07 ஜூலை 2022

“தன்னை வென்றவன்“ -சிறுகதை - பிரசுரம் - ஜூலை 2022 உயிர் எழுத்து இதழ்

 

                                                 “தன்னை வென்றவன்“   







       

       கிலாவிற்கு சட்டென்று விழிப்பு வந்ததும்தான்,  தான் வேறொரு வீட்டில் இருக்கிறோம் என்று புரிந்தது. புதிய இடம் என்று எங்கு போனாலும் அவளுக்குத் தூக்கம் வராது. எல்லாரும் தூங்கிய பின்னும் அவள் புரண்டுகொண்டேயிருப்பாள். ஆனால் இங்கு எப்போது தூங்கினோம் என்றே தெரியாமல் அசந்திருப்பதை உணர்ந்தாள். புகுந்த வீடு, புதிய வீடு, புதிய மனிதர்கள்... இனி உறவுகள்...!

      இதைப் புதிய இடம் என்று இனிக் கொள்ள முடியாது. அவள் இடமும்தான். தன் உடலை, எண்ணங்களை, நடத்தையை, செய்கையை, பேச்சை, ஏன் மூச்சையே... அந்த இடத்திற்கு, அந்த வீட்டிற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

      அருகில் குமார் அயர்ந்த உறக்கத்தில் இருந்தான். உனக்கு டயர்டா இருந்திச்சின்னாத் தூங்கு ஒண்ணும் பிரச்னையில்ல....என்று நேற்றிரவு அவன் சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டதை நினைத்துக் கொண்டாள். அடுத்தவர் மனதையும் எண்ணங்களையும் எடைபோடுபவனாய், அதனை மதிப்பவனாய்த் தோன்றியது.    

      “அது”தான் பிரதானம் என்று அவன் முனையவில்லை.  உறாலில் அப்பா, அம்மா, அண்ணா, மன்னி இவர்களுடன் அவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சட்டென்று ஒன்றை உணர்ந்தவனாய், நீ போய்ப் படு....அவளுக்கு டயர்டா இருக்கு போல....என்று அண்ணா சைகை செய்ய.....இருக்கட்டும்...அதுக்குள்ளேயும் என்ன தூக்கம்? என்று சொன்ன இவன்...அகிலாவைப் பார்த்து, உனக்குத் தூக்கம் வந்ததுன்னா...நீ போய்ப் படுத்துக்கோ.... என்றான்.  

      எல்லோரும் குடும்பமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சட்டென்று எழுந்து அறைக்குள் புகுந்து கொண்டு பொண்டாட்டியுடன் கதவைச் சாத்திக் கொள்வது என்பது ஏதோ வெட்கங்கெட்ட செயலாய்த் தோன்றியது இவனுக்கு. இரண்டு நாட்களாய் நடக்கும் இந்த நாடகம் அவனுக்குப் பொருந்தவேயில்லை.

      கல்யாண மண்டபங்களில் கூட சாந்தி மூகூர்த்த அறை என்று பிரித்து, தனியே அமைத்திருப்பதையும், பிற அறைகள் சற்றுத் தள்ளியே கட்டப்பட்டிருப்பதையும், அப்படி இல்லையென்றால் அம்மாதிரித் தனியான அறை எது என்று தேடி அதனையே சாந்தி முகூர்த்த  அறையாய்த் தேர்ந்தெடுப்பதும் வழக்கமாய் இருப்பதை நினைத்துக் கொண்டான்.

      சொல்லப் போனால் உறாலில் பலரும் படுத்திருக்கையில் அறைக்குள் புதிய மனைவியைக் கொஞ்சுவதும், அவளோடு விளையாடுவதும் கூட ஒரு சிறிய வீட்டில் அத்தனை பொருத்தமில்லாத செயல் என்றுதான் தோன்றியது இவனுக்கு. வெளியே லைட் எரிகையில் உறங்குவதற்குப் போதிய நேரம் ஆகாத வேளையில், மனைவியோடு அறைக்குள் சென்று விளக்கை  அணைப்பதும், கதவு இடுக்கு வழியாகத் தெரியும்  வெளி வெளிச்சம் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தி அவனுக்குள் ஒரு கூச்சத்தை ஏற்படுத்தியது.

      முப்பத்தைந்து வயதான இந்தத் தாமதமான பொழுதில்தான் திருமணம் செய்திருக்கிறான் குமார்.  அலுவலகத்தில் இப்போதும் கூட பெண் பணியாளர்களோடு நேருக்கு நேர் நின்று பேசியதில்லை. கோப்புகளை எடுத்துக் கொண்டு வந்து தன் முன் நின்று சந்தேகங்களை அவர்கள் கேட்கும்போது கூட, நீங்க  சீட்டுக்குப் போங்க...நான் பார்த்துச் சொல்றேன்...என்று கூறி அனுப்பி விடுவான். திரும்பவும் அருகே  வந்து நின்று எதுவும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, என்ன தீர்வோ அதைத் தன் கைப்பட எழுதியே அனுப்பி விடுவான். அவர்களுக்கு வேலை மிச்சம். அதுபற்றி இவனுக்குக் கவலையில்லை. இந்த வயதிலும் அவனுக்குள் அந்தக் கூச்சம் போகவில்லை. சில சமயம் எரிச்சலாகக் கூட இருந்தது அவனுக்கு. பெண்களின் அருகாமை அவனை மிரள வைத்தது..அதைத் தவிர்க்க அவர்களை விரட்டினான்.

      அது ஒழுக்கத்தின் அடையாளம் என்று கருதினான். அது தன்னோடு தொடர்வது நல்லதுதான் என்று நினைத்தான். படிக்கும் காலங்களில் கூட நாலு வீடு தள்ளியிருந்த ஜெயா சந்தேகம் கேட்க வருவாள். இது...இதுக்கென்ன அர்த்தம் என்று அவள் பாடப் புத்தகத்தில் சுட்டிக் காண்பிக்கையில் விரல்கள் மோதியிருக்கின்றன. ஸ்பரிசங்கள் பகிரப்பட்டிருக்கின்றன.  அதை அவன் அந்தக் கணமே தவிர்க்க விரும்பினான். இனிமே என்கிட்ட வராதே என்று முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டான் ஒருநாள். ஏன்? என்று கேட்ட அவளுக்கு அது அப்டித்தான் என்று மட்டும் சொன்னான். அழுது கொண்டே போய் விட்டாள் அவள். ஊரில்  பெண்களுக்கு என்று தனி உயர்நிலைப் பள்ளி வந்தபோது அவனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்பாடா...! தொல்லை விட்டது...!! அது நாள் வரை அந்தப் பள்ளியின் இடம் வெறும் கொட்டாரமாக இருந்தது. பள்ளிக்கான பெரிய கட்டடம் வந்து, பள்ளியும் நடைபெற ஆரம்பித்ததும் அந்தப் பகுதி வழியாக ஆற்றங்கரைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். ஒதுங்கியே இருப்போமே...எதற்கு வம்பு?

அலுவலகங்களில் சிற்சில சீனியர்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பதைப் பார்த்திருக்கிறான். பார்த்துக் கொண்டுமிருக்கிறான். ஏனிப்படி சபலம் பிடித்து அலைகிறார்கள் என்று தோன்றும். வாயில் எச்சில் வழிய அலையும் நாயைப் போல நினைத்துக் கொள்வான். அவர்களின் சில்மிஷத்திற்கு  அந்தப் பெண் ஊழியர்களும் சிலர் பணிகிறார்கள் என்பதுதான் இவனுக்கு வியப்பாயிருந்தது. அனுமதிக்கிறார்களா அல்லது அவர்களே எதிர்பாராத கணத்தில் அது நடந்து போகிறதா? அப்படியானால் அதைத் தடுக்க வேண்டாமா? இந்த மாதிரி விளையாட்டெல்லாம் எங்கிட்ட வச்சிக்கிடாதீங்க சார்...என்று பட்டென்று முகத்திலடித்தாற்போல் சொல்ல வேண்டாமா? அப்படிச் சொல்லி விட்டால் அடுத்தாற்போல் கை நீளுமா?  அது இல்லையே? அப்படியாவது ஏதேனும் சலுகையைப் பெற்றாக வேண்டுமா? எதிர்பார்ப்பு இல்லையென்றால் இப்படி நடக்குமா? போகட்டும்...சபலக் கேஸ்...என்று தட்டிக் கழிக்கிறார்களோ?

      ஒரே இடத்தில், ஒரே அலுவலகத்தில் மாற்றமில்லாமல் பணியாற்ற வேண்டும் என்பது குடும்பத்தின் தேவையாயிருந்தது. அதற்கு அவர்களின் உதவி தேவைப்பட்டது. உள்முக அரசியல் அங்கே ஆதிக்கம் செலுத்துகிறது.  அதற்காக அப்படிச் சில சலுகைகளை அளிக்கிறார்களோ? சும்மா தட்டத்தான செய்றான்...தடவத்தான செய்றான் என்று விட்டு விடுகிறார்களே? இதற்கெல்லாம் சுணங்கினால் காரியம் ஆகாது....! கொஞ்சம் துணிச்சல் அதிகம்தான்...!

      முருகேசன் என்ற அந்தக் கண்காணிப்பாளர் அந்தப் பெண் எழுத்தரின் கன்னத்தைத் தட்டுவதை அடிக்கடி இவன் பார்த்திருக்கிறான். தற்செயலாய்ப் பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதற்காக எந்த அதிர்வையும் வெளிப்படுத்தியதில்லை. மறுப்பும் தெரிவித்ததில்லை. பதிலுக்கு நாணுகிறார்கள். இவனெல்லாம் ஒரு ஆளா? என்றுகூட இருப்பார்களோ என்னவோ? அப்படியிருந்தால் அது சரியா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். வேறு எதிர்பார்ப்பு இருப்பவனுக்கல்லவா அது ஏமாற்றம்...தனக்கென்ன வந்தது? இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிக்கும் எண்ணம்தானே வரும்? அவர்களின் கை மேலும் நீண்டது என்பதுதான் உண்மை. சபல புத்தி உள்ளவர்கள் எங்கேனும் அடி வாங்கிக் கேவலப்படும்வரை ஓய மாட்டார்கள். ஒரு இடத்தில் படியும். இன்னொரு இடத்தில் மீறும். அப்போது புத்தி வரும்....!

      அண்ணே...எப்டீண்ணே பிடிக்கிறீங்க...? உங்களுக்கு மட்டும் சுலபமா மடங்கிறுதேண்ணே...?-ஈஸியா மசியுறாங்களே? விளையாட்டுக்காகவோ அல்லது மனதுக்குள் ஏங்கியோ இந்தக் கேள்வியை முருகேசனிடம் கேட்டார்கள் சிலர். அவரின் அந்தப் பதில்  புன்னகை  ஒரு கதாநாயகனின் உச்சம். அந்த லீலைக்குத் தனிப் பயிற்சி வேண்டும் என்பது போன்றதான பாவனை.

      சின்ன வயசிலிருந்தே  அந்த மாதிரிப் பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள்தான் அந்த நடுத்தர வயதிலும் அப்படி இருக்க முடியும் என்றும், அப்படியாகப் பழகுபவர்களுக்குத்தான் தொடர்ந்து அமைந்து கொண்டேயிருக்கும் என்றும் ஆராய்ச்சி செய்து சொன்னார் நண்பர் பாலுச்சாமி. அவருக்கென்ன ஆதங்கமோ? அக்கௌன்டன்சி கணக்கு நன்றாப் போடுவார். பாலன்ஸ் ஷீட்டை எனக்கு முன் டாலி செய்து வாத்தியாரிடம் நீட்டி விடுவார். கூடவே இந்தக் கணக்கும் அறிந்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது.

      உனக்கு வேணும்போல இருக்கா...சொல்லு...நான் கூட்டிட்டுப் போறேன் என்றார். தன்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக் கேட்க ஏன் தோன்றியது அவருக்கு? கூட நிற்பவனையும் கெடுக்க ஏன் இத்தனை முனைப்பாய்த் திரிகிறார்கள்?  இம்மாதிரி ஆட்களோடெல்லாம் பழகினாலே தன்னைப் போலவே மற்றவர்களையும் நினைத்து விடுவார்கள் போலிருக்கிறது

.   மூன்று தங்கைகளோடு பிறந்தவன் அவன். ஓடிப்பிடித்து விளையாடி, சண்டை போட்டு, அடித்துப் பிடித்து அழுது புலம்பி..அம்மாவிடம் புகாருக்கு நின்று....இப்படித்தான் பழகியிருக்கிறான். இந்த மாதிரி வித்தியாசமாக அதுவும் வெளிப் பெண்களிடம்...இவர்களுக்கும் சகோதரிகள் இருப்பார்கள்தானே? ஊரும் உலகமும் இருக்கும் நிலைமையைப் பார்த்தால் நான்தான் அப்பாவியோ? என்று தோன்றி சிரித்துக் கொள்வான் குமார்.

      அன்றொரு நாள் படம் பார்த்துவிட்டு, வெளியே வந்து அல்வா சாப்பிட்டு, டீ குடித்து நகருகையில், பொழுது இருட்டும் அந்த வேளையில், கூடவே பின்னால் துரத்திய அந்தப் பையன் கேட்ட கேள்வி இவன் மனதுக்குள் நெருடியது. ஒரு பொடிப் பயல்...அவனிடம் இதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.

      சார்...கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு....எது வேணும் சார்.....? வாங்க சார்....கூட்டிட்டுப் போறேன்....கம்மியான ரேட்தான் சார்.....

      எவ்வளவு தருவா....? என்றார் பாலு. அந்தப் பையன் திகைத்து நிற்பதைப் பார்த்து, போடா...போடா...என்று  சிரித்துக் கொண்டே விரட்டினார்.

      ஏதோ லாட்டரிச் சீட்டு விற்பவன் போல் அந்தப் பையன் கேட்டதும், இவர் பதில் சொன்னதும்....அதுநாள் வரை அவன் கேள்விப்படாத ஒன்று.

      பொடியன் என்ன சொன்னான், புரிஞ்சிதா? என்றவர்....அந்தப் பய கூப்டானே....அந்த லாட்ஜ் இதுதான்.... என்று காண்பித்துக் கொண்டே நடந்தார். பழைய காலத்து வீடு போல் முற்றம் வைத்து சச்சதுரமாய் நான்கு புறமும் அறைகள்....வெளியிலிருந்து பார்க்கையில் அவ்வளவுதான் தெரிந்தது. உள்ளே போவமா? என்ற பாலுச்சாமியைப் பார்த்துப் புன்னகைத்தான் குமார்.

      எத்தனை வருடமாய் அந்த ஊரில் இருக்கிறான் அவன். அப்படியெல்லாம் லாட்ஜ்கள் அதற்கென்றே இருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியவே தெரியாது. அவர் குறிப்பிட்ட அந்த லாட்ஜை, குடும்பத்தோடு தங்குவதற்கு சிறந்த இடம் என்றுதான் அதன் பழமையைக் கணக்கிட்டு நினைத்திருக்கிறான் இவன். இவர் வேறொரு இடமாய் அதனை அடையாளம் காட்டுகிறார். என்ன விபரீதம்? நான் எனது சொந்த ஊரிலேயே ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் போலிருக்கிறதே? இப்படி நகரின் நெருக்கமான பகுதிகளில் கலந்து கலந்து இவைகளும் இருந்தால், வெளியூரிலிருந்து வருபவர்கள் எது நல்ல லாட்ஜ், எங்கு பிரச்னையின்றித் தங்கி,  சாமி தரிசனம் செய்து ஊர் திரும்ப முடியும் என்பதை எங்ஙனம் நிர்ணயிப்பார்கள்? யாரிடமும் விசாரித்தால் அவர்களும் குடும்பத்தினர் தங்குவதற்கென்று நல்ல இடமாய்க் காண்பிப்பார்கள் என்பதற்கு என்னதான் உத்தரவாதம்? வேண்டுமென்றே எங்கேனும் கோர்த்து விட்டு, பணம் பிடுங்கினால்? கமிஷனுக்கு அலையும் ஆட்கள் அவரவர் முதலாளிகளுக்கு ஆதரவாய் இருப்பார்களா அல்லது வரும் சுற்றுலாவாசிகளுக்கு நம்பிக்கை தருவார்களா?

நமது மாநிலம், எதானாலும் நம்ம ஊர், நம்ம மக்கள் என்று எப்படித்தான் நம்பிச் செயல்படுவது? ஏமாற்றி விட்டால், எதிலேனும் மாட்டிக் கொண்டால் கேவலமில்லையா? அப்படியானால் ஏதேனும் ஒரு ஊருக்குச் செல்வதென்பது அன்றே சென்று அன்றே திரும்புவதுதான் உசிதமான செயலா? அதுதான் பாதுகாப்பா?  தங்குவது, ஓய்வெடுப்பது, ஒவ்வொன்றாய்ப் பார்ப்பது என்று முடிவெடுத்தால் இப்படியும் அமையலாம் அல்லது அப்படியும் ஆகலாம் என்பது போலல்லவா இருக்கிறது? அறிந்தும் அறியாமலும் ஆபத்தோடு கண்ணாமூச்சி ஆடுவதா? எல்லாம் கிடக்கட்டும். முதலில் இதையெல்லாம் அனுமதிக்கலாமா? அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டாமா? ஊரும் நாடும் சீர்கெட்டுக் கிடக்கிறதா? இவைகளோடுதான் கலந்து வாழ்ந்தாக வேண்டுமா? எல்லாம்தான் இருக்கும். நீ விலகிப் போகக் கத்துக்கோ...! இதுதான் நடைமுறை சித்தாந்தமா?

      உலகம் ரகசியமாய் இயங்கிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது குமாருக்கு. பாம்பு, பழுது என்று பார்த்துத் தாண்டிப் போவது உன் பொறுப்பு என்று சொல்லியது.  மனிதர்கள் யாரையும் ஒரே பார்வையில், ஒரே பேச்சில் நம்பி விடுவதற்கில்லை. கவனமாய்த்தான் அடியெடுத்து வைத்தாக வேண்டும். கூடியானவரை ஆசைகளைத் தவிர்த்தால் இவைகளெல்லாம் அண்டாது.  ஆசைகள்தான் மனிதனை அலைக்கழிக்கின்றன. தவறுகள் செய்யத் தூண்டுகின்றன. குதிரைக்கு சேணம் பூட்டியவனைப் போல் இந்த வாழ்க்கையைக் கவனமாய்க் கடந்து செல்ல வேண்டும். இது அவனுக்கான முடிவு. வேலைக்கென்று வந்த பிறகே இம்மாதிரி வெவ்வேறு விதமான அனுபவங்கள். உலகத்தின் விபரீதங்கள் ஒவ்வொன்றாய்ப் புரிய ஆரம்பித்தன. ஊரும் உலகமும் நிறையக் கற்றுக் கொடுத்தன. களத்தில் இறங்கினால்தான் ககனம் புரிகிறது.

      இதெல்லாம் குமார் தன் பணி அனுபவங்களில் நண்பர்களோடு அலைந்து பயணித்துக் கற்றுக் கொண்டது. எந்த இடத்திலும், எவ்வளவு இக்கட்டுகளிலும், தன் தனித்துவத்தை விட்டு விடக் கூடாது என்பதில் அவன் திடமாய் இருந்தான். பலரும் பலவிதமாய் விட்டேற்றிகளாய் இருப்பதைப் பார்த்து அவன் ஜாக்கிரதையாகிக் கொண்டான். உலகின் பலரது செயல்பாடுகள் அவனுக்கு வெறுப்பைத்தான் தந்தன. விலகிப் போகச் செய்தன. தனித்திருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. நமக்கு நாமே நன்றாய் சிந்தித்து செயல்பட்டால்தான் பாதுகாப்பு.

      சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் மென்மையாய்த் தங்களை முக்குளித்துக் கொண்டு குளித்து எழாமல்,  வீணாய் ஏன் கலக்கி, அழுக்காக்கி, கதி கலங்கிக் கொண்டிருக்கிறார்கள்? குமாரின் அலுவலக வாழ்க்கையும் எச்சரிக்கையாய்த்தான் கடந்து கொண்டிருந்தது. அவனுக்கு எதிரிகள் நிறைய இருந்தார்கள். வெளியே சொல்லாமல், காண்பித்துக் கொள்ளாமல் பதுங்கினார்கள். தங்களின் செயல்பாடுகளுக்கு அவனால் பங்கம் வந்து விடக் கூடாது என்று ஒதுங்கினார்கள். இனிய நட்போடு கடப்பதாய் வேஷம் காட்டினார்கள். தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் கடந்தான் குமார்.

      மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் ஆகி, பிறகு பண்ணிக் கொள்கிறேன் என்று ஒரே பிடியாய் இருந்து விட்டான் குமார்.  இன்னும் கொஞ்ச காலம் கடந்திருந்தால் திருமணமும் நான் உங்கிட்ட வரலை என்று தள்ளியே போயிருக்கும். போ...போ...போய்த் தொலை...என்று அவனும் உதறியிருப்பான்.  அடக்கி வைத்ததோ, அல்லது அடங்கிக் கிடந்ததோ தெரியவில்லை...எகிறிக் கொண்டு குதிக்க ஆரம்பித்தது. எது தன்னை ஆட்டுவிக்கிறது என்று இனம் புரியாமல் தெறிக்க ஆரம்பித்தான் அவன். தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று அவனுக்கே புரிபடாத நிலை. எந்தப் பேய் பிடித்துக் கொண்டு தன்னை உலுக்குகிறது என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் தான் ஆளே மாறிப் போனதாய் உணர ஆரம்பித்தான். ஆனால் சரி செய்து கொள்ள முடியவில்லை. பிடி நழுவிப் போய்க் கொண்டேயிருந்தது. தீய பழக்கங்கள் படியவில்லையாயினும், தீய குணங்கள் பற்றிக் கொண்டன

தேவையில்லாமல் அம்மாவிடம் ஏன் கோபப்படுகிறோம், ஏன் தாயாரை அழ வைக்கிறோம்?  ஒன்றுமில்லாத சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாமா எரிந்து விழுவது? தான் எப்போதும் இப்படியெல்லாம் இருந்ததேயில்லையே? கோபப்படுவதற்கும் ஒரு அர்த்தம் வேண்டாமா? குணக்கேடு அடைவதற்கும் சில சீரழிவுகள் என்கிற பின்புலம் வேண்டாமா? கெட்டுச் சீரழிந்த அனுபவமும் இல்லாமல், வெறும் எண்ணங்கள் தரும் முறுக்கிலே சிக்கிக் கொண்டு, எதற்காக,  இப்படிக் கழிசடையாகிப்  போனோம்? தாய் தந்தையரின் மனம் புண்படுத்துவது என்பது ஒரு பொழுதுபோக்கா என்ன? வார்த்தைகளைக் கூர் அம்புகளாய்ப் பாய்ச்சுவது ஒரு திறமையா? அதுவா புத்திசாலித்தனம்? ஒருவர் மனதைப் புண்படுத்துவதில் அத்தனை இன்பமா?  கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தெய்வங்களை இப்படி இகழலாமா? அவர்களை அலட்சியப்படுத்தலாமா? அவர்களோடு சண்டையிடலாமா? அவர்கள் என்ன பகைவர்களா? எதற்காக எப்போதும் இந்தக் கோபம், அசூயை, ஆத்திரம்? ஆங்காரம்? என்ன தவறு செய்தார்கள் அவர்கள். தன்னை வளர்த்து, ஆளாக்கி இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டதுதான் தவறா?

இனம் புரியாத பருவ நிலை தன்னைப் படுத்துகிறதா? காமம் கழுத்தளவு உட்கார்ந்து கொண்டு மூளையைக் கலக்குகிறதா? சொல்லாமல் சொல்லி நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறதா? இந்தளவுக்கு வெறுப்பு மண்டுவானேன்? ஒன்றை வெளிப்படுத்த முடியாமல் இன்னொன்றைச் சொல்லிப் புரிய வைக்க, சண்டை போட, வயதான பெற்றோர்கள்தான் வாய்த்தார்களா? அவர்கள்தான் சோதனைக் களமாக அமைந்தார்களா? என் வன்மத்திற்கு அவர்கள்தான் பலிகடாவா? பெற்றெடுத்த பாவத்திற்கான தண்டனையா? தொட்டதற்கெல்லாம் கோபமும், வெறுப்பும், சுடு சொற்களும்...ஒத்துழையாமையும்....ஓடி ஒளிதலும்....உறவுகளுக்குள்ளேயேவா இதைச் செயல்படுத்துவது? தாய் தந்தையர் முன்னேயேவா தாண்டவம் ஆடுவது? இதற்குக் கல்யாணம் பண்ணி வைங்க என்று நேரடியாகவே சொல்லித் தொலையலாமே? அதைச் சொல்லத் துணிவின்றி, குத்திக் குதறிக் கிழித்தால் பெற்றோரின் சாபம் சும்மா விடுமா?

அம்மா இரவெல்லாம் தூக்கமின்றி அழுகிறாள். இப்டியிருக்காதே...அது உனக்கு நல்லதில்லை...பின்னால் நீ அனுபவிப்பாய்...என் மனசைப் புண்படுத்தினயானா நீ வௌங்க மாட்டாய்...எங்களை நோகப் பண்ணினயானா நல்லாயிருக்க மாட்டாய்...! நானும் உங்கப்பாவும் வயசான காலத்துல உன்னண்ட மாட்டிண்டு தவிக்கிறோம். எங்களுக்கு விடுதலை இல்லை... உங்களப் படிக்க வைக்கிறதுக்கும், ஆளாக்கிறதுக்கும் அவ்வளவு கஷ்டப் பட்டிருக்கோம்...எத்தனையோ நாள் பட்டினி கிடந்திருக்கோம்...ஊரம்புட்டும் கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்க முடியாமே திட்டும், வசவும் வாங்கியிருக்கோம். கேவலப்பட்டிருக்கோம்.

ஓடி ஓடி உழைச்சிருக்கார் உங்கப்பா...நெருப்புல கிடந்து வெந்திருக்கார்...நாலாணாவுக்கும் எட்டணாவுக்கும் நாயாப் பேயா அலைஞ்சிருக்கார்....வட்டிக் கடைக்காரன்ட்டக் கடன் வாங்கி...திருப்பிக் கொடுக்க ராப்பகலா தூக்கமில்லாம உழைச்சிருக்கார்...தன் உடம்பையே இந்தக் குடும்பத்துக்காக  செருப்பாத் தெச்சுப் போட்டிருக்கார் தீயில உருகியிருக்கார்...அவரை நிந்தனை பண்ணினயானா தெய்வத்தை நிந்திச்சதுக்கு சமானம்...அதை ஞாபகம் வச்சிக்கோ...பின்னாடி நீயும் உன் குடும்பமும் நன்னாயிருக்கணும்...நோய் நொடி இல்லாம வாழணும்....அதுக்கு எங்க ஆசீர்வாதம் வேணும்...மனுசாளோட ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டாக்கும்...நல்லது செய்தா நல்லது கிடைக்கும்...கெட்டது செய்தியானா பதிலுக்கு நீ அனுபவிச்சித்தான் ஆகணும்...அது நடவாமப் போகாது...ஞாபகமிருக்கட்டும்.....! உன்னோட ஒவ்வொரு வார்த்தைக்கும், செயலுக்கும் நீ பதில் சொல்லியே ஆகணும்....வினை விதைச்சா வினையைத்தான் அறுக்கணும்...நீ அறுப்பே....நான் பார்க்கிறேனோ இல்லையோ...நீ அனுபவிப்பே...! இது சத்தியம்....!!

அம்மாவின் வார்த்தைகள் அனல்  துண்டங்களாய் வந்து மோதிக்கொண்டேயிருக்கின்றன. அவைகளுக்கான பிற்பகல் வினைகளையெல்லாம் அனுபவித்து விட்டேனா? இல்லை இனிமேல்தானா?

ங்களை மெட்ராசுக்குக் கூட்டிண்டு போயிடு....நாங்க உன்னோட வந்து இருந்துக்கிறோம்...-சொல்லிக் கிளம்பி விட்டார்களே? மூத்தவனோட இருக்கிறதுதான் நியாயம்...இத்தனை நாள் சின்னவனோட இருந்தது எங்களோட தப்பு....என்னானாலும் அவன் சின்னவன்தான்ங்கிறதைக் காண்பிச்சிட்டான் பார்....- அப்பா வருந்திச் சொன்ன கடுமையான வார்த்தைகள் இவைதான். அதற்கு மேல் அவருக்குத் திட்டத் தெரியாது. பழி சொல்லத் தெரியாது. சாபமிடத் தெரியாது. ஆனால் அந்தத் தூய இதயம் சிதைக்கப்பட்டால், மனம் கசிந்து வருந்தினால், அழுதால் அது சும்மா விடுமா தன்னை? எனக்கு நிச்சயம் நரகம்தான். என் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது...!

தனித்து விடப்பட்ட பின்புதானே புத்தி வந்தது? முடியைக் கோர்த்து ஆணியில் சுற்றி மரத்தில் அடித்து பிசாசை நிறுத்தியது போல...! இது நாள் வரை நான் எங்கிருந்தேன்...எப்படியிருந்தேன். ஏன் அப்படியானேன்? எது மாய்மாலம் செய்தது என்னை? எந்த வினை பேயாட்டம் போட வைத்தது? எப்படி மாறினேன் நான்? வாலு போச்சு கத்தி வந்தது...டும்...டும்...டும்...! கத்தி போச்சு புத்தி வந்தது டும்...டும்...டும்...! குமார் மாறி விட்டான். ஆளே மாறிவிட்டான். பேதலித்த புத்தி திருந்தி விட்டது. இவனை விட்டு விலகி விட்டது அந்த மாயாவி. கனவிலிருந்து விழித்தவன் போல் ஆள் தலைகீழாக இப்போது....

அந்த நல்ல புத்திதான் மூன்று தங்கைகளுக்கும் அவனிருக்கும் நகரிலேயே திருமணம் நடத்தி முடிக்க இறங்கி வேலை செய்ய யத்தனித்தது? நான் இருக்கேன்...எதுக்கும் கவலைப்படாதே...எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். நீ அப்பப்போ என்ன செய்யணும்ங்கிறதை மட்டும் சொல்லு..அது போதும்....அத்தனை பணியையும் அவன் ஒருவனே தன் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு, ஏதோ வெறி வந்தவனைப் போல  ஓடி ஓடிச் செய்தான்? சென்னையிலிருந்து அடுத்து, அடுத்து என்று ஒவ்வொரு வேலையாய் அண்ணா வரையறுத்துச் சொல்லச் சொல்ல, படிப்படியாய் இங்கு ஏற்பாடுகளைத் தீவிரமாக்கினான்? எந்தப் பாவத்தைக் கரைத்துக் கொள்ள? எந்தத் தவறுதலுக்கு மன்னிப்புப் பெற? எந்த கங்கையில் மூழ்கிப் புனிதம் பெற? அவன் புத்திக்கெட்டிய எல்லாத் தவறுகளும் அவனிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டன. எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் கிரஉற நிலை மாறிவிட்டது. நாங்கள் விடை பெற்றுக் கொள்கிறோம்....

நான் அந்தக் குமார் இல்லையப்பா...! மறந்து விடுங்கள்  அந்தக் கொடுங்கோலனை...! ...அவன் என்றோ செத்து விட்டான். மண்ணோடு மண்ணாகி விட்டான். அது எனக்கான கேடு காலம். ஏதோவோர் தீய சக்தி என்னை ஆட்டுவித்து உங்களுக்கும் அம்மாவுக்கும், சகோதரிகளுக்குமே எனத்  தீராத துன்பத்தைத்  தந்து விட்டது. என்னையே அறியாமல் அந்தப் பாதகத்தைச் செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.  அந்தப் பாவத்தைக் கரைக்கத்தான் இப்போது என் கடமையில் அதி தீவிரமாய் இறங்கியிருக்கிறேன். முழுப் பாவத்தையும் கரைத்து விட முடியுமா தெரியவில்லை. மீதியை மண்டியிட்டுக் கண்ணீரால் கரைக்க முயல்கிறேன். நான் அந்தப் பழைய பாவி குமார் இல்லை...என்னை நம்புங்கள்....! இப்போது நான் நல்லவன். உங்களுக்கு அடங்கிய அந்தப் பள்ளி செல்லும் காலத்து நல்ல பிள்ளை. சின்னஞ் சிறுவன் குமார். இனி அவனை அந்த பிசாசு அண்டாது. அது அவனை விட்டு என்றோ விலகி விட்டது. இப்போது அவன் புதியவன். முதியவன்...முதிர்ச்சியடைந்தவன்.

இதோ திருமணம் ஆகி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் புறப்பட்டிருக்கிறான் குமார். அவனை ஆசீர்வதியுங்கள். மனமார வாழ்த்துங்கள்.

அதே பழைய,  புதிய, திருந்திய இளைஞன் குமார். உள்ளத்தில் அசூயையும், ஆங்காரமும் இல்லாத குமார். மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்து விட்டுத்தான் நான் பண்ணிக் கொள்வேன் என்று திடமாய் நின்ற குமார். ஓடி ஓடி அவர்களுக்கான வரன்களைத் தேடிய குமார்.  இருபத்தைந்து வயதில் கல்யாணம் செய்தால் ஓரிரு ஆண்டுகளில் குழந்தை பிறந்து தனக்கு ஐம்பது தாண்டும்போதும், பணி ஓய்வு பெறுவதற்குள்ளும் மகனுக்கு ஒரு திருமணம் செய்வித்து, கடமைகளை முடித்து விட்டு அமர்ந்து விடலாம் என்று சுயநலமாய் மனக்கணக்குப் போடாத குமார். என் நலன் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள் கையில். அவர்களுக்குத் தெரியாததா? என்று இருந்துவிட்ட குமார். குடும்பத்தின் சுபிட்ச நிலைக்காகத் தன் சுகத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த குமார். உடன் பிறந்த தங்கைகளின் திருமணம்தான் முக்கியம். அதை முடிப்பதுதான் முதல் வேலை. பெற்றோரின் மனபாரம் அப்போதுதான் தீரும் என்று தன்னை மாற்றி நிறுவிக் கொண்ட குமார்.  வாழ்க்கையில் திட்டமிடல் வேண்டும் என்று வீர வசனம் பேசாத குமார். எல்லாம் அவன் செயல்.  எது நம் கையில் இருக்கிறது? சூட்சுமக் கயிறு எல்லாம் வல்ல இறைவனிடம். அவன் ஆட்டுவிக்கிறான். நாம் ஆடுகிறோம்.

நாம் ஒன்று நினைக்கிறோம்...இறைவன் ஒன்று நினைக்கிறான். காலமும் நிகழ்வுகளும் நம் கையிலா இருக்கிறது? வாழ்க்கையும் வாரிசுகளும் நம் திட்டத்திலா உருப்பெருகின்றன? எதுவும் நம் கையிலில்லை....எதுவோ ஒன்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்....இங்கே எதற்காக ஒவ்வொன்றுக்கும் அவசரப்பட வேண்டும்? நான்தான் புத்திசாலி என்பதாய் இயங்குவதில் எல்லா மனிதனின் திட்டங்களும் வெற்றி பெற்று விடுகின்றனவா? எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களாதானா? முயலுதல்...முடிந்தவரை முயலுதல்...வெற்றி அவன் கையில்...!  

கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகப் போகிறது? ஒரு பழைய முதுமொழி. அவன் ஞாபகத்திற்கு வருகிறது. அருகிலே அகிலா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அநாவசியத்திற்கு அவளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? இதோ ரெண்டு நாளில் ஊருக்கு சென்று விடப் போகிறோம். பணிபுரியும் இடத்தை நோக்கி. அதற்குள்ளும் கருக்கழிந்து விடவா போகிறாள்? கிடைப்பது கிடைக்காமல் போகாது. கிடைக்காதது என்றுமே கிடைக்காது. நம்பிக்கைதான் வாழ்க்கை.

அவரவர், அவரவர் இடத்தில் இருந்தால்தான் என்றைக்கும் மதிப்பு. அதைத்தான் இந்தப் பெண்களும் விரும்புகிறார்கள். பெண்மையும் விரும்புகிறது. கட்டு மீறாதவனுக்கு காலம் அவன் காலடிக்குள்...! அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறிருந்தாள்.

கதவு இடுக்கு வழியே இருள் கவிந்திருந்தது. விடியல் நெருங்கிக் கொண்டிருந்தது.

                              ---------------------------------------

     

                                    உஷாதீபன்,   (ushaadeepan@gmail.com)                                                                      எஸ்.2இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171,172)                                                      மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                                      ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,                                                          மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188sள

 

      

      

19 ஏப்ரல் 2022

 



 

ஜெயந்தனின் “இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்”–சிறுகதை – வாசிப்பனுபவம்-உஷாதீபன்

தொகுப்பு– ஜெயந்தன்-அரும்புகளை/ தொகுதி / வெளியீடு:- நர்மதா பதிப்பகம், தி.நகர். சென்னை-17.

                                  -------------------------------------------------------

       கால்நடை ஆய்வாளராக இருந்து ஜெயந்தன் சேகரித்த அனுபவங்கள் அநேகம்.

       மனிதனுக்கு வைத்தியம் பார்ப்பது என்பதே பெரிய விஷயம். இவரு நல்ல டாக்டரா? நல்லா பார்ப்பாரா? உறவி டோசேஜா போட்டுத் தள்றாரே…! அனுபவஸ்தர் மாதிரித் தெரிலயே…? சின்ன வயசுக்காரரா இருக்காரே…! – இப்படிப் பல.

       மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பதென்றால்? அதுவும் கடைக்கோடி கிராமத்துக்கு வேலையாகி, அங்கு கால்நடை ஆய்வாளராகச் சென்று  திக்கு திசை தெரியாமல் அமர்ந்தால்?

       எந்த நம்பிக்கையில் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளைக் கொண்டு வந்து நிறுத்துவார்கள்? இதையெல்லாம்தான் செய்யணும்…இதையெல்லாம் செய்யக் கூடாது என்று அவர்களிடம் எப்படிச் சொல்வது? அவர்களை எப்படி நம்ப வைப்பது? அவர்களின் நம்பிக்கையை எப்படிப் பெறுவது?

       இவைகளெல்லாம் இருக்கிறதோ இல்லையோ…அந்த மனிதர்களை ஒதுக்கி விட முடியுமா? இந்த மாதிரி அறியாதவற்றிற்கெல்லாம் அவர்கள் மீது கோபம் கொண்டு அவர்கள் மனிதப் பண்பற்றவர்கள் என்று கொள்ள முடியுமா?

       கிராமத்து அழகை ரசிக்க ஒரு தனி மனசு வேண்டும். அவர்களின் மொழியே தனி. நாம் திருத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் பல வார்த்தைகளை அவர்கள் கொச்சையாக உச்சரிப்பார்கள். அப்படியான ஓரிரு சுருக்க வார்த்தைகளில் பெரிய பொருள் அடங்கியிருக்கும். இவை ஒவ்வொன்றையும் நுணுகிப் பார்த்து, அவைகளை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நம்மைப் பக்குவப் படுத்திக் கொண்டோமென்றால், நம்மை அவர்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம்.

       கால்நடை ஆய்வாளரான ராகவன் அப்படித்தான் படிப்படியாக அந்த மக்களை அறிந்து கொள்கிறான். உணர்ந்து நிதானிக்கிறான். முதல் முறையாக அந்தக் கிராமத்தைப் பார்த்த அவனுக்கு தலை சுற்றிக்கொண்டுவர சொல்லாமல் கொள்ளாமல ஓடிப் போய்விடலாமா என்று கூடத் தோன்றுகிறது.

       போஸ்டிங் போட்ட ஊர் இது. ஒப்புக்கொள்ளாமல் என்ன செய்வது? ஒரு ஆறு மாசமாவது இருந்து கழித்துவிட்டுத்தான் வேறு ஊர் இட மாறுதலுக்கு விண்ணப்பம் கொடுப்பது சாத்தியம். அதுவும் இதனிலும் மேம்பட்டதாக அமையும் என்பது என்ன நிச்சயம்? இந்த இடம்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்க முடியுமா? அல்லது கிடைத்துத்தான் விடுமா?

       இன்று நண்பர்கள் நான்கு பேர் அவனைப் பார்க்க வந்திருக்கிற விசேஷத்தில், அனுபவித்த சங்கடங்களெல்லாம் இனிய நினைவுகளாக இப்போது மாறியிருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொண்டான் ராகவன்.

       அந்த கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு பார்பர் ஷாப். அங்கு போய் அமர்ந்திருக்கும் வேளையில்… ரத்தம் தெரிய ஷேவிங் நடந்து கொண்டிருக்கும் காட்சி….அப்டீங்கிறதுக்குள்ள சட்டுன்னு அசையுறீங்க…செத்த நேரம் கமுக்கமா இருக்க மாட்டீகளா…ன்னு பார்பர் ஒருவனை சமாளிக்க.. நான் ஷேவிங் செட்டை ஊர்லயே மறந்திட்டு வந்திட்டேன். சரி…அடுத்தவாட்டி போறவரைக்கும் உள்ளூர்லயே அட்ஜஸ்ட் பண்ணுவோம்னு போய் நின்னா…ரணகளமாயிருக்கு அங்க….பரவால்லன்னு உட்கார்ந்தா அந்தாளுக்குப் போர்த்துனதையே  எனக்கும் போர்த்துறான். நாத்தம் தாங்காம, வேற துணியில்லையான்னு கேட்டேன். உடனே இப்டித் திரும்பி, அப்டித் திரும்பி சட்டுன்னு ஒண்ணைப் போர்த்தி விட்டுட்டான். கண்மூடித் திறக்கிறதுக்குள்ள எம்மேல வெறே துணி. அதுவும் என்னவோ வாடைதான். சரி கழுத கெடக்குன்னு பொறுத்தக்கிட்டேன். ஷேவிங் முடிச்சி, எழுந்து நின்னா முதல்ல எனக்குப் போர்த்தினாம்பாரு…அது அவன் இடுப்புல….அசந்து போனேன்….என்னடா விஷயம்னு பார்த்தா…அவன் கட்டுன வேட்டிய எனக்குப் போர்த்தியிருக்கான்….

       ஏண்டா…அன்டர்வேர்…கின்டர்வேர் எதாச்சும் போட்டிருந்தானா இல்லையா…?

       அதான் எனக்குச் சந்தேகம்….அது இருந்தா ஏன் அந்தத் துண்டைச் சுத்துறான்….-எல்லோரும் சிரிக்கிறார்கள்.

       ஆபீசுக்கு வர…..தீவிர கால்நடை அபிவிருத்தித் திட்டம், செயற்கைமுறை கருவூட்டு நிலையம்….என்று போர்டைப் படிக்கிறார்கள் நண்பர்கள்.

       ஒராள் மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்து நின்று  அதை இன்னொரு மாடு குத்திவிட்டதாகச் சொல்ல, என்ன கை மருந்து போட்டீங்க என்று கேட்க…அடுப்புக்கரி, சீனி, கொஞ்சம் ஒட்டட, மூணையும் ஒண்ணா அரச்சுத் தடவுனேன்….

       ஆஸ்பத்திரி இருக்கைல இப்டி கை மருந்துங்கிற பேர்ல எதையாச்சும் செய்றதா…அதான் அந்த எடம் பச்சப் பசேல்னு இருக்கேன்னு சந்தேகப்பட்டுக் கேட்டேன்….

       என்னமோ எங்க பழக்கங்க….. – வரும்போகும் ஆட்களெல்லாம் இந்த வார்த்தையையே சொல்லுகிறார்கள்….என்னமோ எங்க பழக்கங்க….!

       ஒரு எருமை மாடு வந்து போய், பிடியில் அடங்காமல் தவ்வி ஓடி விடுகிறது. அந்த எருமையை மனித உறவில் நிறுத்திக் கொண்டு திட்டித் தீர்க்கிறார்கள. ஒருவன் தத்துவார்த்தமாய் –

       இந்தக் கழுதகிட்ட இந்தப் பாலு மட்டும் இல்லன்னா மனுஷன் இத கழுதையாக் கூட மதிக்க மாட்டான்….

       பன்னிரெண்டு மணிக்கு மேல் புறப்பட யத்தனித்தபோது…ஒருவன் காளமாட்டுக்கு வயிறு ஊதிக்கிட்டு ரொம்ப டேஞ்சரா இருக்குதுன்னு வந்து நிற்கிறான். எத்தன நாளா?ன்னு கேட்க…

       ஒரு வாரமாவே இருக்குது சார்…இந்தா சரியாப் போவும்…அந்தா சரியாப் போவும்னு இருந்தேன். வெத்தல சாத்தயும், விருவ நெய்யும் குடுத்திட்டிருந்தேன்…கடைசில இப்படியாயிடுச்சி…(விருவம் என்பது பன்றி)

       வயிறு ஊதியிருக்கிறதுக்கும் பன்னி நெய்க்கும் என்னா சம்பந்தம்?

       என்னமோ எங்க பழக்கமுங்க….. –

       அவன் புறப்பட, நண்பர்கள் நாங்களும் வருகிறோம் என்க….கிளம்புகிறார்கள். மாட்டிற்கு வயிறு நான்கு பகுதிகளாய் இருக்குமாம். காற்று உப்புசத்திற்கு ரூமன் என்னும் பகுதி. அந்தப் பகுதியிலிருந்து அடைத்திருக்கும் காற்றை துளை போட்டுத்தான் வெளியேத்தணும்….அப்ப சரியாகும்…

       அந்த வீட்டை அடைய மாட்டைச் சுற்றிக்கொண்டு பெரும் கூட்டம். நெருப்புக் கனலை மாட்டிற்கு முன்னால வைத்து கருவாட்டையோ எதையோ போட்டு புகை கிளப்பிக்கொண்டிருக்க, ஒரு பெண் முறத்தில் இருந்து புடைத்த சாம்பலை மாட்டின் மீது கொட்ட, மாட்டின் கழுத்தில் ஏதோ பச்சைக் கொடி மாலையாய்க் கிடக்க…ஒரே அமர்க்களம்.

       மாடு கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு….வயித்தப் பொத்து, காத்த எடுக்கணும்…. – சொல்கிறான். ஒருவேளை மாடு போய்விட்டதென்றால் நாமதான் கொன்னுட்டோம் என்றல்லவா சொல்வார்கள்.?

       எ்னது வயித்தப் பொத்தணுமா…?  -  மாட்டுக்குச் சொந்தக்காரன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மாடு சாய்ந்து விடுகிறது. மாட்டைச் சுற்றி நின்று கை கோர்த்துக் கொண்டு ஒப்பாரி வைக்கக் கிளம்பி விடுகிறார்கள். கூட்டம் சற்று நேரத்தில் கலைகிறது

       ரொம்பக் கைராசி….வந்து கை வைக்கிறதுக்குள்ள மாடு போயிடுச்சி…. – ஒரு கிழவியின் ஆசீர்வாதம்.

       நான்கைந்து பேராகச் சேர்ந்து கிழக்கு நோக்கிப் போகிறார்கள். என்ன என்று பெட்டிக்கடைக்காரரிடம் கேட்க….கேதத்துக்குப் போறாங்க…மாடு செத்துப் போச்சில்ல…..அதான்… - மனுஷன் செத்தாலும், மாடு செத்தாலும் கேதந்தான் அந்த கிராமத்துக்கு. சிரிக்கிறார்கள்.

       டேய் நம்ம ராகவன் வேல செய்ற கிராமத்துல மாடு செத்தாலும் கன்டலன்ஸ் போவாங்கடா… - ஊரில் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நண்பன்.

       ஒரு நாள் காலையில் ஏழு ஏழரை இருக்கும். தண்டோரா போட்டுக்கொண்டு ஒருவன்…சேனாபதி செத்துட்டாரு…சேனாபதி செத்துட்டாரு…..டம….டம….டம….டம…டட்…டட்…..

       என்னாடாது…நேத்துவரைக்கும் குத்துக்கல்லாட்டம் இருந்த ஆளு…ஊருக்கு அந்த ஒரே சேனாபதிதான். அந்தாளு செத்துட்டாரா? எந்தச் சேனாபதிடா…?

       அந்த சேனாபதிதான்…சேனாபதி செத்துட்டாரு…சேனாபதி செத்துட்டாரு…. அடப்பாவி மவனே…!

       நாந்தான் கல்லாட்டம் நிக்கிறனடா…எந்தச் சேனாபதியச் சொல்ற? சேனாபதியே நிறுத்திக் கேட்கிறார்.

       யார்ரா தண்டரா அடிக்கச் சொன்னது?

பெரசன்டுங்க….

பஞ்சாயத்து பிரசிடென்டைப் போய்க் கேட்டதும்தான் உண்மை தெரிகிறது. நம்ம ஜனாதிபதியே இறந்து போய்ட்டாருன்னு…. – ஆத்தாடீ…இன்னும் என்னென்ன கதைதான் இருக்கு? கெக்கலித்து, விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

காட்டுப் பக்கம் வருகிறார்கள் நண்பர்கள். கம்பஞ்செடியைப் பார்க்கிறார்கள். கம்பங் கதிர்….ஓடிப் போய் ஒரு கதிரை ஒடிக்கிறான் ராகவன். முற்றிய கதிரெல்லாம் அறுத்து முடித்து, பிஞ்சுகள் மட்டும் அப்படியே…

காட்டுக்காரன் கண்டா வெரட்டப் போறான்….

நாம என்ன எடத்தையேவா தூக்கிட்டுப் போறோம்…வயக்காடு அப்டியேதான இருக்கு…-சிரிப்பாய்ச் சொல்லிக் கொண்டு ஆளுக்கொன்றாய்.பறித்து, சிலுப்பி, திருகி, உமியை ஊதிவிட்டு, மணிகளைக் கையில் குவித்துக் கொண்டு ருசித்து உண்கிறார்கள். பச்சைப் பாலோடு தொண்டையில் இறங்க ருசியாய்த்தான் இருக்கிறது கம்பங்கதிர்.

பக்கத்துக் கிணற்றிலிருந்து திடீரென்று ஒரு உருவம். அட…பெருமாள் கவுண்டர்… - குளித்துவிட்டு வருகிறாரா….?  அவருடைய காடல்லவா இது…! திட்டுவாரோ..?

ஏம்ப்பா..படிச்ச புள்ளைங்கதானா நீங்க…இப்டி ஆளுக்கு நாலு கதிரக் கைல பறிச்சு வச்சித் தின்னா நல்லாவாயிருக்கு? – கேட்பாரோ….கதிரை மறைப்பதற்குள் நெருங்கி விடுகிறார்.

கம்பு திங்கிறீங்களா ஐயா….ரெண்டு நாளைக்கு முந்தி வந்திருந்தா முத்துன கதிரா கிடைச்சிருக்கும்… சொல்லிக் கொண்டே போய்க்கொண்டிருந்தார் அவர். ஈரத் துண்டு போர்த்தின முதுகுதான் அவர்களுக்குத் தெரிந்தது.

அவர்கள் பிறந்து வளர்ந்த நகரத்திற்கென்று ஒரு நாகரீகம் உண்டு. . பக்கத்து வீட்டுக்காரனை பத்து வருஷமானாலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை என்பதான சமூகம். அடுத்த வீட்டில் இழவு விழுந்திருந்தாலும், இவர்கள் வீட்டு ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். கூடிக் கூடி மணிக்கணக்கில் கதையளக்கிற பெண்கள், கடைசியில் ஒரு குடம் தண்ணீருக்கு அடித்துக் கொள்வார்கள். அந்த நாகரீகத்தில் பிறந்த இந்த இளைஞர்கள்…அழையா விருந்தாளியாய், கேளாமலே எடுத்துக் கொண்ட விருந்தைக் கூட பொருட்படுத்தாது கௌரவமாய் ஏற்று புன்னகையோடு போய்க் கொண்டிருக்கும் கவுண்டரின் கிராமிய உபசரிப்பு. இந்த அனுபவம் இவர்களுக்கு முற்றிலும்  புதிது.

அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை தாங்கள் காலையிலிருந்து இந்தக் கிராமத்தார்களைப் பற்றிப் பேசிப் பேசி செய்த கேலிக்கும், கிண்டலுக்கும் இந்த பெருமாள் கவுண்டர் ஏதும் பதில் சொல்லிவிட்டுப் போகிறாரோ?

இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்… - என்ன ஒரு அருமையான உணர்த்தல்? ஜெயந்தனின் கருக்கள் எல்லாமே சொல்ல வந்த விஷயத்தை அழுத்தம் திருத்தமாய், பொட்டில் அறைந்ததுபோல்தான் நிறுவியிருப்பார். கிராமத்து மனிதர்களின் விகல்பமற்ற தன்மையையும், அறியாமையையும், ஆட்களை உணர்ந்து கௌரவமாய் நடத்தும் தன்மையையும்…..இதற்கு மேல் வேறு எப்படித்தான் சொல்லிச் செல்வது…?

அது என்னமோ எங்க பழக்கமுங்க….!!!

                           -----------------------------------------------------------

      

 

 

      

15 ஏப்ரல் 2022

 

டேபிள் டென்னிஸ்” - கோபி கிருஷ்ணன் நேர்காணல்-யூமாவாசுகி-வாசிப்பனுபவம்-உஷாதீபன்



      நான் சொன்னதெல்லாம் மிகவும் அசிங்கமாக இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார் கோபிகிருஷ்ணன். அசிங்கம், அபத்தம் என்று ஒரு சாரார் அல்லது சிலர் நினைக்கக் கூடும் என்பதான உணர்வு இருந்திருக்கிறது. ஆனால் அதைத் தவிர்க்க முடியாமல் தவித்திருக்கிறார். என்ன மனோ வியாதியோ? நினைக்கவே பரிதாபமாகத்தான் இருக்கிறது.

      கோபியை மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தை திலகர் திடலுக்கருகிலான (தேவி தியேட்டரின் எதிர்புறம்-மணி நகரம் ஒட்டிய பகுதி) வீட்டில் ஒரே ஒரு முறை சந்தித்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் அவரது கதைகள் ஒன்றிரண்டைத்தான் படித்திருந்தேன். பிறகுதான் முழுத் தொகுப்பு வாங்கியதும், படித்ததும்.

      கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபி பதில் சொன்னதாக  இந்நூலில் இல்லை. அவரே தன் கதையை, அனுபவத்தை, எழுத்துப் பணியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். என்னைப்பற்றி நானே சொல்லிவிடுகிறேன். கேள்விகள் பிறகு...என்று சொல்லி அவரே ஆரம்பித்து விடுகிறார்.

      சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் அறியப்படுகிறார். சைக்காலஜியில் அதிக ஆர்வமுடையவராகவும், இயல்பிலேயே அதிக கூச்ச சுபாவமுடையவராகவும் இருந்திருக்கிறார். மாநிலக் கல்லூரியில் உளவியலைத் தேர்வு செய்து படிக்கும்போதுதான் ஒரு பெண்ணோடு மானசீகக் காதல் ஏற்படுகிறது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அந்தப் பெண்ணோடு ஏற்பட்ட காதல்  அறியாப் பருவத்தில் வரும் ஈடுபாடு... உணர்ச்சி வேகம் சார்ந்தது, calf love  என்று அதைச் சொல்வார்கள். என்றும் விளக்கமளிக்கிறார்.

      மனிதன் தன் செயல்களுக்கான காரணங்களை உணர்ந்திருத்தலும், அதைத் தவிர்க்க முடியாமல் தவித்தலும், அது தவறாயினும் அந்தப் படுகுழியில் விழுதலுமான நிகழ்வுகள் இவர் வாழ்க்கையில் நிரம்ப நடந்தேறியிருக்கிறது. படிக்கும் நமக்கு அவர் மேல் இரக்கமே ஏற்படுகிறது. ஐயோ...நாம் அருகில் இல்லாமல் போனோமே...ஏதேனும் செய்து மாற்றப் பார்த்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றுகிறது.

      ஓரியண்டல் ஃபயர் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் சில மாதங்கள் வேலை ஆல் இன்டியா  உறான்டிகிராப்ட் போர்டில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்திருக்கிறார்.அரசு பொது மருத்துவ மனையில் சில காலம் என்று பல வேலைகள். எங்கும் நிலைக்காத மன நிலை. கிடைத்த அரசுப் பணியை ரிஸைன் செய்யும் அளவுக்கான முடிவுகள். மருத்துவ மனையில் ஏற்கனவே காதல் தோல்வியிலிருந்த ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட ஈடுபாடு...பிறகு அவள்பால் ஏற்பட்ட உணர்வு பாலுணர்ச்சியின் அடிப்படையில் உண்டான அருவருப்பு என்று உணர்ந்து குற்ற உணர்வில் விலகியது...என்று இவரது கதை வெவ்வேறு தளங்களில் ஒரு குழப்பமான மனிதனின் பயணமாக நீண்டு கொண்டேயிருக்கிறது. நான்ஸி என்ற பெண்ணைக் காதலித்தது...கிறிஸ்தவப் பாதிரியாரிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டது....பிறகு வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டது...ஏற்கனவே காதலித்த பெண்ணுடனான நினைப்பில் மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்தது,  அது தெரிந்து நான்ஸி, என்ன இது என்று கேட்டது, பிறகு இருவருக்கும் பிடிக்காமல் போனது, நான்சிக்கு அவள் வேலை பார்த்த இடத்தில் ஒரு டாக்டரோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது...என்று இவரது வாழ்க்கை அடுத்தடுத்த அபாயங்களாகப் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. படிக்கும் நமக்கும் ஏன் இதைப் படிக்க ஆரம்பித்தோம் என்றும், இப்படி ஒரு மனிதன் இருப்பானா? என்று கோபமும், இஷ்டம்போல் சிந்தனைகளை ஓடவிடுதலும், செயல்படுதலும் ஒரு வாழ்க்கையா? என்கிற கேள்வியும் எழுந்து கொண்டேதான் இருக்கிறது. இவருக்கு அருகிலிருந்து இவரைப் பாதுகாக்க ஒரு நல்ல மனிதர் இல்லாமல் போனதே என்கிற பரிதாபமும் எழத்தான் செய்கிறது.

      இவரது எழுத்துப் பணி எப்படி ஆரம்பித்தது, எப்படித் தொடர்ந்தது என்று தேட ஆரம்பித்த நமக்கு, இவரின் சோகக் கதை மிகுந்த சங்கடத்தைத் தர, இவ்வளவு பெரிய சிறுகதைத் தொகுப்பை எப்படி இவரால் கொடுக்க முடிந்தது     என்று ஆச்சரியமெழுகிறது. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயல்தலும், தொடர்ந்து மனநல சிகிச்சைக்கு ஆட்படுதலும், பிறகு அதில் பாதியில் கழன்று கொண்டு வருதலும், தூக்கத்திற்கும், துக்கத்திற்கும் மாத்திரைகளாய்ச் சாப்பிட்டுத் தள்ளுதலும்...கோபிகிருஷ்ணனின் வாழ்க்கைப் பயணத்தை நினைக்கையில் நமக்கு  மிகுந்த வேதனைதான் மிஞ்சுகிறது.

      தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம், இரவுகளில் தூக்கமில்லாதது, ஓயாத மன உளைச்சல், எதையெதையோ நினைத்து அழுதல் இப்படி எல்லாமும் இருந்திருக்கிறது இவருக்கு. இதையெல்லாம் விலாவாரியாகச் சொல்லத் தெரிந்தவர் அவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவித்திருக்கிறார் என்பதுதான் பரிதாபம். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் நிறைய உதவியிருக்கிறார். வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பிறகு அவரது பதிப்பகத்திலேயே கொஞ்ச நாட்கள் வேலையில் இருந்திருக்கிறார்.

      இவை எல்லாவற்றிற்கும் நடுவேதான் இவரது எழுத்துப் பணியும் தொடர்ந்திருக்கிறது. என் கதைகளில் ஒரே ஆள் எல்லாக் கதைகளிலும் வருவதாகவே இருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது . எனக்கு வாழ்க்கையே பிரச்னையாக இருக்கும்பொழுது  படிக்கும் உந்துதல் குறைவாகவே உள்ளது.  என்று கூறும் இவர் சாமர்செட் மாமின் 35 புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று கூறுகிறார். பிரசுரிக்கத் தகுந்தவை என்ற அளவில் கணையாழியில் குறுநாவல்கள் பிரசுரமாயின. இலக்கியவாதியாக இருப்பதற்காக இதுவரை மூன்றே மூன்று தடவைதான் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன் சுதந்திரக் கலாச்சாரம்தான் தேவை. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன் என்று கூறுகிறார். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். மனம் ஒத்துப் போனால் சரி...என்று கூறும் இவர், ஒரு மனிதன் தனது 60 வயது வரை நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு  இதைத்தான் சுதந்திரக் கலாச்சாரம் என்கிறேன் நான் என்று முடிக்கிறார். பெண் தான் விரும்பியபடி உறவு வைத்துக் கொள்ளக்கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும் பள்ளியில் 9-ம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும், இந்த வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும். அது எப்படி என்று எனக்குப் புலப்படவில்லை. என்று கூறும் கோபிகிருஷ்ணன் சில மொழி பெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.

                              ------------------------------------

     

29 மார்ச் 2022

“சுதந்தர பூமி” - நாவல் - By இந்திரா பார்த்தசாரதி -

 

சுதந்தர பூமி” - நாவல் - By இந்திரா பார்த்தசாரதி - (வெளியீடு:- கிழக்கு பதிப்பகம், சென்னை



     1960 க்குப் பிறகு வாசகர்களுக்கு அறிமுகமான சில முன்னணிப் படைப்பாளிகளில் இந்திரா பார்த்தசாரதி முக்கியமானவர்.   இவரது “Heஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன“ நாவலைப் படித்துவிட்டு ஜெட் விமானங்கள் கீழே இறங்கி விட்டன என்று தலைப்புக் கொடுத்திருக்கலாம் என்று தி.ஜா அவர்கள் பாராட்டினார். அத்தனை வேகம் இவரது எழுத்தில். அந்த நாவலை அப்படிப் புகழ்ந்து பாராட்டினார் தி.ஜானகிராமன். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத, புதிய உற்சாகத்தைக் கொடுக்கும் நாவல் அது.

     அதற்கு இணையாக அவரது அரசியல் நாவல்கள் பலவும் புகழ் பெற்றவை. பணி நிமித்தம் டெல்லியில் சில காலம் இருந்தவர் என்பதாலும், பல முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அறிமுகத்திலும் பழக்கத்திலும், இந்த நாவல் அவரிடம் உருப்பெற்றிருக்கின்றன எனக் கொள்ளலாம். எதானாலும் சுவைப குன்றாமல் சொல்ல முடியும் என்பதே இவரது திறமை.

     இந்த நாவலைப் பொறுத்தவரை நான்கைந்து கேரக்டர்கள்தான். டெல்லிக்கு வேலை தேடிச் செல்லும் ப்ரொபசர் முகுந்தன். அவன் சந்திக்கும் அரசியல்வாதி மிஸ்ரா. எதற்கும் துணிந்த பெண்மணியான டாக்டர் சரளா...இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். டாக்டர் சராளாவின் பேச்சு, நடவடிக்கைகளைக் கண்ணுறும்போது நமக்கு கொஞ்ச காலத்திற்கு முன் அதிகமாக அடிபட்டாரே நீரா ராடியா என்றொரு பெண்மணி...அவரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிரதமராக வரும் பாத்திரம் ஒரு பெண்மணியாக வரிக்கப்படுவதால் இந்திராகாந்தி காலத்துக்கு கதை என்றும் கொள்ளலாம்.

     கதாநாயகன் டெல்லிக்கு வேலை தேடிப் போய் மி-ஸ்ராவிடம் சமையல்காரனாகி, அவருக்குக் காபி கலந்து கொடுப்பதிலிருந்து படிப்படியாக அரசியல் சதுரங்க விளையாட்டில் அவன் எப்படி பங்கு பெறுகிறான் அல்லது பங்கு பெற வைக்கப்படுகிறான் என்று வளர்ந்து, கடைசியில் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவது வரை கதை  விறுவிறுப்பாகச் சொல்லப்படுகிறது. இதில் வரும் உரையாடல்கள் கதை தொடராக வெளிவந்த காலத்தில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிகிறோம்.

     ஒரு குறுகிய எல்லையை வகுத்துக் கொண்டு ஓர் இனத்தையே முட்டாளாக்கி அரசியல் லாபத்தை அனுபவித்து வரும் ஒரு ஃப்யூடல் கட்சியை எத்தனை நாள்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? என்று இதில் வரும் பிரதமர் கவலைப்படுகிறார். நீங்கள் சொல்வது புரிகிறது...தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் எதிர்நீச்சல்  போட்டு வெற்றி காண்பது என்பது ஒரு பகீரதப் பிரயத்தனம்தான் என்கிறான் முகுந்தன்.

     பகீரதப் பிரயத்தனமல்ல. தமிழ்நாட்டு பிரக்ஞைபற்றிய வரலாற்று ரீதியான சமூகவியல் பிரக்ஞை வேண்டும். தாழ்வு மனப்பான்மையினால் கஷ்டப்படுகிறார்கள் தமிழர்கள்..இவர்களைத் திருப்திப்படுத்த சின்னச் சின்ன விஷயங்களே போதும்...இந்தளவுக்குப் புரிந்து கொண்டு மாற்றுக் கோஷங்கள் கொடுத்தால் நிச்சயமாக வெற்றி அடையலாம் என்று யோசனை சொல்லப்படுகிறது.

     முகுந்தன் மிஸ்ராவால் எவ்வாறு படிப்படியாக மாற்றப்படுகிறான் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

     உனக்குக் கீழே இருக்கின்றவர்களை விரட்ட வேண்டும். கண்ணியம், கூச்சம், ஆகியவற்றை ஒதுக்கி வைப்பதுதான் முன்னேறி வரும் ஒரு அரசியல்வாதிக்குத் தேவை. அப்பொழுதுதான் ஒரு இயந்திர ரீதியான, ப்ரொஃபஷனல் அரசியல்வாதியாக நீ இருக்க முடியும்...நாட்டுக்குப் பணி செய்ய வேண்டும் என்ற லட்சியப்பூர்வமான காந்தியுகத் தாரக மந்திரங்களை மறந்து “அரசியல் ஒரு உத்தியோகம்” என்ற உண்மையைச் சந்திக்க உன்னைத் தயார் செய்து கொள்...-என்று உபதேசிக்கிறார் மிஸ்ரா.

     யோசிக்கிறான் முகுந்தன். அமெரிக்காவில் அரசியலை ஒரு உத்தியோகம் என்கிற ரீதியில்தான் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.லட்சியப் போர்வைகள் இல்லை...இதனால் மக்களுக்கும் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க வேண்டுமென்று தெரியும்.இதனால் இரு சார்பிலும் ஏமாற்றம் கிடையாது. பார்க்கப்போனால் தமிழ்நாட்டிலும் அத்தகைய அரசியல் சூழ்நிலை உருவாகித்தான் கிடக்கிறது. இந்த நாட்டில் ஏழை ஜனங்களுக்கு நன்மை செய்கிறோமோ இல்லையோ, பணக்காரனை அடிப்பது போல் ஒரு பாவனை செய்தால் போதும், அவர்களைத் திருப்திப்படுத்தி விடலாம்.

     இந்த உரையாடல்கள் நம்மை திருப்திப்படுத்தும்தான். அதே சமயம் இதை வெறும் அரசியல் நாவல் என்று நாம் வகைப்படுத்திவிட முடியாது. இந்த நாவலில் பேசப்படும் கவலை நிறைந்த விஷயங்கள், நம் நாடு சுதந்தரம் அடைந்த நாள் முதலாய் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பவைதான். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அங்கங்கே கேலி செய்து கொண்டே நகர்கிறார் இ.பா. “அயல்நாடு சென்று வெற்றி வாகை சூடி வரும் தமிழரே...வருக...வருக...” என்று வெறுமே மலேஷியா சென்று வரும் ஒரு அமைச்சரைப் புகழ்ந்து கோஷமிட்டு ஆர்ப்பரிக்க....எதற்கு? அந்த நாட்டோடு தமிழ்நாட்டுக்கு ஏதும் சண்டையா? என்று ஏதும் புரியாமல் அப்பாவியாகக் கேட்கிறார் மிஸ்ரா.....இங்கே இப்படித்தான் அரசியல் கேலிக்கூத்தாய் சிரித்துக் கிடக்கிறது என்று பின்னால் புரிந்து கொள்கிறார்.

     இந்திரா பாரத்தசாரதி அவர்கள் அவர் மனதில் பட்டதைச் சொல்லத் தயங்கியதேயில்லை என்பதை அவரது வெவ்வேறு நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் மூலமும், அவற்றிற்கிடையேயான உரையாடல்கள் மூலமும் நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கருத்துக்களை அவரது கட்டுரைகளிலும்  அவர் எழுதியிருக்கிறார்.

     தனது அரசியல் அபிலாஷைகளுக்கு இந்தத் தமிழ் இளைஞன் நன்கு பயன்படுவான் என்று ஆ ரம்பத்திலேயே புரிந்து கொள்ளும் மிஸ்ராவும், அவரை அணுகியே தன் அனுபவங்களைப் பெருக்கிக் கொண்டு தெளிவடையும் முகுந்தனும், இவர்களின் விளையாட்டை உடனிருந்தே கண்காணித்து, கூடப் பயணித்து பயனடையத் துடிக்கும் டாக்டர் சரளாவின் பங்களிப்பும்....நாவலுக்கு மிகுந்த சுவையூட்டுகின்றன.

     கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கட்சிக் கொடிகளோடு சேர்த்துக் காற்றில் பறக்கவிட்டு அரசியல் நடத்திக் கொண்டு இருப்போரே இந்நாவலின் இலக்கு என்ற முக்கியமான இப்புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பு கவனிக்கத் தக்கது. அந்தப் பின்னணியில் அழுத்தமும், சிந்தனையாழமும் கொண்ட  அற்புதமான நாவல் இது என்று சொல்லலாம்.                                         ---------------------------

    

இந்திரா பார்த்தசாரதியின் “வெந்து தணிந்த காடுகள்”–நாவல்

 

 

இந்திரா பார்த்தசாரதியின் “வெந்து தணிந்த காடுகள்”–நாவல்





            பார வண்டியில் மணலை மூட்டை மூட்டையாகக் கட்டி, ஏற்றி, இறக்கி,மூட்டையை அவிழ்த்து மணலை கீழே கொட்டி மறுபடியும் மூட்டையாகக் கட்டி ஏற்றி, இறக்கி, கொட்டி…….மறுபடியும் கட்டி ஏற்றி…ஏற்றி…..ஏற்றி…..

      எல்லோரும் இந்த வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முகத்துக்கும் இன்னொரு முகத்துக்கும் வித்தியாசமில்லாமல், கண்ணுக்குத் தெரியாத சாட்டைக்கு பயந்து கொண்டு…..வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

      அவ்வளவுதான் இந்த வாழ்க்கை.

எல்லோரும் சராசரிதான். எந்தெந்த உயரத்திற்கோ போய்விட்டு ஏதோவோர் சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாமல் கீழே வருகிறவர்கள்தான். ஒரு சாதாரணனின், சராசரியின் மனநிலையை எட்டுகிறவர்கள்தான்.

      இந்த நாவலின் கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் அப்படிப்பட்டவர்களாய்த்தான் இருக்கிறார்கள். அனைவருமே பொறியில் அகப்பட்டுக்கொண்ட எலிகள். படைத்தவனுடைய குரூர உறாஸ்ய உணர்ச்சி.

      எப்பொழுது நாம் குடும்பம், சமூகம் என்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறோமோ அப்பொழுதே நம் சுதந்திர உணர்வுக்கும் வரையறை ஏற்பட்டுவிடுகிறது. சிந்தனை செல்லும் வழியெல்லாம் வாழ முயல்வது, நம் உடம்பின் ரத்தம் உஷ்ணமாயிருக்கும் வரையில்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் வாழ்க்கையின் நோக்கங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் காலம் நமக்குச் செய்யும் கொடுமை. குடும்ப வாழ்க்கையின் அடிப்படை நியதிகளை ஏற்றுக்கொண்டு, சமூக வேலிக்குள் வாழ்கின்றவர்களுடைய கற்பனையற்ற சராசரித்தனம்-ஒரு கால கட்டத்தில் ஒரு மன நிலையில் நமக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதுதான் சௌகரியமான வாழ்க்கை என்று புரிந்து கொள்வதுதான் விவேகம்.

      வாழ்க்கையின் சில அடிப்படையான நியதிகள், எந்தக் காலத்துக்கும் பொருந்திய உண்மைகள் தொன்று தொட்டு இருந்து வருகின்றன என்பதால் அவற்றைப் பின்பற்றுவது பத்தாம்பசலித்தனம் என்று ஆகிவிடாது.

      மேற்கண்ட வரிகள் ஒரு கல்லூரி முதல்வரால் சொல்லப்படுவது. தாய் தந்தையரால் கவனிக்கப்படாது விடப்பட்ட ஒரு புத்திசாலிப் பையன், எவ்வாறு கெட்டுப் போய் நிற்கிறான், எதனால் இது நிகழ்ந்தது என்பதைச் சுட்டிக் காட்டும் இடம். இந்த நாவலின் கதாபாத்திரங்கள் இந்நிலையில்தான் உலவுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களை அறிவுஜீவிகளாய் நினைத்துக் கொண்டு, தனி மனித சுதந்திரம் என்று வரித்துக்கொண்டு இஷ்டப்படி இருக்க விரும்பி, கட்டுப்பாடுகளைக் கடந்து செல்கிறார்கள். கணவன்-மனைவிக்கிடையே நிகழும் சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பரஸ்பரம் பொருட்படுத்தாது விலக்கிச் செல்வதற்குப் பதிலாக, பொருட்டாக எடுத்துக் கொண்டு விவாதித்து, விபரீதமாக்கிக்கொண்டு பிரிந்து போகிறார்கள். இன்னொரு குடும்ப உறுப்பினர்களை நினைத்து தங்களைவிட அவர்கள் மேம்பட்டவர்கள் என்று ஒத்துப் பார்த்து பலவீனமாய் எண்ணிக் கொள்கிறார்கள்.

சுதந்திர உணர்வினை நிலை நாட்டிக் கொள்கிறேன் என்று கிளம்பி, சுயநலவாதிகளாய் உலா வருகிறார்கள். ஏதோவோர் வகையில் அவரவர் சுயநலமே விஞ்சி நிற்கிறது. அதை அறிந்திருந்தும் தவிர்க்க முடியாதவோர் கௌரவம் அவர்களுக்கு வேலி போட, அதை விலக்கிக் கொண்டு வெளியே வந்து சாதாரணனாய் உலா வருவதற்கு அவர்களின் அறிவு மறுக்கிறது.

      மனித சுபாவத்தை இது இது இப்படித்தான் என்று சட்டம் போட்டு வரையறுத்து ப்ரேம் பண்ணி மாட்டி விட முடியுமா? இக்கதையின் கதா பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் மற்றவரைப்பற்றி அப்படி நினைக்க முற்பட்டு, அவரவரே வெவ்வேறு காலகட்டங்களில் மாறிப் போய் விடுகிறார்கள். அன்றையசூழ்நிலையில் அது, இன்றைய சூழ்நிலைக்கு இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

      எனக்கென்று தனி முகம் இருக்கிறதென்று காட்ட வேண்டுமென்கிற வெறி, இல்லத்தரசி என்கிற கட்டுப்பாடு மிக்க பட்டத்தைத் துறக்கச் செய்து, கணவனிடமிருந்து விலகிச் செல்லும் அளவுக்கு துணிகிறது.

      தனக்கென்று ஒரு அடையாளம் உண்டு என்று நினைக்கும் விம்மி, அதை ஏன் தன் கணவன் அருணால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று நினைத்து நினைத்துப் புழுங்குகிறாள். திருமணமாகி பல்லாண்டுகள் ஆன நிலையிலும் அவளின் தனித் திறமையை அறியாதவனாய் அவன் இருக்கிறான். அழகுப் பதுமையான மனைவி என்ற ஒன்றே அவனைத் திருப்திப் படுத்திவிடுகிறது. தன் தொழில் முன்னேற்றத்தின் மிகப்பெரிய அந்தஸ்தாக அதனைக் கருதுகிறான்.  தாமோதரன் என்கிற ஓவியனிடம் அவளுக்கோ நாட்டம் செல்கிறது. அவலட்சணமான உருவ அமைப்பைக் கொண்ட அவனிடம் படிந்திருக்கும் கலை அதையும் மீறி  அவனிடம் நெருங்க வைக்கிறது. தன்னிடம் படிந்திருக்கும் கலைத் திறமையே அவனோடு சேர்ந்தபின்னால்தான் உணர முடிந்தது என்று நினைத்து, அவனிடம் ஐக்கியமாகிறாள்.

      விம்மியின் அழகில் மயங்கி, தனக்குஅழகான மனைவி என்கிற பெருமிதத்தில் மிதக்கும் அருண் அவள் தன்னிடமிருந்து விலகும்போது வியப்படைந்து போகிறான். அழகுப் பதுமையாய் சகலவிதமான வசதி வாய்ப்புக்களோடு அவளைப் பாராட்டி, சீராட்டி வைத்திருந்ததற்கு இதுவா பலன்? என்று பிரமிக்கிறான். அவர்களுக்குள் பிரிவு  நேரிடுகிறது.

      அவள் தன்னை அவனுடன் பூரணமாக ஐக்கியப்படுத்திக்கொண்டு விட்டாள் என்று பெருமையாகக் கருதிக்கொண்டிருக்க, சுருதி பிசகாத வாழ்க்கையில் அபஸ்வரம்  ஒலிக்கிறது என்று கருதி சீற்றம் கொள்கிறான்.

      ரமேஷூக்கும் ராதிகாவுக்குமே இதே மாதிரி இன்னொரு பிரச்னை. ராதிகாவின் விரிந்த நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாமல், சகிக்க முடியாமல் விலகியே நின்று விடுகிறான் ரமேஷ். பெண் சுதந்திரம் என்கிற பெயரில் சிகரெட் புகைப்பது முதல் மது அருந்துவது வரை பல்வேறு புதிரான அவளது நடவடிக்கைகள் அவனை பயமுறுத்துகிறது. ஆரம்பத்திலேயே இதை உணர்ந்து விட்ட அவன்,  அப்பொழுதே அவளிடமிருந்து விலகி நிற்கிறான். விலகுவதற்குமுன் அவனுக்குள் இருக்கும் சந்தேகத்தை அவனால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அதை மகனிடமே சொன்னதுதான் பெருந்தவறாய்ப் போகிறது. மகன் ராகுலிடம், அவன் தன் பிள்ளைதானா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாய்க் கூறிவிடுவதுதான் அவர்களுக்குள்ளான பிரிவினைக்கு தவிர்க்க முடியாத காரணமாய் அமைகிறது. ரமேஷ் தன் வேலையை ராஜினாமா செய்துவி-ட்டு துபாய் போய் விடுகிறான். ஏறக்குறைய ராதிகாவிடமிருந்து பிரிந்து விட்ட நிலையே ஏற்பட்டு விடுகிறது.

      மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான். ஆனால் நாளடைவில் தளைகள் அவனைப் பிணைத்து விடுகிறது. இந்த நாவல் ஆணாதிக்கத்தைப் பற்றியோ, பெண் விடுதலையைப் பற்றியதோ அன்று. இந்திரா பார்த்தசாரதி அவர்கள் சொல்வதுபோல் கதாபாத்திரங்கள் அனைத்தும் பொறியில் அகப்பட்ட எலிகள். நல்லவர்களும் இல்லை. கெட்டவர்களும் இல்லை. அவர்கள் அப்படித்தான் இருந்தாக வேண்டுமென்று வாழ்க்கை விதிகள், சமூக நடைமுறைகள் அவர்களை அலைக்கழித்து இழுத்து நிறுத்தி விடுகிறது. அதுதான் இந்நாவல் ஓட்டத்தின் இன்றியமையாத் தன்மை.

      ஓவியக் கலைஞன் தாமோதரனின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாய்…இது ஒரு ஆண் ஆதிக்கமுடைய சமூகம். பொருளாதாரப் பாதுகாப்பு அளிக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காகக் கணவனின் நடவடிக்கைகளைப் பற்றிக் கேட்க மனைவிக்கு உரிமை இல்லை. இல்லற தர்மத்தில் விதிக்கப்படும் எல்லா லட்சியப் பண்புகளும் மனைவிக்குத்தான். “தெய்வம்“ என்ற சீல் குத்தி அவளைக் கர்ப்பக்கிருஉறத்தில் அடைத்து விட்டால் கணவன், மனிதன் என்ற முறையில் எப்படி வேண்டுமானாலும் இருக்க அனுமதி அளித்து விடுகிறது இந்தச் சமூகம்.

      ஒருவனால் சிந்திக்க முடியும் என்பதுதான் அவனுடைய சுதந்திரம். சிந்தனைக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாதவாறு ஒருவனால் நடைமுறை வாழ்க்கையை நடத்த முடிந்தால் அதுதான் அவனுடைய மோட்சம். சுதந்திரவாழ்வின் எல்லை…..

      அத்தகைய வாழ்வை இங்கு யாராலும் நடத்திவிட முடிகிறதா? தனி மனிதனாய் வாழும் பெரும் கலைஞன் தாமோதரனாலும் கூட அப்படி இருக்க முடியவில்லை. அவனுமே தனக்குள் ஏங்கித் தவிக்கும் ஒரு கதாபாத்திரமாய்த்தான் கடைசியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். எல்லோருமே சராசரிகள்தான் இந்த உலகத்தில். சந்தர்ப்பம் கிடைக்காதவரை  வெவ்வேறு உருக்களில் வெளிப்படுகிறார்கள். வாய்ப்புக் கிட்டும்போது  அதைப் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும் என்ற உந்துதலுக்கே ஆளாகிறார்கள். அப்போது நிதானிப்பது எவருமில்லை. கணவனிடமிருந்து பிரிந்து இந்தக் கலைஞனை நாடும் விம்மி கடைசியில் அவனும் சாதாரணனாய் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைக் கண்டு மனம் வெறுத்துப் போகிறாள். அவனிடமிருந்து பிரிந்து விடுவோம் என்று நினைக்கிற  வேளையில் அவனின் மரணம் நிகழ்ந்து விடுகிறது. பிரிந்து விட்ட கணவனைத்தான்  அழைக்க வேண்டியிருக்கிறது. அவள் சுதந்திரத்தின்படி அவளை உலவவிட்ட அவன் அவள் மீது மாறாது தொற்றிக் கொண்டிருக்கும் தன் அன்பை  ஒதுக்க இயலாது அவளது அழைப்பை ஏற்று வந்து அவளைக் காப்பாற்றுகிறான்.

      தனக்கென்று ஒரு அடையாளம் உண்டு என்பதைத் தன் கணவனால் ஏன் உணர முடியவில்லை, ஏற்றுக் கொள்ள முடியவி்லை்லை என்று அருண் மனைவி விம்மி நினைத்து, அவனிடமிருந்து பிரிந்து கடைசியில் குழப்பங்கள் தெளிந்து அவனிடமே வந்து சேருகிறாள்.

      திருமணத்திற்குப் பிறகு அவரவர் சுதந்திரத்தை மதிக்க வேண்டுமென்று ஒப்புக்கொண்ட பிறகு, ரமேஷ் தன்னை விட்டு ஏன் பிரிகிறான் என்று ராதிகாவுக்குப் புரியவில்லை. ரமேஷால் தன் மனைவியின் நடத்தையைச் சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. அவர்களின் வாழ்வு அப்படியே தொடர்கிறது.

      ஓவியத்திறன் அவனுக்கு அசாத்திய ஆணவத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்திருந்தாலும், தன் உருவத்தைப் பொருத்தவரையில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் தாமோதரனால் இருக்க முடியவில்லை. அதையும் மீறி அவன் மீது அன்பு செலுத்தும் விம்மியின் அன்பில் சற்றுப் பிசகி விடுகிறான். அவன். அந்தப் பிறழ்தலுக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான். அது  அவன் மரணத்தில் சென்று முடிகிறது.

      இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் மனப்போராட்ட நெருப்பில் வெந்து தணிந்த காடுகள். சமுதாய உணர்வோடு, நுட்பமானதும் செறிவுமிக்கதுமான நடைத்திறம் கொண்ட, அரசியல், சமுதாயம், பொருளாதாரக் கண்ணோட்டங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்யக் கூடிய இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்நூல் இலக்கிய ஆர்வமுள்ளோரும், வாசிப்புப் பழக்கமுள்ளோரும் தவறாது படிக்க வேண்டிய முக்கிய நாவலாகும்.

 

                  ---------------------------------------------------------------------------