04 மார்ச் 2019

எழுத்தாளர் திரு.சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள் எனது அன்பான மனதுக்கு இணக்கமான நண்பர். அவரின் படைப்புக்கள் அனைத்தையும் படித்துப் படித்து வியந்திருக்கிறேன். தனித்துவம் மிக்கவர். அதனால்தான் மிகக் குறைவாக எழுதியபோதிலும் நின்று பேசப் படுபவராக இருக்கிறார். அவரது "நடன மங்கை" சிறுகதைத் தொகுப்புபற்றி நண்பர் திரு.சுனில் கிருஷ்ணன் எழுதிய வாசிப்பனுபவத்தை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.
-------------------------------------------------------------------
-திரு.சுனில் கிருஷ்ணன் எழுதிய சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் "நடனமங்கை" சிறுகதைத் தொகுப்பின் வாசிப்பனுபவம்
-------------------------------------------
நடன மங்கை – சுரேஷ்குமார் இந்திரஜித்
Posted by suneel krishnan
சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதி உயிர்மை வெளியிட்டுள்ள ‘நடன மங்கை’ எனும் சிறுகதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. எண்பது பக்க அளவில் சிறிய புத்தகம்தான்.
தமிழ் தி இந்து தீபாவளி மலரில் அவருடைய ஒரு கதையை படித்தது நினைவில் இருக்கிறது. விஷ்ணுபுர விழா ஒன்றில் அவருடன் கலந்துரையாடல் நிகழ்ந்ததும் நன்றாகவே நினைவிருக்கிறது. கதைகளின் வழி அவர் எதை நிகழ்த்த முயன்றார் என விரிவாக பேசினார். குறிப்பாக, கதைகளில் இருந்து கதையை வெளியேற்றுவது, எனும் தனது தற்கால முயற்சிக்கு தான் வந்து சேர்ந்த பாதையை பற்றிப் பேசினார்.
நிகழ்வின் சாத்தியங்களை மனம் கற்பனை செய்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் ஒரு தீர்மானம்தான். கணக்கற்ற பாதைகள் கண்முன் விரிகின்றன. ஏதோ ஒன்றைத் தேர்வு செய்கிறோம், அல்லது அவ்வாறு நிர்ப்பந்திக்கப்படுகிறோம். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கதைகள், வாழ்வின் இம்மர்மத்தின் சாத்தியத்தை நவீன சிறுகதைக்கே உரிய அடங்கிய தொனியில் காட்டுகிறது. வாசகனை வியப்பில் ஆழ்த்த வேண்டும் எனும் யத்தனம் ஏதுமில்லை. “ஆமாம்ல” என்று ஒரு சிறிய புன்னகையுடன் அவனும் ஆமோதித்து கதைசொல்லியோடு சேர்ந்து தலையாட்டுகிறான். .
நடன மங்கை, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, வீடு திரும்புதல் ஆகிய கதைகளில் இந்த அம்சத்தை காண முடிகிறது. ‘நடன மங்கை’ கதையில் முந்தைய இரவில் தன்னுள் காமத்தை கிளர்த்திய பெண்ணைத் தேடி செல்கிறான். முன்னர் அவள், ஆட்டத்தின்போது ஒரு களிப்பின் கணத்தில் ரவிக்கையிலிருந்து ஒரு சிறு துணியை அவன் முகத்தின் முன் வீசி எறிந்திருக்கிறாள். ஹோட்டலில் தன்னை நெல்லை ஹோட்டல் மேனேஜர் ஆனந்த் குமார் என அறிமுகம் செய்து கொள்கிறான். அடுத்து ஆனந்த், பாலா மாஸ்டரை சந்திக்கச் செல்கிறான். அங்கு தன்னை, ஆங்கில இதழ் நிருபர் ஜான்சன் என அறிமுகம் செய்து கொள்கிறான். அதன்பின் ஜான்சன், நடன மங்கையை தேடிச் செல்கிறான். அவனுக்கும் அடையாளமில்லை, அல்லது வெவ்வேறு அடையாளங்களுக்குள் அவன் பாட்டுக்கு புகுந்து செல்கிறான். அவளுக்கு மஞ்சு என்றொரு பேரும் உருவமும் அடையாளமும் இருக்கிறது. ஆனால் அவள் யார்? யாராக எல்லாம் இருக்கக்கூடும்? அவள் வசிப்பிடம் என்னவாக இருக்கும்? சந்தித்தார்களா இல்லையா? என எல்லாமும் புதிராக இருக்கிறது.
இந்த கதை எனக்கு முக்கியமாகப் பட்டதற்கு காரணம் இது மனித மனத்தின் விசித்திரமான ஒரு மூலையைக் காட்ட முனைகிறது. அவள் ரவிக்கையில் இருந்து ஒரு துண்டு துணியை வீசி எறியும் காட்சி அவனை அமைதியிழக்கச் செய்கிறது. அதன்பின் அந்த கணம் அவனுள் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஜெயமோகன் அவருடைய ஒரு உரையில், பேருந்தில் தனக்கு முன் எழுந்து இறங்கிச் சென்ற ஒரு பெண்ணின் பின்பக்கத்தைப் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறார். அவள் பேரழகியாக இருக்க வேண்டும். ஆனால் இறங்கிச் சென்றுவிடுகிறாள். அவளுடைய முகத்தைக் காண முடியவில்லை. இனி காண்பதற்கான வாய்ப்பேதும் இல்லை. கண்டாலும் அவள்தானா என்றறிய வாய்ப்பில்லை. கணப்பொழுது என்பது முடிவிலிக்கு நீளும் சாத்தியம் கொண்டது. இங்கு, ஜெயமோகன் எழுதிய, பிழை எனும் மற்றொரு கதையும் நினைவுக்கு வருகிறது. நாயகனின் மிக அபத்தமான ஒரு தலையசைப்பு கோடான \கோடி மக்களால் நினைவு கூரப்படும் மர்மத்தை எழுதி இருப்பார். ஒரு காட்சி, ஓர் அசைவு நடன மங்கை நாயகனைக் கிளர்ந்தெழச் செய்கிறது. அவன் நினைவில் என்றென்றைக்கும் அது உயிர்த்திருக்கும். ஒரு விழிப்புற்ற கணம். அந்த கணம் மீண்டும் நிகழ்ந்திடாதா என்றொரு ஏக்கம். அந்த கணம் நினைவு கூரப்படும்தோறும் அதனுடன் சேர்ந்து காமமும் கிளர்ந்தெழும். ஏன் இப்படி என்ற கேள்விக்கு, தர்க்க ரீதியாக எந்த விடையும் இல்லை.
‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ கதையில் எழுத்தாளனின் கனவுகள் தறிகெட்டு போகின்றன. இந்தக் கதை முடிவில் சிறிய புன்னகை விரிகிறது. ஒரு முக்கியமான கேள்வியையும் விட்டு செல்கிறது. ‘மனிதர்களை நம்புவது அத்தனை சிக்கலானதா’ என்பதே அந்த கேள்வி. எழுத்தாளனின் பகற்கனவுகளைப் பார்க்கும்போது, ஆம், அத்தனை எளிதில் நம்பிவிடக்கூடாது, என்றே தோன்றுகிறது. இந்தக் கதை எழுதக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வை இந்திரஜித் முன்னுரையில் சொல்கிறார்.
‘கலந்துரையாடல்’ என்ற மற்றொரு கதையில் இலங்கை இனப் படுகொலை பற்றிய விவாதத்தில் பங்குபெற ஹனுமார் வருகிறார். இந்தக் கதையிலும் ஒரு சிரிப்பு ஒளிந்திருக்கிறது, இயலாமையின் சிரிப்பு. இந்திரஜித்தின் கதைகள் அரசியலை விலக்கிக் கொள்ளவில்லை. பெரியார் இரண்டு கதைகளில் நினைவுகளாகவும் நேரடியாகவும் வருகிறார். இலங்கை பிரச்சனையை இரண்டு கதைகளில் கையாள்கிறார். ‘அம்மாவின் சாயல்’ மட்டும் கொஞ்சம் உரக்க ஒலிப்பது போலிருந்தது. இரண்டு மூன்று கதைகளில் பெரியார் அபிமானம் இருந்தும் செவ்வியல் பக்தி இலக்கியங்கள் மீதும், கர்நாடக சங்கீதம் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பாத்திரங்களை காண முடிகிறது. முன்னுரையில், இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளை தவிர பிற அனைத்தும் ஒரு நாவலுக்கு உரியவை என்கிறார். அந்த இணைப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது. திருமணமாகி கணவனை இழந்து “வீடு திரும்புதல்” பெரியாரின் உந்துதலில் இளம் மகளுக்கு மறுமணம் செய்விக்கும் தந்தையின் கதை “புன்னகை” என அந்த நீட்சி பிடிபடுகிறது.
இந்திரஜித்தின் ‘கணவன் மனைவி’ கதை ஜெயமோகனின் 'தாஸ்தாவெஸ்கியின் முகம்' கதையை நினைவுபடுத்தியது. “எழுத்தாளன், நடிகை, காரைக்கால் அம்மையார்” மற்றொரு சுவாரசியமான கதை. புனைவுக்கும் உண்மைக்கும் இடையிலான உறவு, கதாபாத்திரங்களின் சித்தரிப்பு பற்றிய கதைகள் பலரும் எழுதி இருக்கிறார்கள். யுவனின் “நீர் பறவைகளின் தியானம்” தொகுப்பில் கூட இப்படி ஒரு கதை வாசித்திருக்கிறேன்.
'கால்பந்தும் அவளும்' மற்றுமொரு நுட்பமான கதை. ஈஸ்வரனை அந்த ஆங்கிலோ இந்திய பெண் அவனுடைய கால்பந்து விளையாட்டில் மயங்கி நேசிக்கிறாள். அவன் கால்பந்து விளையாடும் அழகை அவள் வர்ணிப்பது மிக அழகாக இருக்கிறது. அவள் மகன் வைத்திருக்கும் புகைப்படத்தில் வாஞ்சை நிறைய கால்பந்துடன் நிற்கிறாள் அவள்.
இந்திரஜித்தின் கதைகள் எனக்கு யுவனை நினைவுபடுத்தின. கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுதத் துவங்கியவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள் என்பதை தாண்டி இருவருமே கதைகளின் சம்பிரதாய வடிவத்தை மீறி செல்ல முயன்றவர்கள். யுவனின் கதைகளில் ‘தற்செயல்களின் ரசவாதத்தை’, ‘மாற்று மெய்மையை’ உணர்வது பிரமிப்பளிக்கிறது. இந்திரஜித்தின் கதைகள் நிகழ்வுகளில் உள்ள திடத்தன்மையை குலைக்கின்றன. நிகழ்வுகள் நாம் எண்ணுவது போல் அத்தனை இறுக்கமானவையல்ல மாறாக நெகிழ்வானவை (plasticity) என்பதை வியப்பற்ற தொனியில் சொல்லிச் செல்லும் கதைகள். இருவரின் கதைகளிலும் உள்ள முக்கியமான பொதுத்தன்மை என்பது வாசக சுதந்திரம். கதைகள் வாசக மனதில் வேர்கொண்டு கிளைபிரித்து வளரும் இயல்புடையவை. மிக முக்கியமாக வெறுமே கதை யுத்திகளை பரிசோதித்தவர்களாக நில்லாமல் இலக்கிய கர்த்தாக்களாக தம்மளவில் வாழ்க்கையை சித்தரித்து காட்டியவர்கள். இருவரின் கதைகளுமே அவை அளிக்கும் வாசிப்பின்பத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் வாசிக்க வைப்பதாக இருக்கின்றன.
இந்திரஜித்தின் கதைகள் யுவனின் கதைகளில் இருந்து வேறுபடும் ஒரு புள்ளி அவரளிக்கும் காட்சி அனுபவம். யுவனுடைய கதைகள் ஒலி அனுபவத்தை அதிகமும் அளிப்பதாகத் தோன்றும். சினிமா மொழியில் சொல்வதானால் ஒரு சில ஃபிரேம்கள் கதையை மீறி மனதிற்குள் நிலைத்திருக்கின்றன.
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் இத்தொகுதி மனித நடத்தையின் விசித்திரங்களை பதிவு செய்கிறது. அறுத்து, கூறு போடாமல் அதை அவரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது. .
-சுகி
நடன மங்கை
சுரேஷ்குமார் இந்திரஜித் புனைவு, சிறுகதைகள்,
உயிர்மை வெளியீடு

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...