04 மார்ச் 2019

“வருகை“ – எழுத்தாளர் சிந்துஜா - சிறுகதை – வாசிப்பனுபவம்

“வருகை“ – எழுத்தாளர் சிந்துஜா - சிறுகதை – வாசிப்பனுபவம்-உஷாதீபன்
(தொடரும் ஒற்றைத்தடம்-சிந்துஜா - சிறுகதைத் தொகுதி)
வெளியீடு-அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்-பெரம்பூர்-சென்னை. ****************************************
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்….. ----------------------------------------------------------------------------------
தொடர்ந்து வார, மாத இதழ்களைத் தவறாமல் பார்க்கும், படிக்கும் வாசக அன்பர்கள், சமீப காலமாக ஒரு குறிப்பிட்ட பெயர் அடிக்கடி கண்ணில் தட்டுப்படுவதை உணர்ந்திருப்பார்கள். அதுதான் “ஸிந்துஜா“.
தினமணி கதிர், கணையாழி, நவீன விருட்சம், கல்கி, தீராநதி என்று எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார் இவர். என்ன வேகத்தில் எழுதுகிறாரோ அதே வேகத்திலான அநாயாசமான நடை இவருடையது. அலட்டிக் கொள்ளாமல்,மெனக்கெடாமல், போகிற போக்கில் கதை சொல்லும் பாங்கு, படிக்கும் வாசகர்களை ஸ்வாரஸ்யப்படுத்தும். விறுவிறுவென்று பக்கங்களை நகர்த்தும்.
நா.பார்த்தசாரதியின் “தீபம்” காலத்து எழுத்தாளர் இவர். என் பார்வையில் இடையில் ஒரு பிரேக். இப்போது மறுபடியும் சுறுசுறுவென்று கிளம்பி மேலே வந்து கொண்டிருக்கிறார். மேலென்ன வர்றது? மேலதான்யா இருக்கேன் …அவர் சொல்வது காதில் விழுகிறது. .
நமக்குத் தடையாக இந்த மனுஷன் எங்கேயிருந்து வந்தான்…? என்று விடாமல் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒரு கணமேனும் நினைக்கக் கூடும். அதற்காக அவரைத் தவிர்த்துவிட்டா போக முடியும்? எதையெதையோ படித்துத் தள்ளுகிறோம்…சீனியரான இவருடையதைப் படிக்க என்ன கேடு வந்தது? எனக்கு அந்த வித்தியாசமெல்லாம் கிடையாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகக் கதை சொல்வது கட்டுப்பட்டு வந்திருக்கிறது. அதையதை அவரவர்கள் அங்கங்கே செய்து கொண்டிருக்கிறார்கள். எவன் தடை போடுவது? யார் தடை போட முடியும்? முடியுமானால் இந்த ரேஸில் ஜெயிக்க முனையலாம். அதுவே புத்திசாலித்தனம். அல்லது கை குலுக்கலாம். நீயும் எழுது, நானும் எழுதறேன்….காலம் பதில் சொல்லட்டும் என்று….! காலம் கை விட்டுப் போனால்தான் என்ன கெட்டுப் போகிறது? இங்கே எழுத்தால் என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன? மிகப்பெரும் ஜாம்பவான்களுக்கே ஒன்றுமில்லையே…! ஆனால் அவர்களின் படைப்புக்கள் காலத்தால் நிற்கின்றன. அதை மறுக்க முடியாது. அந்த வகையில் ஒரு திருப்திதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு….!
எல்லோரோடும் கை குலுக்குவதுதான் என் பாணி. நேற்று எழுத ஆரம்பித்த இளைஞர்கள் கூட நல்ல படைப்புக்களைக் கொடுக்கும்போது, மனம் பூரித்துத்தான் போகிறது. நாம் செய்யாததை இவர்கள் எத்தனை சுலபமாகச் செய்து விட்டார்கள்? வாழ்க…வளர்க…என்று வாழ்த்துகிறது மனது.
எனக்குத் தெரிந்த வகை மாதிரி இது. எழுதுவேன்…எழுதாமலும் இருப்பேன். யாரைக் கேட்டு எழுத வந்தேன்….யாரைக் கேட்டு நிறுத்த வேண்டும்? சொல்லப்போனால் அதிகமாய் படிப்பதிலேயே இன்பம் காண்பவன் நான். அதிகபட்சமாய் ஒரு உந்துதல் ஏற்படும்போதே நான் எழுதுகிறேன். மற்ற நேரம் பூராவும் வாசிப்புதான். நிம்மதியான பாடு.
அப்படியான ஒரு அரிப்பில்தான் ஸிந்துஜாவின் புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.“தொடரும் ஒற்றைத் தடம்“.. படிக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு தொகுதியிலுள்ள மொத்தச் சிறுகதைகளையும்பற்றிச் சொல்வது என்பது எனக்கு எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை. அணிந்துரை எழுதுபவர்கள்கூட அந்தத் தொகுதியின் மூன்று நான்கு கதைகளைப் பற்றி மட்டுமே சொல்லிச் சென்றிருப்பார்கள். அந்த மூன்று நான்கில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டுமே பிரமாதமாகப் பகிர்ந்திருப்பார்கள். ஒரு தொகுதியின் பதினைந்து கதைகளில் ஒரு ஐந்து சிறுகதைகள் சிறப்பு என்றாலே அந்தப் புத்தகத்திற்குப் பெருமைதான். பதினைந்தில் பத்துக்கு மேல் தேறும் தொகுதிகளெல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மேலாண்மை பொன்னுச்சாமியின் தொகுதிகளை நான் அப்படிக் கண்டடைந்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அது என் ரசனையின்பாற்பட்டது. மொத்தக் கதைகளையும் சொன்னால் அங்கங்கே ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டு செல்வதுபோல் ஆகிவிடக்கூடும். எனக்கே திருப்தி இல்லாத தன்மை ஏற்படும். எழுதுபவனுக்கு முதலில் திருப்தி வர வேண்டும். அதுதான் வாசகனை மனதில் வைத்து அவன் கணிக்கும் கணிப்பு. அதனால்தான் ஒரு சோறு பதம் என்று பலவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துச் சொல்வதே சிறப்பு என்று கருதுகிறேன். ஒன்றே சொல்லுதல்…அதுவும் நன்றே சொல்லுதல்…!
சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையில் ஏற்படும் அசாதாரணத் தருணங்களே இத் தொகுப்பில் உள்ள கதைகளின் அடிநாதம் என்ற குறிப்பு இப்புத்தகத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது.
அந்த அசாதாரணத் தருணங்களை இவர் கண்டடையும் இடம் நமக்கு சற்றே அதிர்ச்சியை, எதிர்பாராத் தருணத்தில் வியப்பைக் கொடுத்து, மனது ஏற்க மறுத்தாலும் கூட, ஏன் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்து சமாதானம் கொள்ள வைக்கிறது. அங்கங்கே ஒன்றிரண்டு அப்படியும் நடந்துபோகிறதுதானே என்ற உண்மையை நினைக்க வைக்கிறது. மிடில் க்ளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் மனிதர்களைச் சுற்றி வலம் வருகிறது இவரது கதைகள். உலகின் எல்லாப் பகுதிகளிலும் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன.
நானும் கதை எழுதுபவன்தான். ஆனால் என் கதாபாத்திரங்கள் மிக மிக எளிமையானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். வண்டி இழுக்கும் தொழிலாளி, இளநீர் விற்பவன், தெருவில் உப்பு விற்றுச் செல்பவன், பழைய செருப்புத் தைப்பவன், இஸ்திரிப் பெட்டியோடு போராடுபவன், பழைய பேப்பர் எடுப்பவன், சாக்கடை அள்ளுபவன், ஆட்டோ டிரைவர், பழக்கடை வைத்திருப்பவன், போஸ்ட்மேன், தெருக்கூட்டுபவன் …என்று என் ரத்தத்தோடு கலந்த மனிதர்களைப் பற்றிச் சொல்வதில்தான் எனக்கு ஆத்ம திருப்தி. நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்தது இதைத்தான். அவர்களை விட்டு என்னால் தாண்ட முடிவதில்லை என்பதுதான் உண்மை.
அதற்காக அதை எழுதினால் மட்டுமே சரி என்று சொல்ல முடியுமா? கலையும் இலக்கியமும் இந்த சமுதாயத்திற்காக என்கிற அதேசமயத்தில் கலை கலைக்காகவே என்கிற இன்னொரு கூற்றும் இங்கே அழகுறப் பயணித்துக் கொண்டிருக்கிறதே…! அதில் விஞ்சி நிற்கும் படைப்புக்கள் வியக்க வைக்கின்றனவே…!
ருக்மிணி மாமியை அறிமுகப்படுத்தும்போதே அந்த மாமிக்குள் பொதிந்திருக்கும் உற்சாகம் நம்மையும் வந்து தொற்றிக் கொள்கிறது. மாமி பெங்களூர் மெஜஸ்டிக்கில் போய் இறங்கும்போதே வரவேற்கும் கார்த்தி, மாமியின் நீல நிற ட்ராவல் பேக்கை வாங்கிக் கொண்டு கைக்குஅடக்கமா அழகா இருக்கு என்று சொல்ல, ஃப்லிப்கார்ட்ல வாங்கினேன் என்று ஆன் லைனில் வாங்கியதை மாமி பெருமையாய்ச் சொல்ல, நவீன யுகத்தின் இயக்கங்களோடு மாமி கைகோர்த்துக் கொண்டு முனைப்பாய் செல்லும் தன்மையை நமக்குக் கோடிட்டுக் காட்டி விடுகிறார் ஸிந்துஜா. கூடவே ஸாம்சங் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பதையும் பெருமையாய்ச் சொல்லிக் கொள்கிறாள். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சமையல் மாமியின் கலை. இந்த ஒட்ட ஒழுகல்தான் பின்னால் அந்த மாமிக்குப் பொருத்தமான ஒரு முடிவையும் தருகிறது. அனுபவங்கள் கற்றுத் தந்த பாடம் மாமியை உச்சபட்ச முதிர்ச்சிக்குக் கொண்டு செல்கிறது.
அவரவருக்கு அமைந்த வாழ்க்கையை எத்தனை பேர் உற்சாகமாய் எதிர்கொள்கிறார்கள் இந்த உலகத்தில்? மனதுக்குள் குறைபட்டுக்கொண்டோ, அல்லது செயலற்று முடங்கியோதானே பெரும்பாலும் தென்படுகிறார்கள். ஆனால் மாமி அப்படி அல்ல. கிடைப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அங்கே உண்மையாய் இயங்கி மனதுக்கு துரோகம் செய்யாதவளாய்ப் பரிணமிக்கிறாள். இந்த உலகத்தையும், சக மனிதர்களையும் நேசிக்கத் தெரிந்தவர்கள் அப்படியான பரிபக்குவம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அப்படியானவர்களுக்கு பார்ப்பவர்களின் மேன்மைதான் மனதிற்குள் வட்டமிடும். எல்லாவற்றையும் நிறைவாகவே பார்ப்பவர்கள் அவர்கள்.
நீங்க சிவப்பு கலர் ஷர்ட்ல வரேள்னு ஜானகி மாமி சொல்லியிருந்தாளே என்று கார்த்தியிடம் சொல்லும் மாமி, எனக்கு முன்னாடி ஒருத்தன் அதே கலர்ல ஷர்ட் போட்டுண்டு போனானே என்ற கார்த்தியிடம்….மூஞ்சியப் பார்த்தா தெரியாதா? அவன் அசமஞ்சம் மாதிரின்னா இருந்தான்….என்று ஒரு போடு போடுகிறாள். மனிதர்கள் வார்த்தைகளுக்கு ஏங்குபவர்கள்…அதிலும் புகழ்ச்சியான வார்த்தைகளுக்குக் காத்துக் கிடப்பவர்கள். பரஸ்பரம் சேர்த்து வைப்பவை அன்புமிக்க இந்த வார்த்தைகள்தான். அதை இடம் பொருள் ஏவல் பார்த்துப் பயன்படுத்தத் தெரிந்தவன் புத்திசாலி. அப்படியானவன் தன்னைச் சுற்றி ஒரு இனிய சூழலை வளர்த்துக் கொள்கிறான். பொழுதுகளை இன்பமாக, அர்த்தமுள்ளதாகக் கழிக்க முயல்கிறான்.
மாமி டெல்லியில் இருந்ததையும், பிறகு மெட்ராஸ் வந்ததையும், அதற்கு முன் பெங்களூரில் இருந்த காலங்களையும் சுவையாய் எடுத்து வைக்கிறாள். கார்த்தியின் மனைவி கோதையைப் பார்க்கும் முதல் பார்வையிலேயே நீ ரொம்ப அழகா இருக்கே… என்று மனதாரச் சொல்லி மகிழ்கிறாள். கோதையின் குழந்தையை அன்பாய்ப் பார்த்துக் கொள்கிறாள். அதுவும் மாமியிடம் ஒட்டிக் கொள்கிறது.
குத்து விளக்கு என்றுமே அழகுதான்.அது குடும்ப விளக்கு. அதை ஒரு வீட்டின் பாங்கான சுமங்கலிப் பெண்களுக்கு சூட்டி மகிழ்வார்கள்.
“அழகா நெத்தில பொட்டு இட்டுண்டிருக்கே. தலைல பூ வச்சிண்டிக்கே…எல்லாத்துக்கும் மேலே மூக்குல மூக்குத்தி போட்டுண்டிருக்கே…என்று மகிழ்ந்து பழமையின் அந்தப் பெருமையை…“இப்ப இருக்கிறதெல்லாம் என்னமோ அமெரிக்கால பிறந்தது மாதிரி கழுத்து காது எல்லாம் மூளியா வச்சுண்டுன்னா அலையறதுகள்…” என்று சொல்லி தூக்கி நிறுத்துகிறாள்.
உலகத்தில் எல்லாராலுமா புதிதாய் சந்திக்கும் மனிதர்களிடம் அத்தனை சீக்கிரம் நெருக்கம் கொள்ள முடிகிறது? மனம் பூராவும் அன்பு நிறைந்து வழியும் ஒரு சிலருக்குத்தான் அது சாத்தியமாகிறது. பாட்டியை நமஸ்கரிக்கும் மாமி, இது என்ன இவ்வளவு மெல்லிசா ஒரு கை. ஒல்லியா உடம்பு. இருங்கோ நான் சமைச்சுப் போட்டு உங்களை ஒரு மாசத்தில் குண்டாக்கிக் காட்டறேன்…என்று சொல்லி…பாட்டியின் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொள்கிறாள். கோதையின் குழந்தையை இங்கே வாடா செல்லம்…என்று கொஞ்சி மகிழ்ந்து, பேச்சோடு பேச்சாக…வெகு நாள் அங்கேயே இருந்து கொண்டிருப்பவள் போல்…நான் போய் சமையல் வேலையைக் கவனிக்கிறேன்…என்று கிளம்பும் ருக்மிணி மாமியிடம் வந்த சில தினங்களில் எல்லோரும் ஒட்டிக் கொள்கிறார்கள்.
எல்லோரையும் மகிழ்விக்கும் கடமையைச் சுமப்பவர்கள் மனதில் ஏதேனும் சோகம் ஒட்டிக் கொண்டிருக்கும்…அதிலிருந்து மீண்டுதான்…அல்லது மீள்வதற்குத்தான் அவர்கள் தங்களை திசை திருப்பிப் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படியான ஒரு சோகம் இந்த ருக்மிணி மாமியிடமும் உண்டுதான். மாமியின் கணவர் எங்கே இருக்கிறார்? என்று கோதை கேட்க அந்த உண்மை வெளிப்படுகிறது.
ரகசியமாய், தானே தன் மனத்தில் ஒளித்து அல்லது அழுத்தி வைத்துக் கொண்டிருக்கும் உண்மைகளை சிலர் ஊகித்துக் கேட்டு விடும் சமயங்களில், இதிலென்ன பெரிய ரகசியம் இருக்கு? என்று சிலர் தெரிந்தால் தெரியட்டுமே என கேள்வியைச் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு சொல்லி விடுவார்கள். ஆனால் அந்த மாதிரியான கேள்விக்கும் ஒரு அவசியம் ஏற்படும் காலங்கள் என்று ஒன்று உண்டு. அப்படியான ஒரு நேரத்தில்தான் மாமியை நோக்கி அந்தக் கேள்வி விழுகிறது. மாமியும் சொல்லி விடுகிறாள். கணவன் ஆபீசில் வேறொரு பெண்ணோடு தொடுப்பு கொண்டு போய்விட்ட சமாச்சாரம் தெரிய….என் பையன் மூலமாத்தான் இந்த விஷயமே எனக்குத் தெரிய வேண்டிய தலைவிதியைப் பார்த்தியோ….என்று முடிக்கிறாள். கூடவே பையனும் வெளிநாடு சென்று விட்டதும், பெண்ணும் தன் படிப்பு, வேலை என்று தன் வழியைப் பார்த்துக் கொண்டதும், மாமி தனிமையாக்கப்பட, இருந்து சாப்பிடும் வசதி வாய்ப்பு இருந்தும், தன் அவலங்களை மறக்கடிக்க பாட்டி சமையல் வேலையைக் கையில் எடுத்துக் கொண்டு தன் பிரயாணத்தைத் தொடர்கிறாள்.
உங்களை மாதிரி நல்லவாளோடு என்னை அந்த ஆண்டவன் சேர்த்து வச்சிருக்கான்…என்று பெருமையுறுகிறாள்.
ஆனாலும் இந்த மனசு அப்படியேவா காலங்களைக் கடந்து செல்கிறது. பெற்றதுகளே அவரவர் வழியைப் பார்த்துக் கொண்டு செல்லும்போது, தனக்கு அன்பாய், ஆதரவாய், அரவணைப்பாய் ஒன்று காலத்துக்கும் இருக்கும் என்று நம்பும் வகையில் ஒரு ஆத்மார்த்தமான சிநேகம் வந்து சேர்கையில் யார் மனதுதான் அசைவுறாது? மாமியும் அந்தக் கட்டத்தை எய்துகிறாள்தான்.
கோயிலுக்குச் சென்று வருகிறேன் என்று கிளம்பிச் செல்லும் அவள். மகள் தனக்கு ஜோடியாக ஒருவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட செய்தியை எதிர்கொள்ள நேர, இந்த மாமிக்குத்தான் ஏன் கடவுள் இப்படி அடி மேல் அடி கொடுக்கிறான் என்று கோதை வேதனையுறுகிறாள். இத்தனை ஆதரவற்ற நிலையிலும், மாமிக்குத்தான் எத்தனை தைரியம்? மனதை ஆற்றிக் கொள்ளத்தான் இப்படிக் கோயிலுக்குச் செல்கிறாள் போலும்…என்று நினைக்கிறார்கள் கோதையும் கார்த்தியும்.
ஆனால் ரெண்டு மூணு நாள்ல நான் இங்கிருந்து கிளம்பலாம்னு இருக்கேன்…என்று மாமி திடீரென்று சொன்னதும் ஆடிப் போகிறார்கள் எல்லோரும். நாம் ஏதாவது தப்பாய் பேசி, நடந்து கொண்டு விட்டோமா என்று அதிர்கிறார்கள்.
ஆனால் மாமி தன் பக்கத்து நியாயத்தை எடுத்து வைக்கும் பாங்கு…அதில் பொதிந்துள்ள தவிர்க்க முடியாத தன்மை ஆகியவை படிக்கும் வாசகர்களாகிய நம்மையும் சரி என்று தலையாட்ட வைத்து விடுகிறது என்பதுதான் உண்மை. மாமி சொல்லும் தன் பங்கு நியாயம் எந்த நேரத்தில், எப்படியான காலகட்டத்தில் எடுத்து வைக்கப்படுகிறது என்பதிலேயே நாமும் அந்த முடிவு சரிதான் என்கிற ஒப்புதலுக்கு வந்துவிடுகிறோம். அதுதான் படைப்பாளியின் திறமை.
என் பொண் விஷயத்தில் நடந்தது ரொம்பவும் எதிர்பாராத ஷாக்தான். சில சமயம் அடி விழறப்போ கொ!ஞ்சம் பலமாத்தான் இருக்கும். வலி கொஞ்ச நேரம் இருக்கத்தான் செய்யும்…சிலது கொஞ்ச நாள் நீடிக்கும்…ஆனா ஆறாத வலியக் கொடுக்கிற அடி விழுந்தா மனுஷா என்னதான் பண்ண முடியும்? அதனால நான் என்னோட வழியைப் பார்த்திண்டு போகறதுதான் சரிங்கிற முடிவுக்கு வந்திட்டேன்….என்கிறாள்.
ஆர்மியில் இருந்து வந்து, மனைவியை இழந்து தனியாளாய் நிற்கும் மனதுக்கு இணங்கிய ராஜா மோகன் என்கிற ஒருவரோடு ஏற்பட்ட பழக்கத்தைச் சொல்லி அவரோடுதான் இனித் தனது மீதிக் காலம் என்று சொல்லி, அடுத்த மூன்றாம் நாள் சேர்ந்து வந்து பாட்டியை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கிளம்புகிறாள்.
ருக்மிணி மாமி-ராஜா மோகன் ஜோடியை இணக்கமாய், ஆசையோடு பார்த்து மகிழ்ச்சியோடு வழி அனுப்புகிறார்கள் கோதையும், கார்த்தியும்….நாமும்தான். கதை முடிகிறது. அன்பு ததும்பிய ருக்மிணி மாமியின் மீதி வாழ்க்கை அங்கே இனிமையாய்த் தொடங்குகிறது.
சுயநலம் மிக்க இந்த உலகில் போராடி வெற்றி கொண்ட ருக்மிணி மாமியின் கதை ஒரு சிறந்த கதாபாத்திரத்தை நம் மனதில் நிலை நிறுத்துகிறது.
ஸிந்துஜா அவர்களின் திறமையான இந்த எழுத்தனுபவம் நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. இந்த ஒரு கதை இத்தொகுப்பின் மற்ற எல்லாக்கதைகளையும் இதே போன்ற தரத்தில்தான் நிறுத்தியிருக்கும் என்கிற தவிர்க்க முடியாத நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகிறது. எழுத்தாளர் திரு. எஸ்.சங்கரநாராயணன் அவர்களின் அணிந்துரை அதைப் பறைசாற்றுகிறது.
------------------------------------------------------------



Comments

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...