறைக்கிறது.

                   தாயாரைப்பற்றி உணர வைக்க நண்பன் வேண்டியிருக்கிறது. அவனும் வேற்று மதத்து நண்பனாயிருந்தால் இன்னும் பலம். யார் மூலமேனும் நல்லதை உணர்ந்தால் சரி என்று வாசக மனம் எண்ண முற்படுகிறது. முதியோர்களை வயிறு நிரப்புவதும், தேவைகளைப் பூர்த்தி செய்வதும் மட்டுமே திருப்தி செய்வதாகாது. அருகில் அமர்ந்து ஆதரவாய் நாலு வார்த்தை பேசுவதுபோல் வருமா? அது கடைசியில் உணரப்படுகிறது. கதை சற்று நீளம். அதனால் அலுப்பூட்டும் நிலையில் முடிந்து போவது விசேஷம். நல்லதை உணர்த்தும் கதை புனரபி ஜனனம்….

                   பெண்மனம்தான் பெண் முகம். கட்டின புருஷனின் தவறுகளையே ஏற்றுக் கொண்டு  குடும்பம் நடத்தும் பெண்கள் நம்மில் பலர். கழுத்தில் கிடக்கும் தாலிதான் அவள் அடையாளம். அதற்காக ஒரு ஆணின் தவறுகளை வெளிப் பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களுக்கு என்ன தலையெழுத்து? ஆனால் அதிகாரப் பதவியில் இருக்கும் ஆண், தன் பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி தனக்குக் கீழ் பணிபுரியும் பெண்களை வசப்படுத்த நினைக்கிறான். இது பல அலுவலகங்களில் உள்ள பலவீனமே…! சொந்த நலனுக்காக இணங்கும் பெண்களும் உண்டுதான். குடும்பச் சூழல்….வேற வழியின்றி இணங்குபவர்களும் உண்டு. எதிர்க்க முடியாமல் இணங்கி, மனதுக்குள் புழுங்குபவர்களும் உண்டு. இந்தக் கதையில் ஒரு பெண் எல்லோர் சார்பிலும் பழி வாங்க நினைக்கிறாள். ஆனால் இறைவனே ஒரு தண்டனையைத் தந்து விடும்போது, அவன் குடும்பத்தின், மகளின் நிர்க்கதி கண்டு மனமிரங்கி உதவும் மனப்பாங்கு வந்து விடுகிறது. ரத்தம் கொடுத்துக் காப்பாற்ற முனைகிறாள். இந்தப் பெண்மனம்தான் சமுதாயத்தின் பெண் முகம்.   சிறப்பான கதை.

                   சிவனுக்கு உபதேசம் செய்தவர் முருகன். தகப்பனுக்கு சாமியானார் கந்தவேள். இந்தக் கதையில் வரும் பிள்ளைகள் அப்பா – அம்மாவுக்கு நேரடி உபதேசம் செய்யவில்லை. பதிலாக வக்கீலிடம் வந்து முறையிடுகின்றன. நல்லபுத்தி சொல்லி அப்பாம்மாவை சேர்த்து வைங்க என்கின்றன. பிரிஞ்சா யார்ட்ட இருக்கிறதுங்கிற கேள்வியும்,  அவரவர் விருப்பப்படிங்கிற பதிலும் அதிர்ச்சியூட்ட ரெண்டு பேரும் வேணும்னு வக்கீலிடம் சொல்கின்றன.

                   டைவர்ஸ் கிடையாது. சேர்ந்து இருந்துதான் வாழ்ந்தாகணும். அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழக் கத்துக்குங்க…இதுதான் தீர்ப்பு என்று கோர்ட் தீர்ப்பு சொல்லுமா? தெரியவில்லை. அப்படிச் சொன்னால் எத்தனையோ குழந்தைகள் பிழைக்கும். உப்புச் சப்பில்லாத சண்டையும், சச்சரவும்,  பின் கூடுதலும்,குடிசைப் பகுதிகளில் சர்வ சகஜம். மேல்தட்டு வர்க்கம்தான் – நடுத்தட்டு – நடுமேல்தட்டு – இவைகளில்தான் இப்பிரச்னை. இதைத் தொட்டுக் காட்டும் கதை இது.

                   பத்திரிகைக்கேற்ற கதை எழுதுதல் என்பதும் ஒரு திறமைதான். எதற்கு அனுப்பினால் க்ளிக் ஆகும்  என்பதும் படைப்பாளிக்குத் தெரிந்தாக வேண்டியிருக்கிறது. அது இவருக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது.

                   வர்களாக முடிவு செய்யலாம். ஆனால் வெளிப்படையாகக் கேட்டு விடக் கூடாது. அது கேவலம். யாரும் பார்க்காமல் கொண்டு விட்டு விடலாம். கேட்டால் அவராகத்தான் சொன்னார்…என்னை முதியோர் இல்லத்தில் விட்டு விடு என்று எனலாம்.  தங்களுக்கும் வயசாகும் என்று யாருமே யோசிப்பதில்லை. முதியோர் இல்லத்தில் வந்து அக்கடா என்று இருந்து விடுவதை பல பெரியோர்கள் விரும்புகிறார்கள். நாலு வார்த்தை நறுக்கென்று அவ்வப்போது கேட்டாலும் மகள்…பேரன்…இவர்களுக்கு நடுவே இருப்பதைச் சிலரே விரும்புகிறார்கள்.

                   வரும் பென்ஷன் காசு போய் விடுமே…இருக்கும் சேமிப்பு அப்படியே கைக்கு வந்து சேர வேண்டுமே…அப்பா கட்டிய வீடு அப்படியே முழுசாய்ச் சொந்தமாக வேண்டுமே…என்று  பெற்றோரைப் பாதுகாக்கிறார்கள். எதுவானாலும் இன்று முதியோர் பிரச்னை சிக்கல்தான். முதியோர் இல்லங்கள் இன்று ஏன் அதிகமானது? எண்பது, தொண்ணூறு என்று சாகாமல் கிடக்கிறார்கள். பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.   உள்நாட்டில் என்ன வாழ்கிறதாம்? எல்லாம் ஏதோவொரு வகையில் சீரழிவுதான்.

                   ஆன்லைனில் பணம் அனுப்பிடுறேன். எல்லாக் கடைசிக் காரியத்தையும்  நீங்களே செய்திடுங்க….எங்களால வர முடியாது….என்று சொல்லும் காலம் இது. முதியோர் இல்லங்களில்…எல்லாக் கிரியைகளுக்கும் எல்லாமும் தயார்தான் இன்று.

                   முதியோர் இல்லமே சிறந்தது. இல்லத்தில் இருப்பவர்கள் கைதிகள்தான். ஆசிரியர் கூற்று சரியே…!

                   தைக்கான ட்விஸ்ட் முதலிலேயே மனதில் தோன்றிவிட்டால் பிறகு எழுதுவது சுலபம். ஸ்வாரஸ்யம் குன்றாமல் உரையாடல்களைப் புகுத்தி, கடைசியில் அந்த ட்விஸ்டில் கொண்டு நிறுத்தி விட்டால் சூப்பர் என்றாகி விடும்.  மண முறிவுக்காக ஆண் வக்கீலை மனைவி அணுக அதே மண முறிவுக்கு பெண் வக்கீலைக் கணவன் அணுக நோட்டீசும் அனுப்பி விடுகிறான். அந்தப் பெண் வக்கீல் அவள் அணுகிய ஆண் வக்கீலின் மனைவி.  ஆண் வக்கீல் ரீதிங்கிங் பண்ணுங்கோ என்கிறார். பெண் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விடுகிறார். இவங்க யாரு நம்ம லைஃப்பைப் பிரிக்கிறதுக்கு? என்கிற அறிவு வேண்டும் இவர்களுக்கு. பிரி, பிரி, பிரி…என்று போய் நின்றால் பிரித்து மேயத்தான் செய்வார்கள். அங்கே அது ஒரு தொழிலாகிப் போகிறது. அதுபற்றிய பிரக்ஞை இவர்களுக்கு வேணும். மனப்பாங்கு இருந்தால் அது மனப் பக்குவமாக மாறும். இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது ஆசிரியரின் எழுத்து வண்ணம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

                   தேருங்கால் தேவன் ஒருவனே…என்று தொடங்கி எல்லாருக்கள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவனே என்று முடிகிறது கதை. கருத்து ஒன்றுதான் எனினும் மதம் மாறுவதற்கு அங்கு என்ன தேவை இருக்கிறது என்பதுதான் புரியவில்லை. அப்பம்தான் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று சொல்லும் முகுந்தன் அந்த அப்பம் கிடைக்கும் இடத்தில் அடைக்கலமாவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. இதைச் சொல்லவா இவ்வளவு பெரிய கதை?அப்படியானால் நோக்கம் வலிதாகிறதே…மனசு ஏற்க மறுக்கிறது.

                   ந்தத் தொகுதியிலேயே எனக்குப் பிடித்த கதை இதுதான். சுக்லபட்சத் திதியைக் கிருஷ்ணபட்சத்தில் பண்ணி வைக்கிறார் வாத்தியார். சுக்லபட்சத்தில் நடந்த கல்யாண வரும்படியும், இந்தத் திவச வரும்படியும் அவரின் அத்தியாவசியத் தேவையாகிறது. பெண் கல்யாணச் செலவுக்கு வேண்டுமே. உதவுமே என்கிற ஆதங்கத்தில் இந்தத் தவறைத் தெரிந்தே செய்து விடுகிறார்.  ஆனால் ஒன்று…குட்டு வெளிப்பட்டபோது, வெளிப்படையாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்கிறார். அப்போது நம் மனம் இறங்கி விடுகிறது. மேலும் அந்தத் திதி செய்து வைத்ததற்கான தட்சிணையையும் வாங்க மறுத்து விடுகிறார். மனசாட்சி அங்கே ஸ்தாபிதமாகிவிடுகிறது. பொருளாதாரத் தேவைகள் மனிதர்களைச் சமயங்களில் தடம் புரளச் செய்து விடுகின்றன. தவறு செய்யாத மனிதன்தான் யார்? பெரும் பணக்காரர்கள் தவறு செய்வதில்லையா? தவறுகளாய்ச் செய்து செய்துதானே அந்த செல்வத்தைப் பெருக்குகிறார்கள்? ஆனால் அதை யார் ஒப்புக் கொள்கிறார்கள்? அது திறமை என்றல்லவா கணிக்கப்படுகிறது? இந்த ஏழை பிராமணன்  வறுமையின் பொருட்டு தவிர்க்க முடியாமல் தடுமாறிச் செய்து விடும் இந்தத் தவறை கடவுளே மன்னித்து விடுவாரே? என்றுதான் நம் மனம் கணக்குப் போடுகிறது. வரும்படிக்கேற்றாற்போல் முகூர்த்த நேரம் நிர்ணயிப்பதில்லையா? ஏற்றுக் கொண்டிருக்கும் விசேடங்களைத் தவறாமல் நடத்தி வைப்பதற்காக – காலநேரம் கருதி மந்திரங்களை முழுங்குவதில்லையா? நாலு வாத்தியார் சொல்லி, ரெண்டு வாத்தியார் அனுப்பி, மீதி ரெண்டின் தட்சிணையை, தான் வாங்கிப் போட்டுக் கொள்வதில்லையா? எல்லாமும் அந்த வேதவித்தின் முன்னால் விழுந்து வணங்கி ஏற்றுக்கொள்வதாகிறது. ஈஸ்வர சம்பத்து, சேம லாபம் என்பதே அங்கே முன் வைக்கப்படுகிறது. அந்த ஐஸ்வர்யங்களுக்கு முன்னால் மற்ற சின்னஞ் சிறு நஷ்டங்கள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. பெரிதாய்த் தோன்றுவதில்லை.

                   எதில்தான் தவறில்லை. எதில்தான் சமரசம் இல்லை? எல்லாமும் தெரிந்து பாதி, தெரியாமல் பாதி என்றுதான் இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது. குறை, நிறை என்பவை அவரவர் மனதைப் பொறுத்துத்தான். இந்த நோக்கில் “திதி“ சிறுகதை மனதை நிறைவு செய்கிறது.

                   புர்ட்சி….புர்ட்சி…என்று சொல்லிக் கொண்டு அலைபவர்கள் பலரும் பொறுப்பற்றவர்கள். அதிலும் கதை, கவிதை என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம் கேரக்டர் இருப்பதில்லை என்பதான கருத்தைப் போகிற போக்கில் அநாயாசமாகச் சொல்லிச் செல்லும் கதை. பல இடங்களில் அப்படித்தானே இருக்கிறது என்பதை நாமும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சுளீர்னு சூடு வாங்கினால்தான் சில பேருக்கு  உறைக்கும்.அது சுந்தரியின் தம்பிக்கு நடக்கிறது. கிறுக்கன்கள் என்று ஒரு வார்த்தையை என்னையறியாமல் என்  வாய் உச்சரித்தது இக்கதையைப் படித்து முடித்தபோது….

                   ண்பால் ஆண்பாலோடு சேரும் கதை. மனசு ஏற்க மறுக்கிறது. கதைதானே என்றாலும் எங்கோ நடந்த, நடக்கும் உண்மையாக இருக்கிறது. கலாச்சாரச் சீரழிவு என்று மனம் புண்படுகிறது. இப்படியிருந்தால் இப்படித்தான் ஆகும் என்பதைவிட, இப்படியும் ஆகும் என்று முடித்திருக்கிறார் ஆசிரியர். எழுத்துத் திறமை சுவையாகச் சொல்ல வைத்து கடைசியில் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து முடித்து வைக்கிறது. அதிர்ச்சிதான். யாருக்கும் எவருக்கும் இப்படியெல்லாம் நடக்கவே வேண்டாம் என்கிற அதிர்ச்சி.

                   சூரியன் என்கிற ஒரு கதை மனதை திடுக்கிட வைக்கிறது. இப்படியொரு செய்தியை இக்கதையின் மூலமே உணர்கிறேன். பட்டாசுப் பொறி பட்டு வேட்டி, சட்டை ஓட்டையாகும். உடம்பில் பட்டு சுர்ர்…சுர்ர்….என்று அதிர வைக்கும். கேள்விப்பட்டிருக்கிறோம்….அனுபவித்திருக்கிறோம். ஆனால் அந்தப் பொறி கண்ணில் பட்டு கண் பாழாகும் அவலம்…எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய விஷயம். இதைச் சொல்வதற்கு சூரியனைத் தினமும் பார்க்க ஆவல் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, சொந்தக் கண் ஒளி பறிபோகும் துயரம்…..சிகிச்சை முறைகள் இருக்கிறதா, இல்லையா…..சரி செய்து மறுபடியும் அந்தக் கண்ணிற்கு ஒளி கூட்ட முடியுமா? முடிய வேண்டுமே என்று மனது வேண்டிக் கொள்கிறது. யாருக்கும் இம்மாதிரி ஒரு விபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்று மனசு பிரார்த்திக்கிறது.

       றைவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கையில் அவனைத் தொழுகிறோம். நம்பினாற் கெடுவதில்லை…இது நான்கு மறைத் தீர்ப்பு என்கிற அழுத்தமான நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு….என்று ஆன்மீகம் தழைத்து நிற்கும் பூமியாக இது இருக்கிறது. உண்டென்றால் அது உண்டு…இல்லையென்றால் அது இல்லை. இங்கேதான் இறைவன் இருக்கின்றானா…..மனிதன் கேட்கிறான்…என்று கேள்விகளும் காலம் காலமாய் விழுந்து கொண்டிருக்கின்றன. இருக்கிறான் என்றால் ஏன் இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றன? ஏன் இத்தனை கொலைகள் நடக்கின்றன? ஏன் இத்தனை பலிகள் நடக்கின்றன?இத்தனை பாவங்கள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன… ஒரு பாவமும் அறியாத பிஞ்சு உயிர்கள் பலியாகின்றனவே….நீ இருக்கிறாய் என்றால் இந்த அக்கிரமங்களை, அநியாயங்களை நீ தட்டிக் கேட்க வேண்டாமா? தடுத்து நிறுத்த வேண்டாமா? என்ற கல்கி அவதாரம் உதித்து இந்தத் தீமைகள் அழிந்தொழியும்…என்று இந்த உலகம் சுபிட்சம் பெறும் என்ற கேள்விகளும் காலம் காலமாய்க் கூடவே வந்து கொண்டிருக்கின்றனதான்.

                   மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஆசைதான் என்பதை மனித மனம் உணரத்தான் செய்கிறது. உணர்ந்தும் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டேதான் இருக்கிறது. உடலாசை, பணத்தாசை மனிதர்களை வாட்டி வதைக்கிறது. அதனால் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். அவ்வாறு தவறுகள் செய்து கொண்டேயிருப்பதன் மூலம் இறைவன் என்று ஒருவன் இல்லவேயில்லை, எல்லாமும் நாமே கற்பித்துக் கொள்வது, இந்த உலகத்தில் தோன்றியவையெல்லாம் நாம் அனுபவிப்பதற்கே…இருக்கும் மட்டும் அனுபவித்துத் தீர்த்து மறைந்து போவதே இந்தப் பிறவியெடுத்ததன் நோக்கம், பலன் இங்கே முற்பிறவிப் பலன், முற்பிறவிக் கேடு, முன்னோர் செய்த பாவங்களின் தொடர்ச்சியான துன்பங்கள், நமக்கு நாமே முற்பகலில் செய்து கொள்ளும் தவறுகளும், பாவங்களும் பிற்பகலில் நமக்கு வந்து சேருகின்றன….எந்தவொருவனும் எந்தத் தவறுகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தப்பித்து விட முடியாது….எல்லாவற்றையும் இன்றோ, நாளையோ அனுபவித்து முடித்துத்தான் தன் இறுதி மூச்சை விட முடியும்…இதுவே இறைவனின் சித்தம். எழுதி வைத்த விதி, எழுதாத தத்துவம்…தன் தொடர்ந்த தடையில்லாத தவறுகளின் மூலம், பாவங்களின் மூலம் கடவுளை எதிர்த்தவன், கடவுளை ஒதுக்கியவன், கடவுளை நிராகரித்தவன், கடவுளை மிதித்தவன், கடவுளைக் கொன்றவன் என்று எதுவுமில்லை…எவருமில்லை…. இந்தத் தத்துவத்தின் மூல விசாரமே ஒரு கொலைக்கான விசாரணையாய், தத்துவார்த்த விளக்கங்களாய், கேள்விகளாய், பதில்களாய் இந்தக் கதையில் விரிகிறது என்கிற அளவில் “கடவுளைக் கொன்றவன்” என்ற புத்தகத் தலைப்பிலான கதையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

                   இச்சிறுகதைத் தொகுப்பின் கடினமான கதையாய் உணர வைத்தது இந்தக் கதைதான் என்று சொல்லுவேன்.  புரிந்தும் புரியாமலும் நகர்ந்து செல்வது ஒரு படைப்பிற்கான வெற்றியாய் எப்போதும் அமையாது. வாசகனைக் குழப்பத்திற்கு ஆளாக்கி, இதுவாய்த்தான் இருக்கும் என்ற ஊகங்களின் அடிப்படையில் நகர்த்துவது என்பது திருப்தியளிக்காது. இந்த ஒரு படைப்பு எனக்கு இம்மாதிரித்தான் உணர்த்தி அலுப்பினை ஏற்படுத்தியது என்று கூடக் கூறலாம். ஆனாலும் இதை இறைவனை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் விதமாயும், நடைமுறை யதார்த்த நிகழ்வுகளாயும் பிணைத்துப் பிணைத்து இந்தக் கதையை ஆசிரியர் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியதாகவே எண்ண வைக்கிறது.

                   ஒரு தொகுதிக்கு 22 கதைகள் என்பது மிக அதிகம். அதிகபட்சம் 18 கதைகள் என்பதே ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கான உள்ளடக்கம் என்று கொள்ளலாம்.  கீதையின் 18 அத்தியாயங்களைப் போல. ஒரு முறை படித்து ஒதுக்கி வைக்கும் புனைவு ரீதியிலான  சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள்…என்பவை வேறு. தொடர்ந்து நம்மோடு வாழ்வு பூராவும் பயணிக்க வேண்டிய இதிகாசங்கள், புராணங்கள் என்பவை வேறு.        ஆனாலும் இலக்கியங்கள் நம்மை, நம் வாழ்வைப் பக்குவப்படுத்துகின்றன என்கிற உண்மைகளை மறைக்க முடியாது. ஒரு சிறந்த விவேகியாக மாற்றும் திறன் இலக்கியங்களுக்கு உண்டு என்பது சத்தியமான விஷயம்.

                   ஒரு தொகுதியில் 15 கதைகள் இருப்பின் அதில் ஐந்து கதைகள் சிறப்பாக இருந்தால் அத்தொகுதி வெற்றி என்று பொருள் கொள்ளப்படும். இருபத்தியிரண்டு கதைகளை உள்ளடக்கிய சித்ரூபனின் இந்தக் “கடவுளைக் கொன்றவன்” தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இது ஆசிரியருக்குக் கிடைத்த பெருமை என்றே கொள்ளலாம்.

                   சித்ரூபன் எழுபது எண்பதுகளிலான கணையாழி, தீபம் போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.  மிகச் சிறந்த தரமான, உயர்ந்த படைப்பாளிகளால் அவரது படைப்புக்கள் படித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது கண்டு நம் மனம் பெருமிதம் கொள்கிறது. அன்றே நிலைத்தவர் பின் ஏன் தொடராமல் விட்டார் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாகிறது.  இத்தொகுதியில் உள்ள கணையாழி கதைகளைப் படிக்கையிலேயே தெரிகிறது…அவைகளை மட்டுமே தொகுத்து இவர் அன்றே ஒரு தொகுதி கொண்டு வந்திருக்கலாமே என்று. அன்று எழுதி நின்று போன படைப்பாளிகள் அநேகம் பேர் நம்மிடையே உள்ளனர். அவர்கள் இன்று மீண்டும் எழுதினாலும் அவர்களின் தரம் குன்றாது என்பதற்கு சித்ரூபனின் இத் தொகுதிக் கதைகளே சான்று. இவர் எழுத்தின் அஸ்திவாரம் மிகவும் பலமானது.

                   இப்பொழுதாவது தொடர்ந்து எழுத வந்திருக்கிறாரே என்ற நினைக்கையில் அவரின் அறிமுகம் கிடைத்ததும், அவரின் படைப்புகள் குறித்து அறிய நேர்ந்ததுமான நிகழ்வுகள் நம் மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் அளிக்கிறது. 

                   சித்ரூபன் தொடர்ந்து எழுத வேண்டும். சிறுகதைப் பரப்பிலும், நாவல் உலகிலும் தனிக்கொடி நாட்ட வேண்டும் என்பதே எம் விருப்பம். தமிழ் நவீன இலக்கிய உலகில் அவருக்கென்று ஒரு சிறப்பான இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அவருக்கு நினைவு படுத்துவோம்.

                                                       ----------------------------------

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...