02 செப்டம்பர் 2024

 

சிறுகதை           “பச்சை மை…!”    பிரசுரம்-“தாய்வீடு” மாத இதழ்

 செப்டம்பர் 2024





            நீங்கதான் சார் எனக்குச் செய்யணும்…வேறே யாரும் உதவ மாட்டாங்க இந்த வளாகத்துல…!….- இப்படிச் சொல்லிக் கொண்டுதான் என் முன்னே வந்து அமர்ந்தார் கோபாலகிருஷ்ணன். முகத்தில் அப்படியொரு கவலை. எதையோ நினைத்துப் பதறிக் கொண்டிருப்பவர் போலான தோற்றம். அப்படி நேருக்கு நேர் அமருவது அபூர்வம்…அப்படியே அமர்ந்தாலும்  கண்களை நேரடியாகப் பார்த்துப் பேச மாட்டார். அது ஏன் என்று எனக்குத் தெரியும். அவருக்கும் தெரியும்தான்….குற்றமுள்ள நெஞ்சு….

            என்னிடம் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் கண்களுக்குச் சேணம் பூட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவன். என் மேஜையில் என் முன்னே இருக்கும் ஃபைல்தான் என் பார்வைக்குத் தெரியும். மற்ற எதையும் நான் கண்டு கொள்வதில்லை.

பரந்து விரிந்த அந்த மாவட்ட அலுவலகங்களின் வளாகத்தில்  எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவருக்கு. எத்தனையோ வருடப் பழக்கம். மாடிக்கு மாடி, அலுவலகத்துக்கு அலுவலகம் எங்கு நுழைந்தாலும் அவருக்கு வரவேற்பு உண்டுதான். அதெல்லாம் உதட்டளவில் என்று இப்போது நிரூபணமாகி விட்டதோ? போயும் போயும் என்னிடம் வந்து நிற்கிறாரே! நானெல்லாம் ஒரு ஆளா அவருக்கு? என்னை லட்சியமே பண்ணாத அவருக்கு தன்னின் அலட்சியத்தை ஒதுக்கி என்னிடம் வந்து நிற்க வேண்டிய ஒரு தருணம் வந்திருக்கிறது பாருங்கள்…அதுதான் காலத்தின் கட்டாயம்.

            வருஷம் போன கடைசியில் அவர் இப்படி என்னைத் தேடிக்கொண்டு வருவானேன்? ஆளா இல்லை? இத்தனைக்கும் அவருக்கு அடுத்த கீழ் ராங்க்தான் நான். எனக்குச் சம்பளத்திற்குக் கையெழுத்திடுபவரே அவர்தான். அவர் நினைத்தால் ஏதேனும் ஒரு கிளார்க்கைக் கூட ஏற்பாடு செய்து கொள்ள முடியும்தான். முடியவில்லையோ? அல்லது நம்பிக்கையில்லையா?

            என்னையெல்லாம் அவர் மதித்ததேயில்லை. அதுபற்றி நான் கவலைப்பட்டதுமில்லை. இவர்களெல்லாம் மதித்தால் என்ன, மதிக்காவிட்டால்தான் என்ன? மதிப்பதனால் ஏதேனும் பெருமை கூடிவிடப் போகிறதா அல்லது மதிக்காததினால் ஏதேனும் குறைந்து விடப்போகிறதா? இரண்டும் இல்லை.  அவர் வேலை அவருக்கு. என் வேலை எனக்கு. என் மதிப்பு எனக்கு அவர் (அவ)மதிப்பு அவருக்கு.

            ஆனாலும் கூடுதல் பொறுப்பில் இருக்கும் அந்த எதிர் அலுவலகத்தில் என் முகம் பார்க்க அமர்ந்து கொண்டு, வேலையைக் கவனிக்கிறாரோ இல்லையோ…என்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் இருக்கையில் இருக்கிறேனா என்று பார்க்கிறார். வேலை செய்கிறேனா  இல்லை அரட்டை அடிக்கிறேனா என்று பார்க்கிறார். எங்கே போகப் போகிறேன். நான்தான் காலையில் வந்து அமர்ந்தால் அசையாமல் பேனாவும் கையுமாகக் குத்துக்கல் போலக் கிடக்கிறேனே? அவருக்கென்ன தெரியாதா?

 நான் என்ன செய்கிறேன் என்பதுதான் அவரது முக்கியமான வேலை. அவர் கவனிக்கிறார் என்பது எனக்குத் தெரியும்தான் என்றாலும், எத்தனை நேரத்துக்கு அதையே நினைத்துக் கொண்டிருப்பது அல்லது பார்ப்பது? நான் வேலை செய்ய வந்தவன். அவர் வேவு பார்க்க வந்தவர். இப்படித்தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. 

            அவருக்கு வேலை முக்கியமில்லை. எல்லாம் குருட்டுக் கையெழுத்துதான். அதுதான் பணியாளர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்து விடுகிறார்களே! பிறகென்ன நீட்டின இடத்தில் கையொப்பம் இட்டால் சரி. எதற்குக் கையொப்பமிட்டோம் என்று கூட மண்டையில் ஏறுமோ ஏறாதோ? சதா அந்த “இன்னொன்றிலேயே“ கவனமாயிருந்தால்? ஆபீஸ் வருவதே அதற்குத்தான் என்றிருந்தால்? பிறகு எதுதான் விளங்கும்? புத்தியை மழுங்கச் செய்யும் அந்த இன்னொன்று!

எனக்கு என் வேலைதான் கவனம். இன்று எதையெல்லாம் முடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தோடுதான் தினமும் அலுவலகத்திற்குள்ளேயே நுழைகிறேன் நான். இந்தந்தக் கோப்பையெல்லாம் புட் அப் பண்ணுங்க…என்று வந்ததும் சொல்லி விடுவேன். மதியம் வரை பார்ப்பேன். வரவில்லையெனில் நானே கோப்பினை வாங்கி அல்லது பீரோவைத் திறந்து நானே  எடுத்து எழுதி  விடுவேன். எவனை எதிர்பார்த்தும் நான் இல்லை. எனக்குத் தேவை என்னை எவரும் குறை கூறக் கூடாது. அவ்வளவே…! நினைத்த நேரம் நினைத்த வேலை முடியணும்…எது கேட்டாலும்…இதோ உங்க டேபிள்ல…என்று சொல்லணும். எதிராளி தலை குனியணும்.

 …கொஞ்சம் தாமதிச்சா அப்புறம் அவரே செய்துக்குவாரு…என்று இருந்து விட்டால்…? அதற்கு விடுவதில்லை.  புரிந்தவர்கள் என்னிடம் வேலை கற்றுக் கொள்ளலாம். புரியாதவர்கள் தடுமாறலாம்.

            அவருக்கு நேர் எதிர் அலுவலகத்தில் வாயிலுக்கு நேரே என் இருக்கை இருப்பது எனக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. எதிர்த்தாற்போல் இருந்து, சதா என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் இந்த மனுஷனின் பார்வையிலிருந்து முதலில் மறைய வேண்டும். அதென்ன அப்படி ஒரு பார்வை? தன்னைப் போலவே மற்றவரையும் நினைக்கும் சந்தேகப் பார்வை அது!

            பேசாமல் தன் வேலையைக் கவனிப்பாரா…நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனிப்பதா அவர் வேலை? இடம் மாற்ற எவ்வளவோ முயன்றேன்.. அமையவில்லை. காரணம் அந்தக் கட்டடங்கள் தனித் தனியாக  ரயில் கூபே போல ஒவ்வொரு திட்ட அலுவலகங்களுக்கும் பிரித்து விடப்பட்டிருந்தன. அதிகபட்சம் இரண்டு அறைகள். அதற்குள்தான் எல்லாமும். உறால் போல் ஒன்று. அலுவலரின் அறை இன்னொன்று. அந்த அலுவலரின் அறையிலும் கூட ஓரமாய்  டைப்ரைட்டர்,, கம்ப்யூட்டர்  பிரின்டர்..என்று இருந்தது. இடவசதி நெருக்கடி. அலுவலகம் எப்படி நெருக்கடியாயிருந்தால் என்ன? வரவுதான்  பிரதானம்!

            அப்படி அமைந்ததுதான் நான் வேலை பார்க்கும் அலுவலகமும். ஒரிஜினலாக நான் அதுநாள் வரை பணியாற்றிய துறையே வேறு. முப்பத்து மூன்று ஆண்டு காலம் சர்வீஸ் போட்டுவிட்டு, கடைசி ஒரு வருடத்திற்கு பதவி உயர்விற்கு ஆசைப்பட்டு இங்கே விருப்பம் தெரிவித்து வந்து சேர்ந்தவன் நான். அந்தத் தகுதி இங்குதான் கிடைத்தது. அதில் அலாதி சந்தோஷம் எனக்கு. பச்சை இங்க்கில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஆசை. சர்டிபிகேட்டுகளுக்கு அட்டெஸ்ட்டேஷன் போடும் தகுதி பெற வேண்டும். கெஜடட் ராங்க் அலுவலர்களுக்கே அது சாத்தியம்.. அந்த இடத்தை வேறு துறைக்கு மாறிக்கொள்வதன் மூலம் அடைய முடியுமானால் தவறென்ன? என்னுடைய மூலத் துறையிலேயே நீட்டித்து, பதவி உயர்வு வரும் வரும் என்று காத்திருப்பதை விட அல்லது காத்திருந்து ஏமாறுவதை விட, எனது கணக்கியல் கல்வித் தகுதியை வைத்துக் கணித்து, இந்தா பிடி…வந்து வேலையைப் பார்…என்று வரவேற்றுக் காத்திருக்கும் பரிச்சயமில்லாத இன்னொரு துறைக்குச் சென்று என் சர்வீசை அங்கே முடித்துக் கொள்வதில் என்ன தவறிருக்க முடியும்? பச்சை இங்கில் கையெழுத்துப் போடுபவரெல்லாம் யோக்கியர்களா? மனுஷனின் அடிப்படை குணத்தை இந்த இங்க் மாற்றிவிடுமா என்ன? அந்த இங்கிற்கான கௌரவம் அவரவர்  கையில்…செயலில். பச்சை மையில் கையெழுத்துப் போட்டே தீருவது…அதற்கான இந்த வாய்ப்பை எவ்வகையிலும் நழுவவிடுவதில்லை…எதற்காகவும் இழக்கத் தயாராக இல்லை..என் மனம் உறுதி செய்து கொண்டது. என் மூலமாக அந்தப் பச்சை மை கையெழுத்திற்கு ஒரு தனிப்பட்ட கௌரவத்தை அளிப்பது என்று உறுதி செய்து கொண்டேன். என்னைப் போலவேயான சிந்தனையிலும், செயல்பாட்டிலும் இன்னும் பலரும் இருந்திருக்கலாம் தானே?  நான் மட்டும் என்ன கொம்பா? ஆனாலும் அதில் அப்படி ஒரு மோகம்…!

            வேணாம் சார்…போகாதீங்க…கடைசி ஒரு வருஷத்துக்கு எதுக்கு முகம் தெரியாதவங்க நடுவுல போய் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறீங்க…? பேசாம இங்கயே இருந்து நிம்மதியா ரிடையர்ட் ஆகுங்க…அதான் நல்லது…அது பெரிய கடல் சார்…அங்கெல்லாம் உங்களால சமாளிக்க முடியாது. அகடித கடனா சாமர்த்தியம் வேணும் அதுக்கெல்லாம்….துட்டு இஷ்டத்துக்குப் புழங்குற இடம் சார்…சபலமில்லாத, திரும்பிக் கூடப் பார்க்காத நீங்கள்லாம் அதுக்கு லாயக்கில்ல…உங்களுக்குப் பொருந்தவே பொருந்தாதாக்கும்…-பெண் பணியாளர்கள் ரொம்பவும்தான் வருத்தப்பட்டார்கள்.

            ஏய்…சார் போயிருவார் போலிருக்குடி…அடுத்து எந்த கடுவம்பூனை வருதோ? எப்டிச் சமாளிக்கப் போறோமோ? நம்ம பாடு திண்டாட்டம்தான்.. - பேசிக் கொண்டார்கள்.

            சார்…நீங்கல்லாம் சுணங்கலாமா சார்…நம்ம டிபார்ட்மென்ட்ல பிரமோஷனுக்கு லேட் ஆகும் சார்…அடுத்த மார்ச்லதான் வரும். நீங்க டிசம்பரோட வெளில வந்துடறீங்க…எதிர்பார்த்து…எதிர்பார்த்து ஏமாந்து நிக்கப் போறீங்களா…? பேசாமப் போங்க சார்….அப்புறம் எதுக்காக அக்கௌன்டன்ஸி படிச்சீங்களாம்? ஒருவேளை இங்கே கிடைக்கலேன்னா அதையாவது பிடிப்போம்னுதானே…? இன்னும் கூட ஒரு வருஷம் உங்களுக்கு சர்வீஸ் இருந்திச்சுன்னா நானே உங்கள இங்கயே இருங்க சார்னுதான் சொல்லுவேன். ஒன் இயர்தானே இருக்கு…சம்பளத்துல ஒரு அப் கிடைக்கும்ல சார்…ஸ்கேல் ஆப் பே…யே மாறிடும் சார்….எப்டியும் ரெண்டாயிரத்துக்குக் குறையாது…சம்பளம் கூடிடும்…எங்கயோ போயிடுவீங்க…எதுக்காக சார் விடுறீங்க…அதுக்கேத்தாப்ல பென்ஷனும் கூடும்ல சார்…வேலை தெரியாதவங்கதான் பயப்படணும்…நீங்கள்லாம் எங்க போனாலும் சமாளிச்சிடுவீங்க…அப்புறம் ஏன் சார் தயங்குறீங்க…?

            பல்லக் கடிச்சிட்டு ஒரு வருஷம் ரயில்ல போயிட்டு வந்திட்டீங்கன்னா… ஃபினான்ஷியலா உங்களுக்குப் பெரிய லாபம்தானே சார்…வெளியூர்னு பார்க்காதீங்க….!  ஒரு ரூம்கூட எடுத்திட்டு அங்கயே தங்கிடுங்க…வெள்ளிக்கிழமை ராத்திரி வீட்டுக்கு வந்தாப் போதும்…லட்டு மாதிரிச் சான்ஸ் சார்….நம்ப சாரு ஆபீசர் ஆயிட்டாருன்னு எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கும்..வீட்டுக்கு வந்து மாமிட்ட சொல்லட்டுங்களா சார்…நாங்க வர்றோம்…மாமி சம்மதிப்பாங்க….புருஷனுக்கு பதவி உயர்வை எந்த மனைவிதான் சார் வேண்டாம்பாங்க…அது அவங்களுக்குப் பெருமையில்லையா? கண்ணை மூடிட்டுக் கிளம்புங்க சார்….

            அதையும் இதையும் இஷ்டத்துக்குச் சொல்லி ஆளைக் கிளப்பியே விட்டார்கள். இனி இங்கிருந்தா பழைய மதிப்பு இருக்காது போல்ருக்கே, பிரமோஷன வேண்டாம்னு சொன்ன லூசு…என்று திட்டுவார்களோ…என எனக்கே தோன்ற ஆரம்பித்து விட்டது.

            ஊக்கப்படுத்தியவர்களின் வார்த்தைகளே நின்றது. நானென்ன சொங்கியா? பயந்து நடுங்கறதுக்கு? ரெண்டுல ஒண்ணு பார்த்திடுவோம்…அப்டியென்ன மலைய முழுங்கற வேலை? அது நம்மள முழுங்கறதுக்குப் பதிலா…நாம அதை முழுங்கிட வேண்டிதான்…சரண்டராகி கால்ல விழ வச்சிட வேண்டிதான்…-முடிவு செய்து கொண்டுதான் வந்து அமர்ந்திருந்தேன். பச்சை மைப் பேனா என் சட்டைப் பையில்!

            கொஞ்ச நாளைக்கு ஒன்றுமே பிடிபடவில்லை என்பது என்னவோ உண்மைதான். திடீர் திடீரென்று மீட்டிங் நடந்தது. பொது மக்கள் சந்திப்பு, குறை கேட்டல், மனுப் பெறுதல்…துறை வாரியாகப் பிரித்தளித்தல்…அதில் இருபத்து நாலு மணி நேரத்தில் முடிக்க வேண்டியவை, மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டியவை…என்று ஒரே அமர்க்களமாய் இருந்தது. இங்கிட்டு அங்கிட்டு என்று அசைய முடியவில்லை என்பதுதான் உண்மை. எந்நேரமும் பரபரப்பா….இதென்னடா இது பெரிய வம்பாப் போச்சு….? தினமுமா ஆபீஸ் இப்படி மூச்சைப் பிடிக்கும்? ஒரு நாளாச்சும் ரிலாக்ஸ்டா இருந்தோம்ங்கிறது இல்லையே? தப்புப் பண்ணிட்டமோ? சிவனேன்னு நம்ப டிபார்ட்மென்ட்லயே பெஞ்சைத் தேய்ச்சிட்டு இருந்திருக்கலாமோ? இந்தப் பாடு படுத்துறாங்க…?

            சஞ்சலம் வந்து விட்டது மனதுக்கு. பச்சை மை கையெழுத்து பயப்பட வைத்தது.  அப்பொழுதுதான் முடிவு செய்தேன். இனி அஞ்சரை ஆனால் ரயிலுக்குக் கிளம்புவதில்லை என்று. ஆறு மணிக்கு டாண் என்று ஆடி அசைந்து அந்த மீட்டர் கேஜ் வண்டி வந்து நிற்கும். ரயிலுக்கு எங்காவது ஸ்டாப் உண்டா? அங்கு உண்டு. அது ஆட்சியர் தன் அதிகாரத்தில் பணியாளர்களுக்கென வாங்கிக் கொடுத்த சலுகை. இல்லையானால் டவுனுக்குள் ஸ்டேஷன் வரை போய்த் திரும்பி வர வேண்டும். சிட்டி பஸ் பிடிக்க பஸ் ஸ்டான்ட் நடக்க வேண்டும். ஆபீஸ் வந்து சேர பத்தரை ஆகி விடும். ஏன் பதினொண்ணு கூட ஆகும்தான்.  அதனால் உண்டான ஏற்பாடு அது. ரயில்வே நிர்வாகம் அதை ஏற்றுக் கொண்டு ஊருக்குள் நுழையும்முன் அந்த ஸ்டாப்பில் நின்று பணியாளர்களை இறக்கி விட்டுச் சென்றது.

            ஒருவருக்கொருவர் டாட்டா காண்பித்து விடைபெற்றுக் கொள்ளும் கண் கொள்ளாக் காட்சி மறக்க முடியாதது. டவுனுக்குள் சென்று இறங்கி அங்கேயுள்ள வங்கி, அலுவலகங்கள் என்று செல்லும் மீதிப் பணியாளர்களும் இருந்தார்களே…!  அவர்களுக்குத்தான் இந்த விடை கொடுத்தல்.

            மாலை அதுபோல் அவர்கள் முதலில் ஏறி வர, இங்கு வந்து நிற்கும் ரயிலில் நாங்கள் ஏறிக் கொள்வோம். எங்களுக்குள் புத்தகங்கள் பறிமாறிக் கொள்வதுண்டு. விஷய ஞானமுள்ள எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? ஒன்றுமே தெரியாத ஆளாய் இருந்திருக்கிறோமே என்று நான் என்னைப்பற்றி நினைத்ததுண்டு.

            இனி மாலை ரயிலுக்குக் கிளம்புவதில்லை என்று நான் முடிவெடுத்த வேளையில்தான்…பலரும் சொன்னார்கள்.

            எல்லா நாளும் இருக்கணும்ங்கிறதில்லை….கேம்ப் முடிச்சிட்டு சீஃப் சில நாளைக்கு சாயங்காலம் வருவாரு….உடனே மீட்டிங் போடுவாரு….டெண்டர் இருக்கும் சில நாளைக்கு….அது ஓப்பன் பண்ணி…கான்ட்ராக்டர்களுக்கு ஒதுக்கீடு ஆணை கொடுத்தாகணும்…அந்த மாதிரி முக்கியமான நாள்ல மட்டும் இருங்க…போதும்….எதுக்கு அநாவசியமா அலட்டிக்கிறீங்க…புதுசுதானே நீங்க…கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடும்…கடல் அலை என்னைக்கு ஓயறது…? எல்லாம் அப்டி அப்டித்தான்னு மைன்ட் பண்ணாமப் போயிட்டேயிருக்க வேண்டிதான்….பி…ரிலாக்ஸ்…நோ டென்ஷன்….நானும் அந்தக் குட்டையில் ஐக்கியமானேன். அதாவது நேரம் காலம் இல்லாமல் வேலை பார்ப்பது. கெதியாய்க் கிடப்பது.!. என் பேனாவிற்கு பங்கம் வராமல் பாதுகாப்பது. அதாவது என் கையெழுத்தை கௌரவப்படுத்துவது.!

            அவர் போட்டுட்டாருல்ல…அப்புறம் என்ன? கண்ணை மூடிட்டு அப்ரூவ் பண்ணலாம்… - அதுதான் நான்.

            சார்…உங்களுக்கு டயமாச்சு….கிளம்பலயா…? பெறவு ரயில் போயிடும்…-கருணாகரன் என்ற அந்த சீனியர் மோஸ்ட் அஸிஸ்டென்ட் என்னை உசுப்ப ஆரம்பித்தார். ஒருவேளை இதற்கு மேலும் நாம் இங்கிருப்பது இவர்களுக்கு ஏதேனும் இடைஞ்சலாய் இருக்குமோ…அதுதான் இப்படி விரட்டுகிறார்களோ என்றும் தோன்றியது எனக்கு.

            நானும் அந்தச் சூழ்நிலைக்குப் படிப்படியாகப் பழகிக் கொண்டேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன். இருக்கும் நேரத்தில் துளி நேரத்தையும் வீணாக்காமல், கருமமே கண்ணாக வேலை பார்க்க ஆரம்பித்தேன். என் வேகத்திற்கு ஆபீசில் இருப்பவர்களால் ஃபைல் போட முடியவில்லை என்றே சொல்லலாம். அரசுக்கு அனுப்ப வேண்டிய பிரேரணைகளை அத்தனை சுடிதமாகத் தயார் பண்ணினேன் நான்.

            என்னா சார்…இந்த டிபார்ட்மென்ட்லயே பழம் தின்னு கொட்டை போட்ட ஆள் மாதிரி….ஆனாலும் ஜெட் வேகம் சார் உங்க வேல…எங்களால ஈடு கொடுக்க முடில….. – என் மனம் மானசீகமாகப் பெருமைப் பட்டது.

தாமதங்கள் எதுவுமின்றி கோப்புகள் நகர்ந்து கொண்டிருந்தன. பழைய பென்டிங்கெல்லாம் கரைய ஆரம்பித்திருந்தன. எதுக்கு இப்படித் தோண்டித் தோண்டி எடுக்கிறாரு? நாமளா தூக்கி நட்டமா நிறுத்தப் போறோம் டிபார்ட்மென்ட்டை…? என்றும் முனகிக் கொண்டார்கள். மனிதர்கள் சராசரிகள்தானே என்பதையும் அவ்வப்போது நிரூபித்தார்கள்.

            இதனால்தான் அந்த மனுஷன் அந்த ஆபீசே கதின்னு கிடக்காரோ…? இங்க எட்டியே பார்க்க மாட்டேங்கிறாரே…? காலைல வந்து அட்டன்டென்சை சைன் பண்ணிட்டுப் போறதோடு சரி…டேபிள்ல ஏதாச்சும் இருந்தா கையெழுத்துப் போடுறாரு.மத்தப்படி எதிர்த்தாப்லதான் கதியாக் கிடக்காரு ?

            அங்கதான சார் இத விடப் பைசா…அடிஷனல் சார்ஜ்ல இருக்கைல அடிச்சாத்தான முடியும்…? இங்க வழக்கமா உள்ளது எப்டியும் கைக்கு வந்து சேர்ந்துரும்..அங்க கூடுதல் பொறுப்புல உள்ளது கைய விட்டுப் போயிடக் கூடாதுல்ல…? அதிலெல்லாம் சாரு ரொம்பக் கவனமா இருப்பாரு…நீங்க வேறே அவருக்கேத்தாப்லா அமைஞ்சிட்டீங்களா..எதுக்கு இந்த ஆபீசப் பத்திக் கவலப்படப்போறாரு? அதான் மூக்குல வேர்த்த மாதிரி உங்களயே பார்த்திட்டிருக்காருன்னு வேறே சொல்றீங்க….! அவருக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா…சார்…எம்டன் சார்….இதுலயே ஊறித் திளைச்சவரு சார்…எது…எது…எப்டி எப்டி…ன்னு கரைச்சுக் குடிச்சவரு சார்…..கில்லாடியாக்கும்….

            தங்கள் அலுவலகத் தலைமையைப்பற்றி அந்தப் பணியாளர்களே எவ்வளவு பெருமையாய்க் கூறுகிறார்கள்? இவர்களை அவர் கண்டு கொள்வதில்லை…அதனால் அவரை இவர்கள் கண்டு கொள்வதில்லை. அங்கங்கே கை மாற வேண்டியவைகள் முறையே கால நிர்ணயமாய் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன…பின் யார்தான் எதைப்பற்றித்தான் கவலைப்பட்டாக  வேண்டும்?பரஸ்பர மதிப்பற்றுப் போன இடம்.

            கவலையெல்லாம் வேலையை மட்டும் செய்து…வந்து போய்க் கொண்டிருப்பவனுக்குத்தான். பயப்படுபவன் பயந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். உதறிச் செல்பவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கடந்து போக வேண்டியதுதான்….அதற்கு மேல் சொல்வதற்கு அங்கு பெரிதாக ஒன்றுமில்லை.

            சார்..வேலையெல்லாம் முடிச்சிட்டீங்கல்ல…ஃப்ரீயாத்தான இருக்கீங்க…?-எதிரில் அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணனின் கேள்வியின் குரல் தணிந்து சோகமாய் வெளிவருவதை உணர்ந்தேன் நான்.

            ஏன் சார்…? என்ன பிரச்னை…? உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க…

            ஒண்ணுமில்லே…இந்தக் காம்ப்ளெக்ஸ் பூராவும் உங்களப்பத்தித்தான்   பேசிக்கிறாங்க…

            என்னன்னு சார்…? ஏதாச்சும் தப்பா…..!

            ஐயையோ…அதுக்குத்தான் நாங்க இருக்கமே…ரொம்பப் புகழ்ந்து பேசிக்கிறாங்க…அதைச் சொல்ல வந்தேன்….-லேசாய்ச் சிரித்துக் கொண்டார். அதில் கூட ஒரு சிறு வேதனை இருப்பதாய்த் தோன்றியது. …தன்னிரக்க நகைச்சுவை.

            இன்னும் என்னன்னே நீங்க சொல்லலை…புதிர் போட்டுட்டே இருக்கீங்க…? – 

என்ன இருந்தாலும் மேலதிகாரி…

.சொல்லியனுப்பினால் நானே வந்திருப்பனே சார்…நீங்க ஏன் வந்தீங்க…? கனிவோடு கேட்டேன்.

இதுவும் என் ஆபீஸ்தானே…ரெகுலர் போஸ்ட் இதுதானே…அதுதானே அடிஷனல் சார்ஜ்…அங்கல்லாம் நீங்க வர வேண்டாம்ன்னுட்டுத்தான் நானே புறப்பட்டு வந்தேன்….இப்ப என்னடான்னா நிலைமை திடீர்னு மாறிடுச்சு…! –

தன் ஆபீசர் இருக்கையில் உட்கார்ந்து என்னை அழைத்திருக்கலாம். பதிலாக எனக்கு எதிராக வந்து யதார்த்தமாய் அமர்ந்து வி்ட்டாரே!

 எதையோ சொல்லத் தயங்குகிறார் என்று புரிந்தது எனக்கு. அங்கெல்லாம் நான் வரக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? அதென்ன பாபப்பட்ட இடமா? எல்லாமும் ஆபீஸ்தானே? அங்கேயும் இதே பணியாளர்கள்தானே இருக்கிறார்கள். தலைமையாக இவர் இருக்கிறார். கூடுதல் பொறுப்பு…அவ்வளவுதானே?

ஏன் சார் நான் வந்தா என்ன? நீங்க கூப்டீங்கன்னா வந்துட்டுப் போறேன்.

வேண்டாம்ங்க….அங்க ஆளுக சரியில்லை…யாரும், எவனும் நம்பிக்கைக்குரிய ஆளுகளா தெரில….பயமா இருக்கு. எந்த நேரம் என்ன பண்ணுவாங்களோன்னு…தந்திரக்கார ஆசாமிங்க அங்க இருக்கிறவங்க…ஆனா பாருங்க…அத்தனை பேரும் சீனியர்ஸ்…அதுனாலதான் பயப்பட வேண்டியிருக்கு …!.நீங்க அங்க வந்தீங்கன்னா ஒருவேளை நீங்களும் மாறினாலும் போச்சு…! – சிரித்துக் கொண்டார்.

நீங்க எதுக்கு சார் பயப்படணும்… அவுங்களுக்கு பாஸ்… இதச் செய்…அதச் செய்ன்னா செய்துட்டுப் போறாங்க… …Do what I say..ன்னுட்டுப் போங்க…அவ்வளவுதானே…?

அப்டியெல்லாம் அவங்ககிட்ட கட்டன்ரைட்டாப் பேச முடியாதுங்க…-அது ஒரு மாதிரி ஆபீசாக்கும். ஏண்டா அடிஷனல் சார்ஜ்ன்னு நொந்து கிடக்கேன் நான். குரலில் அலுப்புத் தெரிந்தது.

எங்கள் பேச்சை எழுத்தர்கள் கவனியாததுபோல் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பார்த்தால் அவரவர் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் கவனம் முழுதும் இங்கே…!

ஆபீஸ் வேலைக்குத்தானே சார் சொல்றீங்க…சொந்த வேலைக்கா?-அப்புறம் என்ன தயக்கம்?

அதுக்கே அவுங்ககிட்டல்லாம் ஸ்டிரிக்டா பேச முடியாது சார்…இந்த பாருங்க ஆர்டர….நேத்தே சாயங்காலம் வந்திருச்சு… இங்க வந்திருக்கணுமே வரல்லையா…? …என் நேரத்தப் பாருங்க……? எல்லாம் என் தலைவிதி….!

அவரின் இயலாமையை, திறனற்ற தன்மையை நினைத்து எனக்குச் சிரிப்பும் வந்தது…அதே சமயம் பரிதாபமாயும் இருந்தது. என்னவோ ஆர்டர் என்கிறாரே…? வாங்கிப் பார்த்த எனக்கு ஆச்சரியம்…

என்ன சார் இப்டி…? திடீர்னு? என்று அதிர்ந்தேன் நான்.

திடீர் திடீர்னுதான் இங்கே எல்லாமும் நடக்குது….வேலை செய்றதை விட கோள் மூட்டி விடுறவனும், புறம் சொல்றவனும்தான் சார் இங்க கெட்டிக்காரங்க.. புரிஞ்சிக்குங்க…வேலை ரெண்டாம் பட்சம்தான்….யார் யாரு சீஃப்புக்கு நெருங்கியிருக்கான்ங்கிறதுதான் முக்கியம்…அரசியல்வாதி வந்தா நம்மள ஒதுங்குங்க…ஒதுங்குங்கன்னு விலக்குவாரு…கவனிச்சிருக்கீங்களா?

அப்ப இனிமே இங்கே நீங்க அடிஷனல் சார்ஜா…? அது ரெகுலரா….? – அதிர்ந்து போய்க் கேட்டேன்.

உங்களப்பத்தி சீஃப்கிட்டே யாரோ சொல்லியிருக்காங்க போல்ருக்கு…அப்போ இந்தாள அங்க ரெகுலராப் போட்டுட்டு இதை கூடுதல் பொறுப்பாக்கிடுங்க…ன்னுட்டாராம் பாஸ்…

ஆமா சார்…ஆர்டர் வந்திருக்கு….தபால்ல வச்சிருக்கனே…-என்றவாறே எழுந்து வந்தார் கருணாகரன் அசிஸ்டன்ட்.

முக்கியமான தபால்னா உடனே சொல்ல மாட்டீங்களா? டேபிள்ல வச்சாப் போதுமா? என்ன நீங்க? – கடிந்து கொண்டேன் அவரை.

நல்லாப் பைசாக் கிடைக்கும் என்று அங்கு கூடுதல் பொறுப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட ஆசாமி இப்பொழுது அதுவே ரெகுலர் என்றாகும்போது ஏன் சடைத்துக் கொள்கிறார்? எதற்காகப் பயப்படுகிறார்? இன்னும் உரிமையோடு அள்ளலாமே? பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்புக….என்கிற நன்னெறி தெரியவில்லையோ?

சரி..நீங்க இன்னும் தபாலே பார்க்கல போல்ருக்கு….பார்த்து வைங்க…நான் அப்புறமா வர்றேன்…இந்த ஆபீஸ் அடிஷனல் சார்ஜ் எனக்கு. சி..டி.சி. ரெடி பண்ணனும். நீங்கதான் முழுசாப் பார்த்துக்கணும். அந்த தைரியத்துலதான் நான் அங்க உட்கார்ந்திருக்கேன்…அப்புறம் பார்க்கலாம்….-சொல்லிக் கொண்டே எழுந்து கிளம்பினார் கோபால கிருஷ்ணன். வந்த விஷயம் முடிவதற்குள் மனதில் என்னவோ உறரிபரி வந்து விட்டது. ஆள் பதட்டமாகவே இருந்தார். அவருக்கு இன்னும் நான்கு மாதங்களோ ஆறு மாதங்களோதான்  இருந்தன ஓய்வு பெறுவதற்கு. வம்பு தும்பு எதுவுமில்லாமல் ஓய்வு பெற வேண்டுமே என்கிற பயம் வந்து விட்டது போலும். எல்லோருக்கும் உள்ளதுதான் அது. கடைசி  நேர டென்ஷன். எதிலும் மாட்டிக் கொள்ளாமல், எந்தக் கறையும் படாமல், கறையிருந்தாலும் வெளிப்படாமல்,  எந்த குற்றச்சாட்டு நடவடிக்கையும் இல்லாமல் வெளியேற வேண்டுமே!

எவன் பி.ஏ. சார்னு கூப்பிடுறான்…எல்லாப் பயலுகளும் கோபாலகிருஷ்ணன்…கோபாலகிருஷ்ணன்னுதான் ரகசியமாக் கூப்பிடுறாய்ஞ்ஞ… - இந்தக் குறை அவர் மனதில் ஆழமாய் வேறூன்றியிருந்தது.

ஓய்வு பெறும் நாளன்று மாலை ஐந்து மணிக்கு மேல்தான் “வயது மூப்பில் ஓய்வு பெற அனுமதியளிக்கப்படுகிறது“ என்கிற ஆணை வந்து சேரும். அதுவரை வயிற்றைக் கலக்கும். கெதம்…கெதம் என்றிருக்கும்…எவனாவது, என்னத்தையாவது மொட்டையைப் போட்டு நிறுத்தி விடுவானோ, நிறுத்தியிருப்பானோ என்கிற உதறல் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். இது தப்பு செய்தவனுக்கும் சரி, செய்யாதவனுக்கும் சரி…காரணம் மர்மமான நடவடிக்கைகள் பலவும் புழங்கும் இடம் அது.

ஓய்வு பெற அனுமதி என்று ஆணை கிடைத்து விட்டாலும் அதற்குப் பிறகும் ஏதேனும் பாதகம் நேரக் கூடுமோ என்றெல்லாம் மனம் பதைக்கும். இதற்கெல்லாவற்றிற்கும் நடுவிலேதான் “கெட் டுகெதர்” ஃபங்ஷனும் நடந்தேறும். மனது விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல், உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டே பார்ட்டியை அட்டென்ட் பண்ண வேண்டியிருக்கும். பகைத்துக் கொண்டவன், முறுக்கிக் கொண்டவன், முணுக்கென்றவன், மனதுக்குள் திட்டியவன், ஒத்துழைக்காதவன், விருப்பமில்லாமல் வந்தவன்,மரியாதையில்லாமல் முனகியவன், முதுகுக்குப்பின்னே கேலி செய்தவன் என எல்லாத் தரப்பினரும் வேறு வழியின்றி வந்து அமர்ந்து இனிப்பு, காரம், காப்பி என்று அருந்தி, புகழ்ந்து நாலு வார்த்தைகள் பொய்யாய்ப் பேசி , கைகுலுக்கி அசடு வழிந்து  மாலை போட்டு, துண்டு போர்த்தி மரியாதையோடு அனுப்பி வைத்துப் பிரிந்து செல்வார்கள்.

ஃபாக்ஸ் வந்திச்சா…ஃபாக்ஸ் வந்திச்சா…? என்பதற்குத் தகவல் சொல்ல அமர்த்திய ஆள் இன்னும் வரவில்லையே என்று துடிதுடித்துக் கொண்டிருக்கும் வேளையில்…கையில் அந்த ஜெராக்ஸ் நகலோடு ஆள் பரபரத்து வந்து கொண்டிருக்கையிலும் கூட அது ஓய்வு பெற அனுமதியளித்த ஆணைதானா இல்ல வேறேதாவதா? என்கிற சந்தேகம் உதித்து வயிற்றைக் கலக்க….சார் ஆர்டர் வந்திடுச்சு…என்று கொண்டு வந்தவன் குரலெடுத்து, சிரித்த முகத்தோடு கொடுத்த பின்னால்தான் உயிரே நிலைக்கும்.

யப்பாடா…இருங்க…முத்ல்ல பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்…என்று ஓடுவார் அந்த ஓய்வு பெறும் அலுவலர். ஓய்வு பெற்றவர்களின் நடவடிக்கைகளைக் கண்ணுற்றிருந்த எனக்கு இதையெல்லாம்  புரிய வைத்திருந்தது.

சார்….குட் மார்னிங் சார்…..மெல்ல அழைத்துக் கொண்டே அருகில் வந்து அமர்ந்தார் கருணாகரன். யாரானாலும் பக்கத்தில் வந்தால் நிற்கக் கூடாது என்று சொல்லியிருந்தேன் நான். அது பியூனானாலும், டிரைவரானாலும், நேற்றுப் பணியில் சேர்ந்த கிளார்க் ஆனாலும் அப்படித்தான் என்னைப் பொறுத்தவரை. கௌரவம், மரியாதை என்பதெல்லாம் நாம் இருப்பதைப் பொறுத்து…தானே அமையும் என்பது என் நம்பிக்கை.

சொல்லுங்க கருணா….என்றவாறே அவர் முகத்தைப் பார்த்தேன்.

கோபாலகிருஷ்ணன் நேத்து வந்தார் சார்…நீங்க போனப்புறம்….

எவ்வளவு சர்வ சாதாரணமாக தன் உயர் அதிகாரியைப் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? மூன்றாம் நபரிடம்தான் எனினும் பெயர் சொல்லலாமா? பி.ஏ.சார்…என்று சொல்ல வேண்டியதுதானே? இதைத்தான் சொல்லி நேற்று வருத்தப்பட்டாரோ?

எதுக்காக? – சற்று உன்னிப்பாய்க் கேட்டேன்.

அவருக்கு உங்களால காரியம் ஆக வேண்டியிருக்காம். அந்த ஆபீஸ்ல யாரும் செய்ய மாட்டேங்கிறாங்களாம்…!

ஏன்? அவர்தானே அவங்களுக்கு பாஸ்…அவர் சொன்னாச் செய்துதானே ஆகணும்…..?

அதெல்லாம் சின்னச் சின்னத் தனி ஆபீஸ்கள்ல நடக்கும் சார்…இந்த மாதிரிக் கடல்ல நடந்தேறுமா சார்….இது பெரிய கிடங்கு சார்….

என்ன சொல்ல வர்றீங்க…புரியல…? – உண்மையிலேயே அந்தப் பூடகம் எனக்குப் புரியவில்லைதான்….

வந்தவுடனே, சார் போயிட்டாரா…அதுக்குள்ளயுமா…டிரெயினுக்கு கரெக்டா கிளம்பிடுறாரு தவறாம….கொஞ்சம் இருக்கக் கூடாதான்னு சலிச்சிக்கிட்டார் சார்….

அப்புறம்? – மனதுக்குள் சிரித்துக் கொண்டே கேட்டேன் நான்.

அவுரு டெய்லி அப்படித்தான சார் போறாரு…அஞ்சரை ஆனா பையத் தூக்கிடுவாரு…டெண்டர் ஓப்பனிங், மீட்டிங்னு இருக்கிற அன்னைக்கு மட்டும்தான் இருப்பாருன்னேன் சார்.  அதுக்கு என்ன சொன்னார்ங்கிறீங்க…?

என்ன சொன்னாரு? – பதறாமல் கேட்டேன். முதல் முறையாக உதவியாளர் கருணாகரன் அப்பொழுதுதான் என்னிடம் மனம் விட்டுப் பேசுகிறார் என்று தோன்றியது எனக்கு.

ஏன்யா…பைசா வர்ற எடத்துல அப்டியெல்லாம் நேரத்துக்குக் கிளம்ப முடியுமா? ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் கூட இருந்திட்டுத்தான் போகணும்…ட்ரெயின் போனாப் போகுது…பஸ்ல போயிக்க வேண்டிதான்..அப்புறம் சாதாரண கிளார்க்குக்கும் இவருக்கும் என்னய்யா வித்தியாசமின்னுட்டார் சார்….

. அவுரு காசு வாங்க மாட்டாரு சார்…அதத் தெரிஞ்சிக்குங்க…ன்னேன் சட்னு…அதிர்ந்து போனாரு உடனே…!

என்னது? காசு வாங்க மாட்டாரா? காசு வாங்க மாட்டாரா? ன்னு திருப்பித் திருப்பிக் கேட்டுட்டேயிருந்தாரு சார்…அந்தச் செய்தியே அவருக்கு அதிர்ச்சியா இருந்திச்சு ….முகத்துல புது பயம் வந்த மாதிரி ஆயிட்டாரு…

வந்த புதுசுலயே அதக் காண்பிச்சிட்டாரு…கான்ட்ராக்டர் ஒருத்தரு  உள்ளே நுழையும் போது ரூபா நோட்ட இவர் சட்டைப் பையில எதிர்பாராமத் திணிச்சிட்டார் …அதுக்கே பழி சண்டைக்குப் போயிட்டாரு…வச்ச நீங்களே எடுத்திடுங்கன்னு அந்த ரூபாயக் கையாலக் கூடத் தொடலன்னு சொன்னேன் சார்…அவுரு என்ன கேட்டார் தெரியுமா சார்? அதான் சார் படு ஜோக்…?

என்ன கேட்டாரு…? முழுவதும் சொல்லுங்க…என்றேன். நான் கேட்பதை விட, இந்த மாதிரிச் செய்திகளைப் பிறரிடத்தில் வாய்விட்டுச் சொல்வதில் ஒரு தனி உற்சாகம் அவர்களுக்குள் பொங்குவதாய் உணர்ந்தேன் நான். வம்பு பேச யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் இது துட்டு பகிரும் விஷயம்…!

அப்போ அவருக்கு சேர வேண்டிய காசெல்லாம் என்னாச்சுன்னு கேட்டுட்டார் சார். கூடவே நீங்க பிரிச்சு எடுத்துக்கிட்டீங்களா?ன்னு எங்களக் கொக்கி போடுறார் சார்….கான்ட்ராக்டரே வச்சிக்கிட்டாரு…நாங்க ஒண்ணும் தொடலன்னு சொல்லிட்டோம்…அதுல நம்பிக்கையே வல்ல அந்தாளுக்கு. இப்போ எப்டி வந்து நிக்கிறாரு பார்த்தீங்களா சார்? காரியக்கார ஆளு சார்…தன் காரியக் கெட்டி…! இந்தாளுக்கு எதுவுமே செய்யக் கூடாது சார்…படு மோசமான ஆளு….அதான் சார் எல்லாரும் போட்டுப் பார்க்கிறாங்க…!

அது சரி…எதுக்கு வந்தாரு? சொல்லாமயே போயிட்டாரே…ஆளு பதட்டமாவே இருந்தாருங்கிறீங்க…? ஏன்னே புரியலையே…? – விடாமல் கேள்வி போட்டேன்.

அது வேறொண்ணுமில்ல சார்….அவருக்குப் பென்ஷன் ப்ரபோசலை அந்தாபீஸ்ல போடாம இழுக்கிறாங்க…ஏ.ஓ.கிட்ட எத்தனையோ வாட்டி சொல்லிப் பார்த்துட்டாராம்…செய்றேன்…செய்றேன்ங்கிறாரேயொழிய யாரும் செய்றாப்ல இல்ல….குறைஞ்சது மூணு மாசத்துக்கு முன்னாடியாவது பென்ஷன் ப்ரபோசல் ஏ.ஜி.க்குப் போயாகணுமில்லையா சார்….அங்க ஆளத் தவிக்க விடுறாங்க… ….இவரால ஆட்சியர்ட்டயும் போய் நிற்க முடியாது ஏன்னா இந்தாளு வண்டவாளம் பெரிசுக்கு நல்லாத் தெரியும்.  …மல முழுங்கின்னு…அதான் சமயம் வரற்போது வசம்மா…போட்டுப் பார்க்குறாங்க….

அதுக்காக…ஒருத்தர் ஓய்வு பெறுவதற்கு முன்னால ப்ரபோசல் போய்ச் சேர வேண்டாமா? அப்புறம் பென்ஷன் எப்டி வாங்குவாரு? ரெகுலர் சார்ஜ் அங்கதான ப்ரபோசல் போடணும்…கடைசி ஸ்டேஷன் அதுதானே?

அந்தாபீஸ்ல பயங்கர சில்ர சார்… கொழிக்கிற இடம்.….கேம்ப் போகுற இடமெல்லாம் வாரி வளைக்கிறாராம். லம்ப்பா அடிக்கிறாராம். ஒரு கான்ட்ராக்டர விட மாட்டார் சார்…தேடித் தேடிப் போவாரு…ஆபீஸ் ஸ்டாஃப் யாருக்கும் பங்கு கொடுக்கிறதில்லயாம். ஏ.ஓ.வே புலம்புறாரு. தனக்கானதையும்  சேர்த்து அவரே சுருட்டிர்றாருன்னு….அவுங்கவுங்களுக்குன்னு உள்ள பர்சன்டேஜ்ஜைக் கொடுத்திட்டாத்தான சார் பிரச்னையில்லாம இருக்கும்…இல்லன்னா சிக்கல்தான சார்…நீங்க இந்த வளாகத்துல இருக்கிற பியூன்கள், டிரைவர்கள், கிளார்க்குகள்னு எல்லாருக்கும் சம்பள நிர்ணயம், லீவ் சாங்ஷன், அரியர் பில்னு போட்டுக் கொடுத்தீங்கல்ல…அதனால் எல்லாரும் உங்களப் பத்திப்  பேச ஆரம்பிச்சிட்டாங்க…அது காதுல விழுந்து போச்சு போல்ருக்கு.…ஐயா வந்து நிக்கிறாரு….அநேகமா அதுக்காகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் சார்…

எதுக்கு? பென்ஷன் ப்ரபோசலுக்கா? என்று புரியாமல் கேட்டேன் நான். ஒரு அலுவலருக்கே இந்த நிலைமையா? அது சரி…அலுவலர் அலுவலராய் இருந்தால்தானே? – நினைத்துக் கொண்டேன்.

அது மட்டுமில்ல சார்….அவருக்கு இன்னும் பே கமிஷன் ஃபிக்கேஷனே போடலை சார்….சம்பளமே நிர்ணயிக்கலே…..அதப் போட்டுட்டுல்ல பென்ஷனுக்கு அனுப்பணும்….அது வந்தப் பிறகுதானே மத்த பெனிஃபிட்ஸ்….சிக்கல்தான் சார்….ஓய்வு பெற்று வெறுங்கையோட வீட்டுக்குப் போக வேண்டிதான்…

அய்யய்ய….அப்படீன்னா சம்பள நிர்ணயம் அப்ரூவ் ஆகி அப்புறம்தானே பென்ஷனுக்கு பிரேரணையே அனுப்ப முடியும்? இன்னும் எவ்வளவோ இருக்கே…! ஆள் வசமா மாட்டிக்கிட்டார் போலயே…!

அதான் சார்..மனுஷன் எதுவும் ஓடாம பதட்டமா உங்க கிட்ட வந்து நிக்கிறாரு…ஒண்ணு தெரியுமா சார்…முக்கியமானது சொல்றேன்…அவுரு ப்ளூ இங்க்லதான் சார் எப்பவும் கையெழுத்துப் போடுவாரு…பச்சை இங்க்கே தொட மாட்டாரு …அந்தப் பேனாவே நமக்கு ஆகாதும்பார்…பச்சை இங்கைப் பார்த்தாலே அவருக்கு அலர்ஜி சார்…

இதுக்கும் அதுக்கும் என்ன  சம்பந்தம்? எதுக்காக அப்டி?

 இனம் புரியாத பயம்தான்…வேறென்ன சார்? மனசாட்சி உறுத்துது. எல்லாரும் ப்ளூ இங்க் பேனாலதான் எழுதறோம். ஆனா ஆபீசர்ஸ் பச்சை இங்க் பேனாத்தான் யூஸ் பண்ணுவாங்க. பார்த்திருக்கோம்.இவரு அதத் தொடக்கூட மாட்டாரு சார்… கீழேயிருந்து படிப்படியா ப்ரமோஷன்ல வந்தவர் …அந்தத் தயக்கமாக் கூட இருக்கலாம்….கேட்டா வேணாம்யா…கலெக்டர் பர்ப்பிள்ல போடுறாரு…நாம சைடுல பச்சைன்னா சரிக்கு சமமாத் தெரியும்..…அது சரி வராதுன்னு சொல்லிடுவார் சார்…நீங்களும் படிப்படியா பிரமோஷன்ல வந்தவர்தான சார்? நான் பச்சைலதான் போடுவேன்னுல்ல நீங்க பிடிவாதம் பண்றீங்க….? அந்த தைரியம் அவருக்குக் கிடையாது சார்… அதுக்கு ஒரு தனி மரியாதை எப்பவும் உண்டு சார்…ரொம்பக் கவனமா இருப்பார் … இந்த வளாகத்துல இருக்கிற ஆபீஸ்கள்ல பலரும் அப்படித்தான்…எல்லாம் ப்ளூ இங்க்தான்…அவுங்கவுங்க செயலே அவுங்கவுங்க மனசு…அவ்வளவுதான்…அதுக்கு ஒரு கௌரவத்த ஏற்படுத்துறது அந்தந்த நபரோட பொறுப்பு…அப்டித்தான் சொல்லியாகணும்….மனசுதான சார் கோயில்? -நான் கருணாகரனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனசுதான் கோயிலென்றால் நூறு சதவிகிதம் இங்கே சுத்தமாகவல்லவா இருந்தாக வேண்டும்? அப்படியா இருக்கிறது? கீழிருந்து மேலே வரை மனிதர்கள் சராசரிகள்தான் என்பதையல்லவா உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்? அத்தி பூத்தாற்போல் ஓரிருவர் தங்களை நேர்கோட்டில் நிறுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதானே? பெரும்பாலோர் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று கைகோர்த்துத்தானே அலைகிறார்கள்?

தங்களுக்குப் பாஸாக இருந்த ஒரு அலுவலரைப் பற்றிப் பணியாளர்கள் என்னவெல்லாம், எப்படியெல்லாம் புகார்  சொல்ல வேண்டிய நிலை வந்து விடுகிறது? ஆற்றோடு போகும் நீர்…அய்யா குடி…அம்மா குடி….அதுதானே?

இந்த எல்லாவற்றிற்கும் எது காரணம்? நேர்மையற்ற செயல்பாடுகள். மனிதனின் ஆசை…! முரணான ஆசைகள். தெரிந்தே செய்யும் தவறுகள். அதுவே அவரவர்  துன்பத்திற்கான காரணங்கள்…!! நான் இப்படித்தான் எண்ணிக் கொண்டேன்.

றுநாள்  அலுவலகம் வந்து சேர்ந்த போது என் இருக்கைக்கு எதிரே முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார் கோபாலகிருஷ்ணன். முகம் மிகுந்த வாட்டமாயிருந்தது. இதென்ன…சோகமே உருவாய் இப்படி…?

வணக்கம்…சத்தியமூர்த்தி சார்….எனக்கு நீங்கதான் செய்யணும். என் பணி ஓய்வுப் பலன்களையெல்லாம் நீங்கதான் வாங்கித்தர ஏற்பாடு பண்ணனும். பிரபோஸல் அனுப்பணும்.  உங்களத்தான் நான் நம்பியிருக்கேன்.  உங்கள விட்டா இங்க வேறே யாரும் எனக்கு செய்து தர மாட்டாங்க…நான் பீஸ்ஃபுல்லா ரிடையர்ட் ஆவது உங்க கைலதான் இருக்கு…என்றவாறே என் இரு கரங்களையம் இறுகப் பற்றி இழுத்து முகம் புதைத்துக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். கை விரல்களில் ஈரம் படர்ந்த போது அவர் அழுகிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. அவர் உடம்பு குலுங்கியது. என் மனம் இரங்கியது. அவருக்கு உதவ வேண்டும் என்றுதான் இசைந்தது.

                                    -------------------------------

 

 

31 ஆகஸ்ட் 2024

 

“ஆச்சரியம் என்னும் கிரகம்” - 5 சிறுகதைகள் - ஜப்பானிய மூலம்-ஷிஞ்ஜி தாஜிமா-தமிழாக்கம்-வெங்கட் சாமிநாதன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன் (வெளியீடு - சாகித்ய அகாடமி,குணா காம்ப்ளெக்ஸ், அண்ணசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18)                                                         ---------------------------------------------------                                     




   சிறார் இலக்கியப் படைப்புக்கள் என்று இன்று எத்தனையோ புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல படைப்புக்கள் குழந்தைகளுக்கு எளிமையாகக் கதை சொல்ல வேண்டும் என்கிற நோக்கில் வலியக் கதை செய்யப்பட்டதாகவே தோன்றுகின்றன எனலாம். மிருகங்களுக்கு, வீட்டுப் பிராணிகளுக்கு என்று மனிதர்களின் பெயர்களை வைத்து உலவவிட்டு கதை பின்னினால் எளிமையானதாகத் தோன்றும் என்றும் அதன் மூலமே குழந்தைகளின் மனதில் சின்னஞ் சிறு  கதைகளை இருத்த முடியும் என்கிற எண்ணத்திலேயும் படைப்புக்களைக் காண முடிகிறது. அதுவே சிறுவர்களுக்கான இலக்கியம் என்றும் பேசப்பட்டு தொடர்ந்து படைப்புக்கள்  வலம் வந்து கொண்டிருக்கின்றன.

       ஆனால் சமூக நிகழ்வுகளை, மனிதர்களின் செயல்களை, ஆசைகளை, வஞ்சக எண்ணங்களை, எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கான வளர்ச்சிகளை விரட்டிக் கொண்டு ஓடும் மனித சமுதாயத்தை, தேய்ந்து கொண்டிருக்கும் மனித நேய உணர்வுகளை, சுயநலத்தை குழந்தைகளுக்கு நன்றாகப் புரியுமாறு கதையைப் பின்னியிருப்பதும், மிருகங்களின் நடவடிக்கைகள் மேற்கண்ட மனிதச் செயல்களைத் தோலுரித்துக் காட்டுவிதமாகவும் கதைகளை அமைத்திருப்பதும், சிறார் இலக்கியம் என்பது இவ்வகையிலேயே இருத்தல் வேண்டும் என்கிற  அவசியத்தை உணர்த்தும் விதமாக எளிமையாக திரு வெங்கட் சாமிநாதன் அவர்கள் மொழி பெயர்த்து அவசியம் படிக்க வேண்டிய முக்கியப் புத்தகங்களில் ஒன்றாக இதனை நிறுவியிருப்பது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.

       கோன் இச்சி என்கிற நரி கென்-போன்-டான் என்ற மந்திரத்தைப் பயன்படுத்தி மனித உருவம் கொள்கிறது. இந்த மந்திரம் என்ன உருவத்தை அடைய அந்த நரி விரும்புகிறதோ அந்தக் குறிப்பிட்ட உருவத்தை அடைய முடியும் என்கிற நிலையில் மனித உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது.

       இப்படி மனிதனாக மாறிய பல நரிகள் இன்று இருக்கும் இடமே தெரியாமல் எங்கெங்கோ சென்று விட்டார்கள். ஆகையினால் மகனே தயவுசெய்து நான் சொல்வதைக் கேள், இந்த விஷப் பரீட்சை  வேண்டாம் என்று  தாய் நரி சொல்ல, கோன் இச்சி அதைக் கேட்காமல் மனித உரு எடுத்து, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கண்ட ஒரு கம்பெனிக்குள் வேலை தேடிப் போகிறது. அதற்கு வணிக அதிகாரியாக வேண்டும் என்கிற ஆவல். நிறைய சம்பாதித்து உனக்கு சாப்பிடுவதற்கு ருசியான முயல்களை வாங்கி வருவேன் என்று தாய் நரியிடம் சொல்லிவிட்டு நேர்முகத் தேர்விற்குச் சென்று வணிக வரி அதிகாரியாகச் சேர்ந்து விடுகிறது. முயல் கோழி, எலி எல்லாம் வளர்க்கத் தெரியும் எனக்கு. ஒரு மிருகப் பூங்காவைப் பொறுப்பேற்று நடத்தத் தெரிந்தவன் என்று கூறுகிறது கோன் இச்சி.

       வீடுமலை (கோன் இச்சி இருக்கும் மலை) மிருகங்கள் பற்றியெல்லாம் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தேன்...என்று கூறி நிறுவனர் கோன் இச்சி பொறுத்தமான ஆள் என்று வேலை கொடுத்துவிடுகிறார். மாதங்கள் கழிகின்றன. வேனிற்காலம் கழிந்து, கோடை காலம் கடந்து பனிக் காலம் வருகிறது. விற்பனைக்கு நிறைய மயிர்த்தோல் ஆடைகள் வேண்டுமே என்று நிறுவனர் சொல்ல உற்பத்தியைப் பெருக்கும் வேலைகளில் கோன் இச்சி ஈடுபடுகிறான்.ஆடைகள் சேமித்து வைத்திருக்கும் பண்டகசாலைக்குச் செல்கிறான்...அங்கு அவனுக்கு பெரும் அதிர்ச்சி.

       அவன் தோழமைகள்...சக மிருக நண்பர்கள்...அவைகளின் பதப்படுத்தப் படுவதற்காக தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட தோல்கள்....அணில், முயல், கரடி, மரநாய், கீரி, வளைக்கரடி என்று எண்ண மிருகங்களின் கொத்துக் கொத்தான  தோல்கள் தலைகீழாக....மனம் கொதிக்கிறது. தேம்புகிறது. அழுகிறான் கோன் இச்சி. என் இனத்தையே அழிக்கும் இந்த உத்தியோகத்திலா நான் இருக்கிறேன். இதிலா இருந்து இத்தனை நாள் என் பசியைப் போக்கினேன்...இதென்ன பரிதாகம்?கடவுளே...! உனக்கு இரக்கமேயில்லையா...? இவற்றைக் கொள்ளை கொள்ளையாய் விற்றா இந்த நிறுவனர் லாபம் சம்பாதித்துக் கொழிக்கிறார்?  என்று குமுறுகிறது.

       அதே சமயம் இன்னொரு மனசு நான் மனிதன், இப்போது மிருகமில்லை...இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை...இப்படியாய் நினைத்துப் பார்ப்பதும் நியாயமில்லை என்று கூறுகிறது.

       மறுநாள் காலை ஒரு பெரிய வேட்டைக்காரக் கூட்டம் மலை நோக்கிச்  செல்கிறது. கூடச் செல்கிறான் கோன் இச்சி. துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சத்தத்திலிருந்து ஒதுங்கி விடு என்று நரியாய் இருந்தபோது அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது.

       நான் இப்போது மனிதன். ஒரு நிறுவனத்தின் பணியாளன். என்னை மதித்து அனுப்பியுள்ள நிறுவனருக்கு நான் செய்ய வேண்டிய கடமை இது என்று சொல்லிக் கொள்கிறர். பதுங்கும் நரிக்கூட்டங்களை, முயல் கூட்டங்களை, இன்ன பிற மிருகங்களை நோக்கி துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. ஒருநிலையில் தன்னை மறைத்துக் கொண்டு சரியான நேரத்துக்குக் காத்திருந்து, குறி பார்த்துப் பாயும் அந்த வெள்ளை உருவத்தை நோக்கித் தன் துப்பாக்கிக் குண்டை குறிப்பாகச் செலுத்துகிறது கோன் இச்சி.

       அலறி விழுகிறது அந்த வெள்ளை நரி.   ஆஉறா....இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு மிருகத்தை நம் நிறுவனம் கண்டதேயில்லை. என்ன அபாரமான திறமை உனக்கு. உன்னுடைய தொழில் பக்தி, கடமையுணர்ச்சி கண்டு நான் பெருமைப்படுகிறேன்...என்று நிறுவனர் அகமகிழ்ந்து பாராட்ட, அந்த வெள்ளித்தோல் நரி கோன்இச்சி சுட்டு வீழ்த்திய அவன் தாய் என்பதை அறியும்போது மனம் பதைத்துப் போகிறது நமக்கு.

       ஐயோ...என்ன பாவம் செய்துவிட்டேன்...எனக்கு இந்த வேலை வேண்டாம். வசதி வாய்ப்புக்கள் வேண்டாம், வருமானம் வேண்டாம்...எனக்கு என் அம்மாதான் வேண்டும்...அம்மாதான் வேண்டும் என்று கதறுகிறான் கோன் இச்சி.  மலையை நோக்கி ஓடுகிறான். யார் கண்ணிலும் படாமல் எங்கோ சென்று மறைந்து விடுகிறான். கோன்...கோன்...கோன்...என்ற ஒலி மட்டும் ஏங்கும் குரலாக அந்த மலைப்பிரசேத்தில் விடாது இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

       மனிதனாக மாறிவிட்ட ஒரு மிருகம் எப்படி இயந்திரத்தனமாக இயங்கி, தன் சுற்றங்களை அழிக்கிறது, இழக்கிறது என்கிற வேதனையாக உண்மையை இந்தச் சிறுகதையில் உணர்கிறோம் நாம். தாயை விட்டுப் பிரிந்து சென்று மனிதனாக மாறி நகர்ப்புறத்துள் புகுந்து, தன் சுற்றத்தையும், தாயையும் மறந்து, கடைசியில் தன் இனத்தின் அழிவையே தன் பணியில் காணுவதும், தானே அதற்குக் காரணமாய் அமைந்து விடுவதும், பெற்றெடுத்த தாயையே இழந்து நிற்பதும், இன்றைய ஐ.டி.. நிறுவனக் கலாச்சாரங்களோடும், வெளிநாட்டு மோகங்களோடும் பொருத்திப் பாருங்கள். கோன் இச்சி வீடுமலை என்ற தலைப்பிலான இந்தக் கதையின் உள்ளார்ந்த நோக்கமும், நியாயமும் நமக்குப் புரிபடும்.

       மனித இனம் தன்னுடைய வளர்ச்சிக்காக எப்படியெல்லாம் அசுரத்தனமாக இயற்கை வளங்களைச் சுரண்டுகின்றன என்பதை விளக்கும் சிறப்பான படைப்பாக ஆச்சரியம் என்னும் கிரகம் கதை விளங்குகிறது. தொகுதியின் ஐந்து கதைகளும் அன்பு கலவாத பேராசை மனித ஆத்மாவையே கொன்று விடும் என்கிற தத்துவத்தை உள்ளடக்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

       இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் இயற்கை வளங்களை எப்படியெல்லாம் சீரழித்து, வறட்சியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும், மனிதர்களின் பேராசைகள் எல்கையற்று விரிந்து பரந்து பற்பலவிதமாக அழிவுகளுக்கு எந்தெந்த வகையில் காரணமாய் அமைந்து விடுகிறது என்பதையும், பிற உயிரினங்களை அழித்து தன்னை வளப்படுத்திக் கொள்வதில் மனிதர்களின் முனைப்பும், இரக்கமற்ற தன்மையும், சுயநலத்தையும், பேராசையையும் முடிவற்ற நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருப்பதை குழந்தைகள் மட்டுமல்லாது வயது முதிர்ந்தோராகிய நம்மின் உணர்தலுக்கும் முக்கிய காரணமாய் நின்று இளைய தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி நம்மை பயப்படுத்தி விரக்தி கொள்ள வைக்கிறது.

       திரு வெங்கட்சாமிநாதன் அவர்களின் தமிழாக்கம் படிப்பதற்கு நெருடலின்றி, குழந்தைகளுக்குப் புரிவதுபோல் எளிய மொழியில் சரளமாகச் சொல்லப்பட்டிருப்பதே இப்புத்தகத்தின் சிறப்பாகும். சாகித்ய அகாடமியின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இந்த ஆச்சரியம் என்னும் கிரஉறம் விளங்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 

30 ஆகஸ்ட் 2024

 

சிறுகதை     '“என் மக்கள்”                      உஷாதீபன்                 பிரசுரம் செம்மலர் செப்.2024 இதழ்       






           

       வீட்டு வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான் விற்றுக் கொண்டிருந்தது...இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம் வாங்கியிருக்கிறார் மனசில்லாமல். இந்த முறை பதினைந்து என்றவுடன் மனசு விட்டுப் போனது. பெரிய வித்தியாசமில்லைதான். ரெகுலராக அந்தத் தெருவில் வேனில் தண்ணீர் வாங்குபவர்கள் யாரும் இப்பொழுதும் நிறுத்தியதாகத் தெரியவில்லை. மூன்று நான்கு வேன்கள் வருகின்றனதான். ஒவ்வொரு ரூபாய் வித்தியாசப்படும். அது அதில் வழக்கமாக வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தப்படுத்திய தண்ணீர் என்கிற நினைப்பு. இவருக்கொன்றும் அவ்வளவு நம்பிக்கையில்லை.

      எப்பொழுதுமே வேனில் வாங்காதவரான நாலு வீடு தள்ளியுள்ள பிரபாகரன் இப்பொழுதும் வாங்குவதில்லை. பதிலாக அவர் ஒன்று செய்கிறார்...சைக்கிளோடு வரும் ஒரு ஆளிடம் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைக் கொடுத்து பின் சீட்டில் கட்டித் தொங்கவிட்டு அவரை அருகிலுள்ள காலனியிலிருந்து  எடுத்து வரச் செய்கிறார். ஒரு குடத்திற்கு இவ்வளவு என்று கொடுப்பார் போலும். கேட்டுக் கொள்வதில்லை. சமயங்களில் அவரின் அந்த சைக்கிளுக்கு டயர், செயின், ரிப்பேர் என்று வேறு உதவிகளும் செய்கிறார். அவருக்கு அது திருப்தியாக இருக்கிறது. மனசும் இருக்கிறது.

      ஈஸ்வரன் ஆரம்ப காலத்திலிருந்தே அவரது மொபெட்டில் போய்த்தான் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். என்றுமே வேன் தண்ணீர் அவர் வாங்கியதில்லை. தினமும் பத்து ரூபாய் என்றால் மாதத்துக்கு முன்னூறா...என்ன அநியாயம்? என்று அவர் மனது சொல்லியது.

      அப்படியொன்றும் அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராயும் தோன்றவில்லை. சுட வைத்துக் குடிக்க இறக்கியபோது  மேலாகப் படர்ந்திருந்த பவுடர் போன்ற படலமும், அசாத்தியக் க்ளோரின் வாடையும் பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதிரிக் கடுத்தது அந்தத் தண்ணீர். வாங்குவதை நிறுத்திவிட்டார். காசையும் கொடுத்து வியாதியையும் வாங்கிக்கவா?

      இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள நெசவாளர் காலனியின் ஓரிடத்தில் நாள் முழுவதும் விடாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பள்ளமான பகுதி அது. அங்கு எப்போதும் கூட்டம்தான். கார்ப்பரேஷன்காரர்களை அவ்வப்போது கவனித்து, அந்த லாபத்தை அந்தப் பகுதி வீட்டுக்காரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று நான்கு வீடுகளில் விடாது அடி குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ராத்திரி பதினோரு மணிக்குக் கூட அங்கு ஓய்வில்லை. ஒழிச்சலில்லை.

      குடத்திற்கு ஒரு ரூபாய் என்று வசூலித்தார்கள். அது ஐம்பது பைசாவிலிருந்து முக்கால் ரூபாயாகி பின்பு ஒரு ரூபாயில் வந்து நிற்கிறது. ஒரு ரூபாய்க்கு மேல் ஏற்றமில்லை. சில வருடங்களாகவே அந்த ரேட்தான் நிலைத்திருக்கிறது. சில்லரைக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் வசதி. தொலை தூரத்திலிருந்து கூட ட்ரை சைக்கிள் போட்டுக் கொண்டு பத்துக் குடங்களை வண்டியில் அடுக்கி வந்து பிடித்துச் செல்பவர் உண்டு. அந்த நேரம்தான் அங்கே சண்டை வரும்....சலுப்பக்குடிச் சண்டை. ஆனாலும் அந்த பாஷை கேட்க இதம்...! நியாயம் தலை தூக்கி நிற்கும்.

      நீங்க ஒரு குடம் பிடிச்சவுடனே எங்களுக்கு விட்ரணும்...தொடர்ந்து பத்தையும் பிடிக்க முடியாதாக்கும்...அப்புறம் நாங்க என்ன பொழுதுக்கும் நின்னுக்கிட்டே இருக்கிறதா? பிள்ளைகள பள்ளிக்கோடத்துக்கு அனுப்ப வேணாமா? சமையல் பண்ண வேணாமா? நாங்க குளிச்சு, குளிக்கப் பண்ணி...எம்புட்டு வேல கெடக்கு... நாலஞ்சு கி.மீ. தள்ளியிருந்து வர்றீக...ஒங்க பக்கமெல்லாம் குழாயே இல்லாமப் போச்சா...? இம்புட்டுத் தொலை வந்து எங்க கழுத்த அறுக்கிறீங்க?

      அந்தச் சண்டையில் குழாய் வீட்டுக்காரர்கள் தலையிடுவதேயில்லை. எதையோ பேசி, என்னவோ செய்து கொள்ளட்டும்...நமக்கென்ன...! எப்படியும் நாளுக்கு நூறு தேறும். வண்டிக்காரன் நின்னால்...அது குறையும். ரெண்டு டிரிப் அடிக்கிறானே? அங்குதான் ஈஸ்வரன் சென்று கொண்டிருந்தார். மற்றவர் போல் சைக்கிளில் குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி பின் சீட்டில் இருபக்கமும் சமமாகத் தொங்கவிட்டுத் தண்ணீர் கொண்டு வரும் சாமர்த்தியமெல்லாம் அவருக்கில்லை. அப்படி முயற்சித்தபோது பாதி வழியில் குடம் கீழே விழுந்து நசுங்கி, வண்டி சாய்ந்து,..இவரும் விழுந்து, சாலையில் செல்வோர் தூக்கி நிறுத்தி...அமர்க்களமாகிப் போனது.

      அந்தச் சமயம் இவர் புது மொபெட் ஒன்று வாங்கியிருந்ததால் அதில் ஒவ்வொரு குடமாய் ரெண்டு நடை கொண்டு வருவதெனப் பழக்கப்படுத்தியிருந்தார். பெட்ரோல் காசைக் கணக்குப் பண்ணினால் கூட வாசலில் வரும் தண்ணீர் விலை அதிகம்தான் என்றுதான் தோன்றியது. தண்ணீரோடு திரும்பும்போது மிக மெதுவாய்த்தான் வருவார். 150 லிட்டர் கேன் ஒன்று வாங்கினார். சைடு கொக்கியில் தொங்கவிட்டுக் கொண்டு பறந்தார். குழாயடிக்குச் சென்ற போது வண்டி மட்டும்தான் இருந்தது. மேடு பள்ளத்தில் ஜம்ப் ஆகி அது எங்கோ விழுந்து விட, வண்டியைத் திருப்பி வழியெல்லாம் அதைத் தேடிக் கொண்டே வந்தார். என்னா கெரகம் இது...நமக்குன்னு அமையுதே...என்று ஒரே வேதனை அவருக்கு.

      சாமீ....என்னா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கீகளே...கேன் வாணாமா...? என்றுகொண்டே ஒரு கடை வாசலிலிருந்து பாய்ந்து வந்தார் ஒருவர். இத்தனைக்கும் அவரை அந்த வழியில் செல்கையில் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்திருப்பார். அவ்வளவுதான். அந்த மனுஷாளின் ஈடுபாடே தனி...!

      ஈஸ்வரனுக்குப் பிடித்ததே இந்த மாதிரியான மனித உறவுகள்தான். அவர் குடியிருக்கும் பகுதியில், காலையில் உழவர் சந்தைக்குப் போய் வரும் வேளையில், உழவர் சந்தையில், ஏன் ஐந்து கி.மீ.க்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் பார்க்கும், பழகும் முகங்களை அவருக்கு தினமும் பார்த்தாக வேண்டும். அவர்களோடு பேசுகிறாரோ இல்லையோ, அவர்கள் இவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, அந்தத் தெரிந்த, அறிந்த முகங்களை அன்றாடம் பார்த்து ரசிப்பது அவருக்கு மன சாந்தி. கை கொடுப்பதற்கு நிறைய உறவுகள் இருப்பதுபோல என்றே சொல்லலாம். வாங்கய்யா...என்னா ரொம்ப நாளாக் காணலை...என்று சொல்லிக் கொண்டே நிறுவைக்கு மேல் ஒரு கை வெண்டைக்காயை அள்ளிப் போடும் பெண்மணி. அய்யா...வாங்க...தோட்டத்துக் காயி...காலைல பறிச்சதாக்கும்...வாங்கிட்டுப் போங்க.....என்ற அன்பு குழைந்த வரவேற்புகள். நாலு காய்தான் வாங்குகிறோம் என்றாலும் நாற்பது கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றி வருவதில் கிடைக்கும் திருப்தி...மன நிறைவு...! 

வழக்கமாய்ப் பார்க்கும் போஸ்ட்மேன்..மனோகரன்சார்…தண்ணி கொடுங்க…என்று உரிமையோடு வாங்கிக் குடிக்கும் நெருக்கம் ....வழக்கமாய் தெருவில் பழைய பேப்பர் எடுக்க வரும் சிவசாமி...அன்றாடம் கீரை கொடுக்கும் முனித்தாய்...உப்பு...உப்போய்....என்று சைக்கிளில் ஒரு மூடை உப்பை வைத்து ஓட்டிக் கொண்டு வரும் சம்புகன்...தெருக் கடைசியில் தோசை மாவு விற்கும் மரியக்கா...இங்க வண்டிய நிறுத்திக்கிறட்டா சார்...என்று கேட்டு புதிதாய்த் தான் வளர்த்திருந்த வேப்பமரத்தடி நிழலைப்  பிடித்த அயர்ன்காரர் அந்தோணிசாமி...வாரம் தவறாமல் சாக்கடை தோண்டிவிட்டு காசுக்கு வந்து நிற்கும் பஞ்சாயத்துப் பேச்சி...இன்னும் எத்தனையெத்தனை பேர்...யாரை நினைப்பது...யாரை மறப்பது?   என்னவோ ஒரு ஒட்டுதல்...எதனாலோ ஒரு பிடிப்பு...இனம் புரியவில்லைதான். ஆனாலும் மனதுக்கு சுகம். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்யம்? பழகிய அந்த எளிய மக்களைப் பார்க்காததே பெரிய வியாதியாகிவிடும் போலிருக்கிறதே...! பிரியத்தோடு முகம் பார்த்தலும்,பரஸ்பர  நலம் விசாரிப்புகளும்

      ஒரிஜினல் உறவுகளெல்லாம் இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகப்படுவது போலல்லவா சத்தமின்றி இருக்கிறார்கள். எப்பொழுதும், ஏதாச்சும், கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று தந்தி வாக்கியமாய்ப் பேசுகிறார்கள். பொய்யாய்ச் சிரிக்கிறார்கள். ரொம்பவும் சுமுகமாய் இருப்பதுபோல் யதார்த்தம் பண்ணுகிறார்கள். அதிலெல்லாம் இப்போது பிடிப்பு இல்லை இவருக்கு. அவங்கவங்க அங்கங்கே இருந்துக்க வேண்டிதான்..அப்டி அப்டியே செத்துப் போய்க்க வேண்டிதான்...! யார் யாரை நினைச்சு உருகப் போறாங்க...? எல்லாம் வெறும் வேஷம்மாயை...! அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் தனித் தனிதான்.

      பிடித்த மனிதர்கள் அவர் வாழ்ந்த ஊரின், குடியிருக்கும் பகுதி மக்கள்தான். அதிலும் பலருக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் பலரைத் தெரியாதுதான். ஆனால் அன்றாடம் முகம் பார்க்கிறார்களே...! அது ஒன்று போதாதா?  பார்த்துப் பார்த்துப் பழகினவர்களாகி விட்டார்களே...! ஒரு வார்த்தை பரஸ்பரம் பேசியதில்லைதான். பேசினால்தான்  ஒட்டுதலா? பார்வையிலேயே எத்தனை நேசம் வழிகிறது அங்கே?

      இல்லையென்றால் அன்று குடத்தோடு கீழே விழுந்தபோது, ஓடி வந்து தூக்குவார்களா? மனிதனின் இயல்பே உதவுவதுதான். அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். சூழ்நிலைதான், வாழ்வியலின் கஷ்டங்கள்தான் அவர்களைத் திருப்பிப் போட்டு விடுகின்றன. ஆனாலும் விழுமியங்களாய் ஆழ் மனதில் படிந்து போன நன்னெறிகள் அவர்களை விட்டு என்றும் விலகுவதில்லை.

      மாநகரத்தின் மெட்ரோ தண்ணீர் லாரிகள் அவரின் நினைவுக்கு வந்தன. எந்தச் சந்திலிருந்து எந்த பூதம் பாயும் என்பதாய் குறுகிய வீதிகளில் அதைப் பொருட்படுத்தாமல் கீங்...கீங்...கீங்....என்று காது கிழிய ஏர் உறாரன் அடித்துக் கொண்டு, ஒதுங்க வில்லையென்றால் சமாதிதான் என்று அலறவிட்டபடி கிடுகிடுத்துக் கொண்டிருக்கின்றன அவைகள். அடுக்ககங்களின் தேவைகளை அவைதான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அது சுத்தமான தண்ணீரா, சுத்திகரிக்கப்பட்டதுதானா என்பதையெல்லாம் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அங்கே யாருக்கும் நேரமில்லை. கிடைத்தால் போதும். வந்து சேர்ந்தால் போதும் என்று சம்ப்பைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் காசோடு காத்திருக்கிறார்கள் மக்கள். கிளம்பும் சர்க்கிளில் கூட்டம் கூட்டமாக லாரிகள். அடுத்து அடுத்து என பொத பொதவென்று லாரிக்குள் தண்ணீரை இறக்கி நிரப்பி,  ஒரு பொட்டலம் குளோரின் பாக்கெட்டைத் தூக்கி வீசுகிறார்கள். வாயை இழுத்து மூடிக் கிளம்ப வேண்டியதுதான். நகரின் கேடுகெட்ட சாலைகளின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி உள்ளே வீசப்பட்ட அந்த ஒரு பாக்கெட் குளோரின் பவுடர் லாரித் தண்ணீரோடு கலந்து..கலங்கி.....அவ்வளவுதான் நீர்ச் சுத்திகரிப்பு முடிந்தது.

       பார்த்துப் பழகி மனம் நொந்துதான் போனார் ஈஸ்வரன். வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பெரு நகரம் ஏனோ அவருக்கு ஒட்டவில்லை. ஒட்டவேயில்லை. வெளியே கோயில் குளம் என்று கிளம்பினால் டாக்சிக்குக் காசு கொடுத்து மாளவில்லை. அதென்னவோ அந்த நகரத்திற்கு வந்தபின்னால்தான் உறவுகளெல்லாமும் அங்கேதான் பல்வேறு இடங்களில் நிரந்தர வாசம் செய்கிறார்கள் என்பதே அவருக்குப் புலப்பட்டது. அநியாயத்திற்கு இப்படியா விசேடங்கள் வரும்? மாற்றி மாற்றி....மாற்றி மாற்றி....கல்யாணம், காட்சி, வளைகாப்பு, ஜனனம், மரணம்....என்று எல்லாத்துக்கும் தகவல் வந்து கொண்டேயிருக்க....போகாமல் முடியவில்லையே? மொய் எழுதியும், டாக்சிக்குக் கொடுத்துமே பென்ஷன் காசு பூராவும் கரைந்து போகும் போலிருக்கிறதே...! என்னடா இது அநியாயம்? ஓய்வூதியத்தில் ஒரு ஆயிரம் கூட நான் எனக்கென்று செலவு செய்து கொள்வதில்லையே? அத்தனையும் அநாமதேயமாய்ப் போய் கண்ணுக்குத் தெரியாமல் என்ன மாயா ஜாலம் இது?...! நல்ல கதையப்பா...நல்ல கதை...! வெறுத்தே போனார் ஈஸ்வரன்.....

      சொர்க்கமே என்றாலும்.....அது நம்மூரப் போல வருமா? அது எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கீடாகுமா?

      ஆள விடு..சாமி...! என்று சொல்லிக் கிளம்பியே வந்து விட்டார். தனியாப் போயி இருக்க முடியாதுப்பா....என்று பையன் சொல்ல....என் மக்கள் முகங்களை அன்றாடம் பார்த்தாலே போதும். எனக்கு.....அதுவே பெரிய ஆரோக்கியமாக்கும்...என்று மறுத்து மாநகரத்துக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டார். மனைவி ஸிந்துஜா பம்மியதை அவர் கவனிக்காமலில்லை. நீ இல்லேன்னா என்ன...என்னால வாழ முடியாதா? இருந்து காட்டறேன் பார்....என்று நினைத்துக் கொண்டார். வயசாக வயசாகக் கணவன் மனைவிக்குள் பிரியமும், பாசமும் அதிகரிக்கும் என்று பெயர். இங்கே என்னடாவென்றால் இவர் எப்படா தனியே ஓடுவோம் என்று காத்திருந்தார். பையனிடம் அவ்வளவு ஒட்டுதல்! பார்ப்போம் அந்த நாடகத்தையும்!!

       நீயும் வர்றியா? என்று கூட ஒரு வார்த்தை அவளிடம் கேட்கவில்லை. கிட....அவ்வளவுதான்...!. நான் தனியா இருந்தா நிம்மதியாத்தான் இருப்பேன் என்று இவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்போது தேவை தனிமை. யாரும் குறுக்கிடாத தனிமை. அமைதி. நிச்சலனமான அமைதி. அது அவர் வாழ்ந்த அந்த வீட்டில்தான் கிடைக்கும். அது அவருக்கு ஒரு கோயில். அவர் தாய் தந்தையரோடு வாழ்ந்து கழித்த சொர்க்கம். அங்கே அவர் பிராணன் போனால்தான் நிம்மதி.

      இதோ....அவருக்கென்று உள்ள சேடக் ஸ்கூட்டரில் இரண்டு கால்களுக்கு நடுவே அந்தத் தண்ணீர்க் கேன். வண்டியைக் கிளப்பி விட்டார் ஈஸ்வரன். இன்னும் அந்தப் பகுதியில் தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறார்களா தெரியாது. குடம் ஒரு ரூபாய்தானா, அதுவும் தெரியாது. அந்த ட்ரை சைக்கிள்காரன் வந்து நின்றிருப்பானோ? அதுவும் தெரியாது. ஆனாலும் அந்த ஜனங்களைப் பார்த்தாக வேண்டும் அவருக்கு. அவர்கள் பேசும் பாஷையைக் காது குளிரக் கேட்டாக வேண்டும்.  அதில் ரெண்டு கெட்ட வார்த்தைகள் தொற்றிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை...! அவர்களின் அந்த வெள்ளை மனசு...அன்றாடப் பாடுகளில் உழன்றிடினும் அதனையே கருமமாய் ஏற்றுக் கொண்டு பயணப்படும் அவர்களின் வாழ்க்கை....கரித்துக் கொண்டும், கலகலப்பாயும் நகர்த்தும் அவர்களின் அன்றாடப் பொழுதுகள்....அவைதான் எத்தனை ரசனைக்குரியவை...எவ்வளவு மதிப்பிற்குரியவை...!!

      அடடே...வாங்க சாமீ....என்னா ரொம்ப நாளா ஆளைக் காணலை.....- என்றவாறே ஒட்டு மொத்தக் குரலெடுத்து வரவேற்ற அவர்களின் அந்த அன்பில் திளைத்து கண்கள் கணத்தில் கலங்கிப் போக, வந்தாச்சு...வந்தாச்சு...இங்கயே வந்தாச்சாக்கும்...!”.என்று சிறு குழந்தைபோல் உற்சாகமாய்க் கூறிக் கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஆதுரத்தோடு நகரலானார் ஈஸ்வரன்.

கொண்டாங்க கேனை...முதல்ல நிரப்பிடுவோம்...என்றவாறே எட்டி வாங்கினது ஒரு பெண்.

      மகளே....! என்று மனதுக்குள் ஈரம் கசிய அழைத்துக் கொண்டார்.

      கொஞ்ச நேரம் உங்களோட உட்கார்ந்து பேசிட்டு, அப்புறம் பிடிச்சிட்டுப் போறேனே!. நீங்கல்லாம் பிடிங்க….என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு நடுவே போய் சம்மணம் போட்டு  அமர்ந்தார் ஈஸ்வரன். அவரின் அந்த நாள் இனிமையாய்த் தொடங்கியது.

                                    ----------------------------

 

05 ஆகஸ்ட் 2024

 

சிறுகதை      “தவிப்பு”            உயிர் எழுத்து மாத இதழ் - ஆகஸ்ட் 2024  பிரசுரம்   



            



             

            சூடத்தட்டைக் காண்பித்து, ஒவ்வொருவராக விபூதி கொடுத்துக் கொண்டு வருகையில், அது சாந்தியின் கைதான் என்று பளிச்சென்று தெரிந்தது தட்சிணாமூர்த்திக்கு. மனசு அடையாளப்படுத்திவிட்டது…! நிமிரப் போன தலையை ஒரு கணத்தில் நிலை நிறுத்திக்கொண்டு, உள்ளங்கையில்  விபூதியைப் பொட்டாய் உதிர்த்தார்.

            மீதி விபூதியை  கிண்ணத்துல போடுங்கோ… தூண்ல தூவிட்டுப் போயிடாதீங்கோ…சுத்தம் பண்ணி முடியலை. பொதுவாகச்-சொல்லியவாறே அடுத்தாற்போல் குங்குமத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  முன்பெல்லாம் விபூதி, குங்குமம், சூடத்தட்டு என்று ஒரே சமயத்தில் எடுத்து வருவார். சமீபமாகக் கை நழுவுகிறது. மூன்றையும் தாங்கலாய்ப் பிடிப்பதில் கவனம் விட்டுப் போகிறது. மனசு ஒரு நிலையில் இல்லையானால் அப்படித்தான்..! என்ன செய்வார் பாவம்!

            எப்போதிருந்து இப்படியானது என நினைத்துப் பார்த்துக் கொண்டபோது,  அந்த நிகழ்விற்குப் பிறகுதான் என்று தலையாட்டிக் கொண்டார். தான் பலவீனம் ஆனதே அதற்குப் பிறகுதானே? கண்களில் நீர் துளிர்த்தது. இந்தக் கண்ணீருக்குத்தான் விலையில்லாமல் போனதே…! என்று  மனசு சொல்லியது. ஏலாதவன் கண்ணீர் சொந்தங்களிடமே செல்லுபடியாவதில்லை…! சொந்தமென்ன, பெற்ற மகளிடமே விலையில்லாமல் போனதே? யார் சிரித்தால் என்ன? யார் அழுதால் என்ன?

குங்குமத்தை வரிசையாகக் கொடுத்து வந்தபோது தன் பெண் சாந்தியின் கை காத்திருக்கிறதா என்பதை மனசு மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டே வந்தது. அவளுக்காகவே, சுற்றியிருக்கும் கூட்டத்தை தான் நிமிர்ந்து பார்க்காததும், அதே சமயம் குங்குமம் வாங்காமல் போய் விட்டாளோ என்கிற ஆதங்கமும், ஒவ்வொருவராய்க் கடந்து வந்தபோது, அந்தக் கைக்கு சற்று அதிகப் பிடியாகத் தன்னையறியாமல் குங்குமம் விழுந்ததை அவரால் தடுக்க முடியவில்லை.

பெட்டில பேப்பர் அடுக்கியிருக்கு…காலண்டர் தாள் கிடக்கு…தேவைப்பட்டவா பிரசாதத்தைப் பொதிஞ்சிக்கலாம்…என்றும் பொதுத் தகவலாக அறிவித்தார்.

            குருக்களய்யா…சாமிக்கு வச்ச பூ கொஞ்சம் எடுத்துக் கொடுங்க…-என்று ஒருவர் அக்கறையோடு கேட்க…இதோ வந்துட்டேன் என்று மீண்டும் சந்நிதிக்குள்ளே போனார். கேட்டவருக்கு என்று மட்டுமல்லாமல் இன்னும் கொஞ்சம் பூவை அள்ளி வந்தார். அப்போதும் சாந்தியின் கை நீண்ட போது மீதமிருந்த உதிரிப் பூக்களை அப்படியே அவள் கையில் திணித்தார். பார்வை மட்டும் மேலே விழவேயில்லை. நழுவிப்போன பார்வைதானே? அல்ல அல்ல… நழுவ விட்ட பார்வை…!

            அந்த முகத்தை எதிர்நோக்க மனமில்லை. தவித்துப் போய்விடுவார். அவரால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. பதறி நடுங்கி, கோயில் என்றும் பாராமல் தன்னை மறந்து ஆவியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு விட்டாரானால்? ஒரு மாதிரி ரசாபாசம் ஆகிப்போகுமே? பலரும் பலவிதமாய் நினைக்க நேரிடுமே?

            அந்த முகம்தான் எவ்வளவு மாறிவிட்டது அவளுக்கு? வேறொரு இனக்கலப்பில் உடற்கூறுகளில் கூட இப்படியா மாற்றம் ஏற்படும்? அந்தச் சிரிப்பும், அவளது பார்வையும் கூட சற்று வெளிறித்தான் இருக்கிறது. கண்களின் அந்த ஒளி எங்கே போய் மறைந்தது?  அதை இப்போது மீண்டும்  வலிய நோக்கி வயிரெறிய வேண்டாம்…இதுவும் ஒரு காரணம்தான் அவருக்கு. எதை எதையோ எண்ணி மறுகுகிறார் மனதுக்குள். ஆறமாட்டேனென்கிறது. பெரிய பெரிய தத்துவங்களும், ஆன்ம விசாரங்களும் படித்தறிந்தவர் அல்ல அவர். சாதாரண கோயில் குருக்கள். ஆண்டவனுக்கு ஆழ்ந்த மனதோடு மந்திரங்களை ஸ்தோத்திரம் செய்து வணங்க வருபவர்களின் மனம் குளிரக் குளிர அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற மனதார ஆசீர்வதித்து அனுப்பும் ஒரு எளிய மனிதர். எல்லார் வேண்டுதல்களும் நிறைவேற ஆத்மார்த்தமாய் வேண்டிக் கொண்டு நின்ற அந்த இறையன்பனின் சொந்த வேண்டுதல் நிறைவேறிற்றா? இல்லையே? வேண்டுதல் என்று தனியே ஏது? இறைத்தொண்டே அதுதானே? ஆத்மார்த்தமான எதற்கும் தனித்த அடையாளம் இட்டுத்தான் நோக்க வேண்டுமா?

            அர்ச்சனைக்குக் கொடுத்தவா யாரு…தட்டு வாங்கிக்குங்கோ… என்று சம்பந்தப்பட்டவர்களிடம் நீட்டியபோது, சாந்தி இருக்கிறதா,  போய்விட்டதா என்று அவர் கண்கள் தேடின. அவர்கள் கொடுத்த தேங்காய் ஒரு மூடி, பழம், தட்சிணை எதுவும் அவர் கருத்தில் ஏறவில்லை. பெரும்பாலும் தட்சிணையை மட்டும்தான் எடுத்துக் கொள்வார். இதையும் எடுத்துக்குங்க சாமி…அப்பத்தான் எங்களுக்கு மனசு நிறையும்!…அவர்கள் இவருக்குக் கொடுக்கும் மதிப்பு மரியாதையைக் கூட இவள் எனக்குக் கொடுக்காமல் போய்விட்டாளே…!

சமீபமாய் தினமும் தவறாமல் கோயிலுக்கு வருகிறாள். இதற்கு முன் அப்படி இல்லை…அதாவது திருமணத்திற்கு முன்…அதென்ன முறைப்படி செய்து வைத்த திருமணமா? அவர்களாகப் போய் பண்ணிக் கொண்டதுதானே? அதுநாள்வரை பார்த்துப் பார்த்து எல்லாம் செய்து, பாங்காய் வளர்த்து விட்டவர்களுக்கு அந்தப் பாழாய்ப் போகாத பவித்ரமான கல்யாணம் என்ற ஒன்றை முறைப்படி  செய்து வைக்க புத்தி இல்லாமல் போகுமா என்ன? பெற்றவர்களுக்குத் தெரியாதா எப்படிக் கரையேற்றுவது என்று?  அதனால்தான் பாழாய்ப் போன கல்யாணமாய் அவர்களாகவே தேடிக்கொண்டு வந்து நின்று “இவன்தான் என் புருஷன்” என்கிறார்கள். இதைத் தடித்தனம் என்று சொல்லாமல் வேறு எந்தப் பு(மு)து மொழி சொல்லி அழைப்பது? என் பெண்ணின் செயலைக் கண்டிப்பதற்கு எனக்கு உரிமையில்லையா? வக்கற்றா போய் நிற்கிறேன்? வக்கற்றுத்தான் போனது. அதுதான் உண்மை…! சொன்னது மீறினால் அதுதானே பொருள்?

.அப்பொழுதெல்லாம் இல்லாத தெய்வ நம்பிக்கை இப்போது கிட்டியிருக்கிறது. இது தெய்வ நம்பிக்கையா அல்லது தன்னைப் பார்ப்பதற்கா? என்றாவது அப்பாவின் மனசு இரங்காதா என்று எதிர்பார்க்கிறாளோ? தெய்வம் கருணை செய்யுமா?  தெய்வம் அவர்கள் இஷ்டப்படி கல்யாணத்திற்குக் கருணை செய்து விட்டதே? இது கூடாது. உன் அப்பாம்மா உனக்குப் பாந்தமாய், பொருத்தமாய் பார்த்து வைப்பார்கள். அதுவரை பொறு…என்று கையைப் பிடித்து நிறுத்தவில்லையே? உணர்வு ரீதியில் உஷார்படுத்தவில்லையே? நாலு காலமும் பூஜை செய்து வழிபடுபவன் ஒருவன். பலன் அவன் வாரிசுக்கா? பலனா அல்லது முரணா?

கோவிலுக்கு வழக்கமாய் வரும் சிலருக்கும் இது தெரியும்தான். அவளையும்தானே தெரியும்.  எவராவது அவளிடம் ஒரு வார்த்தை பேசுகிறார்களா? பார்த்ததும் தள்ளியில்லையோ விலகிச் செல்கிறார்கள்? அன்று பார்த்த அதே சாந்திதானே? அதே தட்சிணாமூர்த்தியின் சீமந்த புத்திரிதானே? இன்று மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போனால் அவள் மனசு நோகாதா? நோகட்டும் என்றுதானே பாராதது மாதிரி பாய்ந்து விலகுகிறார்கள். ஒருவேளை எனக்கு ஆதரவாய் நிற்பதாகக் காட்டிக் கொள்கிறார்களோ? பெத்தவா பேச்சுக் கேட்காத குடிகேடி…! அந்த வார்த்தையைச் சொல்லக் கூட மனசு கூசுகிறதுதான்….

பொண்ணு நன்னாயிருக்காளா…கல்யாணத்துக்குப் பார்த்துண்டிருக்கேளா? என்று ஒருத்தராவது கிரமமாய்க் கேட்பார்களே…எதுவுமில்லையே?. எல்லாம் நின்று போயிற்று.  காலத்தின் கோலம். நாம இருக்கிறபடி இருந்தால் எல்லாமும் நம் கூடவே இருக்கும். கோணிக் கொண்டால் மற்றவையும் கோணத்தானே செய்யும். கோணல் மாணலாய் இருப்பதெல்லாம் நமக்குப் பொருந்திவருமா என்கிற புத்தி முன்னாலேயே இருக்க வேண்டும். அப்பத்தான் பொருந்தாதவை நம்மை அண்டாது. அதை யோசிக்க விடாமல் உடம்பு தினவெடுக்கிறதோ? அது முந்திக் கொள்கிறதோ? முந்திக் கொண்டதனால்தானே இப்படி நடந்தேறியிருக்கிறது.

எவரும்  எதுவும் கேட்பதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதுதானே மனித இயல்பு. சொல்லப்போனால் தன் மகள் சாந்தியிடம் பேருக்குக்கூட அவர்கள் பேசுவதில்லை.ரெண்டே ரெண்டு  வார்த்தை…சௌக்கியமா இருக்கியா? கேட்கலாமே…! யாருக்கும் வாய் வருவதில்லை. தானே கேட்கவில்லை. மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சரி? அதன் மூலம் அவள் நலத்தை அறிந்து கொள்ளும் ஆவலா? அதுதான் வேண்டாம் என்று விலக்கி வைத்தாயிற்றே? பிறகெதற்கு மனம் தவதாயப்பட வேண்டும்? ஒரே தெருவில் இருந்து கொண்டு, தினசரி கண்ணுக்கு முன்னால் வந்து ஆட்டம் போட்டால் எப்படி? இந்த சாமர்த்தியம் வேற்று ஜாதிக்காரன் காதல் என்று வந்து நின்ற போது எப்படிக் காணாமல் போனது? அப்போது அறிவு வேலை செய்யவில்லையா? எதைச் சொல்லி மயக்கினான் அவன்? எதில் சுருண்டு விழுந்தாள் இவள்? அப்படியானால் என் பெண்ணை நான் சரியாக வளர்க்கவில்லை என்றுதானே பொருள்? எங்கே நிகழ்ந்தது தவறு? முன் ஜென்ம வினையோ? பெற்றோர் செய்த பிழைகள் யாவும் பிள்ளைகள் தலையில்…! அப்படி என்ன தவறு செய்தேன் நான்? விவரம் தெரிந்த நாள் முதல் இறைவனிடம்தானே தண்டனிட்டிருக்கிறேன்? தன்னைக் கொடுத்த என்னை அவன் காக்கவில்லையே?

அன்றாட வாழ்க்கையின் முறையான நியமங்களை இளம் பிராயம் முதல் கற்றுக் கொடுத்து வளர்த்ததுதானே? பிறகு ஏன் தவறுகிறது? பருவம் வந்ததும் அதுதான் தன்னை முன்னிறுத்துமா? மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி சுருட்டி அமிழ்த்தி விடுமா? சுய சிந்தனை…சுதந்திர சிந்தனை…தலைமுறை இடைவெளி..! கலாச்சாரச் சீரழிவு…

இருக்குமிடத்தில், அவளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட நந்தவனத்தில் மனசும், உடம்பும் நலமாக வளைய வருகிறாளா? என்று அறிந்து கொள்வதில் அப்படியென்ன ஆர்வம்? அதுதான் பெற்ற பாசமா? என்னதான் விரட்டி விட்டாலும் மனசு கேட்கமாட்டேனென்கிறதே? ஐயோ…அநியாயமா இப்படி எங்கேயோ போய் வலிய தன்னைச் சேர்த்துண்டு அவஸ்தைப் படுறாளே? பாவி…பாழாய்ப்போனவன்.. அவ மனசைக் கெடுத்து, எங்களை விட்டுப் பிரிச்சிட்டானே? கண்ணுக்கு முன்னாடி லபக்குன்னு கொத்திண்டு பறந்துட்டானே? நினைக்க நினைக்க அவர் மனசு ஆறமாட்டேனென்கிறது.

அவனின் பெற்றோர்களிடமும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாரே…! பையன் விருப்பம் எதுவோ அதுதான் எங்கள் விருப்பமும்….! இப்படியா சொல்வார்கள்? பையன் தப்பு செய்தாலும் அது அவனின் விருப்பமாயிருந்தால், அதுவே இவர்களின் விருப்பமும் ஆகுமா?

அவுங்கவுங்க அவுங்களோட பிள்ளைகளை எவ்வளவு கனவுகளோடயும் லட்சியங்களோடயும் வளர்த்திருப்பாங்க…அத்தனையையும் பாழாக்கிட்டு இப்படி இழுத்திட்டு வர்றது தப்புப்பா…அவுங்க வயிற்றெரிச்சல் நமக்கு ஆகாது. நம்ப பரம்பரையை அது பாதிக்கும்.  உன் வாரிசுகளைப் பாதிக்கும். அவங்க கண்ணீர்விட்டு வயிறெரிஞ்சாங்கன்னா, அது நம்மளை நிம்மதியா வாழவிடாது. நாம மன அமைதியோட அன்றாடம் சோறு திங்க முடியாது. எந்தச் சலனமுமில்லாம நிம்மதியாத் தூங்க முடியாது. உன் பேர்ல எங்களுக்கிருக்கிற  அக்கறை மாதிரிதானே அவர் பெத்த பொண்ணுபேர்லயும் அவருக்கு அக்கறையும், கரிசனமும், பாசமும் இருக்கும். அதை நாம கெடுக்கக் கூடாது. …பாவம் அவுரு… ஏதோ கோவில்ல பூஜை பண்ணிக்கிட்டு வர்ற சொற்ப வருமானத்துல ஜீவனம் பண்ணிட்டு வர்றாரு….அவர் இத்தனை வருஷம் பண்ணின கிரமமான பூஜைக்குப் பலன் இல்லாமப் போயிடும்னு நினைக்கிறியா? அந்தப் பாவம் நமக்கு வேணாம்ப்பா…!விட்டிடு…அந்த அம்பாளோட கோபப் பார்வை நம்மேல விழுந்ததுன்னா நம்ப குடும்பம் அழிஞ்சி போயிடும். தலைமுறை விளங்காது. .உனக்கு நாங்க செல்வாக்கான இடத்துல வசதியா வாழ்ற மாதிரி பார்த்து முடிச்சு வைக்கிறோம்…சொன்னாக் கேளு…எங்க பேச்சைத் தட்டாதே…!

எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், எதுவும் காதில் ஏறினமாதிரித் தெரியவில்லையே? அதற்குப் பிறகுதானே இந்த வார்த்தை…எங்க பையன் விருப்பம் என்னவோ அதுதான் எங்க விருப்பமும்…..முதலில் பாபமாகத் தோன்றியது பிறகு எங்ஙனம் விருப்பமாக மாறியது? தானாவது கதியற்றுப் போய் நின்று…தொலைஞ்சு போ…என் கண் முன்னால நிக்காதே…என்று விரட்டினோம்…தடுத்து நிறுத்தும் சகல சௌகரியங்களும், பலமும் பட்டாளமும் இருந்த அவர்களுமா இப்படி உதறுவார்கள்? மகராசியா இருக்கட்டும்…நம்ம குலம் தழைக்கட்டும்…என்று யாரேனும் அறிவுறுத்தியிருப்பார்களோ? நானாக ஏன் இப்படி நினைத்துக் கொள்ள வேண்டும்? பெருமையாய் நினைத்துக் கொள்ளும் அல்ப சந்தோஷமா? அப்படியானால் போய் நின்று கைகோர்த்து, குதூகலிக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்?

அவர்கள் உதறவில்லை. சேர்த்தல்லவா வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்? தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்களாமே! உண்மையா? பிறகு ஏன் தனிக் குடித்தனம் வந்தார்கள்? பையன் விருப்பத்துக்கு மாறாக ஒரு துரும்பை நகர்த்த மாட்டார்களோ?

ஏய்…அது அய்யர் வீட்டுப் பொண்ணு…உன் முரட்டுத்தனத்தை அதுகிட்டக் காட்டாதே…வாடிப் போயிடும்…பூத்தாப்போல வச்சிக்கிடணும்…! நம்ம வீட்டுக்கு வந்த மகாலட்சுமிடா அது…! இந்தப் பரம்பரையை இனி வாழ வைக்கப்போற சாமிடா …!  உன் தலைமுறையையும், உனக்குப் பிறகு வர்ற தலைமுறையையும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நின்னுதான் பெயர் சொல்லப் போறீங்க….நாங்கள்லாம் காணாமப் போயிடுவோம். ஆகையினால காலம் நம்ம குடும்பத்த நிமிர்ந்து பார்க்கிற மாதிரி வாழ்ந்திட்டுப் போகணும்…

               ன்று இந்த வீட்டு வாசப்படி இனி நீ மிதிக்கப்படாது என்று அவளைப் பார்த்துக் கூறினாரோ அதற்கு மறுநாளிலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

நான் இல்லாதபோது அவள் இந்தாத்துக்கு வர்றது, போறதுங்கிற பழக்கமெல்லாம் இருக்கக் கூடாதுஉங்க எல்லாருக்கும் சொல்லிப்புட்டேன்அப்டியே அவள் வந்தாலும் வாசப்படி மிதிக்காதேன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுங்கோ…! எனக்குத் தெரியாம வீட்டுக்குள்ள விட்டேள்னு தெரிஞ்சிது அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். உங்களுக்கு நான் வேணுமா இல்ல அவ வேணுமான்னு முடிவு பண்ணிக்குங்கோ..அம்மா…உனக்கும் சேர்த்துதான் சொல்றேன். நான்தான் பொண்ணோட பாட்டின்னு இளிச்சிண்டு உன் பேத்தி வீட்டு வாசல்ல போய் மானங்கெட்டு நிக்காதே…! அங்கே நீ என் மானத்தை வாங்குறே…அத மனசில வச்சிக்கோ. என் சொல்லை மீறினேள் அப்புறம் இந்த தட்சிணாமூர்த்தி உங்களுக்கில்லை…ஞாபகமிருக்கட்டும்…. என்று வீட்டில் உள்ளவர்களுக்குக் கண்டிப்பான  உத்தரவு போட்டிருந்தார். உத்தரவென்ன…பயப்படுத்தி வைத்திருந்தார்.

இதே தெருவுலதான் அவ இருக்காங்கிறதுக்காக அடிக்கடி வரப்பார்ப்பா…போகும்போதும், வரும்போதும் உள்ளே நுழையைப் பார்ப்பா…வாசல்லேர்ந்து குரல் கொடுப்பா…! ஈஈஈன்னு இளிச்சிண்டு போய் நிக்காதீங்கோ…வாசக் கதவை எப்பயும் பூட்டியே வைங்கோ….திறந்த வீட்டுல எதுவோ நுழைஞ்ச மாதிரி நுழைஞ்சிடப் போறா…அப்புறம் அடிச்சித்தான் விரட்டணும்….இனி நான் உசிரோட இருக்கிறவரைக்கும் உறவு  ஆகாது. அறுந்தது அறுந்ததுதான். தெரிஞ்சிதா? அவளை யாரும் கண்கொண்டு பார்க்கப்பிடாது….!”

ஜாதி பிரஷ்டம் பண்ணினமாதிரிப் பேசினார். மனசு ஆறவே மாட்டேனென்கிறது. தளதளவென்று கொதித்துக்கொண்டேயிருக்கிறது. கோயில் பூஜையில் கூட மனம் லயிக்கவில்லை. வாய் யந்திரத்தனமாய் மந்திரங்களை உச்சரித்தது. அர்ச்சனைக்குக் கொடுத்தவர்களின் பெயர், நட்சத்திரம், கோத்திரம் எல்லாம் சரியாய்த்தான் சொல்கிறோமா…சொல்கிறோமா அல்லது சொல்லாமல் தாவுகிறோமா? அட…ராமச்சந்திரா…இன்னும் இந்தப் பாவம் வேறு வேண்டுமா? ஸ்வாமி சந்நிதியின் முன் இந்தத் தடுமாற்றம் ஆகுமா? கர்ப்பக்கிரஉறத்தின் இருட்டில் தேடுகிறேனா என் காணாமல் போன ஆச்சாரங்களை? என் நியமங்களிலிருந்து தவறுகிறேனா? என் தடுமாற்றம் இன்னும் நிலைக்கு வரவில்லையா?

ஈஸ்வரா…இப்படியொரு சோதனையை ஏன் கொடுத்தாய் இந்த வயதில்? உனக்கான சேவையை ஆண்டாண்டு காலமாய்ப் போற்றிவரும் எனக்கு இதுதானா பலன்? நீ வழங்கிய பரிசு இந்த தண்டனைதானா…? உன் பாத சேவையே என் மூச்சு என்று இருந்த எனக்கு இப்படியொரு பாதகமா நிகழ வேண்டும்?

னசு நிலை கொள்ளாமல் வீட்டை நோக்கிச் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்திக்கு தலை சுற்றுவது போலிருந்தது.அன்று காலையிலிருந்தே அவர் நிலைமை சரியில்லைதான்…ஒரே மனக் குழப்பம். அநியாயத் தன்னிரக்கம். பூஜை புனஸ்காரம் எக்காரணம் கொண்டும் நின்று விடக் கூடாதே என்கிற ஆதங்கம். தன்னை விட்டால் அம்பாளையும், அய்யனையும் போற்றித் துதித்து வழிபாடு செய்ய உதவிக்கு இன்னொரு ஆள் இல்லையே? சேவை பிறழாது நான்தானே பயணிக்கிறேன்.

  தடுமாறிக் கீழே விழப்போன அவரை அருகே  இரண்டு பை நிறையச் சுமையோடு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் தாங்கிப் பிடித்தார். அவரை ஓரமாக அமர வைத்து  பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர் முகத்தில் சிறிது தெளித்து, சற்றுத் தெளிய வைத்து,  குடிங்க என்றவாறே நீட்டினார்.

காலையிலிருந்து ஒன்றுமே வயிற்றுக்குச் செலுத்தாத அயர்ச்சியில் அந்த நீர் அவருக்குப் பெருத்த ஆசுவாசத்தைத் தந்தது. போன உயிரை மீட்டது போலிருந்தது. செவிக்கு உணவு இல்லாத  போழ்துதானே சிறிது வயிற்றுக்கு….அது அவரது மாறாத நியமமாயிருந்தது. ஈசன் நாமம்  விடாது மனதில் ஒலித்துக் கொண்டிருக்க, தன்னைத் தடுத்தாட்கொண்டவரைத் தலை குனிந்து கண் கலங்கலோடு  கையெடுத்துக் கும்பிட்டார்.

போயிடுவீங்களா..இல்லை கூட வரட்டா…? என்றார் அவர்.

வேண்டாம்…இந்தோதானே வீடு..நானே போய்க்கிறேன்…வழக்கமான தூரம்தானே…! என்று மெல்ல அடியெடுத்து நடக்க ஆரம்பித்தார் தட்சிணாமூர்த்தி.கைகளை நெற்றிக்கு மேல் தடுத்து நீள நோக்கினார். வீடு அதே இடத்தில்தான் இருந்தது. இன்னும் இவ்வளவு தூரமிருக்கா? என்று அவர் மனசு சொல்லியது.

ங்கப்பா ரோட்டுலே தலை சுற்றிக் கீழே விழப் போனார்…தெரியுமோ?-

ஐயய்யோ…அப்புறம்? – சாந்தி பதறினாள்.

.நான்தான் தாங்கிப் பிடிச்சி ஓரமா உட்கார்த்தி, தண்ணி குடுத்து ஆசுவாசப்படுத்தி அனுப்பிச்சு வச்சேன்…கூட வரட்டான்னு கேட்டேன்…நானே போய்க்கிறேன்னுட்டார். இன்னிக்கு நண்பகல் நிகழ்வு இது…- சொல்லிக்கொண்டே மனோகரன் சாந்தியைப் பார்த்துச் சிரித்தபோது…..

அடப்பாவமே…வெய்யில் தாங்கலை……தீயான்னா எரியறது? …அதான்…அவர் உங்களைத் தெரிஞ்சிண்டாரோ….? என்று தொடர்ந்து ஆவலுடன் கேட்டாள் அவள்.

ஒழுங்கா வீடு போய்ச் சேர்ந்தாரான்னு கேட்க மாட்டியா? அந்தக் கேள்வியைக் காணோம்….?

அதெல்லாம் போயிடுவார்…பக்கத்துலதானே…தெருவுக்குள்ளே நுழைஞ்சிட்டார்னா அங்கங்கே உட்கார்ந்துக்குவார். .அது கிடக்கட்டும்…நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…உங்களை அடையாளம் கண்டுண்டாரா இல்லையா…?

என்ன இப்படிக் கேட்கிறே?  என் முகத்தை என்னைக்கு முழுசா நிமிர்ந்து   பார்த்திருக்கார் அவர்…அடையாளம் தெரிஞ்சிக்கிறதுக்கு…? இன்னைவரைக்கும் அவரை ஒரு முறை கூட நேரடியா,  நேருக்கு நேர் நின்னு கண்ணுக்குக் கண் அவரை நான் சந்திச்சதில்லையே…அப்புறம் எப்டி…?  என்றான் மனோகரன்.

பதிலுக்கு ஒரு ஆழமான விரக்தியான புன்னகைதான் மலர்ந்தது சாந்தியிடம். அந்தப் புன்னகை எத்தனை அர்த்தங்களை உள்ளடக்கியது? அவள் மனசாட்சி உறுத்திற்று.

 

                                                            --------------------------

                                                                                                                                                                                                                        உஷாதீபன்  (ushaadeepan@gmail.com)                                                                   எஸ்.2இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                                 மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                                    ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,                                                    --மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188).