01 அக்டோபர் 2018

வாஸந்தியின் நாவல் “வேர் பிடிக்கும் மண்”



Ushadeepan Sruthi Ramaniரெண்டு பெண்டாட்டிக்காரன் கதை கேட்டிருக்கிறோம். சினிமாப் பார்த்திருக்கிறோம். ஆனால் இது அதுவல்ல. ரெண்டு பெண்டாட்டி வைத்துக் கொள்ள ஆசைப்படும் இரண்டு மனிதர்களைப் பற்றியது. அதில் 
. அதில் ஒருவன் அன்பினால் இந்த உலகில் எதையும் வெல்ல முடியும் என்று தன் அம்மாவையும், மனைவியையும் எப்படியோ சரிக்கட்டி, ரெண்டாவதாக ஒரு பெண்ணைக் கொண்டு வந்து ஒரே வீட்டிலேயே மனைவியாக்கிக் கொள்கிறான். முதல் மனைவியின் சம்மதத்தின் பேரில் இரண்டாவதாக ஒன்றைக் கட்டிக் கொண்டால் எந்தச் சட்டமும் எதுவும் செய்ய ஏலாது என்று பெண் உரிமை இயக்கத்திலிருந்து வந்தவருக்கு பதிலளித்து அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாதானமாய் வாழ்கிறார்கள். இவன் வாழ்க்கையும் சந்தோஷமாய் இருக்கிறது. இப்படி ஒரு காரெக்டர் இந்த நாவலில் வரும் ரகு.
இவனுடைய நண்பன் ரமேஷ் ஒழுங்காய் இருந்தவன் ரகு பேச்சைக் கேட்டுக் கேட்டு சபலத்துக்குள்ளாகிறான். ஏற்கனவே மனைவியிடம் அதிருப்தியாய் இருக்கும் அவனுக்கு தானும் இன்னொன்று வைத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் உதிக்க, அதற்கேற்றாற்போல் மல்லிகா வந்து வாகாய் அமைகிறாள். பிறகுதான் பிரச்னை படிப்படியாய்த் தொடங்குகிறது. தான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் என்பதைத் தாமதமாய்ச் சொன்ன போதிலும், அதுபற்றி ஒன்றுமில்லை ஆனால் முதல் மனைவியை வெட்டி விட்டு வந்து சேருங்கள், அப்பொழுதுதான் நாம் ஒன்று சேர முடியும் என்கிறாள். முதல் மனைவி இந்திராவை சரிக்கட்ட முடியவில்லை. நானும் ஒருவனை இப்படி இழுத்து வந்து இதே வீட்டில் வைத்துக் கொண்டால் உங்களால் தாங்க முடியுமா? என்று கேட்கிறாள் அவள். இவன் ஆபீஸ் போன சமயம் வீட்டைப் பூட்டி பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டு, இவன் அம்மா இருக்கும் ஊருக்குப் போய் விடுகிறாள். உங்களால் இந்திராவை விட்டு வர முடியாது. அதற்கு உங்களுக்குத் தெம்பில்லை, இது சரிப்படாது என்று மல்லிகாவும் விலகிக் கொள்கிறாள். இவன் நட்டாற்றில் நிற்கிறான். இந்திராவிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வருகிறது. தன் பிள்ளையானாலும் அவன் செய்தது தப்புதான் என்று, அம்மாவின் ஏற்பாடாகத்தான் இது இருக்கும் என்று ரமேஷ் மனைவியைத் தேடிப் புறப்படுகிறான். ரெண்டு பெண்டாட்டிப் பிரச்னை என்றாலும், விரசமில்லாத பதமான எழுத்து. கௌரவமான வாதப் பிரதிவாதங்கள். அப்படிக் கட்டமைக்க நல்ல திறமை வேண்டும். அந்த எழுத்துத் திறன் வாஸந்தியிடம் பளிச்சிடுகிறது.
வாஸந்தியின் “வேர் பிடிக்கும் மண்“ என்னும் அற்புதமான நாவல் இது. மேலோட்டமாகத்தான் சொல்லியிருக்கிறேன் கதையை. அருமையான விவாதங்களை உள்ளடக்கிய ஆழமான சிந்தனையைத் தூண்டும் அழகான நாவல் இது. தரமான எழுத்தைத் தேடும் தரமான வாசகனுக்கு உகந்த தரமான நாவல் இது.
Comments

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...