29 ஆகஸ்ட் 2023

 

“யட்சன்“ -சிறுகதை – படையல் தொகுப்பு – ஜெயமோகன்- வாசிப்பு ரசனை அனுபவம் - உஷாதீபன் (ஆகஸ்ட் 28, 2023 ஜெ. தளத்தில்)

         


  
படையல் தொகுப்பின் இந்த இரண்டாவது சிறுகதை முதல் கதை “கந்தர்வனின்“ தொடர்ச்சியாக நிகழ்கிறது.  யட்சன் இரவில் கண்ணுடையவன் என்று பொருள் கொள்வோமானால்…

            திருக்கணங்குடி  கோயில் கோபுரத்திலே சிலையா நிக்கப்பட்ட யட்சனாக்கும்டே  நான்னு சொன்னாரு…- என்று அருணாச்சலம்பிள்ளை சொல்வதாக வரும் பிச்சைக்காரச் சித்தன் முருகப்பனின் வாக்கு எல்லோராலும் உண்மை அறியப்படாத சத்திய வாக்காகிறது.

            சத்தியவாக்குதான் என்றாலும் கேட்பவர்கள் அதை அப்படியிருக்குமோ இப்படியிருக்குமோ என்றுதான் தங்களுக்குள் முடிவு செய்து கொள்கிறார்கள்.

            அறுதலித் தேவ்டியாளுக்கு மாலையா?  கெட்டினவன் இருக்க கண்டவனுக்கு தீப்பாஞ்ச சிறுக்கிக்கு மாலையும் வேண்டாம்  ஒரு மயிரும் வேண்டாம்….

            உண்மையறிந்த சில பேரும் இங்கே வாயைத் திறக்க முடியவில்லை. வாயைத் திறந்தால் ஆரம்பித்த இடம் வரை போய் நின்று கழுவேற்றம்வரை சென்று முடியும் அபாயம்.

            ஒரு ஆரம்பப் பொய்யை மறைக்க அடுத்தடுத்த செயல்பாடுகள். எந்தவகையிலும் உண்மை வெளிவந்தால் ஆபத்து எனும் கொடூரத்தை உணர்ந்து தனக்குட்பட்ட அதிகார வளையத்திற்குள் நின்று செயல்பட்டு நிலை நிறுத்தப்படும் விழுமியங்கள் சார்ந்த நம்பிக்கைகளின் பலம்.

            பேசாம எடுத்து கிடத்துலே…ஒரு மாலையை அவன் மேலேயும் போடு…சித்தர் சமாதியாயிட்டார்னு சொல்லி வைப்போம்….-பொய்யின் ராஜ்யம் மேலோங்கி நிற்கிறது. ஒன்றை மறைக்க இன்னொன்று…இன்னொன்று என்று பொய்ச்சுவர் பலப்பட்டுக்கொண்டே போகிறது.

            ஒரு தள்ளுக்கு குஷ்டரோகிப் பிச்சைக்காரனான முருகப்பன்   ஆளே சாய்ந்து விட்டதுதான் எவ்வளவு வசதியாய்ப் போயிற்று? ஆனால் அதுதான் இங்கே ஒரு விநோதம்.

            ஊரை விட்டுப் போன வள்ளியம்மையின் புருஷன் முருகப்பன்தான் இந்த உருவில் சிதைந்து வந்து நிற்கிறான் என்பதை கடைசிவரை துல்லியமாய் யாரும் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை.  ஒரு ஊகத்தில் கூடப் புரிந்து கொள்ளும் வகையிலான அடையாள உருவில் அவன் இல்லை. எல்லாம் சிதைந்து போய் மரணத் தருவாயில் மிஞ்சி நிற்கும் அவன் மனதில் குறையாத வீரியமாய் நிற்பது அவனுக்குள் இருந்த அந்த உண்மைதான்.

            அறுதலித் தேவ்டியா…நாறத் தேவிடியா…என்று அவன் ஆத்திரம் பொங்கத் திட்டும் ஆக்ரோஷம் அவனுக்கு ஏன் வருகிறது. அவள் மேல் என்றோ கொண்ட ஒரு சந்தேகத்தின் நிழல் படிந்து கிடப்பதுதான் என்கிற உண்மையை முன்னமே ஒரு இடத்தில் உணர்த்தி விடுகிறார் ஜெ.

            உன்சோலி அந்தப் பண்டாரம் கூடத்தானேடி….தெரியும்..

            தெரியும்ல…போங்க…. என்று செருக்காய் பதிலிறுக்கிறாள் வள்ளியம்மை.

            தப்பு ஏதும் செய்யாமலேயே ஊரை விட்டு நீங்க நேரும் கொடுமை. ஆனாலும் அவனிடம் படிந்த வேலைத் திறன் அவனை வாழ வைக்கிறது. அரவணைத்தவர்கள் அருகில் அமர்த்திக் கொள்ள….வசதிகள் பெருகப் பெருக….மனதில் பொங்கிப் பொங்கி அடங்கிக்கிடந்த ஆத்திரம்…அவனை விட்டேற்றியாய்ப் பயணிக்க வைக்கிறது. ருசி காணாதது என்று ஏதும் இருக்கக் கூடாது என்கிற முனைப்பில் பணம் பஞ்சாய்ப் பறக்கிறது. கூடவே படிப்படியாக வியாதியும் வந்து ஒட்டிக் கொள்கிறது . தகாத செயல்களால் கிடைக்கும் பரிசுகள் அவன் வாழ்க்கையையே சிதைத்து அலைய விட்டு விடுகிறது.

            வாழ்ந்து கெட்டு வந்தடையும் இடம் ஆளையே அடையாளப்படுத்தவில்லையே…!

            ஆனால் அவன் யட்சனானது என்னவோ உண்மைதான். எரிந்த சாம்பலில் பொன் உருகிப் படர்ந்திருக்க – தூய பசும்பொன்…ஆடகப் பசும்பெொன்…யட்சகர்களுக்கு அந்த விளையாட்டு உண்டு. ஊர் அந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறது. இயக்கன் சாமியாகப் பிரதிஷ்டை நடக்கிறது. எப்படி? உடனுறை நங்கையையும், எறிமாடனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இயக்கன்சாமியாய் நிற்கும் ஊரறியாத முருகப்பன் என்கிற பிச்சைக்காரச் சித்தன்.

            இந்தக் கதைகள் வரலாற்றுச் சூழலிலான மனித நிலைகளை ஆராய்கின்றன என்கிறார் ஜெ.   உண்மைதான். எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் மனிதர்கள் ஒரே மாதிரியாகவும், தந்திரம் மிக்கவர்களாகவும், வஞ்சம் கொண்டவர்களாகவும், அதிகார போதை சுமந்தவர்களாகவும், இளைத்தவர்களை ஒடுக்குபவர்களாகவும், தன் நிலையிலிருந்து கீழிறங்காத வகையில் சாமர்த்தியமான, துணிச்சலான, முறை தவறிய நிலையிலானாலும் கூட என்றுதான் செயல்பட்டு நின்றிருக்கிறார்கள் என்கிற தவிர்க்க முடியாத உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

            யட்சன் – அழுத்தமான நம் மனதில் நிற்கும் அழியாத படைப்பாகிறது.

 

                                                -----------------------------------

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...